வாழ நினைத்தால் வாழலாம் – 6
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐந்தறிவு ஜீவராசிகளினும் உயர் பிறப்பாய் பிறந்ததாய் பெருமைப்படும் நாள் முதல் – விஞ்ஞான முன்னேற்றங்கள் விண்ணை முட்டும் வண்ணம் சாதனைகள் புரிந்துவரும் இன்று வரை – மனித ஜாதி கண்டுவந்த வளர்ச்சி அநேகம். அபாரம். இதற்கு அடிநாதமாக இருப்பது அவனின் சிந்தனை திறனே. ஆதாம் ஏவாள் மனதில் “இந்த கனியை சுவைத்தால் என்ன”? என்ற கேள்வியே உலகின் பல கோலங்களுக்கு போடப்பட்ட முதல் புள்ளியாய் ஆனது.
சூரியனை ஒரு பந்தாக நினைத்து – விளையாட அதை எடுத்தால் என்ன? என்ற கேள்விதான் – பக்த அனுமனை பறக்க வைத்ததாக புராணம் சொல்கிறது. மரத்திலிருந்த கனி ஏன் மண்ணில் விழுந்தது என்ற கேள்வியே – ஒரு புதிய விதியை உலகுக்கு உணர்த்தியது.
“ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான் மற்றுமொருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான் நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் – வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” – என்பதற்கு சான்று மனிதனின் கேள்வி கேட்கும் திறன். பல விந்தைகளுக்கும் விடை சொல்ல வைக்கும். தனக்கு உள்ளே கேட்ட கேள்விகள் – மெய்ஞானமாகவும் தனக்கு வெளியே கேட்ட கேள்விகள் – விஞ்ஞானமாகவும் மாறி விடை சொல்வதை மக்கள் மறுக்க முடியுமா?
“ஏனென்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” – இதை நினைவு கொள். திருவிளையாடல் தருமிபோல் அனைவரின் மனதிலும் ஆயிரம் கேள்விகள் எந்நேரமும் எதிரொலித்துக்கொண்டே இருப்பது உண்மைதான். தருமி கேட்ட கேள்விகள் அவனின் வறுமைக்கான ஒரு விடியலாகவும் செழிப்பான வாழ்க்கைக்கான ஒரு தீர்வாகவும் மாறியதை மறுக்க முடியுமா?
நக்கீரன் கேட்ட கேள்விகள் தமிழின் செழுமையையும், கேட்பவன் யாராக இருந்தாலும் தயங்காமல் கேட்கும் வீரத்தின் வெளிப்பாடாக இருப்பதையும் மறுக்க முடியுமா வறுமைக்கு, வளமைக்கு, புலமைக்கு என்று வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் கேள்வியே எழா வண்ணம் தேர்வாவது “கேள்விகள்” என்பதுதான் நிதர்சன நிஜம். நாட்டாமை கூட்டும் பஞ்சாயத்திலும் கேள்விகள் – தீர்ப்பையும், தீர்வையும் தரும்.
காணாமல் போன ஆடு கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சாயத்திலும், பக்கத்துக்கு ஊர்ப் பெண்ணின் கையை பிடித்து இழுத்த பஞ்சாயத்திலும்,- கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு வடிவேல் சொன்ன பதில்களும் நகைச்சுவைக்கும் மீறிய நல்ல தீர்ப்பு.
ஒரு சம்பவம். வாழ்க்கை முடிந்த ஒருவன் கடவுளிடம் தன் வாழ்வின் பயணத்தை மறுபடி பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். செவிமடுத்த கடவுள், ஒரு நீண்ட பாதையை காண்பித்து, இதுதான் உன் வாழ்க்கைப் பாதை. இதில் பார், எப்போதும் நான்கு கால் தடங்கள் இருக்கின்றன இரண்டு உன்னுடையது, இரண்டு என்னுடையது.
எப்போதும் நான் உன்னுடனேயே பயணித்திருக்கிறேன். நீ என் உண்மையான பக்தன் என்பதால், உன்னை நான் கைவிட்டதே இல்லை. உன் அனைத்து சாதனைகளுக்கும், மகிழ்ச்சி, நிம்மதி, சந்தோஷங்களுக்கும் நான் உன் கூடவே இருந்தது தான் காரணம்” என்று கூறினார். ஆனால் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
அவன் கஷ்டப்பட்ட காலங்களில், ஆதரவு தேடி அலைந்த காலங்களில், கடுமையான சோதனைகள் பல வந்த காலங்களில், நெருக்கடிகள் நெஞ்சை முறுக்கும் நேரங்களிலெல்லாம், நான்கு கால் தடங்களுக்கு பதிலாக இரண்டு கால் தடங்கள் மட்டுமே இருக்கக்கண்டான். கடவுளை நோக்கி,
“என்ன கடவுளே, சோதனைக் காலத்தில் எல்லாம் என்னை விட்டு எங்கே சென்று விட்டாய்? துணைக்கு யாருமில்லாமல் நான் பூலோகத்தில் கஷ்டப்பட்டதை இங்கே வானுலகில் வரைபடமாக பார்க்க வைத்ததற்கு நன்றி. ஆக, கஷ்டகாலம் வந்தால் கடவுளும் காணாமல் போவான் – என்ற பழமொழிக்கு ஒரு உதாரண புருஷனை கண்ட பெருமை எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி – என்று ஏளனமாக எள்ளினான். அதற்கு கடவுள்
“அட மட மானிடா, விதண்டாவாதமான உன் கேள்விக்கு விடையளிக்கிறேன் கேள். உன் துன்ப காலங்களில் உன்னை தூக்கி சுமந்தது நானடா. அந்த இரண்டு பாத தடங்கள் என்னுடையவை. நீ என் முதுகில் நிம்மதியாக பயணித்ததால், உன் கால் தடம் தரையில் படவில்லை. புரிந்ததா?என்று கேட்டார். ஜிகஷ்டங்கள், துயரங்கள் வரும்போது – “ஏன் எனக்கு (Why Me?) தருகிறாய் என்று கேட்கிறாயே, நன்மைகள், பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து என்று பலப்பல நன்மைகளை நான் உனக்கு தந்தபோது “ஏன் எனக்கு (Why Me?) என்று என்றாவது கேட்டதுண்டா? – என்று கேட்டார்.
கடவுளின் எதிர்கேள்வி, மனதை என்னவோ செய்தது. ஆம், மனிதனின் கேள்விகளுக்கு கடவுளிடம் பதில் உண்டு. கடவுளின் கேள்விக்கு மனிதனிடம் பதில் உண்டா? சுருங்கச் சொன்னால்,
கேள்விகள் – பிரச்சினைகளின் தீர்வுக்கு கிடைக்கும் தீர்ப்பு.
கேள்விகள் – குழப்ப இருட்டில் வெளிச்ச மின்னல்கள்
கேள்விகள் – முன்னேற்றத்தின் முதல் பாதை
கேள்விகள் – தெளிவான வாழ்க்கைக்கான தேடல்கள்
கேள்விகள் – வெற்றியாளர்களின் விருத்தப்பா
முருகன் ஔவையிடம் கேட்ட கேள்விக்கணைகள் – அரியது,கொடியது, பெரியது, இனியது – என்று வாழ்வின் பரிணாமத்தை பட்டியலிட்டது. அறிவுப்பூர்வமாக வாழ்வை அணுகுவது எப்படி என்று அடையாளம் காட்டியது.
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது – அதனினும்
கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது” – என்று பிறப்பின் பெருமையை பறை சாற்றவில்லையா?
“கொடிது கொடிது வறுமை கொடிது” – என்று உழைப்பின் மேன்மையை உனக்கு உரக்க சொல்ல வில்லையா?
“கொடிது கொடிது அன்பில்லா பெண்டிர் – அதனினும் கொடிது அவர் கையால் உண்ணல்” – என்று மானத்தோடு வாழ்வதன் மதிப்பை உணர்த்தவில்லையா?
“கேள்வி பிறந்தது அன்று – நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று – யாவும் நடந்தது இன்று.
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ என்றொரு காலம் எண்ணியது உண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று” – என்று நமது ஜனநாயகத்துக்கு வித்திட்டது பலருடைய கேள்விகள் தானே.
“ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன – அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துவிட்டால் அந்த உரிமைக்கு பெயர் என்ன?
நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த நிலைமையின் முடிவென்ன பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அந்த பெண்மையின் நிலை என்ன?
அடேங்கப்பா!!
கவிஞரின் நான்கே கேள்விகள். ஒரு காதலின் கதையை கச்சிதமாக சொல்கிறது.
காதலுக்கும் தேவை கேள்விகள்.
இசையமைப்பாளரின் தத்தகாரக் கேள்விகளுக்கு – கவிஞனின் பாடல் வரிகள் பதிலாய். இசையில் மயங்குபவனும், வார்த்தையில் கரைகிறான். சங்கீதத்துக்கு தேவை சத்தமான கேள்விகள், சந்தமான கேள்விகள்.
“என்ன செய்தான் என் தலைவன்” ? என்ற வாக்காளனின் கேள்வி – ஒரு முறையான ஆட்சியை முன் மொழியலாம். தம்பதியரிடையே வரும் தர்க்கமான கேள்விகள் குடும்பத்தில் குதூகலத்தை மேம்படுத்தலாம்.
“நாடென்ன செய்தது நமக்கு – என கேள்விகள் கேட்பது எதற்கு – நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு” – என்ற கேள்வியை உன் அலுவலகப்பணிகளுக்கு அமர்த்திப்பார். அது நல்ல முதலாளியும் தொழிலாளியும் சந்திக்கும் சதுரங்க ஆட்டமாக, சுவாரசியமாக இருக்கும்.
“ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன,
தேடிய செல்வம் என்ன, திரண்டதோர் சுற்றம் என்ன, கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? – என்ற இந்த வினாக்களுக்கு விடை, உனக்கு தன்னடக்கத்தை தரும், நாவடக்கத்தை நல்கும், பேராசையை பின்னுக்குத்தள்ளும், மற்றவரை மதிக்க கற்றுத்தரும் – அனைத்துக்கும் மேல் வாழ்வின் எதார்த்தத்தை எடுத்துச்சொல்லி – உனக்கு மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்றுத்தரும்.
கட்டிலில் தொடங்கி காட்டினில் முடியும் வாழ்வின் அனைத்து விடைகளுக்கும் முன்னால் பல கேள்விகளின் ஊர்கோலம் உண்டு.
“வேள்விகள்” பல செய்ய “கேள்விகள்” பல வேண்டும்.
கேளுங்கள், கேளுங்கள். கேட்டுக்கொண்டே இருங்கள்.
“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”
“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”
0 comments Posted in Articles