வாழ நினைத்தால் வாழலாம் -15
மௌனம்
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !
“கோதை ஆண்டாள் – தமிழை ஆண்டாள்” என்று புகழப்பட்ட ஆண்டாளைப்பற்றிய ஒரு கவிஞனின் கருத்து – ஒலித்ததும், எதிரொலித்ததும் இரைச்சலை.
வாதத்திற்கு எழுந்தது எதிர்வாதம். அவை எதிரொலித்ததும் இரைச்சலையே!
பெரிய தலைவனாகப் பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரின் சிலையை பற்றிய ஒருவரின் கருத்தும், கண்ணோட்டமும் – ஒலித்ததும், எதிரொலித்ததும் இரைச்சலையே !
வினைக்கு எதிர்வினை விளைந்தது எதார்த்தம். அவை எதிரொலித்ததும் இரைச்சலையே
சிலையை வைத்தாலும், எடுத்தாலும், புதிதாய் திறந்தாலும் – நம் செவிப்பறைகளை அதிகம் தாக்குவது சினம் கொண்ட சிலரின் சிவப்பான வார்த்தைகளையே!
“மௌனத்தை” மறந்ததால் வந்த விளைவு என்பதே உண்மை.
இன்னொருபுறம், “களம் வேறு ! கண்ணோட்டம் வேறு !
மகாபலிபுரத்து சிலைகள் ஒரு கலைஞனின் கற்பனைக்கு கிடைத்த விலைமதிக்க முடியாத வெகுமதி.
பரத்தின் சிறப்பு மட்டுமல்ல நமது பாரதத்தின் சிறப்புகளையும் சிலையாக பார்க்கும்போது – நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் கண்முன்னே காட்டிய எத்தனையோ சிற்பிகளை பாராட்ட விழைகிறது மனம்.
கோவில்களில் இருக்கும் சிலைகள் – நம்முள் புதைந்து கிடக்கும் பக்தியை வெளிக்கொணரும் வேலையை “மௌனமாக” செய்கிறது. அதனால்தான் ஆலயங்களில் சிலைகள் முன்பு நாமும் சிலையாக “மௌனமாக” நின்று – மனதோடு பேசுகிறோம்.
உண்மையில், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் கற்றுத்தெளிய வேண்டியது “சிலையை மட்டுமல்ல, இன்றைய நம் நிலையை கண்டு நாம் மனனம் செய்ய வேண்டிய பாடம் “மௌனம்” தான் என்பது.
“வார்த்தைகள் செவிகளோடு பேசும் – ஆனால் “மௌனம்” மனதோடு பேசும்”.
வாழ்க்கை பயனத்தில் வெற்றி வாசலை விரைவில் அடைய “மௌனம்” ஒரு அடையாள சீட்டு என்று அறிக.
சமூகம் “படிக்கத்தெரிந்தவர்களைவிட – நடிக்கத்தெரிந்தவர்களையே” நிரம்ப கொண்டிருக்கின்றது.
“மௌனம்” பழகுங்கள்!
உங்கள் திட்டங்களை ஆமோதித்து அறிவுரை சொல்ல – அதிகம் ஆட்கள் இல்லை. “மௌனம்” பழகுங்கள்![hide]
உங்கள் எண்ணங்களை நேர்படுத்த – நிறையப்பேர் இல்லை.“மௌனம்” பழகுங்கள்!
உங்கள் இலட்சியங்களை மெருகேற்ற – நண்பர்கள் குறைவு. “மௌனம்” பழகுங்கள்!
உங்கள் பயணத்தில் பாதைகாட்ட – கைகாட்டிகள் குறைவு. “மௌனம்” பழகுங்கள்!
உங்கள் வெற்றியை மகிழ்ந்து கொண்டாட விருப்பமற்ற, வீணர்கள் கூட்டம் வீதிமுழுவதும். “மௌனம்” பழகுங்கள்!
அவர்களிடம் நீங்கள் வெற்றிக்கான விலாசம் கேட்பது வீண். “மௌனம்” பழகுங்கள்!
“மௌனம்” – ஒரு உயர்ந்த தவம் ! பழகுங்கள்! பழகப்பழக மற்றவர்களின் மனநிலையை படம் போட்டதுபோல் அறிய முடியும்.
“மௌனம்” – ஒரு வலிமையான ஆயுதம் ! பயன்படுத்துங்கள் ! எப்பேர்பட்ட எதிரியையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும். வெற்றிகொள்ளுங்கள்.
“மௌனம்” – ஒரு மாயக்கண்ணாடி ! உங்கள் மேல் அக்கறை உள்ளவர்களை உங்களுக்கு அடியாளம் காட்டும்.
”மௌனம்” – ஒரு ஞானப்பொகிஷம் ! ஏற்றமான வாழ்வை எளிதில் தருவது.
“மௌனம்” – ஆண்டவனால் அளிக்கப்பட அற்புதப் பேழை ! ஆனந்தத்தை அளவின்றி தருவது.
“புரட்சி” தான் பல மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக இருந்திருக்கின்றது. அதிலும், “மௌனப்புரட்சியே” வையகத்தை வெல்வது – என்பதை வரலாறு வழிமொழியும்.
மகாத்மா காந்தி வெள்ளையர்களை ஆயுதங்களால் “வெட்டி விழ வைக்கவில்லை” – மௌனம் கொண்டு “வெட்கி விழ வைத்தார்”
சோதனைக்கு மேல் சோதனை வந்த போதும் “அரிச்சந்திரன்” பொய் பேசாது மௌனம் காத்து நமக்கு உண்மையின் பெருமையை உணர்த்தியதை உலகம் அறியும்.
வெற்றியாளர்கள் அதிகம் பேசுவதில்லை – “மௌனமாகவே” இருப்பார்கள். ஆனால் அவர்களின் சாதனைகள் சத்தமிடும்.
உங்கள் மௌனம் – உங்கள் சாதனைகளை இந்த சபைக்குச் சொல்லட்டும்.
கோவிலுக்கு வந்த பக்தன் ஒருவனுக்கு ஒன்றுமே செய்யாமல் இருக்கும் “சிலைக்கு” கிடைக்கும் மரியாதைகளையும், தீப ஆராதனைகளையும் கண்டு பொறாமை. உடல் வருந்தி உழைக்கும் தனக்கு ஒரு பிடி சோறு கிடைப்பதே அரிதாக இருக்கும்போது, விதவிதமான பழங்களையும், உணவு வகைகளையும் கடவுளின் காலடியில் கொட்டும் மனிதர்களின் மீதும் மாறாத கோபம் கொண்டான். கடவுளாக இருப்பது மிகவும் எளிதான வேலை என்று முடிவெடுத்து உள்ளே சென்று கடவுளிடம் பேச்சு கொடுத்தான்.
“கொஞ்ச நாள் நான் நீயாக இங்கே இருக்காட்டுமா ? என்று கேட்டான்.
“நீண்ட நாட்களாக நின்றுகொண்டே இருப்பதால் எனக்கும் கால்கள் மிகவும் வலிக்கிறது. நீ நல்ல ஒரு யோசனைதான் சொல்லி இருக்கிறாய். நாம் இப்போதே இடம் மாறுவோம்” – என்று கடவுளும் ஒப்புக்கொண்டார்.
ஒரு முக்கியமான விஷயம். கடவுளாக இருப்பது நீ நினைப்பதுபோல் சுலபமான வேலை கிடையாது. மிகுந்த பொறுமை உனக்கு வேண்டும். பலரும் பல கோரிக்கைகளை வைப்பார்கள். அவசரப்பட்டு வரம் ஏதும் தந்துவிடாதே. பின் உனக்கே பிரச்சினை வரலாம். சிலர் காசுக்குபதில் தனது கண்ணீரையும், கவலையையும் உன் காலடியில் காணிக்கை இடுவார்கள். கவலைப்படாதே. அதே நேரம் கோபமும் படாதே. சில நேரங்களில் நேர்மையான பக்தர் சிலரும் வருவதுண்டு. அவர்கள் சிரமங்களை உன்னிடம் புலம்பும்போது உணர்ச்சி வசப்படாதே.
சுருக்கமாக சொல்லப்போனால் நீ கண் இருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் இருக்கப்பழகினால் தான் காலம் கழிக்க முடியும். எனவே, எதற்கும் வாய் திறக்காமல் “மௌனமாக” இரு” – என்று கூறினார்.
மனிதன் குழம்பினான். என்னடா இது. மனிதர்களைவிட கடவுளுக்கு கஷ்டங்கள் அதிகம் இருக்கும்போல தோன்றுகின்றதே. சரி! பார்த்துவிடுவோம் , என்று சவாலுக்குத் தயாரானான். இருவரும் இடம் மாறினார்கள்.
அடுத்தநாள் காலை. ஏழை ஒருவன் வந்து “கடவுளே, என் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறேன். கையில் பணமில்லை. நீதான் ஏதாவது செய்து பணம் கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று கண்ணீர்மல்க வேண்டினான். அந்த பெரிய கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிவர கிளம்பினான்.
அவன்போன அடுத்த நிமிடம் அந்த ஊரின் பெரிய செல்வந்தர் ஒருவர் வந்தார். “கடவுளே, நேற்று எனக்கு நல்ல வியாபாரம். லட்ச ரூபாய்க்குமேல் லாபம். இந்த பணத்தையும் கருப்பு பணமாகவே பூட்டி வைக்க போகிறேன். அந்தப் புதையலை யாரும் தோண்டி எடுக்காமல் நீதான் பாதுகாக்க வேண்டும்” என்றார். பணப்பையை கடவுளின் காலடியில் வைத்து வணங்கி, எழுந்து, ஒரு பெரிய தேங்காயை உடைத்துவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவர கிளம்பினார்.
அவனை தொடர்ந்து திருடன் ஒருவன் வந்தான். “நான் என் திருட்டு தொழிலை விட்டுவிட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க ஏற்பாடு செய் கடவுளே” – என்று வேண்டினான். ஒரு சூடத்தை ஏற்றிவிட்டு பிரகாரத்தை சுற்றாமல் கோவிலைவிட்டு வெளியேறினான்.
பிரகாரத்தை சுற்றிய செல்வந்தரின் மடியிலிருந்து பணக்கட்டு தவறி கீழே விழுந்தது. அதை அவர் கவனிக்கவில்லை. சென்றுவிட்டார். அவருக்குப் பின்னால் வந்த ஏழையின் கண்ணில் அது பட, அதை அவன் எடுத்து “கடவுளே! உன் கருணையே கருணை. என் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்திடுவேன். மிக்க நன்றி! – என்று சொல்லி சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றான்.
இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார் “புதிய கடவுள்”
சிறிதுநேரத்தில் பணக்கட்டு தொலைந்திருப்பதை அறிந்த செல்வந்தர் Police க்கு தகவல் சொல்ல, அவர்கள் சற்றுமுன் கோவிலுக்கு வந்திருந்த திருடனை பிடித்து விசாரித்தனர். அவன் எனக்கு எதுவும் தெரியாது என்று எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக்கொள்ளாமல் அடித்து துன்புறுத்திக் கேட்டார்கள்.
செல்வந்தனின் கவலை, திருடனின் புலம்பல், காவலர்களின் தவறான நடவடிக்கை – காண சகிக்கவில்லை கடவுளுக்கு. ஒப்பந்தத்தை மீறி “மௌனம்” கலைத்தார். அசரீரியாக உள்ளது உள்ளபடி உரைத்தார். திருடன் விடுவிக்கப்பட்டான் – ஏழை கைது செய்யப்பட்டான். பணக்கட்டுடன் செல்வந்தர் சந்தோஷமாக வீடு புறப்பட்டார். மனம் முழுதும் திருப்தியுடன் புதிய கடவுள் வாசலில் இருந்து இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அசல் கடவுளிடம் “எப்படி என் தீர்ப்பு ? என்று கேட்டான்.
கடவுள் கடுங்கோபம் கொண்டு சொன்னார் “மூடனே! மௌனத்தின் மகிமை தெரியாத மடையனே! செல்வந்தரின் கறுப்புப்பணம் களவு போக வேண்டும், அது உண்மையான பக்தியிலும், ஏழ்மையிலும் இருக்கும் பக்தனுக்குப் பயன்பட வேண்டும். இந்த சம்பவத்துக்கு பிறகு மனம் திருந்திவிடும் செல்வந்தர் அந்தத் திருடனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை தர வேண்டும்” என்பதே விதி. அதை நடத்தும் சந்தர்ப்பம்தான் இது என்பதாலேயே 3 பேரையும் இங்கே ஒரே நேரத்தில் வரவைத்தேன். என் வார்த்தையை மீறி “மௌனத்தை” கடைபிடிக்காமல் உளறி – 3 பேருக்கான நன்மையையும் நீ கெடுத்துவிட்டாய். என்று சொல்லி மீண்டும் இடம் மாறினார்கள்.
உண்மைதான் நண்பர்களே.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை. இந்த உலகில் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டளைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்குகின்றது. வலுக்கட்டாயமாக மாற்றங்கள் செய்யும்போது – அதன் பலன் வேறுவிதமாக போகின்றது.
அன்றாட வாழ்வில் கணவனின்/மனைவியின் தனிப்பட்ட குணநலன்கள் சில நேரங்களில் இருவருக்கும் முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கலாம். புரிந்துகொண்டு, விவாதத்தில் இறங்கிவிடாமல் “மௌனமாக” – தேவையற்ற வார்த்தைகளை அள்ளி வீசாமல் ஆலோசித்து பேசும்போது நன்மை விளைக்கும். குடும்ப அமைதி விளங்கும். மகிழ்ச்சி நிலைக்கும்.
அலுவலகத்தில் மேலதிகாரியின் பதவிக்கான மிடுக்காக உங்களிடம் கோபமாக பேசலாம். உங்களது பதில் அவர் கோபத்தை தூண்டலாம். இறுதியில், வேலை இழக்கும் சூழல் வந்தால், நட்டம் உங்களுக்குத்தான். உங்கள் ஞாயத்தை கோபமாக, வாக்குவாதமாக வெளிப்படுத்தாமல் “மௌனம்” கொள்க. புன்னகையுடன் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று அவருடனேயே விவாதிக்க – அவர் உங்களை புரிந்துகொண்டுவிட – சிக்கல் தீர்ந்தது.
அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் எத்தனையோ நபர்களும், நிகழ்வுகளும் உங்கள் தன்மானத்தை, அறிவை, வயதை, அனுபவத்தை சீண்டிப் பார்ப்பதாக அமையலாம். உணர்ச்சிக்கொந்தளிப்பில் நீங்கள் சொல்லாகவும், செயலாகவும் ஆற்றும் எதிர்வினை பல நேரங்களில் பாதாளத்தில் தான் தள்ளிவிடும்.
“மௌனம்” கொள்க. எதார்த்தத்தை உணர முயற்சி செய்யுங்கள். விளைவுகளை, பக்க விளைவுகளை, பின் விளைவுகளை சீர்தூக்கி பார்க்க, என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். விலகிவிடுவதே சிறந்தது என்று நீங்கள் முடிவெடுத்தால்கூட “மௌனமாக” அதைச் செய்யுங்கள். ஆத்திரமும் ஆவேசமும் வேண்டாம். ஏனென்றால், ஒருவேளை, பின்னாளில் நாம் செய்தது தவறு என்று யார் மனதில் தோன்றினாலும் – மற்றவரை தயக்கம் இல்லாமல் தொடர்புகொண்டு பேச எதுவாக இருப்பது “மௌனம்” தான். விரிசல் விழுந்த நட்பும், உறுதியோடு நல்ல முறையில் வளர, தொடர “மௌனம்” முதல் புள்ளியாய் இருக்கும்.
“மௌனம்” என்பது பேசாமலே இருப்பது அல்ல. “தேவையில்லா நேரத்தில், தேவையில்லா விதத்தில், தேவையில்லா விஷயங்களை பேசாமல் இருப்பதே”.
ஆன்மீகமும் “மௌனத்தை” தான் முன்மொழிகிறது. அது மௌனத்தை “மனத்தின் மொழி” என்கிறது. மௌனத்தை கடைபிடிக்கும்போது உங்கள் மனம் அமைதி நிலைக்கு திரும்புகின்றது. அறிவு வேலை செய்ய துவங்குகின்றது. மூளை செல்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றது. சிந்திக்கும் திறன் கூடுகின்றது. சீர்தூக்கி பார்க்கும் பொறுமையும், திறமையும் உங்களுக்குள் உற்பத்தியாகின்றது. எது சரி என்று துல்லியமாக முடிவெடுக்க முடிகிறது.
அர்த்தமில்லாமல், அளவில்லாமல் பேசும் மனிதர்களை சமூகம் பெரிதாக மதிப்பதில்லை. அளந்து பேசுகிறவனை அறிஞன் என்று உடனே ஒப்புக்கொண்டு விடுகிறது. எனவே நீங்கள் “மௌனத்தை” கேடயமாக கொண்டு – அளந்து பேசுங்கள். ஆராய்ந்து பேசுங்கள். இனி உங்கள் சபை -அறிஞர்கள் கூடம் சபையாக இருக்கட்டும். அறிவாளிகளின் மண்டபத்தில் நீங்கள் “அரியாசனத்தில்” உங்கள் “மௌனம்” “சரியாசனத்தில்”
இந்த நிமிடம் முதல் “மௌனம் கலைகிறது மயக்கம் வருகிறது” என்று சொல்லும் குறைந்த அறிவு கொண்ட மானிடர்களில் இருந்து விலகிடும் நேரம் – என்று உணருங்கள்.
மௌனத்தில் விளையாடும் மனசாட்சி தான் உங்களுக்குள் ஆயிரம் நினைவாகி, ஆனந்த கனவாகி – வாழ்வில் வெற்றி பெற வைக்கும்.
காதலில் கூட “மௌனம்” தான் சிறந்தது என்கிறார் கவியரசர்.
“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி –
பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி”என்று மௌனத்தை கடவுளின் சந்நிதி என்று உயர்வாய் வைக்கிறார்.
அன்பை வெளிப்படுத்துவதிலும் “மௌனத்தின்” மகத்துவம் பெரிதே.
“ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன? என்று வரிசையாக கேட்கப்பட்ட கேள்விகளில் முத்தாய்ப்பான பதில் “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அந்த பெண்மையின் நிலை “மௌனம்” என்று பகிர்வதே. “மௌனமே பார்வையை ஒரு பாட்டு பாட வேண்டும்” என்று சொல்லி வார்த்தைகளே இல்லாத பாடல்களையும் “மௌனத்தால்” பாட முடியும், அதை மனதால் தான் அறியமுடியும் என்கிறார்.
“மௌனம்” என்பது அந்த அளவுக்கு உயர்ந்த குணங்களில் ஒன்று. மனித பிறப்பில் “காதல் தொடங்கி கடவுள் வரை” மௌனம் மௌனமாக சத்தமிடுகிறது என்பது மௌனத்திற்கும், மனித வாழ்வுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை.
பெருமை கொள்வீர் !
“மௌனம்” என் இருப்பு என்று பெருமை கொள்வீர் !
“மௌனம்” என் சிறப்பு என்று பெருமை கொள்வீர் !
“மௌனம்” என் மனத்தின் மகுடம் பெருமை கொள்வீர் !
கொண்டால் – உங்கள் நாளும் சிறக்கும் ! வாழ்வும் செழிக்கும் !
அனைத்துக்கும் மேலே ,
“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”
“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles