உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
தேக்கம்பட்டி சிவக்குமார், சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட்
Catering Owners Association, செயற்குழு உறுப்பினர்
தந்தை பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் புரவலர்
கோவை மாவட்ட அமெச்சூர் கபாடிகழக இணை செயலாளர்,
தேக்கம்பட்டி, கோயமுத்தூர்
ஆரோக்கியமே மனித இனத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் அக்கரைச் செலுத்தினாலே வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் சிறந்த முறையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தயாரித்து இன்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்றமாநிலங்களில் இவரின் கைவண்ணத்தை சுவைக்காதவர்கள் யாருமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறந்த உணவுத்தயாரிப்பாளர்.
இங்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. ஆனால் பணத்தை விட மனிதர்களின் நலம் தான் சிறந்தது, ஆகையால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், உணவிற்குத் தேவையான மற்றப் பொருட்கள் போன்றவை பழமை மாறாமல் தயாரித்து அதன் மூலம் உணவைக் கொடுத்து வருபவர்.
உலக இலக்கியம் தொடங்கி உள்ளூர் இலக்கியம் வரை அனைத்தும் கற்றுக் கொண்டு தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், தன்னிடம் பணியாற்றுபவர்களிடமும் நம்பிக்கை விதையை நாளும் விதைத்துக் கொண்டேயிருப்பவர்.
கொடுத்த வாக்கில் உண்மை, நேரம் தவறாதிருத்தல், கடின உழைப்பு, மற்றவர்களுக்கு மனமுவந்து உதவும் மனப்பான்மை போன்றநற்குணங்களே இவரின் அடையாளம்.
சிறந்த சமையல் கலை வல்லுநர், தலை சிறந்த மேலாண்மைத்துவமிக்கவர், தேக்கம்பட்டி சிவக்குமார் சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்டின் நிறுவனர், இப்படி பன்முகத்திறமை வாய்ந்த தேக்கம்பட்டி சிவக்குமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.
கே: உங்களின் இளமைகாலத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகிலுள்ள தொட்டதாசனூர் என்னும் குக்கிராமம் தான் என்னுடைய ஊர். ஆனால் நான் பிறந்தது என்று பார்த்தால் என்னுடைய தாயின் ஊரான சாலைவேம்பு என்னும் ஊர். இங்கு தான் என்னுடைய தொடக்கக் கல்வி ஆரம்பித்தது. ஆனால் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டேன். அதனால் தொட்டதாசனூர் ஊருக்கே வந்துவிட்டேன். ஏழாம் வகுப்பு வரை இங்குள்ள அரசுப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை புஜ்ங்கனூரில் படித்தேன்.
என்னுடைய தந்தை கரும்பாலைத் தொழிலைச் செய்து வந்தார். அவ்வளவு வருமானம் இல்லாத தொழில். ஆனால் குடும்பம் நடத்தும் அளவிற்கு போதுமானதாக இருந்தது. நான் படிப்பில் சராசரி மாணவன் தான். எந்த வகுப்பிலும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று விடுவேன்.
கே: சமையல் கலையின் மீது ஆர்வம் எப்படி வந்தது?
என் தாயின் தந்தை நடேசன். அவர் சமையல் சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தார்.இவர் ஒரு சிறந்த சமையல் தயாரிப்பாளர், அவரின் கைப்பக்குவம் அக்கிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரபலம். உணவை நாவில் சுவைத்துப் பார்க்காமலேயே வாசனையை வைத்து அவ்வுணவில் உள்ள நிறைக்குறைகளைச் சொல்லிவிடுவார்.
நானும் சின்ன வயதிலிருந்தே இவர்களுடனே இருந்ததால் எனக்கும் இவ்வார்வம் வந்துவிட்டது என்றேசொல்லலாம். சின்ன வயதிலிருந்தே நாம் எதைப் பார்த்து வளர்கிறோமே அது நம் வாழ்வில் பின்னிபிணைந்து விடும். படிக்கின்றகாலத்தில் விளையாட்டைக்கூட மறந்து என்னுடைய தாத்தாவின் உடன் வேலைக்குச் சென்றுவிடுவேன்.
பள்ளியில் ஆசிரியர்கள் கேட்கும் பொதுவான கேள்வி. எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நிறைய பேர் ஆசிரியர்,மருத்துவர், ஆட்சியர் என்று அவரவர்கள் விருப்பதைக் கூறினார்கள். ஆனால் என்னைக் கேட்கும் பொழுது சற்றும் யோசிக்காமல் நான் சமையல் கலை நிபுணராக வரவேண்டும் என்று கூறினேன். இதைக் கேட்டு வகுப்பில் உள்ள மற்றமாணவர்கள் கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் என்னுடைய மருதன் ஆசிரியர் எனக்கு அப்போதே ஊக்கம் கொடுக்கும் படி பேசினார்.
கே: உங்களின் முதல் கேட்ரிங் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததால், இவர்கள் செய்த தொழில் என் குருதியோடு கலந்து விட்டது. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றபொழுது தனியாக ஒரு ஆர்டர் கிடைத்தது. இதை என்னுடைய தந்தையிடம் சொன்னேன். அவருக்கு ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் மறுபுறம் சற்று பயம் இருந்தது. திருமணம் வீட்டிற்கு சமைத்தல் என்பது சாதாரண காரியம் இல்லை, இதனால் என் பெரியம்மா சின்னப் புதூர் (சமையல் கலைஞர்) அவர்களை என்னுடன் என் தந்தை அனுப்பி வைத்தார்.
ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியும் என்றநம்பிக்கை இருந்தது. காரணம் நான் கற்றுக் கொண்டது என்னுடைய தாத்தாவிடமிருந்து. என்னுடைய பெரியம்மாவிடம் நானே முழுவதுமாகப் பார்த்துக் கொள்கிறேன். ஏதேனும் தடுமாறும் சூழலில் எனக்கு உறுதுணையாக இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் என்னுடைய பேச்சை மதித்து என்னை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டார்கள். என்னுடைய முதல் முயற்சி பெருத்த வெற்றி சாப்பிட்டவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள். இது எனக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தைக் கொடுத்தது. அதன் பிறகு அப்பகுதியில் என்னுடைய சமையலைப் பரவலாகப் பேசத் தொடக்கிவிட்டார்கள். திருமணம், காதணிவிழா, வலைகாப்பு, பண்டிகைப் போன்ற விழாக்களுக்குத் தொடர்ந்து ஆர்டர் வர ஆரம்பித்தது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கே: சமையலுக்கான வேலையாட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள்?
இது மிகவும் முக்கியமான ஒன்று. நான் தேர்ந்தெடுக்கும் அத்துணை வேலையாட்களும் என்னை விட வயதில் குறைந்தவர்களாகவே தேர்ந்தெடுப்பேன். காரணம் என்னுடைய சமையலுக்கென ஒரு தனியான ருசியை வைத்திருப்பேன். அதை மட்டுமே முறையாக பயன்படுத்துவேன்.
அனைவரிடத்திலும் ஆலோசனையும், கருத்துக்களையும் கேட்பேன் ஆனால் முடிவெடுப்பது நானாக மட்டுமே இருப்பேன்.
நாங்கள் தென்னிந்தியா, வடஇந்தியா போன்ற உணவுகளையும் தயாரித்து வருகிறோம். அப்படியிருக்கும் போது அது சம்மந்தமான உணவு தயாரிப்பு வல்லுநர்களை பணிஅமர்த்தி அவர்களை என்னுடைய ருசிக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்கி வருகிறோம்.
கே: உங்கள் கேட்ரிங் சென்டரின் தனித்தன்மைகள் என்ன?
எந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மை பெறவேண்டும் என்றால் மற்றநிறுவனத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில் எங்கள் சென்டர் மாறுபட்டதாக காணப்படுகிறது.
- உணவு பரிமாறும் பொழுது உணவின் வரிசை முறைஒழுங்காக வரிசைப்படுத்தி பரிமாறுவதற்கு ஏற்றவகையில் முன்கூட்டியே அமைத்துவிடுவோம்.
- சமைப்பவர் முதல் பரிமாறும் அனைவருக்கும் ஓரே நிறத்தில் சீறுடை கொடுத்திருக்கிறோம்.
- நாங்களே சொந்தமாக தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைத் தயாரித்து அந்தப் பொருள் மூலமே தயாரித்து வருகிறோம்.
- சமைக்கும் பாத்திரம் அனைத்தும் காப்பர் பித்தளை பாத்திரங்களையே பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு சமையல் முடிவுக்கு பின்னர் ஈயம் பூசி அதற்கு பின்னரே பயன் படுத்தோம்.
- அலுமினியம் பாத்திரம், அஜனமோட்டோ போன்றவற்றைநாங்கள் பயன்படுத்தில்லை.
- எங்களிடம் 50 ஆயிரம் பேருக்கு சமைக்ககூடிய பாத்திரங்கள் பணியாளர்கள், உணவைக் கொண்டு செல்ல தனித்தனி வாகன வசதிகள் போன்றவை இருக்கின்றன.
- அசைவம் மற்றும் சைவம் இரண்டையும் சிறந்த முறையில் தயாரித்துக் கொடுக்கிறோம்.
இப்படி எண்ணற்றதனித்தன்மைகள் இருக்கிறது. நாங்கள் முற்றிலும் குறைந்த விலையில் அதிக ருசி ஏற்படக்கூடிய அளவில் தான் எப்போதும் உணவைத் தயாரித்து கொடுக்கிறோம்.
வாடிக்கையாளர்களின் மனநலனும், உடல் நலனுமே எங்களைப் பொருத்த வரையில் முக்கியமாகக் கருதுகிறோம்.[hide]
கே: ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
எந்த ஒரு விழாவானாலும் தமிழர்கள் உணவிற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம் தன் வீட்டிற்கு வரும் அழையா விருத்தாளிக்கே விருது உபசரிக்கும் நம் நாட்டில் அழைத்து விருது வைக்கிறார்கள் என்றால் அது எப்படியிருக்கும் என்றும் நான் சொல்லி கேட்கத் தேவையில்லை.
5 முதல் 6 மாதத்திற்கு முன்னரே எங்களைப் பற்றி அறிந்து கொண்டு இப்படி ஒரு விசேஷம் வீட்டில் இருக்கிறது நீங்கள் தான் சரியாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முன் பணம் கொடுத்து சென்று விடுவார்கள். நம்மை நம்பி இப்படி ஒரு வேலை வருகிறதோ அவர்களின் நம்பிக்கைகளை நாம் முறையாகக் காப்பாற்றவேண்டும். அப்படியிருக்கும் போது நாம் மிகுந்த அக்கரைக் கொள்ள வேண்டும்.
அவர்களின் எண்ணத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வந்தவர்கள் உணவினைப் பாராட்டிச் சென்றால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமால் நம்மிடம் வந்து சொல்வார்கள் அது தான் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது.
கே: தமிழர்களின் உணவு முறையில் தற்போது மாற்றம் அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?
வருத்ததுடன் ஆம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. உலகிலேயே தமிழர்களின் உணவுக் கலாச்சாரம் தான் சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பெரிதும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
எவ்வளவு சூடான சாப்பாடாக இருந்தாலும் அதை தலைவாழை இலைப் போட்டு சாப்பிட்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது என்று அறிவியல் ஆய்வுகள் கூறிப்பிடுகின்றன.
சாப்பிடுவதற்கு வரிசை முறைஇருக்கிறது. முதலில் எதைச் சாப்பிட வேண்டும், இறுதியாகச் எதைச்சாப்பிட வேண்டும் என்று வரிசை முறைசாப்பிடும் ஓரே இனம் நம் தமிழ் இனம் மட்டும் தான்.
சாப்பிட்டவுடன் வெற்றிலைப் பாக்குப் போடும் கலாச்சாரமும் நம்மிடமிருந்து தான் தோன்றியது.நம்முடைய முன்னோர்கள் 100 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடைபிடித்த உணவு முறைகள் தான். இன்றும் பலர் சாப்பிடவுடன் வெற்றிப்பாக்குப் போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
நம் உணவில் பயன்படுத்தும் மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி முதலான பொருட்கள் பெரிதும் மருத்துவம் மகத்துவம் மிக்கதாகும்.
மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நம்மூர் இட்லி 1 வயது குழந்தை முதல் 100 வயது பெரியவர் வரை அனைவரும் உண்ணக்கூடிய உணவு என்று உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது.
அப்படி நாம் சாப்பிடும் அத்துனை உணவுகளும் நம்மை சுற்றி 50 கிலோ மிட்டர் சுற்றுப்புறத்திலேயே கிடைக்கின்றன. அவ்வாறு இருக்கும் பொழுது இதை முறையாகக் கடைப்பிடித்தாலே உடலில் எவ்வித நோய்யின்றி வாழலாம்.
கே: பாஸ்ட் புட் என்று சொல்லக்கூடிய துரித உணவுகளின் வளர்ச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?
பரப்பரப்பான உலகில், மனிதன் பணம் சம்பாதிக்க நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறான். அவர்களுக்கு சமைத்து சாப்பிட நேரம் இல்லை.
கணவன் மனைவி இருவரும் தற்போது வேலைக்குச் சென்றால் தான் குடும்பம் நடத்தும் முடியும் என்றநிலை தற்போது உள்ளது.
அப்படியிருக்கும் சமயத்தில் சாலையோரத்தில் இருக்கும் கடைகளுக்குச் சென்று தானும் உண்டு தன்னுடைய குடும்பத்திற்கும் வாங்கிச் செல்கிறார்கள்.
நூடுல்ஸ் போன்றஉணவுகள் மூன்று நிமிடத்தில் தயராகிவிடுகிறது, அதில் சுவைகூட்ட சுவை ஊட்டிகள், அஜினமோட்டோ போன்றவை கலக்கப்படுகிறார்கள். அப்போதைய ருசிக்கு சாப்பிடும் நாம் பின்விளைவைப் பற்றி சிந்திப்பதில்லை.
பணத்தை எப்போதும் வேண்டுமென் றாலும் சம்பாதித்து விடலாம் . ஆனால் ஒரு முறைஉடல் நலம் கெட்டுவிட்டால் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் சிரமம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு ருசிக்கு உணவுக் கொடுக்கமால், ஆரோக்கிய உணவான பயிறு வகைகளை நல்ல சுவையாக சமைத்துக் கொடுங்கள். ஒரு நாள் இரண்டு நாள் என்று தொடர்ந்து கொடுத்தால் அதன் சுவையை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
தற்போதைய துரித உணவு 15 ஆண்டுகளுக்குப் முன்னர் வந்தது. ஆனால் நம்முடைய பாரம்பரிய உணவு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
கே: கடந்த வந்த பாதையில் உங்களுக்கு ஏற்பட்ட திருப்புமுனையான சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?
என் வாழ்க்கையில் எதுவுமே உடனே ஏற்படவில்லை. எல்லாமே சிறிய துளியாகத் தொடங்கி தான் இன்று பெரு வெள்ளமாக காட்சியளிக்கிறது.
நான் முதன் முதலில் ஒரு தள்ளுவண்டியை வாடகைக்கு வாங்கி 20 கிலோ மீட்டர் தினமும் தள்ளிக் கொண்டே சென்று வியபாரம் செய்து வந்தேன். ஆரம்பத்தில் புதிய கடை என்றால் வாங்க யோசிப்பார்கள், ஆனால் சுவைத்து பழகிவிட்டால் நம்மை விட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்.
அப்படி நான் வேலை செய்து வருமானத்தில் என்னுடைய 19 ஆம் வயதில் முதன் முதலில் டிவிஏஸ் 50 வண்டியை வாங்கினேன். அதன் பிறகு ஒவ்வொரு தருணத்திலும் ஒரு வளர்ச்சியடைந்து வாகனங்கள் மாறத் தொடங்கின. இப்போது என் தேவைக்கு ஏற்றார் போல் வாகனங்கள் உள்ளது.
அகில இந்தியா பிஎஸ்என்எல் கருத்தரங்கம் சென்னையில் நடைப் பெற்றது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தார்கள். சுமார் 45 ஆயிரம் பேருக்கு சமைத்தது என் வாழ்க்கையில் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். அரசியல் அரங்கத்திற்கு, விளையாட்டு மைதானத்திற்கு என்று பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைத்தது. தற்போதும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.
கே: விளையாட்டு வீரர்களுக்கு உதவும் மனப்பான்மை எவ்வாறு உண்டாயிற்று?
சிறிய வயதிலிருந்தே வறுமையின் வாசனையிலேயே வளர்ந்தவன் நான். சின்ன வயதில் ஆசைப்படும் அனைத்தும் அனைவருக்கும் கிடைத்துவிடாது.
எனக்கு கபாடி விளையாட மிகவும் பிடிக்கும். ஆர்வம் இருந்தும் என்னை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை. கபாடி சீருடை அணிந்து விளையாட வேண்டும் நீண்ட நாள் ஆசையாக இருந்தது ஆனால் இன்று வரை நிறைவேறவில்லை.
என்னால் தான் முடியவில்லை. என்னைப் போல உள்ளவர்களை இணங்கண்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசை எனக்குள் எப்போதும் உண்டு. இதனால் 12 ஆண்டுகளுகாக தேகக்கம்பட்டி அதைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு இன்று வரை சீருடை வாங்கிக் கொடுத்து வருகிறேன்.
கபாடிப் போட்டியில் விளையாடும் வீரர்கள் வீராங்கணைகள் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.
கார்த்திக் மற்றும் மணிகண்டன் இரண்டு மாணவர்களும் அத்தலெடிக் விளையாட்டில் இருக்கிறார்கள். இவர்கள் விளையாடுவதற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறேன். நிச்சயம் இவர்கள் இருவரும் ஒருநாள் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன்.
இப்படி எத்தனையோ மாணவர்கள் தகுதியிருந்தும் வறுமையின் காரணமாக விளையாட முடியாமல் இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்தளவிற்கு செய்த கொண்டிருக்கிறேன். நீங்களும் செய்யுங்கள், நிச்சயம் அவர்கள் உங்களுக்கு நற்பெயரை வாங்கிக் கொடுப்பார்கள்.
விளையாட்டுப் போட்டியின் மூலம் நிறைய மாணவர்களை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவிகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறேன். தமிழரசன் என்றமாணவன் ரஷ்யாவிற்கு அருகிலுள்ள ஊரில் அர்மோனியா என்னும் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறான்.
கே: உங்களின் எதிர்கால இலக்கு
எதிர்காலத்தில் நான் சாதிக்க நிறைய இருக்கிறது. அந்த சாதனைகள் அனைத்தும் பிறருக்கு உதவும் வகையிலே அமைய வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை நோக்கம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்.
புதியதாய் ஒரு உணவினைத் தயாரிக்க வேண்டும். அது உணவே மருந்தாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு நோயைக் குணப்படுத்தும் அளவிற்கு மாற்றம் பெற வேண்டும்.
விளையாட்டு வீரர்களை ஊருவாக்கும் விதமாக ஒரு அறக்கட்டளைத் தொடங்க வேண்டும்.
தந்தைப் பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார் நிறைய சம்பாதியுங்கள், தாராளமாகப் பிறருக்குக் கொடுங்கள் அவரின் வாக்கிற்கேற்ப நிறைய உதவ வேண்டும்.
கே: படித்த, பிடித்த மனிதர்கள், புத்தகங்கள்
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் என்று பார்த்தால் தந்தைப் பெரியார் அவர்கள், தன்னலம் கருதாது பொது நலன் வாழ்க்கையில் வாழ்ந்தவர். அடிப்படையில் பெரிய செல்வந்தர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தவர். அவர் எழுதிய அத்துனை புத்தகங்கள் நான் விரும்பி வாசிப்பேன். தந்தைப் பெரியார் அவர்களின் இனிவரும் உலகம். வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர், மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய அர்த்தமற்றஇந்து மதம் என்றபுத்தகம் என் வாழ்வில் பெரிதும் பொக்கிஷமாக பாதுகாக்கும் புத்தகங்களில் ஒன்று. பெரியார் அவர்களின் பிடித்த வாசகம் நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய ஒருவித பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்ப்பது சிறுமை குணமே ஆகும்.
கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?
பிறக்கின்றஅனைவரும் சாதனை யாளர்களே, அவர்களின் திறமையை அறியும் வரை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி எளிது
நேரத்தை சரியாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டும்.
பாரம்பரிய உணவை மட்டுமே உண்ணுங்கள், இயற்கையான, சத்தான உணவினை உட்கொள்ளுங்கள்
இரசாயன உணவினை நீங்கள் உண்ணாதீர்கள், மற்றவர்களையும் உண்ண அனுமதிக்காதீர்கள்.
குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு வகைகளைக் கொடுத்துப் பழகுங்கள்.
நோய் நொடியில்லாத வாழ்வு மக்களுக்கும் நாட்டுக்கும் தேவை.
கே: வளரும் தலைமுறைக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?
வேலைக் கேட்டு விண்ணப்பம் போட்டு அழுக்காமல், நீங்களே மற்றவர்களுக்கு வேலைத்தரும் அளவிற்கு உயர வேண்டும்.
படிப்பிற்கேற்றவேலை வரட்டும் என்று வாசலைப் பார்த்து எந்தப் பயனும் இல்லை. உன் திறமையை அலங்கரிக்க ஆயிரம் மணிமகுடங்கள் காத்திருக்கிறது.
பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்தது போதும், அவர்களின் ஆனந்தம் படுத்தப் புறப்படுங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Cover Story