– 2018 – August | தன்னம்பிக்கை

Home » 2018 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    இலக்கை எட்டு… இமயம் தொட்டு.!

    தடுமாறும் போதெல்லாம்

    ஒரு போதும் தடமாறாதே…!

    தடுக்கி விழுந்தாலும் துடித்து எழுந்திடு…

    துணிவுடன் பயணம் தொடங்கிடு…

    துன்பங்கள் உன்னைத் துரத்தினாலும்

    துயரங்கள் உன்னைப் போட்டு வதைத்தாலும்

    துவளாதே மனம் தளராதே…

    உன் இலக்கு இமயத்தின் உச்சி

    அங்கு செல்ல பாதையும் இல்லை

    பயணத்தில் உன்னுடன் துணையுமில்லை…

    எடுத்து வைக்கும் முதல் அடியே

    உன் கால்கள் முற்புதரில் சிக்கிக் கொள்ளலாம்

    பனிப்புயலிலும் மாட்டிக் கொள்ளலாம்

    நிற்காதே நிதானமும்  கொள்ளாதே…

    இதற்கு என்று புதிய பாதையை உருவாக்கு;

    அதை உனதாக்கு பயணத்திற்கு எளிதாக்கு;

    பின் வருபவர்களுக்கு வழியாக்கு…

    எட்டும் தொலைவை எட்ட

    நாட்கள் பல ஆகலாம்

    தூக்கங்களும் தொலையலாம்….

    களைப்பில் கால்கள் இடறி விழுந்தாலும்

    முன்நோக்கியே விழுங்கள்…

    உங்கள் வெற்றியை கைத்தட்டி ரசிக்க

    இங்கு ஆயிரம் கைகள் காத்திருக்கிறது..

    உங்கள் பெயரைப் பதிக்க வரலாற்றுப்

    பக்கத்தில் வெள்ளைத் தாள்

    ஒன்று விடப்பட்டிருக்கிறது…

    உனது பயணம் வெற்றுப் பயணம்

    அல்ல வெற்றிப்பயணம்.

    ஈர்ப்பும்.. ஈடுபாடும்

    இது தான் பிரபஞ்சம் நமக்கு செய்யும் உதவி எனலாம். வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதோ ஈர்க்கப்படும் எண்ண அலைகளே காரணம் என்பதை உணர வேண்டும்.

    ஒரு சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் சம்பளப் பிரச்சனையோ வேலை பளுவோ இருந்தாலும் பழகிய அந்த இடத்தை விட்டு வர மறுப்பார்கள். அப்படியே விலகி செல்ல நேர்ந்தாலும் இனிமேல் புதிய இடத்தில் போய் பழகி சகஜமாவது என்பது கஷ்டம் என்ற சப்பும், தயக்கமும், பயமும் வந்துவிடும்.

    முடிவில் நல்லதோ,கெட்டதோ இங்கேயே இருக்கலாம் என்றஎதிர்மறையாக தீர்மானித்து விடுவதால் நேர் மறையாக சிந்திக்க முடியாமல். நல்ல வாய்ப்புகளையும், வாழ்க்கை திருப்பு முனைகளையும் இழக்கிறோம். அதனால் பிரபஞ்சம் நம்மிடம் எதை கொடுக்க விரும்புகிறதோ, அது தான் நமக்குள்ளும் விருப்பமாக வருகிறது. ஈர்ப்பு ஏற்படுகிறது.

    அதை கொடுக்க விரும்பும் பிரபஞ்சத்திற்கு எதிராக எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுத்தால்.இந்த உலகம் நமக்கு எதிரியாகத்தான் தெரியும். கம்பியூட்டரோ, செல்போனோ அடிக்கடி நின்று விடுகிறதென்றால் சொல்லப்படும் முதல் காரணம் தேவையில்லாத பதிவுகள் அதிகமாக இருப்பதால் தான் என்று சொல்கிறோம். அதையெல்லாம் குப்பையாய் அழித்துவிட்டால் தடைபடும் நிகழ்வுகளை விரைவாக,எளிதாக பார்க்க முடிகிறது அல்லவா?

    அதுபோல் தான் நமக்குள் காமம், கவலை, சந்தோஷம் என்று எதுவானாலும் அதையெல் லாம் தூக்கி எறிந்துவிட்டால் கம்பியூட்டரைப் போல மனக்குப்பைகள் நீங்கி தெளிவாகி விடும். அதனால் தேவையற்ற விஷயங்களை தூக்கி எறியே வேண்டும். எப்படி தூக்கி எறிவது? நம்மால் கோபித்துக் கொள்ள முடியாதவர்கள் மீது எதிர்பாராதவிதமாக கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம்? வந்த அந்த கோபத்தை துச்சமாக தூக்கி எறிந்து விடுகிறோமல்லவா?அது போல அகங்கார குப்பைகள் குறைய குறைய தேவையானவை மட்டும் மனதில் இருக்கும். பிறகு நமக்குள் ஈர்ப்பு எண்ணம் வந்தால் தேவையான வற்றிருந்து மட்டும் நேர்மறை எண்ணங்கள் செயல்களாக மாறும். அதன்; பின் நாம் என்னவாக விரும்புகிறோமோ அந்த “எண்ணப்படி வாழ்வு” எதிரில் கை நீட்டி வரவேற்கும். நினைத்தாலும் கெட்டது நினைத்தாலும், அதை நிச்சியம் அனுபவித்தாக வேண்டும், என்பது நியதி.

    அப்படியிருக்க.. வருகின்ற எண்ணத்திற் கெல்லாம் வமை சேர்த்தால் வாழ்க்கை வமை இழந்து விடும். இதுவரை எதை பதிய வைத்திருக்கிறீர்களோ.. அதுவே இன்றைய நம் வாழ்க்கை அனுபவமாகிவிடும். அதனால் எண்ண அணுக்கள் பதிவதை மனதில் கொண்டு நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். கவனமாக விழிப்புணர்ச்சியுடன் எண்ணங்களை நினைக்க வேண்டும்.

    ‘லைப்’ எப்படி போய்கிட்டிருக்கு.?”-என்று கேட்டதும் நாம் சொல்லும் உடன் பதில்,

    “கஷ்டந்தான் என்னை மாதிரி கஷ்டப்படரவங்க உலகத்திலே..யாருமில்லே”

    “எனக்கு வந்த வாழ்க்கை மாதிரி, யாருக்கும் அமையக்கூடாது.”

    “என் நிலைமை எதிராளிக்கும் வரவே கூடாது, ரொம்ப கொடுமையாக இருக்கு”

    ..என்றுதான், மற்றவர்களுக்கு நம் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

    நம் ஆழ்மனத்தின் தகவல்களால் நம் வாழ்க்கை எப்படி போற்றப்படுகிறதோ? அல்லது தூற்றப்படுகிறதோ? அப்படியே வாழ்க்கை சம்பவங்கள் அமையும்.

    நம் உடல் உள்ள செல்கள் சிதைந்து, வளர்ந்து புதுப்பிக்கப்படுவது இயற்கை. ஆனால், ஒரே நோயில் கட்டுண்டு உடல் இருக்க காரணமே, நம் ஆழ் மனதில் அந்த நோய் பற்றிய எண்ணம், பயம், கண்ணோட்டம் மாறாமல், ஆழ்மனதில் பதிவானதுதான். இந்த மன கண்ணோட்டம் மாறும் வரை, அந்த நோய் தொடரும்.

    அதே போல், ஏழைகள் ஏழைகளாகவே பிறப்பதில்லை.இருக்கவேண்டிய அவசியமுமில்லை. “நான் ஒரு ஏழை” என்றபதிவும், “நான் பணக்காரன”; என்ற எண்ணப்பதிவு தான், அவர்களை அதே இடத்தில் வைத்திருக்கின்றது.[hide]

    இதுபற்றி, மகான்கள் சொல்வது,

    வாழ்க்கை துக்கம் என்று நினைத்தவுடன், துக்கமான சம்பவங்கள் மட்டுமே பார்ப்பீரகள்! இதுதான் ‘இல்லாத ஒன்றைஇருப்பதாக காட்டும் மனோபாவம்.

    இதை எளிய பரிசோதனை செய்வோம்!

    ஒரு பிரபலமான பாடலை பாடிய பாடகரை நம் மனதில் கொண்டு வந்து, அந்தப் பாடலை நாம் பாடினால், நமக்கு அதே குரலில், பாவனையில் பாடுவது போலவே தோன்றும்!.

    இது மனோபாவம்!

    நாம் நன்றாகப் பாடுகிறோம் என்றஎண்ணத்தை உருவாக்கும். ஆனால், வெளியே நம் பாட்டைக்  கேட்பவர்களுக்கோ, கேட்க பிடிக்காது. போட்டிகளில் பாடவந்து, பாடியவிதம் சரியில்லையென்று நிராகரிக்கப்படுவதும் இப்படித்தான்.

    இப்படி ஒரு முறைவாழ்க்கை என்பது, ஏமாற்றம், துக்கம், துயரம் நிறைந்தது என்று முடிவு செய்து விட்டோம் என்றால், நம் மனம் வாழ்க்கையை அப்படியே துக்கமாகவே பார்க்கும்.

    அதேசமயம். ஆதிர்ஷ்டவசமாக ஒரு அதிசயம், அற்புதம் நடந்து விட்டால் அதை அனுபவிக்காமல், ஏற்றுக் கொள்ளாமல் “இது ஏதோ ஆறுதலுக்கு  வந்தது’ என்று புறந்தள்ளி விடுகிறோம்.

    எத்தனை திறமை இருந்தாலும் வாய்ப்பு என்பது, வாய்க்காதவரை திறமைகள் ஜெயிப்ப தில்லை! வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாதவர்கள், வாழ்க்கையில் வளர்ச்சியடைவதும் சிரமம்.

    நாம் நேசிக்கும் நபரைத் தவிர வேறுயார் நல்லவர்களாக, சிறந்தவர்களாக இருந்தாலும், மனம் நாம் நேசிப்பவரை தான் நாடும்.

    அதுபோல..

    நாம் துக்கத்தை நேசிப்பதால், இடையில் வரும் எந்த ஒரு சந்தோஷத்தையும், வாய்ப்பையும் ஏற்கவோ, அனுபவிக்கவோ முடியாது.!

    துக்கத்தை எதிர்பார்க்கின்ற மனநிலை இருப்பதால், துக்கத்தையே எதிர்பார்க்கிறோம். இதைத்தான் கண்ணதாசன் அழகாக “உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்” என்கிறார். கருவாட்டு கடையில் நின்று கொண்டு, அங்கிருந்து வௌல்வராமல், அங்கேயே பூ வாசத்தை எதிர்பார்ப்பதுப் போல,

    நாம் சில விஷயங்களிலிருந்து வெளி வராமல், விரும்பும் அனைத்தும், நாம் நினைக்கும் வட்டத்தக்குள்  அடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இது நடக்க கூடிய காரியமல்ல.

    தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி வேண்டுமோ, அதை மனம் நினைத்தால்;, கையில் உள்ள ‘ரிமோட்டை’ இயக்கி, மாற்றி,நாம் விரும்பிய காட்சியை கொண்டு வருவது போல, வாழ்க்கையில் எது நடக்க  வேண்டும் என்று மனம் எதிர்ப்பார்க்கிறதோ, அதுதான் நடக்கும்.

    துக்கத்தை, கக்கத்தில் வைத்துக் கொண்டு பக்கத்தில் பால், பலகாரம் வைத்தாலும், கசப்பாக, வேண்டா வெறுப்பாகத்தான் மனம் நினைக்கும்.

    இந்த பாலே விஷமாக இருந்தாலாவது, குடித்து விடலாம் என்று, நல்ல பாலையும் விஷமாக்க நினைக்கும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சக்தியும் நீள் ஆயுளும்

    நாம் வாழும் சுற்றுச்சூழலும், நாம் உண்ணும் உணவும் முன்பைவிட மிக அதிகமாக மாசுபட்டு இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றிலும் உணவிலும் இருக்கும் எதிர் வேதிவினைகள் (Free radicles) நம் உடல் செல்லணுக்களைச் சேதப்படுத்தி நம் ஆயுளைக் குறைக்கவே செய்யும். இவ்வித எதிர் வேதி வினை புரியும் மூலக்கூறுகளை நம் திணிவு பெற்ற உயிர்ச் சக்தியின் ஆற்றல் மூலம் தணிக்கச் செய்ய முடியும். ஆக, நமக்குத் திணிவான உயிர்ச் சக்தியிருந்தால்தான் மாசுகளிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், நம்மைக் கெடுக்கும் மாசுகளை செயலாற்றி நீக்கவும் முடியும். இன்றைக்கு இருக்கும் மாசு சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டு வீழ்வதைவிட வாழ்வது எப்படி என்று பார்ப்பது சிறந்தது தானே? ஆகவே, நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கும் நுட்பங்களை இனிப் பார்ப்போம்.

    முடியும். இன்றைக்கு இருக்கும் மாசு சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டு வீழ்வதைவிட வாழ்வது எப்படி என்று பார்ப்பது சிறந்தது தானே? ஆகவே, நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கும் நுட்பங்களை இனிப் பார்ப்போம்.

    1. இயற்கை உணவுகள்: நஞ்சு கலக்காத இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை கொஞ்சம் விலையதிகமானாலும் வாங்கிச் சாப்பிடுவதன் மூலம் பின்னாளில் நோய்க்காக மிக அதிகப் பணத்தை இழக்க வேண்டாம். பழச்சாறுகள், மூகைச் சாறுகள் பஸ்பங்கள் முதயன நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். நுனா பழங்களி-ருந்து தயாரிக்கப்படும் நோனி பானம் நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கிறது. இயற்கையாக தயாரிக்கப்படும் சக்தி பானங்களும் நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
    2. கற்றாழைக் கழுவல்: சோற்றுக் கற்றாழைச் சாற்றைக் கொண்டு நாம் சமைக்கும் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களைக் கழுவிய பின்னர் சமைப்பதன் மூலம் நாம் இரசாயனங்களை ஓரளவிற்கு நீக்க முடியும். இதனாலும் நம் உயிர்ச் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியும்.
    3. ஹோமியோபதி மருத்துவம் : ஹோமியோபதியில் ஜின்சங் (Ginseng) என்றமருந்து உடல் மற்றும் விந்து நாதத்தை வளமாக்கும். அதேபோல், சைனராரியா மரிட்டிமா (Cineraria maritima) கண்களையும், முலன் ஆயில் (Mulen oil) காதுகளையும் வளமாக்கும் ஹோமியோ மருந்துகளாகும். அதே போல் புண்கள் விரைவாக ஆறகாலண்டுலா (Calendula) ஹோமியோ மருந்து உதவும். நம் உடன் விஷக் கழிவுகள் நீங்கி ஆயுள் நீள ரஸ் டாக்ஸ் (Rus tox), நக்ஸ் வோமிக்கா (Nux vomica), நேட்ரம் முர் (Natrum mur), காந்தாரிஸ் (Cantharis) மற்றும் ஏபிஸ் மெல் (Apis mel) ஆகியன பயனுள்ளவையாக இருக்கும்.[hide]
    4. மலர் மருத்துவம்: மலர் மருந்துகளில், சதைக்கு ஸ்கிலராந்தஸ் (Scleranthus), இரத்தத்திற்கு ராக் ரோஸ் (Rock rose), எலும்பு மூட்டுக்களுக்கு ஹார்ன் பீம் (Horn beam), மூளைக்கு வைட் செஸ்நட் (White chestnut), ஏழு உயிர்ச் சக்கரங்களுக்கு மஸ்டர்டு (Mustard), இதயத்திற்கு அக்ரிமோணி (Agrimony), நுரையீரலுக்கு கிளைமேட்டிஸ் (Clematis), கல்லீரலுக்கு செர்ரி பிளம் (Cherry plum) மற்றும் முழு உடலுக்கு ரெஸ்கிவ் ரெமடி (Rescue remedy) ஆகியன வளம் சேர்க்கும்.
    5. மருந்தில்லா மருத்துவங்கள்: மருந்தில்லா மாற்று மருத்துவங்களான அக்கு பிரஸ்சர், அக்குபஞ்சர், காந்த சிகிச்சை, வர்ம சிகிச்சை, தொடு சிகிச்சை உள்ளிட்டவைகளும் நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கும்.
    6. சக்தி ஸ்தலங்களுக்கு விஜயம்: சக்தியுள்ள வழிபாட்டு ஸ்தலங்கள் நம் உயிர்ச் சக்தியை திணிவாக்க உறு துணையாக இருக்கும். சக்தி ஸ்தலங்களின் கருவறையில் நிலைநிறுத்தப்பட்டி ருக்கும் சக்திச் சூழலுக்குள் நமது பூஜை பொருட்கள் உள் சென்று வெளியே வருவதால் அவைகள் சக்தியூட்டம் பெறுகின்றன. அவற்றைநாம் அங்கேயே சாப்பிடும்போது நாமும் அந்த சக்தியைப் பெறுகிறோம். கருவறையின் உள்ளே நம் பூஜை பொருளை மட்டுமே அனுமதிப்பதைவிட நம்மை அனுமதிப்பது இன்னும் சிறப்பானது. அவ்வகைச் சக்தி ஸ்தலங்கள் எவை என இனம் கண்டு அங்கு நாம் கருவறைவரை சென்று முழுப் பலனைப் பெறுவது மிகவும் நல்லது. உதாரணமாக திருப்பதி ஏழுமலையான், ஆழியார் அறிவுத் திருக்கோவில், கோவை வெள்ளியங்கிரி ஈசா தியான ங்கக் கோவில், மகான்களின் ஜீவ சமாதிகள், வேளாங்கன்னி பேராலயம், நாகூர் தர்கா, சாய்பாபா கோயில்கள் முதயனவற்றைக் குறிப்பிடலாம்.

    நம் உயிர்ச் சக்தியைத் திணிவாக்கி

    மாசுகளின் எதிர் வேதி வினைகளை நீக்குவோம்.

    நம் உடல் செல்லணு சிதைவிருந்து[/hide]

    இந்த இதழை மேலும்

    இங்கு… இவர்… இப்படி… தன்னம்பிக்கைத் தமிழர்

    முனைவர் இரா. விஸ்வநாதன்,

    தமிழ்ப் பேராசிரியர், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி,

    ஈரோடு.

    வானம் இருண்டுவிடுகிறபோது

    நட்சத்திரங்கள் வெளிவருகின்றன

    என்பதற்கிணங்க, ஏழ்மைச் சூழல்

    ஏற்படுகிறபோது வாழ்க்கைச்  சூழலை

    உயர்த்திக் கொள்ள மனம் தேடலை

    தேடுகிறது. இயற்கைப் பேராற்றல்

    மிக எளிமையான வடிவில் மனிதர்களைப்

    படைத்தும், அவர்களிடம் மறைந்திருக்கும்

    திறனை வெளிக்கொண்டு வர

    அவர்களுக்குத் தேடலைத் தருகிறது.

    இவ்வகையில் கன்னித்தமிழ் கற்பதை எண்ணித் துணிந்து தேர்ந்து, தமிழால் தான் வளர்ந்து, தன் வழி தமிழும் வளரும் வண்ணம் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்து தன்னம்பிக்கையாலும், தளராத உழைப்பாலும் எண்ணியது எண்ணியாங்கு எய்திய திண்ணியராய் திகழும் முனைவர் இரா. விஸ்வாநாதன் அவர்கள் மாணவ, மாணவியர் சமுதாயத்திற்குத் தவமின்றிக் கிடைத்த வரம்.

    செந்தாமரை சில நேரம் சேற்றிலும் முளைப்பதுண்டு. ஆம்! நம்முடைய தன்னம்பிக்கைத் தமிழரான திரு. விஸ்வநாதன் தோன்றியது, மிதிவண்டி செல்ல முடியாத, முள்வேலிகளும், புதர் மண்டிய காடுகளும் நிறைந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், K. மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சந்திராபுரம் என்ற குக்கிராமத்தில் பொருளாதாரப் பின்புலமோ, கல்வி எனும் வெளிச்சமோ இல்லா ஒரு பனைத் தொழில் புரியும் ஏழைக் குடும்பத்தின் குடிசை வீட்டில்.

    14.02.1978 அன்று திரு. பொன்.இராமசாமி, திருமதி. பூவாயாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார் விஸ்வநாதன். உடன் பிறந்தவர் இரா. ஆனந்தகுமார் என்ற தம்பி. விஸ்வநாதன் தன் மூன்றாம் வயதில் ஒரு திண்ணைப்பள்ளியிலும் , ஐந்தாம் வயதில் சந்திராபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியிலும் தம் அறிவொளிப் பயணத்தைத் தொடங்கினார். இச்சமயத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு வாய்த்தது போன்று இவருக்கு சுப்பிரமணியம் எனும் அன்பும் பண்பும் நிறைந்த தலைமையாசிரியர் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உற்சாகப்படுத்தி வந்துள்ளார்.

    உயர்நிலைக் கல்வியை பாண்டியம்பாளையம் கிராமத்தில் இவர் கற்றபோது பல மைல்கள் நடந்தே  செல்ல  வேண்டுமென்ற நிலைமையிலும் காடுகள், வரப்புகள் வழியாகக் கடினமான பாதையில் நடந்தே சென்று பயின்றார். இடையில் மூன்று ஓடைகளைக் கடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். மழை பெய்து ஓடையில் வெள்ளம் ஏற்பட்டால்  குடியிருப்புகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய  அவலநிலை. பள்ளி நேரம் போக  குடும்பத் தொழிலான பனைத் தொழிலில் பெற்றோருக்கு உதவியாகவும், மேலும் ஆடு மேய்த்தும் வந்துள்ளார் இவர்.

    இவ்வளவு இடையூறுகளையும் இவரை வெல்ல  செய்தது, கற்கண்டு கல்வியைத் தமிழ்ச் சொற்கொண்டு பயின்று தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற தேடல்தான். தேடலினால் கிடைத்த பயனை தம்மைப் போன்று வேதனையில் உழல்பவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று நித்தமும் அவர்களுக்கு வழிகாட்டி உதவி வருபவர் இவர்.

    தமிழ்தாயால் அரவணைக்கப்பட்ட இவர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று பிறகு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்  முதுகலைத் தமிழ் இலக்கியம் கற்றவர். பின் கோவை அரசு கலைக்கல்லூரியில் M.Phil பட்டம் பெற்றார். தன்  அறிவுத் தேடலின் தொடர் ஓட்டத்தில் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோபி வட்டார நாட்டார் தெய்வ வரலாறும் வழிபாடும்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

    கற்றதும் பெற்றதும் மற்றவர்களுக்கு உற்றதோர் பணி செய்திடத்தானே என்பதற்கேற்ப அறப்பணியாம் ஆசிரியப் பணியை  இன்பப் பணியாய் ஏற்றார் இவர். 1999 ஆம் ஆண்டு தம் ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர் மூன்று மாதங்கள் ஈரோடு மாவட்டம் திங்களூர் அரசு மேனிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நியமன ஆசிரியராகப் பணியாற்றினார்.[hide]

    அதன் பின்னர் காஞ்சிக்கோவில் அரசு மேனிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டார். ஏறுமுகமாக சென்ற இவர் பணி சித்தோடு வாசவி கல்லூரியில் விரிவுரையாளராக விரியச் செய்தது. தொடர்ந்து 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஈரோடு கலைக்கல்லூரி விரிவுரையாளராகவும், 2006 முதல் 2008 வரை கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராகவும் தன் பணியை மனநிறைவுடன் ஆற்றிய இவர் 2008 டிசம்பர் முதல் தான் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்ற ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலேயே உதவிப் பேராசிரியராகப் பணியமர்ந்தார்.

    இவரது நகைச்சுவை உணர்வாலும், நயம்படும் உரையாலும், நறுக்குத் தெறிக்கும் கருத்துக்களாலும் கல்லூரியே களைகட்டும் என்பதற்குச் சிக்கய்ய நாயக்கர் கல்லூரிப் படிக்கற்கள் கூடப் பத்திரம் எழுதிக் கொடுக்கும்.

    ஓர் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் தாம் என்பதை ஒருபோதும் மறந்திராத இவர், ‘வறுமை பிழையன்று; ஆனால் வறுமையில் உழல்வதே தவறு’ என்பதைத் தம் மாணவர்களுக்கு ஆழமாகப் பதிய வைப்பார். ‘முயற்சி செய்தால் சமயத்திலே முதுகு தாங்கும் இமயத்தையே’ என்ற பாடல் வரிகளுக்கு வாழும் வழிகாட்டியாய் விளங்கும் இவர் மாணவர்களுக்கு தமிழோடு தன்னம்பிக்கையையும் ஊட்டுபவர்.

    இவரின் வகுப்பறை எப்போதும் கலகலப்புடன் இருக்கும்; ஒரு போதும் சலசலப்பு இருக்காது. தளைதட்டாத இவரின் அருவித் தமிழால் களைகட்டும் கல்லூரி.

    என்னால் என்ன முடியும்? என்றெண்ணும்  மாணவர்களுக்கு உன்னால் முடியும் தம்பி! என்பது இவர் தரும் உத்தரவாதம். வாய்ப்புகளைத் தேடுவோர்க்கெல்லாம் வாய்ப்புகளை உருவாக்க சொல்லித் தருவது இவரது தமிழ். இவர் தமிழ் குடத்திலிட்ட விளக்கன்று; அது குன்றின் மேலிட்டது. எப்படியெனில்,

    பட்டி தொட்டியில் எல்லாம் ஒலிக்கும் பட்டி மன்றத் தமிழ்

    சழக்காடு செய்யாத வழக்காடு மன்றத் தமிழ்

    இனிதிலும் இனிதாய் முழங்கும் தனிப் பேச்சுத் தமிழ்

    வேலை தேடும் இளைஞர்களுக்கெல்லாம் சாலை

    போடும் தன்னார்வப் பயிற்சித் தமிழ்..!

    என்று எத்திசையிலும் தமிழாய் மணப்பவர் இவர்.

    இவரது தன்னம்பிக்கை தமிழாலும், தன்னார்வப் பயிற்சியாலும் 1500 க்கும் மேற்பட்ட  அரசு ஊழியர்களையும், 40 க்கும்  மேற்பட்ட  அரசு ஆசிரியர்களையும்  பணியேற்கச் செய்துள்ளார்.

    இவரது துணைவியார் திருமதி. கமலேஸ்வரி இவருக்கு உற்ற துணையாக இருந்து நன்கு குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்கிறார். இத்தம்பதி இலக்கியா என்று மகளுக்கும், மகிழன் என்று மகனுக்கும் இனிய தமிழ் பெயர் சூட்டியுள்ளனர்.

    தம் இடைவிடாத பணிச்சுமைகளுக்கு இடையிலும், இந்த இளைஞர் 60 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 5 நூல்களையும் படைத்துள்ளார். இவரது படைப்புகளுள் 6 கட்டுரைகள் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

    கல்லூரி பணியோடு, பல்வேறு பல்கலைக்கழகங்களில் வினாத்தாள் வடிவமைப்புக் குழு உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆய்வு நெறிக் குழு உறுப்பினராகவும், சமூக மேம்பாடு மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், கவின் கலை மன்றத்தின் அமைப்பாளராகவும், ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியாளராகவும், தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழறிஞராகவும், மேல்நிலை தமிழாசிரியர்களுக்குப் புதிய பாடத்திட்டத்தைக் கையாளும் முறை குறித்தான பயிற்றுநராகவும், அரசு ஊழியர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியாளராகவும் தன் பன்முக ஆற்றலை விஸ்வரூபம் செய்கிறார் விஸ்வநாதன்.

    உழைப்பு, ஊக்கம், உறுதி என்னும் முப்பரிமானம் கொண்ட இவர் சிறந்த விரிவுரையாளர் விருது, நகைச்சுவை நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார். உலகத் திருக்குறள் பேரவை புரவலராகவும், ஈரோடு மாவட்ட நூலக வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினராகவும் தொடரும்  இவரது மாரத்தான் ஓட்டத்தின் இலக்கு தமிழின் துணையோடு சமூக முன்னேற்றம்.

    சங்கம் கண்ட தமிúழுôடு தன்னைச் சங்கமம் ஆக்கிக் கொண்டு,

    பொங்கும் உற்சாகம் குன்றாமல் எங்கும் தமிழ் பேசும் இவரிடம்

    எப்படிச் சாத்தியம் இத்தனை முன்னேற்றம் என்னும்  கேள்விக்கு

    இவர் தரும் ஒன்றைச் சொல் பதில் தன்னம்பிக்கை!’

    இச்சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற சேவைகளைத் தர வேண்டும் என்ற எண்ணம்  கொண்ட இவர் தன்னார்வ பயிற்சியகத்தை உருவாக்கிப் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாமல் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். விதைக்கருத்துகளை மனதில் அள்ளிக்குவித்து, வகைப்படுத்தி மாணவர்களின் செவியாகிய நிலங்களில் விதைப்பவர். விளைந்து முற்றிய பயனை மாணவர்கள் அறுவடை செய்து இன்பம் துய்ப்பதைக் கண்டு ஆனந்தமடைபவர். ஓர் ஆசிரியருக்கு இதைவிட வேறென்ன வெகுமதி கிடைத்துவிடப் போகிறது என்ற இறுமாப்பும் இருவக்குண்டு.

    ஆய்வுலகம் விரிவடைந்து புதிய பரிமானத்தை எட்டிப்பிடிக்க வழிகாட்டியாய் இருந்து ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களை  வழிநடத்துபவர் இவர். ஏராளமான ஆய்வாளர்கள் இவரின் நெறியாளுகையின் கீழ் தமிழாராய்ச்சி செய்து வருகின்றனர்.

    பழுத்த பழமரங்களின் முகவரியைப் பறவைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. நறுமணமும் , சுவையும்  பறவைகளை நாடி வரச் செய்துவிடும். அது போன்று மாணவர்களின் மனம் அறிந்தும் கவர்ந்தும் வகுப்பு எடுக்கும்  வல்லமை பெற்ற இவரின் தமிழ், மாணவர்களை நாடித் தேடி ஓடி வரச் செய்து விடுகிறது என்கின்றனர் இவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள்.

    ஏட்டுக்கல்வி கூட்டுக்கறி செய்து பசி போக்காது. பொருளாதாரக் கல்வியே வாழ்வாதாரத்தைக் காக்கும் என்பதற்கேற்ப இவரிடம் பயின்ற மாணவர்கள்  பலர் வருவாய் வட்டாச்சியர்களாகவும், பஞ்சாயத்துத் துணை இயங்குநர்களாகவும், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளாகவும், மாவட்ட கல்வி அலுவலர்களாகவும், கூட்டுறவுத் தணிக்கையாளர்களாகவும், வருவாய் ஆய்வாளர்களாகவும், கிராம நிர்வாக அதிகாரிகளாகவும், கருவூல அதிகாரிகளாகவும், எழுத்தர்களாகவும் சமூக நிலையில் உயர்ந்து பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று விளங்குகிறார்கள்.

    நிலம் போன்று பொறுமையுடைவராகவும், மலர் போல் மென்மையானவராகவும், மலர்ச்சியுடையவராகவும், மலைபோன்று அறிவு வளமையுடையவராகவும், துலாக்கோல் போன்று நடுநிலையாளராகவும் நின்று ஆசிரியப் பணியாற்றி வரும் முனைவர் இரா. விஸ்வநாதன் அவர்கள் இன்றைய மாணவ இளைஞர்களுக்கு கலங்கரை விளக்காய் திகழ்கிறார் என்பது பாராட்டத்தக்கது.

    சந்திப்பு: M. நம்பிராஜன்,

    மக்கள் தொடர்பு அலுவலர்,

    தன்னம்பிக்கை மாத இதழ். [/hide]

    இந்த இதழை மேலும்

    மனநிலை மாறிய மனிதர்களால் மக்கிப்போன விவசாயம்

    இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான் என்கிறார் கந்தியடிகள். ஆனால் இன்றோ மனிதர்களின் மனநிலை மாறியதால் விவசாயம் மக்கிப் போனது.

    ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் பசிக்காக விவசாயத்தைக் கண்டுபிடித்தான். ஆனால் இக்காலத்தில் உள்ள மனிதனோ அதனை பணத்திற்காக அழித்து வருகிறான். பன்னாட்டு தொழிற்சாலைகளின் வரவு மற்றும் ரியல்  எஸ்டேட் போன்ற வணிக வளர்ச்சியின் போக்கால் வளமான விவசாய நிலங்கள் வியபார நிலங்களாக மாறி வருகிறது.

    கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விலைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள் கூட கல்லூரி, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட்  உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 15 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் தற்போழுது கான்கிரீட் கட்டடங்களாக உருமாறியுள்ளன.

    பெருங்குடி விவசாயிகள் கூட தற்போது, உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் முதலீடு செய்கின்றனர். அது கொண்டு தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர்.

    தற்போது தமிழ்நாட்டின் கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் போன்றவை மாறத் தொடங்கிவிட்டது.ஒவ்வொருவரும் வசதியான சொகுசான வாழ்க்கையை வாழவே ஆசைப்படுகிறார்கள். பணம் சம்பாதிப்பது, பெரிய வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது என ஆடம்பரமான வாழ்க்கை பற்றிய கனவு மக்களிடையே வளர்ந்துவிட்டது.  பிள்ளைகளையும் தங்களின் கனவு வழியே வளர்க்கிறார்கள்.  அவனும் படித்து முடித்ததும் தொழிற்துறைகளைத் தேடி ஓடி தன்னை வளப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    உலகமயமாக்கல்  அமுல் படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில் தான்  விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது. இந்த 22 வருட காலக்கட்டத்தில் நாளொன்றிக்கு சுமார் 2,035 விவசாயிகள் காணாமல் போயிள்ளனர் என்பது தான் அரசின் அறிக்கையாக உள்ளது. இன்றைய நிலையில், நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்திருந்து விலகிச் சென்றவண்ணம் உள்ளனர்.

    வெறும் வியாபாரம் ஆகிப்போன கல்வியால் பட்டம் பெறும் இளைஞர்கள் பொருளாதார வாழ்வோடு போட்டியிடுகையில் சமூகம் பற்றின அக்கரை கொள்ள அவர்களுக்கு அவசியம் இல்லை. நல்வாழ்க்கை என்பது புரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கின்றனர். அண்மைகாலங்களில் படித்த இளைஞர்கள் விவசாயம் செய்வது  என்பது கௌரவ குறைச்சல், படிப்பில் இயலாமை என்பன போன்ற மாயத்  தோற்றங்களை சமூகம் உருவாக்கியுள்ளது.  அனைவருக்கும் கல்வி என  அரசாங்கம் சொல்கிறது.  கல்வியறிவு கொண்டவன் விவசாயம் செய்தால் இழிவு உன சமூகம் உரைக்கிறது.  கல்வியறிவற்ற இளைஞர்கள் இல்லாத விவசாயம் எப்படி வளர்ச்சியடைய முடியும்.[hide]

    அனைவரும் கணினியுகக் கூகளாக

    மாறிப்போனால்

    நாளை எதை உண்டு வாழ்வோம் கணனி மென்பொருள்களையா?

    இந்த சமூக அரசியல், பொருளாதார பாதிப்புகளைத் தாண்டி இன்றைய விவசாயம் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் எதிர்கொள்கிறது. சுற்றுசூழல் மாறுபாட்டால் குறைந்துவிட்ட மழையின் அளவு, பருவ மாற்றம், வற்றிப்போன நிலத்தடிநீர், மாசுப்பட்ட காற்று, குறைந்து போன மண்வளம் இவற்றையெல்லாம் தாண்டி தற்காக பிரச்சனையாக விளைவித்த பொருட்களுக்கு கிடைக்காத  சரியான விலை, இடைத்தரர்களின் சுரண்டல், ஆள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு என்று  பல சிக்கல்களை எதிர்க் கொள்ள வேண்டியுள்ளது.

    இந்தியா விவசாய நாடு என்பது உண்மையெனில் ஒவ்வொரு இந்தியனும், இளைஞனும் விவசாயம் பற்றிய அடிப்படைகளை அறித்திருக்க வேண்டும். அவர் எந்தத்துறையில் வல்லுனராக இருந்தாலும் விவசாயம் தான் உணவளிக்கிறது என்பதை உணர வேண்டும். விவசாயம் வெறும் பொருளாதாரம் பிரச்சனை அல்ல. அது இந்தியர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனையும் கூட எனவே விவசாயம் பற்றி ஒவ்வொருவரும் அறித்திருக்க வேண்டும்.  பள்ளிக்கூடங்களில் விவசாயத்திற்கென்றே தனியொரு பட்டம் வைத்தால் சிறப்பாக இருக்கும்.

    அதற்காக நான், எல்லா இளைஞர்களையும் விவசாயம் செய்ய வருமாறு அழைக்கவில்லை. ஆர்முள்ளவர்கள் ஈ:டுபடட்டடும், மற்றவர்கள் அறியாத விவசாயிக்கு கற்றுக் கொடுப்போம், வழிகாட்டுவோம். நமது ஓய்வு நேரங்களை இதற்காக செலவழிப்போம். விவசாயத் தொழில் பின்னணியில் பிறந்தவர்கள் தயவு செய்து அதி-ருந்து வெளி வர நினைக்க வேண்டாம். அதை வளப்படுத்த முயற்சியுங்கள் இன்றைய நிலையில் விவசாயம் செய்வதே நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவை என்பதை உணர வேண்டும்.

    ஆக, எப்போது இச்சமுகம் என் மகன் பொறியாளர் ஆக வேண்டும், மருத்துவர் ஆக வேண்டும் என்று மட்டும் நினைக்காமல் என் மகன் விவசாயி ஆக வரவேண்டும் என்று எண்ணுகிறார்களோ அப்போது தான் மக்கிப்போன நம் விவசாயம் மீண்டும் உயிர்பெற்று செழித்தோங்கும்.

    இல்லையெனில் சேற்றில் கால் வைக்க ஆள்யில்லாமல், உணவை உற்பத்தி செய்ய ஆளும் இல்லாமல் உணவுக்கே தவித்து சோற்றுக்கு பரிதவித்து கையேந்த வேண்டிய நிலை உருவாகும்.

    ஆதலால் உழுதுண்டு வாழ்வோரை தொழுதுண்டு வாழ்வோம் என்று கூறி விவசாயிகளை வணங்கி விடைபெறுகிறேன்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சிந்திக்க வைக்கும் சீனா….

    சுற்றுலா என்றாலே  மகிழ்ச்சி தான். அதிலும் வெளிநாடுச் சுற்றுலா, குறைந்த கட்டணத்தில், நம்மூர் உணவுகளுடன் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

    என் ஈரோட்டு நண்பர் பாலாஜி தன் மகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்துக்கு சில பொருட்கள் வாங்குவதற்காக சீனா சென்று வந்த பின், தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மொழி, உணவு இரண்டும் சிரமம் எனத் தெரிந்து கொண்டேன்.

    சீனா, பாகிஸ்தான் என்ற இரண்டு அண்டை நாடுகள் மீதும் உள்ளத்தில் பிடிப்பு இல்லை எனக்கு. காரணம் அவர்களது பகை உணர்வும், பன்முகத்தாக்குதலுமாயிருக்கலாம். எனவே, சீனா சுற்றுலா செல்வதில்லை என்றிருந்தேன்.

    சனவரி 2018 ல் என் பள்ளித் தோழன் சி. எல். தான் சீனா செல்வதாயும் சலுகைக் கட்டணமாக ரூ 90000- 8 நாட்கள் 3 நகரங்கள் என்று தகவல் தெரிவித்தார்.

    வழக்கமாக வாழ்க்கைத் துணையுடன் தான் செல்வேன். இம்முறை அவர் முதுகுத்தண்டு வலியால் வரவில்லை. எனவே நான் மட்டும் செல்ல முடிவு செய்தேன்.

    சுற்றுலா ஏற்பாடு செய்த ஸ்ரீ டிராவல்ஸ் சென்னை நிறுவனம் இங்கிருந்தே சமையல் ஆட்களை, சீனாவுக்கு நம் மளிகைக் சாமான்களுடன் அழைத்துச் சென்று, நம்மூர் உணவு தயாரித்து வழங்குவது சிறப்பு அம்சம்.

    உடனே முன்பணம் செலுத்தி பதிவு செய்தேன். ஏப்ரல் 2018 ல் 8 நாட்கள் பயணத்திட்டம் அனுப்பினர். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக பீஜிங் சென்று, ஷாங்காயிலிருந்து கொழும்பு வழியாகச் சென்னை திரும்புதல் தான் பயணத்திட்டம்.

    நாட்கள் நெருங்கின. விசா பிரச்னை என்பதால் கொழும்புக்குப் பதில்  மலேசியா கோலாலம்பூர் வழியாக முதலில் ஷாங்காய் சென்று, ஷியான் வழி பீஜிங் சென்று அங்கிருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை திரும்புதல் என மாற்றியமைத்தனர்.

    சீனா என்றவுடனே நினைவுக்கு வருவது உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் தான். அடுத்து மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலும், மணிக்கு 430 கி.மீ வேகத்தில் செல்லும் மேக்னெட் ரயிலும்.

    அவர்களது உணவு நமக்கு ஒத்து வராது ; எங்கும் சீன மொழி தான். ஆங்கிலப் பெயர் பலகைகள் அரிதாகவே கண்ணில் பட்டன. கோவை அவிநாசி ரோட்டில் ஒருநாள் இரவு 8 மணிக்கு பஸ்ஸில் சென்றேன். ஹோப்ஸ் பகுதியிலிருந்து பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி வரை ரோட்டின் இருபுறமும் ஒளிர்ந்த ஆங்கிலப் பெயர்ப் பலகைகள், விளம்பரங்கள் அமெரிக்காவின் நியூயார்க் போலத் தோன்றியன.

    உலகில் பரப்பளவில் 3 வது பெரிய நாடு; ஆசியாவில் 2 வது பெரிய நாடு சீனா. மக்கள் தொகையில் உலகிலேயே மிக அதிகமான மக்கள் வசிக்கும் நாடு சீனா தான். இன்று (2018ல்) மக்கள் தொகை சுமார் 142 கோடிப் பேர்.

    இந்தியா 2 ம் இடத்தில் உள்ளது விரைவில், அதாவது 30 ஆண்டுகளுக்குள்  சீனாவின் மக்கள் தொகை 136 கோடிக்கு குறைந்து விடும் என்று கூறுகின்றனர்.[hide]

    ஆசியாவின் மிகப்பெரிய நதியான யாங்ஸே (YANGTZE)  நீளம் 6300 கி.மீ 2 வது பெரிய நதியான மஞ்சள் நதி நீளம் 5464 கி.மீ, இரண்டும் சீனாவில் தான் உள்ளன.

    5000 வருட பாரம்பரியமுள்ள சீனா அரசர்களால் (சக்கரவர்த்தி) ஆளப்பட்டு வந்தது. இந்நாட்டில் விளைநிலங்கள், பாலைவனங்கள், மலைகள், ஏரிகள், ஆறுகள் என இயற்கை வஞ்சகமின்றி வளங்களை வழங்கியுள்ளது. 14000 கி.மீ. கடற்கரை. 22000 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் 14 நாடுகளை அண்டை நாடுகளாகக் கொண்டது. நேரத்தில் 5 மணி நேர அளவுள்ள பகுதிகளைக் கொண்டது.

    நம் இந்தியாவில் ஒரே நேரம் தான். மேற்கே கட்ச் வளை குடாவிலிருந்து கிழக்கே அஸ்ஸாம் வரை எல்லா இடங்களிலும் ஒரே நேரம் தான். ஆனால் சீனாவில் மேற்குப் பகுதியில் நேரம் 1 மணி என்றால், கிழக்குப் பகுதியான ஷாங்காயில் 5 மணி யாகும். சுற்றுலா சென்ற 3 நகரங்களும் ஒரே நேரப் பகுதியில் தான் உள்ளன.

    நம் நாட்டைவிட 2.30 மணி நேரம் கூடுதலாகும். நமக்கு 1 மணி என்றால் அவர்களுக்கு 3.30 மணி. இது சிங்கப்பூர், மலேசியா நேரமாகும். நீர் மீன்சக்தி அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். இவர்களது முக்கிய உணவு அரிசியும் மீனும். டீ இவர்களது வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது. சுமார் 80 மொழிகளுக்கும் அதிகமாகப் பேசினாலும் முக்கியமான, முதன்மையானது சீனமொழி எனப்படும் மண்டாரின் ஆகும்.

    வடக்குப்பகுதியை விட தெற்குப்பகுதி நீர்வளம் நிறைந்தது. நெல், கோதுமை, உருளை, தக்காளி, கடலை, டீ, பருத்தி, சோயா முதலியன விளைபொருட்களாகும். நாட்டு நாணயம் யுவான் எனப்படும் ரென் மின் பி (RENMINBI). நம் ரூ 10.50க்கு ஒரு ரென்மின்பி மதிப்பு.

    கன்பூசியனிசம், டாவோயிசம், புத்திசம் என்ற பல மதங்களை கடைப்பிடிக்கின்றனர்.  மக்கள் தொகையில் சுமார் 1%  முஸ்லிம் 2%,கிறிஸ்தவர், 10% புத்தமதத்தவர் மற்றவர்கள் பழங்குடிமண்ணின் மைந்தர்கள்.

    36 மாநிலங்களைக் கொண்டது. 1911 ல் புரட்சி நடந்தது. 1949 முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. மாசேதுங், சூ என்லாய் என்ற இரு பெயர்களும் மறக்க முடியாதவை. ஜனாதிபதி, பிரதமர் (PRIMIER) மற்றும் ஆலோசனை அமைப்புகளுடன் ஒரு கட்சி ஆட்சி தான் நடக்கிறது.

    1954 முதல் அரசியல் நிர்ணய சட்டம் அமலில் உள்ளது. 2013 முடிய ஒரு குழந்தை கட்டுப்பாடு சட்டம் இருந்தது. இப்போது விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. வீடுகளின் விலை மிக அதிகம். பல கோடி ரூபாய் மதிப்பில் கிடைக்கும். வாடகையோ மாதம் குறைந்தது ஒரு லட்ச ரூபாய் முதல். இன்று எல்லா நகரங்களிலும் ஏராளமான பல மாடி குடியிருப்புகள் கட்டி வருகின்றனர்.

    கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி என கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். எல்லோருமே உடற்பயிற்சி, ஆடல், பாடல், நடை என சுறுசுறுப்பாக செயல் பட்டு வாழ்கின்றனர். காலை மாலையில் குழுவாகப் பயிற்சிகளை இசையுடன் செய்வதைக் காண்பது சிறப்பு.

    குழந்தை வளர்ப்பு: நீண்ட எதிர் காலத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகளைக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கின்றனர்.

    ஒட்டகச்சிவிங்கி, நின்று கொண்டே குட்டி போடும். அது எழுந்து நின்ற உடனே காலால் தூக்கி வீசும். இது போல் பல முறை செய்து, சிறு வயது முதலே  பாதுகாப்புக்கான பலத்தையும் துணிச்சலையும் கற்பிக்கிறது. சீனாவில் குழந்தைகளுக்கு பெற்றோர், குறிப்பாக அம்மா அதிகம் செல்லம் கொடுப்பதில்லை. சிறு வயது முதலே பெரியோர், ஆசிரியர்களுக்கு, தலை குனிந்து மரியாதை செலுத்துவது கற்றுத் தரப்படுகிறது.

    சீனாவில் இந்திய உணவகங்கள் குறைவாகவே உள்ளன. அவற்றிலும் சைவம், அசைவம் இரண்டுமே வழங்கப் படுகின்றன. நம்மூர் இட்லி, தோசை, சாப்பாடு மிகவும் அரிது. மொழி பிரச்னை என்பதால், ஓட்டல்களின் விசிட்டிங் கார்டுகளில் “PLEASE DRIVE ME” என்று ஆங்கிலம் சீனமொழியில் அச்சடித்துள்ளனர். நாங்கள் குழுவாகச் சென்றதால் உணவு, மொழி பிரச்னை ஏதுமில்லை.

    சுற்றுலா நிறுவனத்தினர் விமான டிக்கெட் வாங்கி அனுப்பினர். சுற்றுலா குழு விசா 15 நாட்களுக்கு எடுத்து, அதன் நகலும் அனுப்பினர். இந்த விசாவில் பெயர் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது. மற்ற எல்லாத் தகவல்களும் சீன மொழியில் தான் உள்ளது.

    15.4.2018 ஞாயிறு இரவு கோவையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பயணமானேன். 16.4.2018 காலை சென்னை சென்று, நண்பர் யமுனா கிருஷ்ணன் வர, அவர் உதவியுடன் தயாராகி காலைச் சிற்றுண்டி முடித்து, 8.30 மணிக்கு விமான நிலையம் சென்றேன்.

    எங்கள் குழுவில் ஒவ்வொருவருக்கும் 2அல்லது 3 கிலோ சமையல் மளிகை சாமான்கள் கொடுத்து எங்களின் செக்- இன் லக்கேஜில் எடுத்து வருமாறு கூறி, சீனாவில் வாங்கிக் கொண்டனர்.

    என் பள்ளித் தோழன் CL- அடுத்த குழுவில் செல்வதால், ஒருவருமே அறிமுகமில்லாத நிலையில், சென்னை விமான நிலையத்தில், வலியச் சென்று சிலருடன் அறிமுகமாகி, சீனாவில் என்னுடன் தங்கும் நெல்லை வேலாயுதம் என்பவருடன் உரையாடி பயணத்தைத் துவக்கினோம். விமானம் புறப்பட்டது அரை மணி நேரம் தாமதமாக.

    -பயணத்தைத் தொடர்வோம் [/hide]

    இந்த இதழை மேலும்

    இளம்பருவத்தினரை வளர்க்கும் முறை (Parenting of Adolescents)

    நடுத்தர வயதினருக்குக் குழந்தை வளர்ப்பு மிக முக்கியமான மற்றும் சவாலான பணியாகும். இந்திய வரலாற்றில் குழந்தை வளர்ப்பு முறைநீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய வரலாற்றின் பொற்காலத்தில் இருந்து புராணங்கள் மற்றும் தத்துவ ஞானிகள் சிறந்த தனிப்பட்ட மற்றும் சமூக விளைவை உண்டாக்கு வதற்கான குழந்தை வளர்ப்பு மற்றும் கையாளும் வழிமுறைகளைக் கொடுத்துள்ளனர். பழம்பெரும் காவியங்களான, இராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் குடும்ப பிரச்சனைகள், பெற்றோரின் புறக்கணிப்பு, அதிக கீழ்ப்படிதல், இளம் பருவ கலகங்கள் போன்றஉதாரணங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஒரு குழந்தை இளைஞனாக மாறும் போது பெற்றோரின் மனப்பாங்கில் ஏற்படும் மாற்றங்கள் ஆரோக்கியமான சூழ்நிலைகள் மற்றும் பேரழிவின் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கௌடல்யாவின் ‘சாணக்கியா நீதி’யின் மேற்கோள்களில் கூறப்பட்டுள்ளன.

    சாணக்கியா கூறுவதாவது, ஒரு உண்மையான மகன் தனது தந்தைக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். ஒரு உண்மையான தந்தை தனது மகனைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் உண்மையான நண்பன் நம்பகமாக இருக்க வேண்டும் மற்றும் உண்மையான மனைவி கணவனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அனைத்துப் புராண மற்றும் வரலாற்றுக் கோட்பாடுகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாத போதிலும், குடும்பத்தினர் இயக்கவியன் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு அக மற்றும் புறக்காரணிகள் குழந்தை வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    குழந்தை வளர்ப்பு முறை என்றால் என்ன ?

    குழந்தை வளர்ப்பிற்கு எந்த சூத்திரமும், முறையும் இல்லை. நாம் அன்பின் மூலம் அன்பாக இருக்கக் கற்றுக்கொள்கிறோம்.

    குழந்தை வளர்ப்பு முறையின் வரையரையானது குழந்தையை வளர்க்கும் கலையாகும். இது இருவழி முறையாகும். இதில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் தவறுகளின் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். இந்த கலையானது கற்றுக்கொள்வதினாலேயே வரும். பெற்றோரின் நடத்தைகள் எவ்வாறு இந்த செயல்முறையைப் பிரதிபக்கிறதோ அதுவே குழந்தை வளர்ப்புப் பாணி எனப்படும்.

    நம் பெற்றோர்களே இதில் பல முறைகளை நமக்குக் கற்றுத்தந்துள்ளனர். பாரம்பரிய முறையானது குழந்தைகளை ஒழுக்கப்படுத்தும் வழிமுறைகளில் வெளிப்படுகிறது. ஆகையால் நாம் சில குடும்பங்களில் திட்டுதல் மற்றும் அடித்தல் ஆகியவற்றைப் பார்க்கிறோம். மற்றவர்கள் வார்த்தை மற்றும் வார்த்தை அல்லாத பல முறைகளைச் சிறந்த முடிவிற்காக உபயோகிக்கின்றனர். புறக்காரணிகளான பெற்றோரின் கல்வித்தகுதி சமூக கலாச்சார காரணங்கள், பொருளாதாரக் காரணிகள். குடும்பத்திற்கு வரும் விருந்தினர்கள், குடும்பத்தின் அளவு,  தாயின் வேலை (சம்பாதிக்கிறவர், குடும்பத் தலைவி) குடும்பத்தில் தாயின் நிலை குடும்பத்தில் மகிழ்ச்சி அனுபவிக்கும் முறை, தாத்தா பாட்டியின் குறுக்கீடுகள் முதலானவைகள் குழந்தை வளர்ப்பிற்கு முக்கிய பங்குவகிக்கின்றன.

    குழந்தை வளர்ப்பில் மேற்கொண்டு இயற்கைக் குள்ளாக செல்லாமல் இயற்கையான உள்ளுணர்வுகள், விருப்பங்கள் குழந்தை வளர்ப்பின் முறைகள் அறிவியல் ரீதியாக மேம்படுத்தப்படுவதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் முழுநிறைவான பயனடைகிறார்கள் என்று சொல்லலாம்.[hide]

    குழந்தை வளர்ப்பு முறைகள் பல்வேறு பணிகளையும், உணர்வுகளையும் பொறுப்புகளையும், கஷ்டங்களையும் மற்றும் வெகுமதிகளையும் உள்ளடக்கி உள்ளன. இது ஒரு தொடர்ச்சியான செயல், அவ்வாறேதடையில்லாமல் தொடர வேண்டும். எனினும் இக்குழந்தை வளர்ப்பு முறைநடுத்தர வயதினைக் கடக்கும் பொழுதும் குழந்தைகள் உளைச்சல் மிக்க பருவ வயதிற்குள் நுழையும்போது, தாத்தா, பாட்டி முதிர்வயதினை அடையும் பொழுதும் சற்றே சிரமத்திற்குள்ளாகிறது.

    ஆதலால் நடுத்தர வயது பெற்றோர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய இந்த இருவேறுபட்ட தலைமுறையினருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய கஷ்டப்படுகின்றனர்.

    குழந்தை வளர்ப்பு முறைக்கான கோட்பாடுகள்:

    1. குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல்

    குழந்தைகளுக்காக நேரத்தைச் செலவிடுதல்

    1. குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளுதல் தட்டிக் கொடுத்தல். கைகளைப் பிடித்துக் கொள்ளுதல் மற்றும் பல.
    2. வீட்டில் சில பொறுப்புகளை அவர்களின் தரத்திற்கேற்ற வாறு தருதல். அவர்களாகவே தனித்து செயல்பட முடியும் போது தேவையற்றகுறுக்கீடுகளைத் தவிர்த்தல்.
    3. இளம்பருவத்தினரின் வார்த்தைகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுத்தல். குடும்ப கலந்துரையாடல் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுதல்.
    4. வெறுமையான பாராட்டு, அதிகமாக குறைகூறுதல் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் இளம்பருவத் தினரால் யதார்த்தமாக செய்யக்கூடிய காரியங்களைக் குறித்து எதிர்பார்ப்பு வேண்டும்.
    5. தற்பொழுதைய பரபரப்பான காலத்தில் அனைவரும் தினமும் ஒன்றாக சிறிது நேரமாவது செலவிட வேண்டும்.
    6. எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் உலகத்தைப் பற்றியும் சுயசரீரம் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகளைக் குறித்தும் புரிந்து கொள்ளல் வேண்டும்.

    சிறுகுழந்தைகளையும் இளம்பருவத் தினரையும் வளர்ப்பதில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பருவ வயதின் ஆரம்பத்தில் அதாவது 10-14 வயது குழந்தைகளைக் கையாளுவது, பல பெற்றோர்களுக்கு மிகக் கடினமான காரியமாக உள்ளது. ஏனென்றால் பல நேரங்கள் அவர்கள் தங்கள் பெற்றோர்கள் எதிர்பாராத செயல்களில் ஈடுபடுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளைக் கண்டிப்பான ஒழுக்க முறைகள் மூலமும், கட்டுப்பாடுகள் மூலமும் இளம்பருவத்தினர் மீது காண்பிக்கின்றனர், குறிப்பாக பெண்குழந்தைகள் மீது. பெண்குழந்தைகளின் இளம் பருவத்தின் ஆரம்பத்தில் வழக்கமாக ஏற்படும் பூப்படைதல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இளம்பருவத்தினர் விகாரமாக (சரியான அளவில் இல்லாத வளர்ச்சி)  தோற்றமளிப்பதினால் குடும்பத்தில் அநேக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒரே சமயத்தில் இளம் பருவத்தினர் குழந்தையாகவும், வாபனாகவும் நடத்தப்படுவதினால் அது இன்னும் அதிகக் குழப்பத்தை உண்டாக்குகிறது.

    ஒரு பெற்றோராக (குழந்தை மருத்துவராகவும் கூட) கண்டிப்பாக இளம்பருவத்தினரின் நடத்தை மற்றும் மனரீதியான வளர்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இளம்பருவத்தினரின் வளர்ச்சி பணிகள் மற்றும் பெற்றோர்கள் சிலசமயம் தனியாகவோ அல்லது சேர்ந்தோ குடும்ப சூழ்நிலையில் பங்களிக்கின்றனர். அது வளர்த்தல், கவனித்தல் மற்றும் நிலையான விரும்பத்தகுந்த விளைவை ஏற்படுத்துகிறது. பெற்றோரும், இளம் பருவத்தினரும் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள காரியங்களைக் கற்றுக் கொண்டால் பிறரிடத்தில் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வதும் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை அறிந்து நடப்பதும் சுலபமாகிறது.

    இளம்பருவத்தினர் அதிக மன அழுத்தத்துடன் இருப்பதால் அவர்களுக்கு உதவியும், வழிகாட்டுதலும் பெற்றோரிடம் இருந்து தேவைப்படுகிறது, ஆதலால் பெற்றோர் நலக்கல்வி முக்கியமான தொன்றாகும். இது எளிமையானதல்ல. பெற்றோர்களின் கருத்துக்கணிப்பு, நலக்கல்விக்கு பிறகு கூறியதாவது குழந்தை வளர்ப்பு என்பது எளிமையானது அல்ல, குழந்தை வளர்ப்புக் கலையை அறியாமல் இருக்கிறார்கள் மற்றும் இளம்பருவத்தினரைப் பற்றி நிச்சயம் அற்றநிலையில் இருக்கிறார்கள். பெற்றோர்களின் தொடர்ச்சியான கவனிப்பு இல்லாததால், இளம் பருவத்தினர் மற்றவருடன் ஒத்துப்போக இயலாமை, குறைந்த சுய மதிப்பு மற்றும் மனரீதியான பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.

    மனநிலை நிபுணர்கள் பெற்றோர்களின் குணநலன்களைப் பலவிதமாகப் பிரித்திருக்கின்றனர்.

    அவற்றில் முக்கியமானது, ஆளுமைப்படுத் துதல், சுதந்திரமாக விடுதல், தனியாக விடுதல், தவிர்த்து விடுதல். சூழ்நிலைகளைப் பொறுத்து பெற்றோர்கள் இந்த அனைத்து குணங்களை யும் வெளிப்படுத்துகின்றனர். எனினும் அதிகப்படியாக அவர்கள் வெளிப்படுத்தும் குணமானது அவர்களுடைய தனித்துவத்தைக் காட்டுகிறது. உலக மாற்றத்துக்கு ஏற்றதுபோல் பெற்றோர்கள் தங்களை மாற்றிக்கொள்வதால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நாம், இணைய தளங்களையும், மற்றவர்களையும் குறைகூறுகிறோம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    செல்போன் வரமா? சாபமா?

    இது இன்டர்நெட் யுகம்,  அறிவியல் கண்டுபிடிப்புகளினால், புதுமையான கருவிகளினால் உலகம் சுருக்கப்பட்டு விட்டது.  ஒரு புறம் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, மறுபுறம் அதற்கேற்ப அதனால் உண்டாகும் தீமைகளின் பெருக்கம் இணையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

    சிலர் புதுமையை விரும்புகிறார்கள், அதனால் உண்டாகும் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், மாற்றம் ஒன்றுதான் மாறாதது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காலம் என்னும் காற்றில் காணாமல் போய்விடுவார்கள் என்பது அவர்கள் வாதம்.

    சிலர் பழமையை விட விரும்புவதில்லை, பழமையைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் என்றாலும், பழமையின் பலன்கள் நலத்தைத் தந்தன, நன்மையைப் பெருக்கின, உறவை வளர்த்தன, வாழ்வை நீட்டின, ஆதலின் உயிர்கள் தழைத்தன என்று வாதிடுகிறார்கள்.

    இன்னொரு வாதத்தையும் அவர்கள் முன்மொழிகிறார்கள், புதுமையின் போர்வையில் பூதங்கள் உயிர்த்தன, நிலம்  பாழாகியது, நீர் விஷமாகியது, காற்று மாசுபட்டது, நெருப்பு நச்சுப்புகையானது. இதனால் ஆகாயப் போர்வை (ஓசோன்) ஓட்டையாகிறது. உலகு வெப்பமயமானது, உண்ணும் உணவும் நஞ்சாகியது, உயிரும் நஞ்சாகியது.   விதையும் நஞ்சாகியது, இனிப்பும் நஞ்சாகியது, புதிய வார்ப்புக்கள் சமுதாயத்தை நஞ்சாக்கியது. எங்கும் எதிலும் எல்லாமும் நஞ்சாகி தாய்ப்பாலும் நஞ்சாகும், உயிரியல் கொடுமை புதுமையின் அதிசயமாகிறது. அழிவின் ரகசியமும் அதாகவே ஆகியது. ஆதலின் பழமையை பின்பற்றுவோம், பாதுகாப்போம்  என்பது இவர்களின் வாதம், இன்றைய கண்டுபிடிப்புகளினால் பல நன்மைகள் நடந்தேறின, தீமைகளும் கலந்து வந்தன.

    செல்போன் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதனால் பல நன்மைகள் உண்டு. தீமைகளும் உண்டு, செல்போனினுடைய நன்மைகள் 1. தொலைத்தொடர்பு வசதிகளை அதிகப்படுத்தியது. 2. இன்டாநேட், இமெயில், டாக்குமெண்ட் எடிட்டிங், கால்குலேட்டார் போன்ற பல வசதியான இணைப்புகள் அதில் உள்ளன. 3. கையடக்கமானது. 4. ஆடம்பரமானது, 5. கம்ப்யூட்டர் விளையாட்டுகள் அடங்கியது. 6. நமது அன்றாட புரோக்கிராம்களை பட்டியலிடப் பயன்படுகிறது, 7. உடனடியாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ள ஏதுவாகிறது. 8. ஆபத்திற்கு உதவுகிறது, 9. செய்திகளை அதிகமாகத் தருகிறது, 10. போட்டோ எடுக்க உதவுகிறது, 11. டார்ச் லைட்டாகப் பயன்படுகிறது, 12. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது, 13. பேச்சுக்களைப் பதிவு செய்யப் பயன்படுகிறது, 14. வீடியோ எடுக்கப்பயன்படுகிறது, 15. நியூஸ் பேப்பர், புத்தகங்கள், சினிமா, வானிலை அறிக்கை, நாட்களின் பஞ்சாங்கக்குறிப்பு, மேப், வாட்ஸ்அப், யூடியூப், கூகுள் போன்ற எண்ணற்ற நன்மைகளும், நினைத்துப் பார்க்க முடியாத வசதிகளும் கொட்டிக் கிடக்கின்றன.

    செல்போனினுடைய தீமைகள் 1. தனிமை களவாடப்படுகிறது, 2. விலை உயர்வானது, 3. நம்பகத்தன்மை அற்றது, 4. அடிக்கடி கவனச்சிதைவை உண்டாக்குகிறது, 5. நேர்முகத் தொடர்பை பாழாக்குகிறது, 6. உடல் நோய்களை உண்டாக்குகிறது, 7. கண்பார்வை குறைவுபடுகின்னறது, 8. காது பிரச்சனைகளை உண்டாக்குகிறது. 9. ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது, 10. பார்க்கக் கூடாத ஆபாசக் காட்சிகளையும், அந்தரங்கங்களையும் வெளிப்படுத்துகிறது 11. சிறுவர்கள் மைதானத்தில் விளையாடும் பழக்கத்தை அடியோடு ஒழிக்கிறது, 12. ஒரு வித போதையை தருகிறது, 13. குடும்பச் சீரழிவிற்குக் காரணமாகிறது, 14. முகநூல் நட்பிற்கு அடித்தளமிட்டு ஆபத்தை விளைவிக்கிறது, 15. உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது, 16. சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் இதயம் பாதிக்கிறது, 17. பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் சிறுநீரகப் பாதிப்பையும், மலட்டுத் தன்மையையும் உருவாக்குகிறது, 18. செல்போன் இல்லாமல் போனால் ஏமாற்றம் அதிகமாகிறது, 19, ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தை உருவாக்கி தனிமைப்படுத்துகிறது, 20, பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. 21. இளையோர்களை கெடுத்து சமுதாய சீரழிவிற்குக் காரணமாகிறது, 22. இரவு நேரங்களில் தூக்கத்தைக் கெடுக்கிறது, 23. கைவிரல்களில் பாதிப்பை உண்டாக்குகிறது, 24. வாசிப்புப் பழக்கத்தை குறைவுபடுத்துகிறது, 25.புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது, 26. சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துகிறது, 27. வண்டி ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறல்கள் உண்டாகிறது, 28. பள்ளிகளிலே கல்வி போதனையைப் பாதிக்கிறது, 29. மின்னலின் போது செல்போனை உபயோகித்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது.[hide]

    இது குறித்து இயற்பியல் அறிஞர்கள் பல அறிவுரைகள் தந்துள்ளனர், மேகக்கூட்டங்கள் மோதுவதால் மின்னல் மற்றும் இடி உருவாகிறது,மின்னல்கள் 3 வகைப்படுகின்றன, 1. மேகத்திற்குள்ளேயே ஏற்படும் மின்னல் 2. இரண்டு மேகங்களுக்கிடையே ஏற்படும் மின்னல், 3,மேகங்களுக்கும், பூமிக்கும் இடையே உள்ள மின்னல் என்று  மின்னல்கள் 3 வகைப்படும்,  இதில் மேகங்களுக்கும், பூமிக்கும் இடையே உள்ள மின்னல்தான் ஆபத்தை உருவாக்குகிறது.

    மின்னல் அடிக்கும் போது குறைந்த பட்சம் 25000 வோல்ட முதல் பலகோடி வோல்ட் மின்சாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது, அதாவது சூரியனின் மேற்பரப்பில் உள்ள 30000 0  C வெப்பத்திற்கு  சமமாக மின்னலின் சக்தி இருக்கும், செல்போனில் இருக்கும் உலோகம் மற்றும் பேட்டரியின் சக்தி மின்னலில் உள்ள மின்சாரத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது, இதனால் மின்னல் ஏற்படும் நேரத்தில் செல்போனை பயன்படுத்தினால் செல்போனில் விழும் மின்னலால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    செல்போன் உபயோகிப்பவார்களுக்கு ஒரு சில அறிவுரைகள், 1.செல்போன் சார்ஜில் போடும் போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும், அச்சமயத்தில் செல்போன் வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம், 2. தூங்கும் போது  தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளக்கூடாது, வெடிக்கும் அபாயம் உள்ளது, 3. மேல்சட்டைப் பாக்கெட்டில் இடது புறம் வைத்துக் கொள்ளக்கூடாது, இதயம் பாதிப்புக்குள்ளாகும், 4. பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது, மலட்டுத்தன்மை ஏற்படும், 5. இடது காதில் வைத்துப் பேசுவது நலம், 6, தரமில்லாத பேட்டரிகளை பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டும்,

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள், அதுபோல தேவையான நேரத்தில் மட்டுமே, குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும், செல்போனுக்கு நாம் அடிமையாகி விடக் கூடாது.

    பல நேரங்களில்  செல்போன் தரிசிக்க வேண்டிய தேவதையாகிறது. ஒரு சில நேரங்களில் செல்போன் ஒரு தவிர்க்க முடியாத சாத்தானாகிறது.

    செல்போன் வரமா?   சாபமா? என்றால் சில நேரங்களில் வரம், சில நேரங்களில் சாபம், அதாவது வரம் கலந்த சாபமாகவும், சாபம் கலந்த வரமாகவும் ஆகிறது.

    ஒவ்வொரு நன்மையிலும் ஒரு தீமை இருக்கிறது, ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை இருக்கிறது என்பதும் உண்மையாகிறது.[/hide]

    இந்த இதழை மேலும்

    தமிழா உனக்காக எல்லாம் உனக்காக

    அவனுக்கு அவனது சிந்தனையில் நம்பிக்கை இருக்கும்.

    எந்த சிந்தனையானாலும் அது முதலில் உன்னால் நம்பப்பட வேண்டும்.

    அப்பொழுது தான் அது சாதனையாகும் வெற்றியாக மாறும் .

    என் உயிர்த்தமிழா தமிழ் என்றால் என்ன?

    தமிழன் என்றால் யார்?

    தமிழ் மொழியால் முடியாதது எதுவும் உலகில் இல்லை.

    தமிழனால் முடியாததும் இந்த யுகத்தினிலெதுவுமில்லை.

    மனிதன் என்பதைவிட தமிழன் என்பதை நினைத்துப் பெருமை கொள்.

    உலகப் புகழ் பெற்றவன் தமிழன்.

    தமிழ் என்பது உலகப் புகழ் பெற்றது.

    தலை சிறந்த மொழி நம் தமிழ்மொழி.

    மிகவும் இனிமையான, சுவையான, சுத்தமான, பழமையான என்றும் இளமையான, நாகரீகமான, கொச்சைச் சொல்லற்ற உயர்வகை மொழி நம் தமிழ்மொழி.

    இப்பூமியில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தகப்பன் தமிழ்மொழியன்.

    எண்ணற்ற மொழிகளில் முதலில் பிறந்தது நம் மொழி.

    உலகெங்கும் உயர்ந்த மொழி இது. தமிழ்மொழியைப் பேசுபவனும், தமிழ்நாட்டில் பிறந்தவனும் மட்டுமே தமிழனல்ல, தமிழன்  என்றால் தன்மானம் மிக்கவன், வீரம் மிகுந்தவன்; ரோசம் உள்ளவன், உலக சரித்திரம் வாய்ந்தவன், உலக வரலாற்றில் இடம் பெற்றவன், உண்மையானவன்; மென்மையானவன்; மேன்மையானவன்; நட்புக்கு இலக்கணம் வகுத்துத் திகழ்பவன், நேர்மையான வழியில் நடப்பவன்; நாகரீகத்திலும் நாணயத்திலும் சிறந்து விளங்குகிறவன், கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், கற்பிலும், தனி மனித ஒழுக்கத்திலும் இவையனைத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பவன் உலகில் தமிழன் மட்டுமே.

    கருணை உள்ளம் கொண்டவனும், மன்னிக்கும் பெருந்தன்மையுள்ளவனும் தான் தமிழன்.

    பரம்பரைத் தமிழனாகத் தமிழ் பேசு. அவன் தான் முழுவதுமான முழுமையான தமிழனாவான்.

     நம் அண்ணைத் தமிழில் உயர்ந்தது நம் கொங்கு நாட்டுத் தமிழ்.

    உலகம் தோன்றிய பொழுது தோன்றிய  மொழி, உலகம் முழுவதும்மாக அழியும் வரை உலகில் இருக்கும் என்பதற்குச் சான்றாக இருக்கும் ஒரே மொழி.

    இன்னும் ஐநூறு வருடங்களைக் கடந்த பின் தமிழ் மொழி முற்றிலும் அழிந்துவிடும் என்கிற முற்றிலும் பொய்யான கருத்துக்களையும், பேச்சுக்களையும் ஒரு போதும் நீ நம்பிவிடாதே.[hide]

    இது தமிழனின் தன்னம்பிக்கையைச் சிதைப்பதற்க்காக யாரோ ஒருவர் சொன்ன தவறான கருத்து.

    இவ்வுலகில் மெல்ல சாகும் தமிழ் என்பதும், மெல்ல மெல்லச் செத்துக்கொண்டே வரும் தமிழ் என்பதும், நம் மொழி மீது கால்ப்புணர்ச்சி கொண்டோரும், பொறாமை கொண்டோரும் சொல்லிய கருத்துக்களே இதுவாகும்.

    தமிழ் என்றும் வாழும்; எங்கும் வாழும்; என்றும் ஆளும்; எங்கும் ஆளும் என்று வீர முழக்கம் செய்வோம். சாக வரம் பெற்ற நம் தாய் மொழிக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.

    எனவே தமிழா,

    தமிழால் இணைவோம்

    தமிழால் நனைவோம்

    தமிழால் வாழ்வோம்

    தமிழால் ஆள்வோம்

    தமிழால் உயர்வோம்

    தமிழில் பேசுவோம்

    தமிழில் எழுதுவோம்

    தமிழில் படிப்போம்

    நன்றாகத் தமிழைக் கற்போம்

    தமிழா தமிழில் பேசு

    தமிழா தமிழனிடம் தமிழில் பேசு

    தமிழ் மண்ணில் பிறந்துவிட்டு தமிழ் பேசாதவர்கள், எழுதாதவர்கள், படிக்காதவர்கள் என்றுமே உண்மையான ஒரு தமிழனாய் இருக்க முடியாது.

    ஆண்மீகத்திலும் அறிவியலிலும் மருத்துவத்திலும், மகத்துவத்திலும், வீரத்திலும், தீரத்திலும் நாகரீகத்திலும், அனைத்து கலைகளிலும், பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், வரலாற்றிலும், குடும்ப நெறிமுறைகளிலும் பூமியில் இது போன்றுள்ள அனைத்து விசயங்களிலும் என்றுமே தலை சிறந்து விளங்குவது தமிழன் மட்டும் தான்.

    உலக இயக்கத்திற்கு தலைவனாகவும், பூமி ஓட்டத்திற்கு அச்சாணியாகவும், இன்று வரை இருப்பதும், திகழ்வதும் தமிழினம் மட்டுமே.

    தமிழும், தமிழனும், தமிழ்நாடும் அனைத்தையும்விட உயர்ந்தது என்பதை இனியாவது உணர்வோம்.

    எனவே தமிழா என்றும் தமிழ் பேசுவோம். தரணியை என்றும் ஆள்வோம்.

    ஆஹா, எத்தனை எத்தனை பெயர்கள் நமது தமிழனத்திர்கு…

    உண்மைக்கும் உழைப்புக்கும்

    பெயர் பெற்றது நமது தமிழினம்

    நட்புக்கும் நாணயத்திற்கும்

    பெயர் பெற்றது நமது தமிழினம்

    காவியத்திற்கும் கண்ணியத்திற்கும்

    கடமைக்கும் பெயர் பெற்றது நமது தமிழினம்

    வீரத்திற்கும், விவேகத்திற்கும்

    பெயர் பெற்றது நமது தமிழினம்

    புகழுக்கும் புண்ணியத்திர்கும்

    பெயர் பெற்றது நமது தமிழினம்

    வாய்மைக்கும் தூய்மைக்கும் வாக்குறுதிக்கும்

    பெயர் பெற்றது நமது தமிழினம்

    உலகில் முன்தோன்றிய மூத்தகுடி நமது

    தமிழ்க்குடி ஒன்றுதான்…

    உலகில் எங்கும் உயர்வாக மதிக்கப்படுவதும் உலகம் முழுவதும் ஊடுருவியிருப்பதும் நமது தமிழினம் மட்டுமே.

    நம் மானம் காத்து வானம் பரவி இமயம் தொட்டு எங்கும் வாசம் வீசிய தமிழினம் மீண்டும் மீண்டும் பல சாதனைகளும் பெயர்களும், புகழும், பெருமையும் எடுக்க சந்திரன் சூரியன் பாராது பாடுபடுவோம் நாம்.

    புதியவனே புதுமை செய்ய புன்னகையுடன் புயலாய்ப் புறப்படு.

    கடந்தகால நினைவுகள் நடப்புக் காலத்தின் காலத்தினை விழுங்குபவை.

    நடப்புக் கால நினைவுகள் தான் நாளைய நாட்களை மலரச் செய்பவை என்பதை இன்றே இனிதே அறிந்து கொள். இது உனக்கு இனிமையான வாழ்க்கையைக் கொடுக்கும்.

    பழையதையே நினைப்பவன் பின்னுக்கு முன்னேறுகிறான்.

    புதியதையே நினைப்பவன் முன்னுக்கு முன்னேறுகிறான்.

    நினைவுகளில் பழையது என்பது இறங்குவரிசை, புதியது  என்பது ஏறு வரிசை. உன் இலட்சியம் ஜனாதிபதியாக வேண்டும். கவிஞன் ஆக வேண்டும், தலைசிறந்த எழுத்தாளனாக வேண்டும். விஞ்ஞானியாக வேண்டும் என எதுவாகவும், எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    அது நியாயமானது. ஆனால் அதன் மீது உனக்கு ஆழ்ந்த தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

    அந்த தன்னம்பிக்கை உன் இலக்கிற்கான மனிதர்கள், இடங்கள், விசயங்கள்  எங்கெங்கிருக்கின்றதோ அங்கெல்லாம் பறந்து சென்று துடிப்புடன் செயலாற்ற வேண்டும்.

    அப்பொழுதுதான் அது இறுதியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கண்டிப்பாக நிறைவேறும் கைகூடும்.

    அதுவரை அதற்காக பொறுமையுடனும், விழிப்புடனும், அறிவுடனும், துணிவுடனும், தெளிவுடனும் ஓயாமல் பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    மண்ணின் மைந்தனே..

    வீழ்ந்தாலும், சாய்ந்தாலும், விழுந்தாலும் துடிப்புடன் நொடியில் கம்பீரமாக உடனே எழுந்து நிற்கும் தஞ்சாவூர் பொம்மையைப் போன்ற உடல் அமைப்பினைப் பெறு.

    தன்னை நம்புகிறவன் வீழ்ந்தாலும் தானே எழுந்து நின்று பழைய நிலைக்கு வந்து விடுவான்.

    நம்பாதவன் வீழ்ந்தவுடன் தாழ்ந்து, ஒழிந்து புதைந்து விடுகிறான்.

    தேளுக்கு வாலிலுள்ள கொடுக்கில் பலம்; பாம்புக்குபல்லில் பலம்; ஜல்லிக்கட்டுக் காளைக்கு கொம்பில் பலம்; நாய்க்கு பல்லில் பலம்; யானைக்கு தும்பிக்கையில் பலம்,  இவைகளுக்கும் இவை போன்றுள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிர்கும் ஒவ்வொன்றில் பலம் உள்ளதைப்போல் மனிதனுக்கு தன்னம்பிக்கையில் தான் அவனது பலம் உள்ளது. உடல் வலு உள்ளவர்க்கு இது இல்லையென்றால் அவ்வாறு வலுவற்றதாகிவிடும்.

    ஒவ்வொரு உயிரினங்களும் தம்மை அழிவிலிருந்து காத்துக் கொள்ள அது  அதற்குள்ள பலத்தை தற்காப்பாக வைத்து காத்து வருவதைப் போல், மனிதனுக்கும் அழிவில் இருந்து காத்துக் கொள்ள தற்காப்பாக இந்நம்பிக்கையே பயன்படுகிறது.

    தன்னை நம்புகிறவனுக்குத்தான் நம்பிக்கையான சிந்தனைகள் வரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    அப்படியென்ன குறைந்து போகும்…

    என்னங்க…இது உங்களுக்கே நல்ல இருக்க சொல்லுங்க?

    என்ன பத்மா எது நல்லாலேங்கிற?

    பாவம் அந்த மனுஷன் உங்களைப் பார்த்தும் பேசணும்னு ஓடோடி வந்தாரு… நீங்க என்னடான்னா அவரைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டீங்களே.. அதைச் சொல்றேன்… என்ன இருந்தாலும் நீங்க இப்படிச் செய்திருக்க கூடாது.

    ஓஹோ? இதைத்தான் நல்லாருக்கானு கேக்கிறயா?

    உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான்…

    நான் அப்படி வந்துட்டாலே அவருக்கெதுவும் குறைஞ்சிடலையே?

    உக்கும் உங்களுக்கு மட்டும் பேசியிருந்தா ஏதாச்சும் குறைஞ்சிருக்கமா என்ன?

    ஆமா…அவரு எங்கிட்ட நாலுமணி நேரம் பேச வேணாம்… ஒரு நாலு வார்த்தை பேசினாக் கூட எனக்குக் குறைஞ்சு தான் போகும்…

    வேடிக்கையா இருக்கு உங்களைப் பார்க்க…மனுஷனுக்கு மனுஷன் பேசிக்கிறதில அப்படி என்னங்க குறைஞ்கூடும்? இப்படி நீங்க அவரை கண்டும் காணாம வந்தது அவருக்கு உங்க மேல ஒரு கெட்ட அபிப்பிராயம் இல்லே வந்துடும்?

    அவர் என்ன எந்த மாதிரி நெனச்சாலும் எனக்குக் கவலை இல்லே.. அதைப் புரிஞ்சிக்கோ..அங்கே பாரு அவரு நம்ம சுந்தரலிங்கம் தானே பார்க்காமப் போறாரு … அடக் கடவுளே..

    சார் சுந்திரம் சார் என்ன சார் இது.. இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராமப் போனா  எப்படி? வாங்க சார் ப்ளீஸ் வீடு பக்கந்தான்.

    அடடே ராமலிங்கமா சாரிப்பா நான் கவனிக்கலே.. எப்படி இருக்கே? நீ எப்படிம்மா இருக்கே? சௌக்கியமெல்லாம் எப்படி?

    நீங்க எப்படி இருக்கீங்க சார்?[hide]

    ரொம்ப நல்லாயிருக்கேன். பகவான் புண்ணியத்திலே. அவசர காரியமா ஒரு இடத்திற்கு போய்க்கிட்டிருக்கேன்… தப்பா எடுத்துக்காதீங்க.. அப்புறம் வந்து பார்க்கிறேன் வரட்டுமா?

    ஆகட்டும் சார் போயிட்டு வாங்க…

    இது எப்படிங்க? போற மனுஷனை நீங்களே கூப்பிட்டு பேசறீங்க.. பேசணும்னு வர மனுஷனை கட் பண்ணி விட்றீங்க… என்னங்க இது?

    உண்மையைச் சொல்லட்டுமா? இதோ போறாரே இவர்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசினா தையரிமும் தன்னம்பிக்கையும் நான் நீன்னு போட்டிப் போட்டுக்கிட்டு வரும். நீ சொல்றீயே அவர் எங்கிட்ட ஒரு நிமிஷம்  பேசினாக் கூட இருக்கிற கொஞ்ச நஞ்ச தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கிற இடம் தெரியாமக் காணாமல் போகும்.. இது தேவைதானா? இப்பச் சொல்லு பத்மா அவனையே பார்த்துக்  கொண்டு நின்றாள். சரி என்பது போல.[/hide]

    இந்த இதழை மேலும்