– 2018 – September | தன்னம்பிக்கை

Home » 2018 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் இனிய தமிழே

    தேன்கனியே தெவிட்டாத தேனமுதே

    தென்றல் தெளிக்கும் இன்முகமே

    அழகின் சுவையெடுத்து குமரியில் நீ பறக்க

    கும்பிடுவேன் உன் குணமறிந்தே…!

    பாடுகள் நீ பட்டு பல துன்பம் நீவடைந்து

    பயிலும் என்னை பாதையிலுத்து

    பயிற்சி அளிக்கும் பன்முகமே

    பார் போற்றும் பல்லுணர்வே…!

    தமிழ் காற்று வீச தனிமையை மறக்க

    தவம் பெற்ற தன்னினமே

    தவழ்ந்து கிடந்த தளர்ச்சியில் விழுந்த

    தர்மம் செய்ய மாட்டாயோ நீ இன்பம் தர மாட்டாயோ…!

    அன்பின் சுவையே அழகின் ரூபவதியே

    அண்டினோர்க்கு அடைக்கலம் தரும் அன்புருவமே

    அனாதை போல் அலைந்த என்னை பிணைத்து

    பின் இணைத்த என் இமயமே இதய சிகரமே…!

    உன்னை மறப்பேனோ என் மரணம் மடியும் வரை

    மண்ணில் பிறந்த நான் விண்ணில் படர்ந்த உன்னை

    கண்ணில் அல்ல தன்னில் வைத்தேன்

    தனிமையில்லா உறவிலந்தேன்…!

    என் தாய் தமிழே எனை தள்ளி விட மனமில்லாமல்

    அள்ளி வந்தனைக்கும் அருந்தேனே

    தேன் கனியே தெவிட்டாத தன்மையுடைய மனியே

    என் தேனினிதே செந்தமிழே உனை மறப்பேனோ…!

    –  ச. ராஜ்குமார் (திருச்சி)

    காலந்தோறும் வாழும் கவிஞர் பாரதி

    பேராசிரியர் டாக்டர் கு.ஞானசம்பந்தம் பேச்சு

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் 11.09.2018 அன்று மகாகவி பாரதியாரின் 97வது நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் ந. ஜெயகுமார் முன்னிலை வகித்தார்.

    பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் சரவணச்செல்வன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமையுரை வழங்கிய துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் முனைவர் பெ. திருநாவுக்கரசு அவர்கள் பாரதியார் எழுதிய ஆத்திச்சூடியையும் ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியையும் ஒப்பிட்டுப் பேசினார். பாரதி நாட்டில் நிலவிய பெண்ணடிமைத்தனம், சாதியம் போன்றவற்றை தன் கவிதைகளால் விமர்சனம் செய்வதையும் நாட்டு விடுதலை சமூக விடுதலையை முன்னிலைப்படுத்திய பாரதியின் கவிதைகளையும் எடுத்துக் கூறினார்.

    பாட்டுக்கொருப் புலவன் பாரதி என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பேரூரை வழங்கினார். அவர் பேசுகையில் ‘மகாகவி பாரதி இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல இனிவருகின்ற எல்லா யுகத்திற்கும் பொருந்திப் போகின்ற ஒரு யுக கவிஞன். வாழும் காலத்தில் இருந்து எதிர்காலத்தைப் பற்றி நிறைய சிந்தித்த அற்புதமான ஒரு சிந்தனையாளன்.

    பாரதியின் இலக்கியங்கள் எத்தனை முறை படித்தாலும் தீர்ந்து போகாத வளமும் பொருண்மையும் உடையது. ஆகையால்தான் அவனே தன் கவிதையை “சுவை புதிது, பொருள் புதிது வளம் புதிது சொற்புதிது சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று தானே போற்றிக் கொண்டான். பிறரின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்காத மகாகவி. தன்மனத்திற்குப்பட்டதை எந்த ஒளிவும் மறைவும் இன்றி எடுத்துரைத்தவர்.

    எமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று தன்னைத் தானே பிரகடனம் செய்தவர், பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்று தேசியம் பேசியவர் பாரதி. இந்தியத் திருநாட்டை தந்தையர் நாடு என்று கூறிய முதற்கவிஞன்.

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியைத் தலைமேல் கொண்டாடியவன். பாரதி போற்றிய தமிழ் மொழியைக் காப்பாற்ற தாய்மொழியில் பேசுவதும், தாய்மொழியிலே சிந்திப்பதும் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.

    பேசபடாத மொழி அழிந்துபோகும் என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும். பாரதியை நாம் நினைவுகூர்வதன் ஒரு பகுதியாக தாய்மொழியை பேசுவதையும் சிந்திப்பதையம் ஒரு வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவின் நிறைவாகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் தே. ஞானசேகரன் அவர்கள் நன்றி கூறினார்.

    விழாவில் பாரதியார் பல்கலைக்கழக அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மாணவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் போசிரியர்களும் மாணவர்களும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    வாழ்வை வெல்ல கேள்விக் கல்வி

    இரா. கதிர்வேல்

    முனைவர் பட்ட ஆய்வாளர்.

    முகப்புரை:

    தன்னம்பிக்கையோடு வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற, ‘கல்வி’ இன்றியமையாதது. பொதுவாக, எழுதவும் படிக்கவும் அறிதலையே ‘கல்வி’ என்று கருதுகின்றனர். கல்வியானது, எழுத்துக் கேள்விக் கல்வி உள்ளிட்ட பல பிரிவுகளை உடையது. மொழி உருவான பின்னர், அறிவைப் பெறப் பயன்பட்ட முறைகளும் ஒன்றே எழுத்துக் கல்வியாகும். ஒருவருக்கு எழுத்துக் கல்வியின் தேவை, மிக இன்றிமையாததே. எனினும் அறிவுப் பெருக்கத்திற்கு, எழுத்து வழிக் கல்வியின் பங்கு குறைவானதே ஆகும். அறிவு வளர்ச்சிக்கு, ஐம்பொறிகள் வழியாகக் கண்டும், கேட்டும், உணர்ந்தும் பெறும் கல்வியே பெரும் பங்கு வகிக்கிறது. அதனுள்ளும் செவி வழியாகக் கேட்டுக் கற்கும் கேள்விக் கல்வி நடைமுறையில் வாழ்வை வெற்றி கொள்ளப் பெருந்துணையாகிறது.

    எழுத்தறிவு என்பது வேறு; அறிவு என்பது வேறு. எழுதப் படிக்க அறிந்த அனைவரும் அறிவாளிகள் அல்லர். அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதும் முயற்கொம்பே. பள்ளி, கல்லூரி சென்று, எழுத்தறிவு பெறாத பலர், படிக்காத மேதைகளாய் இருந்து, சிறந்த வெற்றிகளை வாழ்வில் குவித்துள்ளனர். அவ்வெற்றியாளர்களுக்குக் கேள்விக் கல்வியே வாளும், கேடயமாகவும் இருந்துள்ளது.

    பேச்சு மொழி:

    கருவறையிலேயே குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது என்கிறது அறிவியல். பிறந்த குழந்தை, தன் பெற்றோரும், சுற்றியுள்ளோரும் பேசும் மொழியைக் காதால் கேட்டு, சொற்களஞ்சியம் பெருக்கி, ஓரிரு ஆண்டுகளில் பேசும் மொழியைக் கற்றுக் கொள்கிறது. முறையாகக் கற்றுக் கொடுக்காமலேயே, குழந்தை தானே மொழியறிய, கேட்டலே உதவுகிறது. கேட்டல் வழியே அறிவு பெற்று வாழ்வில் முதல் வெற்றியைப் பதிவு செய்கிறது மனிதக் குழந்தை.

    வாழ்வியல் கல்வி:

    எழுத்துக் கல்வி அறிமுகம் இல்லாத பழங்காலத்தில் இளையோர், வாழக் கற்றலாகிய வாழ்வியல் கல்வியை அறிவுரைகள், பாடல்கள், பழமொழிகள், கதைகள், வாய்மொழி இலக்கியங்கள் போன்றவற்றின் மூலம் மூத்தோரிடமிருந்து கேட்டல் வழிக் கற்றனர். இக்கேட்டல் கல்வி வழியே தான் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, மரபுகள், பழக்க வழக்கங்கள் போன்றவை ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  தொழிற்கல்வியான உழவு உள்ளிட்ட குடிவழிக் கல்வியும் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் இளையோரால் கற்கப்பட்டது. நவீன காலத்தில் இவை ஏடுகளில் ஏறியிருந்தாலும் பெரும்பாலும் கேள்வி வழியே தான் வாழ்வியல் கற்றல் நிகழ்கிறது.

    கேள்விக் கல்வி குறித்து அறிஞர்கள்:

    கேட்டல் வழியாகக் கற்றலின் சிறப்பைப் பழந்தமிழ் இலக்கண, இலக்கிய ஆசிரியர்கள் தம் நூல்களில் பதிவு செய்துள்ளனர். ‘கேள்வி முயல்’ என்று ஆத்தி சூடியில் ஒளவையார் கூறுகிறார். எழுத்தறிவாகிய நூற்கல்வியைக் கற்காவிட்டாலும், பிறர் கூறுவதைக் கேட்டு அறிவு பெறுக என்ற பொருளில் ‘கற்றினாயினும் கேட்க’ என்கிறார் திருவள்ளுவர். முன்றுறையரைனார் தம் பழமொழி நானூறில் ‘கற்றலின் கேட்டலே நன்று’ என்கிறார். ‘இன்பக் கேள்வி இசையவன் காண்’ என்கிறது தேவாரம். செவி வாயாக, நெஞ்சு களனாகக் கேட்க வேண்டும் என்கிறார் பவணந்தி முனிவர். கேட்டவன் கேடில் பெரும்புலவனாவான் என்கிறது சிறுபஞ்சமூலம்.

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாம் தலை.

    என்ற இக்குறள் உட்பட, பத்துக் குறள்களின் வழி, கேள்விக் கல்வியின் சிறப்பை வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.

    முடிவுரை:

    வாழ்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களின் தன்னம்பிக்கை மிக்க உரைகளையும், மூத்தோரின் அனுபவ உரைகளையும், ஆசிரியர்களின் அறிவுரைகளையும் பெற்றோர்களின் அன்புரைகளையும், நம் நலன் விரும்பிகளின் நல்லுரைகளையும் வாய்ப்பமையும்  போதெல்லாம் கேட்டு அறிவு பெறுவோர் வாழ்வை வெல்வர் என்பது வெளிப்படை.

    மாற்றம்

    மாற்றம் இயற்கையின்

    மாற்ற முடியாத உண்மை!

    முழு நிலவு முப்பது நாளும்

    முழு நிலவாய் இருப்பதில்லை

    தேய்கிறது மீண்டும் தேய்கிறது

    தேய்ந்து மீண்டும் கீற்றாய் மாறி…

    கண்ணுக்குத் தெரியாமல் காரிருளில் மறைகிறது!

    காணமல் போன அந்த நிலவு

    அப்படியே ஓடி ஒளிவதில்லை

    கீற்றாக கிளர்ந்தெழுகிறது!

    தோணியாகத் தொலைவில்

    தோற்றம் தருகிறது!

    மூன்றாம் பிறையாக

    முல்லை மொட்டுகளுக் கிடையே

    முகம் காட்டிச் சிரிக்கிறது!

    அரை வட்டமாக அந்தரத்தில்

    அழகு காட்டுகிறது!

    வளர்ந்து வட்டமாகி

    வானக் கூரையில் வலம் வந்து

    வையகத்துக்கு ஒளியூட்டுகிறது!

    – நா. க. இளையராசா

    திருவண்ணாமலை மாவட்டம்.

    வீரத்திருமகன் நீயடா

    தன்னம்பிக்கை கொள்ளடா!

    தலைநிமிர்ந்து நில்லடா!

    வண்ணவண்ண எண்ணங்களை

    வசந்தமாக்கி வாழடா!

    மலைகள் மீது செல்லடா!

    மனத்தைப் போற்றித் துள்ளடா!

    அலை அலையாய் ஆர்ப்பரிக்கும்

    ஆற்றல் காட்டி வெல்லடா!

    காலதேவன் காட்டுகின்ற

    கண்ணியத்தைப் போற்றடா!

    ஞாலமுள்ள காலம் வரை

    ஞானத்திமிர் காட்டடா!

    மலையின்மீது மோதிபார்க்கும்

    மேகத்தையும் காணடா!

    மழைநீராய்ப் பொழிந்து வீழும்

    மகத்துவத்தை உணரடா!

    தாக்க வரும் பகையின் கூட்டம்

    தாக்கித் தாக்கி விரட்டடா!

    காக்க காக்க கடமை காக்க

    கன்னித் தமிழை வணங்கடா!

    வீறுகொண்டு எழுக இன்றே

    வினைமுடித்துத் திரும்படா!

    மாறுபட்ட நெஞ்சங் கொண்ட

    மனித மனம் மாற்றடா!

    ஆழ்மனது சொல்லுகின்ற

    ஆற்றல் வழி நெருங்கடா!

    தூள்கிளப்பு துடித்தே எழு

    தூங்காப் புலி பாயடா!

    உன்னைப் போல ஒருவன் இந்த

    உலகத்திலே யாரடா!

    உன்னை  வெல்ல எவருமில்லை

    உரக்கப் பாடி ஆடடா!

    எதையும் வென்று காட்டுகின்ற

    இதயம் கொண்டு மகிழடா!

    புதையலான எரிமலை நீ

    புரட்சி செய்யக் கிளம்படா!

    வெற்றி வெற்றி வெற்றி என்றே

    வெற்றிக்கனல் மூட்டடா!

    வெற்றி வேலைக் கரத்தில் ஏந்தும்

    வீரத்திருமகன் நீயடா!

    – மாசி

    சிரித்து வாழ் தங்காய் ! !

    சிரிப்பினாலே துன்பம்

    சிதறி ஓடும் தங்காய்!

     

    கருப்பு உள்ளம் கொண்டோர்,

    கதறித் திரியும் வெறியர்

    சிரிக்கும் சிரிப்பு வேறு

    சிந்தையில் நீ கொள்வாய்!

     

    அன்பினாலே தோன்றும்

    அழகுச் சிரிப்பு  இன்பம் !

    துன்பம் நீக்கும் சிரிப்பை

    துணிந்து நீயும் சிரிப்பாய் !

     

    சிரித்து சிரித்து வாழ்வாய்!

    சிறந்த வாழ்வும் பெறுவாய்

    பெருத்த இன்பம் காண்போர்

    வகுத்த வழியும் இதுவாம்!

     

    – தொ. சி. கலை மணி

    அமைதியாதோ ?

    குழந்தை பேசிமும் மொழிபோலோ

    கொஞ்சிப் பேசிட முடியாதோ?

    சுழலும் சக்கர நிலை போலே

    சூழம் இடர்கள் அகலாதோ?

     

    அலைகடல் எழுப்பும் ஒலி போலே

    அல்லல் தொடர்வதும் நிற்காதோ?

    சிலைகள் நின்றிடும் நிலை போலே

    சிந்தையில் துன்பம் நின்றிடுமோ?

     

    கதிரோன் சிந்திடும் ஒளிபோலே

    இன்பமும் வாழ்வில் சிதறாதோ?

    அறுசுவை தந்திடும் தேன் போலே

    ஆனந்த வாழ்வும் அமையாதோ?

     

    தொடர்வது இல்லா கதை போலே

    நிலைத்திடும் வளமும் அமையாதோ?

    இடர்கள் இல்லா வழி போலே

    இன்ப நல் பாதையும் அமையாதே?

     

    –   தொ. சி. கலை மணி

     

    தடை அதை உடை

    ரா. அருள் வளன்அரசு

    வானத்தில் நிலாவும், நட்சத்திரங்களும் ஒரு காலத்தில் சந்தோசமாக இருந்தார்கள். இரவின் மடியில் வானத்துடனும், மேகத்துடனும் மனசு பேச முற்படும் போதெல்லாம், நமக்கு முன்னாள் நிலாவும் நட்சத்திரங்களும் கொஞ்சி குலாவி சந்தோசமாகப் பெசி சிரிப்பைக் காணமுடியும். அந்த அழகின் மகிழ்வின், நாம் பேச நினைத்ததை நம்மையும் அறியாமல் மறந்து போவோம். அப்படிபட்ட மகிழ்வில் திடீரென்று ஒரு நாள் பெரிய பூதம் வந்து, நான்கு நட்சத்திரங்களைப் பிடித்து சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டது. அடுத்தடுத்த நாட்களில் பூதம் வருவதும், நட்சத்திரங்களை பிடித்து சாப்பிடுவதும் தொடர்கதையானது. என்னை பார்த்த நிலாவுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. மனதுக்குள் வலி வெளியே சொல்ல நாளுக்கு நாள் நட்சத்திரங்கள் வானில் வருவது குறைந்துகொண்டே இருக்கிறதே என்று நிலா ரொம்பவே கவலையானது. முடிவாக, இது தொடர்பாக சூரியனிடம் புகார் கூறியது. தினமும் இரவு நேரத்தில் பூதம் வந்து நட்சத்திரங்களைக் கொன்று தின்று விட்டு செல்கிறது. இது தொடர்ந்தால் வானம் இருட்டாகி விடும் வானம் ஜொலிக்கவே ஜொலிக்காது. இதை இப்படியே விட்டு விட்டால், எதிர்பாராத பேரழிவு ஏற்பட்டு விடும் என்று தன் உள்ளத்து குமுறல்களை எல்லாம் சொல்லி அழுதது நிலா .

    சூரியனும், நிலாவை சமாதானப்படுத்தியது. இது அப்படி நடக்காது, நான் பார்த்து கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தது.

    இப்படி ஒரு கதை இருந்தால் இதற்கு என்ன முடிவு தரலாம்.அந்தச் சூரியன் என்ன நடவடிக்கை எடுத்திருந்தால், நட்சத்திங்களைச் சாப்பிடாமல் இருந்திருக்கும் என்பது ஒரு கற்பனை கதை.

    இந்தக் கதையில்… நாம் என்னவாக இருக்கிறோம்?  நட்சத்திரங்களாகவா? நிலாவாகவா? சூரியனாகவா? பூதமாகவா? என்று கேள்வி நீள்கிறது. யோசிக்க வேண்டிய தருணம் இது.

    நம் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் நட்சத்திரம் இருக்கிறது. சூரியன்   இருக்கிறது. நிலா இருக்கிறது. பூதமும் இருக்கிறது. நம்மில்  நினைத்துத்தான் நாம் பயந்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பூதத்திற்கு நாம் என்ன வேண்டுமானாலும் பெயர் வச்சுக்கலாம்.

    “சரியா நான் படிக்கவில்லை. சரியாக எனக்கு  எழுத வராது. எனக்கு விளையாட்டுனா பயம். யாராவது ஆங்கிலம் பேசினாலே 10 அடி தள்ளி நிற்பேன்.மேடையில் சில பேரு பேசும் போது, நானும் இது மாதிரி பேசலானு நினைப்பேன்.ஆனால் நான் மேடையேறினால், தொடையெல்லாம் தானா நடுங்கும். அலுவலகத்தில் மேனேஜரைப் பார்த்தால் பயம். அரசியல்வாதிகளைப் பார்த்தால் பயம். அன்றாடம் நடக்கும் சமூக அவலங்களைப் பார்த்தால் பயம். சினிமாவுல, டிவியில பார்க்கிற சண்டை காட்சிகள்  எல்லாம் நம்ம விட்டிலும் நடந்துவிடுமோங்கிற பயம் என்று இப்படி நமக்குள்ள  பலவிதமான பூதங்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

    இப்படி,  நமக்குள்ளே இருக்கக்கூடிய  இந்தப் பூதத்தை ஜெயிக்காமல் வானத்தில் நட்சத்திரமாய் பிரகாசிக்கவும் முடியாது.நிலாவாய் ஜொலிக்கவும் முடியாது.  சூரியன் மாதிரி ஆற்றலுடன் சுற்றி வரவும் முடியாது. முக்கியமாக அந்த பூதத்தை எப்படி ஜெயிப்பது ,எப்படி எதிர்கொள்வது  என்பதை, நமக்கு நாம் தான் அடையாளம் காண வேண்டும். இதற்கெல்லாம் வானிலிருந்து எந்த வான தேவதையும் இறங்கி வரப்போவதில்லை. ஜெயித்தப் பிறகு அதை விழவாகக் கொண்டாடும் நாம் தான் அதை அடைய வேண்டிய வழியையும் இடையில் உள்ள தடையை உடைக்கும் வலிமையை,   வல்லமையையும் பெற வேண்டும்.

    இப்படி நம்மிடம் இருக்கக்கூடிய பெரிய  பூதம்  எதுவென்றால்  அது தயக்கம் மட்டும்தான். ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பார்கள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்பார். உடனே முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் துடுக்கான மாணவன் சட்டுனு எழுந்து பதில் சொல்வான்.ஆனால் அதே பதில் பின் வரிசையில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும்  மாணவனுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நம்ம சொல்வது தப்பாகிவிடுமோ  அதுதான் சரியான விடையாக இருக்குமோ ஆசிரியர் கோபப்படுவாரோ எல்லோர் முன்னாடியும் அசிங்கமா போயிருமோ அப்படிங்கிற தயக்கத்தின் காரணமாகவே பின் வரிசை மாணவன் வாழ்க்கை முழுவதும் பின்தங்கியே விடுகிறான். அங்கு உடைத்து எறிய வேண்டியது தயக்கத்தை தான். இன்று நாம் எந்த இடத்திற்குப் போனாலும் முதலில் நமக்குத் தடையாக இருப்பது வேறொன்றுமல்ல நமது உடலில் மனதில் சிந்தனையில் இருக்கக்கூடிய தயக்கம் மட்டும் தான்.அதை முதலில் தூக்கி எறிய வேண்டும்.

    அலுவலக நேர்காணலுக்கு பொது மேடையில் பேசுவதற்கு நாம் செல்கிறோம் என்றால் நமக்கு என்ன தெரிகிறதோ அதை முதலில் தைரியமாக பேச வேண்டும். நம்முடைய விசய ஞானத்தை விடவும் நாம் அணுகும் மனப்பான்மை அந்த இயல்புகள் தமக்கான வெற்றியை தேடித் தரும்.

    ஒரு நீச்சல் வீரன் தண்ணீரில் நீந்துவதற்காகக் குதித்துவிட்டு தயக்கத்துடன் பயத்துடன் கை கால்களை ஆட்டாமல் இருந்தால் அவன் என்னாவன்  அவன் வீரனாக இருந்தாளுமே முழ்கித்தான் இறப்பான்.இதுதான் நமக்கான எச்சரிக்கை.

    நம் தயக்கப்படும் ஒவ்வொரு கணமும் நம்மையே  அறியாமல் நம் கைகளை நாம் கட்டிக்கொண்டு வாழ்கை என்னும் கடலில் மூழ்கிவிடுகிறோம்.

    இங்கே உடைக்கப்பட வேண்டியது தடைகளை அல்ல, தயக்கத்தை.”

    தகர்போம்,

    வாழ்க்கையில்

    கரை சேர்வோம்!

    பிரகாசிப்போம்!

    ஜொலிப்போம்!

    மார்பில் சுமந்தாயே!

    தந்தையே! உன் வயிற்றில்

    சுமக்காவிடிலும் காலமெல்லாம்

    சுமந்தாய்!

    கருவறை தான் இல்லை..!

    உன்னை தாய் என கூற…!

    ஊண் துறந்தாய்..! உறக்கம் மறந்தாய்…!

    உழைத்தாய்..! கறைத்தாய்..!

    வேர்வை சிந்தினாய்..!

    நலமாய் நாங்கள் வாழ..!

    அடிகள் எனக்கென்றால்

    வலிகள் வந்ததோ உமக்கல்லவா?

    துன்புற்று விழி நனைந்தாலும்

    துடைத்தது – உன் விரல் அல்லவா?

    சோதளையிலும் வேதனையிலும்

    தோள் கொடுத்தவனே! உன் புகழ் பாட

    ஓர் தினம் போதுமா?

    நித்தம் புகழ் கூற வேண்டாமா?

    நானிலமும் வணங்கட்டும் உன்னை…!

    இளம் நாவலர். ப. கௌசல்யா

    நிதானமும் நீள் ஆயுளும்

    நம்மை முறுக்கேற்றும் கடினமான உடற்பயிற்சிகள் நம் மூச்சை

    வேகப்படுத்தி நம்மை நிதானமற்றவர்களாக ஆக்கிவிடும்.

    நம் எண்ணம், சொல் மற்றும் செயலில் நிதானம் இருந்தால், நாம் நீண்ட காலம் வாழலாம்.  நம் எண்ணம் (மனம்) நிதானப்பட நாம் மூச்சை சீர்படுத்தினால் போதும். நம் சொல்லில் நிதானம் ஏற்பட நாம் மௌனம் பழகினால் போதும். நம் செயலில் நிதானம் பெறதியானம் செய்தால் போதும். ஆக, இந்த மூன்று நுட்பங்களையும் தகுந்த குருவின் வழிகாட்டுதலைக் கொண்டு கற்று கையாள்வது சிறந்தது. ஆக, அது பற்றிய விஞ்ஞானத்தை இனிப் பார்ப்போம்.

    மூச்சு பயிற்சி: எளிய முறை உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் மற்றும் மூச்சு பயிற்சிகள் யாவும் நம் சுவாசத்தை சீர்படுத்தியும் நேர்படுத்தியும் நம் எண்ணம் அல்லது மனதில் நிதானத்தை கொண்டுவரலாம். இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்ன வென்றால், நம்மை முறுக்கேற்றும் கடினமான உடற்பயிற்சிகள் நம் மூச்சை வேகப்படுத்தி நம்மை நிதானமற்றவர்களாக ஆக்கிவிடும். ஆகவே, அவற்றின் பக்கம் போக வேண்டாம். இயல்பிலேயே நிதானம் கொண்டவர்களுக்கு எளிய முறை உடற்பயிற்சியும், யோக முத்திரைகளும் போதுமானது. சமநோக்கு பார்வையில் லாதவர்கள் நாடி சுத்தி பிராணயாமம் பயில்வது நல்லது. நம் மனக் குப்பைகள் காலியாக சுதர்சனக் கிரியா செய்வது சிறந்தது. ஆழ்ந்த மூச்சு இல்லாதவர்கள் பஸ்திரிகா மூச்சு பயிற்சி செய்யலாம். சோம்பேறிகளாக இருப்பவர்கள் உஜ்ஜை மூச்சு பயிற்சி செய்து சுறுசுறுப்பாகலாம்.  ஆக, நாம் மூச்சு பயிற்சி செய்வதால் நம் மூச்சானது ஆழமாகவும் நிதானமாகவும் மாறும். இதனால் நாம் நீள் ஆயுளுக்கு அடித்தளம் போடமுடியும்.

    மௌனப் பயிற்சி: நாம் அதிகம் பேசுவதால் நம் பிராண சக்தி (உயிர்ச் சக்தி) அதிகமாக விரையமாகின்றன. நாம் அதிகம் பேசுவதற்குக் காரணம் நாம் அனேக முறைநமக்கு வெளியே உள்ளவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக நடக்க முயல்கிறோம். ஆனால், நாம் நம் உள் தன்மையை அனுசரித்து பேசும்போது தான் நாம் மற்றவர்களுடன் இணக்கமாக மாறுகிறோம். நாம் மௌனப் பயிற்சி மேற்கொள்ளும் போதுதான் நாம் நம் உள்ளே கவனிக்க ஆரம்பிக்கிறோம். அதன் பயனாய், நாம் யோசித்துப் பேசவும், சரியாக பதிலளிக்கவும் செய்கிறோம். அன்பு நண்பர்களே! நீங்கள் மௌனம் இருந்துதான் பாருங்களேன். நாம் சொல்லின் செல்வராவது திண்ணம். நாம் மாதத்தில் ஒரு நாள் அல்லது வருடத்தில் 15 நாட்கள் என்று மௌனம் பழகலாம். அப்புறம் மௌனம் பழகும்போது கை கண் ஜாடை காட்டுவதோ எழுதுவதோ கூடாது. நாம் வெளியே பதிலளிப்பதை நிறுத்தினால்தான் நமக்கான உள்ளேஇருக்கும் பதில்களை நாம் கேட்க முடியும். அதே சமயம் மௌனம் காலத்தில் உடற்பயிற்சி யோகாசனம், மூச்சு பயிற்சி மற்றும் தியானம் பழகலாம். அப்புறம் நல்லத் தூக்கமும் நமக்கு கிடைக்கும். அப்போது நமக்கு ஒன்று புரியவரும், நாம் ஆழ்ந்து தூங்குவதற்கு வெளியமைதி தேவையில்லை உள்ளமைதி இருந்தால் போதும் என்று.[hide]

    தியானப் பயிற்சி: தகுந்த குருவின் அருளாலும் துணையாலும் நாம் ஆழ்நிலை தியானங்களைக் கற்று பயின்று பலன் பெறலாம். நம் உடலின் ஏழு சக்கரங்களின் ஆகாச சக்தி கிரகிப்பை மேம்படுத்தி ஆகாச சக்தியை  பயன்படுத்தும் நுட்பம்தான் தியானமாகும். தியானமெல்லாம் வயசாகி நாடியும் உடலும் தளர்ந்த பின்னர், போக்கிடமும் பொழுதுபோக்கவும் வழியில்லாமல் போகும் போது செய்யப்படுவது இல்லை. அப்படித்தான் நிறைய பேர்கள் நினைத்துக்  கொண்டிருக் கிறார்கள். எனக்கென்ன வயசா ஆகிவிட்டது? அதற்குள் சாமியாராக என்றுதான் நிறைய பேர்கள் கேட்கிறார்கள். உண்மையில், வாழும் வரை நாடியும் உடலும்  தளராமலும், வாழ்க்கை போரடிக்காமல் இருக்கவும், இல்லறத்தைச் சிறப்பாக நடத்தவுமே தியானம் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு ஆனந்தமான, அமைதியான அன்பான ஆரோக்கியமான அறிவான ஆயுள் நீட்டிப்பான வாழ்க்கை வேண்டுமாயின் நாம் ஆழ்நிலை தியானம் பயில வேண்டும். தியானம் நம்மை நிகழ்காலத்தில் சிறப்பாக வாழவைக்கும். மூச்சு பயிற்சிகளை சிறுவர்களும் பயிலலாம். ஆனால் தியானம் 14 வயதிற்குப் பிறகுதான் பயில வேண்டும். அப்போதுதான் நம் மூளையின் வலைப் பின்னல் முழுமையாகிறது.

    மூச்சு பயிற்சி, மௌனம் மற்றும் தியானம்

    மூன்றையும் முறையே பயின்று

    எண்ணம், சொல் மற்றும் செயலில் நிதானமாகி

    ஆயுள் நீட்பு பெறுவோம்.[/hide]

    இந்த இதழை மேலும்