நிதானம்
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !
பரபரப்பான வாழ்க்கை பயணத்தில் ஒரு நாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, சீரழிந்துவரும் இந்த சமூகத்தின் அவலங்களை சற்றே சிந்தித்து கொண்டிருந்தேன்.
என் வீட்டு நிலைப்படியில் நிழலாடியது. ஓடிச்சென்று பார்ப்பதற்குள் ஒசைப்பட்டது அழைப்பு மணி.
கதவை திறந்து கண்டபோது – நிழல் நிஜமானது.
நான் வசிக்கும் பகுதியிலுள்ள, எனக்கு தெரிந்த சில முகங்களும், தெரியாத சில முகங்களுமாக வணக்கம் வைத்தார்கள். பதில் வணக்கத்துடன் உள்ளே வாருங்கள் என்று கூறி அவர்கள் வசதியாக அமர்வதற்காக நாற்காலிகளை நகர்த்திப்போட்டேன்.
வயதில் மூத்த பெரியவர் ஒருவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தார்.
அருகில் உள்ள ஆலயத்தில் விழா எடுப்பதாகவும், அன்னதானம் ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், பண உதவியாக என் பங்களிப்பு இருந்தால் பயனாக இருக்குமென்றும் – நான் போகும் காலத்தில் கிடைக்கும் புன்னியதுடன் கூடவே – வாழும் காலத்திலேயே பலரின் வாழ்த்தும் கிடைக்கும் என்று பீடிகை போட்டார்.
வேதாத்திரி மகரிஷியின் சீடன் நான். முறையான வாழ்க்கை முறையே முன்னேற்றத்தின் முதுகெலும்பு என்ற கொள்கை கொண்டவன். அதனால் தான் பலரின் வாழ்க்கை வளமாக அமைய பயிர்ச்சி வகுப்புகளையும் எழுத்துப்பணியையும் இரு கண்களாக கொண்டிருக்கிறேன். ஆகவே தான் எப்போதும் நான் கொடுக்க நினைப்பது அறிவு தானமே என்று அறிவுறுத்தினேன்.
முகத்தில் ஏமாற்றம் தொனிக்க – தன் துண்டால் துடைத்துக்கொண்டு -“மிகவும் நல்லது. ஒரு மணி நேரம் சிறப்பு சொற்ப்பொழிவுக்கு ஏற்பாடு செய்கிறேன்” – என்று சொல்லி தேதியை குறித்துக்கொண்டு திருப்தியுடன் சென்றார்.
அவர் அன்னதானம் என்று சொன்ன வார்த்தை என் சிந்தனையின் செல்களை சீண்டிவிட்டது.
“தானம்” – இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற வாசகத்தின் சிறிய வடிவம்.
“தானம்” – இளகிய மனது கொண்டவர்களின் இதய துடிப்பு
“தானம்” – அகங்காரமற்ற மனிதர்களின் அறிவு கொடை.
“தானம்” – கொடுத்தவனின் மனதில் தோன்றும் மகிழ்ச்சி.
“தானம்” – எடுத்துக்கொள் என்று சொல்லும் மனிதாபிமானத்தின் மறு பெயர்.
“தானம்” – என்னாலும் முடியும் என்ற எண்ணத்தின் எதிரொலி.
ஒருபுறம்,
ஆயிரமாயிரம் வருடங்களாக நமது அறிவுக்குள் திணிக்கப்பட்ட தகவல்களின் அணிவகுப்பு.
கண்ணனின் “தானத்தால்” குசேலனின் வாழ்வில் குதூகலம் என்ற பக்தி வாசகம்.
கர்ணனின் “தானத்தால்” யுகங்கள் கடந்த புகழ் என்ற எதார்த்தம் சொல்லும் வாசகம்.
பாரியின் “தானத்தால்” முல்லைபூ மலர்ந்தது என்ற மன மகிழ்ச்சி வாசகம்.
பேகனின் “தானத்தால்” மயிலும் மகிழ்ந்தது என்ற இறக்க உணர்ச்சி வாசகம்.
மன்னர்களின் “தானத்தால்” கவிதையும், கவிஞனும் நிலைதார்கள் என்ற வரலாற்று வாசகம்.
ஞானிகளின் “தானத்தால்” அறிவும், அமைதியும் ஆன்ம தெளிவும் கிடைத்தது என்ற ஆன்மீக வாசகம்.இவையெல்லாம் “யாசகங்கள்” பெருமைப்படும் “வாசகங்கள்” அல்லவா.
மறுபுறம்,
இலவசாமாக கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்.
கல்வியுதவி அளிக்கும் கார்பரேட் நிறுவனங்கள்.
இரத்த தானம் என்ற பெயரில் எத்தனையோ உயிர்களை காப்பாற்றும் இளைய நெஞ்சங்கள் – இளகிய நெஞ்சங்கள்.
தானத்தை பல்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் அறிந்தாலும், அனைத்திலும் அடி நாதமாக இருப்பது ஒன்று தான்.
“நிதானம்”– என்பதே நிதர்சனமாக தெரியும்!
உணர்ந்தவர்கள் உண்மையை உணர்வர்.
கண்ணனின் “நிதானம்” குசேலனின் பாக்கியம்.
கர்ணனின் “நிதானம்” புகழின் மேன்மை
பாரியின் “நிதானம்” மலர்களின் மகரந்தம்
பேகனின் “நிதானம்” உயிர்களின் உயிர்ப்பு
மன்னனின் “நிதானம்” கலையின் வாழ்வு.
ஞானியின் “நிதானம்” ஆன்ம வெளிச்சத்தின் வளர்ச்சி.
நிலையில்லாத வாழ்வில் நிதானத்தை கடைபிடித்தால் கிடைக்கும் நிச்சயமான வெற்றி – புகழ்!
ஆக, தானத்தில் சிறந்தது “நிதானம்” என்பதே என் ஒரு வரி உத்தரவாதம்.
நிதானமாக இருந்தால் சிறக்க முடியுமா? என்ற சிறு கேள்வி சில சஞ்சலப்பட்ட மனங்களை சந்திக்கலாம்.
விடை இதோ!
“முடியும்” “நிச்சயமாக முடியும்”
இந்த இதழை மேலும்