– 2018 – July | தன்னம்பிக்கை

Home » 2018 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மகிழ்ச்சிக்கான வழி !

    நான் வாரத்தில் ஒரு நாள்   மனிதனாவேன் !

    எப்போதும் இயந்திரத்தோடே பணியாற்றி கொண்டிருக்கும் தொழில்நுட்ப மாணவன் நான்.இன்று ஞாயிறுக்கிழமை விடுதலை நாள். ஞாயிறுகளில் நான் என்னையே ஆராய்ந்து பார்ப்பேன். இயற்கையோடு கதை பேசுவேன், புத்தகத்தோடு உரையாடுவேன், வெற்றிக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க எத்தனிப்பேன் !

    மாலை நேரத்தில் மண்ணோடு உரையாடி கொண்டே ஒத்தையடி பாதையில் காற்றோடு கதை பேசி கொண்டு சென்றேன்.அந்த மலைகள் ,ஆதவனை மறைக்கும் மேகங்கள்,ஆனந்த குளிர் காற்று …அடடா எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என எண்ணி மகிழ்ந்தேன்!

    நெடுதூரம் நடந்து வந்த களைப்பு.அதோ !தாகம் தணிக்க ஒரு தேனீர் கடை.களைத்து போன நாவினை தேனீரில் குளிரவைத்தேன்.தீடிரென்று ஏதோ ஒன்று என் கால்களை சுரண்டுவது போல் உணர்வு.குனிந்து பார்த்தேன்.கால் இரண்டும் இல்லாத ஒருவன் கை இரண்டையும் கூப்பி கண் கலங்கி நின்றான்.கூப்பிய அவன் கைகளுக்கு கிடைத்தது 5 காசுகள் மட்டுமல்ல இரண்டு கண்ணீர் துளிகளும் தான்.கனத்த இதயத்தோடு மெல்ல அவ்விடம் விட்டு நகர்த்தேன்.!

    என் சிந்தனையின் ஆழம் உணர பார்த்தேன்,சமுதாயத்தின் வறுமை நோய் எப்போது தீரும் என்று என் மனமென்னும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.

    என் அடுத்த எழுத்து பிறக்கப்போகும் இந்த ஒரு நொடியில் கூட உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் வறுமைக்கு பலியாகிக்கொண்டிருக்கிறது.உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் இருப்பது இந்தியாவில் தானம்,எங்கோ படித்த அறிக்கை நினைவுக்கு வருகிறது.

    எத்தியோப்பியா,சோமாலியா மக்களின் நிலை கண்டு நாம்எத்தனை முறை  கண்ணீர் விட்டிருப்போம்!பொழுதுக்கு பொழுது வித விதமான உணவுகளை உண்ணும் மக்கள் வாழ்கின்ற இதே உலகத்தில் தான்,பசிக்காக மனித கழிவுகளேயே உன்ன முற்பட்ட சபிக்கப்பட்ட மனிதர்களும் வாழ்ந்தார்கள்.

    கொஞ்சம் பொறுங்கள்!உடனே இறைவனை பழிக்காதீர்கள்.இந்த நிலைமைக்கு கரணம் இறைவன் அல்ல,சகமனிதர்கள் தான்.சுயநலம் பொதுநலத்தை கொன்றுவிடுகிறது.

    நம்மால் இந்த உலகத்தை மாற்ற முடியாது தோழமைகளே.ஆனால் நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையை மாற்றலாம்.சின்ன சின்ன விசயங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.

    நீங்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் நாதியற்று ரோட்டோரத்தில் உறங்கி கொண்டிருக்கிறாரே முதியவர் அவர்க்கு காலை மாலை உணவு கொடுங்கள்!

    உங்கள் பகுதியில் ஓர் முதியோர் இல்லம் இருக்கிறதே,அங்கு சென்று காயம்பட்டவர்களுக்கு மருந்தாக இருங்கள்!

    வாரத்தில் ஒரு நாள் வசதியின் அர்த்தம் அறியாத பிஞ்சு குழந்தைகளிடம் சென்று ஊக்கம் கொடுங்கள்.

    கல்வியின் சுவடு கூட படாத பாமர மக்களுக்கு மாதம் ஒரு நாள் ஆவது வகுப்பெடுங்கள்!

    உங்கள் தேனீரில் தவறியது ஒரு சிறிய பிஸ்கட்டாக இருக்கலாம்,அனால் இந்த உலகத்தில் அது யாரோ ஒருவருக்கு காலை உணவாக இருக்க கூடும்.

    நான் உங்களை சாக்கரடீஸ் ஆக வற்புறுத்தவில்லை ,சக மனிதனுக்கு முயற்சிக்கிறேன்.

    மாற்றத்தை வெளியில் தேடவேண்டாம்.ஏனென்றால் அது உங்களிடம் இருந்து பிறக்க வேண்டியது !

    உங்களை சுற்றி ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கி கொள்ளுங்கள்!

    வலியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே மகிழ்ச்சிக்கான வழியாக நான் கருதுகிறேன்!

    மகிழ்ச்சியும் அன்பும் பெறுவதில் இல்லை,கொடுப்பதில் இருக்கிறது!

    மனிதனாகும் முயற்சியில் உங்களோடு நான்….[/hide]

    இந்த இதழை மேலும்

    வாழ நினைத்தால் வாழலாம் – 18

    கடன் (இரண்டாம் பாகம்)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    கடன் குறித்த எனது கட்டுரை பலரது சிந்தனை காய்களை சிதற விட்டிருக்கிறது.  மற்றும் சிலருக்கு சந்தேகம் சற்றே தூக்கலாக.

    “தேவையற்ற கடன்களின் பட்டியலில் பல கடன்கள் இடம் பெறவில்லை” – என்று பலரும் தொலைபேசியில் அழைத்து தொலைத்தெடுத்து விட்டார்கள்.  இன்னொரு நண்பர் – இதை இன்னும் விரிவாக ஒரு பயிற்சி வகுப்பாக நடத்தலாமா? – பலருக்கும் பயன் தருமே! என்று ஆலோசனை சொன்னார்.

    இன்னும்  சிலர், பெரிய தாளில் தங்கள் தேவைகளை எழுதிக்கொண்டு – இது தேவையா? இல்லையா? என்று கேள்விகளால் துளைத்துவிட்டார்கள்.  “இது தேவையா” என்று என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்ற அளவுக்கு.

    என்னுடைய தேவைகளை “தேவை இல்லை” என்று மற்றவர் எப்படி தீர்ப்பு கூற முடியும்? என்று கோபத்தோடு கொதித்தவர்களும் உண்டு.

    நன்றி நண்பர்களே!  என் தொடரின் சில கருத்துகள் உங்களை தொல்லை செய்வதை நினைத்து – மகிழ்கிறேன்.

    “தேவையுள்ள, மற்றும் தேவை இல்லாத” என்பது தனிமனித ஆசையை, சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்தது.

    அலுவலகத்தில் உங்கள் நண்பர் கொஞ்சம் உன் ஆண்ந்ங் ஐ கொடுப்பா, 1 மணிநேரத்தில் வருகிறேன் – என்று வாங்கி போகிறார்.  வீடு வரும் வழியில் நீங்கள் டங்ற்ழ்ர்ப் ஆன்ய்ந் ல்.

    Bank ல் கேட்கப்படும் பேனா முதல் விஷேஷங்களுக்கு செல்ல உங்கள் நகைகளை கொஞ்சம் இரவல் கொடுங்கள்” என்று கேட்பது வரை எத்தனையோ பேர் – உங்கள் எதிரில்.

    இந்த கடன் அவர்களுக்கும் தேவையில்லை.  உங்களுக்கும் தேவையில்லை.

    தினவட்டி, கந்துவட்டி, Meter வட்டி, Speed வட்டி என்று வேறு வேறு பெயரிட்டு அழைத்தாலும் அவையனைத்தும் ஆபத்தின் சின்னங்களே.

    “கடன்” உங்கள் உழைப்பை உங்களுக்கே தெரியாமல் உறிஞ்சும் “அட்டை”.  உங்கள் கையிலிருக்கும் “Credit Card” க்கும் தமிழில் பெயர் “அட்டை” தான்.

    பகட்டான வாழ்வுக்கு ஆசைப்பட்டு “Personal Loan” எடுத்து பரிதவிக்கும் அன்பர்கள் அநேகம்.

    நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கடன் வாங்கி – நட்பையும், மரியாதையும் இழந்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

    Tax (வரி) கட்டுவதில் ஈன்ங் வைப்பது முட்டாள்தனம்.  முறையாகவும், நேரத்தோடும் வரியை கட்டுவதே நல்லது.  அது பின்னாளில் அதிகாரிகள் Late Fee/Penalty – என்று தொந்தரவு செய்வதை தவிர்க்கும்.

    மகளுக்கு திருமணம் போன்ற முக்கிய நிகழ்வு இல்லாமல் LIC Policy மேல் கடன், PF Loan, Retirement Benefit ல் கடன் வாங்குவதும் தவறு.  ஆம்.  ஓய்வுக்காலம் – ஓய்வுக்காலமாக இல்லாமல் இன்னும் ஓடும் காலமாக ஆகிவிடும்.  கவனம்.

    0% Interest என்று மயங்கி வீட்டில் தேவைக்கும் அதிகமான Furniture கள் தேங்குவதையும் சில வீடுகளில் காணலாம்.[hide]

    Gym க்கு போகாமல் எடையை குறைக்க இந்த எந்திரம் – மாதத்தவணையில் என்று வாங்கி – எடையும் குறையவில்லை, கடனும் அடையவில்லை,  பாசத்தோடு வாங்கிய பொருள் இப்போது பரணில்.  இது பல வீடுகளில் பல்லி சொல்லும் பஞ்சாங்கம்.

    கடன் வாங்கும்முன் உங்கள் Common Sense ஐ பயன்படுத்துங்கள்.  கடனால் Stress ல் இருப்பவர்களின் எண்ணிக்கை 53% க்கும் மேல் என்று ஆய்வுகள் கூறுகின்றது.

    ஆக, தேவையற்ற கடன்களில் எத்தனை எழுதினாலும் சில விடுபடுவது சகஜம்தான் போலும்.

    இனி, “தேவையான கடன்” குறித்து கொஞ்சம் தேடுவோம்.

    வங்கிகள் இப்போது கூவிக்கூவி கடன் கொடுப்பதாக சொல்கிறார்கள்.  கடன் வாங்கினால் தவறில்லை என்ற மனோபாவம் மக்களிடையே வளர்ந்துவிட்ட சூழலில் “கதிரவன் உயர காரிருள் விலக – தெளிவாக தெரிந்தது திசை” என்பதுபோல் தேவையான கடன் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

    கடமை என்று படித்த காலம் போய் – ஒதுக்கீடுகள் தந்த உற்சாகத்தால் கடனே என்று படித்த காலங்களும் போய், இப்போது கடன் வாங்கினால் தான் படிக்கவே முடியும்” – என்ற நிதரிசனம்.

    Education Loan தேவையான கடன் தான்.   அதில் உங்கள் “கையை” வைப்பதற்கு முன் “கவனத்தை வையுங்கள்”.  என்ன வேலையும், சம்பளமும் கிடைக்கும் என்ற அடிப்படை அறிவோடு அணுகுவது முக்கியம்.  கடன் வாங்கி படித்து – பின் வேலையில்லா பட்டதாரிகளின் பட்டியலில் என் பெயரையும் எழுதுங்கள் – என்று சொல்வது நல்லதல்ல.

    ஜனத்தொகை பெருகுதல் போலவே, வீதிகளில் வாகனங்களின் அணிவகுப்பு நெரிசல்.

    இப்போது எளிமையாகிப்போன EMI Scheme.  ஆடம்பரமான, அதிக விலை உள்ள வாகனத்தை வாங்காமல் “எனது அவசியமான சவுகரியத்துக்காக  வாங்கப்படும் தேவையான கடன்” என்ற கணக்கில் வாகனக்கடன் வாங்குவதில் தவறில்லை.

    “எலி வலை ஆனாலும் தனி வலை” என்பது சொந்த வீட்டில் வசிப்பவர்களின் சந்தோஷ வார்த்தைகள்.  “காணி நிலம் வேண்டும் பராசக்தி” – என்று பாரதியைப்போல் பாடும் இன்றைய மக்களுக்கு “வீட்டுக்கடன்” விசேஷம் தான்.  உத்திரத்தில் கூரையும் தாங்கி – சுவற்றில் உங்கள் பேரையும் தாங்கிய ஒரு வீடு.  அங்கே உங்கள்மேல் படும் ஆனந்த காற்றின் சுகந்தம் – அற்புதம்.  உங்கள் மாத வருமானத்தில் 25% வீட்டு கடனுக்கு.  அது அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

    Financial Consultant சொல்லும் பொதுவான விதி – உங்கள் வருமானத்தின் 28% மேல் வீட்டு செலவுகளும், 36% மேல் வீடு, கார் கடன்களுக்கும் செலவழிக்க கூடாது.  எஞ்சிய பணம் சேமிப்பில் இருத்தல் சிறப்பு என்கிறார்கள்.

    தொழில் அபிவிருத்தி, வியாபாரத்தின் விரிவாக்கம் போன்ற வளர்சிகளுக்கு தனி நபரையும், தனியார் நிறுவனங்களையும் தவிர்த்து Bank ல் கடன் பெறுதல், கவலைகளை குறைக்கும் கலை.

    பெரிய பெரிய விஷயங்கள் மட்டுமல்ல – எளிமையான, எதார்த்தமான சில விஷயங்களின் பட்டியல் இதோ.

    உங்கள் அறிவையும், ஞானத்தையும் அதிகப்படுத்த “நூலகங்கள்” புத்தகங்களை 15 நாளில் திருப்பி தாருங்கள் என்று “கடனாக” கொடுக்கிறார்கள்.  அந்த கடனும் “தேவையான கடனே”

    Health Insurance, Mediclaim போன்ற தேவைகளுக்கான கடனும், செலவும் ஞாயமே.

    வாழ்வில் சில விஷயங்கள் மூச்சு காற்றுபோல், மருத்துவம் போல, ஆரோக்கியம் போல மிக மிக தேவையானது.  அதில் ஒன்று தான் வாழ்வியல் பயிலரங்கங்கள், வகுப்புகள்.  அதற்க்கு நீங்கள் சிறிது நேரத்தையும், பணத்தையும் செலவு செய்தல் சரியே!

    சுற்றுலா செல்லுதல் – மனதை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தும்.  புதிய மனிதராக உணர்வீர்கள்.  அந்த உற்சாகம் நிரந்தராமாக இருக்க “Holiday Package Tour” ல் உங்கள் பெயரை பதிவிடுங்கள் – அதுவும் குடும்பத்தோடு.  இதற்காக நீங்கள் செலவு செய்யும் பணம், உங்கள் சேமிப்பில் இருந்தால் சிறப்பு.  கடனாக இருந்தாலும் கவலை கொள்ளாதீர் – அதே நேரம் அகலக்கால் வைக்காதீர்கள்.

    பணம் எல்லோரின் வாழ்விலும் வரும்.  அது “கடனாக” வந்தாலும் “சேமிப்பாக” வந்தாலும் உங்கள் வரவும், செலவும் முறையாக இருந்தால் முன்னேற்றம் தான்.

    தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியறிதல் அதிகாரத்தில் குரல் எண் 478 ல்

    “ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

    போகாறு அகலாக் கடை” – என்றார்.

    அதாவது, நமது வருமானம் மிக சிறியதான அளவாக இருந்தாலும் நமது செலவுகளை வருமானத்திற்குள் வைத்துக்கொள்ளும்போது  நமக்கு எந்த கேடும்,தீமையும் வந்து விடாது” என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்டிருக்கிறார்.

    “இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா” – என்ற புரிதல் கடன் வாங்குமுன் இருக்கட்டும்.

    அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே – ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே” – என்ற எதார்த்தத்தை உணர்ந்து சில இடங்களின் கடன் கேட்காமலும், வாங்காமலும் இருந்தால் வாழ்க்கை கவுரவமாக இருக்கும் என்று உணர்க.

    “வரவு எட்டணா செலவு பத்தணா, அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா” என்ற கணக்கு நம் பள்ளியில் படித்திருந்தாலும் “நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது – அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் நிலைக்காது” – என்ற எச்சரிக்கையை உணர்ந்து அதிகம் ஆசைப்படாமல் வாழுங்கள்.

    தேவையான கடனோ, தேவையில்லாத கடனோ – ஆனால் நீங்கள் கட்டாயம் அடைத்தே ஆக வேண்டிய கடன்கள் நிறைய இருக்கிறது.

    தாயுடன் பெற்ற “அன்புக்கடன்” – முதியோர் இல்லங்களை மூடிடும் விதமாக.

    குருவிடம் பெற்ற “ஞானக்கடன்” – நிதானம் இழந்து தள்ளாடும் சாராயக்கடை வாழ் சக மனிதர்களை சாந்தமான மனநிலைக்கு மற்றும் விதமாக,

    கடவுளிடம் பெற்ற “அருட்கடன்” – உங்களை நன்றியுணர்வின் நாயகனாக மிளிரச்செயும் விதமாக.

    இந்த “கடன்களை” அடைக்கும்போது – உங்களுக்கு நிமிடத்துக்கு நிமிடம் நிம்மதியே இருக்கும்.

    இருந்தால் !  வாழ்வில் மகிழ்ச்சியும் இருக்கும்.

    “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

    “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”[/hide]

    இந்த இதழை மேலும்

    மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)

    முன்னுரை

    குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டிற்கு மூளை முடக்குவாதம் முக்கியக் காரணமாகும். இந்நோய் கண்டறியப்பட்ட குழந்தைகளின் தசைகளின் இழுவிசை, பலம் (Strength), கட்டுப்பாடு (Control) ஆகியவை வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும்.

    பரவல்

    பிறக்கும் 1000 குழந்தைகளில் 1.5-2.5 குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப் படுகின்றனர். உலக அளவில் பரவல் தன்மை 1985 – 1990 வரை.

    காரணங்கள்

    அநேகமான குழந்தைகளில் இந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் தெரிவதில்லை. சில முக்கியமான காரணங்கள்,

    • குழந்தைப்பருவத்தில் மூளையில் ஏற்படும் தொற்றுகள் (Infections)
    • குழந்தைப்பருவத்தில் ஏற்படும் மஞ்சள் காமாலை
    • குழந்தைப்பருவத்தில் தலையில் அடிபடுதல்

    குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    அபாய அறிகுறிகள்

    பிறக்கும் முன் பிறவிக் குறைபாடு தாயின் கருப்பையில் தொற்று நோய் ஏற்படுதல்
    பிறக்கும் போது குறைபிரசவம்(< 32 வாரங்கள்) எடை குறைந்த குழந்தைகள் <1500 கிராம்
    பிறப்பிற்குப் பின் உடலில் ஏற்படும் காயங்கள் மூளையில்
    ஏற்படும் வீக்கம் (Encephalitis)
    • வளர்ச்சி தாமதமாகுதல்
    • நிற்கும் நிலை சீராக இல்லாமல் இருத்தல்
    • பார்க்கும், கேட்கும் திறனில் குறைபாடு
    • மாறாநிலை ஓரக்கண்

    சிகிச்சை முறைகள்

    தகுந்த சிகிச்சை முறையானது குழந்தையின் திறமையைச் சரியாக பரிசோதித்து அதற்கு தகுந்தபடி சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தைகளின் உடல் இயக்கங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இது தனிநபர் ஒருவரால் மட்டுமே அளிக்கப் படக்கூடிய சிகிச்சை அல்ல, இது ஒரு கூட்டு முயற்சியாகும். பல துறையைச் சார்ந்த வல்லுநர்களும் இதில் ஈடுபட வேண்டும்.[hide]

    • குழந்தை நல மருத்துவர்
    • உடற்கூறு பயிற்சி வல்லுநர்
    • தொழில் வழி பயிற்சி வல்லுநர்
    • மனநல மருத்துவர்
    • காது,மூக்கு, தொண்டை நிபுணர்
    • கண் சிகிச்சை மருத்துவர்
    • எலும்பு சிகிச்சை நிபுணர்
    • சிறப்பு ஆசிரியர்
    • சமூக ஆர்வலர்

    இந்த சிகிச்சை முறையின் குறிக்கோளானது, குழந்தையின் வேலை செய்யும் திறமையை அதிகரித்தல் மற்றும் குழந்தையை முடிந்த அளவு தனித்து இயங்கச் செய்தல் ஆகும். சிகிச்சை வெற்றிக்கு வல்லுனர்களும், கேட்கும் திறனைப் பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் வல்லுனர்களும் தேவை.

    ஸ்பஸ்டிக் குவாட்டிரிபிலிஜியா (Spastic Quadriplegia)

    இந்நோய் தாக்கியவர்கள் தீவிரமான குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

    • கை, கால்கள் நான்கும் பாதிக்கப்பட்டிருக்கும்
    • மூளையின் வளர்ச்சி மற்றும் அளவு குறைந்து காணப்படுதல் (Microcephaly)
    • மனவளர்ச்சி குன்றி காணப்படும்
    • உடல் வளர்ச்சி குறைபாடு
    • பார்வை மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு
    • வலிப்பு நோய்
    • தசைகளின் இழுவிசை அதிகமாகக் காணப்படும். அதனால் முதுகில் வளைவு மற்றும் கால்கள் பின்னி கத்தரிக்கோல் போன்ற அமைப்பில் காணப்படும்.
    • குழந்தை நடக்க ஆரம்பித்தலில் தாமதம் காணப்படும். இவர்கள் பொதுவாக கால் விரல்களில் நடப்பார்கள்.
    • கைகள் உட்புறமாக திரும்பியிருக்கும். கை முட்டி நீட்டியோ (அல்லது) மடக்கியோ இருக்கும்.

    ஸ்பஸ்டிக் டைபிலிஜியா (Spastic Diplegia)

    இதில் கைகளை விட கால்களில் அதிகமாக பாதிப்பு காணப்படும். அறிவு சம்பந்தமான குறைபாடு அதிகம் இருக்காது. கால்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். இது பொதுவாக குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் காணப்படும்.

    ஸ்பஸ்டிக் ஹெமிபிலிஜியா (Spastic Hemiplegia)

    இது உடலின் ஒரு பக்கத்தை மட்டும் பாதிக்கும். வலப்பக்க பாதிப்புகள் தான் அதிக அளவில் உள்ளன.

    • பாதிக்கப்பட்ட கைகளில் அசைவுகள் குறைவாக இருக்கும் மற்றும் கை முட்டி இறுக மூடிய நிலையில் இருக்கும்.
    • பாதிக்கப்பட்ட குழந்தைகளில் உட்காருவது, தவழ்வது போன்றவை சரியான வயதில் இருக்கும்.
    • ஆனால் நடக்க ஆரம்பிப்பதில் 2- 3 மாதங்கள் வரை தாமதமாக இருக்கும்.
    • கைகள் வளைந்த நிலையில் உட்புறமாக தோள் பட்டையில் திரும்பிய நிலையில் இருக்கும்.
    • சில குழந்தைகளின் கை, கால்கள் வளர்ச்சி சீரான அளவில் இருக்காது.

    தளர்ச்சி (Hypotonic CP)

    இது மிக அரிய வகையாகும். இதில் தசைகளின் இழுவிசை (tone) குறைந்திருக்கும்.

    கண்டறியும் முறை

    எல்லா குழந்தைகளுக்கும் மூளை முடக்குவாதம் கண்டறிவதற்கு பரிசோதனை செய்வது அவசியமானதல்ல. ஆனால் பிறந்த குழந்தைகளில் அபாயம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு முழுவதுமான மருத்துவ பரிசோதனை மற்றும் அவர்களைப் பற்றிய விபரங்களைக் கண்டறிய வேண்டும்.

    முக்கியமாக 1500 கிராமுக்குக் குறைவாக எடையுடன் பிறந்த குழந்தைகள், மூச்சு விடுவதற்கு இயந்திர உதவி 48 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தேவைப்பட்ட குழந்தைகளுக்கு, பிறந்த 5 நிமிடங்களில் ஆப்காரின் (அடஎஅத) அளவு 4க்கும் குறைவாக இருந்த குழந்தைகளுக்கு, குழந்தைப் பருவத்தில் வலிப்பு ஏற்படுதல், மூளையில் ஏற்படும் தொற்று நோய்கள் போன்ற குழந்தைகளில், இந்நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமானதாகும்.

    குழந்தைகளுக்கு 4 , 6 மற்றும் 9 மாதங்களில் தகுந்த உடல் பரிசோதனை செய்வதன் மூலம் அவர்களின் தசை இயக்கம் மற்றும் வளர்ச்சி பற்றிக் கண்டறியலாம். ஆலன் மற்றும் அலெக்ஸாண்டர் 1997ல் தொகுப்பான 6 இயக்க வளர்ச்சி நிலைகளை பயன்படுத்தி மூளை முடக்குவாதத்தை கண்டறியலாம் என்றனர். அவை பின்வருமாறு,

    • குப்புறப்படுத்த நிலையில் இருந்து புரண்டு நேராக படுத்தல்.
    • நேராகப் படுத்த நிலையில் இருந்து உருண்டு குப்புறப்படுத்தல்.
    • மற்றவர்கள் உதவியுடன் உட்காருதல்
    • மற்றவர்கள் உதவியில்லாமல் உட்காருதல்
    • தவழுதல்
    • நின்ற நிலையில் பிடித்துக் கொண்டு மெதுவாக நகருதல்.

    இதில் ஏதாவது ஒரு வளர்ச்சி நிலையில் தாமதம் ஏற்பட்டால், அக்குழந்தைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இதில் 3க்கும் மேற்பட்ட வளர்ச்சி நிலையில் தாமதம் ஏற்பட்டால் அவர்களுக்கு மூளை முடக்குவாதம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் விரிவான பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

    கண்டுபிடிக்கும் முறைகள்

    குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய குறிப்புகளைச் சேகரித்தல்- பிறப்பிற்கு முன், பிறக்கும் போது மற்றும் பிறப்பிற்குப் பின்.

    உடல் மற்றும் நரம்பு வளர்ச்சிக்கான பரிசோதனைகள்.

    எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனை முறைகளும் மூளையில் ஏற்படும் பிரச்சனைகளைக் கண்டறிய உதவுகின்றன.

    மூளைமுடக்குவாதத்தை கண்டுபிடிப்பதற்கான

    முக்கிய அறிகுறிகள்

    • தன்னிச்சையான இயக்கங்கள் குறைந்து காணப்படும்.
    • ஒரே மாதிரியான, வழக்கத்திற்கு மாறான இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்
    • தலை சுற்றளவு குறைதல்
    • முகம் பார்த்து சிரித்தல் தாமதமாகுதல்
    • முதல் நிலை அனிச்சைச் செயல் (Neonatal reflexes) 6 மாதத்திற்கு மறையாது இருத்தல்[/hide]

    இந்த இதழை மேலும்

    நன்மை தராத செல்வம்

    நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நாம் பிறருக்கு நல்லது செய்யும் போது நமக்கு பின்னாளில் நல்லது நடக்கிறது. எனக்கு பரிச்சயமான ஒரு பெரு வணிகர் இருந்தார். கடின உழைப்பால் பெரும் செல்வம் ஈட்டினார். பேர், புகழ், நன்மதிப்பு இருந்தது. தன்னிடம் பணியாற்றுபவர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்வார். பத்து நிமிடம் தாமதமாகப் பணிக்கு வந்தவர்களுக்கு அரை நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்வார். தம் வேலையாட்களை காலை ஒன்பது மணி முதல் இரவு பத்து மணி வரை நிற்க வைத்து வேலை வாங்குவார். சம்பள பிடித்தமின்றி  விடுப்பு தர மாட்டார். அற்ப விஷயங்களுக்கு கடுமையாய் ஏசுவார். வறுமை, இயலாமை காரணமாக வேலையாட்கள் பொறுத்துக் கொண்டார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் வருமான வரி சோதனையில் பிடிபட்டார். தப்பி வந்தார். அவர் காலம் முடிந்தது. இன்று அவரது வாரிசுகள் பொறுப்பற்று ஊதாரித்தனமாக செலவு செய்து வியாபாரத்தில் நஷ்டமடைந்து செல்வம் இழந்து முகவரியற்று நிற்கிறார்கள்.

    தர்ம குணம் இல்லாதவர்களை கருமி, கஞ்சன், உலோபி , உலுத்தன் என்றெல்லாம் சொல்வர். அவர் ஒரு பைசாக் கூடத் நன்கொடை தரமாட்டார். நண்பர்களுடன் வெளியே சென்றால் சிலர் பணத்தை வெளியே எடுக்கவே மாட்டார்கள். தயக்கம் காட்டுவர். யாருக்கும் ஒரு சல்லி காசு கொடுக்க மாட்டார்கள். நியாயமாக பிறருக்கு தர வேண்டிய தொகையைக்  கொடுக்காமல் பலநாள் அலைய வைப்பார்கள். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டார்கள். தேநீரில் ஈ விழுந்தால் கூட அதைப் பிழிந்து விட்டுதான்  வெளியே எறிவார்கள். குளிர் காலத்தில் வெந்நீர் போட்டுக்கூட குளிக்க மாட்டார்கள். இவர்கள் யாருக்கும் எதுவும் கொடுக்க மனமில்லாதவர்கள்.

    பொதுவாக ஒரு பொருளை உபயோகிக்காவிட்டால் அது இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். தன் தேவைகளுக்கு மட்டும் செலவிடுவதை சிக்கனம் எனலாம். தன் சுய தேவைக்குக் கூட செலவு செய்யாமல் இருப்பவர்களைத்தான்  கஞ்சன் என்கிறோம்.

    பிறருக்கு பயன்படாத செல்வம் தன்னைக் கொல்லும். தனது வாழ்நாள் முழுவதும் பணம் சேர்ப்பதிலேயே கருமி தீவிரமாக இருப்பார். இதற்காக அவர் நன்றாக சாப்பிடாமல், நல்ல ஆடைகள் அணியாமல், எந்த இன்பத்தையும் அனுபவிக்காமல் கஞ்சத்தனமான இருப்பார்.

    நன்மையை தராத செல்வம்;

    பணத்தை அனுபவிக்காதவன் பிணம். ஒருவராலும் விரும்பப் படாதவன் கஞ்சன். கஞ்சனுக்கு எஞ்சி நிற்பது எதுவுமில்லை. தானும் அனுபவிக்க மாட்டார், தகுதியுடையவர்க்கும் ஈயவும் மாட்டார். துன்பப்படுபவர்களுக்கு  தப்பித் தவறியும் உதவ மாட்டார். அவ்வளவு கெட்டி. பகிர்வது என்ற குணமே கிடையாது. அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பு தர மாட்டார். அழகிய செருப்பை காலில் அணிந்ததில்லை. முன்னோர் செய்த பொருட்களில் மாற்ற மேதும் செய்ததில்லை. பசியென்று  வந்தோர்க்கு பச்சை தண்ணீர் தந்ததில்லை சலவைக்கு துணிகளை ஒரு போதும் போட்டதில்லை. இரவல் என்று இதுவரை எவருக்கும் கொடுத்ததில்லை. எவருக்கும் உபயோகமில்லா இவ்வாழ்க்கைக்கும் அர்த்தமில்லை.

    கஞ்சத்தனம் இறைவனை அந்நியப்படுத்துகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம். ஊதாரி வருங்கால பிச்சைக்காரன். கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன். கொடுக்காத செல்வம் மணமாகாத கிழவி போன்றது. பிறரால் விரும்பப்படாதவன் பெற்ற செல்வம் நடு ஊரில் நச்சு மரம் பழுத்திருப்பது போன்றது.[hide]

    கஞ்சன் கையில் சிக்கிய செல்வம் உலகம் செழிக்க உதவுவதில்லை. கருமியை தீராத நோய் வாட்டுகிறது. பொறுப்பற்ற வாரிசுகள் அவனுடைய சொத்தை வீணாக்குகிறார்கள். வெள்ளம், காற்று, புயல் போன்ற ஆபத்துகளில் அழிந்து போகிறது. கஞ்சத்தனம் இருந்தால் அதிலிருந்து நீங்கி விட வேண்டும் என மதநூல்கள் சொல்கின்றன.

    ஜன்னல் கண்ணாடி வழியாகப்பார்த்தால் தெருவில் நடமாடும் மக்கள் தெரிகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் என்ன தெரிகிறது? நம்மையே பார்க்கிறோம். ஜன்னலுலும் கண்ணாடிதான் இருக்கிறது. இங்கும் கண்ணாடிதான் இருக்கிறது. ஏன் இங்கே உங்கள் முகம் தெரிகிறது. அங்கே மக்கள் தெரிந்தனர். முகம் பார்க்கும் கண்ணாடியில் வெள்ளி (ரசம்) பூசியதால் நம் முகம் தெரிகிறது. ஜன்னல் கண்ணாடி தூய பளிங்கு போன்றது. ஆகையால் மக்கள் தெரிந்தனர். நாம் தூய கண்ணாடியாக இருந்தால் மக்கள் தெரிகிறார்கள் (பொது நலம்). நம்மிடம் கொஞ்சம் வெள்ளிப்பணம் சேர்ந்து விட்டால் மக்கள் மறைந்து நம்மை மட்டுமே பார்க்கிறோம். வௌ;ளி இருந்தால் நம்மைத்தான் பார்க்க முடிகிறது (சுயநலம்).

    வாழ்வில் அல்லல்படும் தவிக்கும் நபர்களுக்கு  கொடுக்க வேண்டும். தானும் அனுபவிக்க வேண்டும் என்ற  எண்ணம் இல்லாதவனுக்கு பல கோடி செல்வங்கள் உண்டானாலும் பயன் இல்லை.

    கஞ்சன் தனக்கு இன்றியமையாத, அவசியமான தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய விருப்பமில்லாமலும், மனமில்லாமலும், பணத்தைப் பதுக்கி வைப்பார். செலவு செய்ய தயங்குவார். கொஞ்சமும் தரும குணமின்றி, கஞ்சத்தனமாய் வாழ்ந்து செல்வந்தனாய் மரணிக்கும் கூட்டத்தினரில் ஒருவராய் நாம் இருக்கக் கூடாது.

    பெருந்தன்மையுடன் இருக்கலாம். ஊதாரியாய் இருக்கக் கூடாது. சிக்கனமாய் இருக்கலாம். கருமியாய் இருக்கக் கூடாது. சிலர்; பிறரை பாராட்டுவதில் கஞ்சத்தனமாய் இருக்கிறார்கள். ஆனால் பிறரிடம் பாராட்டுதலை எதிர்பார்க்கிறார்கள். ஊதாரி தனது வாரிசுகளை திருடுகிறான். கருமி தனனையே திருடிக் கொள்கிறான்.

    எல்லோருக்கும் ஏதோ ஒரு தனித்திறமை நிச்சயம் உள்ளது. அதை கருமி போல் தனக்குள்ளேயே உபயோகிக்காமல் வைத்திருக்கக் கூடாது. கோடிஸ்வரனைப் போல தனது திறமையை சமுதாயத்திற்கு செலவிட வேண்டும். கருமிக்கு நண்பர்கள் யாரும் இருப்பதில்லை. மரணம் என்கிற சாவிதான் கருமியின் இதயத்தை திறக்கிறது. மகாகஞ்சனின் வாழ்வு சுவாரஸ்யமற்றதாக, சலிப்பானதாக, உருப்படியான காரியங்களை செய்யாததாக அமைந்து விடுகிறது. இவர்களது குழந்தைகள் மகிழ்ச்சியற்றவர்களாகவும்;, அவர்கள் விரும்பியதை பெறாதவர்களாகவும், இருக்கிறார்கள். கருமிகள்; எது செய்தாலும் தன்னுடைய சுய லாபத்திற்க்காகவே செய்கிறார்கள்.

    தான் மட்டும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்று விரும்புவதுதான் உலகில் உள்ள எல்லா துன்பத்திற்கும் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதுதான் உலகில் உள்ள எல்லா மகிழ்ச்சிக்கும் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது.

    கஞ்சர்கள் பண விஷயத்தில் பேராசைக்காரர்களாகவும், இழிவானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது அகராதியில் பெருந்தன்மை என்ற வார்த்தையே இடம் பெறுவதில்லை. பணக்கவலையால் உடல் நலம் பாதிப்பதோடு மனம் சோர்ந்து நண்பர்களையும், குடும்பத்தையும் இழந்து நிற்கிறார்கள். மிகவும் நெருங்கியவர்களுடன்கூட அற்ப தொகைக்காக அடிக்கடி சண்டை போடுகிறார்கள். மற்றவர்களை எப்போதும் குறையே சொல்லும் இயல்புடையவர்கள்;.

    கருமிகள் தன்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என யாரையும் குறை கூறுவதில் மிகவும் வல்லவர்கள். இணக்கமற்ற போக்கு காரணமாக,  இவர்களை யாரும் விரும்புவதில்லை. அதே நேரத்தில் இவர்கள் விரும்புவதை அவர்கள் செய்து தர முன்வருவதில்லை. சமுதாயத்தில் கௌரவிக்கப் படுவதில்லை.

    இவர்களது திருமண வாழ்வு நன்றாக அமைவதில்லை. இவர்களது வாரிசுகள் அன்புடன் இருப்பதில்லை. இவர்கள் யாருக்கும், எதற்கும் ஒரு போதும் நன்றியுடையவர்களாக இருப்பதில்லை. எதுவுமே இவர்களுக்கு மனநிறைவை தருவதில்லை. மகிழ்ச்சியை தருவதில்லை. மற்றவர்களின் வெற்றியில் பொறாமை அடைபவர்கள். எல்லாவற்றிலும் குறைகளையே காண்பார்கள். எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள். நாம் எவ்வளவு நல்லது செய்தாலும் அதிலும் குறைகளையே காண்பார்கள். அவர்களுக்கு தன்னையும் பிடிக்காது. மற்றவர்களையும் பிடிக்காது. தனது பொருட்களை பிறர் கவர்ந்து விடாமல் பாதுகாக்கும் குணம் உடையவர்கள்.

    பிறர் படுகின்ற துன்பத்தை கண்டு மனமிரங்கி  அத்துன்பத்தை போக்க முயல வேண்டும். தாமே உழைத்து தனது வாழ்க்கைத் தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு உதவலாம். வாழ்விழந்தவர்களை, வாழமுடியாதவர்களை, தவிப்பவர்களை அரவனைத்து உதவுவது நற்செயல் ஆகும்.

    அவரவர் தமது உழைப்பின் பலனில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து ஈகையாக்க வேண்டும். பிறருக்கு உதவுவதால் நம் மனம் லேசாகிறது. ஏற்பவரின் வாழ்வும் வளமாகிறது. இரு தரப்பிற்கும் நன்மை கிடைக்கிறது. தான் சம்பாதித்த பொருட்களை தாமே வைத்திருக்க அனுபவிக்க ஒருவருக்கு உரிமையுண்டு. ஆனால், தனது தேவைக்கு மேலாக மிகுதியாக இருக்கின்ற நிலையில் பிறர் நல்வாழ்விற்கு மிகவும் இன்றியமையாத தேவைக்கு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவாமல் தாமே வைத்துக் கொண்டு பாதுகாப்பது மிகவும் தவறானது. இறைக்கிற கிணறுதான் ஊறும். நம் தேவைக்குப் போக, தருமம் செய்வதால் ஒருவனுடைய செல்வம் குறைந்து போவதில்லை. பொருள் பாதுகாக்கப் படுகிறது.  அபிவிருத்தி செய்யப்படுகிறது.[/hide]

    இந்த இதழை மேலும்

    தனை மறந்ததேன்! தென்றலே!

    1. பெட்ரோலியமும் குடும்ப விளக்கும்:-

    இந்தியன் ஆயில் கார்பொரேஷன் குழுமத்தினர் மிகவும் திட்டமிட்டு செயல்படுகின்றவர்கள்.  இன்னும் நாப்பது வருடத்திற்குத்தான் பெட்ரோலிய பொருட்கள் வரும் என்று 2014 ல் கூறப்பட்டு இருக்கின்றதாம்.  அது ஒரு அறிவியல்பூர்வமான கணக்கீட்டின் அடிப்படையில்.  நாகராஜன் சார் பெட்ரோலிய கம்பெனியில் மாநில அளவிலான பணியில் இருக்கின்றார்.  இந்தியா உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய பெட்ரோலியம் பயன் படுத்தும் நாடாக எப்படி வளர்ந்து வந்துள்ளது?  எந்த சிறிய மக்கள் தொகை கொண்ட, சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்ற நாடு மூன்றில் இருந்து நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறித்தெல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தோம்.  பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ‘பெட்ரோல் பாதுகாப்பு’ வாரம் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது.  அதற்கான மாநில அளவிலான கவிதை கட்டுரை ஓவிய போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்குவதற்காக அழைக்கப்பட்டு இருந்தோம்.  சென்ற இடத்தில் என்ன பேசுவது என்பதை…  போய் தயாரித்துக்கொள்வோம் என்று போன பிறகு…  அங்கே பாவேந்தர் பாரதிதாசனாரது குடும்ப விளக்கு கூட பேசப்பட்டது.

    1. காலம் முன்னும் பின்னும் செல்கிறது:-

    பாரதிதாசனாரின் குடும்ப விளக்கிலே ஒரு மகத்தான காட்சி. கடந்த 1995-ல் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் திரு. சுகிசிவம் அவர்கள் பேசும்பொழுது எங்களுக்கு எடுத்து விளக்கிக் காட்டிய காட்சியாக இருக்கலாம்.  நினைவுகள் காப்பிரியா கார்சியல் மார்க்வெஸ் அவர்களுடைய தனிமையின் நூறு ஆண்டுகள் புத்தகத்தில் வதுவது போல கால கட்டுப்பாடுகளை கடந்து முன்னும் பின்னுமாக மங்கலாகப் பதிவாகி இருப்பதாக தோன்றுகின்றது.  இப்பொழுது அந்தப் பேச்சினைக் கேட்டு இருபத்தி மூன்று வருடங்கள் ஆகின்றது…  பெட்ரோலிய பொருட்களின் சிக்கன பயன்படுத்துதல் கூட்டத்தில் பல மொழி பேசுகின்ற பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனாலும் இந்த இருபத்தைந்து வருடப் பழைய கேள்வி ஞானம் இங்கே பொருந்தும் அதையே பேசிவிடலாம் என்று தோன்றியது.

    1. தன்னை கேலி செய்:-

    பொதுவாக கூட்டங்களில் பேசுவதற்கு மெனக்கெட்டு ஆழமாகத் தயாரித்துக் கொண்டு செல்வது உண்டு.  “அதுவாகவே நீ ஆகி விடு” என்று சுவாமி விவேகானந்தர் கூறுவது போல, எந்த ஒரு பொருள் குறித்தும் ஆழமான இயல்பான புரிதலை உருவாக்கிக்கொள்ள அவசியம் ஏற்படுத்திக்கொண்டால் மேடைமீது நிற்கும் பொழுது நிச்சயத்தன்மையோடு கூடிய மனதைக் கவரும் சொற்கள் தானக பொழிந்து கொள்கின்றன.  இக்கட்டுரையைப் போல.  அறிமுகப்படுத்திய பேச்சாளர், ஆரம்பத்தின் முடிவு, முடிவின் ஆரம்பம், இப்பொழுது பேச வருகின்றது, என்று ஒருமையில்தான் உரிமையோடு அறிமுகப்படுத்தினார்.  தாராளமான பாராட்டுச் சொற்கள் பிரயோகிக்கப்பட்ட “ஊக்கமூட்டும் பேச்சாளர்” என்கின்ற அடைமொழியையும் பயன்படுத்தினார்.  தற்பெருமை பேசுவதும், தன்னை வியப்பதும், தன்னம்பிக்கையின் உச்சமாகப் பார்க்கப்பட வேண்டியதில்லை.  தன்னை நகைச்சுவைக்குள்ளாக்குவது, கேலி செய்து கொள்வது இரண்டும் எளிமையை நண்பர்களிடத்து எடுத்துச் செல்வதற்கு உதவும் என்று தோன்றியது.  அதனால் புகழ்ச்சிக்கு மயங்காத அல்லது ஊக்குவிக்காத சில சொற்பிரயோகங்கள் இருக்க வேண்டும்.  அதே சமயத்தில் பெட்ரோலிய சிக்கனம்! தேவை இக்கணம்!  என்பது போல தொழில்நுட்ப ரீதியிலான உரையும் அவசியம்.  இதில் எந்த அளவிற்கு நகைச்சுவை கலக்க இயலும்!  திரைப்படங்களில்… சில தமிழ்ப்படங்களில் வலிந்து திணித்த  காட்சிகளைப் போல இருந்துவிடக்கூடாது.  லியோ டால்ஸ்டாய் ஷேக்ஸ்பியரின் நாடகங்களே…  “செயற்கையாக இருக்கின்றன” என்று விமர்சனம் செய்திருந்தாராம் நம் பேச்சும் – செயற்கையாக இருந்துவிடக்கூடாது!  இப்படி உள்மனசுக்குள்ளே ஏராள எண்ண ஓட்டம் இருந்தது.

    1. தேடுதல் தேவை:-

    குடும்ப விளக்கின் கதையோ… இப்படி ஓடுகின்றது வேடப்பன், நகைமுத்து இருவருக்கும் திருமணமாகி குழந்தைப் பிறந்த புதிது.  ஒரு நாள் இரவு மூவரும் அசந்து உறங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  தந்தை சற்று தள்ளி படுத்து உறங்குகின்றார்.  தாயும் சேயும் சற்றே இடைவெளியில் தூங்குகின்றனர்.  தாயுடைய கை பாதுகாப்பாக குழந்தையைத் தாண்டி கூடாரம் போல ஊன்றப்பட்டு உள்ளது.  தந்தை யோசிக்கிறார்.  அவருக்கு திடீரென ஏதேச்சையாக விழிப்பு வந்துவிட்டிருந்தது.  இந்தக்காட்சி குடும்ப விளக்கில் இருந்து எடுத்துப் பேசப்பட்டதை கேட்டுவிட்டு இருபத்தைந்து வருட இடைவெளியில், இப்பொழுது மீண்டும் மேடையில் பயன்படுத்தப்படுகின்றது.  இப்பாடத்திட்டம் இ.ஆ.ப. தேர்வு சிலபஸில் இருந்திருந்தாலும் பேசிய பின்னரே இந்த கட்டுரை சிறப்பாக அமைய வேண்டி, மீண்டும் புத்தகத்தைத் தேடிப்படித்து வேடப்பன், நகைமுத்து போன்ற பெயர்கள் சரிபார்த்து எடுக்கப்பட்டன.  வாழ்க்கை தொடர் கல்விக்கு நம்மை தயாரிப்பது இப்படித்தான் போலும்.  வீட்டில் இருக்கின்ற இருப்புச் சட்ட அலமாரியில் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் வருபது போல ஒரு ஏணி வாங்கி அவற்றில் புத்தகங்களை இரக வாரியாக அடுக்கி வைத்து படிக்க வேண்டும் தினந்தோறும் தட்டுப்படும் சந்தேகங்களை புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து கண்டுபிடித்து மனதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும், என்றெல்லாம் ஆசை.  இணையதளத்தில் குடும்ப விளக்கு Free pdf download மூலம் குறுக்கு வழியில் படித்துவிடடதாக மனசு குறுகுறுக்கின்றது.  எப்படியோ… கூடாரம் போட்டு இருக்கின்ற காட்சிக்கு வந்துவிட்டோம்.  குடும்ப விளக்கு இன்னும் கைக்கு கிடைக்கவில்லை.  ஒரு வேளை, வேறு எதாவது திருவாசகமோ, புதுமைப்பித்தன் கதையோ, புலிநகக் கொன்றையோ தேடும்பொழுது அகப்பட்டு, விளக்கு எறியலாம்.  அப்படித்தான் அ. முத்துலிங்கம் அவர்களது புத்தகத்தை கிட்டதட்ட பத்து ஆண்டுகள் கழித்துப் படித்துச் சுவைத்தேன், என்னமாய் எழுதுகின்றார்?! அவரது ‘யூ’ டியுப் உரை ஒன்றை சமீபத்தில் கேட்டேன்!  வாகன ஓட்டுனரும், தற்செயலாக கேட்டுவிட்டு தயக்கமின்றி சிலாகித்துப் பாராட்டினார்.  சரி… தூக்கத்திற்குப் போவோம்.  பிஞ்சுக் குழந்தையாய் இருக்கின்றதே! தாய் பருமனாக இருக்கின்றாள்… கோழி மிதித்து குஞ்சு சாகாதுதான்..  ஆனாலும் உருண்டுவிடப்போகின்றாள்! இப்போது அவளை எழுப்ப வேண்டுமே!  அழைத்தால்…  தூக்கம் குழந்தையின் தூக்கமும் தடைப்படுமே… என்று…  வேடப்பன் யோசிக்கின்றார்.  அங்கே…  அந்தத்தாய்… அணிந்திருந்து… களைந்திட்ட மலர்க் கண்ணி ஒன்று கிடந்தது…  அதிலொன்றை எடுத்து… தாயின் கன்னத்தின் மீது லேசாக படுமாறு வீடுகின்றார்…  பூங்கொத்து விழுந்தது…  தாய் தூக்கம் கலைந்தால் வேடப்பன் தனது யோசனை தெரிவிக்கலாம்.[hide]

    1. மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்:-

    யோசனையோடு… அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து பேச்சை தொடங்குகையில்…“ ‘பில்ட் அப்’ பலமாக இருந்துவிட்டது.  ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்’ என்று சொன்னபொழுது…  தன்னைத்தானே ஒருமுறை உற்றுப்பார்த்துக்கொண்டேன்”… என்று தொடங்கினேன்.  பெட்ரோலைப் பற்றிப் பேசுவதற்கு என்ன பொருத்தம் இருக்கின்றது என்று சற்றே கூட்டம் தொடங்கும் முன்பு சென்று அங்கிருந்த பொறுப்பாளர்களோடு விவாதம் செய்து விவரங்களை தெரிந்துகொண்ட நம்பிக்கை, பேச பயன்படும் என்று ஒரு ஓரத்தில் சின்ன நம்பிக்கைச் செடி துளிர் விட்டுக் கொண்டு இருந்தது. சுமார் நூறு பேர் மட்டும் கொண்ட சிறு கூட்டம் தான், ஆனால், ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு கவனித்து உற்சாகத்தோடு ஊக்குவிப்பதாக தோன்றியது.

    “ஆமாங்க, நான் ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்தான்” என்று சில விநாடி இடைவெளி விட்டாயிற்று… எதிர்காலத்தை நிகழ்காலம் சந்திப்பது போல பள்ளி மாணவ மாணவ மாணவியர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது… என்று கேள்விப்பட்டேன்…  அதனால் இங்கு வர ஒப்புக்கொண்டேன்.  இளைய தலைமுறையினரைக் காண்பது உற்சாகம் தரக்கூடிய ஒன்றாகும்.  அவர்களைப் பார்க்கும் பொழுது நான் ‘மோட்டிவேட்’ ஆவதால் நானும் ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கரே!” என்று கூறிவிட்டேன்.

    நல்ல வரேவேற்பு. அந்த வகையில் இந்தப் பார்வையாளர்கள் ஒரு உற்சாகமூட்டும் குழு, பல மாவட்டங்களில் இருந்து வெற்றிபெற்ற மாணவ மாணவியர் அவர்களின் பெற்றோர்களோடு பரிசு பெற்று செல்ல வந்திருக்கின்றனர்.  உண்மையிலேயே இந்த மாணவ செல்வங்கள் நிறைய நிஜத்தன்மையை பிரதிபலிக்கின்றனர்…  பரிசு வாங்கி செல்கின்ற சில விநாடிகளில் நீங்கள் படித்து முடித்து என்ன வாக வரப்போகின்றீர்கள் என்ற போது… டாக்டராக, பொறியாளராக, விண்வெளி அறிவியல் அறிஞராக, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நிறைய பேர் விரும்பினர்.  ஒருவர் கிரிகெட் ஆட்ட வீரராக விரும்பினார்.  இனிமேல்தான் ‘லெக் ஸ்பின்’ கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி சென்றார்.  அந்த கட்டத்தில் ஒரு மாணவன் மட்டும்தான் ‘ஐ டோண்ட் நோ’ என்று தயக்கம் இன்றி பதில் அளித்தான்.  சரி, தம்பி சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம் என்று பதில் சொல்ல முடிந்தது.  இலக்கு ஒன்று இருப்பது வாழ்வில் பிடிப்பினை உருவாக்குகின்றது.

    1. எழுத்து ஊற்று:-

    நமக்கு பிடித்த அ.முத்துலிங்கம் அவர்களது ‘அங்க இப்ப என்ன நேரம்’ புத்தகம் எப்போதோ பத்து வருடம் முன்பு நமக்கு வந்து சேர்ந்திருந்தாலும் வாரக் கடைசி யொன்றில் வரம் போல, கையில் கிடைத்தது.  அதை, அதற்குள் சென்று படித்த பொழுது உணர முடிந்தது.  மகிழ்வுந்தில் செல்கையில்… காது குளிர அவரது பேட்டியை யூ டீயூபில் இருந்து கேட்டோம்.  எழுதுவது குறித்து எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறார்.  கேளுங்கள் “எழுதுவதும் தச்சு தொழில், பூக்கட்டுவது போல ஒரு பணிதான்” தினந்தோறும் கொஞ்ச நேரமேனும் எழுத முயற்சிப்பது நல்லது.  அதற்கு பதிலாக எனக்கு ஒரு ‘மூடு’ (Mood) – மனப்பாங்கு வர வேண்டும், எழுத்து ஊற்றெடுக்க வேண்டும்.  அப்பொழுதுதான் அமர்ந்து எழுத ஆரம்பிப்பேன் – என்று கூறினால்… அது எழுத்தைக் குறைத்துவிடும் என்பது போல பொருள்பட பேசி இருப்பார்.  அதைக்கேட்டு ஊக்கம் அடைந்ததால் நிறைய எழுத முடிந்தது.  ஆனாலும், அவர் பேசுகையில்… அப்படி எழுதியவை, கொஞ்ச நாட்கள் கழித்துப் படித்து பார்க்கும் பொழுது நன்றாக இல்லை என்று, தெரிய வந்தால் கசக்கி எறிந்துவிடலாம் என்று தெரிவித்திருப்பார்.  இந்த கட்டுரை அந்த வகையில் சேருமா? என்பதில் சந்தேகம் அச்சுக்கு அனுப்பும் வரை வராததால்… இது உங்கள் முக, புன்னகையை பார்க்கின்றது.

    1. வாக்கு சுத்தம்:-

    புன்னகையோடு கூறினேன், ஏற்கனவே கேட்டிருந்ததை பேசினேன்… “இன்னும் நாற்பது வருடங்களுக்த்தான் பெட்ரோலியம் பூமிக்குள் இருந்து எடுக்கப்பட முடியும் – அதன் பிறகு தீர்ந்துபோகும்” என்றார் திரு .நாகராஜன் அவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உயர் அதிகாரி.  இருபத்தி ஏழு வருடங்கள் நாட்டின் தமிழ் மொழி பேசப்படாத பல பகுதிகளில் பணி புரிந்துவிட்டு, இப்பொழுதுதான் காது குளிர கம்பனையும், பாரதியையும் கேட்கவும் பேசவும் முடிகிறது என்று மகிழ்பவர்.  அவர் சொன்னதை கேட்டவுடன் கொஞ்சம் பதட்டமாக மனது கணக்கிட தொடங்கியது… இப்போது 2018… அதனோடு… நாற்பதை கூட்… குறுக்கிட்டார், நாகா… சார்… ‘அது 2014 ல் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்று கணக்கீடுகள் சொல்கின்றன’   என்றார்…  போச்சு…  என்று தொன்றியது.  அந்த வருத்தத்தையும்..  படிப்படியாக அவரே விடுவித்தார்… எப்படி!? “இப்படித்தாங்க… நான் வேலைக்கு சேரும்போதும் நாற்பது வருஷம் தான்” என்றார்கள், ஆனா இப்போ ரிட்டையர் ஆகற சூழ்நிலையில இன்னும் நாற்பது வருடம் என்று கூறுகிறார்கள்… புதிய கண்டு பிடிப்புகள் வருகிறது.  துரப்பன ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.  பெட்ரோலிய எரிவாயு சுரங்கங்களும் புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன.  கெயில் GAIL நிறுவன அதிகாரியை அறிமுகப்படுத்தினார்…  சிரித்தார்… பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்தும்..  தொழில்நுட்பமும் உயர்ந்துவிட்டது.  குறைவான எண்ணெயில் அதிக பயன்பாட்டை கொண்டு வருகின்றனர்.  என்று காரணங்களையும் அடுக்கிய வண்ணம் சென்றார்.  ஆக மொத்தம் 1980 களில் பணியில் சேர்ந்த நாகராஜன் சார் இன்றளவிலும் நம்பிக்கையோடு இருக்கிறார்.  மின்சார வாகனங்கள் வந்து கொண்டு உள்ளன.  ஆனாலும் அது வெறும் தொடக்கமே!  பயணிக்க வேண்டிய தொலைவு ஏராளம் என்றார்.  இந்த விஷயத்தை பேசும் பொழுது… நாற்பது வருடங்கள் என்று நாற்பது வருடங்களாக சொல்கின்றோம்… ஏனெனில் நமது வாக்கு சுத்தம், அன்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என மாற்றி பேசுவது கிடையாது!  என்று சொல்ல… பார்வையாளர் கூட்டத்தில் எழுந்த நகைச்சுவை உணர்வு அந்த உரை நிகழ்ந்த பதினைந்து நிமிடமும் நீடித்தது.  அந்தக் குளத்தில் கல் எறிந்தது போல சிரிப்பு அதிர்வலைகள் மகிழ்ச்சியாய் பரவின.

    1. அமிழ்தம் எழுமா?

    வேடப்பன் எறிந்த பூவிற்கு வருவோம்.  அது நாள் முழுக்க உழைத்து ஓய்ந்திருந்த நகைமுத்தின் தூக்கத்தில் எந்த புது அதிர்வலையையும் உருவாக்கவே இல்லை.  தாய் நிம்மதியாக அதே நிலையில் உறங்கிக்கொண்டு இருந்தார்.  வேடப்பன் கவலை அதிகமானது.  அடுத்த ஐடியா தோன்றியது.  பிஞ்சு குழந்தையை எழுப்பி விடுவோம்.  அதன் மீது பூ வேண்டாம் மென்மையான பூ போல உடல்… எனவே அவன் மீது ஒரே ஒரு சிறு ரோசா இதழ் மட்டும் போடுவோம் என்று முடிவு செய்கிறார் வேடப்பன்.  சிந்தனை செயலாகிறது.  ரோஜா இதழ் குழந்தையின் கன்னத்தில் விழுந்தாலும் அதற்கு எந்த சிரமமும் இல்லை.  ‘அமிழ்தம்’ எனும் அம்மழலை எழவும் இல்லை.  ஆனாலும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.  தாய்மையின் மகத்துவம் தெரிந்தது.

    1. நல்ல வீணை:-

    இந்த பூமியின் மகத்துவம் தெரிய வேண்டும்.  பூமி – அதிலுள்ள பெட்ரோலியம் எல்லாமே நம் சொத்து என்று இப்பொழுதுள்ள நாம் கருதுகின்றோம்.  அது அப்படிஅல்ல.  நம்முன்னோர் பாதுகாத்து நம்மிடம் தந்து சென்ற கடன்.  அதனை அடத்த தலைமுறைக்கு திரும்ப பாதுகாத்து தரவேண்டிய கடமை நமக்கு உண்டு.  இதை ‘Principle of inter generational equity’ என்று சுற்றுப்புற சூழல் சட்டம் பேசுகின்றது.  என்று விளக்கி பேசினோம்… பார்வையாளர்கள் பாரதியின்…  நல்லதோர் வீணை… பாடலில் நனைந்து…  புழுதியில் எதையும் எறிந்துவிடல் கூடாது என்று கருதத் தொடங்கினார்.  உணர்வுமயமாக செய்தி தெரிவிக்கப்பட்டது.

    1. தனை மறந்ததேன்? தென்றலே!

    உணர்வு மயமாக வேடப்பன் – நெகிழ்ந்து போய்விட்டார்.  என்ன நடந்தது… அந்த அற்புதம் என்ன?  நகைமுத்துவின்… உறக்கம் கலையாமல் குழந்தையைத் தாண்டி ஊன்றியிருந்த கை மட்டும் தானாக உயர்ந்தது.  நகர்ந்தது.  குழந்தையின் கன்னத்தின் மீதிருந்த ரோஜா இதழை, எடுத்து அகற்றியது.  அதன் பிறகு மீண்டும் பழையபடி இருந்த இடத்திற்கே மழலையைத் தாண்டிச் சென்று கூடாரமிட்டுக் கொண்டது, அதைக்கண்ட வேடப்பன் மெய் சிலிர்த்துப் போனான். கேட்டுக்கொண்டிருந்த பார்வையாளர்கள் மெய்மறந்து போனார்கள்.  தலை இரண்டு என்றாலும் உயிர் ஒன்று என்கிற வண்ணம் அல்லவா? தாயும் சேயும் வாழ்கின்றனர்.  தாய்மையின் மகத்துவமே தனிதான்!  என்று  பாரதிதாசனார் போற்றி இருப்பார்… இப்படி வாழ்கின்ற உறவுகள் தன்னலமற்றவை… தனை மறந்தவை… தென்றல் போன்றவை.

    போற்றத்தக்க உணர்வுகள் – மனதோடு அடி ஆழமாய் இணைந்தவை.  அவை தானாக வெளிப்படுகின்றன அவசியப்படும் பொழுது கைதருகின்றன.  பெட்ரோலிய பயன்பாட்டு சிக்கனமும் கற்றுக்கொண்ட பிறகு உள்ளுணர்வாக மாறிவிட வேண்டும்.  ஒரு நல்ல விஷயம் உயர்ந்த எண்ணம், ஒப்பற்ற பண்பு உள்ளுணர்வாக மாறவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாம்.  பயிற்சியும் முயறிசியும் அவ்வாறு தனைமறந்து செயல்பட வைக்க உதவும் என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். அதற்கு இத்தகைய விழிப்புணர்வு கூட்டங்கள் வழி வகுக்கின்றன என்று பேசி இடையே சில புள்ளி விவரங்களை அள்ளி விட்டு, விழா உரையை முடித்தோம்!

    இன்னும் பல நாட்களுக்கு அந்த நினைவுகளும் தயாரிக்காமல் பேசிய உரையும் மனதை விட்டு அகலாது என்று தோன்றுகின்றது![/hide]

    இந்த இதழை மேலும்

    நம்பிக்கையே வாழ்க்கை

    இன்றைய இளைஞர்களே ! வணக்கம்.

    நம்பிக்கை என்பது மனிதனின் உறுதியான ஓர் உணர்வு!

    உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள், தலைவர்கள் நம்பிக்கையே வாழ்க்கை என கடினமான சவால்களை வென்றார்கள்.

    நம் பாரதியாரின் காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம், சந்திர மண்டலத்தை கண்டு தெளிவோம் என்ற வரிகள் எத்தனை நம்பிக்கை கொண்டவை.

    யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது உண்மையான கூற்று. இதை மறுக்கவோ ஒதுக்கவோ முடியாது.

    தர்மத்தோடு கூடிய ஆசைகளுக்கு உடன்பாடாகவும், செய்யும் வேலைகளுக்கான முயற்சியாகவும் இந்த நம்பிக்கையே ஒளிர்கிறது.

    நாம் எந்த நம்பிக்கையோடு வாழ்கிறோம் என்பதை அறிந்த பின் அந்த நம்பிக்கை நிழலில் வாழ்க்கைப் பயணத்தை தைரியமாகத் தொடரலாம்.

    வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இல்லாதவன், பந்தயத்தின் ஆரம்பத்திலேயே தோற்று விடுகிறான்.

    நம்பிக்கை இரு வகைப்படும். ஒன்று தெய்வ நம்பிக்கை. மற்றது, தன்னம்பிக்கை. இரண்டும் நம்மை, நாம் வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு காக்கும். நமக்கு உதவும். துணை வரும்.

    நம்பிக்கை ஒளியானது நிராசை, தாழ்வு மனப்பான்மை, குறைகளை விரட்டும் தன்மை கொண்டது. There is a light at the end of every tunnel .

    ” உலகம் உருண்டை” என நிரூபித்த கொலம்பஸ், ரேடியம் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையார் போன்றோர் எத்தனை எதிர்ப்புகள், சச்சரவுகளைத் தாண்டி, நம்பிக்கையோடு உழைத்து வெற்றி பெற்றார்கள்.

    மார்ட்டின் லூதர் கிங் கூறியதாவது: ” சிறிய ஏமாற்றங்களைத் தாங்கி கொள்ளத்தான் வேண்டும்; அதற்காக

    எல்லையற்ற நம்பிக்கையை இழக்க கூடாது” , என்பது தான்.

    ஹென்றி ஃபோர்டு, டெட்ராய்ட் நகரில் மெக்கானிக்காக 1879இல் வாழ்க்கையை துவங்கி, 1891இல் தாமஸ் ஆல்வா எடிசனின் கம்பெனியில் பொறியாளர் ஆனார். பின், 1893இல் என்ஜின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆட்டோமொபைல் தயாரிப்பில் இறங்கி  ஃபோர்டு கார்களைத் தயாரித்து, வெற்றி கண்டார்.[hide]

    “உற்சாகம் என்ற ஊக்க மருந்து நம் நம்பிக்கையை ஒளிரச் செய்து, வானத்து நட்சத்திரங்களை தாவிப் பிடிக்கச் செய்யும்”. அது கண்களில் மின்னல் போல் பிரகாசமாய், நடையில் ஒய்யாரமாய், துள்ளலாய், செயலாற்றுவதில் கவனமானபிடிப்பாய், எண்ணங்களில் சங்கல்பத்தின் தீவிரமாய், திட்டங்களைச்  சாதித்து  முன்னேறுவதில் சக்தியாய் விளங்குகிறது, என்று  ஃபோர்டு கூறுகிறார்.

    நம்பினார் என்றும் கெடுவதில்லை” – இது ஆன்றோர் வாக்கு. நம்பிக்கை, அதுவும் தன்னம்பிக்கை நம்மிடம் உள்ள தெய்வீக தன்மையை வெளிப்படுத்தும். எல்லையற்ற ஆற்றல் நம்முள் புதைந்து கிடக்கிறது. அதனை வெளிப்படுத்தாதபோது தோல்வி ஏற்படுகிறது. தன்னம்பிக்கையை இழக்கும் அந்த கணமே ஒருவன் அழிகின்றான். நாடும் அவ்வாறே.

    இது ஸ்வாமி விவேகானந்தர் கூறிய கருத்து.

    நம்பிக்கை என்பது ஒரு உந்து சக்தி. எல்லாமே தொலைந்து விட்ட போதும் ஒரு சிறு ஒளியைக் காட்டி முன்னேறச்செய்யும் துணையே ” நம்பிக்கை”.

    அந்த நம்பிக்கையை – தன்னம்பிக்கையை – நாம், அதாவது இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உயிர் மூச்சாக எண்ணிப் பேண வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    சமீபகாலமாக குழந்தைகள் கடத்தல் பற்றிய செய்திகள் வெளி வந்ததாகவே இருக்கிறது, அது உண்மைதானா? அவ்வாறு உண்மை இருப்பின் எவ்வாறு நாங்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

    பாரதி தேவி

    அரச்சலூர், ஈரோடு.

    திருவண்ணமலை மாவட்டம் போளுர் மாரியம்மன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தவர்களை  கடுமையாகத் தாக்கினார்கள் ஊர் மக்கள். இதில் 65 வயது ருக்மணி உயிரிழந்தார் , அவருடன் சென்ற நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இது  அந்தப் பகுதியில் வன்முறைக் கும்பல்கள் நடத்திய மூன்றாவது படுகொலை.

    குழந்தைகளை கடத்த முயற்சித்ததாக சந்தேகப்பட்டு தாக்குதல் நடத்தியது இங்கு மட்டுமல்ல; கர்நாடகவில் ஒருவரும் தெலுங்கானாவில் மூவரும் ஆந்திராவில் இருவரும் இதே நேரத்தில் படுகொலை செய்யபட்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் மட்டும்  90 பேர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது. ஆனால் இறந்தவர்கள், குழந்தை கடந்துபவர்கள் அல்லர். அவர்கள் அப்பாவிகள், சிலர் பிச்சைகாரர்கள். சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் நகரில்  இறந்தவர் ஒரு அரவாணி,  அவர் ரம்சான் பண்டிகையையொட்டி பிச்சை எடுக்க வந்தவர்.

    அனைத்திற்கும் காரணம் வதந்தி. தீயசக்திகள் வாய் மொழியாகப் பரப்பி வந்த வதந்தி, இப்போது  உலகெங்கும்; வாட்ஸ்ஆப்பில் நெடிபொழுதில்  பரப்பப்படுகிறது. எதையும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரப்பழகாத மக்கள் அதிகம் வாழும் நம்நாட்டில் சமூக ஊடகங்கள் பெரிய ஆபத்தானதாக மாறிவிட்டன. சற்றும் உண்மையில்லாத அந்தக் குழந்தை கடத்தல் வீடியோ அறிமுகமாகி மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் பீதியடங்கவில்லை என்பதிலிருந்து மக்களின் அறியாமையும், பீதியைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை என்பதும் நன்றாகப் புரிகிறது.

    எந்த தவறும் செய்யாத அப்பாவி மக்களை தாக்கிக் கொலை செய்தவர்கள் கொடிய குற்றவாளிகள் அல்ல. அவர்கள் அனைவரும் அந்தப் பகுதி பொது மக்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் போது ஒரு சாதாரண குடிமக்கள் ;   வன்முறை கும்பலில் இருக்கும் போது கொலை வெறியர்கள். இப்படி பொதுமக்கள் ஏன் மிருகத்தனமாக நடந்து கொண்டார்கள்? மிருகத்தனமான என்ற வார்த்தையைப் பயன்டுத்துவது கூட பிழை என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், மிருகங்கள் தேவையில்லாமல் ஒன்று கூடி சக மிருகத்தைத் தாக்கி காயப்படுத்துவது இல்லை. இது மனிதர்கள் மட்டுமே செய்யும் இழிவான செயல் என்பது தான் உண்மை.

    கூட்டம், கும்பல் , ஆர்ப்பாட்ட கும்பல் , வன்முறைக் கும்பல்   என்று பல வித மக்கள் கூட்டங்கள்  பற்றி 1900  ஆண்டிலிருந்து  ஆய்வுகள்  பல நடந்துள்ளது. உலக புகழ்வாய்ந்த அறிஞர் சிக்மன் பிராய்டும் பல ஆய்வுகள் நடத்தியுள்ளார். உளவியல் அறிஞர் குஸ்தவ் ல போன்  என்பவர்  The crowd – A study of the  Popular  Mind  என்ற  நூலில்  கும்பலின்  நடந்ததைகளை விரிவாக சிந்தரிக்கிறார் .யாராக இருந்தாலும்  எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் , ஒருவர்  ஒரு ஆர்ப்பாட்ட கும்பலில் அங்கம்மாகி விட்டார் என்றால்  அவரது செயல்களை அவரது மனது கட்டுப்படுத்தாது, அந்தக் கும்பலில் ஒட்டு மொத்த மனதுதான் கட்டுப்படுத்தும்  என்று கூறியுள்ளார். வன்முறை கும்பலில் பல தலைகள் இருக்கும் ஆனால் மூளை இருக்காது.

    சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுமியைப் புலி அடித்துக் கொன்றுவிட்டது. அந்த ஊர் சாமியார்தான் இரவில் புலியாக உருவம் மாறி தனது இரத்த வேட்கையைத் தீர்த்துக்கொள்கிறான் என்று முடிவு செய்து அந்த சாமியார் குடியிருந்த கூரை வீட்டைப் பூட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரோடு எரித்துக்கொல்லும் தருவாயில் மாவட்ட கலெக்டர் திரு. பிலிப்ஸ் மேன்சன் என்பவர், அவ்வழியாக வந்தார். செய்தியைச் கேள்விபட்ட அவர், இந்த சாமியார் ரத்த வெறி பிடித்தவராக இருக்கக்கூடும், இருந்தாலும், அவனுக்கு நாம் ஆதாரத்தோடு நிரூபித்து தண்டனை வழங்குவோம். ஒருவாரம் இவனை சிறை வைப்போம்,  அந்த நாட்களில் எவரும் புலியால் கடிபட்டு சாகவில்லை என்றால்,  இந்த சாமியார்தான் செய்திருப்பார் என்று முடிவு செய்யலாம் ,  என்று சொல்லி சமாதானப்டுத்தினர். இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பகுதியில் ஒரு பெண்ணை புலி அடித்து கொன்றது. அப்போது  மக்களைக்  கொல்வது சாமியார் அல்ல, புலிதான் என்பது பொதுமக்களுக்கு  புரிந்து விட்டது.

    நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் அதே கும்பல்  மனநிலை தான் இன்றும் நம் நாட்டில் நிலவுகின்றது. ஆதாரம் இருந்தால் மட்டும் எதையும் நம்பும் அறிவியல் மனநிலை இன்னும் வரவில்லை, அது படித்தவர்களிடமும் கூட வந்துவிடவில்லை.  இப்படிப்பட்ட கண்மூடிதனமான நம்பிக்கை இருப்பதால் தான் இன்று வெளிநாட்டில் வேலை தருகிறோம், உங்களுக்கு 50 கோடி லாட்டரி அடித்து விட்டது  என்ற குருஞ்செய்தியை நம்பி,மோசடி கும்பலிடம் பணத்தை விட்டுவிடுகிறார்கள் நம் நாட்டு மக்கள் .

    குழந்தைகள் கடத்துகிறார்கள் என்பது ஒரு பீதியை கிளப்பும் செய்திதான் என்பதை  மறுக்க முடியாது . குழந்தைகள் உள்ள பெற்றோர் இந்தச் செய்தியை கேட்டதும் பதறிப்போய் விடுவார்கள். பெற்றோர்கள் அவசர அவசரமாக வந்து வாசல் கதவை உடைத்து குழந்தைகளை பள்ளிகளிலிருந்து அழைத்துச் சென்ற பல நிகழ்சிகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். உயர் போலீஸ் அதிகாரி என்ற முறையில் அவர்களை சமாதானம் செய்யவும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள், குழந்தையைக் கையோடு அழைத்துச் சென்று விடுவார்கள்.[hide]

    வதந்திகள் பரப்பப்படும் நேரம் காவல் துறை அதிக விழிப்புடன்  செயல்படுதல் வேண்டும் . எப்படி இணையதளத்தில் வதந்தி பரப்பப்படுகிறதோ அதே பாணியில் வதந்தியை முறியடிக்கவும் வேண்டும் . உயர் அதிகாரிகள் நேரில் அது பொய் என்பதை வாட்ஸ்சப் மூலம் ஒவ்வொருவருக்கும் பலமுறை போய் சேரும்படி செய்ய வேண்டும். வதந்தி ஒரு கொள்ளை நோயைப்போல பரவும் , எனவே காவல் நிலைய அதிகாரிகள் ஊர் ஊராக, தெரு தெருவாக போய் அது வதந்தியில் உண்மை இல்லை, என்பதை தொடர்ந்து அறிவிக்க வேண்டும். பாராரியாகச் சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும், பிச்சைக்காரர்களையும் காப்பகத்தில் சேர்க்க வேண்டும். வதந்திகளால்  ஏற்படும் விபரீதங்களை தடுத்து நிறுத்துவதுதான் அறிவுடைமை ஆகும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும், அவர்கள் மீது  சாட்சியங்கள் சேகரிப்பதும், தண்டணை பெற்றுத்தருவதும் அரிய காரியங்கள் . மீறி தண்டனை வாங்கி தந்தாலும் பெரிய பலன் இருக்காது.

    குழந்தைகள் கடத்தும் சம்பவங்கள் இல்லவே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. 1996-1997 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு சிலர் குழந்தைகளை  கடத்தி ஒரு குழந்தைக் காப்பகத்தில் விற்று, அந்தக் குழந்தைகள் வெளிநாட்டார்கள் தந்து எடுத்த சம்பவம் ஒன்று நடந்தது. தெருவில் குழந்தையுடன் தாயும் தூங்கும் போது ஒரு கயவன் குழந்தைகளை அமைதியாகத் தூக்கிச்சென்று அதை அனாதை குழந்தை என்று விற்றுவிட்டான். அந்தக் குழந்தைகள் அயல் நாட்டில் இருப்பது பெற்றோர்களுக்கு சில ஆண்டுகள் கழித்து தெரிந்தது. பெற்றோர்கள்   வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு பல நாட்கள் நடந்தன.

    இப்படி அபூர்வமாக சில குழந்தைக் கடத்தல் நிகழ்வுகள் நடக்கக்கூடும். பெற்றோர்களும் உஷாராக இருக்கவும் வேண்டும். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் அப்படி ஒரு செய்தியை நம்பி ஆயுதங்களுடன் சுற்றித் திரிவது தேவையற்றது, ஆபத்தானது. அப்படியே ஒருவர்மீது  சந்தேகம் ஏற்பட்டால்  அவரை காவல் துறையில் ஒப்படைப்பது மட்டும் சரியாக இருக்கும். காவல் துறையினர் அதுபோன்ற நேரங்களில் தகுந்த நடவடிக்கை எடுத்து விடுவார்கள். அது தவிர்த்து,  அவரை கும்பலாக நின்று கொண்டு விசாரிப்பதும், சரமாரியாகத் தாக்குவதும், முறையற்றது. இது ஒரு காட்டுமிராண்டிதனமான செயல் கூட. ஒரு கூட்டம் வன்முறை கும்பலாக மாற அதிக நேரம் பிடிக்காது. அப்படிபட்ட வன்முறைக் கும்பல் ஒருவரை கொல்லவும் தயங்காது. எனவே அப்படிபட்ட கும்பலோடு சேர்ந்து கொள்வது   நல்லது அல்ல. அவர் அந்த கும்பல் செய்யும் அனைத்து வன்முறைக்கும் பொறுப்பு ஏற்க வேண்டியது வரும். கொலை குற்றத்தில் பங்கு எடுத்ததாகவும் வந்து விடும். வதந்திகளை நம்பக் கூடாது. சந்தேக நபரை விசாரிப்பதில் பொது மக்களுக்கு நிதானம் தேவை. என்னதான் நடந்தது என்று கூட தெரியமால் ஒருவரை ‘தர்மஅடி’ தாக்குதல் நடத்துவது அறிவீனமான செயலன்றி வேறில்லை.  [/hide]

    இந்த இதழை மேலும்

    விழிப்போடு இரு விண்ணைத் தொடு…

    C.பிரதீப்

    நிர்வாக இயக்குநர், ஜெயச்சந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ்

    நிர்வாக அறங்காவலர்,லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன்,

    கோவை

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற பொன் மொழிக்கு ஏற்றவாறு முதல் தலைமுறையினரின் வழிகாட்டுதலால் இரண்டாம் தலைமுறையினரான இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையைôய் வாழ்ந்து பல சாதனைகளைப் புரிந்து வருபவர்களில் இவரும் ஒருவர்.

    நம்பிக்கையோடு நடைபோடு நாளைய உலகம் உன் கையில் என்ற தாரக மந்திரத்தை நாளெல்லம் நினைத்து, அதன் வழி உழைத்து, இன்று உயர்ந்த சாதனையாளர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையல்ல.

    தோல்வி வரும் போது அதைப் படிக்கற்கலாக மாற்றுங்கள், அதுவே வெற்றி பெரும் பொழுது அதை ஊக்கப்படுத்தும் கருவியாகக் கொண்டு மேலும் வளருங்கள் என்னும் தன்னம்பிக்கை வரிகளுக்குச் சொந்தகாரர்.

    உன்னதமான பல சேவைகளை செய்து, கூட்டாக, குழுக்களாக ஒன்றிணைந்து இயற்கையோடு இணைந்து வாழ மரங்கள் நட்டும், பல மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் சுய வேலை வாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைத்திருக்கும் சாதனையாளர்.

    இவரின் மிகப்பெரிய பலம் சகோதரத்துவம் சார்ந்த ஒற்றுமை, முதல் தலை முறையினரின் வழிகாட்டுதலை பேணுதல், சிறந்த மேலாண்மைத்துவம் மிக்கவர், அனைவரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடியவர், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மிக்கவர் இப்படி பன்முகம் திறமைக் கொண்ட ஜெயச்சந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ் நிர்வாக இயக்குநர், லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் அறங்காவலர் C.பிரதீப் அவர்களின் நேர்முகத்திலிருந்து இனி பயணிப்போம்.

    கே : உங்களின்கூட்டுக் குடும்பத்தைப் பற்றச் சொல்லுங்கள்?

    எங்களுடைய பூர்வீகம் என்று பார்த்தால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். இங்குதான் என் தந்தைப் பிறந்தார். என் தந்தையின் பெயர் திரு. பி. சந்திரசேகர், தயார் திருமதி. ஜெயலட்சுமி, பெரியப்பா பி. அன்பழகன், சித்தப்பா பி. ராமலிங்கம், மற்றும் பி. ஆறுமுகம். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் என்னுடைய தாத்தா வெங்காய வியபாரம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இவ்வியபாரம் எப்பொழுதும் ஒரே விலை நிலையாக இருக்காது. இதனால் இத்தொழில் தொய்வு அடைந்தது.

    சில ஆண்டுகளிலேயே என்னுடைய தாத்தா மரணம் அடைந்து விட்டார். இதனால் என் தந்தைக்கும் அவர் உடன்பிறந்தவர்களுக்கும் குடும்பத்தின் மீது பொறுப்பு கூடியது. இதனால் அவர்கள் வேலைக்குச் செல்ல முனைந்தார்கள். அப்போது அவர்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் இரண்டு ரூபாய் தான். என்னுடைய தந்தை சொல்வார் நான் திருமணத்தின் போது தான் கால்சட்டையே(பேண்ட்) அணிந்தேன் என்று, அந்தளவிற்கு அப்போது வறுமையின் பிடியில் இருந்தார்கள். அதன் பின்னர் ஒரு ஸ்கிராப் வியபாரிடம் வேலை செய்து வந்தார்கள் சிறிது காலத்தில் அவர்கள் ஸ்கிராப் பொருளை வாங்கி விற்பனை செய்தார்கள். அதன் பிறகு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இப்படி பல சின்னவடிவில் கடைகளைத்திறந்தார்கள். பல சிக்கல்களுக்கும், துன்பத்திற்கு நடுவிலும் எப்போதும் எல்லோர் இடத்திலும் அன்பை மட்டுமே போதித்துக் கொண்டோம். எங்களுக்குள் அவ்வபோது கூச்சல் குழப்பம் இருந்தாலும், அன்பும் அரவணைப்பும், எங்களை ஒற்றுமையாகவே வைத்திருந்தது. இன்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்றளவும் நாங்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம். அந்தக்குடும்பத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

    கே : நீங்கள் படித்தது பயின்றது பற்றிச்சொல்லுங்கள்?

    எங்களுடைய பெற்றோர் பட்ட கஷ்டங்களை நாங்கள் படக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். எங்களின் வாழ்க்கையில் மிகுந்த அக்கரை எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் தான் படிப்பதற்கு வசதியில்லாமல் படிக்கமுடியவில்லை. நம்முடைய பிள்ளைகள் நன்றாகப்படிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் கோவையிலுள்ள லெசியு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பி. எஸ். ஜி. டெக் கல்லூரியில் பேசன்ஸ் டிசைன்ஸ் படிப்பையும் படித்தேன்.

     ஆரம்பத்தில் நான் சராசரிக்கும் கீழ் படிக்கும் மாணவன் தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போது பல தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். இதனால் என்னை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினார்கள், அந்தப் பார்வை தான் என்னை சிந்திக்க வைத்தது. நாமும் நன்றாகப் படித்து சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஆர்வமும் எனக்குள் வந்தது. பிறகு தான் பாடத்திட்டத்தை விட எனக்கு என் குடும்பத்திலும் ஆசிரியர் இடத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் மனதிற்குள் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பின்னர் தான் சுயமாய் முடிவெடுக்க ஆரம்பித்தேன். பாடத்திட்டத்தை விட எனக்கு கிடைத்த அனுபவம், சூழ்நிலைகள் போன்றவை தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது. இதற்கு என்பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் என் சுற்றத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.      

    கே : பேசன்ஸ் டிசைன் முடித்த நீங்கள் தொழிலில் ஆர்வம் வந்தது பற்றி?

    நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் முன்னாள் மாணவர்களுக்கு விடை நல்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இதனால் என்னுடன் பயிலும் சக மாணவர்களிடம் பணம் வசூலித்து அவர்களுக்கு விழா எடுக்க திட்டம் வைத்திருந்தோம். அதன் படி அனைவரும் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தில் அவர்களுக்கு உணவு பரிமாறினோம். மீதம் பணம் மிஞ்சியது. அந்தப்பணத்தை என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது தான் தையல் மிஷின் வாங்கி வடவள்ளியில் உள்ள உதவும் கரங்களுக்குக் கொடுத்தோம். அப்போது என் மனதில் ஒரு புத்துணர்ச்சித் தோன்றியது.

    அதன் படி பழைய இரண்டு மிஷன்களை வாங்கி அவற்றை சில வேலைபாடுகள் செய்து, தேவையான இருவர்களுக்கு கொடுத்தோம். ஆனால் வாங்கிய விலை குறைவு அவற்றை வேலைகள் செய்து கொடுக்கும் போது அந்த மிஷனில் இலாபம் கிடைப்பதை உணர முடிந்தது. ஒரு மிஷினுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை இலாபம் பார்த்தேன். மார்க்கெட்டில்  அதிக இலாபம் கிடைத்ததை என்னால் உணர முடிந்தது. இப்படித்தான் தொழிலில் வர முனைந்தேன்.

    கே: குடும்பத் தொழிலில்  இணைந்தது பற்றிச் சொல்லுங்கள்?   

    நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தேர்வு விடுமுறை எனக்குக் கிடைத்தது, இதனால் இவ்விடுமுறையை சிறந்த முறையிலும், தேவையான வழியில் செலவிட வேண்டும் என்று நினைத்து முதன் முதலில் குடும்பத் தொழிலுக்கு வந்தேன். தினந்தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொண்டே இருந்தேன். அடுத்த நாள் அடுத்த நாள் ஆர்வம் பெருகிக்கொண்டே போனது. சென்ற சில நாட்களிலேயே எனக்கு மிகப் பெரிய பொறுப்பை நம்பிக்கொடுத்தார்கள் அதையும் சிறப்பாக கையாண்டேன். எங்கள் குடும்பத்தைப் பொறுத்த வரை எல்லா இடத்திலும் எல்லாப் பணியிலும் பொறுப்புடன் கூடிய சுதந்திரம் கொடுத்தார்கள். இந்த சுதந்திரத்தை நான் முறையாகப் பயன்படுத்திக்  கொண்டேன். மூன்று ஆண்டு கல்லூரிப்படிப்பையும், எம். பி. ஏ பட்டப்படிப்பையும் படித்துக் கொண்டு தொழிலையும் பார்த்து வந்தேன்.[hide]

    கம்பெனி பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டேன். அப்போது கம்பெனி பெரிதும் கடனில் இருந்தது. சில முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஆனது. இதை என்னால் உணர முடிந்தது. அவர்களும் எங்களின் வருகையை எதிர்ப்பார்ப்பதை உணர முடிந்தது. இதனால் தான் இந்நிறுவனத்தில் நான் இணைந்தேன். சிறப்புடன் செய்ய முனைந்தேன்.

    கே: நீங்கள் இணைந்த பின் இந்நிறுவனத்தின் வளர்ச்சியின் பாதைக்கு எப்படி கொண்டு சென்றீர்கள்?

    நான் இந்நிறுவனத்தில் இணைந்ததே இதை ஒரு வளர்ச்சிப் பாதையை நோக்கி எப்படியும் கொண்டு சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் மட்டுமே தான். இந்த நிறுவனம் ஒரு தனிமனிதனைச் சார்ந்தோ, அல்லது குடும்பம் சார்ந்தோ இல்லாமல் இதில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் சமூகம் சார்ந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    வெளிநாட்டில் படித்து முடித்த என்னுடைய சகோதரர்கள் ஐவரும் எங்களோடு எங்கள் நிறுவனத்திலேயே இணைந்து விட்டார்கள். இவர்கள் இணைந்தது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியது.

    எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை எப்போதும் எங்களை கட்டுப்படுத்தியதே இல்லை. நாங்கள் எது செய்தாலும் சிறப்பாகத்தான் இருக்கும் என்று நம்பினார்கள். இதனால் நாங்கள் வளர்ச்சி மற்றும் புதிய முயற்சி சார்ந்த  செயல்களை செய்வதற்கு ஒரு தடையில்லாமல் இருந்தது.

    புதிய தொழிலும், இருக்கின்ற தொழிலையும் விரிவுப்படுத்தினோம். இதில் பேட்டரி தயாரித்தல், பிளாஸ்டிக் பொருட்கள் மீட்டுருவாக்கம் செய்தல், மெட்டல் அலாய், மெட்டல் மறுசுழற்சி செய்தல், இ வேஸ்ட் போன்ற தொழில்களை செய்தோம்.

    2006 ஆம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து 100 பேர் பணியாற்றினார்கள், ஆனால் இப்போது 1000 பேர் எங்களிடம் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு எல்லாம் காரணம் எங்கள் குடும்பத்தின் ஒற்றுûயும் பல மனிதர்களின் உழைப்பும் எங்களுக்கு கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

    வளர்ச்சி என்பது எப்படியிருக்க வேண்டும் என்றால் தானும் உயர்ந்து தன் குடும்பமும் உயர்ந்து, தன்னை சார்ந்தவர்களும் உயர்ந்து இந்த சமூகமும் உயர வேண்டும் அது தான் சிறந்த வளர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    கே: ஒரு பொருளை சொந்தமாகத் தயாரித்து அதை சந்தைப்படுத்துவதிலுள்ள சவால்கள் என்னென்ன?

    ஒரு பொருளைத் தயாரித்து அதை விற்பனை செய்வது என்பது என்னைப் பொறுத்த வரை சரியான முடிவல்ல. நுகர்வோரின் தேவையை அறித்து அவற்றை நாம் கொடுக்க வேண்டும், அப்போது தான் நம்மால் வெற்றி பெற முடியும்.

    முதலில் என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தேவைக்கு ஏற்றார் போல் கடினமான உழைப்ûப் போட்டு, அவர் எவ்வாறு எண்ணினாரோ அப்படி ஒரு பொருளைத் தயாரித்து அவர் கையில் கொடுக்கும் பொழுது அவருக்கும் மனநிம்மதி தயாரித்து கொடுத்த நமக்கும் சந்தோஷம் ஏற்படும்.  இப்படி தான் தயாரித்த பொருளை சந்தைப் படுத்த வேண்டும்.

    சரியான பொருளை, சரியான இடத்தில், சரியான நேரத்தில் எவர் ஒருவர் முறையாக வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்துகிறார்களோ அவர்களே தொழிலில் வெற்றி பெற்றவர்களாக மாறுகிறார்கள்.

    கே: ஒரு நிர்வாகத்தின் மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?

    நிறுவனம் மட்டுமல்ல எந்த ஒரு இடத்திலும் சரியாகவும், முறையாகவும் ஒரு செயல் நடக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு மேலாண்மை மிக்க தலைவர் என்பவர் மிகவும் முக்கியம்.

    ஒரு நிறுவனம் வளர்ச்சியான பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அங்கு நல்ல முதலாளி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஆனால் ஒரு நல்ல தலைவன் இருக்க வேண்டும்.

    நிறுவனத்தை வழிநடத்த பணம், பொருள், இயந்திரம், தொழிற்நுட்ப கருவிகள் தான் மூலக்கூறு என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவற்றை அனைத்தையும் இயக்குவது மனிதர்கள் தான் என்பதை  ஒரு நிறுவனத்தின் தலைவர் புரிந்து  கொள்ள வேண்டும்.

    ஆரம்பத்தில் ஒரு நல்ல திறமைமிக்க பணியாளர்கள்  கொண்ட குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக்குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும். நிறுவனத்தின் இலக்கு என்ன, அந்த இலக்கை அடைய நாம் எவ்வாறு தயார் படுத்த வேண்டும் போன்ற நன்னெறிகளை ஆரோக்கியம் சார்ந்த கலாச்சாரத்தைப் புரிய வைக்க வேண்டும்.

    பணம் இருக்கும் அனைவரிடத்திலும் மகிழ்ச்சி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் மகிழ்ச்சியும், அன்பும் இருக்கும் இடத்தில் செல்வம் தானாக வந்து சேரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    நிறுவனம் சார்ந்த ஒவ்வொருவரும் வளர வேண்டும், அந்த வளர்ச்சி தான் நிர்வாகத்தை உயர்த்தும், வாங்குபவர், விற்பவர், இவருக்கும் மனமகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்க வேண்டும் என்பதை புரிந்து செயல் பட வேண்டும்.

    கே : லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் தொடங்கியது பற்றி?

    அன்பை வாரி வாரிப்  பொழியும் நமது அன்னையைப் போல, இயற்கை அன்னை நமக்கு வாரி வழங்கிய இயற்கை வளங்கள் இம்மண்ணில் ஏராளம். அன்பு மயமான இவ்வுலகிற்கு உள்ளேயும் வெளியேயும் நாம் நன்றியுணர்வோடு இருப்போம். இந்த புரிதலுக்காக தான் மார்ச் 11 ஆம் நாள் 2017 ஆண்டு லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் துவங்கப்பட்டது.

    நம் வாழ்க்கை எண்ணம், சொல், செயல்கள் போன்றவற்றால் ஆனது. நம் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ஏதேனும் ஒரு விதத்தில் நன்றிகளை நம் மனதில் ஊன்றி, அதை பிறர் மனதில் மலர செய்ய வேண்டும்.

    நோக்கம் சரியாக இருந்தால் இலக்கு எளிதாக இருக்கும், நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கையைப் பேணிகாத்து, எதிர்கால நம் சந்ததியர்களுக்கு ஒரு நல்ல இயற்கை வளம் மிக்க சமுதாயமாகக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். என்ற உயரிய நோக்கத்தால் தொடங்கியது தான் இந்த அமைப்பு.

    கே : மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்புத்திட்டம் ஏற்படுத்தியது பற்றி?

    உலகத்தில் மானிடராய் பிறக்கும் அனைவருமே ஏதேனும் ஒரு விதத்தில் திறமையானவர்கள். அவர்கள் திறமை அங்கீகாரிக்கப்படாமல் இருக்கலாம், இல்லை என்றால் அவர்களே தங்களின் திறமையை வெளிப்படுத்தாமல் இருக்கலாமேதவிர திறமையற்றவர்கள் என்று இங்கு யாரும் இல்லை.

    சராசரியாக உள்ள மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைத்துவிடும். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படி உடனே வேலை கிடைத்துவிடுவது இல்லை. ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்த்து பரிதாபம் பட வேண்டுமென்றால் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக உதவி செய்ய முன்வருவதில்லை .

    நிறைய வீட்டில் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கி வைக்கும் நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை வாங்கித்தருவதை விட சொந்தமாக சுயத் தொழிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினோம்.

    மொத்தம் 60 வகையான சுய வேலைகள் இருக்கிறது. பெட்டிக்டை வைத்துக்கொடுப்பது, தையல் இயந்திரம் வாங்கிக் கொடுப்பது, ஆடு மாடு வாங்கிக் கொடுப்பது, நாட்டு மாட்டில் பால் வியபாரம் செய்ய வைப்பது, ஜெராக்ஸ் கடை,  சுயத்தொழில் புரிவது இப்படி நிறைய சுய வேலைவாய்ப்புகள் செய்திருக்கிறோம் இதுவரை 530 பேர் இதன் மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள். இதில் 93% பேர் மாதம் 8ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்.

    நாங்கள் ஒரு மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தவுடன் உணர்ச்சி வசப்பட்டோ, பரிதாபப்பட்டோ அவர்களுக்கு தொழிலைக் கொடுப்பதில்லை, அவர்களைப் பற்றி விபரம் அறிந்து, நேர்முகம் எடுத்து பிறகு தான் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

    இவரால் இது செய்ய முடியுமா? உறவினர்கள் உதவி இருக்கிறதா என்று எல்லாம் பார்த்த பின்னரே அவர்களுக்குத் தொழிலை ஏற்படுத்தி இருக்கிறோம். கொடுக்கும் வேலையை சென்மையாக செய்யும் பொழுது தான் நமக்கு ஆனந்தமாக இருக்கும்.

    இவர்களுக்கு மூன்று வேலை உணவு கிடைத்தால் மட்டும் அவர்கள் வாழ்ந்திட முடியாது, அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அறிந்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவைப்பதே எங்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

    கே: மரம் நடுவதற்கான காரணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

    நான் எப்போதும் சாலை ஓரத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்பது வழக்கம். அப்போது அருகில் இருக்கும் மரத்தில் பறவைகள் வந்து தங்கும். அதைப்பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். யாரோ ஒருவர் வைத்த மரம் இன்று இத்தனை பறவைகளுக்கு வீடாக இருக்கிறதே என்று தோன்றியது. அதுமட்டுமின்றி மரத்தின் அடியில் நிறைய பேர் அமர்ந்து ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். மரம் என்பது ஐம்பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

    இதனால் நாமும் நிறைய மரம் நடவேண்டும் என்ற எண்ணமும் விழிப்புணர்வும் தோன்றியது. இயற்கை வளங்கள் அனைத்துமே கொடுக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு பொருளும் தொடர் சங்கிலியாகக் கொடுத்துக்  கொண்டே இருக்கும். இயற்கையே போல் மனிதர்கள் வாழ்ந்தால் மட்டும் அவர் முழுமைத்தன்மை பெறுகிறார்.

    தற்போது கோவை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் மரத்தை நட்டுக் கொடுத்திருக்கிறோம். இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளிலும் அவ்வாறான மரத்தை நடத்திட்டம் வகுத்துள்ளோம்.  இதுவரை 25,000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    நீங்கள் எந்த வேலை செய்தாலும் அது பலரால் பார்க்கப்படுகிறது, ஈர்க்கப்படுகிறது, இதனால் எதையும் மனமுவந்து செய்தல் வேண்டும்.

    எந்த வேலைகளையும் யார்  செய்தார்கள் என்று பார்ப்பதை விட எப்படி செய்தார்கள் என்று தான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இதனால் எது செய்ய வேண்டும் என்றாலும் அதில் மிகவும் அக்கரையோடும் முனைப்போடும் செய்தோம்.

    கே : வளரும் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?

    உடலுக்கும், மனதுக்கும், உணர்வுக்கும், ஆத்மாவுக்கும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். தன்னை நன்றாகப் பார்ப்பவர்கள் தான் தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.

    எந்த ஒரு சூழ்நிலையையும் முழுமையாக ஏற்று எவர் ஒருவர் வாழ்வில் எதிர்நீச்சல் போடுகிறார்களோ, அவர்களே வாழ்க்கையில் வெற்றியாளராகவும், தலைவராகவும் வருவார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை, முழுமையாக உங்களுக்கு பிடித்த துறையாக இருத்திட வேண்டும்.

    புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் துறையில் உங்களை முழுமையாகப் பிடித்த துறையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

    தனது பெற்றோர்கள், சுற்றத்தார்கள், குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் இவர்களிடம் முழுமகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்.

    கே : நன்றியுணர்வு (லெட்ஸ் தேங்ஸ்) என்று பெயரிட காரணம்?

    உணர்வுகளின் சிறந்த உணர்வு தான் அன்பு. அந்த அன்பின் உன்னத தன்மை தான் நன்றியுணர்வு. இந்த நன்றியுணர்வு முழுமைப் பெற்றாலே கொடுக்கும்தன்மை தானாக வந்து விடும். ஆதலால் ஒவ்வொருவருக்குள் நன்றியுணர்வு இருத்தல் வேண்டும்.

    நமக்கு மனநிறைவும், நிம்மதியும் வேண்டுமெனில். நம்முடைய மனிதில் நன்றியுணர்வை அதிகரிக்க வேண்டும். இந்த நன்றியுணர்வு நம்மையும் நமது சமுதாயத்தையும் நல்வழிப்படுத்தும்.

    நன்றி எனும் ஒரு வார்த்தை நம் வாழ்வையும் இவ்வுலகத்தையும் அர்த்தமுடையதாக்கும் நாம் பருகும் ஒரு குவளை நீரில் ஒட்டுமொத்த இயற்கையின் பங்களிப்பு இருப்பதை நம்மால் மறுக்க முடியுமா? நாம் உண்ண, உடுத்த, உறங்க நல்ல சௌரியங்களுடன் வாழ நம்மை சுற்றி பல பேரும், இயற்கையும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    இயற்கை உணவாக நீராக, நெருப்பாக, திடமாக நாம் வாழ்வதற்கான காரணிகளை சரிவிகித்தில் வழங்கி நம்மையெல்லாம் அரவணைத்துக் கொண்டிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இவற்றிக்கெல்லாம் நம் மறுபதிலிடுதல் என்ன? என்றால் அவற்றிக்கு நாம் நன்றியுணர்வோடு இருப்பது சிறந்தது.

    கே: எதிர்காலத்திட்டம் பற்றி?

    உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உறுதியாய் நிற்க வேண்டும். நாங்கள் இப்போதும் செய்யும் தொழிலை மேலும் உயர்வடைய வைக்க வேண்டும். நிறைய பேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் வசந்தத்தைக் கொடுக்க வேண்டும்.

    இந்த பவுண்டேசன் மூலம் நிறை நன்மைகள் செய்ய வேண்டும். ஊனமுற்றோர்களை முடித்த அளவிற்கு அவர்களின் சொந்த உழைப்பில் வாழ வழிவகைச் செய்ய வேண்டும்.

    இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த திட்டங்களை நடைமுறை படுத்த வேண்டும், நிறைய மரங்களை நடுதல் வேண்டும். நாட்டை பசுமையாகப் பாதுகாக்க வேண்டும்.

    ஒருவரின் எண்ணமே சொல்லாகும், சொல்லே செயலாகும், செயலே வாழ்க்கையாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி இருந்தது, ஊரிலுள்ள பல்வேறு புகழ்பெற்ற மருத்துவர்களை தனது வீட்டிற்கே வரவழைத்து சிகிச்சைப் பார்த்து வந்தார், ஆனாலும் வலி குறையவே இல்லை.

    ஒருநாள் அந்த செல்வந்தர் வசித்த ஊருக்கு சன்னியாசி ஒருவர் வந்தார். செல்வந்தரின் பிரச்சனையை அறிந்து கொண்ட அவர், அவருக்கு மருத்துவம் பார்க்க அனுமதி கேட்டார். பின்னர் அந்த செல்வந்தருக்கு மருத்துவ சோதனை செய்தார். இப்போது அவரின் வலிக்கான காரணத்தைச் சொன்னார்.

    உங்கள் கண்ணில் இருக்கும் நோய் தான் இந்த வலிக்கு காரணம். இந்த நோயைக் கட்டுப்படுத்திவிட்டால் உங்கள் வலி குணமாகிவிடும் என்று கூறினார். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் செல்வந்தர்.

    பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை, இனி நீங்கள் பார்க்கும் அத்துனை பொருட்களும் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என்று அறிவுரைக் கூறி கிளம்பினார். இந்த சன்னியாசியின் அறிவுரைப்படி அரண்மனை முழுவதும் பச்சை நிறத்தில் மாற்றினார் செல்வந்தர்.

    தான் வெளியில் செல்லும் பொழுதும் கூட நான் பார்க்கும் அத்துனை பொருட்களும் ஆட்களும் பச்சை நிறத்தில் தெரிய வேண்டும் என்பதால் எப்போதும் பச்சை நிற வண்ணம் பூசுபவர்களை உடனே வைத்திருந்தார். செல்வந்தரைப் பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மேல் பச்சை வண்ணம் பூசப்பட்ட பிறகு தான் அவரைப் பார்க்கவே அனுமதிப்பார்கள்.

    அப்படி இருந்த சமயத்தில் தான் அந்த சன்னியாசி செல்வந்தரைப் பார்க்க வந்தார். வாசலிலே வண்ணம் பூசுபவர்கள், செல்வந்தர் இட்ட கட்டளையைச் சொல்லி அவர் மேலேயும் பூசினார்கள். பச்சை நிறத்துடன் செல்வந்தரைச் சந்தித்த சன்னயாசி. எதற்கு நீங்கள் இப்படி இவ்வளவு செலவிட்டு வண்ணத்தைப் பூசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார், உடனே செல்வந்தர் நீங்கள் தானே இனி பார்க்கும் அனைத்தும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் என்றார் செல்வந்தர். அதற்கு அந்த சன்னியாசி இவ்வளவு செலவு செய்தற்கு ஒரு பச்சை நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டால் அனைத்தும் பச்சையாகவே இருக்குமே என்று சொன்னார், ஒரு கணம் அதிர்ந்தார் அந்த செல்வந்தர்.

    இந்த செல்வந்தரைப் போல தன்னையும் தன் குணத்தையும் மாற்றிக் கொள்வதற்கு பதில், தன்னை சுற்றியுள்ளவர்களை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள், அவர்கள் மாறி விட்டால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். நம்மை நாமே திருத்திக்  கொள்ள வேண்டும், அதன் மூலம் நல்ல குணங்களை வளர்த்து கொண்டு வாழ வேண்டும்.

    எண்ணியதை செய்யுங்கள்

    கோவை. சரவண பிரகாஷ்

    என்றாவது கொலை  செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு கொலை   செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.

    தினம் தினம் கண்ணனுக்குத் தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம். உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்குத் தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.

    அதிசயம் என்னவென்றால் இந்தச் செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை, மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம். அந்த “ஒருவனை” அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

    மனிதா! நீ எச்சில் செய்த தேநீர் ஆறி போவதற்குள் உன்னோடு சில சூடான விவாதங்கள் செய்ய எத்தனிக்கிறேன்.

    உலக வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பவை சொல்லப்படாத சூத்திரங்களக இருக்கும் பொழுது, வரலாற்று புத்தகத்தில் வெகுசிலரே இடம் பிடிக்க முடிகிறது. இங்கே சிலரின்  கனவுகள் மட்டுமே நிஜமாகிறது, பல கனவுகள் நினைவாகின்றன!

    அச்சம், நாணம், தோல்வி, குடும்ப சூழல்,ச முதாயம் இவற்றுள் ஒன்று மேலே குறிப்பிட்டதற்கு நிச்சயக்கரணமாக இருக்கலாம்.

    எப்போது எங்கயோ தோற்று விட்டோம் என்பதற்காக இப்போது முகம் தெரியாத தோல்விகளிடம் தினம் தினம் தோற்று கொண்டு பத்தோடு பதினொன்றாக வாழ்வதில் அர்த்தம் என்ன?

    இந்த உலக வட்டத்தையே வெற்றி கொள்ள பிறந்தவர்கள் நீங்கள், குறிகிய வட்டத்திற்குள் உங்களை நீங்களே ஏன் சுருக்கி கொண்டீர்கள்?

    வரலாறு உங்கள்  பெயரை குறிப்பெடுக்க காத்திருக்கிறது, ஆனால் நீங்கள் இன்னும் கவலைகளிடம் மண்டியிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம்.

    பூமாலைகள் கிடைப்பதற்கு தாமதமாகிற வேளையில்  கல்லாலான மாலையை ஏற்றுக்கொளவது  எப்படி சரியாகும்?

    நாளைய உலகின் வழிகாட்டி நீ,வலுவிழந்து கிடக்கிறாய்!

    போராளி நீ,போருக்கு பயந்து பொய் கிடக்கிறாய் ?

    சூரியனே !உன்னை பாய் என்று உலகம் சொன்னதால் நீ சுருண்டு போய் கிடக்கிறாய்!

    உலகத்தின் பழிச்சொல்லுக்கு செவிசாய்த்து,உன்  கனவுகளை மறுதலித்து  போயிருக்கிறாய்!

    உன்னை எழ விடமால் சமுதாயம் உன் கால்களை முடமாகியதால்,நான்கு சுவற்றுக்குள் நீ நலிவடைந்து போயிருக்கிறாய்!

    இப்போதைய நீ,நீ இல்லை .அது உலகத்தின் சாதாரண மனித பிம்பம். நீ ஆள்வதற்காக படைக்க பட்டவன், அழுவதற்காக  அல்ல..!

    உனக்குள் இந்த பிரபஞ்சமே அடங்கும், ஒற்றை உலகத்திற்கு உன்னை மொத்த பலம் எப்படி தெரியும்…!

    குருட்டு உலகத்தின் நியாயமில்லா வார்த்தைகளுக்கு நீ செவிடனாகா மாறிருக்கவேண்டும்!

    இனியேனும் துயில் களை, இயற்கையின் எந்த படைப்பும் வீணாக போவதில்லை, நீ மட்டும் அதற்கு விதிவிலக்கா? கைவிட்ட கனவுகளை மறுமணம் செய்து கொள். காலம் ஒருநாள் உன் பெயரை உச்சரிக்கும்!

    இந்த இயற்கை   உனக்கென அழகிய உலகத்தினை படைத்திருக்கிறது, நீ தான் உன் கண்களை மூடி கொண்டிருக்கிறாய்! இமைகளையும், இதயத்தையும் ஒருசேர திற, வசந்தங்களின் வாசல்கள் உங்களுக்காக திறக்கப்படும்!

    அன்று தேவதைகள் உங்கள்   மேல் பூமாரி பொலிந்து புதிய உலகத்திற்கு வரவேற்கும். அதற்காக உங்களிடம் நீங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். கவலை, தாழ்வுமனப்பான்மை, துரோகம், காயம், கண்ணீர் ஆகியவற்றால் நீங்கள் கட்டுண்டு கிடக்கிறீர்கள்.

    நம்பிக்கையின்மை என்ற சாத்தான் உங்களுள் சென்று உங்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சாத்தானை உங்கள் மனபலத்தால் கொன்றுவிடுங்கள். அவனை கொலை செய்து விடுங்கள். பிறகு உண்மையான நீங்கள் உங்களிடமிருந்து தோன்றுவீர்கள். அந்த நொடியிலிருந்து வாழ்க்கை அர்த்தப்படும்….!