Home » Editorial (Page 3)

உள்ளத்தோடு உள்ளம்

மனித இனம் தோன்றியதிலிருந்து இன்று வரை ஆணும் பெண்ணும் சமுதாயத்தின் இருகண்களாகாவே இருந்து வருகிறார்கள்.

இங்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டமிருந்தாலும் இன்றளவிலும் அதை ஏனோ நடைமுறை படுத்தவே முடியவில்லை. காரணம் பெண்ணிற்கு சுதந்திரம் வேண்டும் என்று ஒரு பெண் நினைப்பதை விட ஒரு ஆண் நினைத்தாலே நிச்சயம் பெண் விடுதலை கிடைத்துவிடும்.

ஆணாதிக்கச் சமுதாயம் ஒரு பெண்ணை எவ்வாறு சித்தரிக்கிறது என்றால் திருமணம் ஆகுவதற்கு முன் தந்தையின் அரவணைப்பிலும், திருமணம் ஆன பின்னர் கணவனின் அரவணைப்பிலும், குழந்தைப் பெற்ற பின்னர் தன் மகனின் அரவணைப்பிலும் இருக்க வேண்டும், இது தான் பெண்ணிய கட்டமைப்பு என்று சிலர் கூறுகிறார்கள்.

இந்நிலை மாற வேண்டும் என்று தான் கவிஞர்களும், எழுத்தாளர்களும், பெண் விடுதலையாளர்களும் எழுதியும் போராடியும் வருகிறார்கள், ஆனாலும் இன்னும் மாற்றம் வராமல் எத்தனையோ பெண்கள் வீட்டின் வாசலைக்கூட தாண்ட முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு  பெண் இருக்கிறார் என்று பெருமையாகச் சொல்வதை விட உன்னுடைய வெற்றிக்குப் பின்னால் நான் இருக்கிறேன் என்று ஒரு பெண்ணை ஊக்கப்படுத்தினாலே போதும், அவர்கள் வாழ்வில் உயர்ந்து விடுவார்கள், அவர்களின் நிச்சயம் குடும்பத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றே சொல்லலாம்.

தற்போது எல்லாத் துறையிலும் பெண்கள் ஆணுக்கு இணையாக முன்னேறிக் கொண்டு தான் வருகிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற நிலை மாறி இன்று பெண்கள் வேலைக்குச் செல்வதால் தான் எத்தனையோ வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை பெருமையாகச்  சொல்லலாம்.

பெண்ணினத்தைப் போற்றுவோம்… பெருமை கொள்வோம்…

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

உள்ளத்தோடு உள்ளம்

ஒரு கிராமம், அங்கு ஒரு பணக்கார விவசாயிக்கு பல ஏக்கர் நிலம் இருந்தது. வங்கி கணக்கிலோ ஏராளமான பணமும் நகையும் இருந்தது. தனது கடுமையான உழைப்பாலும், உறுதியான உள்ளத்தாலும் அவர் தனது வாழ்நாளில் ஏராளமான செல்வத்தை ஈட்டினார்.

அந்த ஊரில் பலரின் முன் மாதிரியாக விளங்கக்கூடியவர். பலர் இவரைப் போல முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.

இவரைப் பற்றி அறிந்த ஒரு பத்திரிக்கையாளர் நேர்காணலுக்காக செல்கிறார். ஐயா உங்களுடைய பேருக்கும், புகழுக்கும் காரணமான அந்த ரகசியத்தை அறிய விரும்புகிறோம். அதற்கு முன்பு நீங்கள் எப்படி இந்த அளவுக்கு பெரும் பணம் சம்பாதித்தீர்கள் என்று எங்கள் வாசகர்களுக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டார்.

ஆர்வம் ததும்பிய அந்த பத்திரிக்கையாளர் அவரின் பதிலுக்காக காத்திருந்தார். அந்த விவசாயி தம்பி உண்மையிலேயே இது ஒரு பெரிய கதை, கதை சொல்வதற்கு முன் தேவையில்லாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த மின்சார விளக்கை அணைத்து விடலாம். அதன் மூலம் ஓரளவுக்கு மின்சாரத்தை சேமிக்கலாமே என்று விவசாயி கனிவுடன் சொன்னார்.

தங்கள் முயற்சியாலும், கடுமையான உழைப்பாலும் செல்வம் ஈட்டும் ஒவ்வொருவருமே தாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பையும் நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தான் ஒவ்வொரு ரூபாயும் சேமிக்கிறார்கள்.

தங்கள் சேமிப்பில் இவர்கள் மிகுந்து அக்கரை கொண்டு, எதற்கும் வீணாக செலவழிக்காமல் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அது போல தான் நானும் இருக்கிறேன்.

நான் சம்பாதித்து அதன் மூலம் வரும் வருமானத்தை மீண்டும் அதே தொழிலில் முதலீடு செய்கிறேன். இது தான் என்னுடைய வருமான உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.

நம்மில் சிலர் இதைத் தான் கடைபிடிக்க தவறுகிறோம்… ஒரு தொழிலில் வருமானம் வந்து விட்டால் அந்தப் பணத்தைக் கொண்டு அடுத்த தொழில் செய்ய முயல்கிறோம். ஒரு தொழிலில் நல் ஆளுமையும், அனுபவமும் இருந்தால் அதே தொழிலில் அடுத்த அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும்.

இதை சரியாக பின்பற்றினாலே எந்தத் தொழில் செய்தாலும் அதில் ஒரு சாதனையாளராக வர முடியும்…

உள்ளத்தோடு உள்ளம்

2018 ஆம் ஆண்டின் வருகைக்காகக் காத்திருக்கும் அன்பு தன்னம்பிக்கை வாசக நண்பர்களே! அன்பர்களே..!

2017 ஆம் ஆண்டில் நாம் என்ன சாதித்தோம், போதித்தோம். நம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன ஏற்றம் என்ன, நாம் சந்தித்த மனிதர்கள், அவர்களிடமிருந்து கற்றுக்  கொண்டது என்ன என்பதை மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள், இதுவரை சிந்திக்கவில்லை என்றால் மீண்டும் உங்களுக்கு ஒரு நிமிடம் தருகிறேன், சிந்தித்துக் கொள்ளுங்கள்.

இந்த உலகமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒரு பாதையில் பயணம் செய்து நமக்கான வழியைத் தேடிக் கொள்கிறோம்.

மனிதர்களுக்குள் ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது. உன்னை போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். ஐந்தறிவு உயிரினங்களே, அன்பைப் போதிக்கும் பொழுது. அறிவு என்னும் ஆறாம் அறிவை நாம் பெற்றிருக்கிறோம்.  மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனித இனம் மகத்தானது. அதன் உண்மையை நாம் தான் உணர வேண்டும்.

நாம் அனைவரும் தன்னம்பிக்கையுள்ளவர்கள், மண்ணை முட்டும் விதையாய், புதிதாய் ஈன்ற கன்றாய், முட்டையை உடைத்தெரிந்து வரும் பறவையாய், எதிர்நீச்சல் போடும் மீனாய் நாமும் இவ்வுலகத்தை வெல்ல வேண்டும் என்றால் போராடி தான் ஆக வேண்டும். ஒரு முறை போராடி வென்று பார், இவ்வுலகம் எத்தகைய இன்பமானது என்று தெரியும்

இந்நேரத்தில் எங்களின் கரங்களாக செயல்பட்டு வரும் வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், கட்டுரை ஆசிரியர்களுக்கும், இதழுக்கு உறுதுணையாக நிற்கும் பிற நல் உள்ளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

உள்ளத்தோடு உள்ளம்

ஒரு பெரிய பணக்காரர் ஒருவர் சாலையின் ஒரத்தின் அருகில் ஒரு மரத்தடியில் கார் மேல் சாய்ந்து கொண்டு ஏதோ பெரிய யோசனையில் நினைத்துக் கொண்டிருந்தார்.

தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார்.

அப்போது அவ்வழியாக ஒரு பெரிய கட்டெறும்பு அவர் பக்கம் வேகமாய் ஓடிவந்து சிறிது நேரம் நின்றது. தன்னருகில் வந்ததும் தன்னை கடித்து விடுமோ என்று  பயத்தில் அந்த தொழிலதிபர் சற்று நகர்ந்து நின்றார். ஆனால் அந்த எறும்பு அப்படி ஒன்றும் செய்யவில்லை.

வேகமாக, அந்தக் கட்டெறும்பு அந்த சாலையின் குறுக்கே பாய்ந்தது. கார்கள், பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற பல  வாகனங்கள் மல்லிகை சரம் போல இடைவிடாமல் வேகமாக சென்று கொண்டிருந்தது.

எந்த சமயத்தில் எந்த வாகனத்தில்  நசுக்குண்டு கொல்லப்படுமோ என்ற பயத்தில் அந்த எறும்பின் பின்னே கூர்மையான தன்னுடைய பார்வையை முழுவதுமாக செலுத்தி பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தொழிலதிபர்.

ஆனால் அந்த எறும்பு சாலை முழுவதும் சாமர்த்தியமாக கடந்து எதிர்திசைக்கு சென்றது.

இந்நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்த அந்த தொழிலதிபருக்கு ஒன்றன் பின் ஒன்றாக சில உண்மைகள் புலப்பட்டது.

தன்னுடைய நெருக்கடியை இந்த எறும்பை போல தைரியத்துடன் சமாளிக்க வேண்டும் என்றும்.

உருவத்தில் சிறயதாக இருந்தாலும், அதற்கான நம்மையும் கடவுள் மேலிருந்து பார்த்து வருகிறார் என்றும்.

சிறிய நிகழ்ச்சி என்றாலும் அதை கூர்ந்து அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் கவனித்தால் மனிதன் முன்னேறுவதற்கு தொடர்பு கிடைக்கும் போன்ற உண்மைகள் புலப்பட்டது.

உள்ளத்தோடு உள்ளம்

ஒரு கிராமத்தில் கோயில் கட்டிட வேலை தொடர்ந்து 6 ஆண்டுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த ஆறு ஆண்டும் தினந்தோறும் வேலையைப் பார்வையிடுவதற்கு அரசன் வருவார். அப்போது முதியவர் ஒருவர் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கலவையை அரைத்துக் கொண்டு இருப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதே இடத்தில் பல்வேறு வேலையாட்கள் பல நுட்பமானதும், சிரமம் கலந்ததுமான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். பல முறை முதியோரின் வேலையைப் பார்த்து விட்டு தனியாக ஒன்றும் சொல்வதற்கு இயலாத மன்னன் ஒரு நாள் அந்த முதியவரைப் பார்த்து ஏன் பெரியவரே இந்த கோயில் திருப்பணியில் எத்தனை பேர்கள் அரிய பெரிய நுண்ணிய வேலைகளை செய்து என்னை பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் மட்டும் வெறும் கலவை அரைப்பதில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறீர்கள், இதை விட சிறந்த பணியில் ஈடுபடக்கூடாது என்று அரசன் கேட்டார்.

முதியவர் பதில் எதுவும் சொல்லவில்லை, அருகிலிருந்து இரண்டு பெரிய கற்களை எடுத்து அதில் அவர் கலந்த கலவை சிறிதாகப் பூசி வைத்து விட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு கற்களையும் பிரித்து தருமாறு அரசனிடம் வேண்டிக் கொண்டார். அரசானல் அக்கற்களைப் பிரிக்க முடியவில்லை.

அப்போது தான் அந்த முதியோரின் உழைப்பு அந்த சுண்ணாம்பு கலவையின் பலம் அனைவருக்கும் புரிந்தது. அரனும் உணர்ந்து கொண்டார்.

அப்போது அந்த முதியவர் அரசனைப் பார்த்து  நீங்கள் என் வேலையை ஆறு ஆண்டுகள் ஆகியும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. அனால் எனக்கு  அதில் வருத்தமும் கோபமுமில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்னுடைய பணித் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று சொன்னார் அந்த முதியவர்.

இப்படித்தான் சிறிதும் பெரிதுமாக எல்லாப்பணிகளும் சேர்ந்து எழுவது தான் பெரிய மாளிகையாக எழுகிறது. எத்தனையோ பேர் இன்றும் தாங்கள் இருக்கும் கூடத் தெரியாமல் சத்தமின்றி சன்மானத்தை எதிர்ப்பார்க்காமல் ஆக்கப்பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவைகளை அறிந்து போற்றுவதே மனிதனின் கடமையாகும்.

உள்ளத்தோடு உள்ளம்

உண்மையே கடவுள் என்று சொன்னார் மகாத்மா காந்தியடிகள். சின்ன வயதிலிருந்தே உண்மை பேச வேண்டும் என்று அவர் முடிவுக்கு வரக் காரணம் அவர் அரிச்சந்திரன் என்ற நாடகத்தைப் பார்த்தது தான் என்பது அனைவரும் அறிந்துதான்.

ஒரு காலத்தில்  அரிச்சந்திரன் என்ற ராஜா இருந்தார். அவர் எப்பவும் உண்மை தான் பேசுவான் நேர்மையான அரசன்.

அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு நகர் இழந்தான் கடைசியில் இடுகாட்டில் வேலை செய்தான் வறுமை தாண்டவம் ஆடியது, எனினும் உண்மையே பேசி வந்தான்.

அவன் பெற்ற செல்ல மகன் இறந்து விட்டான். புதைக்க வேறு யாரும் இல்லாததால் தாயே அதாவது அரிச்சந்திரனின் மனைவியே பிணமான தன் மகனைத் தூக்கிக் கொண்டு இடுகாட்டிற்கு வருகின்றாள்.

அப்பொழுதும்  அரிச்சந்திரன் நேர்மை தவறாமல் தன் மனைவியிடம் தன் மகனை அந்த இடுகாட்டில் புதைப்பதற்கு பணம் கேட்டான்.

வறுமையால் வாடிய அவனது மனைவியோ பணம் கொடுக்க முடியாமல் பரிதவிக்கிறான். அரிச்சந்திரனும், பிணத்தைப் புதைக்க அனுமதி மறுத்து விடுகிறான். நேர்மை குற்றாமல் வாழ்ந்தான். உண்மை நெறிகளில் திகழ்ந்தான்.

இந்தக் கதை காந்தியடிகளின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டதால் தான் அவர் கடைசி வரைக்கும் உண்மையே பேசினார்.

அப்படி காந்தியடிகள் வாழ்நாள் முழுவதும் உண்மையாக நடந்து கொண்டதால் தான் உத்தமர் மகாத்மா காந்தியடிகள்.

இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்வது உண்மையானவர்களை உலகம் இனங் கொண்டு வணங்கும் என்பதில் எவ்வித மாற்றும் இல்லை.

உள்ளத்தோடு உள்ளம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீடு புதுப்பிப்பதற்காக மரத்தினால் ஆன சுவற்றை பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தார். ஜப்பானில் பெரும்பாலான வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு சுவற்றிக்கும் நன்கு இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றைப் பெயர்தெடுக்கும் பொழுது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கியிருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கியிருக்கிறது என்று பல்லியை சுற்றிப் பார்த்தார் அவர் அப்போது தான் கவனித்தார்.

வெளிபகுதியிலிருந்து அடித்த ஆணி உள்புறத்தில் இருந்த பல்லியின் காலில் இறங்கியிருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது இந்த ஆணியை அடித்து எப்படியும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும். இப்படி இத்தனை ஆண்டுகள் இந்தப்பல்லி உயிருடன் இருந்தது இதை நாம் கண்டுபிடித்து ஆக வேண்டும், என்று மேற்கொண்ட எந்த வேலையும் செய்யாமல் அந்தப் பல்லியை மட்டுமே கண்காணித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார். வந்த பல்லி தன் வயிலிருந்த உணவை எடுத்து, சுவற்றில் சிக்கிக் கொண்ட பல்லிக்கு ஊட்டுவதைப் பார்த்தார். பார்த்த கணம் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டார்.

எதிர்பார்ப்பும் இல்லாமல் ள10 ஆண்டுகளாக இந்தப்பல்லி ஆணியில் சிக்கிக்கொண்ட தன்னுடைய சகப் பல்லிக்கு உணவை அளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடிகிறது என்றால் மனிதர்களாகிய நம்மால் எதுவும் சாத்தியமே. முடியும் என்று முடிவெடுத்து விட்டால் இங்கு வாழ பல வழிகள் இருக்கிறது.

எல்லாம் இழந்து விட்டேன் இனியும் என்ன செய்வேன் என்று வாழ்ந்தால் குட்டை நீர் கூட பெரிய குளமாகத் தான் தெரியும். இழந்தது எல்லாம் நீங்கள் சேகரித்த, சேமித்த பொருள் மட்டுமே தவிர உழைப்பும் தன்னம்பிக்கையும் இன்னும் உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது.

உழையுங்கள் உயருங்கள்…

உள்ளத்தோடு உள்ளம்

உலக நாடுகளிலேயே வேற்றுமைகள் பல கொண்டும் ஒற்றுமையாக வாழும் நாடுகளில் இந்தியா தான் முதன்மையாகத் திகழ்கிறது. இனத்தால் மொழியால், மதத்தால் பிரிந்திருந்தாலும், மனதால் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நாடு இந்தியா.

29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 1618 மொழிகள், 6400 சாதிகள், 6 மதங்கள், 6 இனங்கள் என பல பிரிவுகள் என்றாலும் நாடு என்பது ஒன்று மட்டுமே. இவ்வளவு வேற்றுமைகள் நிறைந்து காணப்பட்டாலும் நாம் ஒற்றுமையாய் வாழ்வதற்கு வழிவகுப்பது நாட்டுப்பற்றும், தேசம் சார்ந்த திருவிழாக்களுமே ஆகும்.

இந்திய கலாச்சாரத்தின் படி விழாக்களுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுப்பார்கள். காரணம் ஒற்றுமை உணர்வுடன் கூடி வாழ வேண்டும் என்பதால் மட்டுமே.

அந்நியர்கள் நம் மண்ணில் கால் ஊன்றிய பொழுது தொடக்கத்திலேயே பலர் ஒற்றுமையாகக் கழகக் குரலை எழுப்பினார்கள். ஒற்றுமையைக் கண்டு கதிகலங்கினார்கள் அந்தியர்கள்.

நாம் இன்று சுதந்திர நாட்டில் இருக்கிறோம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என்றால் இது சாதாரணமாகக் கிடைக்கவில்லை. உண்ணாமல், உறங்காமல் போராடியவர்கள், குடும்பத்தை விட்டு நாட்டு விடுதலைக்காகக் குண்டு அடிப்பட்டு மாய்ந்தவர்கள், சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதை அனுபவித்து இறந்தவர்கள் என்று இவர்களின் வீரத்தின் அடையாளம் நமது சுதந்திர நாடும், தேசிய கொடியும்.

இந்நாளில் நாட்டின் நலனுக்காக தன் நலத்தையும், குடும்ப நலத்தையும் பார்க்காமல் பனிப்பிரதேசங்களிலும், கடும் வெயிலிலும், மழையிலும் நம்மை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களுக்கு இந்நாளில் நாம் நன்றியினைச் செலுத்துவோம்.

நாட்டிற்காக உழைத்தவர்களுக்கும், உயிரை மாய்த்தவர்களும், தற்போது உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…

உள்ளத்தோடு உள்ளம்

ஒரு கிராமத்தில் மகா கருமி(கஞ்சன்) வசித்து வந்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் பணம் சேர்ப்பதிலேயே தீவிரமாக இருந்தான். இதற்காக அவன் நன்றாக சாப்பிடாமல், நல்ல ஆடைகள் அணியாமல், எந்த ஒரு இன்பத்தையும் அனுபவிக்காமல் மிகவும் கஞ்சத்தனமாக இருந்தான்.

இப்படியாக அவன் தனது வாழ்நாளில் 10 கோடி ரூபாய் சேர்த்து விட்டான். இனி இந்தப் பணத்தைக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் சுகமாகவும் வாழலாம் என்று நினைத்திருந்தான்.

அப்பொழுது அவனது உயிரைப் பறிக்க எமன் வந்ததைக் கண்டான். கண்டவுடன் அந்தக்கருமி திகைத்து அலறினான். ஐயா இத்தனை நாளும் என் வாழ்க்கையை சற்றும் அனுபவிக்கவில்லை. இன்று முதல் தான் நான் இன்பமான வாழ்க்கையை அனுபவித்து வாழலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள்  என்னை அழைத்துப் போக வந்து விட்டீர்களே. எனக்கு சில மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சினான் கருமி.

ஆனால் எமன் அவன் கெஞ்சுவதை சற்றும் பொருட்படுத்தமால் மறுத்தவிட்டார். ஐயா, மாதக் கணக்கில் கொடுக்கவில்லை என்றாலும், ஒரு வாரமாவது அவகாசம் கொடுங்கள், அதற்குப் பதிலாக நான் சம்பாதித்தப் பணத்தில் பாதியை உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன் என்றான் அந்தக் கஞ்சன்.

அதற்கும் எமன் செவிசாய்க்கவில்லை. வேறுவழியின்றி ஐயா, இன்று ஒருநாளாவது வாழ அனுமதியுங்கள். அதற்குள் நான் முடிந்தளவு நினைத்த வாழ்க்கையை அனுபவித்துக் கொள்கிறேன். இதற்குப் பதிலாக என் வாழ்நாளில் முழுவதும் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் தருகிறேன் என்றான் அவன்.

எமன் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எமனிடம் ஐயா எனக்கு ஒருசில நிமிடங்கள் மட்டும் உயிர்ப்பிச்சைக் கொடுங்கள். அதற்குள் சிலவற்றை நான் எழுத விரும்புகிறேன் என்றான்.

எமனும் சம்மதித்தார். அந்தக் கருமி அவசரமாக ஒரு தாளில் எழுதினான். அதில் இந்தக்கடிதத்தை யார் படிக்க நேர்ந்தாலும் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால். வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லை.

அது எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. எனவே உங்கள் வாழ்க்கையில் பணம் தேடுவதில் மட்டுமே செலவழிக்க வேண்டாம். வாழும் வரை வாழ்க்கையை அனுபவித்து வாழங்கள். என்னிடம் 10 கோடி ரூபாய் இருந்தாலும், ஒரு வினாடி நேரத்தைக் கூட வாங்க முடியவில்லை. இதனால் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ முன் வர வேண்டும் என்று எழுதி முடித்தான்.

உள்ளத்தோடு உள்ளம்

“நாட்டில் மிகவும் பணக்கார கோயில் எது?” என்று ஒரு பொருளாதாரப் பயிற்சியாளர் கேள்வி எழுப்புகிறார். பயிற்சியில் இருந்த எல்லோரும் ஒரே குரலில் “திருப்பதி வெங்கடாசலபதி” என்று சொல்கிறார்கள். “ஏன்… விளக்கமுடியுமா” என்றார் பயிற்சியாளர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் தருகிறார்கள். அந்தப் பதில்களில் திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார், எத்தனையோ இடங்களில் பெருமாள் ஆலயம் உள்ளது ஆனால் திருப்பதியில் மட்டும் தான் சாமி இரவு 12 மணி வரை பக்தர்களைப் பார்த்து ஆசிர்வதிக்கிறார். மீண்டும் காலை 3 மணிக்கு எழுந்து தரிசனம் தருகிறார். பகலில் ஓய்வு இல்லை மற்ற ஆலயங்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள் பகலில் ஓய்வு உண்டு.

“கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருந்தும் போது நமக்கு… சிந்திப்போம்…சிகரம் தொடுவோம்.”

உழைத்துத்தான் முன்னேறுவேன் என்பதில் ஒவ்வொருவரும் பிடிவாதம் கொண்டு உழைத்தோம் என்றால் ஏய்ப்பவர்கள் ஏமாற்றுபவர்கள் இல்லாது போவார்கள்.

அப்படி ஒரு காலம் உருவாக்கவே உழைப்போம் மாற்றம் வரட்டும் உழைப்பில்!

அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.