இன்றைக்கும் உண்மைக்கு எடுத்துக்காட்டாக அரிச்சந்திரனைத்தான் கூறுகிறோம். உண்மை பேசுபவர்களைக் கூட ‘அரிச்சந்திரனுக்குப் பக்கத்து வீடா’ என்றுதான் கேட்கிறோம். அத்தகையதொரு புகழ் அரிச்சந்திரனுக்குச் சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை.
ஒரு முறை தேவலோகத்தில் வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் பெரும் வாக்குவாதம் நடந்தது.‘பொய் சொல்லாத மானிடரும் உண்டு’ என்று வசிஷ்டர் கூற ‘பொய் பேசாத மனிதர்களே இல்லை’ என்று விசுவாமித்திரரும் வாதிட்டனர்.
‘பூலோகத்தில் உள்ள அயோத்திநாட்டு மன்னன் அரிச்சந்திரனை ஒரு பொய் சொல்ல வைத்து விடுங்கள், உங்களிடம் நான் தோற்றதாக ஒப்புக் கொள்கிறேன்’ என்றார் வசிஷ்டர்.
‘சரி! அரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைக்கிறேன்’ என்று சவால் விடுத்து விசுவாமித்திரர் கோபமாகப் பூலோகம் வந்தார், நேராக அயோத்தி நாட்டு மன்னனை நாடிச் சென்றார், ஏதாவது ஒரு சிக்கலில் அரிச்சந்திரனைச் சிக்கவைத்துப் பின்னர்தான் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அரண்மனைக்குள் நுழைந்த விசுவாமித்திரரை வணங்கி வரவேற்றான் மன்னன் அரிச்சந்திரன், மன்னனை வாழ்த்திய விசுவாமித்திரர் “அரிச்சந்திரா! நான் செய்யும் யாகத்திற்குச் சிறிது பொருள் தேவைப்படுகிறது, அதற்காக உன்னை நாடி வந்துள்ளேன்’ என்றார்.
மனம் மகிழ்ந்த அரிச்சந்திரன் ஆயிரம் பொற்காசுகளை அளித்தான், அதைப் பெற்றுக்கொண்ட விசுவாமித்திரர் அரிச்சந்திரனை நோக்கி, ‘மன்னா! இந்தப் பொற்காசுகள் உன்னிடமே இருக்கட்டும், தேவைப்படும்போது வந்து பெற்றுக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.
நாட்கள் கடந்தன, விசுவாமித்திரர் மீண்டும் அரிச்சந்திரனை நாடிச் சென்றார், வழக்கம்போல மன்னன் அவருக்கு வரவேற்பு அளித்து, ‘நான் தங்களுக்குச் செய்ய வேண்டிய காரியம் ஏதேனும் உள்ளதா? என்று பணிவோடு கேட்டார்.
‘அரிச்சந்திரா, நீ சொன்ன சொல் தவறாதவன் என்றும், சத்தியமே பேசுபவன் என்றும் அறிவேன், நேற்று என் கனவில் உன்னுடைய நாட்டை எனக்குத் தானமாகக் கொடுப்பதுபோல் கனவு கண்டேன், அப்படி நடக்குமா என்ன!’ என்று கள்ளச் சிரிப்போடு கேட்டார் விசுவாமித்திரர்.
‘சுவாமி, கனவிலே சொன்னால் என்ன நனவிலே சொன்னால்தான் என்ன? சொன்னது சொன்னதுதான், என் நாட்டைத் தங்களுக்குத் தானமாக இப்போதே தருகிறேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறிய அரிச்சந்திரன் உடனே தன் நாட்டை முனிவருக்குத் தானமாகக் கொடுத்து விட்டான், அடுத்த சில நிமிடங்களில் தன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசன் ஆகியோருடன் அரண்மனையை விட்டுப் புறப்பட்டான்.
அரிச்சந்திரன் புறப்பட்டுச் செல்லும்போது ‘நில் அரிச்சந்திரா! என்னுடைய ஆயிரம் பொற்காசுகளைத் தந்துவிட்டுப் போ’ என்றார் விசுவாமித்திரர்.
‘சுவாமி, அந்தப் பணமும் அரண்மனைக் கருவூலத்தில் தான் உள்ளது’ என்றான் மன்னன்.
‘அது சரி, நீ மன்னனாக இருந்தபோது அது உனக்குச் சொந்தம், நீ இப்போது அனைத்துச் செல்வங்களையும் தானமாகத் தந்து விட்டாய், இப்போது அவை எனக்குச் சொந்தம், எனவே, நீ தரவேண்டிய ஆயிரம் பொற்காசுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்? என்றார் விசுவாமித்திரர்.
அரிச்சந்திரன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்து நின்றான், அப்போது முனிவர் மெதுவாக ‘அரிச்சந்திரா! நான் ஆயிரம் பொற்காசுகளை உங்களிடம் தரவே இல்லை என ஒரு பொய் சொல்லிவிடு, உன் நாட்டையே நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார் விசுவாமித்திரர்.
அரிச்சந்திரன் திடுக்கிட்டான், ‘நான் பொய் சொல்வதா! அது என்னால் இயலாது’ என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு நடந்தான்.
விசுவாமித்திரர் விடவில்லை, ‘என் ஆயிரம் பொற்காசுகளுக்குப் பதில் சொல்லிவிட்டுப்போ’ என்றார், தான் சம்பாதித்துத் தருவதாகக் கூறிய மன்னன், ஒரு சீடனைத் தன்னுடன் அனுப்பும்படி கூறி அவனையும் அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டான், காட்டில் அலைந்து திரிந்த அரச குடும்பத்தினர் தங்கள் பசியைத் தாங்கிக் கொண்டு, தங்களுடன் வந்த சீடனின் பசியைப் போக்கப் பாடுபட்டனர், அந்த சீடனோ விசுவாமித்திரரின் கட்டளைப்படி வேண்டுமென்றே பசி, பசி என்று மன்னனைப் பாடாய்ப் படுத்தினான்.
எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அந்தச் சீடனை அனுப்பிவிடத் துடித்தான் மன்னன், ஆனால் வழி தெரியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்.
சில நாட்கள் கழிந்ததும் ஒரு ஊர் வந்தது, அந்த ஊரில் காலகண்டன் என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார், அவருடைய வீட்டில் வேலைக்காரியாக இருக்கத் தன் மனைவி மற்றும் மகனை விற்றான்; அப்பொன்னைத் தன்னுடன் வந்த விசுவாமித்திரரின் சீடனிடம் கொடுக்க அவன் இத்தொகை என் குருவிற்குச் சேர வேண்டியது, நான் இத்தனை நாட்கள்; உன்னுடன் அலைந்தற்குக் கூலி தாருங்கள் என்றான். வேறு வழியின்றி அரிச்சந்திரன் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வீரவாகு என்பவனிடம் தன்னை விற்று விசுவாமித்திரரின் சீடனுக்குக் கூலி கொடுத்தான், வீரவாகுகிற்குத் தன்னை விற்றதால் அவன் அடிமையாகச் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலை செய்து வந்தான்.
நாட்கள் நகர்ந்தன, அடிமையாக வேலை செய்துவந்த சந்திரமதியை மட்டுமல்லாது, அவளது மகன் லோகிதாசனையும் கடுமையாக வேலை வாங்கினாள் காலகண்டனின் மனைவி.
ஒருநாள் காலகண்டன் லோகிதாசனைத் தர்ப்பைப் புல் பறித்துவரக் காட்டிற்கு அனுப்பினான், அங்கு நாகப்பாம்பு லோகிதாசனைக் கடிக்க, அவன் மரணமடைந்தான், லோகிதாசனுடன் சென்ற சிறுவர்கள் சந்திரமதியிடம் சொல்ல, மகனை நினைத்துத் துடித்தாள் சந்திரமதி.
‘மகனை அடக்கம் செய்து சீக்கிரமே திரும்ப வேண்டும்’ என்ற தன் எஜமானின் கட்டளையை ஏற்றுக் கொண்டு சந்திரமதி காட்டுக்கு ஓடினாள், அங்கே தன் மகனின் உடலைக் கண்டு கதறினாள், பிணமாகக் கிடந்த மகனைத் தூக்கிக் கொண்டு சுடுகாடு நோக்கிச் சென்றாள்.
அங்கே தன் மகனைக் கிடத்தி அழுதுகொண்டே சிதைக்குத் தீ மூட்டினாள், அப்போது அங்கே வந்த அரிச்சந்திரன், “பெண்ணே! கால்படி அரிசியும், ஒரு முழத் துண்டும், கால்பணமும் கொடுக்காமல் நீ இங்குப் பிணத்தை எரிக்க முடியாது ,” என்றான்.
‘ஐயா! நான் பரம ஏழை, அடிமையாக வேலை செய்து வருகிறேன், என்னிடம் ஏது பணமும் அரிசியும்? கருணை காட்டுங்கள்’ என்று மன்றாடினாள்.
‘அப்படியானால் உன் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை விற்று எனக்குச் சேர வேண்டியதைக் கொடு’ என்றான், திடுக்கிட்டாள் சந்திரமதி, தன் கணவன் ஒருவனைத் தவிர அன்னியர் யார் கண்ணுக்கும் தென்படாதது அந்த மாங்கல்யம், எனவே, தன் முன்னே நிற்பது தன் கணவனே எனத் தெரிந்து கொண்டாள் சந்திரமதி “ஐயோ சுவாமி! தாங்களா? தங்களுக்கா இந்தக் கதி? நான்தான் உங்கள் சந்திரமதி, இறந்து கிடப்பவன் நம்முடைய மகன்” என்று கதறினாள்.
இதைக் கேட்ட அரிச்சந்திரன் மகனது உடலைக் கட்டிக் கொண்டு அழுதான், மறுகணம் மனத்தைத் தேற்றிக் கொண்டு ‘சந்திரமதி நீ உன் எஜமானனிடம் சென்று நான் கேட்ட பொருட்களைக் கொண்டு வா, அதுவரை இந்த உடலை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றான், ‘உங்கள் மகனுக்குக் கூடவா நீங்கள் பணம் கேட்கிறீர்கள்?’ என்றாள் சந்திரமதி.
‘என் எஜமானனுக்கு நான் உண்மையானவனாக இருக்கவே விரும்புகிறேன், நீ சென்று பணத்தை வாங்கி வா’ என்று கூறினான் அரிச்சந்திரன், இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விசுவாமித்திரருக்கு வியப்பு மேலிட்டது, தன்னுடைய சவாலில் வசிஷ்டரிடம் தோற்று விடுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டது, எனவே, அரிச்சந்திரனுக்கு மேலும் துன்பம் கொடுக்க எண்ணினார்.
சந்திரமதி நடந்து செல்லும் பாதையில் அந்நாட்டு மன்னன் காசிராஜனின் மகன் இறந்த நிலையில் விழும்படிச் செய்தார், அதன் காரணமாக மன்னனின் மகனைக் கொன்றவள் எனப் பழி சுமத்தப்பட்டாள் சந்திரமதி, அவளே குற்றவாளி எனத் தீர்ப்பளித்த காசிராஜன் அவளைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டான், கொலைக் களத்துக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரமதியைக் கொல்ல வேண்டிய கடமையை அரிச்சந்திரனே ஏற்க வேண்டியதாயிற்று.
அந்த நிலையிலும் மனம் கலங்காது நின்றான் அரிச்சந்திரன், அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர் ‘அரிச்சந்திரா! இப்போதேனும் நான் சொல்வதைக் கேள், எனக்கு வாக்குக் கொடுக்கவில்லை என ஒரு பொய் சொல்லிவிடு, மீண்டும் அரசப் பதவி, இழந்த நாடு, வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்’ என்றார், ஆனால் அதனை ஏற்க மறுத்தான் அரிச்சந்திரன்.
கட்டளைப்படி கத்தியை ஓங்கி சந்திரமதியின் கழுத்தில் வீசினான், என்ன ஆச்சரியம!; கத்தி மாயமானது, கழுத்தில் மாலையுடன் நின்றாள் சந்திரமதி, சிவனும் பார்வதியும் வசிஷ்டரும் தோன்றி ஆசி கூறினர், காசிராஜனின் மகனும், லோகிதாசனும் உயிர்பெற்று ஓடிவந்து இறைவனை வணங்கி நின்றனர், விசுவாமித்திரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
‘அரிச்சந்திரா, உலகில் உண்மையும், சத்தியமும் உள்ளவரை உன் பெயரும் நின்று நிலைக்கும், நீ உன் நாட்டை அடைந்து பல்லாண்டுகள் வாழ்வாயாக,” என்று ஆசி வழங்கி மறைந்தார்,
எத்தனை துன்பங்கள் நேர்ந்த போதும் பொய்யே சொல்லாமல் உண்மையை மட்டுமே பேசிய அரிச்சந்திரனின் அன்றைய வாழ்க்கை, இன்றைக்கும் நமக்கெல்லாம் ஒரு பாடமாகவே உள்ளது,
கொடைக்கு ஏன் கர்ணன்?
உண்மை என்றாலே நினைவுக்கு வருவது அரிச்சந்திரன், அகிம்சை என்றாலே நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியடிகள், அந்த வரிசையில் கொடை என்றாலே நினைவுக்கு வருவது கர்ணன் தான்.
கொடை என்றாலே ஏன் கர்ணன் பெயர் சொல்லப்படுகிறது என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம், அர்ஜூனனும் கொடையாளிதான், அவனும் தம்மை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவன்தான், ஆனால் கொடை என்றாலே கர்ணன் பெயர் முன்னிலை வகிப்பது அர்ஜூனனுக்கு வருத்தத்தைத் தந்தது.
பகவான் கிருஷ்ணரிடம் சென்று “கிருஷ்ணா! நானும் தானே என்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி வழங்கி தான தருமங்களைச் செய்துவருகிறேன், அப்படி இருக்க ‘கொடை’ என்றாலே கர்ணன் பெயர் மட்டும் முன்னிலை பெறுவது ஏன்? என் பெயரை மறந்தும்கூட எவரும் உச்சரிப்பது இல்லையே… ஏன் இந்த ஓரவஞ்சனை?” என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினான் அர்ஜுனன்.
“சரி… என்னுடன் வா! உனக்கு புரிய வைக்கிறேன்” என்று கூறி அர்ஜூனனை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர். தனது மாய சக்தியால் இரண்டு மலைகளை உருவாக்குகிறார், அதில் ஒன்று தங்கம், மற்றொன்று வெள்ளி.
அர்ஜுனனுக்கு ஒரு பரிட்சை வைக்கிறார் கிருஷ்ணர், “அர்ஜுனா! இன்று மாலைக்குள் நீ இந்த இரண்டு மலைகளையும் அதாவது இதில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் தானம் செய்துவிடவேண்டும், இது தான் உனக்குப் பரீட்சை” என்று கட்டளையிடுகிறார்.
உடனே அர்ஜுனன் “பூ… இதென்ன பிராமாதம்… இதற்குப் போய் மாலை வரை அவகாசம் எதற்கு? அதற்கு முன்னதாகவே அனைத்தையும் தானம் செய்துவிடுகிறேன்” என்று மார்தட்டுகிறான்.
தங்கம் மற்றும் வெள்ளியைத் தான் தானம் செய்யவிருக்கும் விபரத்தைத் தண்டோராப் போட்டு நாட்டு மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறான் அர்ஜுனன், உடனடியாக நாட்டு மக்கள் பலர் போட்டி போட்டு வந்து வரிசையில் நிற்க, அர்ஜுனன் தனது பணியாட்களை விட்டு மலைகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளியை வெட்டி வெட்டி கொடுக்கச் சொல்கிறான்.
பணியாட்களும் தங்கம் மற்றும் வெள்ளியை வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள், இரண்டு மலைகளையும் வெட்டி ஆயிரக்கணக்கானோருக்குக் கொடுத்த பின்பும் கூட மலையின் அளவு கால்பாகம் கூட குறைந்ததாகத் தெரியவில்லை, மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது, நேரம் செல்லச் செல்ல அர்ஜுனனின் முகத்தில் கலவரம் படர ஆரம்பித்தது, இந்தப் பரீட்சையில் தாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்தான் அர்ஜுனன்.
கிருஷ்ணரிடம் சென்று “கிருஷ்ணா என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இதே பரீட்சையைக் கர்ணனுக்கும் வையுங்கள், அவன் மட்டும் எப்படி ஜெயிக்கிறான் என்று பார்க்கிறேன்” என்கிறான் அர்ஜுனன்.
கிருஷ்ணர் புன்னகைத்துக் கொண்டே சேவகர்களிடம் சொல்லி கர்ணனை அழைத்து வரும்படி கூறுகிறார், அடுத்த சில நிமிடங்களில் கர்ணன் அங்கு வந்து சேர்கிறான்.
“;பரமாத்மாவே… அடியேனைத் தாங்கள் அழைத்ததன் நோக்கம் என்னவோ… நீங்கள் இட்ட பணியைச் செய்யக் காத்திருக்கிறேன்” என்கிறான் பணிவுடன்.
கிருஷ்ணர் அந்த இரண்டு மலைகளையும் கர்ணனிடம் காண்பித்து, “கர்ணா!… நாளை மாலைக்குள் நீ அந்த இரண்டு மலைகளில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அனைத்தையும் தானம் செய்துவிடவேண்டும், இதுதான் நான் உனக்கு வைத்திருக்கும் பரிட்சை” என்கிறார்,
“எத்தகையதொரு புண்ணியத்துக்கு என்னை ஆளாக்கியிருக்கிறீர்கள் பரமாத்மாவே… நன்றி… நன்றி…! என்று உள்ளம் நெகிழக் கூறிய கர்ணன்…“சரி… இதற்குப் போய் எதற்கு நாளை மாலை வரை அவகாசம்…? இதோ ஒரு நொடியில் செய்துவிடுகிறேன்…” என்று கூறிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்க்கிறான்.
தூரத்தில் இரண்டு விவசாயிகள் சென்று கொண்டிருக்கிறார்கள், அவர்களை அழைத்து “நீ இந்தத் தங்க மலையை எடுத்துக்கொள், நீ இந்த வெள்ளி மலையை எடுத்துக்கொள், இன்று முதல் உங்களுக்கு இந்த மலைகள் சொந்தம், யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் கொடுக்கலாம், அது உங்கள் உரிமை” என்று கூறுகிறான்.
இதைப் பார்த்துகொண்டிருந்த அர்ஜுனன் வெட்கித் தலைகுனிந்தான், “கர்ணா… உண்மையில் நீதான் கொடையாளி… என்னை மன்னித்துவிடு” என்று கர்ணனை அணைத்துக்கொள்கிறான் அர்ஜுனன், அனைத்தையும் பார்த்துக்கொண்டு பகவான் கிருஷ்ணர் புன்முறுவல் பூத்தார்.
சிறிதோ பெரிதோ தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அப்பொழுதே செய்துவிடுவார்கள், கொடைத் தன்மை என்பது ஒருவரது நாடி, நரம்பு, சிந்தனை மற்றும் இரத்தத்தில் ஊறியிருக்கும் ஒரு விஷயம், பெயருக்காகவும், புகழுக்காகவும், மற்றவர்கள் செய்கிறார்களே என்று செய்பவர்களுக்கும் அது கைவராது, ஆகவேதான் கொடை என்றாலே இன்றுவரை கர்ணன் பெயர் சொல்லப்படுகிறது.