– 2018 – April | தன்னம்பிக்கை

Home » 2018 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்

    இந்த உடல் வரம். இந்த உயிர் வரம். இந்த வாழ்க்கை இனிது. நம்மிடமிருக்கும் இந்த ஆற்றல் வலிது. உலகை மடித்து உள்ளங்கைக்குள் மூளையால் அடக்கிக் கொண்டது அறிவியல் எனில் ஒரு விரலால் தாங்கிநிற்கும் பலத்தை மனதால் உடலால் பெறமுடியும். அதெப்படி என்று சந்தேகிப்பீரெனில் ஒரு தீக்குச்சியை எடுத்து வெய்யிலில் போடுங்கள், அது உடனே எரியுமா? எரியாதுதானே? அதே ஒரு லென்ஸ் எடுத்து சூரிய ஒளியை அந்த தீக்குச்சியினுடைய மருந்தின்மீது குவியுமாறு காட்டிப்பாருங்கள், அந்த தீக்குச்சி உடனே தீப்பற்றி எரியும், காரணம், “எங்கு சக்தியானது ஒருமித்துக் குவிக்கப்படுகிறதோ அங்கிருந்து வேறொரு அதீத சக்தி விரைவாக வெளிப்படுகிறது”.

    ஆக, அப்படி, எண்ணத்தை குவித்து திறமையை வெளிக்கொண்டுவரல் என்பதொரு கலை. அந்தக் கலையைத்தான் தியானம் வழியே நிகழ்த்தி உடலைத் தனியாகப் பார்க்கவும், மனதை தனியாக அசைக்கவும் நம் பெரியோர் கற்றுத் தந்துள்ளனர்.

    தியானம் என்பதில் பலர் பலவாறு சொன்னதும், அங்ஙனம் அவரவர் வென்றதுமாய் நி றையப் புத்தகங்களும் செவிவழி பாடமும் பயிற்சியும், உண்மையின் குறிப்புகளுமென ஏராளமுண்டு. அவைகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே நமக்கு மனதின் எண்ணத்தைக் குவித்து செயலை வெற்றியாக வெளிக்கொண்டுவர ஒரு இலகுவான பயிற்சி தேவைப்படுகிறது. ஆடும் மனதை அடக்கி அலைபாயும் எண்ணத்தை சீராக்கி ஒரே இடத்தில் நிறுத்தி, வேண்டுவதையெல்லாம் பெறும் சக்தி மனிதனிடம் உண்டென்பதை அறிய இத்தகையப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.

    தன்னை தானறியும் மனிதன், செருக்கோடு அலைந்தால் பூமி தாங்காதென்று எண்ணிய முன்னோர், உனக்கும் மேல் ஒருவன் உள்ளான் அவனை நம்பு எல்லாம் நடக்குமென்று இயற்கையின் சக்திக்கு நன்றியறிவிக்கும் விதமாக  கடவுள் நம்பிக்கையை முன்வைத்து, எல்லாம் அவன் செயலென்று கற்பித்ததன்பேரில்; நம்பிக்கையின் முதன்மை தன்மையென்பது இறையினிடத்து ஒன்றே என்றாகி, அது பின்னர் பலவாக மாறி, இன்று தனையே மறக்கும் நிலைக்கு நாம் வரப்பட்டுள்ளதையும் நாம் அறியவேண்டும்.

    ஒரு யானைக்குட்டியை யானைப் பாகன் மேய்ச்சலுக்கு கொண்டுபோய் திரும்பி வருகையில் ஒரு சிறிய கொம்பு நட்டு அதில் அந்த யானைக்குட்டியை கட்டிவைப்பானாம். சிலவேளை அவன் மேய்ச்சலுக்குப் போக தாமதமாகையில் யானைக்குட்டிக்கு பசியெடுத்து தனைக் கட்டப்பட்டுள்ள கயிற்றை இழுத்து இழுத்து அறுத்துப்பார்க்க முயன்று அறுக்கமுடியாமல் தோற்றுப்போகுமாம். இப்படி எத்தனையோமுறைப் போராடியும் அந்தக் கயிற்றை அறுக்க முடியவில்லை என்பதால் அவன் வந்து அவிழ்த்து விடும்வரை அந்த யானை அந்த இடத்திலேயே பசியோடு காத்திருக்குமாம்.

    பின் வளர்ந்து பெரிதாகிப்போன அந்த யானையை காட்டிற்கு கொண்டுபோய் விட்டால் போதும், வெறி வந்தாற்போல் பெரியப் பெரிய மரங்களையெல்லாம் சர்வசாதரணமாகப் பிடுங்கி தரையில் எறியுமாம். அட்டகாசம் தாங்கமுடியாமல் யானைப்பாகன் அந்த யானையை ஓட்டிவந்து அந்தச் சிறிய கொம்பில் கட்டிவைத்துவிட்டு வீட்டிற்குப் போய்விடுவானாம். அந்த யானை மீண்டும் தன்னை பழையப்போலவே கருதிக்கொண்டு மறுநாள் அந்த யானைப்பாகன் வந்து யானையை அவிழ்த்துவிடும்வரை அந்தக் கயிற்றை இழுத்துக்கூட பார்க்காதாம்.[hide]

    காரணம், அதைப் பொறுத்தவரை, அந்தக் கயிறு ஒரு அறுக்கமுடியாத கயிறு. சிறு வயதிலிருந்து இழுத்து இழுத்துப் பார்த்துஅறுக்கமுடியாமல் போகவே ஒரு கட்டத்தில் இனி அதை அறுக்கவே முடியாதென்று எண்ணிக்கொண்டே அந்த யானை வளர்ந்துவந்ததால், அந்த யானைக்கு தான் வளர்ந்து காட்டையழிக்கும் சக்தியை பெற்றபோதுகூட அந்த சிறிய கொம்பை பிடுங்கிக்கொண்டு ஓடமுடியாது என்ற எண்ணம் இருந்துள்ளது.

    நாமும் இப்படித்தான், இந்த மரத்தில் கட்டிவைத்த யானையைப் போலவே சிறுவயது எண்ணங்களையே மனதில் சுமந்து வாழ்ந்துகொண்டுள்ளோம். வளர வளர அறுபடவேண்டிய பல நம்பிக்கைக்குரிய கட்டுகளை அறுத்துக்கொண்டு சுதந்திரமாகப் பயணிக்காமல், காதால் கேட்டதையும் யார்யாரோ சொன்னதையுமே நமக்கான கடைசி வட்டமென்று எண்ணிக்கொண்டு வாழ்ந்துவருகிறேôம்.

    சாமி.. வழிபாடு.. பண்டிகை.. கலாச்சாராமெல்லாம் மனிதரின் நன்மைக்கானதும், மேன்மையை எதிர்நோக்கி நாம் கட்டமைத்ததும் மட்டுமே. பிறகு அந்தந்த வேளை வருகையில் அததற்கான விளக்கங்களை எடுத்துச் சொல்லி வளரும் குழந்தைகளை விடுதலை உணர்வோடும்’ போதுமான பண்போடும்’ பகுத்தறியக் கூடியத் தெளிவோடும்’ மனித மற்றும் உயிர்களின் மீதான மதிப்பும் மரியாதையோடுமாய் வளர்க்கவேண்டியது நமது கட்டாயமாகிறது.

    அங்ஙனம் அவிழ்க்கவேண்டிய கட்டில் ஒன்றும், புரியவேண்டிய உண்மையில் ஒன்றுமானதுதான் அந்த “நம் ஆத்தா கண்ணை குத்தும்” என்று சொன்னப் பொய்யும். எல்லாம் அவன் செய்வான் என்று நம்பவைத்த நம்பிக்கையுமாகும்.ஏனெனில் இன்று அத்தகையப் பொய்யில் வளர்ந்த மூடப்பழக்க வழக்கங்களும், அவசியமற்ற நம்பிக்கைகளும் பயமும் மாறவேண்டுமெனில் குறைந்தது ஆயிரமிரண்டாயிரம் வருடங்களாவது இனியும் நமக்குத் தேவைப்படும்போல்.

    கோவில்.. சாமி.. என்று காட்டும் அக்கறையை இன்று நாம் நம் மனிதரிடத்தே காட்ட மறுக்கிறேôம். சாகும் மனிதனைவிட சாகாதக் கல்லிற்கு ஊற்றும் பாலும் பூஜையும் மட்டுமே பெரிதென்று நம்பிக்கொண்டது நம் பெருத்த மூடத்தனம்தான். வெறும் ஒரு கல்லில் ஒரு கோவிலில் மட்டுமல்ல சாமி. இந்த அண்டசராச்சரமும் இயற்கைசக்தியால் நிறைந்தது. எதெல்லாம் இயற்கையிலிருந்து வந்ததோ அதெல்லாம் தெய்வீகமானதுதான். கல்லை நம்பி கையெடுத்து வணங்கினாலும் கல் நம்மைக் காப்பாற்றும். மரத்தை நம்பினாலும் மரம் நமைக் காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கைக்குரிய வகையில்தான் இயற்கையெனும் இயற்கைசக்தி நம்முள் எங்கும் பரவியுள்ளது’ என்றுச் சொன்னதை நாம் வெறும் ஒரு கல்லிலும் மரத்திலும் மட்டுமே உண்டென்று நம்பிக்கொண்டது பிழை.

    கையெடுத்து வணங்கி உள்ளே பேசும் சொற்கள் ஆழ்மனதுள் பதியுமெனில் அதற்கு செயல்வடிவம் ஏற்பட்டு நம்பியது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அமைவதென்பது இயற்கைச் சக்தியின் இயல்பிற்கு உட்பட்டதே. இதைத்தான் எண்ணங்களே செயலாகும் என்றார் விவேகானந்தர்.

    தனை தானுணர்ந்து, தனக்குள் பேசி, தான் வளர வளர பூரண அன்புகொண்டு பிறருக்காய் வாழ்வதையே ஆன்மிகம் போதிக்கிறது. உள்ளே கடைந்து வெளியே தெரியும் காட்சியின் சூழ்சுமத்தை அறியவே “நானே கடவுள்” என்றது மதம். அனால் நாமென்ன செய்தோம்? நானே கடவுள் என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னைத்தான் முழுதாக நம்பாமல், எங்கும் நிறைந்த இறைத்தன்மையை சுயநலமறுத்துக் காணாமல், வெறுமனே கடவுள் எங்கென்று தேடித் தேடியே காலத்தை கழித்துவிடுகிறேôம். எது உண்மை என்றுப் புரிவதற்குள் மரணம் நெருங்கி வாழ்நாள் முடிந்து மீண்டும் மறுபிறப்பெடுத்தும் உண்மையறியாமலே மரணிக்கவும் தயாராகிவிடுகிறேôம்.

    ஆக பிறருக்காக, பிறரின் அனுபவத்தின் பாடத்திற்காகக் காத்திருந்ததையெல்லாம் விட்டுவிட்டு விழிப்பென்னும் வெளிச்சத்திற்கு நாமெல்லோரும் வரவேண்டும். எதைக் குறித்தும் சுதந்திரமாய் தனது அறிவிற்கு புரியும் வகையில் சிந்திக்கவேண்டும். பிறருக்கும், மொத்த உலகிற்கும் நல்லதை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே நம் ஒவ்வொருவரின்  வாழ்க்கயை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். எங்கு நமது அசைவால் ஒரு நன்மை நடக்குமோ’ அங்கு அந்த இயற்கைசக்தி நிறைந்திருக்கும் என்பதை அனுபவத்தால் புரிந்துணர வேண்டும்.

    நாமெல்லாம் கடவுளின் பிள்ளைகள். இயற்கை ஈன்றெடுத்தக் குழந்தைகள். நமக்கு வணங்கினாலும் வணங்காவிட்டாலும் அந்த தாயுமான சுவாமி துணை இருந்தேத் தீரும். பிறகெதற்கு கடவுள் கோவில் மதம் எனும் பல கட்டுக்குள் அவிழ்க்கவே முடியாத அளவிற்கு போய் ஆழ்ந்து விடுவானேன்?  நம்பிக்கை ஏற்கும் மறுக்கும் மாற்றிக் கொள்ளும் அளவில் இருக்கையில் கூட அது கேடில்லை.

    மாறவே முடியாது, திருந்தவே ஒன்றுமில்லை, இதுதான் சரி என்று ஒன்றிற்குள் மட்டுமே சென்று அடங்கிக் கொண்டால் உண்மையை அதுவாக உணர்ந்தறிவதெப்போது?

    மாற்றம் என்பது இருந்துக் கொண்டேயுள்ளது. இந்த ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டேயுள்ளது. நாமும் மாறிக் கொண்டேயுள்ளோம். பிறகு நமது நம்பிக்கையை மட்டும் ஆராயாமல் இதுதான் சரி என்று அழுத்திக் கொள்வதைப  பற்றி நாம் உணர்வுரீதியாகச் சிந்திக்கவேண்டாமா?

    சிந்திப்போம். எல்லாவற்றையும் சிந்திக்கும் சமயத்தில் நமைப் பற்றியும் நாமறிந்துகொள்ள முயற்சிப்போம். நமையறிந்துக்கொள்ளல், நம் பலத்தை, நமக்குரிய பண்பை, இயல்பான நற்குணங்களை அறிந்துக்கொள்ளல் நமது கடன். பிறகு, தனை தானறிந்துக்கொள்வதெனில் வேறென்ன செய்வது?

    தனைப் பார்க்கவேண்டும். எந்த மதமும் போதனையும் அறிவில் முடிவாகச் சென்று ஏறிக்கொள்ளாதவில் அமைதியாக அமர்ந்து., தனக்குள்ளே முழுவதுமாய்ச் சென்று, தனை முற்றிலுமாக நான் யார் என்று அறியுமாறு பார்க்கவேண்டும். தான் மாறிக்கொண்டே இருப்பதையும், இந்த உலகம் மாறிக்கொண்டே இருப்பதையும் பார்த்துணர வேண்டும். அது முயன்றால் அறிவுள்ள ஒவ்வொரு உயிர்க்கும் முடியும். நமக்குள் ஏற்படும் மாற்றத்தையும் நாம் பார்க்கமுடியும். உள்ளே சென்றுப் பார்த்தால் உள்ளிருக்கும் சாமி மட்டுமல்ல வெளியிருக்கும் உலகத்தின் மொத்தத் தோற்றமும்கூட நிதர்சனமாய் தெரியும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    மௌன அநீதி

    இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, நகர மயமாக்கல், உலகமயமாக்கல், கணினி, பேஸ்புக், செல்போன் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறது. தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாத அளவுக்கு காதல் திருமணங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வயது வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ நிச்சயமாக உரிமை உள்ளது. ஆனால், காதல் மணம் புரிபவர்கள் அதற்கு கொடுக்கும் விலை மிகவும் அவலமானது என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.

    25.05.2014 அன்று 25 வயது இளம்பெண் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, லாகூர் உயர்நீதி மன்றத்துக்கு வெளியே சொந்த குடும்பத்தாரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலக கவனத்தை பெரிதும் ஈர்த்தது. குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பெண் உயர்ந்த சாதியாகவும், ஆண் தாழ்ந்த சாதியாகவும் இருந்து விட்டால் தம்பதிகளை பிரித்து வைக்கவும், ஊர் நீக்கம் செய்யவும், தற்கொலைக்கு தூண்டவும் கூட சிலர் தயாராகி விடுகின்றனர். சில நிகழ்வுகளில் பல அப்பாவிகள் கௌரவ கொலைக்கு ஆளாகின்றனர்.

    உலகில் நடக்கும் கௌரவ கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கோவில் திருமணம் செய்து கொண்டு, பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு வாழ்வைத் துவங்கினாலும் சொந்த குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படுதல் போன்றகௌரவ சித்ரவதைகளை சந்திக்க நேருகிறது. சில பெற்றோர் தங்களுக்கும், மகளுக்கும் எந்த உறவும் இல்லை எனவும், சொத்தில் பங்கு தர மாட்டோம் எனவும் காவல் துறையில் எழுதித் தருபவர்களும் உள்ளனர். நாகரீக நிலையை நமது சமூகம் இன்றும் அடையவில்லை. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை என்றநிஜத்தை ஏற்க மனப்பக்கு வமில்லை.

    இன்னமும் பெண்கள் ஆண்க ளைவிட கீழானவர்களாகவே சமூகத்தில் பார்க்கப்படுகிறார்கள். இந்தியச் சட்டப்படி திருமண வயதில் இருக்கும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணையை சுயமாகத் தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது. இதில் யாருமே சட்டப்படி தலையிட முடியாது. பிள்ளைகளுக்கு ஆலோசனை சொல்லலாம். தோழமையோடு அறிவுரை சொல்லலாம். மற்றபடி, கொலை செய்யவும், தண்டிக்கவும் பெற்றோருக்கு உரிமையில்லை.

    மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நம் குடும்ப உறுப்பினர்க்கு (நோயாளிக்கு) ரத்தம் தந்தவர் யார் என்று பார்ப்பதில்லை. ஆனால் திருமணத்தில் மட்டும் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. கௌரவ கொலைகள் மிகவும் காட்டுமிராண்டித் தனமானது. பெரும்பாலும் ஜாதி, மதம் காரணமாகவே கௌரவ கொலைகள் செய்யப்படுகின்றன. மகனோ, மகளோ செய்தது பிடிக்கவில்லை என்றால் அதிகபட்சம் உறவை முறித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சினை. உலகம் முழுவதும் இந்த சிக்கல் உள்ளது.[hide]

    மனிதன் தனது சமூக அந்தஸ்துக்கு பங்கம் வரும்போது கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறான். சில இடங்களில் காதல் திருமணம் செய்பவர்கள் காதலுக்காக மதம் மாறசம்மதித்தால் காதல் அங்கு அனுமதிக்கப்படுகிறது. அது கூட ஒரு வழி பாதைதான். உள்ளே வரலாம். வெளியே போக முடியாது. கடல் போல நிறைந்திருக்கும் சாதி மத நச்சுகளில் இருந்து பல இளம் காதலர்களை காப்பாற்றமுடிவதில்லை.

    நம் நாட்டில்,    ஹரியானாவில் உள்ள காப் பஞ்சாயத்துக்கள் தான் கௌரவ கொலைகள் செய்வதில் முன்னனியில் இருக்கிறது. சமயங்களின் அடிப்படை நோக்கங்கள் சிதைந்துவிட்டன. எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகம் தடுமாறி தறிகெட்டு செல்கிறது. மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், சாதியின் பெயரால் மனிதக் கொலைகள் மலிந்துவிட்டன. கௌரவ கொலை என்பது பழைய சமுதாய வழக்கம். ஆனால் இன்னும் நடைமுறையில் உள்ளது. காதலால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுவதாகவும், குடும்பத்தின் களங்கத்தை துடைக்க தங்கள் பிள்ளையை குடும்பத்தினரே கொன்று விடுகின்றனர்.

    இது போன்றகௌரவ கொலைகள் தடை செய்யப்படவேண்டும். மனித உயிர் விலை மதிப்பற்றது. பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை மறுப்பது, சாதி மத எல்லைகளைத் தாண்டி திருமணம் செய்து கொல்வதை சமூகத்தால் ஜீரணிக்க முடியவில்லை. சில இடங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அப்பாவிப் பெண்ணை கற்பழித்தவனையே திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகிறார்கள்.

    ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு நல்ல விசயங்களும், அதே நேரத்தில் காலத்திற்கு ஒவ்வாத சில வழக்கங்களும் இருக்கவே செய்கின்றன. மனிதனின் தவறான புரிதலும் குற்றங்களுக்கு காரணமாகிறது. வருடந்தோறும் சுமார் 5000 பெண்கள் கௌரவ கொலைகளுக்கு ஆளாகின்றனர் என ஐ.நா. தெரிவிக்கிறது. உண்மையில் கொலை செய்வதில் எந்த கௌரவமும் இருக்க வாய்ப்பில்லை. சுயமாக தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை இன்றைய பெண்களுக்கு உள்ளதா? என்பது கேள்விக்குறியதாக உள்ளது. மனிதாபிமானமற்ற, ஈவிரக்கமற்றவர்களால் அப்பாவி காதலர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாக உள்ளது.

    நல்ல கல்வி இந்த தீமையை குணமாக்கும். வட இந்தியாவில் கௌரவ கொலை இன்றைக்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. எந்த மதமும், நாடும் கௌரவ கொலைக்கு விதி விலக்கல்ல. தென் அமெரிக்கா முதல் ஆசியா கண்டம் வரை உலகம் முழுவதும் கௌரவ கொலை நடைபெறுகிறது. இது ஒரு பண்பாட்டு சிக்கல். மனிதனுக்கு தனது சாதி, மத, இன அந்தஸ்து பறிக்கப்பட்டு விடுமோ என்கிறஅச்சம் ஏற்படுவதால் தான் பெற்று வளர்த்த பிள்ளையை கொல்லவும், அதனால், தானே பிள்ளையை இழந்து, அனாதையாகவும் தயாராகி விடுகிறான். பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யவும், ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெற்றோருக்கு வர வேண்டும்.

    கடுமையான சட்டங்கள் கௌரவ கொலைகளுக்கு எதிராக இயற்றப்பட வேண்டும். புகார் தரப்படாமலும், தண்டிக்கப்படாமலும் உள்ள அவல நிலை மாறவேண்டும்.

    வயதுக்கு வந்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தங்கள் வாழ்க்கையை தங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது. பெரும்பாலான குடும்பங்களில் தமது பிள்ளைகளைவிட சமூக நிலை, அந்தஸ்து ரொம்ப முக்கியமா னதாக கருதுகிறார்கள். அந்தஸ்துக்காக தங்கள் பிள்ளைகளை இழக்கவும் துணிந்து விடுகிறார்கள். தீவிரவாதிகள் கூட முன்பின் தெரியாதவர்களைத் தான் கொல்கிறார்கள். இதயமற்றசிலர் தங்கள் பிள்ளைகளையே கௌரவத்திற்காக கொன்று விடுகிறார் கள்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்தெனத் தனிப்பிரிவு தொடங்கப்பட வேண்டும். கௌரவ கொலைகளில் அப்பாவிகள் பாதுகாக்கப்பட வேண்டும். நம் பிள்ளைகள் நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்புதான். அன்பான, இனிய வார்த்தைகளுக்கு நிச்சயம் கட்டுப்படுவார்கள். அழுத்த அழுத்த காதல் அமுங்கிப் போய்விடுவதில்லை. வெட்ட வெட்ட முன்னிலும் வேகமாய் துளிர்க்கிறது. இளம் காதலர்கள் மீது பூக்களை வீசுவோம். கற்களை அல்ல. அவர்கள் சாதி, மத சுவர்களை தகர்க்கிறார்கள். வரதட்சனை இன்றி, சாதி மத பேதங்களை பொருட்படுத்தாமல் புது சமுதாயம், சமத்துவம் மலர முதல் அடி எடுத்து வைக்கிறார்கள். பெற்றோராகிய நாம் ஏன் அதற்கு தடையாக இருக்க வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    இரண ஜன்னி (Tetanus)

    இது உயிர்கொல்லி நோயாகும். இவை கிலாஸ்டீரிடியம் டெட்டனி (Clostridium tetani) எனும் பாக்டீரியாவால் ஏற்படுவதாகும். இக்கிருமிகள் டெட்னோஸ்பாஸ்மின் எனும் விஷத்தின் மூலம் இந்நோயை உண்டாக்குகின்றன.

    இந்நோய் இந்தியா போன்றவளரும் நாடுகளிலேயே அதிகம் காணப்படுகிறது. இந்நோயினால் வளரும் நாடுகளில் ஆண்டுக்கு 5,00,000 குழந்தைகள் இறக்கின்றனர்.

    கர்ப்ப காலத்தில் பெண்களை இந்நோய் தாக்கும் பொழுது அவை குழந்தைகளுக்குப் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

    அறிகுறிகள்

    இக்கிருமிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2-14 நாட்களில் இந்நோயின் அறிகுறிகள் ஏற்படும்.

    • முதலில் வாயில் ஒரு பிடிப்பு போன்ற தன்மை ஏற்படும். பின் வாயைத் திறந்து மூடுவது கடினமாகும்.
    • தலைவலி, எரிச்சல், தசைப்பிடிப்பு, முழுங்குவதில் கடினம் ஆகியவை முதலில் ஏற்படும்.
    • முகத்தசைகளில் பிடிப்பு ஏற்படுவதால் முகத்தில் ஒரு வெறுமையான சிரிப்பு போன்றதோற்றம் ஏற்படும்.
    • திடீர் திடீரென்று உடம்பின் ஒவ்வொரு தசை களிலும் பிடிப்பு ஏற்படும்.
    • சுவாசக் குழாயில் உள்ள தசைகள் பாதிக்கப் படுவதால், மூச்சு விடுவதில் சிரமம் புரைஏறுதல் போன்றவை ஏற்படும்.
    • சில நேரங்களில் அதிகப்படியான காய்ச்சல் ஏற்படும்.
    • இந்நோய், பிறந்த சில நாட்களே ஆன குழந்தை களைப் பாதிக்கும் பொழுது, பால் குடிப்பதில் சிரமம், தொடர்ந்து அழுதல், உடம்பு இறுக்கமாகுதல், கால், கை சரியாக இயங்காமல் இருப்பது போன்றவை ஏற்படும்.

    சிகிச்சை

    பாதிப்பு நரம்புகளில் பரவாமல் இருக்க உடனடியாக இம்முனோக்லோபுலின் ஊசியைப் போட வேண்டும். இதனுடன் பெனிசிலின், எரித்ரோமைஸின் போன்ற மருந்துகளும் உபயோகப்படும்.

    தடுப்பூசிகள்

    இம்மூன்று நோய்களையும் தடுப்பதற்குத் தடுப்பூசிகள் உள்ளன. இம்மூன்று நோய்களுக்குமான தடுப்பூசிகள், ஒன்றாகக் கிடைப்பதால் இதைப் போடுவது சுலபமாகும்.

    இத்தடுப்பூசிகள் குழந்தை பிறந்த 1 1/2, 2 1/2, 3 1/2 மாதங்களிலும், பின் 1 1/2 வயது, 4 1/2 வயது, 10 வயதிலும் போடப்பட வேண்டும்.

    இந்நோய்களுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு, இந்நோயினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    இத்தடுப்பூசியை முத்தடுப்பூசி என்றும் அழைப்பர்.

    இத்தடுப்பூசியில் டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் கொல்லப்பட்ட வீரியம் குறைந்த பெர்டுசிஸ் கிருமிகள் உள்ளன. இத்தடுப்பூசிகளை 2-8oC தட்பவெப்பத்தில் பாதுகாக்க வேண்டும்.[hide]

    0.5 ml அளவு மருந்தைத் தொடையின் முன்பக்கத்தில் ஆழ்ந்த தசை ஊசியாக போட வேண்டும்.

    இத்தடுப்பூசி டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் கிருமிகளுக்கு எதிராக 95% பாதுகாப்பையும் பெர்டுசிஸ் கிருமிக்கு எதிராக 70 % பாதுகாப்பையும் தருகிறது.

    இத்தடுப்பூசியின் வீரியம் 6-12 ஆண்டுகளில் குறைவதால் கூடுதல் ஊசிகளைப் போட வேண்டும். சில குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போடுவதால், வலி, வீக்கம், காய்ச்சல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.

    மிகவும் அரிதாக சில குழந்தைகளுக்கு வலிப்பு, மூளை பாதிப்பு, இறப்பு போன்றவை ஏற்படலாம்.

    மேற்கூறப்பட்ட தடுப்பூசியில் பக்கவிளைவு அதிகம் இருந்ததால் புதிதாக வீரியம் குறைந்த பெர்டுசிஸ் கிருமிகளைக் கொண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப் படுகின்றன. இத்தடுப்பூசிகளில் மேற்கூறப்பட்ட பக்கவிளைவுகள் அரிதாகவே ஏற்படும்.

    மூளைக்காய்ச்சல்

    இந்நோய் ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா-பி எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

    ஹெச் இன்ஃப்ளூயன்ஸாவில் 6 வகைகள் உள்ளன. அவற்றில் – பி வகையே பெரும்பாலான நோய்களை உண்டாக்குகிறது. இக்கிருமிகள் பெரும்பாலும் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கப்படுகின்றன.

    இன்ஃப்ளூயன்ஸா கிருமிகள் பொதுவாகவே மனிதர்களின் சுவாசக் குழாய்களில் இருக்கும். மனிதர்களின் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது இது நோய்களை உண்டாக்குகிறது.

    பரவும் முறை

    இது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு நேரிடையாகவோ அல்லது மூச்சுக்குழாயிலிருந்து வரும் திரவங்களாலோ பரவலாம்.

    அறிகுறிகள்

    இக்கிருமி பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

    ஏ-இன்ஃப்ளூய்னஸா கிருமி அதிகம் உண்டாக்குவது மூளைக்காய்ச்சலைத் தான்.

    இந்நோயின் வீரியம், பாதிக்கப்படும் குழந்தையின் வயதையும், மருந்து ஆரம்பிக்கப்படும் இடைவெளியையும் மற்றும் இரத்தம், நரம்புத்தண்டு நீர் ஆகியவற்றில் இக்கிருமியின் அளவையும் பொருத்து இருக்கும்.

    இந்நோயினால் பாதிக்கப்பட்ட 6.1% குழந்தைகளுக்கு காது கேட்கும் தன்மை பாதிக்கப்படும். மேலும் மூளை வளர்ச்சியின்மை, பார்வை குறைபாடு, வலிப்பு, மூளையில் நீர் கோர்த்தல் போன்றவையும் ஏற்படலாம்.

    மற்ற நோய்கள்

    • மூச்சுக்குழாய் வீக்கம்
    • நிமோனியா
    • மூட்டு ஜவ்வு வீக்கம்
    • இதயத் தசைகளில் வீக்கம்.
    • காதில் சீழ் கோர்த்தல்
    • கண்களில் கன்ஜக்டிவைடிஸ் ஏற்படுதல்
    • சைனஸ் தொந்தரவுகள்

    கண்டுபிடிக்கும் முறை

    • இரத்தத்தில் கிருமியின் அளவு
    • நரம்புத்தண்டு நீரில் கிருமியின் அளவு.

    சிகிச்சை 

    • செபளோஸ்போரின் மற்றும் ஆம்பிஸின் மருந்துகள் கொடுக்கலாம்.
    • காது நரம்பு பாதிப்பபைத் தடுக்க டெக்ஸா மெதஸோன் போன்றமருந்துகளை உபயோகப்படுத்தலாம்.

    தடுப்பூசி

    • தடுப்பூசிகள் வந்தபிறகு இந்நோயின் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
    • இந்நோய்க்கான தடுப்பூசிகள் முத்தடுப்பு ஊசிகளுடன் சேர்ந்து 1 1/2, 2 1/2, 3 1/2 மாதங்களிலும் பின் 1 1/2 வயதிலும் போடப்படுகிறது.

    மஞ்சள் காமாலை பி (ஹெப்படைடிஸ் – பி)

    ஹெப்படைடிஸ் பி என்பது ஒரு வைரஸ் கிருமி ஆகும். இக்கிருமி உலகம் முழுவதும் பரவியுள்ளது. இக்கிருமிகள் பெரும்பாலும் இரத்தத்திலும் உமிழ்நீர், விந்து மற்றும் பெண்களின் பிறப்பு உறுப்பு திரவம் ஆகியவற்றிலும் அதிகளவு காணப்படும்.

    பரவும் முறை

    இக்கிருமிகள் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தின் மூலமாகவும், பின் பாதிக்கப்பட்டவருடன் உடல் உறவு கொள்ளும் பொழுதும் பரவுகிறது.

    குழந்தைகளுக்கு இது பெரும்பாலும் பாதிக்கப்பட்ட தாயாரிடமிருந்தே தொற்றுகிறது.

    2.5% குழந்தைகள் கருவிலேயே பாதிக்கப்படுகின்றனர்.

    பாதிப்பு ஏற்படும் முறை

    இக்கிருமிகள் முதல் கல்லீரலையே தாக்குகிறது. இதை கடுமையான கல்லீரல் அழற்சி (Acute Hepatitis) என்பர். பின் தொடர்ந்து வெளியேறும் விஷப்பொருட்களால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

    இது பின் கல்லீரல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்பு உண்டு. இந்நோயினால் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்  “கேரியர்” எனும் நிலையை அடைவர். அதாவது இவர்களிடமிருந்து தொடர்ந்து இக்கிருமித் தொற்று ஏற்படும்.

    அறிகுறிகள்

    • மஞ்சள் காமாலை
    • காய்ச்சல்
    • பசியின்மை
    • உடல் சோர்வு
    • தோல் தடிப்புகள்
    • மூட்டு வீங்குதல்
    • சிறுநீரக பாதிப்பு
    • இரத்த சோகை
    • ஸிர்ரோசிஸ் (Cirrohsis)
    • கல்லீரல் புற்றுநோய்

    கண்டறியும் முறை

    இக்கிருமியை இரத்தத்தில் ஏக்ஷள் அஞ் எனும் கிருமியின் பகுதியில் இருந்து கண்டறியலாம். இது தான் பாதிப்பு ஏற்பட்டவுடன் இரத்தத்தில் முதல் தோன்றும்.

    Hbs Ag இரத்தத்தில் 6 மாதத்திற்கு மேல் இருந்தால் அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலை என்று கூறுவர். இதைத்தவிர Hbs Agக்கு எதிரான பிறபொருளெதிரி (Antibodies), Hbc Agக்கு எதிரான பிறபொருளெதிரி, ஆகியவற்றை கொண்டும் நோயின் தன்மையை அறியலாம்.

    சிகிச்சை முறை

    ஆரம்ப நிலையிலேயே இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும். சிகிச்சை முறையின் முக்கிய அம்சம் என்னவெனில் இக்கிருமி மேலும் இரத்தத்தில் உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும்.

    • இண்டர்பரோன்
    • லாமிவுடின்
    • அடிபோவிர்

    ஆகியவை புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் ஆகும்.

    தடுக்கும்முறைகள்

    தடுப்பூசி

    இந்தியாவில் இந்நோய் தாயிடமிருந்து குழந்தைக்கு அதிகளவில் பரவுகிறது.

    இக்கிருமிக்கான தடுப்பூசி Hbs Ag-யிலிருந்து தயாரிக்கப் படுகிறது. இத்தடுப்பூசியை 2-80C வெப்ப நிலையில் பாதுகாக்க வேண்டும்.

    18 வயதிற்குட்பற்றவர்களுக்கு 0.5 மில்லியும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 1 மில்லியும் போட வேண்டும். இத்தடுப்பூசி பிறந்தவுடன், 1 மற்றும் 6 மாதங்களில் போட வேண்டும்.

    இத்தடுப்பூசி 90% பாதுகாப்பை அளிக்கிறது. எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நான்கு முறை இத்தடுப்பூசி போடப்பட வேண்டும்.

    இத்தடுப்பூசியை

    1)   பிறந்தவுடன், 6 மற்றும் 14 வாரங்களிலும்

    2)   6, 10, 14 வாரங்களிலும்

    3)   பிறந்தவுடன், 6 வாரம், 6 மாதங்களிலும்

    4)   பிறந்தவுடன், 6, 10, 14 வாரங்களிலும் போடலாம்.

    ஹெப்படைடிஸ் பி இம்முனோக்ளோபுலின்

    இது ஹெப்படைடிஸ் பி கிருமிக்கு எதிரான பிறபொருளெதிரிகளை உள்ளடக்கிய ஊசியாகும். இது இந்நோயினால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து அவருடைய இரத்தத்தினாலோ அல்லது அவர்களிடம் உறவுகொண்டவர்களுக்கு அல்லது இந்நோயினால் பாதிக்கப்பட்ட தாய்க்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்நோய் வராமல் தடுக்க போடப்படுவதாகும்.

    குழந்தைகளுக்கு 0.5 மில்லியும் பெரியவர்களுக்கு 0.06 மில்லி/கிலோ உடல் எடை அளவிலும் போட வேண்டும். இது ஹெப்படைடிஸ் பி தடுப்பூசியுடன் இணைந்து போட வேண்டும்.

    இவ்வூசியை 2-6oC வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும். இவ்வூசி 3-6 மாதங்களுக்கு பாதுகாப்பு தரும்.

    இந்நோயினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தடுப்பூசியும், இம்முனோக்ளோபுலின் ஊசியும் பிறந்த 12 மணி நேரத்திற்குள் போடப்பட வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23

    ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 23ஆம் தேதியை ‘உலகப் புத்தக தினமாகவும்’, இந்த நூற்றாண்டின் முதல் ஆண்டாகிய 2001-ஐ ‘உலகப் புத்தக ஆண்டாகவும்’ அறிவித்தது.  இந்திய அரசும் மக்களிடையே வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கவும், நூலகப் பயன் அனைவருக்கும் கிடைத்திடவும் 2001-ஆம் ஆண்டைப் புத்தக ஆண்டாக அறிவித்தது.  உலக நாடுகள் அனைத்தும் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றன,  ஏப்ரல் 23ம் தேதியின் முக்கியத்துவம் என்னவென்றால் அது வில்லியம் ஷேக்ஸ்பியருடைய பிறந்த மற்றும் மறைந்த தினமாகும்.

    மற்ற உயிரினங்களின் வாழ்க்கையில் தலைமுறைகள் மாறினாலும் வாழ்க்கை முறைகள் மாறாமல், தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் மீண்டும் தொடங்குகிறது.  ஆனால் மனிதனின் வாழ்க்கை மட்டும்தான் ஒரு தலைமுறை விட்ட இடத்திலிருந்து அடுத்த தலைமுறை வாழ்க்கையைத் தொடங்குகிறது.  மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வரலாறாக நூல்களில் பதிவு செய்து செல்வதன் காரணமாகத்தான் இது சாத்தியமாகிறது.

    வாசிப்பு

    மனிதனுக்கு மூளை இயல்பாகவே வளரும். ஆனால் அறிவு வளர வேண்டுமெனில் வாசிப்பும் அவசியம்.  வாசிப்பது ஒர் அற்புத அனுபவம். அது புதியதொரு உலகைத் திறந்து காட்டும்.  பல புதிய, அரிய தகவல்களை அள்ளித் தரும்.  நாடுகளின் எல்லைகளையும், வரலாற்றையும் மாற்றி அமைக்கும் மகா பலம் பொருந்தியது புத்தகங்கள். பல புத்தகங்கள் உலகையே உலுக்கி எடுத்துள்ளன.

    வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி, நினைவுத் திறனை அதிகரிக்கிறது.  படிப்பவர்களின் கற்பனையையும் அறிவையும்  புத்தகம்  வளர்க்கிறது,  காட்சி ஊடகங்களைப் போல புத்தகத்தில் உள்ளவை ஒரு முறையுடன் மறைந்துவிடுவதில்லை. அது காலம் காலமாகப் புதிய புதிய  அர்த்தங்களைத் தந்து கொண்டே இருக்கும்.

    பாட நூல்களைப் படிப்பது பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் குறித்த பல அறிஞர்களின் கருத்துகளை வழங்குகிறது.  ஒருவனது வாழ்வு நல்வாழ்வாக அமைய அடித்தளம் அமைப்பது அவனது நற்குணங்களே. அந்த நற்குணங்களைத் தேடித்தருவதில் பெரும்பங்கு வகிப்பது நூல்களே.[hide]

    படிப்பில் ஆழ்ந்த படிப்பு, அகன்ற படிப்பு என இருவகை உண்டு.  பொதுத் தேர்வுக்குப் படிப்பதை ஆழ்ந்த படிப்பு என்றும் போட்டித் தேர்வுக்கு படிப்பதை அகன்ற படிப்பு என்றும் கொள்ளலாம். அதே போல சீரிய படிப்பும் உண்டு, பொழுது போக்குப் படிப்பும் உண்டு.

    பள்ளியில் படிக்கும் நூல்களால் மட்டும் மாணவர் பரந்த அறிவைப் பெற்றுவிட முடியாது.  நூல் நிலையத்திலுள்ள இலக்கியம், வரலாறு, அறிவியல் முதலான பலதுறை நூல்களை எடுத்துப் படிப்பதன் வாயிலாக மாணவர் தம் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். நாவல், சிறுகதை இவற்றை மட்டும் படிக்காமல் சான்றோர் வரலாறு, தன்வரலாறு, அறிவியல், சமூகவியல் முதலான பல்வேறு நூல்களைப் படிக்க வேண்டும்.

    புத்தகத்தைத் திறக்கும்போது நல்ல அம்சங்கள் அதனுடைய ஒவ்வொரு பக்கத்திலும் ஊற்றெடுக்கின்றன.  நல்ல ஆலோசனை, அருமையான போதனை, வாழ்க்கையின் உண்மைகள் ஆகிய அனைத்தும் நமக்குக் கிடைக்கின்றன.  புத்தகங்களைப் படிக்கப் படிக்க உங்களையே அறியாமல் அந்த நூல்களிலிருந்து பெற்ற நல்ல செய்திகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள்.  அது உங்கள் மீதுள்ள எண்ணத்தையும், மதிப்பையும்  உயர்த்தும்.

    மருத்துவ ரீதியாகவும் நூல்களைப் படித்தல் மனதை மென்மையாக்கும்.  இரத்த அழுத்தம் உள்ளவரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னால் சிறிது நேரத்தில் ரத்த அழுத்தம் குறைந்திருக்கும் என்கிறது மருத்துவ அறிக்கை.  எனினும் புத்தகங்களை ஒரு நல்ல ஆலோசகராக வைத்துக் கொள்ள வேண்டுமே அன்றி எஜமானாக கொள்ளக் கூடாது.

    நூலகம்

    நூலகம் என்பது அறிவுச் செல்வத்தின் சேமிப்புக் கிடங்கு. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து வைக்கும் சிந்தனைப் பாலம்.  எதிர்காலத்தைக் கணித்துச் சொல்ல உதவும் அறிவார்ந்த ஜோதிடர், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்த அறிஞனும் நூல்களின் வாயிலாக நம் நெஞ்சருகே வந்து உரையாடி உள்ளத்தை உழுது பண்படுத்துவார்.

    பகுத்தறிவுக்கு விருந்தளிக்கும் இடம் நூலகங்கள்.  நூல்களைக் கற்றுத் தெளிவுறும்போது மனிதன் மூடப்பழக்க வழக்கங்களை விட்டொழித்து சுயமரியாதையாக வாழ முன் வருகிறான். நூலகங்களைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.  நூலகப் புத்தகங்களில் குறிப்புகள் எழுதுவதோ தாள்களை மடிப்பதோ, கிழிப்பதோ, எச்சில் தொட்டு புரட்டுவதோ கூடாது.  ஒரு மலரைக் கையாள்வது போல் மென்மையாகக் கையாள வேண்டும்.

    கிரேக்க நாட்டு சிந்தனையாளன் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விஷம் தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டிருந்தார்,  லிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை அவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தார்.

    ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக 2 ஆயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது.  ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்கு 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளிவிவரம் கூறுகிறது.

    வாசிப்பதை சுமையாகக் கருதாமல் சுகமானதாக எண்ண வேண்டும்.  புத்தகம் புதுக்கவிதை போன்றது.  புதுக்கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதுபோல புத்தகத்தை உட்கார்ந்து கொண்டே படிக்கலாம்.  கொஞ்சம் சாய்ந்து படுத்தபடி படிக்கலாம். மின்சாரம் இல்லையென்றாலும் படிக்கலாம். வாய்விட்டும் வாசிக்கலாம், மனதுக்குள்ளும் வாசிக்கலாம்.  கதாபாத்திரங்களைத் மனதுக்கு ஏற்றபடி உருவகிக்கலாம். வேண்டாத போது கீழே வைத்து விடலாம், அது கோபித்துக் கொள்ளாது.  மொத்தத்தில் படிக்கும் இன்பத்தை வார்த்தைகளில் சொல்லி மாளாது.

    புத்தகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ‘சீகன் பால்கு’ என்ற ஜெர்மானியர். டென்மார்க் மன்னர் பிரடெரிக்-4 என்பவரால் தரங்கம்பாடிக்கு 1706ல் அனுப்பப்பட்ட இறைத்தொண்டர்.  தம் கைப்பட எழுதிய தமிழ் எழுத்துக்களை ஜெர்மனிக்கு அனுப்பி, முதன்முதலில் காகிதத் தாளில் அச்சு இயந்திரம் கொண்டு அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் நூலான ‘பைபிளின் புதிய ஏற்பாட்டை’ வெளியிட்டவர்.

    புத்தகத்திற்கு ஏற்புடைய செந்தமிழ்ச் சொல் ‘நூல்’ என்பதாகும்.  திருவள்ளுவர் ‘நவில் தோறும் நூல் நயம் போலும்’(783), ‘நிரம்பிய நூலின்றிக் கொட்டிக் கொளல்’ (401), ‘நுண்ணிய நூல் பல கற்பினும்’ (373), ‘நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ (322) என்று படித்தறியும் நூல்கள் அடங்கிய இடத்தை, அதாவது நூல் அகத்தை, அவற்றின் பயனை, மாட்சிமையை அழகுற எடுத்துரைக்கின்றார்.

    நிறைவாக

    மனிதனின் மானத்தை மறைக்க ஆடை வழங்குவது நூல்.  அவனைச் சமுதாயத்தில் மானத்தைக் காத்து வாழ்ந்திட நெறிப்படுத்துவது நீதி நூல்கள்.  தன் நிலையில் தாழாமையும், தாழ்ந்த பின் வாழாமையும் மானம் எனப்படும்,  எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையன்று,  இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே வாழ்க்கை.  அத்தகைய ஒழுக்க நெறிகளை வழங்குவது நூல்கள்.

    இந்த உலகைப் புரிந்து கொள்ள மனிதனுக்கு உள்ள எளிமையான சாதனம் புத்தகம்.  விலையை வைத்து தரத்தை மதிப்பிட முடியாத ஒரே பொருள் புத்தகம்.  புத்தகத்தின் மதிப்பு அதன் விலையிலோ, பக்கங்களின் எண்ணிக்கையிலோ, அட்டையின் ரகத்திலோ இல்லை.  மாறாக படிப்போராது மனதில் அது ஏற்படுத்தும் தாக்கத்தில் உள்ளது.  அத்தகைய தாக்கத்தைக் கொண்டே புத்தகம் வாசிக்கப்படுகின்றது, பரவலாக்கப்படுகின்றது, பாதுகாக்கப்படுகின்றது.

    ஒரு நூலகம் திறக்கப்படும்போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகிறது என்றார் மகாத்மா.  ‘நூல் பல கல்’ என்றார்  ஔவை மூதாட்டி.  ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்றார் வள்ளுவர்.  குறள் வழி நின்று கற்க வேண்டிய நூல்களை கசடறக் கற்று கற்ற நூல்களின் பொருளறிந்து அதன்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

    ‘காலம் என்னும் ஆழ்கடலில் நீந்துகிறவனுக்கு அறிவு என்னும் துறைமுகத்தை அடையக் கலங்கரை விளக்காக அமைந்துள்ளவை சிறந்த நூல்களே’ என்றார் கவி தாகூர்.  நூல்களுடன் ஒருவன் வளராவிட்டால் அது அவனுக்கு பேரிழப்பாகும் என்றார் ஆப்ரகாம் லிங்கன்,

    புத்தகம்… ஒரு பொய்கை.  மனம் அதில் நீராடித் தூய்மை அடைகிறது.  அது ஒரு தேன்கூடு,  ஆயிரமாயிரம் பூக்களின் தேன் அதில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது,  அது ஓர் உயிர்; அதில் முன்னோர்களின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,  அது ஒரு கண்ணாடி அதைப் பார்த்து  அகத்தை அழகுபடுத்திக் கொள்ளலாம்,

    புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாசலைத் திறக்கிறான்,  புத்தகத்தின் பக்கங்கள் வெறும் காகிதங்கள் அல்ல,  நாம் அறியாத உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் அதிசயச் சிறகுகள்![/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் -52

    கருத்துக்களை களம் இறக்குவோம்

    சிலர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை ‘உளறல் பேர்வழி’ என்று இந்த உலகம் முத்திரைக் குத்திவிடும். ‘ஸ்பீக்கர்’ என்றும் அவர்களுக்கு பட்டப்பெயர் வைத்தும் சிலர் மகிழ்வார்கள். ‘வாயாடி’ என்று சொல்லி நெஞ்சம் நிறைய வஞ்சம் வைத்து சிலர் வசை பாடுவார்கள்.

    “பேசினால் பெருங்குற்றம். ஏன் மற்றவர்களிடம் பேசித் தொலைக்கவேண்டும்” என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஆழமாக மனதில் பதித்தவர்களும், மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். அவர்களை ‘கல்லூரிமங்கன்’ என்றும் ‘ஊமை’ என்றும் ‘அசையாத பெருங்கல்’ என்றும் அடுக்கடுக்காய் பட்டப்பெயர்கள்; வைத்து இந்த உலகம் மகிழ்கிறது.

    “நீங்கள் பேசியது ரொம்ப பிரமாதம்” என்று முகத்தில் பன்னீர் தெளித்துவிட்டு, சற்றுதூரம் நகர்ந்தபின் அவரது பின்புறமாக சாக்கடை நீரை தெளிப்பவர்களும் உண்டு.

    இந்த உலகத்தில் எதையும் எளிதில் பேசிவிடலாம். பேசி முடித்தபின்பு, “தெரியாமல் சொல்லிவிட்டேன்” என்றுசொல்லியும் தப்பித்தும் விடலாம். ஆனால், ஒரு கருத்தைப் பிறரிடம் எப்படி பகிர்ந்துகொள்வது? என்பதில்தான் ஒருவரின் வெற்றி அடங்கியிருக்கிறது.

    இப்போதெல்லாம் பேசுவதைவிட பலர் எழுதத் தொடங்கிவிட்டார்கள். பேஸ்புக் எழுத்தாளர்களும், வாட்ஸ்அப் எழுத்தாளர்களும், டுவிட்டரில் கருத்தை எழுத்தாக்கி பகிர்ந்து கொள்பவர்களும் அதிகமாகி விட்டார்கள். ‘எண்ணத்தில் தோன்றியவற்றையெல்லாம் உடனே வெளிப்படுத்திவிட வேண்டும்’ என்று துடிக்கும் சிலர், அடுத்தவர்கள் கருத்தையும் ஆராய்ந்து பாராமல் ‘பேஸ்புக்கில் சேர் செய்துவிடுகிறார்கள்.

    மின்னல் வேகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மிக எளிதாக மாறிவிட்டது. ஆனால், யாருக்கு எது தேவையோ? அதை மட்டுமே பகிர்ந்துகொள்வதுதான் ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றத்தின் அடையாளமாகத் திகழும்.[hide]

    வாயில் வந்தவற்றைப் பேசுவதும், எதையாவது கிறுக்கிக்கொண்டு ‘எழுத்து’ என்று கூச்சல்போடுவதும் எதிர்பார்த்த விளைவைத் தராது. மாறாக, பிறருக்கு பயன்படும் நல்ல கருத்துக்களை பிறருக்கு பயன்படும் விதத்தில் தெரிவிக்கும் கலையைக் கற்றவர்கள்தான் சிறப்புப் பெறுகிறார்கள்.

    புகழ்பெற்ற பேச்சாளர்களெல்லாம் தங்கள் கருத்துக்களைத் திட்டமிட்டு, தெளிவாக, பிறர் புரிந்துகொள்ளும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் எளிமையுடன் வெளிப்படுத்தியதால்தான் புகழ் பெற்றிருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் வெற்றியின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள்.

    அவர் ஒரு மிகப்பிரபலமான துறவி.

    முற்றும் துறந்தவர் என்பதால், அவரை “மிகச்சிறந்த குரு” என்றே அனைவரும் கருதினார்கள். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவராக அவர் விளங்கினார். புகழ்பெற்ற சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். எந்தவொரு கூட்டத்தில் அவர் பேசினாலும், அவரது பேச்சை ஆயிரக்கணக்கான மக்கள் அலையலையாய்த் திரண்டு வந்து அமைதியோடு கேட்பார்கள்.

    ஒருநாள் புகழ்பெற்ற அந்தக் குருவை ஒரு ஊரில் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்றும் கூறியிருந்தார்கள். அந்தக்காலத்தில் குதிரை வண்டிதான் போக்குவரத்திற்கு அதிகமாகப் பயன்பட்டது. எனவே, கூட்டம் நடந்த இடத்திற்கு குருவை அழைத்துச்செல்ல குதிரை வண்டியை அனுப்பியிருந்தார்கள்.

    அன்று – கூட்டம் நடந்த ஊரில் மிக அதிகமான மழை பெய்துகொண்டிருந்தது. காலையில் தொடங்கிய மழை அடைமழையாய் மாறி, மாலைவரை நீடித்தது. இதனால், கூட்டத்தை ரத்து செய்துவிட்டு எல்லோரும் சென்றுவிட்டார்கள்.

    குரு மிகவும் வருத்தப்பட்டார்.

    “இந்தக் கூட்டத்தில் வித்தியாசமாகப் பேச வேண்டும் என்பதற்கு ஏராளமான புத்தகங்களைப் படித்தேன். அதிக குறிப்புகளைத் தயார்செய்து வைத்திருந்தேன். ஆனால், இந்தக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்களே” என்று குதிரை வண்டியைக் கொண்டுவந்த குதிரைக்காரரிடம் வருத்தப்பட்டார்.

    “இப்போது நான் என்ன செய்யலாம்?” என்று குதிரைக்காரரிடம் கேட்டார் குரு.

    குதிரைக்காரன் அமைதியாகப் பதில் தந்தான்.

    “ஐயா நான் படிக்காதவன். குதிரையை மட்டும்தான் எனக்கு வளர்க்கத் தெரியும். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது. என்கிட்ட 45 குதிரைகள் இருக்கிறது. நான் குதிரைகள் உண்பதற்கு தீவனம் வைக்க போகும்போது, எல்லா குதிரைகளும் வெளியே போயிருந்தாலும், நான் கவலைப்படமாட்டேன். ஒரேயொரு குதிரை இருந்தால்கூட அந்தக்குதிரைக்குத் தேவையான உணவான ‘குதிரைத் தீவனத்தை’ வைத்துக்கொண்டுதான் வருவேன்” – என்று அமைதியாகச் சொன்னான்.

    குருவுக்கு அவன் சொல்ல வந்த செய்தி புரிந்தது.

    “சரியாகச் சொன்னாய். உனக்கு மட்டுமாவது நான் சொல்லவந்த கருத்தை கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் என்பதை எனக்கு மறைமுகமாக சுட்டிக்காட்டிவிட்டாய்” – என்றுசொல்லி அவனைப் பாராட்டினார். பிறகு தனது பேச்சைத் தொடர்ந்தார்.

    அவரது பேச்சில் ‘சொர்க்கம், நரகம், புண்ணியம், பாவம், வாழ்வியல் தத்துவம், இலக்கியம், மனிதநேயம், அன்பு, பண்பு, பாசம்’ – என வெவ்வேறு தகவல்கள் உள்ளடங்கியிருந்தது. ஏராளமான கருத்துக்களை சுமார் இரண்டு மணிநேரம் குதிரைக்காரனுக்குச் சொன்னார். “பேச்சு பிரமாதமாக அமைந்தது” என்று குரு நினைத்துக்கொண்டு, “என் பேச்சு உனக்குப் பிடித்திருக்கிறதா?” என்று மகிழ்வோடு கேட்டார்.

    குதிரைக்காரன் அப்பாவியாய் பதில் சொன்னான்.

    “குருவே நீங்கள் பெரியவர். நான் சாதாரண குதிரைக்காரன். நீங்கள் சொல்லவந்த தத்துவங்கள் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உங்கள் விளக்கத்திற்குப்பின்னும் எனக்குப் புரியவில்லை. ஆனால், எனக்கு ஒன்றேயொன்று மட்டும் நன்றாகத் தெரியும்” என்றான்.

    ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார் குரு.

    “குருவே நான் குதிரைத் தீவனம் வைக்கப்போகும்போது குதிரைக்கொட்டைகையில் ஒரு குதிரை இருந்தால், நான் அதற்கு மட்டும்தான் குதிரை தீவனம் வைப்பேன். 45 குதிரைகளுக்கான மொத்தத் தீவனத்தையும் அந்த ஒரே குதிரையின்முன் கொட்டிக்கொண்டு வரமாட்டேன்” – என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டான்.

    குதிரைக்காரனின் பேச்சில் உள்ள உள்அர்த்தத்தை புரிந்துகொண்ட குரு – “சரி நாம் புறப்படலாம்” என்று சொல்லிவிட்டு பேச்சை நிறுத்திக்கொண்டார்.

    இந்த சம்பவம் சாதாரண சம்பவமாகத் தோன்றினாலும், இது குருவுக்கு மட்டும் சொல்லப்பட்ட பாடம் அல்ல. நமக்கும்தான்.

    யாருக்கு என்ன தேவையோ, அந்தத் தேவைக்கு ஏற்றபடி அவர்களிடம் பேசுவதும், பழகுவதும், உதவி செய்வதும் மிக முக்கியமான செயலாகும். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அந்த எல்லைக்கு ஏற்றபடி பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது உயர்ந்த செயலாகும்.

    மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்களையும், தேவையற்ற விமர்சனங்களையும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது, அளவற்ற அவமானத்தை அள்ளிச் சுமக்கின்ற அவல நிலைகூட உருவாகிவிடும்.

    நாம் சொல்லுகின்ற கருத்தை புரிந்துகொள்பவர்களிடம் எளிதான முறையில் நமது எண்ணத்தை விளக்கிவிடலாம். ஆனால், நமது எண்ணத்தின் வண்ணத்தை சரியான அலைவரிசையில் கேட்க இயலாதவர்களிடம் திரும்பத்திரும்ப விளக்கங்கள் கொடுத்தாலும், அந்த விளக்கங்கள் அவர்களுக்கு பயன்தரும் வகையில் அமையாது. மாறாக, எரிச்சலையும், கோபத்தையும் விரைவாக அவர்களுக்குக் கொண்டுவரும் கருவியாகவே அது மாறிவிடும்.

    பிறருக்குத் தேவையில்லாத செய்திகளையும், தகவல்களையும் அவர்கள் ரசிப்பார்கள் என்று சற்று சிரமம் எடுத்து விளக்குவது அது நம்மை முட்டாளாக்கும் செயலாகவும் மாறிவிடுகிறது.

    தேவையான நேரத்தில், தேவையான தகவல்களை, தேவையானவர்களுக்கு, தேவையான இடத்தில் பகிர்ந்துகொள்வதே நல்ல செயலாக மாறும். அதுவே, நமது வெற்றியின் ரகசியத்தை மற்றவர்களுக்கு கூறும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    ஆயுளைக் குறைக்கும் உணவுகள்

    மகான் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர் அவர்கள் நம் உணவினை மூன்று தன்மைகளாகப் பிரித்துச் சொல்கிறார். முதலாவது சாத்வீக உணவுகளாகும். இவைகள் நம் நற்குணத்திற்கு துணை நிற்பதோடு நம் ஆயுளையும் கூட்டும் நல்ல உணவுகளாகும். அது பற்றித்தான் முந்தைய அத்தியாத்தில் பார்த்தோம். மற்ற இரண்டு வகைகளான இரஜோ மற்றும் தாமச குண உணவுகள் நம் ஆயுளைக் குறைக்கும். இரஜோ வகை என்பது நம் குணத்தை வன்மையாக்கும் காரசார மற்றும் அசைவ உணவுகளாகும். அடுத்து, தாமச குண உணவுகள் நம்மை விரைவாக அழிக்கவல்ல கருவாடு போன்ற கெட்டுப்போன மற்றும் சுண்ட வைத்த புளித்த பழைய உணவுகளாகும். அவ்வித உணவுகளைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

    பழைய உணவுகளாகும். அவ்வித உணவுகளைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

      1. துரித உணவுகள் (Fast Foods): இவ்வகை உணவுகள் அதீதத் தீயில் அதிவிரைவான முறையில் தயாரிக்கப் படுவதால் அவற்றில் உள்ள உயிர்ச் சத்துக்கள் யாவும் அழிந்துவிடுகின்றன. துரித உணவுகளைசூடு ஆறியபின்னர் சாப்பிட்டுப் பாருங்கள். வாயில் வைக்க சகிக்காது. நாம் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறோம் என்று அப்போதுதான் தெரியும். அதிவிரைவாக சமைத்த உணவுகளை சாப்பிட்டால் அதிவிரைவாகப் போய்ச் சேர வேண்டியதுதான்.
      2. நொறுக்குத் தீனிகள்: இவ்வித உணவுகளிலும் குறிப்பிடும் படியான சக்தி மற்றும் சத்துக்கள் எதுவும் கிடையாது. அதோடு இவைகள் மொறு மொறுப்பாக இருப்பதால், நாக்கில் வைத்தவுடன் உமிழ்நீர் அதிகம் உறிஞ்சப்பட்டு நாக்கின் சுவைத் தூண்டல் அதிகரிக்கப்படுவதால் நாம் இவற்றை அதிகம் விரும்புகிறோம். அதே சமையம் இவ்வித உணவுகள் நம் வயிற்றின் ஈரப்பதத்தை பதம் பார்ப்பதால் மண்ணீரல் செரிமானம் கெட்டு கல்லீரலுக்குச் சக்தி கிடைக்காமல் போகிறது.
      3. குறை உணவுகள் : வெள்ளை ரவை, மைதா, நூடுல்ஸ், எண்ணெய்யில் வதக்கிய உணவுகள் ஆகியன உயிர்ச் சத்துக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட உணவுகளாகும். இவைகள் யாவும் தரமற்ற மாவுச்சத்துக்களாகச் செரித்து சக்தியளிக்க முடியாமல் கழிவாகத் தேங்கும்.
      4. ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் வகைகள்: ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்களில் ஆரோக்கியத்திற்கு என்று எந்த ஒரு சத்தும் கிடையாது. கெட்ட குளுக்கோஸ் மற்றும் கெட்ட கொழுப்பை மட்டுமே கொண்டுள்ளன. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியானது மண்ணீரல் செரிமானத்தை அதிக அளவு குறைக்கிறது. சாக்லேட்டுகள் கல்லீரல் செரிமானத்தைக் கெடுக்கும்.
      5. இரசாயனம் கலந்த உணவுகள்: பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு பதப்படுத்தும் இரசாயனங்களை உண்ணும் உணவில் சேர்ப்பது என்பது நம் மண்ணீரல் மற்றும் கல்லீரல் செரிமானங்களை கெடுப்பதாகும். ஹோட்டல்களில் நாம் சாப்பிடும் அளவைக் குறைப்பதற்காக சாதத்தில் சமையல் சோடாவை சேர்ப்பார்கள். அதேபோல், எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்படும் உணவுகள் மொறுமொறு என்று இருக்கவும் சமையல் சோடா சேர்ப்பார்கள். இன்னும் சிலர் நம் கண்ணைக் கவர்வதற்கு விதவிதமான இரசாயனச் சாயங்களை உணவிலும், குளிர்பானத்திலும் சேர்ப்பர். இவையாவும் நம் செரிமானத் தன்மையைப் பதம் பார்க்கும்.
      6. கெட்ட கொழுப்பு உணவுகள்: டால்டா அல்லது வனஸ்பதியில் செய்த உணவுகள், கடலை எண்ணெய், வறுத்த நிலக்கடலை, வறுத்த முந்திரி, அல்வா, உருளைக் கிழங்கு சிப்ஸ், மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் ஆகிய யாவையும் நமக்குச் சக்தியளிக்க முடியாத கெட்டக் கொழுப்பு குப்பை உணவுகளே. இவைகளால் நாம் குண்டாவதோடு விரைவாக முதுமையும் அடைவோம்.
      7. அசைவ உணவுகள்: அசைவ உணவுகள் செரிக்க 12 மணிநேரமாகும். அசைவ உணவுகளின் கழிவுகள் வெளியேற அதிக சக்தி தேவைப்படுவதால் அவை வெளியேற மூன்று முதல் ஏழு நாட்கள் ஆகும். அப்படித் தேங்கும் கழிவுகள் நம் உயிர்ச் சக்தியை விரையமாக்கும். இவ்வித உணவிற்காக உயிர்க் கொலை செய்வதால் உயிரினத்தின் பயப்பதிவானது அதன் கறியில் விஷமாக தேங்கியிருக்கும். இது தேவையா?

    [hide]

    எதிர்மறை உணவுகள் நம் ஆயுளைக் குறைத்து

    விரைவாக முதுமையாக்கும்.

    நேர்மறை உணவுகளுக்குப் பழகிப் படிப்படியாக

    ஆயுளை அதிகரிக்கலாம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது

    தற்போதைய அறிவியல் கணக்குப்படியும் புள்ளி விபரப்படியுளம்,  பூமியின் சீதோஷ்ண அமைப்பில்  வெப்பம்  அதிகமாகிக்கொண்டுள்ளது என்றும்,  1950 ஆண்டிலிருந்து இந்த  வெப்ப உயர்வு அதிகமாகிக் கொண்டே  வருகிறது என்றும்,  இந்த வெப்ப உயர்வு எதிர்பாராத அளவு  உள்ளது  என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    2013ம் ஆண்டு   IPCC (Inter Governmental panel on climate change ) என்ற அமைப்பு தன்னுடைய ஐந்தாவது கணக்கீட்டு அறிக்கையில் இந்த வெப்ப நிலை  உயர்வுக்கு மனிதத் தாக்கம்தான்  முதன்மையான மற்றும் முக்கியமான காரணம் என்று தெரிவிக்கிறது,   வீடுகளில் சமையலறைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களான  கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடும் தான் இதற்குக் காரணம் என்று  சொல்கிறது.  அந்த அறிக்கையில் 21ம் நூற்றாண்டில் பூமியைச் சுற்றியுள்ள வெப்பநிலை குறைந்த அளவாக  0.3 யிலிருந்து  1.7  டிகிரி  செல்சியஸ்ன ( 0.5 to  3.1 ° F)  வரையும், அதிக அளவாக 2.6  யிலிருந்து  4. 8 டிகிரி  செல்சியஸ்ன   (4. 7 to  8.6 ° F)  வரையிலும்  உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   அனைத்து நாடுகளின்  அறிவியல் அறிஞர்களும்   இந்தக் குறியீடு  பற்றி  எதிர்ப்போ,  மாற்றுக்கருத்தோ  சொல்லவில்லை.

    புவி வெப்பமடைவதால்  ஏற்படும் விளைவுகள்

    1. புவி வெப்பமடைவதால்  அதன் பாதிப்புகள்  கண்டத்திற்கு கண்டம் மாறுபடும்.
    2. பூமியைச் சுற்றி காற்று மண்டலத்தின் வெப்ப நிலை எதிர்பாராத அளவு  உயரும்.
    3. கடல்களில் நீர் மட்டங்கள் உயர்ந்து நிலப் பகுதிகளில் புகும்.
    4. பனி உறையும் நிலையிலும் ,  பனிப்பொழிவில்  மாற்றங்கள் ஏற்படும்
    5. மழை பொழிவின் அளவு வெகுவாக குறையும்.
    6. இதனால் வரலாறு காணாத வறட்சியும் அதனால்  பாலைவனங்களின்  விஷ்தரிப்புளம்  அதிகமாகும்.
    7. கடலில் ஏற்படும் பாதிப்புக்களைவிட  நிலப்பகுதியில் மாற்றங்களும் பாதிப்புகளும் அதிகமாகும்.
    8. சீதோஷ்ண  நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பம் உச்ச நிலையை அடையும்.
    9. பருவ காலங்கள் மாறும்.
    10. வெப்ப அலையின் வீச்சு அதிகமாக இருக்கும். இதனால் மனித உயிரிழப்புகள் அதிகமாகும்.
    11. சில இடங்களில் அதிகமான மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்படும்.
    12. சில இடங்களில்  கடுமையான வறட்சியும், பஞ்சமும் ஏற்படும்.  விளைச்சல் மிகவும் குறையும்.
    13. ஆட்னடிக் பகுதியில்  மிக அதிகமாகப் பாதிப்புகள் இருக்கும்.
    14. மிகப்பெரிய பனிப்பாறைகள் உருகி கடலில் மிதக்கும்.
    15. கடல் நீரில் அமில  குணம்  அதிகமாவதால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்  ஏற்படுத்தும்.
    16. கடல் மட்டம் உயர்வதால் கடலோர நகரங்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் நகரங்களை  விட்டு வெளியேறக்கூடிய சூழல் ஏற்படும்.
    17. வெப்பம் அதிகமாக அதிகமாக மனித வாழ்விற்கு அச்சுறுத்தலும், ஆபத்தும், உயிரிழப்புக்களும் அதிகமாகும்.

    புவி வெப்பமடைய சில அடிப்படைக் காரணங்கள் இவ்வாறு புவி வெப்பமடைவதற்கு இயற்கை காரணமாக  அமையவில்லை,  மனிதனின்  வாழ்வியல்முறைதான்  மூல காரணமாக அமைகிறது.

    வீட்டின் சமையலறையிலிருந்தும்,மற்ற அறைகளிலிருந்தும், உபயோகத்திலுள்ள மின் சாதனங்களிலிருந்தும் வெளியேறும் வாயுக்களும், Fridge,  Washing Machine, TV Cellphone, Dryer Water Heater, கேஸ் அடுப்பு, மின் அடுப்பு இவைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களும், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் ஏற்படும் வாயுக்களும், ஆகாய விமானம், பேருந்து,  தொடர் வண்டி போன்ற போக்குவரத்து  வாகனங்களால் ஏற்படும் வாயு பெருக்கமும்,  Plastic போன்ற கழிவுகளை எரிப்பதால்  வரும் புகை மூட்டமும்/  நமது கட்டிடங்களுடைய அமைப்பும்,அதன் பெருக்கமும், இதன் வெப்ப  எதிரொளிப்பும் , பெரிய கட்டிடங்கில் உள்ள  AC  வெளியேறும் வாயுக்களும் காரணங்களாக அமைகின்றன.[hide]

    UNFCCC   (United Nations Framework Convention on Climate Change )  என்ற அமைப்பில் பல நாடுகள் உறுப்பினானகளாக இருக்கின்றன. இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள் புவி வெப்பமடைவதால் ஏற்படும் ஆபத்துகளை தடுத்தல் ஆகும், இந்த அமைப்பில் உள்ள நாடுகள் இந்த புவி வெப்பமடைதலுக்குக் காரணமான வாயுக்கள் வௌல்யேற்றத்தைத்ள தடுத்து  நிறுத்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்வதாக  உறுதி   பூண்டுள்ளன,  அதே போன்று தொழிற்சாலை பெருக்கம் இல்லாத காலத்தில் இருந்ததைப் போல புவி வெப்ப உயானவை 2. 0 ° C க்கு  ( 3.6 F) கீழாக இருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள  முயற்சி செய்து வருகின்றன.

    நம் புவி வெப்பமடைதல் பற்றியும், அதன் பாதிப்புகள்  பற்றியும் மக்களே அதிகமாக உணரத் தொடங்கி உள்ளார்கள். அறிவியலாளானகளின் அறிக்கையும், புவி ஆராய்ச்சியாளானகளின்  புள்ளி விபரங்களும் ,  இது உலகின்  எதிர்காலம் பற்றி கவலைப்பட வேண்டிய ஆபத்தான பிரச்சனை என்று எச்சரிக்கின்றன.

    பொருளாதார வளர்ச்சியிலும், தொழில் வளர்ச்சியிலும்  போட்டி போட்டுக்கொண்டிருக்கிற அமெரிக்காவிலும் சீனாவிலும் இருந்து தான்  கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது, அந்த இரு நாட்டு அரசுகளும் இதைப்பற்றி    அக்கறை எடுத்துக் கொள்வது குறைவாக  உள்ளது.

    இந்த புவி வெப்பமடைதலை தடுக்க பத்து வழிகள்.

    1. பொதுமக்களுக்குஇந்த விழிப்புணர்வை உண்டாக்கி புவி வெப்பமடைதலை தடுக்க  முயற்சிகள்  தீவிரமாக  செயல்படுத்த உறுதி கொள்ளுதல்.

    பத்திரிக்கைகள் மூலமாகவும், தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும், ஒரு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும்.சீதோஷணமாறுபாட்டை குறைக்க அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும், வீடுகளிலிருந்து வெளியேறும் வாயுக்களைக்  குறைத்து  ஆரோக்கியமான சமுதாயம் அமைய அறிவுறுத்த வேண்டும். சீதோஷண மாறுபாட்டை  குறைக்க நடவடிக்கை எடுக்கும் மற்றும்  சட்டமியற்றும் அரசியல்வாதிகளை ஊக்குவிக்க வேண்டும்.

    1. மின் உபயோகத்தைகுறைந்த அளவு பயன்படுத்துதல்.

    வீடுகளில் விளக்குகள் எரிப்பதில் விளக்குகள் எண்ணிக்கையை குறைக்க  வேண்டும். சாதாரண பல்புகள் உபயோகத்திலிருந்து LED பல்புகளுக்கு மாற வேண்டும்,  உபயோகப்படுத்தாத போது Computer, TV போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களின் மின் தொடர்பை துண்டிக்க வேண்டும்,  Washing machine, Dryer  இவற்றின் உபயோகத்ளதை வெகுவாகக் குறைக்க வேண்டும்,  , EnergyStar  உள்ள மின்னணு சாதனங்களை மட்டுமே உபயோகிக்க  வேண்டும், மின்னடுப்பு /  AC   இவைகளில்  மின்சாரம் உபயோகிப்பதையும் குறைக்க வேண்டும்.

    1. மின் சக்திக்கு மாற்றைத் தேர்ந்தெடுங்கள்.

    உங்கள் பயன்பாட்டிற்கு மாற்று  மின்சக்திகளான காற்றலை மூலம் மின்சக்தி மற்றும்  சூரிய மின்சக்தி  இவற்றை பயன்படுத்த ஊக்குவிக்க  வேண்டும்.

    1. நல்ல இயற்கை உணவுகளை உண்ண வேண்டும்.

    உங்களைச்  சுற்றியுள்ள  உங்கள் பகுதியில் விளைந்த  தாவர சம்பந்தமான ஆர்கானிக் உணவுகளை  எடுத்துக் கொள்ள வேண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத்  தவிர்க்க வேண்டும். குறைவாக சாப்பிட வேண்டும், உங்களுக்கு தேவையான உணவுகளுக்கானப்  பயிர்களை நீங்களே பயிரிட வேண்டும் , மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் 18%  வீட்டிலிருந்து வரும்  வாயுக்கள் மாமிச உணவு   தயாரிப்புகளிலும், பால் பதப்படுத்தும் தொழிலாலும் உருவாகிறது.

    1. கழிவுகளை  எரிக்காமல் இருத்தல் வேண்டும் :

    கழிவுப் பொருட்களை எரிப்பதால், அதிலிருந்து மீத்தேன் வாயு உருவாகிறது.  கழிவுகளை எரித்தலுக்குப்  பதிலாக அவைகள் மக்கிப் போக செய்யலாம், Paper, Plastic, உலோகங்கள், கண்ணாடிகள் இவற்றை மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும், மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களை மட்டுமே உபயோக்க பழகிக் கொள்ள வேண்டும்,

    1. மாசடையச் செய்வோருக்கு அதிக வரி வேண்டும்.

    நீர், நிலம், காற்று இவற்றை மாசடையச் செய்யும் தொழிற்சாலைகள் அல்லது  தொழில் செய்வோர்கள் அல்லது தனிநபருக்கு கார்பன் வரி  என்ற புதிய வரியை விதிக்க வேண்டும். இப்படி மாசுபடுத்துகிறவர்களுக்கு வரி அதிகப்படுத்துவதினால் அவர்கள் அந்த கார்பன் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வார்கள், எந்தளவு கார்பன் டை ஆக்ஸைடு  வெளியேறச் செய்கிறார்களோ அந்த அளவு வரி அதிகமாக்க வேண்டும்.

    1. விமானப்பயணத்தைக் குறையுங்கள்.

    ஆகாய விமானங்கள் அதிகமான கார்பன் டை ஆக்ஸைடை  வெளியேற்றுகின்றன.  விமானப்பயன்பாட்டைத் தவிர்த்து பஸ் அல்லது   ரயில்  மூலமாகப் பயணத்தைத் தொடர வேண்டும் தேவையில்லாதப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.  தனிப்பட்ட பயணத்தைத்  தவிர்த்து கூட்டாக ஒரே வண்டியில்  பயணிக்கத் திட்டமிடல் வேண்டும்.

    1. மரங்களை நடுங்கள் வேண்டும் .

    பசுமையான மரங்கள்  சுற்றுப்புற சூழலிலுள்ள  கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை  வெளியேற்றம் செய்கிறது,  எவ்வளவுக்கெவ்வளவு மரங்களும் கொடிகளும் பசுமையான தாவரங்களும் இருக்கிறதோ  அவ்வளவுக்கவ்வளவு   சுற்றுப்புறச்சூழல் பசுமையாகிறது.  காற்று சுத்தமாகிறது. காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு குறைகிறது.  ஆக்சிஜனின் சக்தி அதிகமாகிறது,  மண்டலம் குளிர்ச்சி  அடைகிறது.  எனவே  அதிக அளவில் மரம் நட வேண்டும்,

    1. தண்ணீர் விரயமாவதை குறைத்தல் வேண்டும்.

    தேவைக்கு அளவு நீரேற்றம் செய்வதற்கும், சூடுபடுத்துவதற்கும் , சுத்திகரிப்பதற்கும்   மறு சுழற்சிக்கும்  அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் கார்பன்டை ஆக்சைடு  வெளியேற்றம் அதிகமாகிறது. குளிப்பதற்கு குறைவான நீரைப் பயன்படுத்துங்கள். பல் துலக்கும்போது  பைப்யை மூடி வையுங்கள் ,  உபயோகமில்லாத மின்னணு   மோட்டார் சாதனங்களை துண்டித்து வையுங்கள்.  கசியும் குழாய்களைச்  சரி செய்யுங்கள்.   கழிவு நீரைத்  தோட்டத்திற்குப் பயன்படுத்துங்கள். மழை நீரை சேமியுங்கள். முடிந்தவரை தண்ணீர் சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம், மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்வோம்

    ஒவ்வொரு வீட்டிலும் நீர் விரையத்தை  குறைக்கும்  போது 100 வீடுகளுக்கு  சராசரியாக எடுத்துக் கொண்டால் 100 மில்லியன் கிலோ வாட் மின் சக்தி  சேமிக்கப்படுகிறது.  இதனால்  80 ஆயிரம் டன் புவி வெப்ப மாசுபாடு குறைகிறது என்று அமெரிக்கா ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.   தண்ணீரை   சிக்கனமாகப்  பயன்படுவத்துவதைத் தவிர  நமக்கு வேறு வழியில்லை.

    1. கட்டிட அமைப்புக்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    மிகப் பெரிய கட்டிடங்களில்  ஏற்படும் வெப்ப எதிரொளிப்பை குறைத்தல், Centralized  AC  System  பயன்பாட்டைக் குறைத்து மின் உபயோகத்தை குறைத்தல்  நல்ல பயனைத் தரும்.

    ஒவ்வொருவரும் இதை உணர்ந்து  தன்னுள் மாற்றங்களை  ஏற்படுத்திக் கொண்டால் புவி வெப்பமடைவதைத்  தடுக்கும்   முயற்சியில் ஒரு குறியீட்டை  அடையலாம்.

    மாற்றங்களை தனிமனிதனிடமிருந்து தொடங்க வேண்டும்

    தனிமனித வாழ்க்கைமுறை மாற்றம்  குடும்பத்தில்  மாற்றம் ஏற்படுத்தும்,

    குடும்பத்தில் ஏற்படும் மாற்றம்  ஊரில் மாற்றத்தை ஏற்படுத்தும்

    அந்த ஊரில் ஏற்படுத்தும் மாற்றம் – சமுதாயத்தில் மாற்றத்தை உண்டாக்கும்

    சமுதாய அளவில் மாற்றம் உண்டாகும் போது

    அது நாட்டின் முழுமையிலும் மாற்றம் உண்டாகும்

    ஒரு நாட்டில்  உண்டாகும் மாற்றம்

    மற்ற நாடுகளில்   மாற்றங்களை உண்டாக்கும்

    ஆகவே உலக அளவில் மாற்றம் வேண்டும் என்றால்

    அது  ஒவ்வொருவர்  வீட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும்,

    அந்த மாற்றம் இன்றிலிருந்து   உங்களிடமிருந்து ஆரம்பம் ஆகட்டும்,

    புவி வெப்பமடைதலை  தடுக்க வழி பிறக்கட்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?

    கடந்த இதழ் தொடர்ச்சி

    ஆகாய விமானத்தையும், தொலைபேசியையும் இது போன்ற பல சாதனங்களையும் கற்பனை உண்மையாக சிந்தித்தறிந்து அன்றே சிறந்த எழுத்தாளர்கள் எழுதி வைத்தார்கள்.

    எதிர்காலத்தில் நடக்கும் அந்த உண்மைக் கற்பனையை தன் கற்பனையாக்கினார்கள். கிரகாம் பெல்லும், ரைட் சகோதரர்களும், இவர்கள் போன்று வரலாற்றில் பதிந்துள்ளவர்களும் அக்கற்பனையை நிஜமாக்கினார்கள்.

    மனிதன் எதை நினைத்தானோ அதை அடைய முடியும் என்பதற்கான சான்றுகளும், நீ எதை நினைத்தாலும் அதை அடைய முடியும் என்பதற்கான சான்றும் இதுவே. கற்பனைகள் நிஜமாகும் என்பதற்கான சான்றுகளும் இதுவே.

    ஜான்பெயர்ட், நியூட்டன், ஐய்ன்ஸ்டீன், அப்துல்கலாம், அரிஸ்டாட்டில், ரைட்சகோதரர்கள் போன்றவர்களும் இக்கற்பனையின் அடிப்படையிலேயே தான் தாங்கள் நினைத்த ஒன்றை உருவாக்கினார்கள்.

    கற்பனைத்திறன் நிஜமானது. நிஜமாக்கியவன் எஜமானனானான். உலகம் இப்படி படிப்படியாக உயர்ந்தது.

    எல்லாம் உருவானது ஆனால் அது மனித சிந்தனையிலே தான் ஆனது. முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயலாமல் முடிவது ஒன்றுமில்லை.

    இதனடிப்படையில் ஒவ்வொரு துறையையும் எடுத்து சிந்தித்துப் பாருங்கள். மனிதனது முன்னேற்றம் என்னவென்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

    மனிதனுக்கு கிடைக்காத பொருளென்று ஒன்று உலகிலில்லை. கம்ப்யூட்டரால் முடியாதது உலகில் உண்டு. கண்ணா உன்னால் முடியாதது எதுவும் இங்கில்லை. மனிதனால் முடியாதது உலகிலில்லை.

    நீ எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவன் – ஆற்றல் உள்ளவன். வென்றவர்களும் வென்று சென்றவர்களும் மனிதர்கள் தான். இளைஞர்கள் தான்.

    எதற்கும் அதிசயித்து வியந்து அடிமை ஆகிவிட வேண்டாம். எல்லாம் மனிதனாகிய நம்மால் படைக்கப்பட்டது தான். மனிதனால் ஆகாததென்பது உலகில் எதுவுமில்லை.

    இவ்வுலகில் மனிதன் நினைத்தது எதுவானாலும் அதை அப்படியே அடைய முடியும், முடியாதது எதுவுமே இங்கு இல்லை என்பதற்கு சான்றுகளாகப் பல லட்ச மனிதர்கள் மண்ணில் பிறந்து அப்படியே வாழ்ந்து அப்படியே சாதித்துக் காட்டியுள்ளார்கள்.[hide]

    நம்மில் பலரால் ஏன் எதையும் செய்ய முடியவில்லை என்று ஆராய்ந்தேன். முடியாதவர்கள் அனைவரும் எதையும் மனதிற்குள் பெரிதாக நினைக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

    அதாவது எதிலும் இலட்சியம் கொள்ளவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. அதனால் அவர்களது இலட்சியம் வெல்லவில்லை.

    பழுதைக் கண்டறி :

    தொலைக்காட்சி போன்ற ஒரு பொருள் பழுதடைந்து விட்டால் அதில் என்ன பழுது என்பதை முதலில் கண்டறிந்தால் தான் அப்பழுதை நீக்க முடியும்.

    அதே மாதிரிதான் உனக்குள் வெற்றிக்குத் தடையாக இருக்கும் பழுது என்னவென்பதை முதலில் கண்டறிந்தால் தான் அப்பழுதை நீக்க இயலும்.

    உன் பலவீனமாகிய இதைக்கண்டறிந்து சரிசெய்தால் தான் ஒழுங்கான முறையில் உன்னை இயக்கிக் கொள்ள முடியும். வெற்றிப் பாதையில் பயணம் செய்ய இயலும்.

    பழுதை அகற்றுவது வலுவைக் கொடுக்கும். உனது பலவீனம் எது என்பதை முதலில் கண்டறிந்து கொள்வது உனது பலத்தை வலுப்படுத்தும்.

    பழுதடைந்தால் மாற்றுப் பேருந்து விடுவதற்கு பேருந்தைப் போல் அல்ல உன் இதயம். உன் வண்டியை நன்றாகவும், வேகமாக ஓட்டிச் செல்ல எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

    மானிடா

    சாதி, மதம், மொழி, இனம், பணம், பதவி, நிறம், குலம், கூட்டம், கோயில், உயர்ந்தவன், தாழ்ந்தவன், கட்சி என்று நமக்குள் எத்தனை எத்தனை பிளவுகள்.

    நமது ஒற்றுமையைச் சீர்குலைத்து நம்மைப் பிரிக்கும் இந்த வரலாற்று விசயங்களையெல்லாம் தோற்றுவித்து உருவாக்கியது யார்? எது? நாம் தானே.

    ஏற்கனவே வரலாற்றில் இவை இருந்ததா? மனிதன் தோன்றியவுடன் மனிதனாகப் பார்த்துப் பிரிந்துகொண்டதும், பிரித்துக் கொண்டதும் தான் இந்த வரலாற்றுப் பிளவுகள் என்ற உண்மையை முதலில் நீ உணர்ந்து கொள்.

    எப்பொழுது அப்படி உணர்ந்து கொள்கின்றாயோ, அப்பொழுது தான் நமக்குள் இருக்கும் இந்த பிளவுகள் அகலும். மனிதனை மனிதனே பிரிக்கும் மாய வார்த்தைகள் இச்சமுதாயத்தை விட்டு ஒழியும்.

    எந்த கடவுளும், எந்த சக்தியும் மனிதனைப் பிரித்து வைக்கவில்லை. பிரியவும் சொல்லவில்லை. அனைத்திற்கும் காரணம் மனிதன் தான்.

    இந்திய இளைஞர்களே !

    துன்பம் வரும் போதும் துணிந்து நன்மை செய். சாதிக்கின்ற நேரத்தில் தான் நீ சாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றாய் என்பது இன்னும்  உனக்குத் தெரியவில்லையா?

    இளைஞர்களே !

    உங்களைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர். இந்த உலகைப் பற்றியும் சிந்தியுங்கள். பிறர் மகிழும்படியான செயல்களைச் செய்.

    தீயவர்களின் எண்ணத்தை தீவைத்தழி, ஞானிகளின் கொள்கையைப் பின்பற்றி கொடியவர்களின் கொள்கையைக் கொளுத்துங்கள்.

    கடின உழைப்பே கடவுள் என்று எண்ணிச் செயல்படு. செழிப்புடன் இல்லாவிட்டாலும் விழிப்புடன் இரு. இளைஞர்களது சேவை நாட்டிற்கு என்றும் தேவை.

    சிந்தனை இல்லாத வெற்றி என்பது உலகில் எதுவுமில்லை. உங்கள் இலட்சியத்தை எட்ட தினமும் உங்கள் இலட்சியத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தியுங்கள்.

    முடியாது என்பது என் அகராதியிலேயே கிடையாது என்ற கொள்கைச் சிந்தனை இருந்ததால் தான் நெப்போலியன் உலகில் நினைத்ததை முடிப்பவனாகத் திகழ்ந்தான். எதையும் முடியாது என்று எண்ணாதீர்கள்.

    ஆக்குவதற்குத்தான் சக்தி அழிப்பதற்கல்ல !

    தேள் பாம்பு போன்ற உயிரினங்களுக்கும், மற்ற ஒவ்வொரு உயிரினங்களுக்கும் இறைவன் படைப்பில் தற்காப்புக்கென்று ஒரு சக்தி உடலமைப்பில் இருக்கிறது.

    மனித உடலில் இயற்கையாக இருக்கும் இந்த தற்காப்பு சக்தியை தன்னம்பிக்கையென்று  சொன்னாலும் அது மிகையல்ல – பொய்யல்ல.

    பாம்பு போன்ற உயிரினங்கள் தன்னைத் தாக்கியவர்களைத்தான் தற்காப்புக்காக எதிர்த்துத் தாக்கும். தன்னிடம் பிறரைத் தாக்கி அழித்தொழிக்கும் சக்தியிருந்தாலும் அவை தாமாக முன் வந்து யாரையும் தாக்குவதில்லை.

    இதுவரை தாக்கியதுமில்லை. அப்படித் தாக்கினால் யாராவது ஒருவராவது உயிருடன் உலகில் இருக்க முடியுமா?

    தற்காப்பு மூலம் தன்னை அழிவிலிருந்து காப்பதற்கும், ஆக்குவதற்கும் தான் மனித உருவமாகிய நம்மிடம் ஒரு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சக்தியை நல்லதற்கும், தீயதற்கும் என்று இருவகையாகப் பயன்படுத்தலாம்.

    எனவே உலகில் உயர்ந்த மனித சக்தியை ஆக்குவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். பிறரை தாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது.

    இன்றோ பலர் தீயதற்குப் பயன்படுத்துகிறார்கள். கொடிய செயல்களுக்குப் பயன்படுத்தும் சக்தி நிலையானது அல்ல.

    நல்லவைகளுக்குப் பயன்படுத்தும் சக்தியே நிலையானது. அல்லவைகளுக்குப் பயன்படுத்தும் சக்தி நிலையற்றது.

    தொடரும்…[/hide]

    இந்த இதழை மேலும்

    கதையில் யாரும் கதாநாயகர்களே

    கதையில் கதாநாயகன் அடிபடலாம், மிதிபடலாம், எத்தனை அவமானங்களை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம்; ஆனாலும், அவன்  கதாநாயகன் என்ற இடத்திலிருந்து இறங்கிவிடமாட்டான். கதாநாயகன் என்பதைத் தாண்டி வேறு எந்த ஒரு கதாப்பாத்திரமாகவும் மனிதன் தன்னை உருவகிப்பதில்லை. இதுவரை இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் ‘தன்னை இன்னொருவரைப் போலானவன்’ என்று சொல்லிக்கொண்டதே இல்லை. அது “வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்தேன்” என்று சொல்பவனானாலும் (இல்லை) “இன்னல்களை மட்டுமே எதிர்கொண்டவன்” என்பவனானாலும் எதிலும் அவனே முன்னிலைப்படுத்தப்படுவான்.

    ‘தான்தான் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்ற எண்ணம் இங்கு எல்லோருக்கும் இருக்கிறது. ‘தான் இல்லையென்றால் தன்னைச் சுற்றி இருக்கும் அத்தனையும் ஸ்தம்பித்துவிடும்’ என்ற உணர்வு. பிரபஞ்சத்தின் அனைத்து நிகழ்வுகளும் இவனை ஒட்டியே புரிந்துகொள்ளப்படுகிறது.

    தன்னுடைய செயலுக்குக் காரணம் கற்பிக்காத மனிதர்கள் இல்லை; தன்னை மட்டுமே குற்றவாளிகளாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் மனிதர்களும் இல்லை. இங்கு குற்றம் நிறையவே நிகழ்ந்து இருக்கிறது; ஆனால், குற்றவாளிகள் என்று யாரும் இல்லை. இந்த உலகத்தின் எந்த ஒரு மனிதனும் தன்னுடைய செயலுக்கான காரணத்தைக் கொண்டிருக்காமல் இருப்பதில்லை.

    “நீங்கள் செய்வது சரியல்ல” என்று இன்னொருவர் சொன்னால் அதற்கு மறுப்பு கூறாமல் உங்களால் ஏற்க முடியுமா? இல்லாத போது, அப்படியே இன்னொருவர் இருக்க வேண்டுமென்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? செய்யும் செயல் சரியென்று நினைத்ததால் தான் ஒருவன் செய்கிறான்; அவனிடம் “சரியில்லை” என்று சொன்னால் எப்படி அவன் ஏற்றுக்கொள்வான்? தனக்குச் சரியென்று பட்டு செய்யும் மனிதனிடம் எதைச் சொல்லி அவன் செய்வதைத் தவறென்று உணர்த்துவாய்?

    நான் போகும் பாதையில் எதையெல்லாம் கண்டேனோ அதுதானே உலகம். “இல்லையில்லை அதுவல்ல உலகம் இதுதான் உலகம்; இதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதற்கேற்ப வாழ்ந்து வர வேண்டுமென்ற” தத்துவமெல்லாம் அவசியமா?[hide]

    என்னுடைய 24 மணி நேரம் எப்படி கடந்துபோனதோ அதுதான் நான் இந்த நாளுக்குக் கொடுக்கும் மதிப்பீடு. “இல்லையில்லை இப்படிப் போடு; இதில் கொஞ்சம் கூட்டி அதில் கொஞ்சம் குறைத்துக்கொள்” என்ன இதெல்லாம்?

    எல்லா மனிதர்களின் செயலுக்குப் பின்னாலும் ஏதோ நியாயமான காரணம் என்று ஒன்றை சுமந்துகொண்டிருக்கும்போது எப்படி ‘தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று நீங்கள் விவாதம் செய்வதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

    ஒரு மனிதனுக்குத் தன் வாழ்நாளில் தான் கண்ட பெற்றோர்கள் மட்டுமே பெற்றோருக்கான வரையறை. தான் கண்ட உறவுகள் மட்டுமே உறவுகளுக்கான வரையறை. தன் புலன்களால் அறியப்படுவது மட்டுமே ஒரு மனிதனைப் பொருத்தவரையில் உலகம். என்றைக்கும் ஒரு பார்வையற்றவனுக்கு யானை பிரமிப்பானதாக இருக்காது; காது கேட்காதவனுக்கு வீணையின் இசை இரம்மியமானதாக உணராது. வாழ்க்கை அவரவர் அனுபவத்தில் பயணமாவது. அவரவர்க்குத் தனித்தனியான உலகம் படைக்கப்பட்டிருக்கிறது. நிகழ்வுகளும் அதிலிருந்து எழுந்த புரிதலும் தான் அந்த உலகம். ஒருவர் தன் வாழ்வில் செய்யும் ஒவ்வொரு செயலும், எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவன் தன் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து நிகழ்த்துவது. அவரவர் அனுபவம் என்பது தான் நிகழ்வு அல்லது எதார்த்தம். உங்களின் அனுபவம், அறிவு என எல்லாமே இன்னொருவருக்குக் கற்பனையே.

    அவரவர்க்கு அவரவரே சரியானவர். அவரவர்க்கு அவரவர் முடிவே தெளிவானது. அவரவர்க்கு அவரவர் கருத்தே பொருத்தமானது. தான் நிரம்பவே சரியானவன் என்று ஆணித்தனமாக நம்பும் ஒருவனைத் தான் நீங்கள் குற்றவாளி என்று முத்திரைக் குத்தப் பார்க்கிறீர்கள். இங்கு எல்லோருக்கும் கதாநாயகன் என்ற பாத்திரம் மட்டும் தான். கன கச்சிதமாக யாராரோ யாரார்க்கோ சுமையாக. ஏற்றப்படாத சுமை இங்கு எல்லோர் முதுகிலும். எல்லா செயலும் ஒரு நோக்கத்தோடோ செய்யப்படுகிறது. இன்னொருவரின் பார்வைக்குத்தான் யாரும் விமர்சகராகிறார்கள். ஒரு நேர்சாலையைக் குறுக்கும் நெடுக்குமாக நான்கு முறை ஒருவன் கடந்தாலும் அதற்கு ஒரு காரணம் வைத்திருப்பான். ஆனால், அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்குத் தான் அவன் பைத்தியக்காரன். நீங்கள் ஒரு நாள் முழுதும் ஒருவர் செயலைக் கவனித்தீர்கள் என்றால் அவரைப் பைத்தியக்காரனென்று முத்திரைக் குத்தி விடுவீர்கள். அது யாராக இருந்தாலும்.

    சக மனிதனிடம் அபிப்ராயம் கேட்பவனும் அதில் தன் உணர்வுக்குச் சாதகமான விஷயங்களையே எடுத்தாள்கிறான். ஒவ்வொரு மனிதனுடைய முடிவும் தன்வயப்பட்டது. இன்னொரு மனிதன் யாராக இருந்தாலும் அவர்களுடைய கருத்துக்களுக்கு அங்கே இடம் கிடையாது. எந்த ஒரு தனிமனிதனுடைய அறிவும், அனுபவமும் அவரவரது வாழ்க்கைக்குறியது; இன்னொரு மனிதனுக்கான கையேடு கிடையாது.

    எந்த ஒரு மனிதனுடைய நட்பு வட்டமும் அவனை அங்கீகரிக்காதவர்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்காது. அங்கீகரிக்கும் இடத்தில் தான் மனிதர்கள் இருக்க ஆசைப்படுகிறார்கள். நம்மைச் சுற்றி உள்ளவர்களைக் கதாநாயகர்களாக அங்கீகரித்து விட்டாலே குடும்பத்தில் பிரட்சனை இல்லாமல் போய்விடுகிறது. உனக்கென்ன தெரியும் என்று இவனும்; உனக்கென்ன தெரியும் என்று இவளும் மாறி மாறி சொல்லி ஒருவரை ஒருவர் மதிப்பிழக்கச் செய்யும் முயற்சியில் தோற்றுப்போவது குடும்ப உறவுகள் தான்.

    அவரவர்களுக்கே உண்டான தனிப்பட்ட, தனித்தன்மை வாய்ந்த விருப்பங்களோடும், கனவுகளோடும், கற்பனைகளோடும், ஆசைகளோடும் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள்; தனித்தனி அடையாளங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒருவன் இன்னொருவனின் கண்ணைக்கொண்டு இந்த உலகத்தைப் பார்க்க முடியாது. அவரவர் அனுபவமும், அதிலிருந்து எழுந்த புரிதலின் வழியே இந்த உலகம் பார்க்கப்படுகிறது.

    வாழ்க்கைத் தனித்துவத்தில் தான் அழகு பெறுகிறது. ஒன்று இன்னொன்றை எந்த இடத்திலும் ஒத்திருக்கவில்லை. இந்த பிரபஞ்சம் அழகாய் தோன்ற இதுதான் காரணம். நமக்குப் பிடித்த நிறமோ, பொருளோ, நபரோ எதுவாக இருந்தாலும் பலதரப்பட்டவைகளுக்கு இடையே இருந்ததால் தான் தேர்வானது. எல்லாம் ஒன்றுபோல் இருந்துவிட்டால் ‘அழகு’ என்ற ஒன்று தனியாக இருந்திருக்காது. தனித்தனியான தேடலில் வாழ்க்கைத் தொடங்கியதால் என்னமோ ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக இருக்கிறார்கள்.

    இன்னொருவரின் பசி என்னவென்று இங்கு யாருக்கும் தெரியாது. பெற்ற தாய்க்கும் கூட தெரிவதில்லை. அதனால் தான் பலசமயம் குழந்தைக்கு ஊட்டுவதாய் எண்ணித் திணிக்கிறாள். உலகத்தில் பிறந்த எந்த ஒரு உயிரினமும் சாப்பிடக் கிடைக்காமல் துயர்படுமே தவிர; சாப்பிடுவதற்கு அழுவதில்லை. மனித குழந்தை மட்டுமே அழுகிறது. அவ்வளவு பைத்தியக்கார மற்றும் கொடுர மனம் சிலருக்கு. ICU-வில் உயிருக்குப் போராடும் ஒரு நோயாளியின் பக்கத்தில் 24 மணி நேரமும் தூங்காமல் விழித்திருக்கும் உறவாக பெற்ற தாய்தந்தையோ, பிறந்த பிள்ளைகளோ, கட்டிய மனைவியோ யாராக இருந்தாலும் நோயாளிக்கும், உடன் இருந்தவர்களுக்குமான அனுபவம் என்பது வேறுவேறு. “நான் பக்கத்திலே தான் இருந்தேன்; அவர்கள் பட்ட கஷ்டத்தைக் கூடவே இருந்து பார்த்தேன்; எனக்குத் தெரியும்” என்று முட்டாள்தனமாக சொல்லாதீர்கள். வேடிக்கையாக பங்குபெறுபவர்களைவிட பார்வையாளன் பலசமயம் புலம்பிக்கொண்டு செல்வதைப் பார்க்க நேர்வதுண்டு. எல்லா உயிரும் தன்னுடைய தேவைகளை மட்டுமே உணரும் படியாகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன.

    இன்று நீங்கள் ஒரு 45 வயது மதிக்கத்தக்க மனிதரைப் பார்க்கிறீர்கள் என்றால் அவர் தனது 45 வருட அனுபவத்தின், வாழ்க்கை நிகழ்வுகளால் உருவானவர். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர் வாழ்ந்த 45 வருட வாழ்வை பின்னால் சென்று அவரிடத்திலிருந்து வாழ்ந்து பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளின் மீதும், நிகழ்வுகள் மீதும் மனிதனுடைய அபிப்ராயம் என்பது வேறு வேறே. மனித மூளை எழுதி எழுதி பக்கங்களைப் புரட்டிக்கொண்டே போகும் காகிதம் இல்லை. மனம் என்பது நீரில் கலந்த நிறமோ (அ) சர்க்கரையோயல்ல.

    குழந்தை வளர வளர தனக்குத் தெரிந்ததைத் ‘தெரியும்’ என்று வெளிக்காட்டுவதால் தான் மற்றவர்களின் அளவுகடந்த பாசத்தைப் படிப்படியாக இழந்துபோகிறது. நடக்கப் பழகும் வயதிலே இன்னொருவர் கையைப் பிடிக்க அனுமதிக்கும் குழந்தை வளர்ந்தபின்னாலே இன்னொருவரின் கையைப் பற்றுவதிலே விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தை வயதில் குறைந்ததோ அந்தக் குழந்தையின் மீதே பாசம் அதிகமாக இருக்கும். அதன் காரணம் ‘அந்தக் குழந்தைக்கு உலகம் தெரியாது’ என்ற நினைப்பு தான். பெற்றோரின் கடமை தன் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு அனுபவத்தைக் கொடுப்பதே தவிர நேரடியாக அறிவைத் திணிப்பது அல்ல. கண்மூடித்தனமாக நம் அனுபவத்தை எல்லாம் இன்னொருவருக்குத் திணிக்க முயன்று உறவுகளைச் சிதைத்துக்கொள்கிறோம்.

    இயற்கை அதற்கே உரிய தனித்தன்மையோடு இந்த உலகத்தைப் படைத்து இருக்கிறது. நேசிக்க தயாராக இருப்பவர்க்கே வாழ்க்கை அழகாக இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அதற்கே உரிய தனித்துவத்தோடு எதிர்வருகிறது. முன்னேற்பாட்டோடு அதை எதிர்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வுகளல்ல.

    வாழ்வதற்கான தகுதி பிறந்த எல்லா உயிர்க்கும் இருக்கிறது. ஈரறிவு, ஆறறிவு எனப் பகுத்துக்கொண்டு நாம் நம்மை மேலானவன் என்று சொல்லிக்கொள்கிறோம். சிந்தியுங்கள் பரிணாமத்தில் இறுதி மனிதனல்ல; பேதமற்ற கடவுளுக்கும் மனிதன் எல்லையில்லை.

    வாழ்க்கை நீங்கள் என்னவாக இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்பதை ஒட்டி இருக்கிறது. ஏனெனில், வாழ்க்கை எண்ணத்திலானது; அனுபவத்திலானதல்ல. உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள் வாழ்க்கை மாறிவிடும். காரணமில்லாமல் செயல்கள் இல்லை எனும்போது இன்னொருவரோடு முட்டிக்கொண்டு நிற்பதைவிட ஒத்துப்போக முயற்சி செய்யலாம். இன்னொருவரைப் “மாற்றி விடுகிறேன் பார்” என்று சொல்லிக்கொண்டு சுற்றாதீர்கள். யாரையும் அவர் எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை, எல்லோருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    பாயும் ஆறு

    சாதல் புதிதன்றே:-

    இப்பொழுதெல்லாம், புத்தகங்கள் காணகிடைக்கும் பொழுது அவை மிகப்பெரும் சிந்தனைக்கான சந்தர்பத்திலேயே இயற்கையால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கருத வைக்கின்றது.  இல்லையென்றால் “அதுல் காவண்டே” அவர்களது “அழிபவராக இருத்தல்” (பியிங் மார்ட்டல் -Being Mortal) என்கின்ற பென்குயின் பிரசூரத்தால் வெளியிடப்பட்ட, ஆங்கில புத்தகம் நம் கையில் இந்த பின்னணியில் இவ்வளவு நெரிசலான பயணத்தில் கிடைத்திருக்காது, அப்படி கிடைத்திருந்தாலும், அதை சொந்த ஊரில், வயதான அப்பா அம்மாவின் அரவணைப்பில், அவர்களின் அற்புதமான சமையலில் மகிழ்ந்து சொக்கிப் போயிருக்கின்ற சந்தோஷ மிதப்பில்… மணிக் கணக்கில் படித்திருக்கவும் மாட்டோம்… அற்புதமான… வாழ்கின்ற ஒவ்வொருவரும்… வைத்தியம் தருகின்ற வைத்தியம் பெறுகின்ற ஒவ்வொருவரும்… படிக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை இவ்வளவு தற்செயலாகவா…  ஆனால், “சார், நீங்க, இதை, நிச்சயம், அவசியம் படிப்பீங்க!” என்று லஷ்மி பிரசாந்த் கொடுத்திருக்க மாட்டார்.

    மாட்டான்… என்று பாசமுடன் எழுதத்தோன்றி, பயோகெமிஸ்ட்ரி, உதவிப் பேராசிரியர், மற்றும் இவ்வளவு அற்புதமான புத்தகத்தைக் கொடுத்து… சரியான சமயத்தில்… கண்களை திறந்து… அல்ல அல்ல கண்களை சிமிட்டி… (இது பேச்சு வழக்கு – கோவை வட்டார வழக்கு கண்களை சிமிட்டரான் – என்றால் கண்களை மீண்டும் மீண்டும் இமைத்துக்கொண்டு, கொட்டிக்கொள்ளுதல்… கண்மூடித் திறப்பதை படபடவென செய்வதால்… சிந்தனை தெளிவு ஏற்படுமோ?  …நீங்கள் செய்து பார்ப்பதை நம் மனக்கண்ணில் காணமுடிகின்றது) தெளிவான பார்வையோடு வாழ்வை காணவைத்த வழிகாட்டி, மூலம், வந்துசேர்ந்த புத்தகம் இது.

    முன்பு கூறிய கணியன் பூங்குன்றனாரின் சங்க இலக்கிய பாடலில், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கின்ற மிகப் பிரபலமான வரிகளில் தொடங்கும் பாடலில் இப்படியான, ‘சாதல் – புதிதன்றே’ என்கின்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.  உலகில் பிறப்புப்போல பழமையானது இறப்பே.  தற்காலத்தில் அது குறித்த தெளிவான புரிதல் நம்மிடம் ஏற்பட்டுக் கொண்டு, உள்ளதன் ஒரு அடையாளம் – அதுல் காவண்டேயின் புத்தகம்.

    கெத்தான புத்தகம்:-

    வாழ்க்கையில் பல புத்தகங்களில் பல கிராஃபுகளை பார்த்திருக்கின்றோம்… அந்த வாழ்க்கையையே கிராஃபாக… பக்கங்கள் 25, 27 மற்றும் 28 ல் “சிதறிவிழும் செய்திகள்” (Things Fall apart – இதை சிதறிவிழும் பொருட்கள் என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும் ஆனால் நமக்கு… செய்திதானே என்பதால் நாம் இப்படி எழுதி உள்ளோம்)  என்கின்ற இரண்டாம் அத்தியாயத்தில் வரைந்து காட்டியுள்ளார் அதில் காவண்டே என்றும் அதி உன்னதமான அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் வரப்பிரசாதமாக வந்த எழுத்தாளர்.  இவ்வளவு சூப்பர்லேடிவ் (அளவுக்கு அதிகமான – Superlative) அடைமொழிகளை சேர்த்து எழுதுவதற்கு நியாயங்கள் நிறைய நிறைய இருக்கின்றன.  புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் படித்தபொழுது… (ஏனென்றால் நண்பரின் தந்தையின் மருத்துவ சூழலும் அப்படி) லஷ்மி பிரசாந்திற்கும்… சூழ்நிலைக்கும் நன்றி சொல்ல தோன்றியது.  சூழ்நிலை… நேரம்… என்கின்றபோது அதில் படிக்கின்ற நீங்களும் வந்துவிடுவீர்கள்… நமக்கும் நன்றி…[hide]

    உதிரும் பூக்கள்:-

    அப்படி என்னதான் இருக்கின்றது என்று கேட்டால்… முழுதாக மொழிபெயர்த்துவிட கூடுமளவு ஆசையிருக்கிறது அவகாசமில்லை.  எனவே சிலபல கருத்துக்களை சொல்லி விட்டுவிட மனமில்லை.  நாம் அனைவரும் நமது கட்டுரையின் ஆரம்ப அத்தியாயங்களில் மனதுக்குள் நினைத்துவிட்டு மருத்துவர்களின் முடிவுகளை குறித்து… மனக்கலக்கம் கொண்டிருந்தோமில்லையா? (இக்கட்டுரைகளை, எழுதும்போதே வந்து சேரும் விமர்சனங்களை, பின்னூட்டங்களை உட்சேகரம் செய்தே… தொடரப்படுகின்றது)  அத்தகைய மருத்துவ சிகிச்சை முறைகள், மருந்தை எடுத்துக்கொள்ளும் மனிதரின்… நோயாளியின்… என்கின்ற இரண்டாவது சொல்லுக்கு பதில்… ‘மனிதரின்’ – என்கின்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது – காரணமாகவே.  மலர்கின்ற மலர்கள் உதிர்வது எவ்வளவு இயல்பானதோ… அவ்வளவு சாதாரணமானது மரணித்தல்.  மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் அவர் விரும்பிய வண்ணம் இயற்கை எய்தினார்.  மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பொழுது.  இப்போது நம் கற்பனை பல்வேறு உதிர்ந்த பூக்களை குறித்து சென்றிருக்கக்கூடும்.  இயற்கையானதே!  கதைகளிலும் கட்டுரைகளிலும் முத்தாய்ப்புக்கும், கிளைமேக்ஸூக்கும், முடிவுரைக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற நாம்… வாழ்வு முடிவு… எப்படி அமைகின்றது என்பதற்கான தீர்மானமான முடிவுக்கு வரமுடிவதில்லை.  அதுவே இயற்கையின் பெரும் புதிர்.  வாழ்க்கையை நீடிப்பு செய்கின்றோமா?  சாவை தள்ளிப் போடுகின்றோமா?  என்கின்ற கேள்விக்கான, நிதர்சனமான உண்மையான பதில் பல… நேரங்களில் தெரியவரும்பொழுது கூட… இந்தக் கேள்வியை குறித்து சிந்திக்க நாம் எல்லோருமே தயங்குகின்றோம்.  அந்த தயக்கத்தில் இருக்கும்பொழுதே! முன்பு, ஆறு மட்டுமா அழகு? என்று கேட்ட கேள்விக்கான பதிலை பார்த்து விடுவோம்.  அது அடுத்த பத்தியில்…

    நீரும் அழகு:-

    இரண்டே சொற்களில்… நீரும் அழகு! என்று அந்த முகநூல் பதிவிற்கு பதில் எழுதினோம் நாம்.  ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும், ஆர்ப்பரித்துக் கொண்டு இருக்கும் நீரும், “ஆறுமட்டுமா அழகு?” என்று கேட்டவரும்…  சேர்ந்து குறிப்பிடப்படும் வண்ணம் அந்த பதில் அமைந்துபோனது அதுவே நம் கட்டுரைக்கான தலைப்பாகவும் அமைந்துபோனது.  வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்நாள் குறைவு.  அதற்காக அவற்றின் சிறகுகளில் நிறங்களின் பிரமாண்டத்திற்கும்…  அவற்றின்… படபடவென மகிழ்ந்து துள்ளி… வளைந்து ஆடிப் பறக்கும் பரபரப்பு வேகத் தாண்டவத்திற்கும் எந்தக்குறையும் வைக்கவில்லை இயற்கை.  அதுபோல வாழ்வின் நீளத்தைக்காட்டிலும் நிறமே முக்கியம்.

    சுருக்கமாக சொல்லப்படும் சொற்கள் ‘சுருக்’ என்று குத்தாமல்…  விவாதிக்கப்படும் அல்லது விவரிக்கப்படும் சங்கதிக்கு ‘சுருதி’ சேர்க்க வேண்டும்.  அறிவுச்செல்வன், மற்றும் அழகுச்செல்வன் இருவருமே அடிக்கடி தொலைபேசியில் அழைத்து காமெடியாக சற்றுநேரம் உரையாடிக் கொள்வார்கள்…  “எப்படி சார்… இப்படி… இதையெல்லாம் எழுதி வச்சுக்கணும்”, “அந்த, நோட்டு புத்தகத்தை… மூடி வைத்துவிட்டு நார்மலா பேசுற மாதிரி பேசுங்க… உங்க பேச்சே ஆழ்ந்து சிந்தித்து எழுதி வைத்துவிட்டு …பிறகு அவசியப் படும்பொழுது… அதைப் பிரித்து படிப்பது போல, உங்கள் பேச்சு இருக்கிறதே?” என்று அழகுச்செல்வன் ஆச்சரியப் படுவார்.  உதாரணத்திற்கு ஒரு ‘பஞ்ச்’ போடுவோம் இங்கே.  தொலைபேசியில் அழைத்தோம்.  அழகுச் செல்வன் எடுத்தார்.  “தம்பி… பேசலாமா… கூட்டத்தில் எதாவது இருக்கீங்களா?  தனியா இருக்கீங்களா?” என்று கேட்டோம்.  இது மிகவும் முக்கியமான கேள்வி… பலர், கேட்டால், பயன் அளிக்கக்கூடிய கேள்வி…  செல்லிடத் தொலைபேசிகள்…  தொல்லை ஊசிகளாக மாறுவதை தவிர்க்க உதவும்.  முன்பு கண்ட கேள்விக்கு அதற்கு பதிலாக… தனியாக இருக்கிறேன் என்பது வந்த உடனே!  இடைவெளியின்றி.

    ஆமாமா, நீ, கூட்டத்தில இருந்தாலும், தனியாதான் இருப்பர் என்று…  தம்பியின் தனித்துவத்தை உற்சாகப்படுத்தி, பாராட்டும் வண்ணம் சொற்கள் பயன்படுத்தப்பட்டதை இக்கட்டுரையில் பதிவு செய்து…  வாழ்வின் வண்ணங்களை, அந்த சொற்கள் கோபுரத்தின் உயரத்தை வளப்படுத்தவும் உயரச்செய்து வசப்படுத்தவும் கோருகிறோம்.

    முடிவுகளால் முடியாத முடிவுரைகள்:-

    இரமண மஹரிஷி… உடல் நிலை குறித்து பெரிதாக கவலை கொள்ள தேவையில்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறியதை இங்கே நினைவு கூர்கிறோம்.  சொற்கோ அவர்களுக்கு அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது…  அவர் ஆரோக்கியமாக மீண்டும் நடமாடத் துவங்கியுள்ளார்.  அவரது இயல்பான புன்னகையும், வழிகாட்டுதலும் தொடர்ந்து வான்முகிலின் இலக்கிய குடும்பத்திற்கு கிடைத்துவருகின்றது.  மருத்துவ சிகிச்சையில் நோயாளியின் சம்மதத்தை காட்டிலும் அவரது இரத்த சொந்தங்களது சம்மதமே பெறுவது சட்டப்பூர்வ தேவையாக உள்ளது.  ஏனென்றால் பல சூழ்நிலைகளில் சிகிச்சை தேவைகளை முடிவு செய்யும்பொழுது நோயாளி சுயநினைவு இல்லாமல் இருப்பதும் உண்டு என்று அறிவுச்செல்வன் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.  இப்படியாக நமது ஆறும் நீரும் கட்டுரையும் ஒரு தெளிவான முடிவிற்கு கொண்டுவந்துள்ளோம், ஆனாலும்… இந்த கட்டுரையை – ‘ஆனால்’ என்கின்ற வார்த்தையோடு, முடிக்கவே ஆசைப்படுகின்றோம் அதற்கு அனுமதி கோருகின்றோம்.  ஆச்சரியங்கள் நிறைந்த உலகில்… வாழ்வின் எல்லை எதுவென்பதை இறைவன் புதிராக வைத்துள்ளது பெரிய கவிதை!  எந்த வாழ்வும் உண்மையில் முற்றுப் பெறுவதே இல்லை!  காலமான சக மனிதர்களது தொலைபேசியிலிருந்து அழைப்பு வரும்பொழுது அவர்களது உறவினர்களோ?  நண்பர்களோ?  அந்த செய்தியை சொல்லும் பொழுது… நமக்கு மாற்றுக் கற்பனை உருவாகும்பொழுது திடீரென முடிவுரைகள் எழுதப்படுகின்றன.  ஆனாலும் அவர்களது எண்ணை – தொலைபேசியிலிருந்து ‘டெலிட்’ செய்ய மனது வருவதில்லை… சட்டென டெலிட் செய்ய வாழ்வு என்ன வெறும் எண்ணா?  என்ற எண்ணம் வருகின்றது… எதையும் தாங்கும் இணையற்ற இதயம் வேண்டும் என்கின்ற மனது வலிமை குறித்த பொன்மொழி… எவ்வளவு ஒப்பற்றது?

    சரி… கட்டுரைக்கு முடிவு வேண்டாமா?  என்று நீங்கள்

    கேட்பது புரிந்தது…

    அதனால் இதோ… முடித்துவிட்டோம்…

    ஆனால்…,[/hide]

    இந்த இதழை மேலும்