எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்
அருட்செல்வர். முனைவர். பா. இராஜாராம்
முன்னாள் தலைவர்,தாவரவியல் துறை,
பூ.சா.கோ கலைக்கல்லூரி
முன்னாள் செயலாளர் SP. நரசிம்மலு நாயுடு நினைவு அறக்கட்டளை.
விஞ்ஞான ஆராய்ச்சியாளர்
கோவை.
இவர் மிகச்சிறந்த ஆசிரியர்
பார் போற்றும் கல்விமான்
அறிவியலைத் தமிழ் படுத்திய ஞானி
புகழ்பெற்ற இதழாசிரியர்
பன்மொழிப் பேசும் பண்பாளர்
அகிலம் போற்றும் ஆராய்ச்சியாளர்
உலகத்தைச் சுற்றிய உன்னத மனிதர்
பல சாதனையாளர்களை உருவாக்கிய சான்றாளர்
இயற்கை விஞ்ஞானி…
என பன்முக ஆளுமைக் கொண்ட பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் பா. இராஜாராம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுரில் ஜீன் மாதம் 15 ஆம் தேதி 1931 ஆம் ஆண்டு பிறந்தேன். பெற்றோர் திரு. டி.என். பாலகிருஷ்ண நாயுடு, நவநீதம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதர்கள், இரண்டு சகோதரிகள் ஆவர். அதே போல் எனக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது எல்லாம் மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளியல் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் நான் ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பிலே சேர்ந்தேன். நான் படித்த பள்ளி குன்னுரிலுள்ள சிஎஸ்ஐ பள்ளியில் 1936 ஆம் ஆண்டு சேர்ந்தேன். கிருத்துவப்பள்ளி என்பதால் ஒழுக்கமும், கல்வி போதிக்கும் முறையும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அன்றைய காலத்திலேயே நன்றாக கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். அதன் பின் மேல்நிலை வகுப்பு செயிண்ட் அந்தோணியார் பள்ளியில் படித்தேன். அப்போது தான் எழுத்தறிவு முறை முதன் முதலில் பள்ளிகளுக்கு அறிமுகம் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பள்ளியில் படித்த பாடத்திட்டம் பிற்காலத்தில் பி.எஸ்சி படிக்கும் போது வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் 1947 ஆம் ஆண்டு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் என்னுடைய கல்லூரிப் பயணம் இரண்டு ஆண்டுகள் தொடங்கியது. பின்னர் சென்னையிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் தாவரவியல் துறையைத் தேர்ந்தெடுத்தப் படித்தேன். முனைவர் பட்டத்தை சென்னையிலிருந்து இங்கு எக்ஸ்டென்சன் சென்டர் ஒன்று இருந்தது அதில் எனது வழிகாட்டுதல் ஆசிரியர் முனைவர். சுந்தரராஜீலு அவர்கள் மூலமாக முனைவர் பட்டம் பெற்றேன்.
கே: அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?
1947 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி, கீரிஸ், நார்வே, போன்ற நாடுகளில் அறிவியலின் வளர்ச்சி அப்போதே பெரிய அளவில் இருந்தது. ஆனால் இந்தியாவில் அப்போது தான் அறிவியல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது தான் இத்துறையைத் தேர்ந்தெடுத்து படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
மற்ற எல்லா துறைகளிலும் தகவல்கள் கிடைத்து விடும் ஆனால் அறிவியல் துறையில் நாம் தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். அறிவியல் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது என்பதை புரிந்து கொண்டேன். எல்லாவித பரிணாம வளர்ச்சிக்கும் அறிவியலே முதல் படி. இது போன்ற எண்ணற்ற காரணங்களால் தான் இத்துறையை படிக்க நேர்ந்தது.
அப்போது இருந்த அறிவியல் ஆசிரியர்கள் வெறுமனே புத்தக பாடத்தை நடத்தாமல், நடத்தும் பாடத்திற்கு ஏற்றார் போல் நேரடியாக அந்த இடத்திற்கே கூட்டிச் சென்று செய்முறையாக பாடத்தை கற்பிப்பார்கள்.
கே: உங்கள் முதல் ஆசிரியர் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?
பிரசிடென்சி கல்லூரியில் எம். ஏ தாவரவியல் படிக்கும் போதே என்சிசி யில் சீனியர் கேடட்டாக இருந்தேன். அப்போது புதிதாக படிக்கும் மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி கற்பிக்க வேண்டும். இப்பயிற்சி முறை இராணுவம் சார்ந்த அத்துனை பயிற்சிகளும் கொடுக்க வேண்டும். பின்பு இது சார்ந்த நன்மைகள் என்ன, பயன்கள் என்ன, எதிர்கால தேவைகள் என்ன என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும். இது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் பயனாக இருக்கிறது.
கற்பிக்கும் முறையில் இராணுவ முறைகளே சிறந்தது என அறிந்து கல்லூரி ஆசிரியர் பணியிலும் அந்த முறைகளையே பின்பற்றி என்னால் சிறந்த மாணவர்களை உருவாக்க முடிந்தது. ஜனவரி 26 ம் நாள் 1951 ஆம் ஆண்டு முதல் குடியரசு தின விழா தலைநகர் டில்லியில் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய அரசிடமிருந்து ஒரு ஆணை வந்தது. அது என்னவென்றால் தமிழ்நாடு, பம்பாய், கொல்கத்தா போன்ற மாநிலங்கள் ஒவ்வொன்றிலிலுருந்தும் 20 என்சிசி வீரர்கள் அனுப்பி வைக்கும் படி பாரத அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி தமிழ்நாட்டிலிருந்து நானும் 20 பேர்களில் ஒருவனாக அனுப்பப்பட்டேன். டில்லியில் 15 நாட்கள் தீவிர பயிற்சி கொடுத்தார்கள். குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திரபிரசாத் அவர்களுக்கு சல்யூட் கொடுத்தோம். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த நிகழ்வாக இருக்கிறது.
இராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஆசிரியராக வர வேண்டும் என்பதில் தீராத காதல் இருந்தது. இதனால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ. ஊ. சி அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடியில் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. அங்கு முதன் முதலாக 1952 ல் பணியில் சேர்ந்தேன். அங்கு அப்போது திரு. சீனிவாச ராகவன் முதல்வராக இருந்தார். நான்கு ஆண்டு காலம் அங்கு பணியாற்றி, கோவையிலுள்ள பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியில் 1956 ஆம் ஆண்டு அப்போது புதிதாகத் தொடங்கிய பயலாஜி துறையில் பணியாற்ற தொடங்கினேன். இங்கு 39 ஆண்டு காலம் பணியாற்றினேன். என்னுடைய ஆசிரியர் பணியின் அனுபவம் மொத்தம் 43 ஆண்டுகள். இந்த ஆண்டுகளில் அறிவியல் துறைக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிறைய புதுமைகள் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.
கே: ஆசிரியர்களின் ஆளுமைப்பண்பு எப்படியிருக்க வேண்டும் ?
ஆசிரியர்கள் தான் எதிர்கால சமுதாயத்தின் ஏணிப்படி என்று சொல்வார்கள். அதனால் தான் ஆசிரியர் பணியை அறப்பணி என்று சொல்கிறார்கள்.
ஆசிரியர்கள் அணியும் ஆடையில் மிகவும் அக்கரையுடையவர்களாக இருக்க வேண்டும்.
எப்போதும் சுறுசுறுப்பாகவும், மாணவர்களை ஈர்க்கும் படி, வகுப்பிற்கு வரும் அந்த ஒரு மணிநேரம் மிகவும் பயனுள்ள வகையில் கருத்துக்களைப் போதிக்க வேண்டும்.
மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகம் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு எழும் ஐயங்களை அவ்வப்போதே தீர்க்கும் வல்லமையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
மாணவர்கள் ஆசிரியர்களை கூர்ந்து கவனிப்பார்கள். இதனால் பயம் பதட்டம், தடுமாற்றம், பிழை போன்றவற்றை தவிர்த்திடல் வேண்டும்.
வெறும் புத்தகப் பாடத்தை நடத்தாமல், அந்த பாடம் சம்மந்தமான இடத்திற்கே மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு புரியும் படி கற்றல் பயிற்சியை கொடுக்க வேண்டும்.
தன் பாடம் சார்ந்த அறிவு மட்டும் இல்லாமல் எல்லாத் துறைகளிலும் புலமைப் பெற்றவர்களாக ஆசிரியர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளல் வேண்டும்.
எத்துறை ஆசிரியராக இருக்கிறோமோ அத்துறையினை உயர்வாக எண்ணி கற்பித்தல் வேண்டும்.
இப்படி பல நற்குணங்கள் கலவை தான் ஆசிரியர்களின் பிம்பமாக பிரதிபலிக்கிறது.
கே: ஒரு ஆசிரியர்களின் வெற்றி எதை மையமிட்டு இருக்க வேண்டும்?
உலகத்திலே தன்னை விட தன் மாணவர்கள் உயர்ந்து விட்டார்கள் என்று பொறாமைபடாத ஒருவர் என்றால் அது ஆசிரியர்கள் மட்டும் தான்.
தன்னிடம் படித்த ஒரு மாணவன் தற்போது ஒரு துறையில் சான்றோனாக இருக்கிறான் என்று பிறர் சொல்லி கேட்கும் போது அவர்களுக்கு அது தான் பெரிய வெற்றி மகிழ்ச்சி.
என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று பல துறைகளில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் யூஜிசி சேர்மன் முனைவர் திரு. தேவராஜ், கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிசாமி, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர். பக்தவச்சலம், டாக்டர். மாணிக்கராஜ் குழந்தைகள் நல மருத்துவர், முன்னாள் அமைச்சர் திரு கண்ணப்பன், சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர், டாக்டர். ரமணி, நீலகிரி பிரபல டாக்டர்கள் பி. சுதர்சனம், டாக்டர். பி. பத்பநாபன் போன்றவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தற்போதும் மருத்துவர்களாகப் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எண்ணும் போதெல்லாம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிது.
கே: கலைக்கதிர் மாத இதழில் தாங்கள் இணைந்தது பற்றி?
1951 ஆம் ஆண்டு கலைக்கதிர் இதழ் தொடங்கப்பட்டது. நான் அப்போது சென்னையில் கல்வி கற்று கொண்டிருந்தேன். இவ்விதழில் அப்போது திருவாளர்கள் டாக்டர் ஜீ. ஆர். தாமோதரன், பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி, தா.ஏ ஞானமூர்த்தி, மா.ரா.போ குருசாமி, இருசு பிள்ளை, ராஜமணிக்கம் போன்றவர்கள் பணியாற்றி கொண்டிருந்தார்கள்.
இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அறிவியல் தமிழ் கலைக்கதிர் இதழைத் தொடங்கி நம்முடைய ஆசிரியர்களிடம் கட்டுரையை வாங்கி இப்புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள்.
பத்திரிகை தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் கோவைக்கு வருகிறேன். அப்போது நானும் இந்த இதழில் தாவரவியல் சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். தமிழில் தாவரவியல் பற்றிய கட்டுரைகள் எழுதியது அக்காலத்தில் மிகவும் வரவேற்பினைப் பெற்றது. பிற்காலத்தில் அதை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டேன். இது பல கல்லூரிகளுக்கு பாடத்திட்டமாக இருக்கிறது.
மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் இணைந்து தொடங்கிய இந்த கலைக்கதிர் இதழ் இன்றும் புகழ்பெற்ற இதழாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.[hide]
கே: உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தது குறித்து?
43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி முடித்து, என்னுடைய பணி ஓய்வுக்குப் பின்னர் என்னுடைய மக்களின் ஆசைக்கிணங்க உலகச் சுற்றுப்பயணம் செய்ய நானும் என்னுடைய மனைவி சாரதாதேவியும் முடிவெடுத்தோம். என்னுடைய மனைவின் தந்தை மற்றும் அவரின் தந்தை எல்லோரும் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னுடைய மாமனார் திரு. எம்.என். நாயுடு அவர்கள் 1906 ஆம் ஆண்டு பசிபிக் கடலிலுள்ள பீஜி தீவுக்கு சென்றார். அங்கு அதற்கு முன்னே ஆங்கிலேயேர்கள் அங்கு சென்று கரும்பு சாகுபடி செய்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து போனவர்கள் அங்குள்ள காட்டையெல்லாம் சுத்தம் செய்து விவசாயம் செய்துள்ளார்கள். இதில் என்னுடைய மாமனார் திரு. எம்.என் நாயுடு அவர்களும் ஒருவர். ஏழு மாத காலம் எங்களுடைய சுற்றுப்பயணம் அமைந்தது. ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியிசீலாந்து இன்னபிற நாடுகளுக்குச் சென்றோம்.
உலகம் முழுவதும் சுற்றும் பொழுது ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு அதிசியங்கள், ஆச்சரியங்கள் பார்க்க முடிந்தது. அழிந்து போன உயிரினங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் அனுபவமாக கொண்டு இந்தியாவிற்கு வந்த பின்னர் உயிரியல் அறிஞரின் உலகப் பயணம் என்ற தலைப்பில் 60 மாதங்கள் தொடர் கட்டுரையாக எழுதி கலைக்கதிரில் வெளிவந்தன.
கே: உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி?
நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். அறிவியலைத் தவிர தமிழில் நிறைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன். குறிப்பாக கம்பராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருக்குறள், பனிரெண்டு திருமுறைகள் போன்ற புத்தகங்கள் என்னை ஈர்த்தவை.
கே: பணி ஓய்வுக்குப் பின்னர் நீங்கள் செய்த வேலைகள் பற்றி?
என்னைப் பொறுத்தவரை பணிக்குத்தான் ஓய்வே தவிர என்னுடைய வயதுக்கு இல்லை. இப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன். நான் பெற்றது, கற்றது போன்றவற்றை முடித்தளவிற்கு இந்த சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன். இதனால் உதயமானது தான் இந்த உயிர் பன்மை சூழல் வேளாண்மை என்பதாகும்.
இந்த வேளாண்மை ஒரு நிலத்தில் பல தானியப்பயிர்கள் விளைவித்தல் முறைகளாகும். இது நீடித்த நிலைத்த தன்மையுடைய விவசாயம் ஆகும்.
இது விவசாயிகளுக்கு குறைந்த பொருட் செலவு தான் ஆகும். தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த வகை விவசாயத்தை செய்து கொள்ளலாம்.
இந்த விவசாயம் எப்போதும் வருமானம் கொடுத்துக் கொண்டே இருக்கும். வார விவசாயம் கீரை வகைகள், முருங்கை, வெண்டை, தக்காளி போன்றவை 15 நாளுக்கானது, 45 நாளுக்கான விவசாயம் தேங்காய், மாதகணக்கில் அறுவடை செய்வது மலர்களும், பழங்களும் இப்படி எப்பொழுதும் விவசாயம் செய்தால் வருவாய் தரக்கூடியதாக இருக்கும்.
கே: உயிர் பன்மை சூழல் வேளாண்மை பற்றி சொல்லுங்கள்?
சூரிய ஒளி சரிவிகிதத்தில் அறுவடை செய்வது தான் அடுக்குப் பயிர் வேளாண்மை. சூரிய வெளிச்சம் இருந்தால் தான் தாவரங்களில் உணவு உற்பத்தி நடைபெறும்.
மழை நீரை சரியாக சேகரிக்க வேண்டும். நீரை நிலைநிறுத்த கூடிய அளவிற்கு அந்த மண்ணை முறை படுத்த வேண்டும்.
மரத்தின் வேர்கள் வெளியே தெரியக் கூடாது. வெளியே தெரியாத படி அவற்றை மண் கொண்டு மூடுதல் வேண்டும்.
மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் மரங்கள் இருக்க வேண்டும். அது தண்ணீர் தேங்ககூடிய இடம் அல்லது மேடான இடமாகவும் இருக்கலாம். அங்கெல்லாம் மரம் இருக்க வேண்டும். அப்போது தான் மழை நீர் சேமிக்கப்படும். ஏழு விதமான மரங்கள் இருக்கின்றன. அவை வருடத்திற்கு ஏற்றார் போல் பலன் தரும். சவுக்கு, கடம்பா, பெரு மரம், குமிழ்தேக்கு, பலாமரம், தேக்கு செம்மரம், மாமரம் போன்றவை இருக்கின்றன. இவை உரிய காலத்தில் அறுவடை செய்ய பட வேண்டும்.
பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல் வேண்டும். உதாரணமாக, இந்த ஆண்டு நெல்லை விதைக்கிறீர்கள் என்றால், அடுத்த பட்டத்தில் பயிறு வகைகளை பயிரிட வேண்டும். இப்படி பயிரிடும் போது மண் வளம் காக்கப்படும். இப்படி எண்ணற்ற நன்மைகள் கொண்டது தான் உயிர் பன்மை வேளாண்மை. இதை அனைவரும் பயன்படுத்தி நல்லதொரு வளர்ச்சியை அடைய வேண்டும். வேளாண்மையில் நீடித்த நிலைத்த வருமானம் பெற உயிர் பன்மை சூழல் வேளாண்மையை உழவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Cover Story