– 2019 – May | தன்னம்பிக்கை

Home » 2019 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    முயற்சி

    முனைவர் இரா.சி. சுந்தரமயில்

    வட்டத்துக்குள் சிக்கிக்கொண்ட
    வண்ணத்துப்பூச்சி கூட
    பல வண்ணத்தை
    நமக்குக் கற்றுத்தரும்போது
    ‘வாழ்க்கைச் சக்கரம்
    என்னை
    மேலும் கீழும்
    புரட்டி எடுக்கிறது’ என்று
    வருந்துகிறாயே மனிதா
    கீழ் வரும் போது
    பள்ளத்தைத் தோண்டு
    மேல் ஏழும் போது
    ஆகாயத்தை ஆட்சி செய்
    முயற்சி என்பது
    உடல் முழுவதும் இல்லாவிட்டாலும்
    விரல் நுனியிலாவது இருக்கட்டும்
    அது
    முடியாது என்பதை
    உன் அருகில்
    நெருங்கவிடாது

    எண்ணத்தை தூய்மைப்படுத்து ஏற்றத்தை மேன்மைப்படுத்து

    S. தங்கவேல்

    தலைவர் மற்றும் தாளாளர்

    ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும்  தொழில்நுட்பக்  கல்லூரி

    கோவை

    இன்று புதிதாய் பிறந்தோம்

    என்று நீவிர் எண்ணமதைத்

    திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி

    இன்புற்று இருந்து வாழ்வீர்…

    என்ற பாரதியின் வரிகளில் நாம் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையை நம்முள் விதைக்கின்றன. இந்த நம்பிக்கை வரிகள் தான் இவரின் நடைமுறை வாழ்க்கையின் உத்வேக வரிகளாகும்.

    வெற்றியைத் தலைக்கும், தோல்வியை இதயத்திற்கும் எடுத்துச் செல்லாத எளிய மனிதர்.

    ஒரு செயலை செய்ய முடிவெடுத்து விட்டால் அதை முடிக்கும் வரை எங்கும் முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து பயணித்து வரும் மாமனிதர்.

    ஆசான் என்பவர் வெறுமனே அதட்டுபவராக மட்டுமே இல்லாமல் அன்பானவராய், அரவனைப்பாளராய், அக்கரையாளராய் இருந்திடல் வேண்டும் என்று மாணவர்களிடம்  நட்புறவுடன் பழகி வருபவர்.

    இயற்கை நேசிப்பாளர், தன்னம்பிக்கையாளர், பொறியாளர், வேளாண் வித்தகர். தொழில் வல்லூநர், சிறந்த பண்பாளர் என பன்முகத்திறமையுடைய ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் தாளாளர் S. தங்கவேல்  அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

    கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டாரத்திற்குட்பட்ட செங்கோடம்பாளையம் என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தேன். விவசாயக் குடும்பம், எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் என்னுடைய தந்தையார் விவசாயம் பார்த்து வந்தார். இரண்டு ஏக்கர் நிலத்திற்கு மூன்று கிணறுகள், அந்தக் கிணறுகளையும் ஆண்டு தோறும் ஆழப்படுத்தினால் தான் ஒரு ஏக்கர் அளவிற்காவது பயிர் செய்ய முடியும் என்ற நிலை. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். என்னுடைய தந்தையார் எங்கள் எல்லோரையும் அவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் படிக்க வைத்தார். எங்களை எல்லோரையும் ஆசிரியராக்கி பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது.  அரசுப்பள்ளயில் தமிழ்வழியில் தான் அனைவரும் படித்தோம்.

    நான் படிக்கின்ற காலத்தில் அவ்வளவாக ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தது. மிகவும் வசதிப்படைத்தவர்கள் மட்டுமே இப்பள்ளியில் படித்தார்கள். படிக்கின்ற காலத்தில் எல்லாப் பாடத்திலும் முதல் மதிப்பெண் மட்டுமே எடுத்தேன். அப்படிப்பட்ட சூழலில் பள்ளிப்படிப்பை முடித்து ஈரோட்டில் மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான கிக்கய நாயக்கர் கல்லூரியில் பியுசி பட்டத்தை முடித்தேன்.

    அதன் பிறகு கோவையிலுள்ள வேளாண் கல்லூரியில் வேளாண் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இக்கல்லூரி தொடங்கிய இரண்டாவது பேஜ் மாணவர்கள் நாங்கள். அங்கு எங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்கள் மிகவும் கல்வித்துறையில் கற்றுத்தேர்ந்தவர்கள். 1978 ஆம் ஆண்டு பி.இ பட்டப்படிப்பை முடித்தேன். முடித்த கையோடு எனக்கு அதே கல்லூரியில் வேலையும் கிடைத்தது.  வேலை செய்து கொண்டே எம்.இ. மற்றும் பிஎச்டி ஆகிய பட்டங்களைப் பெற்றேன். 1978 முதல் 2006 ஆம் ஆண்டு அக்கல்லூரியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்.

    கே: பேராசிரியராய் பணியாற்றிய நீங்கள் ஒரு கல்லூரி தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?

    என்னுடைய தந்தையார் மேலே கூறிய கடினமான சூழலில் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு கால்நடை தீவினகடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் அவ்வளவாக வருமானம் இல்லை. இதனால் நெல் வியபாரம் செய்து வந்தார். அவ்வாறு செய்யும் பொழுது பல இடங்களுக்கு வாடகை லாரியின் மூலம் சென்று  நெல் கொள்முதல்  செய்து வந்தார். நாம் ஏன் சொந்தமாக ஒரு லாரி வாங்கக்கூடாது என்று எண்ணி இருக்கும் பணத்தை வைத்து ஒரு லாரியை வாங்கி அவரே லாரியின் ஓட்டுநராகவும் உரிமையாளராகவும் இருந்தார். எங்கள் கிராமத்திலிருந்து முதன் முதலாக லாரி வாங்கியவர் அவர் தான். “லாரிக்காரர் வீடு ” என்று தான் எங்கள் வீட்டை அடையாளப்படுத்துவார்கள்.

    இன்று கல்லூரி தொடங்குவதற்கு என் தந்தை தான் காரணம். அவருக்கு ஆசிரியர் தொழிலின் மீது இருந்த பற்றுதல்  தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது என்று சொல்லலாம். என்னுடன் பிறந்த மூன்று சகோதரிகளும் ஆசிரியராகவே இருந்தார்கள். நான் பொறியியல் படிக்கும் பொழுது கூட நீ படிப்பை முடித்தவுடன் வேறு வேலைக்கு செல்லாமல் ஆசிரியர் தொழிலுக்கு மட்டும் செல் என்று என்னிடம் கூறினார். அவர் அன்று கூறிய வார்த்தை தான் என்னுடைய வாழ்வில் ஒரு பசுமரத்தாணி போல் பதிந்தது. நான் பணியாற்றிய காலத்தில் ஒரு பகுதியை கோவைப் பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினேன். அதில் ஒரு கல்லூரி கட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். இதனால் வேளாண் கல்லூரியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அதன் பிறகு என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.

    கே: பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி எழுந்தது?

    நான் படித்தது வேளாண் பொறியியல் துறை என்பதால் இத்துறை சார்ந்த அத்துனை நுணுக்கங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். இத்துறை ஒரு தொழில் சார்ந்தது. படித்து முடித்தவுடன் பணி என்ற நிலையில் இருக்கும் துறை. பொறியியல் துறை மூன்று துறைகளைக் கொண்டது, அது மெக்கானிக்கல், சிவில், எலட்ரிக் ஆகிய துறைகளை உள்ளடக்கியது. இந்த மூன்று துறைகளில் எல்லா வேலைகளும் வந்து விடும்.

    நான் படிக்கின்ற காலத்திலும், தற்போதும் பொறியில் படிப்பு என்று  வேலைவாய்ப்பு சம்மந்தமான படிப்பு என்பதால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். தன் பிள்ளை நன்றாகப் படித்து நல்லதொரு வேலைக்கு சென்று குடும்பத்தை அவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆவல் கொள்கிறார்கள். அந்த ஆவலை பொறியியல் துறை வெகு விரைவாகக் கொடுத்து விடுகிறது. இப்படிப்பட்ட காரணத்தால் தான் இத்துறை சார்ந்த கல்லூரியைத் தொடங்கினேன்.

    கே: கோவை மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தன் காரணம் குறித்துச் சொல்லுங்கள்?

    தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தப் படியாக வளர்ந்த மாவட்டம் என்றால் அது கோவை மாவட்டம் தான்.  நான் படிக்கும் பொழுது தமிழகத்தில் ஒன்பது பொறியியல் கல்லூரி மட்டுமே இருந்தது. அதில் சென்னையில் இரண்டு கல்லூரியும், கோவையில் மூன்று கல்லூரியும் இருந்தது. அப்போதே பொறியியல் கல்லூரியின் வளர்ச்சி கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு தேவையாக இருக்கிறது. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு அத்தொழில் படிப்பு பழகியதாக இருக்கும். ஆனால் விவசாயப் பின்னணியிலிருலுந்து வரும் பிள்ளைகளுக்கு இத்தொழில் கல்வி புதுமையாக இருக்கும். அவர்களுக்கு சற்று கூடுதலாகச் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். என்னை பொருத்தவரை பொறியியல் கல்லூரிக்கு ஏற்ற மாவட்டம் கோவை தான்.

    கே: நீங்கள் படித்த காலத்திலும், தற்போது வளர்ந்து வரும் காலத்திலும் பொறியியல் கல்வியின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?

    நாங்கள் படிக்கின்ற காலத்தில் குறைந்தளவு பொறியியல் கல்லூரிகள் தான் இருந்தது. அதிகபட்சமாக ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல் பட்டப்படிப்பு படிக்க முடியும். ஆர்வம் இருந்தாலும் படிக்க முடியாத சூழல் தான் இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் மாணவர்களுக்கு மேல் பொறியியல் படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல் ,  1972 ல் ஆண்டுதோறும் 1 இலட்சம் மாணவர்கள் SSLC தேர்வு எழுதினார்கள். அதில் 1000 பேருக்கு தான் பொறியியல் படிக்கும் வாய்ப்பு (1 % மட்டுமே) இருந்தது.

    தற்பொழுது ஆண்டுதோறும் சுமார் 8.5 இலட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதிகிறார்கள். அதில் 2 இலட்சத்திற்க்கு மேற்ப்பட்ட மாணவர்களுக்கு (25%) பொறியியல் படிக்கும் வாய்ப்பு உள்ளது.

    நமது மாணவர்கள் அமேரிக்கா உட்பட அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்க்கும் , .டி துறையில் அபரிவிதமான வளர்ச்சிக்கும் பொறியியல் கல்லூரிகள் பெறும் பங்கு வகுகின்றன.

    கே: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொறியியல் துறையின் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது?

    பொறியியல் துறையின்றி ஒரு நாட்டின் வளர்ச்சி இருக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். காரணம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும், பொறியாளர்கள் தான் உருவாக்குகிறார்கள். குறிப்பாக வரும் காலத்தில் நமது நாடு மின்னனுவியல் துறை மற்றும் எரிசக்தி துறை ஆகிய இந்த 2 துறைகளிலும் மிக பெரிய வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

    தற்பொழுது நாம் ஆண்டுதோறும் 70 பில்லியன்  டாலர் (ரூ. 4,90,000 கோடி) அளவிற்கு  மின்னனு சாதனங்களை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த இறக்குமதியை குறைத்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர வேண்டும்.

    அடுத்தாக ஆற்றல் துறையை எடுத்து கொண்டால், தற்பொழுது ஆண்டுதோறும் நாம் சுமார் 350 GW அளவிற்கு மின்சார உற்பத்தி செய்கிறோம். ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் 80 சதவீததிற்கு மேல் அனல் மின்சாரமே.

    தற்பொழுது சுமார் 5 சதவீதம் அளவிற்கு  சூரிய சக்தி முலமூம் , மேலும் 6 சதவீதம் அளவிற்கு  காற்றாலை  முலமூம் மின்சார உற்பத்தி செய்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 சதவீத அளவிற்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய வேண்டும்.

    இத்துடன் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்து எடுத்து அதனை எரிபொருளாக பயன்படுத்தி அனைத்து வாகனங்களையும் இயக்கும் தொழில்நுட்பத்தையும் மேம் படுத்த வேண்டும்.                    இதுமட்டுமல்லாமல், அடுத்த பத்து ஆண்டுகளில் டீசல் மற்றும் பெட்ரொல் இல்லாமலேயே அனைத்து இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் இயங்கும் நிலை ஏற்படும் அதையும் பொறியாளர்களே சாதிப்பார்கள். தற்போதைய நம் வாழ்வில் பிளாஸ்டிக் என்பது தவிர்க்க முடியாத பொருட்களில் ஒன்றாகி விட்டது. அரசாங்கம் இதை தவிர்க்க எத்தனையோ திட்டங்களை வகுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அதை முழுமையாக தவிர்க்க முடியவில்லை. இதை ஒரு பொறியாளர் மறுசுழற்ச்சி செய்ய பல வழிகளைக் கண்டுபிடிப்பார்.                      திருப்பூர் போன்ற தொழில் நகர்களில், சாயக்கழிவுகளை எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அது அருகிலுள்ள ஆறு, ஏரிகளில் கலந்து சுற்றுப்புற சூழலை மிகவும் மாசுபடுத்தியது. தற்போது சாயக்கழிவுகளை முற்றிலும் சுத்திகரிப்பு செய்து, அந்த நீரை அவர்களே மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பொறியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். பெரும்பாலான சாயப்பட்டறைகள் இந்த நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

    கே: தங்கள் கல்லூரி குறிகிய காலத்தில் தன்னாட்சி பெற்றது பற்றி ?

    நான் ஏற்கனவே கூறியது போல் எதையும் திட்டமிட்டு செயல்படுகிறோம். 8 ஆண்டுகளில் , நான்கு துறைகளுக்கு NBA சான்றிதழ் பெற்றோம். NAAC அமைப்பின் “A” தர சான்றிதழ், ஒட்டு மொத்த கல்லூரிக்கும் பெற்றோம். தரமான ஆசிரியர்கள், உயர் தர  வேலை வாய்ப்பு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள் சமரிப்பித்தல்  ஆகிய அனைத்தையும் கணக்கிட்டுத் தான் தன்னாட்சி வழங்கபட்டது. இதன் மூலம் தொழில்கூடங்களுடன் இணைந்து,  தொழில்பயிற்ச்சியுடன் கூடிய கல்வியை வழங்க இயலும். 4 ஆண்டுகளில் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை அயல் நாட்டு பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைத்து அவர்களின் திறன் உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும்.

    கே: உங்கள் கல்லூரியின் தனிச்சிறப்புகள் பற்றி?

    இக்கல்லூரிக்கான தனிச்சிறப்புகள் ஏராளம் இருக்கிறது. அதில்…

    இங்கு படிக்கும் அத்துனை மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பினை வாங்கிக் கொடுக்கிறோம்.

    ஒரு மாணவன் தனது பட்டப்படிப்பின் இறுதியாண்டில் அவனுக்கு எதிர்கால தேவை என்ன என்பதைக் கேட்டறிந்து அதற்கு ஏற்றார்போல் பயிற்சி அளித்து வருகிறோம்.

    ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு அம்மொழியைக் கற்றுக் கொடுக்கிறோம், அதற்கான பிரத்யோக ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு அந்நாட்டு மொழியை 1 ஆண்டு காலம் கற்றுக் கொடுக்கிறோம்.

    கெரியர் டெவலப்மெண்ட் என்ற ஒரு துறை இருக்கிறது. இதில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தகுதி சார்ந்த பயிற்சியினை வழங்கி வருகிறார்கள். எங்கள் கல்லூரியிலேயே அதிக ஆசிரியர்கள் பணியாற்றும் ஒரு துறை இது தான்.

    எங்கள் கல்லூரியில்          பன்மொழி பேசும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆங்கில மொழியை விட அவரவரின் தாய் மொழியை முறையாக எழுதவும் படிக்கவும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறார்கள்.

    இங்கு படித்து முடித்த மாணவர்களில் 20 சதவீதம் பேர் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

    பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 195 த்திற்கும் மேல் கட்டப் எடுக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், பேருந்து கட்டணம் படிப்பு முடியும் வரை இலவசம் தான்.

    190 க்கும் மேல் எடுக்கும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் எதுவும் இல்லை. பேருந்து மற்றும், விடுதிக்கட்டணம் செலுத்தினால் போதும்.

    விளையாட்டு மற்றும் ஒவ்வொரு பருவத்திலும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பல உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறோம்.

    கே: உங்களின் கனவுத்திட்டம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறார்களா?

    நான் எந்தச் செயலை செய்ய வேண்டும் என்றாலும் நன்றாக யோசித்து, முறையாகத் திட்டமிட்டு, எதிர்கால நலனில் கருத்தில் கொண்டு தான் செய்வேன். திட்டம் சரியாக இருந்தால் தான் வெற்றி இலகுவாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியிருக்கும் போது நல்லதொரு எண்ணத்துடன் தொடங்கிய இக்கல்லூரி மிகச்சிறப்பாக பெற்றோர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் நல்லதொரு பெயரை எடுக்கிறது என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

    நம்முடைய பயணம் என்பது பல்வேறு படிநிலைகளை அடியொற்றியது. ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக செயல்பாடுகளை மாணவர்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

    மாணவர்களில் எதிர்கால வாழ்க்கைக்கு எது தேவையோ, அதை முறையாக அவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

    திறமையான ஆசிரியர்கள் கொண்டு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இக்கல்லூரியில்  250 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த பயிற்சி கொடுத்து வருகிறோம்

    கே: புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்குவதில் உள்ள சவால்கள் என்ன?

    பொறியியல் கல்லூரியின் மீது செயற்கையான சில முரண்பாடுகளை தற்போது சிலர் உருவாக்கி வருகிறார்கள். இது என்ன வென்றால் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பதில்லை என்பது தான் அது.

    மாணவர்களின் சேர்க்கைக்கு அக்கரை கொள்ளும் நிறுவனங்கள் அவர்களின் திறமையின் மீது அக்கரை கொள்வதில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு.

    தற்போது தொழிற்துறையில் நாடு 7 சதவீதம் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு வெறும் 2 சதவீதம் தான் உயர்ந்து இருக்கிறது. இதை அவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    பொறியியல் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைகள் இருக்கிறது, இதை புதிதாக கல்லூரி தொடங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    புதிய புதிய சிந்தனைகள், நுணுக்கங்கள், எதிர்கால தேவைகள், படித்தவுடன் வேலை எவ்வாறு கொடுப்பது போன்றவற்றை கல்லூரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பொறியியல் துறை என்பது வாழ்க்கைக்கு உயிரியியல் துறை என்பதை கல்லூரிகள் மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் விளக்கிச் சொல்லுதல் வேண்டும்.

    இத்துறை படித்தால் இத்தகைய வேலைகள் இருக்கிறது, சுயமாக தொழில் தொடங்க என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது என்பதை நீங்கள் சொல்லி கொடுக்க வேண்டும்.

    கே: ஆசிரியர் மாணவரின் தொடர்பு எப்படியாக இருத்தல் வேண்டும்?

    ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று முன்னோர்கள் வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லி விடவில்லை. ஆசிரியர்  என்பவர் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஏணிப்படியாக இருத்தல் வேண்டும்.

    நான் நன்றாகத் தான் சொல்லிக் கொடுக்கிறேன், ஆனால் மாணவன் சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறான் என்று கூறினால் அவர் நல்லாசிரியர் அல்ல. புரியாத ஒரு பாடத்தை புரிந்து கொள்ள முடியாத ஒரு மாணவனுக்கு புரியும் படி நடத்துவது தான் ஒரு சிறந்த ஆசிரியர்.

    ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு வகுப்பில் ஒரு பாடத்தை நடத்தும் ஆசிரியர் ஒரு மணி நேரம் பாடத்தை நடத்தினால் அவர் சிறிதேனும் சக்தி இழந்தாக கருதக்கூடாது மாறாக அன்று முழுவதும் பணியாற்றுவதற்கு சக்தி பெற்றதாக கருத வேண்டும்.

    ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்கள் மீது அன்பும் நேசமும் வைத்திருந்தாலே அவர்கள் வெற்றி பெற்ற ஆசிரியர்களாக மாறிவிடுகிறார்கள். மாணவர்களின் பிரச்சனையை அதட்டிக் கேட்காமல் அன்பாகச் சொன்னால் அவன் வாழ்நாள் முழுவதும் தவறு செய்ய மாட்டான்.

    கே: மாணவர்களிடம் தங்களின் அணுகுமுறை?

    நான் ஒரு நாளும் இக்கல்லூரியின் தாளாளராய் என்னை தகவமைத்துக் கொண்டதில்லை. ஒவ்வொரு நாளும் வகுப்பிற்குச் செல்வேன். நான் கற்றதைப் பெற்றதை அவர்களிடம் போதிப்பேன்.

    ஆசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு கட்டுபடாத மாணவர்களை நானே நேரில் அழைத்துப் பேசுவேன். அவர்கள் என்னுடைய அறைக்கு வந்தவுடன் முதலில் அமரச் சொல்வேன் பிறகு நான் அமரும் இடத்தின் அருகிலேயே மாணவனை ஒரு நாற்காலி போட்டு அமர வைத்துப் பேசும் போது அவரின் பிரச்சனைகள் முழுவதும் சில சமயம் கண்ணீருடன் அவர்கள் சொல்லி விடுவார்கள்.

    அது மட்டுமின்றி எங்கள் கல்லூரியில் பயிலும் அத்துனை மாணவர்களிடமும் என்னுடைய தொலைபேசி எண் இருக்கும். ஏதேனும் மாணவனுக்கு தேவை என்றால் வாட்ஸ்அப் வழியாக எனக்கு தகவலை அனுப்பி விடுவார்கள். அதற்கான தீர்வை உடனே கண்டு விடுவேன்.

    கே: பிடித்த மனிதர்கள், படித்த புத்தகம் பற்றி?

    எனக்கு பிடித்த மனிதர்கள் என்றால் அது பெரியாரும், காரல் மார்க்ஸ் இருவரும் தான். ஏனென்றால் அவர்கள் இருவரும் உண்மையை மட்டுமே சொல்லி அதன் படி வாழ்ந்தவர்கள்.

    படித்த புத்தகம்  நேரு தனது மகளான இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள், திருக்குறள், பாரதியின் கவிதைகள் ஆகியவை நான் எந்நாளும் பாதுகாத்து வைத்துக் கொண்ட புத்தகம். தற்போதைய இலக்கியங்களில் கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம்.

    கே: இந்நிறுவனம் பெற்ற பட்டம் பாராட்டுகள் பற்றி?

    NBA என்று சொல்லக்கூடியதை கல்லூரித் தொடங்கிய எட்டு வருடத்திலேயே வாங்கினோம். இது இந்திய அளவில் மிகக் குறைந்த ஆண்டில் எங்கள் கல்லூரி தான் பெற்றிருக்கிறது.

    கல்லூரித் தொடங்கி 12 ஆண்டுகளில் எங்கள் கல்லூரி தன்னாட்சி பெற்று விட்டது.

    டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சிறந்த கல்லூரிக்கான விருதைக் கொடுத்து எங்களை கௌரவித்தது.

    கே: குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

    என் தந்தை திரு. செங்கோடக் கவுண்டர்,தாயார் திருமதி. பழனியம்மாள். என்னுடைய துணைவியார் திருமதி. ராஜேஸ்வரி, எங்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் தீபன் இவரின் மனைவி  மதுவந்தனி இவர்களின் ஒரு மகள் ஆதிரா. இளையமகன் சீலன் இவரின் மனைவி ஸ்ரீமதி இவர்களின் மகன் யுகன். இவர்கள் எல்லோரும் பள்ளி மற்றும் கல்லூரியை நிர்வகித்து வருகிறார்கள்.

    கே: எதிர்காலத்திட்டம் பற்றி?

    என்னுடைய எதிர்காலத்திட்டம் பெரிய அளவில் இருக்கிறது. அதை சிறிது சிறிதாக செய்து வருகிறேன்.

    இந்தக் கல்லூரியை வெகு விரைவில் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு நல்லதொரு கல்வியைக் கொடுக்க வேண்டும்.

    கே: தன்னம்பிக்கை வாசகர்ளுக்கு நீங்கள் கூறுவது?

    இவ்விதழை தொடங்கிய இல. செ. கந்தசாமி அவர்கள்  என்னுடைய கல்லூரி ஆசிரியர்.. இவர் எப்போதும் மாணவர்களையும், இளைஞர்களையும் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பார். அப்படித் தொடங்கியது தான் இந்த இதழ்.

    தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும். இவையின்றி எதுவும் சாதிக்க முடியாது. தன்னம்பிக்கைக்கும், தற்பெருமைக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

    தன்னம்பிக்கையோடு வாழ்வோம்…

    தரணியில் தனித்துவமாய் வாழ்வோம்…

    இந்த இதழை மேலும்

    ஹெப்படைட்டிஸ் ஏ (Hepatitis A)

    இந்நோய் தண்ணீரினால் பரவுக்கூடிய  மஞ்சள்காமாலை நோய் ஆகும்.

    நோய் தொற்றுக் கிருமி

    ஹெப்படைட்டிஸ் ஏ என்ற வைரஸ் ஆர்.என்.ஏ (RNA) வைரஸ். இது ஹெப்பட்டோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் பொதுவாகக் காணப்படுகிறது. குறைவான தன்சுத்தம், சுத்தமில்லாத நீர், சுற்றுசூழல் மாசுபாடு, தவறான உணவுமுறை பழக்கவழக்கத்தினால் அதிகமாகக் காணப்படுகிறது.

    தொற்றும் முறை

    • பாதிக்கப்பட்டவரின் மலம் வழியாகப் பரவுகிறது.
    • சுத்தமில்லாத உணவு மற்றும் நீர் மூலமாகப் பரவுகிறது.

    நோய்க்கிருமி தாக்கியபின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்காகும் காலம் (Incubation Period)

         15 – 50 நாட்கள்

    அறிகுறிகள்

    • மஞ்சள் நிற மலம் மற்றும் சிறுநீர்
    • மஞ்சள் நிறத்துடன் கூடிய கண், நகம், உள்ளங்கை, உள்ளங்கால்
    • காய்ச்சல், தலைவலி
    • பசியின்மை, வாந்தி எடுத்தல்
    • கல்லீரல் வீக்கம்
    • மண்ணீரல் வீக்கம்
    • வயிற்று வலி
    • எடை குறைவு

    சோதனை முறை

    • சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை
    • புரோத்ரோம்பின் நேரம், பிலிரூபின்,  இரத்தத்தில் உள்ள புரதம் அளவு (ஆல்புமின்) சர்க்கரை கல்லீரல் நொதிகளின் அளவு(liver enzymes).
    • இரத்தத்தில் ஹெப்படைட்டிஸ் ஏ வைரஸ் தொற்று கிருமி உள்ளதா என கண்டறியப்படுகிறது.

    சிகிச்சை முறை

    • நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தல்
    • கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளைக் கொடுத்தல்
    • நீராகரங்களை அதிகமாகக் கொடுத்தல்

    தடுப்பு முறை

    • திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுத்தல்
    • கிராமப்புற மக்களுக்கு இந்நோயைப்பற்றி விழிப்புணர்ச்சி கொடுத்தல்
    • ஹெப்படைட்டிஸ் அ தடுப்பூசி அளித்தல்

    ஹெப்படைட்டிஸ் பி

    (Hepatitis B)

    இந்நோய் இரத்தத்தினால் பரவுக்கூடிய  மஞ்சள்காமாலை நோய் ஆகும்.

    தொற்று நோய் கிருமி

    ஹெப்பட்டைட்டிஸ் பி வைரஸ் ஒரு  டி.என்.ஏ (DNA) வைரஸ் ஆகும். இது ஹெப்பெடுனா (Hepadna) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

    தொற்றும் முறை

    பாதுகாப்பற்ற இரத்தம் செலுத்தல் முறை மூலமாகப் பரவுகிறது.

    நோய்க்கிருமி தாக்கியபின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்காகும் காலம் (Incubation Period) 50 – 180 நாட்கள்

    அறிகுறிகள்

    • முதலில் கல்லீரல் வீக்கம்
    • கல்லீரல் புற்றுநோய்
    • உடல் சோர்வு, எடை குறைவு
    • பசியின்மை, வாந்தி எடுத்தல்
    • காய்ச்சல், தலைவலி
    • வயிற்றுவலி

    சோதனை முறை

    • சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை முறை.
    • பிலிரூபின், கல்லீரல் நொதிகள், புரோத்ரோம்பின் நேரம், இரத்தத்தில் புரதம் மற்றும் சர்க்கரை அளவு.
    • இரத்தத்தில் ஹெப்படைட்டிஸ் பி வைரஸ் தொற்று கிருமி உள்ளதா என கண்டறியப்படுகிறது.

    சிகிச்சை முறை

    • நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தல்
    • நோயாளிக்குத் தடுப்பூசி ஹெப்படைட்டிஸ் பி அளித்தல்.
    • இந்நோயைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி தூண்டுதல்.

    தடுப்பு முறை

    • குழந்தைகளுக்கு ஹெப்படைட்டிஸ் பி தடுப்பூசி போடுவதின் மூலம் பிற்காலத்தில் இந்நோய் வராமல் தடுக்க இயலும்.
    • இரத்தம் செலுத்தப்படும் முன்,  இக்கிருமி அந்த இரத்தத்தில் உள்ளதா பரிசோதனை இரத்த வங்கி செய்வதன் மூலம் பரவுத்தலைத் தடுக்கலாம்.

    இந்த இதழை மேலும்

    நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள்- நல்ல விஷயங்கள் நம்மை தேடி வரும்

    நம் மீதான நம்பிக்கை நம்மை அழகாக்குகிறது. ஒரு நாள் நம் இலக்கை நாம் அடைவோம். நமக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களிருந்து இடர்பாடுகளிலிருந்து சோகங்களிலிருந்து மீண்டு எழுவதுதான் கதையின் தொடக்கம். நாம் இலட்சியத்திற்க்காக வாழும் போது நமது கனவுகள் நனவாகிறது.

    வாழ்வில் மிகப் பெரிய துயரங்களை எதிர்பாராத கஷ்டங்களை இன்னல்களை சந்திக்கும் நிலை வரலாம். வாழ்வில் தென்றல் மட்டுமல்ல. ஒரு நாள் புயலும் வீசக்கூடும்.  அது சூறாவளியாகவும் இருக்கலாம். நம்மை விழுங்க சுறாக்களும்; திமிங்கிலங்களும்  கூட்டனி சேரலாம். உச்சியிலிருந்த     நாம்  படுபாதாளத்தை நோக்கி திடிர் சரிவை சந்திக்கலாம். நாம் இனி அவ்வளவுதானா? என்ற நிலையை மனிதன் சந்திக்கும் நிலை ஏற்படலாம். கவலைகள் பெருகி அங்கு தொடர்ந்து இருப்பதற்கு அச்சப்படும் நிலை ஏற்படலாம். அப்போது கூட நம்பிக்கையை கைவிடாமல் இருக்கும்போது யாரோ ஒருவர் நமக்கு கைக்கொடுக்க முன் வருகிறார், முடிவுரை அல்ல. அது தொடக்கம். நம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் போதுதான் நாம் மேன்மை அடைகிறோம். நன்மதிப்பு பெறுகிறோம். நற்குணங்களை உறுதியாக கடைப்பிடிக்கின்றோம். விலை மதிப்பற்றவர்களாக மாறுகிறோம். உயர்நிலைக்கு தகுதியுடையவர்களாக மாறுகிறோம்.

    வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சங்கடங்கள், கஷ்டங்கள், தடைகள், தொல்லைகள், எல்லாம் தற்காலிகமானவை. நம்பிக்கையுடன் நாம் தொடரும் போது நமக்கு வெற்றி வசப்படுகிறது.

    நமது மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்பும் போது குப்பைகள் களையப்படுகிறது. மனதில் ஆயிரம் கெட்ட எண்ணங்களுடன் உலாவும் மனிதனால் சமுதாயத்திற்கு கெடுதல்களும், துன்பங்களும் ஏமாற்றங்களும், அவமானங்களும் சிரமங்களும்தான் ஏற்படுகிறது.  சமுதாயம் இருளடைகிறது. ஒரு நல்ல லட்சியத்துடன் அதனை அடைவோம் என்கிற நம்பிக்கையுடன் செயல்படும் போது சமுதாயத்திற்கே வெளிச்சம் ஏற்படுகிறது.

    கணவனால் கைவிடப்பட்டு குழந்தைகளுடன் போராடும் பெண்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் போரட்டம்தான். ஜிம்னாஸ்டிக் செய்யும் பெண்களைப் பார்க்கிறோம். எப்படியெல்லாம் உடலை  ரப்பர் போல் வளைத்து அரங்கத்தில் செய்து காட்டுகிறார்கள். முயற்சியும் நம்பிக்கையும்தான் செய்ய வைக்கிறது.

    நம்பிக்கை என்பது சாதாரண உணர்வல்ல. அது நமக்கு ஒரு உத்வேகத்தை உற்சாகத்தை தரவல்லது. இன்று உன்னதமான நிலையில் இருப்பவர்கள் எல்லாம் ஓரு காலத்தில் வலுவான நம்பிக்கையை மனதில் கொண்டு உழைத்தவர்கள்தான். அதன் பிரதிபலன்தான் இன்றைய அவர்களது இமாலய பிம்பங்கள்.

    முதல் முயற்சியில் யாருமே அதி புத்திசாலிகளோ, குறைபாடுகளே இல்லாதவர்களோ அல்ல. முதல் சுற்றில் தடுமாறி விழுந்தாலும், சில பாடங்களை கற்றுக் கொள்கிறார்கள். எல்லோருமே போராடுகிறார்கள்தான். பிரச்னைகள் வேண்டுமானால் வேறானதாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் போராடுபவர்களும் உள்ளனர். நம்பிக்கையால் முயற்சியால்; எழுந்து நிற்கிறார்கள். வாழ்க்கையை அழகாக்கி கொள்கிறார்கள். மற்றவர்கள் நம் திறமையை சந்தேகித்தாலும், நாம் நம் மீதான நம்பிக்கையை இழக்காமல் சாதிக்கும் போது நம் குடும்பம் பெருமை கொள்கிறது. நமது அளப்பரிய சக்தியை தவறான விஷயங்களில் விரயம் செய்யக் கூடாது. ஒவ்வொரு துறையிலும் மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் உயரங்களை தொட்டவர்கள் இருக்கிறார்கள். நம்பிக்கை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுதான் சாத்தியமாக்கியது.

    எல்லா சமயங்களிலும் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருப்பது சாத்தியமானதல்ல. எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்த இடத்திலேயே இருப்பவர்கள் சாதாரணமானவர்கள். வாழ்க்கை அழகானது. நாம் வாழ்வில் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம். நமது லட்சியங்களை அடைய எதுவும் நம்மை தடுக்காது.

    சாதாரண மனிதன் வாழ்வை அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டு தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி நேரத்தை பணத்தை விரயமாக்குகிறான். கால்வாயை நீந்தி கடக்கிறார்கள். அக்ஸிஜன் எடுத்துச் செல்லாமல் சிகரத்தை தொட்டவர்கள் உள்ளனர். எந்த வயதிலும் சாதிக்கலாம்.

    இலக்கை அடைந்து விட்டோம். அடுத்தது சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும். அப்போதுதான் நமது சடலத்தை தூக்க நாலு பேர் வருவார்கள். யாருக்கும் எந்த உதவியையும் செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்கள், உதவி செய்பவர்களையும் தடுத்தவர்கள் டைட்டானிக் கப்பல் போன்று ஒரு நாள் திடீர் சரிவை சந்திக்கிறார்கள். எதிர்மறை எண்ணங்கள் சறுக்கி விடுகிறது.

    அறிவியல் விலகிய இடத்தில் நம்பிக்கை தொடங்குகிறது. அறிவியல் நெருங்கிய இடத்தில் நம்பிக்கை விலகுகிறது. மிகப்பெரிய அறிவுக் கூர்மை உடையவர்கள்கூட நம்பிக்கையின்மையால் முயற்சியை கைவிட்டு தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களால் விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் மிகப்பெரிய சிகரங்களை தொட்டு இருப்பார்கள். பல கனவுகளை கொல்வது சந்தேகம்தான். தோல்வியல்ல.

    உண்மையிலேயே நாம் நம்புவதால்தான் பல விஷயங்கள் எப்போதும் நடக்கின்றன. நம்பிக்கைதான் நடக்க வைக்கிறது. அவன் நாசமாய் போய் விடுவான். அவன் உருப்பட மாட்டான். சிறைச்சாலையில் கம்பி எண்ணுவான். என்றெல்லாம் சிலர் திட்டுவார்கள். அவருக்கு கருநாக்கு. அவர் சொன்னால் பலித்து விடும் என்பார்கள். அதாவது எதிர்மறையாக நடக்கும் என்று உறுதியாக நம்பும் போது அது பலித்து விடுகிறது.

    நம்பிக்கையால்தான் மனிதன் கட்டமைக்கப்படுகிறான். எப்படி நம்புகிறானோ அப்படி ஆகிறான். நம்பிக்கையை கட்டமைக்க பல வருடங்கள் ஆகிறது. அதை தகர்க்க சீர் செய்ய இயலாத அளவுக்கு சிதைக்க சில நொடிகளே போதுமானதாக உள்ளது. நம்மால் முடியும் என்று நம்பும் போதே நமது இலக்கை நோக்கி பாதி தூரம் நெருங்கி விடுகிறோம்.  அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றவர்கள் பெரிய வாழ்க்கைக்கு தகுதிபடைத்தவர்கள்.

    நம்பிக்கையுள்ள ஒரு மனிதன் விருப்பம் மட்டுமே உள்ள 99 நபர்களுக்கு சமமானவன்.

    எனக்கு என்ன நேர்ந்ததோ அது நானல்ல. நான் என்னவாக வேண்டும் என்று தேர்வு செய்தேனோ அதுதான் நான்.

    நம்மை ஏற்க மறுப்பவர்கள், நம்மை தள்ளுபவர்கள், நம்மை நிராகரிப்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு மிகச் சிறந்த வேறு பாதையை உருவாக்க காரணமாகி விடுகிறார்கள்.

    நம்பிக்கை என்கிற மந்திர சாவி நமது கனவுகளை திறந்து விடுகிறது. மற்றவர்கள் சந்தேகம் கொள்ளும் போது நீ நம்பு. மற்றவர்கள் உழைக்கத் தயங்கும் போது நீ உழை. மற்றவர்கள் கேளிக்கைகளில் முழ்கும் போது, நி வியர்வையில் குளி. மற்றவர்கள் வெளியேறும் போது, நீ தொடர்ந்து போராடு. உறுதியுடன் நிமிர்ந்து நில். மற்றவர்கள் தோல்வியடையும் போது நீ வெற்றியடைவாய். இவையெல்லாம் எப்படி நடக்கும் என்று தெரியாது, ஆனால், அவையெல்லாம் நடக்கும் என்று நம்புகிறோம் அல்லவா அது தான் நம்பிக்கை.

    நெருப்பு தங்கத்தை பரிசோதிக்கிறது. கஷ்டங்கள், துரதிர்ஷ்டங்கள் மனிதனின் பலத்தை சோதிக்கிறது.

    வெற்றி பெறுவோமா என்கிற பயம் தேவையில்லை. நம் இதயத்தில் கனவுகள் வளரட்டும். நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாத மாபெரும் சக்தி. அது நம் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் வெளிப்படுகிறது. நம்முடைய இன்றைய நிலை நமது வலுவான நம்பிக்கையின் பிரதிபிம்பம்தான்.

    நாம் முயற்சியை கைவிட நினைக்கும் போது ஓன்றை மறக்கக் கூடாது. இன்று உணரும் வலி நாளைய வாழ்விற்கு தேவையான  உனது வலிமையாக, பலமாக, எதிர்ப்பு சக்தியாக மாறும். கடந்த காலத்தை விட்டு தள்ள வேண்டும். நாம் வளர்வதை அவை தடுக்கப் போவதில்லை. நாம் ஒரு நாள் இவ்வுலகத்தை விட்டு செல்லப் போகிறோம். அதை நம்புகிறோம். இருக்கும் போது நமக்கு உதவியவர்களுக்கு நம்மை உயர்த்தியவர்களுக்கு நன்றியுணர்வு இல்லாமல் விசுவாசம் இல்லாமல் இருக்கலாமா? மற்றவர்களை தமது புத்திகூர்மையால் ஏமாற்றி வாழ்வது ஒரு வாழ்வா? அடுத்தவர் குடும்ப விஷயங்களில் தலையிட்டு வரம்பு மீறி நடந்து கொள்ளலாமா? பொறுப்பில்லாமல், சோம்பேறித்தனமானவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை.

    உன்னுடைய பங்களிப்பை தந்து கொண்டிருப்பதை கடவுள் பார்க்கிறார். உனக்கு கிடைத்ததை எவ்வாறு மேன்மைப்படுத்த உழைக்கிறிர்கள். வியர்வை சிந்துகிறிர்கள். அவரது பங்களிப்பை தருகிறார். அப்போது கதவுகள் திறக்கப்படுகின்றன. அதை எந்த மனிதனாலும் மூடவோ தடுக்கவோ முடியாது.

    திரு.இறையன்பு இஆப அவர்கள் அழகாகச் சொல்லுவார். பால் பாத்திரம் அடுப்பில் இருக்கிறது. சூடேறிக் கொண்டு இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பால் பொங்குகிறது. தயிர் கடைந்து கொண்டே இருக்கிறோம். தொடர்ந்து கடையும் போது ஒரு கட்டத்தில் திரட்சியாக வெண்ணெய் திரள்கிறது. அதாவது, ஒரு இலக்கை நோக்கி நமது உழைப்பை முயற்சியை நம்பிக்கையுடன் தொடர்கிறோம். ஒரு கட்டத்தில் அதன் பலன் நம்மை நோக்கி பொங்கி வருகிறது.

    நம்பிக்கை என்பது வாழ்வில் மிகவும் அற்புதமான விஷயம். விட்டு விடலாம். முயற்சியை விட்டு விடலாம் என பல சந்தர்ப்பங்களில் எண்ணத் தோன்றும். தொடர்ந்து கடக்கும் போது அந்த அற்புதம் நிகழும். உங்களால் முடியாது என்று சொல்ல பலர் இருக்கிறார்கள். அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை. உங்கள் விடாமுயற்சியும், நம்பிக்கையும் கடவுளும்தான் தீர்மானிக்கிறார்கள்.

    நமது கண்ணீர் துடைக்கப்படும். நமது எதிர்பார்ப்பு நிறைவேறும்.  நமது வலி காயங்கள் ஆறி விடும். நம்மை ஒருவன் கண்ணால் பார்க்கிறான். நமது கோரிக்கைகளை காதால் கேட்கிறான். நமது வலியை பார்த்து அவன் அமைதியாய் இருக்க வில்லை. அவன் பார்க்கிறான். அவன் கேட்கிறான். அவன் உனக்கு தருகிறான். அவன்தான் மனித உருவில் இருக்கும் தெய்வம்.

    வாழ்வில் கடும்புயல் நம்மை தாக்கலாம். நம்மை தகர்க்கலாம். நாம் போராடும் போது, தத்தளிக்கும் போது, நமக்கு கை கொடுக்க, ஆதரிக்க, வழிகாட்ட ஒருவன் நிச்சயம் ஒவ்வொருவர் வாழ்விலும் வருவதுண்டு. வருங்காலத்திற்கு நம்மை தயார் படுத்திக் கொள்கிறோம். நமது கவலைகள், துன்பங்கள், தடைகள், இடையூறுகள் முடிவு தெரியாத பிரச்னைகள் நம்மை சூழ்ந்து இருக்கின்றன. நம்பிக்கையால் நம்மை புதுப்பித்துக் கொள்கிறோம். நம் மனதை நம்பிக்கையால் நிரப்பிக் கொள்கிறோம். தடைகள், துயரங்கள், இடையூறுகள், கவலைகள் நாளடைவில் மெல்ல மெல்ல விலகத் தொடங்குகின்றன. பாதுகாப்பாக உணரத் தொடங்குகிறோம். நமது வாழ்க்கையில் சரியான மனிதர்கள் நமக்கு ஆறுதல் தருகிறார்கள். நம்மோடு இருக்கிறார்கள். தவறான மனிதர்கள் நம்மை கடந்து செல்கிறார்கள். சரியான மனிதர்களின் அன்பும் வழிகாட்டுதலும் நம் இதயத்தை மகிழ்விக்கிறது.

    சாக்கடை, குப்பை, அழுக்கு எண்ணங்களை நீக்கி மனதை தூய்மைப் படுத்துங்கள்.  மிக மேன்மையான உயர்ந்த லட்சியத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள். சிகரங்கள் உங்கள் வசம்;.

    இந்த இதழை மேலும்

    கடனே உன்னை வசமாக்குவேன்

    N. ஈஸ்வர கிருஷ்ணன்,

    Chartered Accountant

    இன்றைய சூழ்நிலையில் கடன் என்பது வியாபாரத்தில் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகத் திகழ்கிறது. வியாபாரத்தில் வெற்றியை ஈட்ட வேண்டுமெனில் ஒரு வியாபாரிக்கு கடனைக் கையாள்வது என்பது ஒரு முக்கியமான திறமையாகக் கருதப்படுகிறது. ஆனால்,  பெரும்பாலான தொழில் முனைவோருக்கு கடனை கையாளும் ஆற்றல் அவ்வளவு எளிதாக வருவதில்லை.

    இன்றைய மாறி வரும் பொருளாதார சூழலில் பல சிறு மற்றும் குறு வியாபாரங்கள் நஷ்டத்தைச் சந்திக்கும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதை நாம் அனைரும் நன்கு அறிவோம். பல நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திப்பதற்கு சரியான நிதி மேலாண்மையைப் பின்பற்றாததே காரணம் எனக் கூறுவேன். அதிலும் சரியான கடன் மேலாண்மை கொள்கைகள் மற்றும் யுக்திகள் செயல்படுத்தப்படாததே ஒரு முக்கியமான காரணமாக அமைந்து விடுகிறது.

    எனவே, வியாபார பயன்பாட்டிற்காக கடன் வாங்கும் தொழில் முனைவோர் வாங்கிய கடனை சிறப்பான முறையில் கையாளுவதற்கான சில அம்சங்கள் குறித்தும் கடன், வட்டி சுமையைக் குறைப்பதற்கான சில ஆலோசனைகள் குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.

    கடனுக்கான தேவையைப் புரிந்து கொள்ளுதல்:

    வங்கியில் கடன் வாங்குவதற்கு முன், தேவை அறிந்து கடன் வாங்குவது மிகவும் முக்கியமான விஷயமாகும். வங்கிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இன்று ஒவ்வோருவர் வீட்டு வாசல் தேடி வந்து கடன் வழங்கும் ஒரு விநோத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    தொழில் முனைவோருக்கான மூலதனத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாம் வகை நிரிந்தர மூலதனம் (Fixed capital), இரண்டாம் வகை சூழலும் மூலதனம் (Working capital). நிரந்தர மூலதனம் என்பது நாம் தொழில் நாம் தொழில் தொடங்க தேவையான கட்டுமான தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படும் மூலமனமாகும். தொழில் தொடங்க தேவையான இடம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் இதர தேவைகள் அத்தொழிலுக்கு இன்றியமையாத தேவையாகும்.  மேலும் புதிதாக தொழில் தொடங்குவோரோ அல்லது தொழில் அபிவிருத்தி செய்பவரோ தொழில் தொடங்குமுன் நிரந்தரத் தேவைக்காக கணிசமான ஒரு தொகையை முதலீடாகக் கொண்டு வர வேண்டும்.

    சூழலும் மூலதனம் என்பது தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உற்பத்தி செலவு, தொழிலாளர்களுக்கான கூலி, சரக்குகளின் இருப்பு தேவைகள் மற்றும் விற்பனை கடன் போன்ற விஷயங்களுக்காக தேவைப்படும் மூலதனமாகும். இந்த வகை மூலதனம் தொழிலின் அளவைப் பொறுத்து மாறுபடும். அதே போல வெவ்வேறு காலகட்டங்களில் இதன் தேவைûயானது மாறிக் கொண்டே வரும் மேலும் வியாபாரத்தின் வரவு செலவு நிலைக் கேற்ப சுழன்று கொண்டே இருக்கும்.

    எனவே, தொழில் முனைவோர் தங்கள் நிதி தேவையைச் சரிவர புரிந்து கொள்ள வில்லையென்றால் கடன் பெறுவதில் அவர்களுக்கு குழப்பம் வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நிரந்தர மூலதனத்திற்கான தேவைக்கு நெடுங்கால கடன் வசதியை நாட வேண்டும். ஏனெனில் நிரந்தர தேவைகள் கணிசமான தொகையாக இருக்கும். அதை திருப்பிச் செலுத்த கொஞ்சம் அதிகமான கால அவகாசம் தேவைப்படும். அதே போல சுழலும் மூலதன தேவைக்குக் குறுகிய கால கடன் வசதியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இவ்வகை நிதி தேவைகளை தொழில் புழங்கும் பண சுழற்சியைக் கொண்டு செலுத்திவிடலாம்.

    நிதி இருப்பு நிûமை குறித்து ஆய்வு

    கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்கு முன் ஒருவர் தன் தொழிலின் நிதி நிலவரம் குறித்தும், நிதி தேவை மற்றும் நிதி பற்றாக்குறை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் தொழிலின் தற்போதைய நிதி கையிருப்பு, முதலீட்டாளரின் நிதி பங்களிப்பு, எதிர்கால பணவரவு செலவு குறித்த பட்டியல், எதிர்கால கட்டுமான பணிகளுக்கு தேவையான நிதி தேவைகள், எதிர்கால வர்த்தக தேவைகளுக்கான நிதி தேவைகள் குறித்த ஆய்வு மேற்கொள்வது மிக முக்கியமானதொரு பணியாகும்.

    இந்த ஆய்வின் இறுதியில் நிதி நிலவரம் குறித்த ஒரு முழுமையான புரிதல் ஏற்படும். முதலீட்டாளர்கள் அல்லது உரிமையாளர்கள் எவ்வளவு நிதி திரட்ட வேண்டும் மற்றும் வங்கிகள் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு தொகை கடனாகப் பெற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த ஆய்வு உதவியாக இருக்கும்.

    முறையான ஒரு ஆய்வை  மேற்கொள்ளாமலோ அல்லது சரிவர மேற்கொள்ளப்படாத ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளோ தொழில் முனைவோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தம் நிதி தேவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாங்கப்படும் கடன் சுமையை சமாளிப்பதென்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. உதாரணமாக கட்டுமான தேவைகளை உணராமல் குறுகிய கால அடிப்படையில் வாங்கப்படும் கடன் சுமை, அந்த வியபாரிக்கு ஒரு நிதி முடக்கத்தை ஏற்படுத்தி, கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை உண்டாக்கும். பல தொழில்கள் கடன் சுமையால் முடங்கி போவதற்கு இம்மாதிரி சரியான ஆய்வை மேற்கொள்ளாது எடுக்கப்படும் முடிவுகளே காரணமாகும்.

    திட்டமிட்டு செயல்படுதல்

    கடன் வாங்குவதற்கு முன், ஒரு முழுமையான நிதி திட்டம் (Financial Plan) தயாரிக்க வேண்டும். இது அந்நிறுவனத்தின் வருங்கால வரவு செலவு குறித்தும் கடன் மற்றும் வட்டியை திருப்பி செலுத்த தேவையான நிதி வளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட முன் கணிப்பு திட்டம் ஆகும்.

    அந்நிறுவனத்தின் வருங்கால விற்பனை, கொள்முதல், இதர செலவுகள், கடனுக்கான வட்டி, கடன் அல்லது தவணையை செலுத்துவதற்கு தேவையான நிதி வளம், உரிமையாளருக்கு வழங்க வேண்டிய சம்பளம், லாப தொகை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தின் வருங்கால லாப நஷ்ட கணக்கை கணித்து ஒரு திட்டத்தைத் தீட்ட வேண்டும்.

    குறைந்தது அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்காவது ஆண்டு வாரியாக இத்திட்டத்தை தயார் படுதிடல் வேண்டும். எந்த ஒரு செயலையும் முழுமையாகத் திட்டமிட்டு செயலாற்றினால் அதில் வெற்றி என்பது நிச்சயம். அது போல முறையான நிதி திட்டம் தீட்டுவதால் ஏற்படும் தெளிவு மற்றும் நன்மைகள் அந்நிறுவனத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் . குறிப்பாக கடன் வாங்கும் பொழுது அக்கடனின் வட்டி சுமை மற்றும் தவணைகளை சரியாக கையாள இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.

    கடன் பயன்பாடு குறித்த அறிதல்

    வாங்கிய கடனை எந்த நோக்கத்திற்காக  வாங்குகிறோமோ அந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இன்றைய எதார்த்த உலகில் கடன் வாங்குவதற்கு பல பொய்கள் சொல்லி கடன் தொகை பெற்ற பிறகு அத்தொகையை  வேறு நோக்கத்திற்காகவோ அல்லது உரிமையாளரின் தனிப்பட்ட தேவைகளுக்காகவோ பயன்படுத்தவது பரவலான விஷமாகி விட்டது.  இப்படி தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பணம், குறித்த நேரத்தில்  நிறுவனத்திற்கு போதிய நிதி வளத்தை கொடுக்காது.

    நிறுவனத்தின் நிதி நிலைமையில் ஒரு மந்த நிலையை பல நேரங்களில் உருவாக்கிவிடும். கடன் வட்டியையோ அல்லது தவணையையோ திரும்ப செலுத்துவதில் ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கிவிடும். எனவே தொழில் முனைவோர் கடன் வாங்கும் போது அதன் உண்மையான நோக்கத்தை நன்கு தீர்மானித்து கடன் தொகையை உண்மை நோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டும்.

    கணக்கு சரிபார்த்தல்

    ஒவ்வொரு நிறுவனமும் சரியான நேர்த்தில் லாப நஷ்ட கணக்கை சரி பார்த்தல் வேண்டும். பல நேரங்களில் தொழில் முனைவோர் தங்கள் வியாபாரம் குறித்த கணக்கை பராமரித்தல் மெத்தனம்  காட்டுகிறார்கள். பலர் விற்பனையிலோ, உற்பத்தியிலோ காட்டும் தீவிரத்தை கணக்கு வழக்குகளில் காட்டுவதில்லை என்பது கவலைக்குரியது.

    எப்படி ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் முக்கியமோ அப்படி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் நிதி ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எப்படி பரிசோதனை இன்றி நமது தேக ஆரோக்கியத்தை கண்டறிய முடியாதோ அப்படி கணக்கை சரி பார்க்காமல் ஒரு நிறுவனத்தின் நிதி நிலவரத்தை கண்டறிய முடியாது. வியாபாரத்தில் ஏற்படும் நிதி சிக்கல்களை சரியான நேரத்தில் கண்டறிந்தால் அதற்கான மாற்று ஆலோசனைகளையும், திட்டங்களையும் சரியான நேரத்தில் கண்டறிந்தால் அதற்கான மாற்று ஆலோசனைகளையும், திட்டங்களையும் சரியான நேரத்தில் செய்து பல சிக்கல்களிலிருந்தும் நம் தொழலை காப்பாற்றிக் கொள்ளலாம்.

    உரிய நேரத்தில் வட்டியை செலுத்துவது கணக்குகளை சரியாக பராமரிப்பது, தணிக்கைக்கு அவ்வப்போது கணக்கை உட்படுத்தி சரி பார்ப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    கடன் அன்பை முறிக்கும் என்றும், கடன் இல்லாத வாழ்க்கையே சிற்ந்த வாழ்க்கை என்றும் நம் முன்னோர்கள் வாழ்ந்து சென்றிருக்கலாம். ஆனால், இன்றைய போட்டியமான சூழலில் தொழில் வளர்ச்சிக்கும், போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கும் கடன் வாங்குவது என்பது அவசியமான தேவையாகிறது. சமயோஜிதமும் புத்திசாலித்தனமுமே இன்றைக்கு ஒருவரை வெற்றியாளராக மாற்றுகிறது. எனவே மேற்கூறிய கருத்துக்களைக் கடைபிடித்து உங்கள் தொழிலின் கடன் சுமையை நிர்வகிக்கக் கற்றுக் கொண்டால் எந்த ஒரு கடன் சுமையையும் நீங்கள் இலகுவாக கடந்து செல்லலாம்.

    இந்த இதழை மேலும்

    வெற்றிலை இரகசியம்

    வெற்றி தரும் இலைதான் வெற்றிலை என்பதைப் புரிந்தவர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிகரமான பயணங்கள் அமையவும் வெற்றிலை உதவியாக இருக்கும். வெற்றிலையை மூன்று வகைகளில் நாம் பயன்படுத்தலாம். ஒன்று வெறும் வெற்றிலையை மெல்லுவது. இதனால், வெற்றிலையின் காரத்தன்மை கல்லீரலின் விஷத்தை வெளியேற்றி, அதன் நொதிகளைத் தூண்டி புரதம் மற்றும் கொழுப்புச் செரிமானத்தை தரமாகும். இரண்டாவது உபயோக முறையானது  வெற்றிலையைப் பாக்கோடு சேர்த்து மெல்லுவதாகும். இதனால், மண்ணீரலின் விஷங்கள் வெளியேற்றப்பட்டு, அதன் நொதிகள் தூண்டப்பட்டு மாவுச் சத்து செரிமானம் தரமாகும்.  மூன்றாவது உபயோக முறையானது வெற்றிலையோடு  பாக்கு மற்றும் சுண்ணாம்புத் தடவி மெல்லுவதாகும். இதனால், மண்ணீரல் மற்றும் கல்லீரலின் விஷங்கள் வெளியேற்றப்பட்டு, மாவுச் சத்து, புரதம் மற்றும் கொழுப்புச் செரிமானம் தரமாகும்.

    வெற்றிலைக்கு பொதுவாக உடலின் விஷங்களை வெளியேற்றும் தன்மை இருக்கிறது. வெற்றிலையின் காம்பை குழந்தையின் ஆசன வாயில் சொருகினால், குழந்தையின் மலச்சிக்கலும் வயிற்று உப்புசமும் சரியாகிவிடும். வெற்றிலையோடு இரண்டு மூன்று மிளகையும் சேர்த்து மென்றால், நம் இரத்தம் சுத்தமாகும். அதேபோல் வெற்றிலையோடு வால் மிளகைச் சேர்த்து மென்றால், தொண்டைப்புண் குணமாகும்.

    வெற்றிலையின் சாற்றுக்கு செரிமான நொதிகளை சுரக்கத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதுபோலவே வெற்றிலைக்கு உண்ட உணவின் விஷங்களையும் வெளியேற்றும் சக்தி இருக்கிறது. நாம் பயணங்களில் எவ்வளவுதான் பார்த்து பார்த்து சாப்பிட்டாலும் நம்மையும் மீறி உடலுக்குக் கெடுதலான விஷப்பொருட்கள் சேர்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. அப்படி தெரிந்தோ தெரியாமலோ சேர்ந்துவிட்ட விஷங்களை நம் வெற்றிலை மிக இலகுவாகவும் உடனடியாகவும் வெளியெற்றச் செய்யும்.

    பயணங்களில்  அசைவ உணவுகளை சாப்பிட்டாலும், அல்லது சற்று அதிகப்படியான உணவைச் சாப்பிட்டாலும், அவை உடனடியாகச் செரிக்க, வெற்றிலையோடு சுண்ணாம்பு மற்றும் பாக்கு சேர்த்து மென்றால் போதும். நாம் சாப்பிட்ட அசைவ உணவின் அதிகப்படியான கழிவுகள் இலகுவாக மறுநாள் வெளியேறிவிடும்.

    வெற்றிலையின் சாறு நம் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் கொண்டுள்ளது.  இதனால், பயணங்களில் தெரியாமல் சமையல் சோடா சேர்த்த சாப்பாட்டை சாப்பிட்டிருந்தாலும், அதனை முறித்து வெளியேற்றும் திறன் நம் வெற்றிலைக்கு உண்டு.

    வெற்றிலையோடு புகையிலை சேர்ப்பதுதான் உடல் நலனுக்கு கேடாக விளையும்.  அதே போல், வெற்றிலையோடு போதை வஸ்த்துக்களை சேர்த்து தரப்படும் பீடா வகைகளும் நம் வயிறு மற்றும் உடலைக் கெடுக்கும் வகையறாவே. அதுவே, வெற்றிலையோடு பாக்கு, சுண்ணாம்பு, கற்கண்டு,  பழத் துண்டுகள், சோம்பு, கிராம்பு ஆகிய இயற்கை மருத்துவ பொருட்களை மட்டும் சேர்த்து  தரப்படும் பீடா வகைகள் உண்ட உணவைச் செரிக்க உதவியாக இருக்கும்.

    வெற்றிலையோடு சேர்க்கப்படும் பாக்கு மற்றும் சுண்ணாம்பு அளவாக இருப்பது நல்லது. சுவைக்கு அடிமைப்பட்டு பாக்கை கூடுதலாக சேர்த்து மெல்வது இரத்த சோகையை உண்டுபண்ணிவிடும். அதேபோல், காரம் அதிகம் வேண்டும் என்று சுண்ணாம்பை அதிகம் தடவி வெற்றிலை மெல்வதும் வயிற்று அல்சர் மற்றும் வாய்ப்புண்ணுக்கு அடிகோளும்.

    அப்புறம் பயணங்களில் வெற்றிலை போடுவதால் கிருமித் தொற்று நிச்சயம் ஏற்படாது.  வெற்றிலையின் சாறு ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் விளங்குகிறது. வெற்றிலைப் போடுவதால், நம் எலும்புகள் உறுதிப்படும். மூளை விழிப்பாக இருக்கும். மூளை விழிப்பாக இருப்பதால் நாம் சாதுர்யமாக செயல்பட்டு வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க வழி கிடைக்கும் ஆகையால், வெற்றிலை என்று இதற்குப் பெயர் சூட்டியுள்ளனர். வெற்றி வேண்டுவோர் வெற்றிலையைக் கைவிடமாட்டார்.

    இந்த இதழை மேலும்

    உள்ளுணர்வு

    “இன்னிக்கு கிளம்பும்பொழுதே கால்தடுக்கிவிடுது! ரொம்ப நல்ல சகுனம் போல…  ஐம்பது இரன்னாவது அடிப்போம்”

    இது ஒரு உள்ளுணர்வு…

    “இன்னிக்கு போகும்பொழுதே கால்தட்டிவிடுதே!  சகுனமே சரியில்லையே…  ஊத்தி மூடிக்கப் போகுது”…

    இதுகூட ஒருவித உள்ளுணர்வு…

    சில விஷயங்களை கேட்கும்பொழுதே ஒருவித பூரிப்பு கிளம்புவதை உணரலாம்…  சில சங்கதிகளை செய்யவேண்டும் என்றாலே சங்கடமாக தோன்றும்…

    சொல்லவே வேண்டியதில்லை… உள்ளுணர்வுகள்தான் சம்பவங்களை சாதனைகளாக மாற்றுகின்றன… அவற்றை சோதனைகளாக மாற்றுபவையும் உள்ளுணர்வுகளே.

    வெளியே பேசுகையில் நாம் சொல்வதெல்லாம் மனதின் வார்த்தைகளாக இருந்துவிடுவதில்லை.  மனதின் ஆழத்தில் நமது எண்ணங்கள் புதைந்து கிடக்கின்றன.  அவற்றின் தரிசனம் நமக்கு எப்பொழுதும் கிடைத்துவிடுவதில்லை.  அவ்வப்பொழுதுதான் அடிமனதை உணரமுடிகின்றது.  நிறையப்பேருக்கு ‘இரண்டு மனம்’ உள்ளது! என்பது தெரியாமலே வாழ்நாள் கடந்துவிடுவதும் உண்டு.  மௌனமாக இருப்பது மனதை புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகும் என்று இரமண மஹரிஷி மௌனத்தின் விளக்கம் குறித்து பேசுகையில் தெரிவித்திருப்பதாக பதிவுகள் இருக்கின்றன.

    “உங்களுக்கு நூறு ஆயுசுங்க” நினைச்சேன்…  அதைப்பத்தி சொல்லிட்டீங்க!  இப்பத்தான் நினைச்சேன் நீங்க நேரிலேயே வந்துட்டீங்க!  என்று நம் சம்பாஷணைகளில் பலமுறை பயன்படுத்தியது உண்டு.  அவை உள்ளுணர்வைத்தான் குறிக்கின்றன.

    இன்று கிரிக்கெட் விளையாடப் போகின்றோம்!  என்கின்ற பரபரப்பே!  தூங்க விடாமல் நான்கு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுவிட்டது… அன்றைய தினம் ஆட்டம்… அற்புதமாக அமைந்துவிட்டது…  உள்ளுணர்வுதான்… வேறென்ன!

    தங்கல்…  என்றொரு இந்தி திரைப்பட பாடல் உண்டு… தங்கல் என்கின்ற அதே மொழி படத்தில் வந்தது.  அதன் தமிழ் பொருளை புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.  மகளும் நானும் இணையத்ளத்தில் தேடினோம்.  அது கிடைத்தது.  நாம் வாழ்வில் எதை நேசிக்கின்றோமோ!  அதை நோக்கி நகர்கின்றோம்!  தங்கல் திரைப்படத்தில் தன்மகளை மிகப்பெரிய மல்யுத்த வீரர் குறித்த கதை… “உன் இதயம்…  பின்வாங்கி… தோற்று… ஒளிந்துகொள்ள துடிக்கும்பொழுது!  கொஞ்சம் துணிச்சல் கொடு உன் முதுகை நீயே தட்டிக் கொடு… அதன்பிறகு நட்சத்திரங்கள் உன் பக்கமும் புன்னகைக்கும்!  மகளே!  அதுதான் மல்யுத்தம்… அதுதான் மல்யுத்தம்” என்று அந்தப்பாடல் செல்கின்றது…

    அதிலே பார்த்தீர்களேயானால்…  மல்யுத்தம் ஏதோ…  களத்தில் எதிரியோடுதான் மல்லுக்கட்டுவது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றோம்! அது சரியல்ல போல…  ஆட்டம் நம் மனசுக்குள்ளேதான் இருக்கின்றது என்பதே உட்பொருள்.  அந்த இதயத்தை அவநம்பிக்கையின் பிடியில் இருந்து அற்புதத்தின் பாதைக்கு அழைத்து வரும்படியான உள்ளுணர்வு வருவதற்கு ‘பயிற்சி’ தேவைப்படுகின்றது.  ஆமாம்… இதிலிருந்து உள்ளுணர்வுக்கு கூட பயிற்சி அளிக்க முடியும் என்று தெரிந்துகொள்ளலாம்.

    என் நண்பர் ஒருவருக்கு சுயமுன்னேற்ற புத்தகங்கள் என்றாலே!  அறவே பிடிக்காது.  அவை சுயத்தை முன்னேற்றுவதில்லை… சுயத்தை இழக்கச் செய்து விடுகின்றன என்பது அவர் வாதம்!  பார்க்கும் பொழுது சரியாகத்தான் இருக்கின்றது!  “பறவைகள் பலவிதம்!  ஒவ்வொன்றும் ஒருவிதம்!”  என்கின்ற பாடலே நினைவிற்கு வருகின்றது.  படைப்பாற்றலை அதிகப்படுத்துவது எப்படி? என்கின்ற தலைப்பிலான கட்டுரைகள் புத்தங்களை நாம் கண்டதுண்டு… அவை சொல்கின்ற முறைப்படி படைக்கப்பட்டவை புதுமையான படைப்புக்களா?  சமையல் செய்வது எப்படி?  என்று படித்துவிட்டு செய்வது மட்டும்தான் சமையலா?  நாமாக புதிதாக எதையும் சமைத்துவிட கூடாதா?  என்றெல்லாம் சிந்தனைகள் சென்றது உண்டு!

    கடந்த பத்தி முழுக்க சில கேள்விகளை கேட்டு இருந்தோம்.  இலக்கியங்கள் எல்லாமே, மனதின் ஓட்டங்களே.  படிக்கின்ற வாக்கியங்களோடு மனது ஒன்றும்பொழுது உண்மையில் நாம்படிப்பது யாரோ? எழுதிய புத்தக வரிகளை மட்டும அல்ல…  அது நம் மனதைத்தான்… என்று உணர்ந்துகொள்கின்றோம்  அல்லவா…  அதுதான் உள்ளுணர்வை படிப்பது.  கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக கிரிக்கெட் விளையாடினாலும்…  இன்றைக்குத்தான்… வலதுகை மட்டைக்காரர்களின் கை உறைக்கும் இடது கை மட்டைக்காரர்களின் கையுறைக்கும் வித்தியாசம் இருக்கின்றது என்பதை கண்டுகொண்டோம்.  புதிதாக இருந்தது.  மனதில் பதிந்தது.  அதில் பெருவிரல் எந்த கையினுடைய பெருவிரல் பந்து படுவது போல முன்னோக்கி இருக்கிறதோ… அதன் மீது மஞ்சு வைத்து கட்டியிருந்தால் அதுவே பாதுகாப்பு அளிக்கும்.  இவ்வளவு நுணுக்கமும் ஒரு இடதுகை ஆட்டக்காரரிடம் சென்று கையுறையை கடன் கேட்ட பொழுதே!  தெரிந்துகொள்ள நேர்ந்தது அவரிடம் கேட்கலாமா?  வேண்டாமா?  என்ற உள்ளுணர்வின் தயக்கத்தை ஒரு பாய்ச்சலில் தாண்டிய பொழுது கற்றல் நிகழ்கின்றது!  இதில் தயக்கத்தை கடந்த நிம்மதி கூட இருப்பதாக தோன்றுகின்றது.

    மேலோட்டமாக நடக்கின்ற எல்லா சம்பவங்களிலும் உள் மனது என்ன நினைத்தது என்று நாம் திரும்பிப் பார்ப்பது இல்லை.  சிந்தனை ஞானி நாகூர் ரூமி அவர்கள் தமது இந்த விநாடி புத்தகத்தில் ‘தற்செயல்’ குறித்து பேசுகையில்… தற்செயலாக நடந்ததாக நாம் கருதும் நிகழ்வுகள் எவ்வாறு நம் ஆழ்மனதின் விருப்பம் காரணமாகவே நடக்கின்றன என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இருப்பார்.

    மகள் கோபிகா, கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டார்.  அது அவளது “சப் கான்ஷியல்” மைன்ட் என்று சொல்லக்கூடிய ஆழ்மனதின் விருப்பமாக இருந்தால் நிச்சயம் அவளை அது அதிகாலையில் எழுப்பிவிடும் அதைக் குறித்தே சிந்திக்கச்செய்யும் என்று யோசனை தோன்றியது.  ஒரு வாரம் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து… தொடர்ந்து… “அப்பா… உடற்பயிற்சி செய்ய போகலாம் என்று சொல்வாயானால் நிச்சயம் பயிற்சியாளரிடம் நீ சேருவாய்”…  என்று சொல்லப்பட்டு உள்ளது…  நிதர்சனமாக என்ன நடக்கிறது… நடக்கப் போகின்றது?  என்று தங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கின்றது?  என்பதல்ல முக்கியம்… இதுபோன்ற எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் எடுக்கும் முடிவுகள்… உள்ளுணர்வின் அடிப்படையிலா எடுக்கப்பட்டு இருக்கின்றன?  என்று உங்கள் உள்ளுணர்வு பேசுகின்றது அல்லவா?  அதைத்தொடர்ந்து ஒரு அலசல் போடுவதற்காக எழுதப்பட்டு உள்ளது.

    “வினைத்திட்பம் என்பது ஒருவர் பணத்திட்பம்”  என்று திருவள்ளுவர் கூறியிருக்கின்றார்.  “யாதும் ஊரே யாவரும் கேளிர்”  என்று எல்லாரையும் நேசிக்கும் அன்பை போற்றும் சொல்லாக புறநானூறு சொல்கின்றது…  இவை எல்லாமும் சுயமுன்னேற்ற புத்தகங்களின் வரிசையிலே ஏன் சேர்க்க கூடாது? என்று உள்ளுணர்வு சொல்லவில்லையா?

    மேற்கண்ட கேள்வியின் மூலம் ஒரு பதில் பிறந்துவிட்டதோ?  “தி பவர் ஆஃப் சப் கான்ஷியஷ் மைன்ட்”  என்பது டாக்டர் ஜோசப் மாஃர்பி என்பார் எழுதிய ஆங்கில புத்தகம், ஆழ்மனதின் அற்புத ஆற்றல் என்று அவர் புத்தக தலைப்பை தமிழாக்கலாம்.  அதில் அவர் நல்லது நினைத்தால்…  நல்லதே நடக்கும் என்று சொல்கின்றார்…  சமீபத்தில் ஒரு நிறுவனத்தை நிர்வகித்துவரும் மேலாண்மை நிர்வாகி ஒருவர், “என் வாழ்வு ஏராளமான…  நம்பிக்கைத் துரோகங்களாலும்,  வேதனைகளாலும், எதிர்ப்புச் சிரமங்களாலும்  நிரம்பியுள்ளது”…. என்றும்…“அவற்றையெல்லாம் தாண்டித்தான் நான் முன்னேறினேன்,” என்றும், “அவற்றை அடிக்கடி நினைத்துப்பார்த்துக் கொள்வேன்” என்றும் கூறினார்.

    ஆஹா… என்னே ஒரு அற்புதமான தமிழ்ப்பட பழிவாங்கும் கதை என்று மேல்மனது கேட்டது.  உள்ளுளுணர்வு சொல்லியது… இது… கனியன் பூங்குன்றனார் கூறிய “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கின்ற ஐந்து சொல் மந்திர வார்த்தைக்குப் புறம்பாக உள்ளதே என்றும் தோன்றியது.  நம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளுக்கும் வெற்றிகளுக்கும் பிறர் காரணம்!  என்று எவ்வளவு பேர் ஒப்புக்கொள்வோம்.  ஒரு பந்து வீச்சாளர் ஒரு மட்டையாளரை “கிளின் பௌல்ட்” ஆக்கினார்… (இது இரண்டு முறை நடந்தது)  அதற்கு…  மட்டையாளர் விட்டது காரணம் என்று மௌனமாகவா பந்து வீச்சாளர் இருக்கிறார்… எம்பி குதித்து மகிழ்வதில்லையா?  அதுபோல வாழ்வின் சங்கடங்களாக நாம் சந்திக்கும் மேல்மனம் கருதும் சிரமங்களை மற்றவர்கள் கொடுத்ததாக அவர்கள் மீது சுமத்தி…  விட்டுவிடுவதால்… என்ன பாடம் நாம் கற்றுக்கொண்டோம்… அந்த சம்பவம் நம்மை எவ்வளவு வலிமையாக்கியது என்பதை கொண்டாட மறந்து விடுகின்றோம்.  இப்படி உள்ளுணர்வு நம்மோடு பேச வரும்போதெல்லாம் அவற்றை உதாசீனப்படுத்திவிட்டு… வாழ்க்கை ஆட்டத்தில் நாம் எடுத்த விக்கெட்டுகளை கொண்டாடாமல் விட்டுவிடுகின்றோம்.

    “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்” என்று கண்ணதாசன் சொல்ல வந்தது இதுதான் அதுவும் சுயமுன்னேற்ற புத்தகப் பாடல்தான்… இப்படியாக நம்மை வெற்றி விதைகளை அடையாளம் காண விடாமல் உணர்ச்சி அலைகலைப் போட்டு கவர்ச்சியான மாயையை கண்ணீர் வலிகளாக நிரப்பிக் காட்டுவதுதான் மேலுணர்வு.   அதை எட்கார்ட் டல்லி… தமது ‘இப்பொழுது’ எனும் புத்தகத்தில் வலியுடன் என்று கூறுகின்றார்.  பவர் ஆஃப் நங் என்னும் ஆங்கில புத்தகத்தில் “பெய்ன் பாடி” என்று அதை சொல்லி இருப்பார்…  இவ்வளவு சுயமுன்னேற்ற புத்தகமும் நான் படிக்க மாட்டேன் என்றால்… அதற்காகத்தானே வள்ளுவர்…  “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லி மூன்றே வார்த்தைகளில் முடித்திருக்கின்றார்.  ஏனென்றால் அந்த சிக்கல்கள்தான் நம் வாழ்வை சுவாரஸ்யமாக்குகின்றன… சிரிப்பு அவசியம்.

    இதைத்தான் என் நண்பர் கூறினார்…  “அந்த கிரிக்கெட் மேட்சில்தான் என்று ஞாபகம்… கிளப்பும் போதே… கால்தடுக்கி விட்டுவிட்டது நானும் உள்ளுணர்வோடு யோசித்தேன்”.  “அப்போ… உள்ளே கலக்கலாக ஆடவேண்டும் என்று போயிருப்பீர்கலோ!” என்று நம் உள்ளுணர்வோடு முந்திக்கொண்டோம்…

    ஆமாங்க என்றார்…

    அடுத்தது ஏன் மழையா? என்று ஆர்வமுடன் கேட்ட பொழுது…  அதுதான் இல்லீங்க தம்பி… அந்த சம்பவம் நடந்தது  அதிகாலை ஐந்சுமணிக்கு…  சரீன்னு மீண்டும் படுத்து தூங்கி விட்டேன்…  மேட்சுக்கே போகல்லே..  கனவிலே எல்லாம் முடிஞ்சது… என்று முடித்தார்…

    இந்த இதழை மேலும்

    நில்! கவனி !! புறப்படு !!! – 3

    பிறகு என்று சொல்லாதே ! (பாதை 2)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

    ‘அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்’ – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

    அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

     பிறகு என்று சொல்லாதே !

    பிறகு என்பது வெற்றியை நோக்கிய பயணத்துக்கு ஒவ்வாத ஒரு வார்த்தை.

    அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்பது ஒரு ஆபத்தான விளையாட்டு.

    இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் எப்போதும் சந்திப்பது தோல்வியை மட்டுமே – என்பதை மனதில் பதிய வையுங்கள்.

    எதையுமே அப்போதே உடனுக்குடன் செய்வதுதான் வெற்றியாளனுக்கு அழகு.

    பிறகு பார்ப்போம், பிறகு செய்வோம், பிறகு முடிவெடுப்போம் – என்பதெல்லாம் முட்டாள்களின் வாழ்வில் முதலிடம் பிடிப்பவை.

    பிறகு பிறகு என்று எதையும் தள்ளிப்போடுபவர்கள் இப்போது நினைக்கும் விஷயத்தை புத்திசாலிகள் எப்போதோ செய்து முடித்திருப்பார்கள்.

    ஆசிரியர் கொடுத்த Assignment களை முடிப்பது, Project Work களை முழுமையாக முடிப்பது, Revision Test Papers ஐ வைத்து மாதிரி பரீட்சை எழுதுவது தொடங்கி School Uniform Iron செய்து தயாராக வைப்பது வரை எதையுமே உடனுக்குடன் செய்வது தான் சரி – என்பது மாணவர்களுக்கான வழிமுறை.

    காலம் தாழ்த்த தாழ்த்த – ஒரு வேளை பிறகு உங்களுக்கு நேரமே கிடைக்காமல் போகலாம்.

    ஐநூறு ரூபாய் நோட்டுக்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றாமல் – பிறகு பார்ப்போம் என்று நினைத்த பலர், கடைசி நேரத்தில் அதை மாற்ற முடியாமல் வெறும் காகிதமாக வைத்துக்கொண்டு இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தானே.

    Bus ம், Trian ம் கிளம்ப நிறைய நேரம் இருக்கிறது – இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கிளம்புவோம் என்று தாமதமாக புறப்பட்டவர்கள் Traffic ல் சிக்கிக்கொண்டு, மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு சென்று வண்டியை தவற விட்ட நிகழ்வு – நேர மேலாண்மை தெரியாத பலருக்கு நிகழ்ந்திருக்கிறது.

    பரீட்சை நெருங்கும் நேரம் படித்துக்கொள்ளலாம் – இப்போது என்ன அவசரம் என்ற எண்ணத்தில் இருந்து – கேள்வித்தாளை பார்க்கும் போது, கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் விடை தெரியாத விந்தையாக மாறி, தேர்வில் தோல்வி கண்ட மாணவர்களை இந்த சமூகம் இன்னும் கண்டுகொண்டு தான் இருக்கின்றது.

    படிப்பு மட்டுமல்ல, அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு எழுதும் தேர்வில் கூட இதுபோன்ற அணுகுமுறையால் வளர்ச்சி, பதவி, பணம், அதிகாரம் என அனைத்தையும் நூலிழையில் தவறவிட்ட அன்பர்களை பல அலுவலகங்கள் அனுதினமும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது.

    பிறகு செய்யலாம் என்ற பல செயல்கள், வேலைகள், கடமைகள் எல்லாம் – எப்படி பார்த்தாலும் கடைசியில் நீங்கள் தான் செய்ய வேண்டிவரும்.  யாரும் உதவிக்கு வரப்போவது இல்லை, ஏனென்றால், அவர்கள் அவர்களது வேலைகளை செய்துகொள்ளவே நேரம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கும்போது – உங்கள் வேலைகளையோ, அல்லது உங்களுக்கு உதவவோ அவர்களுக்கு நேரம் எப்போதும் இருப்பது இல்லை, என்பது தான் நிதர்சன நிஜம்.

    பழுதான கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டுமுறை சரியான நேரத்தையே காட்டுகின்றது.

    அதே சமயம் சரியான கடிகாரம் துல்லியமான நேரத்தை அப்புறம் காட்டலாம் என்ற ஒரு முடிவெடுத்தால் சரியாக வருமா?

    வியாதி சிறியதோ பெரியதோ – சரியான மருந்தை, சிகிச்சையை அப்புறம் கொடுக்கலாம் என்று ஒரு மருத்துவர் முடிவெடுத்தால் என்ன ஆவது?

    சரியான பருவத்தில் பெண்ணுக்கு திருமணம் செய்யாமல் அப்புறம் செய்யலாம் என்று ஒரு பெற்றோர் முடிவெடுத்தால் – அந்த பெண்ணின் வாழ்க்கை என்ன ஆவது?

    இதற்கு தீர்வு என்ன?

    முறையாக, சரியாக, திட்டமிட்டு தள்ளிப்போடாமல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செய்கையுமே உங்களை ஒரு  Fully Organized Personality யாக ஆக்கும்.ஏனென்றால், முடிக்காத வேலைகள் சுமையாகத்தான் உங்கள் தோளில் இருக்கும்.  நீங்கள் சுமைதூக்கி அல்ல என்று உணருங்கள்.

    எப்படி தள்ளிப்போடும் பழக்கத்தை விடுவது?

    கடினமான உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களை தயார் படுத்த முதலில் எளிமையான சில பயிற்சிகளை செய்வதுபோல் – இங்கே நான் சொல்லும் சில எளிமையான மாற்றங்களை உங்கள் அன்றாட வாழ்வுக்குள் கொண்டு வாருங்கள். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு இந்த பயிற்சிமுறையும் உங்களை சில நாட்களிலேயே ஒரு Fully Organized Personality யாக மாற்றும்.

    பயிர்ச்சி முறை :

    1. உங்கள் அறையிலிருந்து 10 பொருட்களை எடுத்து – தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை தூர எறியுங்கள்.

    2. தினமும் – உங்களுக்கு தேவையில்லாத ஒரு விஷயத்தை உங்களிடமிருந்து விரட்டுங்கள். அது உங்கள் சோம்பலாக இருக்கலாம், அதிகமான தூக்கமாக இருக்கலாம், இப்படி பல.   கண்டுபிடித்து விரட்டுங்கள்.

    3. உங்கள் புத்தக அலமாரியில் நீங்கள் படிக்காத புத்தகங்கள், ஏற்கனவே படித்து முடித்த புத்தகங்கள், எழுதாத, பயன் படுத்தாத பேனாக்கள் இவற்றை எல்லாம் எடுத்துவிட்டு – தேவையான புத்தகங்களை மட்டும் வைக்க பழகுங்கள்.

    4. உங்கள் மேஜையில் உங்களது படிப்பு சம்மந்தமான, வாழ்வின் வெற்றிக்கான விஷயங்களுக்கு மட்டும் இடம் கொடுங்கள்.

    அதை அடிக்கடி சுத்தம் செய்து ஒழுங்காக பராமரியுங்கள்.

    பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய தாள்களை, குறிப்புகளை உடனுக்குடன் File செய்து தனியாக பெயரிட்டு பராமரியுங்கள்.

    5. இந்த செயல்களை மெல்ல மெல்ல உங்கள் குடும்ப கடமைகளில் செயல்படுத்த துவங்குங்கள்.  பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைகின்றதா என்று சீர்தூக்கி பாருங்கள்.

    6. மாற்றம் மலர மலர – உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

    இந்த விஷயங்கள் படிப்பதற்கு சுலபமாக தோன்றினாலும், செய்வதற்கு சிரமம் உண்டு.

    ஏனென்றால் எல்லா பொருளும் உங்களுக்கு தேவையானவையாகவே தோன்றும்.

    இதை தொடர்ந்து பயிர்ச்சி செய்யும் போது – ஒரு தெளிவு உங்களுக்குள் வரும்.

    உங்கள் படிக்கும் அறை, நீங்கள் வசிக்கும் அறையின் சூழ்நிலை (Atomsphere) நீங்கள் எப்போது நுழைந்தாலும் அமைதியையும், ஆனந்தத்தையும் தூண்டும் விதமாக உங்களால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும்.

    அதுமட்டுமல்ல, உங்கள் இல்லமும் தூய்மையான, சரியான, அழகான, நேர்த்தியான இடமாய் இருக்கும்.

    பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் இருந்தால், வீடு அழுக்கும், குப்பையும், அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் துணியும், பாத்திரமும், புத்தகமுமாய் – விருந்தினர் எப்போது வீட்டுக்கு வந்தாலும் முகம் சுளிப்பதாகவே இருக்கும்.

    இவை இல்லாமல், எல்லோரும் பாராட்டும் வண்ணம் வாழ வேண்டும் என்றால் “பிறகு பிறகு” என்ற சொல்லுக்கு நீங்கள் விடைகொடுத்தே ஆக வேண்டும்.

    இங்கே கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் (100 கேள்விகள் இடம்பெறும்) உங்கள் வாழ்க்கைக்கான வழித்துணை.  இந்த கேள்விகளும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வையுங்கள்.  தட்டச்சு செய்து பாதுகாப்பது இன்னும் சிறந்தது.  இந்தக்கேள்விகள் உங்கள் வாழ்க்கை பயணத்துக்கான வரைபடம்.

    பத்து நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பதில்களை மீண்டும் சரிபாருங்கள்.  பதில் மட்டுமல்ல – உங்கள் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகி வருவதை நீங்களே கண்கூடாக காணலாம்.

    அதுவே உங்கள் வெற்றி.

    அந்த வெற்றி உங்களை தொடர என் வாழ்த்துக்கள்.

    திசைகளை தீர்மானியுங்கள் !  திட்டமிடுங்கள் !  செயல்படுங்கள் !

    கேளாய் மகனே கேளொரு வார்த்தை !  நாளைய உலகின் நாயகன் நீயே !

    இந்த இதழை மேலும்

    சாலை விதி சாதனைக்கு வழி

    N. பழனிவேலு,

    R.T.O. கோபி

    பிறந்ததே சாதிக்கத்தானே! சாதனை வாழ்க்கைக்கு நீண்ட ஆயுள் இன்றியமையாதது. நீண்ட ஆயுளுக்கு இடையூறாக நோய், விபத்து போன்ற வாழ்க்கைச் சூழல்கள் அமைந்துவிடுகின்றது. இதில் விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் காரணிகளில் சாலை விபத்து முதன்மையாக உள்ளதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்ற முறையில் சாலை விதிகளைக் கடைபிடிப்பதின் அவசியத்தை தன்னம்பிக்கை இதழின் வாசகர்களிடம் கொண்டு செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். விபத்தில்லா வாகனப் பயணத்திற்கு ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போமா!!

    பாதசாரிகள் செய்யும் தவறுகளும் பாதுகாப்பு வழிமுறைகளும்.

    நடைபாதை இல்லாத இடங்களில் உள்ள சாலைகளில் நடப்போர் சாலையின் வலது ஓரங்களில் நடந்து செல்ல வேண்டும். இதனால் எதிரில் வரும் வாகனங்களின் சூழ்நிலையை அறிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விலகிச் செல்ல முடியும். மாறாக இடதுபுறம் நடந்தால் பின்வரும் வாகனங்கள் மோதுகிற சூழ்நிலையினை தவிர்க்க இயலாது.

    பாதசாரிகள் செல்போன் பேசிக்கொண்டும், குடிபோதையில் கவனக் குறைவோடும் பாதையைக் கடந்து செல்வதால் விபத்திற்கு ஆளாகின்றனர். மேலும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது சற்றே நிதானித்தும், பொறுத்திருந்தும் கடக்காமல் அவசரப்பட்டு குறுக்கே ஓடி விபத்தில் சிக்கி  உயிரை இழப்பது மட்டுமின்றி மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் இடையூரை உண்டாக்குகின்றனர்.

    சாதாரணமாக 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு வாகனம் ஒரு விநாடிக்கு 17 மீட்டர் கடந்து விடும். அதுவே 120 கி.மீ வேகமெனில் 35 மீட்டரை கடந்து விடும். இக்குறுகிய இடைவெளியில் குறுக்கே செல்லும் எந்த ஒரு விஷயமும் 100 சதவீதம் விபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

    சாலையில் ஜோடியாக செல்லாது ஒருவர் பின் ஒருவராக செல்வதே சரியானது. வெள்ளை/மஞ்சள் கலந்த உடைகளை அணிந்து செல்வோர் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் போது மற்ற வாகன ஓட்டிகளின் பார்வைக்கு தெரிய வசதி என்பதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகளைப் பாதுகாப்புடன் கடந்து செல்ல இயலும்.

    சாலை விதிகளில் நேர சிக்கனத்தைப் பார்க்க வேண்டாம் என்பது என் கருத்து.

    இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் செய்யும் தவறுகளும் ,வழிமுறைகளும்.

    • ஓட்டுநர் உரிமமும், இன்சூரன்சும் மிக முக்கியம் என்பதை தெரிந்திருக்க  வேண்டும்.
    • இரு சக்கர வாகனத்தில் ஐந்து பேர் கூட செல்கிறார்கள். இதனால் அதிக எடை காரணமாக பிரேக் நிற்கமால், நிலைப்புத் தன்மையை இழந்து விபத்து உண்டாகிறது.
    • குடிபோதையில் வாகனம் ஓட்டி இறப்போர் ஏராளம் ( குடி குடியைக் கெடுக்கும்)
    • காவல்துறையின் சர்வேபடி சாலையில் ஒரு கி.மீக்கு இருவர் வீதம் செல்போன் பேசியபடி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் அதிகம்.
    • பொறுமையில்லாத, கட்டுப்பாடற்ற வேகத்தினால் விபத்துகள் நிறைய உண்டாகிறது. நகர சாலையில் அதிகபட்சமாக 40 கி.மீ. பிற சாலைகளில் 50 கி.மீ நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ வேகம் பாதுகாப்பானது.
    • குறுகலான இடைவெளியில் ஓட்டுவது விபத்திற்கு வழிவகுக்கும்.
    • சைடு மிரர் பார்க்காமல் சைகையின்றி திடீரென சாலையைக் கடந்து தானும் விபத்தில் சிக்கி,பெரிய வாகன ஓட்டிகளையும் விபத்துக்குள்ளாக்கி இறப்போரும் உண்டு.
    • இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
    • இரு சக்கர வாகன உயிரிழப்பிற்கு பெரும்பாலும் காரணம் தலையில் ஏற்படும் காயமே என்பதால் ஹெல்மெட்டின் அவசியம் உணர்ந்து அணிந்து செல்ல வேண்டும்.
    • மித வேகமே மிக நன்று என்பதால் 100 c.c. க்கள் உள்ள எஞ்சின் திறன்கொண்ட இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு, சவுகரியம், எரிபொருள் சிக்கனம், விலையில் சிக்கனம் போன்ற பலன்களை அடையலாம். இதை விடுத்து, பல லட்சம் விலை கொண்ட ரேஸ் பைக்குள் வாங்கி நம் ஊர் சாலைகளில் ஓட்ட முயற்சித்து உயிரிழப்பது நாட்டுக்கே கேடானது; பரிதாபமானது; வேண்டாமே விபரீதம்!

    கார் ஓட்டுநர், பயணிப்போர் செய்யும் தவறுகளும், பாதுகாப்பு வழிமுறைகளும்

    பாதசாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். பேருந்து, லாரிகளை குறைந்த இடைவெளியில் பின் தொடர்ந்து செல்லாமல் இருத்தல் வேண்டும். அனைத்து பொது சாலைகளிலும் Keep left விதிப்படி இடது புறம் மட்டுமே செல்லவும். வலதுபுறம் மட்டுமே உரிய சிக்னல் கொடுத்து முந்த வேண்டும்.

    ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடல் வேண்டும்.

    ஓய்வற்ற இரவு நேர நீண்டதூரப் பயணத்தை தவிர்த்தல் வேண்டும்.

    சரியாக சாதாரண சாலைகளில் கார் ஓட்டத் தெரியாதோர், தேசிய நெடுஞ்சாலைகளில் (Express way) சாகசம் செய்ய நினைத்து விபத்தை உண்டாக்கி இறப்பைத் தழுவுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் ஓட்ட பயிற்சி, நிதானம், எச்சரிக்கை தேவை.

    சீட்பெல்ட் என்பது தலைக்காயம் தவிர்க்கும். விபத்தின் போது உடலை நகரவிடாமல் பாதுகாக்கும் என்பதால் வாகனம் உருண்டாலும், ஏர்பேக் விரிந்தாலும் சீட்பெல்ட் அணிந்தால் மட்டுமே உயிரை பாதுகாக்க முடியும் என்பதால்  சீட்பெல்ட் அணிவது அவசியம்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை தடுப்பின் மீது மோதி ஆபத்தில் உயிரிழப்போர் ஏராளம். உரிய எச்சரிக்கை பலகைகளோ, பிரதிபலிப்பான்களோ இல்லாத இவ்வாறான சாலைத் தடுப்புகள் உண்டு என்பதால் கவனமாக ஓட்ட வேண்டும். ஓவர்டேக் செய்யும் முன் எதிரில் வாகனம் (அ) சாலைத்தடுப்பு (அ) குறுகிய பாலம் (அ) குறுகிய வளைவு இவை போன்ற இடையூறு உள்ளதா என பார்க்க வேண்டும்.

    ஆட்டோமேடிக் சிக்னல் அல்லது அணைந்து எரியும் சிவப்பு எச்சரிக்கைச் சின்னம் இல்லாத இடத்தில் நிதானத்துடனும், மிகுந்த எச்சரிக்கையோடும் சாலையைக் கடக்க வேண்டும்.

    இணைச் சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வந்து சேரும் போது நில்! கவனி!! செல்!!! விதியினைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

    இலகுரக சரக்கு வாகனம் ஓட்டுவோர் கவனத்திற்கு

    குறிப்பாக டாடா ஏஸ், தோஸ்த், மகிந்திரா பிக் அப் போன்ற வாகன ஓட்டுநர்களில் பலருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை. விபத்து ஏற்படின் இன்சூரன்சை கிளைம் செய்ய இயலாது.  இவர்களில் பலர் இடது ஓரமாகச் செல்லாது நடுசாலை வரை அடைத்துக் கொள்கிறார்கள். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் வெல்வது அநேகமாக பரவலாக நடைபெற்று ஆபத்தாக முடிகிறது. அளவுக்கு அதிகமான சுமையினை ஏற்றிச் செல்வது தவறு. மேலும் அதிகபடியான ஹாரன்கள், முகப்பு விளக்குகளை மாட்டி எரிய விடுவதால் பேட்டரி சூடாகி வாகனம் எரிந்து விடுவதும் உண்டு.

    கனரக வாகன ஓட்டுநர் கவனத்திற்கு

    ஓட்டுநர் உள்பட கேபினுள் மூவர் மட்டுமே இருத்தல் வேண்டும். பாடியை விட்டு வெளிப்புறம் சுமை நீட்டியிருக்கக் கூடாது. மணல், செங்கல் சுமைகளை தார்பாய் கொண்டு பாதுகாப்புடன் மூடி எடுத்துச் செல்ல வேண்டும். குறுகிய சாலைகளில் வேகத்தைக் குறைத்து விபத்தினை தவிர்க்க வேண்டும். மலைப் பாதைகளில் செல்லும் போது ஏறும் வாகனத்திற்கு முன்னுரிமை தர வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. போதிய ஓய்வை எடுத்த பின்பே ஓட்ட வேண்டும்.

    ரவுண்டானா திருப்பத்தில் திரும்பும்பொழுது ஏற்கனவே திரும்பிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செல்ல வேண்டும். பள்ளி, மருத்துவ, நீதிமன்ற வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள், சாலைப்பணி நடைபெறும் இடங்களில் ஹாரன் அடிக்கக்கூடாது. வாகனங்களில் உள்ள அசல் விளக்குகளைத் தவிர L.E.D., கூடுதல் விளக்குகளைப் பொருத்தக்கூடாது.

    சாலை விதிகளைப் பின்பற்றி விபத்தைத் தவிர்த்து,

    உயிரின் மகத்துவம் உணர்வோம்!

    சாதனை வாழ்க்கையை மேற்கொள்வோம் !!

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

     நேயர் கேள்வி …?

    தற்போதைய சூழலில் பெண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எதைச் சொல்லி வளர்க்க வேண்டும்?                                                                                         

    மேனகா தேவி,

    இல்லத்தரசி, கூடலூர்.

    கடந்த நூறு ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறு வயதில் திருமணமாகி பின்னர் புகுந்த வீட்டில் சமையல் செய்தும், குழந்தைகள் பெற்றும், விவசாயத்தை கவனித்தும், தொடர்ந்து உயிருடன் இருந்தால் பேரப்பிள்ளைகளை கவனித்தப் பெண்களின் நிலை இன்று அதுவல்ல.

    இன்றைய பெண்:

    பெண் படிக்கிறாள், வேலை தேடுகிறாள், வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டிய பின் திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து, படிக்க வைத்துவிடுகிறாள். படித்தப் பிள்ளைகளை வெளியூருக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பி வைக்கிறாள். ஓய்வு பெற்ற பின்னரும் ஏதேனும் வேலை செய்கிறாள். பேரப்பிள்ளைகளுடன் அலைபேசியில் உரையாடி மகிழ்கிறாள். அவள் இறந்த அன்று வெளியூரிலிருந்து மகனும், மகளும், பேரப்பிள்ளைகளும் வந்துவிடுகிறார்கள்!. சில ஆண்டுகளுக்கு முன் சராசரியாக 30 ஆண்டுகள் வாழ்ந்த பெண் இன்று சராசரியாக 69 ஆண்டுகள் வாழ்கிறார்கள். இது ஒரு மாபெரும் மாற்றம், விரும்பதக்க மாற்றம்.

    நாளைய பெண்:

    அடுத்த நூறு ஆண்டுகளில் பெண்களின் நிலை எப்படி? பெண்கள் ஆண்களுக்கு இணையாக இருப்பார்கள். அவர்கள் ஆண்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்வார்கள், போர் விமானத்தைக்கூட கையாள்வார்கள். சர்வசாதாரணமாக ஆண்களின் கோட்டைகளுக்குள் கோலோச்சுவார்கள். அறிவியல், அரசியல், பொருளாதாரம், தொழில், கல்வி, இராணுவம், வர்த்தகம் என்று எல்லா துறைகளிலும் சமமாக ஆள்வார்கள். பெண்களின் சொத்து மதிப்பு சரிசமமாக இருக்கும். அவர்களை கயவர்கள் சீண்ட முடியாது, அவர்களின் புகைப்படம் அல்லது வீடியோவை வைத்து எவனும் மிரட்ட முடியாது.

    நமது மகள் உலக நாடுகளில் தலைமைப் பதவியில் இருக்கும் மதிப்பு மிக்க சுதந்திரப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமா? அல்லது ஒரு அடக்கமான, அன்பான, மனைவியாக சமையல் செய்து கணவனையும், குழந்தையையும் கவனிக்கும் பெண்ணாக இருத்தல் போதும் என்று நினைக்கிறோமா? என்பதை வைத்தே உங்கள் கேள்விக்கு பதில் எழுத முடியும்.

    சாதனை மகள்:

    புதுமைப் பெண்ணாக நமது மகளை வளர்க்க வேண்டும் என்பதே எனது எண்ணம். ஏனென்றால், இன்று உலகில் வளர்ந்து விட்ட நாடுகளில் பெண் மக்கள் அப்படியே வளர்க்கப்படுகிறார்கள். பெண்களை அங்கு எவரும் போற்றுவதோ தூற்றுவதோ இல்லை. அவர்களுக்கும் ஆண்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் எந்தப் பாகுபாடும் இல்லாமல் நடத்துகிறார்கள்.

    பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை முதலில் விளக்குகிறேன்.

    அ) ஆணுக்கு இணையான மதிப்பும் மரியாதையும் பெண்ணுக்கும் தர  வேண்டும். சமமான உணவு, உடை, அறை, வீட்டில் முக்கியத்துவம் என அனைத்திலும் சமத்துவம் வேண்டும்.

    ஆ) சொத்தில் சம பங்கு பெண்ணுக்குத் தர வேண்டும்.

    இ) மகனை எதுவரை படிக்க வைப்பீர்களோ அதுவரை மகளையயும் படிக்க வைக்க வேண்டும். மகள் MBBS, MD, DM என்று படிக்க ஆசைப்பட்டால் அது 11 ஆண்டுகள் என்றாலும் படிக்க வைக்க வேண்டும்.

    ஈ) பெண்களுக்கு படிக்கவும், வேலை செய்யவும், சில ஆண்டுகள் சுதந்திரமாக இருக்கவும் ஆர்வம் என்றால், அனுமதிப்பதே நல்லது. சிறுவயதில் திருமணம் என்பது அவ்வளவு நல்ல காரியம் அல்ல. சிலருக்கு திருமணம் செய்வதில் நாட்டமும் இருக்காது, அப்படிப்பட்டவர்களை வற்புறுத்தக் கூடாது.

    உ) திருமணமான உடனே குழந்தைப் பெற்றுக்கொடு என்று வேண்டுகோள் வைக்கக் கூடாது. அந்த முடிவை தம்பதிகளுக்கு விட்டுவிடுவதே நல்லது. குழந்தை இல்லை என்றால் யாரிடம் குறை என்ற நாகரீகமற்ற கேள்விகள் கேட்கக் கூடாது.

    மகளிர் பாதுகாப்பு:

    நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்ட மாத்திரம் எனக்கு ஒன்று புலப்பட்டது. பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் இந்த தருணத்தில் பெண்களுக்கு என்னவிதமான அறிவுரைகளை பெற்றோர்கள் தர வேண்டும்? என்பது உங்கள் நோக்கமாக இருந்திருக்கும். அந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுரைகளை வழங்குகிறேன்.

    அ) பெற்றோர் பெண் பிள்ளைகளை வீராங்கனைகளாக வளர்க்க வேண்டும். ஓடுதல், விளையாட்டு போன்ற செயல்களால் பெண்களுக்கு தைரியம் வளரும்.

    ஆ) ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பான இடங்கள் எவை, பாதுகாப்பு குறைவான இடங்கள் எவை என்ற அறிவுரை வழங்குங்கள்.

    இ) நல்லவன் எவன், கெட்டவன் எவன் என்று பிரித்தறியும் ஆற்றல் பெண்களுக்கு வேண்டும். பேச்சை வைத்து ஒருவனை நம்பாமல் அவனது நடத்தையை வைத்து நம்ப கற்றுக் கொடுங்கள்.

    ஈ) பொய்யாக புகழ்பவரை நம்பாமல் உண்மையாக பாராட்டுபவரை நம்பவும், பெண்ணை ஒரு பொருளாக பார்ப்பவரை நம்பாமல் பெண்ணை ஒரு சக மனிதனாக பார்ப்பவரை நம்பவும் சொல்லுங்கள்.

    உ) ஒருவரிடம் பழகும்போது அவர் உங்களின் அறிவிற்கும், ஆற்றலுக்கும், கவுரவத்திற்கும் பாத்திரமானவர்தானா என்றும், அவர் நேர்மையானவர்தானா என்பதையும் பகுத்து அறிந்து பின்னர் அவருடன் பழகச் சொல்லுங்கள்.

    ஊ) உடலுக்கும், மனதிற்கும், மானத்திற்கும் ஊறு செய்யும் எந்த செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது என்று சொல்லிவிடுங்கள். உயிரை விட மானம் பெரியது என்பதை வலியுறுத்துங்கள்.

    எ) விருப்பமில்லாத நபர் ஒருவரிடம் பேசவோ, பழகவோ கூடாது என்றும், அவன் கட்டாயப்படுத்தினாலும், அவனது பேச்சை கேட்கக்கூடாது என்றும் சொல்லிக் கொடுங்கள்.

    பழக்கவழக்கம்:

    இலவசமாக எது கிடைத்தாலும் அதை நிச்சயம் வாங்கக் கூடாது என்று சொல்லித்தாருங்கள். உழைத்து சம்பாதித்த ஆயிரம் ரூபாய், உழைக்காமல் சம்பாதித்த ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலானது என்று சொல்லிக் கொடுங்கள்.

    பேசிப்பழகும் ஒரு நபருடன் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிடுங்கள். எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து எவனாவது மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்தால் அதை உடனே பெற்றோர், அண்ணன், தம்பியிடம் சொல்லவும் அறிவுறுத்துங்கள்.

    ஒரு பெண் வளர்ந்து தாயான பிறகு அவள் தனது மகனிடம், பெண்களை சமமாக நடத்த அறிவுரைக் கூறி அனுப்புங்கள். ஒரு பெண்ணை துன்புறுத்துவதும், அவமரியாதை செய்வதும் கோழைத்தனமான ஆணின் செயல் என்றும் அனைத்து ஆண்களுக்கும் அறிவுறுத்தச் சொல்லுங்கள்.

    குடும்ப விதிகள்:

    வளர் இளம்பருவ பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு சில குடும்ப விதிகள் உண்டு, அவையாவன:

    • மகளுடன் எப்போதும் உரையாடல் நடத்துங்கள். அவள் பேசும் பேச்சை கவனமாகக் கேளுங்கள்.
    • மகளை அடிக்கடி திட்டாதீர்கள், சண்டை போடுவதும் நல்லது அல்ல.
    • மகளை குறை கூறுவதையும், புகார் கூறுவதையும் தவிர்த்து விடுங்கள்.
    • அடிக்கடி மகளைத் தொட்டு பேசுங்கள், கட்டித்தழுவுங்கள், அவள் விலகிச் சென்றாலும், அரவணையுங்கள்.
    • மகள் எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் உங்களது அன்பு குறையாது என்பதை அவர் நம்பும்படி நடந்து கொள்ளுங்கள். இதைத்தான் “Unconditional Love” என்கிறோம். நிபந்தனையற்ற அன்பு உண்டு என்று நம்பும் பெண் பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் நம்பிக்கையும், பாசமும் நிரந்தரமாக இருக்கும்.

    முடிவுரை:

    வயதுப்பெண் தனியாக வாழ முடியுமா? அவள் பாதுகாப்பாக இருப்பாளா? என்ற அச்சம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் வளர்ந்த நாடுகளில் இருக்கும் பாதுகாப்பு நமது நாட்டில் பெண்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. எல்லா பெண்களும் கல்வி கற்று வேலையில் அமர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றி நமது நாடும் ஒரு வல்லரசு ஆகிய நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு இயற்கையாகவே அதிகரிக்கும் என்று நம்பலாம்.

    இந்த இதழை மேலும்