“பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு”
என்பதே உங்கள் வாழ்வை உயர்த்தும் ஒரே வழி.
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !
குருகுல காலம் தொட்டு ஆசிரியர்களும், ஞானிகளும் அறிவைப்பற்றி எத்தனையோ விஷயங்களை, விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார்கள். அவைகளில் பல அறிவுரைகளாகவும், போதனைகளாகவும் நம் கருத்துக்களத்தில் பொதிந்து கிடக்கின்றது. சில படிப்பினைகளாகவும் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அறிவாளியாக இருப்பது எப்படி என்று மட்டும் நாம் தெரிந்துகொள்ளாமல், சாமர்த்தியக்காரனாக இருப்பது எப்படி என்றும் நம் புத்திக்குப் புகட்டி இருக்கிறோம். அவற்றை சரியான விதத்தில் நமது வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயன்படுத்துகிறோமா? என்ற கேள்விக்கு ஒவ்வொருவரின் மனசாட்சியே பதில் சொல்ல முடியும்.
கண்ணன் அர்ச்சுனனுக்கு போர்களத்தில் சொன்ன விஷயங்கள் – படிப்பினையா?
சகுனி போர் நடக்கும் முன்பும், நடக்கும் போதும் சொன்ன விஷயங்கள் – படிப்பினையா?
முன்னது, அறிவின் சரியான பாதை – பின்னது அறிவின் அழிவுப்பாதை!
ஒருவரது புத்திக்கூர்மை – மற்றவரை ஏமாற்ற உதவும் ஒரு வழியாக இருந்தால் – அந்தப்பாதை அழிவுப்பாதை தான்.
ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட மனித இனத்தின் இன்றைய பிரஜைகளே நீங்களும் நானும். வரலாறு படைக்கும் பொறுப்பும் நமக்கும் இருக்கின்றது.
ஆதிவாசியாக, காட்டில் விலங்கோடு விலங்காக வாழ துவங்கிய மனித இனம், அதே விலங்கிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள போராடியதும், விலங்கையே தனது உணவாக எண்ணினால் – ஆச்சரியம்தான் நமக்கு விடையாக.
ஆக! ஆனந்தமான வாழ்வுக்கு “அறிவு” அவசியம் என்று அறிக!
இன்றைய சூழலில் அறிவு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்?
“அறிவு” தனிமனித வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதாய்
“அறிவு” சிக்கல்களை தீர்க்கும் சிறப்பான யோசனையாய்
“அறிவு” அவலங்களைப் போக்கும் அற்புத ஆசானாய்[hide]
“அறிவு” வளர்ச்சிப்பாதையின் வழிகாட்டியாய்
“அறிவு” தலைமுறைகளுக்கும் பயன்படும் தாரக மந்திரமாய்
“அறிவு” தோல்விகளை தடுக்கும் கேடயமாய்
“அறிவு” துரோகங்களை துளைக்கும் கூர்முனை ஊசிகளாய்
“அறிவு” சூழ்ச்சிகளை வெல்லும் சேவகனாய் ! – இருப்பதே சரி.
ஒருநாள், ஒரு வங்கியின் பரபரப்பான நேரத்தில் திருடர்கள் கூட்டமாக வந்து துப்பாக்கி முனையில் கொள்ளைடிக்க முற்பட்டனர். திருடர் தலைவன் மேலதிகாரியின் தனி அறைக்குள் அடியெடுத்து வைத்தான். Locker களின் சாவிக்கொத்தையும், பணத்தை பாதுகாக்கும் அறையின் சாவிக்கொத்தையும் தருமாறு மிரட்டினான். வேறு வழியில்லை. மேலதிகாரி சாவிகளை எடுத்துக்கொண்டு கஜானா அறைக்குப்போனார்.
சிலவற்றை திறக்க முடிந்தது, பலவற்றை திறக்க முடியவில்லை. Password இருந்தால்தான் திறக்க முடியும் என்றும், இதை திறந்தால் Automatic Alarm ஒலிக்கும் என்றும், இதை திறந்தால் Main Gate lock ஆகி சுவற்றை உடைத்தால்தான் நாமே வெளியே வர முடியும் என்றெல்லாம் பல்வேறு காரணங்கள் கூறி – பல Locker களை திறக்க விடாமல் பாதுகாத்தார் அதிகாரி. படிப்பறிவில்லாத திருடர்கள் பாவம். ஏமாற்றத்தோடு கிடைத்ததை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பினர்.
எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று எண்ணிப்பார்க்க ஆவல் கொண்டபோது திருடர் தலைவன் சொன்னான் – “வேண்டாம். அரசாங்கமே நாளை எவ்வளவு கொள்ளை போனது என்று அறிவிக்கும். அதுவரை அமைதியாக இருப்போம். பிறகு பங்கை பிரிப்போம்” என்றான்.
அடுத்தநாள் பத்திரிகைகள் “பத்து கோடி கொள்ளை” என்று செய்தி வெளியிட்டது. பங்கு பிரிக்கும்போது பார்த்தால் வெறும் 5 கோடிதான் இருந்தது. மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்க – 5 கோடிக்குமேல் அங்கே இல்லை. அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொண்டார்கள் திருடர்கள். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள்.
உண்மையில் நடந்தது இதுதான்.
திருடர்கள் தப்பி சென்றதும் Cashier Manager இடம் வந்து “5 கோடி போய்விட்டது. நான் இதுவரை 1 கோடிவரை கையாடல் செய்திருக்கிறேன். அதனால் 6 கோடி என்று அறிவித்துவிடலாமா? உங்கள் ஒத்துழைப்பு தேவை” – என்று கேட்டார். Manager சொன்னார், “சரி. இன்னும் 4 கோடியை நாம் எடுப்போம். 1 கோடி உனக்கு, மேலும் உன் பழைய கையாடல் கணக்கும் Tally ஆகிவிடும். இந்த விஷயத்தில் உனக்கு நான் உதவுவதால் எனக்கு 3 கோடி பங்கு. மொத்தம் கொள்ளை போனது 10 கோடி என்று அறிவித்து விடுவோம்” என்று சுமுகமாக முடிவெடுத்தார்கள்.
இதுதான் அறிவாளிகளின் அறிவின் ஆளுமை.
“உழைக்கத் தெரிந்தவனுக்கு பிழைக்கத் தெரியவில்லை – பிழைக்கத் தெரிந்தவன் உழைக்கத் தயாராக இல்லை.”
இதுபோன்று அழிவை தரும் “அறிவு” சமூகத்தின் சாபக்கேடே. அது நமக்கு தேவை இல்லை.
“அறிவு” என்பது “அழிவு” என்பதாய் அர்த்தம் மாறத் துவங்கியது எப்போது?
விஞ்ஞானிகளின் வடிவத்தில் இருந்த “அறிவு”, விவேகானந்தரின் வடிவத்தில் இருந்த “அறிவு”, கோவில்களின் வேலைப்பாடுகளிலும், சிற்பங்களிலும் இருந்த “அறிவு”, ஆறம் செய்ய விரும்பு என்ற ஆத்திச்சூடியின் வடிவத்தில் இருந்த “அறிவு”, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று மதிப்பின் வடிவத்தில் இருந்த “அறிவு”, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் இரக்கத்தின் வடிவில் இருந்த “அறிவு” – எங்கே போனது?
“அறிவில்லாத மனிதர்களா நாம்? – இந்த “அறிவில்லாத மனிதர்களா நாம்?
எப்போது மாறினோம்? யார் மாற்றியது?“திறந்து பாருங்கள். அறிவுக்கண்ணை திறந்து பாருங்கள். உங்களோடு பலர் கண்கட்டுவித்தை விளையாடுகிறார்கள். அந்தக் கட்டினை அவிழ்த்துவிட்டு – திறந்து பாருங்கள்.
ஒரு மொழியை மறுக்க போராடும் நேரத்தில் – மௌனமாக “கல்வியே” மறுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. கல்வி வியாபாரமாக மாறி வெகு காலமாகி விட்டது. பணம் இருந்தால் தான் பள்ளிக்கூடமே போக முடியுமென்று மாறிவிட்டதை சிலரது “அறிவு” இன்னும் தெரிந்துகொள்ளவில்லை.
தொழிற்சாலையை மூடும் போராட்டம். மூடப்படுவது தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும்தான் என்பதை சிலரது “அறிவு” என்றைக்கு அறிந்து கொள்ளப் போகின்றது?
நீர் நிலைகளையும், மழைத்துளிகளையும் சேமித்து வைத்தால் தீக்குளிக்க வேண்டாம், தினமும் குளிக்கலாம் என்பது சிலரின் “அறிவுன்” வாசலை அடையவில்லை அல்லவா?
மதுவும், மாதுவுமே மகிழ்ச்சி என்று மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம்தான் இன்று மூலைக்கு மூலை மயங்கி விழுந்து கொண்டிருக்கின்றது. விழுந்து கிடப்பது தான் மட்டுமல்ல, தன் குடும்பத்தின் எதிர்காலம் தான் என்று புரிந்துகொள்ளக்கூட முடியாத போதையில் இன்றைய இளவட்டம்.
அழைப்பவர்கள் யாரோ – அல்லல் படுபவர்கள் யாரோ.
இன்முகத்தோடு இருப்பவர்கள் யாரோ – இன்னல்பட்டு இழப்பவர்கள் யாரோ.
உங்களுடைய திசை திருடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மூளை மெல்ல மெல்ல சிந்திக்கும் செயலை இழந்து கொண்டிருக்கின்றது. ஒரு கண்ணில் காமமும், மறு கண்ணில் கோபமும் மிளிர்வதனால் – எதிர்கால எதார்த்தத்தை பார்க்கமுடியாத பார்வை குறைபாடுடன் நீங்கள் பரிதாபமாக பாதையின் ஓரத்தில் – குப்பைகளுக்கு துணையாய்.
நீங்கள் “படம்” பார்த்தீர்கள். ஆனால் உங்களை அவர்கள் “பதம்” பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் – நான் வாழ யார் பாடுவார்” என்ற கேள்வி உங்களுக்குள் உதிக்கட்டும்.
உங்கள் ஆற்றல்கள் அத்தனையும் ஆர்பாட்டக்களத்தில் “அடகு” வைக்கப்பட்டதை அறிந்து கொள்ளுங்கள். முதலை அனுபவிப்பவன் எங்கோ இருக்க -“வாழ்க்கை இழப்பு” என்ற வட்டியை நீங்கள் தான் கட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் – என்று புரிந்து கொள்ளுங்கள். விடியலுக்கான தலைவன் என்று தன்னை விளம்பரப்படுத்தி கொள்பவர்களை ஓரக்கண்ணால் பார்த்து ஒதுக்குங்கள். எத்தனை தலைவர்கள், தொண்டர்கள் நமக்காக போராட இருக்கிறார்கள் என்று உடலால் அல்ல மனதால் மட்டும் மகிழுங்கள்.
முட்கள் நிறைந்த வாழ்க்கை பாதையில் உங்கள் கவனம் எடுத்து வைக்கும் அடுத்த அடியில்தான் இருக்க வேண்டும். முள்ளில் படாமல், முள்ளும் படாமல் முன்னேறுவது தான் வெற்றியின் இலக்கை நெருங்கும் இரகசியம் என்று தெளிந்து நடை போடுங்கள்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை, அராஜகம் என்று திசை திரும்பி செல்லும் கூட்டம் – பெருங்கூட்டம் தான். அவர்கள் யாருடைய “அறிவு”க்கு அடிமையாக இருக்கிறார்கள். தன் மீது, தன் குடும்பத்தின் மீது, தன் தலைமுறை மீது, தன் சமூகத்தின் மீது, தன் நாட்டின் மீதே – அக்கறையற்ற அறிவிலிகள்.
இனி, நல்ல சமூகத்தை உருவாக்கும் பொறுப்பில் நாம். அதற்க்கு என்ன வேண்டும்?
உண்மையை உணராமல், உணர்ச்சி வசப்பட்டு வீட்டினை கவனிக்காமல் வீதியில் போராடும் “அப்பாவிகள்” தனது அறிவை அறிய வேண்டிய கட்டாயத்தில் தான் இந்த நிமிடம். அறிவில்லாத மனிதனாக நீங்கள் இனியும் இருக்க வேண்டாம்.
“ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான், அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான் – என்ற பெருமை “நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” என்ற பெரும் நம்பிக்கை மனிதனின் மேல். அதை பொய்க்க விடக்கூடாது.
“பறவையை கண்டு விமானம் படைத்தது, பாயும் மீன்களில் படகை கண்டு, எதிரொ| கேட்டு வானொலி படைத்த மனிதன் எத்தனை கண்டான்? – என்ற கவியரசரின் கவலை, இப்போதும் இன்றைய சூழலில் பொருந்தி வருவது மானிட இனம் தலை குனிய வேண்டிய வேதனையே.
“பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு” என்பதே உங்கள் வாழ்வை உயர்த்தும் ஒரே வழி.
போலி தலைவர்களை புறக்கணிக்க பழகுங்கள்.
“அறிவை” கொள்ளுங்கள்.
விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் நானும் ஒருவனாக இருப்பேன் – என்று “அறிவை” கொள்ளுங்கள்..
மொழியும், கல்வியும் தான் வெற்றியை முன்மொழியும் – தெளிவும், ஞானமும் தான் வெற்றியை வழிமொழியும் – என்று “அறிவை” கொள்ளுங்கள்.
“மாபெரும் சபைகளில் நான் நடந்தால் எனக்கு மாலைகள் விழுவது தான் மகிழ்ச்சி என்று “அறிவை” கொள்ளுங்கள்..
கொண்டால், குறைந்தபட்சம் “உயர்ந்த பண்பும், குணமும் கொண்ட மனிதத்துவம் கொண்ட மனிதன்” என்று உங்கள் குடும்பத்தால் கொண்டாடப் படுவீர்கள். அதிகபட்சமாக, அடுத்த தலைமுறைமீது உண்மையான அக்கறை கொண்ட தலைவனாக அடையாளம் கொள்வீர்கள்.
அதையே சுருக்கமாக சொல்வதென்றால்
“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”
“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”[/hide]
இந்த இதழை மேலும்