இங்கு இவர் இப்படி
சிலம்பம் சந்திரன்
உலக சிலம்பாட்டம் சங்கம், மாவட்ட தலைவர்
கோவை
தமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை சங்ககாலம் தொட்டு இக்காலம் வரை பல வரலாற்றுச்சான்றுகள் இலக்கியங்களில் காணப் பெற்றுள்ளது. ஆடைகளின்றி அலைந்து திரித்து காடுகளிலும் மேடுகளிலும் நாடோடியாய் வாழ்ந்து வந்தார்கள் மனிதர்கள். விலங்கோடு விலங்காக வாழ்நத மனிதர்கள் மிருகங்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள சில தற்காப்பு முறைகளைக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். வெறும் கையால் அடித்தும், கூர்மையான கல்லைக் கொண்டும் தாங்கியும் கம்பு முதலான கருவிகளைக் கொண்டும் தங்களைப் பாதுகாத்தும் வேட்டையாடியும் வந்தார்கள்.
வீரத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள் தமிழர்கள். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தமிழரின் அடையாளம். காதலானாலும் சரி, மோதலானாலும் சரி, நேர்ருக்கு நேர் எதிர் கொள்வது தான் பழக்கம் என்று நாம் படிக்காத காவியமல்ல, பார்க்காத ஓவியமல்ல, தமிழர்களுக்கே உரித்தான எத்தனையோ வீர விளையாட்டுகள் இருந்து வந்தாலும், நீட்டமான கம்மை புரட்டிப் போட்டு பார்ப்பவருக்கு சிந்தை கலங்கும் மண்ணின் மரபு மானசீகமாக மிளிர, ஆடுகளம் புழுதி பறக்க ஆடும் ஆட்டமே சிலம்பாட்டம். கிராமபுறத்தில் இந்த ஆட்டத்தை கம்பு சுற்றுதல் என்றும் அழைப்பர். பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த வீர விளையாட்டை பழமை மாறாமல் பயிற்றுவித்து வருகிறார் சிலம்பம் சந்திரன் அவர்கள், அவரின் நேர்முகம் இனி உங்களுக்காக…
விவசாய பூமியான பொள்ளாச்சி அருகில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு சிலம்பாட்டத்தின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அதற்கு காரணம் எங்கள் ஊரில் ஒரு சிலம்பாட்ட ஆசான் இருந்தார். அவரின் அணுகுமுறையும் சிலம்பு சுற்றும் விதமும் என்னையும் என்னைப் போன்ற உள்ளவர்களையும் பெரிதாகக் கவர்ந்தது. நாமும் இவரைப் போன்று வர வேண்டும். இந்த சிலம்பாட்டத்தில் கால் பதித்து சாதனைப் புரிய வேண்டும் என்று நினைத்தேன். கடின பயிற்சியும் விடாபிடியான முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் அப்போது எனக்குத் தோன்றியது.
ஊர்த்திருவிழாவாக இருந்தாலும், மற்ற விழாக்கள் எதுவாக இருந்தாலும் சரி அதில் கலந்து கொள்வேன். மக்களிடையே என்னுடைய கலைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆயக்கலைகள் 64 ல் ஒன்றாக இருந்து வந்து இந்த சிலம்பாட்டக்கலை கால மாற்றத்தின் காரணமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. நாம் முன்னோர்கள் காட்டிகாத்த இந்த அரிய கலையை காப்பற்ற வேண்டும் என்று எண்ணினேன்.
இதனால் என்னிடம் வரும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுத்து வருகிறேன். இந்த கலை ஒரு அரிய பொக்கிஷம். இதை வெறும் விளையாட்டாகப் பார்க்காமல் அழித்து வரும் ஒரு கலை மீட்டுருவாக்கம் செய்ய ஒரு விழிப்புணர்வாகப் பார்க்க வேண்டும் என்று தான் மாணவர்களிடம் நான் சொல்வேன்.
நான் கோவையில் அரசுத்துறை அச்சகத்தில் பணியில் பணியாற்றிக்கொண்டிருந்தாலும், சிலம்பாட்டத்தை இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பெரும் அக்கரை எனக்கு இருக்கிறது. வீரமாருதி என்ற பயிற்சி மையத்தை நிரூவி இலவமாகப் பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை இந்த பயிற்சியின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியிருக்கிறேன்.
என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் கடல் தாண்டியும் கண்டங்கள் தாண்டியும் இந்தோனிஷியா, ஐயர்லாந்து போன்ற நாடுகளில் தமிழ் மண்ணின் பெருமையை நாடறிய செய்ய பல வெற்றிகளைக்குவித்து பதக்கங்களையும் பாராட்டுகளையும் பெற்று சாதித்திருக்கிறார்கள் என்பது இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்ள கடமைப்படுகிறேன்.
தற்போது உலக சிலம்பாட்ட சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்து வருகிறேன். இந்தக்கலையின் சிறப்பம்சம் என்னவென்றால், குரு வணக்கத்துடன் தொடங்கப்படும் இந்த சிலம்பாட்டத்தில் தெக்கன்களரி, வாள்வீச்சு, சிறுதாக்குச்சி, நெடுங்கம்பு, கைப்போர், இரட்டைச்சுருள் போன்ற பல வகை உண்டு. தேகப்பயிற்சியுடன் யோகப் பயிற்சியும் தரும் இந்த சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் தேகம் வலுப்பெறுவதுடன் மனதும் ஒரு நிலைப்படுகிறது. இதனால் படிப்பில் மட்டுமல்லாமல் பண்பாட்டிலும் சிறந்து விளங்க முடிகிறது என்று என்னிடமே இக்கலையை கற்றுக் கொண்ட மாணவர்கள் கூறுகிறார்கள்.
தற்காப்புக்கலை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படுகிறது. பாதுகாப்பு குறைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், இந்த தற்காப்புக்கலையை கற்றுக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடலையும், அசாதாரணமான தைரியத்தையும் கொண்டு தனியாக எதையும் சாமாளித்துக் கொள்ள முடியும் என்பது இக்கலையின் கூடுதல் பலம்.
என்னுடைய சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது, செலண்ட் ஆப் சிலம்பம் விருது போன்ற விருதுகள் பெற்றிருக்கிறேன்.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதபடும் இந்த சிலம்புக்கலையை அழியாக்கலையாக கொண்டு வர வேண்டும். எம் இனத்தின் தமிழ் மாமுனி அகத்தியர் அருளிய இந்தக்கலையை என் இறுதி மூச்சு உள்ள வரை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்பேன் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
மரபுக்கலையை கட்டிக்காத்து, இதுவரை பல ஆயிரகணக்கான மாணவர்களுகக்கு இந்தக்கலையைக் கற்றுக் கொடுத்துவரும் வீர மாருதி பயிற்சிப் பள்ளிக்கும், ஆசிரியர் சந்திரன் அவர்களையும் மனதாரப் பாராட்டலாம்.
பாரம்பரிய கலைகள் பல மறைந்து வரும் இத்தருணத்தில் இவரைப் போன்ற சிலர் இன்னும் இம்மண்ணில் இருப்பதால் தான் இன்னும் இக்கலை மாறாமல் இருக்கிறது. மேலும் இவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்தினால் இவர்கள் நம்முடைய பாரம்பரியத்தை உலகரிய செய்வார்கள் என்பதில் எவ்வித மாற்றும் இல்லை.
0 comments Posted in Articles