உள்ளத்தோடு உள்ளம்
மனித இனம் தோன்றியதிலிருந்து இன்று வரை ஆணும் பெண்ணும் சமுதாயத்தின் இருகண்களாகாவே இருந்து வருகிறார்கள்.
இங்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டமிருந்தாலும் இன்றளவிலும் அதை ஏனோ நடைமுறை படுத்தவே முடியவில்லை. காரணம் பெண்ணிற்கு சுதந்திரம் வேண்டும் என்று ஒரு பெண் நினைப்பதை விட ஒரு ஆண் நினைத்தாலே நிச்சயம் பெண் விடுதலை கிடைத்துவிடும்.
ஆணாதிக்கச் சமுதாயம் ஒரு பெண்ணை எவ்வாறு சித்தரிக்கிறது என்றால் திருமணம் ஆகுவதற்கு முன் தந்தையின் அரவணைப்பிலும், திருமணம் ஆன பின்னர் கணவனின் அரவணைப்பிலும், குழந்தைப் பெற்ற பின்னர் தன் மகனின் அரவணைப்பிலும் இருக்க வேண்டும், இது தான் பெண்ணிய கட்டமைப்பு என்று சிலர் கூறுகிறார்கள்.
இந்நிலை மாற வேண்டும் என்று தான் கவிஞர்களும், எழுத்தாளர்களும், பெண் விடுதலையாளர்களும் எழுதியும் போராடியும் வருகிறார்கள், ஆனாலும் இன்னும் மாற்றம் வராமல் எத்தனையோ பெண்கள் வீட்டின் வாசலைக்கூட தாண்ட முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்று பெருமையாகச் சொல்வதை விட உன்னுடைய வெற்றிக்குப் பின்னால் நான் இருக்கிறேன் என்று ஒரு பெண்ணை ஊக்கப்படுத்தினாலே போதும், அவர்கள் வாழ்வில் உயர்ந்து விடுவார்கள், அவர்களின் நிச்சயம் குடும்பத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றே சொல்லலாம்.
தற்போது எல்லாத் துறையிலும் பெண்கள் ஆணுக்கு இணையாக முன்னேறிக் கொண்டு தான் வருகிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற நிலை மாறி இன்று பெண்கள் வேலைக்குச் செல்வதால் தான் எத்தனையோ வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை பெருமையாகச் சொல்லலாம்.
பெண்ணினத்தைப் போற்றுவோம்… பெருமை கொள்வோம்…
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
0 comments Posted in Editorial