– 2015 – October | தன்னம்பிக்கை

Home » 2015 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் பள்ளி

    திருமதி தேன்மொழி

    வழக்கறிஞர்

    “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்….,”

    என்ற மகாகவி பாரதியின் வரிகளை உண்மையாக்கி இன்றைய பல பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் திருமதி தேன்மொழி அவர்கள் ‘என்பள்ளி’ நினைவுகள் நம்மோடு…

    என் சொந்த ஊர் திருப்பூர். தந்தை இரத்தின சபாபதி, தாய் விசாலாட்சி. எனது தந்தை திருப்பூரில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். என் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதிரிகள், ஒரு சகோதரன் என மொத்தம் நான்கு பேர். எங்கள் அனைவரையும் தாய் தந்தையர் நன்றாகப் படிக்க வைத்தனர்.

    நான் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை திருப்பூரில் மாவட்டத்தில் உள்ள பிரேமா மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். அடுத்து 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். நான் 12ம் வகுப்பு படித்து முடித்தவுடன் என் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடு நடந்தது.

    இதை அறிந்த நான் என் தாயாரிடம் சென்று, “நான் இந்த வயதிலேயே திருமணம் செய்து கொண்டு, எனது சேவை வீட்டில் மட்டுமே இருக்க வேண்டுமா?” நான் இந்த சமூகத்திற்க்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது. நான் மேலும் படிக்க வேண்டும் எனக் கூறினேன். அதற்கு என் பெற்றோர் என் விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.

    கோவை சட்டக் கல்லூரியில் 5 வருட சட்டப்படிப்பை படிக்க துவங்கினேன். நான் மீண்டும் படிக்கும் பொழுது திருமணம் பற்றி என்னிடம் கேட்டார்கள். அதன்பிறகு பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நான்காம் ஆண்டு படிக்கும் பொழுது திருமணம் முடிவு செய்யப்பட்டது. அப்பொழுது மாப்பிள்ளை வீட்டார் என்னிடம் உங்களுக்கு திருமணத்திற்கு சம்மதமா? என கேட்டபோது நான் கூறியது உங்கள் மகன் கருப்பா, சிவப்பா, படித்தவரா, படிக்காதவரா, வேலையில் இருப்பவரா, இல்லாதவரா, எனக்கு இவை அனைத்தும் தேவை இல்லை.

    நான் நாளை படித்து முடித்தவுடன் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும். அதற்கு சம்மதம் என்றால் திருமணம் செய்து கொள்கிறேன் என்றேன். பிறகு திருமணம் நடந்தது. திருமணத்திற்க்கு பிறகு எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் மகள் அபிராமசுந்தரி, இரண்டாம் மகள் வான்மதி. என் சட்டப்படிப்பிற்க்கு என் பெற்றோர்கள், மாமனார்,  மாமியார் கணவர் என அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். என்னுடைய கணவர் எனக்கு அடிக்கடி கூறுவது, எந்த ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் அதை கலைப்பு இன்றி செய். ஏனென்றால் அந்த சிறிய வேலை பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பார். என் முன்னேற்றத்திற்க்கு முக்கிய காரணம் எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதுதான்.

    ஒரு முறை என் தந்தைக்கு ஒரு முக்கிய வழக்கு வந்தது. அப்பொழுது அந்த வழக்கை என்னை பார்க்கச் சொன்னார். வந்தவர்கள் என் சிறு வயதையும், என் உருவத்தையும் பார்த்து விட்டு ஐயா, இந்த வழக்கை நீங்களே பண்ணிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று என் தந்தையிடம் கூறினார்கள். என் தந்தையும் சரி என ஏற்றுக் கொண்டார். எனினும் அவரால் அவ்வழக்கை நடத்த முடியாத அளவிற்கு முக்கியமான வேலைக் காரணமாக வெளியூருக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. என் திறமையின் மீது நம்பிக்கை வைத்து எனக்கு  ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்கள். வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி அந்த வழக்கை நடத்தினேன். நான் கோர்ட்டில் பேசும் பேச்சையும், எதிர் வழக்கறிஞரை கேட்கும் கேள்வியையும் பார்த்து என்னுடன் வந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் உங்கள் தந்தை வழக்கு நடத்தி இருந்தால் கூட இந்த அளவிற்கு பேசி இருக்க மாட்டார். முதல் முறை வாதடியதே மிகவும் திறமையாகவும், அழகாகவும் இருந்தது என்று கூறினார்கள். நீங்கள் மிகவும் சிறப்பான முறையில் வழக்கை நடத்தினீர்கள் என்றார்கள்.

    உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்

    பதுமை என்னும் புதுமையில் புது அவதாரமாக, உலகின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக, திருப்புமுனையை ஏற்படுத்தி வருகிறார் திருநங்கை பத்மினி பிரகாஷ். அழகான அலங்காரம், அளவான புன்னகை, ஆன்மீகம் ததும்பும் பெண்மையாய், கணீர் குரலுக்கு சொந்தக்காரராக “லோட்டஸ் தொலைக்காட்சியில்” செய்திவாசிக்கும் இவரின் செய்தியைக் கேட்கும் நேயர்கள் ஒருநிமிடம் திகைத்துத்தான் போகிறார்கள்.

    தமிழின் மீது காதல், தளராத தாக்கமாய் செய்தி அரங்கில் பழமையான தமிழ்நடையில் கணீர் குரலில் ஒலிக்கும் இவரது வாழ்க்கையின் வலியை வார்த்தைகளால்  கூட உதிர்க்க முடியாது. வலிகளை வழித்தடமாக மாற்றிய பத்மினி கோவையில், கலாச்சாரப்பின்னணியில் உள்ள ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர். ஒரு திருநங்கையாய் மாறியது இவரின் தவறல்ல. பாலின பாகுபாட்டால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக நேரிட்டது.  ஜீன் செய்த மாற்றம் இவரின் வாழ்க்கையை சிதைத்துப் போட்டது. பள்ளிக்குச் சென்றால், பாலினச்சிக்கல், வீட்டிற்கு வந்தால் வெறுத்து ஒதுக்கும் உறவுகள் என்று பாதிப்பின் துக்கமும் இவரைத் துரத்த, மரத்துப்போன மனதுடன், பசியும், பட்டினியுமான வாழ்க்கை ஓட்டம், ஒரு கட்டத்தில் குடும்பமும் வெறுத்து ஒதுக்கியது.

    அன்றைக்கு, அறியாத வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு சென்றவர், அரளி விதையை அரைத்துக் குடித்து விட்டு இடுகாட்டில் கிடந்தார். இவ்வுலகில் வாழனும் என்று இருந்தால், எவ்வழியிலும் உதவிகள் வந்து சேரும் போலும். ஆம், இவருக்கும் வந்தது, மரணத்தருவாயில் கிடந்த இவரை, மனிதநேயம் மிக்க ஒருவர் காப்பாற்றி மறுவழிகாட்டினார். ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் சாதிக்க வேண்டும் என்றவெறி, சாதனைக்கான குறிக்கோளாக, இவருள் உந்து சக்தியை ஏற்படுத்தியது.

    ஆர்வம் இருந்தாலும், அன்றாடம் வயிற்றுப்பசியை போக்க வாழ்ந்தாக வேண்டும் என்றகட்டாயத்தில், தம் கூட்டத்தினருடன் ஒருகட்டத்தில் மும்பை போன்றநகரங்களில் வாழ நேரிட்டாலும், அந்த வாழ்க்கை இவருக்கு பல பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. ஒருகாலத்தில் சோதனைகளே வழித்தடமாக அமைந்தாலும், அதுவே சாதனைக்கும் வித்திட்டது.

    பட்டம் வாங்காவிட்டாலும் படிப்பின் மீது இவருக்கு தீராத பசி. பாரதியாரின் கவிதைகளாகட்டும், காந்திஜியின் சத்தியசோதனையாகட்டும், நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்துப்படிப்பது இவருக்கு பிடித்தமான ஒன்று. இப்படி, படிப்பின் பிடிப்பால் தம்மை பக்குவப்படுத்திக்கொண்டவர், பரத நாட்டியத்திலும் அரங்கேற்றம் கண்டார். தனித்திறமைகள் வெளிப்படும் போது, தானாகத் தேடிவரும் வாய்ப்புகள் என்று தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றினார்.

    இளைய தலைமுறை எழுச்சி பெற

    இளமை ஒருவரம் : இளமைக்காலம் நம் பெற்றோர்கள் பாதுகாப்பில் சீராட்டி பாராட்டி வளர்க்கப்படும் பருவம். நமக்கு துணைக்கு தாத்தா, பாட்டி, உறவினர்கள் என பலரும் சூழ பயம் அறியாத பருவம் இளமைப்பருவம். அந்த இளமைப் பருவம் கல்வி, வேலைவாய்ப்பு இப்படி பல கட்டங்களைத் தாண்டும் பருவம். பதின் பருவம் துள்ளல் உள்ள பருவம். ‘இளம் கன்று பயமறியாது’ என்பது போல எதையும் செய்து பார்த்துவிட வேண்டும் என துடிக்கும் பருவம். அப்பருவத்தில் பெற்றோர் ஆசிரியர்கள் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நம் எதிர்காலம் ஒளி மயமாக இருக்கும் அல்லவா.

    இளமையில் கல் : இளமையில் கற்றல் பசுமரத்தாணி போல மனதில் பதியும் என்பது உண்மை. எந்த கவலையும் இல்லாமல் கற்றலில் கவனம் செலுத்தினால் மிக அதிக மதிப்பெண் பெறலாம். கவலை கற்பனை வலை என்பார் ‘வேதாந்த மகரிஷி’.

    இளைய தலைமுறையினருக்கு கற்பனை அதிகம், கனவுகளும் அதிகம். வெறும் கற்பனைகளும், கனவுகளும் வளம் தருமா? அவை செயலாக வேண்டும்.

    ஆசைகள் பலவிதம் : ஒரு மாணவனிடம் “நீ என்னவாக வர ஆசைப்படுகிறாய்” என்று கேட்டார் ஒரு பெரியவர். “தெரியவில்லை ‘2 ரிசல்ட் வரட்டும் பிறகு பார்க்கலாம் என்றான் அந்த மாணவன். தான் என்னவாக வேண்டும் என்ற இலக்கு இல்லை. இலக்கு இல்லாமல் துப்பாக்கியால் சுடுவது வீண் தானே! அப்படி இலக்கு இல்லாமல் இளமை வீணாகலாமா? சில மாணவர்களைக் கேட்டால் ஒரு நாள் நான் எஞ்னியராவேன்” என்பான். சில நாட்களுக்குப் பிறகு கேட்டால் நான் டாக்டராவேன் என்பான். இப்படி பல இலக்குகளை அவன் கவனத்தில் வைத்திருப்பான்.

    ‘பல மரம் கண்ட தச்சன் ஒருமரமும்  வெட்டான்’ என்பது போல எதை அவன் அடைவான் என்று சொல்ல முடியாது. ஒரு துறை பற்றிய அழுத்தமான ஆசை வேண்டும். அதை நோக்கிய உழைப்பும் முயற்சியும் வேண்டும். இதை இளைஞர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.

    காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்

    அ.செல்வராஜீ

    ஆராய்ச்சியாளர்

    வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

    மேட்டுப்பாளையம்  641301

    போன் : 9626997808

    மின் அஞ்சல் : selva1004@gmail.com

    அழியும் பேருயிரான யானைகள் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கிறது. 19-ம் நூற்றாண்டில் 50 விழுக்காடாக இருந்த காடுகள் இப்போது சுருங்கி 21 விழுக்காடாக குறைந்துவிட்டது. இந்த 21-ம் நூற்றாண்டில் உலகமயமாதல், நகரமயமாதல், தொழில் வளர்ச்சி, மக்கள்தொகைப்பெருக்கம், காடுகளை அழித்து விவசாய நிலமாகவும் கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்தல் போன்றவற்றால் யானைகளின் வாழ்விடங்கள் குறைந்து அவை பெரும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் யானைகளின் எண்ணிக்கை 27,000 முதல் 31,000 வரை உள்ளது.

    நிலவாழ் உயிரினங்களில் யானைதான் உருவத்தில் மிகப்பெரியது. நாம் ஏன் யானைகளைப் பாதுகாக்க வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன? என்ற ஒரு கேள்வி நம்மில் பலபேருக்கு உண்டு. யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம். ஏன் என்றால், அவை காட்டில் பல உயிரினங்கள் உயிர்வாழ, காரணமாக இருக்கின்றன.

    யானைகள் தொலைதூரம் நடப்பவை. அவை நாளொன்றிக்கு சராசரியாக 25 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டை நடந்து கடப்பவை. யானைகள் நடக்கும் இடமெல்லாம் ஒரு சாலையைப்போல் மாறி விடுகிறது. இன்று நாம் வனப்பகுதியில் பயன்படுத்தும் சாலைகள் பல காட்டில் நாம் குடியேறும் முன்பு யானைகள் பயன்படுத்திய பாதைகள்தான்.

    காட்டில் யானைகள் நடப்பதால் உருவாகும் எல்லா வழித்தடங்களும் ஏதோ ஒரு நீர்நிலையை நோக்கியே செல்லும். கோடையில் நீரின்றித்தவிக்கும் மற்ற விலங்குகள் இந்த யானைப்பாதை வழியே சென்று நீர் இருப்பைக் கண்டறிகின்றன. காட்டில் திக்குத்தெரியாமல் சிக்கிக்கொள்ளும் மனிதர்களுக்கும் பல நேரங்களில் இப்பாதை பயன்படுகிறது.

    நம் இந்திய திருநாட்டில் பெரும்பாலான காடுகள் இலையுதிர் மற்றும் முட்புதர்க்காடுகளாகும். ஆனால் அவற்றில் தான் பல அரிய உயிரினங்கள் காணப்படுகின்றன. ஒரு முட்புதர்காட்டில் புலி வாழ வேண்டுமென்றால் அக்காட்டில் யானைகள் இருக்க வேண்டும் என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. புலி போன்ற ஊண் உண்ணிகளுக்கு உணவாகும் மான் போன்ற தாவர உண்ணிகள் முட்புதர்க்காட்டில் வாழ வேண்டுமென்றால் அவை தடங்கிலின்றி நடமாடப் பாதைகள் வேண்டும்.

    யானைகள் நாளொன்றுக்கு சராசரியாக 16 முறை சாணமிடுகின்றன. இந்த சாணம் பல்வேறு வகைகளில் பிற உயிரினங்களுக்குப் பயன்படுகின்றது. சாணம் நீர்நிலைகளற்ற தரைப்பரப்பில் விழும் போது அதனை நாடி பட்டாம்பூச்சிகள் வருகின்றன, என்பது வியப்பிற்குரிய ஒன்று. யானைக்கும் பட்டாம்பூச்சிக்கும் உறவு இருக்கிறது என்பது வியப்புதானே! குளிர்ந்த அதிகாலைப் பொழுதுகளில் புதிதாக விழுந்த இளஞ்சூட்டு யானைச்சாணத்தில் பட்டாம்பூச்சிகள் அமர்ந்து வெதுவெதுப்பைப் பெறுகின்றன. இதுதவிர சாணத்தில் சில தாது உப்புகள் காணப்படுகின்றன. இத்தாது உப்புகளை ஆண் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் உறிஞ்சுகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்திற்கு இத்தாதுக்கள் தேவைப்படுகின்றன.

    பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்

    ‘அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

    நாடி இனிய சொலின்’

    நல்லதையே விரும்பி இனிய சொற்களை,    பேசி வந்தால் தன்னிடம் உள்ள பாவங்கள் குறைந்து அறம் வளர்ந்து பெருகும்.

    ‘நயன்ஈன்று நன்றிபயக்கும் பயன் ஈன்று

    பண்பின் தலைப்பிரியாச் சொல்’

    மற்றவர்களுக்கு நல்லப்பயனைத்தந்து நன்றி பாராட்டும் சொற்கள்

    எப்போதும் எக்காலத்தும் சொல்பவனுக்கு நன்மையே பயக்கும்.

     -திருக்குறள்

    தவம் என்பது மூன்று வகைப்படும்

    1. உடலால் செய்யப்படும் தவம்
    2. வாக்கால் செய்யப்படும் தவம்
    3. மனதால் செய்யப்படும் தவம்

    பெரியோர்களுக்கும், குருக்களுக்கும், பெற்றோர்களுக்கும் செய்யும் சேவை, உடல் சுத்தம், ஒழுக்கம், பிரம்மச்சரியம் உடலை வருத்தி கடும் உழைப்பு, மற்ற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமை, சோம்பல் இன்மை, தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் ஆகியவை உடலால் செய்யப்படும் தவம்.

    நல்ல நூல்களைப் படிப்பது, உண்மையைப் பேசுவது, மற்றவர்களைப் புண்படுத்தாமல் பேசுவது, பிறருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் நன்மைதரக்கூடிய இனிய சொற்கள் பேசுவது, வாக்குதவறாமல் இருப்பது, அளவறிந்து பேசுவது ஆகியவை நாவினால் செய்யப்படும் வாக்குதவம்.

    உள்ளத்தில் அமைதி, எண்ணங்களிலே தூய்மை, மற்றவர்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என்ற நினைப்பு, மௌனநிலை, தன்னடக்கம் என்ற புலடனக்கம், ஆணவத்தை அகற்றி அடங்குதல், மனிதநேயம், மற்ற உயிர்களை நேசித்தல், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, தர்மமும் தானமும் செய்யும் எண்ணம், பணிவுடன் நடந்து கொள்ளுதல், பாசம், கருணை கருத்து தூய்மை, எண்ணங்களிலே ஜோதியின் சிறகுகள், வாழ்விலே பொன் மயமான மெருகு, பிறருக்கு கேடு நினைக்காமல் இருப்பது, புனிதமான தெய்வீக சிந்தனைகள் இவை மனத்தால் செய்யப்படும் தவம்.

    இந்த மூன்று தவங்களும் முக்கரண தவம் என்று பகவத்கீதை சொல்கிறது. கீதையின்படி, இனிய சொற்களால் பாராட்டிப் பேசுவது ஒரு தவம். மற்றவர்களைப் பாராட்டுகிற குணம் ஓர் உன்னதமான குணம். விலைமதிக்க முடியாத இந்தக் குணம் எல்லோருக்கும் இயல்பாக அமைவதில்லை. துரதிஷ்டவசமாக நமது சமூகத்தில் ஒருவரைப் பாராட்டிப் பேசுவது குறைந்து வருகிறது. பல நேரங்களில் நன்றி சொல்லக்கூட மறந்து விடுகிறோம். பாராட்டிப் பேசுவதற்குக் கூட தயங்குகிறோம். சில சமயங்களில் அந்தப் பழக்கத்தை தவிர்த்து விடுகிறோம்.

    நம்மை நாமே பாராட்டிக் கொள்வதும், நம்மை மற்றவர்கள் பாராட்டுவதும் குறைந்து வருகிறது. அங்கீகாரம் தருவதும் சமுதாயத்தில் குறைந்து வருகிறது. குடும்பங்களில், தொழில்புரியும் இடங்களில், விளையாட்டுத்துறை, கலைத்துறை, அறிவியல்துறை, விவசாயத்துறை, இலக்கியம் போன்ற எல்லா இடங்களிலும் இந்தப் பாராட்டும் குணம் குறைந்து வருவது வருத்தத்திற்குரியது.

    நம்மை நாமே அங்கீகரித்துக் கொள்வதில் குறைவு செய்கிறோம். தாழ்வு மனப்பான்மை காரணமாக நம்மை நாமே பாராட்டிக் கொள்வதும் நம்முடைய வெற்றியை பெருமைப்பட்டுக் கொள்வதும், அங்கீகரித்துக் கொள்வதும் போதுமானதாக இல்லை. அதையும் தவிர்த்து விடுகிறோம்.

    வெற்றிகரமாக முடிக்கப்பட்ட ஒரு பணிக்காக நம்மை நாமே பாராட்டிக் கொள்கிறோமா? முன்னிலைப்படுத்திக் கொள்கிறோமா? என்பது மிகப்பெரிய கேள்வி?

    படிக்கிற ஒரு மாணவனை அல்லது வியாபாரத்தில் நன்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளியை உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஒரு நல்ல வார்த்தைகளினால் பாராட்டிப் பாருங்கள் அதனுடைய விளைவு மூன்று மடங்காக உயர்ந்து பலன் தரும். ஒரு வெற்றி பெற்ற மனிதனுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்த்தால் அவர்களின் பாராட்டும் குணம் முக்கியப் பங்கு வகிப்பது தெரிய வரும்.

    ஒரு மேடை பேச்சாளன் பேசிய பேச்சுக்கு கைதட்டி அங்கீகாரம் கொடுத்துப் பாருங்கள்

    இன்னும் அழகாக அற்புதமாக பேசுவான்.

    ஒரு கலைஞனை கைதட்டி ரசித்துப்பாருங்கள் இன்னும் அதிகமாக தன் கலையை மெருகு ஏற்றி உச்சம் தொடுவான்.

    ஒரு விளையாட்டு வீரனை வெற்றி பெற்றதற்காகப் பாராட்டுங்கள். அவனுக்கு தருகிற அந்தப் புத்துணர்ச்சி ஒரு தங்க மெடலை நாட்டுக்குப் பெற்றுத் தரும்.

    ஒரு மாணவனை ஒரு நொடிப்பொழுது முதுகில் தட்டிக் கொடுத்து ஒரு பாராட்டு தந்தால் அந்த அங்கீகாரம், அந்த அரவணைப்பு, அந்த ஆசிகள் அவனை நூற்றுக்கு நுறு வாங்க வைத்து பல சிகரங்களைத் தொட்டு வியக்கும் நிலைக்கும் உயர்த்தும்.

    ஒரு இசைக் கலைஞர் ஒரு பாடல் பாடி முடித்தப் பின்பு பெறுகிற கை தட்டல் அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு இட்டுச் செல்லும். இன்னும் அருமையாகப்பாடி பெருமைப்பட வேண்டும் என்ற வெறி அவரை மிகச் சிறந்த பாடகராக மாற்றும். நாட்டியம், ஓவியம் போன்ற எல்லா துறைகளுக்கும் இது பொருந்தும். ஒரு பணியாளரைப் பார்த்து உங்கள் பணி மிக நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு தந்தால் இருவருக்குமே அங்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. பாராட்டுபவனும் மகிழ்ச்சியடைகிறான். பாராட்டு பெறுபவனும் மகிழ்ச்சி அடைகிறான். இது ஒரு கலை. ஒரு நிறுவனத்தை நடத்தி செல்பவருக்கு இந்தக்கலை கை வருமேயானல் அந்த நிறுவனம் உற்பத்தியில், உறவுகளில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதன்மை அடையும் என்பதில் எள்முனை அளவுகூட சந்தேகமில்லை.

    ஒருவர் பணியைப் பாராட்டுகிற மனது இருந்தால் ஒரு சில நல்ல வார்த்தைகளினால் பாராட்டுகிற போது பணியாளர்களின் மனம் குதூகளிக்கிறது. மகிழ்ச்சியடைகிறது. தான் பட்ட சிரமத்திற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தாக பெருமிதம் கொள்கிறான். இது பெரும்  ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது. அடுத்து செய்கிற பணியை இன்னும் அழகாக செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் மனதில் தோன்றுகிறது அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பிக்கிறார்கள். பலன் பல மடங்கு நமக்கு திரும்பி வருகிறது. ஒரு பணியாளரை பாராட்டுவதற்குப் பதிலாக குற்றம் கண்டுபிடித்து, குறை சொல்லி வருவதால் அவன் மனம் வேதனைப்படுகிறது. பணியில் ஈடுபாடு குறைகிறது. வேண்டா வெறுப்பாக ஒரு பணியை செய்யத் தொடங்குகிறான். அந்தப்பணி முழுமை அடைவதில்லை. அவர்களுடைய திறமை மழுங்கடிக்கப்படுகிறது. எதை செய்தாலும் நம் முதலாளி நம்மை பாராட்டுவதில்லை என்ற ஏக்கம் அவன் மனதிலே  குடி கொள்கிறது. நிறுவனத்தின் மேல் பாசமும், நேசமும், பிரியமும் குறைகிறது. அந்த நிறுவனத்தின் மேலே ஒரு வெறுப்பு வருகிறது. அதன் பலனாக நிறுவனத்தினுடைய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முதலாளி, தொழிலாளி என்ற உறவு முறை பாதிக்கப்படுகிறது. மனக்குமறல் வெளியே சொல்ல முடியாத வேதனைகளினால் அவனுடைய உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. உள்ள நலனும் பாதிக்கப்படுகிறது. அன்பும் அமைதியும் குறைகிறது. ஆரோக்கியமான சூழல் மாசுபடுகிறது. உழைக்கும் திறனும், உற்பத்தி திறனும் குறைகிறது.

    இந்தக் குறைகளை எல்லாம் தவிர்க்க பணியில் உள்ளோருக்கு ஒரு நம்பிக்கையும், ஊக்கமும், உற்சாகமும், உத்வேகமும், ஈடுபாடு, உழைக்க வேண்டுமென்ற மனப்பக்குவமும் வரவேண்டுமென்றால் ஒரு நொடியில் ஒரு சிறய வார்த்தையில் பாராட்டிப் பாருங்கள். இந்த சிறு பாராட்டு பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.

    இதனால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சந்தோஷ அதிர்வுகளும், மகிழ்ச்சி அலைகளும் அங்கே நிலவும். இனிமையான சூழல் நிரம்பும். மனதிற்கு இதமான புன்சிரிப்புக்களும், ஆனந்த நினைவுகளும் அங்கு அற்புதமாக பெருகும். அந்த மகிழ்ச்சி அலை, அந்த ஆனந்த அதிர்வு, ஒரு தெய்வீக அலையாக மாறும். எப்பொழுதும் உங்கள் பணியாளர்கள் விரும்பி வேலை செய்வார்கள். உங்களையும் விரும்பி நேசிப்பார்கள். அவர்கள் எண்ணங்களும் தூய்மையாகும். மனச்சுமை வெகுவாக குறையும். மனச்சுமை குறையும் போது பணிச்சுமையும் பல மடங்கு குறையும்.

    ஒருசிறு வார்த்ததைகளினால் அவர்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை தருகிற போது, இனிமையான சொற்களினால் மனம் நிறைந்து பாராட்டுகிற போது, அங்குள்ள இறுக்கமான சூழல் மறைந்து இணக்கமான சூழல் ஏற்படும். உறவுகள் பலப்படுகிறது. நேசம் வளர்கிறது. எல்லா இடங்களிலும் எல்லா மனங்களிலும் நிறைவுகள் குடிகொள்கின்றன.

    நன்றி கூறுவதும், பாராட்டுவதும் ஒரு உன்னதமாக பழக்கம், இந்தப் பழக்கம் தன்னம்பிக்கையை தருகிறது. உற்சாகத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு முன்னிலையை உருவாக்குகிறது. ஒருவருக்கு தேவை பாராட்டுவதா? அல்லது குறை சொல்வதா? என்றால் உங்கள் தேர்வு பாராட்டுவதற்குத்தான் கிடைக்கும்.

    பாராட்டு உரை சக்தியை அதிகப்படுத்துகிறது. நேர்மறை எண்ணங்களை வளர்த்து எதிர்மறை எண்ணங்களை அடியோடு நீக்குகிறது.

    ஆதலால் இன்று முதல் ஒரு சபதம் எடுப்போம். நாளை முதல் குறைந்தது ஐந்து பேருக்கு நன்றி சொல்வோம். ஐந்து பேரை பாராட்டுவோம் என்ற பணியை மேற்கொள்வோம். ஒவ்வொரு நாளும் ஐந்து வெற்றிகளுக்கு நம்மை நாமே பாராட்டிக் கொள்வதற்கான  முயற்சியை மேற்கொள்வோம். நமக்கு நாமே அங்கீகாரம் தந்து கொள்வோம். இது  முகத்திலே ஒரு சிரிப்பு அலையை உருவாக்கும். மற்றவர்கள் முகத்திலே ஒரு புன்சிரிப்பை எதிரொலியாக திரும்பப் பெற்றுத்தரும்.

    செய்கிற தொழிலில், செய்கிறப் பணி முழுமையாதாக, பலனுடையதாக எதிர்பார்த்ததை விட அதிகமான வெற்றியை தருவதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ‘இனிய உளவாக இன்னாத கூறல்

    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று’

    என்ற குறளுக்கேற்ப இனிய வார்த்தைகள் என்ற கனி இருக்கிற போது

    கடும் வார்தைகள் என்ற காய்கள் எதற்கு? நீயா ? நானா ? என்றால் அது பகையை வளர்க்கும், அன்பை முறிக்கும், நேசத்தை குறைக்கும். மனதை கெடுக்கும்.

    ‘நீயும் நானும்’ என்றால் அது உறவை வளர்க்கும், அன்பைப் பெருக்கும், பகையை உடைக்கும், மனதை இணைக்கும், நட்பை இறுக்கும், நன்மை பயக்கும்.

    பாராட்டிப் பார்ப்போமே!

    பலனை அதிகமாக பெறுவோமே!

    நம்பிக்கையோடு முயல்வோமே!

    நல்ல வெற்றிக்கு வித்திட்டு மகிழ்வோமே!

    வெற்றி தரும் விஜய தசமி

    செய்யும் தொழிலே தெய்வம்’ என்று உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தொழிலாளர்கள் தாங்கள் செய்திடும் தொழிலுக்கு ஆதாரமான தொழிற்கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து தங்கள் தொழில் வளர, அன்னையின் அருள் வேண்டி வழிபடும் திருநாளாக ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை பராசக்தியை, துணிவைத்தரும் துர்கையாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும் வழிபடுவதோடு அறிவைத் தரும் தலைமகளாகவும் வணங்கி வழிபட்டு சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது.  அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றித் திருநாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் கொண்டாடப்படுகிறது. கெட்டவைகளை நல்லவை வெற்றி கொள்ளும் விழாவாக தசரா கருதப்படுகிறது.

    இவையனைத்தும், பாரத தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேர, சோழ, பாண்டியர்கள், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், மராட்டிய வீரசிவாஜி போன்ற பேரரசர்களும், மன்னர்களும் நாட்டு மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாட்களாகும்.  ஆகவேதான் இன்றளவும் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களும், கல்விக் கூடங்களும், கலைஞர்களும் ஒவ்வொரு ஆண்டும் உவகையுடனும், உற்சாகத்துடன் கொண்டாடும் விடுமுறையுடன் கொண்டாடப்படும் தேசியத் திருநாட்களாக விளங்குகின்றன..

    ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் ஒன்பது நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீதுர்கையின் மகாத்மியத்தைப் போற்றுவதே நவராத்திரி வைபவம்.  நவம் என்றால் ஒன்பது. மகிஷாசுரன் என்னும் அசுரனுடன் அன்னை பராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் அன்னை பராசக்தியை ஒன்பது நாட்களும் வெவ்வேறு வடிவங்களில் வைத்து வழிபடுவார்கள்.  அதாவது முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுவார்கள்.  மகிஷாசுரனை வதம் செய்த வெற்றித் திருநாளான பத்தாம் நாளை விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய பராசக்தி, உக்ரரூபம் கொண்டு மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படுகிறார்.

    ஆயுத பூஜை அன்று அன்னையின் அருள் வேண்டி வழிபடும் அதே நேரத்தில் நாமும் சில உறுதிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆக்கபூர்வமான காரியங்களுக்கு மட்டுமே தொழிற்கருவிகளை, உபகரணங்களை, ஆயுதங்களை பயன்படுத்துவோமே அன்றி அழிவுக்கான செயல்களுக்கு ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதே நேரத்தில் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். ஆயுதங்கள் என்பது வெளியில் இருப்பது மட்டுமன்று.  நமக்குள்ளேயும் பல ஆயுதங்கள் இருக்கின்றன.  சொல்லப்போனால் வெளியே இருக்கும் ஆயுதங்கள் கண்ணுக்குத் தெரியும்.  ஆனால் நமக்குள்ளே இருக்கும் ஆயுதங்கள் பிறர் கண்களுக்குத் தெரியாது.  நம் அகக்கண்களுக்கு மட்டுமே தெரியும்.  ஆம்! பொறாமை, நயவஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்றல், பேராசை, வெறுப்பு, அகங்காரம் என்று எத்தனை எத்தனையோ ஆயுதங்கள் நம்முடைய மனக் கிடங்குகளில் இருக்கின்றன.  இந்த ஆயுதங்கள் நம்மைக் காயப்படுத்தாமலும், பிறரைக் காயப்படுத்தாமலும் இருக்க வேண்டியும் அன்னையிடம் பிரார்த்திக்க வேண்டும்.

    சிறுவர்களை விஜயதசமி தினத்தன்று பள்ளியில் சேர்க்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இந்த நாளில் எல்லாச் செல்வங்களும் வேண்டி இறைவனை வழிபடும் இந்நன்னாளில், கல்விச் செல்வத்தின் சிறப்புகளை நினைவு கூர்ந்து, கல்வி வளம் வீட்டிலும், நாட்டிலும் பெருக உறுதி கொள்ள வேண்டும்.

    அறிவியல் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கை வசதிகள் பெருகியுள்ளன, மறுப்பதற்கில்லை.  அதே நேரத்தில் வாழ்க்கையில் சிக்கல்களும் பிரச்சனைகளும் பெருகியுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.  ஒருபுறம் அறிவைப் புகட்டும் ஆசிரியர்களே அறத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். கற்பிக்கும் ஆசிரியரையே வகுப்பறையில் கொலை செய்கிறான் மாணவன்.

    ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது என்பது காலங்காலமாகவே இருந்து வரும் ஒன்று.  ஒரு வகுப்பில் சில மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மதிப்பெண் குறைவாகப் பெறுபவர்களாக, ஆசிரியர்களிடம் திட்டும், பிரம்பால் அடியும் வாங்குபவர்களாக இருப்பார்கள்.  பிள்ளைகளின் வருங்காலத்தையும் நல்லொழுக்கத்தையும் மனதில் கொண்டு பெற்றோர்களும் ஆசிரியர்களின் செயல்களுக்கு ஆதரவு காட்டி வந்தனர்.

    அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஆசிரியர்களின் கண்டிப்பு என்பது மாணவர் நலன் கருதி இருந்து வருகின்றன.  ஆனால் எந்த அளவுக்கு கண்டிப்பு இருக்க வேண்டும் என்பதை நூல் பிடித்த மாதிரி சொல்ல முடியாது.  மாணவர்களை நெறிப்படுத்த ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறைகளும், கையாளும் செயல் நடவடிக்கைகளும் ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடும்.

    மாணவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் மத்தியில் காணப்படும் பொறுமையின்மையும், பிடிவாதங்களுக்கும், ஒழுக்கமின்மையும், இறையுணர்வு இல்லாமையும், மேற்கத்திய நுகர்வுக் கலாச்சாரமும் இத்தகைய செயல்களுக்கு அடிப்படைக் காரணங்களாக உள்ளன.

    இத்தகைய பிரச்சனைகளைக் குறைக்க இறையுணர்வு துணைபுரியும். இறையுணர்வு என்பது சமுதாயத்தில் ஒழுக்கத்தையும் நேர்மையையும், தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக பய உணர்வையும் ஏற்படுத்துவதாகும். ‘கடவுள் என்று ஒருவர் இல்லையென்றால், அப்படி ஒருவரை நாம் கண்டுபிடித்து நிலை நிறுத்தியாக வேண்டும்’ என்கிறார் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் வால்டேர்.

    ஒழுக்கம் உயர்வு தரும்,  இறை நம்பிக்கை உன்னைக் காப்பாற்றும் என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல போதனைகளை ஊட்டி வளர்க்கும் திருநாளாகவும் இந்த ஆண்டு விஜயதசமி திருநாள் அமையட்டும்.

    இரத்தசோகை

    இரத்தசோகை என்பது இரத்த சிவப்பு அணுக்கள் குறைவுபடும் நிலை மற்றும் ஹீமோகுளோபின் குறைவுபடுவதால் வரும் நிலையாகும். இதனால் இரத்தத்தின் பிராண வாயு எடுத்துச் செல்லும் திறன் குறைகிறது.

    காரணங்கள்

    சிவப்பணுக்கள் உற்பத்தியாவது குறைந்தாலும் அல்லது அதன் அழியும் தன்மை அதிகமாகும் போதும் இரத்த சோகை ஏற்படுகிறது.

    சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவு

    சரியான உணவு ஊட்டம் இல்லாததால் சிவப்பு அணுக்கள் உற்பத்தி குறைதல் (எ.கா.) இரும்புச் சத்து குறைவு, போலிக் அமில குறைவு, வைட்டமின் பீ12 குறைவு.

    தாய்ப்பாலை மட்டும் நீண்ட நாள் கொடுத்தல்.

    குழந்தை விரும்புகின்ற உணவை மட்டும் கொடுத்தல்.

    பாலை மட்டுமே 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கொடுத்தல் (இணை உணவை தாமதமாக கொடுக்க ஆரம்பிக்கும்போது)

    எலும்பு மஜ்ஜையில் சிவப்பு அணுக்கள் உற்பத்திக் குறைவு.

    இரத்த இழப்பு

    காயங்கள் காரணமாக இரத்த இழப்பு, இரத்த அணுக்கள் குறைவாக உற்பத்தியாதல், இரத்த அணுக்கள் அதிகமாக அழிவது, இரத்தம் உறையும் செயல்பாட்டில் குறை ஆகிய காரணங்களால் இரத்த இழப்பு ஏற்படுகிறது.

    குடலில் கொக்கிப் புழு இருத்தல்.

    சிவப்பணுக்கள் அதிகமாக அழிதல்

    (i)  சிவப்பணு அல்லாத புறக்காரணங்கள்

    1. மருந்துகள், இரசாயனப் பொருட்கள்
    2. நோய்த் தொற்று
    3. பிறபொருளெதிரி (ஆன்டிபாடி)கள் எதிர்வினை

    (ii) சிவப்பணு குறைபாடு காரணங்கள்

    1. சிவப்பணுக்களின் மேலுறை குறைபாடுகள்
    2. குறைபாடுள்ள சிவப்பணுக்கள் உருவாதல் (சிக்கிள் செல் இரத்த சோகை, தலசீமியா சின்ட்ரோம் போன்றவை) சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோ குளோபின் உற்பத்தியாகும் அளவிற்கு அழிக்கப்படுகிறது.

    அறிகுறிகள்

    முதல்நிலை

    அமைதியின்மை, சோர்வு, பசியின்மை, சக்தி குறைவு, தலை வலி.

    பின் அறிகுறிகள்

    கண் மற்றும் தோல் வெளிறிய தன்மையுடன் காணப்படுதல், பலவீனமாக இருத்தல், கல்லீரல் வீக்கம், இருதய துடிப்பு அதிகமாதல், படபடப்பு, வகுப்பறையில் தூங்குதல், ஞாபக மறதி மற்றும் படிப்புத்திறன் குறைதல், சுவாசம் அதிகரித்தல், குறுகிய சுவாசம், மண், சாக்பீஸ் போன்றவற்றைச் சாப்பிடுதல்.

    பரிசோதனை

    இரத்த அணுக்களின் எண்ணிக்கை பரிசோதனை, ஹீமோகுளோபின் அளவைக் கண்டறிதல்.

    இரத்த சோகை வகைகள்

    மிதமான இரத்த சோகை

    இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 8-10 கி வரை இருக்கும்.

    நடுத்தரமான இரத்த சோகை

    ஹீமோகுளோபின் அளவு 6-8 கி வரையே இருக்கும்.

    கடுமையான இரத்த சோகை

    ஹீமோகுளோபின் அளவு 6 கிராமுக்கும் குறைவாக இருக்கும்.

    இரத்த இழப்பினால் ஏற்படும் இரத்த சோகை

    அதிக இரத்த இழப்பு அல்லது தொடர்ந்து குறைவான இரத்தப் போக்கினால் ஏற்படுவது.

    இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் இரத்த சோகை

    • தவறான உணவுப்பழக்கம்
    • சத்துக் குறைபாடுகள்

    பெர்னிஷியஸ் இரத்த சோகை

    இரைப்பையின் பரைட்டல் செல்கள் (Parictal Cell) உற்பத்தி (Intrinsic factor) உட்பொருள் குறைபடுவதால் குடலிலிருந்து வைட்டமின் பீ12 இரத்தத்தில் உறிஞ்சப் படுவதில்லை.

    சிக்கில் செல் இரத்த சோகை

    இது ஒரு பரம்பரை நோய். இரத்த சிவப்பணுக்களின் அமைப்பு மாறி விடுவதால் அதிகளவு இரத்த அணுக்கள் அழிக்கப்படுகிறது.

    ஏப்பிளாஸ்டிக் இரத்த சோகை

    இரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது. எலும்பு மஜ்ஜை அழியும் போது அல்லது ஏதேனும் குறைபாடு ஏற்படும் போது இரத்த அணுக்களின் உற்பத்தி குறைந்து இரத்த சோகை ஏற்படுகின்றது.

    மெகலோபிளாஸ்டிக் இரத்த சோகை

    இது வைட்டமின் பீ12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவதால் ஏற்படுகின்றது. இந்த வைட்டமின்கள் டி.என்.ஏ. உருவாக மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. இதன் குறைவினால் ஒரே மாதிரியான எலும்பு மஜ்ஜை ஏற்பட்டு இரத்த சோகை உண்டாகுகிறது.

    இரத்த சிவப்பு அணுக்கள் குறைபாடு இருந்தால் மிக விரைவில் அழிக்கப்படுகின்றது.

    சிகிச்சை முறைகள்

    இரத்தப் போக்கினால் ஏற்படும் இரத்த சோகை

    இரத்தம் ஏற்றுதல் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள்

    இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் இரத்த சோகை – தீவிர நிலைக்கேற்ப கீழ்கண்டவாறு சிகிச்சை தேவை.

          1. மிதமான இரத்த சோகை என்றால்,

    • குழந்தைக்கு இனிப்புக்காக வெல்லம், கருப்பட்டி, தேன், கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை உபயோகித்தல்.
    • இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுதல்.

         2. நடுத்தரமான இரத்த சோகை என்றால்,

    • இரும்புச்சத்து மாத்திரைகள், மருந்துகள் கொடுத்தல்.
    • குடலில் உள்ள புழுக்களை மாத்திரைகளைக் கொடுத்து அகற்றுதல்.
    • உணவுப் பண்டங்களை இரும்புப் பாத்திரத்தில் சமைத்தல்.

      3. கடுமையான இரத்த சோகை என்றால்,

    • இரத்தக்குழாய் மற்றும் தசைகளின் வழியாக இரும்புச்சத்து மருந்து மற்றும் இரத்தத்தை செலுத்துதல்
    • இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுக்கும்போது ஏற்படும் விளைவுகள் தவிர்க்கும் முறைகள்
    1. பற்களில் கறை படிதல் மருந்தை உறிஞ்சி குழாய் மூலம் குடித்தல், மருந்தை சாப்பிட்ட பின் வாய்க் கொப்பளித்தல்
    2. மலச்சிக்கல் நார்ச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுதல் (வாழைப்பழம், வாழைத் தண்டு)
    3. மலத்தின் நிறம் இது இயல்பாக ஏற்படும் காப்பி நிறமாக மாறும் ஒன்று
    4. பெர்னிஷியஸ் இரத்த சோகை

    வைட்டமின் பீ12 உள்ள உணவு பொருட்கள் மற்றும் ஊசிகள் போடுவதன் மூலம் சரி செய்யலாம்.

     4. சிக்கில் செல் இரத்த சோகை

    இரத்தம் செலுத்துதல் மற்றும் போலிக் அமிலங்கள் கொடுக்கலாம்.

          5. ஏப்பிளாஸ்டிக் இரத்த சோகை

    எலும்பு மஜ்ஜை மாற்றுவதின் மூலமும், நோய் எதிர்ப்பு சக்தியை மருந்தின் மூலம் குறைப்பதன் மூலமும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

          6. மெகலோபிளாஸ்டிக் இரத்த சோகை

    வைட்டமின் பீ12 போலிக் அமிலம் தினமும் 1 மி.கி. மற்றும் சத்துள்ள உணவு கொடுப்பதின் மூலம் சரிசெய்யலாம்.

    இரும்புச்சத்து உணவுகள்

    அ.  காய் மற்றும் கீரை வகைகள்

    அரைக்கீரை, வெந்தயக்கீரை, புதினா, சோயா பீன்ஸ், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, பீன்ஸ், பூசணி

    ஆ.  தானிய வகைகள்

    கம்பு, சோளம், முளைவிட்ட கோதுமை, கேழ்வரகு

    இ.  பழங்கள்

    பேரீச்சம்பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சை

    ஈ.  இனிப்பு வகைகள்

    பனைவெல்லம், தேன்

    உ.  பிற வகைகள்

    நண்டு, ஈஸ்ட், இறைச்சி வகைகள் (ஈரல்)

    முடிவுரை

    இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவினையும், காய்கறிகள், கீரைகள் மற்றும் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்யப்படும் உணவுகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

    இசையும் இசைவும்

    ஓரறிவு தாவர இனம் முதல் ஐந்தறிவு உயிரினம் வரை இசையின் அதிர்வால் வளர்ச்சித் தூண்டல் ஏற்படுவதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன.  ஆறறிவு உள்ள மனிதன் இசையால் பயன்பெற முடியாதா? ஒரு நல்ல இசையை அல்லது பாடலைக் கேட்பதன் மூலமும் நாம் ஆரோக்கியமாக வாழலாம். நம் உடலின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் யாவும் இசையின் தாள இலயத்திற்கு ஏற்ப தூண்டப்பட்டு சீரான இயக்கத் தன்மைக்கு கொண்டுவரப்படுகிறது. வீட்டிலும், ஊர் பயணங்களிலும் இசையை இரைச்சலாக பாவிப்பவர்கள் உண்மையில் பாவப் பட்டவர்களே. அவர்களும் இசையை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தோடு கேட்டு இரசித்தால், அவர்களின் இசை அலர்ஜிக்குக் காரணமாக இருக்கும் காரணிகள் அந்த இசையால் நீக்கப்பட்டு இசையை விரும்பும் தன்மைக்கு மாறுவர். ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இசையில்லையாயின் மனிதன் விலங்காகிவிடுவான், அதுவே இசையால் மனிதன் தெவாம்சமாவான். அன்புத் தோழதோழியர்களே! நாம் இசையை எப்படி நம் ஆரோக்கியத்திற்கு இசைவாக கையாள முடியும் என்பதைப் பற்றி இனிப் பார்ப்போம்.

    பஜனைகள் :

    நாம் இறை உணர்வோடு ஒன்ற இசை ஒரு பாலமாக இருப்பதற்கு சான்றுதான் நம் பஜனைகள். பஜனைப் பாடல்களை குழுவாக, இசைப் பின்னனியில் கைதட்டி, உள்ளம் உருகிப் பாடும்போது மிகவும் சக்தி வாய்ந்த அதிவுகளை நம் உடலில் ஏற்படுத்துகின்றன. இதனை நாம் ஒவ்வொரு பஜனைப் பாடல் பாடி முடித்த பின்னர் உள்முகமாக கவனித்துப்பார்த்தால் நம்முள் ஆனந்தப் பிரவாகம் உற்றேடுப்பதைக் உணர முடியும். குழுவாக பஜனை நிகழ்வதால் நமக்கு நிறைவான பலன் கிடைக்கிறது. மாதம் ஒரு முறை இம்மாதிரி பஜனைகளில் கலந்துகொண்டு நம்மை இசை சிகிச்சைக்கு ஆட்படுத்தலாம்.

    இசை நடனம் :

    இசை நடனத்தில் கலந்துகொள்ள நாம் கிளபுகளுக்கு போக வேண்டாம். நம் வீட்டிலேயே, நம் குடும்ப உறுப்பினர்களோடு ஆனந்தமாக இசையின் பின்னனியில் நடனமிடலாம். இசை நடனமாட நமக்கு நடனமாடத் தெரியவேண்டுமென்று கட்டாயம் ஏதுமில்லை. நம் உடலை மிகத் தளர்வாக வைத்துக்கொண்டு நம் இஷ்டம்போல் கை, கால் மற்றும் உடலை வலைத்து நெளித்து கூச்சமின்றி ஆடினால் போதும். நாம் நம் குழந்தைகளோடு ஆடும்போது நம் பிள்ளைகளும் நம்மோடு நட்புணர்வு பாராட்ட இசை நடனம் பாலமாக இருக்கும். குடும்பத்தில் உறவு முறை பலப்பட இது மிகவும் உதவியாக இருக்கும்.

    நேர்மறைப் பாடல் கேட்டல் :

    நம் புத்திக்கு நேர்மறைச் சிந்தனையை ஊக்குவிக்கும் பாடல்களை நாம் வேலை செய்யும்போது கேட்பதால் நம் வேலையும் தொய்வின்றி நடப்பதோடு, நம் உள்ளமும் குதுகளிப்பதோடு, நாமும் வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் பெறுவோம். நம் பிள்ளைகளுக்கு நாம் நேரடியாக அறிவுரை சொன்னால் பிடிக்காமல் போகலாம். ஆனால், நேர்மறைப் பாடல்களை நம் வீட்டில் நாம் கேட்கும்போது, நம் பிள்ளைகளின் காதுக்கும் சிறிது பாயும். அதற்காக “தம்பி இதைக் கேளு’ என்று சொல்லி காரியத்தைக் கெடுக்ககூடாது.

    மந்திர இசை :

    மந்திர சக்திமிக்க இறை நாமங்களை இசையின் துணையோடு ஒலிக்கச் செய்வதால் நம்முள் அற்புதமான அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நாம் வீட்டில் அவ்வப்போது இவ்வித இசையை ஒலிக்கச் செய்வதால் நம் வீட்டில் தெய்வீக ஆற்றல் நிலைக்கொள்ளும். அதேபோல் நம் வீட்டில் வாஸ்துக் குறைகள் (சக்தி ஓட்டம், காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி பரவல் ஆகியவற்றில் குறைகள்) இருப்பின் இவ்வித மந்திர இசை மாயம் செய்யும். உதாரணமாக ஓம், காயத்திரி மந்திரம், சுப்ரபாதம், கந்த ஸஸ்டி கவசம் உள்ளிட்ட பல இசை தயாரிப்புகள் நம் வீட்டிலும் நம்மிலும் ஆற்றலை பரவச் செய்யும்.

    சிகிச்சை இசை:

    நம் உடலின் ஒவ்வொரு தன்மைக்கும் நம் மனதின் ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட இசை வடிவ தயாரிப்புகள் கிடைக்கின்றன, அவற்றை நாம் விழிப்பாகவும் ஆழ்ந்தும் கேட்பதால் நிச்சயம் பலன் உண்டு.

    புத்தக சவால்

    வாழ்வில் வெற்றி காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    “அது என்ன சவால்” என்று தொலைபேசியை தொல்லைப் பேசியாக மாற்றிய இனிய நெஞ்சங்களே !

    சவால்களைச் சந்திக்கலாமா?

    உங்களை தேர்ந்த “புத்தகப்புழுவில்”  இருந்து “புத்தகத் திமிங்கலமாக” மாற்றப்போகும் சவால்களைச் சந்திக்கலாமா?

    52 வாரங்கள் – 52 புத்தகங்கள் :-

    ஒரு வாரத்துக்கு ஒரு புத்தகம் என்று 52 வாரத்துக்கு 52 புத்தகங்களை நீங்கள் படிக்க வேண்டும்.

    உங்களுக்கு விருப்பமான துறையில் (Self Development, Fiction, Horror, Detective Novel போன்று) புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படியுங்கள்.

    இது உங்கள் படிக்கும் வேகத்தையும் தூண்டும்.

    12 மாதங்கள் – 12 புத்தகங்கள் :-

    52 என்பது பெரிய, கடினமான இலக்கு என்று நினைத்தால், மாதம் ஒரு புத்தகம் என்று வருடம் 12 புத்தகங்களைப் படியுங்கள்.

    காலத்தை வெல்லும் சவால் :-

    சாண்டில்யன், கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன், கல்கி போன்று காலத்தைக் கடந்தும் சாதனை படைத்த ஆசிரியர்களின் நூல்களைத் தேர்ந்தெடுங்கள். ஒரு வருடத்துக்குள் அந்த ஆசிரியரின் அணைத்து நூல்களும் படித்துவிடுவது என்பது இலக்கு.

    5 புத்தக சவால் :-

    மற்ற மூன்று சவால்களைப் போல அல்ல இது!. 5 தனித்தனி துறை சார்ந்த புத்தகம் – ஒரு மாதத்துக்குள் படித்து முடிக்க வேண்டும்.  அது மட்டுமல்ல, ஒரு மணி நேரத்தில் அந்த 5 புத்தகத்தின் விமரிசனங்களை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் – ஒரு மணி நேரத்தில் எழுத வேண்டும்.

    (இந்த சவாலின் நோக்கம், உங்களை அருகில் உள்ள நூலகத்துக்குள் செல்ல வைப்பது)

    நண்பர்களுக்கு சவால் :-

    உங்கள் Social Media நண்பர்களுக்கு, உங்கள் விருப்பமான புத்தகங்கள் 10 ன் பட்டியலையும்,  ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தையும் தந்து – அவர்கள் படித்து முடித்தவுடன் – அந்த சவாலை அவர்கள் அவர்களது நண்பர்களுக்கு எடுத்து செல்வது.

    சவாலில் வெற்றி பெறும் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஒரு புத்தகத்தைப் பரிசாக கொடுங்கள்.

    A- Z சவால் :-

    இந்த சவாலின் Rule  மிகவும் எளிது.

    A  என்று தொடங்கும் தலைப்பு உள்ள புத்தகத்தை ஒரு வாரத்தில் படித்து முடிக்க வேண்டும்.

    2 வது வாரம் B என்று தொடங்கும் தலைப்பு.  இப்படியே 26 வாரங்களில் 26 புத்தகங்களை படித்து முடித்திருக்க வேண்டும்.

    ஆறு மனமே ஆறு – ஆண்டவன் கட்டளை ஆறு !

    ஆண்டவன் கட்டளை மட்டும் அல்ல, அறிஞர்களின் கட்டளையும் ஆறு தான் !

    அவை தான் இங்கே “சவால்கள்’ என்ற போர்வையில் உங்களை சந்திக்க வந்திருக்கிறது !

    ஒரு நீண்ட நெடிய ஓட்டப்பந்தயத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று 3 பேருக்கு மட்டுமே மேடையில் இடம் !  ஆனால், களத்தில் எத்தனை கால்கள்.  அனைவரும் பாராட்டுதற்கு உரியவர்களே.

    இந்த சவால்கள் பக்கம் நான் வரவில்லை – ஆனால், புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் எனக்கு இருக்கிறது !  எளிமையான வழிகள் ஏதேனும் இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன் – என்று சிலரது மனம் சொல்லும் குரல் எனக்கு கேட்கிறது !

    நண்பர்களே, இதோ உங்களுக்கான எளிய முறைகள் :-

    • நீங்கள் பிறந்த வருடத்தில் வெளி வந்த ஒரு புத்தகம்.
    • உங்கள் Initial – தலைப்பில் உள்ள ஒரு புத்தகம்.
    • வண்ணங்களின் பெயரை – தலைப்பில் கொண்ட ஒரு புத்தகம்.
    • ஒரு பெயரை (Name ) –  தலைப்பில் கொண்ட ஒரு புத்தகம்.
    • ஒரு என்னை (Number ) –  தலைப்பில் கொண்ட ஒரு புத்தகம்.
    • உங்கள் அபிமான நிறம் (Colour ) –  தலைப்பில் கொண்ட ஒரு புத்தகம்.
    • மனிதர்களே இல்லாத அம்சங்கள் கொண்ட ஒரு புத்தகம்.
    • ஒரு பாடலின் வரி, அல்லது திரைப்படத்தின் தலைப்பை – தலைப்பாக கொண்ட ஒரு புத்தகம்.

    இதில் அனைத்தும், அல்லது ஏதாவது ஒன்றிரண்டு – என்று தேர்ந்தெடுத்து, உங்கள் படிக்கும் ஆவலை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

    புத்தகங்கள் படிப்பதை “கடமையாக’ பார்க்காமல் “கலையாக” பாவித்து, மனம் ஒன்றி இந்த சவால்களை செயல் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.

    எத்தனையோ எழுத்தாளர்கள் விட்டுச் சென்ற பதிவுகள் – உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் சரித்திரமாக இருக்கட்டும் !

    Cable TV Subscription உங்கள் மாதாந்திர செலவில் நீங்காத இடம் பிடித்திருப்பதைப் போலே, Magazine Subscription- ம் இனிமேல் இடம் பிடிக்கட்டும்.

    உங்கள் வாழ்க்கை அர்த்தப்படட்டும்.

    அடுத்த மாதம் !

    எதிர் மறை  (Negative People) மனிதர்களிடம் இருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது – அவர்களை எப்படி அணுகுவது என்று அறிந்து கொள்ளவோம்!

    குழுநிலவு

    பின் நவீனத்துவ சிறுகதை ஒன்றை இந்த வார ஆனந்த விகடன் (16.09.2015 தேதியிட்டது) இதழில் கதிரேசன் படித்தார்.  ஆனந்த விகடனில் வந்த முதல் வரியில் குறிப்பிடப்பட்ட சிறுகதையின் தலைப்பு, ‘இரவில் தட்டப்பட்ட கதவு’.  அதனை எழுதியவர் தமிழ்மகன். நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு என்கின்ற வரிசையில் வந்துள்ள கதை இது.  விஞ்ஞானி காரல் சேகன், நோபல் பரிசு பெற்றஸ்வீடிஷ் எழுத்தாளினி ஸெல்மா லாகர்லெவ், தஸ்தாயேவ்ஸ்கி,  ராபின் குக், மதகுரு எனும் ஸெல்மாவின் கதை, செக்காவ் என்னும் இரஷ்ய எழுத்தாளர் ஆகியவர்களைப் பற்றி  படித்துத் தெரிந்து கொள்ள தூண்டுகோலாக தமிழ்மகன் அவர்களின் படைப்பு ஒரு எள்ளல் நடையில் இருந்தது. எத்தனை பேர் இரசித்திருப்பார்கள் என்ற ஆச்சரியம் எழுந்தது.  எண்களில் என்ன உள்ளது? எண்ணங்கள், படம் பிடிக்கப்பட்டுள்ள விதம் அருமை என்றும் தோன்றியது.

    கதிரேசனுக்கு, போஸ்ட் மாடர்னிஸ  மற்றும் படைப்புக்கள் மீது மிகவும் ஈர்ப்பு உண்டு.  போஸ்ட் மாடர்னிஸத்தில் ஐன்ஸ்டீன் கூறிய பின்வரும் அறிவியல் கூற்று பின்பற்றப்படுகின்றது.  அவர் கூறியதாவது, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கின்ற இந்த மூன்றுமே ஒன்றுதான்.  நமது மிகமிக வலிமையான கற்பனை திரைதான் வலுக்கட்டயாமாக, விட்டுவிலகாமல் இம்மூன்றையும் பிரித்துக் காட்டிக் கொண்டு இருக்கிறது.  அவ்வளவுதான்.  இந்த மாதிரியான பொருள்பட ஐன்ஸ்டீன் கூறியதை ஆங்கிலத்திலிருந்து  கதிரேசன் மொழிபெயர்த்து இருக்கிறார்.

    குழுநிலவு என்கின்ற தலைப்பில் போஸ்ட்  மாடர்னிஸம் குறித்ததான கதிரேசன்  அவர்களது படைப்பை ஏன் படித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று வாசகர்கள் ஆச்சரியம் அடையக்கூடும்.  அது மட்டும் அல்ல குழப்பமும் வரக்கூடும்.  போஸ்ட் மாடர்னிஸம் குறித்து கதிரேசன் நிறைய படித்தபொழுது தெரிய வந்த ஒன்று, போஸ்ட் மாடர்னிஸத்தின் குறிக்கோளே குழப்பமூட்டுவது தான் என்பது. நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.  அது ஒரு இனிய அனுபவம். யாம் கண்ட இன்பம் பெறுக இவ்வையகம் என்று, இன்றைய கணினிசார் கம்ப்யூட்டர் யுகத்தில் காலத்தின் வரையரைகளைத்தாண்டி பயணிப்பது சாத்தியமே என்று பேசும் சத்தம் அதிகமாக கேட்கின்றது.

    இதே செய்திகள் குறித்து நிறைய கட்டுரைகளில் கதிரேசன் பல்வேறு பெயர்களில் எழுதி இருக்கிறார்.  அதையெல்லாம் குறித்து, இந்தக் கட்டுரையில் இருந்து அவரை படிக்கத் தொடங்குபவர்கள் இவர் இப்படித்தான் எப்பவுமே? எழுதுவாரா?  அல்லது எப்பொழுதுமே இப்படியே தான் எழுதிக் கொண்டே இருப்பாரா? என்று கேட்கத் தோன்றலாம். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய, அவசியத்தைப் பயன்படுத்தி கற்பனை கால திரையை குறித்து எழுதியுள்ள ஐன்ஸ்டீனின் கூற்றைமீண்டும் ஒருமுறை சிரமம் பாராது படித்தீர்களானால் – காலம் தொடர்ச்சியாக ஐந்து பரிமாணங்களில் விரிந்து கிடக்கும் ஒரு வெளி என்று புலனாகும்.

    இதை வைத்து ஒரு விண்வெளி பயண நாவல் ஒன்றையும் கதிரேசன் புனை பெயரில் எழுதினார்.  விரைவில் வெளியாகவுள்ள அந்தக் கதையும் கொஞ்சம் போஸ்ட் மாடர்னிஸ்டிக்கே.

    சில கல்லூரி பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் சில தத்துவங்கள் குறித்துக் கொடுக்கும் விளக்கம் அவர்கள் சொல்ல வந்த தத்துவத்தைக் காட்டிலும் குழப்பமூட்டுவதாக இருக்கும். இந்தக் கட்டுரையில் அதை எளிமைப்படுத்தவே, எப்படி போஸ்ட் மாடர்னிஸ ஸ்டைலில் எழுதப்படும் கட்டுரைகளை சுவைக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை குறித்து கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொண்டோம்.

    குழுநிலவு என்று நாம் குறிப்பிடப்போவது ‘ரேடியோ’  பெட்டி மற்றும் “ஒரு குழுவின்” தலைவர் பதவியில் இருக்கின்றமனித பிறவி ஒருவரையும் .

    ஆல் இந்திய ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேச கதிரேசன் அழைக்கப்பட்டதாக கற்பனை செய்க.  மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதாக கதிரேசன் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். சென்னை, திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நிகழ்ச்சி, சரியாக, பிற்பகல்  இரண்டு  மணி முதல் மூன்று வரை நடைபெற இருந்தது.

    அது தெரியாமல் குழு உறுப்பினர்களையும் வழியில் உணவருந்தி செல்லலாம் என்று கதிரேசன் அழைத்தார்.  அவருடைய நண்பர், ஒன்றரை மணிக்கெல்லாம், புத்தக நிலையத்தை அடைந்தாக வேண்டும் என்று கூறினார்.  ஒன்றரை மணிநேரம் முன்னாடி ஏன் போக வேண்டும்? என்ன செய்ய போகின்றோம்? என்று கதிரேசனுக்கு கேட்க தோன்றியது.  ஆனால்  கேட்கவில்லை.  அதுதான் தவறு என்று பின்னர் மிகவும் விசனப்பட நேர்ந்தது.

    ஷேக்ஸ்பியர் மூன்று மணி நேரம் முன்னால் செல்வது கூட ஒரு நிமிடம் காலதாமதமாய் செல்வதை காட்டிலும் உயர்ந்தது என்று கூறியுள்ளாராம்.  கதிரேசன் நேரந்தவறாமையால் முன் கூட்டியே நிகழ்ச்சிகளுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்ததால் அவரது குழு உறுப்பினர்களும் . . . . அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உணவு உண்ண உடன் அமர்ந்து விடுகின்றனர்.  அவர்கள் இருப்பது சென்னை, கிண்டி பக்கம்.  கதிரேசனை பொறுத்தவரையில் அரைமணி நேரம் முன்னால் போனால் போதுமே.  இரண்டு மணிக்கு கிளம்பினால், இரண்டரைக்கு  செல்லப் போகின்றோம். . . என்று அவரது யோசனை.  ஆனால் உணவு வேளையில் அவசரம் கூடாது என மூவருமே பல சுவையான பேச்சுக்களையும், உணவு பகிர்தலையும் செய்கின்றனர்.

    நேரம் ஒரு மணி நாற்பது நிமிடம் என்றநிலையில், நண்பரின் உயர் அதிகாரி கதிரேசனை அழைத்து அன்பு நிமித்தம் நான்கு வார்த்தைகள் பேசினார்.  முந்தைய விழாக்கால சந்தர்ப்பத்தில் கண்ட பழக்கம்.  அவர் எங்கே இருக்கிறீர்கள்?  சென்று சேர்ந்திடுவீர்கள் அல்லவா? என்று கேட்டு வைக்க. கதிரேசன் ஆஹா. . . சரியான நேரத்தில் சென்று விடுவோம் என்று மூன்று மணியை நினைத்து சொல்கின்றார்.

    அதன் பின்னர் நண்பரிடம் . . . என்ன இவர்? இவ்வளவு முன்கூட்டி போக சொல்கிறார் என்று சொன்ன பிறகு . . . நிஜம் தெரிய வந்தது.  மணி 1.42.  தயிர்சாதத்தில் இருந்து கை உயர்ந்தது.  வழக்கமாக உணவு உண்கையில் செல்லிட தொலைபேசியை அமைதிப்படுத்தும் கதிரேசன் அன்று, என்று அதை செய்ய மறந்திருந்தார்.  அது பரபரப்பான நாட்களில் ஒன்றாக மெதுவாக மாறிக்கொண்டிருப்பது புரிந்தது.  அவசரம், மிகுந்த ஆபத்து  நிறைந்தது என்று தெரிந்தபொழுதும் அது தொற்றிக் கொள்வதை உணர முடிந்தது.

    டேனியல் கோல்மேன் தனது உணர்வுசார் நுண்ணறிவு புத்தகத்தில் SOCS என்னும் எமோஷனலான சூழ்நிலையில் முடிவெடுப்பது எப்படி? என்கின்றகேள்விக்கு பதில் தந்திருப்பது நினைவு வந்தது. S என்பது சூழ்நிலை (Situation), O என்பது நம்மிடம் உள்ள பல்வேறு மாற்று உத்திகள் (Options), C என்பது ஒவ்வொரு மாற்று உத்தியை பயன்படுத்துவதாலும் ஏற்படும் விளைவுகள் (Consequences), கடைசி S என்பது முடிவுகள் (Solution). இதுபோன்றதொரு சிக்கலான சூழ்நிலை நம்மிடம் உள்ள முதல் சிக்கல் நேரம்.

    வானொலி… எவ்வளவோ நேயர்கள் கவனிக்கும் ஒரு ஊடகம்.  அதில் பேசும் வாய்ப்பு அமைவது அபூர்வ வகையறாவை சேர்ந்தது.  பல பேருடைய உழைப்பு அந்த நேரலை நிகழ்ச்சிக்கு தேவைப்படுகின்றது. இதில் கால தாமதம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.  தனியார் நிறுவனங்கள் நேரத்தை விலைகொடுத்து வாங்கி விளம்பரப்படுத்துகையில் நாம் சற்றேபிசகான சிந்தனையால், நினைவுப் பதிவால் எத்தகைய வாய்ப்பை இழக்கின்றோம் என்பதனை யோசித்து பதறியது மனது.

    கதிரேசன் முன்பே? ஏன் ஒன்றரை மணி நேரம் முன்னால் போக வேண்டும் என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் . . . நண்பர் சங்கர சரவணன். . . தம்பி இரண்டு மணி நிகழ்ச்சி என்று சொல்லியிருப்பார். கதிரேசன்அனைத்தையும் யோசித்தே உணவு உண்ண அழைத்துள்ளார், அங்கிருந்து திருவான்மியூர் செல்ல குறைந்த நேரமே ஆகும் என்று அவர் நினைத்து விட்டார்.

    கதிரேசன் தன் நண்பருக்கெல்லாம் மூன்று – நான்கு என்று சொல்லியது நினைவு வந்தது. வாகன ஓட்டுனர்கள் இடத்தில் சென்று செல்ல வேண்டிய நேரத்தை சொல்வது விரும்பத்தக்கது அன்று. இடத்தை மட்டுமே சொல்வது பாதுகாப்பானது. வேகம் விவேகம் அன்று.  ஆனால் அன்று அதை கவனத்தில் கொள்வதற்கான வாய்ப்பு குறைவென்று மனது அடித்துக்கொண்டது.

    போஸ்ட் மாடர்னிஸத்தின் முக்காலமும் ஒன்றே என்னும் தத்துவத்தை முன்பு கண்டோம் அல்லவா? வானொலி நிகழ்ச்சிக்கு இன்னும் பதினைந்து நிமிடத்தில் எப்படி போக முடியும் என்கின்றபிரம்மாண்டமான கேள்விக்கு முன்பு கதிரேசனின் நிலவு போன்றகுளிர்ச்சி சற்றே ஆட்டம் கண்டது.

    வானொலி நிலைய நேரலை ஒலிபரப்பு தொழில்நுட்பம் செல்லிடத் தொலைபேசியின் வருகையால் மிகவும் சுலபமாகி இருந்தது.  ஐந்து நிமிட தாமதம் ஒரு இசைப்பாடல் இடைவேளை நிரப்பியால் சரிகட்டப்பட்டது.  முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து நிலா சோறு போல தமிழ்பால் ஊட்டிய வானொலியில் கதிரேசன் படிப்படியாய் எப்படிப் படிப்பது என்று சங்கர சரவணன்  சாரோடு சேர்ந்து பேசினார்.  வானொலியின் குழுவில் எண்ணிலடங்காதோர் கலந்திருந்தனர்.  வானில் இதுபோல எண்ணற்றநிலாக்கள் இருக்கக்கூடும்.  கடந்த செப்டம்பர் 2009 உடன் குறைந்தபட்சம் 145 நிலாக்களை (நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு சொந்தமானது) கண்டறிந்துள்ளனர்.  குழு நிலாக்கள் . . . இன்னும் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை.  காலம் பதில் சொல்லும்!