– 2018 – April | தன்னம்பிக்கை

Home » 2018 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாழ நினைத்தால் வாழலாம் -15

    மௌனம் 

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    “கோதை ஆண்டாள் – தமிழை ஆண்டாள்”  என்று புகழப்பட்ட ஆண்டாளைப்பற்றிய ஒரு கவிஞனின் கருத்து – ஒலித்ததும், எதிரொலித்ததும் இரைச்சலை.

    வாதத்திற்கு எழுந்தது எதிர்வாதம்.  அவை எதிரொலித்ததும் இரைச்சலையே!

    பெரிய தலைவனாகப் பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரின் சிலையை பற்றிய ஒருவரின் கருத்தும், கண்ணோட்டமும் – ஒலித்ததும், எதிரொலித்ததும் இரைச்சலையே !

    வினைக்கு எதிர்வினை விளைந்தது எதார்த்தம்.  அவை எதிரொலித்ததும் இரைச்சலையே

    சிலையை வைத்தாலும், எடுத்தாலும், புதிதாய் திறந்தாலும் – நம் செவிப்பறைகளை அதிகம் தாக்குவது சினம் கொண்ட சிலரின் சிவப்பான வார்த்தைகளையே!

    “மௌனத்தை”  மறந்ததால் வந்த விளைவு என்பதே உண்மை.

    இன்னொருபுறம், “களம் வேறு !  கண்ணோட்டம் வேறு !

    மகாபலிபுரத்து சிலைகள் ஒரு கலைஞனின் கற்பனைக்கு கிடைத்த விலைமதிக்க முடியாத வெகுமதி.

    பரத்தின் சிறப்பு மட்டுமல்ல நமது பாரதத்தின் சிறப்புகளையும் சிலையாக பார்க்கும்போது – நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் கண்முன்னே காட்டிய எத்தனையோ சிற்பிகளை பாராட்ட விழைகிறது மனம்.

    கோவில்களில் இருக்கும் சிலைகள் – நம்முள் புதைந்து கிடக்கும் பக்தியை வெளிக்கொணரும் வேலையை “மௌனமாக”  செய்கிறது. அதனால்தான் ஆலயங்களில் சிலைகள் முன்பு நாமும் சிலையாக “மௌனமாக” நின்று – மனதோடு பேசுகிறோம்.

    உண்மையில், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் கற்றுத்தெளிய வேண்டியது “சிலையை மட்டுமல்ல, இன்றைய நம் நிலையை கண்டு நாம் மனனம் செய்ய வேண்டிய பாடம் “மௌனம்”  தான் என்பது.

    “வார்த்தைகள் செவிகளோடு பேசும் – ஆனால் “மௌனம்” மனதோடு பேசும்”.

    வாழ்க்கை பயனத்தில் வெற்றி வாசலை விரைவில் அடைய “மௌனம்” ஒரு அடையாள சீட்டு என்று அறிக.

    சமூகம் “படிக்கத்தெரிந்தவர்களைவிட – நடிக்கத்தெரிந்தவர்களையே” நிரம்ப கொண்டிருக்கின்றது.

    “மௌனம்” பழகுங்கள்!

    உங்கள் திட்டங்களை ஆமோதித்து அறிவுரை சொல்ல – அதிகம் ஆட்கள் இல்லை.  “மௌனம்” பழகுங்கள்![hide]

    உங்கள் எண்ணங்களை நேர்படுத்த – நிறையப்பேர் இல்லை.“மௌனம்” பழகுங்கள்!

    உங்கள் இலட்சியங்களை மெருகேற்ற – நண்பர்கள் குறைவு.  “மௌனம்” பழகுங்கள்!

    உங்கள் பயணத்தில் பாதைகாட்ட – கைகாட்டிகள் குறைவு.  “மௌனம்” பழகுங்கள்!

    உங்கள் வெற்றியை மகிழ்ந்து கொண்டாட விருப்பமற்ற, வீணர்கள் கூட்டம் வீதிமுழுவதும்.  “மௌனம்” பழகுங்கள்!

    அவர்களிடம் நீங்கள் வெற்றிக்கான விலாசம் கேட்பது வீண்.  “மௌனம்” பழகுங்கள்!

    “மௌனம்” – ஒரு உயர்ந்த தவம் ! பழகுங்கள்!  பழகப்பழக மற்றவர்களின் மனநிலையை படம் போட்டதுபோல் அறிய முடியும்.

    “மௌனம்” – ஒரு வலிமையான ஆயுதம் !  பயன்படுத்துங்கள் ! எப்பேர்பட்ட எதிரியையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும்.  வெற்றிகொள்ளுங்கள்.

    “மௌனம்” – ஒரு மாயக்கண்ணாடி !  உங்கள் மேல் அக்கறை உள்ளவர்களை உங்களுக்கு அடியாளம் காட்டும்.

    ”மௌனம்” – ஒரு ஞானப்பொகிஷம் !  ஏற்றமான வாழ்வை எளிதில் தருவது.

    “மௌனம்” – ஆண்டவனால் அளிக்கப்பட அற்புதப் பேழை !  ஆனந்தத்தை அளவின்றி தருவது.

    “புரட்சி” தான் பல மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக இருந்திருக்கின்றது.  அதிலும், “மௌனப்புரட்சியே”  வையகத்தை வெல்வது – என்பதை வரலாறு வழிமொழியும்.

    மகாத்மா காந்தி வெள்ளையர்களை ஆயுதங்களால் “வெட்டி விழ வைக்கவில்லை” – மௌனம் கொண்டு “வெட்கி விழ வைத்தார்”

    சோதனைக்கு மேல் சோதனை வந்த போதும் “அரிச்சந்திரன்”  பொய் பேசாது மௌனம் காத்து நமக்கு உண்மையின் பெருமையை உணர்த்தியதை உலகம் அறியும்.

    வெற்றியாளர்கள் அதிகம் பேசுவதில்லை – “மௌனமாகவே” இருப்பார்கள்.  ஆனால் அவர்களின் சாதனைகள் சத்தமிடும்.

    உங்கள் மௌனம் – உங்கள் சாதனைகளை இந்த சபைக்குச் சொல்லட்டும்.

    கோவிலுக்கு வந்த பக்தன் ஒருவனுக்கு ஒன்றுமே செய்யாமல் இருக்கும் “சிலைக்கு” கிடைக்கும் மரியாதைகளையும், தீப ஆராதனைகளையும் கண்டு பொறாமை.  உடல் வருந்தி உழைக்கும் தனக்கு ஒரு பிடி சோறு கிடைப்பதே அரிதாக இருக்கும்போது, விதவிதமான பழங்களையும், உணவு வகைகளையும் கடவுளின் காலடியில் கொட்டும் மனிதர்களின் மீதும் மாறாத கோபம் கொண்டான்.  கடவுளாக இருப்பது மிகவும் எளிதான வேலை என்று முடிவெடுத்து உள்ளே சென்று கடவுளிடம் பேச்சு கொடுத்தான்.

    “கொஞ்ச நாள் நான் நீயாக இங்கே இருக்காட்டுமா ? என்று கேட்டான்.

    “நீண்ட நாட்களாக நின்றுகொண்டே இருப்பதால் எனக்கும் கால்கள் மிகவும் வலிக்கிறது.  நீ நல்ல ஒரு யோசனைதான் சொல்லி இருக்கிறாய்.  நாம் இப்போதே இடம் மாறுவோம்” – என்று கடவுளும் ஒப்புக்கொண்டார்.

    ஒரு முக்கியமான விஷயம்.  கடவுளாக இருப்பது நீ நினைப்பதுபோல் சுலபமான வேலை கிடையாது. மிகுந்த பொறுமை உனக்கு வேண்டும். பலரும் பல கோரிக்கைகளை வைப்பார்கள்.  அவசரப்பட்டு வரம் ஏதும் தந்துவிடாதே.  பின் உனக்கே பிரச்சினை வரலாம்.    சிலர் காசுக்குபதில் தனது கண்ணீரையும், கவலையையும் உன் காலடியில் காணிக்கை இடுவார்கள்.  கவலைப்படாதே.  அதே நேரம் கோபமும் படாதே.  சில நேரங்களில் நேர்மையான பக்தர் சிலரும் வருவதுண்டு.  அவர்கள் சிரமங்களை உன்னிடம் புலம்பும்போது உணர்ச்சி வசப்படாதே.

    சுருக்கமாக சொல்லப்போனால் நீ கண் இருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் இருக்கப்பழகினால் தான் காலம் கழிக்க முடியும்.  எனவே, எதற்கும் வாய் திறக்காமல் “மௌனமாக” இரு” – என்று கூறினார்.

    மனிதன் குழம்பினான்.  என்னடா இது.  மனிதர்களைவிட கடவுளுக்கு கஷ்டங்கள் அதிகம் இருக்கும்போல தோன்றுகின்றதே.  சரி!  பார்த்துவிடுவோம் , என்று சவாலுக்குத் தயாரானான்.  இருவரும் இடம் மாறினார்கள்.

    அடுத்தநாள் காலை.  ஏழை ஒருவன் வந்து “கடவுளே, என் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறேன்.  கையில் பணமில்லை.  நீதான் ஏதாவது செய்து பணம் கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று கண்ணீர்மல்க வேண்டினான்.  அந்த பெரிய கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிவர கிளம்பினான்.

    அவன்போன அடுத்த நிமிடம் அந்த ஊரின் பெரிய செல்வந்தர் ஒருவர் வந்தார்.  “கடவுளே, நேற்று எனக்கு நல்ல வியாபாரம்.  லட்ச ரூபாய்க்குமேல் லாபம்.  இந்த பணத்தையும் கருப்பு பணமாகவே பூட்டி வைக்க போகிறேன்.  அந்தப் புதையலை யாரும் தோண்டி எடுக்காமல் நீதான் பாதுகாக்க வேண்டும்” என்றார்.  பணப்பையை கடவுளின் காலடியில் வைத்து வணங்கி, எழுந்து, ஒரு பெரிய தேங்காயை உடைத்துவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவர கிளம்பினார்.

    அவனை தொடர்ந்து திருடன் ஒருவன் வந்தான்.  “நான் என் திருட்டு தொழிலை விட்டுவிட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.  எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க ஏற்பாடு செய் கடவுளே” – என்று வேண்டினான்.  ஒரு சூடத்தை ஏற்றிவிட்டு பிரகாரத்தை சுற்றாமல் கோவிலைவிட்டு வெளியேறினான்.

    பிரகாரத்தை சுற்றிய செல்வந்தரின் மடியிலிருந்து பணக்கட்டு தவறி கீழே விழுந்தது.  அதை அவர் கவனிக்கவில்லை.  சென்றுவிட்டார்.  அவருக்குப் பின்னால் வந்த ஏழையின் கண்ணில் அது பட, அதை அவன் எடுத்து “கடவுளே!  உன் கருணையே கருணை.  என் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்திடுவேன்.  மிக்க நன்றி! – என்று சொல்லி சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றான்.

    இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் “புதிய கடவுள்”

    சிறிதுநேரத்தில் பணக்கட்டு தொலைந்திருப்பதை அறிந்த செல்வந்தர் Police க்கு தகவல் சொல்ல, அவர்கள் சற்றுமுன் கோவிலுக்கு வந்திருந்த திருடனை பிடித்து விசாரித்தனர்.  அவன் எனக்கு எதுவும் தெரியாது என்று எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக்கொள்ளாமல் அடித்து துன்புறுத்திக் கேட்டார்கள்.

    செல்வந்தனின் கவலை, திருடனின் புலம்பல், காவலர்களின் தவறான நடவடிக்கை – காண சகிக்கவில்லை கடவுளுக்கு.  ஒப்பந்தத்தை மீறி “மௌனம்” கலைத்தார்.  அசரீரியாக உள்ளது உள்ளபடி உரைத்தார்.  திருடன் விடுவிக்கப்பட்டான் – ஏழை கைது செய்யப்பட்டான்.  பணக்கட்டுடன் செல்வந்தர் சந்தோஷமாக வீடு புறப்பட்டார்.  மனம் முழுதும் திருப்தியுடன் புதிய கடவுள் வாசலில் இருந்து இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அசல் கடவுளிடம் “எப்படி என் தீர்ப்பு ? என்று கேட்டான்.

    கடவுள் கடுங்கோபம் கொண்டு சொன்னார் “மூடனே!  மௌனத்தின் மகிமை தெரியாத மடையனே!  செல்வந்தரின் கறுப்புப்பணம் களவு போக வேண்டும், அது உண்மையான பக்தியிலும், ஏழ்மையிலும் இருக்கும் பக்தனுக்குப் பயன்பட வேண்டும்.  இந்த சம்பவத்துக்கு பிறகு மனம் திருந்திவிடும் செல்வந்தர் அந்தத் திருடனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை தர வேண்டும்” என்பதே விதி.  அதை நடத்தும் சந்தர்ப்பம்தான் இது என்பதாலேயே 3 பேரையும் இங்கே ஒரே நேரத்தில் வரவைத்தேன்.  என் வார்த்தையை மீறி “மௌனத்தை” கடைபிடிக்காமல் உளறி – 3 பேருக்கான நன்மையையும் நீ கெடுத்துவிட்டாய்.  என்று சொல்லி மீண்டும் இடம் மாறினார்கள்.

    உண்மைதான் நண்பர்களே.

    காரணம் இல்லாமல் காரியம் இல்லை. இந்த உலகில் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டளைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்குகின்றது.  வலுக்கட்டாயமாக மாற்றங்கள் செய்யும்போது – அதன் பலன் வேறுவிதமாக போகின்றது.

    அன்றாட வாழ்வில் கணவனின்/மனைவியின் தனிப்பட்ட குணநலன்கள் சில நேரங்களில் இருவருக்கும் முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கலாம்.  புரிந்துகொண்டு, விவாதத்தில் இறங்கிவிடாமல் “மௌனமாக” – தேவையற்ற வார்த்தைகளை அள்ளி வீசாமல் ஆலோசித்து பேசும்போது நன்மை விளைக்கும்.  குடும்ப அமைதி விளங்கும். மகிழ்ச்சி நிலைக்கும்.

    அலுவலகத்தில் மேலதிகாரியின் பதவிக்கான மிடுக்காக உங்களிடம் கோபமாக பேசலாம்.  உங்களது பதில் அவர் கோபத்தை தூண்டலாம்.  இறுதியில், வேலை இழக்கும் சூழல் வந்தால், நட்டம் உங்களுக்குத்தான்.  உங்கள் ஞாயத்தை கோபமாக, வாக்குவாதமாக வெளிப்படுத்தாமல் “மௌனம்” கொள்க.  புன்னகையுடன் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று அவருடனேயே விவாதிக்க – அவர் உங்களை புரிந்துகொண்டுவிட – சிக்கல் தீர்ந்தது.

    அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் எத்தனையோ நபர்களும், நிகழ்வுகளும் உங்கள் தன்மானத்தை, அறிவை, வயதை, அனுபவத்தை சீண்டிப் பார்ப்பதாக அமையலாம்.  உணர்ச்சிக்கொந்தளிப்பில் நீங்கள் சொல்லாகவும், செயலாகவும் ஆற்றும் எதிர்வினை பல நேரங்களில் பாதாளத்தில் தான் தள்ளிவிடும்.

    “மௌனம்” கொள்க.  எதார்த்தத்தை உணர முயற்சி செய்யுங்கள்.  விளைவுகளை, பக்க விளைவுகளை, பின் விளைவுகளை சீர்தூக்கி பார்க்க, என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.  விலகிவிடுவதே சிறந்தது என்று நீங்கள் முடிவெடுத்தால்கூட “மௌனமாக” அதைச் செய்யுங்கள்.  ஆத்திரமும் ஆவேசமும் வேண்டாம்.  ஏனென்றால், ஒருவேளை, பின்னாளில் நாம் செய்தது தவறு என்று யார் மனதில் தோன்றினாலும் – மற்றவரை தயக்கம் இல்லாமல் தொடர்புகொண்டு பேச எதுவாக இருப்பது “மௌனம்” தான்.  விரிசல் விழுந்த நட்பும், உறுதியோடு நல்ல முறையில் வளர, தொடர “மௌனம்” முதல் புள்ளியாய் இருக்கும்.

    “மௌனம்” என்பது பேசாமலே இருப்பது அல்ல.  “தேவையில்லா நேரத்தில், தேவையில்லா விதத்தில், தேவையில்லா விஷயங்களை பேசாமல் இருப்பதே”.

    ஆன்மீகமும் “மௌனத்தை” தான் முன்மொழிகிறது. அது மௌனத்தை “மனத்தின் மொழி” என்கிறது.  மௌனத்தை கடைபிடிக்கும்போது உங்கள் மனம் அமைதி நிலைக்கு திரும்புகின்றது.  அறிவு வேலை செய்ய துவங்குகின்றது.  மூளை செல்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றது.  சிந்திக்கும் திறன் கூடுகின்றது.  சீர்தூக்கி பார்க்கும் பொறுமையும், திறமையும் உங்களுக்குள் உற்பத்தியாகின்றது.  எது சரி என்று துல்லியமாக முடிவெடுக்க முடிகிறது.

    அர்த்தமில்லாமல், அளவில்லாமல் பேசும் மனிதர்களை சமூகம் பெரிதாக மதிப்பதில்லை.  அளந்து பேசுகிறவனை அறிஞன் என்று உடனே ஒப்புக்கொண்டு விடுகிறது.  எனவே நீங்கள் “மௌனத்தை” கேடயமாக கொண்டு – அளந்து பேசுங்கள்.  ஆராய்ந்து பேசுங்கள்.  இனி உங்கள் சபை -அறிஞர்கள் கூடம் சபையாக இருக்கட்டும்.  அறிவாளிகளின் மண்டபத்தில் நீங்கள் “அரியாசனத்தில்”  உங்கள் “மௌனம்” “சரியாசனத்தில்”

    இந்த நிமிடம் முதல் “மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது” என்று சொல்லும் குறைந்த அறிவு கொண்ட மானிடர்களில் இருந்து விலகிடும் நேரம் – என்று உணருங்கள்.

    மௌனத்தில் விளையாடும் மனசாட்சி தான் உங்களுக்குள் ஆயிரம் நினைவாகி, ஆனந்த கனவாகி – வாழ்வில் வெற்றி பெற வைக்கும்.

    காதலில் கூட “மௌனம்” தான் சிறந்தது என்கிறார் கவியரசர்.

    “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி –

    பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி”என்று மௌனத்தை கடவுளின் சந்நிதி என்று உயர்வாய் வைக்கிறார்.

    அன்பை வெளிப்படுத்துவதிலும் “மௌனத்தின்” மகத்துவம் பெரிதே.

    “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன? என்று வரிசையாக கேட்கப்பட்ட கேள்விகளில் முத்தாய்ப்பான பதில் “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அந்த பெண்மையின் நிலை “மௌனம்” என்று பகிர்வதே.  “மௌனமே பார்வையை ஒரு பாட்டு பாட வேண்டும்” என்று சொல்லி வார்த்தைகளே இல்லாத பாடல்களையும் “மௌனத்தால்” பாட முடியும், அதை மனதால் தான் அறியமுடியும் என்கிறார்.

    “மௌனம்” என்பது அந்த அளவுக்கு உயர்ந்த குணங்களில் ஒன்று.  மனித பிறப்பில் “காதல் தொடங்கி கடவுள் வரை” மௌனம் மௌனமாக சத்தமிடுகிறது என்பது மௌனத்திற்கும், மனித வாழ்வுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை.

    பெருமை கொள்வீர் !

    “மௌனம்” என் இருப்பு என்று பெருமை கொள்வீர் !

    “மௌனம்” என் சிறப்பு என்று பெருமை கொள்வீர் !

    “மௌனம்” என் மனத்தின் மகுடம் பெருமை கொள்வீர் !

    கொண்டால் – உங்கள் நாளும் சிறக்கும் !  வாழ்வும் செழிக்கும் !

    அனைத்துக்கும் மேலே ,

    “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

    “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”[/hide]

    இந்த இதழை மேலும்

    முயற்சியே முன்னேற்றம்

    இன்று முயற்சி என்பது எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும் தேவைப்படுவதை நாம் நன்றாக அறிவோம்.

    முயற்சிக்ககு முந்தைய நிலையான தகவல்கள் சேகரிப்பது இன்று வெகு சுலபம். ஆனால் சுமார் 50 வருடங்களுக்கு முன் இருந்த நிலை மோசம்.

    உதரணமாக என்னையே எடுத்துக் கொள்ளலாம். பள்ளி இறுதி வகுப்பு (11 ம் வகுப்பு) அரசுப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன்; டாக்டர் ஆக வேண்டுமென்று ஆசை.

    வெறும் ஆசை தான். மதிப்பெண்கள் அதிகம் பெற்றதால் உண்டான ஆசை என்றும் சொல்லலாம். அதனால் PUC யில் நேச்சுரல் சையின்ஸ் பிரிவில் சேர்ந்தேன். உயர் மதிப்பெண்களுடன் தேறினேன்.

    அதன் பிறகு என்முன்னேற்றத்தில் ஆர்வமுடைய பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் டாக்டருக்குப் படிக்க ஆசை ; என்ன  செய்ய வேண்டு மென்றேன்?

    என் குடும்ப நிலை, பொருளாதாரம் முதலியவைகளை நன்கு அறிந்த அவர்கள் “சிரமம் ; வேண்டாம்” என்றனர்.

    டாக்டர் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு B.Sc (ஜுவாலஜி) சேர்ந்து, அப்படிப்பை முடித்தால் ஆசிரியப் பணிக்குத் தான் அதிக வாய்ப்பு என்பதால் அதிலிருந்து விலகி BA (பொருளாதாரம்) மாற்றினேன்.

    படித்தது விஞ்ஞானம் ; படிக்க இருப்பது பொருளாதாரம். 2 நாள் வகுப்பில் ஒன்றுமே புரியவில்லை. நான் விரும்பிய B.Sc (கெமிஸ்ட்ரி) கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் கல்லூரிப்படிப்பை விட்டு விலகினேன்.

    பெற்றோருக்கு ஆதங்கம். பின் அரசுப்பணி. வாழ்வின் லட்சியம் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும்.

    என்ன செய்யலாம் என யோசித்து தபால் மூலம் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தேன்.

    ஒரு வெறி வந்தது. யார் யாரோ நிறைய பட்டங்களைத் தம் பெயருக்குப் பின்னால் எழுதும் போது, என்னாலும் ஏன் முடியாது என்ற எண்ணம் வந்தது.

    எண்ணம் செயலுக்கு வந்தது. ஆங்கில எழுத்துக்கள் A முதல் Z முடிய 26 தான். ஆனால் என் பெயருக்குப் பின்னால் 26 க்கும் அதிகமான எழுத்துக்களில் பட்டங்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.[hide]

    குடும்ப வாழ்க்கை, அலுவலகப் பணி, வெளியூர் மாறுதல், பிரச்னைகள் எனப் பலமுனைத் தாக்குதலுக்கும் அசராமல் பணியிலிருந்து ஓய்வு பெறும் 58 வது வயது வரை படித்துக் கொண்டே இருந்தேன்.

    விளைவு: இன்று என் பெயருக்குப் பின்னால் 32 எழுத்துக்களுக்கான முதுகலை, இளங்கலைப் பட்டங்கள் முதுகலை, இளங்கலை பட்டயங்கள் உள்ளன.

    நான் பயிற்சிகளில் கூறுவது – “கல்விக்கு கரையில்லை ; கற்பதற்கு வயதில்லை”

    முயற்சி கடுகளவே ஆனாலும் கூட அது ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து கடுகளவுக்கான முன்னேற்றம் என மகிழ வேண்டும்.

    எப்படிப் பட்ட குடும்பத்திலிருந்தும் பிறந்து இருக்கலாம். ஆனால் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டால், அதற்கான சூழல்களை உருவாக்குவது சுலபம் தான்.

    வாழ்வில் முன்னேற நினைப்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    1.பெற்றோர்களைச் சிறந்த வழிகாட்டிகளாகப் பெற்றவர்கள்.

    இந்த இனத்தில் பெற்றோர்களுடைய வழிகாட்டுதல்கள் முழுமையாகக் கிடைக்கும். ஏற்கனவே உள்ள நிறுவனம், பணி, தொழில்  இவற்றைத் தொடரும் வாய்ப்பு. இந்த வகையினர் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.

    2.பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சித்து முன்னேறுபவர்கள் :

    இந்த இனத்தில் தங்களால் முடியாத எண்ண எச்சங்களைத் தம் குழந்தைகள் மூலமாக நிறைவேற்றிக் காண விரும்புவர்களாகப் பெற்றோர்கள் இருப்பார்கள். இந்த வகையினர் கடுமையாக முயற்சி செய்து, முன்னேற வேண்டும்.

    3.பெற்றோர்களின் வழிகாட்டுதலோ, ஆசைகளோ இல்லாமல், இவர்களாகவே கிடைத்ததை வைத்து இவ்வளவு தான் வாழ்க்கை என வாழ்ந்து வருபவர்கள்.

    நாட்டின் மக்கள் தொகையில் இந்த மூன்றாம் வகையினர் தான் மிக அதிக அளவில் உள்ளனர். இவர்களுக்குப் பெரிய குறிக்கோளோ, ஆசைகளோ இருக்காது. ஏதோ கிடைத்தது; அதற்குத் தான் நான் லாயக்கு என்று தத்ததுவம் பேசி திருப்திப்படுவார்கள்.

    இதில் எந்த இனமானாலும் முயற்சி என்பது எங்குமே அவசியமானது. முயற்சி என்பது மூச்சுக்காற்று போன்றது. மூக்கில் சுவாசமில்லாமல் உயிர் நிலைக்காது.

    இது போல், முயற்சியில்லாமல் முன்னேறவே முடியாது. இதைத்தான் கடந்த மாதம் படித்தோம். இரயிலிலிருந்து தள்ளி விடப்பட்டு கிழே விழுந்த அதிர்ச்சியில் மயக்க மடைந்திருந்தால் மரணம் தான். ஆனால், சிறிது உணர்விருந்தது. இரயில் வரும் சப்தம் காதில் விழ, வெளிச்சம் கண்களில் பட, உடனடி முயற்சியாக உடலை நகர்த்தியதால் பிழைத்துக் கொண்டார் அருணிமா சின்ஹா.

    வெளியில் எங்கும் செல்ல வேண்டாம். நீங்கள் வசிக்கும் தெருவிலேயே, உங்கள் வீட்டுக்கு அருகிலேயே கூட முயற்சியால் முன்னேற்றமடைந்து மகிழ்ச்சியாகத் தானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைக்ககும் பலர் வசிக்கலாம்.

    அவர்களுள் ஒரு சிலரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது சிறப்பு.

    வியர்வை உயர்வைத் தரும் : இதைச் சொல்வதுடன், செயல்பட்டு முன்னேறியவர், கோவையில் இன்று CNC மிஷின் வைத்து தொழில் நடத்தி வரும் மணிராஜ் என்ற இளைஞர்.

    கோவில் பட்டி சொந்த ஊர். தன் 2 ம் வயதில் தந்தையை இழந்தார். 16 ம் வயதில் தாயையும் இழந்தார்.

    கோவைக்கு வந்து பல தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்தார். தொழில் திறமையால் விரைவில் பெரிய தொழில் அதிபராகும் இலக்குடன் முயற்சித்து வருகிறார். வாழ்த்துவோம்.

    சோர்வில்லாத ஊக்கம் தடை தகர்க்கும் :

    கோவை கணபதி புதூரைச் சேர்ந்த செந்தில் குமாரின் முயற்சிகளுக்கான தடைகளைப் புறமுதுகிடச் செய்தது. இவரின் சோர்வில்லாத ஊக்கம் தான் என்கிறார்.

    டிப்ளமோ படித்தார். செய்த தொழில்களில் நட்டமோ நட்டம். இந்தக் கஷ்டங்களையும் நட்டங்களையும் ஆசான்களாகக் கொண்டதால், நிலை தலை கீழாக மாறியது.

    இன்று பல வகையான தொழில்களைச் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர் சொல்வது “இயந்திரங்களின் மீதான காதல் தான் முன்னேற்றத்துக்கு காரணம்”.

    இது போல் இன்னும் பலர் உள்ளனர் இந்த இரண்டிலிருந்தும் நாம் அறிய வேண்டியது.

    செய்ய முடிவது என்பது வேறு, நாம் இதைச் செய்கிறோம், எல்லோராலும் இது சாத்தியம்.

    செய்ய வேண்டியது என்பது வேறு. இதைச் செய்வதற்கு மற்ற எல்லா சக்திகளும் நமக்கு உதவ வேண்டும்.

    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

    கருதி இடத்தால்  செயின்(குறள்484) என்றார் திருவள்ளுவர். எல்லாச் சக்திகளையும் எப்படிப் பெறுவது?

    சமுதாய நோக்குடன் கூடிய முயற்சிகளுக்கு, எதிர்பாரா வகையில், பலரிடமிருந்தும் தேவையனவை கிடைக்கும்.

    முயற்சியே முன்னேற்றம் – தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்

    மனிதன் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எத்தனையோ ரகமான நிகழ்வுகளைப் பார்த்து அவற்றின் விபரங்களைப் புரிந்து கொள்கின்றான். புத்தகக் கல்வியால் மட்டும் அனைத்து அறிவையும் பெற்று விட இயலாது. அதையும் தாண்டி ஒரு உணர்வு உண்டு. அதைப் பொது அறிவு என்றும் கூறலாம். இந்தப் பொது அறிவு பற்றி அரிஸ்டாட்டில் முதல் எத்தனையோ அறிவாளிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்த உணர்வு மனித இனத்திற்கு மட்டுமின்றி மிருகங்கள் மற்றும் பறவைகளிடமும் உண்டு. ஆனால்  அந்த உணர்வின் அளவு மனிதனிடம் கொஞ்சம் அதிகமாக உள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர். தனக்கு வரும் ஆபத்தை முன்னெச்சரிக்கையாய் உணர்ந்து அந்த உணர்விற்கு கட்டுபட்டு நடந்தால் எவ்வித அசம்பாவிதமும் நடக்காது. ஆனால் அதைபங பொருட்படுத்தாது நடந்தால் அதன் விளைவுகள் வருத்தப்பட்டதாகவும் அமையும். அந்தக் கருத்தை நேர்மறைச் சிந்தனை என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இக்கருத்தை மையமாகக் கொண்டு சில சிறு கதைகள் இந்தக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

    உயிர் பெற்று எழுத்த சிங்கம்:

    ஒரு நகரத்தில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். நால்வரும் பிராமண குலத்தைச் சேர்ந்த வாலிபர்கள். இவர்களில் மூன்று வாலிபவர்கள் வேதங்களை நன்கு கற்றறிந்தவர்கள். ஆனால் பொது அறிவு ஞானம். இல்லாதவர்கள், நான்காவது வாலிபர், இந்த மூவர் போல் வேதங்களைப் பற்றிய அறிவில்  சிறந்தவனாக இல்லாவிட்டாலும்  பொது அறிவில் ஞானம் பெற்றவன்.முதல் மூவர்  ஒருநாள் தங்கள் திறமையை அரசன் பாராட்டும் படியான ஒரு செயலைச் செய்ய வேண்டும்.அல்லது தங்கள் அறிவுத்திறமையால் அதிகம் பொருள் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்து கிளம்பினர். நான்காம் வாலிபவர் தம்மையும் உடன் அழைத்துச் செல்லும் படி மன்றாடிக் கேட்டுக் கொண்டான். அந்த மூவரில் ஒருவன், நம்பணாகப் பழகிவிட்டான். அதனால் அவனை விட்டுச் செல்வது சரியில்லை உடன் அழைத்துச் செல்வோம் என்று சொல்ல அனைவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தனர்.

    அவ்வாறு செல்லும் போது ஒரு காட்டில் சிங்கத்தின் எலும்புகள் கிடைப்பதைப் பார்த்தனர். முதல் வாலிபன் தன் மந்திரத்தால் எலும்புகள் ஒன்று சேர்ந்து சிங்கத்தின் எலும்புக்கூட்டை உருவாக்கினான். இரண்டாம் வாலிபன் தன் மந்திரத்தின் மகிமையால் அதற்கு தசை மற்றும் தோல் உண்டாக்கும் படி செய்தான். மூன்றாம் வாலிபன் தன் மந்திரத்தால் உயிர் கொடுக்க எண்ணி அதற்கான சடங்குகளைச் செய்ய ஆயுத்தமானான். அப்பொழுதுநான்காம் வாலிபன் நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் முயற்சியால் சிங்கம் உயிர் பெற்று விடும். பின் அது நம் அனைவரையும் கொன்று விடும் என்று வலிவுறுத்தினான். ஆனால், அவர்கள் தங்களின் அறிவுத்திறமையைக் கண்டு அவனுக்கு பொறாமை என்று கூறி அவனை கேலி செய்தார். பின் அவன், அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அதன்படி செய்யுங்கள் என்று கூறினான். நான் அந்த மரத்தில் ஏறிக்கொள்கிறேன். அதன்பின் அந்த முன்றாம் வாலிபர் தன் சடங்குகளைத் தொடரட்டும் என்றான். அதன் படி அவன் மரத்தில் ஏறியதும்  மூன்றாம் வாலிபன் சடங்குகளைச் செய்ய சிங்கத்தின் உயிரற்ற உறுப்புகள் உயிர் பெற்றன. இதைக் கண்டு நம் முயற்சியில் வெற்றி பெற்று விட்டோம் என்று கொண்டாடும் தருணத்தில் உயிர் பெற்ற சிங்கம் அவர்களைக் கொன்றுவிட்டது. சிறிது நேரம் கழித்து நான்காம் வாலிபன் சிங்கம் அங்கிருந்து செல்வதைப் பார்த்த பின் மரத்திலிருந்து கிழே இறங்கி வந்து பார்த்தான். நண்பர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து வருத்தப்பட்டான். பின் அவன் மட்டும் ஊருக்குத்திரும்பிச் சென்றான். அவனது உள்ளணர்வு அவனைக் காப்பாற்றிது.[hide]

    ஓரு தவளை மற்றும் இரண்டு மீன்களின் கதை:

    ஒரு குளத்தில் ஏகபுத்தி என்ற தவளையும் சஹஸ்ரபுத்தி மற்றும் சதாபுத்தி என்ற மீன்களும் வாழ்ந்து வந்தன. குளத்தில் அதிக தண்ணீர் இருந்ததால் அவைகள் தங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.ஒரு நாள் இரண்டு மீனவர்கள் அருகில் உள்ள குளத்தில் அதிகமான மீன்கள் மற்றும் சில நீர் உயிர் இனங்களையும் பிடித்த மகிழ்ச்சியில் இந்த குளத்தருகில் பேசிக் கொண்டே சென்றனர். இந்தக்குளத்தில்  நாம் இதுவரை நம் வலைகளை வீசி மீன் பிடித்ததே இல்லை இந்த குளமும் மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் அதிக மீன்கள் இங்கு இருக்கலாம். நாம் நாளை வந்து இங்கு பார்ப்போம் இவ்வாறு இவர்கள் பேசியதைக் கேட்ட தவளை, மற்ற இரு மீன்களிடமும் சொன்னது. ஆனால் சஹஸ்ரபுத்தி என்ற மீன் நான் சில தந்திரமான அசைகள் மூலம் வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்வேன் என்றது. சதா புத்தி மீனும்எனது திறமையால் நான் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வேன் என்றது. ஏகபுத்தி தவளை எனது ஓரே திறமை வரும் ஆபத்தை முன்கூட்டியே உணர்வது என்று கூறிவிட்டுஅருகில் உள்ள கிணத்திற்கு தன் குடும்பத்துடன் சென்று அங்கு தங்கியது.

    மறுநாள் மீனவர்கள் முதல் நாள் பேசியபடி வந்தார்கள். வலைகளை குளத்தில் வீசினர். சஹஸ்ரபுத்தி மீனும் சதாபுத்தி மீனும் தங்கள் சாமர்த்தியத்தை எவ்வளவு வெளிப்படுத்தினாலும் அவர்களால் தப்பமுடியவில்லை. அவர்களுடன் அவர்கள் குடும்பத்தினரும், மற்ற மீன்களும், தவளைகள் மற்றும் நண்டுகளும் மாட்டிக் கொண்டன. அதிக பளுவுடன் கூடிய வலையை மீனவர்கள் இழத்துக் கொண்டே சென்றதால் சஹஸ்ரபுத்தி மீனும் சதாபுத்தி மீனும் இறந்து விட்டன. ஏகபுத்தி தவளை, மறுநாள் மாலை, கிணற்றில் விளிம்பில் வந்து அமர்ந்து பார்த்தது. அப்பொழுது அந்த  வலையில் இரண்டு மீன்களும் இறந்து கிடப்பதைப் பார்த்தது. மேலும் அவர்கள் மற்ற மீன்கள் எல்லாவற்றையும் விற்றாகி விட்டது. இந்த இரண்டு மீன்களும் பெரிய மீன்களாக இருப்பதால் வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்துவிடலாம்  என்று பேசிக் கொண்டே செல்வதை அந்த தவளை, அந்த இரண்டு மீன்களிடம் மற்ற திறமைகள் இருந்தும் முக்கியமான ஒரு திறமை இல்லை. அந்த ஒரு திறமை மட்டும் எனக்கு இருந்ததால் நானும் என் குடும்பமும் ஆபத்திலிருந்து தப்ப முடிந்தது என்று கூறியபடி கிணற்றுக்குள் தவ்வி சந்தோசமாய் நீந்தியது.

    இசை இசைத்த கழுதை:

    உதார்த்தா என்ற கழுதை ஒன்று சலவைத்தொழிலாளி ஒருவனுடன் வசித்து வந்தது. பகலில் அவனுக்காக பொதி சுமக்கும். இரவில் அருகிலுள்ள வயலில் புல்லை மேய்ந்து விரும். சலவைத் தொழிலாளிக்குத் தெரியாமல் அருகில் உள்ள பண்ணை ஒன்றில் நுழைத்து விவசாயிகளுக்கு தெரியாமல் காய்கறிகளைத் தின்று விட்டு காலையில் சலவைத் தொழிலாளிடம் வந்து விடும். இது செய்யும் திருட்டு  வேலைக்கு உறுதுணையாய் குள்ளநரியும் இரவில் பண்ணைக்குச் சென்று கோழிகளைத் திருட்டுத்தனமாய் உண்டு வந்தது. ஒரு நாள் முழு நிலவு. அதைப்பார்த்ததும் உதார்த்த கழுதை, தனக்குப் பாட வேண்டும் போல் உள்ளது என்று சொன்னது. பொது அறிவு உடைய குள்ள நரி, உங்கள் குரல் சங்கு ஊதுவது போல் இருக்கும். நாம் செய்வதோ திருட்டுத்தனம். நீங்கள் பாடினால் விவசாயிகள் காதில் விழுந்து விடும். அவர்கள் வந்து நம்மை அடித்துவிடுவார்கள். இந்த ஆபத்தான முயற்சி தங்களுக்கு வேண்டாம் என எச்சரித்தது. ஆனால் உதார்த்தா கழுதை உனக்கு என்போல்  பாட முடியாது. அதனால் பொறாமையால் அப்படி சொல்கிறாய் என்றது. குள்ளநரி நான் சிறிது தூரம் சென்ற பின் நீங்கள் பாட ஆரம்பியுங்கள்  என்று சொல்லி விட்டு சென்றது. சிறது நேரத்தில் உதார்த்தா கழுதை பாட ஆரம்பித்தது, விவசாயிகள் விழித்துக் கொண்டு, முழுநிலவில் உதாத்தா கழுதையை அடையாளம் கண்டு, இத்தனை நாட்கள் நம் பண்ணையில் உள்ள காய் கறிகளை தின்று வந்தது இந்த கழுதை தான் என்று அதனை கம்பால் அடித்து, உதைத்து அதன் கழுத்தில் ஒரு மர அரவையை அடையாளமாய் கட்டி விட்டனர். குள்ளநரி எச்சரித்தும் கேட்கததால் இந்த துன்பத்திற்கு ஆளானது.

    இந்த உணர்வு பற்றிய உண்மை, ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையில்  சந்தித்த சில நிகழ்வுகள் மூலம் துயரம் அடைத்தையும், ஆபத்திலிருந்து தப்பித்ததையும் உணர முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.[/hide]

    இந்த இதழை மேலும்

    துணிவே வெற்றி

    தினசரி பத்திரிக்கைகளில் ஏதாவது ஒரு பகுதியில் தற்கொலை என்ற தலைப்பில் செய்தி வராமல் இருந்தது இல்லை. செய்திதாளின் பெயர் இல்லாமல் தினசரி பத்திரிக்கை இல்லையோ அதுபோல் தற்கொலை என்ற செய்தியில்லா செய்தித்தாளே இல்லை. இப்படி செய்திதாளில் தினமும் இடம் பெறுவதற்கான காரணங்களை மேலோட்டமாக பார்த்தால் வெவ்வேறாக தோன்றலாம். குக்கிராமத்தில் இருந்து படிப்பு சதவீதம் அதிகமுள்ள நாகரீக  நகரம் வரை தடையின்றி பரவியிருக்கும் ஒருவித மனநிலை பாதிப்புக்கான வெளிப்பாடாக இருப்பது தற்கொலை நிகழ்வுகள். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக இருப்பது நாம் வாழும் சமுதாயத்தை அச்சப்படுத்த வைக்கிற புள்ளியல் விபரமாக இருக்கிறது. நாட்டின் உயர்கல்வி வழங்ககூடிய கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மத்தியிலும் தற்கொலை நிகழ்வு நடக்கிறது என்றால் நினைத்துப்பாருங்கள். கல்வி, வாழ்க்கையை சீர்செய்ய எப்படி பயன்பட வேண்டுமோ அப்படி பயன்படுத்தபட்டிருக்கிறதா என்றால் இல்லை.  கல்வியின் குறைபாடா, கற்பிக்கும் விதத்திலா அல்லது கற்றுக்கொள்வதில் உள்ள குழப்பமா? ஏன் இப்படிப்பட்ட நிகழ்வுகள்? சமீபத்திய செய்தி 7ம் படிக்கும் மாணவி ஆசிரியர் திட்டியதால் தன்னை எரித்துக்கொண்டு தற்கொலை. சமுதாய நல்லொழுக்க பாதை என்ற மனிதத்தை கொலை செய்கிற கொடுமை. ஏன் இந்த மனநிலை?

    தற்கொலை செய்துகொண்டதை நியாயபடுத்தி- தற்கொலை செய்தகொண்டவருக்கான தீர்வு அது தான் என யாரும் ஆமோதிப்பதும் இல்லை ஆதரிப்பதும் இல்லை. சரி தற்கொலை செய்துகொண்ட ஒருவரது விருப்பத்தை பூர்த்திசெய்துகொள்வதற்கான வாய்ப்பாக கருதி செய்துகொண்டிருக்கலாம் எனவும் கருத முடியாது. ஏன் என்றால் தற்கொலை விரும்பி செய்து கொள்வதில்லை.மாறாக விருப்பத்திற்கு எதிராக கட்டாயபடுத்திக்கொண்ட ஒரு செயலாகும். அதனால் தான் அது தற்செயலாக இல்லாமல் தற்கொலையாக மாறி இருக்கிறது. இந்த நிகழ்வுகள் முன்னேறமடையாத முன்னேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில் மட்டுமே நிகழும் நிகழ்வுகளா என்றால் இல்லை. மாறாக நன்கு வளர்ந்த அமெரிக்கா போன்ற வெள்ளையர்கள் வாழும் நாட்டில் தான் அதிக அளவு தற்கொலை நடக்கிறது என்றும் பெண்களை விட ஆண்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என உளவியல் சார்ந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஏன் இப்படி?

    எந்த ஒரு செயலுக்கும் அதனை செய்தவருக்கும் அல்லது அவர்மீது செயல்படுத்தப்பட்டதற்கும் அவர் சார்ந்த சூழல் முக்கிய காரணியாக இருக்கும். தற்கொலை என்பது தன்னைத்தானே கொலை செய்து கொள்கிற ஒரு குற்றம் என்ற உணர்வு தற்கொலை செய்துகொள்பவர்களிடம் இல்லை என கூறலாம். பொதுவாக ஒரு குற்றத்தை செய்யும் போது தோன்றும் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கண்ணோட்டம் தற்கொலை செய்துகொள்பவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்பிழைத்தவர்களிடமிருந்துபெறப்பட்டவாக்குமூலம் நிரூபிக்கும். பொதுவாக மனநலமின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் தற்கொலைக்கான இலக்காக இருக்கிறார்கள். உலகத்தில் 6,50,000 பேர்கள் ஆண்டுதோறும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் அதில் அரைமில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்கொலையால் உயிர் இழக்கிறார்கள். என்ன கொடுமை இது ?[hide]

    தற்கொலை என்பது மனம்சார்ந்த நோய் அல்லது அதனைச்சார்ந்த பாதிப்புகளால் ஏற்படும் நிகழ்வு என்பது உண்மை. ஆனால் மனநோயாளிகள் அதிகப்பட்சமாக தற்கொலை செய்துகொள்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் அதற்கான சாத்திய சதவீதம் மட்டும் அதிகம் என்பதை மறுக்கமுடியாது.

    மனநலமின்மை மட்டுமல்லாமல் வயது பாலினம்,திருமணநிலை, இனம், இழப்பை ஏற்படுத்தியிருக்கும் சமீபத்திய நிகழ்வுகள் சமுதாயத்தால் ஆதரிக்கப்படுதலும் விலக்கப்படுதலும், போதைமருந்து மற்றும் மதுபானங்களை பயன்படுத்துவதும் தற்கொலைக்கான காரணிகளாக இருக்கின்றன. உதாரணத்திற்கு 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிமாக உள்ளது.

    எதிர்மறையான எதிர்பார்ப்பு, நம்பிக்கையின்மை கொண்டவர்கள் தீர்க்கபடாமல் இருக்க கூடிய பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வு தற்கொலை என நினைக்கிறார்கள். மேலும் சிலர் நடைமுறைக்கு மாறுபட்ட உயர்ந்த வாழ்வியல் தரத்தை தனக்குரியதாக அமைத்துக்கொள்கிறார்கள். அதேவேளை, அளவுக்கு அதிகமாக தங்களை தாங்களே எடைபோட்டுபார்த்து தாங்கள் தரம் தாழ்ந்தவர்கள் என தீர்மானித்துவிடுகிறார்கள். மனஅழுத்தம் தொடர்ச்சியாக வாழ்வுசார்ந்த நிகழ்வுகளால் தொடரும்போது தங்களைப்பற்றிய எதிர்பார்ப்பு நிகழ்வுகளின் வெளிப்பாட்டுடன் முரண்படும் போது எதிர்மறையான உணர்ச்சி தூண்டுதல் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அதன் விளைவாக மனம்சார்ந்த தாழ்வுநிலை(மென்டல் டிப்ரஸன்) ஏற்படும். அதுவே தற்கொலைத்தூண்டுதலுக்கான முக்கிய காரணியாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிச்சயம் தேவைதானா? அவர்களால் நம்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை, என்று பொதுவான கருத்து நிலவி வருகிறது. அது பற்றிச் சொல்லுங்கள்?

    மதியழகன்

    ஆசிரியர், விருதுநகர்.

    வட மாநிலத்தவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வேலை செய்வதைப் பார்க்கிறோம். அவர்கள் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல இப்போதெல்லாம் கிராமங்களில் விவசாய கூலி வேலை கூட செய்கிறார்கள்.

    வடநாட்டார் ஏன் வரவேண்டும்? 

    இந்திய அரசியல் அமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பல உரிமைகளையும், சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது. எந்த குடிமகனும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் (ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர்த்து) என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆக, வடமாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்வது அவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எனலாம். இதில் சட்ட சிக்கல் ஏதுமில்லை.

    வடநாட்டவர் தென்நாட்டில் ஏன் வேலை செய்ய வேண்டும்? அவர்களுக்கு அங்கு கிடைக்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் இங்கு கிடைக்கக்கூடும், அதோடு அவர்களது மாநிலங்களில் வேலைகளும் இருக்காது. வாழ்ந்தாக வேண்டும், உழைக்க மனது இருக்கிறது; எனவே ஆயிரம் மயில்கள் கடந்து இங்கு வந்து வேலை செய்கிறார்கள். இதில் அவர்களைக் குறை சொல்ல முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரளாவிற்கும், பெங்களூருக்கும், மும்பைக்கும், டில்லிக்கும் வேலைக்குப் போனார்கள், அது போலத்தான் இதுவும்.

    தமிழ் நாட்டவர் ஏன் வேலை செய்யவில்லை:

    தமிழ்நாட்டில் அனைவருக்கும் இன்று வேலை கிடைத்து விட்டதா என்றால், இல்லை என்பது தான் பதிலாக வரும். படித்தவர்கள் 85 லட்சம் பேர் வேலை கேட்டு  விண்ணப்பித்து இருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாத பல லட்சம் பேர்கள் இங்கே சும்மாதான் இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அப்படி இருக்க இன்று தமிழ்நாட்டு விவசாயியைக் கேளுங்கள், விவசாய வேலை பார்க்க ஆள் கிடைப்பதில்லை என்கிறார். தொழிலதிபரைக் கேளுங்கள், வேலை தெரிந்த ஆள் கிடைப்பதில்லை என்கிறார். இதே சூழ்நிலைதான் ஒரு செங்கல் சூழையிலும்; கட்டிடம் கட்டும் இடத்திலும் இருக்கிறது.

    இப்படியாக, தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் வேலைகளைச் செய்ய தமிழ்நாட்டவர் ஏன் முன்வரவில்லை என்று விசாரித்தால், மூன்று காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று கூலி வேலை என்பது கவுரவமில்லாத வேலை என்று கற்பிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையிலிருந்து மீளவே மக்கள் விரும்புகிறார்கள். இரண்டாவது, சம்பளம் மிகக் குறைவாக இருக்கிறது என்பது. மூன்றாவது காரணம், நம் மாநிலத்தவர்கள் பலர் படித்துவிட்டார்கள், எனவே இது போன்ற உடலுழைப்பு வேலை செய்யத் தயங்குகிறார்கள் என்பது.

    படித்ததால் வேலை போச்சு : 

    இப்படி தமிழ்நாட்டவர் படித்துவிட்டதால் உடலுழைப்பு வேலை செய்ய தயங்குகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அப்படி படித்துவிட்டவர்களுக்கு அறிவுப்பூர்வமான ஒரு வேலை செய்யத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! அதாவது அவர்களுக்கு ஒரு மொழியைக் கற்பிக்கத் தெரியுமா? ஒரு இருசக்கர வாகனத்தைப் பழுது பார்க்கத் தெரியுமா? இறால் குஞ்சு வளர்க்கத் தெரியுமா? அல்லது ஒரு கணினியைப் பழுது பார்க்கத் தெரியுமா, என்றால் இல்லை. இது போன்ற பணிகள் கூட இன்று வடநாட்டவர்கள் இங்கு வந்து செய்கிறார்கள். இன்று புதிதாக வந்துள்ள NEET என்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு நம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வடநாட்டவர்கள் இன்று வந்துள்ளனர். பயிற்சியளிக்க வேண்டிய படித்து பட்டம் பெற்ற தமிழ்நாட்டு பட்டதாரிகள் எங்கே போனார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

    பொறாமை : 

    பிற மாநிலத்தவர் வந்து பணி செய்வது மும்பை, பெங்களூர், டில்லி போன்ற நகரங்களில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை பிற மாநிலத்தார் செய்வதை, அதுவும் இன்னும் சிறப்பாகச் செய்வதைக் கண்ட உள்ளூர் சோம்பேறிகள் விரும்புவதில்லை. வெளிமாநிலத்தவர் ஒருவர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டால் அம்மாநிலத்தவர் அனைவரும் குற்றச் செயல் செய்பவர்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி விடுகிறார்கள். சில உள்ளூர் குற்றவாளிகள் அந்த அப்பாவிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்திவிடுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் கும்பல் கும்பலாக வெளியேறிய சம்பவங்கள் உண்டு.

    ஆடிடும் ஓடமாய் வாழ்க்கை : 

    இப்படிப்பட்ட அவமானத்திற்கும், தாக்குதலுக்கும், ஆபத்திற்கும் இடையில் வடமாநிலத்தவர் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது என்றால் அவர்களது உழைப்பு உள்ளூரில் தேவைப்படுகிறது. விவசாயம் செய்பவர்களுக்கும், செங்கல் சூழை நடத்துபவர்களுக்கும், தொழிற்சாலை முதலாளிகளுக்கும், கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும் இவர்களது உழைப்பு கண்டிப்பாக வேண்டும் என்ற நிலை உள்ளது. அவர்களே இந்த வடநாட்டாரை வரவழைத்து தங்க வைத்து, பராமரிக்கிறார்கள்.[hide]

    உங்களுக்கு பதிலை எழுதும் வேளை பத்திரிக்கையில் ஒரு செய்தியைப் படித்தேன். கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் வேலை பார்த்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று 300 வடமாநில தொழிலாளர்களை அரசு அதிகாரிகள் மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி விட்டார்கள். முன்பணம் பெற்று, சம்பளமும் பெற்று, தங்க இடமும் இலவசமாகப் பெற்று வேலை செய்பவர்களை கொத்தடிமைகள் என்று எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வி எழலாம். அதற்கான சட்ட வரையறை இருக்ககிறது. குறைந்த சம்பளம், குழந்தைகள் வேலை செய்யும் அவலம், கண்ணியமற்ற மருத்துவ வசதி, முகாமை விட்டு வெளியேற முடியாத கட்டாயம், முன்பணம் கொடுத்தவருக்கு மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இவர்களை ‘கொத்தடிமை’ என்று கருதுவதற்கு இடம் தந்துவிட்டது என்று நினைக்கிறேன். இப்படியாக கொத்தடிமைகளாக இருந்து கூட பல வடமாநிலத்தார் வேலை செய்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். 

    மாற்றுப்பாதை : 

    தமிழ்நாட்டில் உருவாகும் வேலைகளைச் செய்ய மறுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கல்வித்தகுதிக்கேற்ப தொழில்நுட்ப செயல் செய்து அதிக பொருள் ஈட்டிவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம் உண்டு. மற்ற மாநிலங்களுக்கு சென்று தொழில்நுட்பம் வாய்ந்த வேலையில் சேரலாம். பிற நாடுகளுக்குக் கூடப் போய் வேலையில் சேராலாம்.

    அப்படியில்லாமல், கிடைத்த வேலை வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு, அந்த வேலையை வடநாட்டவர்கள் செய்கிறார்களே என்று வருத்தப்படுவதில் நியாயமில்லை. இந்த உலகம் உழைப்பவர்களுக்குச் சொந்தம், உழைப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம். உழைப்பவர்களுக்குத் தானே சம்பளம் கிடைக்கும் சுறுசுறுப்பான மக்கள், வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணம் சிறு துளி பெரு வெள்ளமாக பெருந்தொகையாக ஒருநாள் மாறும். அந்த தொகையை வைத்து அவர்கள் நிலம் வாங்குவதையும் தொழிற்சாலை கட்டுவதையும் யாராலும் தடுக்க முடியாது.

    ஆபத்து : 

    ஆட்கள் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் விவசாயம், தொழில், சேவை என்று வேலை செய்ய ஆள் நிச்சயம் வேண்டும். அது தமிழ்நாட்டவர் முன்வரவில்லை என்பதால் வடநாட்டவர்கள் அந்த வேலைகளை செய்கிறார்கள். நமது பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறார்கள்; அவர்களது வாழ்க்கையையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டவர்கள் பலர் வேலை செய்ய விருப்பமில்லாத சோம்பேறிகளாகவும், இலவசமாக கிடைப்பதை வைத்து ஜீவன வாழ்க்கை’ நடத்தும் சராசரி மனிதர்களாகவும், தொலைக்காட்சிகளில் வேடிக்கைகள் கண்டு மகிழும் பொழுதுபோக்கு ஜீவிகளாகவும், பண்டிகைகளை மட்டும் சரியாக அனுசரிக்க அக்கரை காட்டும் அப்பாவி மனிதர்களாக தொடர்ந்து இருப்பார்களேயானல், இருக்கும் காணி நிலத்தையும் இழந்து அதே நிலத்தில் கூலிக்கு வேலை பார்க்கும் நிலைமை வரக்கூடும்.

    ஏழைகள் இன்னும் பரம ஏழைகளாகவும், பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்காரர்களாகவும் மாறிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் எந்த ஒரு மக்கள் உழைக்கத் தயங்குகிறார்களோ அந்த மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன் எப்படி கொத்தடிமைகளாக வாழ்ந்தார்களோ அதுபோல பிற மாநிலத்தவர்களின் பெரிய பண்ணைகளில் கொத்தடிமைகளாக அவர்கள் ஊரிலே வாழ நேரிடும். அனைவரும் சமம். அனைவரும் நிலம் வாங்கலாம், அனைவரும் படிக்கலாம், உழைப்பவனுக்கு நியாயமான குறைந்தபட்ச சம்பளம், தீண்டத்தகாதவர் என்று எவரும் இல்லை என்ற மனிதாபிமான தத்துவங்கள் நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மேற்கத்திய அறிஞர்களும், ஆங்கிலேய அரசும். அதோடு, நம்மை அடிமை நிலையிலிருந்து சுதந்திர மனிதர்களாக மாற்றியவர்கள் நமது தேசத் தலைவர்கள் காந்தி, நேரு, பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றவர்கள். அவர்களது முயற்சிகள் கூட நம்மில் சோம்பேறிகளால் வீணாய்ப் போய்விடும் போலத் தெரிகிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, வேலை செய்யத் தயங்கும் அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும்.

    எந்த பெரிய இயற்கை வளங்களும் இல்லாமல் ‘வேலை செய்யத் தயார்’ என்ற மனநிலை ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்து இன்று பொருளாதார வல்லரசாக திகழும் ஜப்பானிடமிருந்து தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்க வேண்டும். நான் எழுதிய ‘நம்மாலும் முடியும்’ (விஜயா பதிப்பகம்) என்னும் நூலில் இந்த உண்மையை விவரித்திருக்கிறேன்.

    இன்று வேலையில்லாத தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவை ‘வேலை செய்ய வேண்டும் என்ற மனம்’. உழைப்புதான் உயர்வு தரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….

    தேக்கம்பட்டி சிவக்குமார், சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட்

    Catering Owners Association, செயற்குழு உறுப்பினர்

    தந்தை பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் புரவலர்

    கோவை மாவட்ட அமெச்சூர் கபாடிகழக இணை செயலாளர்,

    தேக்கம்பட்டி, கோயமுத்தூர்

    ஆரோக்கியமே மனித இனத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் அக்கரைச் செலுத்தினாலே வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் சிறந்த முறையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தயாரித்து இன்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்றமாநிலங்களில் இவரின் கைவண்ணத்தை சுவைக்காதவர்கள் யாருமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறந்த உணவுத்தயாரிப்பாளர்.

    இங்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. ஆனால் பணத்தை விட மனிதர்களின் நலம் தான் சிறந்தது, ஆகையால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், உணவிற்குத் தேவையான மற்றப் பொருட்கள் போன்றவை  பழமை மாறாமல் தயாரித்து அதன் மூலம் உணவைக் கொடுத்து வருபவர்.

    உலக இலக்கியம் தொடங்கி உள்ளூர் இலக்கியம் வரை அனைத்தும் கற்றுக் கொண்டு தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், தன்னிடம் பணியாற்றுபவர்களிடமும் நம்பிக்கை விதையை நாளும் விதைத்துக் கொண்டேயிருப்பவர்.

    கொடுத்த வாக்கில் உண்மை, நேரம் தவறாதிருத்தல், கடின  உழைப்பு, மற்றவர்களுக்கு மனமுவந்து உதவும் மனப்பான்மை போன்றநற்குணங்களே இவரின் அடையாளம்.

    சிறந்த சமையல் கலை வல்லுநர், தலை சிறந்த மேலாண்மைத்துவமிக்கவர், தேக்கம்பட்டி சிவக்குமார் சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்டின் நிறுவனர், இப்படி பன்முகத்திறமை வாய்ந்த தேக்கம்பட்டி சிவக்குமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

    கே: உங்களின் இளமைகாலத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

    கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகிலுள்ள தொட்டதாசனூர் என்னும் குக்கிராமம் தான் என்னுடைய ஊர். ஆனால் நான் பிறந்தது என்று பார்த்தால் என்னுடைய தாயின் ஊரான சாலைவேம்பு என்னும் ஊர். இங்கு தான் என்னுடைய தொடக்கக் கல்வி ஆரம்பித்தது. ஆனால் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டேன். அதனால் தொட்டதாசனூர் ஊருக்கே வந்துவிட்டேன். ஏழாம் வகுப்பு வரை இங்குள்ள அரசுப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை புஜ்ங்கனூரில் படித்தேன்.

    என்னுடைய தந்தை கரும்பாலைத் தொழிலைச் செய்து வந்தார். அவ்வளவு வருமானம் இல்லாத தொழில். ஆனால் குடும்பம் நடத்தும் அளவிற்கு போதுமானதாக இருந்தது. நான் படிப்பில் சராசரி மாணவன் தான். எந்த வகுப்பிலும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று விடுவேன்.

    கே: சமையல் கலையின் மீது ஆர்வம் எப்படி வந்தது?

    என் தாயின் தந்தை நடேசன். அவர் சமையல் சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தார்.இவர் ஒரு சிறந்த சமையல் தயாரிப்பாளர், அவரின் கைப்பக்குவம் அக்கிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரபலம். உணவை நாவில் சுவைத்துப் பார்க்காமலேயே வாசனையை வைத்து அவ்வுணவில் உள்ள நிறைக்குறைகளைச் சொல்லிவிடுவார்.

    நானும் சின்ன வயதிலிருந்தே இவர்களுடனே இருந்ததால் எனக்கும் இவ்வார்வம் வந்துவிட்டது என்றேசொல்லலாம். சின்ன வயதிலிருந்தே நாம் எதைப் பார்த்து வளர்கிறோமே அது நம் வாழ்வில் பின்னிபிணைந்து விடும். படிக்கின்றகாலத்தில் விளையாட்டைக்கூட மறந்து என்னுடைய தாத்தாவின் உடன் வேலைக்குச் சென்றுவிடுவேன்.

    பள்ளியில் ஆசிரியர்கள் கேட்கும் பொதுவான கேள்வி. எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நிறைய பேர் ஆசிரியர்,மருத்துவர், ஆட்சியர் என்று அவரவர்கள் விருப்பதைக் கூறினார்கள். ஆனால் என்னைக் கேட்கும் பொழுது சற்றும் யோசிக்காமல் நான் சமையல் கலை நிபுணராக வரவேண்டும் என்று கூறினேன். இதைக் கேட்டு வகுப்பில் உள்ள மற்றமாணவர்கள் கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் என்னுடைய மருதன் ஆசிரியர் எனக்கு அப்போதே ஊக்கம் கொடுக்கும் படி பேசினார்.

    கே: உங்களின் முதல் கேட்ரிங் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

    தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததால், இவர்கள் செய்த தொழில்  என் குருதியோடு கலந்து விட்டது. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றபொழுது தனியாக ஒரு ஆர்டர் கிடைத்தது. இதை என்னுடைய தந்தையிடம் சொன்னேன். அவருக்கு ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் மறுபுறம் சற்று பயம் இருந்தது. திருமணம் வீட்டிற்கு சமைத்தல் என்பது சாதாரண காரியம் இல்லை, இதனால் என் பெரியம்மா சின்னப் புதூர் (சமையல் கலைஞர்) அவர்களை என்னுடன் என் தந்தை அனுப்பி வைத்தார்.

    ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியும் என்றநம்பிக்கை இருந்தது. காரணம் நான் கற்றுக் கொண்டது என்னுடைய தாத்தாவிடமிருந்து. என்னுடைய பெரியம்மாவிடம் நானே முழுவதுமாகப் பார்த்துக் கொள்கிறேன். ஏதேனும் தடுமாறும் சூழலில் எனக்கு உறுதுணையாக இருந்தால் போதும்  என்று சொல்லிவிட்டேன். அவர்களும் என்னுடைய பேச்சை மதித்து என்னை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டார்கள். என்னுடைய முதல் முயற்சி பெருத்த வெற்றி சாப்பிட்டவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள். இது எனக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தைக் கொடுத்தது. அதன் பிறகு அப்பகுதியில் என்னுடைய சமையலைப் பரவலாகப் பேசத் தொடக்கிவிட்டார்கள். திருமணம், காதணிவிழா, வலைகாப்பு,  பண்டிகைப் போன்ற விழாக்களுக்குத் தொடர்ந்து ஆர்டர் வர ஆரம்பித்தது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கே: சமையலுக்கான வேலையாட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள்?

    இது மிகவும் முக்கியமான ஒன்று. நான் தேர்ந்தெடுக்கும் அத்துணை வேலையாட்களும் என்னை விட வயதில் குறைந்தவர்களாகவே தேர்ந்தெடுப்பேன். காரணம் என்னுடைய சமையலுக்கென ஒரு தனியான ருசியை வைத்திருப்பேன். அதை மட்டுமே முறையாக பயன்படுத்துவேன்.

    அனைவரிடத்திலும் ஆலோசனையும், கருத்துக்களையும் கேட்பேன் ஆனால் முடிவெடுப்பது நானாக மட்டுமே இருப்பேன்.

    நாங்கள் தென்னிந்தியா, வடஇந்தியா போன்ற உணவுகளையும் தயாரித்து வருகிறோம். அப்படியிருக்கும் போது அது சம்மந்தமான உணவு தயாரிப்பு வல்லுநர்களை பணிஅமர்த்தி அவர்களை என்னுடைய ருசிக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்கி வருகிறோம்.

    கே: உங்கள் கேட்ரிங் சென்டரின் தனித்தன்மைகள் என்ன?

    எந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மை பெறவேண்டும் என்றால் மற்றநிறுவனத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில் எங்கள் சென்டர்  மாறுபட்டதாக காணப்படுகிறது.

    1. உணவு பரிமாறும் பொழுது உணவின் வரிசை முறைஒழுங்காக வரிசைப்படுத்தி பரிமாறுவதற்கு ஏற்றவகையில் முன்கூட்டியே அமைத்துவிடுவோம்.
    2. சமைப்பவர் முதல் பரிமாறும் அனைவருக்கும் ஓரே நிறத்தில் சீறுடை கொடுத்திருக்கிறோம்.
    3. நாங்களே சொந்தமாக தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைத் தயாரித்து அந்தப் பொருள் மூலமே தயாரித்து வருகிறோம்.
    4. சமைக்கும் பாத்திரம் அனைத்தும் காப்பர் பித்தளை பாத்திரங்களையே பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு சமையல் முடிவுக்கு பின்னர் ஈயம் பூசி அதற்கு பின்னரே பயன் படுத்தோம்.
    5. அலுமினியம் பாத்திரம், அஜனமோட்டோ போன்றவற்றைநாங்கள் பயன்படுத்தில்லை.
    6. எங்களிடம் 50 ஆயிரம் பேருக்கு சமைக்ககூடிய பாத்திரங்கள் பணியாளர்கள், உணவைக் கொண்டு செல்ல தனித்தனி வாகன வசதிகள் போன்றவை இருக்கின்றன.
    7. அசைவம் மற்றும் சைவம் இரண்டையும் சிறந்த முறையில் தயாரித்துக் கொடுக்கிறோம்.

    இப்படி எண்ணற்றதனித்தன்மைகள் இருக்கிறது. நாங்கள் முற்றிலும் குறைந்த விலையில் அதிக ருசி ஏற்படக்கூடிய அளவில் தான் எப்போதும் உணவைத் தயாரித்து கொடுக்கிறோம்.

    வாடிக்கையாளர்களின் மனநலனும், உடல் நலனுமே எங்களைப் பொருத்த வரையில் முக்கியமாகக் கருதுகிறோம்.[hide]

    கே: ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

    எந்த ஒரு விழாவானாலும் தமிழர்கள் உணவிற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம் தன் வீட்டிற்கு வரும் அழையா விருத்தாளிக்கே விருது உபசரிக்கும் நம் நாட்டில் அழைத்து விருது வைக்கிறார்கள் என்றால் அது எப்படியிருக்கும் என்றும் நான்  சொல்லி கேட்கத் தேவையில்லை.

    5 முதல் 6 மாதத்திற்கு முன்னரே எங்களைப் பற்றி அறிந்து கொண்டு இப்படி ஒரு விசேஷம் வீட்டில் இருக்கிறது நீங்கள் தான் சரியாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முன் பணம் கொடுத்து சென்று விடுவார்கள்.  நம்மை நம்பி இப்படி ஒரு வேலை வருகிறதோ அவர்களின் நம்பிக்கைகளை நாம் முறையாகக் காப்பாற்றவேண்டும். அப்படியிருக்கும் போது நாம் மிகுந்த அக்கரைக் கொள்ள வேண்டும்.

    அவர்களின் எண்ணத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வந்தவர்கள் உணவினைப் பாராட்டிச் சென்றால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமால் நம்மிடம் வந்து சொல்வார்கள் அது தான் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது.

    கே: தமிழர்களின் உணவு முறையில் தற்போது மாற்றம் அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

    வருத்ததுடன் ஆம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. உலகிலேயே தமிழர்களின் உணவுக் கலாச்சாரம் தான் சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பெரிதும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    எவ்வளவு சூடான சாப்பாடாக இருந்தாலும் அதை தலைவாழை இலைப் போட்டு சாப்பிட்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது என்று அறிவியல் ஆய்வுகள் கூறிப்பிடுகின்றன.

    சாப்பிடுவதற்கு வரிசை முறைஇருக்கிறது. முதலில் எதைச் சாப்பிட வேண்டும், இறுதியாகச் எதைச்சாப்பிட வேண்டும் என்று வரிசை முறைசாப்பிடும் ஓரே இனம் நம் தமிழ் இனம் மட்டும் தான்.

    சாப்பிட்டவுடன் வெற்றிலைப் பாக்குப் போடும் கலாச்சாரமும் நம்மிடமிருந்து தான் தோன்றியது.நம்முடைய முன்னோர்கள் 100 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடைபிடித்த உணவு முறைகள் தான். இன்றும் பலர் சாப்பிடவுடன் வெற்றிப்பாக்குப் போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

    நம் உணவில் பயன்படுத்தும்  மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி முதலான பொருட்கள் பெரிதும் மருத்துவம்  மகத்துவம் மிக்கதாகும்.

    மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நம்மூர் இட்லி 1 வயது குழந்தை முதல் 100 வயது பெரியவர் வரை அனைவரும் உண்ணக்கூடிய உணவு என்று உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது.

    அப்படி நாம் சாப்பிடும் அத்துனை உணவுகளும் நம்மை சுற்றி 50 கிலோ மிட்டர் சுற்றுப்புறத்திலேயே கிடைக்கின்றன. அவ்வாறு இருக்கும் பொழுது இதை முறையாகக் கடைப்பிடித்தாலே உடலில் எவ்வித நோய்யின்றி வாழலாம்.

    கே: பாஸ்ட் புட் என்று சொல்லக்கூடிய துரித உணவுகளின் வளர்ச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?

    பரப்பரப்பான உலகில், மனிதன் பணம் சம்பாதிக்க நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறான். அவர்களுக்கு சமைத்து சாப்பிட நேரம் இல்லை.

    கணவன் மனைவி இருவரும் தற்போது வேலைக்குச் சென்றால் தான் குடும்பம் நடத்தும் முடியும் என்றநிலை தற்போது உள்ளது.

    அப்படியிருக்கும் சமயத்தில் சாலையோரத்தில் இருக்கும் கடைகளுக்குச் சென்று தானும் உண்டு தன்னுடைய குடும்பத்திற்கும் வாங்கிச் செல்கிறார்கள்.

    நூடுல்ஸ் போன்றஉணவுகள் மூன்று நிமிடத்தில் தயராகிவிடுகிறது, அதில் சுவைகூட்ட சுவை ஊட்டிகள், அஜினமோட்டோ போன்றவை கலக்கப்படுகிறார்கள். அப்போதைய ருசிக்கு சாப்பிடும் நாம் பின்விளைவைப் பற்றி சிந்திப்பதில்லை.

    பணத்தை எப்போதும் வேண்டுமென் றாலும் சம்பாதித்து விடலாம் . ஆனால் ஒரு முறைஉடல் நலம் கெட்டுவிட்டால் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் சிரமம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைகளுக்கு ருசிக்கு உணவுக் கொடுக்கமால், ஆரோக்கிய உணவான பயிறு வகைகளை நல்ல சுவையாக சமைத்துக் கொடுங்கள். ஒரு நாள் இரண்டு நாள் என்று தொடர்ந்து கொடுத்தால் அதன் சுவையை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

    தற்போதைய துரித உணவு 15 ஆண்டுகளுக்குப் முன்னர் வந்தது. ஆனால் நம்முடைய பாரம்பரிய உணவு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

    கே: கடந்த வந்த பாதையில் உங்களுக்கு ஏற்பட்ட திருப்புமுனையான சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?

    என் வாழ்க்கையில் எதுவுமே உடனே ஏற்படவில்லை. எல்லாமே சிறிய துளியாகத் தொடங்கி தான் இன்று பெரு வெள்ளமாக காட்சியளிக்கிறது.

    நான் முதன் முதலில் ஒரு தள்ளுவண்டியை வாடகைக்கு வாங்கி 20 கிலோ மீட்டர் தினமும் தள்ளிக் கொண்டே சென்று வியபாரம் செய்து வந்தேன். ஆரம்பத்தில் புதிய கடை என்றால் வாங்க யோசிப்பார்கள், ஆனால் சுவைத்து பழகிவிட்டால் நம்மை விட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்.

    அப்படி நான் வேலை செய்து வருமானத்தில் என்னுடைய 19 ஆம் வயதில் முதன் முதலில் டிவிஏஸ் 50 வண்டியை வாங்கினேன். அதன் பிறகு ஒவ்வொரு தருணத்திலும் ஒரு வளர்ச்சியடைந்து வாகனங்கள் மாறத் தொடங்கின. இப்போது என் தேவைக்கு ஏற்றார் போல் வாகனங்கள் உள்ளது.

    அகில இந்தியா பிஎஸ்என்எல் கருத்தரங்கம் சென்னையில் நடைப் பெற்றது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தார்கள். சுமார் 45 ஆயிரம் பேருக்கு சமைத்தது என் வாழ்க்கையில் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். அரசியல் அரங்கத்திற்கு, விளையாட்டு மைதானத்திற்கு என்று பெரிய  பெரிய ஆர்டர்கள் கிடைத்தது. தற்போதும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.

    கே: விளையாட்டு வீரர்களுக்கு உதவும் மனப்பான்மை எவ்வாறு உண்டாயிற்று?

    சிறிய வயதிலிருந்தே வறுமையின் வாசனையிலேயே வளர்ந்தவன் நான். சின்ன வயதில் ஆசைப்படும் அனைத்தும் அனைவருக்கும் கிடைத்துவிடாது.

    எனக்கு கபாடி விளையாட மிகவும் பிடிக்கும். ஆர்வம் இருந்தும் என்னை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை. கபாடி சீருடை அணிந்து விளையாட வேண்டும் நீண்ட நாள் ஆசையாக இருந்தது ஆனால் இன்று வரை நிறைவேறவில்லை.

    என்னால் தான் முடியவில்லை. என்னைப் போல உள்ளவர்களை இணங்கண்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசை எனக்குள் எப்போதும் உண்டு. இதனால் 12 ஆண்டுகளுகாக தேகக்கம்பட்டி அதைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு இன்று வரை சீருடை வாங்கிக் கொடுத்து வருகிறேன்.

    கபாடிப் போட்டியில் விளையாடும் வீரர்கள் வீராங்கணைகள் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.

    கார்த்திக் மற்றும் மணிகண்டன் இரண்டு மாணவர்களும் அத்தலெடிக் விளையாட்டில் இருக்கிறார்கள். இவர்கள் விளையாடுவதற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறேன். நிச்சயம் இவர்கள் இருவரும் ஒருநாள் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

    இப்படி எத்தனையோ மாணவர்கள் தகுதியிருந்தும் வறுமையின் காரணமாக விளையாட முடியாமல் இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்தளவிற்கு செய்த கொண்டிருக்கிறேன். நீங்களும் செய்யுங்கள், நிச்சயம் அவர்கள் உங்களுக்கு நற்பெயரை வாங்கிக் கொடுப்பார்கள்.

    விளையாட்டுப் போட்டியின் மூலம் நிறைய மாணவர்களை கல்லூரியில்  படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவிகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறேன். தமிழரசன் என்றமாணவன் ரஷ்யாவிற்கு அருகிலுள்ள  ஊரில் அர்மோனியா என்னும்  கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறான்.

    கே: உங்களின் எதிர்கால இலக்கு

    எதிர்காலத்தில் நான் சாதிக்க நிறைய இருக்கிறது. அந்த சாதனைகள் அனைத்தும் பிறருக்கு உதவும் வகையிலே அமைய வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை நோக்கம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும்  என்றால்.

    புதியதாய் ஒரு உணவினைத் தயாரிக்க வேண்டும். அது உணவே மருந்தாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு நோயைக் குணப்படுத்தும் அளவிற்கு மாற்றம் பெற வேண்டும்.

    விளையாட்டு வீரர்களை ஊருவாக்கும் விதமாக ஒரு அறக்கட்டளைத் தொடங்க வேண்டும்.

    தந்தைப் பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார் நிறைய சம்பாதியுங்கள், தாராளமாகப் பிறருக்குக் கொடுங்கள் அவரின் வாக்கிற்கேற்ப நிறைய உதவ வேண்டும்.

    கே: படித்த, பிடித்த மனிதர்கள், புத்தகங்கள்

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் என்று பார்த்தால் தந்தைப் பெரியார் அவர்கள், தன்னலம் கருதாது பொது நலன் வாழ்க்கையில் வாழ்ந்தவர். அடிப்படையில் பெரிய செல்வந்தர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தவர். அவர் எழுதிய அத்துனை புத்தகங்கள் நான் விரும்பி வாசிப்பேன். தந்தைப் பெரியார் அவர்களின் இனிவரும் உலகம். வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர், மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய அர்த்தமற்றஇந்து மதம் என்றபுத்தகம் என் வாழ்வில் பெரிதும் பொக்கிஷமாக பாதுகாக்கும் புத்தகங்களில் ஒன்று. பெரியார் அவர்களின் பிடித்த வாசகம் நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய ஒருவித பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்ப்பது சிறுமை குணமே ஆகும்.

    கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?

    பிறக்கின்றஅனைவரும் சாதனை யாளர்களே, அவர்களின் திறமையை அறியும் வரை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி எளிது

    நேரத்தை சரியாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டும்.

    பாரம்பரிய உணவை மட்டுமே உண்ணுங்கள், இயற்கையான, சத்தான உணவினை உட்கொள்ளுங்கள்

    இரசாயன உணவினை நீங்கள் உண்ணாதீர்கள், மற்றவர்களையும் உண்ண அனுமதிக்காதீர்கள்.

    குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு வகைகளைக் கொடுத்துப் பழகுங்கள்.

    நோய் நொடியில்லாத வாழ்வு மக்களுக்கும் நாட்டுக்கும் தேவை.

    கே: வளரும் தலைமுறைக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?

    வேலைக் கேட்டு விண்ணப்பம் போட்டு அழுக்காமல், நீங்களே மற்றவர்களுக்கு வேலைத்தரும் அளவிற்கு உயர வேண்டும்.

    படிப்பிற்கேற்றவேலை வரட்டும் என்று வாசலைப் பார்த்து எந்தப் பயனும் இல்லை. உன் திறமையை அலங்கரிக்க ஆயிரம் மணிமகுடங்கள் காத்திருக்கிறது.

    பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்தது போதும், அவர்களின் ஆனந்தம் படுத்தப் புறப்படுங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    முன்னொரு காலத்தில் லினோர்டா டிவின்ஸி என்ற புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். அவர் பல சிற்பங்களை செதுக்க ஆரம்பித்து அவற்றை பூர்த்தி செய்யாமல் நடுநடுவே விட்டுவிடுவாராம்.

    அவர் சிற்பத்துறையில் மட்டும் திறமைக் காட்டவில்லை. ஓவியம், பொறியியல் போன்ற துறையிலும் ஈடுபட்டிருந்தார். அவர் செய்து முடித்த வேலைபாடுகள் அனைத்தும் மக்கள் போன்றும் விதமாக ஆச்சரியம் தரும் வகையில் இருந்தது. அதே நேரத்தில் அவர் துவங்கிய சில வேலைப்பாடுகள் இடையில்  முடிக்காதவைகளையே சிந்தித்து ஏமாற்றம்  அடைந்தார்கள்.

    அந்த ஏமாற்றத்தைப் போக்கும் விதமாக மைக்கேல் ஏஞ்சலோ என்ற அழகிய சிற்பத்தை வரைந்து உலக அளவில் மங்காப் புகழைப் பெற்றார்.

    இவரைப் போல தான் நம்மில் பலர், ஒரு சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முற்படுகிறோம். ஒரு வேலை பூர்த்தி ஆகும் முன்னரே மற்றொரு வேலையில் ஈடுபட முன் வருகிறோம்.

    இதனால் முன் தொடங்கிய வேலையும் முடியாமல், புதியதாய் தொடங்கியதிலும் சுணக்கம் கொள்கிறோம். இதனால் தான் தேவையில்லால் பிரச்சனை, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது.

    பல தொழில் செய்வதில் தவறு இல்லை, ஆனால் ஒரு தொழில் தொடங்கினால் அதில் முழு சாதனையும் பெற்ற பின்னர் தான் அடுத்த வேலையைத் தொடங்க வேண்டும். லினோர்டா டிவின்ஸி பல வேலைகள் செய்திருந்தாலும் அவரை உலகத்திற்கு காட்டியது அவரின் முதல் வேலையான சிற்பக் கலை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சாதிப்பு நம்மை வந்தடையும். நாமும் சாதிப்பு பக்கத்தில் ஒருவராய் திகழலாம்…