எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்
Rtn.Prof. Dr. ஜமீர் பாஷா
M.S.,FRCS(Eng).,FACS(USA).,FAIS.,FIAMS.,Dip.MAS(Ger.).,FIAGES.,FALS.,
Consultant Laparoscopic & Laser Surgeon
SHANAWAZ HOSPITAL தில்லைநகர், திருச்சி.
முச்சங்கம் உதித்த மதுரையில் பிறந்தவர்
முத்தமிழிலும் முகவரி கண்டவர்
தென் தமிழகத்தில் நுண் துளை அறுவைச் சிகிச்சை அறிமுகம் செய்தவர்
உலகெங்கும் பயணம் செய்து சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தவர்
உலகத் தலைவர்களிடம் உன்னத நட்பு கொண்டவர்
வள்ளுவர் முதல் பாரதி வரை முழுமையாகக் கற்றவர்
நோய் என்று வருபவர்களுக்கு சிகிச்சைக்கு
முன்பே புன்னகையால் குணம் படுத்தக்கூடியவர்
வீட்டை அலங்கரிக்க விருதுகளை வைப்போர் மத்தியில
விருதுகளாலே வீட்டைக் கட்டியவர்..
தலைசிறந்த உலக மருத்துவர்களின் மிக முக்கியமானவர் SHANAWAZ HOSPITAL மருத்துவமனையின் நிறுவனர் Rtn.Prof.Dr. ஜமீர் பாஷா அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு….
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பிறந்தது மதுரையில் தான். என்னுடைய தந்தை சுங்க இலா அதிகாரியாக இருந்ததால், என்னுடைய பள்ளிப்படிப்பு கோவை கிக்கானி பள்ளி, ஊட்டி, கோத்தகிரி, என பல இடங்களில் நடைபெற்றது. பல பள்ளிகளில் படித்தாலும் என்னுடைய எண்ணம் முழுவதும் படிப்பின் மீதே இருந்தது. எல்லாப் பாடத்திலும் முதன்மை மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றேன். இந்தத் தேர்ச்சியின் மூலம் படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என்ற தத்துவத்தைப் என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்துக் கொண்டேன். வீட்டிலும், பள்ளியிலும் நன்றாகப் படிக்கும் மாணவன் என்று பெயரெடுத்துவிட்டேன்.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 1971 ஆம் ஆண்டு மதுரை மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தேன். மருத்துவத் துறையின் மீது இருந்த பற்றுதலால் இறுதியாண்டில் Surgery பிரிவில் முதல் மாணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் பிறகு அடுத்தடுத்த மருத்துவ பட்ட மேற்படிப்பு தஞ்சாவூரில் எம்.எஸ். படிப்பை படித்தேன். முதுகலைப் பட்டத்திலும் பல்கலைக்கழக முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.
கே: மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?
என் தந்தைக்கு என்னை ஒரு இ.ஆ.ப அதிகாரியாகப் பார்க்கவேண்டும் என்ற என்ற ஆசை இருந்தது. அவர்களின் ஆசையை என்னால் நிச்சயம் பூர்த்தியாகக் கூடியதாகவே இருந்தது. ஒரு நாள் அவர் நன்கு சிந்தனை செய்து அரசு அதிகாரியானால் ஒரு மேலதிகாரி இருப்பார் அவர்களின் கட்டளையிணங்கவே செயல்பட வேண்டும் என்று நினைத்து நீ டாக்டராக வேண்டும் என்று கூறினார். அதோடு டாக்டராகிவிட்டால் எதையும் நீ சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். டாக்டர் என்பவர் இறைவனுக்கு இணையாக மதித்துப் போற்றப்படும் பணி என்பதையும் என்னிடம் கூறினார். அன்று அவர் கூறிய வார்த்தை என் மனதில் பசுமரத்தாணி அடித்தாற் போல் ஆழமாகப் பதித்தது.
அவரின் வார்த்தையை என் வாழ்க்கையாக மாற்றி கொள்ள முனைந்தேன். அதற்கு கடுமையான முயற்சி, பயிற்சி, எந்நேரமும் படித்ததன் மூலம் மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது. இன்று உங்களின் முன் ஒரு மருத்துவராக அமர்ந்திருக்கிறேன்.
கே: நுண் துளை அறுவை சிகிச்சை நிபுணரானது பற்றி?
மருத்துவத் துறைகளில் பல பிரிவுகளும், பல முறைமைகளும் இருக்கிறது, நான் படித்த முடித்த காலத்தில் இந்த சிகிச்சை முறை அப்போது தான் அறிமுகமாகிய காலக்கட்டம். இதில் என்னை இணைத்துக் கொள்ள விரும்பினேன். விரும்பினால் மட்டும் போதாது இதிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள விரும்பினேன்.
இதற்கதாக ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்கு உயர்பயிற்சி எல்லாம் பெற்று, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் லேசருக்கான அறுவை சிகிச்சை முறைமைகளை முறையாக கையாண்டு கற்றுக் கொண்டேன்.
தென் தமிழகத்தில் முதன் முறையாக நுண்துளை அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்து வைத்த பெருமை என்னையே சாரும். அது மட்டுமின்றி பித்தப்பை சம்மந்தமான அத்துனை சிகிச்சைகளும் அப்போதே செய்தேன்.
கே: அறுவை சிகிச்சையை முறையை அறிமுகப்படுத்திய, உங்களின் அடுத்தடுத்த படிநிலைகள் எவ்வாறு இருந்தது?
எனக்கு முன் இந்த அறுவை சிகிச்சையில் யாருமில்லை. நான் தான் முதலாமானவர். இந்த நுண் துளை அறுவை சிகிச்சைக்கென்று எந்தப் பாடத்திட்டமும், பாடப் புத்தகமும் இல்லை.
இதனால் நுண்துளை அறுவை சிகிச்சை அமைப்பு ஒன்றை தொடங்கி அதன் மூலம் பாடப்புத்தகத்தை ஒன்றை உருவாக்கினோம். Indian Associan of Gastrointestinal Ento Surgeons மூலம் இரைப்பை, குடல், ஈரல், சிறுநீரகம் போன்ற வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அகில இந்திய அசோஷேசன் ஒன்றை நிறுவி, அதன் தேசிய தலைவராக இருந்து பல திட்டங்களை அறிமுகம் படுத்தினேன்.
இதன் மூலமாக உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்று பல சொற்பொழிவுகளும், கருத்தரங்குகளும், ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பித்துள்ளேன். அப்போது உலகத் தலைவர்களின் நட்பு எனக்கு கிடைத்தது.
நான் கற்றதைப் பெற்றதை என்னுள்ளே வைத்துக் கொள்ளாமல் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வாக்கிற்கேற்ப இதுவரை 250க்கும் மேற்பட்ட இளம் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கும் இலவசமாகப் பயிற்சி அளித்துள்ளேன். இதுகுறித்தான பல விழிப்புணர்வு கட்டுரைகள், தொலைக்காட்சி பேட்டிகள் என பல நிலைகளில் பரிணமித்துள்ளேன்.
என் மருத்துவப் பயணத்தில் இதுவரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன் என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கே: உலகத் தமிழ் மாநாட்டில் நீங்கள் பங்கு பெற்ற அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் பல துறை வல்லூநர்கள் கலந்து கொண்டார்கள்.
முத்தமிழ் என்று சொல்லக்கூடிய இயல், இசை, நாடகம் போன்றவற்றில் பல நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதில் நான்காவது தமிழான அறிவியல் தமிழ் என்ற ஒன்றை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அந்த அறிவியல் தமிழில் நுண் துளை அறுவை சிகிச்சை பற்றி என்னை பேச அழைத்தார்கள். நான் முதல் சொற்பொழிவாக அந்த அமர்வில் பேசினேன். அப்போது தான் நுண் துளை அறுவை சிகிச்சை என்னும் வார்த்தையை அறிமுகம் செய்து வைத்தோம்.[hide]
கே: ரோட்டரி மாவட்டம் 3000 என்ற அமைப்பில் நீங்கள் செய்யும் பணிகள் பற்றி?
இந்தப் பணியில், திருச்சி, மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்ûடை, கரூர், தேனி ஆகிய எட்டு வருவாய் மாவட்டங்களை சேர்த்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ஒன்றிணைத்தோம். இதற்கு நான் ஆளுநராக இருந்து பணியாற்றி வருகிறேன்.
இதில் நிறைய சேவைகள் செய்திருக்கிறோம். உதாரணமாக, மொபைல் ஆம்புலன்ஸ், பள்ளிக்கட்டிடம்,பள்ளிக் கழிப்பறை, மருத்துவ முகாம்கள், இரத்ததானம், மரம் நடுதல், போன்ற பணிகள் செய்திருக்கிறோம்.
ஒரு ஆண்டில் ஐந்நூறுக்கும் அதிகமான உறுப்பினர்களை இந்த அமைப்பில் சேர்த்த பெருமை என்னை சேரும்.
கே: தற்போது நடக்கயிருக்கும் சிம்மாசனம் அமைப்பு பற்றிச் சொல்லுங்கள்?
நான் எது செய்தாலும், சமூகத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பேன். அப்படித் தொடங்கியது தான் இந்த சிம்மாசனம் எனும் மாநாடு இதன் தொடக்க விழா ஜனவரி 4 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருத்தினராய் தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே போல் நிறைவு விழாவிற்கு தெலுங்கனா ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தராஜன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். மேலும் இதில் சிறப்பு பேச்சாளர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், நடிகர் விவேக் போன்றவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சமூக அக்கறையுள்ள விழா என்பதால் அனைவரும் குடும்ப விழாவாக சிறப்பாக செயல்படுத்த திட்டம் வைத்துள்ளோம். இதன் நோக்கமே மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பது தான்.
கே: ரோட்டரி கிளப்பின் ஆளுநராகப் பணியாற்றி வரும், உங்களின் சேவைகள் பற்றி?
ரோட்டரி கிளப்பில் என்னை இணைத்துக் கொண்ட நாளிலிருந்து இன்று வரைபலசேவைத்திட்டங்கள்அனைவரும்ஒன்றிணைந்துசெய்துவருகிறோம்.
இதன் மூலம் ஆறு வகையான சேவைத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது, அது.
எங்கும் அமைதி நிலவ வேண்டுதல் பணி.
பிணி நீக்கும் பணி
நீர் மேலாண்மை ப்பணி
தாய் சேய் நல மேன்மைப்பணி
கல்வியறிவு மேம்படும் பணி
பொருளாதாரம் மேம்படும் பணி
போன்ற பணிகள் தற்போது செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு பெரியளவில் ராயல் குழுமம் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
எனது மனைவியும் மருத்துவர் என்பதால், அவரும் மிகுந்த சமூக அக்கறையாளர். நாங்கள் ஆறு வகையான திட்டங்களை சேவைகளாக செய்து வருவதைப் போல அவர் தசவாதாரம் என்ற பெயரில் பத்து வகையான திட்டங்களை மாதம் ஒன்று என்ற கணக்கில் செய்து வருகிறார். இது மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரியசகி என்று சேவைத்திட்டத்தினை அமல் படுத்தியிருக்கிறார்கள்.
கே: மருத்துவப் பணியின் சிறப்பாக நீங்கள் பார்ப்பது பற்றிச் சொல்லுங்கள்?
மருத்துவம் என்பது மகத்துவமும், மனித நேயமும் மிக்கது. இறைவனுக்கு இணையாப் போற்றப்படும் பணி.
நான் நவீன வளர்ச்சியில்லா காலக்கட்டத்திலேயே நுண்துளை அறுவைசிகிச்சையை செய்திருக்கிறேன். நான் செய்யும் எதுவும் ஒரு தனி மனித சாதனையாக நான் என்று பார்த்ததில்லை, ஒரு மருத்துவமனை என்றால் நிறுவனர் முதல் இறுதிநிலை பணியாளர்கள் வரை இருப்பார்கள். இவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
மருத்துவரை நம்பிவரும் நோயாளிகளின் முழுமையாக அறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவமுறைகளை செய்து அவர்களை குணப்படுத்தி அனுப்பிவைக்க வேண்டும். ஒரு மருத்துவருக்கு அறுவை சிகிச்சை என்பது நூறில் ஒன்று. ஆனால் நோயாளிகளுக்கு அது வாழ்க்கை. அவர்களின் வாழ்க்கையை நம்மிடம் நம்பி ஒப்படைத்து விடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை காக்கும் விதமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு உயிருக்கும் மருத்துவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். நோயாளிகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் அளிக்க வேண்டும். என்ன பிரச்சனையோ அதை முழுமையாக அவர்களுக்கு புரியும் படி சொல்லுதல் வேண்டும்.
கே: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
ஒரு சாதனை அனுபவத்தின் வெளிப்பாடுதான் சாதனையாக உருபெறுகிறது. இதுவரை ஐந்து வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பெற்றிருக்கிறேன்.
Lifetime Achievement Award-presented by Dr.MGR Medical University, Tamilnadu on Doctor’s Day July 1 2012.
Worldwide Achivevers Healthcare Excellence Award at New Delhi on 21 January 2015.
Lifetime Achievement Award-presented by The Association of Surgeons of india.
Lifetime Achievement Award-presented by All Economy survey Award council, New Delhi in 20125.
IMA Dr.M.GGARG Lifetime Achievement Award-presented by IMA on 28 December 2018 at Bengaluru.
ஆகிய சாதனையாளருக்கான விருது பெற்றிருக்கிறேன். அது தவிர பர்ல் 25 living legends in health care என்ற பட்டியியலில் இடம் பெற்றுள்ளேன்.
கே: உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறீர்கள், அங்கிருக்கும் எல்லா சிகிச்சை முறைகளும் நம் நாட்டிற்கு வந்து விட்டதா?
நிச்சயம் எல்லாம் வந்துவிட்டது. நாம் நாட்டில் அதிநவீன மருத்துவ இயந்திரங்கள் வந்து விட்டது. குறிப்பாக என்னுடைய மகன் மற்றும் மகள் இருவரும் ரோபோடிக் மூலமாகத்தான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
எல்லா அட்வான்ஸ் சிகிச்சை முறைகள், 3 டி அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை எங்கள் மருத்துவமனையில் செய்து வருகிறோம்.
கே: ஒரு மருத்துவராய் நீங்கள் இத்துறையில் சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா?
சாதித்துவிட்டேன் என்று சொல்லிவிட முடியாது சாதித்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. மருத்துவத் துறையில் எதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.
ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்வேன். ஒருமுறை ஒருவரை தலையில் கட்டியுடன் உயிர் போகும் தருவாயில் என்னிடம் அழைத்து வந்தார்கள். வந்தவர்கள் எங்கெங்கே பல மருத்துவமனையில் பார்த்து விட்டோம் எங்கும் முடியாது என்று சொல்லி விட்டார்கள். கடைசியாக உங்களிடம் சென்று பார்க்கும் படி நண்பர் ஒருவர் கூறினார் என்று வந்தோம் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவரை குணம் படுத்தினேன். அதன் நன்றிகடனாக என்னுடைய புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கி வருவதாக என்னிடம் சொன்னார்.
அது போல் ஒருமுறை எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான் மருத்துவமனையில் படுத்துவிட்டேன். இதை கேள்விப்பட்டவர்கள் கோயில், சர்ச், மசூதி ஆகிய தெய்வாலயங்களில் எனக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு மருத்துவராய் சாதித்து விட்டதாகவே கருதுகிறேன்.
கே: குடும்பம் குறித்துச் சொல்லுங்கள்?
என்னுடைய குடும்பம் ஒருமருத்துவ குடும்பம் மனைவி திருமதி. ஷகிலா ஜமீர் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். தான் தேர்ந்தெடுத்தத் துறையில் பல சாதனைகள் புரிந்து வருபவர். என்னை போலவே மிகுந்த சேவை மனப்பான்மை குணம் கொண்டவர். சிறந்த நிர்வாகி, இல்லறத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தக்கூடியவர். எனது மகன் Dr. Shakir Tabrez Gold medal in M.S.,(Gen.Surgery) M.ch., in Urology துறையில் பணியாற்றி வருகிறார். அதிநவீன மருத்துவத்தை முறையாகக் கற்று இன்று தலைசிறந்த மருத்துவராக இருக்கிறார். மகள். Dr. Rubina Shanawz., M.S.,(Obs,&Gyn) Won 3 Gold medals in M.S., (O&G). இவரும் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
கே: வளரும் இளம் மருத்துவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
இளம் மருத்துவர்களே எதையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சவால் நிறைந்த உலகத்தில் நீங்கள் எவ்வாறு சரித்திரத்தில் இடம் பெற போகிறீர்கள் எதைப் பற்றி யோசியுங்கள்.
செய்யும் பணி எவ்வாறு மகத்துவம் மிக்கது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் கணிவும், மற்றவர்களிடம் பணிவும், உடலில் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிவும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
போட்டி நிறைந்த உலகில் உங்களின் முகம் தனித்துவமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் செய்யும் பணியை ஈடுபாட்டுடனும், பற்றுதலுடனும் செய்யுங்கள். நீங்களும் சாதித்து விடுவீர்கள்.
கே: உங்களின் எதிர்காலத்திட்டம் பற்றி?
இந்த துறையிலே இன்னும் புதுமையாக செய்தல்வேண்டும்.
புதிய புதிய நவீன இயந்திரங்கள் கொண்டு வர வேண்டும்.
இன்னும் சேவையை அதிகப்படுத்தவேண்டும்.
திருச்சியிலே வயிற்று சம்மந்தமான அத்துனை சிகிச்சைகளும் செய்யபட வேண்டும்.
வரும் முன் காப்போம்
நோயில்லா வாழ்வை உருவாக்குவோம்.
நேர்காணல்: விக்ரன் ஜெயராமன்[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Cover Story