– 2018 – December | தன்னம்பிக்கை

Home » 2018 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!

    சிற்ப கலா மாமணி ராமகிருஷ்ண ஸ்தபதி

    ஸ்ரீ பாலாஜி சிற்பக் கலைக்கூடம்

    புளியம்பாக்கம், வாலாஜாபாத்

    காஞ்சிபுரம்.

     

    மலைகள்  இறைவன் செயலென்றால்

    சிலைகள் சிற்பி திறனன்றோ

    பருத்தி இறைவன் பசியென்றால்

    உடைகள் நமது செயலன்றோ…

    என்ற வரிகள் கவிஞர் கண்ணதாசனின் கவித்துவமான வரிகளாகும். இக்கவிதையில் ஒவ்வொரு மனிதனும் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அவருக்குரிய திறமைகளை அவரவர்கள் வளர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால் அவர்கள் வாழ்க்கையில் எப்படியும் வெற்றிப் பெற்று விடுவார்கள். அந்த வகையில் இவர் தனக்கென்று தேர்ந்தெடுத்தத் துறையில் திறமையை வளர்த்து இன்று தமிழகம் முழுவதும் சாதித்து வரும் சாதனையாளர்.

    எளிமை, நேர்மை, உண்மை இதுவே இவரின் அடையாளம், எடுக்கும் செயலை திறம்பட முடிப்பதே இவரின் தனித்துவம்.

    இவரின் கை வண்ணத்தால் இன்று எத்தனையோ கோயில்களின் கருவறையில் இறைவன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். தலைசிறந்த ஸ்தபதிகளின் ஒருவரான சிற்ப கலையின் பெருமை மிக்க அடையாளமாய் விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ள ஸ்ரீ பாலாஜி சிற்பக் கலைக்கூடத்தின் நிறுவனர் சிற்ப கலா மாமணி திரு. ந.ராமகிருஷ்ண ஸ்தபதி அவர்களின் நேர்முகம்  இனி நம்மோடு….

    கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    கோவில் நகரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் கோயில் திருமாகாளம் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தேன். இந்து விஸ்வகர்மா பாரம்பரியத்தை சேர்ந்த என்னுடைய குடும்பம் அடிப்படையில் கோயில் திருப்பணி வேலைகளைச் செய்து வரும் குடும்பமாகும். என் முன்னோர்கள் வழித் தொட்டு அனைரும் இத்தொழிலை மட்டுமே செய்து வருகிறோம்.  என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி ஆவர். நாங்கள் மூவரும் எங்கள் ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் தான் படித்தோம். எனக்கு ஏழு வயது இருக்கும் போது என்னுடைய தந்தை காலமாகிவிட்டார்.  குடும்பத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் இறந்துவிட்டார் என்றால் அந்தக்குடும்பம் எத்தகைய சூழலை அடையுமே அதை நாங்கள் சந்தித்தோம். ஆனாலும் என்னுடைய தாயார் எங்களைப் படிக்க வைக்க முனைந்தார். ஆனாலும் என்னால் பள்ளிக்கல்வி வரை தான் படிக்க முடிந்தது.

    எனக்கும் சிறு வயதிலிருந்தே எங்கள் தொழில் மீது தீராத ஒரு பற்றுதல் இருந்து வந்தது. என்னுடைய தந்தையின் சகோதரர் எங்கள் குலத் தொழிலை எனக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்  என்று விரும்பினார். இதனால் என்னை பெங்களூருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். என்னோடு எங்கள் குடும்பமும் பெங்களூருக்கு வந்துவிட்டார்கள். புதிய தொழில் என்றால் ஒருவித பயமும் தடுமாற்றமும் இருக்கும். ஆனால் எனக்கு அவ்வித பயமில்லை. காரணம் சிறு வயதிலிருந்து என் குருதியோடு கலந்த தொழில் என்பதால் எனக்கு ஆர்வம் வெகுவாக இருந்தது. என்னுடைய சித்தப்பா தான் என்னுடைய இத்தொழிலுக்கு ஆஸ்தான குருவாக இருந்தார். அப்போது தான் சிருங்கேரி என்னும் ஊரில் பெரிய ராஜகோபுரம் ஒன்றை கட்டுவதற்கு என்னுடைய சித்தப்பா அதற்கு உரிமம் பெற்றிருந்தார். அப்போது அவருக்கு உதவியாக நானும் உடனிருந்தேன். இதுதான் என்னுடைய முதல் பணி என்று சொல்வேன். அப்போது நான் கற்றுக் கொடுத்தது போதும் இவன் மேலும் நன்றாக வளர வேண்டும் என்று கருதி என்னுடைய சித்தப்பா மாமல்லபுரத்தில் இயங்கி வரும் அரசு சிற்பக்கலைக் கல்லூரியில் நான்காண்டு பட்டயப்படிப்பில் சேர்த்து விட்டார்கள். இக்கல்லூரி என்னை மேலும் பண்படுத்தியது. சிற்ப சாஸ்திரங்கள் அறிந்து கொண்டேன். கட்டிடக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன் இவ்வாறே என்னுடைய பயணம் தொடர்ந்தது.

    கே: சென்னைக்கு வந்தது குறித்துச் சொல்லுங்கள்?

    நான்காண்டுபட்டயப்படிப்பில் முதல் மாணவனாகத்  தேர்ச்சிப் பெற்று, ஓரளவிற்கு சிற்பக் கலை சார்ந்த அத்துனை சாஸ்த்திரங்களையும் கற்றுக் கொண்டேன். அப்போது என்னுடைய மாமா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பெரிய ஸ்தபதியாக இருந்த  அவர் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள் மேலும் தருமபுர ஆதினம், திருவாடுதுரை ஆதினம் ஆகிய ஆதினத்துக்கு ஆஸ்தான ஸ்தபதியாக இருந்தார்கள். அவர்களுடன் ஒரு ஆறுமாதம் நானும் பணி செய்தேன்.

    அடுத்த நான் படித்த கல்லூரியின் முதல்வர் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள், இவர் எனக்கு நெருங்கிய உறவினரும்  ஆவார். இவர் டெல்லியிலுள்ள இராமகிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் உத்திரசாமிமலை என்னும்  ஒரு பெரிய முருகன் கோயில் அதுவும் முருகனின் ஆறுபடை வீட்டின் ஒன்றான சுவாமி மலை போல் கட்டப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதை கல்லூரியின் முதல்வர் அவர்கள் செய்து தருவதற்கு ஒப்புக் கொண்டார்கள். பெரிய கோயில் என்பதால் அதற்கான கல் எங்கு கிடைக்கும் என்று பார்க்கும் போது சென்னை புறநகர் பகுதியிலுள்ள வாலாஜாபாத்திற்கு அறுகாமையில் பட்டுமலைக்குப்பம் எனும் கிராமத்தில் கிடைக்கும்  என்று தெரியவந்தது. அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பு யாரெல்லாம் ஸ்தபதியாகவும், உதவி ஸ்பதியாகவும் இருக்க போகிறார்கள் என்று ஆலோசனை மூலம் முடிவு செய்தார்கள். அதன்படி  என்னை உதவி ஸ்தபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

    அதன்படி 1965 ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் மூன்று அக்கோயிலுக்கான திருப்பணிகள் சுமார் 70 சிற்பியர்களைக் கொண்டு நடைப்பெற்றது. அதன் பிறகு டெல்லிக்குச் சென்று அந்தக் கோயில் சார்ந்த திருப்பணிகளைச் செய்ய மூன்று ஆண்டுகள் அங்கேயே தங்கி பணிகளைச் செய்து முடித்தோம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் முன்னிலையில் மஹாகும்பாபிசேகம் நடைபெற்றது. டெல்லி சென்று சென்னை திரும்பிய பிறகு மஹாராஷ்ட்டிரா மாநிலம் பம்பாயில் திருச்செம்பூர் நகரில் முருகன் ஆலய கருங்கல் திருப்பணியை சுமார் எட்டு ஆண்டு காலம் நிர்மாணித்து முடித்துக் கொடுத்துள்ளேன். மேலும் எனக்கு மீனாட்சி சுந்தரம், மகேஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில் பயின்று தற்பொழுது என்னுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

    கே: சிலைகள் மற்றும் கற்கோயில்கள் செய்வதற்கான கற்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்?

    ஒவ்வொரு சிலைகளுக்கும் என்று தனித்தனியே கற்கள் இருக்கிறது.  அதில் முதலாவது பாலசிலை, யவன சிலை, விருத்தசிலை, நபும்சகசிலை என்று வகைப்படுத்தலாம்.

    ஒரு சிலை செய்ய  வேண்டும் என்று முடிவெடுத்தப்பின்னர் கற்கள் இருக்கும் இடத்திற்கு உளியும், சுத்தியலையும் எடுத்து சென்று விடுவோம். அப்போது  தேவையான கற்களை முதலில் தட்டிப் பார்ப்போம். அதில் எவ்வளவு சிலிக்கான் இருக்கிறது என்றெல்லாம் சரிபார்ப்போம். நாங்கள் எதிர்பார்த்த வகைகளில் சிலை கற்கள் இருந்தால் அதைத் தேர்ந்தெடுத்துவிடுவோம். அதன் பிறகு கல்லில் ஒரு விதமான ஓசை வரும். சிலை செய்வதற்கு இந்த ஓசை தான் முதன்மையானது.

    மெதுவாக உளியை கொண்டு அடித்தாலும் வெண்கல பாத்திரத்தின் ஓசையும், கோயில் மணியின் ஓசையும்  அதில் கேட்கும். இப்படி ஓசை வந்தால் இக்கல்லில் பிராணன் இருக்கிறது என்றும் அதுதான் சிலை செய்வதற்கு சரியானதாக இருக்கும் என்பதை கருதுவோம்.

    கல்லில் கருப்பு நிறத்தில் கோடுகளோ அல்லது வெடிப்புகளோ ஏதேனும் இருந்தால் சிலை முடியும் தருவாயில் இருந்தாலும் அந்தக் கல்லினை நீக்கிவிட்டு புதிய கல்லில் தான் மீண்டும் அந்த சிலை செய்யப்படும். இவை அனைத்தும் என்னுடைய முன்னோர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதை என்றும் நாங்கள் மீறாமல்  அதன் வழியே பின்பற்றி இன்று வரை சிற்பங்களை வடிவமைத்து வருகின்றோம்.

    கே: சாஸ்த்திரங்கள் நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள்?

    எங்கள் தொழிலின் சிறப்புப் பெற்ற நூல் சிற்ப சாஸ்த்திரம் ஆகும். சாஸ்த்திரங்கள் 18 வகையாக இருக்கிறது. அதில் காஸ்யபம், மயமதம், மானசாரம், விஸ்வகர்மீயம், சில்பரெத்தினம், ஆகிய ஐந்து நூல்கள் முக்கியமானது. கர்ப்பக்கிரகத்திற்கு என்று சில அளவு முறைகள் இருக்கிறது.

    சிலைகளை வடிவமைக்க கூறும் ஆலய கர்த்தாவானவர் அளிக்கும் அளவு முறையையும் எந்த சிலை செய்ய வேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு அவர்கள் கூறிய சிலை கருவறைக்கு ஏற்ற உயரத்தில் செய்வதற்கு கர்த்தா நட்சத்திரத்தையும் சுவாமி நட்சத்திரத்தையும் எடுத்துக் கொண்டு ஆயாதி சிற்ப சாஸ்த்திரத்தின் அடிப்படையில் பொருத்தங்களை கணித்துத்தான் அச்சிலையை வடிவமைப்போம்.

    ஒவ்வொரு சிலைக்கும்  ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரம் அனைத்தும் சாஸ்த்திரத்தில் மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. விநாயகர் என்றால் சதய நட்சத்திரம். அம்மாள் போன்ற பெண் தெய்வங்களுக்கு பூரம் நட்சத்திரம், சிவன் என்றால் திருவாதிரை நட்சத்திரம், மஹாவிஷ்ணு திருவோணம் நட்சத்திரம்,  காளிதேவி என்றால் கார்த்திகை நட்சத்திரம்,  மாரியம்மன் என்றால் மஹம் நட்சத்திரம், அனுமர் என்றால் மூலம் நட்சத்திரம்,  என்றும்   இப்படி நட்சத்திர பெயர் முறைகள் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தின் படியே சிலைகளை வடிவமைப்போம். சிற்ப சாஸ்த்திர நூல்கள் எங்கள் தொழில் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

    கே: ஒரு சிலைக்கு முகம் வடிவம் எப்படி கொடுக்கிறீர்கள்?

    ஓவியமானாலும் சரி, சிற்பமானாலும் சரி முகம் தான் மிகவும் முக்கியமான ஒன்று. சாந்தம் நிலை என்றால் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். அகோர நிலை என்றால் சற்று கோபமாக இருக்க வேண்டும் எப்படி சிலை கேட்கிறார்களோ அதுபோல வடிவமைத்துக் கொடுத்து வருகிறோம்.

    ஒரு சிலை செய்வதற்கு முன் அதை பொது அளவாக ஒன்பது பாகங்களாகப் பிரிந்து கொள்வோம். இதற்கு நவாம்ஸம் என்று பெயர் ஒவ்வொரு சிலையும் 124 அம்சத்தில் செய்யப்படலாம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு அம்சங்கள் இருக்கிறது.

    ஆண்தெய்வ சிற்ப்பம் என்றால் ஒரு அம்சம், பெண் தெய்வம் என்றால்  ஒரு அம்சம் என பிரிவுகள் இருக்கிறது. சாஸ்த்திர ரீதியாக உத்தம தெசதாளம், மத்யம தெசதாளம், கன்யசததாளம், என்றும் உத்தம தெசதாளம் என்றால் 124 அம்சமாகவும் மத்யம தெசதாளம் என்றால் 120 அம்சமாகவும் கன்யச தெசதாளம் என்றால் 116 அம்சமாகவும் சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உத்தம தெசதாளத்தில் சிவம் மற்றும் விஷ்ணு விக்ரஹங்களும் மத்யம தெசதாளத்தில் பார்வதி முதலான பெண் தேவதைகளையும் கன்யதசதளாத்தில் முருகன் மற்றும் சூரியன் முதலான தேவதைகளை செய்ய வேண்டும்.

    கே: ஆண் தெய்வ சிலைக்கும், பெண் தெய்வ சிலைக்கும் உள்ள உடல் வேறுபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்?

    அனைத்துக் கோயில்களிலும் ஆண், பெண் சிலைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அத்துனை சிலைகளும் ஒன்றைப் போலவே இருப்பதில்லை. ஏதேனும் ஒன்று வேறுபாடு காணப்படும்.

    ஆண் தெய்வ சிலையை உடம்பு ரிஷப முகம் என்று சொல்வார்கள். முகத்தின் அளவும் மார்பின் அளவும் ஒன்றைப் போலவே இருக்க வேண்டும். ஆண் என்றால் வலிமையான உடல் அமைப்புடன் காணப்படும்.

    அதுவே பெண் உடல் அமைப்பு என்று பார்த்தால் உடுக்கை போன்று அமைப்புடன் இருக்க வேண்டும். சிங்கத்தின் உருவத்தைப் போலவும், ஒவ்வொரு உடல்பாகமும் ஒரு பொருளைக் குறிப்பதாக இருக்கிறது. உதராணத்திற்கு கைகள் என்றால் பனங்கிழங்கு போன்றும், கண் என்றால் மீன், வில் போன்ற வடிவில் இருக்க வேண்டும். பெண் என்றால் மென்மையானவர் என்றால் அவர்களுக்கு அவ்வாறு தோற்றப் பொலிவுடன் வடிவமைக்க வேண்டும்.

    கே: நம் முன்னோர்களே தெய்வம் என்று கருதும் போது, சில தெய்வங்களுக்கு பல கைகள், பல முகங்கள் கொடுக்கப்படுகிறதே அதற்கான காரணங்கள் என்ன?

    அதற்கு காரணம் தன்னை விட தனக்கு மேல் ஒரு தெய்வ சக்தி இருக்கிறது என்று அனைவரும் நினைக்கிறார்கள். அது மனிதனைப் போல் அல்லாமல் சற்று மாற்று உருவம் தேவைப்படுகிறது. அது தான் ஒரு காரணம்.

    ஒவ்வொரு கடவுளுக்கும் பல உருவங்கள் இருக்கிறது. ஒரு சிலர் ஒரு தெய்வத்தை சாந்தமாக பாவித்து வணங்குவார்கள். மற்றொருவர் அதற்கு சற்று உக்கிரமாக வடிவத்தைக் கொடுப்பார்கள். மனிதர்களை விட சக்தி மிகுந்த உருவத்தை தான் நாம் தெய்வமாக ஏற்றுக் கொள்வோம்.  காளி போன்ற பெண்தெய்வம் ஆகோர தோற்றமுடையது. அதற்க்கு சாதாரணமாக இரண்டு கைகளுடன் இருந்தால் பார்ப்பதற்கு அவ்வளவு அச்சுறுத்தலாக இருக்காது, அதே 16 கரங்களுடன் ஒவ்வொரு கரங்களிலும் ஒவ்வொரு பொருள் இருக்கும். அதைப் பார்ப்பதற்கே பயத்தைக் கொடுப்பதாக காணப்படும். தவறு செய்பவர்கள் கூட கடவுள் நம்மை தண்டித்து விடுவார் என்ற பயத்தால் தவறு செய்வதைத் தவிர்த்து விடுவார்கள்.

    வில், அம்பு, சங்கு, சக்கரம் இன்னப்பிற பொருட்கள் எல்லாமே காணப்படும். பிரம்மா  போன்ற தெய்வ உருவத்திற்கு நான்கு முகங்கள். இது எதற்கு என்று பார்த்தால் நான்கு வேதங்களையும் குறிக்கும் விதமாக காணப்படுகிறது. இது அனைத்தும் ஆகம தத்துவத்தின் படியே கடைப்பிடித்து வருகின்றன.

    கே: இக்கலையிலுள்ள சவால்கள் என்ன? அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

    சவால்கள் நிறைந்த உலகத்தில் எதையும் சவால்களுடன் பார்த்தால் அதை எதிர்கொள்வதில் சற்று தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த சவாலை சமாளிக்கும் ஆற்றல் இருந்தால் எவ்வளவு பெரிய வலியையும் வலிமையாக்கலாம். இது தான் என்னுடைய தாரக மந்திரம்.

    இத்தொழில் மற்ற தொழில்கள் போல் அல்லாமல் முற்றிலும் வேறுபட்டது தான். சில வேலைகளை எல்லோரும் செய்யலாம். ஆனால் இந்த சிற்பக்கலையை முழுமையாகக் கற்றுக் கொண்டால் தான் இதில் வேலை செய்ய முடியும். சில சமயங்களில் வேலைக்கான ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் எங்களிடம் பணியிலுள்ள சிற்பிகள் கைத்தேர்ந்தவர்கள் ஆகையினால் எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளையும் செல்வனே எதிர்கொள்கிறோம்.

    கோயில் பணி என்பது ஒரு குடும்பம் சார்ந்ததாக மட்டுமே இருக்காது. ஒரு ஊர் சார்ந்து, ஒரு நகரம் சார்ந்து இருக்கும். அப்படி இருக்கும் போது வணங்க வரும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி இருக்க வேண்டும். அதற்கு எவ்வளவு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    கே: பண்டைய கால கற்கோயிலுக்கும், தற்போதைய கற்கோயிலுக்கும் ஏதேனும் வேறுபாடு இருப்பதாக நினைக்கிறீர்களா?

    கோயில்கள் என்றாலே சிற்ப சாஸ்த்திரம் வழியை மட்டுமே தான் அப்போதும், இப்போதும், எப்போதும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

    கர்ப்பக்கிரஹத்தை கருவறை என்பார்கள். அர்த்த மண்டபம் என்பது கருவறைக்கு வெளியே இருப்பது, மகாமண்டபம் என்பது பெரிய அளவுடையது, அங்கு வணங்க வருபவர்கள் அமர்ந்து கொள்ளலாம்.

    கர்ப்பக்கிரஹ அளவில் அர்த்த மண்டபம் அறை, முக்கால், முழு அளவில்  இருக்கலாம். மஹா மண்டபம் கர்பக்கிரஹத்தை போன்று மூன்று  மடங்கு பெரிதாக இருக்கலாம். சோபான மண்டபம் தூண் போன்றவை இருக்கும். நிருத்த மண்டபம் நாட்டிய நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தைக் குறிக்கும். இப்படித்தான் அனைத்துக் கோயில்களையும் ஒன்றைப் போலவே வடிவமைக்கப்படுகிறது.

    மனித உடலை போன்ற அமைப்பைத்தான் கோயிலாக வடிவமைக்கப்படுகிறது. கோயிலின் மேல் உள்ள விமானங்கள் மாறுபடலாம். ஆனால் கோயிலின் வடிவமைப்பு எப்போதும் சாஸ்த்திரம் படியே இருக்கும்.

    கே: சாதாரண ஒரு கல்லை சிற்பமாக்கி அதைத் தெய்வாக்கி மக்கள் அனைவரும் வணங்கும் பொழுது உங்களின் மனநிலை எப்படியிருக்கிறது.

    செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அது என்னுடைய இந்தத் தொழிலுக்கு மிகவும் பொருந்தும். அப்படிருக்கும் போது மனதுக்கு ஆனந்தமாகவும், மனநிறைவாகவும் இருக்கும். ஒரு விக்ரஹம் செய்து முடித்தவுடன் அதோடு முடிவதில்லை. அது  மக்கள் வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சிப் பெற வேண்டும், அதை செதுக்கும் சிற்பியும் வளர வேண்டும், கிராமமும் வளர வேண்டும். இப்படி எல்லாத்தையும் பார்க்க வேண்டும்.

    கோயில் இல்லாத ஊர் பாழ் என்று சொல்வார்கள், அப்படியிருக்கும் போது எவ்வளவு நுட்பமாக செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சிலையை செய்தவுடன் ஜலாதிவாசம், தன்யாதிவாசம், புஷ்பாதிவாசம், ஷீராதிவாசம் இப்படி நிறைய பூஜைகள் இருக்கிறது. சிலையை ஆர்டர் செய்தவர்கள், அதை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் முன்னர் இங்கேயே மாத்ரு பூஜை ஒன்றை செய்வோம். ஆர்டர் செய்தவர்களே பூஜைக்கு தேவையான அத்துனை பொருட்களையும் வாங்கி வந்து விடுவார்கள்.  அதைக் கொண்டு அத்துனை பூஜைகளும் செய்து  முடித்துத் தான் விக்ரஹங்கள் எடுத்துச் செல்லப்படும்.

    கோயிலுக்கு சென்றவுடன் சிலையை 48 நாட்கள் ஜலாதிவாசம் செய்வித்து அடுத்த 48 நாட்கள் தான்யாதிவாசம், அடுத்த புஷ்பாதிவாசம், பிறகு ஷீராதிவாசம் அடுத்து தனாதிவாசம் செய்வித்து இறுதியாக ஸ்தபதி ஆனவர் விக்ரஹத்திற்கு தங்க ஊசி மற்றும் வெள்ளி சுத்தியலைக் கொண்டு கண்திறத்தல் சுபநிகழ்ச்சியை செய்விப்பார்கள். இதை நேத்ரோன்மிலனம் என்று சொல்வார்கள். இவ்வாறு கண் திறத்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமு விக்ரஹம் கண்ணாடியில் முகம் பார்த்து பிறகு கன்றுடன் கூடிய பசு, சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள், யாவரும் பார்த்து முடித்த பின்னர் விக்ரஹங்களுக்கு தீப ஆராதனைகள் நடைபெற்று கடைசியாக சயனாதிவாசத்தில் செய்வித்து பிறகு விக்ரஹத்தை கருவரைக்குள் எடுத்துச் சென்று மந்திர ரூபமான யங்திரம் நவரத்தினம் ஆகியவற்றை விக்ரஹத்திற்கு கீழ் வைத்து திரிபந்தனம் இட்டு பிரதிஷ்ட்டை செய்து அஷ்டபந்தனம் செய்விக்கப்படும்.

    கே: நீங்கள் கடந்த வந்த இந்த வாழ்க்கைப் பயணத்தில் உங்களால் மறக்க முடியாத சம்பங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

    என் வாழ்க்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு சிலையும் செய்யும் போது மனதில் மிகுந்த பயபக்தியோடு தான் செய்திருக்கிறேன்.

    ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 33 அடியில் விஷ்வரூப அனுமன் விக்ரஹம் (27 அடியில் விக்ரஹமும் 6 அடியில் ஆதாரபீடமும்) செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த விஸ்வசம்ரண மாருதி சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் மூலமாக ஆர்டர் பெற்று விக்ரஹம் செய்வதற்கு தேவையான 33 அடி நீளம் கொண்ட ஒரே கல்லினை சிருதாமூர் என்ற கிராமத்தில் உள்ள கல் குவாரியில் தேர்ந்தெடுத்து எங்களது சிற்பக்கலைக் கூடத்திற்கு எடுத்து வந்து அவர்கள் எண்ணியது போல் சிலையை அழகுபட செய்து கொடுத்தது எப்போது நினைத்தாலும் என் மனதில் நீங்காத ஒரு நினைவுகள் இந்த சிலையை வடிவமைத்தது தான்.

    கே: சமீப காலமாக நம் பாரம்பரிய சிலைகளைத் திருடப்பட்டு, அச்சிலைகளை மீட்கப்பட்டு வருகிறது, அது பற்றிச் சொல்லுங்கள்?

    அப்படி கடத்தப்படும் சிலைகள் எதுவும் தெய்வமாக வணங்க எடுத்துச் செல்வதில்லை. பண்டைய காலத்தில் செய்யப்படும் சிலைகள் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது என்பதால் அது விலை மதிப்பு மிக்கது.

    ஆகவே அச்சிலையை திருடுபவர்கள் அதனை விற்பனை செய்து விடுவார்கள். அல்லது வெளிநாட்டில் உள்ள அருங்காட்சியகத்திற்கு விற்பனை செய்து விடுகிறார்கள். இதற்காகத்தான் சிலைகள் திருடப்படுகின்றன. தற்போது நிறைய பழையான சிலைகள் மீட்கப்பட்டு வருவது  சிறப்பான ஒன்று தான்.

    கே: எதிர்காலத்தில் இது போன்று ஒற்றை வடிவமைக்க வேண்டும் என்று எதையாவது நினைத்ததுண்டா?

    அப்படி நிறைய இருக்கிறது. கிராம தேவைகள் என்று சொல்வார்கள். அதற்கு என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இத்தனை காலம் ஆதாரம் இல்லாமல்  தான் அச்சிலைகளை செய்து வருகிறார்கள். அதற்கு ஒரு ஆதாரம் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக கருப்பசாமி தெய்வம் ஏன் ஆக்ரோசமான தெய்வமாகவே கருதப்படுகிறது. அது ஏன் கையில் வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறது, போன்றவை பார்க்க வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இதற்கு இதுதான் ஒரு வடிவம் என்று முறைப்படுத்த வேண்டும்.

    நிறைய கோயில்கள் சென்று ஒவ்வொரு கடவுளையும் பார்த்து, அதில் உள்ள சுவாமி வடிவமைப்பு, ஆயுதங்களை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன். சேகரித்த தகவல்களை அனைத்தையும் ஒன்று திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும். இது தான் என்னுடைய கனவாக இருக்கிறது.

    கே: பெற்ற பட்டங்கள் குறித்து?

    திறமையும் புதுமையும் இருந்தால் பட்டங்கள் நம்மை வந்து தானாவே சேரும் என்பதை நம்புவன் நான். அப்படி நிறைய பட்டங்கள் வாங்கியிருக்கிறேன். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மூலமாக சிற்ப கலாமாமணி விருது, ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சார்ய குரு ஸ்வாமிகள் ஆதீனத்தின் மூலம் எழில் சிற்ப மாமணி விருது, அக்காடமி ஆஃப் யுனிவர்சல் குலோபல் பீஸ் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம், சுதேசி பத்திரிக்கை அமைப்பு மூலம் தர்மோ தாரண விருது மற்றும் தமிழக அரசின் பூம்புகார் கலைக்கூடம் வழங்கிய 2016-2017 ஆம் ஆண்டிற்கான வாழும்பலைப் பொக்கிஷம் விருதினையும் பெற்றுள்ளேன்.

    கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    சாதிக்க வேண்டும்  என்று முடிவெடுத்துவிட்டால் உங்களுக்கான துறையை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களால் முடிந்தளவிற்கு உழைத்திட வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும.

    நம் உடலில் அனைத்து விதமான சக்தியும் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வந்து சிந்தித்து செயல்பட வேண்டும். அவ்வாறு இருந்தால்  வெற்றி பெற்று விடலாம்.

    இந்த இதழை மேலும்

    விளையாட்டில் சாதிக்கும் பள்ளி

    இயற்கை எழில் கொஞ்சும் கொடிவேரி அணைக்கு அருகே கம்பீரமான தோற்றத்துடன் அமைதியான, பசுமையான சூழலில் அமைந்துள்ள பள்ளி தான் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி. பூத்துக் குலுங்கும் மரங்களில் பறந்து திரியும் மாணவ மாணவிகளைக் கொண்ட கலைகளின் விளை நிலம் தான் எமது பள்ளி. சுமார் அரை நூற்றாண்டு அதாவது 57 ஆண்டுகளாக சாதனைகளின் சிம்மாசனமாய் திகழும் சரித்திர புகழ் வாய்ந்ததுதான் எமது புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி.

    மாணவர்களுக்கான கூடைபந்து, கோ-கோ மற்றும் கால்பந்து போட்டிகளில் குறு மைய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகின்றார்கள் எமது மாணவர்கள்.

    மாணவிகள் பிரிவில் கோ-கோ, கூடைபந்து மற்றும் தடகளத்தில் குறுமைய அளவில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டம் பெற்று சாதனை படைத்து வருகிறோம். மேலும் கபாடி போட்டியிலே இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் என மூன்று பிரிவுகளிலும் குறு மைய, மாவட்ட மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி, யாரும் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் எம் பள்ளி மாணவிகள்.

    கவிதா என்ற மாணவி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 100மீ, 200மீ பிரிவுகளில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

    லோகேஸ்வரி என்ற மாணவி இரண்டு ஆண்டுகளாக 80 மீ தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் 4*100 தொடர் ஓட்டப் போட்டியில் மண்டல அளவில் பாபாபெங்கேற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

    விதிமுறைகள்:

    • தொடர்ச்சியான பயிற்சி
    • முழுமையான ஈடுபாடு
    • வழிகாட்டுதல்

    இந்த மூன்று மந்திரங்கள் தான் எம் பள்ளியையும் வீரர்-வீராங்கனைகளையும் உருவாக்கி உயிரோட்டமுள்ளவர்களாக்கியுள்ளது.

    வருடம் முழுவதும் தினந்தோறும் மாலை பள்ளி முடிந்ததும் பயிற்சி ஆரம்பிக்கும். ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியான பயிற்சிகள் இருக்கும்.

    பயிற்சியில் பங்கு பெறும் மாணவ-மாணவிகள் பல்வேறு தடைகளைத் தாண்டி முழுமையான ஈடுபாட்டுடன் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், பயிற்சி பெற உரிய இடம், பெற்றோர் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

    உடற்கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகள் இளம் வீரர்-வீராங்கனைகள் ஆண்டுதோறும் பெருகி கொண்டே  இருக்கிறார்கள். இவை அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குவது ஒழுக்கமே பெரிய கொடிவேரி. புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி பெயரைக் கேட்டாலே முதலில் நினைவுக்கு வருவது பள்ளியில் நிலவும் ஒழுக்கமே.

    பல்வேறு மாவட்டங்கள், ஊர்களிலிருந்து வரும் மாணவ-மாணவிகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை ஆதரித்து, அரவணைத்து ஒரு சிறந்த குடிமகனாக மாற்றும் மிகப்பெரிய கல்விப் பணியை சீருடனும், சிறப்புடனும் செய்து வருகிறது எமது பள்ளி.

    கரூரில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டியில் எங்கள் பள்ளி மாணவிகள் ஈரோடு அணிக்காக பங்கேற்று விளையாடி இரண்டாம் பரிசை பெற்று வந்துள்ளோம்.

    பள்ளி அளவிலான போட்டிகளில் மட்டுமின்றி தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகம் நடத்தும் போட்டிகளிலும் பங்கு பெற்று பரிசுகளும், சான்றிதழ்களும், கோப்பைகளும் பெற்று வருகிறார்கள் எம் வீரர்-வீராங்கனைகள்.

    அடுத்தகட்ட முயற்சிகள்:

    ஆண்டுதோறும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகளே மிகப்பெரிய சாதனைகளை செய்து வெற்றி வீரர்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையை மாற்றி எம் பள்ளியில் பயிலும் மாணாக்கர் அனைவரும் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாக பள்ளியை விட்டு செல்ல வேண்டும் இதுவே எம் பள்ளியின் குறிக்கோள்.

    தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகம் நடத்திய மிக இளையோர் மாநில சேம்பியன்ஷிப் கபாடி போட்டியிலே எம் பள்ளி மாணவிகள் ஈரோடு மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். திருவேற்காட்டில் நடைபெற்ற போட்டியிலே மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்று பள்ளிக்கும், பெற்றோருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இனிவரும் காலங்களில் முதல் பரிசை பெற்று தமிழ்நாடு அணியில் இடம்பிடித்து மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க தயாராகி வருகிறோம்….

    தமிழ்நாடு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கபாடி வீராங்கனைகளின் விபரங்கள்:
    பெயர் படித்த வகுப்பு ஆண்டு சென்ற இடம்
    S. ரம்யா 8ம் வகுப்பு 2015 சத்தீஸ்கர்
    M. மைனாவதி 10ம் வகுப்பு 2016 தெலுங்கானா
    K.லாவண்யா 8ம் வகுப்பு 2016 மத்திய பிரதேசம்
    K. அபிராமி 8ம் வகுப்பு 2017 சத்தீஸ்கர்
    S. ரம்யா 10ம் வகுப்பு 2017 மத்திய பிரதேசம்
    M. மைனாவதி 11ம் வகுப்பு 2017 டெல்லி
    S. லோகேஸ்வரி 9ம் வகுப்பு 2018 பெங்களூர்
    S. ரம்யா 11ம் வகுப்பு 2018 மத்திய பிரதேசம்
    M. மைனாவதி 11ம் வகுப்பு 2018 டெல்லி

    ஓடி விளையாடு பாப்பா

    நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

    ON YOUR MARK, GET SET GO

    இந்த இதழை மேலும்

    சாந்தியோடு பிரயாணம்

    நாம் எவ்வளவு மணி நேரம் பிரயாணம் செய்தாலும், அது பகல் அல்லது இரவு நேரப் பிரயாணமாக இருந்தாலும், பேருந்து அல்லது இரயில் பிரயாணமாக இருந்தாலும், மோசமான ரோடு அல்லது மோசமான வாகனம்  அல்லது இரண்டுமே மோசமாக இருந்தாலும், சுயமாக கார் ஓட்டினாலும், வாடகைக் காரில் பயணித்தாலும் பிரயாணம் செய்த களைப்பே இல்லாமல், (கவனிக்கவும் பிரயாணம் செய்த களைப்புத் தெரியாமல் அல்ல இல்லாமல்)  அடுத்த நாள் காலை தொடர்ந்து நம் வேலைகளைப் பார்க்கும் படியான உடல் சக்தியமைப்பு வேண்டுமா? “இது என்ன காதில் பெரிதாக சூரிய காந்திப்பூவையே வைக்கும் அளவிற்கு கதையளக்கிறீர்கள்’ என்று நீங்கள் கேட்க நினைத்தாலும் நான் சொல்வது உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை. இதை உங்கள் தலைமேல், மன்னிக்கவும் என் தலைமீது வைத்து சத்தியமும் செய்யத் தயார்.

    மன்னிக்கவும் என் தலைமீது வைத்து சத்தியமும் செய்யத் தயார்.

    அன்புத் தோழ தோழியர்களே! பிரயாண களைப்பே இல்லாமல் பிரயாணம் செய்ய என்னிடம் ஒரு அற்புத இரகசியம் இருக்கிறது. அலாவுதினுக்கு ஒரு அற்புத விளக்குபோல்  எனக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் ஒரு அற்புத விஷயம் இருக்கிறது. அதைக் கொண்டுதான் கடந்த 15 வருடங்களாக பிரயாணம் செய்து வருகிறேன். அது வேறு ஒன்றும் இல்லை 15 வருடங்களுக்கு முன் நான் தவமாய் தவமிருந்து பெற்றுக் கொண்ட சாந்தி என்ற தவப் புதல்விதான். அன்றிலிருந்து எந்த ஒரு பிரயாணத்தையும் அவளோடுதான் நான் மேற்கொள்கிறேன்.

    அவளின் அற்புத சக்தியாக்கத்தால் பிரயாண களைப்பு இன்றி பிரயாணங்களை ஆனந்தமாக மேற்கொள்கிறேன். ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே! சாந்தி என்ற சக்தி வாய்ந்த தவப் புதல்வி என்பது வேதாத்திரி மகரிஷி அவர்களின் யோக அமைப்பில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு யோக நிலையாகும்.  அந்தப் பயிற்சி நம் கைவரப்பெற்றிடின், நம் பிரயாணங்களில் நாம் சாந்தி தவ நிலையில் இருந்தால், பிரயாணக் களைப்பின்றி இருக்கலாம்.

    அன்புத் தோழ தோழியர்களே!  நாம் சாந்தி தவம் இயற்ற வேண்டுமாயின் நாம் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ‘எளிமைப்படுத்திய குண்டலினி யோக’ அமைப்பில் தக்க குருவிடம் தியான தீட்சை பெற வேண்டும். அதன் பின்னர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முறையான தியானப் பயிற்சியை மேற்கொண்டு தியானம் கைவரப் பெற்ற பின்னர் இந்த சாந்தி தவத்தை சகஜமாக நாம் பிரயாணத்தில் இயற்ற முடியும். அப்படி சாந்தி தவ நிலையில் பிரயாணம் மேற்கொள்ளும் போது உடலின் ஏழு ஆதாரச் சக்கரங்களின் மூலம் நம் உடலுக்கு ஆகாச சக்தி கிடைக்கப் பெறுவோம். அப்படி பெறப்படும் சக்தியானது நம் பிரயாணக் களைப்பை நீக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.

    நாம் வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடனேயே சாந்தி தவ நிலைக்குப் போக முடியும். இதில் விசேஷம் என்னவென்றால், நாம் சாந்தி தவநிலைக்கு வந்தபின்னர் நம் ஆழ்மனம் அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும். நாம் நம் வெளி மனதின் மூலம் பேசவும் பார்க்கவும்  செய்தாலும் சாந்தி தவ சக்தி நிலை, நிலையாகத் தொடரும். அப்புறம் நாம் சாந்தியில் இருக்கும்போதே தூங்கிவிட்டாலும் நம் ஆழ்மனம் நம்மை சக்தியாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கும். பிறகு நாம் விழித்துப் பார்க்கும்போதும் சக்தியுடன் இருப்பது தெரிய வரும்.

    அன்புத் தோழ தோழியர்களே! இது எப்படி வேலை செய்கிறது என்று விஞ்ஞான பூர்வமாக ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். நாம் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது முதலில் நமக்குத் தயக்கம் வரும். காரணம் அதுபற்றிய மேல் மனதின் அறியாமைதான். பிறகு நாம் முயற்சி செய்து பலமுறை ஓட்டிப் பழகியபின்பு நாம் ஹாயாக பேசிக் கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் கார் ஓட்டுகிறோம். நாம் முதலில் முன்பின் தெரியாத மற்றும் பழகாத வரைக்கும் அது நம் மேல் மனம் சார்ந்தச் செயலாக இருக்கிறது. அதுவே, நாம் திரும்பத் திரும்ப ஓட்டிப்பழகும் போது அது நம் ஆழ்மனதின் வசமாகிவிடுகிறது. அதுபோலத்தான் நாம் பிரயாணம் செய்யும் போது சாந்தி தவத்தில் நிலைகொள்ளும் வரை மேல்மனம் சார்ந்ததாக இருக்கிறது. பிற்பாடு பழகிய பிறகு அது ஆழ்மன கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது.

    இந்த இதழை மேலும்

    வாழ நினைத்தால் வாழலாம் – 23

    சவால்கள்

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா? என்ற மன்னரின் சவாலுக்கு பதில்தான் அந்த கவிதை.

    அந்த கவிதையில் பிழை இருக்கின்றது என்ற ஒரு கவிஞனின் சவாலுக்கு பதில்தான் கடவுளின் வாக்குவாதம்.

    அந்த வாக்குவாதச் சவாலுக்கு பதில்தான் நெற்றிக்கண் திறந்து தண்டனை.

    அந்த தண்டனை சரியா என்ற சவாலுக்கு பதில்தான் இறைவனின் கருணை.

    அந்த கருணையின் சவாலுக்கு பதில்தான் மனிதனின் பக்தி.

    இப்படி ஒன்றுக்கொன்று தொடராக இருப்பதே சவால்களின் சிறப்பு.

    சகுனியின் சவால்கள் – பஞ்சபாண்டவர்களை “பஞ்ச” – பாண்டவர்களாக ஆக்கியது.

    Guinness World Records புத்தகத்தின் பக்கங்கள் பிரதிபலிப்பது சவால்களும் – அதன் விடைகளும் – விளக்கங்களும் – மற்றும் விடைசொன்ன சாதனையாளர்களின் விலாசங்களும் தான்.

    விஞ்ஞானம் வைத்த சவால்கள் தான் கற்காலத்தில் கணைகளை வீசிய மனிதன் இப்போது ஏவுகணைகளை வீசும் அளவு வளர்ந்த கதை.  அவை வரலாற்றின் பெருமைப் பக்கங்களில் பதிவு செய்து வைக்கவேண்டியவை.

    “சவால்கள்” – வெற்றியாளர்களின் உற்சாக சுரப்பி.

    “சவால்கள்” – சாதனைப் பிரியர்களின் பெருமைப் பொக்கிஷம்

    “சவால்கள்” – எதிர்க்கத் துணிபவரின் ஏழாம் அறிவு

    “சவால்கள்” – வளமான எண்ணங்களின் வண்ணப் கோலம்

    “சவால்கள்” – அர்த்தமுள்ள வாழ்வின் அடுத்த படிக்கட்டு

    இந்த குணங்கள் சுவர்க்கபுரியின் கதவுகளை திறக்கும் சாவிகள் – என்பதே நிதர்சனமான நிஜம்.

    ஒரு உயர்ந்த கோபுரம்.  அதன் உச்சியில் ஒரு தீபம்.  அதை எட்டிட வேண்டும், தொட்டிட வேண்டும் என்பதே ஒரு தவளைக் கூட்டத்துக்கு விடுக்கப்பட்ட சவால்.  செங்குத்தான கோபுரத்தின் சுவர்கள் முழுதும் வழுக்கும் பாறைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டது.  பல தவளைகள் பாதியிலேயே விழுந்தது.  உங்களால் முடியாது என்று பலர் கொடுத்த குரல்களின் எதிரொலி – எஞ்சியிருந்த சில தவளைகளின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.  ஒரேயொரு தவளை மட்டும் – மேலே, மேலே – இன்னும் மேலே என்று ஏறி உச்சியின் முகப்பை தொட்டது.  பாராட்டுகள் குவிந்தன.  எப்படி உன்னால் முடிந்தது என்ற கூட்டத்தின் கேள்விகள் அதன் காதில் விழவில்லை – காரணம் அதற்க்கு காது கேட்காது.

    “தன்னம்பிக்கையை தகர்க்கும் வார்த்தைகளை காதில் வாங்காமல் முயன்றால், முடியாதது ஏதும் இல்லை” என்பதை இந்த தவளை உணர்த்தியது.

    நீங்களும் தவளைகளாக இருங்கள் என்று நான் சொன்னபோது, அறிவில் சிறந்த சில ஞானிகள் “மனிதர்கள் தவளைகளாகத்தான் இருக்கிறார்கள்.  “கோபுரத்தின் மடியில் அல்ல – கிணற்றின் அடியில்” கிணற்றுத்தவளைகளாக – என்றார்கள்.

    அதிர்ச்சியாக இருந்தாலும், ஆராய்ந்து பார்க்கும்போது , அவை உண்மை என்றே என்னால் உணர முடிந்தது.  இதோ அந்த ஆதாரங்களின் அணிவகுப்பு.

    முதிர்ந்த இலைகளை கொண்டு, ஊதும் முன்பே உதிரும் நிலையில்தான் பெரும்பாலான முதியவர்கள்.  முதியோர் இல்லத்து கதவுகளும், தங்கள் மகன் வீட்டு சுவர்களும் தான் அவர்கள் கடைசிவரை கண்டது.  தன் மகனையும் எதிர்க்க முடியாமல், எமனையும் ஏற்க முடியாமல் சாவோடு போராடும் போராட்டம் ஒன்றுதான் அவர்களின் “சவால்”.  மரணத்தை அவர்கள் வென்றாலும் (முக்தி அடைதல்) மரணம் அவர்களை வென்றாலும் (இறந்துபோதல்) – அவர்களுக்கு நன்மைதான்.

    எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.  இன்றைய மன்னர்கள் இப்போது “மதுவின் மயக்கத்தில்”.  இளவரசர்களும் இப்படித்தான்.  இளைய தலைமுறையின் உண்மையான சவால்கள் இதோ!

    Unqualified ஆட்கள் ஆசிரியர்களாக பல பள்ளி, கல்லூரிகளில் பாதிப்பேருக்கும் மேல் பாரபட்சம்.  இது கல்வித்துறை வைக்கும் சவால்.

    புத்தகம் படிக்கும் பழக்கம் போதிக்கப் படாததால் – பல சரித்திர சாதனைகளை பற்றிய அறிவே இல்லாமல் இருப்பது, இன்றைய இளைஞர்களை “சரித்திரம் படிக்கவும் விடுவதில்லை – சரித்திரம் படைக்கவும் விடுவதில்லை.  ஆமாம்.  Sardar Patel இப்போது சிலை திறந்த பின் தான் பலருக்கும் தெரிகின்றது.

    ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், Engineer கள், Doctor கள் என ஒவ்வொரு வருடமும் படித்துமுடித்து வெளியில் வந்து – படிக்க முடியாத இன்னொரு கூட்டத்துக்கும் போட்டியாக இணைவதால் – வேலையில்லாத் திண்டாட்டம் வெறிகொண்ட நாய் போல பயமுறுத்துகின்றது -மிகப் பெரிய சவால் தான்.  இதிலே இன்னொரு பிரச்சினை என்னவென்றால் – மற்ற மொழிகளை மதிக்கக்கூடாது என்று யாரோ சிலர் எதற்கோ சொன்ன பேச்சை நம்பி தமிழைத் தவிர எதுவுமே தெரியாமல் தடுமாறும் அவலம்.  ஆங்கிலமும் அரைகுறை.  தமிழ்நாட்டு ஆர்ழ்க்ங்ழ் ஐ தாண்டிப்போக முடியாத அவலம் -அறிவு மனிதனிக்கு வைக்கும் ஒரு சவால்.

    அரசாங்க உத்தியோகம்தான் வேண்டும் என்று காத்திருப்பது.  (பின் சம்பளம் போதவில்லை என்று Strike செய்வது தனிக்கதை)  தகுதிக்தேர்வுகள் தமிழில்தான் நடத்த வேண்டும் என்ற தர்க்க வாதம்.  வாதம் முடிந்து வாழ்க்கைக்கு வரும்போது வேறு மொழி தெரிந்தவன் வேலையில் சேர்ந்திருப்பான்.  இது மொழி மனிதனுக்கு வைக்கும் மற்றொரு சவால்.

    America வில் இருக்கும் நிறுவனம் அல்ல் மூலமாக அகில உலகமும் வியாபாரம் செய்யும் சூழலில், உள்ளூர் முதலாளி உயிரைக்கொடுத்து தொழில் செய்தாலும் பெரிய வளர்ச்சி இல்லை.  இந்த நிலை தொடர்ந்தால் – Industrial Estate p Estate தான் இருக்கும் Industry அதிகம் இருக்காது – என்பது தொழில்துறை விடுக்கும் சவால்.

    இத்தனை பலவீனமான அடித்தளத்தை நம்பி கோட்டை கட்டுவது சரியா?  சிந்திக்க வேண்டும் சமூகம்.

    “காலையில் கண் விழிப்பது தொடங்கி இரவு கண் தூங்குவது வரை” – சவால்களின் தொகுப்பாகவே வாழ்க்கை ஆகிப்போனது.  பெரும்பாலும் சவால்களே ஜெயிக்கின்றன!  சமூகம் தோற்கின்றது!

    இத்தனை சவால்கள் இருக்க, தொலைகாட்சி Game Show, Blue Whale ல் உயிரை விடுவது, சீட்டாடுவது தப்பு என்று சொல்லும் பாரம்பரியத்தில் வந்ததை மறந்து Online Rummy விளையாடி – தன்னை ஒரு Dummy ஆக்கிக் கொண்டு, பெரும்புள்ளி ஆகவேண்டிய ஒரு பெரிய சமூகக் கூட்டம் கரும்புள்ளியோடு கொஞ்சமும் கவலையே இல்லாமல்.

    தரமற்ற கல்வி – மோசமான சூழ்நிலைகள் – சுகாதாரமின்மை – போதை பழக்கம் – நாகரீகமற்ற நடத்தை – சுயநலம் – என்ற கலவைகளை கொண்டு கட்டப்படும் சமூகம் எனும் கட்டடம் – நிழல் கூட தராது என்பதே நிதர்சனம்.

    Building Strong but Basement Weak!

    மருந்துகள் மட்டுமல்ல, இப்போது பல மருத்துவர்களும் போலி என்பது வியாதிகளை விட பெரிய வியாதியாகி விட்டது.  மருத்துவ மனைகளுக்கு Master Wealth Checkup செய்ய வேண்டிய அளவுக்கு மருத்துவம் Costly ஆகிப்போனது – மருத்துவத்துறை மனிதன் மீது தொடுக்கும் மற்றொரு சவால்.  பல மருந்துகளை நோயாளிகளின் மீது திணிப்பதால் – பலர் பாவம், இல்லாத வியாதிக்கும் சேர்த்து மருந்து உட்கொள்கிறார்கள்.

    குடும்ப உறவுகளை கொச்சைப்படுத்தும் தொடர்கள், நட்பை கேவலப்படுத்தும் காட்சி அமைப்புகள், ஆண்டவனையும், ஆன்மீகத்தையும் அசிங்கப்பத்தும் தீர்ப்புகள் – இப்படி திரும்பிய திசையெங்கும் சமூகத்தை சகதியில் வீழ்த்த முயலும் சதிகள்.  இந்த சவால்களை எல்லாம் உணர்ந்துகொள்ள வேண்டிய தருணத்தில் தான் ஒவ்வொருவருமே.

    பத்து ரூபாய் தேநீருக்கே Perfection பார்க்கும் குணம் கொண்ட மனிதன் – பல சவுக்கடிகள் பெற்றும், தான் ஏமாளியாக நிர்ப்பதுகூட தெரியாமல் விழிப்பது – வேடிக்கை அல்ல வேதனை.  ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே ஏமாந்து கொண்டிருக்கும் இந்த மனிதப்பூனைக்கு தெளிந்த சிந்தனை எனும் “மணியை” கட்டுவோம்.

    மணி (Money பணம்) ன் அருமையும் தெரியாமல், மணி (Time நேரம்) ன் அருமையும் தெரியாமல் வாழும் பல குருட்டுப் பூனைகளுக்கு இந்த வெளிச்ச மணிகள்.

    முடிந்தவரை பல மொழிகளின் ஆளுமையை குழந்தைகளின் மூளைக்குள் செலுத்துங்கள்.  படிப்பும், மொழியும் 2 கண்களைப் போன்றவை என்று புரிய வையுங்கள்.

    என் இந்த கருத்துக்கு காரணம் உண்டு.  ஒவ்வொரு நாளும் வாழ்வின் தரம் குறைந்துகொண்டே போகின்றது.

    உங்கள் முப்பாட்டன் வாழ்ந்த ஆரோக்கியமாக வாழ்வை – உங்கள் பாட்டன் வாழவில்லை.

    உங்கள் பாட்டன் வாழ்ந்த அமைதியான வாழ்வை – உங்கள் அப்பன் வாழவில்லை.

    உங்கள் அப்பன் வாழ்ந்த தொலைந்துபோன தர்மமான வாழ்க்கை முறையை – இப்போது நீங்கள் வாழவில்லை.

    நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்குலைந்து வரும் மனிதநேய வாழ்க்கை முறையை விட கேவலமான நிலையை உங்கள் பிள்ளைகளுக்கு, அடுத்த தலைமுறை அரசர்களுக்கு கொடுக்காதீர்கள்.

    அன்பும், பண்பும், பாரம்பரியமும், கலாச்சாரமும் சிதைந்து போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சிறப்பாக வாழ்வது சிரமம் தான்.

    எல்லா வளமைகளையும், செழுமைகளையும், பெருமைகளையும், உரிமைகளையும் தலைமுறை தலைமுறையாக இழந்துவிட்டு – இப்போது இழக்கவும் ஏதுமில்லாமல், கொடுக்கவும் ஏதுமில்லாமல் – நிராதரவான நிலையில் நீங்கள்.

    “அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கவுரவம், அவர்மேல் தொடுத்ததே அர்ச்சுனன் கவுரவம் – என்ற சுயநல மனோபாவத்தில் இருந்து விடுபட்டு, இன்றைய எதார்த்த நிலையை சீர்தூக்கி பார்த்தால் “கிழக்கு வெளுத்ததம்மா கீழ் வானம் சிவந்ததம்மா, கதிரவன் வரவுகண்டு கமலமுகம் மலர்ந்ததம்மா” – என்ற தெளிவை அடைய முடியும்.

    அப்படி வாழ்ந்தால், “நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடப்பதுதான் நீதியடி, இல்லாமை மாறிவிட்டால் எந்த உயிரும் வாழுமடி, பல்லாண்டு பாடுங்கடி பறவைபோல ஆடுங்கடி, பதினாறும் பெரு வாழ்வும் வருகவென்று கூடுங்கடி” – என்ற கவியரசரின் கூற்றை அடுத்த தலைமுறைக்கு அறைகூவலாக – அவர்கள் சந்திக்கின்ற சவால்களுக்கு சரியான பதிலாய் சந்தோஷமாக அளிக்கலாம்.

    அளித்தால், அவர்கள் வாழ்வும் விளங்கும்.

    அதுமட்டுமல்ல,

    “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

    “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    சினிமாவின் பின் தற்போதைய உள்ள இளைய சமூகம் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது, அது பற்றி உங்களின் கருத்து?

    பொன்னுச்சாமி,

    நூலகர், சேலம்.

    சினிமாவின் பின் தற்போதைய இளைய சமூகம் சென்று கொண்டிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரிந்திருக்கிறது, அதே தான் எனக்கும் தெரிகிறது. ஆனால் அதற்காக அவர்களையும் குறை கூற முடியாது. ஏனென்றால் இதற்கு முந்தைய சமுதாயமும் சினிமாவின் பின் சென்றிருக்கிறது, அவர்களிடமிருந்து இந்த சினிமா பண்பாடு இன்றைய இளைஞர்களுக்கு வந்திருக்கிறது. சினிமா மோகத்தில் வயது வேறுபாடு காணமுடியவில்லை.

    சினிமா என்பதே சமீபத்திய கண்டுபிடிப்புதான். முதல் தமிழ் சினிமா‘கீச்சக்கவதம்’1918 ஆம் ஆண்டும், முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’ 1931 ஆம் ஆண்டும், முதல் கலர் படம்‘கொஞ்சும் சலங்கை’ 1962 ஆம் ஆண்டும் வந்திருக்கிறது. சினிமா என்பது ஒரு உயர் தொழில் நுட்பம்; வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், சினிமாவில் பிரதிபலிக்கும். அதைத் தவிர்க்க முடியாது. அன்று முதல் இன்று வரை சினிமா மக்களை கவர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சினிமா அரங்குகளில் மக்கள் காத்துக்கிடந்தகாலம் மாறி வீடுகளிலேயே சினிமாபார்க்கும் நல்லகாலம் வந்திருக்கிறது.

    சினிமா மோசமானது அல்ல. அது ஒரு ஆற்றல் மிக்க ஊடகம். அனைத்து கலைவடிவங்களை விட சினிமா வலுவானது என்றார் விலாடிமர் லெனின். எதையும் ஆழமாக ஆணித்தனமாகவும் சினிமாவால் சொல்ல முடியும். அண்ணன் – தங்கை பாசத்தையும், ஊழலின் கெடுதலையும், வறுமையின் வலியையும், மூட நம்பிக்கைகளையும், புற்றுநோயையும் சினிமாக்கள் சிறப்பாக சித்தரித்தன. நல்ல நோக்கம் கொண்ட சினிமா தயாரிப்பாளர்கள் இது போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். ஆனால் வியாபார தயாரிப்பாளர்கள் பாலியல் உணர்வு மற்றும் வன்முறை போன்ற பலவீனத்திற்கு தீனியிடும் வகையில் சினிமாக்கள் எடுத்துவிடுகிறார்கள். பாலியில் உணர்வு(Sex) மற்றும் வன்முறை (aggression) ஆகியவை மனிதனின் இனவிருத்திக்கும், பாதுகாப்பிற்கும் தேவையான உணர்வுகள் என்று உளவியல் அறிஞன் சிக்மன் பிராய்டு கூறுவதையும் கவனிக்க வேண்டும். பெரிய ரவுடிகளை கதாநாயகர்களாக சித்தரித்துவிடுகிறார்கள். இதனால் இளைஞர்களுக்கு ரவுடியாக இருப்பதே பரவாயில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. நீதிபதிகளையும், காவல் அதிகாரிகளையும் ஏழனம் செய்கிறார்கள். இருந்தாலும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு என்பதால் இது போன்ற சினிமாக்கள் வருவதை தடுக்க முடியவில்லை.

    சினிமா பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். சினிமா நிஜமல்ல, இதில் எதையும் மிகைப்படுத்தி மக்களை நம்பவைக்கவும் முடியும். பொய்யைக் கூட உண்மையாக்கி விட முடியும். அதிகமான வெளிச்சத்தில் கறுப்பான முகம் சிவப்பாகவும், குட்டையானவர் உயரமாகவும் தெரிவார். ஒருவருக்காக குரல் வளம் மிக்க இன்னொருவர் பாடுவார். பின்னணி ஓசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் திரை மறைவு தாக்கங்களால் திரையில் காணும் எல்லாமே பிரமாண்டமாக இருக்கும். அதைப்பார்ப்பவர் பரவசமடைந்து விடுவார்கள். இவை நமது உடலில் மகிழ்ச்சிக்குரிய வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே நாமும் புத்துணர்ச்சி பெற்று இதற்கு அடிமையாகி விடுகிறோம். மது, போதைப் பொருள், வாட்ஸ் அப் போன்றவைக்கு அடிமையாவதைப் போல சினிமாவிற்கு அடிமையாகிவிட்டோம். உலகின் மிக அழகான மோசடி சினிமாதான் என்றார் ஜீன்  லு கேடாட் என்பவர்.

    நீங்கள் கேட்ட கேள்வியில் ஒரு ஆழமான பொருள் மறைந்திருப்பது எனக்கு தெரிகிறது. ‘இளைய சமூகம் சினிமா பின்னால் சென்று கொண்டிருப்பது ஆபத்தல்லவா? அவர்கள் அதன்பின் செல்லத்தான் வேண்டுமா?’ என்பது தான் உங்கள் கேள்வி. இது மிகசிக்கலான கேள்வி, இந்த கேள்விக்கான பதிலை இளைஞர்கள் தான் சிந்திக்க வேண்டும். இதற்கான தீர்வை அவர்கள்தான் கண்டுபிடிக்கவும் வேண்டும் என்றுதான் நான் சொல்லுவேன்.

    முன் காலங்களில் மக்கள் படிப்பறிவில்லாதவர்கள். இருட்டு அறையில் அமர்ந்து கொண்டு வெளிச்சத்தில் அவர்கள் கண்டது ஆச்சரியமாக இருந்தது. அழகான மனிதர்கள், அறை குறை ஆடைகள், ஆடம்பரம், ரம்மியமான இயற்கைக் காட்சிகள், ஒருவரே பலரை அடித்து வீழ்த்தும் நம்பமுடியாத சண்டைகள், ஒருவரே இருவராக தோன்றியது, ஏழை பணக்காரனாகும் பிரம்மாண்ட கதை, தீயவனை நல்லவன் வென்ற கதை என்று அவர்கள் வாழ்க்கை கனவுகளை அங்கே திரைக்கதையாக கண்டார்கள், ரசித்தார்கள், எல்லாவற்றையும் நம்பினார்கள்.

    ஆனால் அறிவியல் கற்ற இன்றைய இளைஞர்களுக்கு சினிமா கதைகள் மிகைப்படுத்தப்பட்டது என்றும், அவை பலமுறை சொல்லப்பட்டது என்றும், அறிவுக்கு அப்பாற்பட்டது என்றும், சந்தேகமின்றி புரியும். இருந்தும் இவர்களும் இப்படி சினிமாவிற்குப் பின்னால் ஏன் செல்கிறார்கள், கல்வி என்ற உயர்ந்த வேலையை ஒதுக்கிவிட்டு பணத்தையும் நேரத்தையும் அறிவையும், முயற்சியையும் இதற்காக ஏன் செலவழிக்கிறார்கள் என்று புரியவில்லை.

    அப்படி சினிமாவில் என்ன கதைதான் சொல்வார்கள்? ஒரு ஆண் ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலித்து இறுதியில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துவிட்டது, அரசியல் புரட்சி, தீயவர்களோடு மோதுவது போன்றவை பிரம்மாண்ட கதைகளா என்றும் இதில் உண்மை உண்டா என்பதும் படிக்கும் இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    அதேவேளையில் மிகப்பெரிய கதைகள் பள்ளியிலும், கல்லூரியிலும் சொல்லப்பட்டு வருகிறது. நீங்கள் அவற்றை செவிசாய்த்துக் கேட்க வேண்டும், அவ்வளவுதான். அவையாவன:

    பூமிஉருவான கதை

    மனிதர்கள் தோன்றிய கதை

    மின்சாரம் கண்டுபிடித்த கதை

    விமானம் பறந்த கதை

    நிலாவில் மனிதர்கள் கால்பதித்த கதை

    போலியோ நோய்க்கு மருந்து கண்டுபிடித்த கதை

    இந்தகதைகள் உங்கள் அறிவிற்குப் பெரிய சவாலாக இருப்பவை. வகுப்பறையில் நடக்கும் அற்புத கதைகளில் ஒப்பற்ற கதாநாயகர்களும் நடிப்பார்கள்.

    மைக்கேல் பாரடே.

    சர் ஐசக் நியூட்டன்

    சார்லஸ் டார்வின்

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    ரிச்சர்ட் பீமன்

    ஜொனால் சால்க்

    நீல் ஆம்ஸ்ட்ராங் போன்ற நடிகர்கள் அவர்கள்.

    இவர்கள் நிஜமனிதர்கள், அறிவியல் அறிஞர்கள், உலகை அளந்தவர்கள் மட்டுமல்ல உலக நாகரீகத்தையே மாற்றி அமைத்தவர்கள். இந்த கதாநாயகர்கள் இன்னும் நமது இளைஞர்களுக்கு அறிமுகமாகவில்லை. அவர்களை அறிமுகம் செய்ய அறிவியல் ஆசிரியர்கள் படாதபாடுபடுகிறார்கள் !

    மனிதர்களுக்கு பொழுது போக்கு தேவைப்படுகிறது. இளைஞர்களுக்கு பொழுது போக்கு சினிமா மட்டுமே என்றாகி விடக்கூடாது. ஆக்கப் பூர்வபொழுது போக்குகள் வேறு பல உள்ளன. அவையாவன:

    அ. வாசிப்பது – செய்தித்தாள், நூல்கள்.

    ஆ. விளையாட்டு – கைப்பந்து, கால்பந்து, ஓடுதல்.

    இ. இசை  –  இசைக்கருவி வாசிப்பது, பாடுவது.

    ஈ. சமூகப்பணி – புயலால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி.

    உ. சுற்றுலா – பல இடங்களுக்கு போய் வருவது.

    ஊ. மொழிக்கற்றல் – பிறமொழிகளைக் கற்பது.

    எ. சாகசம் – எவரஸ்ட் சிகரம் ஏறுவது.

    இப்படியான பலவிதமான பொழுது போக்குகளில் ஈடுபட்டால், ஒரு இளைஞனுக்கு ஆளுமை உருவாகும்.

    இளைஞர்களுக்கு வாழ்க்கைத் தொழில் பழக நேரம் வேண்டும். சினிமா பற்றி சிந்தித்து, சினிமா பாடல் ஒலிக்கச் செய்தால், மூளையில் வேறு எதையும் கற்றுக் கொள்ள இடமில்லாமல் போய்விடும். ஒரு தொழிலை சரியாகச் செய்ய முடியாதவரால் வருமானம் ஈட்ட முடியாது. வருமானம் இல்லை என்றால் வாழ்க்கைத்தரம் குன்றும். அப்படிப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளைத் தான் நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    எந்த ஒரு தொழிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு பொழுது அதிகமாகவே இருக்கும். அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு மிகவும் அவசியம். அந்த தேவையை சினிமா சரியாக நிறைவேற்றி விடுகிறது. ஆனால் சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டும் தான் என்பதை இளைஞர்கள் உணர்ந்து அதைத் தவிர்த்து தங்களது பொன்னான நேரத்தையும், சிந்தனையையும், பணத்தையும், உழைப்பையும் தொழில் சார்ந்த கல்வியில் செலவழிப்பத அவர்களுக்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது.

    இந்த இதழை மேலும்

    எப்போதோ போட்ட விதை!

    ‘உணர்வது உடையார் முன் கூறல்’ என்று வள்ளுவர் 718 ஆவது குறளில் சொல்வது இதுதான் போலும்.  ஒரு பயிற்சியாளர், அல்லது போட்டித் தேர்வு ஆசிரியர் சொல்வதை ‘கப்’ என்று பிடித்துக்கொண்டு, அதே மாதிரி படிக்கின்ற, அதையும் தாண்டி படைக்கின்ற சிஷ்யர்கள்… மாணவர்கள்… மாண்பு மிக்கவர்கள்.  ஆசிரியர்களின் ஆனந்தச் சிற்பிகள்.  ஒரு சின்ன விஷயத்தை சொல்லி இருக்கலாம்.  அதை சிரமேற்கொண்டு செய்யும் மாணவர்கள் ஆசிரியர்கள் பிறந்ததற்கே அர்த்தம் சேர்க்கிறார்கள்.  பல சூழ்நிலைகளில் பயிற்சியாளர்கள் மாணவர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்.  எவ்வளவு சொல்லித்தரலாம் எப்படி சொல்லித்தரலாம் என்று… அப்படியான எனது இளைய குருக்களில் சிலர்… டாக்டர் கோபிநாத் இ.வ.ப., டாக்டர் சுந்தரேசன் இ. வருவாய்பணி, டாக்டர். இராம் பிரசாத் இ.ஆ.ப., டாக்டர் இளம்பரிதி, இ.ஆ.ப… டாக்டர் ஜெயசீலன் இ.ஆ.ப… மற்றும் செல்வி.ஹேமலதா, இ.கா.ப. (2017) என்று பிரமிக்க வைக்கின்ற சாதனையாளர்களின் பட்டியல் தொடர்கின்றது.  பெயர்கள்… எதற்காக தரப்பட்டுள்ளன என்று பலர் ஆச்சரியப்படலாம்… இந்தக் கோணத்தில் பெயர்களை நினைத்துப் பார்த்து எழுதும்பொழுது… நிச்சயமாக படித்துக்கொண்டிருக்கும் தன்னலமற்ற பயிற்சியாளர்கள் தங்களது உன்னதமான மாணவச் செல்வங்களை நினைப்பது மட்டுமன்றி அவர்களது பெயர்களை பதிலீடு செய்துகொள்வார்கள்.

    அவர்களுக்கு நாம் ஏன் பயிற்சியளிக்க வேண்டும்… என்பதற்கு… “உண்டால் அம்ம இவ்வுலகம்” என தொடங்கும் புறநானூற்றின் 182 ஆவது பாடலை, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய பாடலை உதாரணமாக, காரணமாக காட்டலாம்.  இந்தப்பாடலை அ.முத்துலிங்கம் ஐயா தனது ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ புத்தகத்தில் அதே தலைப்பிலான சிறு கட்டுரையில் எடுத்தாண்டு இருப்பார்.  காரணமே இல்லாமல் பிறர்க்கு உதவுபவர்கள் இருப்பதனால்தான் இந்த உலகம் இயங்குகின்றது… இருக்கின்றது என்று பொருள்.  எவ்வளவு ஆழமான பொருள்? வாழ்வில் அப்படிப்பட்டவர்கள் பயிற்சியாளர்கள்!  ஆசிரியர்கள்.  தங்கள் ஊதியம்… பயிற்சிக் கட்டணம் எல்லாவற்றையும் தாண்டி… தன் மாணவன், மாணவி வெற்றி பெறவேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வத்தோடு… ஒரு வித்தையை… கற்றுத்தரும் எல்லா பயிற்சியாளர்களும்… இந்த புறநநூற்றுப் பாடலில் பொருந்துவார்கள்.  பத்து என்றால் பதினைந்தாய் செய்கின்ற நாடியா போன்ற மாணவிகள், சிஷ்யர்கள் சாதிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில், கற்றுத் தருகின்ற பரவசத்திற்காக கட்டணமே இல்லாமல் உழைக்கின்ற பயிற்சியாளர்களும் பலர் உண்டு.

    உண்டு… உறங்கி… எதிர்காலம், இலக்கு, என்கின்ற சிந்தனைகள் ஏதுமின்றி இருக்கின்ற இளையோரை… எப்போதாவது கண்விழித்துக் கொள்வார்கள் என்று பயிற்சி கொடுக்கின்ற ஆசிரியர்களை கண்டதுண்டு.  நிச்சயம் அவர்களும் ஒரு நாள்… விழித்தெழுவார்கள் என்பது நம்பிக்கை.ஊதுர சங்கை ஊதி வைப்போம்! என்று கடமைக்காகவும் பயிற்சியாளர்கள் வகுப்பெடுக்க வேண்டி உள்ளது.  ஏனெனில்… ஒருகாலத்தில்… அந்த மாணவர்கள், பயிற்சியாளர்கள் வற்புறுத்திய விஷயங்களை, காலம் கடந்தாவது புரிந்துகொள்ளக் கூடும்.  இதற்கு நாடியா… லெவல் எடுத்துக்காட்டு வேண்டியதில்லை.  நம் எடுத்துக்காட்டே போதும்.

    1. ஐஞ்சு மணிக்கு எந்திரிடா!
    2. குளிச்சிட்டு வந்து சாப்பிடுடா!
    3. எடுத்த பொருள எடுத்த இடத்தில வைடா!
    4. மாலை ஆறு மணிக்கு படிக்க வீட்டிற்கு திரும்பி வந்துடு!
    5. ஒரு நாளைக்கு பத்து புரியாத வார்த்தைகளுக்கு… அகராதியை (Dictionary) பார்த்து அர்த்தம் எழுதி வை.
    6. அதிக நேரம் பகல்ல தேவையில்லாம தூங்காதே!
    7. செலவு செய்கின்ற காசிற்கு கணக்கு எழுதிவை!
    8. ஊருக்கு கிளம்பும்பொழுது பொருட்களை முதல்நாளிரவே எடுத்து அடுக்கி வை. பொருள் பட்டியலை எழுதி (செக் லிஷ்ட் – Check list) சரிபார் (Tick mark) என்றெல்லாம், அப்பா… எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.  எல்லா அப்பாக்களையும் போல.  எவ்வளவு எளிமையான அறிவுரைகள்.  அப்படியே பின்பற்றியிருந்தால் இன்னேரம்… என்ன ஆகியிருக்கலாம்… என்றெல்லாம் யோசிப்பது உண்டு… கண்டிப்பாக இருக்கிறாரே!  என்று இம்சையாக ஃபீல் பண்ணிய நாட்களுக்கு இப்பொழுது நன்றி சொல்லிக்கொண்டு இருக்கின்றோம்.  கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!  என்று அவர் மேற்கொள் காட்டும் சொற்றொடரில் சொன்னாலும், நாற்பது வயதுகளில் அப்பாவின் அறிவுரைகள் இப்போது இனிக்கின்றன… வழிகாட்டுகின்றன.  இவை ஏதோ ஒருவருக்கு அவங்க அப்பா சொல்லிய விஷயமாக இல்லாமல்… எல்லோருக்கும் அவரவர் பயிற்சியாளர் சொல்ல வேண்டிய… நாடியா போன்று… பயிற்சியாளர் சொன்ன அளவைக்காட்டிலும் அதிகமாக செய்யப்பட வேண்டிய விஷயங்களாகும்.

    விஷயங்களை பலவாறு ஆராய்ச்சி செய்து, நாடியா… கலந்துகொண்ட 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆட்ட மின்ன்ணு தகவல் பலகை வடிவமைப்பையும் விஞ்சிய வரலாற்றை விட்டுவிட கூடாது.  நாடியா பொதுவாக… தான் களத்தில்… மேடையில் ஏறி… விளையாட தொடங்கிய பின்பு… தான் கற்றதை; பயிற்சி செய்ததை, வெளிப்படுத்துவதில் மட்டுமே, கவனம் செலுத்துவாராம்.  அது முடிந்த பிறகு… மதிப்பெண் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பது கிடையாதாம்.  நானே எனக்கு மனசார 9.9 கொடுத்துக்கொண்டேன்.  முழு மதிப்பெண் பெறுவேன், என்று எதிர்பார்த்தேன்!,  என்று பொய் கூற விரும்பவில்லை என்று பேசுகின்றார்.  பயிற்சியாளரும் அப்படித்தான் கூறுகிறார்.  யு.பி.எஸ்.ஸி., டி.என்.பி.எஸ்.ஸி போன்ற தேர்வுகள் நீண்டநாட்கள் படிக்கச் செய்பவை.  (முதல் முயற்சியில் வெற்றி பெறுபவர்கள், கூட குறைந்தபட்சம் ஒரு வருடம் படிக்க வேண்டி உள்ளது – (இதைப் படிக்கின்ற தேர்வர்கள் அனைவரும் அந்த வகையைச் சேர வாழ்த்துகின்றோம்) – அப்படிப் படிக்கையில் பல வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன.  பயிற்சி செய்வது… அடிப்படையில் ஒன்றுதான்.  தேர்வு எழுதுவதும் ஒரு வித்தை தான்.  அதிலும்…

    1. அன்றாடம் படித்தல்
    2. கற்பனை செய்து பார்த்தல்
    3. மொழிபெயர்த்து நினைவு நிறுத்தல்
    4. பதட்டம் குறைத்தல் , எமோஷனல் இன்டலிஜென்ஸ்

    என்பதுபோன்ற சிறப்பு அறிவுரைகள் சொல்லப்படுகின்றன… காலங் காலமாக… அறிவுரைகள் – கசப்பு மருந்துகள், என்று நினைக்கிறவர்கள் புன்னகைக்காலம்.  ஆனாலும் எங்கேயோ கேட்ட கதை போல…  எப்போதோ போட்ட விதை போல…

    காலம் கடந்துகூட அத்தகைய டிப்ஸ்கள் (வழிகாட்டுதல்கள்) கைமேல் பலன்தரக் கூடும். கூடுமான அளவு ஆற்றலைக் கூட்டி நாடியா… காற்றில் கரணமடித்து… 1976 ல் அழகாக தரையில் தேவதை போல… (ஸ்லோ… மோஷனில்) இறங்குகிறார்.  வழக்கம் போல… மதிப்பெண் பலகையை பாராமல்… நடந்து கடந்து போகிறார்.  கரகோஷம்… விண்ணைப் பிளக்க… தொடர்ந்து… உயர்ந்துகொண்டு போக… என்ன நடந்தது… என்று புரியாமல்… நாடியா திரும்பி… என்ன நடந்தது என்று அறிந்து கொள்வதற்காக, மதிப்பெண் அறிவிப்பு பலகையை பார்கின்றார்…

    அங்கே…

    1.0 என்கின்றஎண்தான் காணப்படுகின்றது.அவர் குழம்பிப் போய்விடுகிறார்…மின்னணு கருவியை வடிவமைத்தவர், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் நிபுணர் உட்பட யாருமே முழு இரண்டு இலக்க எண்ணான 10 ஐ ஒருவர் பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை.  எனவே 9.9க்கு அடுத்து அதில் உள்ளீடு செய்யப்படவே இல்லை.  பத்து என அடித்ததும் அது ஒன்று என வெளிவந்துவிட்டது.  என்கின்ற உண்மை… ஒலிபெருக்கியில் அறிவிப்பாளர் ஆச்சரியத்தின் உச்சத்தில்… அலறிய பொழுதுதான் தெரிய வந்தது… அந்த விளையாட்டுலக அற்புதம் நடந்தது.  நாடியா அன்றுமுதல்… பயிற்சி செய்பவர்கள் பழுதில்லாத வெற்றி ஈட்ட முடியும் என்று நிரூபிப்பதன் – கொள்கை விளக்கமாக.  உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற இளைய முதிய தலைமுறைகளை பிரமிக்கச் செய்து முயற்சி செய்ய உத்வேகத்துடன் தூண்டுகின்ற ஒரு ஆற்றலாக இருக்கின்றார்.  இப்படியெல்லாம்… பல ஜனாதிபதிகளிடம் பாராட்டுப்பெற்றது… தொடர்ந்து வந்த 1980 ஒலிம்பிக்… போட்டியில்… மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தது… போன்ற பல செய்திகள்… ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரின்… பாடல் ஒன்றிற்கு… நாடியா என்கின்ற பெயரையே சூட்டியது (ஏனெனில்… ஏற்கனவே பிரபலமாக இருந்த அந்த இசை… நாடியாவின் ஒளிப்படத்திற்கு… பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டு அதனால் மேலும் புகழ்பெற்றதும் காரணமாகும்)  இப்படி… நாடியாவின் சாதனை… பலருக்கு முன்னுதாரணமாக இருப்பது நிதர்சனமான உண்மை.

    இப்படியெல்லாம்… மீண்டும் நீச்சல் பயிற்சியை திரு.முனியாண்டி என்னும் பயிற்சியாளரிடம்… தொடங்கி இருக்கின்ற கோபிகா, தீபிகாவோடு… நாடியாவுடைய யுட்யூப் வீடியோவை பார்த்து அற்புதமாக… ஊக்குவிப்பு (மோட்டிவேட்… Motivate)  செய்துவிட்டோம் என்கின்ற உற்சாகத்தில் அடுத்த நாள் அவர் எழுதிக்கொடுத்த பயிற்சி நிகழ்ச்சி நிரலை (Workout) செய்து முடிக்க… அவர்களுக்கும் முன்பே எழுந்து… தூங்கிக்கொண்டிருந்தவர்களை ‘டங்கல்’ பாடல் போட்டு உசுப்பி… நாடியாவின்… சிந்துவின், திருஷ் காமினியின் பாதையில் பயணிப்பார்கள் என்கிற ஆர்வத்தில் இப்படி பதினைந்து பக்கம்… எழுதும்பொழுது பார்த்தால்…  குழந்தைகள் மீண்டும் போர்வைக்குள்   நெளிந்துகொண்டு இருந்தார்கள்… கோபமே இல்லாமல்… பயிற்சியை விட்டுவிடலாமா?  என்று கேட்டபோது…

    “அப்பா… இன்னும் நேரம் இருக்கிறது!”

    என்று பதில் வந்தது…

    அப்பா எழுப்பும்பொழுது… உறங்கிய நினைவும் வந்தது…

    எப்போதோ போட்ட விதை!!

    நேரம் வரும்போது முளைக்கும்… செழிக்கும்!

    இந்த இதழை மேலும்

    தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு

    21ம் நூற்றாண்டில் தொலைக்காட்சி, வானொலி, கணிப்பொறி மற்றும் செல்போன்களின் தேவை மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது. இத்தகைய பொழுதுபோக்கு சாதனங்களால் குழந்தைகளுக்கு நன்மையைவிட பல தீமைகள் ஏற்படும் வாய்ப்புகளே அதிகம். 8 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் வரை தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தொலைகாட்சியில் வரும் கற்பனை நிகழ்ச்சிகளைக் குழந்தைகளால் நிஜவாழ்க்கையில் இருந்து வேறுபடுத்தி எண்ண முடியாது.

    தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறியில் அதிக நேரத்தைச் செலவிடுவதால் குழந்தைகளால் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் பெற்றோர்களிடம் அதிகமாக நேரத்தைச் செலவிட முடிவதில்லை. வன்முறை  நிறைந்த நிகழ்ச்சிகளை அதிக நேரம் காண்பதால், குழந்தைகளும் அத்தகைய எண்ணங்களுடனே வளர்கின்றனர். இத்தகைய வன்முறை நிகழ்ச்சிகளால் குழந்தைகள் தங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த இயலாது. மேலும், தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சிகளால் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.

    அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் கணிப் பொறியில் ஈடுபடும் குழந்தைகளால் தங்கள் நண்பர் களிடமும், பெற்றோர் மற்றும் உறவினரிடமும் அதிக நேரம் செலவிட முடியாமல் தனிமையான சூழ்நிலையில் அதிக நேரத்தைக் கழிக்கின்றனர்.

    தொலைக்காட்சியும் உடல்பருமனும்

    தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடப்படும் ஒவ்வொரு அதிக மணிநேரத்தினாலும், குழந்தைகள் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு 2 சதவீதம் அதிகரிக்கிறது. தொலைக்காட்சி மட்டுமின்றி வீடியோ கேம்ஸில்  அதிக நேரம் செலவிடுவதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது.

    தொலைக்காட்சியில் அதிகம் வரும் துரித உணவு (fast food) சம்பந்தப்பட்ட விளம்பரங்களைக் காண்பதால் குழந்தைகள் அவற்றால் ஈர்க்கப்பட்டு சத்தான உணவுகளை விட அத்தகைய உணவுகளை உண்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

    செய்தித்தாள்களில் வரும் உடல் எடையைக் குறைக்கும் விளம்பரங்களால் பருவ வயதில் உள்ள பெண்கள் தங்கள் எடையைக் குறைக்க முறையற்ற உணவுப் பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் எடையைக் குறைக்க நேரத்திற்கு உணவு உண்ணாமல் சிறிய அளவிலான சத்தில்லாத உணவுகளை உண்கின்றனர்.

    பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பெரும்பாலான பருவ வயதில் உள்ளவர்கள் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்தே புகைப்பிடிக்க கற்றுக்கொள்கின்றனர். ஆதலால் இந்தியாவில் அத்தகைய விளம்பரங்கள் ஜனவரி 1, 2006 முதல் தடைசெய்யப்பட்டு உள்ளது. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களே மது அருந்தவும் உந்துதலாக உள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இளவயதிலேயே செல்போன் மற்றும் தொலைக் காட்சியில் வரும் முறையற்ற உடலுறவு போன்ற விளம்பரங்களாலும், செய்திகளாலும் குழந்தைகளுக்கு இள வயதிலேயே உடலுறவு கொள்வது தவறில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    தடுக்கும் வழிகள்

    1. குழந்தைகள் தொலைக்காட்சியில் செலவிடும் நேரத்தையும், அவர்கள் காணும் நிகழ்ச்சிகளையும் பெற்றோர் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
    2. பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காண வேண்டும்.
    3. குழந்தைகள் காணும் நிகழ்ச்சிகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவற்றை பெற்றோர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.
    4. குழந்தைகளின் படுக்கை அறைகளில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்கக் கூடாது.
    5. ஓரு நாளைக்கு 1 முதல் 2 மணிநேரம் நல்ல தரமான நிகழ்ச்சிகளைக் குழந்தைகளுக்குக் காண்பிக்க வேண்டும்.
    6. 2 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண்பிக்கக் கூடாது.
    7. குழந்தைகள் உணவு உட்கொள்ளும் நேரங்களில் தொலைக்காட்சியைப் போடக்கூடாது.
    8. தொலைக்காட்சியில் ஆபாச நிகழ்ச்சிகளை காட்டும் அலைவரிசைகளைத் தடுத்து வைக்க வேண்டும்.
    9. குழந்தைகளின் நண்பர்களைக் கண்காணிக்க வேண்டும்.
    10. ஏதாவது ஒரு பெற்றோர் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது குழந்தையுடன் இருக்க வேண்டும்.

    இந்த இதழை மேலும்

    நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?

    கீழ்படிதல் என்றால் அடங்கி நடத்தல் என்று பொருள். கீழ்படிதலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உண்மைக்கு கீழ்படிதல். மற்றொன்று கண்மூடித்தனமாக கீழ்படிதல் ஆகும்.

    கேள்வியே கேட்காமல் கீழ்ப்படிதல் மிக்க நல்ல பண்பாகும். அது ஒரு இராணுவ வீரனின் சிறப்புப்பண்பு. அது ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் முக்கியமாக இருக்க வேண்டியது. அது அவனுடைய முதலும், முடிவுமான பாடமாகும். கேள்வி கேட்காமல் குறை கூறாமல் அதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

    வயதில் மூத்தவர்களுக்கு கீழ்படிதல் என்பது ஒரு பாரம்பரிய நற்குணமாக சித்தரிக்கப்படுகிறது. கீழ்ப்படிதல் என்பது ஒரு அதிகாரம் இருப்பதைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரம் பெற்றோர், ஆசிரியர், அரசாங்கம் மற்றும் அலுவலகத்தில் பாஸ் போன்றவர்களுக்கு இருக்கிறது.

    கீழ்ப்படிதல் எனும் குணம் உள்ள மாணவனுக்கு குரு வித்தையை முழுமையாக கற்றுத் தருகிறார். ஆரம்ப நிலையை கடப்பதற்கு, அறிவதற்கு கற்றுக் கொள்வதற்கு கீழ்படிதல் தேவை. இல்லையெனில் காலிப்பாத்திரமாக மாறிவிடுவோம். கற்கும் போது கற்பிப்பவர் அறிந்த இடத்திலும், கற்பவர் அறியாத இடத்திலும் இருக்கிறார். பயிற்சிக்காலத்தில் யாரிடம் கற்றுக் கொள்கிறாமோ அவரிடம் பணிவு இல்லாமல் எதையுமே முழுமையாக கற்க முடியாது.

    பெற்றோர்களின் எச்சரிக்கைகளுக்கு பிள்ளைகள் கீழ்ப்படிதல் வேண்டும். அந்தப் அடுப்பைத் தொடாதே, அது சூடாயிருக்கிறது. அது ஆழமான குளம். ஜாக்கிரதை. சாலையை கடக்கும் போது சாலையின் இருபக்கமும் பார்க்க வேண்டும். விபத்து மிகுந்த பகுதி மெதுவாக செல்லவும். இது போன்ற எச்சரிக்கைகளுக்கு கீழ்ப்படிவது நியாயமானது. சரியானது. பொருத்தமானது. மேலும், அது ஞானமானது. இதனால் நம் வாழ்நாள் நீடிக்கிறது. சந்தோஷமாக இருக்கிறோம். எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது. அறையைச் சுத்தம் செய்வது, வீட்டு வேலையைச் செய்யும்படி பெற்றோர் உங்களிடம் கேட்கிறார்களா? கோயிலுக்கு போகச் சொல்லுகிறார்களா? கீழ்ப்படிதல் ஒரு சவால். கீழ்ப்படிதல் எப்போதுமே சுலபமில்லை. உங்களுடைய பெற்றோர் உங்களைவிட அதிக அனுபவம் வாய்ந்தவர்கள். மனைவியானவள் தனது சொந்த புருஷனுக்கு மாத்திரமே கீழ்படிய வேண்டும். மூன்றாவது மனிதர்களின் அறிவுரைகளை ஏற்று குடும்பத்தில் கலகம் செய்யக் கூடாது.

    நம் பெற்றோர் அதிகம் கனி நிறைந்த வாழ்வுக்கென்று நமக்கு வழிகாட்டுகிறார்கள். ஒருவர் பிறரை வழிநடத்திச் செல்ல விரும்பினால் அவர் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் வழிநடத்திச் செல்ல தகுதி பெற்றிருக்க வேண்டுமென்றால், அவர் முதலில் பின்பற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    அரசின் சட்ட திட்டங்களுக்கு குடிமக்கள் கீழ்படிய வேண்டும். அரசாங்கத்திற்கு கீழ்படிய வேண்டும். நிர்வாகத்தில் தலைமைக்கு கீழ்படிய வேண்டும். பெற்றோர்க்கு கீழ்படிய வேண்டும். பணியாளர்கள் முதலாளிக்கு கீழ்படிய வேண்டும். நல்ல பெற்றோருக்கு, நல்ல சகோதரருக்கு, நல்ல  தலைமைக்கு, நல்ல கணவனுக்கு கீழ்படிய மறுத்தவர்கள் சீரழிந்து போயிருக்கிறார்கள். காணாமல் போயிருக்கிறார்கள்.

    அன்பு, அக்கறை மற்றும் மரியாதையை சம்பாதிக்க வேண்டும். குறிப்பாக, பெற்றோர்-பிள்ளைகள் உறவில் இது மிகவும் முக்கியம். சந்தோஷமான நிலையில் வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கிறது. இந்த வளைந்து கொடுக்கும் தன்மையில் இருந்தே தீர்வுகள் பிறக்கின்றன. கீழ்படிந்தவர்கள் பிற்காலத்தில் மிகுந்த வீரியத்துடன் எழுந்து வந்திருக்கிறார்கள்.

    வீட்டில் சேரூம் குப்பைகளை நாம் அப்புறப்படுத்தவில்லை என்றால், சில நாட்களில் நமது வீடு முழுவதும் குப்பைத் தொட்டியாக மாறி விடும். தினமும் நாம் குப்பையை வெளல்யே கொட்ட வேண்டும். அப்போதுதான் வீடு சுத்தமாக இருக்கும். நாம் அப்படி செய்யவில்லை என்றால் நாம் தேங்கிப் போகிறோம். சிக்கிப் போகிறோம். அதற்குப் பிறகு எதுவும் வேலை செய்வதில்லை. இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளிடம்  தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்காதே. செல்;போனில் பொன்னான நேரத்தை வீணடிக்காதே என்கிறார்கள்.

    சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவைகளில் சில அதீதமாக இருந்தாலும் பெரும்பாலானவை. ஒரு சாதாரண மனிதன் கூட இன்றைய நாகரீக உலகில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான நிபந்தனைகளே. இதற்கு உடன்படுகிறவர்கள் உள்ளனர். புறக்கணிப்பவர்களும் உள்ளனர்.

    மதுவருந்திவிட்டு வாகனம் ஒட்டும் போது வாயை ஊதச் சொல்லும் காவல்துறையிடம் கூனிக் குறுகி நிற்கிறார்கள். நற்பண்புகளை கடைப்பிடிக்க பிடிவாதமாக மறுப்பவர்கள் ஒரு நாள் சபையில் சமுதாயத்தில் அவமானப்படுகிறார்கள்.

    அத்து மீறுபவர்கள், அடக்கம் இழந்தவர்கள் பிற்காலத்தில் உயர்நிலை அடைவதில்லை. எதையும் சாதிப்பதில்லை. ஒரு துறையில் நிபுணத்துவம் உள்ளவர்கள். அதன் அணைத்து மட்டங்களையும் அறிந்தவர்கள். அவர்களிடம் கீழ்படிவதால் நமக்குத்தான் நன்மை அதிகம்.

    எந்த ஒரு மனிதனும் ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்க மாட்டான். வெவ்வேறு காலக்கட்டத்தில் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பான். ஒரு கட்டம் வரை கீழ்ப்படிதல் நடக்கிறது. தலைவனுக்கு தொண்டன், ஆசிரியருக்கு மாணவன், பெற்றோருக்கு பிள்ளை, கணவனுக்கு மனைவி கீழ்படிய மறுத்து கலகம் செய்கிறார்கள். துருபிடித்த ஆணிகளுக்கு பலமான அடிகள் விழுகின்றன. நிலை குலைகிறது வாழ்க்கை. அஸ்திவாரங்கள் சிதறுகின்றன. சாம்பாரில் மீன் துண்டைப் போடலாமா? தேனீக்கள் துளிதுளியாகக் கொண்டு வந்து சேர்ப்பதைப் போல பெற்றோர்கள் சேர்த்த சொத்;தை சொல் பேச்சு கேளாமல் சொந்த மகனே அழிக்கிறான்.

    சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத, நன்னெறிகளுக்கு கீழ்ப்படியக் கூடாதென தீர்மானித்த ஆண்களாலும், பெண்களாலும்தான் சிறைச்சாலைகள் நிரம்பியுள்ளது. அநேகர் சட்டத்தை மீறுவதால் மாட்டிக் கொள்வோம் என்று ஓரு போதும் எதிர்ப்பார்ப்பதில்லை. மற்றவர்களை விடவும் தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என்று அவர்கள் கற்பனை செய்கிறார்கள். மற்றவர்களுக்கு விரோதமாக செயல்படும் போது சிக்கல் ஏற்படுகிறது. கணவன்-மனைவியிடம் அன்பு செலுத்தாதபோது மனைவி தன் கணவனிடத்தில் கீழ்ப்படியாத போது சிக்கல் வருகிறது. பிறர் என்ன கூறினாலும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பவர்கள் உள்ளனர்.

    உண்மைக்கு கீழ்படிதல்:

    நமக்கு நல்வழிகாட்ட வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே துரதிர்ஷ்டவசமாக நம்மை தவறாக வழிநடத்தும் போது, என்ன செய்வது? நம் பெற்றோர்களே, பொய் சொல்லவோ, திருடவோ, தவறான எதையோ செய்யச் சொன்னால் என்ன செய்வது? அந்த சூழலில் கீழ்படிய மறுப்பது தவறல்ல. சமீபத்தில் பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவரின்  தவறான வழிகாட்டுதலை புறக்கணித்து ஆதாரத்துடன் அவரது முகமூடியை, சுயரூபத்தை வெளல்யிலகிற்கு வெளல்ச்சம் இட்டுக் காட்டிய மாணவிகளின் செயல்  மகத்தானது. அவர்கள் உண்மைக்கு கீழ்படிபவர்கள். பொய்மையை புறக்கணிப்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள், மேன்மையானவர்கள். உறுதியானவர்கள். மதிக்கத்தக்கவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தங்கள் வாழ்வை நல்ல விதத்தில் செதுக்கி சீர்படுத்தத் தெரிந்தவர்கள்.

    கண்மூடித்தனமாக கீழ்படிதல்:

    வரலாற்றுரீதியாக, போர், இனஅழிப்பு, அடிமைத்துவ முறை உள்ளிட்ட காலக்கட்டத்தில் மிகவும், கோரமான, பயங்கரமான நிகழ்வுகள் கண்மூடித்தனமாக கீழ்படிதலால் நடந்ததே ஒழிய, கீழ்படிய மறுத்ததால் அல்ல.

    கேள்வி கேட்காமல் கீழ்ப்படிதல் என்பது ஒரு சமுதாயத்தையும், கலாச்சாரத்தையும் அழிந்து போகச் செய்யும். துரியோதனனின் ஆணையை ஏற்று துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரிய துணிந்தது சரியானதா? தவறாக அதிகாரம் செலுத்தும் போக்கு ஓரு வீட்டையும், நாட்டையும், சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் தேங்கிப் போகச் செய்து காலப்போக்கில் அழியச் செய்கிறது.

    கௌரவர்களின் பலாத்கார அதிகாரம், அடக்குமுறை, அல்லது கொடுங்கோல் தலைமை, அதிகார துஷ்பிரயோகம், நேர்மையற்ற முறையில் அதிகாரத்திற்குள் பிரவேசித்து மோசமாகவும், அநீதியாகவும் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மீது அதிகாரம் செய்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் சமநிலையற்று பதவியை தவறாக பயன்படுத்துபவர்களின் நியாயமற்ற கட்டளைகளுக்கு கீழ்படிவது, உடன்படுவது கண்மூடித்தனமாக கீழ்படிதலாகும்.

    ஜெர்மனியில் ஹிட்லரின் கட்டளையை நாஜிக்கள் கண்மூடித்தனமாக நிறைவேற்றினார்கள். நாங்கள் நேரடியாக பொறுப்பாளிகள் அல்ல. அவர்களது கட்டளையை ஏற்று பல மில்லியன் யூதர்களை கொன்றோம் என்றார்கள்.

    கண்மூடித்தனமாக கீழ்ப்படிதல் ஒரு நாள் அதைப் பின்பற்றுபவர்களுக்கு வலி, துன்பம், அழிவையே தருகிறது. நமக்கு தனித்தன்மை உள்ளது. சிந்திக்க வேண்டும்.

    கட்டளைகள் எல்லை மீறும் போது மனரீதியாக, உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது.

    சிறைச்சாலையில் கைதிகள் போல சில நேரங்களில் அடங்கிப் போக வேண்டிய நிலை வரலாம். வார்த்தைகளால் காயப்படுத்தப்படலாம். அடித்து துன்புறுத்தப்படலாம். தவறு என்று தெரிந்தும் பயத்தினால் கீழ்படிபவர்கள் உள்ளனர். எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்க்காக பணிபவர்கள் உள்ளனர்.

    அதிகாரத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள் என்பதற்க்காக ஒரு அப்பாவியை துன்புறுத்தினால் அது பாவ காரியம். பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி சிரழித்துக் கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியை, சமூக விரோதியை, தீய மனிதனை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப விடாமல் தண்டிக்க உறுதுனையாய் இருந்தால் அது வரம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் எஜமானர்களுக்கு அடிமைகள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டி இருந்தது. அமெரிக்காவில் நிறவெறி தாண்டவமாடிய காலக்கட்டத்தில் வெள;ளையர்களுக்கு கருப்பர்கள் அடங்கி கிடந்தார்கள். அரசியல் ரீதியாக,  அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கீழ்படிதலுக்கு எதிரான குரல் ஒலிக்கத் தொடங்கியது. இராணுவத்தில் சிப்பாய்கள் போல பொது மக்கள் கண்மூடித்தனமாக கீழ்படிய மாட்டார்கள் என்ற நிலை பரவலாகியது வரலாறு.

    நல்ல தலைமைக்கு, கீழ்படிவது நமக்கு வெற்றியையும் பாதுகாப்பையும் தரும். நுட்று போதனைகளை விட ஒரு கீழ்படிதலே மேலானது. வாழ்வின் ஒரு மிகப்பெரிய சோதனை கீழ்படிதலாகும். கீழ்படிதல் நம்பிக்கையை காட்டுகிறது. கீழ்படியாமை நம்பிக்கையின்மையை காட்டுகிறது. கீழ்படிதலும், கடின உழைப்பும்தான் வாழ்வில் அற்புதங்களை  ஏற்படுத்துகிறது. உடனடியாகக் கீழ்படிதல் என்பதே கீழ்படிதலாகும். தாமதித்து கீழ்படிதல் ஒரு வகையில் கீழ்படியாமையே ஆகும். கீழ்படிதலே முடியாத காரியத்தையும் முடிக்கவல்லது. என்றும் உண்மைக்கு கீழ்படிவோம்.

    இந்த இதழை மேலும்

    உதவிக்கு கரம் நீட்டுங்கள்

    பாரத மாதா நற்பணி அறக்கட்டளை

    உடையாம்பாளையம், கோவை

    தொடர்புக்கு: 99949 76720

    கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் வழங்கும் விழாவைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறோம். மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்ச்சியடைய செய்வதில் தான் இருக்கிறது. அந்த வகையில்  ஆதரவற்ற இல்லங்களில் வாழும் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளையும், உதவிப் பொருட்களை வழங்குவது மட்டுமின்றி அவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக அவர்களோடு ஒரு நாள் இருந்து விழாவை நிறைவு செய்து வருகிறோம்.

    தற்சமயம் மக்களிடையே ஒரு சிலர் மட்டுமே தங்கள் பிறந்தநாள், திருமணநாள், வீட்டு சுபநிகழ்வுகள், துக்க நிகழ்வுகளுக்கு இந்த இல்லங்களைத் தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டும் எண்ணங்கள் வந்துள்ளது வரவேற்கத்தக்க விசயம். இது முழுமையாக அனைத்து மக்களிடமும் முழுமாற்றம்  உண்டாக்க வேண்டும். நான்  பார்த்த வரை ஒவ்வொரு சுபகாரியங்களிலும் மிதமான உணவுகளை ஆதரவற்ற இல்லங்களுக்குத் தரலாமா? என்ற படி எங்களுக்கு வரும் அழைப்புகள் தான் அதிகம். ஏன் முன்கூட்டியே நமது குடும்ப நிகழ்வுகளுக்கு உணவு ஏற்பாடு செய்யும் போது அருகாமையில்  உள்ள ஆதரவற்ற இல்லங்கள் எது என அறிந்து அவர்களைத் தொடர்பு கொண்டு எவ்வளவு உணவு வேண்டும் என அறிந்து அவர்களுக்கு தந்து உதவினால் அவர்களும் சரியான நேரத்தில் மிகச்சிறந்த உணவை நம்மால் தர முடியும்.

    நாங்கள் பார்த்த வரை நமது குடும்ப சுப துக்க நிகழ்வுகள் எதுவானாலும் நேரடியாகவே குழந்தைகளை அழைத்து வந்து கலந்து கொள்ள தயராக உள்ள அமைப்புகளும் உள்ளது. தொடர்பு கொண்டால் நிச்சயம் ஏற்பாடு செய்து தருகின்றோம்.

    சுவாமி  விவேகானந்தர் சொன்ன  வறுமை, பசி, பட்டினி இல்லாத இந்தியா என்று உருவாகின்றதோ அன்று தான் வளமான இந்தியாவை காணமுடியும் என்ற லட்சியத்தை நோக்கி பயணப்படும் எங்கள் இலட்சியம் ஆதரவற்ற இல்லங்களே இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்பது தான்.

    குழந்தை வரம் இல்லாதவர்கள் இறைவனின் குழந்தைகளாக ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும்.  தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், வருடந்தோறும் பாடுபடும் நாம் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே எங்களது 20 ஆண்டு கால சமுதாயப் பணியின் நோக்கமாகும்.

    பிரிதொருவருக்கு உதவாமல் கழியும் நாட்கள் அனைத்தும் வீண் என உதவும் கரங்கள் வித்யாகர் கூறுவார். கடவுளை வணங்குகின்ற கைகளை விட ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கின்ற கைகள் புனிதமானவை என அன்னை தெரசா கூறுவார். நாமும் அப்படியொரு இலட்சியங்களை நோக்கி நடைபோடுவோம்.

    வாருங்கள் வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை வாழ்ந்தோம் என்ற முத்திரையை வரலாற்றில் பதிப்போம்…

    இந்த இதழை மேலும்

    மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?

    பொதுவாக நம்மில்  பலர்  ஒத்த எண்ண அலைவரிசையோடு  இருப்பதில்லை, குடும்பத்தில் ஒன்றாக வாழ்க்கை நடத்துகிற கணவன் மனைவிக்குள்ளும், ஒத்த எண்ண அலைவரிசை இல்லாத காரணத்தினால் விவாகரத்துக்கள் பெருகி வருகிற காலம் இது,  இதே காரணத்தினால்   நண்பர்களுக்குள்ளும்  விரிசல் ஏற்படுவதுண்டு,  உறவுக்குள்ளும் இதே கதை தான்,   ஒரு நிறுவனத்தில்  நிறுவனத் தலைவருக்கும்  நிர்வாக பங்கு தாரருக்கும் பணியிலுள்ள அதிகாரிகளுக்கும் இடையே ஒத்த கருத்துக்கள் இல்லாமல் போனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி குன்றும்.

    எதிர் எண்ண அலைவரிசை கொண்டவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம்,   தன் குணங்களை சூழ்நிலைககேற்ப மாற்றிக் கொள்கிறவர்களுக்கு  சாத்தியப்படும்,  மாற்றுக் கருத்து உள்ளவர்களை தன் வழிக்கு கொண்டு வர  சில வழிமுறைகள் நாம் பின்பற்றியாக வேண்டும்,

    1) விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

    ஒருவர் ஒரு கருத்தை பதிவிடும் போது அதைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் எடுத்த எடுப்பிலேயே அதை விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளக் கூடாது,  ஒரு நிமிடம் நிதானித்து, விவாதத்தை தவிர்த்து, அந்த கருத்து உங்களுக்கு ஒத்ததாக  இல்லையென்றால் அதை  வலியுறுத்தாமல் வேறு விஷயத்திற்கு கவனத்தை திசை திருப்ப வேண்டும்,  மனக்கசப்புக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போகும், “ யாரையும் பழி சொல்லாமல் குறை சொல்லாமல்  இருப்பதே  மக்களை கவர்வதற்கு வழி ”.

    2) மற்றவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

    ஒரு மனிதன் எடுக்கக்கூடிய முடிவுகளில்  55 சதவீதம் மட்டுமே சரியானதாக இருக்கிறது. என்று ஆய்வுகள் கூறுகின்றன, 45 சதவீதம்  தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன, இப்படி நாமே 45 சதவீதம்  தவறுகள் செய்கிற போது,  மற்றவர்களின் கருத்துக்களை தவறு என்று சொல்ல நமக்கு எந்த தார்மீக உரிமைளயும் கிடையாது, இப்படி இருக்கஒருவர் சொல்கிற கருத்தை உடனடியாக தவறு என்று மறுத்தல் நியாயம் அல்ல,  அவருடைய கருத்து தவறு என்று சொல்லும் போது அவர் மனம்  காயப்படுகிறது, அவருடைய புத்திகூர்மைக்கும், பெருமைக்கும்,  சுயமரியாதைக்கும், அது இழுக்காக அமைகிறது, காயம் பட்ட அவர் எதிர் தாக்குதலுக்கு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார், தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போய்விடுகிறது, இதனால் விரிசல்கள் அதிகமாகும், வெறுப்புக்கள் கூடும், ஒத்த கருத்து உருவாவது சாத்தியம் இல்லாமல் போகும்.

    அடுத்தவர்கள் தவறு செய்யும் போது, அவர்  எவ்வளவு தவறுகள்  செய்கிறார் என்று கணக்கிட்டுக் கொண்டு இருக்காதீர்கள், அந்த தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்புக் கொடுங்கள், அவருக்கு ஒத்துழையுங்கள்.

    3) தன்னுடைய தவறை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ள வேண்டும்.

    நம்முடைய தவறை மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டால் அங்கே சுமுகமான சூழ்நிலை உண்டாகும்,  உங்களுடைய பெருந்தன்மை வெளல்ப்படும்,  மாற்றுக்கருத்தையும் ஏற்றுக் கொள்ளும்.    மனப்பக்குவம் உண்டாகும்,  எதிரில் உள்ளவர் உங்களுடைய பெருந்தன்மையை எண்ணி உங்களின் அன்பு வட்டத்திற்குள் வர  வழி கிடைக்கும்.

    4) தன் கருத்துக்களை நேசத்துடன் முன்வைக்க வேண்டும்.

    உங்களுடைய கருத்தை ஒரு இனம் புரியாத நேசத்துடன் முன்வைக்கும் போது அது நேசத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பகைமை தவிர்க்கப்படுகிறது.  உங்களுடைய கருத்துக்கள் அதே அளவு உண்மையை மற்றவர்கள்  புரிந்து கொள்ள ஏதுவாகிறது,  உங்கள் எண்ண அலைவரிசைக்கேற்ப அவர்களை இழுக்க முடிகிறது.

    5) மற்றவர்களை  உங்கள்   கருத்துக்கு  ‘ஆமாம் ’  போட வைக்க வேண்டும்.

    நீங்கள் சொல்லுகிற விதம், அந்த கருத்தை முன் வைக்கிற பாங்கு,  உங்களின் உடல் மொழி, உங்களுடைய வாய் மொழி அத்தனையும் மற்றவர்களை பிரம்மிப்புடன்; பார்க்க வையுங்கள், அந்த மயக்கத்தில்  அவர்கள் உங்களின்  ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ‘ஆமாம்’ போடுவார்கள்.

    6) மற்றவர்களையும்  முழுமையாக பேச  அனுமதிக்க  வேண்டும்

    உங்கள் பேச்சை குறைத்துக் கொண்டு  மற்றவர்களை முழுமையாக பேச அனுமதியுங்கள், இடையே குறுக்கீடு  செய்யாதீர்கள், மௌனமாக கேட்டுக் கொண்டிருங்கள்,  அவர்கள் எத்தனை நேரம் எடுத்துக் கொண்டாலும் சரி  அமைதியை கைப்பிடிளயுங்கள், உங்களின் அமைதியும், மௌனமும் அவர்கள் மனதை  முழுமையாக  மாற்றும்.

    7) இது உங்களின்  ‘ஐடியா ’ என்று   பாராட்ட  வேண்டும்.

    ஒருவர் தருகிற நல்ல யோசனை  வெற்றி பெற்றுவிட்டால் “ நீங்கள் தந்த யோசனைதான் இந்த வெற்றியை தந்திருக்கிறது, இது உங்களின் வெற்றி ,  இந்த வெற்றி நளல்ளறுவனத்தை நிலைநிறுத்தி இருக்கிறது ”என்று மனமார பாராட்டுங்கள் . அவர்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும், பின்னர் அதிசயத்தைப் பாருங்கள்,  எது சொன்னாலும் உங்களை ஆமோதிப்பார்கள்.

    8) மற்றவர்கள் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும்.

    ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு கோணம், இன்னொரு பார்வை, இன்னொரு தீர்வு என்று உண்டு, எதிர்கொள்ளும் பிரச்சனையில் மற்றவர்களின்  பார்வைக்கு மதிப்பளியுங்கள், உங்களுடைய  பார்வையை விட  மற்றவர்களின் பார்வை அதிக பயன் உள்ளது என்று தெரிந்தால் அதை மகிழ்வுடன்  ஏற்றுக் கொள்ளுங்கள்,   எண்ண அலைகள் உங்கள் பக்கம் வரும்.

    9) மற்றவர்களின் விருப்பத்திற்கு உடன்பட வேண்டும;

    ஒரு காரியத்தில் மற்றவர்கள் என்ன விரும்ளபுகிறார்கள் என்று கணியுங்கள், அவர்கள் விருப்பமும் உங்கள் விருப்பமும், ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை,  வெவ்வேறாக இருந்தால் விட்டுக் கொடுக்க தயங்காதீர்கள், அவர்களின் விருப்பத்திற்கு பரிவு காட்டுங்கள். வேடன் தான்  பிடிக்கப் போகும் பறவை அல்லது விலங்கினைப் போல ஒலி எழுப்பி அருகி;ல் வரச்செய்து பிடிப்பான், அது போல் நாம் யாரை வசப்படுத்த விரும்புகிறோமோ அவருக்கு பிடித்ததை செய்து அவரை வசப்படுத்த வேண்டும்.

    10) உயர்ந்த குறிக்கோளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    மற்றவர்களுடைய கருத்துக்கள் உயர்ந்த குறிக்கோளாக இருந்தால் மறுப்புச் சொல்லாமல் ஒப்புக் கொள்ளுங்கள். ஒரு நல்ல காரியத்திற்கு உயர்ந்த குறிக்கோளுக்காக மனம் உவந்து ஒத்துழைப்பு தாருங்கள், அதனால் உங்களுக்கு நன்மைதான் கிடைக்கும்.

    11) ஒரு கருத்தை ‘ கதை ’  வடிவாக நடித்துக் காட்ட வேண்டும். (Dramatization).

    ஒரு கருத்தை முன்வைக்கும் போது எழுத்தளவிலோ, பேச்சளவிலோ வைக்காமல், அதனால் ஏற்படும் நிகழ்வுகள், பலன்கள்,  சமாளிக்கும் விதம்,  அதன் எதிர்விளைவுகள் இவைகளை எல்லாம்  ஒரு திரைப்பட கதாசிரியர், கதை சொல்வதைப் போல  நடிப்போடு:   சொல்லிக் காட்டுங்கள்,  உங்கள் உடல் மொழி ஒத்துழைக்கட்டும்,  அக்கருத்து எளிதாக மற்றவர்களுக்கு புரியும்.  அவர்களை கவர இது ஒரு புதுமையான வழி.

    12) ‘சரி’ என்று பட்டால் சவால் விடத் தயங்காமல் இருத்தல் வேண்டும்

    சில நேரங்களில், சில பிரச்சனைகளை எதிர் கொள்ளும்போது சவால் விட தயாராகுங்கள், இதை நிரூபித்துக்காட்டு;கிறேன் என்று சொல்லுங்கள் , இவை இவை சாட்சிகளாய் உள்ளன என்று அறுதியிட்டுச் சொல்லுங்கள்,  சில நேரங்களில் உண்மைளயும் பொய்யாகும், பொய்யும் உண்மையாகும்,  சூழ்நிலைகளுக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், தைரியமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள், மற்றவர்கள் உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கும் நிலை வந்து விட்டால் அடித்துப் பேசுங்கள்.

    முல்லா நசுரூதீன் கதை முற்றிலும் ஒத்துப் போகும், தன் பக்கத்து வீட்டுக்காரர்கள் கருப்பு உடை அணிந்தது கண்டு காரணம் கேட்டார் முல்லா.

    “எங்கள் தாத்தா இறந்து விட்டார், அதற்கு துக்கம் அனுஷ்டிக்கத்தான் இந்த கருப்பு உடையை அணிந்திருக்கிறோம்” என்றார்கள் அவர்கள். அடுத்த நாள் முல்லா வீட்டு கோழி குஞ்சுகள் கழுத்தில் எல்லாம் கருப்பு  ரிப்பன் தொங்கி கொண்டிருந்தது, “ ஏன்?  ”  என்று கேட்டார்கள்.

    “இந்த குஞ்சுகள் தாயை இழந்து விட்டன, அதனால் கருப்பு ரிப்பனை கட்டிக் கொண்டு துக்கம் அனுஷ்டிக்கின்றன,     “அப்படியா!  அதன் தாய் எப்படி இறந்தது? ”

    “என் மனைவி இன்று அதை கறி சமைத்து  விட்டாள் ”  என்றார் முல்லா, பக்கத்து வீட்டிற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார் முல்லா,

    மேலே சொன்ன தீர்வுகளை பின்பற்றினால் மற்றவர்களை  தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றிக் கொள்ள முற்றிலும் உதவும்,  மாற்றங்கள் மாறாதது, மாற்றங்களுக்கேற்ப நம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும்,காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்,  அந்த மாய மந்திரம் உங்களுக்கு கைகூடும், அணுசரனையும், அரவணைப்பும், அன்பு காட்டுதலும் , மறுத்துப் பேசாமல் இருப்பதும் , தன் தவறை ஒத்துக் கொள்வதும், மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிப்பதும்   மகத்தான வெற்றியின் சூத்திரங்களாகும்.

    இந்த இதழை மேலும்