– 2015 – October | தன்னம்பிக்கை

Home » 2015 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றி பயணங்கள்

    வெற்றி பெற்ற மனிதர்களின் சாதனைகள் பல நம்மை வியக்கச் செய்கின்றன. அவர்களின் சாதனைகளைப்போலவே நாமும் பல சாதனைகளைப் புரியவேண்டும் என்ற ஆர்வமும் நமக்குள் உருவாகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும் பதவிகளும், பாராட்டுகளும், பண முடிப்புகளும், “நாம் கண்டிப்பாக வெற்றியடைந்தே தீர வேண்டும்” என்கின்ற உணர்வைத் தூண்டி, உற்சாகத்தை நமக்குள் விதைக்கிறது.

    வெற்றியாளர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அந்த வெற்றிக்குப் பின்னால் இரண்டு முக்கியமானவைகள் ஒளிந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒன்று “உடல் வலிமை” இன்னொன்று “மன வலிமை”.

    ஒருவர் தனது உடலை நன்றாகப் பேணிகாக்கத் தவறிவிட்டால், பல நோய்கள் அவரைப் பற்றிக்கொள்கிறது. தலைவலி, கால்வலி, கைவலி, முதுகுவலி, மூட்டுவலி, இடுப்புவலி என மெதுவாய் ஆரம்பிக்கும் வலிகள் பலவித வலிகளை அவரது உடலுக்குள் ஏற்படுத்தி விடுகிறது. உடலில் ஏற்படும் இந்த வலிகள் உள்ளத்திலும் வலிகளை உருவாக்குகின்றன.

    “எனக்கு இப்படி நோய் வந்துவிட்டதே”  என எண்ணுகின்ற மனதில் வலி ஏற்படுகிறது. இந்த உடல் வலியோடு மன வலியும் இணைந்துகொண்டால், ஒருவரின் வலிமை தானாகக் குறைந்துவிடும் உற்சாகத்தை இழப்பதற்கும், நல்ல உணர்வோடு உரையாடுவதற்கும் பெரும் தடையாக இந்த வலிகள் அமைந்து விடுகின்றன.

    வெற்றிபெற்ற பலருடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் சில உண்மைகள் நமக்குப் புலப்படும். வெற்றியைப் பெறுவதற்கு இந்த வெற்றியாளர்களெல்லாம் நேரம் பார்க்காமல் உழைத்திருப்பார்கள். அடுக்கடுக்காய் வரும் கவலைகளை உள்வாங்காமல், உறுதியோடு உழைக்கும் வழிகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். தோல்விகள் வரும்போது அதனை தோழனாக நினைத்துக்கொண்டு, தனக்குத் தோள்கொடுக்கும் நண்பனாக மாற்றிக் கொள்வார்கள். பிரச்சனைகள் வருகின்றபொழுது, அதன் தாக்கத்தை தாங்கிக் கொண்டு வீறுநடைபோட்டு முன்னேறுவார்கள். இதனால்தான், வெற்றியாளர்கள் எப்போதும் வெற்றியைச் சந்திக்கிறார்கள். தடைகள் வரும்போதெல்லாம் அதனைத் தாண்டிச் செல்வதற்கான வழிகளை மட்டும் பார்க்காமல், அந்தத் தடைகளை வாய்ப்புகளாக மாற்றுவதற்கு வழி என்ன? என்று சிந்திப்பார்கள். இதனால்தான் வெற்றியாளர்கள் தலைவர்களாக எப்போதும் பவனி வருகிறார்கள்.

    அது ஒரு புகழ்பெற்ற நிறுவனம். ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இலாபம் ஈட்டும் அந்த நிறுவனத்திற்கு திடீரென ஒரு சோதனை ஏற்பட்டது.

    “இந்த ஆண்டு 25 கோடி ரூபாய் அளவுக்கு நமது நிறுவனத்தில் நஷ்டம் உருவாகிவிட்டது. இந்த நஷ்டத்திலிருந்து எப்படி மீண்டுவர முடியும்?” என சோகத்தில் ஆழ்ந்தார். அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்.

    கவலை அதிகமானதால் தனியாக காரில் புறப்பட்டு, நகரத்தில் ஒரு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் பூங்காவிற்கு வந்தார். அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஓரிடத்தில்போய் அமர்ந்துகொண்டார்.

    “எந்த வருடமும் இல்லாத சோதனை இந்த வருடம் எனது நிறுவனத்திற்கு வந்துவிட்டதே!” என்று எண்ணும்போது அவரது நெஞ்சம் வலித்தது. அப்போது ஒருவர் அவர் அருகில் வந்தார். நன்றாக உடை அணிந்திருந்த அவர் மேலாண்மை இயக்குநரின் அருகில் வந்து அமர்ந்தார்.

    “நீங்கள் ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறீர்கள்?” என்று ஆதரவோடு கேட்டார்.

    மேலாண்மை இயக்குநருக்கு அவரது ஆதரவுக் குரல் அமைதியைத் தந்தது.

    “நான் எனது தொழிலில் தோல்வியடைந்துவிட்டேன். இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக 25 கோடி ரூபாய் எனக்கு நஷ்டமாகிவிட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன்?” என்றார்.

    “நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தியாவிலுள்ள இந்தத் தொழிலதிபரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டு, இந்தியாவிலுள்ள ஒரு பெரிய தொழிலதிபரின் பெயரை குறிப்பிட்டார் வந்தவர்.

    “நான் பார்த்ததில்லை ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் மேலாண் இயக்குநர்.

    “அந்தத் தொழிலதிபர் நான்தான். நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு வேண்டிய பணத்தை நான் தருகிறேன். லாபம் கிடைத்த பின்பு பணத்தை நீங்கள் எனக்குத் திருப்பித் தந்தால் போதும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தனது ‘கோட்’ பாக்கெட்டிலிருந்த ‘செக் புக்’ கை கையில் எடுத்தார். பின்பு எழுத ஆரம்பித்தார்.

    “இப்போது 50 கோடிக்கு ‘செக்’ தருகிறேன். இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் நஷ்டத்தை சரி செய்து கொண்டு தொடர்ந்து கடினமாக உழைத்து முன்னேறுங்கள். ஒரு வருடம் கழித்து எனக்கு இந்தப் பணத்தைத் திருப்பித் தந்தால் போதும்” என்று சொல்லிவிட்டு செக்கை அவர் கையில் கொடுத்துவிட்டு சென்று விட்டார் அவர்.

    50 கோடி ரூபாய் ‘செக்’ கைப்பெற்ற மேலாண்மை இயக்குநர் அதிர்ந்துபோனார். அதனை வாங்க வேண்டாம் என மனம் தடுத்தாலும், தனது நிறுவனத்தின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடுமே? என்ற பயத்தில் அதனைப் பெற்றுக்கொண்டு தனது அலுவகத்திற்கு வந்தார்.

    நிறுவனத்திலுள்ள அத்தனை பணியாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    “எனக்கு மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் 50 கோடி ரூபாய் கடன் தந்திருக்கிறார். இந்த ‘செக்’ என் கையில்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பணத்தை நான் பயன்படுத்தப்போவதில்லை. இந்தப் பணத்தைவிட உங்களை நான் நம்புகிறேன். நமது நிறுவனத்திற்கு ஏன் தோல்வி ஏற்பட்டது? நஷ்டம் எதனால் வந்தது? என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும். நஷ்டத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதனை நீக்குவதற்கு பணியாளர்களாகிய நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயம் நாம் அடுத்த ஆண்டு லாபம் சம்பாதிக்கலாம். இதன் மூலம் நாம் அனைவரும் வெற்றி பெறலாம்” –  என்ற மேலாண்மை இயக்குநரின் உறுதியான பேச்சு பணியாளர்களின் ‘உறுதிமொழி’ யாக மாறியது.

    பணியாளர்கள், மேலாண்மை இயக்குநரின் ஆலோசனைப்படி ஒற்றுமையோடு பணியாற்றினார்கள். அந்த ஆண்டின் கடுமையான உழைப்பிற்கு பலன் கிடைத்தது. நஷ்டத்தை ஈடுகட்டி இலாபம் 60 கோடிக்குமேல் கிடைத்தது.

    மேலாண்மை இயக்குநர் மகிழ்ந்தார். தோல்வி நேரத்தில் கடனாக பணம்கொடுத்த அந்த தொழிலதிபரை மறுநாள் சந்திக்க திட்டமிட்டார். தொலைபேசியில் அவருடைய அலுவலகத்திற்கு தொடர்கொண்டு அவரை அதே பூங்காவில் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

    மறுநாள்  குறிப்பிட்ட நேரத்தில் அதே பூங்காவில் அதே இடத்தில் காத்திருந்தார் மேலாண்மை இயக்குநர்.

    அதிகாலை நேரத்தில் அந்தத் தொழிலதிபரும், அவரது கையைப் பிடித்துக் கொண்டு ஒரு பெண்ணும் வந்துகொண்டிருந்தார்கள். லேசான பனிமூட்டத்தால் தூரத்தில் வந்துகொண்டிருந்த அவர்களின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

    மேலாண்மை இயக்குநரின் அருகில் வந்த பெண் “நீங்கள்தான் எங்கள் தொழிலதிபரை சந்திக்க விரும்பினீர்களா?” என்று கேட்டார்.

    “ஆமாம் உங்களோடு வந்த அவரை எங்கே?” என்று கேட்டார் மேலாண்மை இயக்குநர்.

    “அவர் என் கணவர்தான். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் இங்கே வருவோம். அவர் இந்தப் பூங்காவைத் தனியே சுற்றி வருவார். அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. மனநிலை சரியில்லாததால் யாரைப் பார்த்தாலும் ‘உங்களுக்கு பணம் வேண்டுமா? நான் தருகிறேன்’ என்றுச்சொல்லி உதவாத பழைய ‘செக் புக்’ குகளை எடுத்துக் கொண்டுவந்து, அதை கையில் வைத்துக்கொண்டு எப்போதாவது கொடுத்துக்கொண்டே போவார். மனநிலை சரியில்லாததால் அவருடைய மன திருப்திக்காக நான் அவரை இங்கு அழைத்து வருகிறேன்” என்றார்.

    இதைக்கேட்ட மேலாண்மை இயக்குநர் திடுக்கிட்டு அதிர்ந்து போனார்.

    இந்த நிகழ்வில் அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரைப்போலவே நம்மில் சிலர் சிலவேளைகளில் நம்பிக்கையை இழந்துவிடுவதை நம்மால் உணர முடியும். நாம் சிலவேளைகளில் மனதில் ஏற்படும் வலியை தாங்க இயலாமல் சோகத்தில் மூழ்கிப்போகிறோம். அந்த நேரத்தில் ஆதரவாக ஓரிரு வார்த்தைகள் யாராவது பேசினால் கூட அந்தப் பேச்சுக்கள் நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. பெரிய சோகத்தில் இருக்கும்போதுகூட மற்றவர்கள் செய்யும் சின்னஞ்சிறு ஆதரவான செயல்கள்கூட நமது கவலைகளைக் கரையச் செய்கிறது. நம்மை வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கிறது.

    நமது வாழ்க்கை பயணத்தில் தோல்விகள் வரலாம். ஆனால் தோல்விகள் தொடர்கதை அல்ல. தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் நமது வாழ்க்கையை வெற்றி பயணமாக மாற்றிவிடுகிறது.

    அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருக்கு, மனநிலை சரியில்லாத ஒருவர் கொடுத்த செக்கூட உற்சாகத்தை ஊற்றெடுக்க வைத்தது. அந்த உற்சாகம் ஊழியர்களிடம் பரவியது. அவர்கள் மேலும் அதிகமாக உழைக்க அந்த உற்சாகம் உரமாக நின்றது.

    எனவே, எந்த நிலையில் யார், எதை சொன்னாலும் நமது மனநிலையை சரியாக வைத்துக்கொண்டால் மனம் வலிமைபெறும். அந்த மனவலிமை நமது உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த மனவலிமையும், உடல் வலிமையும் இணைந்துகொண்டால் நம் வாழ்வில் என்றும் வெற்றி நமக்குள் உருவாகும்.

    தொடரும்.

    இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!

    இன்று மக்களின் மனோபாவம் மாறிவிட்டது. எதிலும் பொறுமையோ, சகிப்புத் தன்மையோ கிடையாது. அவசரம் – அவசரம் தான். இந்த நிலைதான் ஆரோக்கியமும் அமைதியும் தொடர்ந்து கெடுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது.

    எடுத்தேன்  கவிழ்த்தேன் என்ற நிலையால் இன்று பலர் உரிய காலத்துக்கு முன்பே தங்கள் முடிவைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

    இந்நிலை மாற, தொடர் முயற்சி அவசியம் தேவை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,

    உலைவின்றித்தாழாது என்றார். தன் முயற்சியில் குறைவு இல்லாமல், சோர்வின்றி முயன்றால், இடையூறாக வரும் விதியையும் (ஊழ்) ஒரு காலத்தில் வென்று விடலாம் என குறள் எண் 620-ல் கூறியுள்ளதை நினைவு கூர்வோம்.

    வாழ்க்கை என்பது நீண்ட நெடியபயணம் போன்றது. நமக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியைக் குறைப்பதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது நாம் அறிந்த ஒன்று.

    ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்’ இந்தப் பாடல் வரிகள் நமக்குச் சொல்வது, நம்முடைய ஆயுளில் ஓராண்டு குறைத்து விடும் என்பது தான்.

    நமக்கு முன்னே காத்திருக்கும் வாழ்க்கையை எட்டிப்பிடித்து, இடைவெளியைக் குறைத்து விடுகிறோம். இதோடு முடிந்துவிடாது. மீண்டும் வாழ்க்கை நமக்கு முன்னே சென்று காத்திருக்கும் அதை மீண்டும் எட்டிப் பிடித்து இடைவெளியைக் குறைக்கும் செயலைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    சிறு குழந்தை நடக்கப்பழகுகிறது. நாம் அதன் முன் நின்று கொண்டு நம் கை விரல்களை நீட்டினால், அதைப் பிடிக்க நடந்து முன்னே வரும். உடனே நாம் சிறிது பின்னால் நகர்ந்து நம் கைவிரல்களுக்கும், குழந்தைக்குமான  இடைவெளியை அதிகமாக்குவோம்.

    குழந்தை மீண்டும் முன்னே நடந்து வந்து நம் விரல்களைத் தொட முயற்சிக்கும் போது, நாம் மீண்டும் சிறிது பின்னே நகர்ந்து, இடைவெளியை அதிகமாக்குவோம்.

    இதுபோன்றது தான் வாழ்க்கை

    இதன் நோக்கம், குழந்தை கீழே விழாமல் தைரியமாக நடப்பதற்கான பயிற்சி என்பதுபோல, நம் வாழ்க்கை ஆரோக்கியமாக, ஆனந்தமாக அமைவதற்கு இயற்கையின், விளையாட்டு தான் இது.

    சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதை” என்ற சொற்றொடரை நாம் அறிவோம். இது முயற்சியில் தொய்வின்றி செயல்பட வேண்டும் என்பதற்கான நேர்மறை எண்ணப்பயிற்சி.

    குழந்தை : சில உதாரணங்கள் மூலம் தெளிவு பெறுவோம். பிறந்த குழந்தை தன் தாயிடமிருந்து தனது உணவான பாலை அருந்தி ஆரோக்கியமாக வளர்கிறது. காற்றுப்புகாத, கலப்படமில்லாத, இடைவெளியே இல்லா வகையில் இந்தப் பாலைக் குடிக்கிறது.

    வெளி உணவு என்ற வகையில் மாட்டுப்பால் மற்றும் பவுடர்பால் போன்றவைகளை உணவாகக் கொடுத்து வளர்க்கும் சூழலை உருவாக்கிக் கொண்டோம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே ஆரோக்கியம் கெடும் வாய்ப்பை உருவாக்கி விட்டோம்.

    இதற்கு என்ன தான் மாற்று? உள்ளதே! கடந்ததை யாராலும் மாற்ற முடியாது.

    எனவே, இன்று முதல் தினமும் நாம் உண்ணும் உணவுகளை வாயிலிட்டு, உதடுகள் இரண்டையும் நன்றாக மூடி, காற்றுப்புகாமல், பற்களால் மென்று, அரைத்து, வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் நீரைக் கலந்து விழுங்கும் செயலைப் பழக்கமாக்குவோம்.

    படிப்பு : கல்வி கற்கும் வயதில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும், விழிப்பு நிலையில் கற்பித்தலை கவனித்தாலே, இடைவெளி குறைந்து, முழு அர்த்தத்துடன் மனதில் நன்கு பதியும்.

    கல்வி நிலையங்களில் கவனிக்காவிட்டால் வீட்டில் அல்லது டியூசனில் அமர்ந்து உருப்போடும் நிலைக்குத் தள்ளப்படுவதைப் பார்க்கிறோம்.

    இல்லறம் : திருமணம் என்ற புனித நிகழ்வால் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் இல்லறம் துவங்குகிறது. உடல் வேறு வேறு என்றாலும், எண்ணத்தால் இடைவெளியின்றி இருவரும் இணையும்போது வாழ்க்கை மிகச் சிறப்பானதாக அமைகிறது.

    “எக்கணமும் இருவருமே பிறர்

    உள்ளத்தில் எழுகின்ற

    உணர்ச்சிகளைக் கூர்ந்துணர்ந்து

    அக்கணத்தின் சூழ்நிலையைப்

    பயனாய் பெற்றே, ஆராய்ந்து

    எதிர் விளைவைக் கணித்துக்கொண்டு

    மிக்க நலமுள வழியே செயல்களாற்றி

    மேலான அறவழியில் வாழ வேண்டும்”

    என்று இல்லறத்தைப் பற்றி தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கூறுவார்கள்.

    இந்த நெருக்கம் தான் குடும்பத்திலே வேண்டும். அப்போதுதான் அது இன்பத்தைக் கொடுப்பதாக அமையும்.

    பணி: உயிர் வாழ்வதற்கான உணவுப்பொருட்களை வாங்கவும், சார்ந்திருப்போருக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யவும் தேவையான பொருளீட்டுவதற்கான செயலே பணியாகும்.

    ஒருவர் தாம் பார்க்கும் பணியில் எவ்விதமான மனக்குறையுமில்லாமல், முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் செயல்படும் நிலைதான் இடைவெளி இல்லா நிலை.

    இந்த நிலைக்கு மனம்மாறிவிட்டால், நாம் பெறும் சம்பளத்தொகை எவ்வளவாக இருந்தாலும் நம்மை, அது பாதிக்கவே பாதிக்காது.

    ஆனால் வேண்டா வெறுப்பாகச் செயல்பட்டு அதற்குப் பெறும் ஊதியத்தால் வாழும் வாழ்க்கை நிறைவில்லாததாகவே அமைந்து விடுகிறது.

    கை நிறையச் சம்பாதிக்கும் பலர் மனக்குறையுடன் வாழ்வதையும், குறைவாகக் கிடைத்தாலும் நிறைவாகப் பணியாற்றி, திருப்தியுடன் சிலர் மகிழ்வாக வாழ்வதையும் பார்க்கிறோமே!

    மனஈடுபாடு : இந்நிலையை நாம் எளிதில் பெற முடியும். இலவசமாக ஏதும் கிடைக்காது. இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கு பல இலவசங்களை வாரி வழங்கி ஓட்டு வங்கியைத் தக்க வைக்கும் தவறான நடைமுறையைக் கையாண்டு மக்களை மிருகங்களாக மாற்றி வருவது பெரும் பழிச் செயல்.,

    இடைவெளியை நீக்க, அல்லது குறைக்க தியானம் அல்லது தவம் செய்வது பலனளிக்கும். உலகம் முழுவதும் இதன் சிறப்பை உணர்த்தவே ஜுன்மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா நாளாக இந்த ஆண்டு முதல் கொண்டாடத் துவங்கியுள்ளோம்.

    இறைநிலையிலிருந்து பின்னப்பட்டு, நம் உடலுக்குள் உயிராக இருக்கும் ஆன்மா, மனமாக விரிந்து, அந்த இறை நிலையோடு தன்னை இரண்டறக் கலக்கச் செய்யும் பயிற்சி – நினைவுதான் தியானமாகும்.

    முதுமை : ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?’ என்ற பாடல் வரிகளால் நாம் அறிவது எல்லோருமே ஏதாவதொரு நாளில் இறக்க வேண்டும் என்பதைத் தான்.

    இறப்பதற்கு முன் முதுமைப் பருவத்தில் உடல் தளர்வு, உடல் உறுப்புகளின் செயல்பாடு பாதிப்பு, நினைவு இழப்பு, செரியாமை எனப் பலவகை பாதிப்புகளுக்கு உள்ளாவது வாடிக்கை.

    மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து, குடும்பத்திலிருந்து பிரித்து வைத்து, சிலரை ஐஇம என்ற தனி அறையில் வாடச் செய்வது வாடிக்கையாகி விட்டது.

    குணப்படுத்துகிறோம் என்று கூறி, இடைவெளியுடன் கூடிய மாத்திரைகளுடன் இடைவெளியே இல்லாத ஊசிகள் மூலம் மருந்தினை உடலுக்குள் செலுத்துவது, குளுக்கோஸ் நீர் அனுப்புவது போன்ற செயல்களைச் செய்வதைப் பார்க்கிறோம்.

    இறுதிவரை மனித குலத்துக்குத் தேவை அன்பு ஒன்றே. இதை வலியுறுத்தியே  “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” எனக் குறள் 71ல் திருவள்ளுவர் தெளிவாக்கியுள்ளார்.

    அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை  வாழ்க்கையல்ல என்பதை மிக அற்புதமாக பாலை நிலத்தில் மரம் துளிர்த்தாற் போன்றது என்றார் செந்நாப்புலவர்.

    எனவே, மனிதராகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் நம் வாழ்க்கை இன்றும், என்றும், எக்காலத்தும் அமைதியாக, ஆரோக்கியமாக, ஆனந்தமாக அமைவதற்கு, இடைவெளியை பூஜ்யமாக்கும் கலையைக் கற்றுக் கொண்டோம்.

    இதுவரை கற்றது போதும்;

    இனி வாழ்ந்து பார்ப்போமே!

    ஒன்று உணவை உதடுகளை மூடி உண்போம்.

    இரண்டு அனைவரையும் பிரதி பலன் எதிர்பாரா அன்போடு நேசிப்போம்.

    இதனால், இன்பமான வாழ்க்கையை வாழ்வோம்!

    – நிறைவு –

    காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!

    இளமை  முதுமை  மூன்றெழுத்தின் முகவரிகள். இளமை வாலிபத்தின் வயாகரா. முதுமை காலம் துப்பிய அனுபவ குப்பை. கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதின் அடையாளச் சின்னமே முதியோர் காப்பகங்கள்.

    நிழல் தரும் குடை

    வெயில் காய்ந்தே

    நிழல் தருகிறது!

    பழம் கொஞ்சம்

    மரம் கல் அடிபட்டே

    முதிர்கிறது!

    உன் வாழ்க்கையும்

    உணரப்படும் நீ

    முதிரும்போது

    நீராய், நிழலாய் கனியாய்

    குடையாய்… என்பார் ராசை நேந்திரன். அப்பா ஒற்றைச் சொல்லின் உலகம் உற்றுப்பார்.  அம்மா மடியில் படுத்துப்பார் அன்பு ஒழுகும். ஆத்தா, தாத்தா, அம்மா, அப்பா சுமையல்ல சும்மாடுதான்.

    முதியோர் காலம் பிசைந்த காகிதச் சிற்பங்கள். சூரியனின் ஒட்டுமொத்த வெளிச்சங்கள். 60  வயதை, பூர்த்தியானவுடனே இவர்கள் மூத்த குடிமக்களாக முடிசூட்டிக் கொள்கிறார்கள். வேடிக்கையான வார்த்தைக்குள்ளும் வாடிக்கையாய் சொல்லுவதுண்டு. “60 வயதிற்குள் நாம் இறந்தால் நம் குடும்பத்திற்கு பிரச்சனை. 60 வயதிற்கு மேல் நாம் இருந்தால் நமக்கே நாம் பிரச்சனை”

    இவர்களின் பொக்கை வாய்ச்சிரிப்பு குழந்தைகளின் ஆனந்தக் குதிப்பு. இவர்களின் மனசுக்குள் மடிப்பு விழாமல் பார்த்துக் கொண்டால் நடிக்காத வாழ்க்கை நாளை நமக்கும் கிடைக்கும். வார்த்தைகள் அனுபவ வாய்ப்பாடுகள்; உலக வரைபடத்தின் உண்மை வெளிப்பாடுகள்.

    முதுமை காலம் துப்பிய சக்கைதான். இனியேனும் அந்த சக்கையை உங்கள் தோள்களில் சாய்ந்து கொள்ள தூண்களாக இருங்கள் அப்பொழுதுதான் நாளை நீங்கள் சாய்ந்து கொள்ள தூண்கள் துணையாக கிடைக்கும்” என்பார் பேராசிரியர் க.இராமச்சந்திரன்.

    முதியோர் காப்பகத்தில் இருந்தவர் புதிதாக வந்தவரிடம் கேட்டார். “எப்போதாவாது முன்பு இங்கு வந்திருக்கிறாயா? ஆம்  வந்திருக்கிறேன்  20 வருடத்திற்கு முன்பு என் பெற்றோரை சேர்க்க வந்திருக்கிறேன். “நீ விதைத்ததை நீதான் அறுவடைச் செய்ய வேண்டும்” என்று சொல்வது போல் இருந்தது.

    கிழட்டுப்பசு  உயிர் போய்விடும் நிலையில் படுத்திருந்ததைப் பார்த்து வெள்ளாடு கவலையோடு கேட்டது ‘உன் வீட்டுக்காரன் முன்பெல்லாம் இதமாக தடவிக் கொடுப்பானே, குளிப்பாட்டி கம்பீரமாய் நிற்க வைப்பானே  இப்போது உன்னை திரும்பிக் கூட பார்ப்பதாக தெரியவில்லையே அது ஏன்?

    பசு ஆட்டுக்குப் பதில் சொன்னது ‘என்னால் இனி பயனில்லை  பயனில்லாத என்னை ஏன் பார்க்க வேண்டும்? கொடுக்க பாலும் இல்லை. ஏற்க ஆளும் இல்லை’ என்றது என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கதையில் கருத்தாழம் உண்டு. தாய்ப்பால் விற்பனைக்கு வந்தாலும் தாயின் அன்பான அரவணைப்பை புட்டிப்பாலால் கொடுக்க முடியுமா? வயதானவர்களுக்கு தேவை காசு பணமில்லை. அவர்களுக்கு அன்பையும் கொடுக்க வேண்டும். இதமான அரவணைப்பையும், ஆறுதலையும் எப்போதும் அதிகமாகவே கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    முதியோர் காப்பகத்தில் இருக்கும் தாய் மகனுக்கு கடிதம் எழுதினாள் “நீ குடியிருக்க என் வயிற்றில் இடம் இருந்தது. நான் குடியிருக்க உன் வீட்டில் சிறு அறை கூடவா இல்லை” இதயம் இருப்போருக்காக இறக்கி வைக்கப்பட்ட வார்த்தை வரப்புகள் இவை. சாட்டையடி கொடுத்தாலும் திருந்துவோரும் உண்டு. திசைமாற்றம் செய்வோரும் உண்டு. எதிர்காலம் அவர்களுக்கும் ஈர்ப்புவிதி படி முதியோர் காப்பகத்தின் வாசற்படி திறந்தே இருக்கும் நாள் தொலைவில் இல்லை.

    “தாத்தா செத்தும்

    ஒலக்க ஒரல்

    அம்மி ஆட்டுகல்லுன்னு

    ஒவ்வொருவருக்கும் போட்டி

    கறமை மாடும் கன்றும் எனக்கு

    காளையும் கிடாரியும் எனக்கு எனக்குன்னு

    அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும்

    அத்தனை அடிதடி

    பாயில சுருண்டு கிடக்கம் பாட்டியை

    எனக்கு எனக்கென்று

    யாரும் சொல்லக் காணோம்”

    விஜிலா தேரிராஜன் கவிதையா எழுதியிருக்கிறார்; முதியோரின் அவல் ஓலங்கலை கண்ணீராய் அல்லவா கலக்கி இறக்கியிருக்கிறார்.

    சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்டபோது, அம்மாவின் காலடியே இனிய சொர்க்கம் என்றாராம் பெருமானார். காலையில் எழுந்தவுடனே மகன் அம்மாவிடம், காபி கொடுக்கச் சொல்லவா வாயும் முகமும் கழுவ வாளியில் தண்ணீர் தரவா என்று நேரிடையாகவே சென்று தலைமாட்டில் தலைகோதி கேட்க வேண்டும். மகனிடம் தேர்வு எழுதச் செல்லும் முதல் நாளிலே அப்பா சொல்வார், ஆத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று அம்மாவிடம்அழைத்துச் செல்ல வேண்டும். வேறு ஊருக்கு செல்லும் போதெல்லாம் ஆத்தாவிடமும்,  தாத்தாவிடமும் ‘போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்’ என்றெல்லாம் முகவுரையை நாம் தான் எழுத வேண்டும். முகவுரை நன்றாக இருந்தால் தான் முடிவுரை நன்றாக இருக்கும் என்று ஞாபகப்பேழையில் செருகி வைக்க வேண்டும்.

    இதுமட்டுமல்ல, நீ சாப்பிடும் போதொல்லாம் ‘அம்மா வா சாப்பிடுவோம் ஆத்தா வா, தாத்தா வா சாப்பிட என்று அவர்கள் அருகிலே அமர்ந்து சாப்பிடக் கூப்பிடு. கடைக்கு செல்லும் போதெல்லாம் உன் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தையில், அம்மா பிடித்ததைச் சொல், ஆத்தா உனக்கு எது பிடிக்கும் சொல் நான் வாங்கி வந்து தருகிறேன் என்றெல்லாம் கூச்சல்போட்டு கேட்டு கடைக்கு செல்ல வேண்டும். அப்போது இவர்களின் மனதுக்குள் தென்றலின் சுகமும், தேமதுர ஓசையும் பொங்கி ததும்பி வழியும். அது வேண்டும். இங்கே பல முகமூடிகள் தான் உலாவிக் கொண்டு இருக்கிறது.

    என் எழுத்தில் இதயத்தின் கசிவை முன் மொழிந்திருக்கிறேன் என்ற ஆறுதலோடு என் ஆன்மா விடைபெற்றால் அதுவே போதும்.

    நீ கடவுளைக் காண வேண்டுமா? உடனே ஓடு உன் பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களுக்கு பணிவிடைச் செய்ய ஓடு, ஓடு உடனே ஓடு அங்கே கடவுளைக் காணலாம் என்றாராம் உலகத்தை விட்டு ஓடிய உலக சினிமாவின் உயரத்தை தொட்ட வரலாற்று சின்னமாய் நிற்கும் மைக்கேல் ஜாக்சன். அவர்களை காலம் அல்லவா கௌரவித்துக் கொண்டே இருக்கிறது.

    திருமணம் முடிந்த இரண்டொரு தினங்களில் காதல் வசனங்கள் கவிதைகளாய் கொட்டும். சிலருடைய வார்த்தைகளோ தேளாய் கொட்டும். மானுட சமுத்திரம் நானென்று கூவு என்ற கொக்கரித்த பூமியில் சில கண்கொத்திப் பாம்புகளும் இருக்கத்தான் செய்கிறது.

    இரவு வேளையில் இருமினால் கூட என்னம்மா பண்ணுது? தண்ணித் தரவா? தலையைப் பிடிக்கவா? பாயை விரிக்கவா? போர்வையைப் போர்த்தவா? இப்படி, இப்படி – பாதுகாப்பு வேலியை பக்குவமாய் நட்டுவை. இதய சிம்மாசனத்தில் சிகர சிம்மாசனத்திற்கான இடத்தை விட்டுவை.

    “ஒவ்வோர் அதிகாலையிலும்

    வீடு வீடாக பாலூற்றும்

    அந்த முதியவருக்கு

    கஞ்சி ஊற்றத் தவறிய பிள்ளைகள்

    கடைசியில் அவருக்கு

    ஊற்றும் பால்

    தீர்ந்திருக்கும் அல்லது பிரிந்திருக்கும்”

    என்ற கவிதையில் கண்கள் குளமாயின. பாலுக்குக் கூட வேதிவினை வாய்ப்பாடும் தெரிந்திருக்கிறது.

    வீட்டில் உள்ளோர்க்கு பிறந்தநாள் வரும் போதெல்லாம் ஆசீர்வாதம் கேட்டால் அகமும் முகமும் மலர்ந்து ஆசீர்வாதமும் கிடைக்கும் ஆயுளும் அதிகரிக்கும், அற்புதமும் நடக்கும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் புத்தாண்டு இப்படி விதவிதமாய் வருவதே மனிதம் – புனிதமடையவே வருகிறது. அந்த நாட்களிலும் அவர்களை ஆசீர்வதிக்க அன்போடு அவர்களின் பாதமலர்களில் விழுந்தால் ஆசைமழை அன்போடு கொட்டும். அவர்களின் பாதங்களில் பள்ளி கொள்வோம்; பாரோர் போற்றும் வாழ்வை அள்ளிக் கொள்வோம்.

    பணத்தை மையமாக வைத்து உறவுகளின் ஊர்வலம் தந்தையின் வியர்வையிலும் தாயின் தாய்ப்பாலிலும் வளர்ந்து அயல்நாட்டில் அமோகமாய் பணம் பார்க்கும் போதே இன்பத்திலும் இதயத்தை விற்று பெற்றோரை புறக்கணிக்கும் அவலம் இங்கே ஏராளம் அப்படி புறக்கணிக்கப்பட்ட பெற்றோரின் கண்ணீரில் வரைந்த கவிதை வரிகள் இதோ…

    மகனே…

    நீ பிறந்த அன்று

    தோட்டத்தில் வைத்தோம்  

    ஒரு தென்னங்கன்று

    நீ உயர்ந்தாய்

    நாங்கள் வார்த்த தண்ணீரில்

    தென்னை வளர்ந்தது

    எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்

    உனக்கு இன்பம் தருகிறது

    இங்கே இருக்கும் தென்னை மரம்

    எங்கள் இருவருக்கும்

    சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது

    ஒரு நாள்…

    நீ ஈமெயிலில் முழ்கியிருக்கும்போது

    எங்களை ஈமொய்த்த செய்தி வந்து சேரும்

    இறுதி பயணத்தில்

    நீ இல்லாமற் போனாலும்

    தென்னை ஓலை

    எங்கள் கடைசி மஞ்சமாகும்.

    தமிழகத்தின் தலைசிறந்த தமிழருவி மணியனின் கவிதை ஈடு செய்ய முடியாத இழப்பை இறக்கி வைத்திருக்கிறது. முதியோர் வார்த்தையோடு முரண்படுகிறேன். இனி முதியோர் காப்பகம்   இல்லாத உலகை காண்பது எந்நாளோ? என்று முனகலுக்கு முற்றுப்புள்ளி வைத்து மனிதம் காப்போம்; மனித நேயம் காப்போம். இனி பெரியோர் என்பதையே என் பேனாவின் உதடுகள் உச்சரிக்கும், முதியோர் வார்த்தையோடு முரண்படுகிறேன். கற்பக மரங்களாம் அவர்தம் கால்தொட்டு வணங்கி பாரதத்தின் பண்பாட்டு மரம் செழிக்க வழிவகுப்போம் – சிகர சிம்மாசனத்தில் சிறகடிப்போம்; இடம் பிடிப்போம்.

    தன்னம்பிக்கை மேடை

    டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களோடு பழகிய அனுபவம் குறித்தும், அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது….? அவரின் இறப்பின் துயரம் இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கு எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெ.சரவணக்குமார்

    மூக்கனூர், சேலம் மாவட்டம

    இந்தியாவில் ஏவுகணை நாயகனைப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அப்போது நான் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் என்பதால் அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. அவரது உதவியாளர் காலை 8 மணிக்கு அண்ணாப் பல்கலைக்கழக வளாகத்திற்கு வரச் சொல்லியிருந்தார். 8 மணிக்கு கதவைத்திறந்து புயலாக வெளியில் வந்தார். Hello Mr. Sylendra Babu, How are you? என்றார். நான் இருக்கையை விட்டு எழுந்து அவருக்கு மிடுக்காக ஒரு சலூட் மரியாதை செய்தேன்.

    அதைப்பார்த்த அவர் அதற்கு பதிலாக ஒரு சிவில் சலூட் அடித்துப் புன்னகைத்தார். I am pleased to meet you என்று கூறியவாறு என்னுடன் கை குலுக்கினார். அது ஒரு உறுதியான கை குலுக்காக இருந்தது. உங்களைச் சந்திப்பதில் உண்மையாகவே எனக்கு மகிழ்ச்சி என்பது போன்ற கை குலுக்கல் அது. இவ்வாளவு Friendly ஆக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    அவரைப்பற்றி நிறைய படித்ததாலும், அவரது பெருமைகளைப் பலர்சொல்லக் கேட்டதாலும் அவர் எனக்கு மிகவும் பழக்கமானவர் போன்றே தெரிந்தது. காவல் துறையில் எனது பணிகள் என்ன? எனது தினசரி கடமைகள் என்ன என்று கேட்டறிந்தார். ஒரு முறை கூட அவர் குற்றங்கள் கூடிவிட்டது என்றோ, காவல்துறை பணி கடுமையானது என்றோ, மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை குறைந்தது என்றோ சொல்லவே இல்லை. நான் பார்க்கும் பெரிய மனிதர்கள் பலர் இதைத்தான் சொல்லுவார்கள். பேச ஒன்றும் இல்லை என்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என்பார்கள். ஆனால் நெகட்டிவாக ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வரவில்லை என்பதைக் கவனித்தேன். இவர் உண்மையில் உயர்ந்தவர்தான். திருவள்ளுவர் சொன்ன “”சான்றோர்” இவர்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

    நான் அவரிடமிருந்து விடை பெறும்முன் அவர் கேட்ட கேள்வி என்னை வாரிப் போட்டது. காவலர்களுக்கு 24 மணி நேர பணியாமே, அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க கூடாதா என்று கேட்டார்.  இது எனது மனதில் இருந்த முக்கிய கேள்வி, இவருக்கு எப்படித் தெரியும்…? என்று ஆச்சரியப்பட்டேன். எனது மனதில் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அடிமட்ட ஊழியர்களின் கஷ்டம் பற்றி சிந்தனைச் செய்யும் அவர் காவலர்களின் கஷ்டங்களையும் சிந்தித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

    அவரது உதவியாளர் பி.எம். நாயர் தனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியிருந்தார். அப்துல்கலாம் போன்ற ஒரு மாமனிதரை நாம் இனி பார்க்க போவது இல்லை எனத் தொடங்கிய கட்டுரை “கலாம் இபக்ட்” என்ற நூலாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், அவரது 50 உறவினர்கள் வந்துதங்கியபோது அவர்களுக்கான ஜனாதிபதி  பவனில் அறை வாடகையைக் கணக்கு செய்து அந்தத் தொகையினைச் சொந்த பணத்தில் கட்டி விட்டார் என்பதையும், எத்தனையோ வாகனங்கள் ராஷ்ட்ரபதி பவனில் இருந்தும், ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தி அதற்கு தனது பணத்தைச் செலவு செய்து உறவினர்களுக்கு டில்லி மாநகரை சுற்றிக்காட்டினார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

    அயல் நாடுகளில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளைப் புகைப்படம் எடுத்த பின்னர் அப்பரிசுகளை அரசு அருங்காட்சியத்திற்கு தந்தார். இவை அனைத்தும் அரசு ஊழியர்களாகிய எங்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரியாக இருந்தது. இந்திய ஜனாதிபதி நடத்த வேண்டிய “இப்தார்” விருந்தை நடத்தாமல் அந்த 22 லட்சம் ரூபாயை அனாதை இல்லத்திற்கு அளித்துள்ளார். அத்துடன் தனது பணம் 1 லட்சம் ரூபாயையும் சேர்த்து 23 லட்சமாக அந்த இல்லத்திற்கு தந்துவிட்டு, நாம் அழைக்கும் விருந்தினர் தினமும் மூன்று வேளை சாப்பிடுவார்கள்; ஆனால் அனாதை இல்ல குழந்தைகள் சாப்பிடாதவர்கள், எனவே அவர்கள் சாப்பிடட்டும் என்றாராம். தாம் 1 லட்சம் பணம் தந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

    சக ஊழியர் “Yes Sir” என்று மட்டுமே சொல்லுவதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் தனது அபிப்பிராயம் கேட்டபோது “No Sir, I don’t agree with you”  என்று உதவியாளர் பி.எம். நாயர் சொன்னபோது, அவர் அதை வரவேற்று ஏற்றுக் கொண்டார் என்று பி.எம். நாயர் கூறுகிறார். கலாம் அவர்கள் சக ஊழியர் நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்பதையும் அவர் விவரமாக விளக்கியுள்ளார். தனது மனைவி கைமுறிந்து படுக்கையில் இருந்த போது இவருடைய வீட்டிற்கே வந்து மனைவியின் நலம் விசாரித்தார் என்ற செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

    முன்பு ஒருநாள், இளம் விஞ்ஞானி ஒருவர் தனது குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் செல்லுவதாகக் கூறி கலாமிடம் அனுமதி வாங்கியிருந்தார். ஆனால் அவர் அலுவலகத்தில் தொடர்ந்து பணியில் இருந்ததை கலாமே கவனித்து விட்டார். அந்த விஞ்ஞானி வீட்டிற்கு அவரே சென்று அந்தக் குழந்தைகள் திட்டமிட்டருந்த பொழுதுபோக்கு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த விஞ்ஞானி வருத்தத்துடன் வீட்டிற்கு சென்ற போது குழந்தைகள் வீட்டில் இல்லை. கலாம் வீட்டிற்கு வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார் என்று மனைவி கூறியிருக்கிறார்.

    உயர்ப் பதவிகளில் இருந்தவர்கள் இப்படியெல்லாம் தனது அன்றாட வேலைகளை உயர்வுடன் செய்து சக விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி தலைமைப் பண்புகளை நிரூபித்திருக்கிறார்கள் என்ற செய்தி நமக்குக் கிடைக்கிறது. நமது நெஞ்சம் உருகுகிறது. நமக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எனவே தான் கலாமும் நமது மனதில் நிரந்தர இடம்பிடிக்கிறார்.

    கலாம் அவர்களின் India 2020 நூல் வெளிவந்ததும், அதையும் படித்துவிட்டேன். அவரின் கனவுகளை நனவாக்க lead 2020 என்ற அமைப்பு கோவை நகரில் மிகவும் தீவிரமாக இருந்தது. அப்போது நான் கோவை போலிஸ் கமிஷ்னர், ஆகையால் அந்த இயக்கத்தோடு இணைந்து செயல்பட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதில் சதீஸ் என்ற கம்ப்யூட்டர் எஞ்ஜினியர் முதலானவர், அவரது நண்பர்கள் பத்மநாபன், பிரசன்னா, சி.ஆர். சாமிநாதன் ஆகியோர் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இவர்களோடு சேர்ந்து சிறுதுளி வனிதாமோகன் அவர்களும் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-யை மையபடுத்தி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல 6000 மாணவர்களை ஒரே இடத்தில் திரட்டிக் காட்ட வேண்டும் என்று கூறி எங்களது காவலர் பயிற்சி பள்ளி (PRS) மைதானத்தில் இடம் கேட்டனர். கலாமின் பிறந்தநாள் கொண்டாட்டம் கின்னஸ் சாதனையாகச் செய்ய வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். அதற்கு நான் இசைவு தந்தேன்.

    இந்த நிகழ்ச்சி கோவையில் மிக பிரபலமாக நடந்தது. நான் அதில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வனிதாமோகன் என்னை சந்தித்து PRS மைதானத்தை ஒரு வனமாக மாற்ற வேண்டும், அதுவும் கலாம் அவர்கள் நினைவாக செய்தாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ஜனவரி 09, 2011 அன்று மாபெரும் மரம் நடும் விழா PSR மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் முட்புதராக இருந்த PSR மைதானத்தின் அவிநாசி ரோடு பகுதியில் பல நூறு மரக்கன்றுகள் ஐயாவின் நினைவாக நட்டோம். இன்று அந்தப் பகுதி ஒரு நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. இதனைச் செய்தவர்கள் கோவை காவல் துறையின் காவலர்கள், இன்றும் அந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள்.

    வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்றும், லட்சியம் இல்லை என்றால் வாழ்வில் சாதிக்க முடியாது என்றும், பலரும் கூறினார்கள். ஆனால் அந்தக் கருத்தையே “கனவு காணுங்கள்” என்று கலாம் சொன்னதும் அது மாணவர்கள் மனதில் பற்றிக் கொண்டது. பின்னர் அவர் அதற்கு விளக்கமும் தந்தார்,

    “கனவு என்பது தூங்கும்போது வருவது அல்ல,

    தூங்க விடாமல் தடுப்பதுதான் அது”

    இதுவே மாணவர்களுக்குள் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியது.

    “அப்துல் கலாம், இந்தியாவின் தங்கமகன்”

    இந்தியாவை வல்லரசாக்கும் அவரது கனவை நனவாக்க இன்றே செயலில் இறங்குவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் வீர வணக்கம்.

    .எம் நாயர் சொன்னதைப் போன்று அவரைப் போன்ற ஒரு உன்னத மனிதர் நமக்கு கிடைப்பது மிக அரிது. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாதது.

    உள்ளத்தோடு உள்ளம்

    எழுபத்தைந்து ஆண்டுகள் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு பிரான்ஸ். பலமுறை போர் தொடுத்தும் இங்கிலாந்திடம் பிரான்ஸின் அன்றைய மன்னன் தோற்றவண்ணமே இருந்தான். அப்போது பிரான்ஸை சேர்ந்த ஜோன் என்னும் 12வயது ஏழைச் சிறுமி தன் தாய்நாட்டை அந்நியரிடமிருந்து மீட்பேன் என உறுதி எடுக்கிறாள்.

    எழுதப்படிக்கத் தெரியாத, ஆடுமேய்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, நாட்டை மீட்கிறேன் என்றது சிரிப்பைத்தான் தந்தது. ஆனாலும், அவளுடைய உறுதியைக் கண்டு வியந்து, ஒரு பெரும் படையைத் திரட்டி அந்தச் சிறுமியின் தலைமையில் அனுப்பி வைத்தார் மன்னர். அப்போது 17 வயது ஜோனுக்கு.

    ஆர்லீன்ஸ் கோட்டையைத் தகர்த்து அச்சிறுமி பிரான்ஸை மீட்ட அந்த “நூற்றாண்டுப் போர்’ என்பது உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. படைப்பயிற்சி, போருக்கான எந்தத் தகுதியுமே இல்லாத ஜோனால் எப்படி வெற்றி பெற முடிந்தது. ஏதோ ஒரு சக்தி ஜோனை வெற்றி பெற வைத்திருக்கிறது என்றால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்த ஏதோ ஒரு சக்தியை நாமும் நமக்குள் கொண்டுவந்து ஏன் சாதிக்கக் கூடாது.

    சிந்திப்போம் ! சிகரம் தொடுவோம் !

    வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…

    திருமதி. நிர்மலா பெரியசாமி

    செய்தியாளர்

    வாய்ப்புகள் நம் கதவைத் தட்டும்போது நாம் திறப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அத்தகையவர்கள்தான் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்” என்பார் டாக்டர் இல.செ.க. அவர்கள். அதுவாய் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனிமுத்திரை பதித்திருக்கும் சிறப்பிற்குரியவர் இவர்.

    கிராமத்திலிருந்து நகரத்திற்கு பயணப்பட்டாலும் பயணப்பாதையைப் பிறருக்கு ‘பயன்படும் பாதையாக’ மாற்றிக் கொண்ட பெருமைக்குரியவர் இவர்.

    ‘வணக்கம்’ என்ற ஒரே சொல்லில் அழுத்தமான பதிவை எல்லோருக்குள்ளும் உண்டாக்கியவர் இவர்.

    உறுதியான தீர்மானங்களை எடுக்க வைத்து பிரிந்திருந்த பல குடும்பங்களை இணைத்து வைத்து ஊடகத்துறையில் புதுமையை புகுத்தியவர் இவர்.

    “நல்ல நூல் நிலையம் பெரியோரின் ஆன்மாக்கள் வாழும் புண்ணிய ஸ்தலம்” எனக் கற்றுணர்ந்து மக்கள் நலம் சிறக்க பேசிவரும் செய்தியாளர் இவர்.

    இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்களை நாம் நேரில் சந்தித்த சந்திப்பிலிருந்து இனி…

    உங்களைப் பற்றி…?

    அன்புக்கும், பாசத்திற்கும், கடுமையான உழைப்பிற்கும், விருந்தோம்பலுக்கும் பெரிதும் பெயரெடுத்த கொங்கு நாட்டுப் பகுதியில் விவசாயத்தை உயிர்மூச்சாகக் கொண்டு விளங்கும் கரூர் மாவட்டத்தில் வாங்கல் பசுபதிபாளையம் என்ற எழில் மிகு கிராமத்தில் பிறந்தேன்.

    இப்பகுதியில் எங்கள் குடும்பம் நல்ல பாரம்பரியமுள்ள குடும்பம். என்னுடைய தந்தையார் ஒரு சிறந்த மார்க்சீயவாதியாகவும், காந்தியவாதியாகவும் திகழ்ந்தவர். அவரின் சிந்தனைகள் அனைத்தும் முற்போக்குத் தன்மையாக  இருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து அவரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் பார்த்து வளர்ந்த காரணத்தால் எனக்குள்ளும் இச்சிந்தனைகள் வந்துவிட்டது என்று கருதுகிறேன்.

    மிகச்சிறிய வயதிலேயே காந்திஜியின் ‘சத்தியசோதனை’ புத்தகத்தை மிகவும் விருப்பமாக பலமுறைபடித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 1000 பக்கங்களுக்கு மேல் படிப்பேன் என்று அப்பா கூறுவார்கள்.  எங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு பழமை வாய்ந்த நூலகம் இருந்தது. அந்த நூலகத்தில் நான் படிக்காத புத்தகங்களே இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவிற்கு புத்தகத்தின் மீது பற்றுதலும், ஈர்ப்பும் இருந்தது. இதற்கு முதன்மைக் காரணம் என் தந்தை மட்டுமே.

    பள்ளிக் காலங்களில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என்றால் நான்தான் முதல் பரிசை வெல்வேன். எல்லாப்பாடத்திலும், நனி நன்று, நனிமிகு நன்று என்ற பாராட்டுக்களைத்தான் பெறுவேன்.

    பெண்கள் அவ்வளவாக பொதுவாழ்க்கைக்கு வர ஈடுபாடு காட்டுவதில்லையே ஏன்?

    பொதுவாழ்க்கைக்கு வர ஆண், பெண் பாகுபாடு தேவையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாழ்க்கைக்குள் வர வேண்டுமென்றால் மற்றவர்களை நேசித்தாலே போதுமானதாக இருக்கும். தன் குடும்ப உறவுகளை மட்டுமே பார்க்காமல் மற்றவர்களையும் தன் உறவுகளாக நினைத்துப் பார்க்க வேண்டும். அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவம் தோன்றும்.

    பிறரின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய தந்தை பொது வாழ்க்கைக்காக அவரையே அற்பணித்துக் கொண்டவர்.

    ஆம், அவர் தன்னுடைய சொந்த விவசாய நிலத்தை, சொத்துக்களை விற்று இல்லாதவர்களுக்கு இயன்றவரை உதவிகள் செய்து வந்தார். ஒருமுறை மற்றவர்களுக்கு உதவி செய்து அதன்மூலம் அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும், மீண்டும் சேவை செய்வதை விடவே முடியாது என்றார்.

    ஆனால், இன்றைய சமுதாயத்தில் அனைவரும் அமெரிக்க சிந்தனைகளோடு வாழ்ந்து வருகிறோம். தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் இந்நிலை மாறவேண்டும். மற்றவர்களை மதிக்க வேண்டும்.

    இன்றைய கால கட்டத்தில் பொது வாழ்க்கைக்கு வரும் பெரும்பாலானவர்கள் பெரிதும் எண்ணுவது பதவி, அதன்மூலம் தன்னை, தன் குடும்பத்தை மட்டும் எவ்வாறு வளப்படுத்திக் கொள்ளலாம் என்பதை மட்டுமே. இது மிகவும் பரிதாபமான நிலை. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் சேவை, தொண்டு செய்யும் மனம் கொண்டவர்களாக, இவற்றின் உன்னதம் புரிந்தவர்களாக வாழ வேண்டும்.

    நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்வோர் மீண்டும் தாயகம் திரும்பத் தயங்குகிறார்ளே…?

    அங்குள்ள சுத்தம், சுகாதாரம், ஆடம்பரம், பருவநிலை எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு கிடைக்கும் பணம் முழு சுதந்திரம்  போன்றவை காரணமாக இருக்கலாம், என்ன கிடைத்தாலும் அது நம் தாய் நாடாகாது.

    இன்றைய சூழலில் குழந்தைக் கல்வி எவ்வாறு இருக்கிறது…?

    மிகவும் நன்றாக இருக்கிறது. என்ன ஒன்றே ஒன்று, இன்று குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் என்னும் கல்விமுறை சுத்தமாகவே இல்லை. விளையாட அனுமதியில்லை. வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். மிகவும் வேதனையான நிலை இது.

    நாம் படிக்கின்ற காலத்தில் நீ முதல் மதிப்பெண் பெறவேண்டும். இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் வற்புறுத்தியது கிடையாது. நான்றாக படி என்று மட்டுமே சொல்வார்கள். ஆனால், இன்று எல்.கே.ஜி படிக்கும் குழந்தையிடம் கூட நீ இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களே கட்டாயப்படுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

    தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே “ரோல் மாடலாக” பெற்றோர்கள் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதன்படி தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இது மட்டுமே சரியான வழி.

    பல்துறைகளில் பல ஊடகங்களில் பணியாற்றியுள்ளீர்கள், அதில் பிடித்தது, சவால் நிறைந்தது என்றால்…?

    நான் இளமைக் காலத்திலிருந்து இன்றுவரை ஒரு சுதந்திரம் மிக்க பெண்மணியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். நான் எதைச் செய்தாலும் பிடித்தமானதை மட்டுமே செய்ய விரும்புவேன். எந்த வேலையையும் வேண்டா, வெறுப்பாக நான் செய்ததில்லை.

    என்னுடைய திறமை முழுவதையும் வெளிப்படுத்தும் அளவிற்குத்தான் நான் ஒவ்வொரு பணியையும் செய்வேன். நிறைய சவால்களைச் சந்தித்திருக்கிறேன். சவால்களை சந்திக்கும் மனநிலையும், நுட்பமும் என்னுள் இருக்கிறது என்று நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். இது என்னுடைய தன்னம்பிக்கையை பெருமளவில் வளர்த்தது.

    குடும்பப் பிரச்சனை சார்ந்த நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளீர்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் குடும்ப உறவுகளின் நிலை என்பது எப்படி உள்ளதாக நினைக்கிறீர்கள்?

    இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு பிரச்சனைகள் உள்ள மனிதர்களை சந்திக்க நேர்ந்தது. மனிதர்களாய் பிறந்து விட்டால் பிரச்சனைகள் வருவது இயல்பு. இந்தப்பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது நிறையப் பேருக்குத் தெரியவதில்லை.  எளிய வழிகாட்டுதல் மூலம் பலநூறு குடும்பங்களுக்கு உதவி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது

    இந்நிகழ்ச்சியின் மூலம் நான் கற்றுணர்ந்த உண்மை என்னவென்றால் பிரச்சனை என்பது இயல்பு. இதில் உயர்வு, தாழ்வு ஏதுமில்லை. தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லை.. எந்த மனிதனும் முழுமையான குற்றவாளி இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். ஏதேனும், தவிர்க்க முடியாத சூழலில் ஒருவன் தவறு செய்கிறான்,  அந்தத்தவறால் சமூகத்திற்கு முன் குற்றவாளியாக நிற்கிறான். அவனுள் இருக்கும் நல்ல தன்மைகளைத் தூண்டி விட்டால், அவனும் மனிதனாகி விடுகிறான்.

    இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.

    நமக்கு நாமே எதிரியாகக் கூடாது. அகங்காரம், சுயநலம், பேராசையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதுவும் நிலையானது அல்ல என்னும் ஆன்மீகத் தத்துவத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு வளர்க்க வேண்டும்…?

    இன்றைய நாகரீக உலகில் வளரும் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, வேகமாகவும் சிந்திக்கவும், செயல்படவும் செய்கிறார்கள். அவ்வாறு வளரும் குழந்தைகளை இப்படி வளர்க்க வேண்டும். இதுவாக ஆக வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தாமல், அன்பால் அறிவூட்ட வேண்டும். சின்னக் குழந்தைகளிடம் தங்களின் ஆசைகளைத் திணித்தால், அவர்கள் குழம்பி விடுவார்கள். அவர்களின் எதிர்கால ஆசைகளை, கனவுகளை அவர்களின் போக்கில் விட்டு, எல்லை மீறும் போது, எடுத்துச் சொல்லி வழி காட்டுவதுதான் பெற்றோரின் கடமை.

    பொய் சொல்லாதே என்று குழந்தையிடம் சொல்லி வளர்ப்பதைவிட, பொய்யே சொல்லாத பெற்றோர்கள் இருந்தால், குழந்தைகளும் பொய் சொல்லாது.

    எல்லாத் தவறுகளையும் தம்மிடம் வைத்துக் கொண்டு வெறுமனே, வெற்று வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை ஏற்றுக் கொள்ளாது.

    ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள்தான் முன்மாதிரியாக விளங்க வேண்டும். குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்வது பெற்றோர்களிடம்தான்.

    பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதற்கு ஏற்றார்போல், கணவன் மனைவிக்குள்ளே ஒரு நல்ல புரிதல் வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனநிலை இருவரிடமும் இருந்தாலே குழந்தைகள் நல்ல சான்றோராக வளர்வார்கள்.

    நமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நாம் ‘பாஸ்’ (BOSS) அல்ல அதிகாரம் செலுத்துவதற்கு, அவர்களை அன்போடு, பொறுமையாக வழி நடத்துவதற்கு மட்டுமே இறைவன் நம்மிடம் அனுப்புகிறான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

    ஆண் பெண் உறவு முறையின் இன்றைய நிலை…?

    நம் நாட்டின் வலிமையே குடும்பம் அமைப்புதான். அதை சிதைத்து விட்டால் சமூதாயம் சீரழியும். ஒரு நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியிலும், வாழ்க்கையிலும் இருக்கிறது. மனிதன் சமூகத்துக்குக் கட்டுப்பட்டவன். தனி மனித சுதந்திரம் என்றபெயரில், குடும்ப சமுகக் கட்டமைப்புக்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் அவன் செய்யக் கூடாது.

    ஆணும், பெண்ணும் சேர்ந்து பழகும் சூழ்நிலை சர்வ சாதாரணமாகி விட்ட இன்றைய கால கட்டத்தில் தங்கள் எல்லைகளை உணர்ந்து ஒருவரை ஒருவர் மதித்து நல்ல நட்போடு பழகினால் நல்லது. நட்புக்கோ, காதலுக்கோ, உறவுகளுக்கோ உண்மையாக இருப்பது மிக முக்கியம்.

    ஆன்மீகத்தின் மீது தங்களுக்கு உண்டான ஈடுபாடு குறித்து?

    நம் நாடு ஆன்மீக பூமி. வெளிநாடுகளிலெல்லாம் உடலையும், பொருளையும் முன்னிலைப்படுத்தி வாழ்ந்தபோது, நம் முன்னோர்கள் மனதையும் அதன் எல்லையில்லா ஆற்றலையும் உணர்ந்து, அவற்றின் துணை கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே அண்ட சராசரங்களையும், அவற்றையெல்லாம் படைத்த அந்த மாபெரும் சக்தியையும் உணர்ந்தவர்கள்.

    மனித வாழ்க்கையின் இறுதி இலட்சியம் இறைவனை அடைவது. அந்த இறுதி இலட்சியத்தை எவ்வாறு அடைய வேண்டும் என்பதற்கான ஆன்மீகக் கருத்துக்களை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

    அதன் விளைவாகத்தான் வெளிநாட்டினர் கூட்டு நுண்ணோக்கி, ராக்கெட், செயற்கைக்கோள் என்று பல்லாயிரம் கோடி டாலர் பணம் போன்றவைகளின் துணையோடு நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளை நம் ரிஷிகளும், முனிவர்களும் செலவே இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, எந்தவொரு தொழில் நுட்ப வசதியும் இல்லாமல் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

    நொடிக் கணக்கில் துல்லியமாகக் கணிக்கப்படும் ஜாதகம், பஞ்சாங்கம், கிரக அமைப்புகள் இவையெல்லாம் சாதாரண காரியம் அல்ல. ஜோதிட சாஸ்திரம் உண்மையானது. மிகப்பெரிய விஞ்ஞானம். ஆனால் இங்கே இருக்கும் ஜோதிடர்களெல்லாம் உண்மையானவர்களா? முழுமையாகக் கற்றுணர்ந்தவர்களா? என்பதில்தான் பிரச்சனையே.

    நம் முன்னோர்கள் எதையும் ஆன்மீக ரீதியான உணர்வை, உள்ளுக்குள்ளையே உணர்ந்து வழி நடக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் எதைச் செய்தாலும், கருவிகள் கொண்ட செய்முறையாகப் பார்த்தார்கள். இது அனைத்தும் புற உலகத்திற்காகச் செய்யப்படும் சிந்தனையாகவும், தேடலாகவும் இருந்தது. அதுவே வளர்ந்து, வளர்ந்து இன்று வளர்ந்த நாடாக வலம் வருகிறார்கள். நாம் அவர்களின் பிரமாண்டத்தைப் பார்த்து பிரமிக்கிறோம், பின்பற்றுகிறோம்.

    நம் நாட்டில் அறிவியல் கல்வி எவ்வாறு இருக்கிறது…?

    ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. நாம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்கள், வான சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள், அறுவை சிகிச்சைகளில் நிபுணர்கள், கட்டிடக் கலையில் வல்லுநர்கள், ஆரியபட்டா, சுசுருதர் தொடங்கி, சர்.சி.வி.இராமன், இராமனுஜன், சமீபத்தில் மறைந்த ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் வரை கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத எத்தனையோ அறிவியலாளர்களின் பங்களிப்பில் நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

    வெறும், சில நூறு கோடிகளில் பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தி, பல்வேறு விதமான ஏவுகணைகள் தயாரித்து அமெரிக்காவை அதிர வைத்தோம். பாகிஸ்தானை பயந்து போக வைத்தோம். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருந்தாலும், அறிவியல் வளர்ச்சியில் நாம் எவருக்கு சளைத்தவர் அல்ல.

    மன அழுத்தத்தை எவ்வாறு போக்கிக் கொள்வது…?

    உடல் சோர்வு போன்று மனதுக்கு சோர்வு வரும். அதற்கான முக்கிய காரணம் தங்களுக்கு பிடிக்காத வேலைகளைச் செய்வது எதைச் செய்தாலும், முழுமனத்தோடு, விருப்பத்தோடு திட்டமிட்டு செய்ய வேண்டும். தவிர்க்கவே முடியாத வேலைகளையும், சூழ்நிலைகளையும் விருப்பமானதாக மாற்றிக் கொள்ள மனதைப் பழக்க வேண்டும். மனிதனால் ஆகாதது எதுமில்லை. மனம் போகும் போக்கெல்லாம் போகக்கூடாது. நம் மனம் நம் கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும்.

    பெரும்பாலும் பணம், வேலை, காதல், உடல்நிலை இவற்றால்தான் மனஅழுத்தம் வருகிறது. யாருக்கும் இங்கு எதுவும் இல்லாமல் இல்லை. விரும்பியது கிடைக்க நேர்மையாக, கடுமையாக உழைக்கலாம். கிடைப்பதை ஏற்று நிறைவாக வாழலாம்.

    குப்பை கூடங்களும், தூசியும், இருளும் நிறைந்த அறையை யாராவது விரும்புவார்களா? அதை சுத்தம் செய்து ஒரு விளக்கும் மணமான ஊதுபத்தியும் ஏற்றி வைத்தால் எப்படி இருக்கும்? அதைப்போல நம் மனதையும் இறுக்கமாக மூடி வைக்காமல், பேராசை, அகங்காரம், சுயநலம், பொறாமை போன்ற நெகடிவ் எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக திறந்து வைக்க வேண்டும். இன்பதையும் துன்பத்தையும் ஒன்று போல ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பினால் மன அழுத்தம் காணாமல் போகும்.

    கிராமப்புற பின்னணியில் பிறந்த நீங்கள் நகரத்தில் வசிக்கும் போது பெற்றது, இழந்தது…?

    நகர வாழ்க்கையில் பெற்றது ஏராளம், எனக்கான முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் கிடைத்தது. தேவையற்ற விமர்சனங்கள் குறைந்தது. என் அக வளர்ச்சியிலும் புறவளர்ச்சியிலும் முழு கவனம் செலுத்த முடிந்தது. என் வாழ்வின் எல்லைகள் மிகப்பெரிதானது. நிறையப் புகழ் பெற்ற சாதனை மனிதர்களின் சந்திப்பும் நட்பும் கிடைத்தது என்று ஏராளமாகச் சொல்லலாம்.

    இழந்தது என்றால் காவிரித் தண்ணீர்,  நல்ல காய்கறிகள், நல்ல காற்று, கோவில் திருவிழாக்கள், உறவினர் வீட்டு விஷேங்கள் இவற்றில் அடிக்கடி கலந்து கொள்ள முடியாமல் இருந்தது.

    இன்றைக்கு என் பெயரைச் சொன்னால் தெரியுமளவுக்கு வளர்ந்திருப்பது, பெயர் வாங்கிக் கொடுத்தது எல்லாம் நகர வாழ்க்கைதான்.

    ஆங்கிலத்துறையில் பயின்று ஊடகத்துறையில் நுழைந்த விதம் குறித்து…?

    மொழிகளின் மீது இயல்பாகவே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. எனக்குள் இருந்த தாய்மொழிப் பற்று, உச்சரிப்பு, பேசும்திறன் இவற்றை என் அப்பா சிறு வயதிலிருந்தே கவனமாக வளர்த்தார்கள். பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே கட்டுரை, பேச்சு, நாடகம், பட்டிமன்றம், கவிதை, வினாடி வினா போன்ற போட்டிகளில் பெரும்பாலும் முதல் பரிசு பெறுவேன். அந்த ஆர்வம்தான் ஊடகத்தில் நுழைய உறுதுணையாக இருந்தது.

    கிடைத்த வாய்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி இத்துறையில் முன்னேற்றம் அடைந்தேன். நம்முடைய தனித்திறமையை வெளிக்காட்டுவதன் மூலம், தானாக பிடித்தமான பணிகள் தேடி வரும். எதற்கும் காத்திருப்பு அவசியம்.

    இன்றைக்கு, இளைய தலைமுறையினரிடம் தீயபழக்கவழக்கங்கள் குடிகொண்டுள்ளது, அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்…?

    இன்றல்ல, எந்தத் தலைமுறையினரிடம் கேட்டிருந்தாலும் அன்றைய இளைய தலைமுறையைப் பற்றி இதே விமர்சனத்தைத்தான் வைத்திருப்பார்கள்.

    கால மாற்றத்தில் இது சகஜமான ஒன்று. மேலை நாட்டினரை கண்மூடித்தனமாக பின்பற்ற முயற்சிப்பதால் ஏற்படும் அவலம் இது. நம் நாட்டுப் பருவநிலைக்கேற்ற உடை எவ்வளவு முக்கியமோ அதேபோலத்தான் உணவும், காலாச்சாரமும். அதை மீறுவதால் நிச்சயமாக நன்மை கிடைக்காது. மாறாக பெருந்தீமையே விளையும் என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து கொண்டால் தீய பழக்கங்கள் காணாமல் போகும்.

    ஒருவன் குடிகாரன், ஸ்தீரி லோலன் என்று பெயர் எடுப்பது சிறப்பானதா? இவற்றை ஆண் செய்தால் தானும் செய்வேன் என்று எத்தனிக்கும் பெண்களுக்கு மதிப்பிருக்குமா?

    எது பெருமைக்குரியதோ, சமூகத்தில் மதிப்பானதோ அதைத்தானே செய்ய வேண்டும்? அதற்காகத்தானே மனிதனுக்கு ‘ஆறாவது அறிவு’.

     தமிழ் மொழியின் நிலை இப்பொழுது?

    தமிழ் மொழியின் நிலை என்றும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், பார்க்கும் பெண்களை எல்லாம் தாயாக நினைத்துப் போற்றவது நல்ல பண்பென்றாலும் பெற்றதாயை இன்னும் சிறப்பாகப் பேணுவது கடமை அல்லவா? அதைப் போலத்தான் ஆங்கிலமும். பிறமொழிகளைத் தேடிக் கற்றாலும் தாய்மொழியாம் தமிழை ஆழ்ந்து கற்பது நமது இன்றியமையாக் கடமை. இதை பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோரும் சேர்ந்து முழு முனைப்புடன் தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். இதைச் செய்தால் நம் மொழியின் நிலை இன்னும் நன்றாக இருக்கும்.

    இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…?

    “சோதனை இல்லாத வாழ்க்கை இல்லை

    தடைக்கற்கள் இல்லாத பாதை இல்லை

    வெற்றி தோல்வி இல்லாத பயணம் இல்லை”

    தன்னைவிட பலவீனமானவர்களை துன்புறுத்துவதில் ஆண்மையின் கம்பீரம் இல்லை.

    பெண்ணை சக ஜீவனாக மதிக்கத் தெரியாதவன் ஆணுமில்லை.

    பெண்மையின் மென்மையை கைவிட்டவள் பெண்ணுமில்லை.

    கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரியாதவனுக்கு வெற்றிகள் இல்லை.

    வெற்றிக்கு பொறுமை வேண்டும். கவனம் சிதறாத உழைப்பு வேண்டும்.

    வெற்றி வரும், நிச்சயம் வரும், வரும்வரை காத்திருக்க வேண்டும்!…

    தஞ்சாவூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், சோழமண்டல சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஆனந்த் சுகமான உள்ளாடையுடன் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    தஞ்சாவூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், சோழமண்டல சாரிட்டபிள் டிரஸ்ட்

    மற்றும் ஆனந்த் சுகமான உள்ளாடையுடன் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள், நேரம், இடம், தலைப்பு, சிறப்புப் பயிற்சியாளர் முதலிய விபரங்களுக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  95972 85160

    திரு. டோமினிக் சேகர்  94870 29494

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம்

    வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள், நேரம், இடம், தலைப்பு, சிறப்புப் பயிற்சியாளர்      முதலிய விபரங்களுக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  95972 85160

    திரு. தர்மர்  97880 41089

    நிரந்தரமான மகிழச்சி

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 25.10.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்-7.

    தலைப்பு   :”நிரந்தரமான மகிழச்சி”

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோயம்முத்தூர்

    போன் : 97893 75278.

    தொடர்புக்கு:

    Jc. G. தாமோதரன், M.Com., M.Phil. – 93601 22377

    விருப்பம் நிறைவேறும்

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 9.10.2015; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு   : “விருப்பம் நிறைவேறும்”

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோயம்முத்தூர்

    போன் : 97893 75278.

    தொடர்புக்கு: தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    PRO – திரு. M. ராதாகிருஷ்ணன்: 99657 95856

    ஒருங்கிணைப்பாளர் – திரு. சீனிவாசன்: 98435 45986