Home » Cover Story (Page 2)

முடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு

வைபவ் குமராவேல்,

Partner, The Red Box,

சென்னை.

நேர்முகம்: விக்ரன் ஜெயராமன்

தன்னம்பிக்கை உள்ளவர் தன் தேவை என்னவோ அதை நோக்கி மட்டுமே பயணம் செய்து தனது குறிக்கோளை அடையும் வரை ஒரே சிந்தனையுடன் செயல்படுவார்கள். அந்த வழியை சரியாகப் பின்பற்றி வருபவர்.

நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றிப் பெற்றே தீருவேன். எந்தச் செயலையும் சிறப்பாகவும், சென்மையாகவும் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை நிரம்ப பெற்றவர்.

பெற்றோர் எவ்வழியே அவ்வழியே பிள்ளைகள் என்பார்கள். ஆனால் இவர் அவ்வழியில் செல்லாமல் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி அதில் புகழ் கொடியை நட்டுவருபவர்.

தற்போதைய இளைய தலைமுறையினருக்கு ஒரு முன் உதாரணமாய், 24 மணி நேரமும் இடைவிடா இயந்திரமாய் செயல்பட்டு வரும் THE RED BOX நிறுவனத்தின் PARTNER களில் ஒருவரான வைபவ் குமாரவேல் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு….

கே:  உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். எனது பெற்றோர் திரு. குமராவேல், திருமதி. வீனா நேச்சுரல் கேர், ராகா நிறுவனத்தின் நிறுவனர்கள். பள்ளிக்கல்வி என்று பார்த்தால் சென்னை மற்றும் ஊட்டியில் படித்தேன். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு சிங்கப்பூரில் பிபிஏ படிக்க சென்று விட்டேன். எனக்குப் படிக்கின்ற காலத்திலிருந்தே ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும், அந்தத் தொழில் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய தந்தை பிரபலமான தொழில் செய்து வந்தாலும் அத்தொழில் செய்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை.

கே: நிறுவனம் தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?

நான் சிங்கப்பூரில் படிக்கும் போது அடிக்கடி நண்பர்களுடன் சாப்பிட வெளியே செல்வது வழக்கம்.  சாப்பிடும் போது அங்கு பரிமாறிய உணவுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவ் உணவை உண்பதற்கு மிகவும் சுவையாக இருந்தது. இதை ஏன் நாம் தமிழ்நாட்டில் செய்யக்கூடாது என்ற எண்ணம் அப்போது என் மனதில் உதயமாயின. அப்படி தொடங்கியது தான் இந்த ரெட் பாக்ஸ் நிறுவனம். ஒரு நான்கு ஆண்டுக்கு முன்னர் சென்னையில் ஒரு சிறிய அளவில் தொடங்கினோம்.

கே:  ரெட் பாக்ஸ் சைனீஸ் உணவகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் ஒரு வேலை செய்வதற்கு முன் பலமுறை யோசித்து செய்வேன். செய்து விட்டால் வெற்றிகரமாக முடிக்காமல் விடமாட்டேன் இது தான் என்னுடைய தாரக மந்திரம். அப்படி என் மனதில் உதயமான இந்த ரெட் பாக்ஸ் சைனீஸ் உணவகம். தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. அப்படியிருக்கும் போது அவர்கள் வீட்டிற்கு வந்த உணவை சமைத்து சாப்பிடும் அளவிற்கு நேரம் இருப்பதில்லை.

இதனால் அவர்கள் உணவகத்தை நாடுகிறார்கள். நல்ல தரமான உணவை வீட்டிற்கு வாங்கிச் சென்று சாப்பிடும் பழக்கம் தற்போது அதிகளவில் இருக்கிறது. இப்படி சாப்பிடும் உணவு அவர்களின் உடலிற்கு எவ்வித தீங்கும் இல்லாத அளவில் இருக்க வேண்டும் என்பதால் தான் இப்படி ஒரு திட்டத்தையே கொண்டு வந்தோம். இதில் நாங்கள் தயாரிக்கும் உணவில் மிகுந்த அக்கரையுடன் தயாரிக்கிறோம். உணவுக் கொடுக்கும் பாக்ஸில் முடிந்தளவிற்கு பிளாஸ்டிக் தவிர்த்து விடுகிறோம். எங்களிடம் நம்பி உணவை வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களின் நலனில் மிகுந்த அக்கரை கொண்டு செயல்படுத்தி வருகிறோம். இதனாலேயே எங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் சென்னையில் ஒரு மூன்று இடத்தில் மட்டுமே ரெட் பாக்ஸ் இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் எல்லா இடத்தில் ஆரம்பித்து விட்டோம். ஆர்டர் செய்த நேரத்திலிருந்து எவ்வளவு சீக்கரமாக அவர்களுக்கு உணவைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கரமாக கொடுத்து வருகிறோம்.

கே: உங்கள் பெற்றோர் ஒரு புகழ் பெற்ற தொழில் செய்து வருகிறார்கள், நீங்கள் அதே வழியில் செல்லாமல் புதிய தொழில் தொடங்கியதன் காரணம் என்ன?

எனது பெற்றோர் தொடங்கிய நேச்சுரல்ஸ் கேர் நிறுவனமானது மிகவும் பிரபலமான ஒன்று. அதை அவர்கள் இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் அதற்கு கொடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பு தன்மையும் அளப்பறியது. எப்போதும் அதன் வளர்ச்சியை பற்றியே மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள். நேச்சுரல்ஸ் என்றாலே என்னுடைய பெற்றோர்களின் பெயர்களைத் தான் சொல்வார்கள். அதை நான் அடுத்த படிநிலையாக எவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றாலும் என்னுடைய பெற்றோரின் பெயரைத்தான் சாரும்.

இவர்களைப் போல நாமும் ஒரு தொழில் தொடங்க வேண்டும். அது தொடங்கியது நானாக இருக்க வேண்டும். அதன் வளர்ச்சி என்னைச்  சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.  அப்படித்தான் தொடங்கினேன். அதுவுமின்றி எனக்கு இந்த சலூன் தொழிலில் அவ்வளவு ஈடுபாடு இல்லை, அதே வகையில் உணவுத் தொழிலின் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. இப்படித்தான் என்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டேன்.

கே: ரெட் பாக்ஸ் என்று பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?

ஒரு நிறுவனத்தின் பெயர் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருக்கும். இந்த ரெட் பாக்ஸ் என்பது சைனீஸ் உணவை மட்டும் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனம் என்பதால் இந்த உணவிற்கு என்று  ஒரு பாக்ஸ் தேவைப்படும். அதில் நிரப்பப்பட்ட உணவை தான் பார்சல் செய்து ஆர்டர் செய்பவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

பொதுவாக சைனீஸ் திரைப்படங்களைப் பார்க்கும் போது அதில் அனைவரும் பாக்ஸில் மட்டுமே உணவை உண்பதைப் பார்த்திருப்போம். அந்தப் பாக்ஸ் படத்தைப் பார்க்கும் அனைவரின் மனதிலும் பதியும் படி இருக்கும். சென்னை முழுவமும் நிறைய சைனீஸ் உணவகங்கள் இருக்கிறது. அதில் முற்றிலும் மாறுப்பட்டு செயல்பட வேண்டும் ரெட் பாக்ஸ் என்பது சைனீஸ் உணவைக்குறிக்கும் சொல் என்பதால் அதனாலேயே இந்த ரெட் பாக்ஸ் என்ற பெயரை வைத்தோம்.

கே:  பெரிய நகரங்களுக்கு மட்டுமே இந்த உணவு முறைகள் சாத்தியமா?

உணவு  என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று, உபர், சுகி போன்ற நிறுவனங்கள் பெங்களுரூ, ஹைத்ராபாத் போன்ற நகரங்களில் தொடங்கி அடுத்து தமிழ்நாட்டில் பல கிராமப்புற பகுதிகளுக்கு வருவதாக திட்டம் வைத்திருக்கிறார்கள்.

தற்போது எல்லாப் பொருளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் மக்களிடையே பெருகி விட்டது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களும் உண்டு, ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு வித பயம் இருக்கும் பொருள் சரியாக வந்து விடுமா? ஓரிஜினலாக இருக்குமா போன்ற ஐயப்பாடுகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இன்றும் கிராமப்புறத்தில் வாழும் மக்கள் இன்னும் கடைக்குச் சென்று தான் வாங்கி வருகிறார்கள்.

இவர்களுக்கு முதலில் குறைந்த விலையிலான உணவை முதலில் கொண்டு வந்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்ய  வேண்டும். அப்படி செய்தால் எல்லாப் பகுதியிலும் கொண்டு வந்து விடலாம்.

கே: எது மாதிரியான உணவுகள் இதில் கிடைக்கும்?

இதில் முழுக்க சைனீஸ் உணவுகள் மட்டுமே கிடைக்கப் பெறும். அனைத்து விதமான வெரைட்டி உணவுகளும் இருக்கும். 40 முதல் 50 வகையான உணவு வகைகள் இருக்கிறது.

ஆர்டர் செய்பவர்கள் யாரும் உணவைத் தனித்தனியாக ஆர்டர் செய்ய மாட்டார்கள். தேவையான அனைத்து உணவுகளையும் ஒன்றாகவே ஆர்டர் செய்வார்கள்.

அதில் மோமோ, சூப் போன்ற உணவுகள் சிறுதானியங்கள் மூலம் செய்யப்படுகிறது. இதில் குறைந்த அளவே எண்ணெய் உடன் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றன்.

அது மட்டுமின்றி சிக்கன் லாலிபப், பன்னீர், சில்லி பன்னீர் போன்ற உணவுகள் தயாரித்துக் கொடுக்கிறோம்.  இதில் முதன்மையான உணவு என்னவென்றால் காம்போ தான். இக்காம்போவானது ஒருவர் மட்டும் சாப்பிடும் அளவிற்கு சிக்கன் மற்றும் வெஜ் சம்பந்தமான  ரைஸ் மட்டும் அதில் கிரேவி போன்றவை ஓரே பாக்ஸில் பேக்  செய்யப்பட்டு கொடுக்கப்படும்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் நிறைய பேர் வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் சொந்த ஊரிலிருந்து இங்கே வருகிறார்கள். அவர்களின் நிறைய பேர் ஹோட்டலை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். இப்படிப்பட்டவர்களைக் கருத்தில் கொண்டு இந்த முறையைக் கொண்டு வந்தோம்.  அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் இப்பாக்ஸை எடுத்துச் செல்லலாம். அந்த அளவிற்கு பாக்ஸ் நன்றாக கவர் செய்யப்பட்டிருக்கும். இவர்கள் எங்கிருந்தும் ஆர்டர் செய்யலாம். அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு வந்து சேர்ந்து விடும். இதுவே எங்களின் தலையாய நோக்கம்.

கே: ரெட்பாக்ஸ் குழுவைப் பற்றிச் சொல்லுங்கள்?

குழு என்பது பலரை ஒற்றிணைக்கும் ஒரு வழி ஆகும். நாங்கள் இதை ஐந்து பேர் கொண்ட குழுக்களாகவே இணைந்து தொடங்கினோம். ஆரம்பத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி என்னவென்றால் எப்போதும் இதை நாம் ஒற்றுமையாகவே இருந்து செயல்படுத்த வேண்டும். எல்லோரும் ஒரே  பணியைப் பார்க்காமல் எங்களுக்குள் தனித்தனி துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதில் அனிதா அவர்கள் பைனாஸ் துறையிலும், பிரசன்னா அவர்கள் என்னுடனும், ஸ்வேதா, பிந்து இருவரும் மார்கெட்டிங் துறையிலும் இணைந்து கொண்டோம். இப்படி அன்று முதல் இன்று வரை இனி என்றும் தொடர்ந்து வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கே: இந்த சைனீஸ் உணவை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள்?

தரமும் சுவையும், உடலுக்கு தீங்கும் இன்றி கிடைக்கும் உணவை எப்படி மக்கள் மறுக்க நினைப்பார்கள். நாங்கள் எப்போதும் ஆர்டர் செய்து விட்டார்களே அவர்களுக்கு எப்படியும் நேரத்திற்கு ஏதோ ஒரு சுவையில் கிடைத்துவிட்டால் போதும் என்று ஒரு போதும் உணவைத் தயாரிக்க மாட்டோம். ஒரு முறை ஆர்டர் செய்து எங்களின் உணவை ருசித்து விட்டால் அவர்கள் எங்களின் ரெகுலர் கஸ்டமராகி விடுவார்கள். நிறைய பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்கள், பிரமுகர்கள் என்று எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆர்டர் செய்யும் பொழுது யார் என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் இணைய வழியில் பார்க்கும் போது நிறைய பிரபலங்கள் எங்களின் உணவை சாப்பிடுவதை அறிந்து கொள்ள முடியும்.

எங்களின் உணவு எப்படித் தரமானதாக இருக்கிறதோ, அதை விட நாங்கள் உணவைக் கொடுக்கும் பாக்ஸ் மிகவும் தரமானதாக இருக்கும். வாங்கும் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்ட பயணத்திலும் எவ்வித நெருடலும் இன்றி சகஜமாக சாப்பிடலாம்.

நிறைய பேர் எங்களிடம் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவ்வளவு குறைத்த விலையில் எப்படி இவ்வளவு விலையில் பாக்ஸ் உங்களால் கொடுக்க முடிக்கிறது என்று. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது தரம் தான் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து. அதை நாங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டே தான் இருப்போம்.

இந்தப் பாக்ஸை நாங்கள் கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப் பட்டோம். நிறைய பேரிடம் கேட்டோம். அதற்கு அதிக விலையைக் கூறினார்கள். ஆனாலும் எங்களின் நோக்கத்திலிருந்து ஒரு போதும் பிறழாமல் இதை செய்து முடித்தோம். இதைப் பாராட்டி நிறைய பேர் என்னிடம் நேரடியாக மற்றும் இணையத்தின் மூலமும் சொல்லியிருக்கிறார்கள். இப்படித்தான் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டதாக நினைக்கிறேன்.

கே: இத்துறையில் உள்ள சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்?

இங்கு சவால் இன்றி சாதிப்பில்லை. சவால்களை எதிர்கொள்ளாமல் இருந்தால் அந்த சாதிப்பில் எவ்வித பயனுமில்லை. அன்றாடம் நம் கண் முன்னே பார்க்கும் எல்லோரும் ஏதேனும் ஒரு தேடுதலை நோக்கி பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஏதேனும் ஒரு சவால்கள் இருக்கத்தான் செய்கிறது. இது மனித மாண்பு தான் இதைத் தவிர்க்க முடியாது. அந்த வகையில் இத்துறையிலும் சவாலுக்கு பஞ்சமில்லை.

உணவகத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்காது. உணவிற்கு உண்பதற்கென்று நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் உண்ண வேண்டும். சிலர் வேலை நிமிர்த்ததின் காரணமாக நேரம் தாழ்த்தி உண்பார்கள். அவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டாம். உணவு இடைவேளையின் போது அனைவரும் ஒரே நேரத்தில் உணவை ஆர்டர் செய்வார்கள். செய்பவர்கள் அனைவரும் ஒரே உணவை ஒரே மாதிரியாக ஆர்டர் செய்வதில்லை. இப்படி ஒரே நேரத்தில் பலதரப்பட்ட உணவை சரியான நேரத்தில் அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒரு சில அலுவலகத்தில் உணவு இடைவேளை என்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உணவை ஆர்டர் செய்யும் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போது அவர்கள் சாப்பிட முடியும். காலம் தாழ்த்தி கொண்டு சேர்த்தால் அவ் உணவு வீண் என்பதால் சமைப்பவர் முதல் பார்சல் செய்பவர், பில் போடுபவர், ஆர்டர் எடுப்பவர் என அனைவரும் இயந்திரம் போல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

அதே போல் பெரிய பெரிய ஐ.டி நிறுவனங்கள் பெரிய அளவில் உணவை ஆர்டர் செய்து விடுவார்கள். அவர்கள் அனைவரையும் உணவில் திருப்தி படுத்த வேண்டும். இப்படி எண்ணற்ற சவால்கள் நிறைந்தது தான் இந்த துறை.

கே: உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது.?

என் பெற்றோர் இருவரும் கடுமையான உழைப்பாளிகள். 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்றாலும் சற்றும் மனம் தளராமல் செய்வார்கள்.

ஒரு வேலையை எடுத்துக் கொண்டாலும் அதை முடிக்கும் வரை அதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.. சின்ன வயதிலிருந்தே அவர்களைப் பார்த்து வருகிறேன், அந்த வகையில் அவர்களின் ஒவ்வொரு அசைவையும்  என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து வருகிறேன்.

சாதாரணமாக தொடங்கி சலூன் தொழில் இன்று காணும் இடமெல்லாம் காட்சியளிக்கிறது என்றால் அதற்கு அவர்கள் பட்ட இன்னல்களும் வழிகளும் சொல்லால் சொல்லி விடமுடியாது.

அவர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பழகும் விதம் என்னை பல விதத்தில் கவர்ந்திருக்கிறது. அவர்களை போலவே நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.

என் பெற்றோர்களிடம் நானும் தொழில் தொடங்குகிறேன் என்ற உடன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இன்று வரை  என்னுடைய வாழ்விற்கு ஒரு கலங்கரை விளக்காய் இருந்து என் வாழ்க்கைக்கு நல்லதொரு ஒளியைக் கொடுத்து வருகிறார்கள்.

என்னிடம் ஆலோசனை கூறும் பொழுது கூட அவர்களின் அனுபவத்தைக் கூறாமல், உன்னால் இது முடியும் செய் என்று கூறி ஊக்கப்படுத்துவார்கள். அந்த வகையில் என்னுடைய பெற்றோர் என்னுடைய வளர்ச்சிக்கு பெரும் ஊன்று கோல் என்று சொன்னால் அது மிகையாகாது.

கே: உங்களின் எதிர்காலத்திட்டம் பற்றிச் சொல்லுங்கள்?

நாங்கள் இந்நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு சிறிய அளவில் தொடங்கினோம். ஆரம்பத்தில் மூன்று அவுட்லெட்டுடன் அமைந்த இந்நிறுவனம் ஓரே ஆண்டில் 50 ஆக உயர்ந்தது. தற்போது பார்த்தால் சென்னையில் இல்லாத இடங்களே எதுவும் இல்லை என்று கூறலாம்.

அடுத்து எங்களின் திட்டம் கோவை பகுதியில் கொண்டு  வர வேண்டும் என்பதாக இருக்கிறது, அதற்கான இடத்தை எல்லாம் தேர்வு செய்து விட்டோம். அங்கு வெகு விரையில் தொடங்க இருக்கிறோம்.

அதுபோலவே பெங்களுரூ, ஹைத்ராபாத், கேரளா, கொச்சின் போன்ற இடங்களின் அடுத்தடுத்த தொடங்க திட்டம் வைத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வரும் நாட்களில் தொடங்கி விடுவோம். தற்போது இது மட்டுமே திட்டமாக இருக்கிறது.

கே: இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?

நானும் ஒரு இளைஞன் தான். இது சாதிப்பு நிறைந்த உலகம். இங்கு சாதிக்க ஏராளமான வழிகள் இருக்கிறது.

புதிது புதிதாக சிந்தியுங்கள், உங்கள் சிந்தனைக்கு உருவம் கொடுங்கள், அந்த உருவத்தை நடைமுறைப் படுத்துங்கள் அது தான் உங்களின் வெற்றி.

ஒரு முறை தோல்வியா? அழுது விடுங்கள், மனதில் போட்டு அடக்கி வைத்து விடாதீர்கள், அது உன்னை அழுத்தி விடும். நீ சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் உன் இலட்சியத்தை நோக்கி பெருகெடுத்து ஓட வேண்டும். அப்போது தான் வெற்றியின் மகத்துவம் என்ன என்பதை உன்னால் முழுமையாக உணர முடியும்.

இந்த இதழை மேலும்

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!

“TEAM OJAS”2018 எலட்ரிக் ரேஸ் கார் சாதிப்பாளர்கள்

வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்கள், வேலூர்.

எண்ணிய முடித்தல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்

என்பது மகாகவி பாரதியின் வரிகளாகும் . ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கி பயணிக்கிறார் என்றால், அதில் அவருக்கு எடுத்த உடனே வெற்றி கிடைத்துவிடாது  அதற்கு முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சி சாதாரண முயற்சியாக இல்லாமல் சரித்திர முயற்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த உலகம் வெற்றியாளர்களைக் கொண்டாடும். அந்த வகையில் இம்மாணவர்கள் ஒரு சரித்திர கண்டுபிடிப்பாளர்களே.

இந்த உலகம் ஒரு சாதனைக்களம். இங்கு சாதிப்பதற்கும் சரித்திரம் படைப்பதற்கும் எண்ணற்ற இடங்களும் தடங்களும் இருக்கிறது. அதில் சரியாக பயணித்து வெற்றி பெறுபவர்களே வெற்றியாளர்களாக ஆகிறார்கள். அப்படிப்பட்ட சாதனைக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்.

இந்த உலகம் உங்களைக் கொண்டாட வேண்டுமென்றால் இந்த உலகத்தின் நன்மைக்காக நீங்கள் ஏதேனும் ஒன்றை செய்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் “TEAM OJAS”2018 எலட்ரிக் ரேஸ் கார் வடிவமைப்பை தயாரித்து சாதனைப்புரிந்திருக்கிறார்கள். அவர்களின் நேர்முகத்தை இனி காண்போம்.

கே: OJAS 2018 என்பது என்ன?

விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளும் பல பிரிவுகளும் இருக்கிறது. அதில் எல்லாத் துறையிலும் OJAS குழு உண்டு.  OJAS என்ற சொல்லுக்கு சக்தி வலிமை என்று பொருள். அதனாலே இப்பெயர் சூட்டப்பட்டது.  OJAS என்ற குழுவை 2012 ஆம் ஆண்டு தொடங்கினார்கள் தொடங்கிய சில நாட்களிலேயே எங்களின் கண்டுபிடிப்பை பரவலாக்க நினைத்தோம். அனைவரிடத்திலும் புதிய புதிய யோசனைகள், ஆலோசனைகள் வந்தது, அனைவரும் ஒன்று கூடி பரிசீலிரித்து ரேஸ் கார் தயாரிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தோம். ஆனால் நம்முடைய கண்டுபிடிப்பு எவ்வித சுற்றுப்புற மாசுபாடுகளும் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.  2012 முதல் இந்த ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காரை தயாரித்து வருகிறோம்.

கே: இந்த கண்டுபிடிப்பின் உரிய  நோக்கம் யாது?

இயற்கைக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கிறது. தற்போது இயற்கைக்கு மாறாக எத்தனையோ செயல்கள் நடந்து கொண்டுயிருக்கிறது. அதையே நாங்களும் செய்து மேலும் இயற்கையை மாசுபடுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

கார் ரேசிங் என்பது அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு பொழுது போக்கு விளையாட்டாக இருக்கிறது.  அப்படியிருக்கும் போது இதன் பார்வையாளர்களும் அதிகம் என்பதால் இதை விளம்பரப்படுத்த நிறைய செலவிடுவார்கள். ஒவ்வொரு காருக்கும் நிறைய எரிபொருள் தேவைப்படும். ஒரு வாகனம் என்றால் பெரிதாக தெரியாது. பங்கேற்கும் அத்துனை வாகனத்திற்கும் ஒரு மாதிரியான பெட்ரோல் தேவைப்படுகிறது.  அத்துனை வாகனங்களும்  ஒரே நேரத்தில் புறப்படும் போது நிறைய இயற்கை மாசுபாடுகள் நிச்சயமாக ஏற்படும்.

இதன் மூலம் வெளியேறும் காற்றால் இயற்கைக்கு மட்டும் இல்லாமல் மனிதர்களும் பல்வேறு பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படுகிறது.

இந்நிலை முற்றிலுமாக மாறவேண்டும் என்பதால் தான் மின்சாரத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வகையான ரேஸ் கார் தயாரித்தோம். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கவும் சுற்றுச்சுழல் சீரழிவிலிருந்து பாதுகாக்கவும் முடியும். எங்கள் நோக்கத்தை இதன் மூலம் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம்.

கே: இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உங்களுக்கு  ஏற்பட்ட மாறுதல்கள் என்ன?

பொதுவாக கல்லூரி என்றாலே படித்து பட்டம் பெற வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் எங்கள் கல்லூரியில் படிப்பிற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் கண்டுபிடிப்புகளுக்கும் கொடுப்பார்கள். அவர்கள் தரும் ஊக்கம், எங்களின் ஆர்வம் இரண்டும் சேர்ந்து தான் எங்களின் கண்டுபிடிப்பிற்கு பெரும் உந்து கோலாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை புத்தகப்படிப்பு மட்டும் எதிர்கால வாழ்க்கைக்கு துணைபுரியாது என்று நினைக்கிறேன்.

ஒரு காரின் வடிவமைப்பை தெரிந்து கொண்டு அந்தக் காரை எவ்வாறு உருவாக்க வேண்டும். எந்தப் பொருளை எந்த இடத்தில் பொறுத்துவது, ஒரு சிறிய ஸ்குரு தொடங்கி இன்ஜின் வரை எல்லாமே யாருடைய துணையுமின்றி நாங்களே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதால் எங்களால் எதையும் செய்ய முடியும் உத்வேகம் கிடைக்கிறது.

இது அப்போதைய கண்டுபிடிப்பிடிப்பிற்கு மட்டும் என்று நினைக்காமல் இதை நம் எதிர்கால வாழ்விற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தல் வேண்டும்.

கே: உங்கள் சாதிப்பினை அடுத்தகட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல உள்ளீர்கள்?

SAE – Society Automobile Engineers என்ற அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த அமைப்பில் புதியதாகத் தயாரிக்கும் கார்களை பதிவு செய்தல் வேண்டும். அவர்கள் அனுமதி அளித்த பின்னரே இப்படிப்பட்ட கார்கள் ரேசிங் செல்ல முடியும்

மாணவர்களால் புதிதாகத் தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்கு என்று ஸ்போர்ட் போட்டி ஒன்று நடைபெறும். இப்போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்திலிருந்து தாங்கள் தயாரித்த கார்களுடன் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். அவ்வாறு மாணவர்களின் கண்டுபிடிப்பினை பாராட்டி அவர்களை கௌரவம் படுத்தும் விதமாக பரிசுகளும், பாராட்டுக்களும், உந்துதலும் ஊக்கமும் கொடுத்து வருகிறார்கள். இவர்களின் ஊக்கம் எங்களைப் போன்ற சாதிக்கத்துடிப்பவர்களுக்கு ஒரு பெரும் மகிழ்வைக் கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.

கே: OJAS 2018  கடந்து வந்த பாதையைப்பற்றி சொல்லுங்கள்?

இந்தியாவில்  மாணவர்களுக்கு என்று பார்முலா மின்சார வாகன கண்டுபிடிப்பு என்று இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த குழு தொடர்ந்து ஏழாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது.   கோவையில் நடைபெற்ற பார்முலா கிரின் மற்றும் பார்முலா பாரத் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றிக் கனியை ருசித்தோம். இந்த வெற்றியை கொண்டாடிய கையோடு இத்தாலியில் நடைபெற்ற பார்முலா போட்டியில் பங்கேற்று சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றோம்.

எங்கள் அணியில் பணியாற்றும் ஒவ்வொருக்கென்று ஒரு தனிப் பொறுப்பைக் கொடுத்து அதை அவர்கள் கவனிக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டுவிடுவோம். அனைவரும் அவர்களுக்குரிய பணிகளை மிகவும் நேசித்து செய்வார்கள் இதனாலே எங்களால் எங்கும் எதிலும் வெற்றி பெற முடிகிறது.

எங்களின் முதன்மைன நோக்கமே  மோட்டார்ஸ்போர்ட் அணியாகத்திகழ வேண்டும் என்பது தான்.  எந்த அணியும்  எடுக்க துணியாத முயற்சியை எங்கள் அணி எடுத்தது.  முற்றிலும் மின்சாரத்தை மையமாகக் கொண்டு ஒரு காரை உருவாக்கினோம். இது எங்கள் வெற்றியின் மைல்கல் சாதனையாகும்.

2014 ஆம் ஆண்டு ஒஜஸின் வாகனம் என்ற பெயரை E 619 என்று பெயர் மாற்றப்பட்டது. இது எடையில் மிகக்குறைவாக இருந்தது. இதை ஜெர்மனியில் நடந்த பார்முலா பந்தயத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. இந்தக் காரை 2016 ஆம் ஆண்டு சில இயந்திர வேலைபாடுகள் செய்து 2017 ஆம் ஆண்டு முற்றிலும் மாறுபட்ட வாகனமாக TOR 17 என்று பெயரிட்டு கோவையில் நடந்த பார்முலா கிரின் பந்தியத்தில் உலா விட்டோம். இந்தப் போட்டியில் எங்கள் கார் பல விருதுகளைப் பெற்றது. இதை பெரும் சாதனையாக நாங்கள் கருதுகிறோம்.

கே: பெற்ற விருதுகள் குறித்துச் சொல்லுங்கள்?

வடிவமைப்பில் முதலிடம்

திட்டமிடலில் முதலிடம்

வேக வளர்ச்சியில்  முதலிடம்

வணிக திட்டமிடலில் இரண்டாமிடம்

ஒட்டுமொத்தமாக சிறந்த அணியாக முதலிடம் பெற்றது.

2018 ஜனவரியில் நடந்த பார்முலா கீரின் TOR 18 ஒட்டுமொத்தமாக முதலிடம் பெற்றோம்.

அதே போட்டியில் வடிவமைப்பிற்கு முதலிடம் கிடைத்தது. வேக வளர்ச்சியில் முதலிடம்.  வணிகத்திட்டமிடலில் இரண்டாம் இடம் பெற்றோம்.

கோவையில் நடைபெற்ற பார்முலா பாரத் எலட்ரிக் திட்டமிடலில் முதலிடம் , வணிக திட்டமிடலில் மூன்றாமிடம். வடிவமைப்பில ஆறாமிடமும் பெற்றோம்.

கே: இந்த வகையான ரேசிங் கார்களின் தயாரிப்பு முறைகள் குறித்து?

மற்ற கார்களைப் போலவே தான் இதன் தயாரிப்பு முறைகளும் இருக்கிறது. கார் பாகங்கள் கார்பன் ஃபையர் மூலமும், மேற்பாகங்கள் அனைத்தும் ISSI  1020 என்ற எஃகு மூலமும், பேட்டரி லத்தியம் பாலிமர் மூலமும் தயாரிக்கப்படுகிறது.

இயற்கை மாசுப்பாட்டிற்கு எள்ளவும் பிரச்சனை இல்லாத வண்ணம் இக்கார்கள் வடிவமைக்கப்படுகிறது.

கே: கூட்டு முயற்சியின் வெற்றியைப் பற்றி உங்களின் கருத்து?

இங்கு எதுவும் தனி ஒருவரால் சாதிக்க முடியும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் யாரானும் ஒருவர் நம்முடைய சாதிப்பிற்கு பெரும் உந்துகோலாய் இருந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

எங்கள் கல்லூரியும் இது போல தான். நிறுவனர் தொடங்கி ஆசிரியர், சக மாணவர்கள் என அனைவரும் எங்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கைக் கொடுக்கும் விதத்தில் எங்களை ஊக்கப்படுத்துவார்கள்.

அது போல OJAS குழுவின் பணியாற்றும் அத்துனை பேரும் மிக ஒற்றுமையாக ஒவ்வொருவரின் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு, அதன் படியே எங்களின் பயணம் தொடங்கும். எங்களுக்கு யாரும் தலைவர் இல்லை. இதில் பணியாற்றும் ஒவ்வொருவருமே தலைவர் தான். இந்த அடிப்படையில் இருப்பதால் மட்டுமே எங்களால் எதையும் சாதிக்க முடிகிறது. எப்போதும் நாங்கள் நினைப்பது ஒற்றுமையே பலம் என்பது மட்டும் தான்.

கே: உங்கள் OJAS குழுவின் வெற்றிக்காக உழைத்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

P Sandesh Reddy(Captain) Dhruv Jani(Vice Captain) Tript Agarwal(Technical head) Rasika Rawlley(ESO)

Kartik Jindal(Manager) Aditya Vachaspati (Head of Aerodynamics Department) Anup Kumar Dalei(Head of Transmission Department) Sunny Chalkapurkar(Head of Vehicle Dynamics Department) Nisarg,Mali(Head of Chassis Department)  Nishant Verma(Head of Composite Department)MayankKapoor(Head of Brakes Department) Chaitanya Mehta(Head of Battery Pack Department)Harshendu Pathak(Head of Low Voltage Department) Ritwik Shekhar(Head of High Voltage Department.)

Aerodynamics Department: J Sudhakaran, Kenil Patel, Yuvraj Sarout

Transmission Department:

Siddharth Sharan Akash Dhar

Vehicle Dynamics Department:

Shamith Shekhar Chassis Department: Ravi Ahuja Aniket Roy

Composite Department

N Sivachakravarthy Neeraj Meghani

Brakes Department

Sajal Garg Sachit Agarwal

Management Department

Ujwaldarshan Sushmit Bafna Harjit K SKshitij Banerjee, Amey Akash

கே: வெளிநாடுகளை விட நம்நாட்டில் கண்டுபிடிப்புகளின் நிலை எவ்வாறு உள்ளது?

வெளி நாடுகளில் படிக்கும் போது கண்டுபிடிப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் அவர்கள் படிக்கும் போதே பல்வேறு சாதனையை செய்ய அவர்களால் முடிகிறது.

வெளிநாடுகளை விட இந்தியாவில் தயாரிப்பு முறைகளில் ஒரு சில வேறுபாடு இருக்கிறது. ஒரு கார் தயாரிக்க வேண்டுமென்றால் அதன் உதிரிப் பாகங்கள் முழுவதும் நம்நாட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கும் போது நாமும் மற்ற நாடுகளைப் போல வடிவமைப்புகளையும், சிறந்த தொழிற்நுட்பங்களையும் மேலும் திறம்பட செய்ய முடியும்.

வெளிநாடுகளைப் போல கண்டுபிடிப்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் இன்னும் நாம் சில பொருட்களை வாங்க வேண்டுமென்றால் வெளி நாடுகளைத் தான் எதிர்பார்க்கிறோம்.

இந்த நிலை மாற வேண்டுமென்றால் நம்முடைய கண்டுபிடிப்பை மேலும் துரிதப் படுத்த வேண்டும். நம்நாட்டிலேயே எல்லா விதமான கண்டுபிடிப்புகளும் இருந்தால் தான் சாதிப்பை நம்மால் பலப்படுத்த முடியும்.

கே: எதிர்காலத் திட்டம் பற்றி?

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் உதிரிபாகங்களைக் கொண்டு ஃபார்முலா ரேசிங் காரை உருவாக்க வேண்டும். வாகனத்தின் எடையைக் குறைவான அளவில் தயாரிக்க வேண்டும்.

இவ்வாகனத்தின் தொழிற்நுட்பம் டூ ஸ்பிட் கியார்பாக்ஸ் கார்பன் பைபரால் வலுவாக்கப்பட்டு, சர்வதேச தரம் வாய்ந்த வேக வளர்ச்சி மற்றும் தடுப்பு சாதனங்களின் இவ்வண்டியை சர்வதேச பந்தியங்களில் உள்ள அதிநவீன வாகனங்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருக்கிறது.

கே: எதிர்கால இன்ஜினியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

இவ்வுலகம் இயந்திரமாக்கப்ட்ட உலகம். இன்னும் சில ஆண்டுகளில் எல்லாவற்றிலும் இயந்திரம் என்ற நிலை வந்து விடும்.

வெறும் புத்தகத்தைக் படித்து, அதன் மூலம் பெறும் அறிவு என்பது நிலையான அறிவுயற்று. எதையும் தீர்க்கமாக செய்முறை மூலம் கற்றுக் கொள்ளும் பாடம் எப்போதும் மனதில் நீங்காத ஒரு வளர்ச்சியாக இருக்கும்.

இவ்வுலகம் ஒரு அறிவுப் புதையல் தேட தேட தினமும் ஏதேனும் ஒன்று புதிதாக கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்பதை மட்டும் மனதில் நிறுத்தி உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

கே: உங்களின் வெற்றியை விஐடி பல்கலைக்கழகம் எப்படி பார்க்கிறது?

நாங்கள் இன்று ஒரு சாதனையாளராக இருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மைக்காரணம் எங்கள் பல்கலைக்கழகம் தான். எங்களை ஒரு பெரும் கண்டுபிடிப்பாளராக மாற்ற எங்களுக்கு தேவையான அத்துனை உதவிளையும் செய்து கொடுக்கிறது.

எங்களுக்கு மிகுந்த சுதந்திரம் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். எல்லா விதமான முயற்சிக்கும் ஒரு ஏணிப்படியாக இருந்து எங்களை நல்வழிப்படுத்துகிறார்கள். மாணவர்களின் நலனில் அக்கறையும் பற்றும் கொடுத்து உந்து சக்தியாக செயல்படுத்துவதில் எங்கள் நிறுவனத்திற்கு இணை எங்கள் நிறுவனமே.

திறமைன மேலாண்மை, அனுபவமிக்க ஆசிரியர்கள் அவர்களின் வழிகாட்டுதல்கள் போன்றவை தான் எங்கள் வெற்றிக்கு காரணமாக நினைக்கிறோம்.

புதிய புதிய கண்டுபிடிப்புகள்,புதிய புதிய ஆய்வுகள் போன்றவை செய்து கொண்டேயிருக்க வேண்டும் அப்போது தான் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த இதழை மேலும்

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!

சிற்ப கலா மாமணி ராமகிருஷ்ண ஸ்தபதி

ஸ்ரீ பாலாஜி சிற்பக் கலைக்கூடம்

புளியம்பாக்கம், வாலாஜாபாத்

காஞ்சிபுரம்.

 

மலைகள்  இறைவன் செயலென்றால்

சிலைகள் சிற்பி திறனன்றோ

பருத்தி இறைவன் பசியென்றால்

உடைகள் நமது செயலன்றோ…

என்ற வரிகள் கவிஞர் கண்ணதாசனின் கவித்துவமான வரிகளாகும். இக்கவிதையில் ஒவ்வொரு மனிதனும் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அவருக்குரிய திறமைகளை அவரவர்கள் வளர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால் அவர்கள் வாழ்க்கையில் எப்படியும் வெற்றிப் பெற்று விடுவார்கள். அந்த வகையில் இவர் தனக்கென்று தேர்ந்தெடுத்தத் துறையில் திறமையை வளர்த்து இன்று தமிழகம் முழுவதும் சாதித்து வரும் சாதனையாளர்.

எளிமை, நேர்மை, உண்மை இதுவே இவரின் அடையாளம், எடுக்கும் செயலை திறம்பட முடிப்பதே இவரின் தனித்துவம்.

இவரின் கை வண்ணத்தால் இன்று எத்தனையோ கோயில்களின் கருவறையில் இறைவன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். தலைசிறந்த ஸ்தபதிகளின் ஒருவரான சிற்ப கலையின் பெருமை மிக்க அடையாளமாய் விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ள ஸ்ரீ பாலாஜி சிற்பக் கலைக்கூடத்தின் நிறுவனர் சிற்ப கலா மாமணி திரு. ந.ராமகிருஷ்ண ஸ்தபதி அவர்களின் நேர்முகம்  இனி நம்மோடு….

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் கோயில் திருமாகாளம் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தேன். இந்து விஸ்வகர்மா பாரம்பரியத்தை சேர்ந்த என்னுடைய குடும்பம் அடிப்படையில் கோயில் திருப்பணி வேலைகளைச் செய்து வரும் குடும்பமாகும். என் முன்னோர்கள் வழித் தொட்டு அனைரும் இத்தொழிலை மட்டுமே செய்து வருகிறோம்.  என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி ஆவர். நாங்கள் மூவரும் எங்கள் ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் தான் படித்தோம். எனக்கு ஏழு வயது இருக்கும் போது என்னுடைய தந்தை காலமாகிவிட்டார்.  குடும்பத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் இறந்துவிட்டார் என்றால் அந்தக்குடும்பம் எத்தகைய சூழலை அடையுமே அதை நாங்கள் சந்தித்தோம். ஆனாலும் என்னுடைய தாயார் எங்களைப் படிக்க வைக்க முனைந்தார். ஆனாலும் என்னால் பள்ளிக்கல்வி வரை தான் படிக்க முடிந்தது.

எனக்கும் சிறு வயதிலிருந்தே எங்கள் தொழில் மீது தீராத ஒரு பற்றுதல் இருந்து வந்தது. என்னுடைய தந்தையின் சகோதரர் எங்கள் குலத் தொழிலை எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்  என்று விரும்பினார். இதனால் என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். என்னோடு எங்கள் குடும்பமும் பெங்களூருக்கு வந்துவிட்டார்கள். புதிய தொழில் என்றால் ஒருவித பயமும் தடுமாற்றமும் இருக்கும். ஆனால் எனக்கு அவ்வித பயமில்லை. காரணம் சிறு வயதிலிருந்து என் குருதியோடு கலந்த தொழில் என்பதால் எனக்கு ஆர்வம் வெகுவாக இருந்தது. என்னுடைய சித்தப்பா தான் என்னுடைய இத்தொழிலுக்கு ஆஸ்தான குருவாக இருந்தார். அப்போது தான் சிருங்கேரி என்னும் ஊரில் பெரிய ராஜகோபுரம் ஒன்றை கட்டுவதற்கு என்னுடைய சித்தப்பா அதற்கு உரிமம் பெற்றிருந்தார். அப்போது அவருக்கு உதவியாக நானும் உடனிருந்தேன். இதுதான் என்னுடைய முதல் பணி என்று சொல்வேன். அப்போது நான் கற்றுக் கொடுத்தது போதும் இவன் மேலும் நன்றாக வளர வேண்டும் என்று கருதி என்னுடைய சித்தப்பா மாமல்லபுரத்தில் இயங்கி வரும் அரசு சிற்பக்கலைக் கல்லூரியில் நான்காண்டு பட்டயப்படிப்பில் சேர்த்து விட்டார்கள். இக்கல்லூரி என்னை மேலும் பண்படுத்தியது. சிற்ப சாஸ்திரங்கள் அறிந்து கொண்டேன். கட்டிடக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன் இவ்வாறே என்னுடைய பயணம் தொடர்ந்தது.

கே: சென்னைக்கு வந்தது குறித்துச் சொல்லுங்கள்?

நான்காண்டுபட்டயப்படிப்பில் முதல் மாணவனாகத்  தேர்ச்சிப் பெற்று, ஓரளவிற்கு சிற்பக் கலை சார்ந்த அத்துனை சாஸ்த்திரங்களையும் கற்றுக் கொண்டேன். அப்போது என்னுடைய மாமா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பெரிய ஸ்தபதியாக இருந்த  அவர் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள் மேலும் தருமபுர ஆதினம், திருவாடுதுரை ஆதினம் ஆகிய ஆதினத்துக்கு ஆஸ்தான ஸ்தபதியாக இருந்தார்கள். அவர்களுடன் ஒரு ஆறுமாதம் நானும் பணி செய்தேன்.

அடுத்த நான் படித்த கல்லூரியின் முதல்வர் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள், இவர் எனக்கு நெருங்கிய உறவினரும்  ஆவார். இவர் டெல்லியிலுள்ள இராமகிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் உத்திரசாமிமலை என்னும்  ஒரு பெரிய முருகன் கோயில் அதுவும் முருகனின் ஆறுபடை வீட்டின் ஒன்றான சுவாமி மலை போல் கட்டப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதை கல்லூரியின் முதல்வர் அவர்கள் செய்து தருவதற்கு ஒப்புக் கொண்டார்கள். பெரிய கோயில் என்பதால் அதற்கான கல் எங்கு கிடைக்கும் என்று பார்க்கும் போது சென்னை புறநகர் பகுதியிலுள்ள வாலாஜாபாத்திற்கு அறுகாமையில் பட்டுமலைக்குப்பம் எனும் கிராமத்தில் கிடைக்கும்  என்று தெரியவந்தது. அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பு யாரெல்லாம் ஸ்தபதியாகவும், உதவி ஸ்பதியாகவும் இருக்க போகிறார்கள் என்று ஆலோசனை மூலம் முடிவு செய்தார்கள். அதன்படி  என்னை உதவி ஸ்தபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

அதன்படி 1965 ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் மூன்று அக்கோயிலுக்கான திருப்பணிகள் சுமார் 70 சிற்பியர்களைக் கொண்டு நடைப்பெற்றது. அதன் பிறகு டெல்லிக்குச் சென்று அந்தக் கோயில் சார்ந்த திருப்பணிகளைச் செய்ய மூன்று ஆண்டுகள் அங்கேயே தங்கி பணிகளைச் செய்து முடித்தோம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் முன்னிலையில் மஹாகும்பாபிசேகம் நடைபெற்றது. டெல்லி சென்று சென்னை திரும்பிய பிறகு மஹாராஷ்ட்டிரா மாநிலம் பம்பாயில் திருச்செம்பூர் நகரில் முருகன் ஆலய கருங்கல் திருப்பணியை சுமார் எட்டு ஆண்டு காலம் நிர்மாணித்து முடித்துக் கொடுத்துள்ளேன். மேலும் எனக்கு மீனாட்சி சுந்தரம், மகேஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில் பயின்று தற்பொழுது என்னுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

கே: சிலைகள் மற்றும் கற்கோயில்கள் செய்வதற்கான கற்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ஒவ்வொரு சிலைகளுக்கும் என்று தனித்தனியே கற்கள் இருக்கிறது.  அதில் முதலாவது பாலசிலை, யவன சிலை, விருத்தசிலை, நபும்சகசிலை என்று வகைப்படுத்தலாம்.

ஒரு சிலை செய்ய  வேண்டும் என்று முடிவெடுத்தப்பின்னர் கற்கள் இருக்கும் இடத்திற்கு உளியும், சுத்தியலையும் எடுத்து சென்று விடுவோம். அப்போது  தேவையான கற்களை முதலில் தட்டிப் பார்ப்போம். அதில் எவ்வளவு சிலிக்கான் இருக்கிறது என்றெல்லாம் சரிபார்ப்போம். நாங்கள் எதிர்பார்த்த வகைகளில் சிலை கற்கள் இருந்தால் அதைத் தேர்ந்தெடுத்துவிடுவோம். அதன் பிறகு கல்லில் ஒரு விதமான ஓசை வரும். சிலை செய்வதற்கு இந்த ஓசை தான் முதன்மையானது.

மெதுவாக உளியை கொண்டு அடித்தாலும் வெண்கல பாத்திரத்தின் ஓசையும், கோயில் மணியின் ஓசையும்  அதில் கேட்கும். இப்படி ஓசை வந்தால் இக்கல்லில் பிராணன் இருக்கிறது என்றும் அதுதான் சிலை செய்வதற்கு சரியானதாக இருக்கும் என்பதை கருதுவோம்.

கல்லில் கருப்பு நிறத்தில் கோடுகளோ அல்லது வெடிப்புகளோ ஏதேனும் இருந்தால் சிலை முடியும் தருவாயில் இருந்தாலும் அந்தக் கல்லினை நீக்கிவிட்டு புதிய கல்லில் தான் மீண்டும் அந்த சிலை செய்யப்படும். இவை அனைத்தும் என்னுடைய முன்னோர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதை என்றும் நாங்கள் மீறாமல்  அதன் வழியே பின்பற்றி இன்று வரை சிற்பங்களை வடிவமைத்து வருகின்றோம்.

கே: சாஸ்த்திரங்கள் நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள்?

எங்கள் தொழிலின் சிறப்புப் பெற்ற நூல் சிற்ப சாஸ்த்திரம் ஆகும். சாஸ்த்திரங்கள் 18 வகையாக இருக்கிறது. அதில் காஸ்யபம், மயமதம், மானசாரம், விஸ்வகர்மீயம், சில்பரெத்தினம், ஆகிய ஐந்து நூல்கள் முக்கியமானது. கர்ப்பக்கிரகத்திற்கு என்று சில அளவு முறைகள் இருக்கிறது.

சிலைகளை வடிவமைக்க கூறும் ஆலய கர்த்தாவானவர் அளிக்கும் அளவு முறையையும் எந்த சிலை செய்ய வேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு அவர்கள் கூறிய சிலை கருவறைக்கு ஏற்ற உயரத்தில் செய்வதற்கு கர்த்தா நட்சத்திரத்தையும் சுவாமி நட்சத்திரத்தையும் எடுத்துக் கொண்டு ஆயாதி சிற்ப சாஸ்த்திரத்தின் அடிப்படையில் பொருத்தங்களை கணித்துத்தான் அச்சிலையை வடிவமைப்போம்.

ஒவ்வொரு சிலைக்கும்  ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரம் அனைத்தும் சாஸ்த்திரத்தில் மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. விநாயகர் என்றால் சதய நட்சத்திரம். அம்மாள் போன்ற பெண் தெய்வங்களுக்கு பூரம் நட்சத்திரம், சிவன் என்றால் திருவாதிரை நட்சத்திரம், மஹாவிஷ்ணு திருவோணம் நட்சத்திரம்,  காளிதேவி என்றால் கார்த்திகை நட்சத்திரம்,  மாரியம்மன் என்றால் மஹம் நட்சத்திரம், அனுமர் என்றால் மூலம் நட்சத்திரம்,  என்றும்   இப்படி நட்சத்திர பெயர் முறைகள் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தின் படியே சிலைகளை வடிவமைப்போம். சிற்ப சாஸ்த்திர நூல்கள் எங்கள் தொழில் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

கே: ஒரு சிலைக்கு முகம் வடிவம் எப்படி கொடுக்கிறீர்கள்?

ஓவியமானாலும் சரி, சிற்பமானாலும் சரி முகம் தான் மிகவும் முக்கியமான ஒன்று. சாந்தம் நிலை என்றால் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். அகோர நிலை என்றால் சற்று கோபமாக இருக்க வேண்டும் எப்படி சிலை கேட்கிறார்களோ அதுபோல வடிவமைத்துக் கொடுத்து வருகிறோம்.

ஒரு சிலை செய்வதற்கு முன் அதை பொது அளவாக ஒன்பது பாகங்களாகப் பிரிந்து கொள்வோம். இதற்கு நவாம்ஸம் என்று பெயர் ஒவ்வொரு சிலையும் 124 அம்சத்தில் செய்யப்படலாம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு அம்சங்கள் இருக்கிறது.

ஆண்தெய்வ சிற்ப்பம் என்றால் ஒரு அம்சம், பெண் தெய்வம் என்றால்  ஒரு அம்சம் என பிரிவுகள் இருக்கிறது. சாஸ்த்திர ரீதியாக உத்தம தெசதாளம், மத்யம தெசதாளம், கன்யசததாளம், என்றும் உத்தம தெசதாளம் என்றால் 124 அம்சமாகவும் மத்யம தெசதாளம் என்றால் 120 அம்சமாகவும் கன்யச தெசதாளம் என்றால் 116 அம்சமாகவும் சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உத்தம தெசதாளத்தில் சிவம் மற்றும் விஷ்ணு விக்ரஹங்களும் மத்யம தெசதாளத்தில் பார்வதி முதலான பெண் தேவதைகளையும் கன்யதசதளாத்தில் முருகன் மற்றும் சூரியன் முதலான தேவதைகளை செய்ய வேண்டும்.

கே: ஆண் தெய்வ சிலைக்கும், பெண் தெய்வ சிலைக்கும் உள்ள உடல் வேறுபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்?

அனைத்துக் கோயில்களிலும் ஆண், பெண் சிலைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அத்துனை சிலைகளும் ஒன்றைப் போலவே இருப்பதில்லை. ஏதேனும் ஒன்று வேறுபாடு காணப்படும்.

ஆண் தெய்வ சிலையை உடம்பு ரிஷப முகம் என்று சொல்வார்கள். முகத்தின் அளவும் மார்பின் அளவும் ஒன்றைப் போலவே இருக்க வேண்டும். ஆண் என்றால் வலிமையான உடல் அமைப்புடன் காணப்படும்.

அதுவே பெண் உடல் அமைப்பு என்று பார்த்தால் உடுக்கை போன்று அமைப்புடன் இருக்க வேண்டும். சிங்கத்தின் உருவத்தைப் போலவும், ஒவ்வொரு உடல்பாகமும் ஒரு பொருளைக் குறிப்பதாக இருக்கிறது. உதராணத்திற்கு கைகள் என்றால் பனங்கிழங்கு போன்றும், கண் என்றால் மீன், வில் போன்ற வடிவில் இருக்க வேண்டும். பெண் என்றால் மென்மையானவர் என்றால் அவர்களுக்கு அவ்வாறு தோற்றப் பொலிவுடன் வடிவமைக்க வேண்டும்.

கே: நம் முன்னோர்களே தெய்வம் என்று கருதும் போது, சில தெய்வங்களுக்கு பல கைகள், பல முகங்கள் கொடுக்கப்படுகிறதே அதற்கான காரணங்கள் என்ன?

அதற்கு காரணம் தன்னை விட தனக்கு மேல் ஒரு தெய்வ சக்தி இருக்கிறது என்று அனைவரும் நினைக்கிறார்கள். அது மனிதனைப் போல் அல்லாமல் சற்று மாற்று உருவம் தேவைப்படுகிறது. அது தான் ஒரு காரணம்.

ஒவ்வொரு கடவுளுக்கும் பல உருவங்கள் இருக்கிறது. ஒரு சிலர் ஒரு தெய்வத்தை சாந்தமாக பாவித்து வணங்குவார்கள். மற்றொருவர் அதற்கு சற்று உக்கிரமாக வடிவத்தைக் கொடுப்பார்கள். மனிதர்களை விட சக்தி மிகுந்த உருவத்தை தான் நாம் தெய்வமாக ஏற்றுக் கொள்வோம்.  காளி போன்ற பெண்தெய்வம் ஆகோர தோற்றமுடையது. அதற்க்கு சாதாரணமாக இரண்டு கைகளுடன் இருந்தால் பார்ப்பதற்கு அவ்வளவு அச்சுறுத்தலாக இருக்காது, அதே 16 கரங்களுடன் ஒவ்வொரு கரங்களிலும் ஒவ்வொரு பொருள் இருக்கும். அதைப் பார்ப்பதற்கே பயத்தைக் கொடுப்பதாக காணப்படும். தவறு செய்பவர்கள் கூட கடவுள் நம்மை தண்டித்து விடுவார் என்ற பயத்தால் தவறு செய்வதைத் தவிர்த்து விடுவார்கள்.

வில், அம்பு, சங்கு, சக்கரம் இன்னப்பிற பொருட்கள் எல்லாமே காணப்படும். பிரம்மா  போன்ற தெய்வ உருவத்திற்கு நான்கு முகங்கள். இது எதற்கு என்று பார்த்தால் நான்கு வேதங்களையும் குறிக்கும் விதமாக காணப்படுகிறது. இது அனைத்தும் ஆகம தத்துவத்தின் படியே கடைப்பிடித்து வருகின்றன.

கே: இக்கலையிலுள்ள சவால்கள் என்ன? அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

சவால்கள் நிறைந்த உலகத்தில் எதையும் சவால்களுடன் பார்த்தால் அதை எதிர்கொள்வதில் சற்று தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த சவாலை சமாளிக்கும் ஆற்றல் இருந்தால் எவ்வளவு பெரிய வலியையும் வலிமையாக்கலாம். இது தான் என்னுடைய தாரக மந்திரம்.

இத்தொழில் மற்ற தொழில்கள் போல் அல்லாமல் முற்றிலும் வேறுபட்டது தான். சில வேலைகளை எல்லோரும் செய்யலாம். ஆனால் இந்த சிற்பக்கலையை முழுமையாகக் கற்றுக் கொண்டால் தான் இதில் வேலை செய்ய முடியும். சில சமயங்களில் வேலைக்கான ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் எங்களிடம் பணியிலுள்ள சிற்பிகள் கைத்தேர்ந்தவர்கள் ஆகையினால் எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளையும் செல்வனே எதிர்கொள்கிறோம்.

கோயில் பணி என்பது ஒரு குடும்பம் சார்ந்ததாக மட்டுமே இருக்காது. ஒரு ஊர் சார்ந்து, ஒரு நகரம் சார்ந்து இருக்கும். அப்படி இருக்கும் போது வணங்க வரும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி இருக்க வேண்டும். அதற்கு எவ்வளவு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

கே: பண்டைய கால கற்கோயிலுக்கும், தற்போதைய கற்கோயிலுக்கும் ஏதேனும் வேறுபாடு இருப்பதாக நினைக்கிறீர்களா?

கோயில்கள் என்றாலே சிற்ப சாஸ்த்திரம் வழியை மட்டுமே தான் அப்போதும், இப்போதும், எப்போதும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கர்ப்பக்கிரஹத்தை கருவறை என்பார்கள். அர்த்த மண்டபம் என்பது கருவறைக்கு வெளியே இருப்பது, மகாமண்டபம் என்பது பெரிய அளவுடையது, அங்கு வணங்க வருபவர்கள் அமர்ந்து கொள்ளலாம்.

கர்ப்பக்கிரஹ அளவில் அர்த்த மண்டபம் அறை, முக்கால், முழு அளவில்  இருக்கலாம். மஹா மண்டபம் கர்பக்கிரஹத்தை போன்று மூன்று  மடங்கு பெரிதாக இருக்கலாம். சோபான மண்டபம் தூண் போன்றவை இருக்கும். நிருத்த மண்டபம் நாட்டிய நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தைக் குறிக்கும். இப்படித்தான் அனைத்துக் கோயில்களையும் ஒன்றைப் போலவே வடிவமைக்கப்படுகிறது.

மனித உடலை போன்ற அமைப்பைத்தான் கோயிலாக வடிவமைக்கப்படுகிறது. கோயிலின் மேல் உள்ள விமானங்கள் மாறுபடலாம். ஆனால் கோயிலின் வடிவமைப்பு எப்போதும் சாஸ்த்திரம் படியே இருக்கும்.

கே: சாதாரண ஒரு கல்லை சிற்பமாக்கி அதைத் தெய்வாக்கி மக்கள் அனைவரும் வணங்கும் பொழுது உங்களின் மனநிலை எப்படியிருக்கிறது.

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அது என்னுடைய இந்தத் தொழிலுக்கு மிகவும் பொருந்தும். அப்படிருக்கும் போது மனதுக்கு ஆனந்தமாகவும், மனநிறைவாகவும் இருக்கும். ஒரு விக்ரஹம் செய்து முடித்தவுடன் அதோடு முடிவதில்லை. அது  மக்கள் வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சிப் பெற வேண்டும், அதை செதுக்கும் சிற்பியும் வளர வேண்டும், கிராமமும் வளர வேண்டும். இப்படி எல்லாத்தையும் பார்க்க வேண்டும்.

கோயில் இல்லாத ஊர் பாழ் என்று சொல்வார்கள், அப்படியிருக்கும் போது எவ்வளவு நுட்பமாக செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சிலையை செய்தவுடன் ஜலாதிவாசம், தன்யாதிவாசம், புஷ்பாதிவாசம், ஷீராதிவாசம் இப்படி நிறைய பூஜைகள் இருக்கிறது. சிலையை ஆர்டர் செய்தவர்கள், அதை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் முன்னர் இங்கேயே மாத்ரு பூஜை ஒன்றை செய்வோம். ஆர்டர் செய்தவர்களே பூஜைக்கு தேவையான அத்துனை பொருட்களையும் வாங்கி வந்து விடுவார்கள்.  அதைக் கொண்டு அத்துனை பூஜைகளும் செய்து  முடித்துத் தான் விக்ரஹங்கள் எடுத்துச் செல்லப்படும்.

கோயிலுக்கு சென்றவுடன் சிலையை 48 நாட்கள் ஜலாதிவாசம் செய்வித்து அடுத்த 48 நாட்கள் தான்யாதிவாசம், அடுத்த புஷ்பாதிவாசம், பிறகு ஷீராதிவாசம் அடுத்து தனாதிவாசம் செய்வித்து இறுதியாக ஸ்தபதி ஆனவர் விக்ரஹத்திற்கு தங்க ஊசி மற்றும் வெள்ளி சுத்தியலைக் கொண்டு கண்திறத்தல் சுபநிகழ்ச்சியை செய்விப்பார்கள். இதை நேத்ரோன்மிலனம் என்று சொல்வார்கள். இவ்வாறு கண் திறத்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமு விக்ரஹம் கண்ணாடியில் முகம் பார்த்து பிறகு கன்றுடன் கூடிய பசு, சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள், யாவரும் பார்த்து முடித்த பின்னர் விக்ரஹங்களுக்கு தீப ஆராதனைகள் நடைபெற்று கடைசியாக சயனாதிவாசத்தில் செய்வித்து பிறகு விக்ரஹத்தை கருவரைக்குள் எடுத்துச் சென்று மந்திர ரூபமான யங்திரம் நவரத்தினம் ஆகியவற்றை விக்ரஹத்திற்கு கீழ் வைத்து திரிபந்தனம் இட்டு பிரதிஷ்ட்டை செய்து அஷ்டபந்தனம் செய்விக்கப்படும்.

கே: நீங்கள் கடந்த வந்த இந்த வாழ்க்கைப் பயணத்தில் உங்களால் மறக்க முடியாத சம்பங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

என் வாழ்க்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு சிலையும் செய்யும் போது மனதில் மிகுந்த பயபக்தியோடு தான் செய்திருக்கிறேன்.

ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 33 அடியில் விஷ்வரூப அனுமன் விக்ரஹம் (27 அடியில் விக்ரஹமும் 6 அடியில் ஆதாரபீடமும்) செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த விஸ்வசம்ரண மாருதி சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் மூலமாக ஆர்டர் பெற்று விக்ரஹம் செய்வதற்கு தேவையான 33 அடி நீளம் கொண்ட ஒரே கல்லினை சிருதாமூர் என்ற கிராமத்தில் உள்ள கல் குவாரியில் தேர்ந்தெடுத்து எங்களது சிற்பக்கலைக் கூடத்திற்கு எடுத்து வந்து அவர்கள் எண்ணியது போல் சிலையை அழகுபட செய்து கொடுத்தது எப்போது நினைத்தாலும் என் மனதில் நீங்காத ஒரு நினைவுகள் இந்த சிலையை வடிவமைத்தது தான்.

கே: சமீப காலமாக நம் பாரம்பரிய சிலைகளைத் திருடப்பட்டு, அச்சிலைகளை மீட்கப்பட்டு வருகிறது, அது பற்றிச் சொல்லுங்கள்?

அப்படி கடத்தப்படும் சிலைகள் எதுவும் தெய்வமாக வணங்க எடுத்துச் செல்வதில்லை. பண்டைய காலத்தில் செய்யப்படும் சிலைகள் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது என்பதால் அது விலை மதிப்பு மிக்கது.

ஆகவே அச்சிலையை திருடுபவர்கள் அதனை விற்பனை செய்து விடுவார்கள். அல்லது வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியகத்திற்கு விற்பனை செய்து விடுகிறார்கள். இதற்காகத்தான் சிலைகள் திருடப்படுகின்றன. தற்போது நிறைய பழையான சிலைகள் மீட்கப்பட்டு வருவது  சிறப்பான ஒன்று தான்.

கே: எதிர்காலத்தில் இது போன்று ஒற்றை வடிவமைக்க வேண்டும் என்று எதையாவது நினைத்ததுண்டா?

அப்படி நிறைய இருக்கிறது. கிராம தேவைகள் என்று சொல்வார்கள். அதற்கு என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இத்தனை காலம் ஆதாரம் இல்லாமல்  தான் அச்சிலைகளை செய்து வருகிறார்கள். அதற்கு ஒரு ஆதாரம் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக கருப்பசாமி தெய்வம் ஏன் ஆக்ரோசமான தெய்வமாகவே கருதப்படுகிறது. அது ஏன் கையில் வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறது, போன்றவை பார்க்க வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இதற்கு இதுதான் ஒரு வடிவம் என்று முறைப்படுத்த வேண்டும்.

நிறைய கோயில்கள் சென்று ஒவ்வொரு கடவுளையும் பார்த்து, அதில் உள்ள சுவாமி வடிவமைப்பு, ஆயுதங்களை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன். சேகரித்த தகவல்களை அனைத்தையும் ஒன்று திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும். இது தான் என்னுடைய கனவாக இருக்கிறது.

கே: பெற்ற பட்டங்கள் குறித்து?

திறமையும் புதுமையும் இருந்தால் பட்டங்கள் நம்மை வந்து தானாவே சேரும் என்பதை நம்புவன் நான். அப்படி நிறைய பட்டங்கள் வாங்கியிருக்கிறேன். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மூலமாக சிற்ப கலாமாமணி விருது, ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சார்ய குரு ஸ்வாமிகள் ஆதீனத்தின் மூலம் எழில் சிற்ப மாமணி விருது, அக்காடமி ஆஃப் யுனிவர்சல் குலோபல் பீஸ் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம், சுதேசி பத்திரிக்கை அமைப்பு மூலம் தர்மோ தாரண விருது மற்றும் தமிழக அரசின் பூம்புகார் கலைக்கூடம் வழங்கிய 2016-2017 ஆம் ஆண்டிற்கான வாழும்பலைப் பொக்கிஷம் விருதினையும் பெற்றுள்ளேன்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

சாதிக்க வேண்டும்  என்று முடிவெடுத்துவிட்டால் உங்களுக்கான துறையை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களால் முடிந்தளவிற்கு உழைத்திட வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும.

நம் உடலில் அனைத்து விதமான சக்தியும் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வந்து சிந்தித்து செயல்பட வேண்டும். அவ்வாறு இருந்தால்  வெற்றி பெற்று விடலாம்.

இந்த இதழை மேலும்

எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…

திரு. S.M. உதயகுமார்

இயக்குநர், SPIRO ACADEMY பயிற்சி நிறுவனம்

சென்னை மற்றும் நாமக்கல்

சென்றதினி மீளாது மூடரே நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து

குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடியின் புற்றிருந்து வாழ்வீர்

தீமையெல்லாம் அழிந்து போகும், திரும்பி வாரா…

இவ்வரிகள் மகாகவி பாரதியின் தன்னம்பிக்கை உணர்த்தும் தத்துவ வரிகளாகும். இவ்வரியை தனது வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வாழ்ந்து வரும் தன்னம்பிக்கையாளர்.

வெற்றி என்பது அரிதல்ல… எளிது… ஆனால் அதற்கு நம்பிக்கை என்னும்  போராட்ட குணமும், முயற்சி என்னும் தன்னம்பிக்கை குணமும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற தத்துவத்தை தனது மாணவர்களுக்குப் போதித்து வரும் நல்லாசான்.

கனவு காணுங்கள் என்று சொன்னார் கலாம் அவர்கள்.. அந்தக் கனவை நனவாக்க என்னிடம் வாருங்கள், உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்கிக் காட்டுகிறேன் என்று நாளும் நம்பிக்கை விதையை மாணவர்கள் மனதில் விதைத்து வரும் SPIRO ACADEMY பயிற்சி நிறுவனத்தின் இயங்குநர் திரு. S.M. உதயகுமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

கே : உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நாமக்கல் மாவட்டத்திலிருந்து பத்து கல் தொலைவிற்கு அப்பால் உள்ள புதன் சந்தைக்கு அருகில் S. உடுப்பம் என்னும் சிறிய கிராமத்தில் தான் பிறந்தேன். இவ்வூருக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில்  தான் என்னுடைய தொடக்கக்கல்வி முதல் உயர்நிலை கல்வி வரைப் படித்தேன். நன்றாகப் படித்ததால் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப் பெற்றேன். இதனால் சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம் பொறியியில் கல்லூரியில் பி. இ. கம்யூட்டர் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

கே: படித்து முடித்தவுடன் உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

எனது பெற்றோர் விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு என்னையும் படிக்க வைத்தார்கள். கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் இனியும் பெற்றோர்களிடம் பணம் வாங்கி படிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே 2005 ஆம் ஆண்டு கல்லூரியை முடித்தவுடன் ஓரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியாளராக வேலையில் சேர்ந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் என்னுள் எடுத்துக் கொண்ட தீர்மானம்  என்னவென்றால் நாம் செய்யும் எந்தப் பணியும் இழிவானது அல்ல, செய்யும் எல்லா வேலையும் தெய்வமாக நினைத்துப் போற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் எனக்குள் சின்ன வயதிலிருந்தே சம்பளம் வாங்கும் இடத்தில் இருப்பதை விட கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அந்த வகையில் அந்த தனியார் நிறுவனத்தில் ஒரு நாற்பத்தி ஐந்து நாட்கள் வேலையில் இருந்தவிட்டு பிறகு சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க முனைந்தேன்.

கே: நீங்கள் படித்தது பொறியியல் ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்ததோ பயிற்சி நிறுவனம் அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் படிக்கின்ற காலத்தில் இது போன்ற பயிற்சி நிறுவனங்களோ, ஆலோசனை மையங்களோ இல்லை. இதனால் நான் படிக்கின்ற காலத்தில் என்னைப் போல எத்தனையோ மாணவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. நினைத்த வேலை ஓன்று செய்யும் வேலை வேறாக இருந்தது. இது தான் என்னை ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்கும் நிலைக்கு உந்தியது.

ஆரம்பத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பிராஜெக்ட் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினேன். எதிர்பார்த்து காத்திருந்த எத்தனையோ மாணவர்கள் தொடங்கிய ஆண்டே எங்கள் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார்கள். நான் எப்போதும் தொடங்குவதற்கு முன் பலமுறை யோசித்துவிடுவேன். தொடங்கிவிட்டால் என்னுடைய யோசனை எல்லாம் அதன் வளர்ச்சி சார்ந்ததாக மட்டும் தான் இருக்கும்.

முதலில் சென்னையிலுள்ள அமிஞ்சகரையில் தான் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினோம். அதன்பிறகு ஆண்டிற்கு ஒரு இடத்தில் என்று நிறுவனத்தின் வளர்ச்சி பெருகி கொண்டே போனது. அதன்பிறகு SPIRO ACADEMY நிறுவனம் என்னும் பெயரில் தொடங்கி மாணவர்களுக்கு JEE, NEET, IIT போன்ற போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலவகையில் பயன் பெற்றனர். எங்கள் நிறுவனம் தொடங்கியதன் முதன்மை நோக்கமே JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளை மற்ற மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் தான் அதிக அளவில் தேர்வு பெற்று வந்தார்கள், அவர்களை போல தமிழ்நாட்டிலும் அதிக மாணவர்கள் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கம் தான்.

கே: SPIRO ACADEMY  பெயர் காரணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

இதற்கு மூன்று பொருள் இருக்கின்றன. ஒன்று சூரியன் உதயமாதல், சுவாசம், இரண்டு அணுக்கதிர்கள் போதும் ஒன்றை ஒன்று மோதும் பொழுது உருவாகும் ஒரு சக்தி தான் SPIRO என்பது.

படிக்கும் மாணவனுக்கு தன்னிடம் இருக்கும் உந்து சக்தியை மேம்படுத்தி அவன் சந்திக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதால் தான் இப்பெயர் வைக்கப்பட்டது.

இந்தியாவில் சென்ற ஆண்டு மட்டும் நீட் தேர்விற்கு 1,175,000 பேர் எழுதினார்கள். இந்தியா முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இதை இரண்டிலும் சேர்ந்து 65,000 சீட் தான் இருக்கிறது. அத்துனை பேர் எழுதும் தேர்வுக்கு வெறும் இவ்வளவு சீட் தான் இருக்கிறது. அதே போல் தமிழ்நாட்டில் 1 இலட்சம் பேர் எழுதினார்கள் ஆனால் இங்கு சீட் என்று பார்த்தால் வெறும் 2 ஆயிரம் தான். இதைப் பார்க்கும் போது மாணவர்கள் மனதில் ஒருவித பயத்தைக் கொடுத்து விடும்.

இதனால் ஒரு தேர்வு சார்ந்த பயத்தை மாணவர்களிடம் நீக்குதல் வேண்டும். அதே சமயத்தில் தேர்வு சார்ந்த ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். அவனுக்கே தெரியாமல் மனதளவில் அவனை தயார் படுத்தி அவன் மனதில் இருக்கின்ற சக்தியை வெளிகொணர்வது இந்நிறுவனத்தின் நோக்கம். இதன் அடிப்படையில் தான் இந்நிறுவனத்திற்குப் இந்தப் பெயரை வைத்தோம்.

கே: மாணவர்களின் சேர்க்கையையும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் எப்படி பூர்த்தி செய்தீர்கள்?

இது ஒரு போட்டி நிறைந்த உலகம். எல்லோரும் ஒரு எல்லையை அடைய ஓடியும் தேடியும் கொண்டியிருக்கிறார்கள். இங்கு எத்தனையோ விதமான போட்டித் தேர்வுகள் இருக்கிறது. நமக்கு மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றும் பெரிதல்ல, தன்னிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்களை தயார்படுத்தி சாதிக்க வைத்திடுவோம்.

இச்சாதனையை படிப்பவர்களும் பார்ப்பவர்களும்  எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பே எங்களிடம்  200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

இந்தியாவில் இருக்கின்ற எல்லா மருத்துவக் கல்லூரியும் நீட் க்கு கீழே வந்து விடும். ஏஎம்எஸ் மருத்துவக்கல்லூரி ஜீப்மர்ஸ் இரண்டு மருத்துவக் கல்லூரியும் இந்தியாவின் அதி முக்கிய  மருத்துவக் கல்வி நிறுவனம் என்பதால் இந்த இரண்டிற்கும் சில விலக்குகள் இருக்கிறது. ஏம்எம்எஸ் தன்னாட்சி பெற்ற நிறுவனம். இந்த இரண்டு கல்வி நிலையங்களிலும் 200 சீட் இருக்கிறது. இதில் எங்கள் SPIRO ACADEMY லிருந்து 40 மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஜீப்மர்ஸ்ல்  30 மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். இந்த இடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதில் குறிப்பிட்ட பேர் எங்கள் நிறுவனத்திலிருந்து தேர்ச்சி பெற்று செல்வதால் இதைப்பார்க்கும் மாணவர்களும் பெற்றோர்களும் எங்களை நாடி வருகிறார்கள்.

2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வு இருந்தது. ஆனால் அதன் பிறகு அரசு இத்தேர்வை நீக்கிவிட்டது. ஆனாலும் எங்கள் நிறுவனம் ஆகில இந்திய நுழைவுத் தேர்வான ஏஎம்எஸ், ஜீப்மர்ஸ், ஜெஇஇ போன்ற தேர்வுகளில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்தோம். தற்போது நீட் தேர்வு வந்தவுடன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இத்தேர்வு குறித்தான விழிப்புணர்வு அதிகம் வர ஆரம்பித்துவிட்டது. இதனால் எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள்.

இங்கு அறிவு குறைந்த மாணவர்கள் என்று யாரும் இல்லை. மாணவர்களில் இரண்டு படிநிலைகளில் இருக்கிறார்கள். ஒன்று சட்டென்று புரிந்து கொள்பவர்கள் மற்றொருவர் சற்று தாமதமாகப் புரிந்து கொள்வர்கள். இவர்களை சரியாக கையாண்டால் வெற்றி பெற்றுவிடுவார்கள்.

கே: கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கப்படும் பயிற்சிப் பற்றிச் சொல்லுங்கள்?

நகர்ப்புற மாணவர்களைவிட, கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். காரணம் அவர்களில் ஒரு சிலர் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களாக இருப்பார்கள். இதை அவர்கள் பெரிய குறைகளாகக் கருதுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை கிராமப்புற மாணவர்களே சிறந்தவர்கள் என்று சொல்வேன். காரணம் அவர்களுக்குள் அதிகபடியான கனவுகள் இருக்கும். உழைக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.

ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தாலும், கற்றுக் கொண்ட பின்னர் அவர்களின் கற்றல் போக்கு மிகவும் தெளிவாக இருக்கும். நகர்ப்புறத்தில் படிக்கும் மாணவர்களை சிறுவயதிலிருந்தே பெற்றோர்களும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி அவர்களை நன்றாகத் தயார் படுத்தி விடுகிறது. இதனால் அவர்கள் எதையும் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

சென்ற ஆண்டுகள் 465 பேர் மெடிக்கல் கல்லூரிக்குத் தேர்வாகி சென்றார்கள். அதில் 40 பேர் கிராமப்பின்னணியில் தமிழ்வழிக் கல்விப் படித்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகக் கருதுகிறேன்.

கே: உங்கள் நிறுவனத்தின் தனித்தன்மைகள் பற்றிச் சொல்லுங்கள்?

மனிதனின் வளர்ச்சி படிநிலைகளில் எல்லா காலத்திலும் ஒவ்வொரு தேர்வை எதிர் கொண்டு தான் இருக்க வேண்டும். அதிலும் போட்டித் தேர்வு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வளர்ச்சியைக் கொடுக்கும் தேர்வாகும். இவ்வாறு இருக்கும் போட்டித் தேர்வில் இத்தனை வினாவிற்கு இவ்வளவு மதிப்பெண் என்று முடிவு செய்து விடுவார்கள். உதாரணமாக நீட் தேர்வில்  மொத்தம்180 வினாக்கள், 180 நிமிடங்கள் ஒரு வினாவிற்கு ஒரு நிமிடம் தான். இரண்டு ஆண்டுகள் அவர்கள் தினமும் இரவு பகல்  பார்க்காமல் படித்ததை இந்த மூன்று மணிநேரம் தான் தீர்மானிக்கிறது. ஒரு வினாவை சரியாக எழுதினால் 4 மதிப்பெண், ஆனால் தவறாக எழுதினால் மதிப்பெண் இல்லை மைனஸ் 1 மதிப்பெண். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை ஒரு மாணவன் எவ்வாறு தீர்மானிக்கிறான், கால மேலாண்மையை எப்படி சமாளிக்கிறான் போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருகிறோம்.

ஒவ்வொரு மாணவர்கும் நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம் எஸ். சி. எஸ்.டி பிரிவினர் ஐந்து முறை எழுதுலாம். நீட் தேர்வு ஒரு ஆண்டு  பயிற்சி வகுப்பாக நடைபெற்று வருகிறது. மருத்துவர் கனவோடு தற்போது 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது. சற்று கடினமான சூழலை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

நாங்கள் காலை 5 மணிக்கெல்லாம் மாணவர்களைத் தயார் படுத்தி விடுவோம். 6 மணிக்கு வகுப்புகள் தொடங்கி விடும். 6 மணியிலிருந்து 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் 1.30 மணியிலிருந்து  2 மணி வரை உணவு இடைவேளை, 2 மணியிலிருந்து 3 மணி வரை அவர்களுக்கு ஓய்வு அவர்கள் உறங்கிக் கொள்ளலாம். 3 முதல் 5 வரை ஆசிரியரின் மேற்பார்வையில் அவர்கள் படிக்க வேண்டும். 5 முதல் 6 வரை விளையாட வேண்டும். 6 மணியிலிருந்து 8 வரை படிக்க வேண்டும். இரவு உணவு அருந்திய பின்னர் அன்று நடத்திய பாடத்தை படிக்க வேண்டும் இப்படியே தொடர் சங்கிலியாக அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பொழுது அவர்களும் சோர்வடையவோ, மன அழுத்தம் ஏற்படா வண்ணம் அவர்களை அவர்களே தயார்படுத்திக் கொள்வார்கள்.

பொதுவாக நீட் எழுதும் மாணவர்க்கு இயற்பியல், வேதியியல் பாடம் சற்று கடினமான இருக்கும் என்று நினைப்பது இயல்பு தான். ஆனால் எங்கள் அகாடெமியில் படிக்கும் எந்த மாணவனும் அந்தப் பாடத்தை படிக்கச் சொல்ல மாட்டார்கள். காரணம் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடையே எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு எப்போதும் இருக்கும்.

கே:  இந்த நிறுவனத்தின் ஆசிரியர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

எங்களிடம்  பணியாற்றும் அத்துனை ஆசிரியர்களும், ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வில் வெற்றிப்  பெற்றவர்களாகவும், 15 வருடத்திற்கும் மேலாக அனுபவம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பல இடத்திலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சாதித்த வல்லுநர்களை மட்டுமே நாங்கள் ஆசிரியர்களாக நியாமித்து வருகிறோம். [hide]

கே: ஒரு கல்வி நிலையம் நடத்துவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

தன் மகன் மருத்துவராகவோ, அல்லது பொறியாளராகவோ ஆக வேண்டும் என்ற ஒரு இலட்சிய கனவோடு தான் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் எங்களிடம் வந்து சேர்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கு எங்களை நாங்கள் பல வழிகளில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

எங்களிடம் 800 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அவர்களை அத்துனை பேரையும் மருத்துவர்களாக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கும். நான் மட்டுமல்ல என்னை தொடங்கி எங்கள் ஆசிரியர்கள், மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியர் அல்லாதோர், கேண்டீனில் வேலை செய்பவர்கள் என இவர்கள் அனைவரும் மாணர்வர்கள் அனைவரும் மருத்துராகி விட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

மாணவர்களை தன் நோக்கம் பிறழாதவாறு அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். 100 க்கு 10 சதவீதம் மாணவர்கள் ஆசிரியர்கள் என்னதான் போராடிப் பாடத்தை நடத்தினாலும் அதற்கு அவனின் ஒத்துழைப்பு இருக்காது. இதனால் அவனால் தேர்ச்சிப் பெற முடியாமல் கூட சில வேளைகளில் போய் விடும். இப்படிப் பட்ட மாணவர்களை சீர்படுத்துவதில் தான் சற்று சவால்கள் இருக்கிறது.

கே: கடந்த வந்த பாதையில் நீங்கள் சந்தித்த ஏதேனும் நெகிழ்ச்சியான நினைவுகள் பற்றி?

நிறைய  நெகிழ்ச்சியான நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் மிகவும் வறுமை நிலையிலிருந்து தனது மாணவனை எங்களிடம் அழைத்து வருவார்கள். கட்டணம் செலுத்த கூட அவர்களிடம் பொருளாதாரம் இருக்காது. அப்படிப்பட்டச் சூழலில் அம்மாணவன் நன்றாகப் படித்து நல்ல ஒரு அரசு வேலையில் பணியில் சேர்ந்திருப்பான். அவர் தனது பெற்றோரை அழைத்து வந்து என்னிடம் நன்றியைச் சொல்வார்கள். அத்தருணம் எப்போதும் எனக்கு நெகிழ்ச்சியைத் தரும்.

நாங்கள் நிறைய மாணவர்களுக்கே தெரியாமல் உதவித்தொகைக்  கொடுத்து படித்துவைத்திருக்கிறோம். விடுதிக்கட்டணம் செலுத்த முடியாமல் தினமும் பல மைல் தூரம் பயணம் செய்து வரும் மாணவர்களுக்கு விடுதியில் இலவசமாக அனுமதி கொடுத்திருக்கிறோம்.

35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகைப் பெற்று படித்து வருகிறார்கள்.  இப்படிப்பட்ட மாணவர்கள் நல்ல உயர் பதவியை அடையும் பொழுது மாணவனும் அவனின் பெற்றோரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிப்பது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது.

கே: நீட் தேர்வால் சமீப காலத்தில் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், அது பற்றி?

அது மிகவும் துயரமான சம்பவம் தான். அதை நினைத்து நான் பல நேரங்களில் வருத்தம் கொண்டதுண்டு. நிச்சயம் அந்த பெண்களுக்கு எங்கள் நிறுவனத்தைப் பற்றி தெரிந்து எங்களிடம் வந்திருந்தால் அவர்களின் நிலை வேறு விதமாகக் கூட மாறியிருக்கலாம்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மை மட்டும் இருந்திடுதல் கூடாது. எதையும் எதிர் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போது தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

இப்படிப்பட்ட மாணவர்கள் எங்களை அணுகினால் நாங்கள் இலவசமாகப் பயிற்சி கொடுக்கக் கூட தயாராக தான் இருக்கிறோம். தற்போது அரசும் இதற்கான பயிற்சிகளைக் கொடுத்துக்  கொண்டு தான் இருக்கிறது.

தற்கொலை ஒரு போதும் எதற்கும் தீர்வு அல்ல…முடிவு என்று இங்கு எதுவும் இல்லை. இங்கு சாதிக்க பல வழிகள் இருக்கிறது. அதில் எதையேனும் முறையாக கடைபிடித்து சாதியுங்கள்.

கே: தொலைதூர கல்வி முறையை கொண்டு வருவதற்கான காரணம்?

எந்த ஒரு தனியார் பயிற்சி நிறுவனமும் கொண்டு வராத திட்டத்தை நாங்கள்  கொண்டு வந்தோம். நீட் பயிற்சி வகுப்பை தொலை தூர கல்வியின் மூலம் படிக்கலாம் என்பது தான்.

தற்போது படித்து வரும் மாணவர்கள் அவர்களால் தினமும் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல் தான். அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எங்களின் நிறுவனம் சென்னை மற்றும் நாமக்கல் ஆகிய இரு இடங்களில் மட்டுமே தான் இருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தூரத்தின் காரணமாக வர முடியாத சூழல் ஏற்டலாம். இது அவர்களுக்கு ஒரு வரபிரசாதம்.

மேலும் எல்லா விதமான தகுதித் தேர்வுக்கு படிக்கும் வகையில் புத்தகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதை அவர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்வு தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளோம். எங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்த படியே இதில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். அவர்களின் வீட்டின் முகவரிக்கு மூன்று கொரியர் அனுப்பி விடுவோம். அதில் ஒன்றில் வினாத்தாள் இருக்கும். மற்றொன்றில் அந்த வினாவிற்கான விடை இருக்கும், இன்னொன்றில் ஏதேனும் தவறாக விடை எழுதியிருந்தால் அதற்கான தீர்வு கொடுக்கப்பட்டிருக்கும்.  இப்படி அவர்கள் வீட்டியிலிருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவில் எந்த பகுதியில் படிக்கும் மாணவர்களும் எங்களின் தலைசிறந்த ஆசிரியர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தகவல்கள், வினாக்கள் போன்றவை கேட்டுக் கொள்ளலாம்.

தற்போது இதில் 1000 த்திற்கும் மேற்பட்டோர்கள் படித்து பயன் பெற்று வருகிறார்கள்.

கே: உங்களுக்குப் பிடித்த மனிதர் பிடித்த புத்தகம்?

பிடித்த மனிதர் முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். தனது வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் நலனே தன் நலனாக வாழ்ந்தவர். அவர் எழுதிய புத்தகம் அக்னி சிறகுகள் எனக்கு மிகவும் பிடித்தது.

கே: எதிர்கால திட்டம்?

தற்போது சென்னை மற்றும் நாமக்கல்லில் இருக்கும் இந்நிறுவனம் அடுத்தடுத்த ஆண்டில் கோவை, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் கொண்டு வர வேண்டும்.

அதே போல் தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களை ஒரு தலைசிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும்.

மருத்துவர் பிரிவில் 3000 சீட்டில் ஒரு 800 சீட் பெற வேண்டும். அகில இந்திய ரேங் பட்டியியலில் 10 இடத்திற்குள் தமிழ்நாட்டு மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து வர வேண்டும்.

எல்லா போட்டித் தேர்வு சார்ந்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

கே: வளரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூறுவது?

வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான். வெற்றி உன்னை நாடறிய செய்யும் தோல்வி உன்னை அறிய செய்யும். இதைப்புரிந்து கொள்ள வேண்டும்.

உன் இலக்கை தேடி அழைந்து கொண்டேயிருக்க வேண்டும். சிற்றின்ப ஆசையில் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். அது அப்போது தோன்றும் ஒரு சிறிய மகிழ்ச்சி தான். ஆனால் நீங்கள் போராடி வெற்றி பெற்று பாருங்கள் காலம் முழுவதும் மகிழ்ச்சியாகவே இருக்கலாம். இதை நீங்கள் புரிந்து கொண்டு செயலாற்றினீர்கள் என்றால் நாளை உலகம் உன் பெயரைச் சொல்லும்.[/hide]

நேர்காணல் : விக்ரன் ஜெயராமன்

இந்த இதழை மேலும்

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு

ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ

மருத்துவத் துறை

2018 ஆம் ஆண்டிற்கான

நோபல் பரிசு பெற்றவர்கள்

 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்ற குறளில் வள்ளுவர் நோயின் தன்மையை ஆராய்ந்து, அந்நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழியை ஆராய்ந்து, உடலுக்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும், அதுவே சிறந்த மருத்துவரின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். இதை தற்போது மருத்துவத் துறையில் நிகழ்த்திகாட்டியிருக்கிறார்கள் இருவர்.

உலகளவில் பெரிதும் மதித்துப் போற்றப்படும் பரிசு நோபல் பரிசாகும். தலை சிறந்த ஆய்வு மேற்கொண்டதற்கும், இச்சமுதாயத்திற்கு பெரிதும் மாற்றம் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிசார் கண்டுப்பிடிப்பவர்களைப் போற்றும்  விதமாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது உலகின் தலைசிறந்த விருது என்பதால் கண்டுபிடிப்பாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இது ஒரு இலட்சிய விருது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் எல்லா ஆண்டும் இவ்விருது வழங்கப்படவில்லை. விருதுக்குத் தேர்ந்தெடுத்தவர்களும் இவ்விருதை வாங்க மறுத்திருக்கிறார்கள். இதுபோன்ற எத்தனையோ சுவாரசியங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த வகையில் மருத்துவத்துறையில் இந்த ஆண்டிற்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டசுகு ஹோஞ்சோ அவர்கள் பரிசைப் பெற்று சாதித்திருக்கிறார்கள்.

நோபல் பரிசு உருவாக்கிய விதம்

ஆல்ஃபிரட் நோபல் சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் என்ற நகரில் பொறியாளர் பின்னணியுடைய குடும்பத்தில் பிறந்தார். இவர் சின்ன வயதிலேயே பன்முகத்திறமைக் கொண்டவராக விளங்கினார். அதிலும் குறிப்பாக இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளும் அடங்கும். மேலும் வேதியியலாளர், பொறியியலாளர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் இருந்தார். மேலும் போபர்ஸ் ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார்.  இவர் 350க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித் துள்ளார்.

ஒரு நாள் புகழ் பெற்ற பிரெஞ்ச் செய்தித்தாளில் மரண வியபாரி இறந்துவிட்டார் என்ற தலைப்பில் நோபல் இறந்ததாக செய்தி வந்தது. அச்செய்தியைப் பார்த்த நோபல் அதிர்ந்து போனார். ஆனால் அன்று இறந்தது அவரின் சகோதரர். பெயரையும் படத்தையும் தவறாகச் சித்தரித்து வெளியிட்டது. ஆனால் அந்தச் செய்தி அவரை பெரிதும் சிந்திக்க வைத்தது. மரணத்திற்குப் பின்னர் தன்னை எவ்வாறு சித்தரிப்பார்கள் என்பதை மரணத்திற்கு முன்னே அறிந்து கொண்ட நோபல் தான் இறந்த பின்னர் தன்னை மதிக்க வேண்டும் என்று யோசித்து நோபல் பரிசு என்னும் விருதை உருவாக்கினார்.

இவ்விருது எல்லாத்துறைகளுக்கும் வழங்காமல் மனித இனம் முன்னேற்றத்திற்கு எந்தெந்த துறைகள் பயனுள்ளதாக இருக்கிறதோ அதையெல்லாம் ஒன்று சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று உயிலில் எழுதினார். அந்த வகையில்

இயற்பியல்

வேதியியல்

மருத்துவம்

இலக்கியம்

அமைதி

என ஐந்து துறைகளில் பரிசு வழங்கலாம் என்றும் அதற்கு தன்னுடைய சொத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உயிலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதன்பிறகு பொருளாதாரத்துறைக்கும் இவ்விருது வழங்கப்படலாம் என்றும் முடிவெடுத்தது. அதன் பிறகு வேறு எந்த புது துறைக்கும் விருதுகள் வழங்கப் போவதில்லை என்று  நோபல் அறக்கட்டளை முடிவெடுத்தது. அவரின் சொல்லின் படி நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 தேதி அன்று ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்படும். இவ்விருதின் மதிப்பு ரூ. 8 கோடி ஆகும்.

நோபல் பரிசு வென்ற தமிழர்கள்:

1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை சர்.சி. இராமன் அவர்கள் பெற்றார்.

1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் பெற்றார்.

2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் பெற்றார்.

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கும், அன்னைதெரசா, கைலாஷ் சத்தியார்த்தி ஆகியோர் அமைதிக்கான பரிசைப் பெற்றவர்கள்.

ஜேம்ஸ் ஆலிசன் :

அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தற்போது எம்.டி ஆண்டர்ஸன் புற்றுநோய் மைய இயக்குநராக இருக்கிறார். புற்றுநோய் சிகிச்சையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு 10 க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று இருக்கிறார். இவரின் மனைவி பத்மானி சர்மா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கயானா நாட்டில் பிறந்தவர். இவரும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை இந்தியர், தாயார் கயானா. பத்மானி அவர்கள் சின்ன வயதிலேயே கயானாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று விட்டார்கள்.

ஜேம்ஸ் ஆலிசனின் தாயார் மற்றும் இவரது இரண்டு மாமாக்கள் ஆகியோர் புற்றுநோயால் மரணம் அடைந்தவர்கள். எவ்வளவு போராடியும் இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை அதுவே இவரின் சாதனைக்கு மூலக்காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அதன் பிறகு புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டார்.

நோபல் பரிசு அக்டோபர் 1 ஆம் நாள் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் இரவு நேரம். பரிசு  அறிவித்தவுடன் சிலர் அவரைத் தொடர்பு கொள்ள முனைந்தார்கள். ஆனால் அவரின் தொலைபேசி எண் கிடைக்கவில்லை. இதனால் அவரின் மகனிற்கு அழைத்து விருது கிடைத்தது பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்நேரம் நடு இரவு என்பதால் செய்திதை உடனே சொல்ல முடியவில்லை. அதன் பிறகு தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டுள்ளார்.

இவர் பல வருடங்கள் அல்லும் பகலும் அயராது ஆய்வு செய்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிய இவ்வாய்வை மேற்கொண்டு தற்போது சாதித்துள்ளார்.

டசுகு ஹோஞ்சோ:

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். நோய் எதிர்ப்புத்துறை வல்லுநரான இவர், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமியின் வெளிநாட்டு உறுப்பினராக இருந்தவர். 2017 ஆம் ஆண்டு முதல் இவர் ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.[hide]

புற்றுநோய்

மனித உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் பாதிக்கும் நோயைத்ததான் புற்றுநோய் என்கிறோம். இப்புற்று நோய்க்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். மனித வாழ்க்கைக்கு இந்நோய் பெரும் சவாலாகவே இருக்கிறது. காரணம் இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பது தான். 200  வகையான புற்று நோய்கள் இருக்கிறது. பரம்பரை வழியாக வரும் புற்று நோய்கள் வெறும் 3% மட்டுமே, மீதி 97% நாம் வாழும் வாழ்க்கை  முறையில் தான் இருக்கிறது. புற்று நோய் என்றாலே மரணம் தான் என்ற நிலையில் இத்தகைய கண்டுபிடிப்பு மனதிற்கு ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இருவரின் கண்டுபிடிப்புகள் பற்றி:

ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ இருவரின் கண்டுபிடிப்புகளும் புற்றுநோய் சம்பந்தமானது. மனித உடலில் நேரடியாக அணுக்களை அழிக்கும் சிகிச்சை முறைக்கு மாற்றாக, நமது உடலில் இயற்கையாக அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டே அந்த அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளார்கள்.

1995 ஆம் ஆண்டு மனித உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு தடை விசை போல் செயல்படும் மிக முக்கியமான மூலக்கூறு ஒன்றை ஆலிசன் முதலில் கண்டறிந்தார். இரத்ததின் வெள்ளைஅணுக்களில் உள்ள சிடிஎல்ஏ 4 என்ற மூலக்கூறுதான் இதற்குத் தடை விசையாக இயங்குகிறது என்பதை அவர் கண்டறிந்தார்.

இதைப் போலவே, நோய் எதிர்ப்பு அணுக்களில் உள்ள பி.டி.1 என்ற புரதமும் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கான தடை விசைகளாகப் பயன்படுகின்றன என்பதை ஏறத்தாழ அதே ஆண்டில் டசுகு ஹோஞ்சோ கண்டறிந்தார்.

இந்த இருவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு புற்று நோய் அணுக்களைக் கொல்லும் மருந்துகள் உருவாக்கப்பட்டது.

கண்டுபிடிப்பின் மகத்துவம் :

ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ ஆகியோர் புற்று நோய்க்கான புதிய சிகிச்சை என்னவென்றால் இவ்வளவு காலம் தடுப்பூசிகள் மூலம் அனுப்பி புற்று நோய்க்குச் சிகிச்சை அளிக்க  முடியும் என்ற நிலையிருந்தது.

இந்நிலைக்கு அடுத்த நிலையாக சென்று, இயல்பாகவே நமது  உடலில் இருக்கும் தடுப்பு மண்டலத்திலிருலுந்து குறிப்பிட்ட புரத மூலக்கூறு ஒன்றை வெளியேறச் செய்தால், அது புற்றுநோய் செல்களைச் சென்றடைந்து அவற்றை அழித்து விடுகிறது என்பது தான் இவர்களின் புதிய கண்டுபிடிப்பு.

ஜேம்ஸ் ஆலிசன் ஒரு புரத மூலக்கூறு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்ற அடிப்படை அறிவியல் கருத்தை முதலில் கண்டுபிடித்தார். இவரின் கண்டுபிடித்துள்ள தியரிக்கு தணிக்கைப் புள்ளி தியரி இதை ஆங்கிலத்தில் இட்ங்ஸ்ரீந்ல்ர்ண்ய்ற் ற்ட்ங்ர்ழ்ஹ் என்பர்.

அத்தியரியை நிரூபிக்கும் விதமாக டசுகு ஹோஞ்சோ அந்தப் புரத மூலக்கூற்றை நம் உடலின் தடுப்பு மண்டலத்திலேயே வெளியேற்றுவது என்பதையும், அது எவ்வாறு புற்றுநோய் செல்களை வளர்வதைத் தடுக்கிறது என்பதையும் மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வகை புற்றுநோய் கட்டியை எவ்வாறு தடுத்த நிறுத்த முடியும் என்பதைக் கண்டறிந்து வெற்றி பெற்றுள்ளார்.

இக்கண்டுபிடிப்புகளின் மூலம் புற்றுநோய் சிகிச்சையில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதுவரை புற்று நோய் செல்களை அழிக்க செயற்கைப் புரதங்களை அனுப்பும் வழிதான் இருந்தது. ஆனால் தற்போது உடலில் இயற்கைப் புரதங்களைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது. இனி வரும் புற்று நோய் கண்டுபிடிப்புகளுக்கு இவ்வாராய்ச்சி ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

இத்தகைய சரித்திர சாதனை நிகழ்த்திய ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ ஆகியோர் இவருரையும் வாழ்த்துவதில் தன்னம்பிக்கை மாத இதழ் பெருமை கொள்கிறது.[/hide]

இந்த இதழை மேலும்

ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!

எஸ்.சண்முகம், தலைமையாசிரியர் (பணி நிறைவு)

தமிழக அரசின் டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்

கவுந்தப்பாடி, பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்.

தேடிச் சோறு நிதந்தின்று பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி- மனம்

வாடித் துன்பம் மிக உழன்று பிறர்

வாடப் பல செயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே நான்

வீழ்வேன் என்று நினைத்தாயோ…?

என்ற பாரதியின் வைர வரிகளுக்கு ஏற்றாற் போல வாழும் உன்னத மனிதர். எதிர்காலச் சமுதாயத்தை ஒரு ஏற்றமிகு சமுதாயமாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த வகையில் இவர் பணியாற்றிய அத்தனை பள்ளிகளையும் தரமானதாக உயர்த்தி சாதித்துள்ளார்.

சிறந்த ஆசிரியர், மிகுந்த மனித நேயப் பண்பாளர், மாணவர் நலனே தன் நலன் எனக் கருதுபவர், தலைமைப் பண்பு மிக்கவர், சிறந்த ஆளுமைத்திறன் மிக்கவர், சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர், பேச்சு ஆளுமை மிக்கவர்….. இப்படி பன்முகத் திறமை பெற்றவர் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றதிரு. எஸ். சண்முகம் அவர்கள். அவரது நேர்முகம் இனி நம்மோடு…

கே.உங்களின் பிறப்பு பற்றிச் சொல்லுங்கள்?

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்பலூர் என்னும் கிராமத்தில் சுப்பிரமணியம்-மாராயாள் தம்பதியரின் ஆறு மகவுகளில் தலை மகனாக 1955-ல் பிறந்தேன். எனக்கடுத்து ஒரு தங்கை, பெயர் சிவகாமி. அதன் பின் தங்கவேல், மூர்த்தி, கணேசன், ஆறுமுகராஜன் என நான்கு தம்பியர்கள். எனது தந்தையார் கிராமத்திலேயே சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். பொருளாதார ரீதியாகச் சிரமம் இருந்த போதிலும், வறுமையிலும் செம்மை வாழ்க்கை வாழ்ந்தனர் என் பெற்றோர். குழந்தைகள் அனைவருக்கும் உயர் கல்வி தர முடியா விட்டாலும் உயிரினும் மேலான ஒழுக்கங்களை கற்பித்தார் என் தந்தையார். நல்ல பேச்சு, பெரியோரிடம் மரியாதை, தீமையிலிருந்து விலகி இருத்தல், பணிவு, இன்சொல் பேசுதல், நல்ல நண்பர் சேர்க்கை, மற்றும் உறவுகளைப் பேணுதல் போன்ற மனிதப் பண்புகளை உணவுடன் சேர்த்து உணர்வுடன் ஊட்டி வளர்த்தார். இன்றளவும் அப்பண்புகள் எங்களின் குடும்பச் சொத்தாக இருந்து கொண்டிருக்கின்றன. அப்பண்புகளோடு வளர்ந்த என் தங்கை மற்றும் தம்பியர் குடும்பங்களும் நன்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. என் சித்தப்பாவின் ஒரே மகன் என் தம்பி சரவணன் எம்.இ., ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டு கோபியில் குடும்பத்துடன் நன்கு வசித்து வருகிறார்.

கே.உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

கொளப்பலூர் என்னும் கிராமத்தில் பிறந்த நான் ஆசிரியப் பணியின் பொருட்டு எனது குடும்ப வாழ்க்கையை பவானி வட்டம் கவுந்தப்பாடி என்னும் ஊரில் அமைக்க நேர்ந்தது. எனது மனைவி திருமதி. அ.சந்திரா அங்கிருந்த அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் வேதியியல் முதுகலை ஆசிரியையாகப் பணியாற்றினார். எங்களுக்கு நவீன்பிரபு, கௌதம் என்று இரண்டு மகன்கள். அவர்களின் பள்ளிப் பருவத்திலேயே ஆசிரியையாகப் பணியாற்றிய எனது மனைவி 1999-ல் மறைந்து விட்டார்கள். இரண்டு ஆண்டுகள் குடும்பத்தையும் ஆசிரியப் பணியையும் ஒரு சேரக் கவனிக்க முடியவில்லை. இச்சமயத்தில் அருகிலுள்ள கோபியில் சி. கே. கே. மெட்ரிக் பள்ளியில் பணியாற்றிய திருமதி. ஆ. அலமேலு பி. காம்  என்பவர்க்கும் என்னைப் போலவே மறுமணத் தேவை இருப்பதை அறிந்தேன். அவர்களை 2001-ல் மறுமணம் செய்து கொண்டேன். அவர்களின் ஒரே மகள் கீர்த்தனாவை, தற்போது பி.டெக்., பட்டதாரி, என்னுடைய மகளாகவும் வரித்துக் கொண்டு, இப்போது கவுந்தப்பாடியில் வசித்து வருகிறேன். எனது மூத்த மகன் எஸ். நவீன்பிரபு பி.டெக், மருமகள் எம். அனுப்பிரியா எம்.சி.ஏ., இருவரும் நல்ல உத்தியோகத்தில் பேத்தி ஹனுஸ்ரீ உடன் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இளைய மகன் எஸ். கௌதம், மருமகள் கரிஷ்மாகோபி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். அவர்களும் சென்னையில் நல்ல தனியார் நிறுவனங்களில் பணியாற்றி நலமுடன் வசித்து வருகிறார்கள்.

கே. உங்களின் பள்ளி மற்றும் உயர் கல்வி பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் கிராமத்திலேயே புனிதமரியன்னை பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் அதன் பின் பதினொன்றாம் வகுப்பு வரை நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருந்த கெட்டிச் செவியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்து சென்று என் பள்ளிப் படிப்பை முடித்தேன். 1973-ல் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் பள்ளி முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். 1974 முதல் 1977 வரை கோபி கலைக்கல்லூரியில் பயின்று வேதியியல் பாடத்தில் இளங்கலைப்பட்டமும், 1979-ல் கேரளாவில் உள்ள கொச்சின் பல்கலைக்கழகத்தில் அதே பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். ஆசிரியராகப் பணியேற்ற பின் பி.எட்., எம்.எட்., மற்றும் எம்.பில்., பட்டங்கள் பெற்றேன்.

கே.ஆசிரியப் பணியில் தாங்கள் சேர்ந்தது குறித்துச் சொல்லுங்கள்?

1978-ல் தமிழகத்தில் 2 கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிக் கல்வி ஒட்டுமொத்தமாக ஒரு புதிய மாற்றத்தைப் பெற்ற காலகட்டம் அது. நானும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் அமைந்திருந்த வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வேதியியல் பாடத்திற்கு முதுகலை ஆசிரியராக அரசால் நியமிக்கப்பட்டேன். என்னை ஆசிரியனாக அறிமுகப்படுத்திக் கொண்டு வால்பாறை பள்ளியில் நான் எடுத்த முதல் வகுப்பு தனிமங்கள் (elements) பற்றியது. அந்த வகுப்பின் நாற்பத்தைந்தாவது நிமிட முடிவில் என் எதிரே அமர்ந்திருந்த மாணவச் செல்வங்களின் வியப்பால் விரிந்த விழிகளையும், ஒருவித உற்சாக அதிர்வலைகளையும் கண்டு மனம் மிகவும் மகிழ்ந்து போனேன். நான் கற்றதைப் பிறருக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் ஆற்றல் எனக்குள் இருப்பதை நான் உணர்ந்த ஆசிரிய மற்றும் ஆச்சரிய நிமிடங்கள் அவை. ஆசிரியப் பணிக்கெனவே நான் படைக்கப்பட்டதை உணர்ந்து, 1980 முதல் 2014 வரை 34 ஆண்டுகள் அந்த அறப்பணிக்காகவே என்னை அர்ப்பணித்தேன்.

கே. தங்களின் ஆசிரியப் பணிக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

1980-ல் முதுகலை வேதியியல் ஆசிரியராகி வால்பாறை, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டம் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஒலகடம் மேல்நிலைப் பள்ளி, நான் பயின்ற கெட்டிச்செவியூர் மேல்நிலைப் பள்ளி, கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி    இவைகளில் பணியாற்றினேன். வேதியியல் பாடத்தை அறவே வெறுக்கும் மாணவனும் அப்பாடத்தை விரும்பும் வண்ணம் போதிப்பதில் கவனம் செலுத்தினேன். நான் நேசித்து நடத்திய பாடம் என்பதால், முதலில் என்னை நேசித்த மாணவனை மெதுவாக என் பாடத்தையும் நேசிக்க வைத்ததை என் ஆசிரியப் பணியின் வெற்றியாகக் கருதுகிறேன்.

வகுப்பறைகளில் வேதியியல் பாடத்தோடு மாணவ மாணவியர்க்கு அவர்களின் எதிர் கால வாழ்க்கை பற்றிய புரிதலையும் கற்றுக் கொடுக்க முயற்சிப்பேன். பாடம் என்பது வெளியிலிருந்து நான் தருவது என்பதையும், கல்வி என்பது அவனுக்குள் இருந்து வெளியில் வருவது என்பதையும் புரியவைப்பேன். கற்க வரும் மாணவரிடம் அவர்தம் குடும்பப் பின்னணி கேட்டறிந்து, அனைவருமே குபேரன் வீட்டுக் குழந்தைகளாகப் பிறப்பதில்லை எனச் சொல்லி நேர்மையான உழைப்பு அந்த நிலைக்கு அவர்களை உயர்த்தும் என்று உணர வைப்பேன். பல மாணவர்களின் உயர் படிப்பிற்காக பலரிடம் நிதி உதவி பெற்று படிப்பு தொடர உதவியுள்ளேன். அப்படிப்பட்ட மாணவக் கண்மணிகள் இதய நோய் நிபுணர் டாக்டர் வேதநாயகம், பொறியியல் பட்டதாரி தருண் மற்றும் தீபிகா, செவிலியர் ஷாலினி ஆகியோராவர். “மாணவர் பாதங்களை வெயில் சுட்டால் காலணியாகும் இவரின் இதயம்” என்று என் ஆசிரிய நண்பர்  அந்தியூர் திரு. சுகதேவ் எனக்காக எழுதிய வரிகளுக்கேற்ப என் ஆசிரியப் பணி அமைந்திருந்தது இறைவனின் சித்தமே.

கே. தங்களின் தலைமையாசிரியர் பணி பற்றிச் சொல்லுங்கள்?

24 ஆண்டுகள் ஆசிரியப் பணிமுடித்த பின், 2004-ல் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றேன். ஆசிரியர் என்ற நிலையிலிருந்து நிர்வாகி என்ற அடுத்த கட்டத்திற்கு எனது பயணம் தொடங்கியது. நன்முறையில் எனது ஆசிரிய மற்றும் நிர்வாகப் பணி தொடர காலமும், இடமும், சூழ்நிலையும், நல்ல ஒத்துழைப்பும் அந்தியூர் பள்ளியில் எனக்குக் கிடைத்தன.

பள்ளி நலனில் அக்கறை கொண்ட ஆஸ்திரேலிய டாக்டர் உயர்திரு. இராஜேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் திரு. பத்மநாபன், திரு. கோவிந்தராஜ், அரிமா சங்கத்தினர், நண்பர் திரு. ஜலால் மற்றும் பல ஊர்ப் பிரமுகர்களின் சீரிய உதவி நன்கு கிடைத்தது. மேலும் என் தலைமையின் கீழ் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. இவற்றால் அப்பள்ளிக்கு ஈரோடு மாவட்டத்தின்  ஆட்சியர்களிடமிருந்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான முதல் மற்றும்  இரண்டாம் இட மாவட்ட மதிப்பெண்களுக்காக ஆறு முறை விருதுகள் பெற்றுத் தரும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன். அங்கு பணியாற்றிய போது தான் ஊர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தால் கல்விச்சிற்பி என்ற பட்டமும், Top light என்னும் அமெரிக்க நிதியுதவி அமைப்பு மூலம் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்ட வாய்ப்பையும், அரிமா சங்கம், JCI அமைப்புக்கள் மூலம் சிறந்த தலைமையாசிரியர் என்ற பட்டமும் கிடைக்கப் பெற்றேன்.

கே. தாங்கள் கடைசியாகப் பணியாற்றிய பள்ளி அங்கு தங்கள் பணி பற்றிக் கூறுங்கள்?

எனக்கு வாழ்வியல் ஆதாரம் தந்த தற்போது நான் வாழ்ந்து வரும் கவுந்தப்பாடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராக 2010-ல் பணி மாறுதல் பெற்றேன். அப்பள்ளியிலும் ஆசிரியப் பெருமக்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட மதிப்பெண்களுக்காக மூன்று ஆட்சியரிடமிருந்து ஐந்துமுறை விருதுகள் பெற்றுத் தந்த பாக்கியம் வாய்க்கப் பெற்றேன். ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளிலேயே முதல் முறையாக மாநில இடம் பெற்றமைக்காக அப்போதைய முதல்வர் மறைந்த மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்களின் கையொப்பமிட்ட சான்றிதழை பள்ளிக்குப் பெற்றுத் தந்தேன். அப்பள்ளியில் பணியாற்றிய போது இரண்டு இந்திய சுதந்திர தின விழாக்களில் இரண்டு முறை அப்போதைய மாவட்ட ஆட்சியர்களால் சிறந்த தலைமையாசிரியருக்கான விருதுகள் கிடைக்கப்பெற்றேன்.

அக்காலகட்டத்தில்  பெங்களூரு தமிழ்ச்சங்கம் என்னை அழைத்து திராவிட கழகத் தலைவர் உயர்திரு. கி.வீரமணி அவர்களது தலைமையில் ஒரு பாராட்டு விழா நடத்திச் சான்றிதழ் வழங்கியது. 2012-ல் ஆசிரியப் பணிக்காக தமிழக அரசு எனக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தது. அப்போது ஊர் மக்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் சீருடை அணிந்த மாணவிகளோடு ஊர்வலமாக பள்ளிக்கு என்னை அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினர்.  மேலும் எண்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய நபார்டு வங்கி கட்டடமும், சவீதா பல்கலைக்கழக வேந்தர் மரியாதைக்குரிய டாக்டர். என்.எம். வீரையன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உதவியுடன் பள்ளிக்கு ஒரு கலையரங்கமும் என்னுடைய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டதை மிகுந்த மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன். 31.05.2014-ல் எனது ஆசிரியப் பணி முழு மன நிறைவுடன் நிறைவடைந்தது.  “ஆசிரியம் என்பது தொழில் அல்ல; அது  ஒரு வாழ்க்கை நெறிமுறை,” என ஆசிரியப் பணியாற்றி பணி திருப்தியுடன் (Job satisfaction) தற்போது வாழ்ந்து வருகிறேன்.[hide]

கே .இன்றைய  ஆசிரியர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தெய்வத்தின் சிலை செதுக்க வாய்ப்புக் கிடைத்த சிற்பிகள் நீங்கள். சிற்பியின் கை உளி போல உங்கள் நற்போதனையும் அறிவுக்கூர்மையும் உங்களுக்கு வாய்த்த அற்புத ஆயுதங்கள். மாணவனை மதிப்பெண்களை மட்டுமே உற்பத்தி செய்யும் எந்திரமாக மாற்றாதீர்கள்.  மானுடப் பண்புகளைச் சொல்லிக்  கொடுங்கள். இழந்து போன நம் விழுமியங்களை மாணவ சமுதாயம் மீண்டும் மீட்டெடுக்க உதவுங்கள். மாணவனை மனிதனாக மாற்றி, சமுதாயப் பயன்பாட்டிற்குத் தாருங்கள். அறம் சார்ந்த வாழ்க்கைக்கு மாணவர்களை தயார்படுத்துங்கள். உங்களிடம் பயிலும் ஒவ்வொரு மாணவனும் தன் மனதுக்குள் உங்களுக்கென ஒரு தனி சிம்மாசனத்தை அமைக்கும் வண்ணம் உங்கள் ஆசிரியப் பணி அமையட்டும். அப்பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபடுங்கள். மாணவனின் உதடுகள் தாண்டி உள்ளம் தாண்டி அவனின் ஆன்மாவோடு  பேசுங்கள். இந்த தேசத்திற்கே உரிய எல்லா விழுமியங்களையும் உங்கள் மூலம் மட்டுமே இளைய தலைமுறை பெற முடியும் என்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள். தாயின் கருவறையில் கரு மட்டுமே; உங்கள் வகுப்பறையில் மட்டுமே அது முழு உரு.

கே. இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

சமூக வலைதளங்களின் தீய கண்ணிகளுக்குள் சிக்கி விடாது இருக்க வேண்டுகிறேன். தகர்ந்து போன கூட்டுக் குடும்ப வாழ்க்கையால் சிதைந்து போன உறவுகளை புதுப்பித்து வாழச் சொல்லுகிறேன். “மறந்தும் பிறன் கேடு சூழற்க” என்னும் வள்ளுவ மந்திரத்தைக் கைக் கொண்டு அறம் சார்ந்த வாழ்வை மட்டுமே மேற்கொள்ளச் சொல்லுகிறேன். இந்தியாவை நவீன முறையில் புதிய அடுத்த நிலைக்கு நகர்த்துங்கள்; அதே சமயத்தில் ஆன்மீக ரீதியாக பழைய இடத்திற்கு உயர்த்துங்கள் என அன்புடன் வேண்டுகிறேன். புத்தனின் ஒற்றைச் சொல் மந்திரமான

“நல்லவனாக இரு” என்பதை மட்டுமே உச்சரித்து நீ வல்லவனாக வாழ்ந்து காட்டு என வேண்டுகோள் விடுக்கிறேன்.

கே. உங்களுக்குப் பிடித்தமானவை?

நெஞ்சம் எப்போதும் நேசிக்கும் ஒரே விஷயம் கவிதைகள். அடுத்து புத்தக வாசிப்பு. பாரதியின் கவிதைகள் மீது பக்தியும் மரியாதையும், கண்ணதாசனின் தமிழ் மீது மட்டற்ற காதலும், ஜெயகாந்தனின் கதைகள் மீதும், சாண்டில்யனின் வரலாற்றுப் புதினங்களின் மீதும், வாலி, வைரமுத்து, அப்துல் ரகுமான் வரிகளின் மீதும் தீராத மயக்கமும், தமிழருவி மணியன் எழுத்துக்கள் மீது தணியாத தாகமும் எப்போதும் எனக்குள் உண்டு.

கே. பணி ஓய்வுக்குப்பின் உங்களின் பொழுதுபோக்கு?

நிறைய புத்தக வாசிப்பு, நிகழ்ச்சிகள், புலவர் க. பாண்டியன் ஐயா அவர்களின் கரை காணா மரக்கலங்கள் மற்றும் சமுதாயச் சந்தை, புலவர் இராமச்சந்திரனின் ஆன்மீக தரிசனம், ஆங்கில ஆசிரியப் பெருந்தகை திரு. ஓ. ரவிக்குமார் அவர்களின் RUTS, கோவையைச் சேர்ந்த பன்மொழி வித்தகர் முனைவர். திருமதி. பிருந்தா ரவிக்குமார்  அவர்களின் VOICE I, VOICE II என்னும் ஆங்கிலக் கவிதை நூல்கள் இவை  வெளிக்கொணர்வதற்கான நூல் வெளியீட்டு வேலைகள், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் பணிக்குழு உறுப்பினர் பணிகள், சில சமுதாயப் பணிகள் இவற்றில் மன நிம்மதி காண்கிறேன். ஓய்வுக்குப்பின் அதிக நேரம் குடும்பத்தோடு செலவிடுகின்ற வாய்ப்பு கிட்டியுள்ளது.

கே. தங்களின் லட்சியக் கனவுகள் ஏதாவது கூறுங்கள்?

கவியரசு கண்ணதாசனின் பாட்டு வரிகளில் எப்போதும் நான் பரவசப்படுவேன். அவரின் பின் வரும் வரிகள் எனது கனவுகளில் ஒன்று.

  • “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்னும் வரிகளே அவை.
  • கண்ணதாசனின் நாட்டுப்பற்று மற்றும் தேசிய உணர்வு மேலோங்கும்

“பனி மலை தலையா அலை கடல் காலா

பரந்ததோர் பாரத தேசத்து

குடிகள் இனங்கள் குறையொன்றின்றித்

தலை முறை தோறும் தழைத்தினிதோங்குக!”

என்னும் கவிதை வரிகள் என் உள்ளம் திரும்பத்  திரும்ப உச்சரித்து வேண்டும்  பிரார்த்தனை வரிகளாகும்.

கே: அரசுப்பள்ளிகளை வலுப்படுத்த நீங்கள் கூறும் ஆலோசனைகள்?

நல்ல முழுமையான கட்டமைப்பு வசதிகள், அறிவியல் பார்வை மேலோங்கும் பாடத்திட்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், சிறந்த நூலகங்கள், ஆசிரியப் பணிக்கே உரிய அர்ப்பணிப்புடன் கூடிய திறமைமிக்க ஆசிரியப் பெருமக்கள், கற்பித்தலில் நவீன உத்திகள், ஒழுக்கத்தை மேம்படுத்தும் நீதி போதனை வகுப்புகள், மாணவர்களின் தனித்திறனை அடையாளப்படுத்துதல், விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கான வசதிகள் இவற்றோடு நிர்வாகத்திறன் மிகுந்த தலைமையாசிரியப் பெருமக்கள் இவர்களால் அரசுப்பள்ளிகளின் தரம் மேலும் வலுப்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைத் தொடர்ந்து பெற்று வருவதில் பெருமிதம் கொள்கின்றேன். அதற்கு கடும் உழைப்பை நல்கிய ஆசிரியப் பெருமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

கே: நீங்கள் பெற்ற பட்டங்கள், விருதுகள், பாராட்டுகள் பற்றிச் சொல்லுங்கள்?

முதுகலை வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றிய கால கட்டத்தில் வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வைத்தமைக்காகப் பலமுறை பாராட்டுக்கள் விருதுகள் பெற்றுள்ளேன்.

தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றபின் மாணவச் செல்வங்களால் பள்ளிக்குப் பெற்றுத் தந்த மாவட்ட அளவிலான விருதுகள் பின்வருவன

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது:

2006- 2007 பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாமிடமும் பனிரெண்டாம்  வகுப்பில் இரண்டாம் இடமும் பெற்று மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது

2007- 2008 ஆம் ஆண்டு மாவட்ட ALM School விருது மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

2008-2009 ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் முதல் மற்றும் மூன்றாம் இடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது.

2009- 2010 ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது.

கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது:

2010-2011 ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்காக மாநில விருது.

2010- 2011 ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் கோபி கல்வி மாட்ட அளவில் முதலிடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் விருது.

2012-2013 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் பள்ளி முதன் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியரிடம் விருது.

2013- 2014 ஆம் ஆண்டு பள்ளி முதன் முறையாக பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியரிடம் விருது.

மேலும்…

  • தமிழக அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
  • அந்தியூர் பொதுமக்களால் கல்விச்சிற்பி என்ற பட்டம்.
  • பெங்களூரு தமிழ்ச் சங்க மேடையில் பாராட்டும் விருதும்.
  • அமெரிக்க வாழ் தமிழரால் தொடங்கப்பட்ட Top Light -அமைப்பு தந்த தங்கப்பதக்கம்.
  • ஈரோடு JCI அமைப்பு மூலம் இரண்டு முறை சிறந்த தலைமையாசிரியர் விருது.
  • கவுந்தப்பாடியின் Friends Associate மூலம் தரப்பட்ட F.A.விருது.
  • தினத்தந்தி பத்திரிக்கை நிறுவனம் தந்த பாராட்டும் விருதும்.
  • ஈரோடு மாவட்ட இரு ஆட்சியர்களால் இந்திய சுதந்திர தினத்தன்று இரண்டு முறை சிறந்த தலைமையாசிரியர் விருது.
  • அமெரிக்காவில் பதியப்பட்ட Ellan Triaster International College தந்த நற்சான்றிதழ்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?

“நம்பிக்கை என்னும் நந்தாவிளக்கு

உள்ளவரையில் உலகம் நமக்கு”

எனச் சொன்ன கவிஞர் மு. மேத்தாவின் கவிதை வரிகளில் நம்பிக்கை உள்ளவன் நான். தன்னம்பிக்கை மாத இதழ் அந்த நந்தா விளக்கை குன்றின் மேலிட்டு நம்பிக்கை வெளிச்சத்தை உலகம் முழுவதும் பரப்புகிறது. அதன் கட்டுரைகளும், சாதனையாளர்களின் வாழ்க்கைச் சரிதம் மற்றும் அனுபவங்களும் வாசகர்களை வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டவராக மாற்றும் என்பது திண்ணம். இவ்வேளையில் தன்னம்பிக்கை ஆசிரியர் குழுவுக்கும், இந்த இதழில் என்னைப் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்வதற்கு ஆத்மார்த்தமாக பேருதவி புரிந்த என் ஆருயிர் நண்பர் தூசி. தியாகராஜன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.[/hide]

இந்த இதழை மேலும்

கல்லூரிக் கனவுகள்…! களையாத நினைவுகள்…!

25 ஆம் ஆண்டு வெள்ளி விழா

முன்னாள் மாணவர்கள் (1989-1993)

வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

மதுரை

நேர்காணல் : விக்ரன் ஜெயராமன்

பள்ளிக்காலம் என்பது பசுமையான நினைவுகள், கல்லூரிக்காலம் என்பது காலம் முழுவதும் மாறாத நினைவுகள். இந்நினைவுகளை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

முகம் தெரியாமல், முகவரி தெரியாமல் அனைவரும் ஒரே கூண்டிற்குள் வரும் பறவையைப் போல கல்லூரிக்கு வந்து, நண்பர்களிடம் பழகி, பிறகு முடிக்கின்ற காலத்தில் கல்லூரி முழுவதும் உறவுகளாக்கிக் கொள்வது தான் நினைவுகள்.

அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்  மதுரை வேளாண் கல்லூரி படித்த அப்போதைய மாணவ மாணவியர்கள், தற்போது 90 % அரசுப்பணி ஊழியர்கள், 5% பேராசிரியர்கள் 5 % தனியார் துறையில் மேலாளர்களாகவும் இருக்கிறார்கள்.  அவர்கள் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் மதுரை வேளாண் கல்லூரியில் நடைப்பெற்றது. முகமலர்ச்சியான இத்தருணத்தில் அவர்களை சந்தித்தோம்.. அப்போது அவர்களின் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து  கொண்டார்கள் அதிலிருந்து நாமும் பயணிப்போம்.

கே : மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தின் தோற்றம் பற்றிக் கூறுங்கள்.

இக்கல்லூரியானது 1965 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திரு. கக்கன் அவர்கள் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டது.  கல்லூரித் தொடங்கிய காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்தது. அதன் பிறகு 1977 ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் வந்தது. அன்று முதல் இன்று வரை எத்தனையோ மாணவர்களை இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் 1989 முதல் 1993 ஆண்டு படித்த மாணவர்கள் தான் நாங்கள். எங்களின் 25 வது ஆண்டு வெள்ளி விழாவை தற்போது இக்கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடினோம்.

கே : உங்களின் கல்லூரி அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

இப்பொழுதும் எங்களுக்கு நினைவு இருக்கிறது. 1989 ஆண்டு  நாங்கள் கல்லூரியில் சேர்ந்து அந்த முதல் நாள். இங்குள்ளவர்களில் பெரும்பாலனோர் கிராமப்பின்னணியில் இருந்து வந்தவர்கள். யாரும் யாருக்கும் அறிமுகமில்லாதவர்கள். எல்லா வகுப்பையும் போலவே  எங்கள் வகுப்பிலும் பெண்களே அதிகம் இருந்தார்கள், 59 பெண்கள், 17 ஆண்கள் இருந்தோம். எல்லோரும் ஒவ்வொரு கனவுகளுடன்  கல்லூரிக்கு வந்தோம்.

சிறிது நாட்களிலேயே  அனைவரிடமும் அன்பாகப் பழக ஆரம்பித்துவிட்டோம். கல்லூரி என்றாலே கலகலப்புக்கும், மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது. சொந்த பெயரை விட ஒவ்வொருக்கும் ஒரு மாற்றுப் பெயரை வைத்து தான் அழைப்போம்.

எங்களுக்கு வந்த பேராசிரியர்களும், முன்னாள் சீனியர் மாணவ மாணவியர்களும் எவ்வித சந்தேகம் கேட்டாலும் உடனுக்குடன் அதனைத் தெளிவுப்படுத்தி விடுவார்கள். அந்தளவிற்கு இணக்கமான நட்புக் கொண்டிருந்தார்கள். தேர்வு காலங்களிலும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோம். இப்படியே எங்களின் இந்த இனிமையான பயணம் தொடர்ந்து சென்றது.

கே: நீங்கள் கல்லூரி முடிந்தவுடன் இதுபோன்று சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொண்டீர்களா?

ஆம். கல்லூரி முடித்துவுடன் விடை நல்கு விழாவில் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்முடைய நட்புத் தொட வேண்டும் என்றால், நம் ஆண்டிற்கு ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தோம். அப்போதைய சூழலில் அது சரியாக இருந்தது. எங்கள் பேஜில் பெண்கள் அதிகம் என்பதால் அவர்களை அனைவரையும் ஒற்றிணைக்க முடியவில்லை.

ஒவ்வொருவரும் கல்லூரியை முடித்தவுடன் திருமணம், மேல்படிப்பு, உள்நாடு மற்றும், வெளிநாடுகளில் வேலை என்று ஒவ்வொரும் இரைத் தேடும் பறவைகளாக பல திசையில் சென்று விட்டார்கள். இது காலத்தின் கட்டாயம் தான் இதை மாற்ற முடியாது. எல்லோரிடமும் பேச முடியவில்லை என்றாலும் சிலர் அன்று முதல் இன்று வரை நட்பைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.

கே : பலதிசைகளில் உள்ளவர்களை எப்படி ஒன்றிணைத்தீர்கள்?

தற்போது அறிவியிலின் வளர்ச்சி அதிகமாக வளர்ந்துள்ளதால் சமூக வலைதளங்கான வாட்ஸ் ஆப், பேஸ்புக்,  ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்திக்  கொண்டோம். 2 மாதங்களுக்கு முன்னரே இதற்கான திட்டத்தைத் தீட்டினோம். அதன் படி அதற்கு என்று தனித்தனியே குழுக்களைப் பிரித்து அனைவரையும் அழைத்து விட வேண்டும் என்று நினைத்தோம். அதன் விளைவாக சுமார் 39  பேர் பங்கு பெற்றார்கள் வெளிநாடுகளில் இருந்தவர்கள் சிலர் ஸ்கைப் மூலம் தாங்கள் வர முடியாத காரணத்தையும், அடுத்து முறை வருகிறேன் என்ற உத்திரவாதத்தையும் கொடுத்தார்கள்.

கே : அன்று ஒரு நாள் நிகழ்வு எப்படியிருந்தது?

நாங்கள் நினைத்தது போலவே தூரத்திலிருந்து வந்தவர்கள் ஒரு நாள் முன்னரே விழா நடக்க இருக்கும் ஹோட்டல் ஆகாஷ் கிளப்பிற்கு வருகைப் புரிந்து விட்டார்கள்.

4 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கெல்லாம் விழா இனிதே தொடங்கியது.  பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் மனதில் மிகுந்த முகமலர்ச்சியுடன் சந்தித்து, கைக்குலுக்கி வரவேற்று கொண்டோம்.

5 ஆம் தேதி  காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கிய விழாவில் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். அன்று உலக நண்பர்கள் என்பது எங்கள் விழாவிற்கு கூடுதல் பலம் கொடுத்தது.  படிக்கின்ற காலத்திலும் தற்போதும் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவிகளையும், செய்யும் உதவிகளையும் கூறிக்கொண்டார்கள். அனைவரிடத்திலும் முகம் மாற்றம், உடல் மாற்றம் இருந்தது. மாணவர்களாய் பிரிந்து இன்று பல அதிகாரிகளாய் சந்தித்துக் கொண்ட அத்தருணம் மிகவும் சுவாரஸ்சியமாக இருந்தது. குறிப்பிட்ட நேரப்படி ஒவ்வொரு நிகழ்வையும் சரியாக அமைத்துக்  கொண்டோம்.   பிறகு நாங்கள் அமர்ந்து படித்த வகுப்பை, பேராசிரியர் முருகன் அவர்கள் அழைத்துச் சென்று காட்டினார். மனதிற்குள் மீண்டும் நாங்கள் படிக்க வந்ததாகவே உணர்ந்தோம். அந்தளவிற்கு மட்டற்றமகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த வகுப்பில் நாங்கள் செய்த அத்துனை நிகழ்வுகளும் எங்கள் மனக்கண் முன் காவியமாக ஓடியது. மற்ற நாட்கள் கடிகார முள் சுற்றுவதை விட அன்று வேகமாகச் சுற்றியதை எங்களால் உணர முடிந்தது. கல்லூரிக்கு முன்வாயலில் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

கே: 25 ஆண்டுகளின் உங்களின் கல்லூரி நினைவுகள் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் எங்களின் கால் தடம் படாத இடமே எதுவுமில்லை என்று தான் சொல்ல  வேண்டும். அதற்கு இங்குள்ள மரங்களும் கட்டிடங்களும், கேண்டீனும் தான் சாட்சி.

எல்லா மரங்களும் எங்களைப் பற்றி நன்றாக கூறும், அமர்ந்து படித்த போதும், சாப்பிடும் போதும், நண்பர்களிடம் அரட்டை அடித்த போதும் எங்களோடு ஒன்றோடு ஒன்றாக இருந்த இந்த மரங்கள் தான்.

நாங்கள் படித்த போது இருந்ததை விட நிறைய கட்டிடங்கள் தற்போது வளர்ந்து விட்டது. ஆனாலும் இன்னும் எங்களின் கல்லூரி நினைவுகளை நினைவுப்படுத்தும் எத்தனையோ நினைவுச் சின்னங்கள் இன்னும் இருக்கிறது.  மீண்டும் கையில் புத்தகத்துடன் நண்பர்களோடு ஒன்றாக வகுப்பிற்குச் சென்ற அந்த நாட்கள் வராத என்ற ஏக்கமும் எங்களுக்குள் இருக்கிறது.

நாங்கள் படித்த போது இருந்த பேராசிரியர்கள் இன்றும் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் மனதிற்குள் ஆனந்தமே தென்பட்டது.[hide]

கே: தற்போது நீங்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் பொறுப்புகள் பற்றிச் சொல்லுங்கள்.

எங்கள் பேஜில் படித்தவர்களின் 95 சதவீதம் பேர் அரசு அதிகாரிகளாகவே இருக்கிறார்கள். அதிலும் சில பேர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். வனிதா U.K, முனைவர். ராஜேந்திரன் Senior Scientist at Moderna Therapeutics U.S, நாகூர் மீரான் கட்டார், முனைவர். மார்க்ஸ் சாமுவேல் பிரிட்டிஸ் கோலம்பியா பல்கலைக்கழகம் கனடா, ஜெயக்குமார் கனடா, ஜெயஸ்ரீ U.S, சுஜிவா கொழும்பு, சிங்கார லீனா வேளாண் துணை இயக்குநராக இருக்கிறார்.   நாவூர் மீரான், ரேணுகா, ராஜேஷ், அபர்ணா சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு குழுவில் இருந்தார்கள். பலர் வேளாண் துணை இயக்குநர், அ.ஞ, காவல் துறை துணை ஆணையர், டிஆர்டிஓ, திண்டுக்கல் பிரஜெக்ட் ஆபிசர் போன்ற பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

கே: அன்று நடத்த நிகழ்வுகளில் இன்றும் மறக்க முடியாத நிகழ்வுகளாக நீங்கள் பார்ப்பது?

கல்லூரிக்காலங்களில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோமா இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதேனும் மறக்க முடியாத சம்பவத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நண்பர் ஒருவர் நன்றாகப் படிக்கக்கூடியவர். ஒருநாள் பூச்சிகள் பற்றி ஆய்வு நடைப்பெற்றது. அப்போது ஒவ்வொருவரும் ஒரு இறந்த பூச்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்று வகுப்பு பேராசிரியர் கட்டளையிட்டியிருந்தார். அனைவரும் இறந்த பூச்சிகளைக் கொண்டு வந்திருந்தார்கள்.

ஒருவர் மட்டும் அன்று பிராஜெக்ட் என்பதை மறந்துவிட்டார். அன்று காலை தான் நண்பர்கள் சொல்லி அவருக்குத் தெரிந்தது. இதனால் உடனே வேறு வழியில்லாமல் உயிருடன் இருந்த பூச்சை ஒரு பொட்டிக்குள் போட்டு எடுத்து வந்துவிட்டார். அவரின் பெயரை அழைத்தவுடன் அந்தப்  பொட்டியைத்திறந்தவுடன் உயிருடன் இருந்த பூச்சிகள் ஆய்வகத்திலேயே பறக்க ஆரம்பித்துவிட்டது. இதைப் பார்த்த ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் மிகப் பெரிய சிரிப்பலை எழுந்தது.   வகுப்பில் ஒரு முறை ஆசிரியர் பிராட்டிக்ல் தேர்வு சொல்லியிருந்தார். அப்போது வகுப்பில் உள்ள ஒரு மாணவியைப் பார்த்து ஓட்டுமொத்த வகுப்புமே எழுதிவிட்டோம். அடுத்த நாள் வகுப்பில்  பேராசிரியர் அவர்கள் நீங்கள் அனைவரும் இந்த பிராட்டிக்கலில் ஒரு மாதிரியான தவறைச் செய்திருக்கிறீர்கள் யாரோ ஒருவரைப் பார்த்து ஒட்டு மொத்த வகுப்புமே எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னது. இதையும் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டார்கள். அவ்வளவு இன்பத்தைக் கொடுத்தது.

இது போன்ற எத்தனையோ நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொருவரின் கல்லூரிப்பயணமும் ஒரு மறக்க முடியாத சகாப்தம் என்று சொன்னால் அது மிகையல்ல.

கே : குடும்பத்துடன் சந்தித்த அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

ஒரு மாதத்த்திற்கு முன்னரே இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்பது எங்கள் குடும்பத்திற்குத் தெரியப்படுத்திவிட்டோம். இதைக் கேட்டதிலிருந்து இன்று வரை எங்களை விட எங்கள் துணைவியாரும் குழந்தைகளுமே அதிகம் ஆசைப்பட்டார்கள்.

காரணம் குழந்தைகள் அம்மா அம்மா படித்த கல்லூரியைப் பார்க்க வேண்டும், கணவன் மனைவி படித்த கல்லூரியைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். எங்களுக்கும் மனதிற்கு மனதில் மகிழ்ச்சியிருந்தது.

ஒவ்வொருவரும் அவர்களின் குழந்தை அழைத்து நண்பர்களிடம் அறிமுகம் செய்து கொண்டோம். இது ஒரு 25 ஆண்டுகால நண்பர் சந்திப்பு என்பதை விட குடும்ப சந்திப்பு என்று சொன்னால் இன்னும் கூடுதல் பலமாக இருக்கும்.

அவரவர்கள் அவர்களின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு படித்த வகுப்பை, அமர்ந்து பேசிய இடத்தை, விளையாட்டு மைதானத்தை  எல்லாம் அழைத்து சென்று காட்டினார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இன்பச் சுற்றுலாவுக்குச் சென்ற  மகிழச்சி இருந்தது. பிள்ளைகள் இதை பெரிதாக நேசித்தார்கள். நாங்கள் படித்த அனுபவத்தையும், ஒற்றுமையுணர்வு பற்றியும் விளக்கினோம். எங்களைப் போலவே நீங்கள் ஒற்றுமையுணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினோம்.

வந்தவர்களின் நிறைய பேரின் பிள்ளைகள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கே:  இறுதியாக ஏதேனும் திட்டம் வகுத்துக் கொண்டீர்களா?  

இந்த 25  ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் நாங்கள் சந்தித்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை மேலும் 2 ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தோம். அனைவரும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

நாங்கள் எதிர்பாராத சந்தித்த இன்றைய நாள் நண்பர்கள் தினம் என்பதால் இனி சந்திக்கும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்திலேயே கொண்டாட வேண்டும் என்று நினைத்தோம்.

அடுத்த சந்திக்கும் நிகழ்வில் இன்று தவறியவர்கள் அனைவரையும் வர வைக்க  வேண்டும் என்று விரும்பினோம்.

இறுதியாக, ஒரு குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அது அனைவருக்கும் ஒரு நகல் கொடுத்தோம். பசுமையான நினைவுகளுடனும், பாசமான உறவுகளுடன் பயணித்தோம்.

விழாவில் பங்கேற்றவர்கள்

அமுதா, வனிதா, பாரதி, சுப்புலட்சுமி, அபர்ணா, ராஜராஜேஷ்வரி, நிஷா, ரேணுகா, சுஜாதா, சுசிலா, உஷா, செல்வி, கீதா, சுஜிவா, புனிதா, கமலா, லதா, மனோரஞ்சிதம், வாசுகி, லீலாவள்ளி, ராமலட்சுமி, மாலா, ஜீனா, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராஜேஷ், மீரான், ராஜா, மகேஷ்வரன், காளி, அரவிந்தன், இந்திரா, உதயகுமார், கவிதா, தேன்மொழி, லட்சுமணன், சிங்கார லீனா

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்றவர்கள்.

மார்க்ஸ் அப்பிரஹாம், ஜெயக்குமார்,  ஜெயஸ்ரீ, கிருபா, பார்த்திமா[/hide]

இந்த இதழை மேலும்

விழிப்போடு இரு விண்ணைத் தொடு…

C.பிரதீப்

நிர்வாக இயக்குநர், ஜெயச்சந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ்

நிர்வாக அறங்காவலர்,லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன்,

கோவை

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற பொன் மொழிக்கு ஏற்றவாறு முதல் தலைமுறையினரின் வழிகாட்டுதலால் இரண்டாம் தலைமுறையினரான இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையைôய் வாழ்ந்து பல சாதனைகளைப் புரிந்து வருபவர்களில் இவரும் ஒருவர்.

நம்பிக்கையோடு நடைபோடு நாளைய உலகம் உன் கையில் என்ற தாரக மந்திரத்தை நாளெல்லம் நினைத்து, அதன் வழி உழைத்து, இன்று உயர்ந்த சாதனையாளர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையல்ல.

தோல்வி வரும் போது அதைப் படிக்கற்கலாக மாற்றுங்கள், அதுவே வெற்றி பெரும் பொழுது அதை ஊக்கப்படுத்தும் கருவியாகக் கொண்டு மேலும் வளருங்கள் என்னும் தன்னம்பிக்கை வரிகளுக்குச் சொந்தகாரர்.

உன்னதமான பல சேவைகளை செய்து, கூட்டாக, குழுக்களாக ஒன்றிணைந்து இயற்கையோடு இணைந்து வாழ மரங்கள் நட்டும், பல மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் சுய வேலை வாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைத்திருக்கும் சாதனையாளர்.

இவரின் மிகப்பெரிய பலம் சகோதரத்துவம் சார்ந்த ஒற்றுமை, முதல் தலை முறையினரின் வழிகாட்டுதலை பேணுதல், சிறந்த மேலாண்மைத்துவம் மிக்கவர், அனைவரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடியவர், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மிக்கவர் இப்படி பன்முகம் திறமைக் கொண்ட ஜெயச்சந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ் நிர்வாக இயக்குநர், லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் அறங்காவலர் C.பிரதீப் அவர்களின் நேர்முகத்திலிருந்து இனி பயணிப்போம்.

கே : உங்களின்கூட்டுக் குடும்பத்தைப் பற்றச் சொல்லுங்கள்?

எங்களுடைய பூர்வீகம் என்று பார்த்தால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். இங்குதான் என் தந்தைப் பிறந்தார். என் தந்தையின் பெயர் திரு. பி. சந்திரசேகர், தயார் திருமதி. ஜெயலட்சுமி, பெரியப்பா பி. அன்பழகன், சித்தப்பா பி. ராமலிங்கம், மற்றும் பி. ஆறுமுகம். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் என்னுடைய தாத்தா வெங்காய வியபாரம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இவ்வியபாரம் எப்பொழுதும் ஒரே விலை நிலையாக இருக்காது. இதனால் இத்தொழில் தொய்வு அடைந்தது.

சில ஆண்டுகளிலேயே என்னுடைய தாத்தா மரணம் அடைந்து விட்டார். இதனால் என் தந்தைக்கும் அவர் உடன்பிறந்தவர்களுக்கும் குடும்பத்தின் மீது பொறுப்பு கூடியது. இதனால் அவர்கள் வேலைக்குச் செல்ல முனைந்தார்கள். அப்போது அவர்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் இரண்டு ரூபாய் தான். என்னுடைய தந்தை சொல்வார் நான் திருமணத்தின் போது தான் கால்சட்டையே(பேண்ட்) அணிந்தேன் என்று, அந்தளவிற்கு அப்போது வறுமையின் பிடியில் இருந்தார்கள். அதன் பின்னர் ஒரு ஸ்கிராப் வியபாரிடம் வேலை செய்து வந்தார்கள் சிறிது காலத்தில் அவர்கள் ஸ்கிராப் பொருளை வாங்கி விற்பனை செய்தார்கள். அதன் பிறகு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இப்படி பல சின்னவடிவில் கடைகளைத்திறந்தார்கள். பல சிக்கல்களுக்கும், துன்பத்திற்கு நடுவிலும் எப்போதும் எல்லோர் இடத்திலும் அன்பை மட்டுமே போதித்துக் கொண்டோம். எங்களுக்குள் அவ்வபோது கூச்சல் குழப்பம் இருந்தாலும், அன்பும் அரவணைப்பும், எங்களை ஒற்றுமையாகவே வைத்திருந்தது. இன்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்றளவும் நாங்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம். அந்தக்குடும்பத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

கே : நீங்கள் படித்தது பயின்றது பற்றிச்சொல்லுங்கள்?

எங்களுடைய பெற்றோர் பட்ட கஷ்டங்களை நாங்கள் படக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். எங்களின் வாழ்க்கையில் மிகுந்த அக்கரை எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் தான் படிப்பதற்கு வசதியில்லாமல் படிக்கமுடியவில்லை. நம்முடைய பிள்ளைகள் நன்றாகப்படிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் கோவையிலுள்ள லெசியு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பி. எஸ். ஜி. டெக் கல்லூரியில் பேசன்ஸ் டிசைன்ஸ் படிப்பையும் படித்தேன்.

 ஆரம்பத்தில் நான் சராசரிக்கும் கீழ் படிக்கும் மாணவன் தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போது பல தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். இதனால் என்னை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினார்கள், அந்தப் பார்வை தான் என்னை சிந்திக்க வைத்தது. நாமும் நன்றாகப் படித்து சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஆர்வமும் எனக்குள் வந்தது. பிறகு தான் பாடத்திட்டத்தை விட எனக்கு என் குடும்பத்திலும் ஆசிரியர் இடத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் மனதிற்குள் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பின்னர் தான் சுயமாய் முடிவெடுக்க ஆரம்பித்தேன். பாடத்திட்டத்தை விட எனக்கு கிடைத்த அனுபவம், சூழ்நிலைகள் போன்றவை தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது. இதற்கு என்பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் என் சுற்றத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.      

கே : பேசன்ஸ் டிசைன் முடித்த நீங்கள் தொழிலில் ஆர்வம் வந்தது பற்றி?

நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் முன்னாள் மாணவர்களுக்கு விடை நல்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இதனால் என்னுடன் பயிலும் சக மாணவர்களிடம் பணம் வசூலித்து அவர்களுக்கு விழா எடுக்க திட்டம் வைத்திருந்தோம். அதன் படி அனைவரும் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தில் அவர்களுக்கு உணவு பரிமாறினோம். மீதம் பணம் மிஞ்சியது. அந்தப்பணத்தை என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது தான் தையல் மிஷின் வாங்கி வடவள்ளியில் உள்ள உதவும் கரங்களுக்குக் கொடுத்தோம். அப்போது என் மனதில் ஒரு புத்துணர்ச்சித் தோன்றியது.

அதன் படி பழைய இரண்டு மிஷன்களை வாங்கி அவற்றை சில வேலைபாடுகள் செய்து, தேவையான இருவர்களுக்கு கொடுத்தோம். ஆனால் வாங்கிய விலை குறைவு அவற்றை வேலைகள் செய்து கொடுக்கும் போது அந்த மிஷனில் இலாபம் கிடைப்பதை உணர முடிந்தது. ஒரு மிஷினுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை இலாபம் பார்த்தேன். மார்க்கெட்டில்  அதிக இலாபம் கிடைத்ததை என்னால் உணர முடிந்தது. இப்படித்தான் தொழிலில் வர முனைந்தேன்.

கே: குடும்பத் தொழிலில்  இணைந்தது பற்றிச் சொல்லுங்கள்?   

நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தேர்வு விடுமுறை எனக்குக் கிடைத்தது, இதனால் இவ்விடுமுறையை சிறந்த முறையிலும், தேவையான வழியில் செலவிட வேண்டும் என்று நினைத்து முதன் முதலில் குடும்பத் தொழிலுக்கு வந்தேன். தினந்தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொண்டே இருந்தேன். அடுத்த நாள் அடுத்த நாள் ஆர்வம் பெருகிக்கொண்டே போனது. சென்ற சில நாட்களிலேயே எனக்கு மிகப் பெரிய பொறுப்பை நம்பிக்கொடுத்தார்கள் அதையும் சிறப்பாக கையாண்டேன். எங்கள் குடும்பத்தைப் பொறுத்த வரை எல்லா இடத்திலும் எல்லாப் பணியிலும் பொறுப்புடன் கூடிய சுதந்திரம் கொடுத்தார்கள். இந்த சுதந்திரத்தை நான் முறையாகப் பயன்படுத்திக்  கொண்டேன். மூன்று ஆண்டு கல்லூரிப்படிப்பையும், எம். பி. ஏ பட்டப்படிப்பையும் படித்துக் கொண்டு தொழிலையும் பார்த்து வந்தேன்.[hide]

கம்பெனி பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டேன். அப்போது கம்பெனி பெரிதும் கடனில் இருந்தது. சில முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஆனது. இதை என்னால் உணர முடிந்தது. அவர்களும் எங்களின் வருகையை எதிர்ப்பார்ப்பதை உணர முடிந்தது. இதனால் தான் இந்நிறுவனத்தில் நான் இணைந்தேன். சிறப்புடன் செய்ய முனைந்தேன்.

கே: நீங்கள் இணைந்த பின் இந்நிறுவனத்தின் வளர்ச்சியின் பாதைக்கு எப்படி கொண்டு சென்றீர்கள்?

நான் இந்நிறுவனத்தில் இணைந்ததே இதை ஒரு வளர்ச்சிப் பாதையை நோக்கி எப்படியும் கொண்டு சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் மட்டுமே தான். இந்த நிறுவனம் ஒரு தனிமனிதனைச் சார்ந்தோ, அல்லது குடும்பம் சார்ந்தோ இல்லாமல் இதில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் சமூகம் சார்ந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

வெளிநாட்டில் படித்து முடித்த என்னுடைய சகோதரர்கள் ஐவரும் எங்களோடு எங்கள் நிறுவனத்திலேயே இணைந்து விட்டார்கள். இவர்கள் இணைந்தது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியது.

எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை எப்போதும் எங்களை கட்டுப்படுத்தியதே இல்லை. நாங்கள் எது செய்தாலும் சிறப்பாகத்தான் இருக்கும் என்று நம்பினார்கள். இதனால் நாங்கள் வளர்ச்சி மற்றும் புதிய முயற்சி சார்ந்த  செயல்களை செய்வதற்கு ஒரு தடையில்லாமல் இருந்தது.

புதிய தொழிலும், இருக்கின்ற தொழிலையும் விரிவுப்படுத்தினோம். இதில் பேட்டரி தயாரித்தல், பிளாஸ்டிக் பொருட்கள் மீட்டுருவாக்கம் செய்தல், மெட்டல் அலாய், மெட்டல் மறுசுழற்சி செய்தல், இ வேஸ்ட் போன்ற தொழில்களை செய்தோம்.

2006 ஆம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து 100 பேர் பணியாற்றினார்கள், ஆனால் இப்போது 1000 பேர் எங்களிடம் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு எல்லாம் காரணம் எங்கள் குடும்பத்தின் ஒற்றுûயும் பல மனிதர்களின் உழைப்பும் எங்களுக்கு கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

வளர்ச்சி என்பது எப்படியிருக்க வேண்டும் என்றால் தானும் உயர்ந்து தன் குடும்பமும் உயர்ந்து, தன்னை சார்ந்தவர்களும் உயர்ந்து இந்த சமூகமும் உயர வேண்டும் அது தான் சிறந்த வளர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

கே: ஒரு பொருளை சொந்தமாகத் தயாரித்து அதை சந்தைப்படுத்துவதிலுள்ள சவால்கள் என்னென்ன?

ஒரு பொருளைத் தயாரித்து அதை விற்பனை செய்வது என்பது என்னைப் பொறுத்த வரை சரியான முடிவல்ல. நுகர்வோரின் தேவையை அறித்து அவற்றை நாம் கொடுக்க வேண்டும், அப்போது தான் நம்மால் வெற்றி பெற முடியும்.

முதலில் என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தேவைக்கு ஏற்றார் போல் கடினமான உழைப்ûப் போட்டு, அவர் எவ்வாறு எண்ணினாரோ அப்படி ஒரு பொருளைத் தயாரித்து அவர் கையில் கொடுக்கும் பொழுது அவருக்கும் மனநிம்மதி தயாரித்து கொடுத்த நமக்கும் சந்தோஷம் ஏற்படும்.  இப்படி தான் தயாரித்த பொருளை சந்தைப் படுத்த வேண்டும்.

சரியான பொருளை, சரியான இடத்தில், சரியான நேரத்தில் எவர் ஒருவர் முறையாக வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்துகிறார்களோ அவர்களே தொழிலில் வெற்றி பெற்றவர்களாக மாறுகிறார்கள்.

கே: ஒரு நிர்வாகத்தின் மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?

நிறுவனம் மட்டுமல்ல எந்த ஒரு இடத்திலும் சரியாகவும், முறையாகவும் ஒரு செயல் நடக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு மேலாண்மை மிக்க தலைவர் என்பவர் மிகவும் முக்கியம்.

ஒரு நிறுவனம் வளர்ச்சியான பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அங்கு நல்ல முதலாளி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஆனால் ஒரு நல்ல தலைவன் இருக்க வேண்டும்.

நிறுவனத்தை வழிநடத்த பணம், பொருள், இயந்திரம், தொழிற்நுட்ப கருவிகள் தான் மூலக்கூறு என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவற்றை அனைத்தையும் இயக்குவது மனிதர்கள் தான் என்பதை  ஒரு நிறுவனத்தின் தலைவர் புரிந்து  கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் ஒரு நல்ல திறமைமிக்க பணியாளர்கள்  கொண்ட குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக்குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும். நிறுவனத்தின் இலக்கு என்ன, அந்த இலக்கை அடைய நாம் எவ்வாறு தயார் படுத்த வேண்டும் போன்ற நன்னெறிகளை ஆரோக்கியம் சார்ந்த கலாச்சாரத்தைப் புரிய வைக்க வேண்டும்.

பணம் இருக்கும் அனைவரிடத்திலும் மகிழ்ச்சி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் மகிழ்ச்சியும், அன்பும் இருக்கும் இடத்தில் செல்வம் தானாக வந்து சேரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நிறுவனம் சார்ந்த ஒவ்வொருவரும் வளர வேண்டும், அந்த வளர்ச்சி தான் நிர்வாகத்தை உயர்த்தும், வாங்குபவர், விற்பவர், இவருக்கும் மனமகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்க வேண்டும் என்பதை புரிந்து செயல் பட வேண்டும்.

கே : லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் தொடங்கியது பற்றி?

அன்பை வாரி வாரிப்  பொழியும் நமது அன்னையைப் போல, இயற்கை அன்னை நமக்கு வாரி வழங்கிய இயற்கை வளங்கள் இம்மண்ணில் ஏராளம். அன்பு மயமான இவ்வுலகிற்கு உள்ளேயும் வெளியேயும் நாம் நன்றியுணர்வோடு இருப்போம். இந்த புரிதலுக்காக தான் மார்ச் 11 ஆம் நாள் 2017 ஆண்டு லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் துவங்கப்பட்டது.

நம் வாழ்க்கை எண்ணம், சொல், செயல்கள் போன்றவற்றால் ஆனது. நம் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ஏதேனும் ஒரு விதத்தில் நன்றிகளை நம் மனதில் ஊன்றி, அதை பிறர் மனதில் மலர செய்ய வேண்டும்.

நோக்கம் சரியாக இருந்தால் இலக்கு எளிதாக இருக்கும், நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கையைப் பேணிகாத்து, எதிர்கால நம் சந்ததியர்களுக்கு ஒரு நல்ல இயற்கை வளம் மிக்க சமுதாயமாகக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். என்ற உயரிய நோக்கத்தால் தொடங்கியது தான் இந்த அமைப்பு.

கே : மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்புத்திட்டம் ஏற்படுத்தியது பற்றி?

உலகத்தில் மானிடராய் பிறக்கும் அனைவருமே ஏதேனும் ஒரு விதத்தில் திறமையானவர்கள். அவர்கள் திறமை அங்கீகாரிக்கப்படாமல் இருக்கலாம், இல்லை என்றால் அவர்களே தங்களின் திறமையை வெளிப்படுத்தாமல் இருக்கலாமேதவிர திறமையற்றவர்கள் என்று இங்கு யாரும் இல்லை.

சராசரியாக உள்ள மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைத்துவிடும். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படி உடனே வேலை கிடைத்துவிடுவது இல்லை. ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்த்து பரிதாபம் பட வேண்டுமென்றால் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக உதவி செய்ய முன்வருவதில்லை .

நிறைய வீட்டில் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கி வைக்கும் நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை வாங்கித்தருவதை விட சொந்தமாக சுயத் தொழிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினோம்.

மொத்தம் 60 வகையான சுய வேலைகள் இருக்கிறது. பெட்டிக்டை வைத்துக்கொடுப்பது, தையல் இயந்திரம் வாங்கிக் கொடுப்பது, ஆடு மாடு வாங்கிக் கொடுப்பது, நாட்டு மாட்டில் பால் வியபாரம் செய்ய வைப்பது, ஜெராக்ஸ் கடை,  சுயத்தொழில் புரிவது இப்படி நிறைய சுய வேலைவாய்ப்புகள் செய்திருக்கிறோம் இதுவரை 530 பேர் இதன் மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள். இதில் 93% பேர் மாதம் 8ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்.

நாங்கள் ஒரு மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தவுடன் உணர்ச்சி வசப்பட்டோ, பரிதாபப்பட்டோ அவர்களுக்கு தொழிலைக் கொடுப்பதில்லை, அவர்களைப் பற்றி விபரம் அறிந்து, நேர்முகம் எடுத்து பிறகு தான் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

இவரால் இது செய்ய முடியுமா? உறவினர்கள் உதவி இருக்கிறதா என்று எல்லாம் பார்த்த பின்னரே அவர்களுக்குத் தொழிலை ஏற்படுத்தி இருக்கிறோம். கொடுக்கும் வேலையை சென்மையாக செய்யும் பொழுது தான் நமக்கு ஆனந்தமாக இருக்கும்.

இவர்களுக்கு மூன்று வேலை உணவு கிடைத்தால் மட்டும் அவர்கள் வாழ்ந்திட முடியாது, அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அறிந்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவைப்பதே எங்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

கே: மரம் நடுவதற்கான காரணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் எப்போதும் சாலை ஓரத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்பது வழக்கம். அப்போது அருகில் இருக்கும் மரத்தில் பறவைகள் வந்து தங்கும். அதைப்பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். யாரோ ஒருவர் வைத்த மரம் இன்று இத்தனை பறவைகளுக்கு வீடாக இருக்கிறதே என்று தோன்றியது. அதுமட்டுமின்றி மரத்தின் அடியில் நிறைய பேர் அமர்ந்து ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். மரம் என்பது ஐம்பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதனால் நாமும் நிறைய மரம் நடவேண்டும் என்ற எண்ணமும் விழிப்புணர்வும் தோன்றியது. இயற்கை வளங்கள் அனைத்துமே கொடுக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு பொருளும் தொடர் சங்கிலியாகக் கொடுத்துக்  கொண்டே இருக்கும். இயற்கையே போல் மனிதர்கள் வாழ்ந்தால் மட்டும் அவர் முழுமைத்தன்மை பெறுகிறார்.

தற்போது கோவை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் மரத்தை நட்டுக் கொடுத்திருக்கிறோம். இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளிலும் அவ்வாறான மரத்தை நடத்திட்டம் வகுத்துள்ளோம்.  இதுவரை 25,000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் எந்த வேலை செய்தாலும் அது பலரால் பார்க்கப்படுகிறது, ஈர்க்கப்படுகிறது, இதனால் எதையும் மனமுவந்து செய்தல் வேண்டும்.

எந்த வேலைகளையும் யார்  செய்தார்கள் என்று பார்ப்பதை விட எப்படி செய்தார்கள் என்று தான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இதனால் எது செய்ய வேண்டும் என்றாலும் அதில் மிகவும் அக்கரையோடும் முனைப்போடும் செய்தோம்.

கே : வளரும் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?

உடலுக்கும், மனதுக்கும், உணர்வுக்கும், ஆத்மாவுக்கும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். தன்னை நன்றாகப் பார்ப்பவர்கள் தான் தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.

எந்த ஒரு சூழ்நிலையையும் முழுமையாக ஏற்று எவர் ஒருவர் வாழ்வில் எதிர்நீச்சல் போடுகிறார்களோ, அவர்களே வாழ்க்கையில் வெற்றியாளராகவும், தலைவராகவும் வருவார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை, முழுமையாக உங்களுக்கு பிடித்த துறையாக இருத்திட வேண்டும்.

புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் துறையில் உங்களை முழுமையாகப் பிடித்த துறையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

தனது பெற்றோர்கள், சுற்றத்தார்கள், குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் இவர்களிடம் முழுமகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்.

கே : நன்றியுணர்வு (லெட்ஸ் தேங்ஸ்) என்று பெயரிட காரணம்?

உணர்வுகளின் சிறந்த உணர்வு தான் அன்பு. அந்த அன்பின் உன்னத தன்மை தான் நன்றியுணர்வு. இந்த நன்றியுணர்வு முழுமைப் பெற்றாலே கொடுக்கும்தன்மை தானாக வந்து விடும். ஆதலால் ஒவ்வொருவருக்குள் நன்றியுணர்வு இருத்தல் வேண்டும்.

நமக்கு மனநிறைவும், நிம்மதியும் வேண்டுமெனில். நம்முடைய மனிதில் நன்றியுணர்வை அதிகரிக்க வேண்டும். இந்த நன்றியுணர்வு நம்மையும் நமது சமுதாயத்தையும் நல்வழிப்படுத்தும்.

நன்றி எனும் ஒரு வார்த்தை நம் வாழ்வையும் இவ்வுலகத்தையும் அர்த்தமுடையதாக்கும் நாம் பருகும் ஒரு குவளை நீரில் ஒட்டுமொத்த இயற்கையின் பங்களிப்பு இருப்பதை நம்மால் மறுக்க முடியுமா? நாம் உண்ண, உடுத்த, உறங்க நல்ல சௌரியங்களுடன் வாழ நம்மை சுற்றி பல பேரும், இயற்கையும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இயற்கை உணவாக நீராக, நெருப்பாக, திடமாக நாம் வாழ்வதற்கான காரணிகளை சரிவிகித்தில் வழங்கி நம்மையெல்லாம் அரவணைத்துக் கொண்டிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இவற்றிக்கெல்லாம் நம் மறுபதிலிடுதல் என்ன? என்றால் அவற்றிக்கு நாம் நன்றியுணர்வோடு இருப்பது சிறந்தது.

கே: எதிர்காலத்திட்டம் பற்றி?

உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உறுதியாய் நிற்க வேண்டும். நாங்கள் இப்போதும் செய்யும் தொழிலை மேலும் உயர்வடைய வைக்க வேண்டும். நிறைய பேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் வசந்தத்தைக் கொடுக்க வேண்டும்.

இந்த பவுண்டேசன் மூலம் நிறை நன்மைகள் செய்ய வேண்டும். ஊனமுற்றோர்களை முடித்த அளவிற்கு அவர்களின் சொந்த உழைப்பில் வாழ வழிவகைச் செய்ய வேண்டும்.

இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த திட்டங்களை நடைமுறை படுத்த வேண்டும், நிறைய மரங்களை நடுதல் வேண்டும். நாட்டை பசுமையாகப் பாதுகாக்க வேண்டும்.

ஒருவரின் எண்ணமே சொல்லாகும், சொல்லே செயலாகும், செயலே வாழ்க்கையாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.[/hide]

இந்த இதழை மேலும்

இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…

அறுசுவை வள்ளல் திரு. P. ரஞ்சித்’ஸ்

ரஞ்சித்’ஸ் பிளசிங் கேட்டரிங் ,

சமூக சேவகர் மற்றும் மனித நேய மாமணி,

கோவை.

மனித வாழ்க்கையில் அனைவருக்கும் இன்பமான வாழ்வு அமைவதில்லை. சிலர் அதை அடையமுடியவில்லை என்று ஆத்திரம் கொள்வர்கள் உண்டு, வருத்தம் கொள்பவர்களும் உண்டு இவர்கள் எல்லாம் வாழக்கையில் போராட முன் வராதவர்கள் என்றேசொல்லலாம். எவர் ஒருவர் துன்பத்தை ஏணிப்படிகளாக நினைத்து ஏற்றம் கொள்கிறார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் இவர் சற்றும் சளைத்தவர் அல்ல.

முயற்சி தோற்கலாம் முயற்சிகள் எப்போதும் தோற்கக்கூடாது என்பது தான் இவரது வேதவாக்கு, எப்போதும் சாதிக்க வேண்டும், தன் சாதிப்பால் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருப்பவர்.

சிந்தித்து பேசினால் சிறப்பாய் இருப்பாய்

பொறுமையாய் பேசினால் அருமையாய் இருப்பாய்

உண்மையாய் பேசினால் உயர்வாய் இருப்பாய்

நன்மையாய் பேசினால் நலமாக இருப்பாய்

அன்பாய் பேசினால் ஆனந்தமாய் இருப்பாய்

ஆராய்ந்து பேசினால் அறிஞராய் இருப்பாய்

இஃது இவரின் மிகச்சிறந்த பொன்மொழிகள். எப்போதும்  எதுமை மோனையோடும் நகைச்சுவை கலந்தும் வெகுவாக அனைவரையும் கவரும் பேச்சாற்றல் மிக்கவர்.

எளிமை தான் இவரின் சிறந்த அடையாளம். மற்றவருக்கு உதவுதல்  என்பது இவரின் தனித்தன்மை படித்தது குறைவு என்றாலும் இன்று பார் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக் கிறார் என்றால் அவரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

மனித நேயமிக்கவர், வரியவருக்கு வாரியளிப்பவர், இறைப்பற்று மிக்கவர், சிறந்த நிர்வாகி, மற்றும் மனித நேய மாமணி அறுசுவை வள்ளல் ரஞ்சித்’ஸ் பிளசிங் கேட்டரிங் திரு. ட. ரஞ்சித் அவர்களின் நேர்முகத்தோடு இனி பயணிப்போம்.

கே: உங்களின் இளமைகாலம் பற்றிச் சொல்லுங்கள்?

எனது தந்தையின் ஊர் திருச்சி மாவட்டம் வேலைத் தேடி இலங்கையில் குடிப் பெயர்ந்தார்கள். அங்கு தான் நான் பிறந்தேன். பெற்றோர் பழனிசாமி மாரியம்மாள் இவரும் இலங்கையில் உள்ள அட்டன் என்னும் பகுதியில் டீ எஸ்டேட் தொழில் செய்து வந்தார்கள். அங்குள்ள அரசுப்பள்ளில் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னுடைய தந்தையின் வருமானம் உண்பதற்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது. வறுமை எல்லாத் தருணத்திலும் எங்களோடு உறவு கொண்டேயிருந்தது. இதனால் என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. பெற்றோர்களையும் கஷ்டபட வைக்க மனம் வரவில்லை. இதனால் அவர்களோடு நானும் இணைந்து அவர்கள் செய்யும் வேலையை நானும் செய்தேன். என்னுடைய 17 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் வெளியேறியது என்னுடைய குடும்பத்திற்கு அப்போது தெரியாது. எப்படியும் முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கை மட்டும் என்னிடம் இருந்தது.

கே: வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அடுத்து உங்கள் வாழ்வில் நடந்தது பற்றி?

வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் எங்கு செல்லலாம் என்றும் முடிவெடுத்தேன். எனக்கு இங்கு எல்லா இடமும் புதியது தான் என்பதால் ஊட்டியை நான் தேர்ந்தெடுத்தேன். காரணம் இலங்கையில் செய்த டீ எஸ்டேட் பணி ஊட்டியில் இருக்கிறது என்பதை அறிந்து அங்கு சென்றேன்.

பல இடங்களில் வேலைத் தேடி அலைந்தேன். நான் எண்ணியது எதுவும் நடக்கவில்லை. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் அப்போது தான் புரிந்து கொண்டேன். இரவு பகல் பாராமல் வேலைத் தேடி அலைந்து கொண்டேயிருந்தேன். இறுதியாக ஓரு ஹோட்டலில் மேசை கிளின் செய்யும் வேலை கிடைத்தது. சில மாதங்கள் செய்தேன். ஆனால் சம்பளம் முறையாக கிடைக்காததால் அங்கியிருந்து ஈரோடிற்கு சென்றேன். அங்கும் ஒரு ஹோட்டலில் கிளீனர் வேலையே செய்தேன். புஞ்சை புளியம்பட்டியில் வேலை செய்யும் போது ஹோட்டல் சார்ந்த அத்துனை நுணுக்கமான வேலையையும் கற்றுக் கொண்டேன். அப்போது எனக்குத் தெரியவில்லை நாம் ஹோட்டல் தொழிலில் இந்த அளவிற்கு சாதிப்போம் என்று.

தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் வேலைத் தேடி சென்றியிருக்கிறேன். இறுதியாக கோவை பகுதிக்கு வந்தேன். இப்படி சக்கரம் போல் ஓடிய வேலை செய்த போது என்னை நோய் படுக்கைக்கு கொண்டு போனது. அது தான் ப.ஆ நோய். இது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

இதனால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆனால் மருத்துவமனையில் ஒருவரை அட்மீட் செய்ய வேண்டுமென்றால் உறவினர்கள் யாராவது இருக்க வேண்டும் என்பது நியதி. அப்படியிருக்கும் பொழுது என்னை அரவணைக்கவோ, அன்பு செலுத்தவோ யாருமில்லை என்று சொல்லிவிட்டேன் இதனால் எனக்கு ஆதரவற்றோர் பெயர் பட்டியிலில் சேர்க்கப்பட்டு ஈழ். மோசஸ் அவர்கள் பரிவோடு சிகிச்சை அளித்தார்.

கே: சொந்தமாக எப்போது தொழில் தொடங்குனீர்கள்?

சிகிச்சை முடிந்தது. ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. எலும்பு மேல் போர்த்திய தோல் போல என் உடல் இருந்தது. இதனால்  வேலை கேட்ட இடத்தில் எல்லாம் என்னை நிராகரித்தார்கள். இனி எங்கேயும் வேலை கிடைக்காது என்றநிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது இத்தனை வருடங்கள் என்னுடைய ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு கைக்கொடுக்கும் என்றநம்பிக்கையில் இப்பகுதியிலேயே ஒரு சிறியதாக டீ கடை ஒன்றைஆரம்பித்தேன். நன்றாக போனாது, ஆனாலும் டீ கடையும் பார்த்துக் கொண்டு வீட்டுவீட்டுக்குச் சென்று மசாலாப்  பொருட்களை டோர்டெலிவரி செய்தேன். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு தூங்க 12 மணி ஆகிவிடும் எப்போதும் எதையாவது செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பேன். ஆனால் தொடங்கிய வேலைகள் அனைத்தும் தோல்விகளிலே முடிந்தது. ஆனாலும்  நான் ஒரு போதும் இதை நினைத்து துவண்டதும் இல்லை துயரம் கொண்டதும் இல்லை.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி என்னிடம் இருக்கிறது என்று எப்போதும் நினைத்துக் கொண்டேயிருப் பேன்.

நான் செய்யும் வேலையை விரிவுப்படுத்த கோவை கனரா வங்கியில் கடன் வாங்கினேன். அப்போது தான் கேண்டீன் தொழிலைத் தொடங்கினேன். இது தான் என்னுடைய முதல் தொழில். எப்படி தான் என்னுடைய தொழிலின் வளர்ச்சியும் விரிவும்.

கே: கேண்டீன் தொழில் வழிநடத்துவதில் சவால்கள் பற்றி?

மனிதவாழ்க்கையில் எல்லாமே  சவால்கள் நிறைந்தது தான். இந்த சவாலை சங்கடமாக நினைத்தால் சரித்திரத்தில் இடம்பிடிக்க முடியாது. வளர்ச்சியின் அடிநாதமாக நினைத்தால் வளர்ச்சியின் வாசலை எட்டிப்பிடிக்க முடியும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

இந்த கேண்டீன் தொழில் என்பது நம்பிக்கை சம்பந்தமானது என்பதால் மற்றதொழிலை விட கூடுதல் அக்கரை தேவைப்படுகிறது. ஒரு திருமண விழா என்றால் வரும் அனைவரும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் சுவைகள் வேறுபாடு மாறுபாடு இருக்கும். அவர்கள் அனைவருக்கும் பிடித்தார் போல் உணவுகளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு திருமணத்திற்கு சமைக்க வேண்டும் என்று ஆர்டர் வந்தது. நாங்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து வகையான உணவுகள் தயார் படுத்தி வைத்துவிட்டோம். ஆனால் மண்டபத்தில் எங்களைத்தவிர மாப்பிள்ளை வீட்டாரே பெண் வீட்டாரே என்று யாருமே இல்லை. எங்களுக்கே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. நேரம் நெருங்க நெருங்க ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள், ஆனாலும் பெண் மாப்பிள்ளை வரவில்லை. நானும் என்னுடைய நண்பரும் வரவேற்பு இடத்தில் நின்று அனைவரையும் வரவேற்றோம், ஏன் பெண்ணையும் மாப்பிள்ளையும் நாங்கள் தான் வரவேற்றோம். எப்படி நிறைய நிகழ்வுகளை பார்க்கலாம்.

கே: வங்கியில் தள்ளுபடி செய்த கடனை நீங்கள் தானே சென்று கட்டியது பற்றி சொல்லுங்கள்?

நான் கஷ்டப்பட்ட காலத்திலும் தொழிலை மேம்படுத்திலும் வங்கியில் வாங்கிய கடன் பெரிதும் என்னுடைய வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்தது. நான் இப்பொழுது ஒரு பெரிய இடத்திற்கு வந்து விட்டேன்  என்றாலும் கூட என்னால் அந்த கடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று மட்டுமே மனதில் தோன்றி கொண்டேயிருந்தது.

அப்போது ஒரு நாள் நான் கடன் பெற்றகனரா வங்கிக்கு சென்று 27 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு தொகையை கடன் வாங்கினேன் என்று என்னுடைய விவரத்தை வங்கி மேலாளரிடம் சொன்னேன். என்னுடைய பெயரையில் தொகையைப் பார்த்த போது உங்களுடைய  அத்துனை தொகையும்  தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று மேலாளர் சொன்னார்கள். ஆனாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை நான் வாங்கிய தொகையை நிச்சயம் செலுத்தி தான் ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன்.

வங்கி மேலாளரும் என்னுடைய இந்தப் போக்கை பார்த்து பணத்தை வாங்கி வேறு ஒரு நலத்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்லி விட்டு என்னை அனுப்பி வைத்தார்.

இந்த செய்தி அப்பகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும்வாரியான பத்திரிக்கைகளிலும், செய்தித்தாளிலும் வெளியிடப்பட் டது. அப்போது இதைப்பாராட்டி சில அமைப்புகள் 105 விருதுகள் மற்றும் நினைவு பரிசுகளோடு பாராட்டுகளையும் வழங்கி கௌரவித்தார்கள்.

கே: ஒரு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எவற்றைஎல்லாம் முறையாகக் கடைபிடிக்க வேண்டும்?

தலைமைப் பண்பு என்பது அனைருக்கும் கிடைத்துவிடாது. மற்றவர்களை விட ஏதேனும் ஒரு மாறுதல் பண்பு இருக்கிறது என்றால் நீயும் தலைமை பண்பை அடைத்துவிட்டாய் என்று நினைத்தல் வேண்டும்.

தன்னிடம் பணியாற்றுபவர்களை சில தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார். இதை தான் சிலர் தலைமைப் பண்பு என்று நினைத்துக்  கொண்டுயிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

தலைமைப் பண்பில் உள்ளவர்கள் மற்றவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். தவறு நடந்தாலும் அடுத்த முறைஇத்தவறு நடக்காமல் பார்த்துக் கொள் என்று சொன்னால் அவர் வேலையை கூடுதல் அக்கரை செலுத்துவார்கள். இப்படித்தான் மெருகேற்றவேண்டும்.

சிலருக்கு வேண்டுமென்றால் தலைமைப் பண்பு தானாக வந்திருக்கும், ஆனால் என்னைப் போன்றஒரு சிலருக்கு இதன் மகத்துவம் நன்கே புரியும்.

நான் உயர்ந்தவன் என்று நினைக்காமல் நாம் அனைவரும் ஒற்றுமையாளர்கள் என்று நினைத்தாலே அவர் தான் சிறந்த தலைமை நிர்வாகி என்பதில் மாற்றமே இல்லை.

கே: உங்கள் கேண்டீன் தொழிலின் சிறப்பம்சத்தைப் பற்றிக் கூறுங்கள்?

தற்போது உணவு தான் மனித வாழ்விற்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கிறது. காரணம் தினம் தினம் ஏதேனும் புதிய பெயரில் உணவுகள் வந்து கொண்டுயிருக்கிறது. அதன் தீமையை அறியாமல் நம்முடைய நாக்கு ருசிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மனிதனின் சராசரி வயது 90 க்கும் மேல் ஆனால் நாளடைவில் வயது சுருங்கி தற்போது 55 வயது வாழ்ந்தலே போதும் என்றமனநிலை வந்து விட்டது. அந்தளவிற்கு நோய்களும், வியாதிகளும் வயது வித்தியாசமின்றி வருகிறது. இதற்கெல்லாமே நம்  உணவில் ஏற்பட்ட மாற்றம்  தான் காரணம்.

இதனால் எங்கள் கேண்டீன் மூலம் செய்யபடும் உணவுகளை அதிக அக்கரைக் கொண்டு செய்யப்படுகிறோம்.

தினம் தினமும் எண்ணெய் மாற்றம், கொழுப்பு அதிகம் சேராது எண்ணெய் பொருள், அறுசுவையிலும் அளவு போன்றபொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.[hide]

ஆர்டர் கொடுத்து விட்டால் சொன்ன நேரத்திற்கு முன்னால் கொண்டு சேர்ப்பதில் மட்டுமே கவனமாக இருப்போம். தினமும் இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளை அருகிலுள்ள சந்தைக்கு சென்று மொத்தமாக வாங்கி வருவோம்.

அனைத்து வயதினரும் உண்ணக்கூடிய வகையில் தயாரிக்கப்படும். அத்துனை வேலைக்கும் தனித்தனி வேலையாட்களை நியமித்து வைத்திருக்கிறோம்.

கே: உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனக்கு திருமணம் நடந்தது சம்பவம் ஒரு பெரிய மறக்க முடியாத சம்பவம் தான்.  அது என்னவென்றால் வாழ்க்கையில் நான் போராடிக்  கொண்டிருந்த தருணம். ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டபட்டியிருந்த நேரம்.  நமக்கே நிரந்தரம் இல்லாத பணியில் இருக்கும் போது நம்மை நம்பி ஒரு பெண் வருகிறார் என்று என்னுள் சற்று சங்கடமான சூழல் ஏற்பட்டது.

எனக்கும் என்னுடைய மனைவிக்கும் திருமணத்திற்கு கூட புதிய ஆடை வாங்க முடியாத நிலை. அப்போது அருகில் துணிக்கடை வைத்திருத்தவர் எங்களுக்கு இன்சால்மென்டில் ஆடைகளை கொடுத்து உதவினார். நாளை திருமணம் ஆனால் நான் மதுரையில் வேலைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களை மட்டுமே வரவழைத்து திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உணவுக்கூட வழங்கப்பட முடியாத சூழலில் வெறும் காரம், இனிப்பு, தேனீர் மட்டும் தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொடுத்து விருந்தினை முடிந்து கொண்டோம்.

இப்படி என்னுடைய திருமண நிகழ்வை எப்போது நினைத்தாலும்  ஒரு மறக்க முடியாத நிகழ்வாகத் தெரியும்.

கே: மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உங்களுக்குள் எப்படி வந்தது?

கஷ்டப்பட்டு முன்னேறியவனுக்கு தான் அடுத்தவர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

நான் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு ஹோட்டலில் கிளீனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ஹோட்டலுக்கும் நான் தங்கியிருந்த அறைக்கும் 2 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் தினமும் வேலை முடித்து இரவு 12 மணிக்கு தான் செல்வேன் மிதிவண்டியில் பயணம் செய்யும் பொழுது யாரெனும் நடந்து சென்றால் அவர்களை அழைந்து கொண்டு தான் போவான் அப்போது தொடங்கியது தான் மற்றவர்களுக்கு உதவுதல் குணம்.

அதை தான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். இப்போதும் கூட நான் காரில் பயணம் செய்யும் பொழுது காருக்குள்ளே குப்பைத் தொட்டி ஒன்றைவைத்திருக்கிறேன். நான் எந்த ஒரு தேவையில்லாத பொருளையும் வீதியில் வீசி எறிய மாட்டேன். அதே போல் காரில் சில ஆடைகளை வைத்திருப்பேன் யாரேனும் ஆடையில்லாமல் சாலையில் பார்த்தால் அவர்களுக்கு அந்த ஆடையைக் கொடுத்துவிடுவேன்.

தண்ணீர் வீணாகாமல் இருக்க  குழாய்களை அடைக்க தண்ணீர் குழாய் அடைப்புகளையும் வைத்திருக்கிறேன்.

அதே போல் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் எப்போதும் பெட்ரோல் அதிகமாக தான் வைத்திருப்பேன். யாரேனும் சாலையில் பெட்ரோல் இல்லாமல் வாகனத்தை தள்ளிச் சென்றால் உடனே அவர்களுக்கு என்னுடைய வண்டியிலிருந்து பெட்ரோல் கொடுத்து உதவுவேன்.

நான் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. ஆனால் எனக்கு பாராட்டுகள் வரும் பொழுது நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெரிதான நம்மை கிடைக்கும்.

இந்த பெட்ரோல் கொடுக்கும் சேவையைப் பாராட்டி அன்றைதினம் தமிழ் நாளிதழ் மட்டுமின்றி மலையாள நாளிதழ்களிலும் செய்தி வெளியிட்டது என்னைப் பெரிதும் கௌரவித்து என்றேசொல்லலாம்.

நிறைய பதவிகள் என்னைத் தேடி வருகிறது. ஆனாலும் பணி நிமிர்த்தம் காரணமாக அத்துனை பதவிகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கே: நீங்கள் பெற்ற பட்டங்கள் விருதுகள் குறித்து சொல்லுங்கள்?

வெறும் இரண்டாம் வரை தான் படித்த நான் இன்று பல விருதுகளும் பட்டங்களும், பாராட்டுகளும் கிடைக்கின்றது என்றால் அது அத்துனைக்கும் காரணம் என்னுடைய கடினமான உழைப்பு மட்டும் தான்.

நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வாங்கி என்னுடைய அலுவலகத்தை அலங்கலரித்து வரும் இந்த நினைவுச்சின்னங்களைப் பார்க்கும் போது நான் பட்ட எண்ணற்ற கஷ்டங்கள் தான் கண்ணிற்குத் தெரிகிறது.

அறுசுவை வள்ளல், மனித நேய மாமணி, சமூக சேவகர் இன்னும் பல நிறுவனங்களிலிருந்து பல விருதுகள் வாங்கியிருக்கிறேன்.

கே: உங்களின் எதிர்காலத்திட்டம் பற்றி?

எதிர்காலத்தை மட்டுமே தான் சிந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது நம்மால் வளர்ச்சி பெறமுடியும்.

நான்  செய்யும் இந்தத் தொழிலை மேலும் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

மக்களிடையே சுத்தம் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நிறைய உதவிகள் இல்லாதவர்களுக்கு செய்ய வேண்டும்.

என்னுடைய உணவகத்தில் சிறப்பு வாய்ந்த ஃபுல்லி பிரியாணியின் மூலம் வருகின்றவருமானத்தை சமூக அறப் பணிக்காக வழங்கிவருகிறேன்.

கே: குடும்பம் பற்றி?

என்னுடைய தாய், தந்தை இடத்தில் இருந்து எஸ்.பி. அச்சனும், அச்சமாளும் எல்லா விதத்திலும் உறுதுனையாக இருந்தார். சொந்த வீடு வாங்குவதற்கும் கூட பெறும் உதவி நல்கினர்.    மனைவி திருமதி ஃபியூலா அவர்கள். நான் ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்பட்டியிருந்த காலத்திலிருந்து என்னுடன் நகமும் சதையுமாக இருப்பவர். நிச்சயமாக இவர் எனக்கு மனைவியாய் அமைந்தது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். மிகச்சிறந்த நிர்வாகி, குடும்பப் பொறுப்பையும் பார்த்துக் கொண்டு தற்போது அலுவலகப் பொறுப்பையும் பார்த்து வருகிறார். மகன் ஜான்பிரபு அமெரிக்காவில் கேட்ரிங் முடித்துவிட்டு இப்போது எங்கள் நிறுவனத்திலேயே பணியாற்றி வருகிறார். மகள் ஜெனிட்டா தற்போது பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?

குறிக்கோள் இல்லாமல் போகும் பாதை நிச்சயம் நீங்கள் செல்லும் இடத்திற்கு கொண்டு போகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்குள்ளே ஒரு எல்லையை அமைத்துக் கொள்ளுங்கள், அதை நோக்கி மட்டுமே ஓடினாலும் நடந்தாலும் தவழ்ந்தாலும் பயணம் இருக்க வேண்டும்.

தேவையில்லாத வேலையை செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என்று நினைக்க வேண்டும்.

முடிந்தளவிற்கு தன்னால் சமூக சேவையை செய்ய முற்படுங்கள். நீங்களும் நன்றாக வாழுங்கள் மற்றவர்களையும் வாழ வழிவகைச் செய்யுங்கள்.

வாழ்க்கை அர்த்தப்பட வேண்டும் என்றால்  அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.[/hide]

இந்த இதழை மேலும்

உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்

S.D. சரவணகுகன்

CEO, Green Kitchen Multi Specialty Food, Theni

M.D. GThree Business Assoaites Private limited, Mumbai

நான் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றவன், என்று தினமும் சொல்லி வாருங்கள் எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிவிடும் என்பார் விவேகானந்தவர், அவரின் சொல்லின் படி வாழ்ந்து வரும் ஆற்றல் உடையவர்.

உண்மைக்குச் சற்றும் புறமில்லாமல், கடின உழைப்பின் கண்ணாடியாய் எந்நேரமும் மாற்றத்தை மட்டும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்.

எந்தப் பணியாக இருந்தாலும் தன்னுடைய தேவைக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டு செயல்பட்டால் அதில் நிச்சியம் வெற்றி பெறலாம் என்ற சித்தாந்ததின் படி தேவையை அமைத்துக் கொண்டு சாதித்து வருபவர்.

பல உலக நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள திட்டங்களை வரையறுத்துக் கொண்டு நம் நாட்டிற்கும் நம்மால் ஆன துறையில் பல மாறுதல்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

மெக்டொனல்ட்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் போன்ற நிறுவனத்தில் பல்வேறு துறைகளில்  பணியாற்றி தன் பெயரையும் புகழையும் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வாக்கையினை மெய்பித்து வரும் கிரின் கிச்சன் தேனி, மற்றும் GThree Business Assoaites Private limited, Mumbai நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் S.D. சரவணகுகன் அவர்களின் நேர்முகம் இனி உங்களோடு…

கே: உங்களைப் பற்றி ?

தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரம் என்னும் குக்கிராமத்தில் தான் பிறந்தேன். அப்பா தேசபத்து அவர்கள் தலைமை ஆசிரியர், அம்மா அலமேலு அம்மாள் இல்லத்தரசி. அப்பா ஆசிரியர் என்பதால் அப்பகுதியில் பிரபலம். அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். அவரின் பெயரை அறியாதவர்கள் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும்.. அவர் பணியாற்றிய அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ்வழிக் கல்வியில் தான் பயின்றேன். நான் படிக்கின்ற காலத்தில் கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் 4 பேருக்கு தாலுக்கா அளவில், 9 வது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பார்கள், நான்  தாலுக்கா அளவில் இரண்டாம் இடம் பெற்று அப்போது கிடைத்த கல்வி உதவித்தொகை பெரும் உறுதுணையாக இருந்தது.

பிறகு 11 ஆம் வகுப்பு திருவேடகத்திலுள்ள விவேகானந்தர் ஆசிரமத்தில் படித்தேன். ஆசிரமக் கல்வி என்பதால் சற்று கண்டிப்பு மிகுந்திருக்கும், அதே வகையில் கல்விக்கும் ஒழுகத்திற்கும் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தப் பள்ளியில் படித்தது பெரிதும் எனக்கு உதவியது. அதன் பிறகு 12 ஆம் வகுப்பு கோவை ரங்கம்மாள் பள்ளியில் படித்தேன். நான் கிராமப்புற பள்ளியில் படித்து அந்த சூழ்நிலையிலேயே வளர்ந்ததால் வேளாண்துறையில் மிகவும் ஈடுபாடு வந்தது, அதனால் எனக்கு பொறியியல் படிக்க இடம் கிடைத்தும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கால்நடைத் துறையைப்படிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் சில வாரங்கள் மட்டும் பயின்றேன். அதன் பிறகு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விவசாயம் நான்கு வருடம் படித்தேன்.

அப்போது இல.செ. கந்தசாமி ஐய்யா அவர்களின் அறிமுகமும் மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எப்போதும் மாணவர்களிடையே ஊக்கம் தரும் வார்த்தைகளை மட்டுமே பேசிக் கொண்டேயிருப்பார். அதனால் தான் என்னால் கதை கட்டுரை, மேடைப் பேச்சு, மேடை நாடகம் போன்றவை இயற்ற முடிந்தது. தமிழ்ப் பற்று வருவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது. நான்கு ஆண்டு சென்றதே தெரியவில்லை. பின்னர் தான் மதுரை வேளாண் கல்லூரியில் எம். எஸ். சி படிக்கச் சென்றேன். அப்போது படிக்கின்ற போதே மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தில் விவசாயத்துறைப்பகுதியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றியிருந்தேன். ஏதேனும் புதியதாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என்னை தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது.

கே: படித்த முடித்தவுடன் நீங்கள் செய்த பணிகள் பற்றி?

நான் வேளாண்மை முதுகலைப்பட்டம் பெற்றியிருந்த காலக்கட்டத்தில் மிகவும் எளிதாக வேளாண் இடுப்பொருட்கள் விற்பனை செய்யும் அலுவலகத்தில் எளிதாக வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால்  அதில் விருப்பமில்லாததால் வேறு வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் தினமும் செய்தித்தாள் படிப்பேன். அப்போது ஒரு நாள் தி இந்து செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தி இந்து செய்தித்தாளின் அலுவலகத்திலிருந்து விவசாயிகளிடம் நேரடியாக காய்களை வாங்கி அதை நுகர்வோரிடம் விற்பனை செய்ய வேண்டும் என்று வந்தது. திரு. கஸ்துரிரங்கன் அவர்களின் மகன் திரு. வேணுகோபால் அவர்கள் இதன் இயக்குநராக இருந்தார். அதே வகையில் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயன்றவர்களும் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இதனால் நான் இதற்கான நேர்காணலுக்குச் சென்றியிருந்தேன்.

அடிப்படையில் நான் விவசாயத்துறைப் படித்ததால் இதில் பணியாற்றுவதற்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் இருந்தது. இதனால் நானும் பணியில் சேர்ந்தேன். என்னுடைய வேலை நிமிர்த்தமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகளைப் பார்த்து அவர்களிடம் விலைவித்த காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து சென்னையிலிருந்த தி இந்து Just picked கடைகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. விவசாயிகளுக்கும் மற்றும் அருகிலுள்ள் விலை நிலங்களில் கிடைக்காத காய்கறிகளை காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கொத்தவாசாவடி சந்தைக்குச் சென்று வாங்க வேண்டியிருந்தது. நிறைய பேர் என்னைப் பார்த்து கேட்பார்கள் எம். எஸ். சி விவசாயம் முடித்துவிட்டு இப்படி காய்கறிகளை வாங்கிக் கொண்டுயிருக்கிறீர்கள் என்று, அதற்கு நான் ஒருபோதும் வருத்தம் கொண்டதில்லை, பிடித்து செய்யும் எந்த வேலையும் தவறில்லை என்பதை நாம் மதிப்பவன்.

கே: ஊட்டியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

சென்னை மற்றும்  கொத்தவாசாவடியில் இதே வேலை 14 மாதங்கள் செய்தேன். அதன் பிறகு 8 மாதம் காலம்  ஊட்டியில், 1994 ஆம் ஆண்டு பணியிடம் மாற்றம் செய்தார்கள் அப்போது புதுவிதமாக காய்கறிகளைஆர்கானிக் முறைப்படி உற்பத்தி செய்து அங்கியிருந்து சென்னை அனுப்பி விற்பனை செய்தோம். இக்காய்கறிகளை அங்குள்ள விவசாய அமைப்பின் மூலம் உற்பத்தி செய்தோம். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு விவசாய சாகுபடி சம்மந்தமாக நிறைய பயிற்சிகள் கொடுத்தோம். அவர்களும் பயிற்சிகளின் படியே வேலை செய்தார்கள்.[hide]

இரயில் மற்றும் கனரக வாகனத்தின் மூலம் தேவையான பகுதிக்கு காய்கறிகளை கொண்டு செல்வதற்கு பயன்ப்படுத்திக் கொண்டோம்.

கே: மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியது பற்றி?

மெக்டொனால்ட்ஸ் என்பது உலகத்தில் மிகப்பெரிய துரித உணவு விற்பனை செய்யும் பெரிய நிறுவனம் . அவர்கள் 100 நாடுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் ஒரு நாளைக்கு 6.3 கோடி வாடிக்கையாளர்களுக்கு உணவினை கொடுத்து வருகிறார்கள். பர்கர், உருளைக்கிழங்கு சிப்பஸ், ஐஸ்கிரீம், மில்க்சேக் போன்றவை மிகவும் பிரபலம். அவர்களின் பர்கரில் நடுவில் வைப்பற்கு Icebereg Lettuce என்ற  காய்கறி மிகவும் அவசியம். அதுகுளிர்சார்ந்த பகுதிகளில் வளரக்கூடிய காய்கறி. Icebereg Lettuce என்கிற பயிர் இந்தியாவில் அப்போது இல்லாதானால் அதை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு விவசாய நிபுணரை மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தேடிக் கொண்டியிருந்தது. இது ஒரு பெரிய நிறுவனம் என்பதால் விவசாய நிபுணருக்கான தேர்வு செய்வதில் மிகப்பெரிய வரையறைகளை வைத்திருந்தார்கள். என்னவென்றால் இத்துறை சார்ந்த பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும், அத்துறைச் சார்ந்த பணியில் ஈடுபட்டியிருக்க வேண்டும், இடம் சார்ந்த புரிதல்கள் இருத்தல் வேண்டும் போன்றவற்றை சொல்லியிருந்தார்கள், அவர்கள் கேட்ட அத்துனை தகுதிகளும் என்னிடம் இருந்ததாக நான் உணர்ந்தேன். நானும் அவர்களின் நேர்காணலுக்குச் சென்றேன்.

நேர்காணல் ஹைதராபாத்தில் நடைப் பெற்றது. மூன்று நிலையாக நடைபெற்ற இதில் முதல் நேர்காணிலில் என்னுடைய தகுதியை வெளிகாட்டினேன். எனக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தது. அகில இந்திய அளவிலிருந்து நிறைய பேர் இதில் கலந்து கொண்டார்கள் . இறுதியாக 5 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்தார்கள் அதில் நானும் ஓருவர்.

அடுத்த நேர்காணல் மும்மையில் நடைப்பெற்றது. இடமும் புதுமை மனிதர்களும் புதுமை இதனால் முந்தைய நாளே அங்கு சென்று விட்டேன். மும்மை என்றாலே கூட்ட நெரிசல் பகுதி என்பதால் நேரமாக செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டிச் சென்றேன். 9.30 மணிக்கு நேர்காணல் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் 8.30 மணிக்கே சென்றுவிட்டேன். எனக்கு முன்னால் வர வேண்டிய நபர் வராத முடியாத காரணத்தால் என்னுடைய நேர்காணல் 9 மணிக்கு நடைப்பெற்றது.  நேர்காணல் நடைபெற்ற எல்லோருக்கும் அரை மணி நேரம் மட்டுமே நடைபெற்றது, ஆனால் எனக்கு மட்டும் 1.30 மணி நேரம் நடைபெற்றது. காரணம் நான் இத்துறையில் அனுபவம் மிக்கவர் என்பதால் அத்துறைச் சார்ந்த அத்துனை தகவல்களையும் என்னால் சொல்ல முடிந்தது.

இறுதியாக 3 பேரை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நேர்காணல் மூலம் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னே செல்ல வேண்டும், மிகச் சரியான அளவில் பேசி மிக அளவான பதில்களை தெள்ளத் தெளிவாக கொடுக்க வேண்டும்.  ஆடைகளை சரியாக அணிய வேண்டும் என்பது தான். ஒருவரைப் பற்றி முதல் மதிப்பீடு தான் அவரின் வெற்றியைத் தீர்மானிக்கும்  என்பதை அறிந்து கொண்டேன். டெல்லியிலும் சிறப்பாக முடித்தேன். வேலையும் கிடைத்தது. வேலை கிடைத்தவுடன் முதன் முறையாக அமெரிக்காவிற்கு மூன்று வாரங்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன்

கே: இத்துறையிலுள்ள சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்?

விவசாயம் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அதிலும் குறிப்பாக இப்படிப்பட்ட காய்கறிகளை உற்பத்தி செய்யும் பொழுது நிறைய சவால்களை சந்திக்க வேண்டும். அதனால் நான் காஷ்மீர் முதல் கொடைக்கானல் வரை மகாபலிஸ்ரர் முதல் கேங்டாக் வரை எங்கெங்கு மிதமான தட்பவெட்ப சூழ்நிலை உள்ளதோ அங்கெல்லாம் 18 மாதங்கள் பயணம் செய்து கடைசியாக ஊட்டிப் புனா, நைணிடால், சிம்லா, முசிறி, புதுடெல்லி போன்ற இடங்களைத் தேர்வு செய்து Icebereg Lettuce பயிரை விவசாயிகளுடன் சேர்ந்து விளைவித்தேன் அன்று இந்தியாவில் பூஜ்ஜியமாக இருந்த Ice- bereg இன்று வருடத்திற்கு 5000 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையை அடைவதற்கு 1995 யிலிந்து 2005 வரை விவசாயிகளுடன் எனது நேரத்தை செலவிட்டு விவசாயிகளின் இடையிறுகளான ஆலங்கட்டி மழை, வறட்சி, காலநிலைமாற்றம் போன்ற சீற்றங்களுக்கு தகுந்த மாதிரி விவசாய தொழில் நுட்பங்களை மாற்றி, இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கான குளிர்பதன ஆலையை அமைத்து இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு நாடுகள் வரை ஏற்றுமதி செய்தது இப்போதும் என் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் மட்டும் மல்லாதது தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளுக்கெல்லாம் செயல் பட்டு எனது ஆற்றலை வளர்த்துக் கொண்டதும் ஞாபகத்திற்கு  வருகிறது.

இன்று உலக அளவில் பல இடங்களில் Ice bereg lettuce பரவலாக இருந்தாலும் இதற்கு இந்தியாவில் விதைப் போட்டவன் நான் என்று சொல்லிக்  கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இது ஒரு கடினமான பயிர் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை ஆனால் ஒரு செயலில் கமிட்மெண்ட் செய்துவிட்டால் அதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி அதனுடன் உண்மையும் நேர்மையும் கலந்தால் எந்த ஒரு சாதனையாக இருந்தாலும் சாதித்து விடலாம்.

நான் இதுவரை 30 க்கும் மேலான வெளிநாடுகளுக்கு மேல் சென்றுவிட்டேன். எங்கெல்லாம் நான் சென்றோனோ அங்கெல்லாம் விவசாயம் மற்றும் உணவுத்துறை சார்ந்த பணிகள் செய்கிறார்களோ அதை நன்றாக உற்று நோக்கி நமது நாட்டிற்கு எது தேவையோ அதை இங்கு அறிமுகம் செய்து வைப்பேன். அதற்கு உண்டான பலன் இன்று நமது நாட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

கே: இத்துறையில் உங்களுக்கு ஏற்பட்ட திருப்புமுனையான சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் ஏற்கனவே கூறியபடி மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைந்திருக்கிறது. அதில் என்னைப் போன்ற வேளாண் நிபுணர்கள் நான்கு பேர் மட்டுமே இருந்தார்கள்.  வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, யூரோப் போன்ற நாடுகளில் மற்றவர்களும், மற்றும், நான்காவதாக இந்தியாவில் நான் இருந்தேன்.  இந்தியாவில் மட்டும் மல்லாது அண்டைய நாடுகளையும் கவனித்துக் கொண்டியிருந்தேன்.

மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் உருளைக்கிழங்கு சிப்பஸ் பிரன்ச் பிரைஸ் மிகவும் பெயர் பெற்றது. அவர்கள் இந்தியா நாட்டிற்கு வரும் பொழுது அதை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு நிறுவனத்தை அழைத்துப் கொண்டு வந்தார்கள். அவர்கள் ரூ. 30 கோடி முதலீடு செய்து நீள நீளமாக இருக்கும் குளிர் பதனிட்ட உருளைக்கிழங்கு பிரன்ச் பிரைஸ் செய்யும் ஆலையை வட இந்தியாவில்  அமைத்தார்கள். அதற்குத் தேவையான உருளைக்கிழங்கை வாங்கிய பொழுது அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பிரன்ச் பிரைஸ் வரவில்லை. இதற்கு காரணம் இந்திய உருளைக்கிழக்கில் Dry Matter content குறைவாகவும் water content அதிகமாகவும் இருந்தது. இதற்கு காரணம் இந்திய உருளைக்கிழங்கு விதை வகைகள், தட்பவெட்ப சூழ்நிலைதான். அந்த நாட்களில் பிரன்ச் பிரைஸ் இறங்குமதி செய்ய அனுமதிக்கப்படாத நிலையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 100 உருளைக்கிழங்கு tubersயை (கிழங்குகளை) அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து, அதிலிருந்து tissue culture முறைப்படி multifly செய்து இன்று இந்தியாவின் அருகிலுள்ள இலங்கை, நேபாளம், பூட்டான், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு இந்தியாவில் மிக உயரிய முறையில் தயாரிக்கப்பட்ட பிரன்ச் பிரைஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு எனது தனிப்பட்ட அனுபவமானது ஒரு ஏக்கரில் 5 டன் உருளை உற்பத்தி செய்து விவசாயிகளின் நிலத்திலிருந்து 12 டன் உருளை உற்பத்தியானது சாத்தியமானது. இது எங்களின் மெருகூட்டப்பட்ட விவசாய சாகுபடி முறைகள் மற்றும் இறங்குமதி செய்யப்ட்ட உருளை விதைகளால் சாத்தியமாயிற்று. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் தானாக உயர்ந்தது. இதை எனது 10 வருட மெக்டொனால்ட்ஸ் அனுபவங்களின் உயர்வாகக் கருதுகிறேன்.

கே: ரிலையன்ஸ் ரீடைல் இணைந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?    

ஒரு மாலை வேளை எனக்கு தொலைúசி அழைப்பு வந்தது. அவ்வழைப்பினை விடுத்தவர் என்னிடம் ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து அகில இந்திய அளவில் மிகப்பெரிய நுகர்வோர் வர்த்தக துறையில் இறங்க இருப்பதாகவும் அதற்கு என்னைப் போன்ற விவசாயத்துறை மற்றும் உணவுத்துறையில் சாதித்தவர்கள் அதில் மேலதிகாரிகளாக வர வேண்டும்  என அழைப்பு விடுத்தனர். அழைப்பு விடுத்த மறுநாளே திரு. முகேஷ் அம்பானியின் அலுவலகத்திற்குச் சென்றேன்.

சென்ற ஒரு வாரத்திற்குள்ளேயே வேலைக்கான உத்தரவை எனக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். நான் வேலையில் சேர்ந்த அடுத்த நாளே முகேஷ் அம்பானியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவராக என்னருகில் வந்து மிகவும் எளியவராக என்னிடம் கைக்குலுக்கிப் பேசினார். அவர் அருகில் அவருடைய நெருங்கிய நண்பரும், கல்லூரியின் வகுப்புத் தோழரான திரு. மனோஜ் மேடி உடனிருந்தார். அவர் தான் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் பொறுப்பாளாராக இருந்தார். அவர் கீழ் தான் நான் பணியாற்றினேன்.

முதல் சந்திப்பிற்குப் பிறகு எத்தனையோ முறைகள் முகேஷ் அம்பானியுடன் மிகப்பெரிய சந்திப்பில் கலந்து கொண்டு பேசியது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அவர் எப்போதும் எதாவது ஒரு துறையின் வளர்ச்சியினைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருப்பார். மிக முக்கியமான நம் நாட்டின் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியைப் பற்றி அதிகமாக யோசித்துக் கொண்டேயிருந்தார். வேளாண்மைத்துறையின் வளர்ச்சியானது நமது இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கியமான வளர்ச்சியைக் கொடுக்கக்கூடியது என்று அதீத நம்பிக்கை வைத்திருந்தார். அவர் விவசாயிகளுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் கொண்டிருந்தார்.

நான் மெக்டொனால்ட்ஸ் உருளைக்கிழங்கில் விவசாயிகளுக்கு மகசூலை அதிகப்படுத்திய செய்தியினைக் கேட்டு தெரிந்து கொண்டு அதுபோல் செய்ய வேண்டும் என எங்கள் அனைவரிடமும் கூறிக் கொண்டேயிருப்பார்.

நான் ரிலையன்ஸ் ரீடைல் உணவுத்துறையில் முதல் வேலையாளராக அதுவும் மிகக்குறைந்த வயதில் செனரல் மேனேஜராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதனால் அவர்கள் எனக்கு நிறைய வேலைகளைக் கொடுத்ததினால் என்னால் அதற்குத் தகுந்த மாதிரி கற்றுக் கொண்டு சாதிக்க முடிந்தது. அவர்கள் என்னிடம் நம்பிக்கையாகக் கொடுத்த எந்த வேலையையும் நான் ஒரு போதும் செய்யத் தவறியதில்லை மற்றும் செய்தாலும் அதை சென்மையாக செய்தபடியால் அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை நாளுக்கு நாள் கூடியது. அது என்னுள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஊட்டியது. என்றால் அது மிகையாகாது.

10 வருடங்கள் ரிலையன்ஸ் ரீடைல் அமைப்பானது எனக்கு கார்ப்பரேட் வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் மறக்க முடியாது. கடின உழைப்பிற்கு நிச்சயம் ஒரு அங்கீகாரம் உண்டு என்று எனக்கு உணர வைத்தது ரிலையன்ஸ் ரீடைல். அந்தக் கடின உழைப்பின் மூலமாகத்தான், முகேஷ் அம்பானிக்கும், மனோஜ் மேடிக்கும் சரவணனாக அறியப்பட்டேன். அந்த அங்கீகாரம் இன்றளவும் அவர்களிடம் எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

முகேஷ் அம்பானிடமிருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் தொழிலைப் பற்றி மிகப்  பெரிய கனவு காண்பது. அதை ஆரம்பிக்கும் பொழுதே பெரிய அளவில் ஆரம்பித்து எப்படி அதை மிக சமார்த்தியமாக அதே வேலையில் மக்களிடம் எடுத்து செல்வது என்று.

கே: இரு புகழ் பெற்ற நிறுவனத்தில் பணியாற்றி, நீங்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கியது பற்றி?

இரண்டு நிறுவனங்களிலும் 20 ஆண்டுகள் பணியாற்றி உலகில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து ஏற்பட்ட அனுபவத்தினால் நானும் எனக்கான ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூங்க ஆரம்பித்த பொழுது, 2015 ஆம் ஆண்டு எனது சொந்த ஊரான தேனியில் கிரின் கிச்சன் மல்டி ஸ்பெஸôலிட்டி என்கின்ற நிறுவனத்தை எனது மாமனாருடன் இணைந்து ஆரம்பித்து அதன் மூலம் கிரின் கிச்சன் குடும்ப உணவகத்தைத் திறந்தேன்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெரிய நகரங்களில் ரெஸ்டாரண்ட் சயின்ஸ், (அண்ணபூர்ணா, சரவணபவன், அடையார் ஆனந்தபவன் இன்னும்…) அதிகம். ஆனால் 2015 ல் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் மிகவும் குறைவான உணவகங்கள் தான் இருந்தது. அவைகளும் சுவை, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறைந்தும் சரியான கழிப்பிட வசதியின்றியும் பார்க்கிங் வசதியின்றியும் இருந்ததைப் பார்த்த பொழுது நான் ஏன் நெடுஞ்சாலை கான்செப்டில் சைவ உணவகத்தை ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் உதித்தது. அதில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த கிரின் கிச்சன் குடும்ப உணவகம்.

எங்கள் உணவகத்தில் வனஸ்பதி, சோடாஉப்பு போன்றவற்றை உபயோகப்படுத்துவதில்லை. சுத்தரிக்கப்பட்ட சூரியகாந்தி மற்றும் கடலை எண்ணெய் வகைகளையே உபயோகிக்கிறோம். அதே போல் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எங்களின் உணவகத்தின் உட்புறத்தை சுத்தம் செய்து சுகாதார முறையில் உணவினைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

கே: உங்களின் ரோல் மாடல்?

என்னுடைய தந்தை தான் எனக்கு முதல் ரோல் மாடல். அவரிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.

மெக்டொனால்ட் நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றிய Ragvinder Rekhi அவர்கள் என்னை நன்றாக செதுக்கியவர்.

அடுத்து ரீலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்த மனோஜ் மேடி, மற்றும் முகேஷ் அம்பானியைச் சொல்லியாக வேண்டும்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது.?

மனிதன் உடலுக்கு எப்படி உடல் உறுப்புகள் தேவையோ, அது போல மனதுக்கு தன்னம்பிக்கை மிகவும் தேவை.

வாழ்க்கையில் எல்லோருடைய வெற்றியும் ஒன்றைப் போலவே இருப்பதில்லை. ஒவ்வொரு வெற்றியிலும் எத்தனை இன்பத்துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், நிகழ்வுகள் திருப்புமுனைகள் இருக்கும் என்பதை அவர்களின் வாழக்கை வரலாற்றை படிக்கும் பொழுது தான் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்த வகையில் தோல்விகளை நினைத்து துவளாமல், உங்கள் இலக்கை அடைய முயற்சி எடுங்கள் வெற்றி நிச்சயம் பெறலாம்.

கே: குடும்பம் பற்றி?

மனைவி சுபாஷினி, என்னுடைய வெற்றியின் மறுபக்கம் என்று சொல்லலாம். அவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் எனக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் கோகுல் 9 வது  படிக்கிறார்,  இளைய மகன் திரிணாப் 7 வகுப்பு படிக்கிறார். தற்போது மும்மையில் வசித்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைகளிலும் தேனியில் தான் இருப்போம்.

கே: எதிர்காலத்திட்டம்.

மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ சிட்டிகளில் தமிழர்களின் உணவினைக் கொண்டு செல்ல வேண்டும்.

மற்றும் உலக நாடுகள் பலவற்றில் எங்களின் உணவுக் கிளைகளை ஆரம்பிக்க வேண்டும்.

எங்களது கிரின் கிச்சன் உணவகத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறோம். இதில் 12 மாணவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டே எங்கள் கிளைகளில் வேலை செய்து கல்லூரிக்கட்டணத்தை தாங்களாகவே சம்பாதித்து செலுத்தி வருகின்றனர். இது போல் இன்னும் பல உணவகங்கள் திறந்து கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இந்தியாவிலுள்ள நதிகளை இணைப்பதன் மூலம் நம்மால் 65 முதல் 75 மில்லியன் ஹெக்டர்வரை கூடுதலாக நீர்பாசன வசதியில் கொண்டு வர முடியும். இதன் மூலம் நமது உணவு உற்பத்தி திறனை இப்போது இருக்கும் நிலையிலிருந்து மூன்று மடங்குகள் கொண்டு செல்லலாம். இது சம்பந்தமான கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு முடிந்த அளவு குரலெழுப்பி உரியவரின் காதுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

முடிந்த அளவு இயற்கை விவசாய முறைகளை இந்திய விவசாயிகளிடம் எடுத்துச் செல்வது, மற்றும் விவசாயிகளின் வருவாயியை அதிகப்படுத்துவது, உலக நாடுகளிலிருந்து சிறந்த பயிற்சியளராக விவசாயம் மற்றும் உணவுத்துறைகளில் கற்றவற்றை நமது இந்தியாவில் மற்றவர்களுக்கு கற்பிப்பது.

இப்போது மும்மையில் 45 நாட்களுக்குள் ஒரு தென்னிந்திய சைவ உணவகத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலையில் பம்பரமாகச் சுற்றிக் கொண்டியிருக்கிறேன். இதை நிச்சயமாக மும்பையில் டாப் 10 ரெஸ்டாரண்டில் ஒன்றாகக் கொண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டியிருக்கிறேன்.

கே: உங்களுக்கும், உங்கள் நிறுவனத்திற்கும் கிடைத்த பட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பள்ளியில் படித்திருந்த காலத்திலிருந்தே தாலுக்கா மாவட்ட மற்றும் மாநில அளவில கவிதை, கட்டுரை பேச்சு போன்ற போட்டிகளில் விருதுகள் பெற்றியிருக்கிறேன்.

அது போல் வேளாண் கல்லூரியில் படித்த 6 ஆண்டுகளில் இயல், இசை, நாடகம் சார்ந்த அத்துனைப் போட்டிகளிலும் பல விருதுகளை வென்றிருக்கிறேன்.

எனது  20 வருட இந்திய நுகர்வோர் வர்த்தகத்துறைக்கான சாதனைப் பாராட்டி மும்பையில் உள்ள ASIA RETAIL CONGRESS என்கின்ற மிகப்பெரிய நிறுவனம் 50 MOST TALENTED RETAIL PROFESSIONAL OF INDIA 2014  விருதை மும்மையில் வழங்கியது .

அதே ஆண்டில WORLD PRAND CONGRESS என்கின்ற நிறுவனம் எனது ஆசியா அளவிலான சாதனைகளைப் பாராட்டி, ASIA FOOD & CROCERY OUTSTANDING ACHEIVEMENT AWARD வழங்கி கௌரவித்து.

எங்களது கிரின் கிச்சன் குடும்ப உணவகம் 2016 ஆம் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த உணவகமாகத் தேர்வு செய்யப்பட்டு புதுடெல்லியிலுள்ள Franchise india மூலமாக பெங்களுரில் இவ்விருதினைப் பெற்றது.

மீண்டும் 2017 ஆண்டு தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த நெடுஞ்சாலை உணவகமாக கிரின் கிச்சன் உணவகம் தேர்வு செய்யப்பட்டு Franchise india மூலமாக பெங்களுரில் இவ்விருதினைப் பெற்றது. [/hide]

இந்த இதழை மேலும்