திரு அந்தோணிராஜ்
நிறுவனர், விண்ட் கேர் இந்தியா பிரைவேட் லிமிடேட்
சோலார் கேர் இந்தியா பிரைவேட் லிமிடேட்
உடுமலைப்பேட்டை
திட்டமிடுதலே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் மிப்பெரிய ஆயுதம். அதைச் சரியாகப் பின்பற்றினால் எதையும் சாதிக்க முடியும் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருபவர்.
சாதிப்பைத் தேடிப் போகாமல், தன்பின்னே சாதிப்பை வலம் வர வைப்பவர்.
புதிய முயற்சி என்பது வெறும் வார்த்தைகளில் காணாமல் வாழ்க்கையில் கண்டு, இன்று வரலாற்றில் தனக்கென்று வந்து ஒரு இடத்தைப் பிடித்து தனிமுத்திரைப் பதித்து வருபவர்.
உன்னைப் போல பிறரையும் நேசி என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் குணத்தை உடையவர்.
இறைவன் நமக்கெல்லாம் கொடுத்துள்ள வரப்பிரசாதங்களில் இயற்கை வளம் அளப்பறியது. அந்த வகையில் இயற்கையின் சக்தியைப் புரிந்து கொண்டு காற்றாலைத் தொழில் நிறுவனம், சோலார் தொழில் நிறுவனம் போன்றவற்றை நிறுவி அதில் சாதித்து வரும் விண்ட் கேர் மற்றும் சோலார் கேர் நிறுவனத்தின் தலைவர் திரு அந்தோணிராஜ் அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி நாம் அவருடன் பயணிப்போம்.
கே. உங்களைப் பற்றியும் கல்வி மற்றும் முதல் பணிவாய்ப்பு பற்றியும் கூறுங்கள்?
என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகிலுள்ள நடுவைக்குறிச்சி என்னும் சிற்றூர். என்னுடைய தொடக்கக் கல்வியை R.C. நடுநிலைப்பள்ளி நடுவைக்குறிச்சியிலும், சாயர்புரத்தில் உள்ள போப் நினைவு பள்ளியில் மேல்நிலைக்கல்வியும், இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் பிரிவிலும் தேர்ச்சி பெற்றேன்.
என்னுடைய தந்தை B. செந்தூர்பாண்டியன் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் தாயார் R. ஜோதி, அரசு சுகாதார செவிலியராகப் பணியாற்றியவர். ஒரு சகோதரர் மற்றும் 3 சகோதரிகள். எனக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. என் துணைவியார் திருமதி J.ஜெபஸ்டின் ஜெயந்தி. எனக்கு இரண்டு குழந்தைகள் A.ஜோ மரியா, A.ஜோ பிளஸ்ஸி.
என்னுடைய தொடக்க பணிவாழ்வு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகளிலும், அதைத் தொடர்ந்து தாழையுத்து சங்கர் சிமெண்ட் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றேன். பின்னர் 1993 ம் ஆண்டு நாகர்கோவிலின் ஆரால்வாய்மொழி பகுதிகளில் காற்றாலை நிறுவிவரும் சூழல். புதிய தொழில் வாய்ப்பாக இருந்தபடியால் அன்று முன்னணியில் இருந்த NEPC-MICON நிறுவனத்தில் அடிப்படை ஊழியராகக் கட்டுமான குழுவில் பணிக்கு மாதம் சம்பளம் ரூபாய் 500 என்ற அளவில் வேலைக்குச் சேர்ந்தேன். தொடர்ந்து அங்கு பணியாற்றும் சூழல் 1994 ம் வருடத்தில் சிறந்த பணியாளராக நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு குழுத்தலைவராகப் பதவி உயர்வு பெற்றேன்.
அப்போது, கோயமுத்தூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் புதிய காற்றாலை அமைக்கும் பணிவாய்ப்பு NEPC-MICON நிறுவனத்திற்கு கிடைத்தது ஆகவே, அந்தச் சூழலில் கட்டுமானப் குழுத் தலைவராகப் பணி உயர்வால் உடுமலைப்பகுதிகளில் பணியைத் தொடர்ந்தேன். மேலும், பல நிலைகளைத் தாண்டி PROJECT MANAGER அக பதவி உயர்வு பெற்று பணியாற்றினேன்.
கே. உங்களின் விண்ட் கேர் நிறுவனத்தின் கிளை எங்கெல்லாம் அமைந்துள்ளது?
ஒரு நிறுவனத்தின் பயன் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.
எங்கள் நிறுவனத்தின் தலைமையகம் என்று பார்த்தால் உடுமலைப்பேட்டை அருகில் குடிமங்கலத்தில் அமைந்துள்ளது.
ஆனால், இதன் கிளை என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பல இடங்களில் உள்ளது.
தமிழகத்தில் கோயமுத்தூர், திருப்பூர், பழனி, தாராபுரம், தேனி, நாகர்கோவில், சுரண்டை, தேவர்குளம் பகுதிகளிலும் குறிப்பாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத், இராஜஸ்தான் போன்ற ஒன்பது மாநிலங்களிலும், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற ஐந்து அயல்நாடுகளிலும் உள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, மெக்சிக்கோ மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் புதிய பணித்தளம் அமைப்பதில் முயற்சி எடுத்து வருகிறோம்.
கே. ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய நீங்கள், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?
1999 ம் ஆண்டுகளில் காற்றாலை இயந்திரங்களில் உள்ள ஜெனரேட்டர்களில் ஏற்படும் பழுதுகளால் பல காற்றாலைகள் செயல் இழந்து நின்றுவிட்டது.
இந்த ஜெனரேட்டரை மாற்றுவதற்கு பெரிய கிரேன் (பழுதூக்கி) தேவை. மேலும், ஒரு காற்றாலை சீரமைக்க ரூ. 5 இலட்சம் கிரேன் வாடகை மற்றும் போக்குவரத்திற்கு சுமார் ரூ. 3 இலட்சம் தேவைப்பட்டது. இது காற்றாலை நிறுவனங்களுக்கு மிகப் பெரிய இழப்பாகவும் அதிக செலவீனம் கொண்ட வேலையாகவும் மாறியது. மேலும் பல நாட்கள் காற்றாலைகள் செயல்படாமல் நிற்பதால் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. காற்றாலை உரிமையாளர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டது.
இந்த சூழலில் Chemplast windfarm என்ற நிறுவனத்தினர் என்னை அணுகி கிரேன் பயன்படுத்தாமல் 250 கிலோ வாட் காற்றாலையிலுள்ள ஜெனரேட்டரைப் பழுது நீக்கி தரமுடியுமா? என கேட்டார்கள். உடனடியாக, எனக்கு கிடைத்த வாய்ப்பை சவாலாக ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் நான் முந்தைய நிறுவனத்தில் 1996 ஆம் ஆண்டு பணியாற்றும் போது இதே போன்ற தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் போது அந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.
அதன் மூலம் பின்னடைவும், மனச்சோர்வும் அடைந்தேன். ஆனால் இந்த தோல்வி என் வாழ்வில் எப்படியாவது நான் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகப்படுத்தியது. ஆகவே பல வருட காற்றாலையில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் புதிய Derrik ஒன்றை கண்டுபிடித்து மிகக் குறைந்த செலவில், குறித்த நேரத்தில் ஜெனரேட்டரை இந்திய அளவில் முதன் முறையாக கிரேன் உதவி இல்லாமல் எங்களுடைய வின்ட்கேர் டெக்னாலாஜி வழியாய்ச் செய்து முடித்தோம்.
இந்த முதல் முயற்சி வெற்றியடைந்ததால் நண்பர்கள் மற்றும் பிற நிறுவனத்தின் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைக்க ஆரம்பித்தன.
இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இதே பணியைச் செய்ய அழைப்பு விடுத்தனர். இதுவே நிறுவனத்தின் தொடக்கமாக அமைந்தது. அன்று 4 நபர்களோடு ஆரம்பிக்கப்பட்டது, இன்று 480 பணியாளர்களின் குடும்பத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு வருடமும், நூற்றுக்கணக்கான புதிய இளம் பொறியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறோம்.
கே. நீங்கள் தொழில் தொடங்கும் பொழுது உங்களின் பொருளாதாரச் சூழல் எப்படியிருந்தது, அதை எவ்வாறு சமாளித்தீர்கள்?
இது மிகவும் நல்ல கேள்வி. ஒரு நிறுவனம் தொடங்குவது என்பது சாதாரண காரியமல்ல, நிறைய உழைப்பும், பொருளும், மூலதானமும் தேவைப்படுகிறது. அப்போது இந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்றால் அன்றைய காலக்கட்டத்தில் சுமார் 2 இலட்சம் தேவைப்பட்டது. ஆனால் என் கையில் இருப்பது அன்றைய மாதச் சம்பளம் ரூ. 5000 மட்டுமே இருந்தது. இதை வைத்துக் கொண்டு எவ்வாறு செயல்படுவது என எண்ணி என் மனம் சோர்ந்து, நான் தங்கியிருந்த அறையில் சென்று படுத்துவிட்டேன்.
அப்பொழுது என் அறையில் இருக்கும் ஒரு வாசகம் என்னை உற்சாகப்படுத்தியது. அது என்ன வார்த்தை எனில் உன் தேவனால் எல்லாம் கூடும் (with God,all things are possible) என்ற இவ்வார்த்தையைப் படித்தவுடன் எனக்குள் புதிய நம்பிக்கை பிறந்தது. இந்த வார்த்தை எங்கள் நிறுவனத்தின் விருது வாக்காக மாற்றினோம். இன்றளவும் நாங்கள் செயல்பட, எங்களை உள்ளிருந்து நம்பிக்கை அளித்து இயக்கிறது என்றால் அது மிகையல்ல.
அப்போது என்னுடைய சகோதரர்கள் மற்றும் என்னுடைய நண்பர்கள் 4 பேர் உதவியுடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். இந்த வேளையில் நான் என்னுடைய இந்தப் புதிய திட்டத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவரும் அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்க முன் வந்தார்கள்.
இந்த இதழை மேலும்