– 2018 – May | தன்னம்பிக்கை

Home » 2018 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    இலட்சியத்தின் பாதையில் வெற்றி

    தி.ரே. மோனிசா

    வெற்றி என்பது வாழ்வின் எளிதாக கிடைக்கும் கனியல்ல! தோல்வி என்னும் பல மரங்களைக் கடந்து, தடைகளை தாண்டி எட்டிப் பறிக்கும் கனியே வெற்றி. ஒருவன் வாழ்வில் எத்தனை முறை தோல்வி அடைகிறானோ, அந்த அளவிற்கு அவன் வாழ்வின் உயரத்திற்கு செல்லப் போகின்றான் என்று தான் அர்த்தம்.

    நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும். வாழ்வில் இலட்சியம் கொண்டு பாதையைக் கடக்க வேண்டும். இலட்சியம் அற்ற மனிதனின் வாழ்வானது சேரும் இடம் அறியாமல் பயணத்தை தொடங்குவது போன்றது. செல்லும் இடம் அறியாமல் வேகமாய் பயணிப்பதில் பலன் ஏதுமில்லை.

    ஒரு செடியை நட்டு அதற்கு நாம் தண்ணீர் ஊற்றாமல் இருந்தால் அது பட்டுபோய் விடும். அதே நாம் அதற்கென்று தனி நேரம் செலவிட்டு அதை பராமரித்து வந்தால் தான் அது வளர்ந்து நல்ல பயன் அளிக்கும். அது போல் நாம் வாழ்வில் ஒரு செயலைத் தொடங்கி அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் வெற்றி இலக்கை அடைய முடியாது.

    வாழ்வில் வெற்றிக் கனியை பறிக்க ஓடும் இந்த வேளையில் எந்த செயலையும் நாளை என்று தள்ளி போடுபவரை நிறுத்தினாலே வெற்றியின் உச்சியை அடையலாம். நம்மால் ஒரு செயலை முழுமையாக செய்ய முடியுமா? என்ற கேள்விக்கே மனதில் இடம் கொடுக்க கூடாது நம்மால் முடியும் என்று நினைத்து செய்ய வேண்டும்.

    வெற்றி ஒருவருக்கு மட்டுமே சொந்தமன்று என்பதை உணர்ந்து அதை நம் வசப்படுத்த நல்ல இலட்சியத்தோடு தோல்வியைத் தூண்டுகோலாக கொண்டு உழைத்துய எடுக்கும் செயல் அனைத்தும் வெற்றியில் தான் முடியும் என்று முழுதாக நம்பினால் வெற்றிக் கனி நம் வசப்படும்.

    “முயற்சி என்ற பூட்டை தன்னம்பிக்கை என்னும் திறவுகோலால் திறந்தால் வெற்றி என்றும் உங்கள் கையில் தான்”

    தன்னம்பிக்கையோடு முயன்று வெற்றி பாதைக்கு செல்வோம்!! வெல்வோம்!!

    தேடாதே ..! உருவாக்கு…!

     “விதைத்தவன் உறங்கினாலும்

    விதைகள் உறங்கியதில்லை”

    என்ற பொன்மொழியை அறிந்திருப்போம். என்றோ நம்முள் விதைத்த நம்பிக்கை ,ஒரு நாள் வெற்றியை மரம்போல விளைத்தே தீரும் என்ற வார்த்தைக்கு வடிவமாக தன் வாழ்வை வாழ்ந்து மறைந்தவர் அமரர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம்.

    காலம் கணக்கற்ற மனிதர்களைத் தடயமின்றி கடத்திச்  சென்றிருந்தாலும் சிலர் அதில் விலக்கற்றவர்களாக திகழ்வார்கள். பூமி  அவர்களால் புண்ணியங்கள் பெற்றிருக்கும்.  அவர்களின் நம்பிக்கையும் நேர்மறை எண்ணங்களையும் இணைத்தே மாற்றங்களை கொணர்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் தலையாயவர் அப்துல்கலாம்.

    தக்கள் ஜனாதிபதி , ஏவுகணை நாயகன், எளிமையின் சிகரம் என எந்த நற்சொல்லை அடைமொழியாக்கினாலும் அதற்கு ஏற்றாற்போல மிகச்சரியாக பொருந்தியவர்.வெற்று கனவுகளோடு பயணித்த பலரை  இலட்சியக் கனவு காண அடிக்கோலிட்டவர். ஆரம்ப வயதிலிருந்தே அனுபவத்தின் வாயிலாக அறச்செயல்களை நிரம்பக் கற்றவர்.

    மனிதனை மனிதநேயத்தோடும், மாண்பான எண்ணத்தோடும் அணுகியவர். உலக அமைதிக்காக தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்தவர். செயல்படுத்தவும் முனைந்தவர். இந்தியாவின் வல்லரசு கனவைத் தாம் கண்டதோடு நில்லாமல்  எல்லா மக்களையும்  அதனை நோக்கிய கனவைக்  காணச் செய்தவர்.

    இவற்றையெல்லாம் புகழாரங்கள் போல பாவிக்காமல் தனிமனிதனின் தன்னம்பிக்கையால் விளைந்த செயலாக பாருங்கள். ஒற்றை மனிதர் எண்ணினால் எந்த அளவில் மாற்றம் கொண்டு வர முடியுமென்பதன் இரகசியத்தை மறைமுகமாக அவர் நமக்கு உணர்த்தி சென்றிருக்கிறார்.

    ‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம் ’

    என்ற ஆகச் சிறந்த இலட்சியங்களை அûவைரின் அகங்களிலும் பதிந்தவர்.

    பெரும்பாலும்  இளைய சமூகத்தின் மீதும்  குழந்தைகள் மீதும் தீரா அன்போடு முழு நம்பிக்கையும் கொண்டிருந்தவர். வார்த்தைகளால் தன்னம்பிக்கை ஊட்டியதோடில்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர். தன் வயதின் மூப்பை ஒருபோதும் பொருட்படுத்தியவரில்லை. குடியரசுத் தலைவர் பதவியைக் காட்டிலும் ஆசிரியர் பணியை பெரிதும் நேசித்தார். அதனால் இறக்கும் தருவாயிலும் ஆசிரியராகவே இறந்தார்.

    விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமூகத்தை நல்வழிப்படுத்த பிறந்த தலைவர். நாட்டின் நலம் ஒன்றே  நம் தேவையென நாளும் போதித்து பின்பற்றிய பொதுநலவாதி.

     ‘‘ நம்பிக்கை நிறைந்த ஒருவர்

    யார் முன்னேயும் எப்போதும்

    மண்டியிட மாட்டார்’’

    என உற்சாகத்தோடு  தன்னம்பிக்கை விதைத்தவர். எளிமையால் எதையும் வென்றவர்

    “ஒரு மனுஷன் பிரியும்போது

    அவன் தாயழுதா அவனொரு நல்ல மகன்

    அவன் பிள்ளைகள் அழுதா அவனொரு நல்ல தகப்பன்

    அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா

    அவன் நல்ல தலைவன்”

    இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைளில் தான் உள்ளது.

    இது போன்ற  பல வரிகளின் வாயிலாக அவர் உணர்ந்த முயன்ற ஒற்றை ஆயுதம் ‘தன்னம்பிக்கை’ அதை வெளியெங்கும்  தேடாதே….!! உன்னுள்ளே உருவாக்கு…!

    நல்லோரின் செயல்புரிந்து நாயகனாய் உரு கொள்…!

    நாடும் உனை நாடும், நம்பிக்கை கொள்….!

    எது சரி

    ஆதிகாலத்து மனிதனின்  வாழ்க்கை, வாழத்தொடங்கிய அவன் முடிவில் அதுவும் அழகாய் முடிந்தது.  வாழ்ந்தவனின் வாழ்க்கை அவன் வீழ்ந்த பிறகும் வாழத்தான் செய்கிறது.  உலகின் பலர் மரணமில்லா வாழ்வு வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்கள்.

    இன்றைய நிலை, தனக்கான வாழ்வினை தானம் செய்தே புண்ணியம் சேர்த்து வாழவேண்டி இருப்பதாய் நினைத்து பலர் வாழ்கிறோம்.  மற்றவரின் பார்வை மட்டுமே, நம் வாழ்வினை வழி நடத்தி வருகிறது.  நமது பார்வையோ வாழ்க்கையை ஒரு போராட்டமாக மட்டுமே பார்கிறது.  ஆனால் அது அவ்வாறாக உண்மையல்ல.  நாம் உறங்கினாலும் உறங்க மறுத்தாலும் இரவானது விடியலில் முடியத்தான் போகிறது.  உறங்க மறுப்பவன் மட்டுமே போராடி வருகிறான்.  தேடல் இருக்கத்தான் செய்கிறது.  தேடலில் தேவை மட்டும்  முடிவதில்லை.  நல்லெண்ணம் நல்லதை மட்டுமே வாய்க்கிறது.

    மனதார வாழ்த்தி மனசார மண்ணித்து மனப்பொய் இல்லாமல் மகிழ்வோடு அணுகுவது மட்டுமே சிறப்பளிக்கும்.  அடுத்தவரோடு ஒப்பிட்டு வாழ ஆசைப்படுவதே இங்கு அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது.  ஒருவன் தன் சகதோழனை காணும் போது அவனது நல்வாழ்வினை கண்டு மகிழவேண்டிய உள்ளம், தனக்கு அமைந்த வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து வருத்தப்படவே செய்கிறது.  வேட்டைக்கு  போகும் விலங்கு  சில நேரம் பட்டினி கிடக்க வேண்டி வரும் அதுவே படைத்தவனின் விருப்பம் எனில்

    கார்ல்மார்க்ஸ் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வறுமையில் அவதிப்பட்டவர் இன்று புகழரசனாக பலரின் மனதில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.  “ யார்க்கும் இந்நிலை பொதுவன்றோ” என்ற பாரதியின் சொல்போல எல்லோருக்கும் வாழ்க்கை பொதுவானதாகவே அமைகிறது.  எந்த சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால், எல்லா சூழ்நிலையும் மகிழ்ச்சியானதாகவே அமையும்.

    ஒருவன் தான் வாழும் வாழ்வினை தனக்கான இறைவனது பரிசு என்பதை உணர்ந்து கொஞ்ச நாள் வாழும் வாழ்வில் தீமையை அகற்றி நன்மையை விதைத்து முழுநம்பிக்கையுடன் அவனது வாழ்வினை அவனுக்காய் அவன் வாழ்வதே சரியாகும்.  தன்னம்பிக்கை ஒன்று போதும் ஒருவனது வாழ்வினை அழகாக்க, வாழ்ந்துபார் வானை வசப்படுத்தும் நம்பிக்கையுடன் அதுவே சரியானதாய் இருக்கும்.

    – கௌதமன்

    குருதிக் கொடை செய்வீர்

    க. தமிழ்செல்வி

    தானம் கற்று வருவதில்லை

    தானாய் தோன்றும் தர்மச் சிந்தை…!

    விபத்தின் காயத்தின் வலி

    கண்ணீருக்கே தெரிகின்றது…!

    வடிந்த குருதித் துளிகளின்

    மகத்துவம் மறைகின்றது…!

    இரத்தபந்தம் சாதி மதத்தை முன்வைக்கும்

    குருதிக் கொடை சாதி மதத்தை பின்வைக்கும்…!

    கொடுக்க கொடுக்க நம்மிடம்

    கொழிக்கும் செல்வமே குருதி…!

    அக்குருதியை விலைபேசி

    வியாபாரம் செய்யாதீர்..!

    உடல் உறுப்பு தானம்

    இறந்த பின்னும் வாழ்வது..!

    ஆனால் வாழும் போது

    மனிதாய் வாழ்வது குருதிக்கொடை..!

    மற்றாருக்கு வாழ்வு தந்து

    உன் வாழ்வை செழிப்படைய வை…!

    மனிதா விழித்திரு…!

    வே. ரத்னா

    தமிழ்த்துறை

    சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்…!

    சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும்…!

    மரத்தை நற்றிட வேண்டும்…!

    மழையைப் பெற்றிட வேண்டும்…!

    நீர் வளத்தைப் பெருக்கிட வேண்டும்…!

    நிலத்தை பாதுகாத்திட வேண்டும்…!

    கழிவுகளை நீக்கிட வேண்டும்…!

    நல்கனிகளைப் பறித்திட வேண்டும்…!

    சுகாதாரத்தைப் பெற்றிட வேண்டும்…!

    மாசுபாடுகயைத் தடுத்திட வேண்டும்…!

    தூய்மைப் படைத்திட வேண்டும்…!

    மனிதா நீ திருந்திட வேண்டும்…!

    உத்தம யோகா

    மஞ்சுளா. ச

    தமிழ்த்துறை

    புறத்தை மெருகேற்றுவதை விட

    அகத்தை தூய்மை செய்…!

    உடலை வளைப்பதல்ல

    ஆன்ம அமைதியை பெறுவது…!

    வாழ்க்கை செழிப்படைய வேண்டுமெனில்

    உள்ளம் களிப்படைய வேண்டும்…!

    பணத்தால் பெற முடியாதது

    மனதால் இன்பம் அடைவது…!

    வாழ்வை வளமாக்கும்

    ஆயுளை அதிகரிக்கும்…!

    ஆற்றல்கள் ஒரு சேர

    பலப்படுத்தும் ஒரே கலை…!

    எல்லையில்லா இன்பம்

    கொள்ளை கொள்ள ஆசை

    மனதின் அமைதி

    மாற்றத்தின் உறுதி..!

    மாற்றத்தின் ஊற்று மே

    கௌதம் தர்மா

    தை பிறந்தால் வழி பிறக்கும்

    விவசாயிக்கு

    மே பிறந்தால் மாற்றம் பிறக்கும்

    மாணவனுக்கு

    மாற்றங்கள் ஒன்று தான் மாறாதது என்று மார்க்ஸ் உரைத்தது போல  பல்வேறு மாற்றங்களை நம் மாணவ சமுதாயத்திற்கு அள்ளித்தருகின்ற மாதங்களில் முதலிடம் பெறுவது இந்த மே மாதம் …

    ஆம் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து அடுத்து  கல்லூரியில் சேரபோகும் மாதமும் இந்த மே மாதம் தான்

    கல்லூரிகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகள் எதுவாயினும் நிறைவடைந்து உண்மையான இந்த போப்புகள் நிறைந்த உலகத்தை எதிர்கொள்ளத் தொடங்கும் மாதமும் இந்த மே தான்…

    நம் தமிழக இளைய சமுதாயம் அதிக வழிகாடஙடுதலையும் அரவணைப்பும் அன்பும் தேவைப்படுகின்ற காலகட்டம். ஏனென்றால் அவர்கள் விரக்தியின் ஏமாற்றம் வெறுமை தனிமை போன்றவற்றை உணரும் காலக்கட்டம் ஆகையால் உளவியல் ரீதியாக  தளர்ச்சியடையும் இளைய சமுதாயத்தை தன்னம்பிக்கை என்ற மூன்றாவது கையாக நாம் செயல்பட வேண்டிய தவிர்க்க இயலாத அவசியமுள்ளது.

    நம் வீட்டுப்பிள்ளைகள் நம்மை தவிர எதையும் அறியா டின்.ஏஜ்  குழந்தைகள் அவர்கள் பெரும்பாலும் தங்களை தன்னை விட நிறத்தில் அதிகமானவர்களோடும் பணத்தில்  அதிகமானவர்களோடும் அவர்களே ஒப்பிட்டு தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள தருணத்தில் நாமே அவர்களை மற்றொருவரின் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு பாயப்படுத்தக்கூடாது.

    அதே மாதிரி பட்டப்படிப்பு முடிந்த வேலைக்கு செல்லாத இளைஞனிடம் அவன் நண்பன் அல்லது உறவினர் வேலைக்கு சென்றுவிட்டார்கள் என்ற ஒப்பிடுதலும் அறவே ஆகாது. ஆங்கிலத்ல் சொல்ல வேண்டும் என்றால் இந்த கம்பேரிசன். இப்பொழுது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு அறவே  ஆகாத ஒவ்வாமை .

    அதேபோல ஒவ்வொரு குழந்தைக்கும் தனக்கென உள்ளார்ந்த திறமைகள் ஏதேனும் ஒன்று இருக்கும் அதனை நாம் வளர்க்க வேண்டாம். ஆனால் அதை மண்ணில் குழி தோண்டி புதைக்காமல் இருந்தாலே போதும் அவர்கள் நாம் நினைக்கும் மாதிரி இரண்டே நாள்களில் ஏ.ஆர்.ரகுமான் ஆகிவிட முடியாது.

    நம் குழந்தைகள் கதை எழுதுவது கவிதை எழுதுவது செடி வளர்ப்பது பறவை விலங்குகள் மீதான பாசம் நாம் அதையெல்லாம் என்றுமே ஊக்குவிப்பதும் இல்லை ஏனென்றால் நாம் அனைத்தையுமே பணத்துடனே முடிச்சுப் போட்டு விடுகிறோம்.

    நம் குழந்தைகள் என்ன செய்தாலும் நாம் நினைப்பது அதனால் என்ன லாபம்? அடுத்ததாக நம் குழந்தைகளை நாம் அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால் அல்லது வேறு காரணமாக இருந்தாலும் அதனை நம் பிள்ளைகளிடம் வெளிப்படுத்துவது மிகவும் தவறான ஒன்று அவர்களை கண்டபடி திட்டுவது செத்து தொலை என்பது போன்ற வார்த்தை குழந்தைகளின் மனதில் பதிந்து நாம் தானே அவர்களுக்கு உலகம் எனவே உலகமே இருட்டியது போல் உணர்ந்து தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

    குறிப்பாக இந்த தேர்வு நேரம் முடிவுகளை வைத்து பல தற்கொலைகள் செய்தி வருடம் வருடம் வெளிவந்து கொண்டுதான் உள்ளது. ஒரு எழுத்துத் தேர்வு விடும் என்று நினைக்கிறீர்களா?

    குறிப்பாக (டினேஜ்) பதின் பருவத்து மாணவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது தோழனைப் போன்ற பெற்றோர்கள். அவர்கள் மனம்விட்டு ஆறுதலாக பேசுவதற்கும் அரவணைப்பதற்கும் நல்ல நண்பர்கள் வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. என்ன தான் ஆரோக்கியமான உணவுகள் கொடுத்தாலும் அவர்களின் மனம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதா? என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    மாணவர்களின் தன்னம்பிக்கை ஊட்டுவதற்கு ஆயிரமாயிரம் கட்டுரை வரலாம். ஆனால் அதனை மேம்படுத்துவதில் நமக்கு அதாவது சமூகம் பெற்றோர்கள் என அனைவருக்கும் பங்கு உண்டு என்று நம்புகிறேன்.

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

    மண்ணில் பிறக்கையிலே

    அவர் தன்னம்பிக்கை சார்ந்த மனிதராவதும்

    அவரவர் பெற்றோர் வளர்ப்பிலே….

    தகுதியை அறிந்து கொள்

    அவனுக்கு மொத்தம் மூன்று கைகள். வாழ்வின் துக்கங்களை அதிகம் சந்தித்துப் பழகிய அவனை நம்பியவர்கள் கைவிட்டாலும் அவன் ஒருபோதும் நம்பிக்கையை விட்டதில்லை. இந்தியாவில் படித்து விட்டு வேலை தேடும் 30 சதவீத இளைஞர்களும் அவனும் ஒருவன்.

    “டேய் நேரம் ஆச்சு சீக்கரம் கிளம்பு, இந்த வேலைலயாவது சேரப் பாரு, நீதி நியாயம்னு பேசி இந்த வாட்டியும் கோட்ட விற்றதா” என்ற அம்மாவின் அர்ச்சனைகள் கேட்டவுடன் சட்டை பொத்தானை சரி செய்து கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான் அருண்.

    “அதெல்லாம் என் திறமைக்கு ஏத்த வேலையாய் கிடைக்கும் மா” என்றான். அருணின் சொற்களில் நம்பிக்கை கலந்திருந்தது. அவன் அம்மாவின் முக சுழிப்பில் ஒருவித சோகம் கலந்திருந்தது. அருணுக்கு அறிவும் ஆற்றலும் போதவில்லை என்றில்லை, குருட்டு உலகத்தை பற்றிய படிப்பினை போதவில்லை .காந்தியின் படத்தினை அவன் சுவர்களில் மட்டுமே காண்கிறான். அதிகாரத்தின் வாரிசுகள் அதனை தம் கையருகில் காண ஆசைப்படுவதை அவன் இன்னும் முழுமையாக உணரவில்லை. இந்தியாவின் பெருபான்மையான தவறுகள் கவருகளால் தான் நடைபெறுகின்றன.அதற்கு பலியாகும் திறமையான அப்பாவிகளுள் அருணும் ஒருவன்.

    “அண்ணா, பருவத் தேர்விற்கு பணம் கட்ட பணம் கேட்டேனே, இன்னைக்கு தான் கடைசி நாள்” என்று கேட்டாள் சுமித்ரா.                “ஏய்! எத்தனை தடவ சொல்லிருக்கேன் அண்ணன் கிட்ட கேக்காத என்கிட்டே கேளுனு” என்று சொன்ன அவன் அம்மா தன் முந்தானையில் சுத்தி வைத்திருந்த 1000 ரூபாயை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள்.பேச இயலா பறவைகள் போல உள்ளுக்குள் அழுகிறான் அருண்.

    பத்தாண்டுகளுக்கு முன்னர் அருணின் அப்பா இறந்த போது இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த அவனுக்கும், சுமித்ராவுக்கும் எல்லாமே அவர்கள் அம்மா தான். இன்றும் வேலை செய்து தன் குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். ஏதும் பேசாமல் அப்பாவின் புகைப்படத்திற்கு முன்னின்று வணங்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் அருண். ஏழைகளின் வீடு இரண்டு அறைகளுக்கு மேல் இருந்தால் அது ஆடம்பரம் ஆகிவிடுமே.[hide]

    அரைமணி நேர பேருந்து நெரிசல்களுக்கு பிறகு தனக்கு வேலை தரப்போகும் நிறுவனத்தின் ஒய்யார கட்டிடம் கண்டு வியக்கிறான். ஆயிரம் கனவுகளோடும், புது உத்வேகத்தோடும் உள்ளே சென்று தன் போட்டியாளர்களோடு காத்திருக்கிறான். “மிஸ்டர் சந்தோஷ். மிஸ்.மாலினி”என ஒவ்வொருவர் பெயரும் அழைக்கப்பட்டது. அருணை பொறுத்தவரை இந்த வேலை அவனுக்கு நிச்சயமாக கிடைத்துவிடும் என்று நம்பினான். காரணம், அந்த நிறுவனம் எதிர்பார்க்கும் எல்லா தகுதிகளும் அவனிடத்தில் இருந்தன. கூடவே அந்த வேலையை பெற வேண்டும் என்பதில் அவனுக்கு அதீத கவனமும்,உழைப்பும் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் தான் தன் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கப்போகிறது என்று உற்சாகத்தில் இருந்தான். வறுமையெல்லாம் இன்றோடு தீரப்போகிறது என்று ஆனந்தம் கொண்டிருந்தான். அந்த மகிழ்ச்சி அவனிடத்தில் தன்னை முழுமைப்படுத்திக் கொள்வதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் ப்யூன் நிதானமாக வந்து அந்த சுவற்றில் எதையோ ஒட்டிவிட்டு அவசரமாக செல்வதை அங்கிருந்த எல்லோரும் கவனிக்கிறார்கள். அதில் மிஸ்டர். பரத் அந்தப் பணிக்கு தெரிந்தெடுக்க பட்டுவிட்டதாகவும் அனைவருக்கும் நன்றி என்று எழுதப் பட்டிருந்தது. கூடியிருந்த கூட்டம் புலம்பிக் கொண்டே நகரத் தொடங்கியது.

    “ரெக்கமென்டெசன் சார், இப்பெல்லாம் படிப்புக்கு எங்க வேலை கிடைக்குது..” என்ற நொந்து கொண்டு போன இருவரின் வார்த்தைகள் அருணின் காதுகளில் ஒலித்தன. சோகங்கள் மட்டுமே சொந்தமென வாழ்கின்றவனை தளர்ந்த நடையோடு பேருந்து நிறுத்த இருக்கையில் அமர்கிறான். அது தான் இதுவரையில் அவனை நிராகரிக்காத ஒரே சிம்மாசனம். அது ஒரு வசந்த மாலை பொழுது.அவனையும் காற்றையும் தவிர அங்கு ஒருவருமில்லை. அவனது இதயமே சில்லு சில்லை உடைந்து போயிருந்தது. அவன் நம்பிக்கையை விவாகரத்து செய்து மீளா துயரில் இருக்கிறான். ஒவ்வொரு தனிமனிதனுக்குள் புதைந்துபோயிருக்கின்ற தோல்வியின் சுவடுகளும், அவமானத்தின் அஸ்திவாரங்களும் எழுத்திற்கு அப்பாற்பட்டவை. வாழ்வின் எல்லா கதவுகளும் மூடப்பட்டதாய் நினைத்த அவனுக்கு தற்கொலை தான் மூட கதவாக இருந்தது. பெரும் புயல் எவ்வளவு பெரிய மரத்தையும் சாய்த்துவிடுவதை போல, காலம் எவ்வளவு பெரிய அறிஞனையும் தன் கால்களை பிடிக்க செய்து விடுகிறது .அதற்கு அவன் மட்டும் விதிவிலக்கா என்ன? நம்பிக்கையை மறுதலித்துவிட்டு ஒரு குழந்தையைப் போல மெல்ல மெல்ல நடக்கிறான் ஒரு நடைப்பிணமாக. தனிமைக்கு மட்டுமல்ல சில வேதனைகளுக்கும் இங்கே மருந்தில்லை.

    ஆனால்,முயற்சி அவ்வளவு எளிதாக உருவனை கைவிடுவதில்லை. தன் காலடி ஓசைகளை கேட்டுக் கொண்டே சென்ற அருணின் பார்வை அந்த மனிதனை படம் பிடிக்கிறது. சீவாத தலை, அருவெறுப்பான முகம், வெள்ளை தாடி, ஒரு கையில் கம்பு, இனொன்றில் திருவோடு, ஒரே ஒரு கால்…கண்டுகொண்டான் அவன் பிச்சைக்காரன். வருபவர் போவரிடம் எல்லாம் “ஐயா, தர்மம் பண்ணுங்க”என்று ஓயாது குரல் கொடுத்துக் கொணடிருந்தான். அருண் அவனருகில் சென்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

    “ஐயா,மகாராசா தர்மம் பண்ணுங்க…” என்று திருவோடை நீட்டினான் அவன். தவணை முறையில் சிரித்தான் அருண். அது தத்துவ சிரிப்பு. “பிச்சையெடுக்குறேயே,நீ சந்தோசமா தா இருக்கியா …” வினவினான் அருண்.

    மெல்லிய குரலில் அந்தப் பிச்சைக்காரன் “எனக்கென்ன ராசா,  எனக்கு ஒரு கால் இல்லைனு நான் கவலைப்பட்டதே இல்லை. தினமும் பிச்சை எடுப்பேன். யாராவது அஞ்சோ பத்தோ போடுவாங்க. அதை வச்சுட்டு ஒரு நாள் கஞ்சி குடுச்சுக்குவேன். சில நாள் தட்டுல ஒரு ரூபா கூட இருக்காது .ராத்திரி பசி வயித்த கிள்ளும். செத்தரலாம்னு கூட தோணும். ஆனா ஆண்டவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நாளைக்கு நிச்சயம் நல்லது நடக்கும்னு தோணும். அந்த மாறி நேரத்துல தண்ணியை குடிச்சுட்டு தூங்குவேன். காலையில் கடவுளை நினச்சுட்டு தொழிலை தொடங்குவேன் நாலு காசு கிடைக்கும் அதுல சந்தோசமா இருப்பேன்” என்று சொல்லி முடித்தான்.

    அருணின் மனம் அவனுக்குத் தெரியாமலேயே அவனை எங்கோ கூட்டி சென்றது. இத்தனை படித்தும் என்ன பிரயோஜனம் அந்த ஒற்றை கால் பிச்சைக் காரனிடம் இருக்கும் ஒன்று தன்னிடத்தில் இல்லையே என்று வருத்தப்பட்டான். அந்தப் பிச்சைக்காரன் எத்தனை நாட்கள் பசியோடு கழித்திருப்பான், எத்தனை முறை நிராகரிக்கப் பட்ருப்பான். ஆனாலும் அவன் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறதே. அவனை எது இன்னும் உயிர்ப்பித்து வைத்து கொண்டிருக்கிறது என்ற சிந்தனைகளால் சிறைப்படுத்தப்படுகிறான்.

    “ராசா, என்ன யோசனை” குழம்பினான் பிச்சைக்காரன்.

    “ஒண்ணுமில்ல, ஒருவகையில் நீயும் நானும் ஒன்று தான். உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் படிப்பு மட்டும் தான். வீட்டில் அம்மா தங்கைக்கு அடுத்த வாய் சோறு போடாமல் வேலை தேடித் கொண்டிருப்பவன் பிச்சைக்காரன் தானே..” என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்து விட்டு நகர்கிறான் இப்போது அவனது நடையில் சோர்வு இல்லை. மாறாக புது உத்வேகம் காணப்பட்டது. கண்களிலே பிரகாசம் இருந்தது. இதய ஓட்டத்தில் லட்சிய வெறி கலந்திருந்தது. தன் அலைபேசியை எடுத்து ஏதேதோ எண்களை அழுத்தி பேசினான் “மாமா, நான் அருண் பேசுறேன்.தண்ணீர் கேன் பிசினஸ் செய்ய ஆள் வேணும் னு சொன்னிங்களே, நாளைக்கே நான் வீட்டுக்கு வரேன்” பூரிப்போடு பேசினான்.

    அருண் கொடுத்துச் சென்ற பத்து ரூபாயை பார்த்து கொண்டே சிந்தித்தான் அந்தப் பிச்சைக்காரன் “வறுமை இப்படி ஒருவனை படுத்தும் போதும் அவன் நம்மள மாதிரி பிச்சை எடுக்கலையே. நம்ம மட்டும் ஏன் இப்படி ஆகணும். நாளைக்கே வேலைக்கு ஆள் தேவைனு எழுதிப் போட்ட அந்த கம்பெனியில் எதாவது வேலை கேட்டுப் போவோம்” என்ற தன் தீர்மானத்திற்கு பின்னால் அமைதியாய் உறங்கச் சென்றான்.

    அவனிடமிருந்து இவன் நம்பிக்கையை வாங்கிக் கொண்டான், இவனிடமிருந்து அவன் தன்மானத்தை வாங்கிக் கொண்டான்.

    உங்கள் தோல்விகளின் போது மிக கவனமாக இருங்கள். ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வேண்டிய மார்கத்தைவாழ்க்கை அருவெறுப்பானவைகளி இடத்திலும் ஒளித்துவைத்திருக்கலாம் இல்லையா?[/hide]

    இந்த இதழை மேலும்

    பேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13

    தாய்மையைப் போற்றும் அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்து நிற்கும் உறவு தாய் உறவு.  “தாயிற்சிறந்த கோவிலுமில்லை” என்றவரி தாய்மையின் புனிதத்துவம், பெருமை, தியாகம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை,  ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக, பாட்டியாக,  இப்படித் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை’ என்றபாத்திரம் தான் உன்னதமான இடத்தை வகிக்கிறது.

    அன்னையர் தினம் ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறிப்பிட்ட தேதியில் கொண்டாடப்படுவதில்லை.  மாறாக, ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    தாய்மையைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினத்தின் வரலாறு சுவையானது.  இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்க வீரர்கள் யுத்த களத்தில் பலியாயினர். அவர்களின் குடும்பங்கள் சிதைந்து சிதறிப்போயின. அப்படிப் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும்,  அவர்களின் நல்வாழ்க்கை மற்றும் சமாதானத்திற்காக அயராது பாடுபட்டவர் “ஜார்விஸ்”  என்றபெண் சமூக சேவகி.  அவர் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன்  என்றகிராமத்தில் வாழ்ந்து வந்தார்.  வாழ்நாள் முழுக்க சமூக சேவகியாகவே வாழ்ந்த அவர் 1904ல் மறைந்தார்.

    ஜார்விஸ் விட்டுச்சென்ற சமூக சேவையை அவரது மகள் அனா ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார்,  அனா ஜார்விஸ் முதன் முதலாகத் தனது அன்னையின் நினைவாக உள்ளுரில் உள்ள தேவாலயத்தில் 1908ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றைநடத்தினார்.

    சமூக நலனில் அக்கறை கொண்ட அவர் ஏதாவது ஒரு நாளில் எல்லோரும் தங்களது தாய், அவர் உயிரோடு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் கௌரவிக்கப்பட வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பெனிசுல்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்,  அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் கொண்டாட அங்கீகாரம் அளித்தது.[hide]

    மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் திருப்தி அடையவில்லை.  அமெரிக்கா முழுவதும் “அன்னையர் தினம்” கொண்டாடவும் அந்த நாளை அரசின் விடுமுறைநாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வெண்டுமென அரசியல் தலைவர்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் எண்ணற்றகடிதங்கள் எழுதினார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதே வேண்டுகோளை விடுத்தார், இவரின் வேண்டுகோளையும் நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு முதல் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாட அறிவித்தார், அதனைத் தொடர்ந்து 46 நாடுகளில் இதே நாளில் “அன்னையர் தினம்” அறிவிக்கப்பட்டது,  அதன் பிறகும் அனா ஜார்விஸ் மனம் திருப்தி அடையவில்லை,  காரணம், 46 நாடுகளில் மட்டுமல்லாது உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது.

    தன்னுடைய இந்த ஆசையை தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாகப் பூர்த்தியாகிவிட்டது என்றேசொல்லலாம்,  திருமணம் செய்து கொள்ளாமல் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் முயற்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    சரி, அன்னையர் தினத்தின் சிறப்புகளுக்கு வருவோம்,  தாய் தந்தை இருவரில் முதலிடம் தாய்க்கே.  ஒரு புதிய உயிரைக் கருவில் சுமந்து, குழந்தையாகப் பெற்றெடுத்து, பேணி வளர்த்து ஆளாக்குவது எளிதான காரியமல்ல, ‘அம்மா…,’ என்றசொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும் தொனிகளும் ஆயிரமாயிரம்,  தன்னுடைய உயிராலும் மெய்யாலும் நமக்கு உயிர்மெய் தந்தவள் அம்மா என்பதற்கு அச்சொல்லில் உள்ள எழுத்துக்களே சான்று,  ஆம்!, ‘அ’ என்பது உயிரெழுத்து,  ‘ம்’ என்பது மெய்யெழுத்து,  ‘மா’ என்பது உயிர்மெய் எழுத்து,  அற்புதமான விளக்கம்!

    ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’, ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ போன்றதிரைப்பாடல்களைக் கேட்கும்போது தன் அம்மாவை நினைத்துப் பார்க்காத மனிதர்களே இருக்க முடியாது, உள்ளத்தையும் ஆன்மாவையும் மலரச் செய்யும் உன்னத அனுபவமே தாய்மை. ஒரு பெண் தாயாக மாறும்போது தன் குழந்தைக்காக பசி, தூக்கம், சுகம் என அனைத்தையும் தியாகம் செய்கிறாள்,  ஆகவேதான் அனைத்தையும் துறந்த பட்டினத்தார் தாய்ப்பாசத்தை துறக்க முடியாமல் “ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று கைப்புறத்தில் ஏந்தி கனகமுலைத் தந்தாளை இனி எப்பிறப்பில் காண்பேனோ!” என்று பாடுகிறார்.

    தன் வாழ்வை தன்னலமற்று அர்ப்பணிப் பவள் தாய்தான் என்பதை கவிஞர் பூவை செங்குட்டுவன் ‘தன்னலமற்றது தாயின் நெஞ்சம், தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்” என்று திரைப்பாடலில் வெளிப்படுத்துகிறார்,  அன்பு, இனிமை, தியாகம் போன்றவை தாய்மையின் பண்புகள்,  குழந்தை பெறுவது மட்டுமே தாய்மையின் இலக்கணம் ஆகாது.  தாய்மைப் பண்பு உள்ளவளே தாய்,  பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி விட்டுச் செல்லும் பெண்ணைத் தாய் என்று சொல்ல முடியாது.  தாய்மைப் பண்புகள் காரணமாகத் தான் இறைவனை ‘தாயுமானவன்’ என்றும், ‘அம்மையப்பன்’ என்றும் அழைக்கிறோம்.

    ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தாய்மைப் பண்பைப் பெறவேண்டும்,  தந்தையிடமும், ஆசிரியரிடமும், அரசாள்வோரிடமும் தாய்மைப் பண்பு மலர வேண்டும்.  மனம் மலட்டுத் தன்மை கொண்ட பாலைவனமாக இருக்கக் கூடாது,  மாறாக, தாய்மை பொங்கும் சோலைவனமாக இருக்க வேண்டும்.

    பிள்ளைகள் நல்ல பண்புகளுடன் விளங்குவதற்கு தாயே முக்கிய காரணம்.  அவளின் அதி கவனமும், கவனிப்பும் இல்லை யேல் குழந்தைகள் சிறப்புறவளர மாட்டார்கள்.

    ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!,  பகவான் கண்ணன் பேசிய பேச்சுகளை வயிற்றில் வளரும் போதே அபிமன்யு ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்ததைப் பற்றி இதிகாசங்கள் கூறுகின்றன,  சரித்திரத்தில் சாதனை புரிந்த சத்ரபதி வீர சிவாஜி, மகாத்மா காந்தி, நேதாஜி முதலானோர் முன்னேற்றத்தில் பெரும்பங்கு தாய்க்கு உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.

    உயிருக்குள் இன்னொரு உயிரை சுமக்கும் அற்புத பிறவி தாய்,  ‘உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுத்து, தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் நமக்கென்றும், சொல்லாமல் சொல்லுகின்ற தேவதையின் கோயில் அது!  பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால்தரும் கருணை அது! பிறர் பசித்த முகம் பார்த்து பதறும்  நிலைபார்த்து பழம்தரும் சோலை அது! இருக்கும் பிடிச்சோறும் தனக்கென எண்ணாமல் கொடுக்கின்ற கோயில் அது! தினம் துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து அணைக்கின்ற கைகள் அது! அது தூய்மை! அது நேர்மை! அது வாய்மை! அதன் பேர் தாய்மை! என்பது கவியரசர் கண்ணதாசனின் தாய்மை தரிசனம்.

    வணக்கத்திற்குரிய மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் முதலிடம் பெறுவது தாய்.  தாயின் பெருமை அறியாதவர் யாரும் இல்லை, ‘பெற்றடுத்த தாயைப் பாதுகாத்து, பசிக்கவிடாமல் உணவளித்து, நோயுற்றால் மருத்துவம் பார்த்து அவளின் மனம் புண்படாமல் பாதுகாப்பதுதான் மானுட தர்மம்,  அதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுத்தரும் சிறந்த பாடம்,  பாலை நினைந்தூட்டும் போது அவள் அன்பின் வடிவம்! பசித்த வயிற்றுக்கு அமுதூட்டும் போது தியாகத்தின் இருப்பிடம்! அழுது துடிக்கும்போது அரவணைத்துக் கொள்ளு கையில் இன்பத் தேனூற்று!  மொத்தத்தில் அவள் ஒரு பேசும் தெய்வம்!  உயிரைச் சுமந்த தாயைப் போற்றி அன்னையர் தினத்தை கொண்டாடுவோம்!…[/hide]

    இந்த இதழை மேலும்

    சவால்களை வெல்வது எப்படி?

    வாழ்க்கை என்பது பூந்தோட்டமல்ல, கல்லும் முள்ளும், கரடுமுரடான பாதைகளும், சோதனைகளும் கலந்தது தான் வாழ்க்கை. இருள், ஓளி இரண்டும் கலந்தது காலம், சுகம், வலி இரண்டும் கலந்தது தேகம் அது போல நலம், தீங்கு இரண்டும் கலந்தது வாழ்க்கை. அலைகள் இல்லாத கடல், விண்மீன்கள் இல்லாத இரவு வானம், மேடு பள்ளமில்லாம மலை உலகில் எங்குமே இல்லை.

    அதுபோல வெற்றி தோல்வி, இன்பம்,துன்பம், சாதனைகள், வேதனைகள், ஏற்றம், இறக்கம், பிறப்பு, இறப்பு, அதிருப்தி, நல்லவை, கெட்டவை, உயர்வு, தாழ்வு, பிரச்சனை, தீர்வு இவைகள் இல்லாத வாழ்க்கை இல்லை.

    இந்த வாழ்க்கைப் பயணத்தில் சவால்களை, பிரச்சனைகளை, தோல்விகளை, சறுக்கல்களை ஒவ்வொருவரும் கட்டாயம் சந்தித்தாக வேண்டும்.

    வாழ்க்கையிலே வெற்றி பெற்றவருக்கும், தோல்வியடைந்தவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் ஒன்றே ஒன்று, சவால்களை சரியான முறையில் சந்திக்கக்கூடிய திறமை படைத்தவர்கள் வெற்றியாளர்கள், திறமை இல்லாதவர்கள் தோல்வியாளர்கள்.

    வலிமையான மன உறுதி பெற்ற மனிதர்கள் கூட சில நேரங்களில், மற்றவர்களைப் போல பிரச்சனைகளுக் குள்ளாகிறார்கள். சற்று அவர்கள் அயர்ந்தாலும் மீண்டும் எழுந்து துணிவுடன் சவால்களோடு மோதத் தயாராகிறார்கள். சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சாமர்த்தியம் உள்ள அவர்கள், வெற்றி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறார்கள்.

    தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களின் திறமையைப் பாதிக்கிறது. சவால்களை முதல் முறையிலே வெற்றி காண்பது என்பது மிகவும் கடினமானது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தோல்வியடைகிறார்கள்.

    மனிதர்களை இரண்டு வகையைச் சார்ந்தவர்கள் சவால்களை எதிர்கொள்வதில் பலவீனமானவர்கள். தோல்வி கண்டவுடனே துவண்டுவிடுவார்கள். பல வழிகளில் பலமுறைமுயற்சி செய்ய வேண்டும் எனத் தெரியாதவர்கள்.

    சவால்களை எதிர்கொள்ளும் போது ஒருவனுடைய உணர்வுகள் அவன் மன உறுதியை நிலை குலையச் செய்கிறது. தான் பலவீனமானவன் என்றும், தனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை என்றும் எண்ணுபவர்கள் ஒருமுறை தோல்வி கண்ட பின்பு அடுத்த முறைஅந்த முயற்சியை கை விட்டு காணாமல் போய் விடுகிறார்கள்.

    ஆனால் தோல்வி அடைந்தாலும் துவண்டுவிடாமல் மீண்டு எழுந்து, தொடர்ந்து முயற்சித்து தோல்வியடைந்து வழிமுறையைத் தவிர்த்து, மாற்று வழிகளில் புதிய யுக்தியோடு தன்னபிக்கையுடன் முயற்சிப்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.[hide]

    சவால்களை சந்திப்பதற்கு எளிதான வழிமுறைகள்

    1. எந்த வழி வெற்றி தரும் எனக் கண்டறிந்து பின் அதன்படி முயற்சித்தல்
    2. வழி முறைகளை மாற்றி மாற்றி புதிய யுக்திகளைப் பின்பற்றுதல்
    3. தோல்வியில் வீழ்ந்தாலும், மீண்டு எழுந்து தொடர்ந்து முயற்சித்தல்.

    சவால்களை எதிர்கொள்ளும் முறைகள்

    1. ஒவ்வொரு பிரச்சனைகளையும் தன்னம்பிக் கையோடு முயற்சிக்க வேண்டும்.
    2. பிரச்சனைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.
    3. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.
    4. பெற்றஅனுபவங்களின் படி வெற்றியின் சூத்திரத்தைக் கண்டறிய வேண்டும்.
    5. பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் ஒருவனை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்லும், ஒவ்வொரு வாய்ப்புகளையும் தாழ்வு மனப்பான்மையில்லாமல் தன்னம்பிக்கையோடு முயற்சிக்க வேண்டும்.
    6. பிரச்சனைக்குரியவர்கள் தான் தீர்வைக் கண்டறிய வேண்டும். உதவிக்கு வருகிறார்கள் யோசனை சொல்ல முடியுமே தவிர அவர்கள் பிரச்சனையை தனக்காக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தல் கூடாது.

    வள்ளுவர் அழகாகச் சொல்வார்,

    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

    துணைவலியும் தூக்கிச் செயல்     என்கிறார்.

    செய்யப் போகின்றகாரியத்தின் வலிமையும், தன்னுடைய வலிமையும், எதிரியின் வலிமையும், தன் துணைக்கு வருகிறவலிமையும், எதிரியின் துணைக்கு வருகிறவலிமையும் ஆய்ந்து எது வலிமை வாய்ந்தது என்று கண்டறிந்து, அதற்குப் பின் அந்தச் செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்.

    சவால்களை சந்திப்பதிலே வள்ளுவர் தரும் வழியைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.

    சவால்களை நாம் வளர்வதற்குரிய வாய்ப்புகள் என்றும் சொல்லலாம். அந்த வாய்ப்புகளை வெற்றிகரமாகப் பயன்படுத்தி அளவிடற்கரிய தன் திறமைகளின் மூலம் வெற்றியைப் பெற்றால் தான் வளர்ச்சி அடைய முடியும். தன்னுடைய திறமையை தான் அறிந்து கொள்வது அவசியம்.

    கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வதைப்  போல சவால்களை சந்திக்கிறபோது விளைவுகளைப் பற்றி சிந்திக்கக் கூடாது. கவனம் முழுவதும் காரியத்திலேயே இருக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு இதில் இடம் கொடுத்தால், உணர்ச்சிகள் உங்களை ஆட்சி செய்யும். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் அனைத்து நிகழ்வுகளும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

    சவால்களை சந்திக்க மனதைத் தயார்படுத்தும் 7 காரணிகள்

    1. உண்மையான நிலையை உணர்தல் வேண்டும்.
    2. விரும்பும் வாழ்க்கையை விடுத்து, இருக்கும் வாழ்க்கையை நேசிக்க வேண்டும்.
    3. அவசரப்படாமல் நிலையாக நிதானமாக முன்னேறவேண்டும்.
    4. நல்லவர்கள் மற்றும் நல்லவைகளை நன்றியுடன் அங்கீகரித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    5. வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.
    6. உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த வழிமுறைகளை உங்களுக்கு சவால்களை எதிர்கொள்ளும் மனோ தைரியத்தையும் கொடுத்து தன்னம்பிக்கையும் அளித்து, முயற்சிகளுக்கு உத்வேகம் தந்து வெற்றிக்கு வழி காட்டும்.

    புதிய எண்ணங்களை வரவேற்பது, புதிய கருத்துக்களை உருவாக்குவது, புதிய உத்திகளைப் பின்பற்றுவது, வெற்றிக்கு ஒரு உந்து சக்தியாக அமையும். சாதாரண ஒன்றியிலிருந்து அசாதாரணமான ஒன்றைவெளிபடுத்துபவர்கள் தான் வெற்றிக் கோப்பையைத் தட்டிச்செல்வார்கள்.

    பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, இன்னொரு கோணம், இன்னொரு தீர், இன்னொரு செயல்முறை. இன்னொரு அணுமுறைஇருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    சவால்களில், பிரச்சகைகளில் வாய்ப்புகளில் எப்படி எதிர் செயல்புரிய வேண்டும் என்பதை அனுபவம் உங்களுக்கு கற்றுத்தரும். சிறிய கத்தி விரைந்து பாயும்.ஆனால் மேலோட்டமாகப் பதியும், பெரிய கத்தி நிதானமாகப் பாயும், ஆனால் ஆழமாகப் பதியும் என்பது பழமொழி. இது உங்களுக்கு அனுபவம் வரும் போது தெரியும்.

    ஒவ்வொரு பறவைக்குமான உணவை இறைவன் வைத்திருக்கிறான். ஆனால் பறவையின் கூட்டுக்குள் வைப்பதில்லை என்பது ஆங்கில பழமொழி. பறவை வெளியே வந்து தான் இரையை தேடிக் கொள்ள வேண்டும் என்பது நியதி. அதைப்போல ஒவ்வொரு பிரச்சனைக்குள்ளும் தீர்வு இருக்கிறது. தீர்வு நம்மைத் தேடி வராது. தீர்வை நோக்கித்தான் நாம் போயாக வேண்டும்.

    ஒவ்வொரு சவாலும் வாய்ப்புகளோடு வருகிறது. ஒவ்வொரு வாய்ப்பும் சவால்களை தன்னகத்தே கொண்டுள்ளது. எப்போதும் இன்னொரு செயல்முறை உண்டு என்ற தன்னம்பிக்கையோடும் துணிவோடும் செயல்பட வேண்டும்.

    சவால்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எந்த வழி முறை அதைச் சந்திப்பதற்கு சிறந்த முறை என்று ஆய்ந்து அந்த வழியை ஒருமுறைஅல்ல, பலமுறைமுயற்சித்து மீண்டும் மீண்டும் போராடினால் தான் வெற்றி பெறமுடியும். போராட்டம் தான் வாழ்க்கை.

    சலியாத தொடர் முயற்சியும் அதற்குரிய கடுமையான உழைப்பும் மட்டும் தான் சவால்களை வெல்வதற்குரிய சரியான வழியாகும். 18 முறைதோல்வி கண்டு, 19 வது முறைவெற்றி பெற்றகஜினி முகமது கதை நமக்குத் தெரியும். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது முயற்சி ஒன்றுதான் வெற்றிக்குரிய தாராக மந்திரம் என்பதும் தெரியாதது அல்ல.

    மரணம்  என்பது என்ன? என்று கேட்டஒரு மாணவனுக்கு மாண்புமிகு அப்துல்கலாம் அவர்கள் மூச்சு நின்றுவிடுதல்ல மரணம், முயற்சி நின்று விடுவதே மரணம் என்றார்.

    தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கிறபூமி. நமக்கும் சொல்லுகிற பாடம் இறுதி வரை இயங்கிக் கொண்டே இரு என்பது தான்.

    கடுமையான உழைப்பு ஈடு இணை இல்லை

    ஓய்வில்லா கடும் உழைப்பும், தளர்வில்லா முயற்சியும்

    உச்சிக்கு இட்டுச் செல்லும் தாரக மந்திரங்கள்

    ஆதலின் முயற்சிப்போம், உழைப்போம், வெற்றியடைவோம், உயர்வடைவோம்.[/hide]

    இந்த இதழை மேலும்