Home » Cover Story (Page 3)

உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….

தேக்கம்பட்டி சிவக்குமார், சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட்

Catering Owners Association, செயற்குழு உறுப்பினர்

தந்தை பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் புரவலர்

கோவை மாவட்ட அமெச்சூர் கபாடிகழக இணை செயலாளர்,

தேக்கம்பட்டி, கோயமுத்தூர்

ஆரோக்கியமே மனித இனத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் அக்கரைச் செலுத்தினாலே வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் சிறந்த முறையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தயாரித்து இன்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்றமாநிலங்களில் இவரின் கைவண்ணத்தை சுவைக்காதவர்கள் யாருமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறந்த உணவுத்தயாரிப்பாளர்.

இங்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. ஆனால் பணத்தை விட மனிதர்களின் நலம் தான் சிறந்தது, ஆகையால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், உணவிற்குத் தேவையான மற்றப் பொருட்கள் போன்றவை  பழமை மாறாமல் தயாரித்து அதன் மூலம் உணவைக் கொடுத்து வருபவர்.

உலக இலக்கியம் தொடங்கி உள்ளூர் இலக்கியம் வரை அனைத்தும் கற்றுக் கொண்டு தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், தன்னிடம் பணியாற்றுபவர்களிடமும் நம்பிக்கை விதையை நாளும் விதைத்துக் கொண்டேயிருப்பவர்.

கொடுத்த வாக்கில் உண்மை, நேரம் தவறாதிருத்தல், கடின  உழைப்பு, மற்றவர்களுக்கு மனமுவந்து உதவும் மனப்பான்மை போன்றநற்குணங்களே இவரின் அடையாளம்.

சிறந்த சமையல் கலை வல்லுநர், தலை சிறந்த மேலாண்மைத்துவமிக்கவர், தேக்கம்பட்டி சிவக்குமார் சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்டின் நிறுவனர், இப்படி பன்முகத்திறமை வாய்ந்த தேக்கம்பட்டி சிவக்குமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

கே: உங்களின் இளமைகாலத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகிலுள்ள தொட்டதாசனூர் என்னும் குக்கிராமம் தான் என்னுடைய ஊர். ஆனால் நான் பிறந்தது என்று பார்த்தால் என்னுடைய தாயின் ஊரான சாலைவேம்பு என்னும் ஊர். இங்கு தான் என்னுடைய தொடக்கக் கல்வி ஆரம்பித்தது. ஆனால் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டேன். அதனால் தொட்டதாசனூர் ஊருக்கே வந்துவிட்டேன். ஏழாம் வகுப்பு வரை இங்குள்ள அரசுப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை புஜ்ங்கனூரில் படித்தேன்.

என்னுடைய தந்தை கரும்பாலைத் தொழிலைச் செய்து வந்தார். அவ்வளவு வருமானம் இல்லாத தொழில். ஆனால் குடும்பம் நடத்தும் அளவிற்கு போதுமானதாக இருந்தது. நான் படிப்பில் சராசரி மாணவன் தான். எந்த வகுப்பிலும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று விடுவேன்.

கே: சமையல் கலையின் மீது ஆர்வம் எப்படி வந்தது?

என் தாயின் தந்தை நடேசன். அவர் சமையல் சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தார்.இவர் ஒரு சிறந்த சமையல் தயாரிப்பாளர், அவரின் கைப்பக்குவம் அக்கிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரபலம். உணவை நாவில் சுவைத்துப் பார்க்காமலேயே வாசனையை வைத்து அவ்வுணவில் உள்ள நிறைக்குறைகளைச் சொல்லிவிடுவார்.

நானும் சின்ன வயதிலிருந்தே இவர்களுடனே இருந்ததால் எனக்கும் இவ்வார்வம் வந்துவிட்டது என்றேசொல்லலாம். சின்ன வயதிலிருந்தே நாம் எதைப் பார்த்து வளர்கிறோமே அது நம் வாழ்வில் பின்னிபிணைந்து விடும். படிக்கின்றகாலத்தில் விளையாட்டைக்கூட மறந்து என்னுடைய தாத்தாவின் உடன் வேலைக்குச் சென்றுவிடுவேன்.

பள்ளியில் ஆசிரியர்கள் கேட்கும் பொதுவான கேள்வி. எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நிறைய பேர் ஆசிரியர்,மருத்துவர், ஆட்சியர் என்று அவரவர்கள் விருப்பதைக் கூறினார்கள். ஆனால் என்னைக் கேட்கும் பொழுது சற்றும் யோசிக்காமல் நான் சமையல் கலை நிபுணராக வரவேண்டும் என்று கூறினேன். இதைக் கேட்டு வகுப்பில் உள்ள மற்றமாணவர்கள் கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் என்னுடைய மருதன் ஆசிரியர் எனக்கு அப்போதே ஊக்கம் கொடுக்கும் படி பேசினார்.

கே: உங்களின் முதல் கேட்ரிங் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததால், இவர்கள் செய்த தொழில்  என் குருதியோடு கலந்து விட்டது. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றபொழுது தனியாக ஒரு ஆர்டர் கிடைத்தது. இதை என்னுடைய தந்தையிடம் சொன்னேன். அவருக்கு ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் மறுபுறம் சற்று பயம் இருந்தது. திருமணம் வீட்டிற்கு சமைத்தல் என்பது சாதாரண காரியம் இல்லை, இதனால் என் பெரியம்மா சின்னப் புதூர் (சமையல் கலைஞர்) அவர்களை என்னுடன் என் தந்தை அனுப்பி வைத்தார்.

ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியும் என்றநம்பிக்கை இருந்தது. காரணம் நான் கற்றுக் கொண்டது என்னுடைய தாத்தாவிடமிருந்து. என்னுடைய பெரியம்மாவிடம் நானே முழுவதுமாகப் பார்த்துக் கொள்கிறேன். ஏதேனும் தடுமாறும் சூழலில் எனக்கு உறுதுணையாக இருந்தால் போதும்  என்று சொல்லிவிட்டேன். அவர்களும் என்னுடைய பேச்சை மதித்து என்னை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டார்கள். என்னுடைய முதல் முயற்சி பெருத்த வெற்றி சாப்பிட்டவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள். இது எனக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தைக் கொடுத்தது. அதன் பிறகு அப்பகுதியில் என்னுடைய சமையலைப் பரவலாகப் பேசத் தொடக்கிவிட்டார்கள். திருமணம், காதணிவிழா, வலைகாப்பு,  பண்டிகைப் போன்ற விழாக்களுக்குத் தொடர்ந்து ஆர்டர் வர ஆரம்பித்தது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கே: சமையலுக்கான வேலையாட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள்?

இது மிகவும் முக்கியமான ஒன்று. நான் தேர்ந்தெடுக்கும் அத்துணை வேலையாட்களும் என்னை விட வயதில் குறைந்தவர்களாகவே தேர்ந்தெடுப்பேன். காரணம் என்னுடைய சமையலுக்கென ஒரு தனியான ருசியை வைத்திருப்பேன். அதை மட்டுமே முறையாக பயன்படுத்துவேன்.

அனைவரிடத்திலும் ஆலோசனையும், கருத்துக்களையும் கேட்பேன் ஆனால் முடிவெடுப்பது நானாக மட்டுமே இருப்பேன்.

நாங்கள் தென்னிந்தியா, வடஇந்தியா போன்ற உணவுகளையும் தயாரித்து வருகிறோம். அப்படியிருக்கும் போது அது சம்மந்தமான உணவு தயாரிப்பு வல்லுநர்களை பணிஅமர்த்தி அவர்களை என்னுடைய ருசிக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்கி வருகிறோம்.

கே: உங்கள் கேட்ரிங் சென்டரின் தனித்தன்மைகள் என்ன?

எந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மை பெறவேண்டும் என்றால் மற்றநிறுவனத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில் எங்கள் சென்டர்  மாறுபட்டதாக காணப்படுகிறது.

  1. உணவு பரிமாறும் பொழுது உணவின் வரிசை முறைஒழுங்காக வரிசைப்படுத்தி பரிமாறுவதற்கு ஏற்றவகையில் முன்கூட்டியே அமைத்துவிடுவோம்.
  2. சமைப்பவர் முதல் பரிமாறும் அனைவருக்கும் ஓரே நிறத்தில் சீறுடை கொடுத்திருக்கிறோம்.
  3. நாங்களே சொந்தமாக தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைத் தயாரித்து அந்தப் பொருள் மூலமே தயாரித்து வருகிறோம்.
  4. சமைக்கும் பாத்திரம் அனைத்தும் காப்பர் பித்தளை பாத்திரங்களையே பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு சமையல் முடிவுக்கு பின்னர் ஈயம் பூசி அதற்கு பின்னரே பயன் படுத்தோம்.
  5. அலுமினியம் பாத்திரம், அஜனமோட்டோ போன்றவற்றைநாங்கள் பயன்படுத்தில்லை.
  6. எங்களிடம் 50 ஆயிரம் பேருக்கு சமைக்ககூடிய பாத்திரங்கள் பணியாளர்கள், உணவைக் கொண்டு செல்ல தனித்தனி வாகன வசதிகள் போன்றவை இருக்கின்றன.
  7. அசைவம் மற்றும் சைவம் இரண்டையும் சிறந்த முறையில் தயாரித்துக் கொடுக்கிறோம்.

இப்படி எண்ணற்றதனித்தன்மைகள் இருக்கிறது. நாங்கள் முற்றிலும் குறைந்த விலையில் அதிக ருசி ஏற்படக்கூடிய அளவில் தான் எப்போதும் உணவைத் தயாரித்து கொடுக்கிறோம்.

வாடிக்கையாளர்களின் மனநலனும், உடல் நலனுமே எங்களைப் பொருத்த வரையில் முக்கியமாகக் கருதுகிறோம்.[hide]

கே: ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

எந்த ஒரு விழாவானாலும் தமிழர்கள் உணவிற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம் தன் வீட்டிற்கு வரும் அழையா விருத்தாளிக்கே விருது உபசரிக்கும் நம் நாட்டில் அழைத்து விருது வைக்கிறார்கள் என்றால் அது எப்படியிருக்கும் என்றும் நான்  சொல்லி கேட்கத் தேவையில்லை.

5 முதல் 6 மாதத்திற்கு முன்னரே எங்களைப் பற்றி அறிந்து கொண்டு இப்படி ஒரு விசேஷம் வீட்டில் இருக்கிறது நீங்கள் தான் சரியாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முன் பணம் கொடுத்து சென்று விடுவார்கள்.  நம்மை நம்பி இப்படி ஒரு வேலை வருகிறதோ அவர்களின் நம்பிக்கைகளை நாம் முறையாகக் காப்பாற்றவேண்டும். அப்படியிருக்கும் போது நாம் மிகுந்த அக்கரைக் கொள்ள வேண்டும்.

அவர்களின் எண்ணத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வந்தவர்கள் உணவினைப் பாராட்டிச் சென்றால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமால் நம்மிடம் வந்து சொல்வார்கள் அது தான் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது.

கே: தமிழர்களின் உணவு முறையில் தற்போது மாற்றம் அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

வருத்ததுடன் ஆம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. உலகிலேயே தமிழர்களின் உணவுக் கலாச்சாரம் தான் சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பெரிதும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

எவ்வளவு சூடான சாப்பாடாக இருந்தாலும் அதை தலைவாழை இலைப் போட்டு சாப்பிட்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது என்று அறிவியல் ஆய்வுகள் கூறிப்பிடுகின்றன.

சாப்பிடுவதற்கு வரிசை முறைஇருக்கிறது. முதலில் எதைச் சாப்பிட வேண்டும், இறுதியாகச் எதைச்சாப்பிட வேண்டும் என்று வரிசை முறைசாப்பிடும் ஓரே இனம் நம் தமிழ் இனம் மட்டும் தான்.

சாப்பிட்டவுடன் வெற்றிலைப் பாக்குப் போடும் கலாச்சாரமும் நம்மிடமிருந்து தான் தோன்றியது.நம்முடைய முன்னோர்கள் 100 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடைபிடித்த உணவு முறைகள் தான். இன்றும் பலர் சாப்பிடவுடன் வெற்றிப்பாக்குப் போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

நம் உணவில் பயன்படுத்தும்  மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி முதலான பொருட்கள் பெரிதும் மருத்துவம்  மகத்துவம் மிக்கதாகும்.

மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நம்மூர் இட்லி 1 வயது குழந்தை முதல் 100 வயது பெரியவர் வரை அனைவரும் உண்ணக்கூடிய உணவு என்று உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது.

அப்படி நாம் சாப்பிடும் அத்துனை உணவுகளும் நம்மை சுற்றி 50 கிலோ மிட்டர் சுற்றுப்புறத்திலேயே கிடைக்கின்றன. அவ்வாறு இருக்கும் பொழுது இதை முறையாகக் கடைப்பிடித்தாலே உடலில் எவ்வித நோய்யின்றி வாழலாம்.

கே: பாஸ்ட் புட் என்று சொல்லக்கூடிய துரித உணவுகளின் வளர்ச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?

பரப்பரப்பான உலகில், மனிதன் பணம் சம்பாதிக்க நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறான். அவர்களுக்கு சமைத்து சாப்பிட நேரம் இல்லை.

கணவன் மனைவி இருவரும் தற்போது வேலைக்குச் சென்றால் தான் குடும்பம் நடத்தும் முடியும் என்றநிலை தற்போது உள்ளது.

அப்படியிருக்கும் சமயத்தில் சாலையோரத்தில் இருக்கும் கடைகளுக்குச் சென்று தானும் உண்டு தன்னுடைய குடும்பத்திற்கும் வாங்கிச் செல்கிறார்கள்.

நூடுல்ஸ் போன்றஉணவுகள் மூன்று நிமிடத்தில் தயராகிவிடுகிறது, அதில் சுவைகூட்ட சுவை ஊட்டிகள், அஜினமோட்டோ போன்றவை கலக்கப்படுகிறார்கள். அப்போதைய ருசிக்கு சாப்பிடும் நாம் பின்விளைவைப் பற்றி சிந்திப்பதில்லை.

பணத்தை எப்போதும் வேண்டுமென் றாலும் சம்பாதித்து விடலாம் . ஆனால் ஒரு முறைஉடல் நலம் கெட்டுவிட்டால் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் சிரமம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு ருசிக்கு உணவுக் கொடுக்கமால், ஆரோக்கிய உணவான பயிறு வகைகளை நல்ல சுவையாக சமைத்துக் கொடுங்கள். ஒரு நாள் இரண்டு நாள் என்று தொடர்ந்து கொடுத்தால் அதன் சுவையை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

தற்போதைய துரித உணவு 15 ஆண்டுகளுக்குப் முன்னர் வந்தது. ஆனால் நம்முடைய பாரம்பரிய உணவு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

கே: கடந்த வந்த பாதையில் உங்களுக்கு ஏற்பட்ட திருப்புமுனையான சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?

என் வாழ்க்கையில் எதுவுமே உடனே ஏற்படவில்லை. எல்லாமே சிறிய துளியாகத் தொடங்கி தான் இன்று பெரு வெள்ளமாக காட்சியளிக்கிறது.

நான் முதன் முதலில் ஒரு தள்ளுவண்டியை வாடகைக்கு வாங்கி 20 கிலோ மீட்டர் தினமும் தள்ளிக் கொண்டே சென்று வியபாரம் செய்து வந்தேன். ஆரம்பத்தில் புதிய கடை என்றால் வாங்க யோசிப்பார்கள், ஆனால் சுவைத்து பழகிவிட்டால் நம்மை விட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்.

அப்படி நான் வேலை செய்து வருமானத்தில் என்னுடைய 19 ஆம் வயதில் முதன் முதலில் டிவிஏஸ் 50 வண்டியை வாங்கினேன். அதன் பிறகு ஒவ்வொரு தருணத்திலும் ஒரு வளர்ச்சியடைந்து வாகனங்கள் மாறத் தொடங்கின. இப்போது என் தேவைக்கு ஏற்றார் போல் வாகனங்கள் உள்ளது.

அகில இந்தியா பிஎஸ்என்எல் கருத்தரங்கம் சென்னையில் நடைப் பெற்றது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தார்கள். சுமார் 45 ஆயிரம் பேருக்கு சமைத்தது என் வாழ்க்கையில் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். அரசியல் அரங்கத்திற்கு, விளையாட்டு மைதானத்திற்கு என்று பெரிய  பெரிய ஆர்டர்கள் கிடைத்தது. தற்போதும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.

கே: விளையாட்டு வீரர்களுக்கு உதவும் மனப்பான்மை எவ்வாறு உண்டாயிற்று?

சிறிய வயதிலிருந்தே வறுமையின் வாசனையிலேயே வளர்ந்தவன் நான். சின்ன வயதில் ஆசைப்படும் அனைத்தும் அனைவருக்கும் கிடைத்துவிடாது.

எனக்கு கபாடி விளையாட மிகவும் பிடிக்கும். ஆர்வம் இருந்தும் என்னை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை. கபாடி சீருடை அணிந்து விளையாட வேண்டும் நீண்ட நாள் ஆசையாக இருந்தது ஆனால் இன்று வரை நிறைவேறவில்லை.

என்னால் தான் முடியவில்லை. என்னைப் போல உள்ளவர்களை இணங்கண்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசை எனக்குள் எப்போதும் உண்டு. இதனால் 12 ஆண்டுகளுகாக தேகக்கம்பட்டி அதைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு இன்று வரை சீருடை வாங்கிக் கொடுத்து வருகிறேன்.

கபாடிப் போட்டியில் விளையாடும் வீரர்கள் வீராங்கணைகள் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.

கார்த்திக் மற்றும் மணிகண்டன் இரண்டு மாணவர்களும் அத்தலெடிக் விளையாட்டில் இருக்கிறார்கள். இவர்கள் விளையாடுவதற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறேன். நிச்சயம் இவர்கள் இருவரும் ஒருநாள் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

இப்படி எத்தனையோ மாணவர்கள் தகுதியிருந்தும் வறுமையின் காரணமாக விளையாட முடியாமல் இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்தளவிற்கு செய்த கொண்டிருக்கிறேன். நீங்களும் செய்யுங்கள், நிச்சயம் அவர்கள் உங்களுக்கு நற்பெயரை வாங்கிக் கொடுப்பார்கள்.

விளையாட்டுப் போட்டியின் மூலம் நிறைய மாணவர்களை கல்லூரியில்  படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவிகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறேன். தமிழரசன் என்றமாணவன் ரஷ்யாவிற்கு அருகிலுள்ள  ஊரில் அர்மோனியா என்னும்  கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறான்.

கே: உங்களின் எதிர்கால இலக்கு

எதிர்காலத்தில் நான் சாதிக்க நிறைய இருக்கிறது. அந்த சாதனைகள் அனைத்தும் பிறருக்கு உதவும் வகையிலே அமைய வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை நோக்கம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும்  என்றால்.

புதியதாய் ஒரு உணவினைத் தயாரிக்க வேண்டும். அது உணவே மருந்தாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு நோயைக் குணப்படுத்தும் அளவிற்கு மாற்றம் பெற வேண்டும்.

விளையாட்டு வீரர்களை ஊருவாக்கும் விதமாக ஒரு அறக்கட்டளைத் தொடங்க வேண்டும்.

தந்தைப் பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார் நிறைய சம்பாதியுங்கள், தாராளமாகப் பிறருக்குக் கொடுங்கள் அவரின் வாக்கிற்கேற்ப நிறைய உதவ வேண்டும்.

கே: படித்த, பிடித்த மனிதர்கள், புத்தகங்கள்

எனக்கு மிகவும் பிடித்த மனிதர் என்று பார்த்தால் தந்தைப் பெரியார் அவர்கள், தன்னலம் கருதாது பொது நலன் வாழ்க்கையில் வாழ்ந்தவர். அடிப்படையில் பெரிய செல்வந்தர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தவர். அவர் எழுதிய அத்துனை புத்தகங்கள் நான் விரும்பி வாசிப்பேன். தந்தைப் பெரியார் அவர்களின் இனிவரும் உலகம். வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர், மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய அர்த்தமற்றஇந்து மதம் என்றபுத்தகம் என் வாழ்வில் பெரிதும் பொக்கிஷமாக பாதுகாக்கும் புத்தகங்களில் ஒன்று. பெரியார் அவர்களின் பிடித்த வாசகம் நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய ஒருவித பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்ப்பது சிறுமை குணமே ஆகும்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?

பிறக்கின்றஅனைவரும் சாதனை யாளர்களே, அவர்களின் திறமையை அறியும் வரை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி எளிது

நேரத்தை சரியாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டும்.

பாரம்பரிய உணவை மட்டுமே உண்ணுங்கள், இயற்கையான, சத்தான உணவினை உட்கொள்ளுங்கள்

இரசாயன உணவினை நீங்கள் உண்ணாதீர்கள், மற்றவர்களையும் உண்ண அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு வகைகளைக் கொடுத்துப் பழகுங்கள்.

நோய் நொடியில்லாத வாழ்வு மக்களுக்கும் நாட்டுக்கும் தேவை.

கே: வளரும் தலைமுறைக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?

வேலைக் கேட்டு விண்ணப்பம் போட்டு அழுக்காமல், நீங்களே மற்றவர்களுக்கு வேலைத்தரும் அளவிற்கு உயர வேண்டும்.

படிப்பிற்கேற்றவேலை வரட்டும் என்று வாசலைப் பார்த்து எந்தப் பயனும் இல்லை. உன் திறமையை அலங்கரிக்க ஆயிரம் மணிமகுடங்கள் காத்திருக்கிறது.

பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்தது போதும், அவர்களின் ஆனந்தம் படுத்தப் புறப்படுங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்.[/hide]

இந்த இதழை மேலும்

மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!

திருமதி. சித்ரா பார்த்தசாரதி

ஐசால்வ் & க்யாட் க்ரூப், இயக்குனர் & முதன்மை நிதி மேலாளர்

நேர்காணல் : செந்தில் நடேசன்

விக்ரன் ஜெயராமன்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியமடி

என்பார் பாரதி. கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி நிகர் சமம். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்று இந்த உலகில் சாதிக்க முடியும் என்றவாக்கிற்கிணங்க வாழ்ந்து வருபவர்.

ஒரு பெண் இந்த சமுதாயத்தில் எவ்வாறு எல்லாம் சாதிக்கலாம், சாதிக்க என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறது என்பதை முறையாகப் பின்பற்றி நவீன உலகில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்து தடம் பதித்து வருபவர்.

சாப்ட்வேர் துறைமற்றும் இணையதள தொழிற்நுட்பத்துறையில் பல சாதனைகள் செய்து இன்று உலகம் முழுவதும் வலம் வரும் வரலாற்றுப் பெண்மணி.

நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் என்றவாக்கிற்கிணங்க பல தொழிற்நுட்பத் துறைகள் தொடங்கி அதனால் சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்து வரும் திருமதி சித்ரா அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

கே. உங்களின் பிறப்பும் பின்புலமும் பற்றிச்  சொல்லுங்கள்?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூரில். ஒரு பாரம்பரியமான குடும்பத்தில்  பிறந்தேன். என் பெற்றோர்கள் பெயர் திரு. ராஜகோபால், திருமதி. சுந்தரி அவர்கள். எனக்கு ஒரு அண்ணன் திரு. ராமசாமி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அண்ணி ராதிகா அவர்கள். என்னுடைய கணவர் திரு. ரா. பார்த்தசாரதி. CADD Centre, isolve Group, ikix Group Chairman & CEO.  எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள். பிரித்விக், ரித்விக். இவர்கள் ஐரோப்பாவில் எம். எஸ் படித்துள்ளனர்.

என்னுடைய தந்தை கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் கோவை மாவட்டத்தில் நல்ல புகழ் பெற்றஅவிலா கான்வென்ட் பள்ளியில் படித்தேன்.

மிகவும் ஒழுக்கமும் உயர்ந்த பண்பும் போதிக்கும் சிறப்பான பள்ளி. கல்லூரிப் படிப்பை  திரு. அவிநாசிலிங்கம் கல்லூரியிலும் எம். பி. ஏ பட்ட மேற்படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் பயின்றேன்.

கே. உங்கள் வாழ்க்கையில் யார் முன்னோடியாக இருந்தார்கள்?

பள்ளி, கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிக்கும் போது எல்லா ஆசிரியர்கள், பேராசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை தான் பின்பற்றினேன். ஆனால் குறிப்பாக பள்ளி பருவத்தில் எனது மாமாவின் மனைவி (அத்தை) திருமதி. இராஜலஷ்மி வாசன் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் முன்மாதிரி ஆக இருந்தார்.

அதன் பின்பு அவிநாசிலிங்கம் கல்லூரியில் படிக்கும் போது டாக்டர். இராஜம்மாள். பி. தேவதாஸ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் என் பல லட்சியங்களுக்கு ரோல் மாடல் என்று சொல்லலாம். கல்லூரியில் நான் படித்த வணிகவியல் துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் என்னுடைய இலட்சியங்கள் அடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு இங்கு படிக்கும் போது சிறந்த மாணவிக்கான விருதை (தங்க பதக்கம்) பெற்றேன்.

பாரதியார் பல்கலை கழகத்தில் மேற்படிப்பின் போதும் அனைத்து பேராசிரியர்களும் நாங்கள் எதிர்காலத்தில் நல்ல மேலாளர்களாக வருவதற்கு நல்ல பயிற்சி அளித்தனர். 2015 ஆம் ஆண்டு “Distinguished Alumini Achiever Award” என்றவிருதையும் பெற்றேன். இப்போது, பெப்ஸி நிறுவனத்தின் இந்திரா நூயி எனக்கு பெரிய முன் மாதிரியாக இருக்கிறார்.

கே. நீங்கள் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஒரு தொழிற் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்களா?

எனக்கு ஆர்வம் எல்லாமே IAS படிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த காலத்தில் பெண்கள் அத்துறைக்கு போவது சிறிது கடினம் தான் என்று என் பெற்றோர்க்கு இருந்தது. அதனால் அடுத்து என்ன என்று நினைத்து கொண்டிருந்த போது, கல்லூரியில் விருது வழங்க வந்த சிறப்பு விருந்தினர் எம்.பி.ஏ படிக்கலாமே என்று அறிவறுத்தினார். அதன் பின்பு தான் அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்த போது அத்துறையிலும் நான் சிறந்து விளங்கலாம் என்று எம்.பி.ஏ படித்தேன். ஆனால் படிக்கும் போது எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

கே. நீங்கள் படிக்கின்றகாலத்திலும் தற்போதும் பெண்கல்வி எவ்வாறு மாறுதல்கள் அடைந்துள்ளது?

நிச்சயமாக, நிறைய மாறுதல்கள் அடைந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் படிக்கின்ற காலத்தில் பெண்களை அதிகமாகப் படிக்க வைக்க மாட்டார்கள். ஆனால், தற்போது நிலை மாறிவிட்டது. நான் படிக்கின்றகாலத்தில் எனது வகுப்பில் மொத்தம் 35 பேர். அதில் என்னையும் சேர்த்து 10 பெண்கள் மட்டுமே படித்தோம். அப்போது ஆண், பெண் இருபாலரும் இணைந்து படிக்கும் கல்லூரிகளும், பள்ளிகளும் அதிகளவில் இல்லை. ஆனால் இப்போது எல்லாமே இயல்பாகிவிட்டது.

ஆண்களைப் போலவே பெண்களும் எல்லாத்துறையிலும் படித்து சாதனை புரிந்து வருகிறார்கள். பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு கூட அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது தற்போது பெண் கல்வியின் வளர்ச்சிதானே.

கே. மேலாண்மை படிப்பு மிகவும் கடினமாக இருந்ததா? எப்படி அதை மேற்கொண்டீர்கள்?

ஆம், முதலில் கடினமாக தான் இருந்தது. மேலாண்மை படிப்பில் எல்லா பாடங்களும் இருக்கும் (Accounting, Engineering, Economics, Computer Science etc). அப்படிப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது சற்று சவாலாக இருந்தது. அனைத்து பேராசிரியர்களும் புரியாத பாடங்களைத் திரும்பத் திரும்ப புரியும் வரை எங்களுக்குச் சொல்லி கொடுத்தார்கள். பல நேரங்களில் பல்வேறு துறைகளில் இருந்து வந்த நண்பர்களுடன் குழுப் படிப்பை செய்து புரிந்து கொள்வோம். என் வாழ்க்கையில் எம்.பி.ஏ படித்ததை ஒரு பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

கே. படித்த உடனே தொழில் தொடங்கினீர்களா? உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

படித்தவுடனேயே தொழில் தொடங்கவில்லை. பிரிக்கால் நிறுவனத்தில் (Pricol) என்னுடைய மேலாண்மை ஆய்வை செய்தேன். செய்யும் பொழுது அங்கேயே வேலை கிட்டியது.

அப்போது சில நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூக்கு வருவார்கள். நான் படித்து கொண்டிருந்த போது சிட்டி பேங்க்கிலிருந்து வந்தார்கள். நான் தான் பிரிக்கால் பணி கிடைத்து விட்டதே, இனி எதற்கு சிட்டி பேங்க் நடத்தும் நேர்முகத் தேர்விற்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய பேராசிரியர்கள் என்னை அழைத்து உனக்கு கிடைக்கிறதோ இல்லையோ அதுவும் ஒரு அனுபவம். நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

அவர்களின் ஆலோசனை படி நானும் சென்றேன். அங்கு குழு கலந்துரையாடல், நேர்முகம் போன்றவை நடைப் பெற்றது. இறுதியாக இரண்டு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருவர். ஆனால் வேலை மும்பையில், இதை என்  பெற்றோர்கள் எப்படி நினைப்பார்கள் என்று என் மனதில் ஒரு தயக்கம். ஆனால் என்னுடைய தந்தை மிகவும் ஊக்குவித்தார். மும்பை மட்டும் செல்ல அனுமதியளிக்கவில்லை. சென்னையில் சிட்டி பேங்க் அலுவலகம் இருந்தது. அங்கே சென்று பணியில் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் சென்னையி லேயே பணியாற்றினேன்.

பிறகு பேங்க் ஆப் அமெரிக்காவில் பணியில் சேர்ந்தேன். அதன் பின் அஆச அம்ழ்ர் பேங்கில் சேர்ந்தேன். மொத்தம் 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன்.

கே. உங்களின் தனித்தன்மை பற்றிச் சொல்லுங்கள்?

நான் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறைநன்கு யோசித்து அதன் பிறகு தான் செயல்பட முனைவேன்.

திட்டமிட்டு செய்யும் எந்த பணியும் சோர்வும், தோல்வியும் அடையாது என்று நம்புவேன். அந்த வகையில் திட்டுமிடுதலை நான் முறையாக கடைப்பிடிப்பேன்.

Measure twice cut once, என்பது எனக்குப் பிடித்த பழமொழி. எங்கு சென்றாலும் என்னை நன்கு தயார் படுத்திக் கொண்டு செல்வேன். மீட்டிங், கருத்தரங்கம் போன்றவற்றிர்க்கு போகும் பொழுது என்னை நானே தயார் படுத்திக் கொள்வேன். எனக்குள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வேன்.

எந்த வினாவிற்கும் விடை தெரியாது என்று முடிந்தவரை சொல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

கே. நீங்கள் எப்போது முதலில் தொழில் செய்ய ஆரம்பித்தீர்கள்? உங்கள் நிறுவனத்தில் நீங்கள் செய்யும் பணிகள் குறித்து?

மேலே, நான் கூறியது போல 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன். எனது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் போது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதனால் என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன்.

எனது கணவர் CADD Centre India Private Limited என்ற மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தார், தற்போதும் நடத்தி வருகிறார். இதில் தொழில் நுட்பக்கருவிகள் விற்பனை, மென்பொருள் விற்பனை, க்யாட் பயிற்சி போன்றவை அடங்கும்.

அப்போது வங்கிகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள், தங்களுடைய சில சேவைகளுக்கு உதவ அவரிடம் அணுகினர். பெண்கள் எப்போதும் அவருடைய சொந்த காலில் நிற்கவேண்டும் என்றமுற்போக்கு சிந்தனை உடையவர் என் கணவர். அப்போது நான் என் வேலையை ராஜினாமா செய்தவுடன், உனக்குத் தெரிந்த தொழிலான, வங்கிகள் தொடர்பான சேவைகள் கொடுக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நாமே அதற்கு ஒரு நிறுவனம் ஆரம்பித்து நீ அதை வழி நடத்தலாமே என்று கூறி ஐசால்வ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம். இப்படித்தான் நான் ஒரு Entrepreneur ஆனேன். முதலில் பகுதி நேரம் வேலை செய்தேன். பிறகு குழந்தைகள் வளர்ந்தவுடன் முழு நேர பணியாளாராக என்னை இணைத்து கொண்டேன்.

நான் இந்நிறுவனத்தின் இயக்குனராகவும், முதன்மை நிதி மேலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். CADD Centre மற்றும் ikix 3D  பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும், முதன்மை நிதி மேலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

கே. பெரிய நிறுவனத்தை வழி நடத்துவதில் உள்ள சவால்கள் என்ன?

என்னைப் பொறுத்த வரை சவால்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நல்ல பணியாளர்களுடன் சவால்களை மேற்கொள்ள முடியும்.  எல்லாமே சாத்தியம் தான்.

உலகத்தின் மிப்பெரிய இஅஈஈ பயிற்சி தரும் நிறுவனம் எங்களின் CADD Centre தான். 750 கிளைகளும், 22 நாடுகளிலும் இருக்கிறது. அதற்கு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவரின் குழுவினரின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தான்.

இதைத் தவிர ஐசால்வ் மற்றும் உலகத்தின் மிகப்பெரிய 3D பிரிண்டிங் நிறுவனமான ikix 3D   பிரிண்ட்ஸ் என்றநிறுவனங்களும் நடத்துகிறோம்.

ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தான்.  அவர்களைச் சரியாக வழிநடத்தினாலே போதும், சாதித்து விடலாம்.

கண்டிப்போடு எதையும் சொல்லுதல் கூடாது. அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். என்பது என்னுடைய கணவருடைய அடிப்படைத் தத்துவம்.

எனக்கும் சரி, எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சரி என்னுடைய கணவர் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இதனால் எங்களால் எல்லாப் பணியும் செம்மையாகச் செய்து முடிக்க இயலும்.

அதே போல் ஒரு வேலையை தனியாகச் செய்வதை விட குழுவாகச் செய்தால் அந்தப் பணி மேலும் சிறப்பாக அமையும்.

அந்த வகையில் எங்கள் நிறுவனத்தில் வேலை பணியாளர்கள் அனைவரும் மிகுந்த அக்கரையும், கவனத்துடனும் பணியைச் செய்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கே. இந்த தொழிற்நுட்ப துறையிலுள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

எல்லாத் துறையிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை சிக்கலாகப் பார்க்காமல், புதிய முறையில் வேலையைக் கற்றுக் கொள்வதாகப் பார்க்க வேண்டும். எல்லாம் சரியாகப் போகும் பொழுது எதுவும் தோன்றாது. ஆனால் சில சவால்களைச் சந்திக்கும் பொழுது தான் நமக்கு புது புது எண்ணங்கள் மனதில் தோன்றும். நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போல எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே குழு இருக்கிறது. எது நடந்தாலும் அவற்றைமுறையாகக் ஆராய்ச்சி செய்து அவற்றிக்குத் தீர்வு காணுவார்கள்.

வந்தப் பின் எதிர்கொள்வதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பது தான் எங்கள் நிறுவனத்தின் அடிப்படைத் தத்துவம்.

எங்களுடைய நிறுவனம் 24 மணி நேரமும், 365 நாட்களும் இயங்கிக் கொண்டிருக்கும். வெளிநாடுகளுக்கு நாங்கள் செய்திதாளை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் கிளைகள் சென்னையிலும், கோவையிலும் உள்ளன. இங்கிருந்து தான் கிட்டதட்ட 500 பதிப்பகங்களுக்கு 22 மொழிகளில் வடிவமைத்துக் கொடுக்கிறோம். இதைத் தவிர வங்கிகள் மற்றும் அலைபேசி நிறுவனங்களுக்கு சேவைகள் செய்கிறோம். நாங்கள் நிறுவனத்தில் நேர மேலாண்மை என்பது சரியாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் தேவையை உடனுக்குடன் செய்து கொடுப்போம், ஏனெற்றால் செய்திகள் எப்போது வேண்டு மென்றாலும் வரும் என்பதால் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.

கே. உங்களின் எதிர்காலத்திட்டம்?

தற்போது தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான் செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய வளர்ச்சி வருகிறது. அதைச் சரியாகக் கையாண்டு எங்கள் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து தொழிற்நுட்ப வசதிகளை பெருக்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகமான சேவைகள் கொடுக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் துறைகளில் சேவைகள் செய்ய உள்ளோம். தொழிற்நுட்ப முறையில் நல்ல உறவு முறைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

மருத்துவ துறைக்கு தொழிற்நுட்பத்தைத் தொடங்கியுள்ளோம். அதன் தேவைகளை சேவைகளாகக் கொடுக்கின்றோம். பெரிதளவில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.

கே. தற்போது அரசின் சில அதிரடித் திட்டத்தால் உங்கள் நிறுவனம் பெறும் ஏற்றஇறக்கங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. நாடு வளர வேண்டும் என்றால் சில அதிரடித்திட்டங்கள் எடுத்து தான் ஆக வேண்டும்.

ஒரு சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் ஏற்படும். இது இயல்பு தான். ஆனால் இந்த மாற்றத்தின் காரணமாக பல புதிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

பணம் இல்லா பரிவர்த்தனை, ரூபாய் நோட்டு மாற்றம் போன்றவை சில வளர்ச்சியின் படி நிலைகள் தான்.

ஆரம்பத்தில் பண பரிவர்த்தனையில் கால தாமதம் ஏற்பட்டது. இப்போது உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது.

வெளிநாடுகளில் நிறைய இடங்களில் பணம் இல்லாத பரிவர்த்தனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்று நம் நாட்டில்  நடந்து வருகிறது.

சென்னையில் ஒரு ஆட்டோவில் அனைத்து தொழிற்நுட்ப வசதிகள், செய்திதாள்கள், புத்தகங்கள் போன்றவை ஓட்டுனர் வைத்திருக்கிறார், ஆட்டோவில் பயணம் செய்யும் பொழுது அனைத்தையும் நாம் இலசவமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமீபத்தில் செய்தித்தாளில் படித்த பொழுது நிச்சயம் நான் மகிழந்தேன். இது தான் வளர்ச்சியின் அழகு.   .

கே. பெண்கல்வியின் மூலம் சமுதாயத்தின் வளர்ச்சி எப்படியிருக்க வேண்டும்?

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இதில் ஆண், பெண் பாகுபாடில்லை.

ஆரம்பத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது எல்லாத் துறையிலும் பெண்களின் வளர்ச்சி இருக்கிறது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் வேலை செய்கிறார்கள்.

ஒரு பெண், கல்வி கற்றால் அப்பெண்ணும் முன்னேறி, அம்முன்னேற்றத்தால் அந்த குடும்பம், அந்த சமுதாயமே வளர்ச்சி பெறும் என்பதில் எவ்வித மாற்றும் இல்லை.

பெண் கல்வி என்பது நாட்டிற்கு மிகவும் தேவை.

கே. இன்றைய சூழலில் தொழிற்நுட்பத்தின் சேவை எந்தளவிற்கு பயன்படுகிறது?

இன்றைய வியபார உலகில்  அனைத்து துறைகளிலும் தொழிற்நுட்பத்தின் பயன் அதிகளவில் தேவைப்படுகிறது.

புதுமைகள் நிகழ நிகழ தான், வளர்ச்சியும், மாற்றங்களும் அதிகளவில் தோன்றும். இந்த மாற்றம் தான், தனி மனித வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும்.

தற்போது நாம் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது சில தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.

கணினி மயமான உலகில் அனைத்தும் தொழிற்நுட்பத்தின் கீழ் இயங்கி வருகிறது. அப்படியிருக்கும் போது, நாடு வளர்ச்சியை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.

கே. புதியதாய் தொழில் தொடங்க வருபவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

நான் இளம் தொழில் முனைவோர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். இங்கு சாதிக்க பல வழிகள் இருக்கிறது. அதில் நீங்கள் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் தான் உங்களின் வளர்ச்சியே இருக்கிறது.

புதியதாய் தொடங்க வருபவர்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால் நம்மைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

பணம் வாங்குவது, பெறுவதில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஒரு வேலையை நம்மிடம் ஒப்படைத்து விட்டால், அதை வாடிக்கையாளர்களுக்கு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே அகல கால் வைக்க வேண்டாம். தேவையானதை மட்டும் செய்தல் வேண்டும்.

வேலை செய்யும் பணியாளர்களைச் சரியாக மதிக்க வேண்டும். அவர்களுக்கு போதுமான சுதந்திரம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இந்த இதழை மேலும்

உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…

பேராசிரியர். முனைவர் பொ. குழந்தைவேல்

துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

என்ற குறட்பாவில் வள்ளுவர், ஒருவர் எதைச் செய்தாலும் அன்போடும் தர்ம நியாயம் தவறாமலும் செய்தால் அது தான் அவர்களின் இல்வாழ்க்கையின் தன்மையாகும். அதனால் உலகத்துக்கும் நல்ல பயன் உண்டாகும் என்பதே இக்குறளின் நோக்கமாகும். இக்குறளிற்கு ஏற்றார் போல் வாழ்ந்துவருபவர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, கிராம சூழ்நிலையில் இயற்பியல் விஞ்ஞானத்தை முடித்து, பல நாட்டு வல்லுநர்களிடம் ஆராய்ச்சிகளில் பாராட்டுப் பெற்று இன்று துணைவேந்தர் பதவியை அடைந்துள்ளவர்.

இயற்பியல் விஞ்ஞானத்தை கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை எளிய முறையில் கற்பித்து பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

எப்பொழுதுமே ரௌத்திரம் இல்லாத நவரசத்தை மட்டுமே அனைவரிடத்திலும் போதிக்கும் அன்பும் அரவணைப்பும் மிக்கவர்.

வாழ்கையில் பெரும் எதிர்பார்ப்பற்று வாழ்வது கடினம் தான். எதிர்பாராத எதிர் பார்ப்புகள் அமைவது மிகக்கடினம். உலகம் பெரும் வித்தியாச மனப்போக்கை கொண்டது. அப்படிப்பட்ட உலகில் “பண பலத்தை விட மனபலம் தான் முக்கியம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர் தன் வாழ்வை ஏர் முனையில் ஆரம்பித்தவர்.

நல்ல பண்பாளர், படைப்பாளர், அறிவியல் விஞ்ஞானி, வேளாண் வித்தகர், நேர்மையின் சொந்தகாரர் என்று பன்முக திறமை உடைய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பொ. குழந்தைவேல் அவர்களின் நேர்முகம் நம்மோடு…

கே. உங்களைப் பற்றியும் நீங்கள் கல்விப் பயின்றது பற்றியும் கூறுங்கள்?

நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி என்னும் அழகிய குக்கிராமத்தில் திரு. பொன்மலைக்கவுண்டர் திருமதி. நல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். விவசாயம் மட்டுமே அறிந்த தெரிந்த குடும்பம் எங்கள் குடும்பம். அன்றும், இன்றும், இனியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு விவசாயத்தை  நேசிக்கும் குடும்பமாகத் திகழ்ந்து வருகிறது. எனக்கும் சின்ன வயதிலிருந்தே விவசாயம் செய்வது மிகவும் பிடிக்கும். இன்றும் விடுமுறைநாட்களில் வயலுக்குச் சென்று விவசாயம் பார்த்து தான் வருகிறேன். இதற்கு நான் எப்போதும் பெருமைப்படுவதுண்டு. என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதிரிகள். என் மனைவி அமராவதி வீரபாண்டி இரத்தினசாமி அவர்களின் புதல்வி.  எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், மூத்த மகன் டாக்டர். கு. பிரசாத், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகின்றார். எனது இளையமகன்   கு.கல்யாணசுந்தரம், சாப்ட்வேர் இன்ஜினீயராக கோவையில் பணிபுரிகின்றார்.

விவசாயக் குடும்பத்தின் பின்னணி என்றாலும் என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பது எனது தந்தையின் மிகப்பெரிய இலட்சியமாக இருந்தது. இதனால் அருகிலிருந்த கல்கட்டானூர் என்ற சிற்றூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். அங்கு எனக்கு திரு. சுப்பரமணியம் அவர்கள் ஆசிரியராக இருந்தார் அவர் மாணவர்களிடம் பழகும் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கும். அவர் வகுப்பில் எப்போதும் கல்வியின் சிறப்பினைப் பற்றிக் கூறுவார். இது எனக்கு மிகவும் கல்விப் பயணத்தில் உறுதுணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போது என்னுடன் இருக்கும் நேர்மையும், நம்பிக்கையும் என்னுடைய தாய் தந்தையிடமிருந்தும், எனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களிடமிருந்து வந்தது.

அதன் பிறகு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை பயின்றேன். அன்றைய காலக்கட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அதிகம் மதிப்பெண் எதில் வாங்குகின்றோமோ அதனை ஆசிரியரே தேர்வு செய்து நமது பாடப்பிரிவைத் தேர்வு செய்வார்கள். ஆனாலும் சிலர் தங்களின் விருப்பத்திற்கிணங்க பாடங்களை மாற்றிக் கொண்டார்கள், ஆனாலும் என்னால் இயற்பியல் துறையிலிருந்து மாற்றிக் கொள்ளவில்லை. இயற்பியல் துறையில் எனக்கு அப்பொழுதே ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் ஆசிரியர்கள் தேர்வு செய்ததையே படித்தேன்.

கே. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பிற்குள் நுழைந்தது குறித்து சொல்லுங்கள்?

பி.யுசி மற்றும் இளநிலைப் படிப்பை ஈரோட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான சிக்கையநாயக்கர் கல்லூரியில் முடித்தேன்.  முதுகலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரிலுள்ள ஏ.வி.வி.எம் புஷ்பம் கல்லூரியில் பயின்றேன்.  பள்ளியில் பழனிசாமி ஆசிரியர் அவர்கள் தான் நான்  இயற்பியல் எடுத்து படிக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தார். எனது இந்த ஆர்வம் என் ஆசிரியர் மூலம் தான் வந்தது என்றுதான் கூற வேண்டும்.

நான் படிக்கும் பொழுது முதுகலையில் நல்ல மதிப்பெண் பெற்றதால் தான் எனக்கு ஆராய்ச்சி செய்ய ஆர்வம் கூடியது. 1979 ல் முதுகலைப் படிப்பை முடித்த நான், 1980ல் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எண்ணினேன் அவ்வாறு இருக்கையில் அன்னூரில் உள்ள அரசினர் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அதில் 6 மாதங்கள் மட்டுமே நிலைத்து நின்றேன். எனக்கு ஆராய்ச்சித் துறையில் ஆர்வம் இருந்ததால் நான் எம்.ஐ.டி கல்லூரியில் ஆராய்ச்சித் துறையில் சேர்ந்தேன். அதற்கு முழுக்காரணமும் என்னுடன் பணிப்புரிந்த இராமய்யா என்பவர் தான். அவர் தான் என்னைப் படிக்கும் படியும் ஆசிரியர் பணியை விடும்படியும் அறிவுறுத்தினார். பிறகு என் பணியில் இருந்து விலகி விட்டு எம்.ஐ.டி கல்லூரியில் சேர்ந்தேன்.

இதுபற்றி வீட்டில் யாருக்கும் தெரியாது. வீட்டில் இவ்வாறு இருந்த தருணத்தில் என் வீட்டில் எனக்கு மணம் புரிய பெண் பார்த்தனர். அப்பொழுது எனக்கு 22 வயதுகளே நிரம்பி இருந்தது. அவ்வாறு இருக்கையில் நான் வேலையை விட்டதைக் கூறிவிட்டு படிப்பைத் தொடரவே திருமண வேலைகள் நின்றன.

ஆரம்பத்தில் என்னுடைய தந்தை இதற்கு மறுப்பு தெரிவித்தார். உனக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கும் போது இப்படி வேலையை விட்டுவிட்டு படிக்கிறேன் என்று சொல்கிறாய். என்று முதலில் சொன்னார் அதன்பின் படிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.

கே. வேலையை விட்ட பின்னர் அடுத்த உங்கள் திட்டம் என்னவாக இருந்தது?

சென்னை சென்று படிக்க வேண்டும் என்று நினைத்து கையில் ஒரு பொட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டேன். முதன் முதலில் ஊரை விட்டு வெளியே செல்கிறேன்.

இதற்கு முன் ஒரு முறைசென்னைக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நானும் என் நண்பர் ஒருவரும் சென்றோம் இருவருக்கும் சென்னை புதியது. இருவருக்கும் அந்த முகவரி தெரியாது. ஆனாலும் சரியாகப் பேருந்து பிடித்து சென்று விட்டோம், ஆனால் இறங்கும் இடத்தை விட்டுவிட்டு 5 கி.மீ நடத்தே சென்றது சென்னையின் முதல் அனுபவம்.

அவ்வாறு ஒரு மறக்க முடியாத சம்பவத்திற்கு அடுத்து சென்னை செல்கிறோம், என்று முதலில் சற்று மனதிற்குள் ஐயமாக இருந்தது.

அதுவும் சென்னை போன்றபெரிய நகரம், அங்கு யாரும் தெரியாது, எங்கு தங்குவதும் என்றும் தெரியாது இப்படிப்பட்ட சூழலில் சென்றேன்.

ஒரு கிரமாத்துக்காரன் எப்படி இருப்பாரோ அப்படி நானும் வேட்டி சட்டை கையில் ஒரு பெட்டி, கண்ணில் ஒரு தேடுதல் என்று அங்கும் இங்கும் தேடிக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு நெறியாளர் உதவியுடன் அங்கு விடுதியில் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது.

சில ஆண்டுகளுக்கு பின்னர் நான் பேராசிரியர்  பொன்னுசாமி என்பவர்  உதவியால் திருச்சியில் பல்கலைக்கழகத்தில் இணைந்தேன். பல இடர்பாடுகளுக்கு இடையில் அங்கு இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். 4 வருட ஆராய்ச்சிக்கு பல விதங்களில் என்னுடைய ஆசிரியர் நடராஜன் அவர்கள் உதவியாக இருந்தார். அடுத்து இயற்பியல் துறைப் பேராசிரியர் இலட்சுமணன் அவர்களின் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

கே. எம்.ஐ. டி யில் முனைவர் பட்டம் பயின்ற அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

வேலையை விட்டு படிப்பதற்கு வந்தவுடன் ISRO நிறுவனத்திடமிருந்து அப்போது ஒரு புராஜெக்ட் வந்தது.     அதில் நானும் இன்னும் இரண்டு பேர் என்னுடன் புராஜெக்ட்டில் இணைந்தார்கள். அதில் என்னுடன் இருந்தவர் நேஷனல் கல்லூரியில் படித்தவர். மீதி இருந்தவர் அங்கேயே படித்தவர்கள்.

அப்போது தான் இந்த நிறுவனம் தனியாரிடமிருந்து அரசாங்கத்திற்கு செல்லும் நேரம். அப்போது இந்நிறுவனத்தை வாங்க நிறைய முதன்மையான நிறுவனங்கள் போட்டிப் போட்டு வாங்க முனைந்தன. ஆனால் மீண்டும் அரசாங்கமே வாங்கிக் கொண்டது.

ஆனால் இப்படிப்பை பி. டெக் என்று மாற்றமுனைந்தார்கள், ஆனால் சிலர் இது டிப்ளமோ என்றபெயரிலேயே இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

இந்த புராஜெக்ட்டில்  எங்களை நன்றாக இணைத்து கொண்டு செய்தோம். நான் எப்போதும் நினைப்பது என்னவென்றால் எதையும் சரியாகவும் துல்லியமாகவும் செய்ய வேண்டும் அப்போதுதான் தன்னை தகுதியானவராக நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதால் தான்.

மிகவும் தரமான படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி நிறுவனம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பார்கள்.  என்னுடன் முனைவர் பட்டம் பயில வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றார்கள். அதன் பிறகு நானும் படிப்பை முடிக்காமல் வீட்டிற்கு வந்து விட்டேன்.

கே. அப்போதைய அறிவியல் ஆய்வு முறைக்கும், தற்போது இருக்கும் ஆய்வு முறைக்கும் உள்ளவேறுபாடாக நீங்கள் பார்ப்பது?

தற்போது உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அறிவியல் துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் செல்கிறது. அறிவியல் துறைஒரு கடல் போன்றது, அதில் முழ்கிப் பார்த்தால் பல அதிசியங்கள் புதைந்து இருக்கும். அதை யார் முதலில் தேடி கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே வரலாற்றில் அதிகம் இடம் பிடிப்பார்கள்.

அப்போதும் இப்போதும் தொடர்ந்து புதிய புதிய கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கமிட்டி முறையை நான் தான் கொண்டு வந்தேன்.

இதன் மூலம் ஆராய்ச்சியின் மகத்துவத்தை ஆய்வாளர்கள் முறையாக பின்பற்றுவார்கள். எதையும் எழுவது அல்ல ஆய்வு, ஒரு பக்கம் எழுதினாலும் ஆய்வு அறிவியல் முறைபடி எழுத வேண்டும்.

இது பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கே. உங்கள் ஆசிரியர் பயணத்தில் பணியாற்றிய பிற பொறுப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

என்னுடைய ஆசிரியர் பயணத்தில் பல பொறுப்புகளை அடைந்திருக்கிறேன். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்  ஆராய்ச்சி டீன், பதிவாளராகவும், பிளானிங் அண்ட் டெவலப்மெண்ட்டில் பொறுப்பாளராகவும், இப்படி நிறைய பொறுப்புகளை பணியாற்றியுள்ளேன்.

ஒவ்வொரு பணியிலும் தலைசிறந்த அம்சங்களைக் கொண்டு வந்தேன். என்றேசொல்லலாம். நம்மிடம் ஒரு பொறுப்பு வரும் பொழுது அது கொண்டு எனனென்ன நலத்திட்டங்கள் கொண்டு வரமுடியுமோ அனைத்தையும் கொண்டு வரமுயன்றேன்.

கே. அறிவியல் துறையில் உங்கள் வாழ்வில் ஏதேனும் வெற்றிடம் விட்டதாக நினைக்கிறீர்களா?

நிச்சயம் என் வாழ்வில் அப்படி எதுவும் விட்டதாக எனக்குத் தெரியவில்லை. நானும் முதல் நாள் கல்லூரிக்குள் நுழையும் போது என்ன நினைத்தேனோ, அதை இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புதுமைகளை செய்தல் வேண்டும் என்று நினைப்பேன். அப்படி நான் பேராசிரியராகப் பணியில் ஓய்வு பெற்றாலும் கூட என்னால் முடிந்த அளவுக்கு பணியைச் சிறப்பாகச் செய்துள்ளேன் என்ற மன நிறைவோடு இருக்கிறேன்.

நான் வருடத்திற்கு ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கு முதலில் ஆய்வு குறித்தான அடிப்படை தகவல்களை மட்டுமே முதலில் போதிப்பேன்.

இப்படி ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் அனைத்து பணிகளையும் சரியாகவும் நேர்மையாகவும் செய்தேன் என்பதை இங்கு என்னால் சொல்ல முடியும்.

கே. தாங்கள் ஆசிரியர் பணியில் இணைந்ததைப் பற்றிக் கூறுங்கள்?

எனது முதல் ஆசிரியர் பணி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிகப் பணியாளராகச் சேர்ந்தேன். டிசம்பர் மாதம் 1984ல் ஆசிரியராகப் பணியில் முதன் முதலில் அமர்த்தப்பட்டேன். ஊட்டியில் பணியில் சேர்ந்த நான் 3 மாதங்களில் இடமாற்றுதல் கேட்டு விண்ணபித்து சிவகங்கையில் சேர்ந்தேன். மீண்டும் மீண்டும் மாற்றுதல் பெற்று தர்மபுரி, திண்டிவனம் என்று மாறிய பின் இறுதியில் ஊட்டிக்கே மாற்றமானேன். 1986 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து ஊட்டியில் ஒரு பெரிய வீட்டில் வாடகையில் தங்கினோம்.

குறைந்த சம்பளத்துடன் வாடகை வீட்டில் நானும் என் மனைவியும் தங்கினோம். என் மனைவி பேறு காலமாய் அவரது இல்லம் செல்ல நான் விடுதியில் தங்கி பணிபுரிந்தேன். இந்த  நான்கு ஆண்டு கால இடைவெளியில் எனது இரண்டு ஆராய்ச்சிகளை வெளியிட்டேன். அதற்குமேல் எந்த ஒரு முன்னேற்றமும் எனது ஆராய்ச்சியில் இடம் பெறவில்லை. இதன் நடுவே கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக்கல்லூரியில் பணியில் சேர்ந்தேன்.  இவ்வாறு இருக்கையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராய் பணியில் இணையும் பொழுது நான் ஆசிரியரின் மாற்றம் பெரும் பயணம் இத்தோடு நிற்குமென நான் அறியவில்லை.

40 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி தூய நெஞ்சத்துடன் ஆசிரியர் பணிக்குள் நுழைந்தேனோ, அந்த மன நிலையில் தான் இன்று வரை இருக்கிறேன் என்பதே நிதர்சனம்.

கே. இயற்பியல் துறையில் தாங்கள் செய்த சாதனைகள் பற்றிக்  கூறுங்கள்?

நான் எப்போதும் ஒரு சாதனையாளராய் என்னை அடையாளப்படுத்திக்  கொள்ள விரும்பவில்லை, எனது பணியை நான் சரிவர செய்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் பயிற்சி வகுப்புகளைவிட பாடம் எடுப்பதில் கைத்தேர்ந்தவன். 1988ல் ஆரம்பித்த எனது பணி 28 வருடங்களாக அங்கேயே தொடர்ந்தது. இயற்பியல் துறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நான் வெகுவாக முயன்றேன். அதற்கு என்னுடன் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தார்கள். நான் செல்வது வெறும் பாதையில் செல்லும் சாதாரண பயணமாக இல்லாமல் சரித்திரப் பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு மாணவனை மட்டுமே எனது ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தினேன். எனது ஆராய்ச்சி கட்டுரைகளை அற்புதமாக வெளியிட்டோம். இதுவரை நாங்கள் 175 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம். இதற்கு என்னுடன் பணியாற்றி ஆராய்ச்சி மாணவர்கள் தான் காரணம். இன்னும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கிறேன்.

நான் பல வெளிநாட்டில் தங்கி பல விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். அதில் மிகவும் உயர்ந்த Fulbright(USA), JSPS(Japan) Royal society (UK) Germany  போன்ற நாடுகளில் ஆராய்ச்சி நிதி உதவி பெற்று ஆய்வுகள் செய்தது, மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன்.

Molecular Structure, Interactions, molecular dynamics போன்ற பல பாடப்பிரிவுகளை ஆராய்ச்சி செய்தேன். நான் இயற்பியல் துறையின் துறைத்தலைவராக 9 வருடங்கள் பணிபுரிந்தேன். பல ஆசிரியர்கள் எனக்கு நல்முறையில் உதவினர். நான் செய்யும் மாற்றங்களுக்கு எனக்கு  உறுதுணையாய் நின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

கே. கல்வி ஆராய்ச்சி தலைவராக தாங்கள் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் பற்றிக் கூறுங்கள்?

நான் ஆராய்ச்சி முதன்மையாளராக 3 வருடங்கள் பணி புரிந்தேன். அந்த நாட்களில் நான் ஆராய்ச்சி துறையில் பல மாற்றங்களையும், பல கட்டுபாடுகளைக் கொண்டு வந்தேன்.

பெரிய கல்வி நிறுவனங்களில் 20% மட்டுமே பயிலும் மாணவர்களுக்கு 80% பண உதவியும், நமது பல்கலைக்கழகம் போன்றவற்றில் 80% மாணவர்களுக்கு 20% பண உதவியும் வழங்குவது என் மனதில் நீண்ட நாள் நெருடலாகவே இருந்து வந்தது. இன்னும் விடை கிடைத்தபாடில்லை. எங்களது ஆராய்ச்சி வேகம் தடை பட  ஒரே காரணம் கணினியின் வேகக்குறைவு மட்டும் தான். இதனால் கணினியின் தட்டுபாட்டை தடுக்க புதுவித கணினி மையத்தை அமைக்க எண்ணினேன். பல முன்னேற்ற படிகளுக்கு பிறகு தான் கணினி மையம் அமைத்தேன்.

திறன்மிகு ஆராய்ச்சிகளை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தொகை புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் உதவித்தொகை வழங்க பெரும் உதவியாக இருக்கும். இது போன்ற ஆராய்ச்சி திட்டங்களை கொண்டு வர எனது முழு முயற்சியையும் செலவிடுவேன்.

கே. பெரியார் பல்கலைகழகம் துணைவேந்தராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டது எவ்வாறு?

பெரியார் பல்கலைகழகத்தில் நான் துணை வேந்தராக பல கட்ட தேர்வுக்கு பிறகு தான் அமர்ந்தேன். அதிக எண்ணிக்கையில் இந்தப் பதவியில் அமர விண்ணப்பித்தனர். நேர்மைக்கும், தன்னலமற்றபணிக்கும் தான் எனக்கு இந்தப் பணி கிடைத்துள்ளது. இறுதியில் ஆளுநரிடம் நேரடித் தேர்வுக்கு பிறகு முறையான தீர்வு கிடைத்தது.

எங்களது பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் தன்னாட்சி கல்லூரிகள் கேட்கும் விதங்களில் அவர்களுக்கு நான் உதவத் தயாராக இருகின்றேன். புதுமுறையான கட்டமைப்புகளை நிறுவவும், அவர்களது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், வீடியோ காட்சி கருத்தரங்கங்கள் நடைபெறவும், புதுவிதமான பயிற்சி வகுப்புகளைத் தொடரவும் நான் உதவத் தயாராக இருகின்றேன்.

பல்கலைகழக்கதில் அறிவியல் பூங்கா ஒன்றை நிறுவி மாணக்கர்களுக்கு வித்தியாசமான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவதற்கு உதவியாக இருக்கும் படி அறிவியல் பூங்கா ஒன்றை அமைக்க இருகின்றோம்.

கே. வளரும் தலைமுறையினருக்கு தாங்கள் கூறும் கருத்து என்ன?

ஒரு பாடப்பிரிவில் கால் ஊன்றி நிலைத்து நின்று புது புது கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டும். இன்றைய தலைமுறையினரின் பல விதங்களில் ஏறுமுகம் உண்டு என்ற போதும் பல விதங்களில் இறங்கு முகமும் உண்டு. அவர்களுக்கு விடாமுயற்சியாய் பணி செய்யும் வழக்கமற்று, வேலைகளை எளிதில் முடிக்கவே முயல்கின்றனர். இதுவே அவர்களிடம் உள்ள பெரும் பின்னடைவாக உள்ளது.

இன்று 100% மாணவர்களில் 80% மாணவர்கள் எளிதாகப் பணியை முடிக்கவே எண்ணுகின்றனர். அதில் 10 முதல் 20% மாணவர்கள் மட்டுமே விடாமுயற்சியை கைக்கொண்டுள்ளனர். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமே இளம் தலைமுறையினரை படிக்க வைத்து முன்னேற்ற துடிகின்றனர். மாணவர்களும் படித்து, சாதனைகளை புரிய வேண்டும்.

கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது?

உண்மையாய் இருங்கள். எந்த நிலை வந்தாலும் உண்மைக்கு சற்றும் புறம்பாக நடந்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் மற்றவர்களை விட முன் மாதிரியாக திகழ வேண்டுமா? மற்றவர்கள் தூங்கும் நேரத்தில் நீங்கள் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருப்பின் உங்களுக்கென்று வரலாற்று பக்கத்தில் ஒரு பக்கம் நிச்சயம் காத்திருக்கும்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பை போன்று தன்னம்பிக்கை என்ற ஒன்று எப்பொழுதும் உங்களோடு உறவாடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அவ்வாறு இருப்பின் நீங்களும் சாதிக்கலாம், சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

இந்த இதழை மேலும்

மனமே நலம்! மாற்றமே வளம்!!

டாக்டர்  க. மாதேஸ்வரன்

மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்

நிறுவனர், ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை, கோயம்புத்தூர்.

மனிதன் தன் வாழ்வில் வெற்றி பெற, சாதனைகள் புரிய, பல்வேறு துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் வல்லமை படைத்தவர்கள் பலர் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன் மாதிரியாக வடிவம் பெறுகிறார்கள். அந்த வகையில் இவர் தலை சிறந்தவர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

கோவைப் பகுதியில் தலைசிறந்த மருத்துவர்கள் பட்டியலில் இவரைத் தவிர்க்க முடியாது என்பது நிதர்சனம். மருத்துவத் துறையில் காலத்தின் தேவையை அறிந்து, அனைத்து அதிநவீன வசதிகளையும் கொடுக்கும் மருத்துவமனையை நிறுவி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருபவர்.

தொடங்கும் எல்லா செயலிலும் வெற்றி, அதற்கு காரணம் இவரின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்புத் தன்மை, தூய எண்ணம் போன்ற நல்லொழுக்கங்களைக் கொண்டவர்.

இத்தனை நற்பண்புகளைக் கொண்டு விளங்கும் ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்  க. மாதேஸ்வரன் அவர்களை ஒரு அழகிய மாலைப் பொழுதில் நேர்முகம் கண்டோம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை அழகிய கொங்குத் தமிழில் சொன்னார். அதிலிருந்து இனி உங்களோடு பயணிப்போம். கே. உங்களின் பிறப்பும், படிப்பும் பற்றிச் சொல்லுங்கள்?

ஈரோடு மாவட்டத்திலுள்ள  சித்தோடு பகுதியில் தான் பிறந்தேன். பெற்றோர். திரு. கருப்பண்ணசாமி, திருமதி. வள்ளியாத்தாள். விவசாயப் பின்னணி உடைய குடும்பம்.  என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர். நான் நடுப்பையன். என்னுடைய மனைவி ஸ்ரீகலா இல்லத்தரசி. மூத்தமகள் மினுமாதேஸ்வரன் காது மூக்கு தொண்டை சம்மந்தமான நிபுணத்துவத் துறையைப் படித்து வருகிறார். இளைய மகள் லலித் சித்ரா பி. எஸ். சி படித்து வருகிறார்.

எங்கள் குடும்பம் என்று எடுத்துக் கொண்டால், விவசாயத்தைத் தவிர வேறு தொழில் அறியாதவர்கள் என்றே சொல்லலாம். வீட்டில் பால் தரும் கறவை மாடுகளும், தேங்காயும் எப்பொழுதும் இருக்கும். இது தான் எங்கள் குடும்பத்தின் வருமானம்.

நான் படித்தது என்று பார்த்தால் கோவையிலுள்ள ‘மைக்கேல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தான் படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் எனக்கும் என் பெற்றோருக்கும் இடையிலான உறவுமுறை சற்று தூரமாகவே இருந்தது. காரணம் நான் முதல் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை விடுதியிலேயே படிக்கும் சூழல் ஏற்பட்டது. விழாக்காலங்களில் மட்டுமே வீட்டிற்குச் செல்வேன். அப்பொழுது நானும்  என் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்வேன். 11 ஆம் வகுப்பு முடித்தவுடன் பி.யு.சி பட்டப்படிப்பை ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரியல் படித்தேன். நாங்கள் தான் பி.யு.சி பட்டப்படிப்பை இறுதியாகப் படித்தவர்கள்.

கே. மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எவ்வாறு எழுந்தது?

பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவது தான் பிள்ளைகளுக்குப் பெருமை என்று சொல்வார்கள். என் தாயாரின் விருப்பம் தான் என்னை ஒரு மருத்துவராக மாற்றியது.

என் தாயாருக்கு நீண்ட நாள் ஆசை. நம் குடும்பத்தில்  யாராவது ஒருவர் மருத்துவர் ஆக வேண்டும் என்பது.  முதலில் என் அண்ணாவிடம் கேட்டார், அவர் மறுத்துவிட்டார். அடுத்து என் தம்பி ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனால் என்னைக் கேட்ட பொழுது எவ்வித மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டேன்.

சின்ன வயதிலிருந்தே டாக்டர் என்ற என் தாயாரின் ஆசை என் மனதில் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. இதனால் எந்நேரமும் படிப்பு படிப்பு என்றே ஆகிவிட்டது.

பி.யு.சி முடித்தவுடன் பெங்களூரிலுள்ள எம். எஸ் இராமய்யா மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பைப் படித்தேன். படிக்கின்றபோது மருத்துவத்தின் மகத்துவத் தையும், தனித்துவத்தையும் அறிந்தும், புரிந்தும் படித்தேன். மருத்துவராக விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் தனித்து அடையாளத் துடன்  வர வேண்டும் என்ற கனவும், ஆசையும் இருக்கும். அதில் எனக்கு மூளைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

அதன் பிறகு மதுரையில்  நீயூரோ சர்ஜரி துறையைப் படித்தேன். இத்துறையை 5 வருடம் படிக்க வேண்டும். இதையும் வெற்றிகரமாக 2002 ஆம் ஆண்டு முடித்தேன். கே . உங்களின் முதல் மருத்துவர் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்?

எம். சி. எச் படிப்பை முடித்தவுடன் தூத்துக்குடியில் மெடிக்கல் கல்லூரியில்  பணியில் முதன் முதலாகச் சேர்ந்தேன். நான் சேர்ந்த பொழுது எனக்குள்ளே சில வரையறைகளை வகுத்துக் கொண்டேன். அது என்னவென்றால்.

எவ்வித பாகுபாடுமின்றி, நான் கற்றதையும், மருத்துவத்தில் பெற்றதையும் அவ்வாறே வெளிபடுத்த வேண்டும்.

மருத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இங்கு உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்கம், நல்லவர், கெட்டவர் என்ற எந்த பாகுபாடுமில்லை. தன்னை நாடி, வருபவர்களை நோயற்றவர்களாக மாற்றவேண்டும் என்பது மட்டுமே சிந்தனையாக இருக்க வேண்டும். இது தான் நான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி. இன்றும், இனியும் இதையே கடைபிடிப்பேன்.

தூத்துக்குடியில் பணியாற்றிய பின்னர் 2004 ஆம் ஆண்டு கோவைப்பகுதிக்கு வந்து பயிற்சி மேற்கொண்டேன்.

கே. ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை உதயமானது குறித்துச் சொல்லுங்கள்?

உன் மீது நம்பிக்கை இருந்தால்  வானையும் அளக்கலாம், கடலையும் கடக்கலாம் என்பது தன்னம்பிக்கை பழமொழி. இந்த மருத்துவமனையின் உதயத்திற்கு இது தான் காரணம்.

நான் மதுரையில் பணியாற்றும் பொழுது டாக்டர் விஜயன் அவர்களின் நட்பு கிடைத்தது. அவரும் நானும் இணைந்து முதலில் ஈரோட்டில் தான் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஏதோ ஒரு தவிர்க்க முடியாது சூழலில் அது தடைப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே எண்ணம் உதயமாயின. ஆனால் இந்த முறை எவ்வித சவால்களையும் சந்தித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு தான் கோவையைத் தேர்ந்தெடுத்தேன்.

2012 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டேன். இதனால் கட்டடம் கட்ட வேண்டும் முதலில் நிலம் வாங்க வேண்டும், அந்த நிலமும் சரியான இடத்தில் வாங்க வேண்டும், கட்டடம் கட்ட அனுமதி வாங்க வேண்டும், விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று சான்றிதழ் வாங்க வேண்டும் எப்படி நிறைய வேலைகள் இருக்கிறது. அனைத்தையும் முறையாக கையாண்டு 14 மாதத்திற்குள் கட்டடம் முடிந்து 2016ல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கே . தனியார் மருத்துவமனை என்றாலே கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கருத்து நிலவுகிறது, அது பற்றி?

இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும் இதிலுள்ள உண்மைத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒரு மருத்துவமனை கட்ட வேண்டுமென்றால் வங்கியில் மற்ற தொழிற் நிறுவனங்களுக்கு என்ன அடிப்படையில் பணம் கொடுப்பார்களோ அதே அடிப்படையில் தான் இதற்கும் பணம் கொடுக்கிறார்கள்.

தற்போது அனைவரின் பார்வையும் மருத்துவமனை என்றாலே பணம் சம்பாதிக்கும் தொழிலாகவே பார்க்கிறார்கள். அது மட்டுமின்றி கார்ப்பரேட் மருத்துவமனை என்றால் ஏதோ ஒரு தவறு செய்யும் கூடாரமாகவே பார்க்கப் படுகிறது. நாம் ஒரு தரமான மருத்துவத்தை குறைந்த செலவில்  கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், மருத்துவ பொருட்களின் விலை மிகவும் அதிகம். இவ்வளவு விலை கொடுத்து ஒரு இயந்திரம் தேவைதானா என்ற வினா கூட எழலாம். ஆனால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் இயந்திரத்தில் சிகிச்சையை மிக சுலபமாக பின் விளைவின்றி கையாளலாம்.

எந்த மருத்துவமனையும் 100 சதவிதம் விலை கூடுதலாகவும் இலாப நோக்கோடும் நடத்த மாட்டார்கள். அதே சமயத்தில் நஷ்டத்திலும் நடத்த மாட்டார்கள். ஒட்டு மொத்த  செலவையும் கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கப் படுகின்றன. ஒவ்வொரு மருத்துவமனையும் அவர்களுக்கு என்று ஒரு கட்டண மதிப்பீடு இருக்கும்.

கே . ஒரு மருத்துவமனையின் நிர்வாகம்  எவ்வாறு இருந்தால் அது சாலச் சிறந்தது?

பிரச்சனைகள் என்பது யாரிடமும் சொல்லிவிட்டு வராது, எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அவ்வாறு இரவு 12 மணிக்கு வந்தாலும் அவர்களை முறையாக அணுகி,  பிரச்சனையைக் கேட்டறிந்து சிகிச்சை அளித்தல் வேண்டும்.

மருத்துவமனையை நாடி வருபவர்களின் தேவையை அறிந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை முதலில் போக்கிக் கொள்ள வேண்டும்.

அதே போல் சிகிச்சைக்கு வந்தவர்கள் உங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த 30 நிமிடத்தில் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

நோயாளிகளை அலைகழிக்கக் கூடாது. செவிலியர்களும் நோயாளிகளிடம் அன்பாகவும் அரவணைப்பாகவும் பழகுதல் வேண்டும்.

இவ்வாறு இருப்பின் மருத்துவமனையின் நற்பெயரை நிலைநிறுத்திக் கொள்ளலாம். கே . மருத்துவர் நோயாளிகளின் உறவு முறை பற்றிச் சொல்லுங்கள்?

எந்த நோயாளியும் மருத்துவமனைக்கு வருவதற்கு முன் டாக்டர் என்ன சொல்லி விடுகிறாரோ, என்று மனதில் பயத்துடனும், கவலையுடனும் தான் வருவார்கள்.

முதலில் அவர்களைச் சந்தித்து ஆறுதலாகவும், அன்பாகவும் சில வார்த்தைகளைச் சொல்லி அவர்களின் பயத்தை முதலில் போக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

நோயாளி டாக்டரைப் பார்க்க உள்ளே வந்தவுடன் அந்தப் பரிசோதனை செய்து விட்டதா? இந்தப் பரிசோதனை செய்து விட்டதா? என்று முதலில் அதை செய்து வாருங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தல் கூடாது.

மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் அவரவர் விருப்பமான கடவுளையே நாடிச் செல்வர். அப்படியிருக்கும் போது நம்முடைய நடத்தையும் பேச்சும் அவர்களை பாதி நோயிலிருந்து விடுவிக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

டாக்டரிடம் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். டாக்டரும் இதை கடைபிடிக்க வேண்டும்.

எந்த மருத்துவரும் தன்னிடம் வரும் நோயாளி முழுமையாக குணம் ஆகிவிடக் கூடாது என்று நினைக்கமாட்டார். தன்னை நாடி வருபவர்கள் அனைவரும் முழு உடல் நலத்துடன் செல்ல வேண்டும் என்பதை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டே இருப்பார்.

நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நம்பிக்கையான வார்த்தை தான் நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

மருத்துவர்களும் மனிதர்கள் தான். என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கே. ஆங்கில மருத்துவமனையின் தனித்தன்மைகள் பற்றிச் சொல்லுங்கள்?

ஆங்கில மருத்துவ முறைஎன்று சொல்வதை விட “விஞ்ஞான மருத்துவ முறை’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

விஞ்ஞானம் என்பது அறிவியல் பூர்வமாக அறியப்படும் கண்டுபிடிப்பு. இதன் அடிப்படையில் தான் தற்போது மருத்துவ முறைகள் நடை பெற்று வருகிறது. சாதாரண மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்றால் அவருக்கு அது இதயம் சார்ந்தது மட்டும் தான் தெரியும் ஆனால் ஒரு விஞ்ஞான மருத்துவர் அதை ஆராயும் போது தான் இன்ன பிற பிரச்சனைகள் இருப்பதும் புலப்படும்.

சர்க்கரை நோயாளிக்கு ஹார்ட் அட்டாக் பிரச்சனை வரும் போது வலிதெரியாது. இதை மற்ற எந்த மருத்துவ முறையிலும் கண்டுபிடிக்க முடியாது. நம் மருத்துவ முறையில் தான் கண்டுபிடிக்க முடியும்.

ஒருவர் சாலையில் மிதிவண்டியில் பயணித்து வருவதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி வருகிறது, என்றால் அவருக்கு முதல் உதவி கொடுக்கும் விதமாக, நிச்சயம் விஞ்ஞான மருத்துவரால் மட்டுமே அதற்கான சரியான தீர்வு காண முடியும்.

24 மணி நேரமும்  டாக்டர்கள், செவிலியர்கள் எப்போதும் இந்த மருத்துவமுறையில்  தான் இயங்கிக் கொண்டேயிருப்பார்கள்.

கே .மருத்துவ துறையிலுள்ள சிக்கல்கள் அதை எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?

நிச்சயம், சிக்கல்கள் நிறைந்த துறைதான்.  உதாரணமாக ஒருவர் இரவு 12 மணிக்கு சாலை விபத்தில் அடிப்பட்டு உயிருக்குப்  போராடிக் கொண்டிருக்கிறார். அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் அவரை எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்.

அவர் யார், முகவரி என்ன, எந்த ஊரைச் சார்ந்தவர் என்று எதுவும் தெரியாது. அவரிடமும் அவர் சார்ந்த எந்த அடையாளமும் இல்லை. இத்தருணத்தில் ஒரு மருத்துவராய் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் இது தான் மருத்துவர் என்பதின் மகிமை.

அவரின் உயிரைக் காப்பாற்றிய பின்னர், ஏதேனும் ஒரு முறையில் அவரின் வீட்டின் முகவரியை அறிந்து. அவரின் குடும்பத்தினருக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்த பின்னர், சிகிச்சை செலவை சொல்லும் போது அவர்களின் வறுமையின் காரணமாக கட்டமுடியாத சூழல் ஏற்படலாம். இதை எல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும்.

இப்படித்தான் நிறைய மருத்துவமனைகள் இப்படிப்பட்ட சவால்களை சந்தித்து வருகிறது.

சில ஊடகங்களும் செவிவழியாக சில செய்தியைக் கேட்டறிந்து தவறான தகவல்களைப் பரப்ப முற்படுகிறது.

அதே போல் எங்கள் மருத்துவமனை மிகப்பெரிய ஊழியர்களைக் கொண்டது. 1200  பேர் பணியாற்றுகிறார்கள். கூட்டம் எங்கு மிகுதியாக இருக்கிறதோ அங்கு பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். அவற்றையும் சமாளித்து ஆக வேண்டும்.

இப்படி நிறைய சவால்களை சந்தித்தால் தான் சாதனைப் பக்கத்தில் இடம் பிடிக்க முடியும்.

கே. உங்களின் நேர நிர்வாகம் பற்றிச் சொல்லுங்கள்?

24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் மூவர், மருத்துவர், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள். இவர்களுக்கு எப்போதும்  ஓய்வென்பதே இல்லை.

நான் விடுமுறை என்றோ, விழா என்றோ எதற்கும் விடுப்பு எடுத்தது கிடையாது. குடும்பத்தின் இடையே நேர செலவழிப்பு என்பது மிகவும் குறைவு. அதை என்னுடைய மனைவியும் மகள்களும் புரிந்து கொள்வார்கள்.

ஓய்வென்றே நினைக்க முடியாத தொழில். நான் ஒரு நான்கு நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்பே என்னைத் தயார் படுத்திக்  கொள்ள வேண்டும். அதற்கு என்னிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டு குறைத்துக் கொள்ள வேண்டும்..

அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாளே வெளியூருக்குச்  செல்ல முடியாது. காரணம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் வினா எழுப்புவார். டாக்டர் அடுத்த நாளே சென்று விட்டார் என்று வருத்தமும் கொள்வார். இதை எல்லாம் பார்த்து தான் ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும்.

கே. உங்கள் மருத்துவர் வாழ்வில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு என்று நீங்கள் நினைப்பது?

அப்படிச் சொல்ல வேண்டுமென்றால் நிறைய இருக்கிறது. நான் ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் நிறைய சிகிச்சை செய்திருக்கிறேன். வயதானவர்கள் முதல் பச்சிளம் குழந்தை வரை சிகிச்சை அளித்துள்ளேன்.

அதிலும்  ஒரு 14 மாதம் குழந்தைக்கு மூளையில் கட்டியை அகற்றி சிகிச்சை அளித்தது சற்று சவாலாக இருந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வந்தேன். பணம் கட்டும் இடத்திலிருந்து ஒரு பெண் குரல் டாக்டர் என்றது. திரும்பி பார்த்தேன் ஒரு 20 வயது மதிப்புத்தக்க பெண் என்னைப் பார்த்து ஓடிவந்து என்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்குச் சரியாக நினைவில்லை என்று சொல்லிவிட்டேன். நீங்கள் தான் ஒரு 10 வருடத்திற்கு முன்னால் என்னுடைய மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுனீர்கள் என்று தற்போது நான் கல்லூரியல் படிக்கிறேன் என்ற தகவலையும் சொன்னார் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஓரு மருத்துவராய் இதைத் தவிர என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது. இப்படி எண்ணற்ற நிகழ்வு இருக்கிறது.

கே . இத்தருணத்தில் நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் பார்ப்பது?

என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நன்றிக்குரியவர்கள் என்று பார்த்தால் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய பெற்றோர்கள், அவர்கள் இல்லை என்றால் இன்று ஒரு மருத்துவராக நிச்சயம் ஆகியிருக்க முடியாது. அடுத்து என்னுடைய மனைவி ஸ்ரீகலா, மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்வது உண்மை தான். என் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், ஏற்ற இறக்கங்களையும் அறிந்து நான் சோர்ந்து போகும் காலத்தில் எல்லாம் என்னுடைய கரமாக இருந்து செயல்படுத்தியவர். வீட்டில் நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து வழி நடத்துவதில் சிறப்பு பெற்றவர்.

ராயல் கேர் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழாவில் ராயல் கேர் என்ற பெயரில் சுகாதார பராமரிப்பு தொடர்பான செய்தி மடலை நரம்பியல் நிபுணர் டாக்டர் கே.விஜயன் வெளியிட மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த செய்தி கடிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு வரும். என்னுடைய மச்சான் கே.பி. அளகேசன், டாக்டர் கே.சொக்கலிங்கம் இருதய சிகிச்சை நிபுணர் இவர்கள் இருவரும் ராயல் கேர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இப்பொழுது வரை மருத்துவ மனைக்கு தூண்டுகோளாய் விளங்குகிறார்கள்.

மிகவும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய கே.எம்.சி. எச் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் நல்ல பழனிச்சாமி அவர்களை நிச்சயம் இந்த இடத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

கே. இன்றைய இளம் மருத்துவர்களுக்கு உங்களின் ஆலோசனை?

எதைச் செய்தாலும் 100 சதவீதம் உண்மையாகச் செய்தல் வேண்டும். மருத்துவர் என்பவர் கடவுளுக்கு ஒப்பானவர். இப்படியிருக்கும் போது இதன் மகத்துவத்தை புரிந்து நடத்துதல் வேண்டும்.

நோயாளி குறித்தான அத்துணைத் தகவல்களையும் அவரின் உறவினரிடையே முன் கூட்டியே சொல்லி விட வேண்டும்.

நாமும் எந்த நோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்க போகிறோம் என்பதையும் சொல்லி விட வேண்டும்.

கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ஒரு முறைமட்டும் முயன்றவர்கள் யாராலும் வெற்றி பெறமுடியாது. தொடர்ந்து யார் முயன்று கொண்டேயிருக்கிறார்களோ அவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள். இதனால் எதையும் முடிக்க முடியும் என்ற உத்வேகம் உங்களுக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.

ஒரு வேலையை எடுத்துக் கொண்டால்  அதை வெற்றி பெறும் வரை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கே. நீங்கள் செய்த, செய்கின்ற சமூக சேவைகள் பற்றி?

எங்கள் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் எங்களுக்கு உதவி செய்த மற்றும் எங்களிடம் சிகிச்சை பெற்றவர்களை அழைத்து 1000 பேர் கொண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

அவ்விழாவில் “”உயிரின் சுவாசம்” என்ற தலைப்பில் ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் மரம் நடுதல் பணியைச் செய்து வருகிறோம்.

முதல் கட்டமாக 10000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டுயிருக்கிறோம். 2022 ஆம் ஆண்டுக்குள் கோவை மற்றும் ஈரோடு பகுதியில் 2 கோடி மரங்கள் நட வேண்டும் நிச்சயம் இதை நடத்தி காட்ட வேண்டும்  என்ற வேகத்துடன் செயல்பட்டுவருகிறோம்.

மாதம் 3 இலட்சம் மரம் வீதம் நடவேண்டும். இதை எல்லாம் என்னுடைய மருத்துவமனையில் நான் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தில் 20 சதவீதம் இதற்காக செலவிடுகிறேன்.

ராயல் கேர் உயர் சிறப்பு மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சமீபத்தில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொது மக்கள் பயன் பெரும் வகையில் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மருத்துவமனையில் பதினைந்து சிறப்பு மருத்துவப் பிரிவுகள் சார்பில் சிறப்பு மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது.

பல்லாயிரக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவத் துறையின் நவீன சிகிச்சை முறைகளை அறிந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் நடைபெற்றவிழாவில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் திருமதி. தாரிணி, திரு. பாலசுப்ரமணியம், கோவை மண்டல மேலாளர், மற்றும் மேலாளர் மற்றும் சூலூர் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் மாதப்பூர் பாலு கலந்து கொண்டார்.

விழாவில் முத்தாய்ப்பாக மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அடைந்தார்கள் மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை அறியும் வகையில் 150 நபர்களுக்கு மூன்று இலட்சம் கட்டணமில்லா சிகிச்சை பெரும் ஸ்டார் மருத்துவக் காப்பீடு பத்திரத்தை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் இலவசமாக வழங்கினார். மேலும் ஊழியர்கள் கலை மற்றும் விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த இதழை மேலும்

நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…

திரு அந்தோணிராஜ்

நிறுவனர், விண்ட் கேர் இந்தியா பிரைவேட் லிமிடேட்

சோலார் கேர் இந்தியா பிரைவேட் லிமிடேட்

உடுமலைப்பேட்டை

திட்டமிடுதலே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் மிப்பெரிய ஆயுதம். அதைச் சரியாகப் பின்பற்றினால் எதையும் சாதிக்க முடியும் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருபவர்.

சாதிப்பைத் தேடிப் போகாமல், தன்பின்னே சாதிப்பை வலம் வர வைப்பவர்.

புதிய முயற்சி என்பது வெறும் வார்த்தைகளில் காணாமல் வாழ்க்கையில் கண்டு, இன்று வரலாற்றில் தனக்கென்று வந்து ஒரு இடத்தைப் பிடித்து தனிமுத்திரைப் பதித்து வருபவர்.

உன்னைப் போல பிறரையும் நேசி என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் குணத்தை உடையவர்.

இறைவன் நமக்கெல்லாம் கொடுத்துள்ள வரப்பிரசாதங்களில் இயற்கை வளம் அளப்பறியது. அந்த வகையில் இயற்கையின் சக்தியைப் புரிந்து கொண்டு காற்றாலைத் தொழில் நிறுவனம், சோலார் தொழில் நிறுவனம் போன்றவற்றை நிறுவி அதில் சாதித்து வரும் விண்ட் கேர் மற்றும் சோலார் கேர் நிறுவனத்தின் தலைவர் திரு அந்தோணிராஜ் அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி நாம் அவருடன் பயணிப்போம்.

கே. உங்களைப் பற்றியும் கல்வி மற்றும் முதல் பணிவாய்ப்பு பற்றியும் கூறுங்கள்?

என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகிலுள்ள நடுவைக்குறிச்சி என்னும் சிற்றூர். என்னுடைய தொடக்கக் கல்வியை R.C. நடுநிலைப்பள்ளி நடுவைக்குறிச்சியிலும், சாயர்புரத்தில் உள்ள போப் நினைவு பள்ளியில் மேல்நிலைக்கல்வியும், இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் பிரிவிலும் தேர்ச்சி பெற்றேன்.

என்னுடைய தந்தை B. செந்தூர்பாண்டியன் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் தாயார் R. ஜோதி, அரசு சுகாதார செவிலியராகப் பணியாற்றியவர்.  ஒரு சகோதரர் மற்றும் 3 சகோதரிகள். எனக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. என் துணைவியார் திருமதி J.ஜெபஸ்டின் ஜெயந்தி. எனக்கு இரண்டு குழந்தைகள் A.ஜோ மரியா, A.ஜோ பிளஸ்ஸி.

என்னுடைய தொடக்க பணிவாழ்வு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகளிலும், அதைத் தொடர்ந்து தாழையுத்து சங்கர் சிமெண்ட் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றேன். பின்னர் 1993 ம் ஆண்டு நாகர்கோவிலின் ஆரால்வாய்மொழி பகுதிகளில் காற்றாலை நிறுவிவரும் சூழல். புதிய தொழில் வாய்ப்பாக இருந்தபடியால் அன்று முன்னணியில் இருந்த NEPC-MICON நிறுவனத்தில் அடிப்படை ஊழியராகக் கட்டுமான குழுவில் பணிக்கு மாதம் சம்பளம் ரூபாய் 500 என்ற அளவில் வேலைக்குச் சேர்ந்தேன். தொடர்ந்து அங்கு பணியாற்றும் சூழல் 1994 ம் வருடத்தில் சிறந்த பணியாளராக நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு குழுத்தலைவராகப் பதவி உயர்வு பெற்றேன்.

அப்போது, கோயமுத்தூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் புதிய காற்றாலை அமைக்கும் பணிவாய்ப்பு NEPC-MICON  நிறுவனத்திற்கு கிடைத்தது ஆகவே, அந்தச் சூழலில் கட்டுமானப் குழுத் தலைவராகப் பணி உயர்வால் உடுமலைப்பகுதிகளில் பணியைத் தொடர்ந்தேன். மேலும், பல நிலைகளைத் தாண்டி PROJECT MANAGER அக பதவி உயர்வு பெற்று பணியாற்றினேன்.

கே. உங்களின் விண்ட் கேர் நிறுவனத்தின் கிளை எங்கெல்லாம் அமைந்துள்ளது?

ஒரு நிறுவனத்தின் பயன் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.

எங்கள் நிறுவனத்தின் தலைமையகம் என்று பார்த்தால் உடுமலைப்பேட்டை அருகில் குடிமங்கலத்தில் அமைந்துள்ளது.

ஆனால், இதன் கிளை என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பல இடங்களில் உள்ளது.

தமிழகத்தில் கோயமுத்தூர், திருப்பூர், பழனி, தாராபுரம், தேனி, நாகர்கோவில், சுரண்டை, தேவர்குளம் பகுதிகளிலும் குறிப்பாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத், இராஜஸ்தான் போன்ற ஒன்பது மாநிலங்களிலும், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற ஐந்து அயல்நாடுகளிலும் உள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, மெக்சிக்கோ மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் புதிய பணித்தளம் அமைப்பதில் முயற்சி எடுத்து வருகிறோம்.

கே. ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய நீங்கள், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

1999 ம் ஆண்டுகளில் காற்றாலை இயந்திரங்களில் உள்ள ஜெனரேட்டர்களில் ஏற்படும் பழுதுகளால் பல காற்றாலைகள் செயல் இழந்து நின்றுவிட்டது.

இந்த ஜெனரேட்டரை மாற்றுவதற்கு பெரிய கிரேன் (பழுதூக்கி) தேவை. மேலும், ஒரு காற்றாலை சீரமைக்க ரூ. 5 இலட்சம் கிரேன் வாடகை மற்றும் போக்குவரத்திற்கு சுமார் ரூ. 3 இலட்சம் தேவைப்பட்டது. இது காற்றாலை நிறுவனங்களுக்கு மிகப் பெரிய இழப்பாகவும் அதிக செலவீனம் கொண்ட வேலையாகவும் மாறியது. மேலும் பல நாட்கள் காற்றாலைகள் செயல்படாமல் நிற்பதால் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. காற்றாலை உரிமையாளர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டது.

இந்த சூழலில் Chemplast windfarm என்ற நிறுவனத்தினர் என்னை அணுகி கிரேன் பயன்படுத்தாமல் 250 கிலோ வாட் காற்றாலையிலுள்ள ஜெனரேட்டரைப் பழுது நீக்கி தரமுடியுமா? என கேட்டார்கள். உடனடியாக, எனக்கு கிடைத்த வாய்ப்பை சவாலாக ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் நான் முந்தைய நிறுவனத்தில் 1996 ஆம் ஆண்டு பணியாற்றும் போது இதே போன்ற தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் போது அந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.

அதன் மூலம் பின்னடைவும், மனச்சோர்வும் அடைந்தேன். ஆனால் இந்த தோல்வி என் வாழ்வில் எப்படியாவது நான் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகப்படுத்தியது. ஆகவே பல வருட காற்றாலையில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் புதிய Derrik  ஒன்றை கண்டுபிடித்து மிகக் குறைந்த செலவில், குறித்த நேரத்தில் ஜெனரேட்டரை இந்திய அளவில் முதன் முறையாக கிரேன் உதவி இல்லாமல் எங்களுடைய வின்ட்கேர் டெக்னாலாஜி வழியாய்ச் செய்து முடித்தோம்.

இந்த முதல் முயற்சி வெற்றியடைந்ததால் நண்பர்கள் மற்றும் பிற நிறுவனத்தின் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைக்க ஆரம்பித்தன.

இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இதே பணியைச் செய்ய அழைப்பு விடுத்தனர். இதுவே நிறுவனத்தின் தொடக்கமாக அமைந்தது. அன்று 4 நபர்களோடு ஆரம்பிக்கப்பட்டது, இன்று 480 பணியாளர்களின் குடும்பத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு வருடமும், நூற்றுக்கணக்கான புதிய இளம் பொறியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறோம்.

கே. நீங்கள் தொழில் தொடங்கும் பொழுது உங்களின் பொருளாதாரச் சூழல் எப்படியிருந்தது, அதை எவ்வாறு சமாளித்தீர்கள்?

இது மிகவும் நல்ல கேள்வி. ஒரு நிறுவனம் தொடங்குவது என்பது சாதாரண காரியமல்ல, நிறைய உழைப்பும், பொருளும், மூலதானமும் தேவைப்படுகிறது. அப்போது இந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்றால் அன்றைய காலக்கட்டத்தில் சுமார் 2 இலட்சம் தேவைப்பட்டது. ஆனால் என் கையில் இருப்பது அன்றைய மாதச் சம்பளம் ரூ. 5000 மட்டுமே இருந்தது. இதை வைத்துக் கொண்டு எவ்வாறு செயல்படுவது என எண்ணி என் மனம் சோர்ந்து, நான் தங்கியிருந்த அறையில் சென்று படுத்துவிட்டேன்.

அப்பொழுது என் அறையில் இருக்கும் ஒரு வாசகம் என்னை உற்சாகப்படுத்தியது. அது  என்ன வார்த்தை எனில் உன் தேவனால் எல்லாம் கூடும் (with God,all things are possible)  என்ற இவ்வார்த்தையைப் படித்தவுடன் எனக்குள் புதிய நம்பிக்கை பிறந்தது. இந்த வார்த்தை எங்கள் நிறுவனத்தின் விருது வாக்காக மாற்றினோம். இன்றளவும் நாங்கள் செயல்பட, எங்களை உள்ளிருந்து நம்பிக்கை அளித்து இயக்கிறது என்றால் அது மிகையல்ல.

அப்போது என்னுடைய சகோதரர்கள் மற்றும் என்னுடைய நண்பர்கள் 4 பேர் உதவியுடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். இந்த வேளையில் நான் என்னுடைய இந்தப் புதிய திட்டத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவரும் அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்க முன் வந்தார்கள்.

இந்த இதழை மேலும்

மொழியை நேசி…! முன்னேற்றத்தை சுவாசி..!!

ஆர்.சி. மதிராஜ்

கவிஞர் மற்றும் எழுத்தாளார்

சென்னை

தமிழ் இலக்கிய மரபில் உள்ள இலக்கிய வகைமையில் தனிச்சிறப்புடையது கவிதை. தொல்காப்பியர் காலம் தொடங்கி இன்று வரை தமிழில் ஏராளமான கவிதை இலக்கியங்கள் தோன்றியுள்ளது. அதில் ஒவ்வொரு கவிஞர்களுக்கும் ஒரு எழுத்து நடை இருக்கும். அந்த வகையில் இவரின் நடை நாம் அன்றாடம் புழுங்கும் சொற்களிலிருந்து கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவர்.

இவரின் கவிதை அனைத்தும் கேட்பதற்கு இனிமையாகவும், படிப்பதற்குச் சுவையாகவும், சமுதாய நலன் கருதியும் எழுதும் ஆற்றல் பெற்றவர்.

மனிதன் தன் புறக்கண்ணால் பார்க்க இயலாத பலவற்றையும் மனத்தின் அகக்கண்ணால் இன்பம் காண முடியும் அதற்கு கவிதை மிகப் பெரும் துணையாக இருக்கிறது, அந்த வகையில் கவிதையின் கற்பனையை மிக அழகான முறையில் கருத்துக்களை எடுத்தாளும் திறம் மிக்க கவிஞர்.

கவிஞர், எழுத்தாளர், படைப்பாளர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர், நாவலாசிரியர், திறானாய்வாளர் என பன்முகத்திறமை கொண்ட திரு ஆர். சி. மதிராஜ் அவர்களின் நேர்காணல் இனி நம்மோடு….

கே: உங்களின் பிறப்பும், பின்புலமும் பற்றி?

பெற்றோர் வைத்த பெயர் ராஜா. பிறந்தது வளர்ந்தது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கச்சிராயபாளையம் என்னும் சிற்றூர். மேல்நிலைப்பள்ளியை சொந்த ஊரிலேயே முடித்து, பாலிடெக்னிக் படிப்பை ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் முடித்தேன். சிறு வயது முதலே ஓவியம் கவிதையின் பால் ஈர்ப்பு கொண்டு எழுதத் துவக்கினேன். கல்லூரி காலத்தில் அனைத்து வார இதழ்களிலும், கவிதைகள் கட்டுரைகள் எழுதினேன். மாலை மதியில் நாவல் ஒன்றும் பிரசுரம் ஆனது. பத்திரிக்கைகளில் பணிப்புரிய வேண்டும் என்று 90 களில் சென்னை வந்தேன். பத்திரிகைகளில் எழுதத் துவங்குகையில் ஆர்.சி. மதிராஜ் என்று வைத்துக்கொண்டேன்.

கே: கவிதை எழுதும் ஆர்வம் எழுந்ததற்கான காரணம் ஏதாவது இருப்பின் விபரம்?

கவிதைகள் மொழியை சுண்டக்காய்ச்சிய வடிவம் என்பது எனது கருத்து. விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆலமரம் போல, ஒரு மொழியின் சுவையை நிச்சயம் ஒரு கவிதை அடக்கி வைத்திருக்கும். மேலும் ஒன்றை வெளிப்படையாக சொல்வதை விட கவிதைக்குள் பூடகமாகவோ ரசனையாகவோ சொல்லும் முறை எனக்கு வெகுவாகப் பிடித்ததும் காரணம்.

கே: தங்களின் முதல் கவிதை மற்றும் அதைப்பற்றி ஓரிரு வரிகளில்…

முதல் கவிதை தினமலர் இணைப்பான வாரமலரில் பிப்ரவரி 14, 1993 அன்று வெளியானது.

இனியவளே…

உன் விழிகள் மட்டும்

என்னை முத்தமிடட்டும்

நான்

கம்பனையும்

காளிதாசனையும்கூட

தோற்கடிப்பேன்.

என்ற கவிதை அது. அந்த மற்றும் அதைத் தொடர்ந்த வருடங்களில் வார மாத இதழ்களில் தொடர்ந்து ஏராளமான கவிதைகள் எழுதிவந்தேன்.

கே: தாங்கள் இயற்றியுள்ள கவிதைகள் எப்பொருண்மையை மையமிட்டு எழுதப்பட்டவை?

பழந்தமிழ் இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் மையப்படுத்தி எழுதப்பட்டது போல… என்னுடைய பெரும்பாலான கவிதைகள் காதலை மையப்படுத்தி  எழுதப்பட்டவை.  கொஞ்சம் தத்துவ விசாரங்களாகவும், கொஞ்சம் சமூக அக்கறையும் என் கவிதைகளில் இழையோடுகின்றன.

கே: உங்களது கவிதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?

கடினமான கேள்வி எழுதப்படும் எல்லாப் படைப்புகளையும் எனக்குப் பிடித்துதான் எழுதுகிறேன். தனியாக ஒன்றைச் சொல்வது மிகவும் கடினம். எழுதி முடித்த பிறகு அடுத்தடுத்து அதைவிட சிறப்பான ஒன்றை எழுதவேண்டும் என்று தோன்றும். ஆனாலும் விகடனில் ‘அப்பா’ பற்றி எழுதி வெளிவந்த ஒரு கவிதை பலராலும் மிகவும் பாராட்டப்பட்டது. வேலை நிமித்தம் அப்பா அம்மாவைப் பிரிந்து நகரத்து வாழ்வை மேற்கொள்ளும் ஒரு மகனின் நினைவாக எதை எழுதியிருந்தேன். அதை வேண்டுமானால் உங்களுடன் பகிர்கிறேன்.

ஊருக்குச் சென்று

திரும்பும்போதெல்லாம்

சொல்லுவார் அப்பா

உடம்பைப் பார்த்துக்கப்பா என்று

எனக்கும் ஆசைதான்

சேர்ந்தாற்போல்

நான்குநாள் விடுமுறைளில்

அருகிலேயே இருந்து

அப்பாவைக் கவனித்துக்கொள்ள

என்றாலும்

ஒருபோதும் முடிந்ததில்லை

ஒவ்வொர் இரவிலும்

கட்டிப்பிடித்தபடி

தூக்கத்தில் மேலே போடும்

மகனின் கால்பிடித்து

அமுக்கிவிடுவேன் இதமாக

அப்பாவை எண்ணிக்கொண்டு

கே: தற்கால இலக்கியங்களில் கவிதையைத் தவிர வேறு ஏதேனும் பொருண்மைகளில் உதாரணமாக நாடகம், சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஆர்வம் உண்டா? அது பற்றி…

கவிதை தவிர, வார மாதப் பத்திரிக்கைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். குமுதம் குழுமத்திலிருந்து வந்த ‘மாலைமதி’ யில் ஒரு நாவல் எழுதியுள்ளேன். பிறகு பத்திரிக்கைகளில் வடிவமைப்பாளராகப் பணிபுரியத் தொடங்கிய போது எழுதுவது தடைப்பட்டது. ‘எழுதுபவற்றை அப்படியே விட்டுவிடாமல் புத்தகமாக வெளியிட வேண்டும்’ என்ற அண்ணன் அறிவுமதியின் அறிவுரைப்படி குறைந்தது ஒவ்வொரு வருடமும் ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும் என்று நினைத்து வெளி வந்தவையே இந்தப் புத்தகங்கள்.

மனித உறவுகள், மனித உறவுகளின் சிக்கல்கள், மனித நாகரிகம், மனித மன உணர்வுகள் அவற்றின் கண்ணீர், துரோகம், காமம், காதல், காயம் ஒரு மனித மனம் எப்போது எப்படி செயல்படுகிறது? அது அவ்வாறு செயல்படுவதற்கான காரணம் என்ன? என்றெல்லாம் விரிவாக உளவியல் அளவில் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று விருப்பம். அதற்காக நிறையப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த இதழை மேலும்

எண்ணங்களைதூய்மைப்படுத்து! ஏற்றங்களை மேன்மைப்படுத்து!!

டாக்டர். G.பாலசுப்ரமணியன்

எலும்பு மூட்டுஅறுவை சிகிச்சை நிபுணர்

பிரகதி மருத்துவமனை

சித்தாப்புதூர், கோவை

தன்னை நம்பி வருபவர்களின் தேவையை அறிந்து, தேவைக்கு அதிகமான செயல்களைப் புகுத்தி, எல்லோரிடமும் புன்னகைத்த மலர் முகத்தோடு பழகும் மருத்துவர்.

முதலில் விழிப்புணர்வு, அன்பான பேச்சு, அடுத்தே சிகிச்சை என்று மாறுபட்ட சிந்தனையுடைய நல்ல மனிதர்.

மருத்துவர் என்பவர் தன் வாழ்நாளில் ஒரு கல்வி கற்கும் மாணவனைப் போல தினந்தினம் ஏதேனும் ஒன்றைப் புதிது புதிதாகக் கற்று கொண்டே இருக்க வேண்டும் என்று பல சாதனைகள் புரிந்திருந்தாலும் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் வாழ்ந்து வருபவர்.

என்னை மருத்துவராக்கிய நாட்டுக்கே தன்னுடைய தேவையும் சேவையும் இருக்க வேண்டும் என்று எண்ணி வாய்ப்புகள் பல வந்தும் தான் பிறந்த கோவைப் பகுதிக்கு தன்னுடைய  மருத்துவ சேவையைப் புரிந்து வருபவர்.

இத்தகு பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பிரகதி மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பாலசுப்ரமணியம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

கே. உங்களின் இளமைக்காலம், கல்லூரிக் காலம் பற்றிச் சொல்லுங்கள்?

கொங்கு மண்டலத்தின் தலைமை இடமாகத் திகழும் கோவை மாவட்டம்  சோமனுருக்கு அருகிலுள்ள சாமளாபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தேன். விவசாயம் பின்னணியைக் கொண்ட குடும்பம். எங்கள் ஊரில் எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் என் பெற்றோர் விவசாயம் பார்த்து வந்தார்கள்.

எல்லாப் பள்ளியிலும் ஆசிரியர் கேட்பதைப் போல என்னுடைய பள்ளியிலும் கேட்டார்கள் உன்னுடைய எதிர்காலத்தில் என்னவாக போகிறாய் என்று, அப்போது என் மனதில் எழுந்த உதயம் தான் இந்த மருத்துவர் என்னும் கனவு.

டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சொன்னது போல தூக்கத்தில் வருவதல்ல கனவு, எது உன்னை தூங்கவிடாமல் செய்கிறதோ அது தான் உன்னுடைய கனவு இலட்சியம் என்பதெல்லாம்.

அதுபோல என்னுடைய மருத்துவர் கனவும் நனவானது கோவை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவர் படிப்பதற்கான இடம் கிடைத்தது. இங்கு தான் எம்.பி.பி.எஸ் படித்தேன். அதன் பிறகு பெங்களூரில் எம். எஸ் (M.S) முடித்தேன். எம். எஸ் முடித்தவுடன் இங்கிலாந்தில் எலும்பு மூட்டு சம்மந்தமான படிப்பு மற்றும் பயிற்சியை 10 ஆண்டுகள் அங்கேயே தங்கி என்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டேன். FRCS பட்டத்தை எடின்பவோ கல்லூரியில் பெற்றேன். இங்கிலாந்தில் எலும்பு மூட்டு சிகிச்சைக்குப் பெயர் பெற்ற ஆஸ்வெஸ்ட்ரி மற்றும் பர்மிங்காம் மருத்துவமனையில் பணியாற்றினேன்.

கே: இங்கிலாந்தில் மருத்துவராக இருந்த நீங்கள் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தீர்கள்?

10 ஆண்டுகளாக எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைச் சார்ந்த அத்துனை பயிற்ச்சிகளையும் முறையாகக் கற்று அங்கேயே ஒரு மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றினேன். இனி என்னுடைய சேவை என் நாட்டு மக்களுக்கு மட்டுமே தேவையாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் சொந்த ஊருக்கே வந்தேன்.

வந்தவுடன் கோவையில் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்ந்தேன். நான் வெளிநாடுகளில் கற்றும் பெற்றதும் இந்த மருத்துவமனையில் முழுமையாக செய்தேன். 15 ஆண்டுகள் என்னுடைய மருத்துவர் பணியை முழுவதுமாக செய்த மன நிம்மதி எனக்குள் இருக்கிறது.

கே: ஒரு மருத்துவமனையில் மருத்துவராய் வேலைபார்த்ததற்கும் தனியாய் ஒரு மருத்துவமனையை நிர்வகிப்பதற்கும் உள்ள மாறுதல்கள் என்னென்ன?

வேலை செய்வதாக இருந்தாலும், ஒரு தனி மருத்துவமனையை நிர்வகிப்பதாக இருந்தாலும் அவருக்கு ஒரே பெயர் தான். அது தான் மருத்துவர் என்னும் பெயர்.

நான் மருத்துவர் என்னும் மகத்துவத்தை உணர்ந்தவன், நேசித்தவன், இன்றும் நேசித்துக் கொண்டே இருப்பவன் என்ற முறையில் எங்கு வேலை செய்தாலும் அதில் ஒரு உண்மைத்தன்மை இருத்தல் வேண்டும்.

ஒரு மருத்துவமனையில் வேலை செய்யும் பொழுது அந்த மருத்துவமனையின் சட்டத்திட்டங்கள், வரையறைகள் இருக்கும் அதை நாம் பின்பற்றி தான் ஆக வேண்டும்.

ஆனால் சொந்தமாக ஒரு மருத்துவனையைத் தொடங்கினால் இலவசமாகக் கூட சிகிச்சை செய்து கொள்ள முடியும், எங்கள் மருத்துவமனை தொடங்கிய இந்த 2 ஆண்டுகளில் நிறையப் பேருக்கு இலவச சிகிச்சை செய்துள்ளேன். இது தான் வேறுபாடு வேறு எதுவுமில்லை.

கே: உங்கள் மருத்துவர் வாழ்வில்  நீங்கள் எதிர்கொண்ட சிகிக்சையில் உங்களால் மறக்க முடியாத சிகிச்சை எது?

ஒரு மருத்துவருக்கு தன் வாழ்நாளில் ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு மறக்க முடியாத நிகழ்வு தான். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சில நிகழ்வுகள் மற்றும் என் கண் முன்னே தோன்றும்.

என்னிடம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி இன்னும் பல வெளிநாட்டிலிருந்து வந்து மூட்டு மாற்று  அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதுவரை 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்கள் என்னிடம் சிகிச்சை பெற்றுயிருக்கிறார்கள்.

பணம் படைத்தர்களும், பெரிய அதிகாரிகளும் சிகிச்சைகாக வெளிநாடு செல்வதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் சற்று மாறுதலாக என்னிடம் நிறைய பேர் வெளிநாட்டிலிருந்து வருவது என்னால் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கிறது.

இந்த இதழை மேலும்

புதியதோர் பாதையை உருவாக்கு புகழும் வெற்றியும் உனதாக்கு

முனைவர் வே. புகழேந்தி

வேளாண் பொருளாதார நிபுணர்

மேலாண்மை இயக்குநர், அக்ஷயா மருத்துவமனை,வடவள்ளி

அறங்காவலர், நொய்யல் பப்ளிக் ஸ்கூல், கிணத்துக்கடவு

கோவை

வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்களையும் தேவையான உத்வேகத்தையும் தரக்கூடியது என்னவென்றால் முயற்சி என்னும் ஒன்றைச் சொல் தான். இந்த குணத்தைச் சிறப்பாகப் பெற்று இன்று பொருளாதார உலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து ஒரு சாதனையாளராக வலம் வந்து கொண்டிருப்பவர்.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்குத் தேவையானது என்பார் விவேகானந்தர். அவர் கூற்றை தன் வாழ்நாளில் மெய்பித்து வருபவர்.

வாழ்க்கையில் எல்லாம் இன்பமாகவே அமையாது, அதே போல் துன்பமாகவும் அமையாது இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அவ்வாறு தன் வாழ்நாளில் பல இன்ப துன்பங்கள் எதிர் கொண்டு சாதித்து வரும் பொருளாதார வல்லுநர்.

திறமையைக் காட்ட வேண்டிய இடத்தில் தன் தகுதியைப் பயன்படுத்த வேண்டும் என்பது போல் தன்னுடைய திறமையால் இன்று தரணியெங்கும் தன் பெயரை நிலை நிறுத்தி வரும் வேளாண் பொருளாதார நிபுணர், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவன ஆலோசகராகவும், அக்ஷயா மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநராகவும், நொய்யல் பப்ளிக் ஸ்கூலின் அறங்காவலர் என பல பொறுப்புக்களை தன் வசம் கொண்டு பன்முகத் திறமையாளராகவும் நல்ல பண்பாளராகவும் இருந்து வரும் முனைவர் வே. புகழேந்தி அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

கே. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

அப்போது திருச்சி மாவட்டம் தற்போது பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் என்னும் கிராமம். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் அழகாகவும் தென்படும். விவசாயப் பின்னணியில் உடைய குடும்பம். எங்கள் குடும்பத்தைப் பற்றி அனைவரும் அறிந்து வைத்திருப்பர், காரணம் என் தந்தை புலவர் ப. வேணுகோபாலணார்  தமிழாசிரியர். அனைவரிடமும் அன்பாகப் பழகும் அரிதான குணம்  கொண்டவர். அதுமட்டுமின்றி விவசாயத்தில் அதிக பற்று கொண்டவர். ஆசிரியர் பணியும் பார்த்துக் கொண்டு விவசாயத்தையும் நேசித்து வந்தார்.  . அம்மா. திருமதி. சீத்தாலட்சுமி இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர் தங்கை திருமதி மணிமேகலை, தம்பிகள் திரு இளங்கோ, மற்றும் திருமாவளவன். அனைவரின் பெயரும் நல்ல தமிழ்ப்பெயரில் அமைந்திருக்கும்.

நான் படித்தது என்று பார்த்தால் எங்கள் ஊரிலுள்ள அரசுப்பள்ளியல் தான். நன்றாகப் படிக்கும் மாணவன் என்று என்னைப் பற்றி ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய தந்தை ஆசிரியர் என்றாலும் வீட்டில் எவ்வித கண்டிப்பும் இருக்காது. இதனால் நன்றாகப் படிக்கும் குணம் இயற்கையிலேயே வந்து விட்டது. இதற்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். பள்ளிப்படிப்பை அதிக மதிப் பெண்ணில் தேர்வானேன். அதன் பிறகு பி.எஸ்.சி வேளாண்படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றேன். பிறகு எம். எஸ்.சி மற்றும் முனைவர் பட்டப் படிப்பை கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் பயின்றேன். இது தான் என்னுடைய கல்வி பின்புலம்.

கே. உங்களின் ஆசிரியர் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்?

முனைவர் பட்டப் படிப்பை முடித்தவுடன் வேளாண் பல்கலைக்கழத்திலேயே 6 ஆண்டுகள் வேளாண் பொருளாதாரவியல் துறையில் உதவிப்  பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். இது தான் என்னுடைய முதல் ஆசிரியர் பணி. இன்னும் என் மனதில் நீங்காத ஒரு ரீங்காரமாய் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.  ஒவ்வொரு இடத்திலும் பணியாற்றும் பொழுதும் என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து என்னால் முடிந்த அளவுக்கு மாணவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடுதல் சிறப்பு என்னவென்றால் மற்றவர்களுக்கு எளிதாக கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது என்ன வென்றால், ஆசிரியர் பணியிலிருந்து வங்கிப்பணிக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியராகப் பணி செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 4 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியில் இருந்து வந்தேன்.

கே. ஆசிரியர் பணியிலிருந்து வங்கித்துறைக்குள் வந்தது குறித்துச் சொல்லுங்கள்?

ஆசிரியர் பணியிலிருந்து வங்கித்துறைக்குள் பணி இடமாற்றம் பெற்று நபார்டு (சஅஆஅதஈ) வங்கியில் 30 ஆண்டுகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பணிபுரிந்தேன். இப்பணியில் சேர்ந்தவுடன் கிராமப்புறத்தில் உள்ள சுயத்தொழில் செய்பவர்களுக்கு பயன் பெறக்கூடிய வகையில் நல்ல வளர்ச்சியைக் கொடுக்க  வேண்டும் என்பது மட்டும் முதன்மை நோக்கமாக இருந்தது.

ஆரம்பத்தில் கிராமப்புற பகுதியில் சுயத் தொழில் புரிபவர்களுக்கு கடன் உதவி அவ்வளவாக கிடைக்க பெறாது என்ற கருத்து நிலவி வந்தது. இதை மாற்ற வேண்டும் என்று உறுதியெடுத்து சுயத் தொழில் புரிய நினைக்கும் அனைவருக்கும் குறுகிய கடன் உதவி வாங்கிகொடுத்து வழிவகைச் செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது ஒன்று.

முதலில் பெங்களூரில் சுய உதவிக்குழு என்ற அமைப்புக்கு அடித்தளம் போட்டது நான் தான் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய ஆய்வு முழுவதும் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி சார்ந்ததாகவே இருந்தது.

கே. இந்த அமைப்பின் மூலம் சுய உதவிக்குழு பெரும் நன்மைகள் என்ன?

நான் எதைச் செய்தாலும் ஏழை எளிய மக்களுக்கு நன்மைத் தரும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு நன்மை ஏற்பட்டால் அவர்களின் வாழ்க்கைத் தரம் தானாக உயர்ந்து விடும்  என்பது மட்டும் நான் சிந்தித்தது.

நான் அமைப்பைத் தொடங்கும் பொழுது நான் நினைத்தது என்னவென்றால் மக்களுக்கு அவர்களின் மீதே ஒரு தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த வாக்கின் படி ஆர்வமுள்ள அனைவருக்கும் சிறிய நிதி உதவி கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பது தான்.

சுய உதவிக்குழு மூலம் பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள். உதவிக்குழுவில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வேலை செய்து வருகிறார்கள்.

பெண்களின் வளர்ச்சி தான் குடும்பத்தின் வளர்ச்சி. குடும்பத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி. இப்படி நிறைய நன்மைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து தான் இத்திட்டத்தை பெரிய அளவிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

கே. 2020 நாடு வளர்ச்சி அடைந்து விடும் என்று அப்துல்கலாம் அவர்கள் சொல்லியிருந்தார் தற்போது சில பொருளாதார மாற்றம்  நடைபெற்று வருகிறது. அது பற்றி உங்களின் கருத்து?

வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அனைத்து துறைகளிலும் நாடு தற்போது வளர்ந்து  கொண்டு தான் இருக்கிறது. மற்ற உலக நாடுகளே போற்றும் வகையில் பல அதிரடித் திட்டங்கள், கண்டுபிடிப்புகள் என வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் செயல் படுத்திக் கொண்டு தான் வருகிறோம்.

சரியாக 2020 யில் நாடு வளர்ச்சி பெறும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை. அதற்கான மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகலாம். அதன் பிறகு நாமும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கே.  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று பல நாடுகள் சென்று பணியாற்றி இருக்கிறீர்கள் இந்த வளர்ச்சியைப் பற்றி நீங்கள் நினைப்பது?

நிச்சயம், இது ஒரு பெரிய அங்கீகாரமாக தான் நினைக்கிறேன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன் நான் என்ற வகையில் என்னுடைய வாழ்க்கை சிறப்பானது. நான் எந்த வேலையைச் செய்தாலும் நன்கு யோசித்து திட்டமிட்டு தான் செய்வேன். அது மட்டுமின்றி புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு அதிகம். எங்கு எது தேவை என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் என்னை மாற்றிக் கொள்வேன்.

உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று கல்வி ஆலோசகராகப் பணியாற்றி இருக்கிறேன். நான் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டின் பழக்க வழக்கத்திற்கு என்னை இணைத்து கொள்வேன். அதுமட்டுமின்றி என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம், தன்னம்பிக்கையை நான் ஒரு போதும் இழந்ததில்லை.

என்னை எங்கும் நான் அடையாளப்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டது கிடையாது. நாம் எங்கு பிறக்கிறோம், எங்கு வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல என்ன சாதிக்க இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இதை முறையாக கடைபிடித்து வந்தாலே சாதிப்பு நமக்கு சாதகமாகி விடும்.

இந்த இதழை மேலும்

துவளாமல் உறுதி எடு… துணிந்து சிகரம் தொடு…

Dr J. ராஜேந்திரன்,

சேர்மன், JRD Realtors  Pvt.Ltd  

கோவைப்புதூர்,         

கோயமுத்தூர்.

  • தாழ்ந்து வேலை செய்வதால் தாழ்ந்தவர் ஆக முடியாது. உயர்ந்து வேலை செய்வதால் உயர்ந்தவராக முடியாது. எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி வேலையைச் செய்கிறோம் என்பதில் தான் வெற்றியின் வீரியம் அடங்கியுள்ளது என்பதை நன்குணர்ந்து அதற்கு ஏற்றார்போல் வாழ்ந்து வருபவர்.
  • புதுமையும், கடமையும் இருகண்களாகக் கொண்டு, தான் செய்துவரும் தொழிலில் செயல்திறன் மிக்கவராக விளங்குபவர்.
  • உழைப்பே உயர்வு தரும், உழைப்பே உன்னதம் தரும், உழைப்பே சாதனையைத் தரும் என்று உழைப்பை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்க்கையில் அனுதினமும் எதிர்நீச்சல் போட்டு வருபவர்.
  • படித்தது குறைவு என்றாலும், இவர் அறிந்தது அதிகம். தம் வாழ்நாளில் எதிர்கொண்ட அனுபவத்தில் எவ்வித குறையுமின்றி, தனக்கென்று தனி பாதையை உருவாக்கி தடம் மாறாமல் தரணியை வென்று வருபவர்.
  • தன்னை நம்பி வருவர்களின் நம்பிக்கையை எள்ளவும் சிதைக்காமல், எண்ணியதை எண்ணியவாறு தருவதில் தலை சிறந்தவர்.

இப்படி, எண்ணற்ற பண்புகளைக் கொண்டு கட்டுமானத்துறையில் தனித்துவம் படைத்து வரும் JRD Realtors Pvt.Ltd நிறுவனத்தின் சேர்மன் அனைவராலும் JRD என்று அழைக்கப்படும் Dr J. ராஜேந்திரன் அவர்களின் நேர்முகத்திலிருந்து இனி…

கே: உங்களின் இளமைக்காலம், படித்தது, வளர்ந்தது பற்றிச் சொல்லுங்கள்?

கற்கோயில்கள் நிறைந்த கல்வி மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தேன். பெற்றோர் ஜெயகோபால் – சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். அன்றாடம் வறுமையைப் பங்கீட்டு வாழும் குடும்பம். என் அப்பா இந்த கிராமத்தில் ஒரு சின்ன மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். கடை சின்னதாக இருந்தாலும், எங்கள் ஊரில் தரமான கடை என்று பெயரெடுத்திருந்தது. இதற்கு காரணம் என் அப்பாவின் நேர்மையும் உழைப்பும் ஆகும். எதை செய்தாலும் அதில் தரம் இருக்கிறதா என்று பல முறை ஆராய்ந்து அதற்கு பின்னரே அதை மக்களுக்கு கொடுப்பார்.

என் தந்தை நினைத்தது எல்லாம்  என்னை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதாகவே இருந்தது. அது அரசு பணியோ, தனியார் பணியோ, அல்லது சொந்த தொழிலோ கஷ்டப்படும் வாழ்க்கையை அனுபவிக்கமால் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் நோக்காக இருந்தது. பள்ளிப்படிக்கும் வயது வருவதற்கு முன்பே என் தந்தையோடு பல நாட்கள் கடையில் இருந்திருக்கிறேன் அவர் மற்றவர்களுக்குக் கொடுக்கும் அணுகுமுறையைப் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருக்கும் அந்தளவிற்கு அனைவரிடமும் நெருங்கி பழகுவார். எனக்கும் பள்ளி வயது வந்தது இதனால், கிராமத்திலிருந்த அரசுப்பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள். தினமும் சென்ற கால் தீடிரென்று நிற்காது இதனால் தினமும் படிப்போடு கடையையும் நான் கவனித்து வந்தேன். கடை என் மனதில் நின்ற அளவுக்கு கல்வி நிற்கவில்லை. இதனால், எட்டாம் வகுப்போடு எனது கல்விப்பயணம் நின்றது.

கடையில் நான் வேலை செய்யும் ஆர்வத்தை என் தந்தை நன்கு புரிந்து கொண்டார்.  இதனால், முழுநேர பணியாகவே கடையைப் பார்த்து வந்தேன். எனது தந்தையின் அத்துனை நற்குணங்களையும் எனது வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கத் தொடங்கினேன். இளம் பருவத்தில் பதியும் நற்குணம் தான் எதிர்கால வாழ்வின் அச்சாணி என்று சொல்வார்கள். அப்படி தினந்தினமும் என்னை நான் சீர்படுத்திக் கொண்டேன். வாழ்க்கையின் நகர்வு நத்தைப் போல் நகராமல் நதியைப் போல வேகமாகவே ஓடியது.

கே: சொந்த ஊரில் மளிகைக் கடையை நடத்தி வந்த நீங்கள், கோவைக்கு வந்தது குறித்து சொல்லுங்கள்?

நாட்கள் ஓடின. காலச்சக்கரம் இன்பம் துன்பங்களையும், மேடு பள்ளங்களையும் கடந்து ஓடின.  1989 ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. மனைவி ஆஷா ராஜா டி. பார்ம் படித்தவர். நானும் கடையைப் பார்த்துக் கொண்டு அவருக்கும் ஒரு மெடிக்கல் கடையை வைத்துக் கொடுத்தேன். ஆனால், தொடங்கிய சில மாதத்தில் கடை பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

இதனால் பெரும் மனசங்கடத்திற்கு ஆளாயினோம். மெடிக்கல் கடைக்கு நிறைய கடன் வாங்கியிருந்தேன். இதனால், மிகவும் சிரமம் அடைந்தேன். இனியும், இங்கேயே இருந்தால் கடன் என் கனவைத் தகர்த்து விடும் என்பதால் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு குடிபெயர்ந்தோம்.

என் தாயார் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். இதனால், அடிக்கடி என்னிடம் ஒரு வார்த்தைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்.  நீ  எங்கு செல்ல வேண்டும் என்றாலும் காவிரி ஆற்றைக் கடந்து செல், நீ வென்று விடுவாய் என்பதுதான் அந்த வார்த்தை. இதனால், கோவைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

கோவைக்கு வந்த உடன் அனைத்துமே புதியதாகவே இருந்தது. இடம் புதுமை, மக்கள் புதுமை இப்படி கண்ணில் பட்டதெல்லாம் வித்தியாசமாக இருந்தது. எங்கு வேலைத் தேடுவது, என்ன வேலைத் தேடுவது என்று எனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இரவு முழுவமும் தூங்காமல் கண்விழித்து யோசித்துக் கொண்டேயிருந்தேன். அப்போது  என்னுடைய உறவினர் ஒருவர் இங்கு வசித்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டு அவரையும் சந்தித்தேன். அவர் ஒரு ஹோட்டலில் உதவியாளர் பணி இருக்கிறது அங்கு சென்று பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை மற்றவர்களிடம் கையேந்தும் வேலை மட்டும் செய்ய கூடாது என்று எண்ணி அடுத்த நாளே ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றேன். பகல் முழுவதும் வேலை செய்து கொண்டேயிருந்ததால் இரவு எங்கே தங்க போகிறோம்  என்று கூட நினைக்கவில்லை. அதன் பிறகு நண்பரின் உதவியால் கோவைப்புதூர் பகுதியில், குறைந்த வாடகையில் வீடு கிடைத்தது. ஆரம்பத்தில் வருமானம் குறைவாகக் கிடைத்ததால் வாடகை, உணவு இதற்கே சரியாக இருந்தது. எவ்வித கையிருப்பும் இல்லாமல் இப்படியே ஆறுமாதம் சென்றது.

கே: கட்டுமானத்துறைக்குள் வந்தது குறித்துச் சொல்லுங்கள்?

தினமும் 15 ரூபாய் சம்பாத்தியத்தில் தான் என் குடும்பம் நகர்ந்தது. நான் தினமும் வேலையை முடித்து இரவு நேரத்தில் பேருந்தில் தான் பயணம் செய்வேன். அவ்வாறு பயணம் செல்லும் போது, சில அறிமுகமில்லாத நபர்கள் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்குத் தெரிந்த இடத்தில் ஏதாவது வீடு இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அவ்வாறு இருந்தால் சொல்லுங்கள், உங்களுக்கு கமிஷன் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். வறுமையின் பிடிப்பில்  இருந்ததால் இந்த வேலை எனக்கு கைக் கொடுக்கும் என்று நம்பினேன். அதற்காக என்னை நன்கு தயார்படுத்திக் கொண்டேன். இந்த வேலையில் இரண்டை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் அதில் நேர்மையும், நம்பகத்தன்மையும் இருந்தால் இதில் சாதிக்க முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எந்த ஒரு வேலை செய்தாலும் மக்கள் உடனுக்குடனே நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எல்லா வாடிக்கையாளரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நிறையை எப்படி சொல்வார்களோ, அது போலவே குறையையும் சொல்வார்கள். அந்த குறையை மட்டும் அறிந்து நிவர்த்தி செய்தால் நிச்சயம் வெல்லலாம்.

நான் இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன் பல முறை யோசித்து தான் முடிவெடுத்தேன். எதையும் ஆழம் தெரியாமல் காலை விட நான் ஒருபோதும் விரும்பியதில்லை. பல வாடிக்கையாளர்களைப் பார்த்துவிட்டதால் இந்த கட்டுமானதுறையில் மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் மண்ணிலிருந்து முளைக்க விதை எவ்வளவு முயற்சி எடுக்குமோ அந்த அளவிற்கு கடும் உழைப்பைக் கொண்டு உருவானவன் தான் நான்.

கே: உங்களின் வளர்ச்சியின் மூலதனமாக நீங்கள் நினைப்பது?

என்னுடைய நேர்மையைத் தவிர வேறொன்றுமில்லை. வாடிக்கையாளர்களை  நான் கடவுளாகப் பார்க்கிறேன். அவரின் தேவைகளை பெரிதும் மதிக்கிறேன். அவர்களின் எதிர்பார்ப்பைக் கேட்டறிந்து நினைத்ததை நினைத்தவாறு நிறைவேற்றிக் கொடுக்கிறோம்.

அவர்கள் ஒரு வீடு கட்டுவதற்கு முன்பே மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தை மூலதனமாகப் போட்டு தான் கட்டிடத்தையே தொடங்குவோம். தரத்தை உயர்த்தி எண்ணத்தை மேன்மை அடைய செய்ய வேண்டும். பொய் என்ற வார்த்தையை புறம் தள்ளினாலே வெற்றி பெறலாம். தொழிலில் சாதிக்கலாம்.

நம்மை நாமே செதுக்கிக் கொண்டு ஒரு சீர்திருத்தவாதியாகச் செயல்படுத்த வேண்டும். பகட்டு வாழ்க்கை வெற்றிப் பெறாது. பாதை தவறாமல் வாழும் வாழ்க்கையே வெற்றியைத் தரும்.

கே: உங்களின் தனித்தன்மை என்று நீங்களே பார்ப்பது?

நாம் மற்றவர்களை நேசிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர் நம்மை நேசிப்பர். இதுதான், என்னுடைய வாழ்க்கையின் வேதவாக்கு. நவீன வாழ்க்கையில் உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டது. இதனால், முகநூல் (Facebook), வாட்ஸ்அப்  போன்ற வலைதளங்களைப் பயன்படுத்துகிறோம். நானும் முகநூலை தினமும் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய கணக்கில் 10000 த்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் தினமும் 50 பேருக்காவது பிறந்தநாள் வரும். நான் அந்த 50 பேருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதை வழக்கமாகப் பின்பற்றி வருகிறேன். அவ்வாறு சொல்லும் போது அவர்களுக்கு ஒரு நிமிடம் சந்தோஷம் ஏற்பட்டாலும் அது எனக்கு மகிழ்ச்சிதான்.

எங்களைப் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை நாங்களே நேரடியாகச் சென்று அழைத்து வந்து அவரின் தேவையைக் கேட்டறிவோம். வளர்ந்துவிட்டோம் என்பதால் மற்றவர்களை அனுப்பி வைப்பதுமில்லை அதை நான் விரும்பவதுமில்லை.

எங்களின் பணியை நாங்களே செய்ய வேண்டும். அப்போது தான் வாடிக்கையார்களுக்கும் எங்களின் மீது ஒரு நம்பகத்தன்மை ஏற்படும்.. எங்களின் தரத்தைக் கேட்டறிந்து அவர்களே எங்களை நாடி வருவார்கள். அதுதான் என்னுடைய தனித்தன்மையாகப் பார்க்கிறேன்.

கே: ஒருவர் ஓரே நேரத்தில் பலதொழில்களில் ஈடுபடுகிறார் அவ்வாறு ஈடுபடும் பொழுது அவரால் சாதிக்க முடியுமா?

இங்கு எதுவும் சாத்தியம் தான். முடியும் என்று நினைத்துவிட்டால், நிலவையும் தொடலாம் என்பதுதான் உண்மை. ஒரு தொழிலைத் தொடங்கும் முன் நம்மால் இத்தொழிலில் சாதிக்க முடியுமா? என்று நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கேள்விகளைக் கேட்க தவறுபவர்கள்தான் சாதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு தொழிலில் சாதிக்க முடியவில்லை என்று வேறு ஒரு தொழிலைத் தொடங்கக் கூடாது. அதிலேயே ஆழத்தைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு படியாக அடியெடுத்து வைக்க வேண்டும். அப்போது தான், வெற்றி என்னும் சிம்மாசனத்தை அடைய முடியும்.

எந்த தொழிலை செய்தாலும் கௌரவம் பார்க்க கூடாது. கடமையை கண்ணியமாக கொள்ள வேண்டும்.. சிலருக்கு ஒரு தொழிலை வழிநடத்துவதிலேயே பல மன அழுத்தம் ஏற்படுவதை இங்கு பார்க்க முடியும். ஒரு சிலர் பல வேலைகள் செய்தாலும் எப்போதும் சந்தோஷமாகவும் இன்முகமாகவும் இருப்பர் காரணம் அவர்கள் எவ்வாறு தங்களின் வேலையை நேசிக்கிறார்கள் என்பதில் அது புலப்படும். இதனால் செய்யும் வேலையை நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசித்து செய்தால் எதுவும் வெல்லலாம்.

கே: கட்டுமானத்துறையில் உள்ள சவால்கள் பற்றி?

வாழ்க்கையில் சவால்கள் என்று எதுவுமில்லை. சவால் என்று நாம் நினைப்பது என்னவென்றால், மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவது. அவ்வாறு ஒப்பிடும்போது சவால்கள் என்ற நிலை உருவாகிறது.

எங்கள் நிறுவனத்தை விட பல மடங்கு பெரிய நிறுவனங்களும் உண்டு. அதோடு போட்டிப் போட வேண்டுமென்றால் அங்குதான் சவால்கள் பிறக்கும். நான் ஒருபோதும் மற்றவர்களோடு போட்டிப்போட்டு எங்கள் நிறுவனத்தை தனிமைப்படுத்தியதே கிடையாது. எல்லோரும் செய்கிறார்கள், நானும் செய்கிறேன். மற்றவர்களுக்கு வருமானம் பெருகுகிறது, எனக்கு அதிகம் கிடைக்கவில்லை என்று ஒருபோதும் நான் நினைக்க மாட்டேன்.

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தாலே போதும். அதிகம் கிடைக்க வேண்டும் என்று அல்லல் பட்டால் நிறைய இழக்கநேரிடும். அதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன்.

கே: படித்தப்படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையென்று நிறைய இளைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். அதுபற்றி?

இது, சற்று சிந்திக்க வேண்டிய விஷயம். நான் படித்துவிட்டேன். எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு போதும் இளைஞர்களாகிய நீங்கள் சிந்திக்கக் கூடாது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பார்  திருவள்ளுவர். அந்த உலகப்பொதுமறையின் வாக்கை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறையைப் படிக்கும் மாணவர்களின் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்? என்றால், படித்து முடித்தவுடன் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கும்.

இந்நிலை மாணவர்களிடையே மாற வேண்டும். அப்படி ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்தாலும் அவருக்கு மனநிறைவைத் தராது. காரணம் அவர் செய்யும் வேலை இயந்திரம் போன்றது. அவன் இயந்திரம் போல் வேலை செய்தாக வேண்டும். இதனால் அவர் நிறைய ஆசைகளை தியாகம் செய்தாக வேண்டும்.

ஆனால், இதுவே படித்து முடித்து அவன் சொந்தமாக ஒரு கடையை நிறுவி, அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறான் என்றால், அது அவனுக்கு மிகப்பெரும் மனநிம்மதியைக் கொடுக்கும். அக்கடையின் மூலம் நிறையப் பேருக்கு வேலையைக் கொடுக்க முடியும்.

இப்படித்தான், வாழ்க்கையை சிந்திக்க வேண்டும். பறவையாய் சிறைபடாமல் சுதந்திரப்பறவையாய் வானில் வட்டமிடுங்கள், வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.

கே: கட்டுமானத்துறையில் இயந்திரங்களின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?

இயந்திரமில்லாமல் இப்பொழுது எந்தத்துறையும் இயங்குவதில்லை என்றே சொல்லலாம். காரணம் ஆட்கள் பற்றாக்குறை இன்னும் பல காரணங்களைக் கூறலாம்.

ஆனால் ஆரம்ப காலத்தில் எவ்வித இயந்திரப் பயன்பாடும் இல்லாமல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்று கோயில்கள் இங்கு ஏராளம் உண்டு. பல இயற்கை சீற்றங்களைத் தாண்டியும் வரலாற்றுச் சின்னங்களாக இன்றுவரை  பிரதிபலிக்கிறது என்றால் நம் முன்னோர்கள் கடைபிடித்த கட்டிடக்கலையின் சிறப்புகள்தான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது. கட்டக்கலையில் வெறும் மனிதர்கள் மட்டும் செய்யும் வேலை மிகக் குறைவு தான். மனிதர்களும் இயந்திரங்களும் இணைந்து செய்வதே இன்றைய நிலையாகி விட்டது. இப்பொழுதும் இனியும் இந்த நிலையை மாற்றவோ, மறுக்கவோ முடியாது என்பது தான் நிதர்சனம் என்று சொல்வேன்.

கே: இத்துறையில் தமிழர்களை விடவும், பிற மாநிலத்தவரே அதிகம் ஈடுபடுகிறார்கள். என்று நினைக்கிறேன் அதற்கான காரணம் என்ன?

வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இங்கு பிழைப்புக்காக வருகிறார்கள். அவர்கள் உழைத்தால் தான் அவர்களால் வாழ்க்கை வாழ முடியும்.

கட்டுமானப்பணி சற்று கடினமாக இருக்கும் என்பதை தமிழர்கள் நினைக்கிறார்கள். இதைவிட எளிமையான வேலை நிறைய இருக்கிறது என்று நினைத்து வேறு வேலை செய்கிறார்கள்.

ஆனால், அவர்கள் உழைக்க வேண்டும் என்று ஒருவித வெறியோடு வருவதால், எந்த வேலையையும் எளிமையாகவே செய்கிறார்கள். இவர்களை போலவே தான் தமிழர்கள் வேறு ஒரு மாவட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் அங்கு அவர்கள் முறையாக வேலை செய்வார்கள். இவ்வளவுதான் வேறுபாடு.

கே: நீங்கள் தொடங்கிய இந்தத் தொழிலை, குறிப்பாக உங்கள் மகன் இதை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

எனது மகன் தீபக் விக்னேஷ்வர். நான் கற்றுக் கொண்டே என்னுடைய அனுபவத்தின் பிரதிபலிப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவர் ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர் என்றாலும், இந்தக் கட்டுமானத் தொழிலை என்னைவிட பல மடங்கு புதுமையைப் புகுத்தி வருகிறார். இதனால் ஒருபோதும் என் தொழிலின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டது கிடையாது. நான் என் கண் முன்னே அவரின் செயல்பாட்டை பார்த்து வருகிறேன் என்பதால் மேலும் வளர்ச்சி நிலைக்கு நிறுவனத்தைக் கொண்டு செல்வார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

என் மகனின் உழைப்பு என்னை பிரமிப்பிற்கு உள்ளாக்கியது. கணினி வழி அவருக்குத் தெரியாதது என்று எதுவுமில்லை எனலாம். அந்தளவிற்கு அவரின் அர்ப்பணிப்பு குணம் அதிகம். இன்னும் பல வளர்ச்சி சார் நிலைகளுக்கு என் மகன் கொண்டு செல்வார் என்பதில்  எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

கே: புதிதாய் தொழில் தொடங்க வருபவர்களுக்கு உங்களின் ஆலோசதனை?

ஒரு இலக்கோடு வாருங்கள். இங்கே வாழ பல வழிகள் உண்டு. அதை பயன்படுவதும் பாதை தவறுவதும் அவரவர் கையில் மட்டுமே உள்ளது. எதைச் செய்தாலும், உண்மையோடும் நம்பிக்கையோடும் செய்யுங்கள். பொய், ஏமாற்று வேலை போன்ற தீய குணங்களை ஒருபோதும் செய்தல் கூடாது. தினம் தினம் நன்றாக, புதிதாக யோசிக்க வேண்டும்.

கே: தங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

ஒரு தனிமனிதன் வெற்றியாளனாய் வலம் வருகிறான் என்றால், அதற்கு குடும்பம் மிகப்பெரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு தனிமனிதன் சாதிக்க முடியும். அந்த வகையில், நான் மிகப்பெரும் சாதனையாளன்தான். என்னுடைய மனைவி ஆஷாராஜா அவர்கள் என் வெற்றி – தோல்விகளில் சமமாக பங்கிட்டு என்னை தட்டிக்கொடுத்து வருபவர். எத்தனையோ துன்பத்திலும், என் கண்ணீரைத்துடைத்து வாழ்க்கையின் மகத்துவத்தைப் புரிய வைத்திருப்பவர். என்னுடைய அன்பு மகள் நந்தினி,மகன் தீபக் விக்னேஷ்வர். அவருடைய மனைவி உமாபாரதி பேத்தி தியா சரஸ்வதி.

இவர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?

உங்கள் புத்தகமே தான் இந்தக் கேள்விக்கு சரியான பதில். நம்பிக்கையை நேசிக்க வேண்டும். அதைவிட, தன் மேலே உள்ள நம்பிக்கையை  ஒருபோதும், கைவிடக்கூடாது. அதுதான் தன்னம்பிக்கை. இதை அனைவரும் உணர வேண்டும் வாழ்க்கையில் உயர வேண்டும்.

மருத்துவத்தில் மகத்துவம் மகப்பேறில் தனித்துவம்

டாக்டர் சவிதா அசோக் MBBS.,DGO.,ART(Fellow)

ஸ்ரீ சக்ரா மருத்துவமனை, சக்தி கருத்தரிப்பு மையம்

உடுமலைப்பேட்டை

எந்த ஒரு சாதனைக்கும் வயது தடை இல்லை, சிறிய வயதில் பெரிய துறையைத் தேர்தெடுத்து கொழுந்து விட்டு எரியும் தன்னம்பிக்கையோடு வெற்றி பெற வேண்டும் என உழைத்துக் கொண்டுயிருப்பவர்.

மேலை நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வரும் நகர்புற மருத்துவ வளர்ச்சிகளை சிறு கிராமமும் சென்றடைய வேண்டும் என உறுதியாய் உழைப்பவர்.

சேவை மனப்பான்மையோடு இனி எல்லா குழந்தையில்லா தம்பதியர்க்கும் குழந்தை பெற்று தர வேண்டும் என்ற குறிக்கோளில் பல திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் சாத்தியப்படுத்தி வருபவர்.

கால மாற்றத்திற்கு ஏற்ப உடுமலையில் பல நவீன மருத்துவ தொழில் நுட்பக் கருவிகளை நிறுவி அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு மேலை நாடுகளைப் போல சிறந்த சிகிச்சை அளிப்பதில் முதன்மையாக விளங்குபவர்.

ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் சக்தி கருத்தரிப்பு மையத்தின் தலைமை மருத்துவர் சவிதா அசோக் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

கே : உங்களைப் பற்றி ?

தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் சிவகாசியில் வேளாண் குடும்பத்தில் திரு வெள்ளைச்சாமி திருமதி நிர்மலா தம்பதியருக்கு ஒரே மகளாகப்பிறந்தேன். சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படிக்கும் பழக்கம் எனக்கிருந்தது. இதனால் கல்வியில் சிறந்து விளங்கினேன். தொடக்கப்பள்ளி லயன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், மேல்நிலைப்பள்ளியை SNG பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றேன். இந்தப்பள்ளியில் படிக்கும் போது தான் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன். அது போலவே பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும் வாங்கினேன். இது இன்றும் என் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கிறது.  படிக்கும் போதே வகுப்பில் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வருவீர்கள் என்று எல்லா மாணவ மாணவிகளிடமும் கேட்பார்கள்; அப்படிக் கேட்கும் போது நாம் எப்போதும் ஒரு மருத்துவராக தான் வரவேண்டும் என்று சொல்வேன். இந்த வார்த்தை வெறும் வார்த்தையாக வரவில்லை. என்னுடைய  ஆசையாகவும், ஆதங்கமாகவும் வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆசை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இருப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. ஓரு குறிக்கோளை அடைய வேண்டும் என்றால் அதற்கு நிறைய முயற்சிகளும் பயிற்சிகளும் அதிகளவில் எடுக்க வேண்டும். இதனால் தினந்தினம் என்னை நன்றாகத் தயார்படுத்திக் கொண்டேன். பள்ளி அளவில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வும் பெற்றேன். நல்ல மதிப்பெண் எடுத்ததால் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். என்னுடைய கல்லூரிப்படிப்பை  புதுச்சேரி AVMC கல்லூரியில் முடிந்தேன். என்னுடைய முதுகலை மருத்துவப்படிப்பை பி.எஸ்.ஜி கல்லூரியில் முடித்தேன். அதே சமயத்தில் டெஸ்ட் டியூப் பேபி சம்மந்தமான படிப்பை இந்தியாவிலேயே சிறந்த 10 மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றான NADKARNI 21 ST CENTURY HOSPITAL & TEST TUBE BABY CENTER யில் பயின்றேன். பயிலும் போதே நிறைய கருத்தரங்குகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியும், கலந்தும் வந்தேன்.

கே : நீங்கள் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தது குறித்து?

விவசாயத்தை பரம்பரையாக பின்பற்றி வரும் எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை மருத்துவர். எல்லா பெற்றோர்களும் எண்ணுவதுபோல், என் பெற்றோரும்   என்னை ஒரு மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். பொதுவாக மருத்துவர் என்பவர்கள் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுவார்கள். மருத்துவத்துறை மகவும் சுவாரசியம் மிக்கது. மனித வாழ்வில் ஒவ்வொரு நகர்தலிலும் ஏதேனும் ஒரு விதத்தில் மருத்துவர்கள்  துணை நின்றிருப்பார்கள். நான் வெறும் பட்டத்திற்காக மட்டும் இந்த மருத்துவப் படிப்பைப் படிக்க வில்லை.  ஒரு பெரும் மாற்றத்திற்காகத் தான் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

மருத்துவம் என்றாலே சேவை என்று சொல்வார்கள். இந்தசேவையை என் வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும் என்று நினைத்துத் தான் இந்தத் துறையையே நான் தேர்தெடுத்தேன்.

கே : மருத்துவத்துறையில் பலதுறைகள் இருக்கும் பொழுது கருத்தரித்தல் துறையைத் தேர்ந்தெடுத்ததுபற்றி?

எல்லாத் துறையும் போன்று, மருத்துவத்திலும் பலதுறைகள் உண்டு. ஆனால் என்னைப் பெரிதும் நேசிக்க வைத்தது  இந்தக் கருத்தரித்தல் துறையே.

ஒரு பெண்ணாய் நான் மிகவும் நேசித்தத் துறை இதுவாகும்.  திருமணம் ஆகி ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பேறு இல்லையென்றால் அந்தப் பெண்ணை இந்தச்சமுதாயத்தில் வார்த்தை சூட்டால் சுட்டெரித்து விடுவார்கள். எந்த தவறும் செய்யாத எத்தனையோ பெண்கள் இன்று பல சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

குழந்தையின்மை காரணமாக பல பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று நாம் இன்றும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பார்க்கிறோம். நான் மருத்துவம் படித்ததே இந்தக்குறையைப் போக்கி நல்ல ஒரு சேவையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான். இங்கு நிறைய மருத்துவமனைகளும் மருத்துவர்களும் உண்டு. அவரவர் ஏதேனும் ஒரு துறையில் வல்லுநர்களாக இருப்பார்கள். நாமும் அவர்களைப் போல வித்தியாசமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துப் படித்தது தான் இந்த கருத்தரித்தல் துறை. இது தாய்மையைப் போற்றும் ஒரு உன்னதமான துறை என்றால் அது மிகையாகாது.

கே: ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் சக்தி கருத்தரிப்பு மையம் துவக்கப்பட்டது பற்றிச் சொல்லுங்கள்?

உடுமலை, பொள்ளாச்சி போன்ற கொங்கு மண்டல பகுதியில் 150 க்கும் மேலான கிராமங்கள் உண்டு . இந்தக் கிராமங்கள் அனைத்திலும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் நல்ல மருத்துவமனை இப்பகுதியில் இல்லை. சாதாரண பிரச்சனை என்றால் கூட பல மையில் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இங்கு வாழும் மக்களின் சில மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல வருடங்களுக்கு முன் துவங்கப்பட்டது தான் ஸ்ரீ சக்ரா மருத்துவமனை.

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக அனைத்து மருத்துவமும் ஒரே இடத்தில் கிடைக்கும் படி கொண்டு வர திட்டமிட்டோம். SCAN,X-RAY,ADVANCED LABORATORY,LAPAROSCOPY SURGERIES என அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து வைத்தோம். எங்கள் மருத்துவமனை துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே எங்கள் மருத்துமனை சேவையைப் பாராட்டி ISO  தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வயிறு அறுவை சிகிச்சைகள், புற்று நோய் அறுவை சிகிச்சைகள் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் ஆர்தொரோ கோபி மூட்டு அறுவை சிகிச்சைகள்  என அனைத்து அறுவை சிகிச்சைகளும் உடுமலையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி முதன்மையான மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.

கே : சக்தி கருத்தரிப்பு மையம் உருவானது பற்றிச் சொல்லுங்கள்?

இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றே சொல்லாம். அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் தொடங்கப்பட்டது தான் இந்தக் கருத்தரிப்பு மையம். குழந்தையில்லா ஏழை தம்பதிகள் பயன் பெறும் வகையில் சக்தி கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் தமிழக அரசு அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்டோம்.

திருமணமான அனைவருக்கும் குழந்தைப் பேறு கிடைப்பதில்லை. தாய்மை அடைந்தால் மட்டுமே ஒரு பெண்ணை இந்தச் சமுதாயம் முழுமையடைந்த பெண்ணாகப் பார்க்கும். அப்படியிருக்கும் போது ஏதேனும் சில காரணங்களால் சில பெண்களுக்குத் தாய்மை என்ற குணமே இல்லாமல் போய்விடுகிறது. இவர்களின் மீது அக்கரைக் கொண்டு உருவானது தான் இந்தக் கருத்தரிப்பு மையம். வசதியில்லாத ஏழைப் பெண்களுக்கு இந்தத்திட்டம் போய்ச் சேர வேண்டும் என்பதுவே எங்களின் நோக்கமாக இருக்கிறது.

கே: சக்தி கருத்தரிப்பு மையத்தின் மூலம் செய்து வரும் சமூக சேவைகள் பற்ற?

இத்திட்டத்தின் மூலம்  பல சமூக நலத்திட்டங்களை மக்களுக்குச் செய்து வருகிறோம்.

இளம் பருவ பெண்களுக்கு ஆரோக்கியக் கருத்தரங்குகள் அரசு தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதன் வளாகத்திற்கேச் சென்று கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா, உடற்பயிற்சி போன்றவை எங்களது மருத்துவமனை கருத்தரங்கு அறையில் மாதம் ஒரு முறை நடத்தி வருகிறோம்.

மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆலோசனை மையத்தின் மூலம் இலவச மருந்துகள் அளித்து வருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் கிராமம், நகரங்களில், குழந்தையில்லாத் தம்பதியனருக்கு இலவச ஆலோசனை முகாம் நடத்தி வருகிறோம்.

அருகில் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம்.

கே: சமீப காலமாக குழந்தையின்மை அதிகரிப்பு பரவலாக உள்ளது. அது பற்றி உங்களின் கருத்து?

பெருகி வரும் நவீன நாகரிக உலகில் ஆண்களைப் போலவே பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைக்குச் செல்வதை தவறு என்று சொல்லவில்லை, அது அவர்களின் குடும்ப சூழலாக இருக்கலாம், அல்லது வேறு எதாவது காரணமாகக் கூட இருக்கலாம். இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் தம்பதியர்கள் இருவரும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையும் இருக்கிறது.

அதே போல சில ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண்கள் தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க திருமண வயது எட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் வயது முதிர் கன்னியாகவே இருக்கிறார்கள்.

இது போன்ற பெண்கள் மன அழுத்தம், உடற்பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இதுவும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம் தான்.

அதே போல இயற்கையிலேயே சில பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு அதிகளவில் இருக்கும். இந்தக் குறைபாடு ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது ஒன்று தான்.


கே: குழந்தையில்லாத் தம்பதியர்கள் எப்போது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

தம்பதியர்கள் எவ்வித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு வருட காலத்திற்கு தாம்பத்திய உறவை மேற்கொண்டும் கருத்தரிக்கவில்லை என்றால் அவர்கள் பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும். குழந்தைப்பேறின்மைக்கு 40 % ஆண்களிடமும், 40 % பெண்களிடமும், 10% இருவரிடமும், 10 % கண்டறிய முடியாத காரணங்களாலும் இருக்கும்.

ஒரு ஆண் போதுமான அளவு நல்ல விந்தணுக்களை உற்பத்தி செய்து அந்த உயிர் அணுக்களை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். இந்த விந்தணுக்கள் பெண்ணின் கரு முட்டைக்குள் சென்று கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருக்க வேண்டும் கரு வரும் வழி அடைப்பில்லாமல் இருக்க வேண்டும். கரு முட்டையின் விந்தணுவை ஏற்று கரு வளரக் கூடிய அளவுக்கு பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டும்.

ஆண்களுக்ளுக்கான மலட்டுத்தன்மைகளின் காரணங்கள்:

ஹார்மோன் குறைபாடு, உடற்பருமன், நீண்ட கால தீவிர புகைப்படித்தல், மது அருந்துதல், விந்தணு மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்சனைகள், விந்து திரவத்தில் உயிரணுக்கள் குறைந்தோ (அ) இல்லாமலோ இருப்பது. விந்தணுக்களின் அசையும் திறன் குறைவாக இருப்பது (MOTILITY) உருவ அமைப்பு குறைபாடுகள் (MORPHOLIGY) சர்க்கரை வியாதி மரபுரீதியான நோய்களால் ஏற்படும் விந்தணு குறைபாடுகள் (GENETICS) போன்ற காரணங்கள் இருக்கிறது.

பெண்களுக்கான காரணங்கள்:

கருக்குழாய் அடைப்பு மற்றும் கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பையில் கட்டி, ஹார்மோன் குறைபாடுகளால் கரு முட்டைகள் உற்பத்தி ஆகாத நிலை, சினைப்பையில் அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் இருந்தும் முட்டை வளர்ச்சி முதிர்ச்சி பாதிக்கபடும் நிலை (PCOD) உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு ஹார்மோன் தொந்தரவுகள் போன்றவைகள் பெண்களுக்கு ஏற்படும் காரணங்களாகும்.

கே. குழந்தையில்லாப் பெண்கள் அனைவருக்கும் டெஸ்ட் டியூப் பேபி முறை தான் நிரந்தரத் தீர்வா?

உலகில் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கும். அந்தத் தீர்வு நிரந்தரமாகக் கூட மாறலாம். அது அந்தப் பிரச்சனையை எவ்வளவு வெகுவாக கண்டறிந்தோம் என்பதில் தான் அதன் தீர்வு அடங்கியுள்ளது. அது போல தான் மருத்துவத்துறையிலும் எல்லாம் நன்றாக இருக்கும் பொழுது மருத்துவரை யாரும் அணுக மாட்டார்கள். ஏதேனும் உடலில் மாற்றம் ஏற்பட்டால் தான் அணுகுவார்கள். இது எல்லா விதமான நோய்களுக்கும் பொருந்தும்.

அது போல தான் குழந்தையில்லாத் தம்பதியர்கள் ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பெறவில்லை என்றால் மருத்துவரை அணுகுவார்கள். மருத்துவர்களும் சில மருத்துவக் குறிப்புகளும், தாம்பத்திய உறவு முறைகள் குறித்தும் விளக்குவர். அதைப் பின்பற்றி நடந்தாலே சிலருக்கு குழந்தைப் பாக்கியம் கிடைத்து விடும். ஒரு சிலருக்கு பல மருத்துவ முறைகள் செய்தும் குழந்தைப்பேறு அடைவதில்லை, அப்படிப்பட்டவர்கள் தான் இந்த சிகிச்சைக்கு வருவார்கள். பெரும்பாலானவை சில ஹார்மோன் குறைபாடுகளை சீர் செய்தாலே வெற்றிகளைக் காண முடியும். உடலளவில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அவைகளை லேப்ராஸ்கோபி (அ) ஹிஸ்ட்ரோஸ்கோபி கருவிகள் முலம் அறுவை சிகிச்சை செய்தாலே குழந்தைப் பாக்கியம் பெறலாம். மிக சிலருக்கு மட்டுமே டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறை தேவைப்படும்.

கே: டெஸ்ட் டியூப் பேபி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது பற்றிச் சொல்லுங்கள்?

செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சை (ART)

ஆய்வுக்கூடல், சோதனைக்குழாய் கருகட்டுதல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிருடன் கரு முட்ûயுடன் ஆண் விந்துவை இணைத்து நிகழும் செயல் முறை. பொது வழக்கில் ஆங்கிலத்தில் இதனை(IVF) என்பர். இவ்வாறு பெரும் குழந்தைகளைப் பேச்சு வழக்கில் சோதனைக்குழாய் குழந்தைகள் (TEST TUBE BABY) என்று அழைப்பர்.

இந்த செயல் முறையை 3 கட்டங்களாக செய்யப்படும்.

  1. கருமுட்டை சேகரித்தல்:

பெண்ணின் சினைப்பை ஹார்மோன் பரிசோதனை செய்யப்பட்டு பிரத்யோக மருந்துகள் மூலம் 12-15 கருமுட்டைகள் மட்டும் முதிர்வடையச் செய்யபடுகின்றது. சரியான காலக்கட்டத்தில் முதிர்ந்த முட்டைகளை ஒரு ஊசி மூலம் வெளியே சேகரிப்படுகின்றன.

  1. ஒன்றாகச் சேர்த்தல்:

ஆய்வகத்தில் உயிரணுவையும், முட்டையும் ஒன்றாகச் சேர்த்து கரு உருவாக்கம் செய்யப்படும். அதன் பின் கருப்பை ஒத்த காற்றின் அளவு, ஹார்மோன் அளவு, வெப்ப அளவு என அனைத்து உள்ள INCUBATOR என்னும் செயற்கைக் கருவில் வளர்க்கப்படுகிறது.

  1. கருவை கர்ப்பப்பைக்குள் செலுத்துதல்:

நன்கு வளர்ந்த ஆரோக்கியமான கருக்கள் மட்டும் கண்டறியப்பட்டு பிரத்தேகக் கருவி மூலம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுகின்றது. பின்பு இந்தக் கரு இயற்கையான உருவான கரு போலவே நன்றாகத் கருவறையில் வளரத் தொடங்கும்.

கே : நீங்கள் செய்த அறுவை சிகிச்சையில் உங்களால் மறக்க முடியாதது?

மருத்துவருக்கு ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாதது தான். அந்த வகையில் ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு பாடமாக அவர்கள் மனதில் பதிந்திருக்கும். அதுபோல என் மருத்துவ வாழ்க்கையில் நிறைய இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்.

மாதவிடாய் நின்ற பிறகும் 47 வயதான பெண்ணுக்கு டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மூலம் குழந்தைப் பேறு அளித்திருக்கிறோம்.

கருத்தடை செய்து கொண்ட தம்பதியருக்கும் 12 ஆண்டுகள் கழித்து மறு அறுவை சிகிச்சை மூலம் இயற்கை முறையில் கருத்தரித்தல் செய்திருக்கிறோம்.

சிறு வயதிலேயே கரு முட்டைகளை இழந்த பெண்ணிற்கு முட்டை தானம் பெற்று மீண்டும் கருத்தரிக்கச் செய்தோம்.

கருப்பை சிறிதாக உள்ள பெண்ணுக்குக் கருப்பையை வளர வைத்து கருத்தரிக்க செய்து குழந்தைப் பாக்கியம் பெற்று தந்தோம்.

கே : ஒரு நிறுவனம் மேன்மை பெற வேண்டும் என்றால் ஊடகங்களின் முக்கியத்துவம் தேவையா?

சமுதாயத்தின் நான்காவது மிகப்பெரிய தூண் ஊடகம். அந்த வகையில் ஊடகத்தின் பங்கு எங்கள் மருத்துவனைக்கு அதிகளவு உண்டு. ஊடகவியலார்கள் எதையும் உடனுக்குடனே நன்கு ஆராயாமல் எந்த செய்தியையும் வெளியிடமாட்டார்கள். அந்த வகையில் எங்கள் மருத்துவமனைக்கு ஊடகத்தால் நிறைய பயன் கிடைத்திருக்கிறது.

நோய்க்கு நன்றாக சிகிச்சை அளிப்பதை விட நோய்களை பற்றி விழிப்புணர்வு அளிபவரே சிறந்த மருத்துவர். இதற்காக எங்களது மருத்துவமனையில் கணினி தொழிற்நுட்ப குழு செயல்பட்டு வருகிறது.

அனைத்து நோய்களையும் விபரங்களையும் பற்றி அனிமேஷன், கருத்தரங்குகள், கட்டுரைகள் ஆகியவற்றை Facebook, Twitter,Google+ Website,Youtube போன்ற அனைத்து சமூக வலைதளங்களில் “SAKTHI FERTILITY” என்ற பெயரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கே: எதிர்காலத்திட்டம் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் சேவையானது செயற்கைக் கருத்தரிப்பு முறையில் அதிக செலவில் சிகிச்சை என்ற கருத்தினை மாற்றி குறைந்த செலவில் டெஸ்ட் டியூப் பேபி மருத்துவ வசதி இல்லாத  அனைத்து கிராமங்களிலும் எங்களது சேவையை வழங்குவதே தலையாய நோக்கமாகும். இதற்காக எங்களைப் போல் சேவை மனப்பான்மை உள்ள அனைத்து இளைய தலைமுறை மருத்துவர்களை எங்களோடு இணைத்து கொண்டு செய்யப்பட உள்ளோம்.

கே : ஒரு பக்கம் மருத்துவமனையின் பெருக்கம், மற்றொரு பக்கம் நோய்களின் பெருக்கம் இது பற்றி?

மக்கள் தொகையின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதால் தேவைகள் பெருகுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. இதனால் எல்லாவற்றிலும் வளர்ச்சியும் பெருக்கமும் தேவைப்படுகிறது.

அதுமட்டுமின்றி வளர்ச்சியின் காரணமாக உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் தான் பல நோய்களுக்கு முதன்மைக்குக் காரணமாக இருக்கிறது. இதை எல்லாம் முறையாகக் கடைப்பிடித்தாலே பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

கே :மருத்துவம் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை அனைவருக்கும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் தெளிவான ஒரு இலக்கு வகுத்துக் கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைய தீவிர உழைப்பு அவசியம், விடாமுயற்சி தான் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் மிகு ஆயுதம்.

இன்று எப்படி டாக்டாக ஆக வேண்டும் என்று இலட்சியம் இருக்கிறதோ? அது இறுதி வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

மருத்துவரானப் பின்னர் இன்னும் இருமடங்கு அதிகமாக உழைக்க வேண்டும். வயது ஆனாலும் புதுமையை உள் புகுத்திப் பார்க்க வேண்டும். எதையும் நான் முழுமையாக கற்றுணர்ந்து விட்டேன் என்று நினைக்கக்கூடாது.

தனிமனிதனால் எதையும் சாதிக்க முடியம் என்ற நிலை தனக்குள் உருவாக்கிக் கொள்ளவும்  வேண்டும்.

கே : குடும்பம் குறித்து?

எனது கணவன் டாக்டர் அசோக் ஸ்ரீ சக்ரா மருத்துவமனையின் தலை லேப்ராஸ்கோபி சிகிச்சை நிபுணராக விளங்கி வருகிறார். மேலும் மருத்துவமனையில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் நல்ல மருத்துவராகவும், நல்ல கணவராகவும் இருக்கிறார்.  அதே சமயத்தில் குடும்ப வாழ்க்கையில் எனது மாமா, அத்தை திரு. முத்துகிருஷ்ணன் திருமதி. காஞ்சனா மற்றும் எனது கணவனின் சகோதரர் திரு. ஆனந்த் திருமதி. சபிதா ஆகியோர் எனக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் எப்போதுமே மருத்துவமனையின் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால் அவ்வபோது நல்ல ஆலோசனையும் வழங்கி வருகிறார்கள். இது எனக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு உங்களின் பொன் மொழிகள் என்ன?

வெற்றியின் முதல் படியே தன்னம்பிக்கை  தான். தளராத மனத்தைத் தனக்குள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

எதை நினைத்தாலும் உயர்வாகவும், தெளிவாகவும் கருத்தியல் தன்மையுடன் இருக்க வேண்டும். நல்ல நூல்களைப் படியுங்கள். நல்லோரிடம் நட்பு கொள்ளுங்கள். தினம் தினம் புதுமையை நோக்கி நகருங்கள். வாழ்க்கைச் சக்கரம் மிகவும் வேகமாகச் சுழலும் தன்மையுடையது. அந்த வேகத்திற்கு ஏற்றார் போல் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

கஷ்டங்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள். அதைக் கடக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசியுங்கள். வெற்றியின் பிரமிப்பை அறிந்து கொள்ள முடியும்.