– 2018 – October | தன்னம்பிக்கை

Home » 2018 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்

    பரேய்லியில் படிக்க இடம் கிடைத்ததே ஒரு வசமாக கோல் முன்னர் கிடைத்த கால்பந்து போலத்தான்.. அந்தத் தருணத்தில் ஜெனிடிக்ஸ், நியூட்ரிஷன், என்று எல்லோரும் விரும்பும் பாடங்கள் எடுத்து காலியான பிறகு… எனக்கு பவுல்ட்ரி சயன்ஸ் கிடைத்தது. இந்திய ஆட்சிப்பணி தேர்வில் கவனம் செலுத்தியதால் கால்நடை மருத்துவ முதுகலை நுழைவுத்தேர்வில் (ICAR- Indian Council of Agricultural Research- JRF) வரிசை எண்(ரேங்க்-Rank) பின்னால் வந்தால் இது கிடைத்தது. கால்பந்து களத்தில் வாகான இடத்திற்கு சில நேரம் ஓட முடிவதில்லை…நூலிழை நேரத்தில் பந்து நழுவுவதுண்டு. இராபர்ட்டோ பேக்கியோ… அவ்வளவு பயிற்சிகளெல்லாம் எடுத்துவிட்டு உலகமே பார்க்கும் பொழுது.. பந்தை உயர உயர தூக்கி

    கோலுக்கு வெளிளே அடித்து விட்டு…தான் செய்த காரியத்தை, தன்னாலேயே புரிந்து  கொண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் சோகத்தில் மலைத்துப் போனார். இத்தாலி அவரால் தோற்றுப் போனது.

    இப்படி நடக்க சாத்தியம் இல்லை என்றுதான் எல்லோரும் நினைத்திருப்பார்கள்…பிடித்தது ஜெனிடிக்ஸ் முதுகலை ஆனாலும் பவுல்டரி சயன்ஸ் என்னும் பறவையியல் அறிவியல் தான் கிடைத்தது…பிடித்ததெல்லாம் கிடைத்து விடுகின்றதா? என்ன? இயாஸ் சார் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று தான் தேர்வில் கலந்து கொண்டிருப்பார். எனக்கும் எம்.பி.பி.எஸ் க்கு பதிலாக பி.வி.எஸ்.ஸி தான். பள்ளி இறுதி வருடம் முடித்த பின்பு கிடைத்தது. மெஸ்ஸி கூட உலக கோப்பை இறுதிப் போட்டியில் 2014 ஆம் வருடம் ஜெர்மனியிடம் வெற்றி வாய்ப்பை கொடுத்துவிட்டு சோகத்தில் திளைத்தார். தங்க பந்து கிடைத்தும் அவர் முகம் மலரவில்லை.

    Just Be என்று சும்மா இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் தான். 1998 வருட உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் ரொனால்டோவிற்கு( இவர் பழைய பிரேசில் மொட்ட தலை ரொனால்டோ) என்ன ஆனது? என்பது இதுவரை புதிர். அவருக்கு வலிப்பு வந்துவிட்டது என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் தான் ஆடுவார் என்றே அறிவித்தார்கள். ஆனால் அவர் சரிவர ஆடவில்லை. பிரான்ஸ் ஜெயித்தது. கோல்கள் விழுவதும் அப்படித்தான்… சரியான வாகான இடத்தில் சும்மா இருந்தாலே போதும் பந்து மிகச்சரியாக சப்ளை ஆகி.. கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவாக ஒரு செகண்ட் துளியில் காலில் பட்டு கோலாகும். சரிந்து விழுந்து சறுக்கிக் கொண்டே தள்ளியது கூட கோலியை ஏமாற்றிவிட்டு மெதுவாக நடந்து உருண்டு உற்சாகத்தைப் பொங்கச் செய்யும். அவையெல்லாம் சும்மா இருக்கும் பொழுது செய்த கடின பயிற்சி முயற்சியின் கீரிடங்கள்… பலனை கால்பந்து மட்டுமல்ல வாழ்க்கையும் படிப்பும் தேர்வும் எதிர்பாராத போதுதான் கிடைக்கிறது.

    பதட்டப்படாத பொழுது வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. பரேய்லியில் படித்து தேர்வெழுதும் முன்பே மூன்று அட்டம்பட்டுகள் முடித்திருந்தேன்.. நான்காவது அட்டெம்ப்டில் அதிக பதட்டமின்றி சரியான இடத்தில் நிற்பதற்காக ஓடி..[hide]

    சும்மாஇருக்கும் பொழுது படித்து…

    கிடைத்த கல்லூரி பாடத்தைப் பிடித்துப் போகச் செய்து படித்து சரிதான் எப்படியோ தலைப்புக்குப் பொருத்தமாக கட்டுரை வெடித்துவிட்டது. அழகாக வடிக்கப்பட்டு விட்டது. என்று நீங்கள் பாராட்டியதாக சுயமாக மகிழ்ச்சி அடைந்து கொண்டு, திருப்தியும் அடைகின்றேன்… வாழ்க்கையில் சரியான சந்தர்ப்பகங்களில் சரியான இடத்தில் ஓடி நிற்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

    எதுவுமே கடைசி ஆட்டம் அல்ல என்று எடுத்துக் கொள்வதில் தான் சந்தோஷத்தின் சூத்திரம் இருக்கின்றது. 1998 ல் தோற்ற ரொனால்டோவின் பிரேசில் 2002 ல் ஜெயித்தது. அப்படித்தான், அணியில் இருக்க வேண்டும். ஆட்டத்தில் இறங்க வேண்டும். அதில்

    சும்மா இருக்க முயற்சிப்போம்

    அதன் மூலம், சாதனை படைப்போம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?

    மனிதர்கள் மூன்று வகை. ஆபத்தான சூழ்நிலையில் தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் துணிவுடன் பிறரைக் காப்பாற்றுபவர்கள் முதல் வகையினர். தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள அவ்விடத்தை விட்டு ஓடுவது அல்லது தனக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் பிறரைக் காப்பாற்ற துணிவின்றி ஒதுங்கி கொள்பவர்கள் இரண்டாவது வகையினர். கண்ணியமற்ற, நற்குணமற்ற, நேர்மையற்ற, பண்பற்ற, மனிதர்கள் அறநெறியற்ற செயல்களை துணிவுடன் செய்து விட்டு தன்னை வீரனாக, ஆண்மகனாக பறைசாற்றிக் கொள்பவர்கள் மூன்றாவது வகையினர். இதில் நீங்கள் முதல் இரண்டு வகை என்றால் தவறில்லை. மூன்றாவது வகையினர்தான் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்.

    ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி தீரச்செயல் விருதுக்கு தேசிய அளவில் சிறுவர்-சிறுமியர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  தாங்கள் உயிரை சிறிதும்  பொருட்படுத்தாமல் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் சிறுவர்களுக்கு தீரச்செயல் புரிந்தோர்க்கான விருது  ஜந்து பிரிவுகளில் வழங்கப் படுகிறது. பாரத் விருது, சஞ்சய் சோப்ரா விருது, கீதா சோப்ரா விருது, பாபு கைதானி விருது மற்றும் பொது தேசிய வீர விருதுகள் ஆகும். விருது பெறும் சிறார்களுக்கு ஒரு பதக்கம், சான்றிதழ், மற்றும் ரொக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. விருதைத்தவிர, இந்த குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை இந்திரா காந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதுபோலவே, போர்க்களத்தில் தீரச்செயல் புரிந்தமைக்கு இராணுவ வீரர்களுக்கு பரம் வீரசக்ரா, அசோக சக்ரா, மகாவீர சக்ரா, கீர்த்தி சக்ரா விருதுகள் வழங்கப்படுகின்றன.

    பொதுவாக, பலரது உயிரைக் காப்பாற்றியதற்காகவே இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அசாதாரண நிலையில் துணிவுடன் சிறப்பு மிக்க சேவை செய்ததற்க்காக மத்திய அரசு விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆண்டுதோறும் தழிழக அரசு தீரச்செயல் புரியும் பெண்ணுக்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விருது  வழங்கி கௌரவிக்கிறது.

    தீரச்செயல்கள்:

    நீர் நிலைகளில் மூழ்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றுவது, சட்ட விரோதமாக இயங்கும் சூதாட்ட கும்பலைப் பிடிக்க போலீசாருக்கு உதவுவது, பாலியல் தொழில் புரியும் சர்வதேச கும்பலை பிடிக்க போலீசாருக்கு உதவுவது, குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவது, கொடிய விலங்குகளிடம் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது, பொதுமக்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது, தனி ஒருவராக தீவிரவாதிகளின் முகாமை அழித்து பயங்கரவாதிகளை அழிக்கும் ராணுவ வீரர்கள், வாகன விபத்துகளில் சமயோஜிதமாக செயல்பட்டு சக பயணிகளை காப்பாற்றுவது, தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் தைரியமாக செயல்பட்டு பெரிய விபத்தை தடுத்து நிறுத்துவது, தீயை அணைத்து காப்பாற்றுவது, மின்சார விபத்திலிருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட வீர தீர செயல் புரிந்த சிறுவர்-சிறுமிகள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், இவர்களுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். ஜனாதிபதி தனது மாளிகையில் விருந்து வழங்குகிறார்.

    வட தென் துருவங்களை அடைவது, உலகின் ஏழு கண்டங்களிலும், உள்ள உயரமான மலைச்சிகரங்களை அடைவது, ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு கயிறு மூலம் நடந்து செல்லுதல், பாறை ஏறுதல், சரிவில் இறங்கு தல், மற்றும் ஆறுகளை நீந்தி கடந்து செல்லுதல் உள்ளிட்டவையும் வீர தீர செயல்கள்தான். ஆனால், இவற்றிற்கு விருதோ, நிதியுதவியோ வழங்கப்படுவதில்லை.  கொலம்பஸ், வாஸ்கோடகாமா ஆகியோரின் கடற்பயணங்களும் வீர தீர செயல்கள்தான்.[hide]

    நம்முடைய தீரச்செயல் என்பது, எல்லோராலும் பார்க்க முடிந்ததை நாம் பார்ப்பது, எல்லோராலும் நினைத்துப் பார்க்க முடியாததை நாம் சிந்திப்பது, மற்றவர்கள் பாதகமான துன்ப நிலையை மட்டுமே பார்க்கும் விஷயத்தில்   சிறந்த வாய்ப்பை காணுதல், மற்றவர்கள் காணும் நம்பிக்கையிழந்த நிலையில் மற்றவர்கள் காணும் இருளில் ஓளியை காணுதல் ஆகியவை அடங்கும்.

    ஒரு சிறந்த உன்னதமான குறிக்கோளில் உந்தப்பட்ட மனிதரால் எதையும் சாதிக்க முடிகிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் தொழிலில் அல்லது தனிப்பட்ட முறையில் ஒரு நெருக்கடிநிலை வந்த பின்னர்தான் தங்களை ஆழமாகத் தேடிப்பார்த்து தங்களிடம் உள்ள திறமைகளைக் கண்டு பிடிக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது.

    உண்மையான வாழ்க்கை என்பது நகர்ந்து செல்வதில் சுதந்திரமாதலில்தான் துவங்குகிறது. கூட்டுப்புழுப் பருவம் என்பது ஏதோ ஒன்றைச் சார்ந்து இருப்பது போன்றதாகும். சிறைக்கைதி போன்றது. கைவிலங்கோடு இருப்பதைப் போன்றது. கம்பளிப் புழுப் பருவம் என்பது அத்தகைய விலங்குகளை உடைத்தெறிகிறது. அது நகர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது. பனிக்கட்டி உருகிவிடுகிறது. இதற்கு மேல் அது உறைந்து இருப்பதில்லை. கூட்டுப்புழுப் பருவம் என்பது உறைந்து கிடக்கின்ற நிலை. கம்பளிப்புழுப் பருவம் என்பது  நகர்ந்து செல்வது. நதியை போல நகர்ந்து செல்வது ஆகும்.

    14-ம் நூற்றாண்டில் வடநாட்டில் ராணி பத்மினி, 18-ம் நூற்றாண்டில் தென் நாட்டில் வீர மங்கை வேலு நாச்சியார் ஆகியோர் தீரச்செயல் புரிந்து வரலாற்றில் இடம் பெற்றவர்கள்.

    பலவீனமானவர்களை கொன்று குவிப்பது தீரச்செயல் அல்ல. எந்நேரமும் முயற்சியை கைவிட்டு விடலாம் என்ற நிலையில் நம்மைத் தள்ள எத்தனையோ புறக்காரணிகள் உள்ளன. விடாமுயற்சியும். ஆர்வமும்தான் வெற்றிகரமாக தீரச்செயல்களை முடிப்பதற்கு உந்து சக்திகளாக உள்ளன.

    நாம் ஒரு நாள் இறந்து போகக்கூடும், ஆனால், நமது தீரச்செயல்கள்  என்றும் நினைவிலிருக்கும். பலவீனமானவர்களுக்கு அன்புடன், சுயநலமின்றி, உதவத்; தயாராக இருக்கும் மனிதர்களை மனித நேயத்தில் வீர தீரர்கள் எனலாம்.

    ஆண்பால் என்பதை பிறவியால் அடையலாம். இளைஞன் என்பதை வயதால் அடையலாம். ஆனால், நல்ல வீரதீர பண்புகளை தனது தேர்வால் மட்டுமே அடைய முடியும்;. ஒருவனுடைய பணமோ, அவன் அணியும் ஆடைகளோ அல்ல. அவன் நடந்து கொள்ளும் நடத்தைதான் அவனை சிறந்த மனிதனாக ஆக்குகிறது.

    குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது கூட வீரதீர செயல்தான் என்று வேடிக்கையாக சொல்லலாம். 100சிசி பிளான்டினா, 125 சிசி ஹோண்டா, 150 சிசி யமாகா, 180 சிசி பல்சார், 350 சிசி புல்லட் வாகனங்கள் வாங்கினாலும் அது என்னவோ 90 சிசி ஸ்கூட்டி பின்னால்தான் போகிறது. இது தீரச் செயலா?

    திரைப்படங்களில் வீரதீர செயல்கள் புரிபவர்களாக கதாநாயகர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் ஆங்கிலேயர்கள் நாட்டை நம்மிடம் ஒப்படைத்து விட்டு அவர்களாகவே ஓடி இருப்பார்கள். இன்றைக்கு மனைவிமார்களை நகைச்சுவைக்காக கூட திட்ட முடிவதில்லை. பெண்கள் தெருக்குழாயில் குடங்களில் தண்ணீர் பிடிப்பதுகூட சாகசமான  விஷயமாக உள்ளது. ஒப்பனை செய்யாமல் பெண்கள் யாரும் இன்று சாலையில் சென்றால் அதுகூட தீரச்செயல்தானோ என்னவோ?

    இக்கட்டான நேரத்தில் மற்றவர்களுக்கு உதவும் பண்பு உள்ளவர்களுக்கு எப்போதுமே விருதுகள் காத்திருக்கின்றன. பணத்திற்காக, புகழுக்காக, உடல் கவர்ச்சிக்காக அல்ல. இதயத்தில் உன்னதமான அன்பு இருப்பதுதான் வீரதீரப்பண்புகளாக வெளிப்படுகிறது.

    பேருந்தில் பயணிக்கிறோம். கர்ப்பிணி, குழந்தையுடன் நிற்கும் இளம் தாய்மார், வயதானவர் நின்றால் அவர்களுக்காக நம் இருக்கையை விட்டு தருவது நற்பண்புதான். பெரிய வீர தீர செயலை செய்ய முடியாதவர்கள் இவற்றை செய்யலாம்.

    சுயதியாகம்தான் வீரதீரத்தின் சாரம்சம் ஆகும். தன்னைப்பற்றி பொருட்படுத்தாமல் மற்றவர்களை பற்றி சிந்திக்கின்ற போதுதான் அது நிகழ்கிறது.

    ஆண் பிறந்து இருப்பதே பெண்களை காப்பாற்றுவதற்க்காகத்தான். 1912-ல் இங்கிலாந்திலிருந்து நியுயார்க்கிற்கு பயணித்த டைட்டானிக் கப்பல் வட அட்லாண்டிக்கில் பனிப்பாறையில் மோதி விடுகிறது. மூன்று மணி நேரத்திற்கு பின் மூழ்குகிறது. இதில் பயணித்த பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் காப்பாற்றப்பட்டனர். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் நிறைய ஆண்கள் இறந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் 100 ஆண்டுகள் கடந்து விட்டன. இவர்களுக்கு வாசிங்டனில் நினைவிடம் உள்ளது. அதில் பொறிக்கப்பட்ட வாசகம் என்னவெனில், உடைந்த டைட்டானிக் கப்பலில் அழிந்து போன வீரமானவர்களே, உங்கள் உயிரைக் கொடுத்து அதில் பயணித்த பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளீர்கள் என்பதுதான் அது.

    அறநெறி மரியாதையுடன் கூடிய ஆண்மைதான் நல் விஷயங்களை செய்திட மிகவும் சக்தி வாய்ந்தது. நல்லொழுக்கமற்ற ஆண்மை அபாயகரமானது. மரணத்திற்கு சமமானது. மற்றவர்களை துன்புறுத்தியதற்காக, காயப்படுத்தியதற்க்காக, தீங்கிழைத்தற்க்காக யாரும் ஒரு போதும் மதிக்கப்படுவதில்லை. துன்புறுபவர்களுக்கு, காயப்பட்டவர்களுக்கு, தீங்கிழைக்கப்பட்டவர்களுக்கு முன்னின்று சேவையாற்றும் பண்புதான் வீர தீரப் பண்பாகும்.

    வெளிநாட்டில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் வீரதீரத்தின் சக்தியை அடையாளங்காட்டியது. ஒரு திரையரங்கில் முரடர்கள் துப்பாக்கியுடன் நுழைந்து அப்பாவி மக்களை சுடத் தொடங்குகிறார்கள். இதில் இறந்தவர்கள் 12 பேர். அதில் மூவர் தன்னுடன் வந்த தன் பெண் தோழியரை காப்பாற்றும் முயற்சியில் அவர்கள் மீது பாய்ந்து  தாங்கள் குண்டடிபட்டு இறந்து விட்டார்;கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தன் சுயமதிப்பு, தன் தேவைகள், ஆசைகள், தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் செய்யும் தியாகம் எல்லாவற்றையும் விட மேம்பட்டதாகும். அவர்களது மனிதாபிமானம் அளவிட முடியாததாகும்.

    இன்று இத்தகைய நற்பண்புள்ள மனிதர்கள் உலகளவிலும், தேசிய அளவிலும் அருகி வருகிறார்கள். தார்மீக நன்னெறிகள், உயர் கொள்கைகள், நெறிமுறைகள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்க வேண்டும். நாகரீக சமுதாயத்தில் கண்ணியம், நற்குணம், நேர்மை, குடும்பத்தில் பெரியவர்களை மதிக்கும் பண்பு உள்ளிட்டவைகள் மறக்கப்பட்ட ஒன்றாகி வருகிறது. இன்றைய சமுதாயத்தில் இரக்கம் காட்டுபவன் இளிச்சவாயன். மரியாதை தருபவன் முட்டாள். உதவி செய்பவன் பிழைக்க தெரியாதவன். இன்று அர்த்தங்கள் மாறி வருகின்றன.

    அன்றாட நிகழ்வுகளாக செய்தித்தாள்களில் பிறரைத் தாக்குவது, கொலை செய்வது, பிறருக்கு, தேசத்திற்கு துரோகமிழைப்பது, மெலியவர்களை கருணையின்றி துன்புறுத்துவது, பிறர் செல்வத்தை களவாடுவது, அபகரிப்பது, பெண்களை ஏமாற்றுவது போன்ற செய்திகளை வெளியிடுவதற்க்காகவே குற்றச்செய்திகள் என்ற தலைப்பில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது வேதனையான அவலம். வீர தீர செய்திகளை வெளியிட ஒரு செய்தித்தாளின் ஒரு பகுதி ஒதுக்கப்பட வேண்டும். அத்தகைய நிகழ்வுகளும் நாட்டில் பெருக வேண்டும் என பிரார்த்திப்போம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி? 

    தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லையே அதற்கான காரணங்கள் பற்றிச் சொல்லுங்கள்?   

    ஷாலினிபிரியா.கோ

    கணிதவியல் துறைஆய்வாளர்

    சேலம்மாவட்டம், மூக்கனூர்.

    கண்டுபிடிப்புகள் மகத்தானவை, கண்டுபிடிப்புகள் மூலம் இன்று உலகம் வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது. நம்மைச் சுற்றி இருப்பவை அனைத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றாலும் அறிவியலைப் பற்றிய ஆர்வமும் ஞானமும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் அறிவியல் பற்றியும், கண்டுபிடிப்புகள் பற்றியும் கேள்வி எழுப்பியமைக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

    காரைக்குடியில் மின்வேதியியல் ஆராய்ச்சி மையம், காவலூரில் விண்வெளி ஆய்வு மையம் என பல ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இவைகளில் கண்டுபிடிப்புகள் விவரம் என்னிடம் இல்லை, ஆனால் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில் அரிசி, கரும்பு, காய்கறி, பழங்கள் என அதிக விளைச்சல் தரும் ரகங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சென்ற ஆண்டு மட்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எட்டு வீரிய ரகங்களும் மூன்று பண்ணைக் கருவிகளும் வெளியிட்டிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த ரகங்களை நாம் தினமும் உணவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    ஏழுகோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 2250 பள்ளிக்கூடங்களும் 552 பொறியியல் கல்லூரிகளும், 1150 அறிவியல் கலைக்கல்லூரிகளும், 53 பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. இந்தக் கல்விச்சாலைகளில் படிக்கும் மாணவர்களும் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றை அறிவியல் கண்காட்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் கரூர், வெள்ளியணை அரசுப்பள்ளியில் படித்த ஹரிகரன் என்ற மாணவன் உலர் கழிப்பறை ஒன்றைத் தயாரித்தார். அவனுக்கு உதவியாய் இருந்தவர் ஆசிரியர் தனபால். இருவரையும் அழைத்துப் பாராட்டினேன். அந்த மாணவனை ஜப்பானிற்கு அனுப்பி வைத்தது அரசு. அவருக்கு ஒரு பள்ளிக்கூட தாளாளரிடம் உதவி பெற்று, அவரைத் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்தேன்.

    ஹரிகரனைப் போல மாணவர்களும், தனபால் போன்ற ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களைக் கண்டு ஆச்சரியப்படவும், பாராட்டவும், அறிவுரை கூறவும், அக்கறைகாட்டவும், பரிசளிக்கவும் பொதுமக்கள் இங்கு இல்லை. அவர்களுக்கு வெற்றியின் மீது எல்லாம் அக்கறை இல்லை. ஏதாவது ஒரு ஊருக்குப் போய் சில சம்பிரதாயங்களைச் செய்தால் அவர்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நம்பி அங்கு சென்று, இருக்கும் பணத்தை செலவு செய்து வீட்டிற்குத் திரும்பி வரும் போது குளிர் அல்லது ஜுரம் என்று நோயையும் வாங்கி வந்து விடுவார்கள். இதில் ஒரு வார காலத்தையும், ஒரு ஆண்டு சம்பாதித்த பணத்தையும் தொலைத்துவிட்டு, தொடர்ந்து அதேநிலையில் வாழ்கிறார்கள். ஆக, அறிவியல் சிந்தனை இல்லாததும், அறிவியலை புரியும் நிலையில் இல்லாத மக்கள் இருப்பதால் இது போன்ற மாணவர்கள் கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை இல்லாமலும், அங்கீகாரம் இல்லாமலும், ஆதரவு இல்லாமலும் போய்விட்டன. மக்களுக்கு அக்கறை இல்லாமல் இருப்பதால், ஊடகங்களும் இவற்றைக் கண்டு கொள்வதில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது.[hide]

    அதேவேளையில் மாணவர்கள் பருவக்கோளாறு காரணமாக ஒரு சிறிய தவறு செய்துவிட்டால், அதை பெரிய உலக நிகழ்ச்சியைப் போல் சித்தரித்து ஊடகங்கள் விவாதம் நடத்தி, அந்தப் பிள்ளைகளை அவமானப்படுத்தி, பெற்றோரை வில்லன்களாக மாற்றி, ‘கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது’என்று கூச்சலிட்டு, அந்த வளர் இளம் பருவ குழந்தைகளைப் பள்ளியிலிருந்தே வெளியேற்றி விடுவார்கள். குழந்தைகள் மீது விஷத்தைக் கக்கும் அறம் போதிக்கும் பெரிய மனிதர்கள் பள்ளிகளில் ‘கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது’, ‘படிப்புதான் பண்பாட்டைக் கெடுத்தது’என்று கூச்சலிடுவார்கள். தவறு செய்த  சிறுவனை அல்லது சிறுமியை அழைத்து, அறிவுரை கூறி, மன்னித்து, மீண்டும் இந்தச் செயலை செய்யாமல் பார்ப்பதுதான் அறிவார்ந்த நடவடிக்கையே தவிர, அவர்களை அவமானப்படுத்துவது அல்ல. ஏனென்றால் ஒரு தவறான செயலைச் செய்த மாணவன், அவனாகவே திருந்திவிடுவான். அவன் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவன். அந்தப் படைப்பாளிக்கு நாம் மரியாதை செலுத்தினால், அவன் ஊக்குவிக்கப்படுகிறான்.

    இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் போது ஒரு உண்மையைப் பகிர வேண்டும். மின்சாரம், ஆகாய விமானம், தொலைபேசி, கணினி, இணையதளம் போன்ற உயர்ந்த கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டால் அதற்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் நிச்சயமாக உலக அளவில் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் உண்டு. நோபல் பரிசு கமிட்டியும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட வியக்கத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் கண்டுபிடிக்கவில்லை என்பதோடு அப்படி கண்டுபிடிக்கும் அளவுக்கு அறிவியல் அறிவும், ஆராய்ச்சித்திறனும், அறிவியல் கட்டமைப்பும், ஊக்குவிப்பும், நிதி வசதியும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

    சுதந்திரத்திற்கு முன்பு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், மருத்துவமனைகளும் ஆராய்ச்சியின் பிறப்பிடங்களாகத் திகழ்ந்தன. அறிவியலுக்கு நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் என்பவர். மாநில கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இதே பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான் உலகத்தர பொறியாளர், பாரதரத்னா விஸ்வேஸ்வரய்யா. தமிழ்நாட்டில் பணியாற்றிய ஆங்கில மருத்துவர் ரொனால்ட் ரோஸ் என்பவர் மலேரியா நோய் பற்றிய ஆராய்ச்சி செய்து, நோயை பரப்புவது பெண் அனாபிலஸ் கொசு என்று அடையாளம் கண்டு அந்தக் கொசுவை ஊட்டிக்கு அருகிலுள்ள குன்னூரில் பிடித்து, ஆய்வு செய்துநோய் தடுக்கும் விதத்தை கண்டுபிடித்தார். அதற்காக இவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரும் நம்மூரில்தான் மருத்துவப் பணியாற்றினார்.

    ஆனால் இது போன்ற தரமான ஆராய்ச்சிகள் இன்று நடை பெறுகின்றனவா? என்று தெரியவில்லை. உலகம் திரும்பிப்பார்க்கும் ஆராய்ச்சியும், கண்டுபிடிப்பும்; இங்கு நடப்பதாகக் கேள்விப்படவில்லை. நமது பல்கலைக்கழகங்களின் தரம் எப்படி இருக்கிறது அல்லது இறங்கி இருக்கிறது என்பதைப் பார்த்தால் உண்மை நிலை புரியும். உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் (QS world university ranking) நாம் உயர்வாகக் கருதும் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் இல்லை, அது 650வது இடத்தில் இருக்கிறது.

    இப்படியாக கல்வியிலும் ஆராய்ச்சியிலும் பின்தங்கி போனதற்கு அறிவியல் மீது அக்கறை இல்லாமல் போனதும், அறிவியலை ஊக்குவிக்காததும் காரணமாக இருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா 36 லட்சம் கோடி ரூபாயும், சைனா 32 லட்சம் கோடி ரூபாயும், ஜப்பான் 12 லட்சம் கோடி ரூபாயும் செலவு செய்யும் போது இந்தியா 4.6 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. தென்கொரியா நாடு, வருமானத்தில் 4.3 சதம் செலவிடும்போது, நம் நாட்டில் நமது வருமானத்தில் ஒரு சதமானத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சிக்கு செலவிடுகிறோம். அரசியலுக்கும், மதத்திற்கும், கிரிக்கெட்டிற்கும், சினிமாவிற்கும் எத்தனை தொலைக்காட்சி சேனல்கள் என்று பாருங்கள், ஆனால் எல்லாவற்றையும் விட மேலான அறிவியலை விவாதிக்க தமிழ்நாட்டில் ஒரு தொலைக்காட்சி சேனலாவது உண்டா என்றும் பாருங்கள்.

    முடிவுரை: நமது மாணவர்களும், ஆசிரியர்களும் சில கண்டுபிடிப்புகளைள உருவாக்கியிருக்கிறார்கள். அவை வியக்கத்தக்க, வேறு எங்கும் உருவாக்காத கண்டுபிடிப்புகள் அல்ல, என்றாலும் அவற்றை நம் மக்கள் கண்டு கொள்வது இல்லை. போலி அறிவியல், மூட நம்பிக்கை, பொழுது போக்கு என்ற மனப்பான்மையில் மக்கள் மூழ்கிக்கிடப்பது அறிவியல் கண்டுபிடிப்புகள் தோன்றாததற்கு காரணமாக இருக்கிறது. உலகம் அங்கீகரிக்கும் கண்டுபிடிப்புகள் ஏற்பட வேண்டும். அதற்கு அறிவியல் ஆர்வத்தை பிள்ளைகள் மனதில் உரமிட்டு வளர்க்க வேண்டும். அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. அறிவியல் ஆர்வம் மிக்க மாணவர்களையும், ஆசிரியர்களையும் நான் பெரிதும் மதிக்கிறேன்.[/hide]

    இந்த இதழை மேலும்

    காய்ச்சல்

    காய்ச்சல் என்பது சீரான அளவில் அதிகரிக்கும் உடலின் தட்பவெப்பம் ஆகும். குழந்தைகளின் உடல் பெரியவர்களை விட பொதுவாகவே அதிக தட்பவெப்பத்தை கொண்டிருக்கும். உடலின் வெப்பம் பொதுவாக 36.10C முதல் 37.80C வரை (970F-1000F) இருக்கும்.

    அளவிடும் முறை

    உடலின் தட்பவெப்பத்தை அளவிட பல வழிமுறைகள் உள்ளன. வெப்பமானி என்பது உடலின் வெப்பத்தைக் கண்டறிய உதவும் கருவி. இதை நாக்கிற்கு அடியிலோ, அக்குள் பகுதியிலோ, ஆசன வாயிலோ வைத்து கண்டறியலாம். ஆசன வாயில் வெப்பமானி வைத்து கண்டறியும் முறையே சிறந்ததாகும். ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லாததால் குழந்தைகளுக்கு அக்குளில் வைத்து கண்டறியலாம். இம்முறையில் கண்டறியும் போது Thermometerp 10F அளவை வரும் அளவோடு கூட்டிக் கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு அக்குளில் வைத்து அளக்கும் போது 98.60F என்று வந்தால், இதனுடன் 10F  கூட்டி 99.60F என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு 1000F மேல் வெப்பநிலை இருந்தால், காய்ச்சலுக்கான மருந்து கொடுக்க வேண்டும்.

    காய்ச்சலைக் கண்டறிய இரண்டு வகை வெப்ப மானிகள் பயன்படுத்தப் பட்டு வந்தன. ஒன்று பாதரசம் அடங்கியது. இவ்வகையில் ஆபத்து என்னவென்றால், பாதரசம் எதேச்சையாக கசிந்துவிட்டால் அது குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தலாம். அதனால் தற்பொழுது டிஜிட்டல் வெப்பமானிகளை மருத்துவர்கள் உபயோகப்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.

    காரணம்

    காய்ச்சல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. தொற்றுநோய், தடுப்பூசிகள், காயங்கள், மருந்துகள், புற்றுநோய் மற்றும் பரம்பரை சார்ந்த நோய்கள் என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.

    காய்ச்சல் என்பது நோயின் அறிகுறி; நோய் அல்ல. எனவே காய்ச்சலின் காரணத்தை கண்டறிவது முக்கியமாகும். காய்ச்சலின் தன்மையை வைத்து சிலசமயம் காய்ச்சலின் காரணத்தைக் கண்டறியலாம்.

    சிகிச்சை

    காய்ச்சல் என்பது நோயல்ல என்பதால் காய்ச்சலை வரும்போதெல்லாம் அதைக் கட்டுப்படுத்த வேண்டாம்.[hide]

    உடல் வெப்பநிலையை அளவிடுவது எப்படி?

    1. பொத்தானை அழுத்தி வெப்பமானியை இயக்கச் செய்யவும்
    2. வெப்பமானியை அக்குளில் படத்தில் காட்டியவாறு வைக்கவும்
    3. கையை மார்போடு அணைப்பதன் மூலம் அக்குளை மூடவும்

    பீப் ஒலி கேட்டபின் வெப்பமானியை எடுத்து திரையில் தெரியும் எண்ணைக்  குறித்துக் கொள்ளவும்.

    வரும் எண்ணுடன் 1o சேர்த்துக் கொள்ளவும். அதுவே குழந்தையின் சரியான வெப்பநிலை ஆகும் என்பது சில மருத்துவர்களின் கணிப்பு. ஆனால் காய்ச்சலினால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவது, நீர் சத்து குறைதல், வலிப்பு ஏற்படும் அபாயம் ஆகியவையினால் காய்ச்சலைக் குறைக்க வேண்டும்.

    பொதுவாகக் காய்ச்சலுக்கு இரண்டு வகையான மருந்துகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. பாராசிடமால் (Paracetamol) மற்றும் இபுபுரூஃபன் (ibu profen). இதைத் தவிர அஸ்பிரின் (Aspirin), நிமுசுலைட் (Nimesulide) மற்றும் மெஃபெனமிக் அசிட் (Mefenamic acid) போன்ற மருந்துகள் சிலரால் பயன்படுத்தப்பட்டாலும் குழந்தைகளுக்கு இம்மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இவ்வகையான மருந்துகள் வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். பாராசிடமால் மருந்து பொதுவாக எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது. எனவே காய்ச்சலுக்கு பாராசிடமால் மருந்தே சிறந்தது. ஒரு வேளைக்கு 10-15 மி.கி./கிலோ என்ற கணக்கில் ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் கொடுக்கலாம்.

    ஈரத் துணியால் துடைக்கும் (Tepid water therapy) முறை நிரூபிக்கப்படாவிட்டாலும், இம்முறையைக் கையாள் வதால் ஆபத்தில்லை.[/hide]

    இந்த இதழை மேலும்

    மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்

    Problems in the world will increase:  therefore,

    I  should increase my capacity for dealing with problems

    We all must face problems

    But it is how you face them that counts

    – English  proverb 

    உலகில்  பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும், அதனால் அந்தப்பிரச்னைகளை சமாளிக்க  நம்முடைய திறமையை வளர்த்துக் கொண்டே ஆக வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பிரச்னையை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம், ஆனால் நாம் பிரச்னைகளை எவ்வாறு எந்த கோணத்தில் எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தீர்வுகள்  அமைகிறது.

    வாழ்க்கையில் முன்னேற என்ன வேண்டும்?  என்ற கேள்விக்கு, அமெரிக்கக் கோடீஸ்வரரான பால் கெட்டி     ( How to be rich )      “ஹவ் டு பி ரிச்  ”   என்ற புத்தகத்தில்   சில காரணிகளை வகைப்படுத்துகிறார்.

    1. பழக்கங்களும், எண்ணங்களும் தான் மனிதனை உருவாக்குகின்றன.  நல்ல பழக்கங்கள், நல்ல எண்ணங்களையும்,  நல்ல சிந்தனைகளையும் தருகின்றன. தீய பழக்கங்கள், தீய எண்ணங்கள் தோற்றுவித்து அவனை திசை  மாறச்செய்கிறது.
    2. எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது பணிச்சுமையை  எளிதாக்குகிறது, மனதை லேசாக்குகிறது,  உடனிருப்பவர்களுக்கு ஊக்கத்தைத் தருகிறது
    3. ஒரு குறிப்பிட்ட காரியத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சொன்னபடி முடிக்க வேண்டும், காலம் தாழ்த்துபவனுக்கு வெற்றி கைகூடாது.
    4. செலவைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.
    5. சூழ்நிலைகள் மாறும் போதும், சோதனைகள் ஏற்படும்போதும், பதட்டம் அடையாமல் அமைதி  காத்தல் வேண்டும்,  புதிய பிரச்னைகள் எழுந்தால் நிலை தடுமாறாமல் புத்திக்கூர்மையோடு  அணுக வேண்டும்.
    6. தனிப்பட்ட வாழ்க்கையிலும்சரி, தொழிலும் சரி  எந்தப் பழக்கங்கள் உதவி செய்கின்றன,  எந்தப் பழக்கங்கள் இடையூறாக இருக்கின்றன என பட்டியலிட்டு வேண்டாததை விலக்கவும், வேண்டியவற்றை பின்பற்றவும் வேண்டும்.
    7. பலரோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்புக்களை அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் தனித் திறமையையும், புதிய யுக்திகளையும் கற்றுக் கொள்ள முடியும்.
    8. மற்றவர்களை குற்றம் குறை  சொல்லாமல் இருக்க வேண்டும்.
    9. நேர்மையான,  உண்மையான, தேவையான பாராட்டுக்களை வழங்க வேண்டும்.
    10. உடனிருப்போருக்கு முன்னேறத் தேவையான ஆர்வத்தையும், முயற்சியையும் தூண்டவேண்டும்.

    குறை சொல்வதால் ஒருவரை திருத்திவிட முடியும் என்பது சரியானதல்ல, தங்களின் குறை சொல்லும் குணத்திற்கு தனக்கு ஆதரவாக ஆளாளுக்கு  ஒரு காரணம் சொல்வார்கள். இதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

    நாம் பிறரை குறை சொல்லும் போது,  மற்றவர்கள் மேல் அக்கறை எடுத்து திருத்த முயற்சிப்பதாக நாம் நம்புகிறோம், ஆனால் அதே சமயம் நம்மீது யாராவது குறை சொன்னால், ஏன் இப்படி இவர்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்? எப்போது இவர்கள் திருந்துவார்கள் ? என்று வருந்துகிறோம்.[hide]

    ஒருவரது தவறை  உண்மையிலேயே திருத்த நினைத்தால் முதல் வேலையாக அவர்களை  குறை சொல்வதை நிறுத்த வேண்டும், ஒருவரை அடிக்கடி குறைச் சொல்ல தொடங்கினால் உண்மையிலேயே நாம்  எதற்கும் தகுதியில்லாதவர்தான் என்ற  தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்பட்டுவிடுவார்கள், தங்கள் குறையை திருத்தவே முடியாது என நம்பத் தொடங்கி விடுவார்கள்,  தனிமைப்பட்டுவிடுவார்கள் ”  என உளவியல் வல்லுநர்கள்  கருத்துக்களை பதிவிடுகிறார்கள்.

    சர்க்கஸ் கூடாரத்தில்  பெரிய யானையை சின்ன சங்கிலியாலும், குட்டி யானையை பெரிய சங்கிலியாலும்  கட்டியிருப்பார்கள். என்ன இது புரியாத புதிராக இருக்கிறதே? என்று நாம் நினைப்போம், பெரிய யானைக்கு சின்ன சங்கிலியா? என்றும், குட்டி யானைக்கு பெரிய சங்கிலியா? என்றும் நினைப்போம்  ஆனால் அதில் உளவியல் கூற்று அடங்கியுள்ளது.

    தப்பிக்க விரும்பி குட்டி யானை தன் காலில் கட்டப்பட்டுள்ள பெரிய சங்கிலியை இழுத்து இழுத்துப் பார்க்கும், பல முறை  முயற்சித்து அது தோல்வியை அடையும்,  இனிமேல் தப்பிக்க  முடியாது  என்ற எண்ணம் அதன் மனதில் வேரூன்றி  விடும், சங்கிலியை இழுக்கும் பழக்கத்தை ‘ முடியாது  ’  என்று நினைத்து நிறுத்திக் கொள்ளும்,  பழக்கத்திற்கு அது வந்து விடும், சங்கிலியை அது இழுக்காது என்று முழுமையாக தெரிந்த பின்புதான் அந்த யானையை சின்ன சங்கிலியால்  கட்டுகிறார்கள். அது போலத்தான் திருந்தவே முடியாது என்று அவர்கள் நம்பி விட்டால் அவர்கள் முயற்சிக்கப் போவதில்லை, அவர்களை தோல்விப் பாதைக்கு திசை திருப்பி விடுகிறோம்.

    “ நேர்மையான,  உண்மையான  பாராட்டுக்களை வழங்க வேண்டும். ஒருவரின் திறமைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்துப் பாராட்டினால், அதில் அவர்கள் மீண்டும் கவனம் செலுத்துவார்கள் அவர்கள் குதூகலமும், மகிழ்ச்சியும் அடைவார்கள், அவர்களது திறமை அதிகமாகும், திறமையின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும், திறமைகளினுடைய வட்டம் அதிகமாக அதிகமாக கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி சுருங்கி ஒரு புள்ளியாய்  மறைந்து போகும்,   குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அது அவர்களுக்கு தோல்விக்கான காரணமாகிவிடும் ”  என்று உளவியல் வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

    மற்றவர்கள் மீது அக்கறை காட்ட,  காட்ட அவர்கள் உங்கள் மீது அலாதியான பிரியம் கொள்வார்கள், அவர்களை நீங்கள் நேசித்தால், உங்களை அவர்கள் பல மடங்கு நேசிப்பார்கள், உங்களோடு நெருங்கிப் பழக ஆசைப்படுவார்கள்,  பழகப் பழக  முன்னை விட மேலும் அது உன்னதமாக  அமையும்.

    உடனிருப்போருக்கு முன்னேறத் தேவையான ஆர்வத்தையும், முயற்சியையும் தூண்டவேண்டும், எந்த விளக்குக்கும் ஒரு தூண்டு கோல் தேவை என்று சொல்வார்கள், மற்றவர்கள் வளர்ச்சி அடைய, அவர்களின்  திறமையை சுட்டிக்காட்டி ஆர்வத்தை தூண்டி அவர்களின் முயற்சிக்கு ஊக்கமளிக்க வேண்டும், தன்னம்பிக்கையை வளர்கக வேண்டும், “ஒரு கால் ஊனமுற்ற மாணவனுக்கு  உயரம் தாண்டும் திறமை இருப்பதை அறிந்து  இருக்கும் ஒரு காலில் உயரம் தாண்டலாம் ” என்று அவனது ஆர்வத்தை வளர்த்தார். அந்தப் பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியர், அவரின்  தொடர் தூண்டுதலினால்தான்  தன் திறமையை வளர்த்துக் கொண்டான் முயற்சித்தான், ஊனமுற்றோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம்  வென்றான். அந்தத் தமிழ் மாணவன் சேலம் மாரியப்பன்.

    ஒருவனை  ஊக்கப்படுத்தும் போது அவனுக்கு உற்சாகம் அதிகமாகிறது, அவனிடமிருந்து  ஒரு   அசாத்தியமான சக்தி வெளிப்படுகிறது, தன்னம்பிக்கை அதிகமாகிறது, விடாமுயற்சியும் வலிமையான எண்ணமும் அவனுக்கு  ஆர்வத்தை தூண்டி  வெற்றியைத் தருகிறது.

    வேடிக்கையான   ஒரு கதை, இதற்குப் பொருத்தமாக இருக்கும்,   ஒரு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது, ஒரு பெரிய சிங்கத்தின் பிடரியை ஒரு இளம் பெண் அன்போடு தடவிக் கொண்டிருந்தாள், சிங்கம் அவள் தடவ தடவ அதற்கேற்ப தலையை சாய்த்து கொண்டிருந்தது.

    வேறு யாராவது இது போல செய்யத் தயாராய் இருக்கிறீர்களா? என்று அந்த சிங்கத்தின் பயிற்சியாளன் கேட்டான், ஒரு இளைஞன் முன்வந்தான், உண்மையிலேயே நீ தயாரா? “சிங்கம் செய்ததைப் போல என்னாலும் முடியும் “  என்றான் இளைஞன், அந்தப் பெண்ணை நெருங்க   அந்த  வாய்ப்பினை பயன்படுத்த விரும்புகிறான் என்று தெரிகிறது.

    ஆதலின், குறை  சொல்வதைத் தவிருங்கள், குதூகலம் நிறையும்,  மனம் திறந்து பாராட்டுங்கள்,  மகிழ்ச்சிகள் இரட்டிப்பாகும், ஆர்வத்தையும், முயற்சியையும்  தூண்டுங்கள், அமோகமான பலன் கிடைக்கும், எந்த விதைக்கு நீர்  ஊற்றுகிறோமோ அது உயிர் பெறும், மற்றவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அதனைஊக்கப்படுத்துங்கள், ஊக்கம் உயர்வினைத் தரும்.

    முயன்று பார்க்கச் சொல்லுங்கள்,   முயற்சிகள் மெய் வருத்த கூலி தரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    உடம்பும் – இலக்கும்

    ஊக்கம் இருப்பவனிடத்தில் தான் ஆக்கமும் இருக்கும்.

    ஊக்கம் இருப்பவனிடத்தில் ஏக்கமிருக்காது.

    மனவலிமை உள்ளவனால் வல்லவனாகத் திகழ முடியும்.

    மன உறுதி உள்ளவனிடத்தில் செயலிலும் உறுதி இருக்கும்; எதிலும் வல்லமை படைத்தவனாக பாடுபடுவான்.

    எனவே, ஊக்கத்தால் ஆக்கம் ஏற்படும்; ஏக்கமும் அகலும். மனவலிமை, செயல்வலிமையை ஏற்படுத்தும்.

    மன  உறுதி வல்லரசனாக ஒருவனை மாற்றும்.

    மனவலிமையால் தோன்றும் சிந்தனை வலிமை, மனித சக்தி வாய்ந்த முழு மனிதனாக ஒருவனை உருவாக்குகிறது.

    ஒரு காரியத்தை செய்ய, ஒரு விசயம் வெற்றியடைய, அடிப்படையாக அனைத்திற்கும் அஸ்திவாரமாகிய மனதில் முதலில் வலிமை இருக்க வேண்டும்.

    இரண்டாவது சிந்தனையில் வலிமை இருக்க வேண்டும். (இந்த வலிமை மனதில் வலிமையிருந்தால் தான் வரும்).

    மூன்றாவதாக: செயலில் வலிமை இருக்க வேண்டும் (இந்த வலிமை மனதிலும் சிந்தனையிலும் இருந்தால் தான் வரும்.

    ஒரு காரியம் வெற்றியடைய வேண்டும் என்றால் மிகமிக முக்கியமான இம்மூன்றும் தேவைப்படுகிறது.

    மூன்றையும் ஒரே சமயத்தில் ஒரு செயலில் ஈடுபடுத்தினால் தான் வெல்ல முடியும். இன்று வென்றுள்ளவர்களெல்லாம் இப்படி ஈடுபடுத்தியவர்களே.

    எது வேண்டும்? உடல் நலமா? மனநலமா?

    எது பெரிது? உடல் நலமா? மனநலமா?

    உடல் நலம் பெரிது என்றால் – மனநலம் நன்றாக இருந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும்.

    மனநலம் பெரிது என்றால் குணநலம் அதாவது நல்ல எண்ணங்கள் உள்ளிருந்தால் தான் மனநலம் நன்றாக அமையும்.[hide]

    அது நன்மையைக் கொடுக்கும்; தீமையைக் கெடுக்கும்.

    உடல்நலம் வேண்டும் என்பவர்கள் மனதைப் பேணிக் காத்தால் தான் அந்நலத்தைப் பெற முடியும்.

    மனநலம் வேண்டும் என்பவர்கள் தங்களது எண்ணத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

    உடலாகிய கருவி சுத்தமாகவும், வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.

    நம்மிடம் செல்வம் இருக்கின்றது, உயர்வகை உணவை உண்டு உடலைக் காத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் செல்வந்தர் கூட இதை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    முன்னோர்கள் சொன்னார்கள், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  என்று மனிதனுக்கு வரும் நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

    மனநோய் ஒன்று; உடல் நோய் இன்னொன்று.

    உடல் நோயை எப்படியாவது அகற்றி விடலாம்.

    அதற்கு இன்று எத்தனையோ ஆயிரம் வழிகள் இருக்கின்றன – வழிமுறைகள் உள்ளன.

    ஆனால் மனநோயை விரட்டுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

    உடல் நோயை நம்மால் அகற்ற முடியாவிட்டாலும் மருத்துவர் அகற்றுவார்.

    ஆனால் மனநோயை முழுமையாக ஆக்கவும் அழிக்கவும் உன்னொருவனால்தான் முடியும்.

    இதைப் போக்குவதற்கென்று உள்ள வழிக்களை கையாண்டு வெளியில் இருந்து ஒருவரை நாடி வெளியில் இருப்பவர் அதைப் போக்க முயல்வதை விட நோயை உற்பத்தி செய்த நீயே அழிப்பது தான் சாலச் சிறந்தது.

    மனநோய் என்கிற கொடிய நோயை பிறப்பித்த உன்னால் தான் இறப்பிக்கவும் முடியும்.

    வெளியில் இருந்து ஆயிரம் பெறப்பட்டாலும் அதை ஏற்று உன் மனது இடம் கொடுக்காமல் போனால் அதை யாரால் தீர்க்க முடியும்? ஒருவராலும் தீர்க்க முடியாது.

    உடல்நோய் என்பது இயற்கையாயிருக்கலாம்.

    ஆனால் மனநோய் என்பது செயற்கை நோயாகும்.

    இதற்கு சிகிச்சை அளித்து முற்றிலும் மாற்ற உங்களால் மட்டுமே இயலும்.

    இதற்கு நோயாளியும் நீங்களே மருத்துவரும் நீங்களே.

    ஆராய்ந்து பார்த்தால் மனவலிமை குன்றியவர்களுக்கு மட்டுமே இந்நோய் வருவது புலப்படும்.

    அவர்களை மட்டுமே இந்நோய் தாக்கும்.

    மனப்பக்குவம் இருந்தால் தமக்குத் தாமே சிகிச்சை அளித்து எளிதாக நீக்கிப் பெறுவது எளிது.

    நோயாளியாக இருப்பதை விட போராளியாக இரு.

    உடல் நோயாளியாக இருப்பதை விட உள்ளப் போராளியாக இரு – இருப்பதில் அதிக நன்மை பெற முடியும்.

    மனநோயாளிகளால் எதையும் சாதிக்க முடியாது.

    செயல் போராளிகளால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.

    எல்லாவற்றையும் சிந்திக்க முடியும்.

    செயற்கையால் பிறக்கும் நோயை செயற்கையால் தான் இறப்பிக்கவும் முடியும்.

    உயிரானது இயற்கையாகப் பிறந்து இயற்கையாக இறந்து அழியும் ஒரு இயந்திரமாகும்.

    ஆனால் காட்சிப் பொருளாக உயிருக்கு உயிர் கொடுப்பது உடலாகும்.

    உயிர் வந்து தங்கி குடியிருக்க ஏதோ ஒரு பொருள் அல்லது கருவி தேவைப்படுகிறது.[/hide]

    இந்த இதழை மேலும்

    சிந்திக்க வைக்கும் சீனா

    ஷாங்காயில் A.P. மால் என்ற பெரிய கடைத் தொகுதி சென்று, பொருட்கள் வாங்க ஒரு மணி நேரம் சுற்றினோம். பலர் சூட்கேஸ், பேக் வாங்கினர். நான் மேக்னெட் சாவனிர் வாங்கினேன்.

    அதன் பிறகு ஹூவாங்பு நதியில் படகுப் பயணம் சென்றோம். இந்த இடத்தில் நதி 400 மீட்டர் அகலமும் 9 மீட்டர் ஆழமும் உள்ளதாம். இந்நதி நகரை இரண்டாகப் பிரிக்கிறது.

    2 மாடியுள்ள சிறு கப்பலில் (CRUISE) 50 நிமிடப் பயணமாக இரவு 7.20 முதல் 8.10 முடிய நதியில் சென்று திரும்பினோம். கரையில் கட்டடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. நதியில் பல கப்பல்கள் வண்ண விளக்குகளுடன் கடந்து சென்றது கண் கொள்ளாக்காட்சியாகும்.

    பின் பஸ் ஏறி ஓட்டல் திரும்பி இரவு உணவாக கொத்து பரோட்டா, மெதுவடை, சாம்பார், தயிர்சாதம் சாப்பிட்டு 9.30 க்கு அறைக்குச் சென்றோம்.

    சீனா முழுதும் வாட்ஸ் அப், கூகுள், பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. போட்டோக்களை அங்கிருந்து அனுப்ப இயலவில்லை.

    நான் சீனா சிம் ஒன்று ரூ 2200 க்கு வாங்கி, இந்தியாவிலிருந்த குடும்பத்தாருடன் பேசினேன். 180 நிமிடம் பேசலாம் என்றனர். இதை விட இங்கிருந்தே சிம் கார்டில் பேசும் வசதியுடன் செல்வது சிறந்தது.

    மறுநாள் 6 மணிக்கு எழுந்து தயாரானோம். 7.30 மணிக்கு வழக்கம் போல் காலை உணவு முடித்து 8.30 க்கு பஸ்ஸில் சுற்றிப் பார்க்க புறப்பட்டோம்.

    10 மணிக்கு லோங்கியாங் என்ற ரயில் நிலையம் சென்றோம். இங்கிருந்து புடாங் விமான நிலையத்துக்கு தூரம் 30 கி.மீ. இத்தூரத்தை மேக்னெட் ரயில் 7 நிமிடங்களில் கடக்கிறது.

    போக வர டிக்கெட் 80 யுவான் தான். ஆனால் கைடு முதல் நாளே 100 யுவான் என வசூலித்து விட்டார். கேட்டதற்கு பதிலே சொல்லவில்லை. 33 பேருக்கு 660 யுவான் சுமார் 7000 அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

    டிரைவர் இல்லாத ரயில். புறப்பட்டு வேகம் கூடிக் கொண்டே 430 கி.மீ சென்று சிறிது நேரம் ஓடி, பின் குறைந்து கொண்டே வந்தது. விமான நிலைய ரயில் நிலையத்தில் இறங்கி, அதே ரயிலில் ஏறித்திரும்பினோம்.[hide]

    விமான நிலையம் போல் பாதுகாப்புச் சோதனை கடுமை. சிகரெட் லைட்டர் பிடுங்கி குவித்து வைத்துள்ளனர். வெளியே வரும் போது எடுத்துக் கொள்ளலாம்.

    ரயிலிலிருந்து வெளியே பார்த்தால், சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து வருவது போல் தெரிந்தன.

    பின் பஸ் ஏறி 50 கி.மீ பயணித்து ஜூஜியாவோ என்ற தண்ணீர் கிராமத்துக்குச் (WATER VILLEGE) சென்றோம். 1700 வருட பழமையான ஊர்; 47 சதுர கி.மீ பரப்புடையது என்றனர்.

    நடுவில் ஒரு வாய்க்கால் ஓடுகிறது. கடந்து செல்ல ஆங்காங்கே 36 பாலங்கள் உள்ளன. துடுப்பு படகுகள் பல உள்ளன. பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர். 70 மீ. நீளமும் 6 மீ. அகலமும் உள்ள பெரிய பாலம் ஏறி இறங்கத் தக்க வடிவில் அமைத்துள்ளனர். வாகனங்கள் செல்கின்றன. இதன் பெயர் பேங்செங் ஆகும்.

    இந்தப்பகுதியில் ஸ்ட்ராபெரி விளைவிக்கின்றனர். அசைவ உணவு விடுதிகள் ஏராளம். நண்டு, மீன்களை உயிருடன் குவியலாக வைத்து விற்கின்றனர். பொரியால் முறுக்கு போன்றும் தட்டு வடை போன்றும் இனிப்பு சேர்த்து தயாரித்து தருகின்றனர். ருசித்துப் பார்க்க சிறு துண்டுகள் கொடுத்தனர்.  நன்றாகத்தான் இருந்தது.

    ஜவ்மிட்டாய் இழுத்து இழுத்து தயாரிப்பது, சிப்பியிலிருந்து முத்து எடுப்பது அரிதான காட்சியாகக் கண்டோம். 1.15 மணி நேரம் சுற்றிப் பார்த்து, பஸ் ஏறி மதிய உணவுக்கு ஓட்டலுக்குத் திரும்பினோம். வழியில் டோல்கேட் உள்ளது. சாலையின் இருபுறமும் பசுமை தான்.

    3.15 க்கு சாதம், வத்தக்குழம்பு, ரசம், பால்பாயசம், மெதுவடை, கூட்டு, பொரியல் வடகம் சாப்பிட்டோம். இரவு ரயிலில் சாப்பிட 4 இட்லி, பொடி மற்றும் தயிர்சாதம் கொடுத்தனர்.

    நகரின் மிகப் பெரிய மால் உள்ள ரோட்டின் வழியாக பஸ் சென்றாலும், நிறுத்தி இறங்க இடமில்லாததால் நேரே 5.30 மணிக்கு ஷாங்காய் ரயில் நிலையம் சென்றோம்.

    டிக்கெட் உடன் அடையாள அட்டை (பாஸ்போர்ட்) சரிபார்த்து விமான நிலையம் போல் உள்ளே அனுமதிக்கின்றனர். பெட்டிகளை ஸ்கேன் செய்து 1500 கி.மீ தூரத்திலுள்ள ஷியான் என்ற நகருக்கு Z 92 என்ற தூங்கும் வசதியுள்ள ரயிலில் மாலை 6.15 க்குப் புறப்பட்டோம். எங்கள் பெட்டி ஷாப்ட் என்பதால் கட்டணம் ரூ.880 இதுபோல் 20 ரயில்கள், ஓடிக் கொண்டுள்ளன. ரயில் மிக சுத்தமாயிருந்தது. அகல ரயில்பாதை தான். மீட்டர் கேஜ் ரயில் போல 4 படுக்கைகள் (2/2) ஒருபுறம் கதவுடன்- ஒரு பகுதி நடைபாதை என்றிருந்தது.

    அடிக்கடி வந்து சுத்தம் செய்கின்றனர்.டிக்கெட் பரிசோதகர் (பெண்) வந்து டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, பிளாஸ்டிக் அட்டை ஒன்று கொடுத்தார். இறங்குமிடத்துக்கு முன் அட்டையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு டிக்கெட்டைக் கொடுத்தார்.

    ஆங்கிலம் பேசினாலும் சிலருக்கு மட்டுமே புரிகிறது. சிறு வண்டிகளில் உணவுப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள் தள்ளிக் கொண்டு வந்து விற்கின்றனர்.

    அதிவேக ரயிலின் (புல்லட்) பயண நேரம் சுமார் 7 மணி, வேகம் மணிக்கு 300 கி.மீ. தூங்கும் வசதி ரயிலின் வேகம் 120 கி.மீ மறுநாள் காலை 9.30 க்கு ஷியான் நகர் சென்றோம். 15 மணி நேர பயணம் அலுப்பே இல்லை.

    சாலையில் இருபுறமும் பசுமையான கிராமங்கள் பார்த்தோம். அங்கும் பலமாடிக் கட்டடங்கள் உள்ளன. இரவுப் பயணம் சுகமாகவே இருந்தது.

    நான் இரவு 2 இட்லி, தயிர்சாதம் சாப்பிட்டு மீதி 2 இட்லியைக் காலையில் சாப்பிட்டேன். ரயிலில் 3 வாஷ்பேஷினுக்கு தனி அறை என ஒதுக்கியுள்ளனர்.

    ரயிலில் அணிந்து கொள்ள துணி கேன்வாஷ் செப்பல் கொடுத்தனர். காலை அவைகளைக் குப்பையாகச் சேகரித்தனர். ரயில் நிலையத்தில் அந்த ஊர் கைடு சகோதரி ஜெஸிகா வரவேற்று பஸ்ஸீக்கு அழைத்துச் சென்றார்.

    காத்திருப்போம்-[/hide]

    இந்த இதழை மேலும்

    வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை

    சு. ஜிவிதா

    கபாடி விளையாட்டு வீராங்கனை, கோவை

    வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்

    பெண்மையினால் உண்டென்று பேச வந்த பெண்ணழகே

    நாய் என்ற பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்

    தாய் என்று  காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே

    மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற

    காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே

    என்று பெருங்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பெண்ணிற்குச் சூட்டியுள்ள அருமையான புகழாரமாகும். அவ்வகையில் ஆண்களைப் போலவே அத்துனை துறையிலும் சாதித்து வரும் எத்தனையோ பெண்களின் சாதிப்புப் பக்கங்களைப் பார்த்தும் செய்தித்தாள்களில் படித்தும் வருகிறோம்.. அவ்வாறு கபாடி விளையாட்டில் சாதித்து வரும் சு. ஜீவிதா அவர்களின் சாதனைப் பயணத்தைப் பற்றிப் பார்ப்போம்..

    நாமக்கல் மாவட்டம்  நத்தமேடு என்னும் கிராமம் தான் நான் பிறந்த ஊர். அப்பா லாரி ஓட்டுநர். அம்மா கூலி வேலை செய்து வருகிறார். சகோதரர் கௌதம். மிகவும் ஏழ்மையான குடும்பம் தான். இந்த ஏழ்மையிலும் என் பெற்றோர்கள் என்னை நன்றாகப் படிக்க வைத்தார்கள். எனக்குப் படிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது.  நான் பத்தாம் வகுப்பு வரை கிரிஸ்டி கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நாமக்கலில் தான் படித்தேன். நான் ஆரம்பத்தில் அத்லெட்டிக் 100 மீட்டர் 200 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றிருக்கிறேன்.

    சின்ன வயதிலிருந்தே நமது தமிழர்களின் வீரத்தின் அடையாள விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு மீது எனக்கு தீராத காதல். ஆனால் அதில் பெண்கள் கலந்து கொள்ள முடியாது என்பதால் கபாடி விளையாட்டின் மீது என்னுடைய பார்வை படத் தொடங்கியது. இதனால் கபாடி பற்றிய நுணுக்கங்களையும், அதன் அடிப்படை வழிமுறைகளையும் கற்றுக் கொண்டேன். இதனால் பள்ளி அளவிலேயே நிறைய கபாடிப் போட்டியில் கலந்து கொண்டேன். நாமக்கல்லில் உள்ள Sports Development  Authority of Tamilnadu ( தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்)  விளையாட்டுப் பிரிவில் பி. ஏ ஆங்கிலம் படித்தேன்.

    வறுமையிலிருந்தும் என் பெற்றோர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். எனக்கு ஆர்வமிருந்தும் வறுமை என்னை தடைப்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால் கடவுள் அருளாளும்,  என் பெற்றோர்களின் நம்பிக்கையும் என்னைப் பெரிதும் வளர்ச்சியடைய வைத்தது. இத்தகைய வளர்ச்சியில் என்னுடைய பயிற்சியாளர் புவனேஷ்வரி இவர்களின் பயிற்சி எனக்கு மிகுந்த நம்பிக்னையும், கடின உழைப்பு கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. இந்த மூவரையும் என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாது.[hide]

    உடலை வருத்தி விளையாடும் எந்த விளையாட்டும் உடம்பிற்கு தீமையை ஏற்படுத்தாது. அதே வகையில் நம்மையும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.  சாதிக்க நினைக்கின்ற அனைவரும் சோதனைகளை கடந்து தான் சொல்ல வேண்டும். அந்த சோதனைகள் கடல் அளவாகவும் இருக்கலாம், மலை அளவாகவும் இருக்கலாம், அல்லது சிறு குட்டை அளவாகவும் இருக்கலாம். ஆனால் சோதனை என்பது ஒன்று தான். அச்சோதனை கடந்து எப்படி சாதனை கொள்கிறோமோ அதில் தான் மனித வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது.  நான் கடினமாக உழைத்து இந்தத் தேசத்திற்காக விளையாடிப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே இலட்சியம் கனவு எல்லாமே.  எனக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள், துணையாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும். என்னுடைய பெரிய பலம் என்னவென்றால் விளையாடும் போது எதிர் அணியில் பாடிச்செல்லும் போது இடது புறம் தொடும் ஆட்டத்தை சிறப்பாக செய்வேன்.  இம்முறையைப் பார்த்த நிறைய பேர் என்னை பாராட்டியிருக்கிறார்கள்.

    2014-2015 ஆம் ஆண்டு Sub junior National பீகாரில் நடைபெற்றது அதில் மூன்றாமிடம் பெற்றோம்.

    2015-2016 junior National மத்தியபிரதேசத்தில் நடைபெற்றது அதில் ரன்னர் பட்டத்தை வென்றோம்.

    2016- 2017 Senior National bihar, South Zone, திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றேன்.

    2017-2018 Senior National Telugana , junior National ஒடிஸாவில் கலந்து கொண்டேன்.

    இந்த ஆண்டு ஆசியப்  பெண்கள் கபாடிப் போட்டிக்கான( இந்திய அணிக்கான) தேர்வு, குஜராத்தில் நடைபெற்றது. அதில் இறுதி வரை சென்று தேர்வாகாமல் வெளியேறினேன். ஆனால் அடுத்த ஆண்டு இத்தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று சாதிப்பேன்.

    தற்போது விளையாடும் கபாடி வீரர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கபாடி விளையாட்டு நம் மண்ணின் பாரம்பரியமான விளையாட்டு. அப்படியிருக்கும் போது சாதிக்குனும் என்று விளையாடுங்கள். எதையும் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

    கடின உழைப்பும், விடாமுயற்சியும் எப்பொழுதும் வீண் போகாது.  நம்முடைய பெயரும் வரலாற்றுப் பக்கத்தில் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்..

    எனது ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் பொழுது நான் எடுத்துக்கொண்ட பயணம் முடித்திருக்க வேண்டும்.

    இந்திய அணிக்காக விளையாட வேண்டும். அதில் நான் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும். அதனால் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். என்பது மட்டும் நான் கொண்ட இலட்சியம். இதை முடித்துக் காட்டுவேன் நிச்சயம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தலைவலி

    தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான குமட்டல் அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான நோய் அறிகுறியாகும்.

    இது ஆண்களை விட பெண்களில்தான் அதிகம் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அசாதாரண நிலையாகும்.

    தலைவலி ஏற்படும் முன்னர் சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

    அவை

    • பார்வை புலத்தில் மாற்றம் ஏற்படல்
    • கழுத்து, தோள் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு
    • உடல் சமநிலை குழம்புதல்
    • பேச்சில் தடுமாற்றம் ஏற்படல்
    • மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன.

    தலைவலியை தூண்டும் காரணிகள்

    மனோவியல் காரணிகள்

    • மன அழுத்தம்
    • கோபம்
    • பதற்றம்
    • அதிர்ச்சி

    உடலியல் காரணிகள்

    • களைப்பு
    • தூக்கமின்மை
    • அதிக நேர பயணம்
    • மாதவிடாய் நிறுத்தம்

    உணவு வகைகள்

    • உணவு குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல்
    • உடலில் நீரின் அளவு குறைதல்
    • எண்ணெய் வகை உணவுகள்
    • குளிர்பானங்கள்
    • மதுபானம்
    • காப்பி, தேநீர்
    • சாக்லேட், ஐஸ்கிரீம்

    சூழலியற் காரணிகள்

    • பிரகாசமான செயற்கை ஒளி
    • அதிக இரைச்சல்
    • காலநிலை மாற்றம்
    • மருந்துகள் ( கருத்தடை மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் )

    முக்கிய வகை தலைவலிகள்

    • முதன்மை தலைவலி (Primary headache)
    • இரண்டாம் தலைவலி (Secondary headache)

    முதன்மை தலைவலி

    90% தலைவலி இவ்வகையை சார்ந்தது. பொதுவாக 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இவ்வகையில் பொதுவாக காணப்படுபவை போன்றவை. ஒற்றை தலைவலி, பதற்றம் வகை தலைவலி (ம) கிளஸ்டர் தலைவலி ஆகும்.

    இரண்டாம் தலைவலி

    இந்த வகை தலை வலிகள் சற்று ஆபத்தானவை தலையில் (அ) கழுத்தில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளால் இவ்வகை தலைவலி உண்டாகும். அவை Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சல், பக்கவாதம், கண்ணின் அழுத்தம் அதிகரிப்பு (glaucoma) போன்ற காரணங்களால் ஏற்படும்.[hide]

    இந்த வகை தலைவலிக்கு சிறப்பு சிகிச்சைகள் அவசியமாகின்றன. புதிதாக திடிரென்று தீவிரமான தலைவலி ஏற்பட்டால், முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தீவிர காய்ச்சல் வாந்தி இருப்பின், பக்கவாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின், காலையில் எழும்போது தலைவலி இருந்தால், இருமும் போதோ (அ) தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின், பார்வையில் மாற்றம் ஏற்படின் உடனடி மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இதர வகை தலைவலிகள்

    • சைனஸ் தலைவலி
    • விபத்துகளுக்கு பின்னால் ஏற்படும் தலைவலி
    • தமனிகள் தொடர்பான தலைவலி
    • தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி
    • வளர்சிதை மாற்றம் சம்பந்தமான தலைவலி
    • தலையிலுள்ள கண், மூக்கு, பல், வாய் மற்றும் முகம் ஆகியவற்றின் உருவ அமைப்புடன் தொடர்புடைய தலைவலி
    • தலையிலுள்ள உறுப்புகளின் நரம்புகளில் ஏற்படும் பிரச்சனைகளால் உண்டாகும் தலைவலி
    • குழந்தைகளுக்கு ஏற்படும் தலைவலி
    • வயதானவர்களுக்கு ஏற்படும் தலைவலி

    தலை வலியை தவிர்க்கும் சில வழிமுறைகள்:

    • ஒவ்வொருவருக்கும் தலைவலியை தூண்டும் காரணிகள் வேறுபடும் அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும்
    • சரியான நேரத்தில் உறங்கி, எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • முறையான சமச்சீர் உணவை உட்கொள்ளவும்
    • ஒழுங்கான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்
    • எரிச்சலூட்டும் உரத்த இரச்சலைவிட்டு விலகி இருக்கவும்
    • முடிந்தவரை வெயில்படாமல் ஒதுங்கி இருக்கவும்
    • அதிக செயற்கை ஒளிகளை தவிர்க்கவும்
    • இரவில் அதிக நேரம் கைப்பேசி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    “வாழ நினைத்தால் வாழலாம்” – 21

    “இரகசியம்” 

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    சங்ககிரியில் ஒரு மகளிர் கல்லூரியில் பயிலரங்க வகுப்பு எடுக்க போயிருந்தபோது – ஒரு மாணவி என்னிடம் “உங்கள் வெற்றியின் இரகசியம்” என்ன? என்று கேட்டாள்.

    வெற்றிக்கான இரகசியங்கள் எவை என்று சொல்லப்போன எனக்கு வியப்பாக இருந்தது.  அதே நேரம் பெருமையாகவும் இருந்தது.

    தயக்கமே இல்லாமல், தனக்குத் தோன்றிய ஒரு சந்தேகத்தை தைரியமாக கேட்கத் துணிந்த அந்த மாணவியின் ஆர்வம் பாராட்டுக்குரியது.

    வெளியில் சொன்னால் இரகசியம் எப்படி இரகசியமாக இருக்கும் ? என்ற கேள்விக்கான விடையை இரகசியமாக வைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.

    “இரகசியம்” என்ற ஒரு சொல் – சாதனையாளர்கள் பலரும் இன்று வரை பயன்படுத்தி வரும் ஒரு சொல்லே.

    சரித்திரம் சில விஷயங்களை “இரகசியமாகவே” வைத்திருக்கின்றது.  Egypt u Pyramid கள் ஏறக்குறை 4500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டவை.  அதுவும் இன்றைய காலகட்டம் போல தொழில் நுட்பமும், உபகரணங்களும் முற்றிலும் அல்லது அதிகம் இல்லாத போதும் – ஒரு உலக அதிசயத்தை உருவாக்கிய விதம் எப்படி? என்ற கேள்வி இன்று வரை விடை இல்லாமல் “இரகசியமாகவே”  இருப்பது ஒரு விந்தை தான்.

    அனைவருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்த “Hitler”ன் மறைவு, தற்கொலை என்று வரலாறு பதிவு செய்திருந்தாலும் – அதன் உண்மைத் தன்மை எவருக்கும் தெரியாதது எதார்த்தம் என்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?  அதுவும் இரகசியமாகவே இருக்கின்றது.

    அதுமட்டுமல்ல.

    பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு குளிர் பானத்தின் சுவை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சுவை, மிகப் பிரபலமான ஒரு நிறுவனத்தின் மைசூர்பாக்கின் சுவையின் பின்புலம், தலைமுறைகள் கடந்த பின்பும் தளராமல் இருக்கும் சில தலைவர்களின் புகழ், வேலை வாய்ப்புகள் அரிதாகிவிட்டது என்ற அங்கலாய்ப்புகளுக்கு இடையேயும் – சில துறை படிப்புகளுக்கு இன்றளவும் இருக்கும் “மவுசு” – என்று ஒரு பட்டியல், நீண்ட இரகசிய பட்டியல் என்பதே நிஜம்.

    கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசும் ஒரு கூட்டத்துக்கும் சரி – கடவுளை சரண் கொண்டால் சாதிக்க முடியும் என்று ஆத்திகம் பேசும் சில கூட்டத்துக்கும் சரி – எப்படி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்?  இந்த ஜனக் கூட்டத்தின் இரகசியம் என்ன என்ற கேள்வியும் சிந்திக்கத் தூண்டுவதே இரகசியத்தின் சிறப்பு.[hide]

    ஒரு வாழ்வியல் பயிற்சியாளராக நான் சொல்ல விழைவது இதுதான்.  இரகசியத்தின் சூட்சுமத்தை அறிந்துகொண்டால் –

    “இரகசியம்” – வெற்றிப் பயணத்தின் வெளிச்சக் கீற்று

    “இரகசியம்” – ஓய்வின்றி உழைப்பவனின் ஒற்றையடிப் பாதை

    “இரகசியம்” – தளராத மனம் கொண்டவர்களின் தாரக மந்திரம்

    “இரகசியம்” – உயர்வுக்கு உதவும் ஊன்றுகோல்

    “இரகசியம்” – வாழ்க்கையை ஜெயிப்பவனின் வழிகாட்டி – என்று உணர முடியும்.

    கிராமம் ஒன்றில் விவசாயி ஒருவர் தனக்கு ஒத்தாசையாக ஒரு குதிரையை வைத்திருந்தார்.  ஒரு நாள் ஒரு பணக்காரர் அவரிடம் வந்து “நான் இந்த பாதைக்கு புதுசு.  என் Car ஒரு சிறு பள்ளத்தில் இறங்கிவிட்டது.  அதை வெளியே எடுக்க வேண்டும்.  உங்ககிட்ட ஒரு குதிரை இருக்கு.  அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துவிடலாம் என்று ஊர் மக்கள் சொன்னாங்க.  எனக்கு உதவ முடியுமா? என்று கேட்டார்.

    ரொம்ப பெரிய Car  என்று கேட்ட விவசாயியிடம் இல்லை சின்ன Car தான் என்றார் செல்வந்தர்.  விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களும் எடுத்துக்கொண்டார்.  குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் Car இருக்கும் இடத்துக்குச் சென்றார்.  Car சிக்கி இருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையுடன் பார்த்தார்.

    கயிறை எடுத்து Car ல் கட்டி குதிரையோடு இழுப்பதற்கு தோதாக பிணைத்தார்.  கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே இருந்தார்.  பிறகு “மணி” இழு பார்ப்போம் ! என்று குரல் கொடுத்தார்.  குதிரை நகரவே இல்லை.  பின் “ரவி” இழு பார்ப்போம் ! என்றார்.  குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.  சின்ன Car தான், சுலபமா இழுத்திடலாம்.  “ரகு” இழுடா ! என்றார்.  குதிரை ஒரு Inch கூட நகரவில்லை.  என் செல்லம் “ராஜா” நீயும் சேர்ந்து இழுடா ! என்றார்.  அவ்வளவுதான்.  குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.  அடுத்த 5 வது நிமிடம் பள்ளத்திலிருந்து இஹழ் மேலே ஏறியது.  வெளியூர் காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார்.

    மேலும் “ஐயா!  நீங்க ஏன் உங்க குதிரையை வேற வேற பேர் சொல்லி கூப்பிட்டீங்க?  எனக்கு புரியலை” என்று கேட்டார்.

    விவசாயி சொன்னார் “என் ராஜாவுக்கு கண் தெரியாது.  தான் மட்டும் கஷ்டமான வேலையை செய்யப்போறோம்னு அது நினைச்சுட கூடாது இல்லையா?  அதான், அதுகூட இன்னும் 3 குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வைச்சேன்.  அதுக்கும் நம்பிக்கை வந்துருச்சு.  Car  யை வெளியே இழுத்திருச்சு”.  என் குதிரைக்கு நான் கொடுத்த அந்த “நம்பிக்கை” தான் இந்த Car I ஒற்றைக் குதிரையா வெளியே இழுத்த “இரகசியம்” என்றார்.

    ஆம்!  மனிதருக்குள்ளும் இந்த குதிரையை போல மகத்தான சக்தி இருக்கின்றது.  பள்ளத்தில் இருக்கும் வாழ்க்கையை மேலே உயர்த்திக் கொள்வதற்கு சில இரகசியங்கள் உதவும்.  கண் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் குருடர்களாக இருக்கும் மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் இரகசியங்களின் பட்டியல் இதோ!

    தடுமாற்றத்தில் இருக்கும் மனிதனுக்குள் இந்த தன்-மாற்றங்களை புகுத்தும்போது வெற்றியை நோக்கி அவன் தடம் மாற்றம் ஏற்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

    உங்கள் சிந்தனைகளின் தரமே அனைத்தையும் தீர்மானிக்கும். என்னால் முடியாது என்று எப்போதும் சொல்லாதீர்கள்.  ஜெயிப்பதற்காகவே ஜெனித்தவன் என்ற மனோபாவம் உங்களுக்குள் மலரட்டும்.  Positive Thoughts மட்டுமே உங்களுக்குள் இருந்து உற்பத்தி ஆகவேண்டும் – என்பது ஒரு “இரகசியம்”

    கனவென்ன, லட்சியமென்ன என்று முடிவெடுங்கள்.கனவுக்கும் லட்சியத்துக்கும் உள்ள வித்தியாசம் பெரிது.  லட்சியத்தை எழுத்து வடிவில் எழுதி – அதை அடைய ஒரு யுத்தியை காணுதல், பாதையைத் திட்டமிடுதல், உருவாக்குதல், அதில் பயணித்தல் – என்பது ஒரு “இரகசியம்”

    செயல்படுதல்.செயல் இல்லாத லட்சியம் பயனற்றது.  திட்டம் எப்படி முக்கியமோ – செயலும் முக்கியமே.  இரண்டும் இணையும்போது தான் அது “செயல்திட்டம்” எனும் சிறப்பைப் பெறும் – என்பது ஒரு “இரகசியம்”

    கற்பதை நிறுத்தாதீர்கள்.நூலகங்கள், முன்னேற்றத்தை முன் மொழியும் புத்தகங்கள், வாழ்வியல் பயிலரங்கங்கள், இவை அனைத்தும் உங்கள் வெற்றியை அலங்கரிக்கும் அழகுகள்.  அவை அனைத்தையும் உங்கள் அறிவுக்கு முன்னால் அணிவகுப்பு நடத்துவது – என்பது ஒரு “இரகசியம்”

    உறுதித்தன்மையும் கடின உழைப்பும் இரு கண்களாக வேண்டும்.வெற்றி என்பது குறுகிய தூர ஓட்டம் அல்ல.  உற்சாகமாகவே இருந்து, விட்டுக் கொடுக்காமல், விட்டு விடாமல், விலகியும் விடாமல், மனம் தளராமல் ஓடும் Marathon Race – என்பதை மனதுக்குள் பதியவைத்து நடப்பது – ஒரு “இரகசியம்”

    ஆராய்ந்து அறிந்து கொள்.அனுபவமே சிறந்த ஆசான்.  தவறுகளில் இருந்தும் கற்றுக் கொள்ளலாம்.  ஆராய்ச்சி ஒளி கொடுக்கும் – அனுபவம் வழி கொடுக்கும் – அந்தப் பயணம் வெற்றியைக் கொடுக்கும் – என்பது ஒரு “இரகசியம்”

    நேர மேலாண்மையில் கவனம் தேவை.இலட்சியம் அற்ற மனிதர்கள், உங்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் இல்லாத பொருட்கள், இவற்றில் இருந்து முற்றிலுமாக விலகுங்கள்.  அல்லது விலக்குங்கள்.  இலட்சியங்களின் மீது கொண்டுள்ள Laser Focus, உங்கள் வளர்ச்சியின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்களின் அண்மையும் – உதவியும் – வாழ்வின் தரத்தை உயர்த்தும் அம்சங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவது – ஒரு “இரகசியம்”

    புதிய கண்டுபிடிப்புகளுக்கு அஞ்சுவது பேதைமை.வித்தியாசமாக இருங்கள்.  சராசரி மனித வர்க்கத்திலிருந்து மாறுபட்டு செயல்படுங்கள்.  எதிர்வரும் சோதனைகளையும், தடைகளையும் கண்டு நான் அஞ்சாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? – என்ற எதிர் கேள்வி கேட்டு செயல்படுவது – ஒரு “இரகசியம்”

    மனிதர்களை வெற்றிகரமாக கையாளுங்கள்.வெற்றியாளர்கள் நண்பர்களை, கூட்டாளிகளை, சக மனிதர்களை எப்போதுமே நல்ல முறையில் வளப்படுத்தி, ஒற்றுமையோடு இருப்பார்கள்.  அனைவரையும் திறந்த மனதுடன், நட்போடு, நேர்மையாக – அதே நேரம் உறுதியாக கையாள்வது – வெற்றிக்கான இன்னும் ஒரு “இரகசியம்”

    உண்மையாகவும் பொறுப்பாகவும் இருத்தல். உங்கள் அணுகுமுறையில் ஒரு உண்மைத் தன்மையும், நம்பகத் தன்மையும் இல்லாமல் இருந்தால் – மேலே சொன்ன அத்தனை இரகசியங்களும் அர்த்தமற்றதாக ஆகிவிடும்.  இந்த இரகசியங்களை அறிந்து செயல்பட்டால் தான் வெற்றி என்பது – ஒரு மகத்தான “இரகசியம்”

    தன்னை ஆளுமைப்படுத்தவே ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்சத்தில் பிறந்திருப்பதாக – இத்தனை இரகசியங்களும் காத்திருக்கின்றன.  அவ நம்பிக்கை கொண்ட மனிதர்கள் கண்களுக்கு அது தெரிவதில்லை.

    “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்ப்பவர் யார்? – என்ற கேள்விக்கு இரகசியத்தை அறிந்தவர்கள் பெயர்தான் அடிபடும் என்பதும் ஒரு “இரகசியம்” தான்.

    “கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்” – என்ற பக்குவத்தை மனிதன் அடைய உதவுவதும் இந்த “இரகசியம்” தான்.

    “அங்கும் இங்கும் அலைபோலே தினம் ஆடிடும் மானிடர் வாழ்விலே, எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் – என்று “இரகசியம்” அறிந்தவர்களால் மட்டுமே அறியவும் சொல்லவும் முடியும்.

    செயல்படுங்கள்!  இந்த இரகசியங்களை உணர்ந்து செயல்படுங்கள்.  உங்கள் செயல்பாடுகள் உங்கள் எதிரிகளுக்குத் தெரியாத இரகசியமாக இருக்கட்டும்.  செயல்பட்டால் – வெற்றிக் கோட்டையின் கதவுகள் விரைவிலேயே உங்கள் கண் முன்னால்.

    அதுமட்டுமல்ல,

    “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

    “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”[/hide]

    இந்த இதழை மேலும்