போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
வெற்றியின் ரகசியம் எளிமையானது, சரியான விஷயத்தை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்தால் வெற்றி கிடைத்துவிடும்.
– அட்னனால்டு கிளாஸோ
தொழிலும், வர்த்தகமும், யுத்தம் போன்றது தானா? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. ஆம், வணிகமும், யுத்தமும் ஒன்று தான். தொழிலும், யுத்தமும் ஒன்று தான். ஆனால் களங்களும், ஆயுதங்களும் மட்டும் வெவ்வேறானவை, இரண்டிலும் போட்டிகள் உண்டு. போட்டி என்று வந்துவிட்டால் வெற்றியோ, தோல்வியோ ஏதோ ஒன்று நிகழ்ந்து தான் தீரும்.
இந்திய விடுதலைப்போரின் போது மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசை எதிர்த்து, ஒரு விடுதலை யுத்தத்தைத் தொடங்கினார் கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று நாமக்கல் கவிஞர் குறிப்பிட்டபடி அஹிம்சை, ஒத்துழையாமை, உண்ணாநோன்பு என்ற இந்த மூன்று ஆயுதங்களையும் வைத்து ஆங்கிலப்பேரரசை வீழ்த்திக் காட்டினார்.
அது போல இன்று தொழில்களிலும், வர்த்தகங்களிலும் போட்டிகள் யுத்தங்களாக மாறி விட்டன, இந்த யுத்தத்தில் போட்டியாளரை வீழ்த்தினால்தான் வெல்லமுடியும். இதில் 1. பொறுமை காத்தல், 2. புத்தி சாதுர்யம், 3.புதிய யுக்திகள், 4.நிர்வாகத்திறமை, 5.எதிரி கணிக்க முடியாத வியூகங்கள், 6.சரியாக திட்டமிடல், 7.வேகமாக மற்றும் முறையாக செயல்படுதல், 8. சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துதல், 9.துல்லியமான அனுமானங்கள், 10. விளைவுகளை கணித்தல், 11.நிபுணர்களை பயன்படுத்திக் கொள்ளுதல், 12.ஆழம் காண முடியாத அமைதி, 13. சகிப்புதன்மை, 14.நிதானம் தவறாமை, 15.மௌனத்தை கடைப்பிடித்தல், 16.கோபப்படாது இருத்தல்,17.பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல், 18. சந்தைப்படுத்துவதில் புதுமையை புகுத்துதல், 19. மாற்றி யோசித்தல், 20. பணியாளர்களை அரவணைத்து, அர்ப்பணிப்பு உணர்வை அதிகப்படுத்துதல், எல்லாவற்றிக்கும் மேலாக 21.வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துதல் போன்றவைகள் ஆயுதங்களாக அமைகின்றன.
அனுபவசாலிகளின் கருத்துப்படி, “வியூகங்கள் முக்கியமானவை. தவறான வியூகம் அமைத்து தோற்றுப்போன படைகள் பல உண்டு. சரியான முறையில் சந்தைப் படுத்துவதில் தவறி, தோல்வி கண்ட பெரிய நிறுவனங்களும் உண்டு. சந்தைப் படுத்துதலில் வெற்றி கண்டு, பெரிய நிறுவனங்களை வெற்றிகண்டவர்களும் உண்டு. இதில் தலைமை ஏற்பவர்களைப் பொறுத்து வெற்றி அமையும். லைமை சரியாக இருந்தால் ஒரு நிறுவனத்தில் எப்பொழுதும் இலாபத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்”.
கடலில் பெரிய அலை ஒன்று புறப்படும், ஆனால் கரைக்கு வராமலேயே பாதியிலேயே நின்று விடும், சின்ன அலை இன்னொன்று புறப்படும். அது இறுதி வரை வந்து கரையைத் தொட்டுப் பேசும். எந்த அலை கரை சேரும் என்று நாம் சொல்ல முடியாது, அது போல வணிகத்திலும், தொழிலும் எந்த நிறுவனம் ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் உற்பத்தி செய்யும் பொருளின் தரம் உயர்வாக இருந்தால் ஜொலிக்க முடியும். “குறைந்தபட்ச லாபம், அதிகபட்ச விற்பனை அளவு (Turnover)” என்பது வணிகத்திலே ஒரு தாரக மந்திரம்.
எந்த பெரிய சாதனைக்கும், மனதில் முதலில் தோன்றும் முதல் எண்ணமும், கருத்தும்தான் விதையாக அமைகிறது. அந்த விதைக்குள் இருப்பது ஒரு ஆலமரம், அது வெளி வர, வளர, உயர தன்னம்பிக்கை என்ற நீரும், திட்டமிடுதல், செயல்படுதல் என்ற உரங்களும் தேவைப்படுகிறது.
“விதியை நம்பிக்கொண்டு இருப்பவன் எதையும் செய்ய மாட்டான்” என்கிறது அர்த்த சாஸ்திரம், அப்படி இருப்பவனுக்கு போர் கிடையாது, போராட்டமும் கிடையாது, யுத்தமும் கிடையாது. யுத்தம் இல்லாத இடத்தில் வெற்றி எப்படிக் கிடைக்கும்.
ஒரு தொழில் அல்லது வணிகம் சிறக்க வேண்டும் என்றால் அந்த நிறுவன தலைமைக்கு புத்தி சாதுர்யம் இருக்க வேண்டும் . எந்த நேரத்தில் எதைத் தொட்டால் ஜெயிக்கும் என்ற தீர்க்கதரிசனம் வேண்டும். எப்போது இருப்பு வைக்க வேண்டும்? எப்போது விற்பனைக்கு கொண்டு வருவது? எப்போது உற்பத்தியை அதிகப்படுத்துவது? எப்போது நிறுத்துவது? எப்போது விரிவாக்கம் செய்வது? எப்படி விளம்பரப்படுத்துவது? எந்த வகையில் சந்தைப்படுத்துவது ? என கணிக்கும் திறமை இருக்க வேண்டும், உற்பத்தி அதிகரிக்க, அதிகரிக்க தரத்தையும் உயர்த்திக் கொள்ளும் சாதுர்யம், நிர்வாகத்திறமை, எதிர்போட்டியாளானகளின் வியூகத்திற்க்கு ஏற்ப மாற்று வியூகத்தை அமைப்பது, எப்போது தாக்குதலைத் தொடங்குவது ? எந்த நேரத்தில் அமைதியாக இருப்பது? எப்போது பின்வாங்குவது ? என்ற வியாபார வித்தகங்கள் இருத்தல் வேண்டும்.
வாடிக்கையாளர்களை பெருக்கிக் கொள்வது என்பது ஒரு கலை. ஒரு வாடிக்கையாளரை இழந்தால், நாம் பத்து வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும், வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய, புதிய உத்திகளை பயன்படுத்த வேண்டும், மற்றவர்கள் வியக்கும்படியாக விளம்பரப்படுத்த வேண்டும். புதிய வடிவங்களில் எல்லாத் தரப்பினரையும் கவரும் வகையில் பெயர் வடிவமைக்கப் படவேண்டும். போட்டியாளர்களுக்கு எதிர்பாராத திருப்பத்தைத் தருவதைப் போல மாற்று யுக்திகளை பயன்படுத்துதல் வேண்டும். ஏழாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும். மூன்றாம் பார்வையும் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உற்பத்திமுறை, விற்பனை முறை, சேவைப் பிரிவு இவைகளை போன்ற சரியான அமைப்புகளை உருவாக்க வேண்டும். உற்பத்திக்கு முன்பாகவே விற்பனை என்ற யுக்தியை பின்பற்ற வேண்டும். நிறுவனத்திற்கென்ற அடையாளக் குறியீட்டை ( Brand ) பிரபலப்படுத்த வேண்டும், ஒரு பொருளின் மதிப்பையும், லாபத்தையும் உயர்த்தும் முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் ( MVP – Maximizing value and profit).[hide]
எந்தப் பொருள் சந்தையில் தேவைப்படுகிறதோ, வாடிக்கையாளானகள் எந்தப் பொருளை விரும்புகிறர்களோ அந்தப் பொருளை தயாரிக்க வேண்டும் அல்லது சந்தைப்படுத்துதல் வேண்டும், எதிர்பாராததை எதிர்பார்க்க பழகிக் கொள்ள வேண்னடும் (Expect the unexpected), சின்ன சரிவுகள் வந்தாலும் முறிந்துவிடாமல், முயற்சியை இரட்டிப்பாக்கி வெற்றி பெற வேண்டும்.
தொழில் நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இந்த யுகத்தில் கடின உழைப்பு பலன் தருமா? அல்லது புத்திசாலித்தனமான உழைப்பு வெற்றி தருமா? என்ற கேள்விக்கு, “ இந்தக் காலத்தில் புதுமை செய்து வளர்பவர்களும், ஜெயித்து காட்டுபவர்களும் கடின உழைப்பால் அதை சாதிப்பதில்லை என்றும் புத்திசாலித்தனமான உழைப்பே வெற்றியைத் தருகிறது” என்று புதிய ஆய்வுகள் சொல்கின்றன, நெருக்கடிகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் புத்தி சாதுர்யத்தை நாம் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது, பாஞ்சாலி சபதம் நாடகம் நடந்தது. பாஞ்சாலியாக ஒரு மாணவன் பெண் வேடமிட்டும், துச்சாதனனாக ஒரு மாணவனும் நடித்தார்கள், நாடகத்தில் துகிலுரியும் காட்சியில் பாஞ்சாலியாக நடிக்கும் மாணவனின் உடலில் சுற்றப்பட்டிருக்கும் சேலையை மெதுவாக இழுக்க வேண்டும் என்று துச்சாதனனுக்கு சொல்லப்பட்டிருந்தது, ஆனால், அவசரத்தில் துச்சாதனனாக நடித்த மாணவன் பாஞ்சாலியின் ஆடையை மிக வேகமாக உருவி விட்டான், பாஞ்சாலி இப்போது அரை டிரவுசரோடு நின்றான். இந்த நெருக்கடியான நேரத்தில் ஆசிரியர்கள் பதறிப் போனார்கள்,ஆனால், பாஞ்சாலியாக நடித்த மாணவன் சமயோசிதமாக யோசித்து “பகவானே! கண்ணபிரானே! சேலை தந்து என் மானத்தைக் காப்பாற்றுவாய் என்று நினைத்தேன், ஆனால் நீயோ அரை டிரவுசான போட்ட பையனாகவே மாற்றி என் மானத்தைக் காப்பாற்றி விட்டாய்” என்றான். அரங்கமே குலுங்கிக் குலுங்கி சிரித்தது, இதைப் போன்ற சமயோசித அறிவுகள் சில பல பிரச்சனைகளுக்கு தீர்வுக்கும், வெற்றிக்கும் வழி காட்டும்.
“வாங்குவதற்கு ஒரு தராசும், விற்பதற்கு ஒரு தராசும் வணிகர்களிடம் இருக்க வேண்டும் ” என்று சாணக்கியர் சொல்கிறார். அது போல் வணிகத்திலும், தொழிலும், விற்பனை நுணுக்கங்களையும், தொழில் நுட்ப அறிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள் என்பது முக்கியமல்ல, எந்த யுக்தியை பின்பற்றுகிறீர்கள் என்பதும் முக்கியமல்ல. எந்த விலை கொடுத்தாகிலும் பொருளின் தரத்தையும், நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். வெற்றிக்கு இதுதான் முதல்படி.
தத்துவ ஞானி டேல் கார்னெகி சொல்வதைப் போல “ வெற்றிகரமான மனிதர்கள் தங்கள் தவறுகளை லாபமாகக் கருதி, வேறு வித்தியாசமான வழியில் முயற்சி செய்து வெற்றியை அடைகிறார்கள்” என்ற கருத்து இங்கு சாலப் பொருந்தும்.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles