– 2019 – February | தன்னம்பிக்கை

Home » 2019 » February (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஆஸ்த்துமா

    ஆஸ்த்துமா நுரையீரல்களை பாதிக்கக்கூடிய ஒரு நோய். குழந்தைகளைப் அதிகம் பாதிக்கக்கூடிய நோய். இதனால் அடிக்கடி இளைப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்புக்கூட்டில் ஓர் இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்துமா இருந்தாலும் ஒவ்வாமை ஏற்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருந்தால் குழந்தைக்கு இந்நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனினும் ஆஸ்த்துமா வருவதற்கு என்ன முக்கியக் காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை.

    அதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். கட்டுப்பாட்டில் இருக்கும் போது இளைப்பு, மூச்சுத் திணறல் வராமல் இருக்கும், நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்குச் செல்வதோ விளையாடுவதோ தடைபடுவதில்லை.

    ஆஸ்த்துமாவை கண்டறியும் வழிகள்

    ஆஸ்த்துமாவை கண்டறிவது மிகக் கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவது இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்குச் செல்லும் போது மருத்துவர் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வைத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள்.

    பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுத்திணறல் இருக்கிறதா? வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருக்கிறதா? மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக குழந்தையால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்துமா மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன், மருந்து எடுத்துக் கொண்டதன் பின் கணக்கிட்டுப் பார்க்கப்படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்துமாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் செல்கிறது. ஆஸ்த்துமா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முடியாமல் தடைபடுகிறது. அதிக மியூக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இளைப்பில் முடியும். சில சமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சுக் குழாய்களை விரிவடையச் செய்ய முடியாவிட்டால் உயிரிழக்கவும் நேரிடும்.

    ஆஸ்த்துமாவை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது?

    மருத்துவர் தரும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சுற்றுப்புறத்தில் உள்ள மாசினைத் தவிர்க்க, கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல் அல்லது வீட்டுச் சன்னல்களைத் திறந்து வைத்தல் போன்றவற்றைச் செய்யவும். ஆஸ்த்துமாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து  இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சுக் குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றிக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

    ஆஸ்த்துமா வரக்காரணங்கள்

    சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும்.

    தூசி

    தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் இவற்றைத் துவைத்து உபயோகிக்க வேண்டும். அதே போல வீட்டு மிருகங்களுடன் விளையாடுதல் மற்றும் ரோமம் உள்ள விளையாட்டுப் பொம்மைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு வெளியே காற்றில் உள்ள மாசு, சில நிறுவனங்கள் வெளியேற்றும் புகை, கார் போன்ற வாகனங்கள் வெளிவிடும் புகை போன்றவை ஆஸ்த்துமா உள்ளவர்களுக்கு ஆபத்தை வரவழைக்கக் கூடும்.

    கரப்பான் பூச்சிகள் அடைசல் அதிகம் இருக்கும் இடத்தில் நிறைய இருக்கும். இவற்றைக் கொல்லப் பயன்படுத்தும் மருந்தின் வீரியம் ஆஸ்த்துமாவை வரவழைக்ககூடியது. அதனால் வீட்டில் நீர் தேங்கி இருக்கும் இடங்களைச் சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம்.

    செல்லப் பிராணிகள் பூனை, நாய் போன்றவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடியுள்ள செல்லப் பிராணிகளைப் படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள்.

    பாசி

    பாசி, மோல்ட் இவற்றை சுவாசிப்பதன் மூலம் அதிக ஆஸ்த்துமா விளைவுகள் நேரலாம். வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் இ அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியம்.

    ஆஸ்த்துமா நோய் அறிகுறி

    வருடம் 1900-இல் ஆஸ்த்துமா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பெருவாரியான குழந்தைகளை பாதிக்கும் நோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாய் இந்நோய் உலகளவில் மக்களைப் பாதித்திருக்கிறது. ஆஸ்த்துமா நோய் கொண்ட தாயோ அல்லது தகப்பனோ, ஒரு குழந்தை ஆஸ்த்துமா நோய் அடைவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றிருந்தாலும், புள்ளிவிவரங்கள் மூலம், வம்சாவழி மரபை விட சுற்றுப்புறச் சூழலும், வளரும் வாழ்க்கை முறையும்தான் மிக அதிகமாய் ஆஸ்த்துமா நோய்க்கு காரணமாய் இருப்பதாய் தெரிகிறது. எனினும் எந்தெந்த அம்சங்கள் ஆஸ்த்துமா நோய்க்குக் காரணமாய் இருக்கின்றன என நுண்மையாக இன்னும் தெரியவில்லை. தற்போதைய குழந்தைகள் முந்தைய காலத்தவர்களை விட அதிகமாய் வீட்டுக்குள்ளும், கட்டிடத்துக்குள்ளும் நேரத்தை செலவிடுவதும், வெளிப்புற விளையாட்டை புறக்கணிப்பதும் இவ்வகை ஒவ்வாமை ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

    இப்படி நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடப்பதால், இவர்கள் மிக அதிகமாய் வீட்டில் இருக்கக்கூடிய அலர்ஜி சம்பத்தப்பட்டவைகளினால் (தூசிகளில் வளரும் பூச்சிகள், எலி, கரப்பான் போன்றவைகள் உட்பட) பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஓரு முக்கியமான கருத்தின் படி, மேலை நாடுகளின் குழந்தைகளின் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளின் தடுப்புச்சக்தி,  வளரும் நாடுகளின் குழந்தைகளின் தடுப்புச்சக்தியை விட குறைந்ததாய் இருக்கிறது. எனவே, இவர்கள் மிக எளிதாக ஆஸ்த்துமா நோய்க்கும், வேறு சில அலர்ஜி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் (Hay Fever and Eczema) ஆளாகி விடுகிறார்கள்.

    அநேகமாக, பாதி ஆஸ்த்துமா நோய்க்காரர்கள் அலர்ஜி (குடும்ப வம்சாவழி சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடியது) மூலமாக ஆஸ்த்மா நோய் அடைந்திருக்கிறார்கள்.

    இரசாயனத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர் களிடம், அந்த இரசாயனப் பொருட்களின் மூலமாகக் கூட ஆஸ்த்துமா ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலுள்ள தொற்றுநோய் கிருமிகளிலிருந்தும், உடற்பயிற்சி, குளிர்காற்று, உணர்ச்சி கொந்தளிப்பு மற்றும் ஓசோன் போன்ற இரசாயனப் பொருட்களும் ஆஸ்த்துமா நோயைத் அதிகப்படுத்துபவையாக இருக்கின்றன.

    இருந்த போதிலும், வெளிக்காற்றின் கிருமிகள் ஆஸ்த்துமா நோய் உருவாகக் காரணம் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. புகை பிடிப்பது ஆஸ்த்துமா நோயை அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது, பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்த்துமா நோய் வருவதற்கு வாய்ப்பினை அதிகப்படுத்துகிறது. உடல் குண்டாக இருப்பது கூட ஆஸ்த்துமா நோயுடன் சம்பந்தப்பட்டது தான்.

    இப்படி மிக ஏராளமான காரணங்களும், விவரங் களுடனும் ஆஸ்த்துமா நோய் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுவரை இதன் முழுத்தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்த போதிலும், ஸ்டீராய்டு சுவாசித்தல் போன்ற ஒருசில மருந்துகள் சில புதிய மருத்துவ முறை களையும் சரியாகவும், தொடர்ந்தும் உபயோகப் படுத்தினால், ஆஸ்த்துமா நோய் மூலமான பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

    ஆஸ்த்துமா நோய் உள்ள குழந்தைகள் தவிர்க்க வேண்டியவை

    • பஞ்சு மெத்தை, தலையணை
    • கொசுவர்த்திச் சுருள், ஊதுபத்தி, சாம்பிராணி புகை
    • புகை மற்றும் புகைபிடிப்பவர்கள்
    • நீண்ட நாள் நோயுற்றவர்கள்
    • போக்குவரத்தின் மூலம் ஏற்படும் தூசு, புகை
    • வீட்டுப் பிராணிகள்
    • குறிப்பிட்ட பொம்மைகள்

    இந்த இதழை மேலும்

    எல்லோரும் மதிக்கும் தலைவராக மாறுவது எப்படி?

    உங்களின் கீழ் ஆயிரம் பேர் பணி செய்கிறார்கள் என்றால் எத்தனை பேர் உங்களை நேசிக்கிறார்கள்? எத்தனை பேர் உங்களைக் கடவுளாக மதிக்கிறார்கள்? எத்தனை பேர் உங்களை  வெறுக்கிறார்கள் ? என்று கணக்கிட்டு பார்த்தால் விடை ஆச்சரியமாகவும் இருக்கும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.

    உங்களின் மிகப் பெரிய சொத்து, உங்களுடைய  சம்பாதிக்கும் திறமையாகும், உங்களின் மிகப்பெரும் ஆதாரம் உங்களுடைய நேரம் ஆகும். உங்களின் மிகப்பெரிய  பாதுகாப்பு உங்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு,  இந்த ஒத்துழைபைப் பெறுவதற்காக நீங்கள் மிகப்பெரிய பரிசைக் கொடுத்தாக வேண்டும், நிபந்தனையற்ற அன்பு  மற்றும்  பாரட்டுதல்கள்  ஆகிய  இரண்டும் தான்   உங்களால் அவர்களுக்குக் கொடுக்க முடிந்த மிகப்பெரிய பரிசாகும்.

    நீங்கள் நிறுவனத்தை எப்படி  தொடங்கினீர்கள் என்பது முக்கியமல்ல, எதை நோக்கி கொண்டு  செல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம், உங்கள் நிறுவனத்தில் அடிப்படைக் கொள்கைகளோடும், நம்பிக்கைகளோடும், மனதளவில் ஒத்துப்போகிறவர்களை மட்டுமே நீங்கள் பணியில் அமர்த்த வேண்டும், இதனால் சாதாரணத் திறமைசாலிகளும், அசாதாரணத் திறமைகளோடு சாதனைகளைச் செய்கிறார்கள்.

    நீங்கள் மனிதர்களைப் புரிந்து கொள்வதில் திறமைசாலிகளாக இருக்க  வேண்டும். பலவீனங்களை அடக்கி, பலங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும், எல்லோரும் மதிக்கும் தலைவராக நீங்கள் மாற வேண்டும் என்றால்  கீழ்க்காணும் அம்சங்களை வளர்த்துக் கொண்டாக வேண்டும்.

    1) குறைகளைச் சொல்லும் முன் மனம் திறந்து பாராட்ட வேண்டும்

    பாராட்டுகள்  நேர்மையானதாக  இருக்கட்டும்,  ஒரு  நிறுவனத்தின் தலைவர்  ஒரு நாள்  தன் கீழ் பணிபுரியும்  தனி உதவியாளரைப்  பார்த்து,  “உங்கள்  உடையலங்காரம் இன்று மிகவும் அழகாக இருக்கிறது,  இன்று ஒரு   New look உங்களிடம்  தென்படுகிறது ”  என்று பாராட்டினார்,  இதைக் கேட்டவுடன் அந்த  தனி உதவியாளருக்கு  இனம் புரியாத மகிழ்ச்சி,  அந்த நிறுவனத்தின் தலைவர்  அடுத்து ஒன்றைச் சொன்னார்,  “இதே போல ஒவ்வொரு நாளும் நீங்கள்  ‘  மிடுக்காக  ’   வர வேண்டும், அதே போல நேரம் தவறாமையும் கவனமாக  கடைபிடிக்க வேண்டும்”  என்று நாசூக்காக சுட்டிக் காட்டினார், அந்த தனி உதவியாளருக்கு காலம் தாழ்த்தி வரும் குணம்  உண்டு, அதைச்  சுட்டிக் காட்டி அவர் திருத்தினார், இது தலைவருக்கு வேண்டிய முதல் பண்பு,உங்களுக்குக்  கீழ் பணிபுரிபவர்கள் தவறு செய்வது இயல்பானது,  அந்தத் தவறுகளை   குறிப்பிடும் போது மறைமுகமாக அவர்களைக் காயப்படுத்தாமல்   சொல்ல  வேண்டும்,  நீங்கள் சொல்லுகிற விதம்,  நீங்கள்  பயன்படுத்தும் வார்த்தைகள் இதமாக இருக்க வேண்டும், “ நாம் செய்தது தவறுதான்” என்று அவர்கள்  உணர்ந்து தலைகுனிய  வேண்டும்,  காயப்படுத்தாமல்  சுட்டிக் காட்டினால் உங்கள் மேல் அவர்களுக்கு  வருத்தமும், கோபமும்  வராது, உங்களின்  மேல் ஒரு மரியாதை கலந்த அன்பு ஏற்படும்,

    2) நீங்கள் செய்த  தவறுகளை கோடிட்டுக் காட்ட வேண்டும்.

    உங்கள் கீழ் உள்ள அதிகாரிகள்   செய்கின்ற  தவற்றை   குறிப்பிடும்  போது நீங்கள் ஆரம்ப காலத்தில்  இது போல்   செய்த தவறு ஒன்றை  விளக்குங்கள், “உங்களைப் போல  இதே துறையில் நான் இருக்கிற போது இந்த தவறை  இது போல செய்து விட்டேன்,  என் மேல் அதிகாரி  அதை குறிப்பிட்டுச் சொன்ன போது என் தவறை ஒப்புக்கொண்டேன்,  திருத்திக்கொண்டேன் ,  இதோ பாருங்கள்  இப்போது இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறீர்கள்,   இது மிகப் பெரிய இழப்புக்கு   காரணமாகி விடும்,   உங்களைப் போன்ற திறமைசாலிகளினால்  நிறுவனத்திற்கு  நல்ல பெயரும், பெருமையும் வர வேண்டுமே தவிர  இழப்புக்கள் வரக்கூடாது,   திருத்திக் கொள்வது அவசியம் ” என்று சொல்லிப் பாருங்கள், அதிசயம் நடக்கும்.

    3) உத்தரவிடும் முன்பு கேள்வி கேட்டு பதிலைப் பெற வேண்டும்.

    உங்கள் கீழ்  பணிபுரிபவர்களுக்கு  நீங்கள் ‘  இதைச் செய்யுங்கள்  ’  என்று ஒரு வேலை சொல்வதற்கு முன் அது பற்றி   சிறு சிறு கேள்விகள் கேளுங்கள், தொடர் சங்கிலி போல கேள்விகள் இருக்கட்டும்,   இறுதியான கேள்வியாக “  நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ   அதற்குரிய கேள்விகளை கேளுங்கள்  ” .  அதற்கேற்ற பதில் கிடைத்தவுடன்   “  இதுதான் ! இதுதான்!  எனக்கு வேண்டும், அதைச் செய்து  முடியுங்கள்”   என்று சொல்லுங்கள்,    அந்த உத்தரவுக்கான காரண, காரியங்களை அவர்  எளிதாக புரிந்து கொள்வார் ,  வேலை எளிதாக முடியும்,   எதிர் பார்க்கும்  நேரத்திற்கு  முன்பே காரியம் நடைபெறும்,

    4)  பணியாளர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்த வேண்டாம்

    உங்கள் கீழ் உள்ளவர்  செய்யும்  பணி  நீங்கள்  எதிர்பார்த்த அளவு  திருப்திகரமாக  இல்லை  என்ற  நிலையில், அவரை அழைத்து,  உங்களுக்குத் திறமை இல்லை என்று  முகத்தில் அடித்தாற்போல் சொல்லி, அவருடைய மனதை, காயப்படுத்தி, பணியிறக்கம் செய்ய வேண்டாம்,  அதனால்  அவருக்கு   அவமானமும், தலைக்குனிவும்  ஏற்படும், அவருடைய   குறை வெளியே தெரியாமல்   அவரை வேறு துறைக்கு மாறுதல் செய்யுங்கள்,  அவருக்கு  சகப் பணியாளர்களிடம்  தகுந்த மரியாதை இருக்கும்,   அவருக்கு  மனக்குறைவு ஏற்படாது. அதன் பின்னர் அவரது பணியில்  நிறைவு ஏற்படும்.

    5) பணியில் சிறு முன்னேற்றமிருந்தாலும் பாராட்ட வேண்டும்.

    நீங்கள் உங்கள் பணியாளர்களிடம் 100 சதவீதம்  பணிச் சிறப்பை எதிர்பார்கிறீர்கள் , நீங்கள் எதிர்பார்த்ததில் 10 சதவீதம் தான் அவரால் செய்ய முடிந்தது,  அந்த 10 சதவீத முன்னேற்றத்திற்கும் மனம் திறந்து பாராட்டுங்கள்,  இவ்வாறு ஒவ்வொரு 10 சதவீதத்திற்கும்  பாராட்டும் போது நீங்கள் எதிர்பார்த்த 100 சதவீதத்திற்கு பதிலாக மும்மடங்கு அதிமான பலன் கிடைக்கும்.

    6)  பணியில் சிறந்தவர்க்கு  பதவி  உயர்வு அளிக்க  வேண்டும்.

    ஒருவர் நீங்கள்  எதிர்பார்க்கும்  அளவுக்கு மேல்  சிறப்பாக  செயல்பட்டால் அவருக்கு பதவி உயர்வு அளித்து  பக்கத்திலே வைத்துக் கொள்ளுங்கள்,  திறமைக்கு பாராட்டு  மட்டும்  இல்லாமல் பரிசாக பதவி உயர்வும் அமையட்டும்,  மற்றவர்களுக்கு இது ஊக்கம் தருவதாக இருக்கட்டும்,  நாமும் இதே போல பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக தன் வேலையை முனைப்புடன் செய்ய முற்படுவார்கள். இந்த பதவி உயர்வு  அவர்களின் வாழ்க்கை உயர்வுக்கும் பரிசாக அமையட்டும்.

    7) ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்த வேண்டும்

    ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தும் போது, அவருக்கு உற்சாகம் அதிகமாகிறது, செய்கிற பணியின் மீது ஒரு விருப்பம்  உண்டாகிறது,  விருப்பம்  உண்டாகிற போது பணி வேகமாக முடிக்கப்படுகிறது, காலவிரையம்   தவிர்க்கப்படுகிறது,  காரிங்கள் கச்சிதமாக எதிர்பார்த்தப்படி முடிக்க முடிகிறது, ஊக்கப்படுத்தும் வார்த்தைகள், உற்சாகமூட்டும் பாராட்டுகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது, புதிய வேகத்தையும் தருகிறது,  தாங்கள் செய்த தவறுகள் மிக எளிதாக சரிசெய்யப்படும் என்ற  உத்திரவாதம்  அவர்களிடமிருந்து கிடைக்கிறது.

    இதற்கு உதாரணமாக உடுமலைப்பேட்டையைச் சார்ந்த எனது மனதிற்கினிய நண்பர்  பி. பாலநாகமாணிக்கம் அவர்களைச் சொல்ல வேண்டும்,  என் கல்லூரி நண்பர்.  தொடர்ந்து 50 ஆண்டுகளாக என்றும் நெருக்கமான நட்புக்குரியவர்,  இவர் என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு மிகப் பெருமையும், கௌரவமும் உண்டு,    ASG & SONS  என்ற  ஒரு நிறுவனத்தினுடைய தலைவராக இருக்கிறார். 100 ஆண்டு கால பராம்பரியமிக்க நிறுவனம், இவர் குடும்பத்திற்கு மூத்த மகன்    தம்பிகளோடு கூட்டாகத் தொழில் செய்கிறார். அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், பணியாளர்களினுடைய  நலனில் அக்கறை, எதையும் ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு, சிரித்த  முகம், கனிவான பார்வை,    உன்னதமான குணம், நேர்மையான நிதி நிர்வாகம், பாரபட்சமில்லாத பொறுப்புகள்  ஆகிய குணங்கள் இவரை உச்சத்திலே வைத்திருக்கின்றன,  தொழிலில் அக்கறையும்,அர்ப்பணிப்பும் கொண்டவர்.

    இந்தக் காலத்தில் ஒரு கூட்டுக்குடும்பத்தை தலைமையேற்று ஒற்றுமையாக நடத்துவது என்பது நடக்காத காரியம், நடக்காத காரியத்தை நடத்திக்காட்டிய திறமைசாலி இவர், நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரர்,இவருடைய உயர்ந்த குணங்களின் காரணமாக உடுமலைப்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்,  எஸ் கே பி மேல்நிலைப்பள்ளியினுடைய செயலராகவும்  14 ஆண்டுகள்  இருந்து உள்ளார்,   கன்னிகா பரமேஷ்வரி அம்மன் கோயில் நிர்வாக அறங்காவலராக 19 ஆண்டுகள் இருந்து உள்ளார்,  தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணைத் தலைவராகவும் உள்ளார்,  எல்லோரும் இவரை மதிக்கிற அளவு, தன்கீழ் பணிபுரியும் பணியாளர்களை மதித்து, அரவணைத்து, வேண்டுவன கொடுத்து, அவர்களின் நலன்களிலே பங்கு பெற்று, பங்குதாரர்களையும், பணியாளர்களையும் ஊக்கப்படுத்தி  அதனால் முன்னேறிக் கொண்டிருப்பவர், இவரிடம் பணிக்குச் சேர்ந்தவர்கள்  ஓய்வு பெறும்வரை  இவருடனேயே  ஒட்டி வாழ்கிறார்கள்  ,  இவர் தருகிற ஊக்கம்தான் நிறுவனத்தை உயர்த்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல,  நகைச்சுவை உணர்வு மளல்க்கவர்,  நல்லவர், வல்லவர், சேவை மனப்பான்மை கொண்டவர்,  நண்பர்களோடு பொழுது போக்குவது இவருக்கு  பிடித்தமான ஒன்று, இவரைப் போல நண்பர்கள் கிடைப்பது அரிது , நண்பர்களுக்கு ஓடி ஓடி உதவுகிற  உத்தமமான குணமும் உண்டு, நண்பர்களின் மீது இனம் புரியாத பாசம்  கொண்டவர்,  சுயகட்டுப்பாடும் அனுசரிப்பும்தான்  இவருடைய வெற்றிக்கு ஆயுதங்கள்,  இவர் மனதைப் போன்றே இவர் வளர்ச்சியும் இருக்கிறது.

    8) ஒவ்வொரு பணியாளருக்கும் ஊக்கப்பரிசு தர வேண்டும்  அது  உற்சாகத்தை  ஊட்டும்

    கோவை,  கண்ணன் டிப்பார்மெண்ட்   ஸ்டோரினுடைய    நிறுவனத் தலைவர்   திரு. தனுஷ்கரன் அவர்கள்  தங்கள் நிறுவன   ஆண்டு விழாவிற்கு  என்னை முதன்மை விருந்தினராக அழைத்திருந்தார் , விழாவின் இறுதியில் தன் கீழ் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும் சுமார்  ரூபாய் 10/000-த்திலிருந்து  ரூபாய் 20/000 – வரை  பெறுமானமுள்ள  பரிசுப் பொருட்களைத் தந்தார்,   அந்த ஒரு நாள் மட்டும் பணியாளருக்கு  பரிசுப் பொருளாகத் தந்த தொகை ரூபாய்  30 லட்சத்திற்கு மேல் இருக்கும்,  இது எனக்கும் உடன்வந்தவர்களுக்கும் அளவு கடந்த  ஆச்சரியத்தை உண்டாக்கியது,

    அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு  பணியாளர்களுடைய   குடும்ப விழாவிலும் கலந்து கொண்டு அவர்களை  கௌரவிக்கிறார்,  இதனால்தான் அவருக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள்  அவரை தெய்வமாகக் மதிக்கிறார்கள், அன்போடும், ஆர்வத்தோடும், மிகுந்த ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும், நேசித்து பணி புரிகிறார்கள்,  நிறுவனம்  அமோக வளர்ச்சியடைகிறது.

    9) மற்றவர்களை குறை காணாது இருத்தல் வேண்டும்.

    ஒரு பிறவி ஓவியன், மிகவும் பிரபலமான ஓவியர் ஒருவரிடம் ஓவியத்தின்

    நுட்பங்களைத் தெரிந்து கொள்ளச் சென்றான் , அந்த குருவிற்கு, அந்த புதிய  சிஷ்யனின்    கை அசைவுகளையும், கலைத் திறமைகளையும்  கண்டு பொறாமைப்பட்டார், அது சரியில்லை. இது சரியில்லை என்று எல்லா நேரமும் குறை சொல்லிக் கொண்டிருந்தார்.

    ஒரு முறை தங்க மீனை வரையும் பயிற்சியில் அவன் தத்ரூபமான  ஒரு தங்க மீனை வரைந்திருந்தான்.“ இது சரியில்லை “ என்று அந்த குரு, அந்த ஒவியத்தைத் தூக்கி தண்ணீரில் எறிந்தார், அந்த ஒவியத்திலிருந்த தங்க மீன் அதிலிருந்து நீந்தி தண்ணீருக்குள் சென்று விட்டது, குரு அதிர்ந்து போனார்,  குருவிற்கு குறை சொல்லிகுறை சொல்லியே பழக்கம்,  குருவிற்கு  பாராட்டும் மனமில்லை, ஓவியனே  தன் திறமையை மேம்படுத்திக் கொண்டான்.

    அதைப்போல குறை சொல்லாமல் இருங்கள், குறை இருந்தாலும் மனம் கோணாமல் சுட்டிக் காட்டுங்கள்,   தவறுகளைப் பாராட்டித் திருத்துங்கள்.

    எல்லோரையும் மதியுங்கள், எல்லோரும்  உங்களை மதிப்பார்கள்.

    குறை சொல்லும் குணம் காயப்படுத்தும்

    நிறை காணும் குணம் மகிழ்ச்சிப்படுத்தும்

    முறையான பாராட்டும் குணம் ஊக்கப்படுத்தும்

    கறையில்லாத மனம்  வாழ்வை மேன்மைப்படுத்தும்

    ஊக்கமும் உற்சாகமும் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

    இந்த இதழை மேலும்

    முயற்சியை முதன்மைப்படுத்து

    வாழ்க்கை என்பது ஒரு பயணம். கடவுளின் படைப்புகளில் எல்லோரும் சமம்.  நாம் வாழ்வதற்குரிய அனைத்து வசதிகளும் அதனை அடையும் வழிமுறைகளும் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. ஒரு திரைப்பாடலில் கூறியது போல  பூப்பறிக்க கோடரி எதற்கு.

    ஒரு அறையில் தேநீர் தயாரிப்பதற்கு தேவையான அனைத்தையும் வைத்துவிட்டு மூன்று தாய்மார்களை உள்ளே அனுப்பி அவர்களை தேநீர் தயாரிக்கச் சொன்னால், மூவரின் தேநீரும் மூன்று விதமாக இருக்கும். அதுபோல எல்லோருடைய வாழ்க்கையிலும் எல்லாமே இருந்தாலும் அவர்கள் எந்தளவில் எந்த விசயங்களில் முயற்சி செய்கிறார்களோ அதற்கேற்ப பலன்களைப் பெறுகின்றனர்.

    வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா விசயங்களையும் வரிசைப்படுத்தினால், வரிசையில் முதலில் நிறுத்த வேண்டியது தன்னம்பிக்கை என்ற சொல்லோடு முயற்சியையும் தான். அவ்வாறு முயற்சியை முன்நிறுத்தினால் பணமும், புகழும், அமைதியும் பின்னே வரும். இதைப் புரியாமல் மனித இனம் எதன் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது.

    சுய ஆய்வு செய்து கொள்ளுதல்

    இன்று மாணவனாக இருக்கும் நீ நாளை முன்னுக்கு வர வேண்டும் என்றால் சுய ஆய்வு செய்.

    ஒரு மாணவி உலகளவிலங டென்னிஸ் வீராங்கனைகளான செரினா வில்லியம்ஸ், சானியா மிர்சா போன்றவர்களைப் பார்க்கிறாள். நாமும் அதுபோல விளையாட்டுத்துறையில் புகழ்பெற வேண்டும் என்று பள்ளியில் ஓட்டப்பந்தியத்தில் பங்கு கொள்ள விரும்பி அதற்கான பயிற்சியை தினமும் காலையில், மாலையிலும் மேற்கொள்கிறாள். தூரத்தைக் கடக்கும் நேரத்தைப் பார்க்கிறாள்.மீண்டும்  அதிவேக மெடுத்து ஓட்டப் போட்டிற்காக பயிற்சி செய்கிறாள். வேகம் எடுக்க, வேகம் எடுக்க அவள் விலா எலும்புக்கு இடையில் வலிவருகிறது. முதல் முயற்சி  தோல்வியடைகிறது.

    அடுத்து அவள் பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள தயார்படுத்திக் கொண்டு அனைவரின் முன்னால் பேசுகிறாள். அனால் அப்போட்டியில் அவளுக்குத் தோல்வி.  மற்றவர்கள் ஏற்ற இறக்கத்துடன் பலவித புதிய எடுத்துக்காட்டுக்களைச் சொல்லி கைத்தட்டல்களுடன் பரிசைத் தட்டிச் சென்றார். தோல்வியிலிருந்து ஏன் தோன்றோம் என்பதையும், எதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்கிறாள்.

    அடுத்த முறை பள்ளியில் நடக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்கிறாள். அவனை விட மற்றவர்கள் கையொப்பமும், விளக்கமும் நன்றாக இருந்ததால் இவள் இவ்விடத்தை பிடிக்கமுடியவில்லை, மீண்டும் தோல்வி.

    அடுத்ததாக ஒவியப் போட்டியில் கலந்து கொள்கிறாள் இரண்டாம் பரிசை தட்டிச் சொன்றாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. அவளிடடம் கற்பனைத்திறனும், கலையுணர்வும் இருக்கிறது. ஓவியத்தில் மேலும் ஆர்வம் கொண்டு வரையப் பழகினாள் ஆனாலும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இருந்தாலும் தனக்கு ஊக்கம் கிடைத்து விட்டதை உணர்கிறாள்.

    அடுத்தாக தேதிய மாணவ படையில் சேர்கிறாள். அங்கே அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி. இறுதியாக துப்பாக்கிச் சுடும் போட்டியில் அவள் பங்கேற்கும் முன் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலை கவனமாகப் பின்பற்றுகிறாள். அவள் பள்ளி அளவில் தேர்வாகி, மாநில அளவில் முன்னேறி பின்பு தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றாôள். இப்படி முயற்சிகளின் மூலம் ஒவ்வொரு முறையும் மனம்  தளராது முயன்றதால் அவளுக்குள் என்ன திறமை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிந்தது. மீண்டும் சொல்கிறேன் கடவுளின் படைப்புகளில் அனைவரும் சமமே.  ஒவ்வொருக்குள்ளும் ஒவ்வொரு திறமையைப் படைத்திருக்கிறார். அதை முயற்சி என்ற தூண்டுகோல் கொண்டு கண்டறிந்தோமேயானால் வெற்றி நம்கையில்.

    அதே நேரம் நாம் எடுக்கும் முயற்சி நாம் அடையக்கூடிய இலட்சியத்தை நோக்கியதாக இருக்க வேண்டும், சான்றாக பிபிஏ படித்துக் கொண்டு மருத்துவராகலாம் என கனவு காணக்கூடாது. எந்த வழியில் போனால்  நம் இலக்கை அடையலாம் என்ற அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    முயற்சியே தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் அடிகோல்

    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

    முயன்றால் தான் அழகு:

    முயற்சி என்பது அவ்வளவு அழகானது

    கடல் அலைகள் கூட இயற்கை உந்துதால் தொடர்ந்து வந்து கரையைத் தொட்டு செல்கின்றன.

    பிறை நிலவு கூட ஒவ்வொரு நாளும் வளர்ந்து முழு நிலவாகிறது.

    பூமி கூட சூரியனைச் சுற்றிக் கொண்டே முழு வட்டத்தை ஒவ்வொரு முறையும் முடிக்கிறது.

    ஒவ்வொரு பூக்களாய் முயற்சி என்ற நார் கொண்டு கோர்க்க மாலையாகிறது.

    தூக்கனாங்குருவி கூட ஒவ்வொரு கோரைப் புற்கலாக எடுத்து ரசனை மிகு கூடாகக் கட்டுகிறது.

    நீரோடை கூட நெலிவு சுலிவுகளில் ஓடியும் மேடு பள்ளங்களில் குதித்தும் கடலை அடைகிறது.

    கற்பனைகள் எல்லாம் ஒன்று கூட கவிதையாகிறது.

    சொட்டு சொட்டாய் மழைநீர் கூடஆறாகிறது. வெற்றி இன்னும் தூரமில்லை.  வா மனிதா முயற்சி செய்வோம்.

    இந்த இதழை மேலும்

    “வாழ நினைத்தால் வாழலாம்” – 25

    “சந்தர்ப்பம்”

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே!

    இத்தொடரில் என் 25 வது வாழ்வியல் கட்டுரை!  வெள்ளி விழா!

    இத்தொடர் எழுதும் “சந்தர்ப்பத்தை” எனக்களித்த ஆசிரியருக்கும், இதுவரை இணைந்து TVணித்த வாசக நண்பர்களுக்கும் முதலில் என் நன்றிகள் பல.

    பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையே “சந்தர்ப்பங்களின்” தொகுப்புதான்.

    நல்ல பெற்றோர், நல்ல கல்வி – அங்கே நல்ல ஆசிரியர்கள், நல்ல நட்பு, நல்ல வேலை, நல்ல மணவாழ்க்கை, நல்ல உடல்நலம், நல்ல மனநலம், நிம்மதியான மரணம் – இவை அனைத்தையும் சந்திக்கும் “சந்தர்ப்பம்” அனைவருக்கும் வாய்ப்பதில்லை.  ஒன்றிருந்தால் – மற்றொன்று இருப்பதில்லை.

    கவியரசர் சொல்வதுபோல் “பருவம் வந்த அனைவருமே காதல் கொள்ளவதில்லை, காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை, மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை, சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை”

    50 வருடங்களுக்கும் மேலாக நான் கொண்ட அனுபவமும், 30 வருடங்களுக்கும் மேலாக இந்த MEDIA துறையில் என் பங்களிப்பும், 9 வருடங்களுக்கும் மேலாக மனவளக்கலை ஆசிரியராக தொண்டாற்ற கிடைத்த வாய்ப்பு – என்று வாழ்வில் எனக்கு கிடைத்த “சந்தர்ப்பங்கள்”எப்படி என்னை வளர்த்தது என்ற ஒரு “நன்றி அறிவிப்பு பட்டியலாக” வெளியிட இந்தக்கட்டுரையை “சந்தர்ப்பமாக” எடுத்துக்கொள்ள விழைகிறேன்.

    நல்ல பெற்றோர் அமைந்ததன் காரணம் – சென்னை வில்லிவாக்கம் பகுதியிலுள்ள Singaram Pillai கல்வி குழுமத்தில் 1 முதல் 12 வகுப்பு வரை கல்வி.  NCC ன் Best Cadet Award வாங்கிய “சந்தர்ப்பம்” கிடைத்தது இங்கு தான்.  Botany வகுப்பெடுத்த ஆசிரியர் திருமதி. ஜெயலட்சுமி, தமிழ் வகுப்பெடுத்த திரு. விஜயராகவன் – எனக்குள் இருந்த “விடாமுயற்சி” எண்ணத்தை வெளியே கொண்டு வந்தவர்கள்.

    Vivekananda கல்லூரி – என் விலாசத்தின் முதல் வரியை எழுதியது.  1986 ல் அப்போதைய முதல்வர் திரு. கணேசன், என் மதிப்பெண்ணை பார்த்து ஆ.நஸ்ரீ ஆர்ற்ஹய்ஹ் தான் தர முடியும் என்று சொல்லி சேர்த்தார்கள்.  அங்கே தான் பொதிகை தொலைகாட்சியில் “சிந்திக்க ஒரு நொடி” நிகழ்ச்சி நடத்தும் பேராசிரியர். வ.வே.சு. அவர்களின் மாணவனாக அமையும் “சந்தர்ப்பம்” கிடைக்க – அவர் என்னுள் இருந்த இன்னொருவனை உணர வைத்தார்.  All India Radio வில் “இளையபாரதம்” நிகழ்ச்சி அதிகாரி திருமதி.  C.S. குமுதம்  அவர்களிடம் என் எழுதும் ஆர்வத்தை சொல்லி வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.  என் கல்லூரி காலங்கள் முழுவதும் பல நிகழ்ச்சிக்களை ஒரு அறிவிப்பாளராக, தொகுப்பாளராக நான் சென்னை வானொலியில் வழங்க கிடைத்த “சந்தர்ப்பம்” – நான் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று விழைந்த என் ஆசிரியரின் நல்ல எண்ணமே.

    ஒரு ஆசிரியர் ஒரு மாணவனின் வளர்ச்சியில் என்னென்ன பங்கு வகிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.  உரத்த சிந்தனை அமைப்பின் திரு. உதயம் ராம் தொடங்கி – கவியரசு வைரமுத்து வரை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்த பிரபலங்கள் அதிகம்.  அது என் எழுத்துக்கும், அறிவுக்கும் இடப்பட்ட தீனி.  நம் “சென்னை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில்” வ.வே.சு. ஒரு Popular பேச்சாளர்.

    கோலாகலமான வாழ்க்கை கோவையில் தான் தொடங்கியது.  90 களில் கோவை வானொலியில் – (இப்போதைய நிகழ்ச்சி தலைமை அதிகாரியாக இருக்கும்) திருமதி. சித்ரலேகா அவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல்கள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய “சந்தர்ப்பம்”.  வானொலி நிகழ்சிகளின் வாயிலாக திரைப்பட நடிகர் திரு. சரத்குமார் தொடங்கி, எழுத்தாளர் திரு. ராஜேஷ் குமார், திருமதி.  விமலா ரமணி – என்று பல சாதனை மனிதர்களின் அறிமுகமும், நட்பும் அமைய அடித்தளமிட்டது எனக்கு அமைந்த மகிழ்வான “சந்தர்ப்பம்”

    BELL CANADA INC என்ற  நிறுவனத்துடன் இணைந்து GET IT YELLOW PAGES Telephone Directory Publish  செய்யும் பணியில்.  அங்கே அவர்கள் எனக்களித்த Training வகுப்புகள் உலகத்தரம் வாய்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.  இன்றும் வெற்றிகரமான என் பல பயிற்சி வகுப்புகளுக்கு அதுவே ஒரு வழி காட்டி என்ற இரகசியம் – இப்போது உங்களுக்கும் தெரிந்துவிட்டது.  அந்த நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது சிறப்பான “சந்தர்ப்பம்”

    2000 களில் திருப்பூரின் பிரபலமான ஒரு விளம்பர நிறுவனத்தில், தொலைகாட்சி விளம்பரங்களை திட்டமிடுவது என் பணி.  குமரன் சில்க்ஸ் (இப்போது சென்னை சில்க்ஸ்) திரு. மாணிக்கம், Viking நிறுவனத்தின் திரு. அருணாசலம், Jansons வேஷ்டிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்    திரு. திருக்குமார் – போன்ற ஜாம்பவான்களின் விளம்பர திட்டமிடல் செய்யும் “சந்தர்ப்பம்”  பின்னாளில் என்னை தொலைகாட்சி நிறுவனத்திலேயே பணி செய்யும் அளவுக்கு உயர்த்தியது.

    2002 ம் ஆண்டு, Raj TV ல் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து மீண்டும் சென்னைக்கு மாற்றல்.  உரிமையாளர்களான 4 சகோதரர்களில் என்னை வழி நடத்தியது திரு. ரகு அவர்கள்.  தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேரம் பாராத உழைப்பு, முறையாக வழி நடத்தல் – போன்ற பல நல்ல விஷயங்களின் மொத்த கலவையாக.  ஒரு முறை Sakthi Masala நிறுவனர்களின் குடும்ப  நிகழ்வில் – நான் அவசரத்தில் செய்த ஒரு தவறைக்கண்டு கோபம் கொண்டு உடனே சுட்டிக்காட்டி திருத்தச் சொன்னார்.  அதில் என் சகோதரனின் பாசத்தை பார்க்க முடிந்தது.   “இமயம்” தொலைக்காட்சியில் தலைமைப் பொருப்பில் என் பணி சிறக்க முக்கியமான காரணம் திரு. ரகு அவர்களிடம் நான் கற்ற நடைமுறை கல்வியே.  அவர் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை.  சந்தித்த சரியான “சந்தர்ப்பம்” இறைவனின் கட்டளை.

    SUN TV ன் தொகுப்பாளர் திரு. ஆடம்ஸ், தந்தி TV – “ஆயுத எழுத்து” Hari – இவர்களின் ஆரம்பகால MEDIA வாழ்க்கை இமயம் TV ல் தான் துவங்கியது.  அவர்களின் ஆர்வம், ஈடுபாடு, என்னுடைய ஆலோசனைகளுடன் இணைந்து TVனித்ததன் விளைவு – இன்று அவர்கள் இருவரும் MEDIA துறையில் அடைந்திருக்கும் உச்சம்.  “சந்தர்ப்பம்” அவர்களுக்கும் வாய்த்தது மகிழ்ச்சியே.

    Tele Shopping உலகில் கொடிகட்டி பறக்கும் “Telebuy” நிறுவனத்தின் CEO திரு. வசந்த் அவர்களின் நட்பு கிடைத்த “சந்தர்ப்பம்” – என் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெகுமதியே.  Air Time Buying, மற்றும் MEDIA Planning-ல் என் பங்களிப்பு, அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது Tele Shopping துறையில் உள்ள பலரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.

    வியாபாரம் தாண்டி – தனி மனித மரியாதை. உதவி, இவற்றில் இன்றும் சிறந்து விளங்கும் Sowbagya Wet Grinder உரிமையாளர் திரு. வரதராஜன், அவர் மகன் திரு. பாலு ஆகியோரின் நட்பு கிடைக்கப்பெற்றது என் சந்தர்ப்பங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய “சந்தர்ப்பம்” .  என் பொதிகை தொலைகாட்சி தொடரான “எண்ணம் போல் வாழ்வு” நிகழ்ச்சிக்கு எந்தவித  கேள்வியும் இல்லாமல் விளம்பரம் தந்து உதவிய அவர்களின் பண்பு – என்றும் என் நன்றிக்குரியது.

    2017 ல் மீண்டும் கோவைக்கு வந்தபின் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை தலைவர் Dr. ஞானசேகரன் அவர்களை சந்தித்தது மிகவும் நிறைவான “சந்தர்ப்பம்”.  சுவாமி விவேகானந்தர் உயராய்வு மற்றும் கல்வி மையத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பில் இருந்த நிலையில் – கோவை மட்டுமல்லாது பெருந்துறை, வால்பாறை – என்று பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்க எனக்கு கிடைத்த “சந்தர்ப்பங்கள்” – அவரை என் வாழ்வின் நிறைவு மையத்தில் நிலை நிறுத்தும்.

    கோவை ரத்தினம் கல்வி குழுமத்தில் ஒரு பயிற்சி வகுப்பு எடுக்க போன நேரத்தில் அவர்களது Rathinavani 90.8 Community FM Radio Station Head திரு. முகேஷ் அவர்கள் தொடர்ந்து என் பேச்சுக்களை தொடர் நிகழ்சிகளாகவும், சிறப்பு தினங்களில் சிறப்பு நிகழ்சிகளாகவும் ஒலிபரப்பு செய்ததும், சமுதாய வானொலி என்ற நிலையில் இந்த சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்கும் பணியில் என்னுடன் இணைந்து செயல்பட விழைந்தது சமூகத்துக்கு கிடைத்த சிறப்பான “சந்தர்ப்பம்” தான்.

    அவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல “தன்னம்பிக்கை” இதழின் ஆசிரியர் திரு. செந்தில் அவர்களின் அறிமுகம்.  ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் விதைக்க விரும்பும் என் எண்ணத்துக்கும், எழுத்துக்கும் தன் இதழில் மிகப்பெரிய மேடையை அமைத்து கொடுத்ததை – என் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளும் “சந்தர்ப்பமாகவே” பார்க்கின்றேன்.

    மொத்தத்தில், “சந்தர்ப்பம் தரும் சாதனை” என்ற தலைப்புக்கு கிடைத்த Content போல – என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதைகள் “சந்தர்பங்களின் சங்கமமாகவே” என்னால் உணர முடிகின்றது.

    நண்பர்களே!  என் அனுபவங்கள் கற்றுத்தந்த விஷயங்களில் சில உங்கள் வெற்றி TVணத்துக்கு உதவியாய்.

    “இந்த திசையில் தான் என் TVணம், இதுவே என் வாழ்வின் லட்சியம், இதுவே என் தேவை” – என்ற தீர்மானங்களை முதலில் எடுத்து விடுங்கள்.

    “திசைகளை தீர்மானித்தபின் TVணம் செய்வது சிரமமாக இருக்காது”.  என்றுமே எனக்கு அது இருந்ததில்லை.

    “பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு” என்ற கவியரசரின் வரிகள் எனக்குள் ஒரு வெறியாய்.  அந்த வெறிகள், அந்த வரிகள் எனக்கு இன்றுவரை வழிகாட்டியாய் அமைய பெற்றது என் புத்திக்கு கிடைத்த “சந்தர்ப்பம்”

    அவமானங்களும் துரோகங்களும் பலரை தடம் மாற்றலாம்.

    சூழ்சிகளும் சூழ்நிலைகளும் சிலரை ஏமாற்றலாம்.

    கண்ணுக்கு குளிர்ச்சியான மலர்கள் மலர்வதும், வளர்வதும் – நல்ல மண்ணும், உரமும், சூரிய வெளிச்சமும், தண்ணீரும் சரியான விகிதத்தில் கிடைக்கப்பெறும் “சந்தர்பத்தால்” தான்.  அதே நேரம், இங்கே மண்ணோடு போராடி வெற்றி பெற்ற விதைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும்.  தானே ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி, தலை நிமிர்ந்து நிற்கும் அதன் கம்பீரத்துக்கும் தலை வணங்கத்தான் வேண்டும்.

    நீங்கள் விதையா அல்லது மரமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

    உங்களை அவமத்தவர்களை அலட்சியம் செய்யுங்கள் – உங்கள் வெற்றி அவர்களை அவமானப்படுத்தும்.

    துரோகிகளை தூர விலக்குங்கள் – உங்கள் தோள்களில் விழும் மாலை அவர்களை தலை குனிய வைக்கும்.

    சூழ்சிகளை சுட்டெரியுங்கள் – உங்கள் கோட்டையின் காவலர்களாய் அவர்கள் பணி செய்ய வருவார்கள்.

    அதற்கான இரகசியம் இதுவே!

    நம்பிக்கை, விடாமுயற்சி, கல்வி, ஞானம், உழைப்பு – என்ற அனைத்தும் உங்களுக்கு பக்க பலமாய்.  கவலைப்படாமல் காலை முன் வையுங்கள்.

    “காலை உனதானால் – மாலை உனதாகும்”

    “காலை (நேரம்) உனதானால் – மாலை (மாலை உன் தோளில்) உனதாகும்”

    “சந்தர்ப்பம்” ஒரு சவால் என்பது எவ்வளவு உண்மையோ “சவாலும்” ஒரு சந்தர்ப்பமே” – என்று முடிவு கண்டு, சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்துங்கள்.

    தெளிவான திட்டமிடலும், முறையான ஆலோசனைகளும், சரியான அணுகுமுறைகளும் உங்கள் எண்ணம், சொல், செயலாக மாற வேண்டும்.  மாற்றிக்கொள்ளுங்கள்.

    “மாற்றம் தான் ஏற்றம் தரும்”

    அதுமட்டுமல்ல,

    “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

    “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

    இந்த இதழை மேலும்

    மாமரத்தில் கொய்யாப் பழம்

    இனிய வாசகர்களே !

    வாழ்க வளமுடன். உலகிலேயே இளைஞர் சக்தி அதிகமுள்ள நாடு நம் இந்திய நாடு. ஆனால் நம்மை விட இயற்கை வளங்களும் இளைஞர்  ஆற்றலும் குறைந்துள்ள பல சிறிய, பெரிய நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் நாம் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம்.

    காரணம்: உள்ளங்கை நெல்லிக்கனி தான். நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் பாலைவனச் சோலை போலாகி விட்டன.

    மக்களும் சத்தியமே வெல்லும் என்ற தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் வார்த்தைகளை மறந்து குறுகிய ஆதாயத்துக்காக எதையும் செய்யும் மன நிலையில் வாழ்கின்றனர்.

    வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திரச் சொல்லின் பிறப்பிடமே நம் நாடு என்ற வகையில் பல மொழிகள், கலாச்சாரங்கள், உணவுப்பழக்கங்கள், தட்ப வெட்ப நிலை என்றிருந்த போதும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்தனர்.

    நிர்வாக வசதிக்காக உலகின் மிகப்பெரும்பாலான நாடுகளில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் எனப் பிரித்தே ஆட்சி நடைபெற்றாலும் அவர்களுக்குள்ள சிறப்பு ஒரே மொழி.

    ஆனால், நமக்கு மொழிவாரி மாநிலங்கள் என்பதால், பிரச்னைகள் ஏராளம். இயற்கை வளம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறையும் கூட மாறுபடுகின்றன.

    தொழிலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்தல் அதிகரித்து வருகிறது. முன்பு வசதி மிகுந்தோர் வியாபாரம் செய்வதற்காக வந்த நிலை இன்று மாறி, எல்லாவிதப் பணிகளையும் (கட்டுமானம் ஓட்டல் போன்றவை)  செய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய லட்சக்கணக்கில் இளைஞர் படை குடிபெயரும் நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

    முன்பு சொந்த இடத்தில் தங்கள் வாழ்க்கை முறை, வந்த இடத்தில் மக்களின் வாழ்க்கை முறை இரண்டுக்கும் இடைவெளி அதிகம், இன்று விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக மக்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.

    சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை இன்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அன்றிருந்த வெள்ளந்தி மனம், இன்றைய நம் இளைஞர் பெருமக்களிடம் இல்லை.

    நேர்மை, நாணயம், உதவுதல் போன்ற நல்ல பண்புகள் இன்றைய குழந்தை வளர்ப்பில் விடுபட்டு விட்டன. காரணங்களில் மிக முக்கியமான ஒன்று T.V. எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் அது மிகையாகாது.

    இப்படி வளர்ந்த, வளரும் குழந்தைகள் இளைஞர்களான பின்னர், இங்கு நிலவும் புறச் சூழலால், முன்பே குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக் கொண்ட அகச்சூழலும் இணைந்து இயலாத, முடியாத ஒன்றை எதிர்பார்க்கும் மனநிலைக்குத் தள்ளி விட்டுள்ளது.

    மாமரத்தில் இயற்கையாக என்ன காய்க்கும் என்றால், குழந்தைகளும் சொல்லும் மாங்காய் காய்க்கும் என்று.

    ஆனால், விஞ்ஞான முன்னேற்றத்தால், கொய்யாச் செடியை ஒட்டு நாற்றாக்கி செயற்கை முறையில் மாமரத்தில் கொய்யாய்பழமும் காய்க்கும் என்ற காலக்கட்டத்தில் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம்.

    சிங்கம்(Lion) புலி(Tiger) இரண்டின் கருவையும் செயற்கை முறையில் இணைத்து வளரச் செய்து புதிய மிருக இனமான(Liger) லைகர் என்ற உயிரினத்தை நம் அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

    அந்த வகையில் இன்று குளோனிங் என்ற முறை, வீரிய ஒட்டு விதைகள், விதையின்றி கிடைக்கும் காய்கள், கனிகள் என விஞ்ஞானம் இயற்கையை சிதைத்து வருவதால் மனித மனங்களும் சிதைவுக்கு ஆளாகி விட்டது.

    இன்று குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் மாமரத்தில் கொய்யாப் பழத்தை எதிர் பார்க்கும் எண்ணம் மேலோங்கியுள்ளது.

    இது சாத்தியமா என்றால், இயற்கையில் சாத்தியமில்லை. இதன் அடிப்படையில் நாம் சிந்திப்போம்.

    இப்படி எதிர்ப்பவர்களுக்குத் தெரியாதா எப்படி மா மரம் கொய்யாப் பழம் தரும் என்று? தெரியும். ஆனாலும் மாமரத்தின் கீழ் நின்று கொண்டு, அந்த மாமரத்தில் கொய்யாப்பழம் வேண்டுமென்றே நினைக்கின்றனர்.

    காரணம் இன்றைய சமுதாயச் சூழல், இதை புறச்சூழல் என்றும் சொல்லலாம்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் நம் முன்னோரின் முத்தான சொற்கள் இவை.

    குறையுள்ளவனே மனிதன் என்றாலும், எங்கோ ஒரு சில இடங்களில் நடக்கும் குறைகளை கட்டம் கட்டி, தலைப்புச் செய்திகளாக்கி விலாவாரியாக பலரையும் விவாதிக்கச் செய்து மக்கள் மனதை மடைமாற்றும் செயலை மிகவும் கவனமாக ஆர்வமாகச் செய்து வரும் நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள், ஊடகங்கள் இவற்றால் கொய்யாப்பழ மனநிலை உருவாக்கப்பட்டு, உரமிட்டு வளர்க்கப்படுவது வேதனையாக உள்ளது.

    இஸ்ரேல் போன்ற நாடுகளில் நல்ல செயல்கள், வெற்றிகள், நேர்மையான சாதனைகள் என தேடிப்பிடித்து பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்திகளாகத் தருகின்றன.

    தொடரும்…

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 5

    உற்சாகம்தான் எல்லாமே!

    (ENTHUSIAM MAKES THE DIFFERENCE)

    இந்நூலின் ஆசிரியர் நார்மன் வின்சென்ட் பீல் ஆவார். (தமிழில் PSV குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார். ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் தமிழில் வெளியிட்டுள்ளது.) எல்லாவற்றையும் அடியோடு மாற்றிவிடக்கூடிய விலைமதிக்க முடியாத ஓர் அம்சமான உற்சாகத்தைப் பற்றித்தான் இப்புத்தகம் பேசுகிறது. வாழ்க்கை எப்போதும் சுகமானதாகவும், இலகுவானதாகவும் இருப்பதில்லை. பிரச்சினைகள், வலிகள், சவால்கள், விரக்திகள் ஆகியவை அதில் இரண்டறக் கலந்துள்ளன. ஆனால் அதற்கான தீர்வை இப்புத்தகம் அளிக்கிறது. கண்டிப்பாகப் பலனளிக்கும் தீர்வுகள் இந்நூல் முழுமையும் நிரம்பி வழிகின்றன. நடைமுறையில் ஏராளமான எதிர்மறைகள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும் உங்களால் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழமுடியும் என்று இந்நூல் கட்டியம் கூறுகின்றது.

    நீங்கள் சுவாரசியமற்ற மந்தமான ஒரு வாழ்க்கையை வாழவேண்டிய அவசியம் கிடையாது. அப்படிப்பட்டதொரு நிலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நீங்கள் விரும்பினால் உற்சாகம் பொங்கிவழியும் ஒரு வாழ்க்கையை உங்களால் வாழமுடியும் என்பதை இந்நூலின் செல்நெறி வாசகர்களுக்குச் சொல்லித்தருகின்றது. இந்நூல் பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பே அதனுள் இருக்கும் செய்தியைச் சொல்லுவதாக வடிவமைக்கப்பட்டுள்ள விதம் இந்நூலின் தனித்த சிறப்பு. அவை வருமாறு.

    • உற்சாகம் உங்களிடம் என்னென்ன மாற்றங்களையெல்லாம் விளைவிக்கும்.
    • உற்சாகம் ஒருபோதும் உங்களைக் கீழே சாய்த்துவிடாது.
    • உற்சாகத்தால் பிறரை இணங்க வைக்க முடியும்.
    • உற்சாகத்தால் பயத்தையும், கவலையையும் பறந்தோடிடச் செய்ய முடியும்.
    • உங்கள் வேலையில் உற்சாகத்தைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.
    • பதற்றமாக இருக்கிறீர்களா? படபடப்பாக இருக்கிறீர்களா? உற்சாகத்தை முயன்று பாருங்கள்.
    • உற்சாகம் பிரச்சனைகளை மாயாஜாலமாகத் தீர்த்து வைக்கும்.
    • நீங்கள் பலவற்றைச் சாதிக்க உற்சாகம் உங்களைத் தூண்டும்.
    • உங்கள் சிரமங்களிலிருந்து உற்சாகம் உங்களை மீட்டெடுக்கும்.
    • உற்சாகம் ஒரு தொற்றுநோய்.
    • உற்சாகமும் நமது எதிர்காலமும்
    • உற்சாகம்தான் எல்லாமே.

    மேற்கண்டவாறு அமையும் நூலின் ஒவ்வொரு தலைப்பும் உற்சாகத்தால் மனித சமூகம் அடையும் நேர்மறை வாழ்க்கையை ஓர் அறிவியல் கோட்பாடு போன்று வெற்றிபெற்ற பல சாதனையாளர்களின் வாழ்க்கையை ஆதாரம் காட்டி விளக்கிச் செல்கிறது. எமர்சன் எனும் அறிஞர் “உற்சாகம் வாழ்வை ருசிகரமாக்கும் என்று நான் மனதார நம்புகின்றேன். உற்சாகத்தின் துணையின்றிப் பெரும் சாதனைகள் எவையும் நிகழ்த்தப்படவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் உற்சாகத்துடனும், துடிப்புடனும் செய்யுங்கள்” என்று கூறுவார். வரலாற்று அறிஞரான அர்னால்டு டாயின்பி, “சுவாரசியமற்ற ஒரு நிலையை உற்சாகத்தால் மட்டுமே உடைத்தெறிய முடியும். உற்சாகத்தை இரண்டு வழிகளில் தூண்டிவிட முடியும். முதலாவது எல்லையற்றக் கற்பனையைத் தூண்டிவிடக்கூடிய உயர்ந்த சிந்தனை. இரண்டாவது, அந்த உயர்ந்த சிந்தனையை நடைமுறையாக்கக்கூடிய ஒரு புத்திசாலித்தனமான திட்டம்’ என்று சொல்லுவார்.

    இந்நூல் முழுவதும் உற்சாகம் என்றால் என்ன? உற்சாகம் என்னவெல்லாம் பெற்றுத்தருமென்று ஒரு நாவல் போன்று பல வெற்றியாளர்களின் கதைகளைச் சான்றாக்கி; இந்த உலகில் நிகழ்த்தப்பட்டுள்ள எல்லாச் சாதனைகளும் உற்சாகம் மிகுந்தவர்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டுள்ளன. ரைட் சகோதரர்களின் உற்சாகமே விமானமாய் நமக்குக் கிடைத்தது. ஹென்றி போர்டின் உற்சாகம்தான் மோட்டார் வாகனமானது. எடிசனின் உற்சாகம்தான் இருட்டை வெளிச்சமாக்கிய மின்விளக்குக் கிடைக்கக் காரணமானது. பில்கேட்ஸின் உற்சாகம்தான் கணினி கிடைக்கக் காரணமானது. என்றவாறு உற்சாகமில்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை. பூரணத்துவமான ஒரு வாழ்க்கையின் அடையாளம் உற்சாகம்தான். எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி உடைத்தெறியும் துணிச்சலை உங்களுக்கு அளித்து; உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நீங்கள் ரசித்து அனுபவிக்க உங்களை அது அனுமதிக்கிறது. நாம் விழிப்புடன் இருக்கும் நாட்கள்தான் உண்மையான விடியல்கள். வீழ்ச்சியடைந்த மனிதனை உற்சாகம் தூக்கி நிறுத்தும்.

    வெற்றிக்கான மாயாஜாலமான சூத்திரம்

    வெற்றிக்கு ஒரு மாயாஜாலமான சூத்திரம் இருக்கிறது. அது இல்லாமல் எந்தவொரு நிறுவனத்தாலும் இயங்க முடியாது. தனி நபர்களுக்கும் அது பொருந்தும். அந்த ஐந்து வார்த்தைச் சூத்திரம் இதுதான்; ‘ஒரு தேவையைக் கண்டுபிடித்து அதை நிறைவேற்றுங்கள்’ பெரும் வெற்றியடைந்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் இந்த உத்தியை அடித்தளமாக வைத்தே அதை அடைந்துள்ளன. அப்படிப்பட்ட நிறுவனங்கள் பொதுமக்களின் ஒரு தேவையைக் கண்டறிந்து அதைச் செவ்வனே நிறைவேற்றி வைத்துள்ளன. அதன்மூலம் அவை அதற்கான வெகுமதியைப் பெற்றுள்ளன. வரலாற்றில் பெருவெற்றி பெற்ற நாயகர்களும் பொதுமக்களின் முக்கியமானதொரு தேவையைக் கண்டறிந்து அதை நிறைவேற்றிவைக்கத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களே. அதனால் மனித குலம் பயனடைந்தது. அவர்களும் பெரும் புகழ் பெற்றனர். அவர்கள் மக்களின் தேவை என்ன என்பதைக் கண்டறிந்தவர்கள், சூழ்நிலையைச் செம்மையாகக் கையாளக் கற்றிருந்தவர்கள். நீங்கள் ஒரு விஜயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தால், உங்கள் முயற்சியைப் பெரும் நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். அப்போது உற்சாகம் முடுக்கிவிடப்பட்டு வேலை செய்யத் தொடங்கும். உற்சாகம்தான் உலகிலேயே மிகவும் சக்திமிக்க தகவல் தொடர்பு சாதனமாகும் என்று இந்நூல் திரும்பத் திரும்பச் சொல்கிறது.

    உற்சாகம்தான் வாழ்க்கை

    மனிதர்களைப் பெருமளவுக்கு உந்தித் தள்ளக்கூடிய சக்தி உற்சாகத்திற்கு உண்டு. உற்சாகத்தால் சாதாரண மனிதர்களை மாயாஜாலமிக்கவர்களாக மாற்றமுடியும். அது துணிச்சலையும், தைரியத்தையும் வளர்த்தெடுக்கும், சந்தேகங்களைத் தூக்கியெறியும். உங்கள் மனம்தான் எல்லாமே, நீங்கள் எப்படிச் சிந்திக்கிறீர்களோ அப்படியே ஆகிறீர்கள். உங்கள் காலை நீங்களே வாரிக்கொள்ளாதீர்கள். உங்களிடம் ஏராளமான நல்ல விஜயங்கள் இருக்கின்றன. உங்களிடமிருந்த திறமை ஒரு சிறிதும் குறைந்துவிடவில்லை. மன உறுதியுடன் இருப்பவனால் உலகத்தையே தன் பக்கமாக வளைக்க முடியும் என்று நம்புங்கள். ஓர் இலக்கையும் அதை அடைவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நடந்து முடிந்த விஜயங்கள் குறித்து மனவருத்தம் கொள்வதை நிறுத்துங்கள். இப்போது என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். கிளெமென்ட் ஸ்டோன் எனும் அறிஞர் இதை அற்புதமாக வருமாறு கூறுவார். “சிந்தியுங்கள், சிந்தியுங்கள், நீங்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தால், உங்களுக்கு அற்புதமான விஜயங்கள் நிகழும்” என்று சொல்லியிருப்பது வெற்றி பெற நினைக்கும் எல்லோருக்குமானது ஆகும்.

    உற்சாகம் பிரச்சனைகளை மாயாஜாலமாகத் தீர்த்துவைக்கும் ஆற்றலுடையது. கீழ்க்கண்ட ஏழு வார்த்தைகள் உங்களுடைய வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றல்மிக்கவை என்று நார்மன் சென்ட் பீலே குறிப்பிடுகிறார். “ஒவ்வொரு பிரச்சனையும் அதன் தீர்வுக்கான விதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது” என்பதுதான் அந்த வார்த்தை. வாழ்க்கையில் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் என்று எதுவுமில்லை. பிரச்சினைகள் கண்டு கவலைப்படத் தேவையில்லை. பொதுவாகத் தங்களுடைய நினைவில் அதிகமாக மூழ்கியிருப்பவர்கள்தான் கவலைக்கு அதிகமாகப் பலியாகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்றவர்களிடம் உங்கள் வெற்றி எப்படிச் சாத்தியமானது என்று கேட்டால் அதற்கு அவர்களின் பதில் இப்படி இருக்கும். “உங்கள் இதயத்தில் வெற்றிக் காட்சியை அரியணை ஏற்றுங்கள் உங்கள் கைகளில் கட்டாயம் வெற்றி வந்துசேரும்” என்பதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று விடாப்பிடியாக இருங்கள். உங்களைக் கைதூக்கிவிட உற்சாகம் வரிந்துகட்டிக்கொண்டு வரும். உங்களுடைய பிரச்சனைகள் உங்களை விழுங்கிவிட நீங்கள் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எல்லா நேரத்திலும் அதை எதிர்கொள்ளும் உற்சாகம் உங்களிடம் இருந்தால்; நீங்கள் தோற்றுப்போக வாய்ப்பே இல்லை. வாழ்க்கை என்பதே உற்சாகம்தான் என்பது இப்புத்தகம் முன்வைக்கும் மையக் கருத்து ஆகும். இந்த நூலை வாசிப்பதன்மூலம் நாம் நமக்கான தேடுதலில் அதற்கான உற்சாகத்தைப் பெற்றிட முடியுமென்று உறுதியாக நம்புகின்றேன். உற்சாகத்தோடு வாழ நம்மைப் பெரிதும் உற்சாகப்படுத்திடும் நூல் இது என்பது என் ஆழ்ந்த கருத்து.

    – வாசிப்புத் தொடரும்…

    இந்த இதழை மேலும்

    ‘அமைதி’ என்னும் மகாசக்தி

    கல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன்

    சொல்லா திருக்கப் பெறின். (குறல் – 403) என்ற குறல்

    ‘கற்றவரின் முன்னிலையில்  ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.’ என்ற கருத்தை வெளிப்படுத்தி ‘அமைதி’ அங்கு எப்படி கல்லாதவர்களையும் நல்லவர்களாக மாற்றும் சக்தி உடையது என்று வெளிப்படுத்துகின்றது. ‘அமைதி’ என்பது வெளியில் ஏற்படும் ஓசையில் கவனம் செலுத்தாமையும் உள் மனதில் எந்த வித சலனம் இல்லாமல் இருக்கும் தியான நிலை என்ற இரண்டையும் குறிக்கும். மேலே குறிப்பிட்ட திருக்குறல் கற்றவர்கள் முன் கல்லாதவர் கடைப்பிடித்த அமைதி முதலாவது ரகம், ஞானிகள் காட்டிற்குள் சென்று தவம் செய்யும் போது கடைப்பிடிக்கும் அமைதி இரண்டாவது ரகம்.

    ஒரு சிறு கதை நிலத்தில் ஒரு பெரியவர் வேலை செய்து கொண்டிருந்தார், அப்பொழுது அவரது கைக்கடிகாரம் தவறி விழுந்துவிட்டது. அந்த பெரியவர் அதை கவனிக்கவில்லை தோட்டத்தில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். அவருடைய பேரக்குழந்தைகள் வீட்டிற்கு வந்திருந்தனர் தாத்தவின் கையில் கடிகாரம் இல்லை என்பதை அவர் கவனத்திற்கு கொண்டுசென்றனர். பின்னர் தோட்டத்தில் அனைவரும் சென்று தேடிப்பார்த்தனர் அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை அப்பொழுது, ஒரு சிறுவன் மட்டும் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு தோட்டத்தில் எந்தவித சப்தம் இல்லாமல் பார்த்துக்கொண்டு, கவனமாக 1 டிக், டிக், ஒலி எங்கிருந்து வருகின்றது என்பதை கண்டுப்பிடடித்தன், அவன் விரும்பியது போல் அமைதியான சூழ்நிலை அந்த கடிகார ஒலி வரும் இடத்தை நோக்கிசெல்ல உதவியது. அவனும் தெலைந்த கடிகாரத்தை எடுத்துச் சென்று தன் தாத்தாவைச் சந்தோசப்படுத்தினான்.

    ‘அமைதி’ அளிக்கும் நன்மைகள் பலவாகும், ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்டவுடன், மாணவனின் சிறிய நேர அமைதி அவனை சரியான விடையளிக்க உதவும். பணிபுரியும் பணியாட்களுக்கு இந்த ‘அமைதி’ அவர்களின் பணி செய்யும் திறனை மேலும் வலுப்படுத்தும். தம்முடைய வாடிக்கையாளர்கள் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் வியாபாரிகள் தங்கள் தொழிலில் அதிகமான முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஒரு பேச்சாளராய் இருக்கும்போது மற்றும் ஒரு பேச்சாளர் பேசுவதை அமைதியாகக் கேட்க வேண்டும்.  அதை விடுத்து நம் மேடையில் பேசப்போவதைப் பற்றியே நினைத்துக்கொண்டடிருந்தால் அந்தப் பேச்சாளரின் சில கருத்துக்களையே நீங்கள் திரும்பச் சொல்லிட பார்வையாளர்கள் முன் அவமானம் அடையவும் வாய்ப்பு உண்டு அமைதி கடைப்பிடிப்பதால்  எதுவும் நடைப்பெறும் முன் அதற்கான அறிகுறி ’Intution’ – உணரும் சக்தி கிடைக்கும். அமைதி ஒருவர் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி தன் நிலையே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ‘அமைதி’ என்பதை சிலர் தவறாகப் புரிந்துக்கொண்டு யாரும் இல்லாமல் நாம் தனியாக இருந்தால் அமைதி என்று நினைக்கின்றனர்.  இந்த ‘அமைதி’ நம் தொழிலில் சிறப்படையவும், அடுத்தவர்ளை அவர்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் தன்மையும் பெற்று மற்றவர்களுக்கு உதவும் தன்மையும் அதனால் ஏற்படும் உண்மையான மகிழ்ச்சியையும் உணரவைக்கும் தன்மையுடையது. இராணுவ வீரர்களின் மரண இறுதி அஞ்சலியின் போதும் பெரும் தலைவர்களின் மறைவின் போதும் மக்கள் அளிக்கும் மௌன அஞ்சலியின் நோக்கம் ‘அமைதி’ யின் மகிமையை நமக்கு உணர்த்துகின்றது.

    ‘அமைதி’ யைப்ற்றி  மாகத்மா காந்தி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நமக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் ஒரு மடாதிபதியை சந்தித்தார். உண்மையைத் தேடுபவர்களுக்கு முக்கியமாக ‘அமைதி’ என்ற ஒன்று மிகவும் அவசியம் என்று கூறினார். மேலும் மனிதன் தன்னுடைய பல பலவீனங்களைக் கொண்டுள்ளான், அதனை தகர்த்து பலம் உடையவனாக அவனை உருவாக்குவது இந்த ‘அமைதி’ என்ற மகா மந்திரம் என்று கூறினார். நம்முடைய உள்மனதில் ஒருகுரல் நம்முடன் உறையாடவும் நம்மை வழிநடத்தவும் ஆயுத்தமான உள்ளது. அனால் வெளி உலக சப்தத்திலும் மற்ற நம் உடம்பின் ஏற்படும் உணர்வுகளாலும்  அதனை நம்மால் கவனிக்கமுடியவில்லை. உண்மையை மறைத்து ஒருவர் பொய் சொல்லும் போதிலும், மேடையில் பேசும் பொழுது என்ன பேசுவது என்று தெரியாது உளரும் போதும் மற்றவர்களின் நேரத்தை வீணாக்கும் போதும் அவன் ‘அமைதி’யின்  அருமை தெரியாதவன் ஆகின்றான். அதையெல்லாம் ஒழித்து ஜெபித்து காட்டும்  தன்மையைத் தருவது ‘அமைதி’ ஆகும்.  அமைதி என்ற ஒன்றின் மகத்துவத்தை தெரிந்துக்கொண்டாலே மனிதனின் உலகத் துன்பத்தில் பாதி குறைந்துவிடும்   நவீன உலகம்  தோன்னும் முன் மக்களுக்கு அதிக நேரம் கிடைத்தது, அவர்கள் பிரச்சனைகள் இன்றி வாழ்ந்தனர். தற்பொழுது உள்ள நாகரீகத்தில் ஒவ்வொருவரும் ஒரு இரண்டு  மணிநேரம் உள்மனதில் ஓடிக்கொண்டிருக்கும் தெய்வீக வானெலியைக் கேட்க நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.  ‘அமைதி’ பற்றி அண்னை தெரசா தேனீககளை உதாரணமாக எடுத்துக்கொண்டு விளக்கியுள்ளார். தேனீக்கள் எப்படி பூக்களில் இருந்து தேனை எடுத்து வந்து  உள்ளே கூட்டிற்குள் சென்றவுடன் தங்கள் வேலையிலையே முழுகவனமாக இருந்து தேனை உருவாக்குவார்கள். மேலும் மற்றவற்றைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதுபோல் நாம் ஐம்புலன்களையும் அடக்கி தியானம் செய்யும் போது நம்முடைய ஆத்மா அமைதியான சூழ்நிலையில் தெளிவாக சிந்தனைகள் வர வழிவகுக்கின்றது. இந்த ‘அமைதி’ என்ற நிலை மழுப்பல் போன்றவற்றிலிருந்து ஒருவரை விடுவித்து நல்ல சிந்தனைகளை  உருவாக்கி தெளிவான வெளிச்சத்தில் நம்முடைய ஆத்மாவை வழிநடத்துகின்றது. வாழ்க்கை என்ற பெரிய நீளமான கருமையான பாதையைச் கடந்துசெல்ல ஆத்மா என்ற ஒன்றிற்கு உள்மன அமைதி அவசியமாகும். இத்தகைய சிந்தனைகளைப் பற்றி காந்தியடிகள் கூறியவற்றை நாமும் கடைப்பிடிப்போம் ஆக.

    இந்த இதழை மேலும்

    மந்திரப் புன்னகை

    கொரிய எல்லையில் இருந்த பகைநாட்டு காவலர்கள் போல முறைத்துக் கொள்வதும் உண்டு…

    அங்கே கூட இப்போது… நிலைமை… மாறிவருகிறது.   கிம் ஜாங் உன் (Kim Jong – un) (வடகொரியா) மூன் ஜே இன் (Moon Jae – in) (தென் கொரியா) இரண்டு பேரும்… நாட்டின் அதிபர்கள்.  அதிலும்… வடகொரியாக்காரர்… கொஞ்சம் எகனை மொகனையாக பேசி பிரச்சனையை கிளறக்கூடியவர்… இவர்கள் இருவருமே கைகோர்த்துக் கொண்டு தத்தமது எல்லையை கடந்து நடந்துள்ளனர்.  பிறகு நமக்கென்ன?  என்று தொன்றியது.

    கொரிய எல்லையில் நடக்கின்ற பதட்டம் மிகுந்த

    சூழ்நிலையை படம்பிடித்துக் காட்டிய அற்புதமான

    திரைப்படம்…

    Joint Security Area J.S.A, இணைந்த பாதுகாப்புப் பகுதி (2000) இயக்குனர்: பார்க் ச்சான் – வூக்.

    என்பதாகும்… அதில்… எதிரெதிர் நாட்டு வீரர்களுக்கு இடையே நட்பு பூத்துவிடும்…

    ஆஹா… நம்ப இயலாத உண்மைதான்.

    ‘அன்பே சிவம்’

     என்று இதைவிட எப்படி காட்ட முடியும்.  அவர்கள்… அவ்வப்போது சந்தித்து… மகிழ்வாக பேசிக்கொள்வார்கள்… அதனைத் தொடர்ந்து என்னவானது என்று படம் போகும்…

    ஆனால் இங்கே நாம் அப்படி… வேற்றார்கள் இல்லையே… குறைந்தபட்சம்… ஒரு மௌனப்புன்னகை சிந்தலாம்.

    இங்கே வெட்கப் புன்னகையில் நாம் நிற்கிறோம்.  கந்தவேலுடன் இருந்த அலுவலர்கள் பாட்டி விளையாட்டாய் சொன்னதை, சீரியஸôக எடுத்துக் கொண்டனர்,

    ‘அது சரி… பெரியம்மா…

    வயசு… அதிகமாக… அதிகமாக… அதற்குத் தகுந்த பென்ஷன் மாறும்… தெரியுமா?

    அதனால வயசை சொல்லியாகணும்!

    என்று கூற…

    பாட்டி சட்டென… குழப்பமடைந்தார்…

    அலுவலக ரீதியாக தாம், ஏதோ தவறு செய்துவிட்டதாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று அவர் பயப்படுவது புரிந்தது.

    இப்போது அவருக்கு தேவை ஆறுதல் மற்றும் சமாதானம்.   எப்படியாவது பாட்டியின் முகத்தில் மீண்டும் அந்த குறும்புத்தனத்தையும் மகிழ்ச்சியையும் திரும்ப வரவழைக்க வேண்டும்,  அதற்காக கந்தன்… பாட்டியின் பக்கம் பரிந்து பேசினார்.  “அது சரி!  ஆஃபீஸில கேட்டா வயசு சொல்வாங்க!  அதுக்காக லிஃப்டுல எல்லாமா… கேட்கறது!’  என்று ஒருவாறாக சமாளித்தார் கந்தவேல்.

    அடுத்து… ஒரு நிசப்தம்…  லிஃப்டுக்குள் நிலவியது, உடன் வந்தவர்கள் இன்னும் திருப்தியடையவில்லை என்பது புரிந்தது…

    அட விடுங்கப்பா…

    அவங்களுக்கு ஒரு பதினெட்டு வயது இருக்கும்!  மீறி மீறிப் போனா… அவ்வளவுதான் இருக்கும்…  என்று பாட்டியை பார்த்தார் கந்தன்.

    இந்த வசனம் நிச்சயம் நிலைமையை எளிதாக்கும்…

    இறுக்கத்தைத் தளர்த்தும்…

    நகைச்சுவை உணர்வு… ஆயிரம் மந்திரங்களுக்கு சமமான ஆயுதம்…

    உடன் வந்திருந்த பெரியம்மா… பாட்டியின் காதில்… உனக்கு பன்னெண்டு வயசுன்னு சொல்றாங்க!  என்று கூறினார்.

    அவ்வளவுதான்…

    பாட்டியை வெட்கம் பிடுங்கித் தின்பது!  அப்பட்டமாக தெரிந்தது.  வலது கையால்… தன் வாயை மறைத்துக் கொண்டார்.  விரல் இடைவெளிகளில் பொக்கை வாய் தெரிந்தது… புன்னகை… மந்திர புன்னகை ஆக மருவி இருந்தது.

    கல்லணையில் எவ்வளவே… குழந்தைகளுக்கு சத்துணவு சமைத்துப் போட்டு அடைந்த சந்தோஷத்துக்கு சமமான சந்தோஷத்தை பாலாமணியம்மாள் இங்கே… லிஃப்டில் இறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது சந்தோசத்தில் உயர்ந்துகொண்டு இருந்தார்.

    லிஃப்ட்… தரைத்தளத்தை தொட்டதும்… கதவுகள் அகல திறக்கின்ற சமயம்…

    கந்தவேல்… நெகிழ்வாய் நின்ற பாட்டியின் காலில் விழுந்து ஆசிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் போல தோன்றிய மின்னல் வேக நினைப்பை நொடிப்பொழுதும் தயங்காமல் செயலாக்கினார்.

    கதவு திறந்த பிறகு…

    அவரவர் திசையில் எல்லோரும் பிரிந்து பயணிக்க தொடங்கினர்…

    ஏற்கனவே சொன்னது போல…

    வாழ்வில்… புன்னகைக்க வைக்கின்ற தருணங்கள் புனிதமானவை.

    ஒருவரை எளிதாக அழச்செய்ய வைத்துவிட முடியும்… ஆனால் சிரிக்க வைப்பது சுலபமில்லை!

    பாலாமணி… பாட்டி… இயல்பிலேயே விளையாட்டுத்தனம் மிக்கவர் போல இருக்கின்றது.  என்றும்… அத்தகைய பெரியவர்கள் சூழ்நிலையை தங்கள் மந்திரப் புன்னகையால்… மகிழ்ச்சி மழையில் நனையச்செய்பவர்கள்.

    “யாவருக்குமாம்” என்று திருமூலர் சொல்வதும் காரணமாகவே!

    அவர்… ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு

    நலமா?

    நலந்தானா?

    சௌக்கியமா?

    ஷேமமா?

    சாப்பிட்டாச்சா?

    என்று சில சொற்களின் மூலம்… மந்திரப் புன்னகையை வரவழைத்த பின்பு… பேசத் தொடங்கினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இந்த உலகம் மாறிவிடும்.  இதற்கான விலைமதிப்பு எப்படி நிர்ணயிக்க முடியும்?  அப்படிப்பட்ட நல்லுணர்வை நிலையில்லா… சொற்கள் இன்சொற்கள் மூலம் கொண்டு வந்துவிட முடிகிறது.

    எலிப்பொட்டி இராணி… அப்படின்னா என்ன?

    என்று முருகனை விளக்கம் கேட்டோம்!

    அவர் “எலிஸபெத் இராணியை” பார்த்திருக்கிறாராம்.  சென்னையில்… சாரட் வண்டியில் பலத்த பாதுகாப்போடு இராணி செல்லும்பொழுது… முருகன் சிறு குழந்தையாம்.  அவரை அவங்கம்மா… அவசரமாக அழைத்து, இடுப்பில் தூக்கி வைத்துச் சென்று பாருடா!  என்று

    காட்டியிருக்கிறார்.

    உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?  என்று கேட்டு முருகனை!  இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் காலத்துக்குள் அழைத்துச் சென்று அலசும் எண்ணம் கந்தனுக்கு வரவில்லை!  அதற்கு அவசியமும் இல்லை!

    மந்திரப் புன்னகைகள் இன்னுரையால் மட்டுமல்ல!

    ஆர்வமாக… வயதானவர்கள் சொல்வதை

    செவிமடுத்து கேட்கும்பொழுதும் நம்மால்

    வரவழைக்க முடியும்…

    அடுத்த எலிப்பெட்டி இராணியை எங்கே!  பார்க்கலாம் என்னும் எதிர்பார்ப்போடு… காலம் நகர்கின்றது.

    நகரட்டும்…

    இந்த இதழை மேலும்

    வீரத்தின் வெற்றி

    வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் சக்திகளுக்கு அடி பணிந்து விடக் கூடாது. அதனை எதிர்த்து போராட வேண்டும்.

    அப்பொழுது தான் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க முடியும். இந்தக் கருத்தை கவிஞர் இக்பால் தெளிவு பட விவரிக்கிறார்.

    ஊர்க்குருவி போல மேட்டில் கூட்டைக்கட்டாதே. இராஜாளியைப் போல் மலைக்குப் போய் கூடுக்கட்டு.

    சிங்கம் வாழும் அதே காட்டில் தானே மானும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரில் டாங்க் படை எதிரிகளைத் தாக்கி விரட்டிக்  கொண்டிருந்தது.

    அந்தப் படைக்குத் தலைமை ஏற்று இருந்தவர் ரோமல். இவர் சென்ற இடம் எல்லாம்  வெற்றி கொடியை நாட்டினார்.

    இவருடைய வீரத்தைக் கண்டு வியப்பு அடையாதவர்களே இல்லை நிருபர்கள் ரோமலைக் காண வேண்டி போர்க்களம் சென்றனர்.

    ஓர் உடைந்த டாங்கியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.  அழுக்கு உடையை அணிந்திருந்தார்.

    அவரிடமே சென்று ரோமலின் இருப்பிடத்தைக் கேட்டார்கள் அவர் தூசியைத் தட்டிவிட்டு அவர் இவ்வளவு நேரம் டாங்கின் அடியில் இருந்தார். இப்பொழுது உங்கள் முன் நிற்கிறார்கள் என்றார்.

    நிருபர்கள் அவருடைய வெற்றியின் ரகசியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் பார்த்துப் புரிந்து கொண்டார்கள்.

    திலகரை மீண்டும் சிறையில் அடைக்க ஆங்கிலேயே அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வந்தது. இதனைக் கேள்விடப்பட்டதும் பலரும் வியந்தனர்.

    ஆனால் திலகர் பயப்படவில்லை.  நண்பர் ஒருவர் துயரம் நிறைந்த மனதுடன் தாங்கள் மீண்டும் சிறை செல்ல நேரிட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்.

    தெளிந்த தடாகம் போன்ற சிந்தையுடன் இருந்த திலகர் சிரித்தபடியே கூறினார். அப்பொழுது தான் உண்மையிலேயே ஓய்வு கிடைக்கும். உங்களுக்கும் தீர்க்கமான முடிவுகாண வாய்ப்பு ஏற்படும்.

    இதற்குப் போய் ஏன் பயப்படுகிறீர்கீர்களா? இம்முறை சிறைக்குப் போனால் அமைதியாக உட்கார்ந்து இதுவரை நான் செய்தவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க நேரம் கிடைக்கும்.

    இனி மேல் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவும் எடுக்க முடியும் என்று துணிவுடன் கூறிய படியினால் தான் இன்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    உறுதியுடன் இருந்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்று வாழ்வாங்கு வாழும் வரிசையில் நாமும் இடம் பெற வேண்டாடமா?

    பக்தனின் வேடத்தில் வந்த ஒரு துரோகி, மாபெரும் சீக்கிய குரு கோவிந்த சிங்கை கத்தியால் குத்தி விட்டான்.

    அடிப்பட்ட வேங்கையாக மாறிய குரு கோவிந்த சிங் மின்னல் வேகத்தில் அவன் மேல்பாய்ந்தார்.

    தப்பி ஓடிக் கொண்டிருந்த கொலைக்காரனை ஓங்கிக் கத்தியால் குத்தினார். இது நடந்து நான்கு நாட்கள் ஆனதும் குரு கோவிந் சிங்கின் காயத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.

    கடைசி காலம் நெருங்கி விட்டதை அறிந்த குரு கோவிந்த சிங் தன்னுடைய சீடர்களை எல்லாம் அருகில் அழைத்தார்.

    சாவின் அருகில் நெருங்கி விட்டேன். பலமுறை இதை நேருக்கு நேர் சந்திருக்கிறேன். என்னைப் பின்பற்றுகின்ற நீங்கள் தைரியமாக இருங்கள்.

    இப்பொழுது நான் மணமகனைப் போல் கம்பீரமாகப் பவனி வந்து மரண தேவனதடைய கரம் பற்றுப் போகிறேன். எனக்காக யாரும் கண்ணீர் விடக்கூடாது என்றார்.

    சாகும் நேரத்தில் கூட கம்பீரமாகத்திகழ வேண்டும் என்று கற்பித்த குரு கோவிந்த சிங்கின் வீரம் போற்றத்தக்கது அல்லவா.

    எதற்கும் பயப்படாமல் செயலாற்றும் பொழுது தான் உயர்வு பெற முடியும்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி?

    இளைஞர்களை நீங்கள் பெரிதும் விரும்புவதற்கான காரணங்கள் ஏன்? என்ன சொல்லுங்கள் ?

    பவித்ரா, ஆய்வாளர், கோவை.

    நீங்கள் ஏன் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கிறீர்கள் என்று கேட்டார் ஒருவர். இளைஞர்களை வேறு எங்குதான் பார்க்க முடியும் என்று பதிலளித்தேன். அதே பதில் தான் உங்களுக்கும்; அற்புதமான மனிதர்களை வேறு எங்குதான் காண முடியும்?. கள்ளம் கபடமில்லாத, விருப்பு வெறுப்புகள் இல்லாத, சுயமாக சிந்திக்கும் மனிதர்கள் அவர்கள். அவர்களது மனம் ஒரு அப்பழுக்கற்ற வெள்ளை காகிதம். அதில் சில உயரிய தத்துவங்களை எழுத முடியும் என்பதால் அவர்களை சந்திக்கிறேன்.

    பாதுகாப்பு :

    குழந்தைகள் பலவீனமானவர்கள், அவர்களை அவர்களாகவே பாதுகாத்துக்கொள்ள முடியாது. எனவேதான் கயவர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருகிறார்கள். பாலின விஷயங்கள் மறைக்கப்படுவதாலும், மறுக்கப்படுவதாலும், வெறுக்கப்படுவதாலும் அந்த இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்ட கயவர்கள் குழந்தைகளை தாக்குகிறார்கள். வேறுவிதமான துன்புறுத்துதல்களுக்கும் குழந்தைகள் உள்ளாகிறார்கள். பாதுகாப்பு குறைவான சூழ்நிலையில் அரசாங்கம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உண்மையை வலியுறுத்தவே குழந்தைகளை சந்திக்கிறேன். எனவேதான், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களை சந்திக்க நான் காவல்துறை சீருடையில் செல்கிறேன்.

    பாசம்:

    எனது தந்தையாரும், தாயாரும், சகோதரர்களும், சகோதரிகளும் என்னிடம் அன்பு காட்டினார்கள். வெளி உலகில்  பாதுகாப்பு இல்லை என்றாலும் எனது வீட்டிற்குள் பாதுகாப்பு முழுமையாக இருந்தது. ஆசிரியர்கள் என்னை அளவுக்கு மீறி நேசித்தார்கள்;. நான் நன்கு படித்தேன் என்பதால் அந்த விஷேச உபசரிப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் அது எனக்கு நல்ல உணர்வையும், நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தது. அந்த சலுகைகளை நான் இளைஞர்களுக்கு தர விரும்புகிறேன்.

    நான் காவல்துறை சீருடை அணிந்து ஜிப்பில் வலம் வந்தபோது பிள்ளைகள் எனக்கு சலியூட் அடிப்பார்கள். நானும் பதிலுக்கு சலியூட் அடிப்பேன், அதைக்கண்டு அவர்களும் ஆரவாரம் செய்வார்கள். எனக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்கும்.

    சந்திப்பு :

    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி ஒன்றில் சுதந்திர தின விழாவில் பேசினன். அந்தப் பேச்சைக்கேட்ட தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் இதே போல எங்கள் பள்ளியிலும் பேசுங்கள் என்றார். அன்று துடங்கி நான் சுமார் ஆறுலட்சம் மாணவர்களை இன்றுவரை சந்தித்துள்ளேன். நான் பேசுவதை மாணவர்கள் கவனமாக கேட்கிறார்கள், அவர்கள் சொல்வதை நானும் கவனமாக கேட்கிறேன். எங்களுக்குள் ஒரு வேதியல் உண்டு. மாணவர்களிடம் நடத்தும் இந்த உரையாடல் எனக்கு அதிக உற்சாகத்தைத் தருகிறது. மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு தினம்தினம் பெருகி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

    கடிதம் :

    ஆறுலட்சம் மாணவர்களை சந்தித்துத்துள்ளதாக குறிப்பிட்டேன். அதில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள்,  எனக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். அவைகளைப் படித்து, கழதங்களை அப்படியே பராமரித்தும் வருகிறேன். எனக்கு இருக்கும் சொத்துக்களில் இந்தக் கடிதங்கள் விலைமதிப்பற்றவை.

    மாணவர்கள் புதிய கடிதங்களில்; இப்படியெல்லாம் குறிப்பிடுகிறார்கள்:

    உங்களை எனக்கு பிடித்திருக்கிறது.

    நீங்கள் வித்தியாசமாக உரையாடினீர்கள்.

    உங்களது உரையாடல் பயனுள்ளதாக இருந்தது.

    இரண்டு மணிநேரம் நேரம் போனதே தெரியவில்லை.

    நான் எனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டேன்.

    நான் இன்று முதல் படிக்க துவங்கிவிட்டேன்.

    உங்களிடம் கைகொடுக்க வேண்டும் என்று விரும்பினேன்.

    ஒருநாள் உங்களை நான் ஒரு ஐடந அதிகாரியாக சந்திப்பேன்.

    நீங்கள் இன்னும் நிறைய குழந்தைகளுக்கு உதவுங்கள்.

    நீங்கள் தான் எனக்கு ரோல்மாடல்.

    இன்னும் எல்லாப்பள்ளிகளுக்கும் போய் வாருங்கள்.

    நீங்கள் எனக்கு உதவி செய்வீர்களா?

    கவிதை :

    அந்தக் கடிதங்களில் ஒரு சிலர் எனது படத்தை வரைந்துள்ளனர். சிலர் கவிதைகள் வடித்துள்ளனர், அவற்றுள் சில தன்னம்பிக்கை கவிதைகளாகவும்; உள்ளன. சென்ற வாரம் நான் சந்தித்த திருவண்ணாமலை நகராட்சி பள்ளி மாணவி ஒருவரின் கவிதை வரிகள் இவை:

    முடியும் என்றால் முயற்சி எடு ;

     முடியாது என்றால் பயிற்சி எடு.

    அதே பள்ளியில்  இன்னொரு மாணவி:

    கடமையை செய்தால் வெற்றி ;

    கடமைக்கு செய்தல் தோல்வி.

    இன்னொரு பள்ளியில் ஒரு மாணவன், ‘சிங்கம் இல்லாத காடா? சைலேந்திரபாபு இல்லாத நாடா?’ என்று எழுதியுள்ளார்.

    கடமை :

    இவற்றைப் படிக்கும் போதெல்லாம் இளைஞர்கள் மீது அன்பும் அக்கரையும், நம்பிக்கையும் ஏற்படுகிறது. காவல்துறை கடமையாற்றும் அதேவேளையில், இந்த சமுதாயத்தில் இளைஞர்களுடைய முன்னேற்றத்திற்கு பாடுபடுவது எனது கடமை என்ற உணர்வு ஏற்படுகிறது. எனது கல்வியும், அனுபவமும், நேரமும், வருமானமும் ஒட்டுமொத்த இளைஞர்களின் நலனுக்காக செலவிடுவது என்ற முடிவுடன் இருக்கிறேன்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய நமது இளைஞர்களுக்கு சத்தான உணவு, தூய நீர், சுகாதாரமான சூழ்நிலை, விரும்பும் படிப்பை படிக்க வசதி, ஆசைப்பட்டவருடன் வாழ சுதந்திரம் ஆகியவை இல்லை. படித்தாலும் வேலையில்லை, வேலை கிடைத்தாலும் சம்பளம் போதவில்லை. இதனால் உடல் வலிமை இன்றி மன உறுதியின்றி எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்றி சோர்ந்து கிடக்கும் இளைஞர்களை தட்டி எழுப்ப வேண்டியுள்ளது. இளமைப்பருவத்தில் பல இன்னல்களை சந்தித்த எனக்கு அது முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    நன்றி :

    பள்ளித் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனக்கு அளிக்கும் உதவி வியப்பாக இருக்கிறது. பள்ளி ஆசிரியர்கள் சிலர் முதல்வர்களிடம் என்னைத்தான் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். சில நேரங்களில் பெற்றோருமே அதைச் செய்கிறார்கள். அவர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

    பயணம்: 

    இளைஞர்களால் மட்டுமே ஒரு அறிவார்ந்த, சமத்துவமான, தூய்மையான, அன்பான சமுதாயத்தை உருவாக்க முடியும். அவர்களிடம் சொல்ல வேண்டிய கதைகள் ஆயிரம் என் மனதில் தேங்கிக் கிடக்கின்றன. அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன. அவர்களுக்கான எச்சரிக்கைகளும் உள்ளன. எனவே எதிர்கால இந்திய நாட்டின் நலன் கருதி நான் நேசிக்கும் இளைஞர்களுடன் எனது பயணம்  தொடரும்.

    குறிப்பு:

    குழந்தைகள் என்று நான் குறிப்பிடுவது 18 வயது நிறையாத நிலையில் உள்ள மனிதர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

    இந்த இதழை மேலும்