– 2017 – December | தன்னம்பிக்கை

Home » 2017 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    தோல்வியைத் தொடர விடலாமா?

    இலட்சிய இளைஞர்களே வென்று காட்டுவோம் வாருங்கள் களத்திற்கு. தோல்வி பாடம் கற்றுக் கொள்ளுங்கள். இப்பாடம் கசப்பானதாகக்கூட இருக்கலாம். இப்பாடம் கற்ற அனுபவம் உண்டா?

    வெற்றியைச் சந்திக்கப் போய் எதிர்பாராமல் தோல்வியைச் சந்தித்திருப்பாய். ஆனால் அதிலுள்ள பாடத்தினையும், படிப்பினைகளையும் படித்திருக்கமாட்டாய்.

    வெற்றி எங்கே இருக்கிறது என்றால் இதன் எதிர்ச் சொல்லும், எதிரிச்சொல்லுமான தோல்விக்குள் இருக்கிறது. இது காலம் காலமாக குடியிருக்கின்ற இடம் இதுதான். இதைத் தழுவியவர்கள் தோல்விக்குள் தோல்வி மட்டும் தான் இருக்கிறது என்று எண்ணிவிடக் கூடாது. இதன் எதிர்ச்சொல்லும் இருக்கிறது என்பதை உண்மைபடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வெற்றியடைந்தவனுக்கு எப்படி  வெற்றியடையலாம் என்கிற ஒன்று மட்டும் தான் தெரியும். ஆனால் உனக்கோ எப்படி வெற்றியடையலாம். எப்படித் தோல்வியடையலாம் என்கிற இரண்டும் தெரியும்.

    மனிதனுக்கு நிரந்தரமான தொடர் வெற்றி கிடைக்க ஒன்றை எப்படிச் செய்தால் தோல்வியடைவோம் என்பதை முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் என்றும் தொடர் வெற்றியைக் கைப்பற்றலாம். இல்லையேல் வெற்றி ஒன்றுடன் நின்றுவிடும்.

    நீ தொடரைக் கைப்பற்றுவதற்கு முன்பு அதில் கற்ற பாடமே பக்க பலமாகத் திகழும். உனக்குக் கிடைத்த இச்சொல் உன்னை மாற்றிக் கொண்டு போராடக் காரணமாயிருக்கும்.

    இச்சொல்லில்  கிடைத்தது ஏமாற்றமல்ல, மாற்றம். இம்மாற்றம் உன்னை சாதனையாளனாக மாற்றும். உன்னைத் துவட்டினாலும் அதற்கேற்ப சளைத்துவிடக்கூடாது. பல நேரங்களில் இச்சொல்லை அடைந்தால்தான் இதன் எதிர்ச்சொல்லையும் அடைய முடியும்.

    கணக்குப் பாடத்தில் சூத்திரங்கள் சரியாகத் தெரிந்தால் தான் அக்கணக்கைச் சரியாகப் போட்டு முடிக்க முடியும்.

    இது எதன் குறியீடு என்று அறிவியல் பாடத்தில் குறியீடுகளைத் தெரிந்திருந்தால் தான் முழு அறிவியலையும் படித்துக் கற்று முடிக்க முடியும்.

    உலக வரலாறுகளில் முழு வரலாற்றையும் மிச்சம் மீதி வைக்காமல் முழுவதுமாகக் கற்றிருந்தால் தான் வரலாற்றுக் கல்வி கற்றதற்குச் சான்றாகும்.

    தமிழ் இலக்கண இலக்கியங்கள் பாக்கி இல்லாமல்  படித்தறிந்தவனுக்குத்தான் நூறு சதவீத தமிழ் தெரியும்.

    இதுபோல தான் வெற்றியும், அவ்வெற்றியை முழுவதுமாக அடையவும், அதன் சூட்சுமங்களையும் நெளிவு சுளிவுகளையும் முழுமையாகத் தெரிந்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

    நல்லதைத் தழுவப் போய் தீயதைத் தழுவிய அந்தத் தோல்வியைச் சந்தித்துப் பழகிப் பார்க்கத்தான் வேண்டும். இவைகளைக் கடந்தால் தான் வாழ்வில் முழு வெற்றியையும் முழுவதுமாக உணரமுடியும். இல்லையேல் முதல் வெற்றியே பெற்றிருந்தாலும் அவ்வெற்றி அரைவெற்றி என்றாகி அவ்வரை வெற்றியை உணர்வுகளுடன் உணர முடியாமல் வெறும் மூக்குடன் நுகர்ந்ததாக ஆகிவிடும். இந்த அரை குறை வெற்றி அடுத்த முறை வீழ்ச்சியை ஏற்படுத்தக் காரணமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த முறை அடுத்த முறையும், என்றும் உயர்ச்சியை உண்டாக்கக் காரணமாக இருக்கும்.

    இன்று எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. எப்படி நடந்தது என்று ஆராய்ந்தால், வாகனத்தைச் சரியாக ஓட்டத் தெரியாததனாலும் விபத்து நடந்திருக்கிறது என்றும், நன்றாக ஓட்டத் தெரிந்தவன் ஓட்டுவதை மறந்து விட்டு கவனக் குறைவுடன் வண்டியை ஓட்டியதாலும் விபத்து நடந்துள்ளது என்றும் ஆராய்வின் முடிவில் உண்மையாகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே,

    1. வாகனத்தை நன்றாக ஓட்ட வேண்டும் என்ற நோக்கம் உள்ளவன் அதில் அமர்ந்து அதை இயக்கிப் பயணித்து பழகித்தான் ஆக வேண்டும்.
    2. பழுகும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படலாம். ஆனால் இந்த விபத்துக்களைச் சந்தித்தால்தான் அவன் நன்றாகவும் ஓட்டிப் பழக முடியும்.

    இந்த இதழை மேலும்

    டிசம்பர் மாத உலகதினங்கள்

    1.  உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) டிசம்பர் – 1

    ‘உலக எய்ட்ஸ் தினம்’ 1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது,  எங்காவது, யாருக்காவது வரும் நமக்கு வராது என்ற நிலை மாறி எய்ட்ஸ் எங்கும் வரலாம், எவருக்கும் வரலாம் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது,  சாதி, மதம், மொழி பேதங்களைக் கடந்து, நாடு, கண்டம் ஆகிய எல்லைகளைத் தாண்டி ஒட்டு மொத்த உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பேராபத்து எய்ட்ஸ்,  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதன் காரணமாகப் பல நோய்களுக்கு ஆளாவதற்கு பெயர்தான் எய்ட்ஸ், எய்ட்ஸ் என்பது‘Acquired Immune Deficiency Syndrome’ என்பதன் சுருக்கம், எய்ட்ஸ் மேலும் பரவாது தடுக்க, அதன் பாதிப்பைக் குறைக்க, பாதிக்கப்பட்டோரிடம் பரிவு காட்ட மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கம்,   கிடைத்தற்கரிய மனிதப்பிறவி கிடைத்தும் வாழும் வகை தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத்தோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்கிறது,  ‘ஓளி படைத்த கண்ணினாய் வா வா வா’ என்று மகாகவி பாரதி அழைத்த இளைஞர்கள் பலர் ஓளி இழந்த கண்களோடு, வலுவிழந்த உடலோடு பொன்னான வாழ்வை மண்ணாக்கிக்  கொண்டிருக்கிறார்கள்.  1981 வரை அறியப்படாத ஒன்றாக இருந்த எய்ட்ஸ் இன்று மனித குலத்துக்கே ஒரு சவாலாக விசுவரூபமெடுத்துள்ளது.  இந்த நிலை தொடருமேயானால் ‘மனிதன் என்றொரு இனம் ஒரு காலத்தில் இருந்தது’என்று வரலாறு சொல்லுமளவுக்கு மானிட வர்க்கம் வேரற்றுப் போகும்.

    எச்.ஐ.வி, பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா.  35% எய்ட்ஸ் நோயாளிகள் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள்,  86% பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாகவும், 4% எச்.ஐ.வி, உள்ள கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்தும், 2% சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதாலும், 2% பரிசோதிக்கப்படாத இரத்தம் மூலமாகவும் மீதி 6% பிற காரணங்களாலும் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    எச்.ஐ.வி.கிருமி தாக்கப்பட்ட ஒருவர் உடனடியாக எய்ட்ஸ் நோயாளியாகி விடுவதில்லை. அக்கிருமியின் காரணமாகப் பலவித நோய்கள் உருவாகிக் கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு செல்லும் போதுதான் அவர் எய்ட்ஸ் நோயாளி என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். இக்கிருமியால் தாக்கப்பட்ட ஒருவருடன் பயணம் செய்யலாம், அவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடலாம், கை குலுக்கலாம்,  ஆபத்து ஏதும் இல்லை,  ஆனால் அத்தகையோருடன் உடலுறவு, ஓரினச் சேர்க்கை, ஊசி பரிமாறிக் கொள்ளுதல், அவர்களது ரத்தத்தைச் செலுத்திக் கொள்ளுதல் ஆகியவை கூடாது,  அவை ஆபத்தானவை,  சுருங்கச் சொன்னால் ரத்தம், விந்து, பெண் பிறப்புறுப்புத் திரவங்கள், உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் வாயிலாக எச்.ஐ.வி.கிருமி பரவுகிறது.

    எச்.ஐ.வி.கிருமியை ஒரு கூலிப்படைக்கு ஒப்பிடலாம்.  ஓர் அரண்மனைக்குள் பணிபுரியும் காவலர்களை கூலிப்படையினர் திடீரென்று நுழைந்து காவலர்களை வீழ்த்தி விட்டால் அதன் பிறகு யார் வேண்டுமானாலும் அரண்மனைக்குள் எளிதில் புகுந்து விடலாம். அது போல எச்.ஐ.வி.கிருமிகள் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் குறிப்பிட்ட வகை இரத்த அணுக்களை அழித்து விடுகின்றன,  இதனால் காச நோய், காய்ச்சல், ஜலதோசம், வாந்தி, பேதி போன்ற பலவித நோய்கள் அவர்களைச் சென்றடைகின்றன.  எச்.ஐ.வி.யின் இறுதிக் கட்டம் எய்ட்ஸ்,  சத்தான ஆகாரமும், மகிழ்ச்சியான சூழலும், குடும்பத்தாரின் அரவணைப்பும் கிடைத்தால் மட்டுமே மருந்துகளின் உதவியுடன் தற்காலிகமாக அதிலிருந்து விடுபட்டு வாழ முடியும்.

    எச்.ஐ.வி.உள்ளோரின் உணர்வுகளை மதிக்க வேண்டும், அவர்தம் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்,   அவர்களது பணம், சொத்து, நகை நட்டு போன்ற உடமைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக் கொள்ள அஞ்சுவதுதான் கொடுமையிலும் கொடுமை.  குறிப்பாகப் பெண்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாவதால் ஐ.நா.எய்ட்ஸ் எதிர்ப்பு அமைப்பு 2005ம் ஆண்டை ‘பெண் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயாளிகள்’ என்ற தலைப்பில் உலக எய்ட்ஸ் தினத்தை அனுசரித்தது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சீரழித்து விடக்கூடியது எய்ட்ஸ்,  தென்னாப்பரிக்க நாடுகள் சிலவற்றில் பஞ்சம் ஏற்பட்டதற்குக் காரணம் எய்ட்ஸ் எனக் கூறப்படுகிறது.  காரணம் எச்.ஐ.வி.கிருமி இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்குவதால் விவசாயத்தில் ஈடுபட இளைஞர்கள் இளைஞர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு மக்களை விழுங்கி விட்டது எய்ட்ஸ்,  வைத்திருந்த சேமிப்புகள் மருந்து மாத்திரைகளுக்குச் செலவானதே ஒழிய வளர்ச்சிக்கு மூலதனமாக மாறவில்லை.

    எய்ட்ஸ்சால் பாதிக்கப்பட்டோரைத் தொடுவதாலோ, சேர்ந்து பணிபுரிவதாலோ, உணவு, உடை மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்துவதாலோ பரவாது,  திருமணத்திற்கு முன் உடலுறவைத் தவிர்த்தல், திருமணத்திற்குப் பின் தாம்பத்தியத்தில் ஒழுக்கம், பரிசோதிக்கப்பட்ட இரத்தம், ஊசி, பிளேடுகளை பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் இதனைத் தவிர்க்கலாம்,

    எய்ட்ஸ் பற்றிய அச்சம் இருந்தால் தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்,  அரைகுறை வைத்தியர், செக்ஸ் வைத்தியர் போன்றோரிடம் செல்லக் கூடாது.  போலி மருத்துவர்களின் விளம்பரங்களில் ஏமாறாமல் அரசு நடத்தும் ஆலோசனை மையங்களை அணுக வேண்டும்.  எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ அவசியமில்லை.  அவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை,  அவர்களை மனிதத் தன்மையுடனும், அன்புடனும் அணுகி அவர்களுக்கு உதவ வேண்டும்,  அவர்களைத் தொடுவதால் அன்பை அர்த்தப்படுத்தலாம், பழகுவதால் பண்பை ஆழப்படுத்தலாம். இன்றைய நிலையில் இளைஞர்களை மிக அதிக அளவில் கொண்டிருக்கும் நாடு இந்தியா.  இவர்கள் வளர்ந்து வரும்போது எச்.ஐ.வி. எய்ட்ஸ் தாக்கத்திற்கு உள்ளாகி பேராபத்துகளில் சிக்கிக் கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.  இதிலிருந்து இந்த இளைஞர்களைக் காப்பாற்ற அவர்களைச் சுற்றி பெரிய தடுப்புச் சுவர் ஒன்றை அமைக்க முடியாது என்றாலும் ஏற்படக் கூடும் பேராபத்துகளை விளக்கிச் சொல்லி, சரியான தகவல்களை எடுத்துக் கூறி, நல்ல பழக்க வழக்கங்களை வகுத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு கவசத்தை அளிக்க இயலும்.

    2005-06ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் நிதி ஆதரவில் ‘ரெட் ரிப்பன் கிளப்’ தொடங்கப்பட்டு உள்ளது, எய்ட்ஸ் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற ‘கல்வி மற்றும் விழிப்புணர்வு‘ தான் சரியான சமூக மருந்து,   எய்ட்ஸ் பிடியில் எளிதில் சிக்கிக் கொள்பவர்கள் இளைஞர்கள்,  இளைய பாரதம் இதற்குப் பலியாகி விடாமல் பாதுகாக்க அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகளும், அரசு சாரா அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் பன்முனைப் பிரச்சார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறது. விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள், தெருக்கூத்துகள் ஆகியவற்றில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்கள் இடம் பெறச் செய்ய வேண்டும்.  நாட்டு நலப்பணித்திட்டம், ரெட் ரிப்பன் கிளப், செஞ்சிலுவை சங்கம், நேரு யுவ கேந்திரா போன்ற இளைஞர் அமைப்புகள் அரசு இயக்கங்களுடன் இணைந்து மக்களிடையே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    2. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day for Disabled Persons) டிசம்பர் – 3

    உடல் ஊனமுற்றோர் தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் அதன் போக்கு ஆகியவற்றை உலகம் அறிந்து கொள்ளச் செய்து ஒத்துழைப்பைப் பெறுவதும், ஊனமுற்றோரின் உரிமைகளை எடுத்துரைப்பதுமே ஊனமுற்றோர் தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.  1992 ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொண்டபடி டிசம்பர் 3ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1983 முதல் 1992 வரை ஊனமுற்றோருக்கான பத்தாண்டு என ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டது.

    இந்த இதழை மேலும்

    மணவயல்

    பசுமரத்தாணி:-

    நண்பர்கள் என்றுஒருதிரைப்படத்தில்… நகைச்சுவைநடிகர்வடிவேலுஅவர்கள்… “நீ புடுங்கிற ஆணி எல்லாமே… தேவையில்லாதது தான்”  என்று தன்னிடத்தில்… வீடு… பராமரிப்பு செய்து வர்ணம் பூசும்தொழில் கற்றுக்கொள்ள வந்திருக்கும் பழகுனார்களில் ஒருவரிடம் சொல்தாக ஒருவசனம் அமைந்திருக்கும்.  அதுகூட“பரேடோ கொள்கை” அல்லது“பரேடோதத்துவத்தின்” அடிப்படையில்தான்அமைந்துள்ளதோ? என்கின்றமிகஆழமானஉட்கருத்துஇன்று“டிரேஸி” மூலம்“ட்ரேஸ்” (Trace) செய்யப்பட காண்கின்றோம் நண்பர்களே, அதாவது இன்னும் விளக்கமாக கூறவேண்டும் என்றால்… ஒரு சுவற்றில் வெள்ளைஅடிக்க… அங்கிருக்கிற ஆணிகளை அகற்ற வேண்டும் என்றால்… ஒருசில ஆணிகள் (இருபதுசதவிகிதம்) படங்கள் மாட்ட தேவைப்படலாம்.

    பெரும் பான்மையானவை (எண்பது சதவிகிதம்) அகற்றப்பட வேண்டியவை அதுபோல நாம் செய்ய வேண்டிய வேலைகளை, படிக்க வேண்டிய பாடங்களை, பழைய கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை… அவற்றில் பார்ப்பதற்கு சிரமமாகவும், படித்தால் நன்மை தரக்கூடியதுமாக இருக்கின்ற முக்கியமானவற்றை தேர்ந்தெடுத்து… அதிலும் சிக்கல் நிறைந்த செயலை முதல் வேலையாக செய்து முடிக்க வேண்டும்… அதாவது தேவையான ஆணியை இனங்கண்டு விட்டுவிட வேண்டும் என்று சொல்ல வருகின்றோம்.  ஒரு காமெடி (Comedy) சீனுக்குள் இப்படி ஒரு தத்துவத்தை மறைத்து வைத்துள்ளதை நாம் கண்டறிந்தது போல… கஷ்டமான செயல் என்று நாம் தயங்கி வந்தது உண்மையில் சுலபமானதாக மாறிவிடும்.

    இனிமேல் இரண்டு கேள்விகள் அல்லது பாடப்பகுதிகள் படிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் நீங்கள் அதில் சிரமமானதாக காணப்படுவதை முதலில் தேர்ந்தெடுத்து படித்து முடிப்பீர்கள் என்றுநாம் உறுதியாக நம்பலாம் அல்லவா… இதையே கல்லூரியில் மற்றும் தேர்வுகளுக்கு படிக்கும் காலத்திலும் தெரியாமலேயே… அதாவது தவளையைப் பற்றி அறியாமலேயே… பின்பற்றி வந்திருக்கின்றோம்.

    ஹைபர்லூப்: தொழில்நுட்பம்:-

    சமீபத்தில் ஹைபர்லூப் எனப்படும் அதிவிரைவாக பயணம் செய்யும் பஸ், இரயில், விமானம் ஆகிய மூன்றும் இணைந்த பயண தொழில் நுட்பம் குறித்து செய்தித்தாளில் படிக்கஇயன்றது.  அமெரிக்காவின் லாஸ்வெகாஸில் உள்ள நெவ்டா பல்கலைக்கழக கட்டிட வடிவமைப்புக்களை (ஆர்க்கிடெக்ட்) மாணவர் பிராண்டஸ் சைப்ரச்ட் இந்த ஹைபர் லூப் கற்பனை தொழில் நுட்பத்தை செயல்வடிவம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  நாம் சமீபத்தில் படித்து தெரிந்து கொண்ட தத்துவத்தை பயன்படுத்திகூற வேண்டும் என்றால் இந்த மாணவர் பிராண்டஸ் சைப்ரச்ட் தவளையை உண்ணும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளார்… அவர் விரைவில் தின்றுவிடுவார் என்றுவாழ்த்துவோமாக.

    பூபதி என்றொரு பூகோளம் சொல்லித்தரும் தவளை:-

    ச.பூபதி என்றொரு பெயரை செய்தித்தாளில் (23.08.17 ஆங்கிலஇந்துமுதல்பக்கம்) பார்த்தால் அது ஒருமனிதனின் பெயர்என்றேநினைப்போம்.  தவறில்லை. பூபதிஎன்பார் 2014-ல் எதிர்பாராத விபத்தில் காலமானஹெர்படாலஜிஸ்ட் (Herpetologist) ஆம்.  தவளைகளின் குடும்பங்களை பற்றி ஆராய்கின்ற அறிவியலறிஞர்களை இப்படி அழைக்கின்றனார்.  அவர் நினைவாக பெயரிடப்பட்ட Nasikabatrachusbhupathi என்ற பன்றி முகதவளை அன்றைய செய்தித்தாளின் முதல்பக்கத்தில்’வராக’ அவதாரம் போல்வந்திருந்தது.  பட்ட தவளையே படும்… என்று உடனே பூபதியை இங்கே நுழைத்தாயிற்று.  இத்தவளையின் நெருங்கிய உறவினர்’ ஊதாதவளை’ ஷெஷெய்ல்ய் தீவில் இருக்கின்றாராம்.  அதனால் ஒருகாலத்தில்”  கோண்ட்வானா” என்ற ஒரேதீவாக இந்தியாவும்,  ஆப்பிரிக்காவும் இணைந்து இருந்து… கண்ட நகர்வு (Continental drift)காரணமாக இடையே கடல் வந்தது என்ற புவியியல் கொள்கைக்கு கூடுதல் சாட்சியமாக இந்தவராக-முகபூபதிஇருக்கின்றாராம்…. தவளை அடுத்த முறை நாம் பார்க்கையில் புவியியல் வாத்தியாராக தெரிந்தால்… நாம்பொறுப்பல்ல… அதுவும் தவறல்ல…

    பாலாடைக் கட்டி தத்துவம்:-

    இப்படியாக பல்வேறு தவளை உண்ணும் செயல்கள் எல்லாம் தெரிந்த பின்னர்… திருஞானம்சார் அதற்கு முன்பே கூறியதவளையை போலன்றி சாதாரண ஆனால் முக்கிய புத்தகமான“Who morel my cheese?”புத்தகத்தை குறித்தும் நாம் கொஞ்சமேனும் தெரிந்து கொள்வது படிப்பதற்கும் வாழ்க்கைக்கும் உதவிகரமாகத்தான் இருக்கும்.  அடியேன், அதனை படித்து குழந்தைகளுக்கான மாத இதழில் ஒருகட்டுரை எழுதியிருந்தேன்.

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்

    மகிழ்ச்சியும் மனநிறைவும்

    “வாழ்க்கையில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் எதற்காகவும் ‘மனத்தளர்வு’ அடைவதில்லை. மனத்தளர்வு அடைபவர்கள் வெற்றியாளராக மாறுவதில்லை” – என்பது மேலைநாட்டு அறிஞரின் பொன்மொழி ஆகும்.

    வாழ்க்கையில் பல நேரங்களில் முயற்சி செய்யாமலும், நம்பிக்கை இல்லாமலும் செயல்படுபவர்களால் வாழ்வில் வெற்றியடைய முடிவதில்லை.

    வெற்றி பெற விரும்புபவர்கள் தங்களுடைய அறிவைப் பயன்படுத்தி, தங்களுக்குரிய பாதைகளைப் புதிதாக அமைத்துக்கொள்ள வேண்டும். துணிச்சலோடு செயல்களில் ஈடுபடவும் வேண்டும்.

    சிந்தனை, முயற்சி, நம்பிக்கை, செயல்பாடு ஆகியவற்றை சிதைக்கும் வண்ணமாக அதிகமாய் மன அழுத்தம் ஒவ்வொருவருடைய மனதிலும் அவ்வப்போது தோன்றிவிடுகிறது. இந்த அதிக மன அழுத்தம்தான் ஒருவருடைய நம்பிக்கையை சிதைத்து, முயற்சிக்கு முட்டுக்கட்டைப்போட்டுவிடுகிறது. இதனால், மலையில் ஏறுபவன் மடியைப் பிடித்து இழுப்பதைப்போல, இந்த மன அழுத்தம் பல்வேறு வடிவங்களில் உருவாகி, ஒருவரின் நிம்மதியை சீர்குலைக்கிறது. மகிழ்ச்சிக்கு விடை கொடுக்கிறது.

    இதயத் துடிப்பை அதிகரிப்பது, தலைவலியை உருவாக்குவது, உடலில் அதிக வேர்வையை ஏற்படுத்துவது, அதிக பசியையும், களைப்பையும் உருவாக்கி உடல்நலத்தைக் கெடுப்பது, உறவுகளை சிதைப்பது, தொழிலை அழிப்பது, வேலையில் சிக்கலை ஏற்படுத்துவது போன்றவைகளெல்லாம் அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சினைகள் ஆகும். மொத்தத்தில், ஒரு மனிதனின் வெற்றியை நிறுத்துவதும், வளர்ச்சிக்கு தடைபோடுவதும், மன நிம்மதியைக் கெடுப்பதும், அதிகமான மன அழுத்தம் அரங்கேற்றும் தேவையற்ற செயல்கள் ஆகும்.

    மன அழுத்தம் அதிகமாக இருக்கும் மனதில் வெற்றி பற்றிய சிந்தனைகள் எழுவதில்லை.

    ஒரு நாட்டை மன்னன் மிகச்சிறப்பாக ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால், நாட்டை ஆண்ட மன்னனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை.

    பல கோயில்களைக் கட்டினான். பல்வேறு தான தர்மங்களில் ஈடுபட்டான். மக்களின் முன்னேற்றத்திற்கு பலவித தொண்டுகளைச் செய்து, ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தான். இருந்தபோதும், அந்த மன்னனின் மனதில் மகிழ்ச்சி இல்லை.

    “மகிழ்ச்சி எங்கே கிடைக்கும்?” என்று மன்னன் தேடி அலைந்தான்.

    முடிவில் ஒரு ஞானியிடம் வந்து, தனது மனக்குறையை முறையிட்டான்.

    “மக்களுக்காக எவ்வளவோ நல்ல காரியங்களை செய்த பின்பும், என் மனதில் மகிழ்ச்சி இல்லை. என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை” என்றுசொல்லி தனது மனதிலுள்ள கவலையை ஞானியிடம் இறக்கி வைத்தான்.

    மன்னனின் வருத்தத்தை கவனித்த ஞானி – “மன்னா நீங்கள் உங்கள் கடமையை ஒழுங்காக செய்து வருகிறீர்களா?” என்று ஞானி கேட்டார். அதற்கு மன்னர் பெருமையாகப் பதில் தந்தார்.

    “எனது மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு நான் கொடுத்து வருகிறேன். வரிச் சுமைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறேன். நெறிமுறை தவறாமல் அவர்களுக்கு நீதி வழங்குகிறேன். வறுமை இல்லாமல் அவர்கள் எல்லோரும் செல்வச் செழிப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். இதனால், என் மக்களுக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் அத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்கிறேன்” – என்றார் மன்னர்.

    இதைக்கேட்ட ஞானி சிரித்தார்.

    “உங்கள் மனம் மகிழ்ச்சி அடைவதற்கும், மனநிறைவு பெறுவதற்கும் நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் அதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உங்கள் நாட்டை என்னிடம் கொடுத்துவிடுங்கள்” – என்றார் ஞானி.

    “எனக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைத்தால் போதும். நீங்கள் சொல்வதை அப்படியே செய்கிறேன். எனது நாட்டை நீங்கள் இப்போதே எடுத்துக்கொள்ளுங்கள்” – என்றார் மன்னர்.

    இந்த இதழை மேலும்

    துபாய்க்கு வாங்க!

    சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரு போலாகுமா? என்ற திரைப்பாடலின் நினைவுடன் துபாய் பயணம் செல்வோம்.

    வாய்ப்பிருப்பவர்கள் வாழ்நாளில் ஒரு முறை துபாய் சென்று வர முயற்சி செய்யலாம்.

    ஏனென்றால்…

    குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்) நெய்தல் (கடலை ஒட்டிய பகுதி) மற்றும் பாலை (மணல்) என்ற 5 வகையானவற்றுள், துபாயில் உள்ளது கடைசி இரண்டு மட்டுமே.

    அரபிக்கடல் மற்றும் பாலைவனங்கள் தான் இங்கு தான் உள்ளன. வளைகுடா நாடுகள் எண்ணெய் வளம் மிக்கவை; ஆனால், துபாயில் வெறும் 5 சதவீதம் மட்டுமே எண்ணெய் வளம் உள்ளதாய் தெரிவிக்கின்றனர்.

    இங்கு ஆறு (RIVER) ஏதுமில்லை. ஆனால், சாலை ஓரங்களில் பசுஞ்செடிகள் பராமரிக்கப்படுகின்றன.

    டோல்கேட் உள்ளது; ஆனால் எந்த வாகனமும் அங்கு நிறுத்துவதே கிடையாது.

    இடது புறம் வாகன ஓட்டம்; மக்கள் தொகையைப் போல் 3 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் கார்கள் உள்ளன.

    காலை, மாலை கடுமையான போக்குவரத்து நெரிசலும் உண்டு. உலகின் மிக உயர்ந்த கட்டடம் புர்ஜ் கலீபா உள்ளது துபாயில் தான்.

    மன்னராட்சி ஆனாலும் மந்திரிகளும் உண்டு. மக்கள் ஓட்டுப் போட வாய்ப்பே இல்லை; ஏனெற்றால் தேர்தல் என்பதே இங்கு கிடையாது.

    அரபிக் கடலை, அதன் கரையில் தோண்டி கால்வாயாக்கி, ஊருக்குள் ஓடச் செய்துள்ளனர். பல இடங்களில் தேக்கியும் வைத்து பீச் என்று உபயோகிக்கின்றனர். அலைகளற்ற அமைதியான அரபிக்கடலில் ஜுமெய்ரா பீச், குளியலுக்கு சுகமானது.

    (UAE) ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஏழுமா நிலத் தொகுப்பில் (STATE) துபாயும் ஒன்று. மற்றவை; அபிதாபி, சார்ஜா, புஜைரா, அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைய்ன்.

    இவற்றுள் துபாய் இயக்கும் விமான கம்பெனி எமிரேட் ; அபுதாபி இயக்குவது- எத்திகாடு ; சார்ஜா இயக்குவது ஏர் அரேபியா.

    கோவையிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் நாங்கள் 26 பேர் ஒரு சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் புறப்பட்டு, சார்ஜாவுக்கு காலை 7 மணியளவில் சென்றோம்.

    இரண்டு மணி நேரம் தானே என எண்ண வேண்டாம். பறக்கும் நேரம் சுமார் 3.30 மணி. நேர வித்தியாசம் 1.30 மணி. 5 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிநேரம் வானத்தில் கடல் மீது பறந்தாலும், நேர வித்தியாசம் காரணமாக கோவையில் காலை 8.30 ஆக இருக்கும் போது சார்ஜாவில் 1.30 மணி நேரம் குறைவாக காலை 7 மணியாக இருக்கும்.

    கோவை அன்பர்கள் சென்னை, கொச்சி சென்று சிரமப்பட்டு விமான கட்டணம் குறைவு என்பதை தவிர்த்து, சிரமமின்றி சிறிது கட்டணம் கூடுதலாயிருந்தாலும் கோவையிலிருந்தே செல்லலாம். இந்த நிறுவனமே விசாவுக்கும் உதவுகின்றனர். ஏழு மாநிலங்களுக்கும் (UAE) ஒரே விசா தான்.

    சார்ஜாவில் திகில்:

    எல்லோரும் விமானத்திலிருந்து இறங்கி எமிக்ரேசன் (குடியேற்ற) சோதனையில் கண்களைப் போட்டோ எடுத்துக் கொண்ட பின், வெளி வந்து பயணப் பொட்டிகளை சேகரித்தோம்.

    இனிய தம்பதி ஒருவரது பெட்டிக்குப் பதில் வேறொரு பெட்டி அதே போன்று இருந்தது. அதில் வேறு பெயர் இருந்தது. ஆக இவர்களது பெட்டியை அந்த நபர் மாற்றி எடுத்துச் சென்று விட்டார் என உறுதியானது.

    புகார் செய்த பின், கையிலிருந்த பெட்டியின் திறந்திருந்த முன்பக்க ஜிப்பினுள் கை விட்டுப் பார்த்தால், அந்த நபரது சார்ஜா செல் நெம்பர் எழுதியிருந்தது.

    இந்த விபரம் புகார் பகுதியில் தெரிவித்ததால் அவர்கள் அந்த நபருடன் பேசி, பெட்டியை மாற்றி எடுத்துச் சென்ற விபரம் கூறினர். அவரும் பதைப்புடன் ஆமாம் என்றார். நல்ல வேளையாக முன்புறமே நின்றிருந்தார். இருவரிடமும் பெட்டியை மாற்றிக் கொள்ளுங்கள் எனக்கூறினார்.

    இந்த இதழை மேலும்

    சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்

    மனிதன் என்பவன் இப்பூவுலகில் தோன்றி வளர்ந்த பின் மறையும் வரை எத்தனையோ நிகழ்வுகளைச் சந்திக்கிறான். அவனது வாழ்வில் கதைகளும் தங்கள் பங்கை அளிக்கின்றன. தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தன் தாய் உணவு ஊட்டும் பொழுதிலும், இரவில் படுக்கையில் தூங்கும் பொழுதும்  தொடங்கும் கதை மீது அவன்  கொண்ட ஆர்வமானது, அவனுடைய இளமைப்பருவத்திலும், குடும்பத் தலைவனாய் குடும்பத்தை வழிநடத்தும் பருவத்திலும் தொடர்ந்து பின் அவன் இப்பூவுலகை விட்டு பிரியும் கட்டத்தில் ராமாயனக் கதைகள் கேட்டுக் கொண்டே இறைவனடி சேரும் தருவாயில் நிறைவடைகிறது.

    கதைகள் எப்படிப்பட்ட வகையில் எழுதப்பட்டிருந்தாலும் எல்லா விதக் கதைகளுக்கும் ஒரு தொடக்கம், ஒரு பிரச்சனை, அதில் வரும் கதாபாத்திரங்கள், கதையின் மையக்கரு, பிரச்சனையின் உச்சக்கட்டம், பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு, பிரச்சனைக்கான தீர்வு மற்றும் முடிவு ஆகியவைகளைக் கொண்டிருக்கும்.

    சிவாஜி என்ற மராட்டிய வீரனின் வெற்றிக்கு காரணம் அவருடைய தாயார் ஜீஜாபாய் கூறிய மகாபாரதமும், ராமாயணமும் இவற்றின் கதைகளை கேட்டால் தான் இன்று அவர் வரலாற்றில் இடம் பிடித்தவராக இருக்கிறார். அவரைப் போலவே நம் தேச தந்தையாகப் போற்றும் மகாத்மா காந்தி உலக மக்களால் போற்றப்பட்டவராக இருக்கக் காரணம் அரிச்சந்திரனின் நாடகமும்,  சிரவணன் பற்றிய கதையும் ஆகும்.

    கதைகள், நம் வீட்டில் உள்ள ஜன்னல் மூலம் வெளியில் நிகழும்  நடவடிக்கைகளை பார்த்து அவற்றின் விபரங்களைத் தெரிந்து கொள்வது  போல், கதைகள் உலகில் நடைபெறும் நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வரும் ஜன்னல்கள் ஆகும். நற்பண்புகள் என்ற விதைகளை குழந்தைகள் மனம் என்ற நிலத்தில் விதைத்த நல்லதொரு வாழ்வை அவர்கள் வாழ வழி வகுப்பவை கதைகள் ஆகும். கதைகளில் சிறப்பம்சங்களை ஒரு சில சிறுகதைகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டு அதன் மூலம் விவரிக்க உள்ளது இந்தக் கட்டுரை.

    குள்ளநரியும் முரசும்

    மனதையரியம் உள்ளவனே வாழ்க்கை என்ற போர்களத்தில் வெற்றி அடைவான் என்ற மையக்கருத்தை விளக்கும் கதை குள்ளநரியும் முரசும்.

    கோமையா என்ற குள்ளநரி ஒருநாள் பசியால் மிகவும் வாட்டமுற்றது. காடுகளில் அலைந்து திரிந்தும் அதற்கு உணவு கிடைக்கவில்லை. பின் யாருமில்லாத வெரிச்சோடிய போர் களத்தை அடைந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. போர் வீரர்கள் விட்டு சென்ற முரசில் மரத்தன் கிளைகள் மோதியதால் பயப்படும் படியான சப்தம் அதனால் எழுந்தது. குள்ளநரி பயத்தால் முதலில் ஓடத்துவங்கியது. பின் தன்னுடைய மனதைரியத்தை வரவழைத்து அந்த சப்தம் எதனால் வருகின்றது என்று தெரிந்த பின்பு செல்வதே சிறப்பு உணர்ந்து சப்தம் வந்த திசையை நோக்கி சென்று அதன் காரணத்தையும் தெரிந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் அந்த முரசின் அருகில் இருந்த  உணவினையும் உண்டு பின் தண்ணீரையும் அருந்தி தன் பசியைப் போக்கிக் கொண்டது.

    தன்னுடைய தாய், தந்தையைப் பிரிந்து ஒரு குழந்தை பள்ளிக்கூட வாசலில் நுழையும் போது தொடங்கும் அந்த அச்சமின்மை அவனது ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்து அவனது வாழ்க்கையைச் சிறப்படையச் செய்கின்றது. மனிதனின் வாழ்க்கை ஒரு பயணம் போன்றது. தரை மார்க்கமாக, கடல் மார்க்கமாக மற்றும் விண்வெளி மார்க்கமாக பயணம் மேற்கொள்ளும் பொழுது, அந்த ஓட்டுநரின் மனதைரியத்தால் தான் பயணிகள் எவ்வித பயமுமின்றி பயணிக்கின்றனர். அப்படித்தான் ஒரு குடும்பத்தலைவரின் அச்சமின்மையால் அவனுடைய குடும்பத்தையும் மக்களையும் முறையாக வளர்த்து வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறார். மனதில் என்று அச்சம் நீங்குகிறதோ அன்றே அவன் வாழ்க்கையை வெல்ல தயார் ஆகிவிட்டான் என்று நினைத்துக் கொள்ளலாம்.

    இரண்டு பாம்புகள்

    ஒருவனினங எதிரிகள் இருவர் அவர்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டால் வெற்றியாளன் அந்த ஒருவன் தான். என்ற மையக்கருத்தைக் கொண்டு இக்கதை எழுதப்பட்டது. இக்கதை மற்றொரு கருத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது ஒருவன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் அவன் எதிரிகளின் மகிழ்ச்சியை அழிக்க வல்லவன் என்பதாகும்.

    இந்த இதழை மேலும்

    மாற்றமே நம் முன்னேற்றம்…

    மனிதன் கருவில் தொடங்கி கல்லறை வரை ஒவ்வொரு தருணத்திலும் ஏதேனும் ஒரு மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த மாற்றம் தான் அவருக்கு ஆயுதமாகவும், கேடயமாகவும் இருக்கிறது. மாறு மறுக்கும் யாரையும் மிதித்துக் கொண்டு போகும் வேகத்தில் மாற்றங்களுக்கான அவசியங்கள் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றன. உங்கள் வாழ்விலும் சில சமயங்களில் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்கிறோம்.

    திட்டமிட்டு செயல்படுங்கள்:

    தினசரி வேலைகளில் குடும்பத்திலும் நிறுவனத்திலும் செலவிடப்படும் செலவுகளில், உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்களையும் பட்டியலிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே அறிவிப்பு கொடுங்கள். மற்றவர்கள் ஒத்துழைப்பார்களா? மாட்டார்களா? என்கிற தயக்கத்தில், விட்டுபிடிப்பது இப்போதைய சூழலுக்கு நல்லதல்ல. எதிர்காலம் பற்றி  எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் உண்டு என்பதால், அவசியமான மாற்றங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

    தொலை நோக்குப் பார்வை

    உலகமெங்கும் பொருளாதார பின்னடைவின் புயலுக்கு ஒடிந்து விழுகின்ற நிறுவனங்கள் மாற்றங்களைப் பற்றி சிந்திக்காததால் தான் மண்ணைக் கவ்வுகின்றன. இன்றைய அவசர உலகில் கண் கூடா சவால்கள் கண்ணை மறைப்பதில் உள்ள தொலை நோக்குப் பார்வைத் தொலைத்து விடாதீர்கள். நீங்களும் உங்கள் உறவுகளும், சுற்றுப்புறத்தாறும் எதை நோக்கி முன்னேற வேண்டும் என்பதை உணருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக அவர்கள் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.

    வெற்றியை நோக்கி ஒரு பயணம்

    ஆடுகளத்தில் கிரிகெட் வீரர் ஒருவர் தனது அணியின் வெற்றிக்கு ஆட்டத்தின் கடினமான சூழலில் தனது மாற்றுச் சிந்தனையால் ஆட்டத்தின் நிலையை மாற்றி பந்து எல்லைக் கோட்டை தொடாத போதும் பக்கவாட்டில் அடித்துவிட்டு ஒன்று இரண்டு ஓட்டங்களை ஓடி எடுத்து தனது சிறு முயற்சினால் அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அவை உங்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கே உற்சாகம் தந்து இன்னும் ஈடுபாட்டுடன் செயல்பட தூண்டும்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி?

    உணவு உண்ணவுடன் வெற்றிலைப் பாக்கு போட்ட காலம் போய் இன்று மாத்திரை சாப்பிடும் காலம் வந்து விட்டது. இந்த மாற்றத்தை மாற்ற என்ன மாறுதல்கள் செய்ய வேண்டும்?

    தனபாக்கியம்,விழுப்புரம்

    உணவு உண்டவுடன் வெற்றிலைப் போட்டார்கள் நமது முன்னோர்கள், ஆனால் நாம் மாத்திரை உண்கிறோம் என்று உங்களது ஆதங்கத்தைக் வெளிப்படுத்தி உடல்நலம் கெட்டுப்போனதை உறுதியாகக் கூறிவிட்டீர்கள். எனவே நமக்கு இன்னும் உடல்நலக்குறைவு ஏற்படாமல் இருக்க என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் உங்களது கேள்வி : இந்த கேள்விக்கான பதில் காண்போம்.

    மாத்திரை: மாத்திரை என்றால் என்ன? உணவு உண்டபின் ஏன் ‘மாத்திரை’ சாப்பிடுகிறோம்? நோய்கள் வந்துவிட்டதால் அவற்றைக் குணப்படுத்த அல்லது ஒரு நோய் வந்துவிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக நாம் மருந்து சாப்பிடுகிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே மாத்திரை மீது தவறு இல்லை. மாத்திரை மோசமானதும் இல்லை, மருந்துகள் மோசமாவை அல்ல.

    பென்சிலின், ஆஸ்பரின், மார்பின், இன்சுலின், தடுப்பூசி போன்றவை மருத்துவத்திலும், மனித நலத்திலும் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மருந்துகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதில் 1928ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பென்சிலின் உன்னத கண்டுபிடிப்பாகும். அலெக்ஸாண்டர் பிளெம்மிங் என்ற ஸ்காட்லாந்து அறிவியல் அறிஞர் பென்சிலின் என்ற பூஞ்சான் பல கொடிய நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி படைத்தது என்பதை ஆய்வுக்கூடத்தில் கண்டறிந்தார். இது மருந்துகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. நிமோன்யா, பாலியல் நோய்கள் போன்ற கொடிய நோய்களுக்கு ஒரே ஒரு ஊசி மூலம் தீர்வு கண்டது இந்தப் பென்சிலின். மாத்திரைகளால் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

    முதலில் நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ஆராய வேண்டும்:

    (அ)இயற்கை: சிலருக்கு பிறவியிலேயே நோய்கள் இருக்கும், அது மரபணு சம்பந்தப்பட்டது. பெற்றோருக்கு இருந்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு அந்த நோய்கள் வரும் என்பது இல்லை. சில தலைமுறைக்கு முன்னால் நோய் இருந்தாலும் அது பிள்ளைக்கு வந்துவிடும். இது அறிவியல் உண்மை. சர்க்கரை நோய், இருதய நோய், தோல் வெள்ளை நோய் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. பிறந்த குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய் இருக்கிறது.

    (ஆ)செயற்கை: சிலர் அவர்களாகவே நோய்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அளவுக்கதிகமாக உணவு உண்பவர்களுக்கு உடல் பருமன் ஆகிவிடுகிறது. அதன்மூலம் அனைத்து நோய்களையும் அவர்களே வரவைத்துக் கொள்கிறார்கள். சிலர் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் ஏற்படுத்தி பலவித நோய்களையும் சம்பாதிக்கிறார்கள். சிலர் அறிவியல் மருத்துவம் தெரியாத நாட்டு வைத்தியரிடம் சென்று விக்ஷத்தன்மை வாய்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

    (இ)சுகாதாரம்: சுகாதாரக் கேட்டால் பல நோய்கள் வந்துவிடுகின்றன. காலரா, டைபாய்டு, புழுக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றில் புழு, தோல் வியாதிகள் நுண்கிருமிகளால் வருகிறது. அதாவது அழுக்கில் இருக்கும் அல்லது அசுத்தமான உணவு, நீர், காற்று ஆகியவற்றில் இருக்கும் வைரஸ் பாக்டீரியா, புரோட்டோசோவா, பூஞ்சான், புழுக்கள் போன்ற நுண்ணூயிரிகளால் ஏற்படுகின்றன. நம் நாட்டு மக்களில் படித்தவர்களுக்குக் கூட போதுமான அறிவியல் அறிவு இல்லாததால் அவர்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் தெரியாமல் இந்த நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

    (ஈ) சத்தான உணவு: உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். என்னதான் பெரிய உடல் என்றாலும், என்ன பெரிய செல்வந்தர் என்றாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், நோய் உடனே பற்றிக் கொள்ளும். நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற, சத்தான உணவு உண்ண வேண்டும். அதில் வைட்டமின்கள், புரதம் போன்றவை அவசியம் வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரை, பருப்பு வகைகள், விதை வகைகள் (nuts) உணவில் அவசியம் இருத்தல் வேண்டும். இல்லை என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.

    (உ)உடற்பயிற்சி: நோய் வர ஒரு முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாமல் போனது. நமது முன்னோர்கள் விவசாயம் செய்தார்கள், நடந்தார்கள், சைக்கிள் ஓட்டினார்கள் எனவே உடலுழைப்பு இருந்தது. அதோடு அதிகப்படியான உணவும் கிடைக்கவில்லை. இன்று உணவு தாராளமாக கிடைக்கும் நிலையில் நாம் மனிதனின் தேவைக்கு மீறி அதிகம் சாப்பிடுகிறோம், ஆனால் உடலுழைப்பு சுத்தமாக இல்லை. நமது உடல், வேலை செய்து பராமரிக்கும் நிலையில்தான் உருவாகி இருக்கிறது. மனித இனம் யாராலும் உருவாக்கப்படவில்லை, அது ஆப்பிரிக்க வனங்கள் உருவாகி இருக்கிறது. அதுவும் சுமார் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்தால்தான் அந்த அரிய உடல் சரியாக இயங்கும்.

    (ஊ)மனமகிழ்ச்சி: பல தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மக்களிடம் மகிழ்ச்சி இல்லை! ஆனால் மனமகிழ்ச்சி இருந்தால்தான் உணவு உண்போம், உடற்பயிற்சி செய்வோம், ஆர்வம் காட்டுவோம், எல்லாவற்றுக்கும் மேலாக மன உழைச்சலைத் தவிர்ப்போம். மன உழைச்சல் இருந்தால் அதுவே நமது நோய் தடுப்பு சக்தியைக் குறைத்துவிடும். பல நோய்கள் வர மனத்தளர்ச்சி (stress) காரணமாக இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அடித்துக் கூறுகிறார்கள். குடும்பப் பிரச்சனைகள், சச்சரவுகள், வருமானம் இல்லாத நிலை, திருமணம், பிரச்சனை, சடங்குகள், மூடநம்பிக்கை, பொருள் இழப்பு, நீதிமன்ற வழக்கு, வாகன விபத்து, ஒலிப்பெருக்கிகள், மாசுபட்ட காற்று போன்றவை நமது சமுதாயத்தில் மக்களின் மனமகிழ்ச்சியை சிதைத்து மன உழைச்சலைப் பெருக்கி பல நோய்கள் வரவும் காரணமாகிவிட்டன. இவற்றையும் மீறி மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள், சிரிப்பு சிறந்த மருந்து.

    இந்த இதழை மேலும்

    நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…

    திரு அந்தோணிராஜ்

    நிறுவனர், விண்ட் கேர் இந்தியா பிரைவேட் லிமிடேட்

    சோலார் கேர் இந்தியா பிரைவேட் லிமிடேட்

    உடுமலைப்பேட்டை

    திட்டமிடுதலே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் மிப்பெரிய ஆயுதம். அதைச் சரியாகப் பின்பற்றினால் எதையும் சாதிக்க முடியும் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருபவர்.

    சாதிப்பைத் தேடிப் போகாமல், தன்பின்னே சாதிப்பை வலம் வர வைப்பவர்.

    புதிய முயற்சி என்பது வெறும் வார்த்தைகளில் காணாமல் வாழ்க்கையில் கண்டு, இன்று வரலாற்றில் தனக்கென்று வந்து ஒரு இடத்தைப் பிடித்து தனிமுத்திரைப் பதித்து வருபவர்.

    உன்னைப் போல பிறரையும் நேசி என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் குணத்தை உடையவர்.

    இறைவன் நமக்கெல்லாம் கொடுத்துள்ள வரப்பிரசாதங்களில் இயற்கை வளம் அளப்பறியது. அந்த வகையில் இயற்கையின் சக்தியைப் புரிந்து கொண்டு காற்றாலைத் தொழில் நிறுவனம், சோலார் தொழில் நிறுவனம் போன்றவற்றை நிறுவி அதில் சாதித்து வரும் விண்ட் கேர் மற்றும் சோலார் கேர் நிறுவனத்தின் தலைவர் திரு அந்தோணிராஜ் அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி நாம் அவருடன் பயணிப்போம்.

    கே. உங்களைப் பற்றியும் கல்வி மற்றும் முதல் பணிவாய்ப்பு பற்றியும் கூறுங்கள்?

    என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகிலுள்ள நடுவைக்குறிச்சி என்னும் சிற்றூர். என்னுடைய தொடக்கக் கல்வியை R.C. நடுநிலைப்பள்ளி நடுவைக்குறிச்சியிலும், சாயர்புரத்தில் உள்ள போப் நினைவு பள்ளியில் மேல்நிலைக்கல்வியும், இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் இயந்திரவியல் பிரிவிலும் தேர்ச்சி பெற்றேன்.

    என்னுடைய தந்தை B. செந்தூர்பாண்டியன் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் தாயார் R. ஜோதி, அரசு சுகாதார செவிலியராகப் பணியாற்றியவர்.  ஒரு சகோதரர் மற்றும் 3 சகோதரிகள். எனக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. என் துணைவியார் திருமதி J.ஜெபஸ்டின் ஜெயந்தி. எனக்கு இரண்டு குழந்தைகள் A.ஜோ மரியா, A.ஜோ பிளஸ்ஸி.

    என்னுடைய தொடக்க பணிவாழ்வு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகளிலும், அதைத் தொடர்ந்து தாழையுத்து சங்கர் சிமெண்ட் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றேன். பின்னர் 1993 ம் ஆண்டு நாகர்கோவிலின் ஆரால்வாய்மொழி பகுதிகளில் காற்றாலை நிறுவிவரும் சூழல். புதிய தொழில் வாய்ப்பாக இருந்தபடியால் அன்று முன்னணியில் இருந்த NEPC-MICON நிறுவனத்தில் அடிப்படை ஊழியராகக் கட்டுமான குழுவில் பணிக்கு மாதம் சம்பளம் ரூபாய் 500 என்ற அளவில் வேலைக்குச் சேர்ந்தேன். தொடர்ந்து அங்கு பணியாற்றும் சூழல் 1994 ம் வருடத்தில் சிறந்த பணியாளராக நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு குழுத்தலைவராகப் பதவி உயர்வு பெற்றேன்.

    அப்போது, கோயமுத்தூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் புதிய காற்றாலை அமைக்கும் பணிவாய்ப்பு NEPC-MICON  நிறுவனத்திற்கு கிடைத்தது ஆகவே, அந்தச் சூழலில் கட்டுமானப் குழுத் தலைவராகப் பணி உயர்வால் உடுமலைப்பகுதிகளில் பணியைத் தொடர்ந்தேன். மேலும், பல நிலைகளைத் தாண்டி PROJECT MANAGER அக பதவி உயர்வு பெற்று பணியாற்றினேன்.

    கே. உங்களின் விண்ட் கேர் நிறுவனத்தின் கிளை எங்கெல்லாம் அமைந்துள்ளது?

    ஒரு நிறுவனத்தின் பயன் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.

    எங்கள் நிறுவனத்தின் தலைமையகம் என்று பார்த்தால் உடுமலைப்பேட்டை அருகில் குடிமங்கலத்தில் அமைந்துள்ளது.

    ஆனால், இதன் கிளை என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பல இடங்களில் உள்ளது.

    தமிழகத்தில் கோயமுத்தூர், திருப்பூர், பழனி, தாராபுரம், தேனி, நாகர்கோவில், சுரண்டை, தேவர்குளம் பகுதிகளிலும் குறிப்பாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத், இராஜஸ்தான் போன்ற ஒன்பது மாநிலங்களிலும், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற ஐந்து அயல்நாடுகளிலும் உள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, மெக்சிக்கோ மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் புதிய பணித்தளம் அமைப்பதில் முயற்சி எடுத்து வருகிறோம்.

    கே. ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய நீங்கள், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

    1999 ம் ஆண்டுகளில் காற்றாலை இயந்திரங்களில் உள்ள ஜெனரேட்டர்களில் ஏற்படும் பழுதுகளால் பல காற்றாலைகள் செயல் இழந்து நின்றுவிட்டது.

    இந்த ஜெனரேட்டரை மாற்றுவதற்கு பெரிய கிரேன் (பழுதூக்கி) தேவை. மேலும், ஒரு காற்றாலை சீரமைக்க ரூ. 5 இலட்சம் கிரேன் வாடகை மற்றும் போக்குவரத்திற்கு சுமார் ரூ. 3 இலட்சம் தேவைப்பட்டது. இது காற்றாலை நிறுவனங்களுக்கு மிகப் பெரிய இழப்பாகவும் அதிக செலவீனம் கொண்ட வேலையாகவும் மாறியது. மேலும் பல நாட்கள் காற்றாலைகள் செயல்படாமல் நிற்பதால் மின் உற்பத்தி பாதிப்படைந்தது. காற்றாலை உரிமையாளர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டது.

    இந்த சூழலில் Chemplast windfarm என்ற நிறுவனத்தினர் என்னை அணுகி கிரேன் பயன்படுத்தாமல் 250 கிலோ வாட் காற்றாலையிலுள்ள ஜெனரேட்டரைப் பழுது நீக்கி தரமுடியுமா? என கேட்டார்கள். உடனடியாக, எனக்கு கிடைத்த வாய்ப்பை சவாலாக ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் நான் முந்தைய நிறுவனத்தில் 1996 ஆம் ஆண்டு பணியாற்றும் போது இதே போன்ற தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் போது அந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.

    அதன் மூலம் பின்னடைவும், மனச்சோர்வும் அடைந்தேன். ஆனால் இந்த தோல்வி என் வாழ்வில் எப்படியாவது நான் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகப்படுத்தியது. ஆகவே பல வருட காற்றாலையில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் புதிய Derrik  ஒன்றை கண்டுபிடித்து மிகக் குறைந்த செலவில், குறித்த நேரத்தில் ஜெனரேட்டரை இந்திய அளவில் முதன் முறையாக கிரேன் உதவி இல்லாமல் எங்களுடைய வின்ட்கேர் டெக்னாலாஜி வழியாய்ச் செய்து முடித்தோம்.

    இந்த முதல் முயற்சி வெற்றியடைந்ததால் நண்பர்கள் மற்றும் பிற நிறுவனத்தின் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைக்க ஆரம்பித்தன.

    இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இதே பணியைச் செய்ய அழைப்பு விடுத்தனர். இதுவே நிறுவனத்தின் தொடக்கமாக அமைந்தது. அன்று 4 நபர்களோடு ஆரம்பிக்கப்பட்டது, இன்று 480 பணியாளர்களின் குடும்பத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு வருடமும், நூற்றுக்கணக்கான புதிய இளம் பொறியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறோம்.

    கே. நீங்கள் தொழில் தொடங்கும் பொழுது உங்களின் பொருளாதாரச் சூழல் எப்படியிருந்தது, அதை எவ்வாறு சமாளித்தீர்கள்?

    இது மிகவும் நல்ல கேள்வி. ஒரு நிறுவனம் தொடங்குவது என்பது சாதாரண காரியமல்ல, நிறைய உழைப்பும், பொருளும், மூலதானமும் தேவைப்படுகிறது. அப்போது இந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்றால் அன்றைய காலக்கட்டத்தில் சுமார் 2 இலட்சம் தேவைப்பட்டது. ஆனால் என் கையில் இருப்பது அன்றைய மாதச் சம்பளம் ரூ. 5000 மட்டுமே இருந்தது. இதை வைத்துக் கொண்டு எவ்வாறு செயல்படுவது என எண்ணி என் மனம் சோர்ந்து, நான் தங்கியிருந்த அறையில் சென்று படுத்துவிட்டேன்.

    அப்பொழுது என் அறையில் இருக்கும் ஒரு வாசகம் என்னை உற்சாகப்படுத்தியது. அது  என்ன வார்த்தை எனில் உன் தேவனால் எல்லாம் கூடும் (with God,all things are possible)  என்ற இவ்வார்த்தையைப் படித்தவுடன் எனக்குள் புதிய நம்பிக்கை பிறந்தது. இந்த வார்த்தை எங்கள் நிறுவனத்தின் விருது வாக்காக மாற்றினோம். இன்றளவும் நாங்கள் செயல்பட, எங்களை உள்ளிருந்து நம்பிக்கை அளித்து இயக்கிறது என்றால் அது மிகையல்ல.

    அப்போது என்னுடைய சகோதரர்கள் மற்றும் என்னுடைய நண்பர்கள் 4 பேர் உதவியுடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். இந்த வேளையில் நான் என்னுடைய இந்தப் புதிய திட்டத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவரும் அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்க முன் வந்தார்கள்.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் சாலையின் ஒரத்தின் அருகில் ஒரு மரத்தடியில் கார் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ பெரிய யோசனையில் நினைத்துக் கொண்டிருந்தார்.

    தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார்.

    அப்போது அவ்வழியாக ஒரு பெரிய கட்டெறும்பு அவர் பக்கம் வேகமாய் ஓடிவந்து சிறிது நேரம் நின்றது. தன்னருகில் வந்ததும் தன்னை கடித்து விடுமோ என்று  பயத்தில் அந்த தொழிலதிபர் சற்று நகர்ந்து நின்றார். ஆனால் அந்த எறும்பு அப்படி ஒன்றும் செய்யவில்லை.

    வேகமாக, அந்தக் கட்டெறும்பு அந்த சாலையின் குறுக்கே பாய்ந்தது. கார்கள், பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற பல  வாகனங்கள் மல்லிகை சரம் போல இடைவிடாமல் வேகமாக சென்று கொண்டிருந்தது.

    எந்த சமயத்தில் எந்த வாகனத்தில்  நசுக்குண்டு கொல்லப்படுமோ என்ற பயத்தில் அந்த எறும்பின் பின்னே கூர்மையான தன்னுடைய பார்வையை முழுவதுமாக செலுத்தி பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தொழிலதிபர்.

    ஆனால் அந்த எறும்பு சாலை முழுவதும் சாமர்த்தியமாக கடந்து எதிர்திசைக்கு சென்றது.

    இந்நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்த அந்த தொழிலதிபருக்கு ஒன்றன் பின் ஒன்றாக சில உண்மைகள் புலப்பட்டது.

    தன்னுடைய நெருக்கடியை இந்த எறும்பை போல தைரியத்துடன் சமாளிக்க வேண்டும் என்றும்.

    உருவத்தில் சிறயதாக இருந்தாலும், அதற்கான நம்மையும் கடவுள் மேலிருந்து பார்த்து வருகிறார் என்றும்.

    சிறிய நிகழ்ச்சி என்றாலும் அதை கூர்ந்து அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் கவனித்தால் மனிதன் முன்னேறுவதற்கு தொடர்பு கிடைக்கும் போன்ற உண்மைகள் புலப்பட்டது.