நமக்குள் ஓர் ஆயுதம்
அவர் ஒரு மிகச்சிறந்த குரு.
அவரிடம் பலர் சீடர்களாக இருந்தனர்.
குருவுக்கு அழகில் சிறந்த ஒரு மகள் இருந்தாள். அந்தப் பேரழகிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் குரு.
திருமண ஏற்பாடுகளை குரு செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பேரழகியை மணம் முடிக்க ஏராளமானபேர் முன்வந்தார்கள். “இவர்களில் யாரைத் மணமகனாகத் தேர்வு செய்வது?” என்பதில் குருவுக்கு குழப்பம் ஏற்பட்டது.
“ஏதாவது ஒரு போட்டிவைத்து, அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்கலாம்” என்று அவர் முடிவு செய்தார்.
“என்ன போட்டி வைக்கலாம்?” என்று முடிவு செய்வதற்குள் அவர் குழம்பிப்போனார். முடிவில், போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு அழைத்தார்.
“என் மகளை திருமணம் செய்ய நீங்கள் எல்லோரும் ஆசைப்படுகிறீர்கள். உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப்போகிறேன். போட்டி மிக எளிதான ஒன்றுதான். உங்கள் அனைவரிடமும் இரண்டு கேள்விகள் கேட்பேன். அந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்பவர்களுக்கு எனது மகளை மணம் முடித்துத் தருவேன்” என்றார் குரு.
“போட்டி எப்படி அமையும்? என்பதை நாளை உங்களுக்குத் தெரிவிப்பேன். இன்று நீங்கள் போகலாம். விருப்பப்பட்டவர்கள் போட்டியில் கலந்துகொள்ளலாம்” என்றும் சொன்னார்.
குருவின் அறிவிப்பைக் கேட்ட இளைஞர்கள், அடுத்தநாள் குருவின் வீட்டின்முன்பு பெருங்கூட்டமாகக் கூடினார்கள். குரு அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, முதல் கேள்வியைச் சொன்னார்.
“இந்த உலகத்தில் மிகவும் இனிமையான பொருள் எது? அந்தப் பொருளை நாளைக்கு நீங்கள் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.
மறுநாள், சிலர் இனிக்கும் கரும்போடு வந்தார்கள். வேறுசிலர், அதிகமாய் இனிக்கும் சர்க்கரையோடு வந்து நின்றார்கள். இன்னும்சிலர், இனிப்புப் பலகாரங்களைக் கொண்டுவந்து ‘இதுதான் இனிப்பான பொருள்’ என்று சொன்னார்கள். வேறுசிலர், தேனைக் கொண்டு வந்தார்கள். ஆனால், வந்திருந்த கூட்டத்தில் ஒரேயொரு இளைஞன் மட்டும் மூடப்பட்ட ஒரு சிறு பெட்டியோடு வந்து நின்றான். அவன் குருவின் சீடர்களில் மிக ஏழ்மையான சீடன்.
குரு அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
“நீயும் இந்தப் போட்டிக்கு வந்திருக்கிறாயே? உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” – என்று கேட்டார்.
“குருவே… நான் உங்கள் மகளை அதிகம் விரும்புகிறேன். அவளைக் காதலித்து வருகிறேன். அதனால்தான், போட்டியில் கலந்துகொண்டேன்” என்றான்.[hide]
“நீ இந்தப் பெட்டியில் இனிமையான பொருளை கொண்டு வந்திருக்கிறாயா?” – என கேட்டார் குரு.
“ஆமாம்” என்றுசொல்லிக்கொண்டே பெட்டியைத் திறந்தான் சீடன்.
பெட்டியினுள் இருந்த பொருளைப் பார்த்து திகைத்து, திடுக்கிட்டுப் போனார் குரு. அந்தப் பெட்டிக்குள் ஒரு ஆட்டின் நாக்கு மட்டும் இருந்தது.
“இந்த ஆட்டின் நாக்கை ஏன் இங்கே கொண்டு வந்திருக்கிறாய்?” என்று குரு கேட்டார்.
“இந்த உலகத்திலேயே இனிமையான பொருளை கொண்டுவரச் சொன்னீர்கள். உலகிலேயே இனிமையான நல்ல பொருள் நாக்குதான். மனிதனின் நாக்கை வெட்டி எடுத்து வர முடியவில்லை. அதன் அடையாளமாக ஒரு ஆட்டின் நாக்கை வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த நாக்குதான் பல அற்புதங்களைச் செய்கிறது. நாக்கிலிருந்துவரும் இனிமையான சொற்கள்தான் நோயாளியை உற்சாகப்படுத்துகிறது. வாடி, வருத்தத்தில் இருப்பவர்களுக்குக்கூட வாழ வழி சொல்கிறது. இனிமையையும், மனநிறைவையும் மற்றவர்களுக்கும் தருகிறது. எனவே, உலகத்தில் இனிமையான பொருள் நாக்குதான்” என்றான் சீடன்.
போட்டியில் கலந்துகொண்டவர்களை அழைத்து, குரு இரண்டாவது கேள்வியைச் சொன்னார்.
“இந்த உலகத்தில் கசப்பான பொருள் எது? என்பதை கண்டுபிடித்துக்கொண்டு நாளை இங்கே வாருங்கள்” என்று கூறினார்.
மறுநாள் வந்த போட்டியாளர்களில் சிலர் வேப்பங்காயைக் கொண்டுவந்தார்கள். இன்னும்சிலர் கடுக்காய் கொண்டுவந்தார்கள். வேறுசிலர் எட்டிக்காயைக் கொண்டுவந்து காட்டினார்கள். ஆனால், அந்த ஏழை சீடன் மட்டும், முதல்நாள் கொண்டுவந்த பெட்டியைத் திறந்து மீண்டும் காட்டினான். அந்தப் பெட்டிக்குள் அதே ஆட்டின் நாக்கு இருந்தது.
குருவுக்கு கோபம் வந்தது.
“நேற்று, இனிப்பான பொருளை கொண்டு வா என்று சொன்னேன். நீ ஆட்டின் நாக்கை கொண்டு வந்தாய். உலகிலேயே கசப்பான பொருளைக் கொண்டு வா என்று சொன்னபோதும் அதே ஆட்டின் நாக்கைக் காட்டுகிறாய். உனக்கு என்ன கிறுக்கு பிடித்துவிட்டதா?. ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” – என்று எரிச்சலோடு கத்தினார் குரு.
சீடன் அமைதியாக பதில் தந்தான்.
“குருவே… இந்த உலகத்தில் எவ்வளவோ இனிப்பான செய்திகளை சொல்வதற்கு நாக்கு இருந்தாலும், பலவேளைகளில் தீய சொற்களைப் பேசி கசப்பான உணர்வை மற்றவர்களிடம் ஏற்படுத்துவது இந்த நாக்குதானே? நல்ல நண்பனைக்கூட கொடும் பகைவனாக மாற்றுவதும், சந்தோஷமாக இருப்பவரை துக்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்வதும் இந்த நாக்குதானே? எனவேதான், இந்த உலகத்திலேயே கசப்பான பொருள் நாக்கு என்று முடிவு செய்தேன்” என்றான் சீடன்.
சீடனின் விசித்திரமான பதிலைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன குரு, “என் மகளுக்கு ஏற்ற மணமகன் நீதான்” என்று உடனே முடிவு செய்தார். திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த உலகத்தில் நல்லதை கெட்டதாக மாற்றுவதும், கெட்டதை நல்லதாக மாற்றுவதும் நாக்குதான். இந்த ‘நாக்கு’ உருவாக்கும் சொற்கள்தான் சிலரை காயப்படுத்துகிறது. சிலநேரங்களில் காயத்திற்கு மருந்தாகவும் அமைகிறது.
மனித உடலில் அமைந்துள்ள அற்புதமான பொருளாக நாக்கு கருதப்படுகிறது. சிலவேளைகளில், “அவர்கள் எலும்பில்லாத நாக்கினால் எதையும் பேசுகிறார்கள்” என்று சொல்லும் அளவுக்கு சிலருக்குள் மன வருத்தத்தையும் உருவாக்கிவிடுகிறது.
“நாக்கு” ஒரு அற்புத சக்திகொண்ட ஆயுதமாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதற்கும், சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதற்கும், சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கும் இந்த நாக்கு பழகிக்கொள்வதால் அது தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. தன்னைப் பாதுகாக்கும் முறையை நாக்குமூலம் நாம் கற்றுக்கொள்ளலாம்.
32 பற்களுக்கு நடுவில் நாக்கை பத்திரமாக இறைவன் படைத்திருக்கிறார். இந்தப் பற்கள் அனைத்தும் பாதுகாக்கும் படைவீரர்கள்போல நாக்கை பாதுகாக்கின்றன. இந்த நாக்கு விதவிதமாய் வளைகிறது. எதைஎதையோ பேசுகிறது. பேசும்போது சரியான முறையில் வளைந்து கொடுக்கவில்லையென்றால், பற்களால் கடிக்கப்பட்டு காயம் அடைகிறது. தன்னைப் பக்குவமாக பாதுகாத்துக்கொண்டு வாழப் பழகும் நாக்கு, பேசுபவரைப் பாதுகாக்க சிலநேரங்களில் தவறிவிடுகிறது.
தவறான பேச்சைக் கேட்டவர்கள் “உன் பல்லை உடைத்துவிடுவேன்” என்றுதான் பதிலுக்கு சண்டையிடுகிறார்கள். ஆனால், தவறு செய்யும் நாக்கு தண்டணையிலிருந்து தப்பிவிடுகிறது.
இதனால்தான், திருவள்ளுவர் “காக்க வேண்டிய எதையும் நீங்கள் காக்காவிட்டாலும், உங்களது நாக்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்து காத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உங்கள் நாக்கு தவறாகப் பேசி உங்களை சொற் குற்றத்தில் அகப்படச் செய்து தீராத சோகத்தை தந்து நிற்கும்” என்கிறார். இதனை,
“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
– என்னும் குறள்மூலம் நாம் உணரலாம்.
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
– என்னும் குறள் “தீயினால் ஏற்படும் புண்ணைவிட, நாக்கு ஏற்படுத்தும் புண் ஆறாத வடுவாக மாறிவிடுகிறது” என்பதை சுட்டிக்காட்டுகிறது.
நாம் பேசுகின்ற பேச்சு பிறருக்கு நன்மை விளைவிப்பதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் அமையும்படி பார்த்துக்கொள்வது நாக்குக்கும் நல்லது. நமக்கும் நல்லது.
இனிப்பைத் தடவிய வார்த்தைகள் இதயத்திற்கு இன்பம் சேர்க்கிறது. இனிமை நிறைந்த மனதில் மனநிறைவையும் அள்ளித் தருகிறது. வாழ்க்கையில் மனமகிழ்வும், மனநிறைவும்தான் ஒருவருக்கு வெற்றியைப் பெற்றுத்தருகிறது என்பதை புரிந்துகொண்டால் வாழ்க்கை வசந்தமாக மாறும். நாக்கு நமக்குள் இருக்கும் ஒரு நல்ல ஆயுதம் அல்லவா?
தொடரும்.[/hide]
இந்த இதழை மேலும்