– 2018 – July | தன்னம்பிக்கை

Home » 2018 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    போரிடாமல் ஜெயிப்பது எப்படி?

    வெற்றியின் ரகசியம் எளிமையானது, சரியான விஷயத்தை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்தால் வெற்றி கிடைத்துவிடும்.

    – அட்னனால்டு கிளாஸோ

    தொழிலும், வர்த்தகமும், யுத்தம் போன்றது தானா? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. ஆம்,  வணிகமும், யுத்தமும் ஒன்று தான். தொழிலும், யுத்தமும் ஒன்று தான். ஆனால் களங்களும், ஆயுதங்களும் மட்டும் வெவ்வேறானவை,  இரண்டிலும் போட்டிகள் உண்டு. போட்டி என்று வந்துவிட்டால் வெற்றியோ, தோல்வியோ ஏதோ ஒன்று நிகழ்ந்து தான் தீரும்.

    இந்திய விடுதலைப்போரின் போது மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசை எதிர்த்து, ஒரு விடுதலை  யுத்தத்தைத் தொடங்கினார்  கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று  வருகுது”  என்று நாமக்கல் கவிஞர் குறிப்பிட்டபடி  அஹிம்சை, ஒத்துழையாமை, உண்ணாநோன்பு என்ற இந்த மூன்று ஆயுதங்களையும் வைத்து ஆங்கிலப்பேரரசை வீழ்த்திக் காட்டினார்.

    அது போல இன்று தொழில்களிலும், வர்த்தகங்களிலும் போட்டிகள் யுத்தங்களாக மாறி விட்டன, இந்த யுத்தத்தில் போட்டியாளரை வீழ்த்தினால்தான்  வெல்லமுடியும். இதில் 1. பொறுமை காத்தல், 2. புத்தி சாதுர்யம், 3.புதிய யுக்திகள், 4.நிர்வாகத்திறமை, 5.எதிரி கணிக்க முடியாத வியூகங்கள், 6.சரியாக திட்டமிடல், 7.வேகமாக மற்றும் முறையாக செயல்படுதல், 8. சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துதல், 9.துல்லியமான அனுமானங்கள், 10. விளைவுகளை கணித்தல், 11.நிபுணர்களை பயன்படுத்திக் கொள்ளுதல்,  12.ஆழம் காண முடியாத அமைதி, 13. சகிப்புதன்மை, 14.நிதானம் தவறாமை, 15.மௌனத்தை கடைப்பிடித்தல், 16.கோபப்படாது இருத்தல்,17.பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல், 18. சந்தைப்படுத்துவதில் புதுமையை புகுத்துதல், 19. மாற்றி யோசித்தல், 20. பணியாளர்களை அரவணைத்து, அர்ப்பணிப்பு உணர்வை அதிகப்படுத்துதல், எல்லாவற்றிக்கும் மேலாக 21.வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துதல் போன்றவைகள்  ஆயுதங்களாக அமைகின்றன.

    அனுபவசாலிகளின் கருத்துப்படி, “வியூகங்கள் முக்கியமானவை. தவறான வியூகம் அமைத்து தோற்றுப்போன படைகள் பல உண்டு.  சரியான முறையில் சந்தைப் படுத்துவதில் தவறி, தோல்வி கண்ட பெரிய நிறுவனங்களும் உண்டு. சந்தைப் படுத்துதலில் வெற்றி கண்டு, பெரிய நிறுவனங்களை வெற்றிகண்டவர்களும் உண்டு. இதில் தலைமை ஏற்பவர்களைப் பொறுத்து வெற்றி அமையும்.  லைமை சரியாக இருந்தால் ஒரு நிறுவனத்தில் எப்பொழுதும் இலாபத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்”.

    கடலில் பெரிய அலை ஒன்று புறப்படும், ஆனால் கரைக்கு வராமலேயே பாதியிலேயே நின்று விடும், சின்ன அலை இன்னொன்று புறப்படும். அது இறுதி வரை வந்து கரையைத் தொட்டுப் பேசும். எந்த அலை கரை சேரும் என்று நாம் சொல்ல முடியாது, அது போல வணிகத்திலும், தொழிலும் எந்த நிறுவனம் ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் உற்பத்தி செய்யும் பொருளின் தரம் உயர்வாக இருந்தால் ஜொலிக்க முடியும். “குறைந்தபட்ச லாபம், அதிகபட்ச விற்பனை அளவு (Turnover)” என்பது வணிகத்திலே ஒரு தாரக மந்திரம்.

    எந்த பெரிய சாதனைக்கும், மனதில் முதலில் தோன்றும்  முதல் எண்ணமும், கருத்தும்தான் விதையாக அமைகிறது. அந்த விதைக்குள் இருப்பது ஒரு ஆலமரம், அது வெளி வர, வளர, உயர தன்னம்பிக்கை என்ற நீரும், திட்டமிடுதல், செயல்படுதல் என்ற உரங்களும் தேவைப்படுகிறது.

    “விதியை நம்பிக்கொண்டு  இருப்பவன் எதையும் செய்ய மாட்டான்” என்கிறது அர்த்த சாஸ்திரம், அப்படி இருப்பவனுக்கு போர் கிடையாது, போராட்டமும் கிடையாது, யுத்தமும் கிடையாது. யுத்தம் இல்லாத இடத்தில் வெற்றி எப்படிக் கிடைக்கும்.

    ஒரு தொழில் அல்லது வணிகம் சிறக்க வேண்டும் என்றால் அந்த நிறுவன தலைமைக்கு புத்தி சாதுர்யம் இருக்க வேண்டும் . எந்த நேரத்தில் எதைத் தொட்டால் ஜெயிக்கும் என்ற தீர்க்கதரிசனம் வேண்டும். எப்போது இருப்பு வைக்க வேண்டும்? எப்போது விற்பனைக்கு கொண்டு வருவது? எப்போது உற்பத்தியை அதிகப்படுத்துவது? எப்போது நிறுத்துவது? எப்போது விரிவாக்கம் செய்வது? எப்படி விளம்பரப்படுத்துவது? எந்த வகையில் சந்தைப்படுத்துவது ? என கணிக்கும் திறமை இருக்க வேண்டும், உற்பத்தி அதிகரிக்க, அதிகரிக்க தரத்தையும் உயர்த்திக் கொள்ளும் சாதுர்யம், நிர்வாகத்திறமை, எதிர்போட்டியாளானகளின் வியூகத்திற்க்கு ஏற்ப மாற்று வியூகத்தை அமைப்பது, எப்போது தாக்குதலைத் தொடங்குவது ? எந்த நேரத்தில் அமைதியாக இருப்பது? எப்போது பின்வாங்குவது ? என்ற வியாபார வித்தகங்கள் இருத்தல் வேண்டும்.

    வாடிக்கையாளர்களை பெருக்கிக் கொள்வது என்பது ஒரு கலை. ஒரு வாடிக்கையாளரை இழந்தால், நாம்  பத்து வாடிக்கையாளர்களை  இழக்க நேரிடும், வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய, புதிய உத்திகளை பயன்படுத்த வேண்டும், மற்றவர்கள் வியக்கும்படியாக விளம்பரப்படுத்த வேண்டும். புதிய வடிவங்களில் எல்லாத் தரப்பினரையும் கவரும் வகையில்  பெயர் வடிவமைக்கப் படவேண்டும். போட்டியாளர்களுக்கு எதிர்பாராத திருப்பத்தைத் தருவதைப் போல மாற்று யுக்திகளை பயன்படுத்துதல் வேண்டும். ஏழாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும். மூன்றாம் பார்வையும் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உற்பத்திமுறை, விற்பனை முறை, சேவைப் பிரிவு இவைகளை போன்ற சரியான அமைப்புகளை உருவாக்க வேண்டும். உற்பத்திக்கு  முன்பாகவே விற்பனை என்ற யுக்தியை  பின்பற்ற வேண்டும். நிறுவனத்திற்கென்ற அடையாளக் குறியீட்டை ( Brand ) பிரபலப்படுத்த வேண்டும், ஒரு பொருளின் மதிப்பையும், லாபத்தையும் உயர்த்தும் முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் ( MVP – Maximizing value and profit).[hide]

    எந்தப் பொருள் சந்தையில் தேவைப்படுகிறதோ, வாடிக்கையாளானகள்  எந்தப் பொருளை விரும்புகிறர்களோ அந்தப் பொருளை தயாரிக்க வேண்டும்  அல்லது சந்தைப்படுத்துதல் வேண்டும், எதிர்பாராததை எதிர்பார்க்க பழகிக் கொள்ள வேண்னடும் (Expect the unexpected), சின்ன சரிவுகள் வந்தாலும் முறிந்துவிடாமல், முயற்சியை இரட்டிப்பாக்கி வெற்றி பெற வேண்டும்.

    தொழில் நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இந்த யுகத்தில் கடின உழைப்பு பலன் தருமா? அல்லது புத்திசாலித்தனமான உழைப்பு வெற்றி தருமா? என்ற     கேள்விக்கு,  “ இந்தக் காலத்தில் புதுமை செய்து வளர்பவர்களும், ஜெயித்து காட்டுபவர்களும் கடின உழைப்பால் அதை சாதிப்பதில்லை என்றும் புத்திசாலித்தனமான உழைப்பே வெற்றியைத் தருகிறது” என்று புதிய ஆய்வுகள்  சொல்கின்றன,  நெருக்கடிகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் புத்தி சாதுர்யத்தை நாம் பெற்றிருக்க வேண்டும்.

    ஒரு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது, பாஞ்சாலி சபதம் நாடகம் நடந்தது.  பாஞ்சாலியாக  ஒரு மாணவன் பெண் வேடமிட்டும், துச்சாதனனாக ஒரு மாணவனும் நடித்தார்கள், நாடகத்தில் துகிலுரியும் காட்சியில் பாஞ்சாலியாக நடிக்கும் மாணவனின் உடலில் சுற்றப்பட்டிருக்கும் சேலையை மெதுவாக இழுக்க வேண்டும் என்று துச்சாதனனுக்கு சொல்லப்பட்டிருந்தது, ஆனால், அவசரத்தில் துச்சாதனனாக நடித்த மாணவன் பாஞ்சாலியின் ஆடையை மிக வேகமாக  உருவி விட்டான், பாஞ்சாலி இப்போது அரை டிரவுசரோடு நின்றான். இந்த நெருக்கடியான நேரத்தில் ஆசிரியர்கள் பதறிப் போனார்கள்,ஆனால், பாஞ்சாலியாக நடித்த மாணவன் சமயோசிதமாக யோசித்து            “பகவானே! கண்ணபிரானே! சேலை தந்து என் மானத்தைக் காப்பாற்றுவாய் என்று  நினைத்தேன், ஆனால் நீயோ அரை டிரவுசான போட்ட பையனாகவே மாற்றி என் மானத்தைக் காப்பாற்றி விட்டாய்”  என்றான். அரங்கமே குலுங்கிக் குலுங்கி சிரித்தது, இதைப் போன்ற சமயோசித அறிவுகள் சில பல பிரச்சனைகளுக்கு தீர்வுக்கும், வெற்றிக்கும் வழி காட்டும்.

    “வாங்குவதற்கு ஒரு தராசும், விற்பதற்கு  ஒரு தராசும் வணிகர்களிடம் இருக்க வேண்டும் ” என்று சாணக்கியர் சொல்கிறார்.  அது போல் வணிகத்திலும், தொழிலும், விற்பனை நுணுக்கங்களையும், தொழில் நுட்ப அறிவையும் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும்.

    எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள் என்பது முக்கியமல்ல, எந்த யுக்தியை பின்பற்றுகிறீர்கள் என்பதும் முக்கியமல்ல. எந்த விலை கொடுத்தாகிலும் பொருளின் தரத்தையும், நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். வெற்றிக்கு இதுதான் முதல்படி.

    தத்துவ ஞானி டேல் கார்னெகி சொல்வதைப்  போல “ வெற்றிகரமான மனிதர்கள் தங்கள் தவறுகளை லாபமாகக் கருதி, வேறு வித்தியாசமான வழியில் முயற்சி செய்து வெற்றியை அடைகிறார்கள்” என்ற கருத்து இங்கு சாலப் பொருந்தும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சத்துணவும் நீள் ஆயுளும்

    நீள் ஆயுள் என்பது நம் உடலின் உறுதித் தன்மையைப் பொறுத்தது என்று நாம் முன்னுரையில் பார்த்தோம். அந்த உடல் உறுதியை நமக்கு அளிப்பவை சத்துணவுகளே. இன்றைய இரசாயன வேளாண்மை காலத்தில் நமக்கு கிடைக்கும் உணவுகள் அனேகமாக சத்துக்கள் குறைந்தும் விஷங்கள் மிகுந்துமே இருக்கின்றன. இந்தப் பற்றாக்குறைகளை ஈடு செய்யவே நாம் துணைச் சத்துணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அம் உடலினை உறுதி செய்யும் துணைச் சத்துணவுகளைப் பற்றி இனி நாம் பார்ப்போம்.

    1. சமச்சீர் புரதம்: எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட சமச்சீர் புரதம் நம் உடலின் கட்டுமானப் பொருளாகவும், நம் உடலின் செரிமான நொதிகளை (Digestive Enzymes) உற்பத்தி செய்யவும் மற்றும் நம் உடலின் உயிர் வேதியல் தன்மாற்றத்திற்குத் (Metabolic Reactions) தேவையான ஹார்மோன்களை உற்பத்திச் செய்யவும் அவசியம் தேவை. ஆக, சமச்சீர் புரதம் நம் உடலை உறுதியாக்கும் என்பது உறுதிதானே?
    2. உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள்: இயற்கையான உயிர் மற்றும் தாதுச் சத்து துணைவுணவுகள் நம் உடல் செயலாக்கத்திற்கு வேண்டிய எல்லா உயிர்ச் சத்துக்கள் (vitamins) மற்றும் நம் உடலின் வேதி வினைகளுக்கு வேண்டிய கிரியா ஊக்கிகளான (bio-catalyst) அனைத்து தாதுச் சத்துக்களையும் (minerals) கொண்டிருக்கும். இதனால் நம் உடலின் எல்லா உயிரியல் வினைகளும் சிறப்பாக நடைபெற்று, நம் உடல் உறுதியாகும்.
    3. ஒமேகா-3 கொழுப்பு: நம் உடலை மென்மையாகவும், தோலை இளமையாகவும், இரத்தக் குழாய்களை இலகுவாகவும், நரம்புகளை தளர்வாகவும் வைக்க ஒமேகா-3 கொழுப்பானது உதவியாக இருக்கும். இதனால் நம் உடல் இயக்கத்தை நரம்பு மண்டலம் சிறப்பாக இயக்கி நம் உடலை வலுப்படுத்தும்.
    4. நீரில் கரையும் நார்ச் சத்து: இந்த நார்ச் சத்தானது நம் உடலின் செல்லணுக்களின் அசுத்தங்களை உள் உறுப்புகளுக்குச் சேதாரம் இன்றி வெளியேற்றம் செய்ய உதவியாக இருக்கும். நம் செல்லணுக்களில் கழிவு நீக்கப்பட்ட காலியிடத்தில் ஆகாச சக்தியே நிரம்பி இருக்கும்போது நம் சுவாசம் ஆழமாகி நீள் ஆயுளைத் தரும்.
    5. காய்கனிகளின் செரிவுச் சத்து: இவ்வித துணை உணவுச் சத்தானது, நம் உடலின் இரசம் (ஜீரண மண்டலம்), இரத்தம், சதை, கொழுப்பு (பாதுகாப்பு மண்டலம்), எலும்பு, நரம்பு மற்றும் விந்து நாதம் ஆகிய ஏழு மண்டலங்களின் செயலாக்கத்திற்கு கிரியா ஊக்கிகளாக விளங்கும். இதனால், நம் இரசம், இரத்தம் முதல் விந்து நாதம் வரை வலுவாக்கம் சாத்தியப்படுகிறது.[hide]
    6. ஜிங்சங் தாவரச் சத்து: இந்தத் தாவரச் சத்து நம் நரம்புகளை வலிமையாக்குகிறது.
    7. சி மற்றும் ஈ-உயிர்ச் சத்துக்கள்: நம் உடலின் நீர்க் கழிவுகளை நீக்க சி-உயிர்ச் சத்தும் கொழுப்புக் கழிவுகளை நீக்க ஈ-உயிர்ச் சத்தும் உதவியாக இருக்கும். மேலும் இவைகளின் ஆண்டிஆக்சிடென்ட் (Anti-oxidants) தன்மையானது நம் ஆயுளை நீட்டிக்கும்.
    8. கரோட்டின் மற்றும் இலியுட்டின் தாவரச் சத்துக்கள்: இவை நம் கண்களை வளமாக்கும்.
    9. மில்க் திசில் மற்றும் டாண்டிலியான் தாவரச் சத்துக்கள்: இவை நம் கல்லீரலை வளப்படுத்தும்.
    10. பி-உயிர்ச் சத்துக்கள்: இவை நம் மண்ணீரல் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்.
    11. கால்சியம் மற்றும் மெக்னீசியத் தாதுச் சத்துக்கள்: மெக்னீசியம் நம் சதையையும், கால்சியம் நம் எலும்பையும் வளமாக்கும்.
    12. கோ-என்ஸைம் ண-10: இது நம் இதயத்தை வளமாக்கும்.
    13. இஃரிபிலாவோன் தாவரச் சத்து: இது நம் எலும்புகளை இரும்பாக்கும்.
    14. குளுக்கோஸமீன் தாவரச் சத்து: இது நம் எலும்பு மூட்டு கூழை வளமாக்கும்.
    15. போலிக் இரும்புச் சத்து: இது நம் இரத்தத்தை வளமாக்கும்.
    16. எக்னீசியா தாவரச் சத்து: இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை வளப்படுத்தும்.

    துணைச் சத்துணவுகள் அனைத்தும்

    நம் உடலின்  செல்லணுக்களுக்கு

    ஊட்டமும் சக்தியும் தந்து

    நம் உடலை உறுதியாக்கி நீள் ஆயுள் தரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    மனம் கூறும் தன்னம்பிக்கை

    உலகில் தன்னம்பிக்கை என்ற வார்த்தை பலருக்கு தெரியாமலே போயிற்று. அதன் காரணமாகவே இன்றைய உலகம் முயற்சி என்னும் சொல்லை மறந்து நிற்கின்றது. காலத்தின் மீது பழியை போட்டு இது நடந்து விடும்; நாளை நடந்து விடும் என்று கூறியே நம்பிக்கையை அழந்து வருகின்றனர். நம்பிக்கை அன்ற வட்டத்திற்குள் தன்னை அமிழ்த்தி கொள்கின்றனர்.

    நம்பிக்கை என்னும் அடித்தளம் இருந்தால் மட்டுமே முயற்சி என்ற கலவை கட்டிடம் தரும். ஆனால் இன்றைய சமூகம் அடித்தளம் அற்று சூழ்நிலையை குற்றம் கூறி வாழ்கின்றனர். நம்பிக்கையை தாங்கி, முயற்சியை கையிலெடுத்த மனித இயல்பு எங்கே சென்றது.

    எப்பொழுது வரும் வெற்றி என்ற கேள்வி இங்கு பலரிடம் பதிலற்று தேங்கி நிற்கின்றது. வெற்றி என்ற இலக்கை எவரும் தேடி செல்லவே தயாராக இல்லை என்பது தான் உண்மை. நம்மிடம் விடாமுயற்சி, நம்பிக்கை, கடின உழைப்பு என்ற எவ்வித தூண்களையும் கையில் எடுக்க மனம் இல்லை, தைரியம் இல்லை. இவற்றுள் ஒன்றை கையில் எடுத்தால் போதும் வெற்றி தானாக தேடிவரும்.

    நீ முயற்சி செய். முடியும் என்ற தன்னம்பிக்கையை தக்க வைத்து கொள். பிறகு சிந்தனை செய்; உன்னையும் உன் முயற்சியையும் குறை கூறும் மானிடர்களை. அங்கே நீ குறைகளை குறைத்து நிறைகளா மாற்றுவாய். குறைகளும் நிறைகளாக மாறும்.

    தனக்குள் இருக்கும் மனக்குறைகளை புரிந்து எவர் செயல் படுகின்றாரோ அவரே தெளிவாகப் பக்குவத்தில் நல்ல மனப்பான்மை உள்ளவார்கள் மட்டுமே உயர்வர். உன் ழுற்றங்களை ஏற்றுக் கொள் உலகம் உனக்கு தன்னம்பிக்கை என்ற தாரக மந்திரத்தை கற்று தரும்.

    வெற்றி வேண்டும் எண்ணம் உள்ளவர்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொள்பவர்களாக இருக்க வேண்டும். தோல்வி, வெற்றியின் அடிக்கல் என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர்.

    பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் தவறல்ல. விதமாக வளர்ப்பது தான் தவறு. வெற்றி என்பது நினைத்தபொழுதெல்லாம் வராது என்று எத்தனை பெற்றோர்கள் கூறுகின்றனர். இவ்வார்த்தைகள் தான் குழந்தைகளை நல் முடிவெடுக்க வைக்கும். தோல்விகளை ஏற்க திறனற்று தான் பலரும் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.[hide]

    “விட்டுக் கொடு சிகரம் தொடு”இந்த மாதிரியான சில வார்த்தைகள் பண்பிற்கே உரித்தான அருமையான வார்த்தைகள். எப்படி என்று நம்முள் பலர் இன்றுவரை கேள்வியாக பார்க்கும் மனப்பான்மை தான் நாளடைவில் போட்டி பொறாமையாக மாறி அடி தடி வெட்டு குத்து என்று மாற்றம் அடைகிறது. வெற்றியை விட்டுக் கொடு தோல்வி உன்னை அடையும். ஆனால் நல்ல பண்பு உண்டாகும். தோல்வியை விட்டுக் கொடு வெற்றி உன்னைச் சேரும் எப்படி? பலரின் சாபமாக வந்தடையும். முன்னுக்கு பின் முரணாக இருக்கும் வாழ்க்கை, ஒரு நாள் நம்பிக்கையை இழந்து வெறுமனே காட்சியளிக்கும்.

    தகுதிக்கே இன்று வேலை என்ற நினைப்பில் பலர் தாழ்த்தப்பட்டவராக கருதி வேலைக்கு செல்லாமல் தன்னம்பிக்கை இல்லாது ஆம் தன்னுடைய நம்பிக்கையை காற்று போல் பறக்க விட்டு பின் மே மாத வெயிலில் குளிர்ச்சியை தேடுவது போல் தேடுகிறார்கள். வேலைக்கு செல்லும் இடங்களில் நீ என்னச் செய்கிறாய் என்று யாரும் பார்ப்பதில்லை. இதற்கு முன் என்ன செய்தாய் என்றே பார்க்கிறார்கள். உண்மை தானே உன் பின்னணி அறிந்தால் தானே உன் நம்பிக்கை பற்றி உழைப்பு பற்றி முயற்சி பற்றி யாவரும் அறிவார்….முயற்சி செய் வெற்றியை உனக்கு உரியதாக்கு…

    தன்னம்பிக்கை கொண்ட யாராக இருந்தாலும் தன்னுடைய செயலில் துணிவும் நாவில் மென்மையும் கோபத்தை குறைத்து கொண்டும் தன்னுடைய வழியிலே பிறரையும் நல்வழிப்படுத்தவார். எனவே நம்பிக்கை வாழ்வின் மிகப்பெரிய அங்கீகாரம்.

    எண்ணம் போல் வாழ்க்கை என்பது பல நேரங்களில் உண்மையாகிறது. அதனால் எண்ணத்தில் தன்னம்பிக்கையும் தைரியமும் செயலில் முயற்சியும் கடின உழைப்பும் கொண்டு நீ நீயாக செயல்படு. மற்றவரை பார்த்து பொறாமை கொள்ளாது உனக்காகவே வாழாமல் உன்னை நம்பும் சிலருக்கு உறுதுணையாக இருந்து வாழ்க்கையில் தோல்வி வெற்றி எல்லாவற்றையும் சரிவர பகிர்ந்து நல்லதோர் பயணத்தில் நயமான வாழ்க்கை வாழ்ந்திடு.

    தெளிவான எண்ணங்கள் நேர்மறை சிந்தனையை தூண்டும் விதமாக அமையும். உறுதியும் தன்னம்பிக்கையும் சிந்தனையில் உதித்து பிறர் போற்றும் வகையில் ஆகச் சிறந்தவனாக திகழ்கிறானோ அன்றே வாழ்வின் இலட்சியம் உயிர்பிக்கிறது.

    உள்ளதில் துணிச்சல் வேண்டும் ஆனால் செய்யும் வேலையில் உயர்வு தாழ்வு எல்லாமே வேண்டும். துணிச்சல் எங்கிருந்து பிறக்கிறது தன்னம்பிக்கை எங்கு உழைக்கிறதோ அங்கே பிறக்கிறது. உண்மை தான்  உழைக்கும் கையில் தான் தனக்கான உணர்வு பிரதிபலிக்கிறது.

    “ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச்

    செல்வார்க்குச் செல்லாது இல்”

    (குறள் – 472)

    தன் திறமையை வளர்த்துக் கொண்டு நம்பிக்கையுடன் வாழுபவர் யாராக இருந்தாலும் ஒருபோதும் பின் தங்காது நம்பிக்கையுடன் வாழ்வீர்….[/hide]

    இந்த இதழை மேலும்

    வாங்களையோ வசவு…

    விரல்களை விட்டு ஒரு பத்து குற்றங்களை, தான் செய்தது பிறர் செய்ததெனப் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் ஒருசேர சாகக்கிடக்க, உயிர் போகவிருக்கும் கடைசித் தருவாயில் ஒரு சட்டியில் அமிர்தம் ஊற்றி கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதை குடிப்போறெல்லாம் சாகாமல் பிழைத்துக் கொள்வர் என்பதால், இந்தா இங்கிருந்து ஆரம்பித்து யார் யாருக்கு வேண்டுமோ வேகமாகக் குடித்துவிடுங்கள்’ என்று சொல்லிலிக்கொடுத்தால் உடனே நாமென்ன செய்வோம்? அதும் அந்தச் சட்டியை வாங்கிப் பார்த்தால் அந்தச் சட்டியில் காணக் கிடைத்ததாக ஒரு சொச்சமே இருப்பதாகத் தெரிகையில் முதல் மினர் அமிர்தத்தை ‘அவன் குடிக்கட்டுமே, அவன் குடித்து பிழைத்துக் கொள்ளட்டுமே, பிறகு நான் குடிக்கிறேன் என்று சொல்லிலி யாரேனும் ஒருவரேனும் நாம் பிறருக்கு விட்டுதந்துவிட்டு தான் குடிக்காமலிலிருக்க தயராகயிருப்போமா?

    மடக்கென்று பாதி சட்டியில் உள்ளதை எடுத்து அடுத்தவன் பிடுங்கிக் குடிப்பதற்குள் தானே குடித்துவிட்டு மகிழும் சுயநலப் புழுக்கள் தானே நாமெல்லோருமே? யாரையும் இங்கே குற்றம் சொல்வதற்கில்லை. நாமெல்லோருமே அப்படித்தான். விட்டுக்கொடுத்துப் பழகாததால் இன்றைய நிலவரப்படி நாம் அப்படித் தான் ஆகிப்போயிருக்கிறோம். அதல்லாம் ஒருபுறமிருக்கட்டும், முதலில் அந்தப் பத்து குற்றங்களை ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ளுங்கள். எது செய்தால் செய்தவர் தீயவர் என்றுக் கருதப்படுவரோ அதையெல்லாம் எழுதுங்கள்.

    அப்படி எழுதி வந்தால் முதலில் எது வரும்? பொய், பொறாமை, தீண்டாமை, பேராசை, திருட்டு, புறங்கூறுவது, பிற உயிரரைக் கொல்வது, உயிர்களை உழைப்பை அவமதிப்பது, உழைக்காதிருப்பது, ஏமாற்றுவது, இன்னும் தற்கொலை மோசடி சுயநலமென பட்டியல் நீண்டுகொண்டே போகுமில்லையா?

    இதில் எல்லாம் செய்பவர், பாதி செய்பவர், கொஞ்சம் மட்டும் செய்பவர், இல்லை எப்பொழுதேனும் கொஞ்சம் பொய் சொல்வேன், அல்லது பொறாமை படுவேன், பேராசையில் வீழ்வேன் என்பவரென; குற்ற மூட்டைகளை தன்முதுகில் சுமந்துகொண்டு, பிறரைப் பார்த்து ச்சீ என உடல் கூசும், பொறுப்பற்ற ஜென்மங்களாகத் தானே நம்மில் அதிகம்பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    இதற்கெல்லாம் மூலக்காரணம் நாம் மட்டுமா என்று யோசித்தால், இல்லை. இதலாம் நாம் கற்றது. இப்படித்தான் நமக்கு வாழ்க்கை உண்மைக்கு அப்பாற்பட்டோ அல்லது யதார்த்தங்களை மீறியோ கற்பிக்கப்பட்டுள்ளது. நம்மில் நிறையப்பேர் ஒழுங்கற்று தவறாகவே வாழ்ந்து வளர்ந்து தன்னை சரியென்று மிகக் கெட்டியாக நம்பிக்கொண்டுள்ளோம்.

    இதில், நாம் அடுத்தவருக்கு வேறு கற்றுத்தர முயன்றால் இவ்வுலகு என்ன கதியாகும்? இப்படி நானும் கெட்டு பின் அதையே சரியென்றெண்ணி, பிறரையும் கெடுத்துவிட்டு, மொத்தப் பேரை நாம் கிணற்றில் விழாமலே சாகப்போகும் பொதுவழிச் சாலையில் பயணிக்கவைத்த பாவமான பிறவிகள்தானே நாமெல்லாம்?[hide]

    ஆக, நமது மொத்தக் குற்றங்களையெல்லாம் எடுத்து ஆராய்வதெனில், அதை எழுத வெள்ளைத்தாள் கூட இல்லாமல் போய்விடலாம் என்பதால், குற்றங்களை விடுத்து, அது துவங்கும் ஒரு புள்ளியான ‘பார்வை’ என்பதை மட்டும் சற்று ஆராய எடுத்துக்கொள்வோம். காரணம் பார்வையில்தான் நாம் படிக்கிறோம். பார்த்துப் பார்த்துத்தான் வளர்கிறோம். பார்த்து நட என்று சொல்லிலிச் சொல்லிலியே நம் சந்ததிகளை வளர்க்கிறோம். ஆக, நம்முடைய அத்தனை முயற்சியும்’ வெற்றியும்’ தோல்வியும்’ வாழ்தலும்’ அழிதலும்’ எதுவாயினும் சரி எதைக் கண்டோமோ அதன்படி பின் வாழ்வதாகவே உள்ளதொரு இயல்பைத்தான் இயற்கை நமக்கு காலங்காலமாக கற்றுத்தந்திருக்கிறது.

    அதனால் எதைப் பார்க்கிறோமோ அதுவாகவே மாறிப்போகிறோம். எப்படிப்பட்ட சுற்றத்தில் வளர்கிறோமோ அப்படிப்பட்ட குணங்களைக் கொண்டே நம் உயிர்வட்டத்தின் முதல் புள்ளி துவங்குகிறது. முன்பெல்லாம் பார்த்தீங்கனா தெரியும், வீட்டிற்குமுன் அதிகப்படியாக ஒரு வேப்பமரம் வளர்ந்திருக்கும். அந்த வேப்பமரம் முழுக்க முழுக்க வெளிக்காற்றை உள்ளிழுத்து கரியமிலவாயுவை தான் செரித்துக்கொண்டு, பிராணவாயுவை வெளியே விடும். அதோடு அதன் இலைகள் உதிர மூலிகையாகவே கீழ் விழும். அதன் பழத்தை காக்கை தின்று கொட்டை போட அதுகூட மருந்தாகம். அதன் பட்டை வேர் என எல்லாமே பயனுற்று கடைசியில் மிஞ்சும் நெடுமரம் கூட வீடு கட்டவும், வாசகால் செய்யவும் உதவும். அப்படி வாழணும்டா மனுசன்னு அந்த மரத்தைப் பார்க்க பார்க்க நமக்கு புத்தியில் உரைக்கும்.

    அப்படி உரைக்கனும்னுதான் மரத்தை சாமின்னு கும்பிட்டுது நம்ம சனம். நன்றியை வணக்கத்தின் வழி சொல்லிலி இயற்கைக்குக் கூட தான் கடனற்று வாழவே பழகியிருந்தோம் நாம். வாழும் உயிர்களைக் கண்டு வாழ்க்கையை செதுக்கினோம்.

    இன்று உண்பது உறங்குவது நடப்பது பறப்பது என உயிர் வாழும் அத்தனையையும் நாம் கற்றுக்கொண்டது இயற்கையை பார்க்கமுடிந்ததால் தான். இயற்கையிடமிருந்துதான்.

    பறவையை கண்டான் விமானம் படைத்தான்

    பாயும் மீன்களில் படகினை கண்டான்

    எதிரொலிலி கேட்டான் வானொலிலி படைத்தான்

    என்று பாட்டாலும் பார்ததாலும் பல கதைகளை கேட்டதாலேயே இத்தனை தூரம் வளர்ந்திருக்கிறோம் என்பதில் ஒருதுளி சந்தேகமும் இல்லை. எனில், நம் பிள்ளைகள் பார்க்கவும், நமைப் பார்த்து வளரவும் இன்று நாம் எதை உயர்வாக மிச்சம் வைத்திருக்கிறோம்?

    உன் அப்பா அம்மா உனக்கு சிலதை தரவில்லை, அல்லது சரியாக சிலதை சொல்லிக்கொடுக்கவில்லை, சரி, நீ தவறு இல்லை. உன்னை மன்னிக்கலாம். ஆனால் இன்று நீயும் அதே தவறுகளை செய்தே வாழ்ந்து மடிகிறாயே, நீயென்ன செய்தாய்? உனை உலகிற்கு தந்த இந்த மண்ணிற்கு நீ எதை விட்டுச் செல்கிறாய்? நாளை உனது பிள்ளைகள் உன்னை கேள்வி கேட்குமே, அப்போதுனக்கு வலிலிக்காமல் சொல்ல உன்னிடம் என்ன பதிலுண்டு?

    எந்த திரைப்படம் பாரு, “குடி குடியை கெடுக்கும், புகை நாட்டுக்குப் பகைன்னு” போடுற. போட்டாமட்டும் போதுமா? குடிகாரன் ஒருத்தன் குடிக்க கடைக்கு வரான், சில்லறை எடுக்க அவன் பின்னால எட்டி கஜானா திறப்பதற்குள்ள மேலப் பார்த்தா “குடி குடியை கெடுக்கும்” என்று பலகை வைக்கப்பட்டிருக்கு. அப்படியெல்லாம் வைத்துவிட்டு காலத்திற்கும் நாம் குடிகாரர்களாகவும் போதைக்கு அடிமையகவுமே வாழ்ந்துத் தீர்த்தால் நமது வாழ்க்கை சரியாக முடியுமா?

    ஒரு செயலை பிறர் செய்யக்கூடாது எனில் முதலிலில் அதை நாம் செய்யக்கூடாது. பிறகு மெல்ல மெல்ல அதை பிறரையும் செய்யவிடக் கூடாது. பிறரை தடுக்கக் கூட போஸ்டர் அடிச்சி ஒட்டனும்னு இல்லை, மனதால் நல்லதை நடப்பவாறு நினைத்தால் போதும். தீயது தன்னைத்தானே மாறும். ஒரு செயல் தப்புன்னா அதை செய்ய உடம்பு கூசனும். அதைப் பற்றி காட்சியோ கேளியோ, கருத்தோ ஒன்னும் சொல்லாம சட்டுன்னு தீயதை விட்டொழிக்கணும். கூடி நான்கு நண்பர்கள் பேசினால்கூட தவறுகள் அற, பொய்யும் பேராசையும் பிறருக்கான தீங்கும் நீங்க நல்லொழுக்கத்தைப் பற்றிப் பேசிப்பழகனும்.

    நம்மப்பா அம்மா இது தப்புன்னு சொன்னாங்க திருத்திக்கொண்டோம். ஆசிரியர் இதலாம் தவறுன்னு சொல்லிலித்தந்தார் தவறை விட்டு நகர்ந்துக் கொள்கிறோம். நன்றாகத்தானே வளர்ந்து வருகிறோம், இடையே புகுந்து எல்லாம் சரியென்று சொல்லிலி சொல்லிலிக் கெடுக்க கெடுக்க நாம் நமது உண்மைநிலையிலிலிருந்து விலகி மீண்டும் பெரிய பள்ளத்தினுள் விழுந்துப் போகிறோமென்றால்; தவறு எங்கே நடக்கிறது? தவறை சரியென்று ஏற்றுக்கொள்வதில் தானே தவறிருக்கிறது. தவறை இப்போதைக்கு மட்டுமென்று அங்கீககரிக்கிற அந்த ஒற்றைப் புள்ளியை முதலில் மனதிலிலிருந்து கலைத்துவிடுங்கள். இன்று ஒருநாளைக்கு மட்டுமென்று எண்ணி தனது நிகழ்காலத்தை இழந்த அத்தனைப் பேருமே எதிர்காலம் முழுக்க துன்பப்படுவோமென்பதை உணருங்கள்.

    லஞ்சம் வாங்குவது குற்றம். பிறருக்கு உதவிக்கு இல்லமால் நாம் பொருள் சேர்ப்பது குற்றம். பிறர் வலிலியை தனதாக உணராது சுயநலக் கிடங்கில் வீழ்ந்திருப்பது குற்றமென ஆயிரம் குற்றங்களை சரிசெய்ய நமக்கு முதலில் நடத்தை சரியா இருக்கணும். யோசித்துப் பாருங்க; நாம சுவாசிக்கிற சுவாசத்தின் வழியே உள்சென்று உற்றுப் பார்த்தால்தான் பிறப்பின் ஞானமே கிடைக்கும் என்கிறார்கள் யோகிகள். ஆனா ஒரு சிகரெட் பத்துப் பேரோட சுவாசத்தை கெடுக்குது, ஒரு மாச சிகரெட் செலவு ஒரு வீட்டோட ஒரு வார சாப்பாட்ட முழுங்குது, ஒரு வருட செலவுல ‘ஒரு பெண் மணம் முடிக்க பணம் கிடைத்து ஒரு முதிர்கன்னிக்கு வாழ்க்கையை தருது’. ஆக; காலம் முழுதும் நாம் குடிக்காத ஓட்கா விஸ்கியும், புகைக்காத வெண்சுருட்டும் நல்லவனெனும் நற்பெயரை தந்து வாழையடி வாழையாக நமை அறிவோடு வாழவைக்கிறது.

    பழகிப் பார்த்தீங்கன்னா தெரியும். சுத்தமா கண்ணியமா வெண்மையா பொய்யின்றி வாழ்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கு. நிம்மதி இருக்கு. உண்மையின் ஆனந்தம் நாம் உண்மையாக வாழ்வதன்மூலம் தான் வெளிப்படும். பலா வெறும் காயாக மட்டுமே இருந்திருந்தால் அது ஒரு முற்களின் கூட்டாகத்தான் இருந்திருக்கும். முழுக்கப் பழுப்பதால்தான் அது சுவைகூடி உள்ளே உணர்வில் இனிக்கிறது. அப்படி நாமும் நன்மையால் பழுக்கப் பழுக்க ஆன்மாவின் இனிப்பை உணரமுடியும்.

    வளரும் குழந்தைகளுக்கு எண்ணம் சுத்தம், மனது புனிதம், சிந்தனையில் தெளிவு, வளர்ச்சியில் விவேகம், வேகத்தோடு பலம், பலத்தோடு பணிவு, பண்பில் நிறைவு, குறையில்லா நினைவாற்றல், இயற்கைக்கு எதிரில்லா உறுதி என எல்லாம் இருக்க அவர்கள் மகிழ்வோடு வாழட்டும். மண்ணின் பெருவளத்தின் அடையாளங்களாய் திகழட்டும். எல்லாவற்றிற்குமாய் சேர்த்து முதலில் கையிலிலிருக்கும் வெண்சுருட்டையும் பீடியையும் போதை பொருட்களையும் மதுக் கோப்பையினோடு சேர்த்துக் கீழே விடுங்கள். சட்டென விட்டுவிடுங்கள். இந்த நாள், இந்த நிமிடம், இது சரியென்று அறிவில் உரைக்கிற இந்த நொடியிலேயே எல்லாவற்றையும் உதறிவிடுங்கள். உள்ளே இழுக்கப்பட்டுவிட்டதால் உலகை அழிக்கும் புகையும், விழுங்கிவிட்டதால் கண்ணீரில் நனைத்து மிதக்கச் செய்யும் போதையின் ஈரமும் இதற்குமுன் தொட்டதே கடைசியானதாக இருந்துவிட்டுப் போகட்டும்..[/hide]

    இந்த இதழை மேலும்

    முயற்சியே முன்னேற்றம்!

    விதை செடியாக முளைப்பதற்குத் தடை செய்த நிலம், விதையின் விடாமுயற்சியால் பின் வாங்கி அந்தச் செடி வளர்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறது.

    இது போன்றே முன்னேற்றத்துக்கு  உண்டாக்கிய தடைகளைத் தாண்டிச் செயல்படும் போது இயற்கை இந்தப் பிரபஞ்ச சக்திகளையெல்லாம் ஒருங்கிணைத்து உதவுகிறது.

    இதை நான் சொல்லவில்லை. ஜேம்ஸ் ஆலன்  என்ற அமெரிக்க மனோ தத்துவ மேதை சொல்லியுள்ளார்.

    வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்

    துணைவலியும் தூக்கிச் செயல்- குறள் 471

    என்ற குறளில் திருவள்ளுவர்:

    செயலின் தன்மை; தன் வலிமை; சுற்றுச்சூழலின் நிலை மற்றும் உடனிருப்போரின் ஒத்துழைப்பும் அறிந்து, ஆராய்ந்து, திட்டமிட்டு செயல் பட்டால், இயற்கை விடாமுயற்சியின் முன் மண்டியிட்டு, முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எனச் சிறிது மாற்றிப் பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.

    என்னால் முடியும் என்பதை வாழ்வின் மொழி என்றனர் நம் முன்னோர். என்னால் முடியாது என்பது சாவின் மொழி என்று தான் சொல்ல வேண்டும்.

    வழிகள் எப்போதும் இரண்டு என்றே கூறுவோம். ஒன்று சாதகமானது ; மற்றது பாதகமானது. இதை POSITIVE -ஆக்க பூர்வமானது NEGATIVE -எதிர்மறையானது என்றும் சொல்லலாம்.

    வழிகளை அமைத்துத் தருவது நம் மனம் தான். இயல்பிலேயே மனதுள் பய உணர்வு மண்டிக் கிடக்கிறது. குழந்தையாகப் பிறந்து வளரும் போது 14 வயது வரை சுமார் 1, 48,000 முறை “உன்னால் முடியாது” என்ற வார்த்தைகளைக் கேட்பதால் மனதில் இது ஆழப் பதிந்துவிடுகிறது. ஈர்ப்புத் தத்துவம்: இது இரண்டு வகைப்படும். ஓமியோபதி தத்துவம்: ஒத்தது ஒத்ததை ஈர்க்கும்.

    மனதுள் பயமும் தேவையில்லாத எண்ணங்களும் இருந்தால், அதே போன்ற தேவையற்ற எண்ணங்களைத் தான் ஈர்க்கும்.

    பதிலாக தன்னம்பிக்கையும், தைரியமும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும் மனதில் நிறைந்திருந்தால் இவை மேலும் பலம் பெறத் தமக்குத் தேவையான நல்லவைகளையே நாடி வயப்படுத்தும்.

    மற்றது காந்தந் தத்துவம் காந்தத்தின் தன்மை எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் ஒத்த துருவங்கள் சேராது.

    வாழ்க்கையில் முன்னேற்றத் துடிக்கும் இளைஞர்களுக்கு  குறிக்கோள்களும் அவற்றை ஒட்டிய எண்ணங்களும் தான் முக்கியம்.

    முன்னேறத்துடிக்கும் இளைஞர் ஒருவர் ஒரு சுய முன்னேற்றப் பயிலரங்கத்தில் கலந்து கொண்டபோது, தனது எதிர்காலத்திட்டங்கள், செயல்பாட்டுக்கான வழிகளைத் தெளிவாகக் கூறினார்.[hide]

    அடுத்த வாரம் பக்தசபா கூட்டத்தில்  கலந்து  கொண்டபோது, மற்றவர்கள் பேசியதைக் கேட்டு, “அடடா, இது நாள் வரை முக்கியமான பல தலங்களுக்குச் செல்லாமல் காலத்தை வீணாக்கி விட்டேனே ” என்று வருத்தப்பட்டாராம்.

    இதிலிருந்து தெரிந்து கொள்வது நம்மைச் சுற்றியிருப்போரின் எண்ணங்கள் நம்மைப் பாதிக்கும் என்பதே.

    மற்றவர்களால் மனம் பாதிக்கப்பட்டால், நேரமும் பாதிக்கிறது. ஒரு விநாடி நேரம் கூட குறிக்கோளிலிருந்தும், அதை அடைவதற்கான செயல்களிலிருந்தும் விலகக் கூடாது. விலகி விட்டால் உறுதி நீர்த்து, முன்னேற்றத்துக்கான முயற்சி தடைப்படும்.

    வெளி நாடு ஒன்றின் சிறிய நகரத்தில் ஒரு சர்ச் இருந்தது. ஜான் என்பவர் தினமும் சென்று வழிபட்டு வந்தார். திடீரெனப் பல நாட்கள் அவர் சர்ச்சுக்குச் செல்லவில்லை.

    ஒரு நாள் அந்தச் சர்ச்சின் பாதிரியார் இவரைத்தேடி, இவர் வீட்டுக்கு வந்தார். அப்போது ஜான் இரவு நேரக் குளிரை இதமாக்க, நெருப்பின் முன் அமர்ந்திருந்தார்.

    பாதிரியாரை வரவேற்று அமரச் சொன்னார். அவரும் நெருப்பின் அருகில் அமர்ந்து சிறிது நேரம் உடலைச் சூடு படுத்திக் கொண்டார்.

    அதன்பின் இடுக்கியால், அந்த நெருப்புக்குவியலில் இருந்து, ஒரு நெருப்புத் துண்டை எடுத்து, சிறிது தூரத்தில் தனியே வைத்தார்.

    10 நிமிடங்களுக்குள் அந்த நெருப்புத்துண்டு, சாம்பல் போர்த்து, சூடு குறைந்துவிட்டது.

    இப்போது இடுக்கியால் அந்த நெருப்புக் குவியலுக்குள் வைத்தார். 10 நிமிடத்துக்குள் அது மீண்டும் ஜொலித்தது நெருப்புத் துண்டை எடுத்து; சூட்டைப் பரப்பியது.

    இதையெல்லாம் கவனித்த ஜான், எழுந்து விடை பெற்ற பாதிரியாரிடம், “நாளை முதல் நான் சர்ச்சுக்கு வருகிறேன். உங்களது அனல் தெறிக்கும் பேச்சால் நான் மனம் மாற்றம் பெற்றேன்” என்று கூறி அனுப்பினான்.

    ஏதாவதுதொரு முயற்சியில் ஈடுபடும் போது முழுமையான விழிப்புடன் கூடிய ஈடுபாடு அவசியம். விழிப்பு என்பதற்கு ஒரு வாழ்வியல் உதாரணம் சொல்லலாம்.

    சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது என்று சொல்வார்கள். தன்னை அறியாமலேயே கையானது பாதித்த பகுதிகளை வருடிக் கொண்டிருக்கும்.

    இதுபோல் எந்நேரமும் குறிக்கோளை ஒட்டியே சிந்தனை, பேச்சு, செயல் எல்லாம் இருக்க வேண்டும்.

    தொடர்ந்து புதிய புதிய இலக்குகளும், அவற்றை அடைய முயற்சிகளும் செய்ய வேண்டும்.

    இதற்கு முதலீடு வேண்டுமல்லவா?

    நம் மூச்சு தான் முதலீடு.

    பிறப்பு முதல் அந்திம காலம் முடிய மூச்சு எப்படி நம்மை வாழ வைக்கிறதோ, அதேபோல நம் முன்னேற்றம் மூச்சாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொருவருக்கும் ஒரு லிமிட் (எல்லை) இருக்கும். அதைத் திறமையின் எல்லை என்று சொல்லலாம்.

    திறமையின் வெளிப்பாடு நமது செயல்களின் மூலம் தெரிய வேண்டும்.

    உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டில் செஞ்சரி எனும் 100 ரன்களை ஒரு வீரர் 50 பந்துகளில் எடுத்திருப்பார். இது திறமை பயிற்சி செய்யச் செய்ய 36 பந்துகளிலேயே எடுத்து விடுவார். இதை வல்லமை என்று சொல்கிறோம்.

    வல்லமை என்பது திறமையின் மேம்பாடுதான். இந்தத் திறமை நம் எல்லோருக்குமே உள்ளது.

    ஆனால், பெரும்பாலானவர்கள் திறமைகளை உபயோகிக்காமலேயே வாழ்ந்து மறைகிறார்கள்.

    ஒரு பெரிய மரத்தைப் பார்த்தால் அது விதையாக நிலத்தில் விழுந்து, மண்ணைக் கிழித்துக் கொண்டு முளைத்தது, சிறு செடியாக இருந்த போது கால் நடைகள், சிறு குழந்தைகளால் சேதமாகாமல் வளர்ந்தது எனப் பல பருவங்களையும் நினைத்துப் பார்க்கிறோம்.

    இதே போல் தான் மனித வாழ்க்கையும், தாயின் கருப்பையில் கருவாக உருவாவதற்குப் பல லட்சக்கணக்கான உயிரணுக்களுடன் போட்டி போட்டு, முதலில் சென்று சினைமுட்டையைத் துளைத்து உள்ளே புகுந்து, வளர்ந்து, முழு வளர்ச்சியடைந்து, பல விதமான பிரசவ வேதனைகளைத் தாய்க்குக் கொடுத்து இப்பூவலகில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் நாம் எல்லோருமே வெற்றியாளர்கள் தான்.

    தொடக்கத்திலேயே வெற்றி என்பதால், தொடர் வெற்றிதான். இதற்கு நாம் செய்ய வேண்டியது இடைவிடாத முயற்சிதான். இதை ஆங்கிலத்தில் Persistence என்று கூறுகிறோம்.

    முதல் முயற்சி – வெற்றியாகும்.

    தொடர் வெற்றி – சாதனையாகும்

    தொடர் சாதனைகள் – வரலாறாகும்.

    இதற்குத் தேவை அசாதரண ஆர்வமும், விழிப்பு நிலையும்.

    நம்மால் என்ன முடியுமோ, அதைவிடச் சிறிது கூடுதலாகச் செய்தால், நாம் அனைவரும் வரலாறு படைக்கலாம்.

    இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு ஞாயிறு மாலை நேரம் சிவகாசியிலிருந்து டிரான்ஸ்போர்ட்டில் பணிபுரியும் 24 வயது சரவணன் என்பவர் போனில் (9543168361) பேசினார்.

    இதற்கு முந்தைய மாதக் கட்டுரைகளை நூலகத்தில் தன்னம்பிக்கை புத்தகத்தில் படித்ததாயும், வார்த்தைகள் பவர்புல்லாக இருப்பதாகவும் கூறி மகிழ்ந்தார்.

    இந்தப் பவர்புல் வார்த்தைகள் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் எழுச்சி பெற்றால், முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றமே தரும். வரலாறு படைக்க முடியும்.

    வாழ்க வளமுடன்…[/hide]

    இந்த இதழை மேலும்

    நேற்று போல் இன்று இல்லை

    இரும்பை யாராலும் அழிக்க முடியாது என்று கூறுவார்கள்; ஆனால் பயன்படுத்தாமல் சும்மா போட்டுவிட்டால் போதும். சில மாதங்களில் தானே பயனற்றதாகப் போய்விடும். அதன் முடிவு அதுதான். மனிதனும் அப்படித்தான். செயல்படத்தான் வாழ்க்கை; சோம்பிக் கிடப்பதற்கு அல்ல. சும்மா இருக்கும் சுகம் நமது அழிவின் ஆரம்பம் என உணர்தல் வேண்டும். தேங்கிக் கிடந்தால் குட்டை, நடந்தால் தான் நதி.

    ஏற்றமும் தாழ்வும் இருப்பது தான் நியதி. உயிரோட்டமும் கூட. ECG பார்த்திருப்பீர்கள். ஏற்றமும் இறக்கமுமாக கோடுகள் இருந்தால் நல்லது. நேர்கோடாக இருந்தால் ‘கதை முடிந்துவிட்டது’ என்று பொருள். நல்லதும் கெட்டதும், இன்பமும் துன்பமும், வறுமையும் செழுமையும், வாட்டமும் மகிழ்ச்சியும், நோயும் ஆரோக்கியமும், அறியாமையும் அறிவுடைமையும், அன்பும் பகைமையும், அழுகையும் சிரிப்பும், பிறப்பும் இறப்பும், உயர்வும் தாழ்வும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அப்படி இருந்தால் தான் அது சுவையானதாக இருக்கும்.

    என்றைக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தொடங்குகிறது; முடிகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது செயல்பாடுகள், புதுப்புது வாய்ப்புக்கள், புதுப்புது சந்திப்புகள், புதுப்புது காட்சிகள்… அவற்றையெல்லாம் சிலர் புதுப்புது பிரச்னைகள் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அன்றாடம் நாம் புதிய பிறப்பெடுக்கிறோம்; வாழ்கிறோம். நாளை வேறு மாதிரி இருக்கும்.

    “என்ன சார், வாழ்க்கையில் மாற்றங்கள் தினம் தினம் எழுந்து காலைக்கடன்களை முடித்து அலுவலகம் சென்று அதே வேலைகளை திரும்பத் திரும்பச் செய்து அதே பள்ளியில் பயணித்து வீடுவந்து டி.வி. பார்த்துவிட்டு, உணவு உட்கொண்டு, படுத்துத் தூங்குகிறேன். அதே வேலையில் Promotion இல்லாமல் சலிப்போடு ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை” என்று அலுத்துக் கொள்வோர் நிறைய உண்டு.

    நன்றாக சிந்தனை செய்து பாருங்கள். ஒரே வேலையைத் தான் திரும்பத்திரும்பச் செய்கிறீர்கள்? நீங்கள் GPF Bill தயாரிக்கும் அலுவலர் என்று வைத்துக் கொள்வோம். நேற்று பத்மநாபன் GPF Bill பார்த்தீர்கள். இன்று சுவாமிநாதன் GPF Bill பார்க்கிறீர்கள். அதை அதே வேலை என்று சொல்லாதீர்கள். இது வேறு வேலை, இது வேறு Bill. இதனை ஒருவருக்கு செய்யும் உதவியாக, சமூகத் தொண்டாக நினைத்துச் செய்து பாருங்கள். மகிழ்ச்சி பிறக்கும். அவரே அவருக்காக அந்த Bill-ஐ தயாரித்தால் எவ்வளவு அக்கறையோடு செய்வாரோ அதே அக்கரையோடு செய்யுங்கள். அதுதான் கர்மயோகம் என்பது. ‘இதனால் எனக்கு எது கிடைக்கும்?’ என்று ஆய்ந்து பார்த்துக் கொண்டிராமல், அந்தப் பணியை தனது பணியென அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும், முழுமையாகவும் செய்து முடித்தலே கர்ம யோகம் ஆகும். இதைச் செய்ய நீங்கள் துறவி ஆக வேண்டும் என்று பொருள் இல்லை. “பற்றுக்களை முற்றும் துறந்த முனிவரே தன்னலம் கருதாது தன் அன்றாடக் கடமைகளைச் செய்ய இயலும். இல்லறத்தில் உள்ளவர்கள் அப்படி முடியுமா?” என்று சிலர் கேட்பார்கள். முடியும். நமக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அன்றாடம் செய்யும் எல்லாப் பணிகளிலும் அதன் பாதிப்பு இருக்க வேண்டும் என்பது பொருளல்ல. எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி பிறருக்கு உதவி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை சுகமானதாக இருக்கும். ஏனெனில் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும்போது ஏமாற்றங்கள் ஏற்படும். வெறுப்பும் சலிப்பும் உண்டாகும். மனவலி அதிகமாகும். அது இல்லை என்றால் நாம் செய்யும் ஒவ்வொரு கடமையிலும் செயல்பாட்டிலும் ஆனந்தம் உண்டாவதை உணர முடியும்.[hide]

    சரி, ஒவ்வொரு நாளும் எப்படி புதுப்புதிதாய் மலர்கிறது என்று யோசித்துப் பாருங்கள். பஸ் பயணம் ஒரே மாதிரிதான். ஆனால் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சகபயணிகளை சந்திக்கிறீர்கள். அலுவலகத்தில் புதுப்புது சந்திப்புகள், புதுப்புது உரையாடல்கள், உண்ணும் உணவிலும் அன்றாடம் மாற்றம் உண்டு. டி.வி. காட்சிகளிலும் அன்றன்று மாற்றங்கள் காணலாம். மனைவியின் அன்பிலும் குழந்தைகளின் குதூகலத்திலும் கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் மாற்றங்களை உணர முடியும். இறைவன் நமக்குத் தரும் மிகப்பெரிய நன்கொடை அந்த ‘இன்னொரு நாள்’. அந்த ‘நாள்’ என்பது வகை வகையான அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு ‘நாள்’. “நேற்று போல் இன்று இல்லை” என்பது ஒரு திரைப்படப் பாடல் வரி. எவ்வளவு உண்மை. அதன் அடுத்த வரி. “இன்று போல் நாளை இல்லை”. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மலர்கிறது. காய்க்கிறது. கனிகிறது. வீழ்கிறது. ‘வாழ்க்கை நாட்களின் வீதிகளில் ஒவ்வொரு முனையிலும் ஓர் ஆச்சர்யம் காத்துக் கொண்டிருக்கிறது என்றார் ஆங்கிலக் கவிஞர் மில்டன். உண்மையில் வரப்போகும் ஒவ்வொரு நாளும் புதுவித விந்தைகளோடு பூங்கொத்துடன் உங்களை வரவேற்க காத்திருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கும் 24 மணிநேரம் தான். ஆனால் இரண்டாயிரம் அனுபவங்களை அந்த ஒரு ‘நாள்’ ஒளித்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

    அப்புறம் செய்து கொள்ளலாம் என்று கருதாது அவ்வப்பொழுது தோன்றுகின்ற பொழுதெல்லாம் அல்லது வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் அறம் (அதாவது நன்மை) செய்தல் வேண்டும். அடுத்த நிமிடமே உங்கள் சிந்தனை மாறலாம் அல்லது ஒருவருக்கு நன்மை செய்ய நாம் நினைத்திருந்த சூழ்நிலை மாறிக் போகலாம். எனவே உதவலாம் என்ற எண்ணம் தோன்றும் போதே உதவிட வேண்டும்.

    கர்ணன் தன்னை நாடிவந்தோரான எளியோருக்கும் ஏழையருக்கும் பொற்காசுகளைத் தனது இடதுகரத்தால் வாரி வழங்கிக் கொண்டிருந்தான். இடதுபுறம் ஒரு தட்டில் பொற்காசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை கண்ணுற்ற தலைமை அமைச்சர் கூறினார்: “அரசேÐ இடது கையால் பொற்காசுகளை எடுத்துத் தருகிறீர்களேÐ வலது கையில் காசுகளை மாற்றிக்கொண்டு தரலாமேÐ கொஞ்சம் மரியாதையாக இருக்கும் அல்லவா?”

    கர்ணன் சிரித்தான். பின்னர் சொன்னான்: “அமைச்சரேÐ நீங்கள் சொல்வது தான் சரி. வலது கையால் கொடுப்பது தான் மரியாதை, மரபும் கூட. தங்கக் காசுகளோ எனக்கு இடப்புறம் உள்ளன. இடது கையால் தான் எளிதில் எடுக்க முடிகிறது. மரியாதை கருதி கொடுப்பதற்காக தங்கக் காசுகளை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றினால் அந்த ஒரு நொடிப்பொழுதில் எனது மனமும் மாறிவிடக் கூடும் அல்லவா?” இவ்வளவு பேருக்கு இவ்வளவு காசுகளை தானம் செய்யத்தான் வேண்டுமா? இதனால் எனக்கு என்ன பயன்? இது அவசியம் தானா? என்று என் உள்மனது கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டால் தானம் நின்று போய்விடக் கூடும் அல்லவா? அவ்வாறு மனமாற்றம் ஏற்பட இடமளிக்கக் கூடாது என்று தான் இடது கையாலேயே எடுத்தவுடன் கொடுத்துவிடுகிறேன்”.

    கர்ணனின் கொடை உள்ளம், நன்மை செய்யும் நெஞ்சம் அத்தகையது. இந்தச் சம்பவம் மகாபாரதத்தில் வரும் இடத்தில் படித்தவுடன் எனது மனம் நெகிழ்ந்து போய்விட்டது. கொடையுள்ளம் கொண்டவர்கள் கொடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. கொடுக்க வேண்டும் என்று நினைத்தவுடனே அதனை செயல்படுத்திட வேண்டும். சற்றே காலம் தாழ்த்தினாலும் மனக்குரங்கு மரம்விட்டு மரம் தாவி விடும். அதனால்தான் நன்மை செய்ய நினைத்துவிட்டால், அறம் செய்ய நினைத்து விட்டால், உதவி செய்ய நினைத்துவிட்டால் உடனே செய்துவிட வேண்டும். அதனை தள்ளிப்போடக் கூடாது. அதனால் உதவி கோருபவர் நிலைமை மாறிவிடக் கூடும். அல்லது வேண்டாம் என்று யாராவது தடைசெய்ய வரக் கூடும்.

    நன்மைகளைச் செய்ய காலம் தாழ்த்துதல் கூடாது. ஏனெனில் நன்மைகளைச் செய்ய வாய்ப்புகள் அமைய வேண்டும். அதனை செய்வதற்குரிய தகுதி, வளம், மனம் நமக்கு இருக்க வேண்டும். இவை யாவும் அமைந்தால் தான் நாம் நன்மை செய்ய இயலும். இப்படி நன்மைகள் ஏதோ ஒன்றையாவது ஒருநாளில் செய்தீர்களென்றால் அந்த நாள் இனிய நாளாகும். ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்களித்த நன்கொடை என்று சொன்னேன் அல்லவா? இந்த நன்கொடை நாளை (Gifted Day) நல்ல முறையில், இனிமையான முறையில், பயனுள்ள முறைகளில், புண்ணியங்களை சேகரிக்கும் முறையில் அமைத்துக் கொள்ளுதல் மானுட தர்மம் ஆகும். இன்று என்ன செய்தோம், நேற்று என்ன செய்தோம், போன வாரம் என்ன செய்தோம் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை நாட்களை பயனற்ற வழிகளில் செலவழித்திருக்கிறோம். திரைப்படம், தொலைக்காட்சி, கைப்பேசி, நண்பருடன் அரட்டை, ஊர் சுற்றுதல் என்று எவ்வளவு மணிநேரங்களை வீணடிக்கிறோம்Ð இவற்றை தினத்தாள்களை ஊன்றிப் படித்தல், நல்ல நூல்களை தேடிப் படித்தல், கணினி வழி நற்பயிற்சி, பெரியோர் சந்திப்பு, படைப்பு, நற்கலைகளை இரசிப்பதும் கற்றுக்கொள்ளலும் என செலவழித்திருந்தால் வாழ்க்கை உயர்வு பெற்றிருக்கும். ஆற்றல்கள் வளர்ச்சி பெற்றிருக்கும். நமது வாழ்க்கையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல விதையை உங்கள் மனநிலத்தில் ஊன்றுங்கள். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உங்கள் மனத்தோட்டமும் வாழ்க்கைப் பாதையும் பூத்துக் குலுங்கக் காணலாம். ஒவ்வொரு நாளும் புதுமையின் பிறப்பிடமாய் பயன்களின் நிலைக் களனாய் அமையட்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    ஈர்ப்பும்… ஈடுபாடும்

    “அவன் வாயிலே விழாதே! அவன் எது சொன்னாலும் நடந்திடும்”. “ஏன் அவன் மகானா?”“மகான் இல்லே.. மகா மோசமானவன். கருநாக்குக்காரன் அவன் வாய் வெச்சா வௌங்காது என்றும், “ம்ம்.. வண்டியை எடுக்கும் போதே நெனைச்சேன். இப்படி நடக்கும்னு” என்றும். ஒருவர் எதையோ சொல்லப் போய் நடந்து விட்டால் உடனே அவரை மோசமாக கரித்து கொட்டுவோம். இங்கு யாருக்கும் கருநாக்கும் கிடையாது? சொல்லி நடந்தவர்கள் தீர்க்க தரிசிகளும் கிடையாது.

    அப்படியென்றால்.. ஒரு சிலர் சொன்னது பலிக்க காரணம் என்ன? பெரிய சக்தியெல்லாம் கிடையாது. வெறும் எதிர்மறை எண்ண சக்திகள் தான் அப்படி முடிகிறது. ஒருவர் மற்றவைப் பற்றி வைத்திருக்கும் நல்ல அபிப்ராய எண்ணமோ தவறான அபிப்ராயம் எண்ணமோ, தீவிரமாகப் பதிவாகிவிட்டால். அவர் சொன்னால் எதுவும் (கெட்டதோ, நல்லதோ) நடக்கும் என்கிற எதிர்மறை, நேர்மறை எண்ணத்தை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம்.

    பாகற்க்காய் கசக்கும். எனக்குப் பிடிக்காது என்ற எண்ணம் எதிர்மறையாக பதிவாகிவிட்டால் அந்தப் பாகற்க்காய் என்ன தான் நன்மையாக இருந்தாலும்  மனம் ஏற்றுக் கொள்ளாது. இந்த மன நிலைதான் வேலை,படிப்பு,திருமண வாழ்க்கை உறவுகள் என பலவிதங்களில் நடக்கின்றது.

    பொதுவாக நம் மனம் எண்ணங்களை ஈர்க்கும் சக்தி கொண்டது. அதன் படி நாம் ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு விஷயத்தில் ஈர்க்கப்படுகிறோம். ஒரு சில விஷயங்களில் ஈர்ப்பு  சக்தி குறைவால் ஈர்க்கப்படாதிருக்கிறோம். உதாரணத்திற்கு ஒருவர் வேண்டாம் என்று ஒதுக்கிய துணி மற்றொருவரால் ஈர்கப்படுகிறது. அதே போல் அந்த ஈர்ப்பு காதலாக இருக்கலாம் அல்லது அன்பு, பாசம், பற்று, ஆசை மற்றும் காணும் பொருட்கள் என அனைத்து விதங்களிலும் ஈர்க்கப்படலாம். இந்த ஈர்ப்பு எண்ணம் எப்படி செயல்படுகிறது என பார்ப்போம். கிராமங்களில் சொல்வார்கள் பூமிக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு,சாமிக்கு ஈர்ப்பு உண்டு.என்று.

    அறிவியல் பூர்வமாக மேலே எறியும் பொருள் கிழே நோக்கி விழுவது பூமியின் ஈர்ப்பு விசை என்கிறோம் அதே போல் எங்கோ திரியும் எண்ணங்களைத் தான் நம் மனம் ஈர்த்து கொள்கிறது. இதற்கு மன ஈர்ப்பு விசை எனலாம் அதாவது பிரபஞ்சத்தில் ஈர்க்கும் சக்தி நிறைந்து இருக்கிறது. அப்படியிருக்கும் போது எண்ணங்கள் மூலமாகத்தான் இந்த வகையான ஈர்ப்புகள் நிகழ்ந்தாக வேண்டும். ஏதோ ஒரு ஈர்ப்பு எண்ணத்தால் தான் நம்மால் எதையும் வியத்து,விரும்பி ஒரு செயல் செய்யப்படுகிறது.

    அந்த ஈர்ப்பை தான் ஆசை,ஆர்வம், நாட்டம், வெறி என்றெல்லாம் கூறுகிறோம். “எண்ணபடி வாழ்வு” என்பது பிரபலமாகிவிட்ட வார்த்தை. உன் எண்ணம் எப்படியோ அப்படியே உருவாகிறாய். என்கிறது சரி..ஆனால்  வறுமையில் கஷ்டப்படுபவரும் வேலையின்றி கஷ்டப்படுபவர்களும்,விரும்பிய பொருட்கள் வாங்கும் விரும்புவர்களும் இதையெல்லாம் விட்டு விரும்பி தான் விரும்புவர்களும். யாரும் வறுமையிலும்,கஷ்டத்திலுமே இருக்க நினைக்க மாட்டார்கள்.[hide]

    அப்படியிருக்க அவர்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை உன்ற வாசகம் பொய்யாகத்தானே இருக்கிறது. இது ஒரு கோணம் என்று வைத்துக் கொள்வோம்.மற்றொரு கோணத்தில் பார்த்தால் எண்ணப்படி வாழ்வு என்பது இவருக்கும் சாத்தியமாகி விட்டால் தர்மம், ஒழுக்கம், நல்லது, தீயது எல்லாம் நிலை கெட்டுபோய் யார் எப்படியும் அவரவர் எண்ணபடி வாழலாம் என்றோ அல்லது அவர்களுக்குள் வரும் எண்ணங்கள் படி வாழ்வமைத்தாலோ.. எப்படி உலகம் இருக்கும்:? கற்பனை செய்து பாருங்கள்.சங்கடமாக இருக்கிறதல்லவா?

    ஆனால் உண்மையில் பல மன ஆய்வாளர்கள் கூறுவது ‘நாம் எதை குறித்து எப்பொழுதும் தீவிரமாக சிந்திக்கிறோமோ அதுவே நம்மை வந்தடைகிறது. வாழ்க்கையை நிர்ணயிப்பதே எண்ணங்கள் தான். எண்ணங்களுக்கு அத்தனை வலிமை இருக்கிறது’.என்கிறார்கள்.

    நாம் அனைவரும் வசதியாக வாழத்தான் நினைக்கிறோம். ஆசைப்படுகிறோம் ஆனால் அப்படி அனைவரும் இல்லையே ஏன்? சிறு விளக்கம் இது.. மனிதர்கள் வாழ்வில் உயர்வதும்,தாழ்வதும் அவரது மனத்தை அதாவது எண்ணத்தைப் பொறுத்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    நமக்கு தட்டச்சு இயந்திரத்தைத் தெரியும். அதில் எழுத்துக்கள் வரிசைப்படி இருக்காது.  அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி கிடக்கும் அவைகளை வார்த்தையாக ஒன்று சேர்க்க என்ன செய்கிறோம்.?எந்த வார்த்தை வேண்டுமோ, அதை மனதில் கொண்டு வந்து பிறகு அந்த சிதறி கிடக்கும் எழுத்துக்களில் தேவையான எழுத்துக்களை தட்டினால் அவை தன் எழுத்தை பதிய வைத்து விட்டு செல்லும். பிறகு நமக்கு தேவையான விரும்பிய வார்த்தை வந்து கிடைத்துவிடும்.

    அதேபோல் காலங்களில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்கள் உண்டு. பொதுவாக நாம் இந்த மூன்று காலங்களின் சம்பவங்களையும் நினைவுகளையும் கோர்த்து தான் ஒரு செயலை செய்ய முற்படுகிறோம்.

    அதே போல் எண்ணங்களிலும் மூன்று நிலை எண்ணங்கள் உண்டு. அது நிகழ்ந்த எண்ணம், நிகழும் எண்ணம் ,நிகழப்போகும் எண்ணம் என்று எண்ணங்களையும் அவ்வப்போது தட்டி தட்டி எழுப்பி ஒரு எண்ணத்தை கோர்வையாக உருவாக்குகிறோம்.

    அந்தக் கோர்வையான எண்ணத்தில் நடந்த முடிந்த நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களும் கலந்திருக்கும். இந்த எண்ணங்களே எல்லாமும் ஈர்க்கப்பட்ட எண்ணங்கள் தான்.

    அதே சமயம் அந்த ஈர்க்கப்பட்ட புதிய எண்ணத்தில் நடந்தது, நடக்காதது என்று கூட்டு கலவையில் தரம் பிரித்து மனம் பார்க்கிறது. இனி விஷயத்திற்கு வருவோம்! நுட்பம் ஒன்றை விரும்புவதற்கு முன்பே நமக்குள் அந்த விருப்பம் நடக்குமா, நடக்காதா? என்ற சந்தேகமும் ஏற்கனவே இந்த வேலை நடக்காமல் போனதே அது போல இதுவும் ஆகிவிடுமோ என்ற ஒப்பிட்டு பார்த்தாலும் ஒரு வேளை நடக்காமல் போனால் அல்லது நடக்காமல் போனால் என்ன செய்வது? என்ற எதிர்மறை எண்ணங்களும் மேலோங்கி வந்தால் அங்கே ஈர்ப்பு எண்ணம் தளர்ந்து,எதிர்மறை எண்ணங்கள் வலுப்பெற்று விடுகிறது.

    ஒரு வறுமையிலிருக்கும் தொழிலாளிக்கு வசதி அந்தஸ்த்தின் மீது ஈர்ப்பு இருந்தாலும் அடுத்த நிமிடமே “நமக்கெல்லாம் அனுபவிக்க அதிர்ஷ்டமில்லை” கொடுத்துவச்சது அவ்வளவு தான் “ஆசை இருக்கு பல்லாக்கு ஏற, ஆனா.. அம்சமிருக்குது பல்லக்குத் தூக்க” என்று எதிர்மறையான எண்ணங்களால் தான் அவர்களால் எண்ணப்படி வாழ்வு என்பது எதிர்மறையாக அமைகிறது.

    அது தான் செயலும் வாழ்க்கையுமாகும். சரி “எண்ணப்படி வாழ்வு” என்பதை நேர்மறையாக செயல்படுத்துவது எப்படி? எனப் பார்ப்போம். ஈர்ப்பு என்பது எளிமையாக நிகழ்வது. அதே சமயம் அந்த ஈர்ப்பின் மீது நம்பிக்கை வைக்கப்பட வேண்டும். இடையிடையே ஒப்புபார்த்தல் தாழ்வு மனப்பான்மை, நோக்கமின்மை, ஆர்வம் இல்லாமை, இறந்த கால தோல்விகளையும் நடக்காத எதிர்கால கனவுகளையும் ஒன்றாக்கி கற்பனை உலகில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இவையெல்லாம் அகங்காரத்தின் விளையாட்டுகள்.

    அதனுடன் சேர்ந்து நாம் விளையாடினால் நல்லதொரு வாழ்க்கையையும், வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். ஈர்ப்பு எண்ணத்தையும், அது செயலாகும் முனைப்பையும் முளையிலேயே கிள்ளி விடுவதால் தான் நேர்மறை எண்ணங்கள் மதிப்பிழந்து போய். நாம் விரும்பாத எதிர்மறை எண்ணங்கள் நம்மை ஆதிக்கம் செய்கிறது. நமக்கிருக்கும் வறுமை கஷ்டங்கள் அனைத்துக்குமான மாற்றங்கள் மாறாமல் வலுவிழந்து விடுகிறது.[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்- 55

    எங்கே நிம்மதி…?

    வாழ்க்கையில் வெற்றிபெற்று முன்னேற விரும்புபவர்கள், தங்களின் வாழ்க்கைக் குறிக்கோளை நோக்கி நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். மன நிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஒருவரின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைவதால், நிம்மதி தரும் செயல்களில் ஈடுபடுவது மிகவும் நல்லது.

    “ஒரு மனிதரின் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் அடிப்படையாக அமைதி, பொறுமை, நேர்மை, நீதி, உழைப்பு, புதுமையான சிந்தனை ஆகியவை அமைந்துவிடுகிறது” என்பது பெஞ்சமின் பிராங்ளின் தரும் ‘நம்பிக்கை விதைகள்’ ஆகும்.

    எந்தச்சூழலிலும் நிம்மதி இழக்காமல் இயங்கக் கற்றுக்கொண்டவர்கள் பொறுமையின் வடிவமாக காட்சித்தருகிறார்கள்.

    “எனக்குப் படுத்தால் தூக்கமே வரவில்லை. ஏதேதோ நினைவுகள் வருகின்றன. வாழ்க்கையை நினைத்தால் பயமாக இருக்கிறது” – என்று கவலையோடு தனது நண்பனிடம் பிரச்சினையை பகிர்ந்துகொண்டான் ராஜேஸ்.

    “நீ ஒன்றும் கவலைப்படாதே. நிம்மதியாக இருந்தாலே போதும். எல்லா கவலையும் மறைந்துபோய்விடும்” – என்று நம்பிக்கையூட்டினான் நண்பன் சங்கர்.

    “அந்த நிம்மதியைத் தேடித்தானே நான் அழைகின்றேன்” – என்று ராஜேஸ்; சொன்னபோது, “நீ ஒன்றும் கவலைப்படாதே. நமது பக்கத்து ஊரில் குரு ஒருவரின் ஆசிரமம் உள்ளது. அவரைப்போய் பார். உன் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும்” என்றான் சங்கர்.

    நண்பனின் அறிவுரைப்படி பக்கத்து ஊரிலுள்ள குருவின் ஆசிரமத்திற்கு வந்தான் ராஜேஸ் குருவை வணங்கினான்.

    “குருவே எங்கள் வீட்டில் வசதியுள்ள பெற்றோர்கள் இருக்கிறார்கள். நல்ல நண்பர்கள் எனக்கு உண்டு. எங்கள் ஊர் பிரச்சினையில்லாத கிராமம். உறவுக்காரர்களெல்லாம் எங்களிடம் மிகவும் அன்பானவர்கள். இருந்தாலும், எனக்கு மனதில் நிம்மதி இல்லை. ஒரு பிரச்சினை எப்போதும் என்னைச் சுற்றிக்கொண்டு இருப்பதுபோலவே தோன்றுகிறது” என்றான் ராஜேஸ்.

    குருவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    “தம்பி நீ கவலைப்படாதே. உன் பிரச்சினையை நான் தீர்த்துவைக்கிறேன். முதலில் உன் மனதுக்கு சில ரகசியங்களை தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அதைமீறி உனக்கு ரகசியங்கள் தெரிந்தால், உன் நிம்மதி காணாமல் போய்விடும்” – என்றார் குரு.

    “குருவே ரகசியமான தகவல்கள் எதுவுமே மனதிற்குள் போட்டுவைக்காமல் எப்படி வாழ முடியும்?” –  என்று கேட்டான் ராஜேஸ்.

    “ரகசியங்கள் மனதில் இல்லாமல் வாழ்வது சிரமம்தான். இருந்தபோதும், தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத பிரச்சினைகளை மனதிற்குள்போட்டு சுமந்துகொண்டிருப்பதால் நமது நிம்மதி போய்விடுமல்லவா?” – எனக் கேட்டார் குரு.

    “குருவே நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே” – என்றான் ராஜேஸ்

    “உனக்கு இப்போது புரியாது. முதலில் நம் ஆசிரமத்தில் போய் விருந்தை சாப்பிட்டுவிட்டு வா. பிறகு புரியவைக்கிறேன்” என்றார் குரு.

    ஆசிரமத்தில் நல்ல விருந்து அவனுக்கு வழங்கப்பட்டது. “வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வந்தவனிடம் கொஞ்சநேரம் படுத்துக்கொள்” என்று சொன்ன குரு அவனுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

    அந்தக் கதை இதுதான்.

    ஒரு இரயில் புறப்பட தயார்நிலையில் இருந்தது. அப்போது ஒருவர் தனது தலையில் ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்து இரயிலில் இடம்பிடித்தார். இரயில் புறப்பட ஆரம்பித்தது. ஆனால், மூட்டையைக் கொண்டுவந்தவர் தனது மூட்டையை கீழே இறக்கிவைக்காமல் தலையிலே வைத்து சுமந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஒருவர், நீங்கள் ஏன் இந்த மூட்டையை வீணாக சுமந்துகொண்டு வருகிறீர்கள்? அதனை நீங்கள் இறக்கி வைத்துவிடலாமே? என்று கேட்டார்.

    “வேண்டாங்க… இந்த இரயில் என்னை மட்டும் சுமந்து சென்றால்போதும். எனது சுமையை நான் சுமந்துகொள்கிறேன் என்று சொன்னான்” – அந்த மூட்டையை சுமந்தவன். “இதுதான் இரயில் கதை” என்றார் குரு.[hide]

    இதைக்கேட்ட ராஜேஸ் சிரித்தான்.

    “இந்த இரயிலில் மூட்டையைத்தூக்கி பயணம் செய்தவன் பைத்தியக்காரனாக இருப்பான்போல் தெரிகிறது. இரயிலில் ஏறியதும் மூட்டையை இறக்கி வைத்துவிடலாம். பின்னர், இரயிலைவிட்டு இறங்கும்போது மூட்டையை தூக்கிக்கொண்டு செல்லலாம் அல்லவா? இதுகூட அவனுக்குத் தெரியவில்லையே? சரியான முட்டாளாகத்தான் இருப்பான். அவனைப்பற்றி இவ்வளவு சொல்கிறீர்களே அவன் யார்?” என்று கேட்டான்.

    “அவன் வேறு யாரும் அல்ல. நீதான்” என்றார் குரு.

    “குருவே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” – அதிர்ந்தான்.

    “நமது வாழ்க்கை இரயில் பயணம் போன்றது. பயணம் செல்லும்போது எப்போதும் பாரம் சுமந்துகொண்டு சென்றால் நாம் நிம்மதியாக இருக்க முடியாது. இதைப்போலத்தான் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு பிரச்சினையை மனதில்போட்டு அழுத்திக்கொண்டு வந்தால், நாம் நிம்மதியாக வாழ முடியாது. நிம்மதியாக வாழ்ந்தால்தான் வாழ்க்கையில் நாம் வெற்றிபெற முடியும்” – என்றார் குரு.

    குருவின் கதையைக் கேட்ட ராஜேஸ்க்கு, ஆசிரமத்தில் கிடைத்த விருந்தும், இதமான காற்றும் அவனுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுத்தது. தூங்கிய ராஜேஸ் விழித்தபோது, அருகில் குரு அமர்ந்திருந்தார்.

    “மகனே நீ நன்றாக தூங்கினாயா?” – என்று கேட்டபோது எழுந்து நின்றான் ராஜேஸ்.

    “நீ தலைவைத்து படுத்திருந்த தலையணையை தூக்கிப்பார்” என்றார்.

    தலையணையைத் தூக்கியபோது, தலையணையின் அடியில் நாகப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது.

    திடுக்கிட்டு அதிர்ந்தான் ராஜேஸ்.

    “குருவே தலையணைக்குக்கீழ் நாகப்பாம்பு இருந்திருக்கிறதே? இது என்ன கொடுமை?” என்றான்.

    “மகனே உனது தலை அருகிலேயே பாம்பு இருந்தும், நீ நிம்மதியாகத் தூங்கி இருக்கிறாய். அது எப்படி உன்னால் நிம்மதியாக தூங்க முடிந்தது?”.

    “நாகப்பாம்பு இருந்தது எனக்குத் தெரியாது. அதனால்தான் நான் நன்றாகத் தூங்கினேன்”.

    “நாகப்பாம்பு அருகில் இருக்கும் ரகசியம் உன் மனதுக்குத் தெரியவில்லை. அதனால், நீ நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய். இப்போது நிம்மதி எங்கே இருக்கிறது? என்று நீ உணர்ந்துகொண்டாயா?”.

    “குருவே என் நிம்மதி என் மனதிற்குள்ளே ஓளிந்துகொண்டிருக்கிறது. அந்த நிம்மதியை குருவின் அருளால் இப்போது தெரிந்துகொண்டேன். நான் வருகிறேன்” – என்று விடைபெற்றான் ராஜேஸ்

    வசதிகள், வாய்ப்புகள் என எல்லாவிதமான சுகங்களும் அருகில் இருக்கும்போது பிரச்சினைக்குரிய தகவல்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து, “எனக்கு நிம்மதியில்லை” என்று உரத்து கூச்சல்போடுபவர்களுக்கு ராஜேஸ்யின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒரு பாடமாக அமையும்.

    “எங்கே நிம்மதி?” என்று தேடி அலைபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை.

    மாறாக – மனதிற்குள்ளே நிம்மதியையும், மகிழ்ச்சியையும் காண்பவர்கள், வெற்றிகளை குவித்து நாள்தோறும் சிறப்புப் பெறுகிறார்கள்.

    தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?

    தமிழர்களின் வீரவிளையாட்டான கபாடி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.

    தமிழக பாரம்பரியத்தின் கூறுகளைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும், தமிழக மண்ணின் பாரம்பரிய விளையாட்டான கபாடி தமிழகத்தில் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர்.

    மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம், தனியார் நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் பள்ளி அளவில் அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுவதுதான்.

    கபடி  கிராமப்புற ஏழைகளின் மற்றும் ஏழை மாணவர்களின் விளையாட்டாக மட்டுமே மாறியதற்கு யார் காரணம்?

    சமூகத்தில் தீண்டாமையை எதிர்க்கிறோம்.

    விளையாட்டில் கபாடி தீண்டத்தகாத விளையாட்டாக இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

    தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குமுன் சுமார் 2000 கிராமப்புற கபாடி கிளப்புகள் இருந்தன.

    தற்போது இவை 500 கிளப்களாக குறைந்துள்ளன.

    பல்வேறு நிறுவனங்களில் கபாடி கிளப்புகள்தான் அதிக உயர்வோடு உள்ளன.

    தமிழகத்தில் ஈரோடு, கரூர், மதுரை,  நெல்லை மாவட்டங்களில் கபாடி கிளப்புகள் அதிகமாக உள்ளன. அதற்கடுத்து கோவை, திருப்பூரில் உள்ளன.

    மற்ற இடங்களில் மிகக் குறைவாகவே உள்ளது.

    மாவட்ட கபாடி கிளப்புகள் தமிழ்நாடு அமெச்சூர் கபாடிக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    மாநில கபாடி கழகங்கள் அகில இந்திய கபாடிக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    சாய் எனப்படும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அகில இந்தியக் கபடிக்குழுவை அங்கீகரித்துள்ளது.

    அனைத்து விளையாட்டுகளின் நிர்வாகத்தையும் இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் கவனித்து வருகிறது.

    10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கபாடி விளையாட்டு பிரபலம் என்ற போதிலும், ஒலிம்பிக்கில் கபாடி சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

    இந்திய விளையாட்டுகளில் நிர்வாக கோஸ்டி சண்டைகள் பிரபலம் என்ற நிலை கபாடியிலும் இருந்தது.

    தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மாநில அளவில், மாவட்ட அளவில், அகில இந்திய அளவில் கபாடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து மேம்படுத்துவது எப்படி என்பதே கபாடி ஆர்வலர்கள் முன் உள்ள கேள்வி.

    1994-ஆம் ஆண்டு ஜப்பானிலும், 1998-இல் பாங்காங்கிலும், 2002 பூசாவிலும், 2006 தோகாவிலும் நடைபெற்ற ஆசியப்போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

    1994,1998 ஆண்டுகளில் ராஜரத்தினம்,கணேசன்,பாஸ்கரன், முருகானந்தம் ஆகிய தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர்.

    தமிழக வீரர் ராஜரத்தினம் இந்திய அணிக்குத் தலைவராகவே இருந்துள்ளார். பெருந்துறை வட்டம் குக்கிராமத்தைச் சேர்ந்த என். சுப்பிரமணியம் இந்திய – பங்களாதேஷ் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடியுள்ளார்.

    இந்திய அரசு தமிழக வீரர் கணேசனுக்கு அர்ஜூனா அவார்டு (விருது) வழங்கி கொளரவித்தது.

    2002,2006 ஆசியக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர்கூட இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயமே.

    ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த என். சுப்பிரமணியம், கங்காதரன், முகமது இஸ்மாயில், பரிமளம், செந்தில்குமார், அண்ணாதுரை, வெள்ளியங்கிரி, குணசேகரன் , தங்கமுத்து ஆகியோர் தமிழ்நாடு அணிக்காக விளையாடியதன் காரணமாக ஸ்போர்ட்ஸ் கோட்டா சார்பில் ரயில்வே, வருமானவரித்துரை, ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் ஆகியவற்றில் வேலை பெற்றனர். இதெல்லாம் பழங்கதை.

    கடந்த 10 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கபாடி விளையாட்டுக்கு, கபாடி வீரர் என். சுப்பிரமணியம் போன்றவர்களின் தீவிரமுயற்சியால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

    திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ். ரங்கசாமி அவர்கள் மாநில கபாடி கழகத்தின் தலைவராக இருந்த கால கட்டத்தில் பல்வேறான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[hide]

    கபாடி விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு ஆலோசனைகளை கபாடி ஆர்வலர்கள் கூறுவதைப் பார்ப்போம்

    1. ஒவ்வொரு பள்ளியிலும் கபாடித் தளம் கட்டாயமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் மற்ற விளையாட்டுக்களுக்குத் தனி பயிற்சியாளர்கள் உள்ளனர்.

    கபாடி பயிற்சியாளரை நியமித்து பள்ளிகளுக்குச் சென்று ஆய்வுகளும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.

    அனைத்துப் பள்ளிகளும் ஆண்,பெண் கபடி அணிகளை தவறாமல் உருவாக்கி போட்டிக்கு அனுப்பவேண்டும்.

    1. தனியார் மெட்ரிக் பள்ளிகள் கபாடிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

    குறிப்பாக மாணவிகள் கபாடி விளையாடுவதற்கு எந்தப்பள்ளியும் ஊக்கமளிப்பதே இல்லை எனலாம்.

    குறிப்பாக கோவை மாவட்டம் சூலூரில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற குறு மைய விளையாட்டுப் போட்டிகளில் 52 பள்ளிகள் பங்கேற்றன. இதில் கபாடி அணிகள் 7 மட்டுமே.

    1. கிராமப்புறங்களில் உள்ள அணிகள் குறைவதற்கு காரணம் அக்குழுக்களின் பொருளாதார நிலையே காரணம். பனியன் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், பவர்லூம் தொழிலாளர்கள் போன்றவர்கள்தான் கபாடி கிளப்புகளில் உள்ளனர்.

    ஒரு போட்டிக்கு சென்று விளையாடி விட்டு வேலையைப்பார்க்க சென்றுவிடும் நிலை. தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றால் அவர்களுக்கு பண உதவி தேவைப்படுகிறது.

    தமிழ்நாட்டில்  ஈரோடு திருப்பூர், ஆகிய இருநகரங்களில் கபாடி ஆர்வலர்களால் கபாடி அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

    அரசு இந்த அறக்கட்டளைகளுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க முடியும்.

    1. வேலை வாய்ப்பு: அரசு நிறுவனங்களில் காவல்துறையில் மட்டுமே கபாடி விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    ரயில்வே, மின்துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் மத்திய, மாநில அரசுகள் கபாடி வீரர்களுக்கு வேலை ஒதுக்கீடு அளித்தால், கபாடி விளையாட்டு பெரிய அளவில் பள்ளி கல்லூரிகளில் விளையாடப்படும் என்பது உறுதி.

    1. விளையாட்டு ஒதுக்கீடு 1 சதம் என்பதை அதிகமாக்குவதன் மூலம் விளையாட்டு வீரர்கள் கல்லூரிகளில் சேர்ந்து கல்லூரிகளில் அணி உருவாக ஒரு கருவியாக இருப்பார்கள்.
    2. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ்வீரவிளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல வழிகளில் எடுத்து நடத்த வேண்டும்.

    தமிழகம் முழுவதும் இதுபோன்ற போட்டிகள் நடத்த தொழில் நிறுவனங்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவளித்தால் தமிழக விளையாட்டான கபாடி புத்துயிர் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில் இவ்விளையாட்டு உள்ளபோதிலும் கூட கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையைச் சேர்ந்த கபாடி வீராங்கனையான கவிதா ஈரான் நாட்டுக்குச் சென்று வெற்றிவாகை சூடி வந்துள்ளார்.

    ஜல்லிக்கட்டிற்கு குரல் கொடுத்ததைப் போல் நமது வீர விளையாட்டான கபாடிக்கும் அற வழியில் போராடி குரல் கொடுக்க வேண்டும்.

    அப்பொழுதுதான் நமது பாரம்பரிய விளையாட்டான இதைக் காப்பாற்ற முடியும் பாதுகாக்க இயலும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    நாளைய பாரதம் நம் கையில்

    குருடும் செவிடுமாய் இருந்த பெண்மணி ஹெலன் கெல்லரைப்பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம. அவர் சொல்வார் இன்பத்தின் ஒரு கதவு மூடும்போது மற்றொரு கதவுத்திறக்கிறது. ஆனால் மூடிய கதவையே உற்று நோக்குவதில் நமக்காகத் திறந்திருக்கும் கதவை நாம் கவனிப்பதே இல்லை. இக்கருத்தை நாம் அனைவரும் கவனிக்க வேண்டும்.

    இந்தியாவின் உயிர்நாடியே கிராமங்கள்தான், என்று நாம் எழுதியும், பேசியும் வருகிறோம். ஆனால் அதுதான் உண்மை, ஆனால் அந்த உயிர்நாடியான பகுதிகள் வளமானதாக இல்லை என்று சிந்திக்கும் காலம் வந்துவிட்டது, வெறுமனே சிந்தித்துக் கொண்டியிருந்தால் மட்டும் போதாது அவற்றை செயல்படுத்த செம்மை படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் மட்டும் தான் இருக்கிறது.

    பொதுவாக இளைஞர்கள் என்றாலே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில்தான் உள்ளவர்கள். அவர்களின் இளமைத் துடிப்பான பேச்சும், செயல்பாடும் அப்படிதான் நம்மை நினைக்க வைக்கிறது. அவர்கள் வீட்டாரிடத்திலும், வெளி வட்டாரத்திலும் நம்பிக்கை பெறாமல் வெறும் சீர்திருத்தம் பேசுவதிலேயே மதிப்பிழந்து காணப்படுகிறார்கள். இந்த இளைஞன் பொறுப்புள்ளவன், எந்தச் செயலையும் முடிக்காமல் விடமாட்டான் என்ற நம்பிக்கையை முதலில் ஒவ்வொரு இளைஞனும் பெற வேண்டும், அதற்குப் பிறகு இந்த உலகம் இளைஞர்கள் கையில், அவர்கள் ஒன்று சேர்ந்து எதையும் சாதிக்கலாம்.

    உங்களுக்கு, உங்கள் வீட்டிற்கு, உங்கள் ஊருக்கு என்ன தேவை என்பதைச் சிந்திக்க வேண்டும். சாலையில் குழியிருக்கிறதா? கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு சரிசெய்யுங்கள். மின்விளக்கு எரியவில்லையா? உடனே மின்துறை அதிகாரிக்குத் தெரியப்படுத்தி அதையும சரிசெய்யலாம்.; மழைநீர் தேங்கி குட்டையாகி அதில் கொசுக்கள், ஈக்கள் மொய்கிறதா? அந்தக் குட்டையை ஓடையாக்கி சரிசெய்யலாம். தண்ணீர் குழாய் உடைந்து நீர் வீணாகிறதா. நான்கு பேர் ஒன்றிணைந்து  அதை அடைக்கலாம்.

    இளைஞர்களே நீங்கள எவ்வளவு ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தாலும், அனுபவத்தால் குறைந்தவர்களே என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். இதனால் பெரியோர்களின் அனுபவங்களையும், அவர்கள் கூறும் கருத்துக்களையும் நாம் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும்.

    நான்கு எழுத்துப்படித்து விட்டாலே நகரத்தில் மண்ஒட்டாத வேலை வேண்டும் என்ற மனம் போக்கு இளைஞர்களிடையே காணப்படுகிறது. இந்தப் போலியை ஆட்படாமல் இருப்பதே அவர்களுக்கு பெரும் வளர்ச்சிதான். இங்கு வேர்வை நதியில் குளித்தவர்கள் தான் வெற்றியின் சிம்மாசனத்தை எட்டியிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மைகளை நாம் படித்திருப்போம்.[hide]

    இன்றைய கல்விமுறை வேலை ஒன்றினை மட்டுமே நோக்கமாகக் கொண்டியிருக்கிறது. வேலை கிடைக்கவில்லையென்றால் உடனே தங்களை தாங்களே குறைந்து மதிப்பட்டு கொள்கிறோம்.

    இளைஞர்கள் உழைக்கும் வாய்ப்பினை அதிகம் பெற்றவர்கள். இதனால் சற்று மனவலிமையை மட்டும் பெற்றுகொண்டால், நவீனவிவசாயம் செய்யலாம், கிராமத்தில் கிடைக்காத விளைப் பொருட்களை வாங்கிவிற்பனை செய்யலாம். புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்யலாம். படிப்பிற்கேற்ற சுயதொழில் செய்யலாம். கோழி, முயல், ஆடு, மாடு போன்ற பண்ணைகள் வைக்கலாம்.

    இளைஞர்களே! தங்களின் கடமைகளை உணர்ந்து செயல்படவேண்டும். 25 வயது ஆகியும் பெற்றோர்களின் அரவணைப்பில் வளராமல் சொந்தகாலில் நிற்கவேண்டும். இல்லையென்றால் வீட்டிற்கு பாரமாகி, பெற்றோர்க்கு வெறுப்பாகி, வெறுப்பு இளைவெளியாகிவிடும், எனவே இளைஞர்கள் இதையெல்லாம் ஒரு சவாலாக நினைத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்