– 2015 – August | தன்னம்பிக்கை

Home » 2015 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்

    அ. செல்வராஜீ. M.Sc (வனவியல்)

    வனஉயிரின ஆராய்ச்சியாளர்,

    வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

    மேட்டுப்பாளையம்.

    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் மனிதன் என்றால் எல்லா உயிர்களுகம் நடுங்குகின்றன. வீட்டில் திரியும் கரப்பான் பூச்சியில் இருந்து கடலிலுள்ள திமிங்கலம் வரை இடையூறு மற்றும் ஆபத்து என்றபெயரில் மனிதன் உயிர்களை கொன்று கொண்டிருக்கிறான். அவற்றுள் மிகப் பரிதாபமான நிலை பாம்புக்கே. “ஆம், பாம்பு என்று கண்ணில் பட்ட உடனேயே எல்லா மனிதரும் கத்தி கூச்சலிட்டு கையில் கிடைத்த கம்பு தடி ஏதேனும் ஒன்றைஎடுத்து அதனை அடித்து கொல்ல முயற்சிப்பது தான்.”

    “அதோ, அங்கே, இதோ, இங்கே” என்று ஒரேகளேபரமாக்கி இறுதியில் பாம்பைக் கொன்று, செத்த பாம்பை ஏதோ சாதித்து விட்ட கணக்காய் கம்பில் தூக்கி வரும் ஆட்களை தான், நாம் எல்லோரும் கண்டிருப்போம். ஆனால், அந்த பாம்பு பற்றிய அறிவோ, எந்த பாம்புக்கு விஷமுண்டு, எந்த பாம்புக்கு விஷமில்லை, பாம்பு கடித்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும், பாம்பு இருப்பிடத்திற்கு வராமல் இருக்க  என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவான புரிதல் நம்மில் பலருக்கு இல்லை என்பதே ஒத்துக் கொள்ளக் கூடிய உண்மை. பாம்பு என்ற உயிரின் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பாம்புகளின் பங்களிப்பு பற்றியும் பாம்புக்கடிக்கான முதலுதவி பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், இந்தக் கட்டுரையில் பயணிப்போம்.

    நான் சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் என்னும் ஊரில் பிறந்தேன். பெற்றோர் விவசாயம் பார்த்து வருகிறார்கள். எனது பள்ளிப்படிப்பு அனைத்தும், தாரமங்கலத்திலுள்ள செங்குந்தர் மஹாஜன மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். பள்ளிப்படிப்பை படிக்கும் போதே, இயற்கையின் மீதும், விலங்குகள் பறவைகள் மீதும், அளவறியா பற்று இருந்தது. இதனால், எப்பொழுதும் இயற்கையோடு இணைந்தே இருப்பேன்.

    நான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, எனக்கு பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, மேட்டுப்பாளையத்திலுள்ள, வனக்கல்லூரியில் பி.எஸ்.சி., வனவியல் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். இத்துறைஎனக்கு மிகவும் பிடித்து விட்டது. காரணம், நான் தினமும் பார்த்து வளர்ந்த சூழல், அதனால் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., ஆராய்ச்சி படிப்பு ஆகிய பட்டத்தை முடித்தேன். இக்கல்லூரியில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறேன்.

    பாம்புகளின் பரிணாமம்

    உலகில் சுமார் 3400 வகையான பாம்பினங்கள் காணப்படுகின்றன, ஊர்வனத்தில் பாம்புகள்தான் அதிக இனங்களைக் கொண்டுள்ளன. சுமார், 10 முதல் 15 கோடி வருடங்களுக்கு முன்பு, பாம்புகள் தோன்றின. (ஆனால், மனிதன் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன்புதான் தோன்றினான்.) பாம்புகள், பல்லியினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தன.

    விஷமுள்ள மற்றும் விஷமற்ற பாம்புகள்…

    பாம்புகளின் விஷத்தன்மையைப் பொறுத்து, வீரிய விஷமுள்ளவை, கடுமையில்லா விஷமுள்ளவை, விஷமற்றவை என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உலகில் காணப்படும் 3400பாம்பினங்களில் சுமார் 560 வகையான பாம்புகளே விஷத்தன்மை கொண்டவை. இந்தியாவில் காணப்படும் 276 பாம்பினங்களில், 62 பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. 42 வகையான பாம்புகள் கடுமையில்லாத விஷமுள்ளது மற்றும் 171 பாம்பினங்கள் விஷமற்றவை. இந்தியாவிலுள்ள 62 வகையான விஷப்பாம்புகளில்,  42 இனங்கள் நிலம், நீர்நிலைகள் மற்றும் முகத்துவாரப்பகுதிகளில் இருப்பிடமாகக் கொண்டுள்ளது.

    20 இனங்கள் கடலில் வசிக்கின்றன. இந்தியாவிலுள்ள விஷப்பாம்புகளில் அவற்றில் பரவல், மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் காணப்படும். விஷத்தன்மை மற்றும் கடியின் தன்மை ஆகியவற்றை அளவுகளாகக் கொண்டு பார்க்கும் போது, 4 வகையான பாம்புகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

    1. நல்லபாம்பு,
    2. கட்டுவிரியன்,
    3. கண்ணாடி விரியன்,
    4. சுருட்டை விரியன்

    பாம்புக்கடி

    21st Centary Tropical Necleched Desouse(Klho) உலக சுகாதார அமைப்பு பாம்புக் கடியை ஒரு கண்காணிக்கப்படாத வியாதியாக இந்த 21-ம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறது.

    இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவற்றில் சரியான முதலுதவி மற்றும் மருத்துவம் இல்லாத காரணத்தால் 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் இறக்கின்றார்கள். பொதுவாக நம் நாட்டில், பாம்புக்கடி இரண்டு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    1. நரம்பு மண்டலத்தைப் பாதித்தல் (நல்ல பாம்பு மற்றும் கட்டுவரியன்)
    2. திசுக்களைப் பாதித்தல் (கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன்)

    பாம்புக்கடியின் வீரியம் மற்றும் அறிகுறிகள்…

    பொதுவாக, பாம்பு மனிதனை கடித்ததை கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்து அறியலாம். அவை, பாம்பு பற்கள் பதிந்த அடையாளம், கடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறுதல், வீக்கம், நிறமாறுதல், தசைகள் இறத்தல், பாம்பின் விஷம் மனித உடலில் உள்ளே சென்றவுடன் பார்வை மங்குதல், காதுகேட்காமல் இருத்தல், அதிகமாக வேர்த்தல், மூச்சுத்திணறல், நடுக்கம், பார்வை நிலைகுலைதல், கண் சொருகுதல், வாயில் நுரைவருதல், தலைச்சுற்றல், அதிகப்படியான இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஒருவரை பாம்பு கடித்தால் எவ்வளவு நேரம் உயிருடன் இருப்பார்கள் என்பதை பின்வரும் காரணிகளைப் பொறுத்து பாம்புக்கடியின் வீரியம் வேறுபடும். அவை கடிபட்டவரின் வயது, பாலினம் மற்றும் ஆரோக்கியம், பாம்பின் நீளம், பாம்பின் வயது, பருவகாலம், பாம்புத்தோலுறிப்பு காலம், கடிபட்டவரின் மனநிலை, கடிபட்ட இடத்தை அதிகமாக அசைத்தல், பயம், கடிபட்ட இடம், பாம்பின் பல்லின் தன்மை மற்றும் முதலுதவி சிகிச்சை.

    “பாம்பின் கடியை கூட நீங்கள் பொருட்படுத்தாமல் இருந்து விட்டால் அந்த விஷம் கூட பயன்னற்றதாகி விடும்”-  சுவாமி விவேகானந்தர்

    பாம்புகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சில முன்னெச்சரிக்கை வழிமுறைகள்

    • நம் சுற்றுப்புறத்திலுள்ள, பாம்புகளைப்பற்றியும், அதனுடைய வாழ்விடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
    • வீடு, தொழிற்சாலை, வேலை செய்யும் இடங்களையும் அதனை சுற்றியுள்ள இடங்களை எலிகள், குப்பை, கற்குவியல், கட்டுமான பொருட்கள், விறகு, உணவுக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    • பாம்புகள் அதிகமாக உள்ள இடங்களில் தரையில் படுப்பதை தவிர்க்க வேண்டும்
    • இரவில் வெளியே செல்லும் போது டார்ச் லைட், கம்பு, குச்சியால் தரையை தட்டிச் செல்லவும்.
    • வீடுகளில் & வேலை செய்யும் இடங்களில் பாம்பை பார்த்தால் அடிப்பதை தவிர்த்து தப்பித்து செல்ல வழிவகை செய்யவும் அல்லது வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
    • பாம்புகளைக் கையாளுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். மேலும் பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது..

    பாம்பு கடிக்கான முதலுதவிகள் செய்யக்கூடாதவை

    • கடிப்பட்டவர் நடக்கவோ, ஒடவோ கூடாது.
    • கடிப்பட்ட இடத்தை வாய்வைத்து உறியவோ, கயிறு கட்டவோ, பிளேடால் கிழிக்கவே கூடாது.
    • கடிப்பட்ட இடத்தில் இராசயனப்பொருள் மற்றும் மருந்துப்பொருள் வைக்கக் கூடாது.
    • பாடம் போடுதல், வேப்பிலை அடித்தல், நாட்டு மருந்து முதலானவற்றைநாடக்கூடாது.
    • வரி நிவாரணத்திற்காக எவ்வித மாத்திரையே, மதுவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • அதிகமாக தண்ணீர், சோடா, மற்றும் குளிர்பானம் அருந்தக்கூடாது.
    • கடித்த பாம்பினை அடித்தோ (டிச) பிடிக்கவேண்டிய அவசியமில்லை. உடலில் ஏற்படும் முதற்கட்ட அறிகுறியைக் கொண்டே சிகிச்சை வழங்கிடமுடியும்.

    பாம்புகளைப்பற்றிய மூடநம்பிக்கை….

    1. நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.
    2. நல்லபாம்பும், சாரைப்பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண்பெண் பாம்புகள்.
    3. நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன், தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.
    4. நல்லபாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்று விட்டால், அதன் ஜோடியைக் கொன்றவரை பலிவாங்கும்.
    5. பச்சைப்பாம்பு கண்களைக் கொத்தும்.
    6. கொம்பேறி மூக்கன் மனிதனைக் கடித்துக் கொன்று விட்டு, மரத்தில் ஏறி மனிதனின் உடல் எறிவதை பார்க்கும்.

    இவையெல்லாம், முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

    செய்யக்கூடியவை

    • கடிப்பட்ட நபரை பயமின்றி அமைதியான மனநிலையில் வைத்திருக்க வேண்டும். பயத்தால் இரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் வெகு விரைவாக உடல் முழுவதும் பரவும்.
    • பாம்பு கடித்தால் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைக்கவும் அல்லது அது வருவதற்குள் கடிப்பட்டவர்க்கு முதலுதவி சிகிச்சை அளித்திட வேண்டும்.
    • பாம்புக் கடிக்கு அரசுத் தலைமை பொது மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை உண்டு. தனியார் மருத்துவமனையை நாடினால் பணமும், உயிர்காக்க மிக அவசியமான நேரமும் விரையமாகும்.
    • கடித்தது எந்தவகை பாம்பு என்று தெரிந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் கடியின் அறிகுறியை வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
    • கடிப்பட்டவர் மோதிரம், வளையல், இறுக்கமான காலணி போன்றஅணிகலன்கள் அணிந்திருந்தால் கழற்றி விடவும். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

    முதலுதவி (நல்ல பாம்பு, கட்டுவரியன்)

    Pressure Immobilization Method

    பிரசர் இம்மொபல்லைஸேசன் மெத்தேடு

    1. முதலில் கடிப்பட்ட இடத்தின் மீது சுத்தமான பஞ்சு (அ) துணி கொண்டு மூடவேண்டும்
    2. கடிப்பட்ட இடத்தில் துவங்கி மேற்புறமாக பேண்டேஜ் கொண்டு கட்ட வேண்டும். (போண்டேஜ் இல்லாத போது, சேலை. வேட்டி, துப்பட்ட (அ) ஏதாவது துண்டை பயன்படுத்தலாம்.
    3. கால் முறிவிற்கு கட்டுப் போடும் அளவிற்கு இருக்கமாக இருக்க வேண்டும். தேவையற்றஅசைவுகளைத் தவிர்க்க வேண்டும்.
    4. பிறகு ஒரு குச்சியை கட்டின் மீது வைத்து கடிப்பட்ட இடத்தின் மேல் மற்றும் கீழ் புறமுள்ள மூட்டுகள் அசையாதவாறு கட்ட வேண்டும். பிறகு நடக்கவோ, ஓடவோ கூடாது.
    5. கைகளால் கட்ட நேர்ந்தால் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம். கைமுறிவிற்கு போடும் கட்டுபோல கை அசையாதவாறு கழுத்துடன் இணைத்துக் கட்ட வேண்டும்.

    பாம்புகளைப் பாதுகாப்போம்….

    நம் சுற்றுப்புறசூழலில், சமன்பாட்டில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கும் உயிரிகள் ஆகும். பாம்பினத்தில் எந்தவொன்றைக் கண்டாலும், நம் உயிருக்கு ஆபத்து என்று அடித்து கொல்ல செய்ய முற்படுகிறோம். மனிதனின், மனிததன்மையற்ற செயல்களால், பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. வேட்டையாடுதல், மக்கள் தொகைப் பெருக்கம், இயற்கை வளங்கள் அழிதல், தொழிற்சாலைகளில் கட்டிடங்கள், பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபட்டு பாம்பினங்கள் அழிகின்றன.

    பாம்பின் வாழ்விடமான புற்றுகளை மூடநம்பிக்கையுடன் பூஜைபோட்டு சடங்குகள் செய்வதால், பாம்புகள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகின்றன.

    பாம்புகள் சில தவிர்க்க முடியாத நிலையில்தான் நம்மைக் கடிக்கிறது. அதுவும் கூட தற்காப்பு செயல்தான். உலகில் பாம்புக்கடிக்கு அதிகமாக இறப்பவர்களின் பட்டியலில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. விஷப்பாம்பு அதிகம் உள்ள நாடு ஆஸ்திரேலியா, அங்கு மக்களிடம் பாம்புகள் பற்றி சரியான விழிப்புணர்வும், முதலுதவி பற்றிய அறிவும் உள்ளது. அதனால், வருடத்திற்கு பத்திற்கும் குறைவான மக்களே இறக்கின்றனர். மனிதர்களுக்கு இந்த உலகில் வாழ எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே

    போலவே, இப்பூமியில் உருவான ஒவ்வொரு உயிரினமும் வாழ உரிமை உள்ளது. மின்சாரம், ஆபத்தானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவற்றைஅறிவியல் பூர்வமாக கையாளுகிறோம். இதைப்போலவே, நாம் பாம்புகளையும் பாதுகாக்க வேண்டும்.

    பாம்புகளையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்போம்…

    காலக் கணித மாமேதை

    வெற்றிப் பாதையில் பயணப்படும் ஒவ்வொருவரும் தனக்கென்று ஓரு பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்பாதையில் பயணப்படும்பொழுது பல்வேறு இடையூறுகள் தடைகற்கள் ஏற்படலாம். அவற்றைத் தாண்டிப் பயணித்தால் மட்டுமேதான் வெற்றி கிடைக்கும். அவ்வாறுதான் பிறந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் என்னால் ஆன ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்தி அதன்மூலம் என்நாட்டையே பெருமை அடைய வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால கணக்கீடு முறையைச் செய்து வெற்றி பெற்றவர். கோவையைச் சேர்ந்த முனிராஜ் வயது 51.

    சென்றவாரம் ஏதேனும் ஒருநாளை நம்மிடம் கேட்டால் நம்மிடம் நிச்சயம் பதில் வராது. ஆனால் அடுத்த 100 கோடி ஆண்டுகளுக்கு ஒருவர் சரியான கால கணக்கை உருவாக்கியிருக்கிறார். இது ஒரு சாதாரண காரியம் அல்ல. மொத்த பண்டையும் தன் மனக்கணக்கில் வைத்து உடனுக்குடன் நாளை சொல்லும் வல்லமை பெற்றவர்.

    நான் பிறந்தது சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பெற்றோர் திரு.கணேசன் – சரஸ்வதி. அப்பா சொந்தமாக பிசினஸ் செய்து வந்தார். என் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறுபேர். எனது சிறிய வயதில் தந்தை இறந்து விட்டார். குடும்பத்தின் பொறுப்பு எங்கள் மீது விழுந்தது. இதனால் படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. எனினும் என் தாயார் எங்களை படிக்க வைக்க ஆசைப்பட்டார்கள்.

    அவர்களின் வார்த்தைக்கு அடிபணிந்து பத்தாம் வகுப்பு வரை மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. நாளுக்கு நாள் எங்கள் குடும்பம் பொருளாதாரத்தால் பின்தங்கியே சென்றது. இதனால் வேலைக்கு சென்றால் மட்டும்தான் குடும்பத்தை வழி நடத்த முடியும் என்ற நிலையில் இருந்தோம் என்பதால் வேலைக்கு வந்தேன். அங்கு பரமேஸ்வரி அச்சகத்தில் பிழைத்திருத்தங்கள் செய்யும் பணியில் சேர்ந்தேன்.

    ஒருமுறை அச்சகத்தில் வேலைப்பார்த்து கொண்டிருந்தபொழுது ஒரு பத்திரிகையில் நாள் மாறியிருந்ததை என்னால் அறியமுடிந்தது. அதை சரிப்பார்க்க அப்பொழுது எந்த ஒரு தொழிற்நுட்பமும் இல்லை. இதனால் என் மனக்கணக்கில் நாட்களைக் கணக்கிட்டேன். நான் சொல்லியது மிகச் சரியாக இருந்தது. இதைப்பார்த்து என்னுடன் பணியாற்றியவர்கள் என்னை மிகுந்து பாராட்டினார்கள்.

    மற்றவர்கள் பாராட்டும் பொழுதுதான் தன்னுடைய சாதனை எத்தகையது என்று நமக்கே புரியும். அப்பொழுது தான் எனக்குள் இருந்த திறமை உதயமானது. எப்பொழுதும் நாட்களை கணக்கிட்டு கொண்டேதான் இருப்பேன்.

    சிறுகசிறுக பழகிய இந்த முயற்சி இன்று நாளை உலகம் இருக்கும் வரையில் காலண்ரை கண்டுபிடிக்க முடிந்தது. என் ஆராய்ச்சியில் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளேன். லீப் ஆண்டைத்தவிர, ஜனவரி, அக்டோபர் மாதங்களில் தேதியும் கிழமையும் ஒன்றாகவே அமைந்திருக்கும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், டிசம்பர் மாதத்திலும் ஏப்ரல் ஜீலை மாதத்திலும் 31 ஆம் தேதி நீங்கலாக கிழமை ஒன்றாகவே இருக்கும்.

    இப்படி பல உண்மைகளைக் கண்டறிந்து அதன் முலம் நூறு ஆயிரம் கோடி ஆண்டுக்கான காலண்டரைத் தயாரித்தேன். இதைப்பயன்படுத்தி கம்ப்யூடரை விட மிக வேகமாக தேதி கிழமையைக் கண்டறிந்து விடலாம். அது மட்டுமல்லாமல் பிறந்த தேதியும், பிறந்த ஆண்டையும் சொல்லிவிடலாம். மாதத்தையும் வைத்து அவர் எந்தக் கிழமை பிறந்தார். இனிவரும் ஒவ்வொரு வருடமும் எந்தக்கிழமை அவருக்கு பிறந்தநாள் வரும் என்பதை ஒரு நொடிப்பொழுதில் கண்டுபிடித்துவிடலாம்.

    இதுவரை 400 ஆண்டு கால காலண்டரே கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. ஆனால் நான் 100 கோடி வருடத்திற்கும் மேல் கண்டுபிடித்திருக்கிறேன். என்னுடைய இந்த முயற்சி கின்னஸில் இடம் பெறவேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டிருக்கிறேன்.

    சாதிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு தொடங்கிய, இந்த இலட்சிய முயற்சியில் வெற்றி பெற்று விட்டேன். என்னுடைய வெற்றியை நாடறிந்து எனக்கு பல வழிகளில் ஊக்கமும் உந்துதலும் கொடுக்க வேண்டுகிறேன்.

    என்னுடைய இந்த சாதனைக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து வருவது என் தாயார் மற்றும் எனது மனைவி மலர்க்கொடி, என் இரண்டு மகள்கள் தாரணி மற்றும் சரண்யா மற்றும் எனது சகோதர்கள் ஆகியோர்.

    தன்னுடைய உழைப்பின் மூலம் எவரும் எளிதில் செய்ய முடியாத சாதனையைச் செய்து இன்று ஊருக்கும், நாளை நாட்டிற்கும்  பெருமை தேடித் தந்திருக்கும் முனிராஜ் அவர்களை தன்னம்பிக்கை வாழ்த்துகிறது. அரசாங்கமும், மற்றதனியார் அமைப்புகளும் இவரை சாதனையாளராக இலாகா மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்ய வேண்டுகிறோம்

    இரவா பகலா?

    அன்பு நண்பர்களே! நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் இயற்கையின் இருவேறு எதிரெதிர் தன்மைகளின் அற்புத இணக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அண்டசராசரத்தை எடுத்துக் கொண்டால் அசையாத சுத்தவெளியும் (சிவமும்), சுத்தவெளியால் இயக்கப்படும் சக்திகளமும் (சக்தி) எதிரெதிர் நிலைகளைக் கொண்டுள்ளன. நம் உடலும் நிலையான உடலும் அதனுள் சக்தியாக உயிர் ஓட்டமும் இயங்குவதால்தான் நம் இந்த பூமி வாழ்க்கை நடைபெறுகிறது. அதுபோலவே, நிலையாகச் சூரியனும் அதனைச் சுற்றும் கோள்களாலும் தான் பருவ காலம் ஏற்படுகின்றன. இன்னொரு நிலையில் நிலையான அச்சில் அசராத பூமியின் தற்சுழற்சியால்தான் இரவும் பகலும் உண்டாகிறது. ஆக, இறைநிலையின் இரு எதிரெதிர் இயக்கத் தன்மைகளை நாம் புரிந்துகொண்டால் நாமும் அதனை மதித்து அதற்கு இணக்கமாக இயந்து வாழலாம். அன்றாடம் வந்து போகும் ஒரு நாளன் இரவு மற்றும் பகலை நாம் எவ்விதம் கையாள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

    நாம் பகலில் உழைப்பதும், இரவில் தூங்குவதும்தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படியில்லாவிட்டால், ஷிப்ட்டு வேலை செய்பவர்கள் முழுமையாக இரவு வேலை செய்வதும் பகலில் குறிப்பிட்ட காலம் ஆழமாகத் தூங்குவதுமாகப் பழக வேண்டும். ஆனால், அனேக ஷிப்ட்டு வேலைகள் 10 நாட்களுக்கு ஒரு முறை முதல் ஷிப்ட்டு, இரண்டாவது ஷிப்ட்டு அல்லது மூன்றாவது என்று மாறி மாறி ஒரு நிலைப்பாட்டிற்கு வழி தராமல் இருப்பது உண்மையில் தவறான வாழ்க்கை முறைதான்.

    அடுத்து, செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளைப் பகல் 12 மணிக்குள் சாப்பிடவேண்டும். உதாரணமாக கீரை, தயிர் மற்றும் அசைவ உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. அதேபோல், இரவில் வெப்பம் தணிந்த சூழலில் உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளையும் இரவில் சாப்பிடக்கூடாது.

    உதாரணமாக அதிக அமிலம் மற்றும் மசாலா உள்ள காரசார உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. அதேபோல், பகலின் வெப்பச் சூழலில் கெடும் உணவுகளை எடுக்கக்கூடாது. உதாரணமாக பகலில் பால் (காப்பி மற்றும் டீயையும் கூட) சாப்பிடக் கூடாது. இவற்றைமாற்றி எடுக்கும்போது நம் உயிர்ச் சக்தி விரையமாகி நோய்த் தன்மைக்கு இட்டுச் செல்லும்.

    அதேபோல், எனிமாவைக் காலை முதல் பகல் 12 மணி வரையும், பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் எடுக்கலாம். அதேபோல், எண்ணெய் தேய்த்து தலைக்கு குளத்தலை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்தான் செய்ய வேண்டும். ஒரு வேளை மட்டும் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமாயின்  அது இரவு உணவை தவிர்த்துவிட்டு தூங்கப் போகலாம். காலை உணவைத் தவிர்க்கும் விரதம் கூடாது.  அதேபோல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு முழு உண்ணாவிரதம் இருக்க வேண்டுமாயின் அதனை மாலைப் பொழுதில் பழச்சாற்றை முதலில்  அருந்தி, பின்னர் இலகுவாகச் செரிக்கக்கூடிய உணவைக் குறைவாக சாப்பிட்டு, பின்னர் இரவு ஆழ்ந்து தூங்க வேண்டும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், பகலில் எக்காரணம் கொண்டும் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நம் வேலை மற்றும் பயணம் காரணமாக இதை மாற்றிச் செய்வது மிகவும் உடல் நலனுக்குக் கேடானது.

    உடற்பயிற்சியினைக் காலையிலும், மூச்சுப் பயிற்சியினை மாலையிலும் செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் மூச்சுப் பயிற்சியைக் காலையில் செய்வதால் பாதகம் இல்லை. ஆனால், உடற்பயிற்சியை உடல் உழைப்பிற்குப் பின், மாலையில் செய்தால் நம் உடல் சோர்வுறும். தியானத்தை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். தினமும் எல்லா பருவ காலத்திலும் காலையில் அவசியம் குளக்க வேண்டும். வேண்டுமானால் கூடுதலாக மாலையில் குளக்கலாம். அதேபோல், காலைக் கடனை காலையில்தான் அடைக்க வேண்டும். பகல் 12 மணிக்குப் பிறகு காலைக் கடனை அடைத்தால் நமக்கு உயிர்ச் சக்தி இழப்பு ஏற்படும். ஆக, இரவா பகலா என்ற விழிப்புணர்வு நமக்கு அவசியம் வேண்டும்.

    எழுந்து நட! சிகரம் தொட!

    திரு.  V.S.N. ஆறுச்சாமி M.A.,

    நிர்வாக அறங்காவலர்

    பொன்னு மெட்ரிகுலேசன்  மேல்நிலைப் பள்ளி,

    தாராபுரம்

    • யாரும் வெறுக்காத வாழ்க்கை – எப்போதும் யாரும் மறக்காத வாழ்க்கை யார் ஒருவர் வாழ்கிறாரோ  அவரை நல்லோர்கள்  தேடி வருவார்கள் என்பதற்கு உதாரணம்  இவர்.
    • செய்யும் காரியங்களை உறுதியோடு செய்யும்போதுதான், நம்பிக்கையை எல்லோரிடமும் பெற முடியும் என்று எடுத்த செயல்களை உறுதியோடு செய்து முடிப்பவர்.
    • தன் நலம் மறந்து பிறர் நலம் பேணுவதில் முன் நிற்பவர்.
    • கால வயதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்.  மனவயதை மட்டுமே எடுத்துக்கொண்டு எப்போதும் இளைஞரைப் போல் உற்சாகமாய் உழைத்துக் கொண்டே இருப்பவர்..
    • பல பணிகள் புரிவர் என்றாலும் நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும் நட்புகளை உயர்த்திப் பாராட்டுவதிலும் உயர்ந்தே இருப்பவர்.
    • இப்படி பல்வேறு சிறப்புகளை தான் வாழந்த காலத்தில் பெற்றிருந்த தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் வள்ளல் பி.எஸ். தங்கவேலு முதலியார் அவர்களின் நம்பிக்கைக்குரியவரான அரிமா  திரு. V.S.N. ஆறுச்சாமி அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி நாம்…

    இந்தப் பள்ளி யாரால் எப்போது தொடங்கப்பட்டது…?

    இப்பள்ளி 1967 ஆம் ஆண்டு திரு. தங்கவேல் முதலியார் அவர்களால் தொடங்கப்பட்டது. அன்றைய காலத்தில் தாராபுரம் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஆங்கிலப் பள்ளிளே இல்லாத சூழ்நிலைதான் இருந்தது. ஆர்வம் இருந்தும் பள்ளி இல்லாததால்  குழந்தைகள் படிக்க முடியாத நிலையில் இருந்தார்கள்.

    இதைக் கருத்தில் கொண்டு 1967 ஆம் ஆண்டு தாராபுரம், பூங்கா சாலையில் வாடகைக் கட்டிடத்தை அமைத்து ஏழை மாணவர்களைக் கொண்டு வெறும் தமிழ்வழியாக மட்டும் இல்லாமல் கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் “பொன்னு இங்கிலீஷ் ஹோம் ஸ்கூல்” என்ற பெயரில் ஏழு மாணவர்களை மட்டும் கொண்டு ஆங்கிலக் கல்வியை தாராபுரத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்நிலையில் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் குறுகிய அளவில் கட்டிடத்தை அமைக்க நிதி பற்றாக்குறை காரணமாக சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று பள்ளிக் கட்டிடத்தை நிறைவு செய்து 1984 ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியைத் தொடங்கினார்.

    இப்பள்ளி இப்பகுதியிலுள்ள பெற்றோரை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தது. படிப்பை விட ஒழுக்கத்திற்கு அதிகளவில் இப்பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், மாணவர்களின் கல்வித் தரமும் உயர்ந்தது. பள்ளித் தரமும் வெகுவாக உயர ஆரம்பித்தது.

    பள்ளியின் நிர்வாகம் தங்களிடம் வந்தது குறித்து?

    வள்ளல் பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்கள் நேர்மையாலும், அர்ப்பணிப்பாலும் இப்பள்ளியை மிக உயர்ந்த கல்விச்சாலையாக தரம் உயர்த்தினார். இவரும் இவரின் துணைவியார் திருமதி த. பொன்னம்மாள் அவர்களும் தங்களுக்கு  குழந்தைகள் இல்லாவிட்டாலும் தம் பள்ளி மாணவச் செல்வங்களையே தங்கள் குழந்தைகளைப் போல் பாவித்து பள்ளியை அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், வயது உடல்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு நமக்கு பின் யார் நிர்வகிப்பது என்பதில், மனக்குழப்பம் எழுந்திருக்கிறது. சேவை மனப்பான்மையோடு தொடங்கிய இப்பள்ளியை தாராபுரத்தை சார்ந்த நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் நிர்வாகத்தை ஒப்படைத்து சீரிய முறையில் காலம் காலமாய் நன்முறையில் நடத்திட வேண்டும் என்று எண்ணியவர், என்னுடைய பிறந்த நாளில் என்னை வரவழைத்து எனக்குப் பின்னர் இப்பள்ளியை நீங்கள் தான் நிர்வகிக்க வேண்டும் என்று கூறினார். நான் அப்பொழுது அரிமா சங்கத்தின் தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன அந்த நிமிடம் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சற்று மன தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டேன்.

    இதற்காக ஸ்ரீஇராமகிருஷ்ணா மடம் டிரஸ்ட் என்னும் அமைப்பினை 1992ம் வருடம் துவக்கி என்னை தலைவராக்கி அவரும், அவரது மனைவி த. பொன்னம்மாள் அவர்களும் உறுப்பினர்களாக இருந்து வழிநடத்தினார்கள். 1994ம் வருடம் அவரது மறைவிற்கு பிறகு அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இன்றளவும் செயல்பட்டு வருகிறேன்.

    கே : சொந்தமாக தொழில் செய்த உங்களால் முற்றிலும் மாறுப்பட்ட கல்வித்துறையை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்?

    கல்வி என்பது ஒவ்வொரு மனிதனை நிர்வகிக்கும் மிகப்பெரிய பொக்கிஷம். அந்தக் கல்வித்துறையை ஏற்று நடத்துவது என்பதை நான் சற்றும் எதிர்ப்பார்க்காமல் இருந்த நேரத்தில் அய்யா என்னிடம் கொடுத்தார்.

    ஆனால் எனக்குள் நம்பிக்கை இருந்தது. எத்தொழில் செய்தாலும் அதில் உண்மையாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணி இதை முறையாகச் செய்தேன்.

    எனக்கு உறுதுணையாக, வள்ளல் பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்களின் துணைவியார் திருமதி த. பொன்னம்மாள் அவர்கள் பள்ளி தாளாளராகவும், திருப்பதி வெங்கடேஸ்வரா கட்பீஸ் உரிமையாளர் திரு வி. ராமசாமி அவர்களும், திரு. மோகன் அவர்களும் அறங்காவலர்களாக எனக்கு பலவகையில் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். முன்னாள் நகரத்தந்தை திரு. வெங்கிடுசாமி பி.எஸ்.சி., அவர்கள் பல ஆண்டுகள் பல வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.முதல்வர் திரு பெ. மணியரசன் அவர்கள் எனக்கு பக்கபலமாய் இருந்து கவனித்து வருகிறார்.

    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் தங்கம் பொன்னு கருணை அறக்கட்டளையின் உறுப்பினரும், மருத்துவருமான புலவர் மா. தங்கரசு B.S.M.S.,   அவர்கள் பள்ளியின் அனைத்து நிகழ்வுகளிலும் தன்னுடைய மேலான கருத்துக்களையும், ஒத்துழைப்பையும் நல்கி பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருகிறார்.

    கே : போட்டிகள் நிறைந்த கல்விச் சூழலில் இக்கல்வி நிறுவனத்தை நன்முறையில் திறம்பட நடத்துவது குறித்து?

    எங்கள் கல்வி நிறுவனத்தின் தாராக மந்திரமே!  “  தரமான கல்வி மற்றும் நல்லொழுக்கம் என்பதுதான்   ”

    கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் இக்கல்வி நிறுவனத்தில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மூலம் வரும் வருமானத்தில் நானோ மற்ற குழு நிர்வாகிகளோ ஒரு ரூபாய் கூட எதிர்பார்ப்பதில்லை, எடுக்கவும் கூடாது. இப்பள்ளியின் மூலம் வரும் வருமானம் அனைத்தும் முழுக்க முழுக்க இப்பள்ளியின் வளர்ச்சிப் பணிக்கே செலவிட்டு விடுகிறோம். இதனால் இந்நிறுவனத்தை எங்களால் மேலும் மேலும் தகுதியுடையதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் இருக்கிறது…

    அது மட்டுமல்லாமல் எங்கள் கல்வி நிலையம் குறித்து அதிக விளம்பரங்கள், தட்டிகள், வைப்பதில்லை. தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்திற்கு விளம்பரம் அவசியமில்லை என்று கருதுகிறோம்.

    கே : பெரிய நகரங்களில் இருக்கும் கல்விநிலையத்திற்கும், இது போன்ற கிராமப்புற பின்னணியில் இருக்கும் கல்வி நிலையத்திற்கும்  உள்ள வேறுபாடு என்பது…?

    நகர்ப்புறங்களில் இருக்கும் கல்விநிலையத்திற்கு அந்தக் கல்வி நிலையத்தைச் சுற்றியிருக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளியிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து படிப்பார்கள். அதற்கேற்றாற்போல் கட்டணம், பேருந்து வசதி, விடுதி வசதி போன்றவை ஆடம்பரமாக இருக்கும்.  ஆனால் தாராபுரம் போன்ற சிறிய பகுதியில் இருக்கும் கல்வி நிலையங்களில் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் படிக்கும் குழந்தைகள் மட்டுமே வருவார்கள். இவர்களுக்கு பேருந்தோ, விடுதியோ தேவைப்படாது. முழுக்க முழுக்க விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகளே அதிகம் என்பதால் பெற்றோர்களுக்கு நம்பிக்கை தான் தேவைப்படுகிறது. அதனை எங்கள் பள்ளி தந்து விடுகிறது.

    கே : ஒரு கல்விநிறுவனம் மேன்மை பெற வேண்டுவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு எந்த அளவில் இருக்க வேண்டும்?

    ஒரு குழந்தைக்கு பெற்றோர் எவ்வளவு முக்கியமோ அதைப்போல் ஒரு கல்வி நிறுவனத்திற்கு ஆசிரியர்கள். ஒரு பள்ளியின் முதுகெலும்பு என்றே அவர்களைச் சொல்லலாம். இப்பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணியில் மிக சரியாக பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் முதன்மையானவராய் இருப்பவர் பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் திரு. பெ. மணியரசன் அவர்கள்.  இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எளிமை, நேர்மை, உழைப்பு, கண்டிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடியவர். இவருக்கு 2009 – 2010ம் ஆண்டு தமிழக அரசின் உயரிய விருதான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

    எந்நேரமும் பள்ளியின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பவர். இவரின் உந்துதல்தான் இப்பள்ளியின் வளர்ச்சிப் படி நிலைகள் என்றே சொல்லலாம்.

    இவருக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்களும் கடினமான உழைப்பைக் கொடுத்து மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வருபவர்கள்.

    கே : இங்கு பயின்ற மாணவர்களின் உயர்நிலைக்குறித்து…?

    ஒருமுறை நானும் எனது நண்பரும் டெல்லி செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் இருக்கையின் பக்கத்தில் இருந்து ஒரு இளைஞன் எங்களைப் பார்த்து மிகவும் முகமலர்ச்சியுடன் ஐயா, நான் பொன்னு மெட்ரிக் பள்ளியில் தான் படித்தேன். இப்பொழுது டெல்லியில் ஆர்தோ டாக்டராக இருக்கிறேன் என்று அவரை அறிமுகம் செய்தார்.  அந்நேரம் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

    இதுபோல நிறைய மாணவர்கள் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் நல்ல சம்பளத்தோடு வேலை பார்க்கிறார்கள் என்று அந்த மாணவர்களின் பெற்றோர்கள் எங்களிடம் சொல்கிறார்கள். குறைந்த வருமானம் உடைய நாங்கள் மிகுந்த சிரமத்துடன் இப்பள்ளியில் சேர்ந்தோம். தற்போது எங்கள் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று கூறும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.

    கே : ஆரம்பத்தில் இருந்த கல்வி நிலையம், பொறுப்பேற்ற பின்னர் இருக்கின்ற  கல்விநிலையம்  எப்படி உணர்கிறீர்கள்?

    காலத்திற்கு ஏற்றாற்போல் தொழிற்நுட்பமும் மாறுகிறது. ஐய்யா ஆரம்பித்தபோது கட்டிடங்கள் அனைத்தும் ஓடுகள், பனைமரம், தென்னைங்கைகளை கொண்டு கட்டினார். ஆனால் இப்பொழுது இந்த முறையை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கமும் ஓடு வேய்ந்த கட்டிடங்களில் பள்ளி இயங்கக் கூடாது என்று கூறுவதால், நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றாற்போல், நிறைய கட்டிடங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.

    கணினி இயந்திரங்கள் , தொழிற்நுட்பக்கருவிகள் என்று நிறைய மாறுதல்கள். மாணவர்களுக்கென்று சிறந்த கணினி ஆய்வகங்கள், தனித்தனியான அறிவியல் ஆய்வகங்கள் என நிறைவாக கொண்டு வந்திருக்கிறோம்.

    நான் பொறுப்பேற்ற காலத்தில் அதாவது 1994ம் ஆண்டு பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 561 இருந்தது… தற்போது 3250 மாணவர், மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

    கே : உங்களின் தந்தையிடம் நீங்கள் கற்று கொண்டது? 

    எந்தவொரு குழந்தைக்கும் பெற்றோர்களே முதன்மையானவர்களாக இருப்பார்கள். அதுபோலதான் எனக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகைப்பாடு உண்டு. எனக்கு  மாதா, பிதா, குருவாக இருந்தவர் என் தந்தைதான். என் தந்தை V.S. நாச்சிமுத்து முதலியார் அவர் வாழ்ந்த காலத்திலேயே பிரிக்கப்படாத கோவை மாவட்ட அரிசி ஆலை சங்கத்திற்கு தலைவராக இருந்தார். நிறைய கோவில்களுக்கு பொறுப்பு ஏற்று சிறப்பாக நடத்தி கொண்டு இருந்தவர். நிறைய தான தர்மங்கள் செய்தவர். அதே போல் எனது மூத்த தமையனார் V.S.N. பழனிவேல் அவர்கள் ஈரோடு அரிசி ஆலை சங்கத்தலைவராக இருந்தார்.  இவர்கள் இருவருமே எனக்கு முன்னுதாரணமாய் இருந்தார்கள். அவர்களின் இந்த குணாதிசயங்கள் என்னுள்ளும் பிரதிபலிப்பதால் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது…

    என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். நாங்கள் மதிய வேளையில் உணவு உண்ணும் போது ஒன்றாக அமர்ந்துதான் உண்ணுவோம்.

    அப்படி உண்ணும் போது எனது தந்தையார், அன்றாட நிகழ்ந்த நிகழ்வுகளையோ அல்லது அவர் கற்ற அனுபவ நிகழ்வுகளையோ எங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அது எங்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து விடும். அவர் அடிக்கடி எங்களிடம் சொல்லும் வார்த்தை “சந்தர்ப்ப வசத்தால் நீ ஏமாறலாம் ஆனால், யாரையும் ஏமாற்றி விடாதே” என்பதுதான். அதனை நான் இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.

    கே : காங்கயம் அதைச் சுற்றியுள்ள பகுதியில் அரிசி ஆலை அதிக அளவில் வந்தது குறித்து?

    காங்கயத்தில் 1951ம் ஆண்டு எங்கள் சம்பந்தி K.V. அய்யாவு முதலியார் அவர்களும், எனது தந்தை திரு V.S. நாச்சிமுத்து முதலியார் அவர்களும் முதன் முதலில் அரிசி ஆலையைத் துவங்கினார்கள். அத்துறையில் நாங்கள் முதன்மை பெற்று விளங்கினோம். தாராபுரம், காங்கேயம் போன்ற பகுதிகளில் வேறு மாற்று தொழில் எதுவுமில்லை. தெரிந்த தொழிலான அரிசி ஆலையையே அதிகளவில் நடத்துகிறார்கள்..

    கே : பள்ளி, அரிசி ஆலை, சமூகசேவை, கிளப், மன்றம் என பன்முகத்திறமையாளராக உள்ள உங்களின் காலநேரங்களின் செலவீடு குறித்து?

    நான் இந்தத் தொழில்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு 45 ஆண்டுகள் ஆகின்றன.  எனது  அனைத்து தொழில்களிலும் நம்பிக்கையும், முயற்சியும் உடைய தகுதியான நபர்களை நியமித்து அவர்களுக்கு முழு சுதந்திரமும் அளித்து கவனித்துக் கொள்கிறேன்.

    நான் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. சந்தையில் புதுமையாக எது வருகிறதோ அதை நானும் செய்வேன். மனவயது, காலவயது என்று இருக்கிறது. கால வயது என்பது ஆகிக்கொண்டே இருக்கும். ஆனால், மனவயது எப்பொழுதும் எனக்கு ஒரு இளைஞன் போல் மேலும் மேலும் உற்சாகமும்,  ஊக்கமும் கொடுத்துக் கொண்டே இருக்கும். நான் என்றும் மனவயதில் இளமையானவன் என்பதை நினைத்துக் கொண்டே இருப்பேன். அதே போல் என்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்னை மதிக்கிறார்கள், என்னை நம்புகிறார்கள்.

    கே : இப்பள்ளியின் தனித்தன்மைகள் என்று எதைச்சொல்வீர்கள்?

    இப்பள்ளியில் கல்விக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட ஒழுக்கத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெருநகரங்களில் கொடுக்கும் கல்வி தரத்திற்கு இணையாக நிறைவான கல்வியைக் கொடுத்து வருகிறோம். எங்கள் பள்ளியில் காப்பு நிதியோ, நன்கொடையோ வசூலிப்பதில்லை. படிப்பில்  பின்தங்கிய மாணவர்களையும் ஊக்குவித்து சிறப்பு பயிற்சிகளை அளித்து நன்மதிப்பெண்களைப் பெற வைக்கிறோம். கடந்த 22 வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், கடந்த 12 ஆண்டுகளாக 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 100 சதவீத தேர்ச்சியும் பெற்று நன்மதிப்பெண்களும் பெற்று வருகின்றனர்.

    1997ம் ஆண்டிலேயே எமது பள்ளி மாணவி த. சேதுபர்வதவர்த்தினி வணிகவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். மேலும் 12 மற்றும் 12ம் வகுப்புகளில் தொடர்ந்து வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 மாணவ, மாணவிகள் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பெற்றனர்.

    சென்ற 2014 -2015 கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பா. செல்வநாயகி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றதுடன் பள்ளி மாநில அளவில் முதல் 7 இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

    அய்யா பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்கள் சிந்தித்து பள்ளியின் லோகோ என்று சொல்லக்கூடிய முத்திரையில் மூன்று மதங்களையும் குறிக்கும் உருவவழிபாட்டு முத்திரையை பதித்துள்ளார். அதாவது ராமரின் உருவமும், மசூதி மற்றும் சிலுவையின் உருவங்களும் இணைந்துள்ளது. மதச்சார்பின்றி நமது நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரம், ஒழுக்கத்தை மாணவர்கள் கடைப்பிடிக்க மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது..

    கே : தன்னம்பிக்கை வாசகர்ளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    தன்னம்பிக்கை என்ற சொல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு சொல்.

    என்னிடம் வறுமை, வசதியின்மை என்று வரும் இளைஞர்களிடம் நான் சொல்லும் வார்த்தை என்னைவிட வசதியில் நீதான் சிறந்தவன் என்று சொல்வேன். அந்த இளைஞனுக்கு மனக்குழப்பம் ஏற்படும். எப்படி என்று என்னிடம் கேட்பான். அதற்கு நான் சொல்வேன், உனக்கு இன்னும் வயதிருக்கிறது, என் வயது வருவதற்குள் நீ பணத்தாலும், புகழாலும் உயர்ந்து விடுவாய் என்று சொல்லுவேன். இன்றைய இளைஞர்களிடம் நான் எதிர்பார்ப்பது ஈடுபாட்டுடன் கூடிய கடின உழைப்பும், நேர்மையும் மட்டும்தான்.

    கே : கடந்து வந்த பாதையில் உங்களால் மறக்கமுடியாத நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?

    தோல்வியைச் சந்திக்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள். தோல்வியை நினைத்து மனம் வருந்தவோ, கண்ணீர் வடிக்கவோ கூடாது.

    வாழ்க்கையில் தோற்றுவிட்டால் அதை நினைத்து கொண்டே இருக்கக்கூடாது. அதையும் தாண்டி அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும்.

    எத்தனை முறை செய்தாலும் முதல் முறை செய்வது போல் ஒரு செயலைச் செய்ய வேண்டும். என்னிடம் பழகிய நண்பர்கள் எனக்கு பலவகையில் மறக்க முடியாத நினைவாக இருந்திருக்கிறார்கள்.

    கே : சொந்தமாக தொழில் தொடங்க வரும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம், திட்டமிடுதல், உழைப்பு ஒழுக்கம் ஆகியவை எந்த அளவிற்கு இருக்கிறதோ அதைவிட தொடங்கிய பின்னர் இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். எதிர்பார்ப்பு இருந்தாலும் அதிகம் ஆசைப்படக்கூடாது. தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒரு போதும் இழக்கக் கூடாது.

    உழைப்பு உழைப்பு, கடின உழைப்பு இதுவே நீங்கள் எப்பொழுதும் உச்சரிக்கும் நாடித்துடிப்பாக இருக்க வேண்டும்.

    கே : சுயமாக தொழில் தொடங்குவோரின் சிறப்பியல்புகள் என்னவாக இருக்க வேண்டும்?

    நேர்மை, திட்டமிடுதல், செயல்படுத்துதல், தொழில் மீது பற்று இருந்தால் போதும் தொழில் முனைவோன் ஆகிவிடலாம். எந்நேரமும் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டே இருத்தல் வேண்டும்.

    அதிகம் பணம் சம்பதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இயல்பை மீறீயோ, நேர்மைத் தன்மையை இழந்தோ செயல்பட்டால் எத்தனை சம்பதித்தாலும் நிலையாக இருக்காது.

    கே : எதிர்காலத்திட்டம்

    வள்ளல் பி.எஸ். தங்கவேல் முதலியார் தொடங்கிய சேவை, கல்வி நிறுவனம் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும்.

    இன்னும் பள்ளிக்கட்டிட வசதி, பேருந்து வசதி போன்றவைக் கொண்டு வர வேண்டும். பள்ளியின் நிறுவனர் 36 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரிகள் துவங்க வேண்டும் என்ற கனவினை தாளாளர் த. பொன்னம்மாள் அவர்களும், அறங்காவலர்கள் திருப்பதி வெங்கடேஸ்வரா வி. ராமசாமி எஸ். மோகன் பி.காம்., பள்ளி முதல்வர் பி. மணியரசன் ஆகியோரின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி வருகிறேன்.

    கே : பள்ளி நிறுவனரிடம் நீங்கள் கற்றுக் கொண்டது?

    அய்யா பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்களைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால்,  ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அவரின் சாதனை அளப்பறியது.

    நேர்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். அவரின் நோக்கு அனைத்தும் அப்போது செய்தால் மட்டும் போதும் என்ற அளவில் மட்டும் இருக்காது. எதிர்வரும் காலத்திற்கு ஏற்றாற் போல் அந்தச் செயல் அமைந்திருக்கும்.

    அவர் கட்டிட ஒப்பந்தப்பணியினை மேற்க்கொள்ளும் போது ஒரு கிணறு தோண்டினால் கூட அதன் அருகே ஒரு தொட்டி, துவைக்கும் கல் மற்றும் அந்த நீர் விணாகாமல் இருக்க ஒரு மரமும் வைத்து விடுவார்.

    செய்யும் உதவிகளை உடனுக்கு உடன் மறந்து விடுவார். தேடிச் சென்று உதவிகள் செய்யக்கூடியவர். ஆரம்பத்தில் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். கணக்குப்பார்ப்பதில் துல்லியமாக இருப்பார். சுதந்திரப்போராட்டங்களில் கலந்து கொண்டவர். நல்ல சிந்தனைவாதி. யாரிடம் கடுஞ்சொல் எப்போதும் பேசாதவர்.

    தன் வாழ்நாள் முழுவதும் சைக்கிளில் மட்டுமே பயணம் செய்தார். எந்த ஒரு மகிழுந்துவையும் பயன்படுத்தியதே இல்லை. கடைசி வரை வாடகை வீட்டில் மட்டுமே குடியிருந்தார். இவரின் நேர்மை, அயராத உழைப்பு, சேவை மனப்பான்மை ஆகியவை தான் என்னை மிகவும் ஈர்த்தது.

    கே: தங்களின் பிற சேவைகள் குறித்து…?

    பள்ளியின் நிறுவனர் தெய்வதிரு பி.எஸ். தங்கவேல் முதலியார் அவர்கள் தான் வாழும் காலத்திலேயே இரண்டாவதாக தங்கம் பொன்னு கருணை சேவை அறக்கட்டளையை 10 பட்டதாரி இளைஞர்களைக் கொண்டு நிறுவியுள்ளார். தற்போதைய தலைவராக ஆடிட்டர் கே. சிதம்பரம் B.com., FCA., சிறப்பாக பணியாற்றி  அதில் தனது சேமிப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக வைத்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பொது சேவைகளை செய்ய பணிந்தார். நிதியின்றி தவிக்கும் ஏழை எளிய மருத்துவ படிப்பு மற்றும் மேற்படிப்பு  பயில விரும்பும் மாணவ, மாணவியருக்கு உதவுதல், எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவ கோவில்களுக்கு முறையே சிவன் இராத்திரிக்கு அன்னதானம், இரமலான் நோன்பிற்கு கஞ்சி அளித்தல், ஈஸ்டர் திருநாளன்று ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நற்காரியங்கள் இன்றளவும் சிறப்பாக நடத்திக் கொண்டு உள்ளோம்.

    பள்ளி நிறுவனர் காலம்தொட்டு கல்வியில் மட்டுமின்றி பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறோம். இளைஞர்கள் சிறு தொழிலில் முன்னேற்றம் காண தற்போதைய மதிப்பின் படி 6 கோடி ரூபாய் மதிப்பிலான 50 சென்ட் இடத்தினை இலவசமாக அரிமா அறக்கட்டளைக்கு அளித்திருந்தார். அது பல்தொழில் பயிற்சி மையம், அரிமா திருமண மண்டபமாக மாறி இன்றளவும் சிறப்பாக இயங்கி வருகிறது.

    அய்யா அவர்களது துணைவியார் திருமதி த. பொன்னம்மாள் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு வருடமும் நிறுவனர் நினைவுநாளன்று இலவச கண்சிகிச்சை முகாமும் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பொது மருத்துவ முகாமும் சிறப்பாக நடைபெறுகிறது. சமுதாயத்தின் அடிமட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் செய்து வருகிறோம். இந்த ஆண்டு நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் சுமார் 600 பேர் கலந்து கொண்டார்கள். 125 பேருக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

                               நேர்முகம் : பேராசிரியர் செந்தில் நடேசன்

                                         ஜெ. விக்ரன்

    விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்

    உலகம் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்தியா விழித்திருந்த காலம் நாம் காணாத வரலாற்றுக் காலமாகும். விழிமூடி இருந்தோர் விழித்தெழுந்து விரைந்து உலகை வலம் வந்தபோது நாம் கண்ணுறக்கம் கொண்டோம். அதன் விளைவாக ஆங்கிலேயர்கள் ஆள வந்தவர்களாகவும் ஆகிவிட, இந்தியர்கள் ஆண்டானின் அடிமைகளாய் வாழ நேர்ந்தது. நமது துயில் கலைந்து உலகை உள்ளவாறு உணரத் தொடங்கியபோது நமது நிலைமையையும் உணர்ந்தோம். அப்போதுதான் விடுதலை என்ற வேட்கையையும் சுதந்திரம் என்னும் காற்றையும் சுவாசிக்க புறப்பட்டோம்.

    காலவெள்ளத்தால் அழிக்க முடியாத, உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் புகழ், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், மானம் காத்த மாவீரர்களுக்கும் பூமியில் என்றைக்கும் ஒரு இடமுண்டு. இதைப்பற்றி ஓரிடத்தில் ரஸ்கின் கூறுவார் “எவனுடைய இதயம் மிருதுவாகவும் இரத்தம் வெதுவெதுப்பாகவும், மூளை வேகமாகவும், ஆன்மா அமைதியாகவும் ஆகிக் கொண்டுள்ளதோ அவனே வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டுள்ளான்” என்பார். . “வரலாறு எப்போதும் வடுக்களை வரவு வைத்துக்கொள்கிறது. அடித்தவர்களின் பெயர்களை அடித்துவிட்டு அடிப்பட்டபவர்கள் பெயரை அடிக்கோடிட்டு கௌரவப்படுத்துகிறது” என்பார் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் இறையன்பு.

    “சொல்கிறார்கள் கிளியின் கூண்டை

    திறந்து விடு! முரண்படுகிறேன்…

    ‘உடைத்து விடு’ – இது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கோபக்கொப்பளிப்பு.

    “போராளிகள்  செத்துக் கொண்டிருக்கும்

    ‘மண்’ என்றார்கள் என் மண்ணை திருத்தினேன் போராளிகள்  பிறந்து கொண்டிருக்கும் மண்” – என்று காசி ஆனந்தன் கவிதை முழக்கம் செய்வார்.

    “தங்க வளையலைக் கழற்றி போராளியிடம் தந்தாள்

    செலவுக்கு வைத்துக்கொள் உங்களில் பலருக்கு கைகளே இல்லை ….

    எனக்கு எதுக்கு வளையல்?”

    இப்படி கனல் தெறிக்கும் கவிதைகளை காசி ஆனந்தன் கனன்றிருக்கிறார்.

    விடுதலை வித்திட்ட குதிராம் போஸ் என்ற வீரமகனை தூக்குத்தண்டனை கைதியாக்கி சிறைக்கொட்டத்தில் அடைத்திருந்தார்கள். அறையின் சுவற்றில் கறிக்கோடுகளால் இப்படி கிறுக்கியிருந்தான்.

    “ஒருமுறைவிடை கொடு அம்மா

    சிரித்த முகத்தோடு உன் மகன்

    தூக்குக் கயிற்றை ஏற்றுக்கொள்வதை

    இவ்வுலகம் பார்க்கும்…

    ஒருமுறைவிடைகொடு அம்மா

    மீண்டும் நான் சித்தியின் வயிற்றில்

    மகனாக பிறப்பேன். பிறந்திருப்பது

    நான்தான் என்பதையறிய

    குழந்தையின் கழுத்தைப் பார்

    தூக்குக் கயிற்றின்

    தழும்பு அதில் இருக்கும்”

    இப்படி வீரம்செறிந்த விடுதலை

    வீரர்களின் களமே நம் பாரதம்.

    “தியாகத்திற்கு லாபக்கணக்கு தெரியாது. தியாகம் என்பது மேகத்தைப் போன்றது. அது ஊருக்காகவே பொழிகிறது; ஊருக்காகவே அழுகிறது. தியாகம் என்பது வெறும் அலங்கார வார்த்தை அல்ல. அது மானுட தர்மத்தின் ஆணிவேர்”.

    பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழகம் ஒரு வால்டேர் ஒரு ரூஸோ, ஒரு மாண்டஸ்கு என அறிவுலக அறிஞர்கள் எவரையும் பெறவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் கொடுமை கண்டு கொதித்தெழுந்த ஒரு கட்டப் பொம்மனை பெறத்தவறவில்லையே? இந்த மண்ணின் மைந்தர்களது அவலம் கண்டு மானங்காத்திட மக்களை தட்டி எழுப்பிய மருதுபாண்டியர்களைப் பெறத் தவறவில்லையே? புவியாளப் பிறந்தோர் பூனைகளால் நடத்தப்படுவதைக் கண்டு புலியென பாய்ந்திட்ட பூமித்தேவனை பெறத்தவறவில்லையே?

    சுதந்திரப் போருக்கான முதல் தீ தமிழகத்திலிருந்து தான் பரவியது என்பதை யாரும் மறத்திட முடியாது. பதினைந்து வயதுச்சிறுவன் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1921-ல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். ‘உன் பெயர் என்ன? இது நீதிபதி, அவன் ‘சுதந்திரம்’ என்றான். எங்கே வீடு? அவன் ‘சிறைச்சாலை’ என்றான். இதற்காய் இந்த வயதிலும் 15 கசையடிகளைப் தண்டனையாக பெற்றவர், ஒவ்வொரு கசையடிக்கும் மகாத்மா காந்திக்கே ஜே! என்று முழக்கமிட்டவன்.

    நாடாளுமன்ற குண்டுவீச்சு வழக்கில் பகத்சிங்குக்கும், தத்துக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. லாகூர் சதி வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு விசாரணை நடந்த 18 மாதங்களில் பகத்சிங்கும் தோழர்களும் அரசியல் கைதிகளுக்கான உரிமைகளுக்காக நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் இரக்கமில்லா அரக்கனையும் உருக வைக்கக் கூடியவை.

    சுதந்திர போராட்ட வரலாற்றில் 1931, மார்ச் 23 துயரம் தோய்ந்த துக்கநாள், கறுப்புநாள். அதுதான் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவரும் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட நாள். நம் தேசம் விடுதலை பெறஇப்படி; இப்படி எத்தனை தூக்கு; கசையடிகள்; துப்பாக்கித் தோட்டாக்களின் நாக்குகள்…

    ஆயுள்தண்டனைப் பெற்ற பகத்சிங்கிடம் தன் நண்பர்களில் ஒருவனான ஜெயதேவ் கபூர் கேட்கிறான், ‘சர்தார் (பகத்சிங்) நீ மரணத்தை நெருங்கிவிட்டாய் இதற்காக நீ கவலைப்பட வில்லையே? என்று கேட்டதும் உரக்கச் சிரித்தவன் பகத்சிங். தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல ஆட்கள் வந்து அவசரப்படுத்திய போது லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பகத்சிங், ‘ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனோடு பேசிக் கொண்டிருக்கிறான் – கொஞ்சம் பொறுங்கள்’ என்றார்.

    தன்னுடைய தம்பி குல்வீருக்கு பகத்சிங் எழுதிய கடைசி கடிதத்தில், ‘நாளை காலை மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவதுபோல் நானும் காலை ஒளியில் கரைந்து போவேன். ஆனால் நம் நம்பிக்கைகளும், குறிக்கோள்களும் உலகுக்கு என்றும் ஒளியூட்டும். இன்றுபோய் நாளை மீண்டும் பிறப்போம்… எண்ணற்ற இந்நாட்டின் வீரர்கள் வடிவில் என்று எழுதினான்.

    மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவஹாலால் நேருவும், உத்தமர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் சுதந்திரப் போராட்ட காலத்தில் எரவாடா சிறைச்சாலையில் வெள்ளைய அரசாங்கத்தால் அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆசாத்தின் மனைவியார் திருமதி சுலைகாவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். மனைவி மரணத்தருவாயில் இருக்கும் செய்தி கேட்டபோதும் பரோல் சென்று மனைவியை பார்க்க வெள்ளையர்களிடம் கையேந்தமாட்டேன் என்று நேருவிடம் கூறினார்.  இறுதிக்கட்டத்தில் அன்னையார் இறந்த செய்தி கேட்டும் இறுதிச்சடங்கிற்கு கூட பரோல் கையெழுத்திட்டு பார்க்க செல்லவில்லை. விடுதலையாகி, தண்டனைக்காலம் முடிந்து தம்முடைய மனைவியின் கல்லறைக்கு சென்று வழிபாடு செய்கிறார்.  இது மானத்தைப் போற்றி வாழ்ந்த ஒரு மாமனிதன் புதிய வரலாறு.

    மனைவியின் மரணத்தைக் கூட பார்க்காத மானங்காத்த வரலாற்று புருஷர்கள் வாழ்ந்த பூமியிது. இந்த கர்மபூமியில் நாம் பிறந்தது என்பதே நமது பெரும்பாக்கியம், கருணையுள்ள இதயம் படைத்தவர்கள் விரல்களை நீட்டினால் வித்தகம் விளையும், விழிகளைக் காட்டினால் வித்தைகள் நிகழும் தருகிறபழக்கத்தை விண்ணிலிருந்தும் தக்க வைத்துக் கொள்கிறபழக்கத்தை மண்ணிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் சுதந்திர கீதத்தை வீதிதோறும் வீசிவந்தவன் பாட்டுப் புலவன் பாரதி”.

    மதுரைக்கு நேர் கிழக்கே

    மழை பெய்யாக் கானலே

    மடிப்பிச்சை கேட்டு எங்கள்

    மண் அழுத காரணத்தால்

    பருவ மழை பந்தலிட்டு

    வந்தவன் நீ !

    சிற்பியின் கவிதைகளே இதற்கு சான்றுகாட்டி நிற்கிறது. ஒருமுறைகவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி மேடையில்

    பாரதி மீண்டும் பிறக்க நீ தயாரா?

    உன்னை சுமப்பதற்கு என்

    கருப்பை தயார் என்று கூறியபோது பலரும் கவிஞரோடு சேர்ந்தே கண்கலங்கினார்கள் என்றசெய்தியைப் படித்தபோது நானும் கலங்கித்தான் போனேன்.

    காந்தி… பாரதத்தாய் பெற்றெடுத்த தலைமகன். சுதந்திரம் பெற்றுத்தந்த சூரியபுத்திரன். காந்தியம் என்பது ஒரு வறட்டு சித்தாந்தமில்லை அது ஓர் வாழ்க்கைமுறை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகள் 2089 நாட்கள் சிறைவாசம்; தென் ஆப்பிரிக்காவில் 249 நாட்கள் சிறைவாசம். காந்தியடிகள் மறைந்தபோது “இந்த பூமியில் இத்தகைய மகாபுருஷர் ஒருவர் வாழ்ந்தாரா என்பதை வருங்காலத்தலைமுறையினர் நம்புவது கூட சிரமமானதாக இருக்கும்” என்று ஜன்ஸ்டீன் கூறியுள்ளார். சுதந்திரக்காற்றை சுவாசிக்க வைத்த பெருமகனுக்கு சுதந்திரமாய் விடைக்கொடுத்தான் நாதுராம் விநாயக் கோட்சே ‘பேரட்டா’ என்றகைத்துப்பாக்கியால் சுட்டான் அப்போது “ஹேராம்” என்று இறைவனின் பெயரை உதட்டுக்குள் உச்சரித்தவாறே மரணத்தின் பள்ளத்தாக்கில் மடிந்துப்போனார்.

    விடுதலை வேள்வியில் தன்னை முழுவதும் அர்ப்பணித்தவர் ஜவஹர்லால் நேரு விடுதலையின் பயனை நேருயுகம் கொஞ்சம் கொடுத்தது; முழுவதும் கொடுக்கவில்லை. ஆசிய ஜோதி அணைந்தது.  அவர்தம் உயிலின் ஒருபகுதி… “”என் அஸ்தியில் பெரும் பகுதியை வேறு விதமாகக் காலி செய்ய வேண்டும்; அதை ஒரு விமானத்தில் வைத்து ஆகாயத்தில் வெகு உயரே எடுத்துச்சென்று இந்தியாவின் குடியானவர்கள் பாடுபட்டு உழைக்கும் வயல்கள் மீது அந்த உயரத்திலிருந்து தூவ வேண்டும் என்று விரும்புகிறேன்; இதன்மூலம் (அஸ்தி) இந்தியாவின் மண்ணுடனும் புழுதியுடனும் ஒன்று கலந்து, வேறுபடுத்த முடியாதபடி இந்தியாவின் பாகமாகிவிடும்”. இப்படி முடிகிறது”.

    நம் தேசம் கடந்து வந்த பாதைகளையும், சுதந்திரம் பெறுவதற்கு எண்ணிலடங்கா மான மறவர்கள் சிந்திய இரத்தமும், தூக்கு கயிற்றை முத்தமிட்டவர்களின் முழு வரலாற்றையும், கல்லடியும், சொல்லடியும் பட்ட தழும்பு முத்திரைகளும், அவர்கள் நம்பிக்கையை நட்டு வைத்தார்கள்; சுதந்திர கீதத்தை சுவாசிக்க வைத்தார்கள் என்பதை இளைய சமுதாயம் எண்ணிப்பார்த்தாலே சிகரத்திலே சிம்மாசனம் கிடைக்கும்.

    தாய்ப்பாலின் மகத்துவம்

    பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் குறைவாக இருத்தல்.

    எடை குறைந்த குழந்தையின் உணவு முறை

    எடை குறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சிக் கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களடமிருந்து வாங்குதல், அதிக சத்து நிறைந்த பால் ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.

    தாய்ப்பால்

    குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். இது குழந்தையைப் பலவிதமான தொற்று நோய்களலிருந்து பாதுகாக்கிறது.

    பிற தாய்மார்களின் தாய்ப்பால் (Donor Breast Milk)

    பிற தாய்மார்களிடமிருந்து குழந்தைக்குக் கொடுக்கப்படும் பால் டோனர் பால் எனப்படும். டோனர் பால் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    அதிக சத்து நிறைந்த பால் மற்றும் உணவை வலுவூட்டுதல் (Fortification)

    பாலுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

    மாட்டுப்பால்    

    எந்த ஆராய்ச்சிகளும் மாட்டின்பால் நல்லது என்று கூறவில்லை.

    பரிந்துரைகள்

    • குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் சிறந்த பால்
    • உணவை வலுவூட்டுதல் (Fortification) மூலம் பால் கொடுப்பதைத் தடுப்பது நல்லது.

    முன் பால் (Prelacteal feed)

    முன் பால் என்பது குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குள் தாய்ப்பால் தவிர வேறு ஏதேனும் பால் மற்றும் சர்க்கரை தண்ணீர் கொடுப்பது.

    பரிந்துரைகள்

    • முன்பால் கொடுப்பது தவிர்க்க வேண்டும்.

    குழாய் மூலம் பால் ஊட்டுதல்

    32 வாரத்திற்கு மேல் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுக்கலாம். 32 வாரங்களுக்குக் கீழ் இருந்தால் குழாய் மூலம் தாய்ப்பால் பீய்ச்சி எடுத்து கொடுக்கலாம்.

    LCPUFA (EPA  மற்றும் DHA)யின் முக்கியத்துவம்

    LCPUFA (EPA  மற்றும் DHA) தாய் பாலில் இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மற்றும் கண்பார்வைக்கு மிகவும் உதவுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டச்சத்து அல்லாத உறிஞ்சும் பொருட்களன் முக்கியத்துவம் (Non-nutritive sucking)

    பரிந்துரைகள்

    ஊட்டச்சத்து அல்லாத உறிஞ்சும் பொருட்களை சப்ப வைப்பதன் மூலம் எடைகுறைந்த குழந்தையின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

    இரைப்பைக்குடல் தடத்தில் உணவு கொடுக்கும்  முறைகள் (Enteral Feeding)

    • குழாய் மூலம் பால் கொடுப்பது
    • கப், ஸ்பூன், பாலாடை, குப்பி மூலம் பால் கொடுத்தல்

    பரிந்துரைகள்

    • குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருந்தால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம்.
    • உறிஞ்சும் தன்மை குறைவாக இருந்தால் கப், ஸ்பூன், பாலாடை மூலம் பால் கொடுக்கலாம்.

    குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை முறை பால் கொடுக்கலாம்?

    குழந்தையின் எடையைப் பொருத்தும், கருதாங்கல் வாரங்களைப் பொருத்தும் எத்தனை முறை பால் கொடுக்கலாம் என்பதை நிர்ணயிக்கலாம். பொதுவாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்கலாம்.

    பால் கொடுத்த பின் குழந்தையைப்

    படுக்க வைக்கும் நிலை

    குழந்தையை மல்லாந்து, தலையைச் சற்று உயர்த்தி அல்லது ஒரு பக்கமாக படுக்க வைக்கலாம்.

    குறைப்பிரசவத்தில் பிறக்கும்

    குழந்தையின் ஊட்டச்சத்து

    வைட்டமின் டீ

    தாய்ப்பாலில் குழந்தைக்குப் போதுமான அளவு வைட்டமின் டீ ஊட்டச்சத்து இல்லை. இதனால் குழந்தைகளுக்கு வைட்டமின்  ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு வைட்டமின் டீ 400 யூனிட்ஸ் கொடுக்க வேண்டும்.

    கால்சியம், பாஸ்பரஸ்

    குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு எலும்பில் கால்சியம், பாஸ்பரஸ் அளவு குறைவாக இருக்கும். எனவே கால்சியம் 120 – 140 மி.கி./கி.கி/நாள் மற்றும் பாஸ்பரஸ் 60-90மி.கி./கி.கி./நாள் கொடுக்க வேண்டும்.

    இரும்புச்சத்து

    குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு 2-3 மி.கி./கி.கி/நாள் இரும்புச்சத்து 6-8 வாரத்திற்கு மேல் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

    வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!

    வாழ்க்கை மிக அற்புதமானது. அழகானது. அருமையான நிகழ்வுகளைக் கொண்டது. இந்த வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்களும் உண்டு. வெறுத்து ஒதுக்குபவர்களும் உண்டு.

    “நமக்கு கிடைத்த சிறப்பு வாய்ப்புதான் இந்த வாழ்க்கை”  என்னும் சிந்தனையை வளர்த்துக் கொண்டு செயல்பட்டால், நமது வாழ்க்கை வெற்றிகளோடு இணைந்து விடுகிறது…

    “பொதுவாக நமது மொத்த வாழ்நாளில் 33 சதவீதம் நேரத்தை தூக்கத்திற்கு நாம் செலவு செய்கிறோம். உணவு உண்பதற்கு 8 சதவீத நேரத்தை செலவிடுகிறோம். விடுமுறைநாட்கள், திருவிழா நாட்கள், முக்கிய நாட்கள் என 27 சதவீத நேரம் போய்விடுகிறது. மேலும், 5 சதவீத நேரம் ஓய்வு நேர செயல்களுக்காக ஒதுக்குகிறோம். இவைதவிர  பணி செய்ய நமக்கு கிடைப்பது 27 சதவீத நேரம்தான்.” என ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

    எனவே கிடைக்கும் 27 சதவீதம் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி…? என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

    “சிறந்த முறையில் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அதிகமான வெற்றி வந்து சேரும்” என்பது ஜவஹர்லால் நேருவின் கருத்து ஆகும்.

    இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. ஜோலார்பேட்டை வழியாக சென்னை செல்லும் ரயில் பயணம். காலை 7 மணி. ‘ரிசர்வ்’ செய்து நான் பயணம் செய்த ரயில் பெட்டியில் கும்பலாக சில கல்லூரி மாணவர்கள் ஏறிக்கொண்டார்கள்.

    தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு

    உலகத்தின் மிகச் சிறந்த நாகரிங்களான நைல் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் ஆகிய நாகரிகங்கள் நதிக்கரையில் தான் தோன்றியது.

    இதன் முக்கியக் காரணம் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் கற்காலத்தில் விலங்குகளை  வேட்டையாடி தன் தேவைக்கான உணவுகளை அவன் அங்கு பூர்த்தி செய்து கொண்டான். பிறகு 10 ஆயிரம் ஆண்டுகளாக தனக்கு தேவையான உணவுகளை தானே விளைவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு காடுகளில் இருந்த தானியங்களை சேகரித்து ஆற்றங்கரை ஓரத்தில் பயிரிட ஆரம்பித்தான்.

    இந்தச் செயல்தான் மனித சமுதாயத்தின் முக்கிய மாற்றமாகும். இரையைத் தேடி காடுமேடுகளில் மிருகங்களைப் போன்று அலைந்து திரிந்த மனிதன், ஒரு இடத்தில் இருந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தது மனித சமுதாயத்தின் மிகப்பெரிய மாற்றம்தான்.

    17,000 ஆயிரம் வருடத்திற்கு முன்பே காட்டுவகை தானியங்களின் மணிகள் உதிரும் தன்மை கொண்டு இருந்ததால் அதை அறுவடை செய்து சேமிக்க இயலாததாக இருந்தது.

    இதற்காக தொடந்து மணிகள் உதிராத தன்மை கொண்ட பார்லி, கோதுமை, நெல் போன்றதானிய வகைகளைத் தேர்ந்தெடுத்து அதைப் பயிரிட ஆரம்பித்தான்.

    இந்தச் செயல்தான் மனித சமுதாயத்தின் முக்கிய மாற்றமாகும். இரையைத் தேடி காடுமேடுகளில் மிருகங்களைப் போன்று அலைந்து திரிந்த மனிதன், ஒரு இடத்தில் இருந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தது மனித சமுதாயத்தின் மிகப்பெரிய மாற்றம்தான்.

    17,000 ஆயிரம் வருடத்திற்கு முன்பே காட்டுவகை தானியங்களின் மணிகள் உதிரும் தன்மை கொண்டு இருந்ததால் அதை அறுவடை செய்து சேமிக்க இயலாததாக இருந்தது.

    இதற்காக தொடந்து மணிகள் உதிராத தன்மை கொண்ட பார்லி, கோதுமை, நெல் போன்றதானிய வகைகளைத் தேர்ந்தெடுத்து அதைப் பயிரிட ஆரம்பித்தான்.

    உதிரும் தன்மை கொண்ட காட்டு வகை தானியங்களை, மணி உதிரா தன்மை கொண்ட தானியங்களாக மாற்றம் செய்த, முதல் வேளாண்மையை அதிசயம் என்றே சொல்லலாம். இது 10,000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.

    இந்த வேளாண்மை மாற்றம்தான் காடுகளில் திரிந்த மனித சமூகத்தை ஆற்றங்கரைகளில் வீடு அமைத்து முறையான விவசாயம் செய்ய முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இந்த நிகழ்வுகள் மூலமாக மனிதன் தன்னை ஆறாம்அறிவு படைத்த உயர்ந்த இனமாக, மிருகப்பண்புகளில் இருந்து மாறி நாகரிகம் கொண்ட மனித சமுதாயமாக மாறக் காரணமாக அமைந்தது.

    இந்த உதிரும் தன்மை கொண்ட தானியங்கள், உதிராதத் தன்மை கொண்ட தானியமாக எப்போது நிழந்தது. இந்தக் கேள்வி பல நூற்றாண்டுகளாக ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்த விஞ்ஞான அதிசியத்தை ஜப்பானைச் சேர்ந்த  பேராசிரியர் டாக்டர் குமாட்சுடா, மற்றும் சட்டோ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் தொழில்நுட்ப துறைப் பேராசிரியர் செந்தில் நடேசன் ஆகிய நான் மற்றும் உலக விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து கூட்டுமுயற்சியால் கண்டுபிடித்து உள்ளோம்.

    காட்டுரக பார்லி செடிகளின் மணிகள் கதிரில் ஒட்டி கொண்டு இருக்காது. பார்லி மணிகள் முதிர்ச்சி அடைந்தவுடன் தானாக கொட்டிவிடும். இதற்குக் காரணம் Btr1 Btr2 என்றஇரண்டு மரபுக்கூறு காரணிகள், இவை இரண்டும் ஒத்த நிலையில் (homozygons Dominand) இருக்கும் போது மணிகள் உதிரும் தன்மை கொண்டதாக இருக்கும்.

    இந்த வகையான காட்டுவகை பார்லி ரகங்கள் தற்போதைய இஸ்ரேல் மற்றும் வடமேற்கு சிரியா & தென்கிழக்கு துருக்கி மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.

    தென் கிரசன்ட் (southern cresent) என்று சொல்லப்படுகின்ற ‘இஸ்ரேல்’ மற்றும் ‘சிரியா’ பகுதியில் ஆதி மனிதர்கள் இடம் மாற்றத்தினால்  வந்த மணிகளில் உதிராத தன்மை கொண்ட பார்லி ரகங்களைத் தேர்ந்தெடுத்து 12,000 வருடங்களுக்கு முன்னால் விவசாயம் செய்துள்ளனர்.

    இந்த உதிரும் தன்மை கொண்ட (Btr1 Btr2) என்றகாட்டுவகை பார்லியிலிருந்து உதிராத தன்மை கொண்ட (Btr1 Btr1 Btr2 Btr2) பார்லி ரகங்கள்  உலக பார்லி கருவுலகத்தில் இருந்து பல ஆயிரம் பார்லி இரகங்கள் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    கார்பன்  ஆராய்ச்சி மூலம் பழங்கால பார்லி தானியங்களை பண்டையக் காலத்தில் புதையுண்ட மண்பானைகளில் சேமித்து வைத்து இருந்திருக்கிறார்கள். அந்த வகை  பார்லி இரகங்களை ஒப்பிட்டுப் பார்த்த போது, 10,000 வருடங்களுக்கு முன்பே, ஆதிமனிதர்கள் உதிரும் தன்மை உள்ள காட்டுவகை பார்லி விதைகளை சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தாக தெரிய வந்துள்ளது.

    10,000 வருடத்திற்கு முன்பு உள்ள சேமித்த பார்லி இரங்களைப் பார்க்கும் பொழுது இவை மணிகள் உதிராத தன்மை கொண்டு உள்ளதால் இந்த வருடம் முதல் பார்லி மனிதனால் பயிரிடப்பட்டதாக ஆராய்ச்சிகள் கருதுகின்றன.

    கதிரில் இருந்து தானியம் விழுவதற்கு காரணமான மரபணுக்களை பார்லி தானியங்களில் கண்டுபிடித்தன் மூலம், இந்த வகையான மரபணுகூறுகளை மற்ற தானியங்களில் இருந்து எடுக்கும் ஆராய்ச்சிகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த முறையைப் பயன்படுத்தி மற்றதானியங்களில் மணிகள் உதிரும் தன்மைகள் கொண்ட மரபணுக்களை கண்டுபிடிக்கும் முயற்சி எளிதாக்கப்பட்டுள்ளது.

    10,000 வருடத்திற்கு முன்னால் நடந்த பார்லி விவசாயத்தில் முக்கிய காரணமாக இருந்த கதிரில் இருந்து மணி உதிரா தன்மையின் காரணமாகத்தான் விவசாயம் செய்ய முடிந்தது என்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆராய்ச்சி முடிவு (Cell) “செல்’ என்ற முன்னிலை ஆராய்ச்சி பத்திரிகையில் ஜுலை 30ந் தேதி வெளிவந்தது.

    இந்த விவசாய ஆராய்ச்சி மூலம் இனிவரும் தானிய ஆராய்ச்சியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் பல பார்லி காட்டு ரகங்களில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் (gene), வளர்ச்சி தாங்கும் தன்மை, பீர் உற்பத்தி, கால்நடைகளுக்கு பிடித்த வைக்கோல் போன்ற முக்கிய மரபுக்கூறுகள் காட்டு ரகங்களில்இருந்து கண்டுபிடித்து, உயர் விளைச்சலை பார்லி இரகங்களுக்கு புகுத்த உதவியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

    காட்டுவகை ரகத்தில் உள்ள மரபுக்கூறுகளைக் கண்டுபிடிப்பதில் கையாண்ட ஆராய்ச்சி முறைகள் மற்றதானியங்களில் ஆராய்ச்சி நுணுக்கங்களைக் கையால்வதின் மூலம் விரைவில் விடை கிடைக்காத பல மரபணுக்களின் தன்மைகளைக் கண்டறிய உதவும்; உறுதுணையாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை.

    குணம் நாடி… குற்றம் நாடி…

    தேரான் பிறனைத் தெளிந்தான்  வழிமுறை

    தீரா  இடும்பை  தரும்.

    ஒருவனைப் பற்றி  அவனது குணங்கள் மற்றும் குறைகளைப் பற்றியும் முழுமையாக, தெளிவாக ஆராயாமல் அவனை நமக்குத் துணையாக வைத்துக் கொண்டால்,

    நமக்கு மட்டுமின்றி நம் வழிமுறையில் வருபவர்களுக்கும்  அது தீராத துன்பத்தை  உண்டாக்கும்.

    தோற்க  யாரையும்  தேராது  தேர்ந்தபின்

    தேறுக தேறும் பொருள்

    ஒருவனுடைய குணங்களையும், குறைகளையும் தெளிவாகவும், முழுமையாகவும், ஆராயாமல் யாரையும் நம்புதல் வேண்டாம். அவ்வாறு ஆராய்ந்து தெளிந்து நம்பி, நம் துணைக்கு வைத்துக் கொண்ட பின்பு அவர் சொல்லும் அறிவுரைகளை நல்லவை என்று நம்புதல் வேண்டும்.

    உங்களது குணங்கள் தான் உங்கள் வெற்றியை நிர்ணயிக்கிறது. உங்களது எதிர்காலத்தை நீங்களே உருவாக்க முடியும். ஏற்கனவே நடந்து முடிந்ததை குறித்து வருத்தம் அவசியம் இல்லை. எல்லையற்ற எதிர்காலம் உங்கள் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு சொல்லும், செயலும், சிந்தனையும் அதற்கு ஏற்றபலனைத் தரும் என்பதை எப்போதும் நீங்கள் நினைவில் வைக்க வேண்டும்.உங்களது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல உங்கள் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப்போலவே உங்களது நல்ல எண்ணங்களும், செயல்களும் ஒரு நூறாயிரம் தேவைகளின் ஆற்றலுடன் உங்களை எப்போதும் நிரந்தரமாக பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்ற உயர்ந்த நம்பிக்கை இருக்கிறது.இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    விதை நல்லதாய் இருந்தால் பலன் நல்லதாய் இருக்கும். விதைக் கெட்டதாய் இருந்தால் பலனும் கெட்டதாய் இருக்கும். அதுபோல நல்வினை நற்பலன்களையும், தீவினை தீய பலன்களையும் தருகிறது. தகுந்த காலத்தில் பயிரிட்டால்தான் விதை தகுந்த பலனைத் தரும். அதுபோலவே தகுந்த முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால்தான் உங்களுடைய நல்வினையும் பலனைத்தரும்.

    முயற்சியை பூமி என்றும் உங்களுடைய வினையை விதை என்றும் சொல்லாம். நிலமும், விதையும் சேர்ந்து பயிர் உண்டாவதைப்போல முயற்சியும் உங்களுடைய வினையும் சேர்ந்தால்தான் பலன் கிடைக்கிறது. முயற்சி செய்யாதவனுக்கு அதிர்ஷ்டத்தினால் எதுவுமே கிடைக்காது. முயற்சிக்கு உரிய பலன் அவசியம் உண்டு. இல்லையெனில் தெய்வத்தை நம்பி காரியத்தில் ஈடுபடாமல் மக்கள் இருந்து விடுவார்கள். முயற்சி உள்ளவனுக்கு தெய்வமும் முன் வந்து உதவுகின்றது. எண்ணெய் இல்லாது போனால், விளக்கு அணைந்து விடுவது போல் முயற்சி இல்லாதவனுக்கு தெய்வமும் உதவாமல் இருந்து விடுகிறது… முயற்சி இல்லாதவனால் தெய்வம் கொடுத்ததை எப்படி அனுபவிக்க முடியும்…? செலவு செய்து கொண்டே இருப்பினும் முயற்சி உள்ளவனுக்கு செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும். நல்ல குணங்களும், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உள்ள மனிதன்  செல்வத்தையும் அடைவான். சொர்க்கத்தையும் அடைவான் என்று மகாபாரத்தில் பீஷ்மர் சொல்கிறார்.

    உங்களது வெற்றிக்கு உதவி செய்ய, உங்கள் கீழ் பணிபுரிய நல்ல குணங்கள் கொண்ட, திறமையான அலுவலர்களை தேர்வு செய்வது என்பது ஒரு தனிக்கலை…

    ஆராய்ந்து தெளிந்து தேர்வு செய்தால் தான் உங்களுக்கு நல்ல அலுவலர்கள் கிடைப்பார்கள். அறிவார்ந்த செயல்களில் ஈடுபட அவனுடைய அறிவு உங்களுக்கு உதவும். அந்த உதவியும், உங்களது முயற்சியும் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும். உங்கள் அலுவலர்களை தேர்வு செய்வதில் ஏமாந்து போனால், உங்களது அனைத்து முயற்சிகளும் செயல் திறனும் வீணாகிப்போகும்.

    ஒரு தொழிலில் அல்லது நிறுவனத்தில் அல்லது எத்துறையை சார்ந்ததாக இருந்தாலும், உங்களுக்கு உதவ நல்ல அலுவலர்களைத் தேர்வு செய்து, பணிக்கு அமர்த்திக் கொள்வது என்பது உங்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தேர்வு செய்யும் முறையைப்பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வள்ளூவர் ஒரு வழிமுறையை வகுத்து தந்துள்ளார்.

    “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

    மிகைநாடி மிக்க கொளல்” – என்றகுறள் உன்னதமானது, ஓராயிரம் பொற்காசுகளின் மதிப்பைவிட, ஓராயிரம் முறை உயர்ந்த மதிப்புடையது.

    ஒருவனைத் தேர்வு செய்யும் போது அவனது நல்ல குணங்களைப் பட்டியல் இடு. அவனது குற்றம் குறைகளையும், தனியாக பட்டியல் இடு. இந்தாண்டில் எது மிகுதி என்பதை தெரிந்து நல்ல குணங்கள் மிகுதியாக இருந்தால், அவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவரிடம் குறைகள் மிகுதியாக இருந்தால் அவரை தேர்வு செய்வதை தவிர்க்கலாம் என்று வள்ளூவர் வரையறுத்துக் கூறுகிறார்.

    இதை இப்படியும் சொல்லலாம். ஒருவனது பலம் என்ன என்பதையும் பட்டியல் இடுவோம். பலவீனம் என்ன என்பதையும் பட்டியல் இடுவோம். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, பலம் அதிகமாக இருந்தால் தேர்வு செய்து கொள்ளலாம். பலவீனம் அதிகமாக இருந்தால் தவிர்த்து விடலாம். இந்தக் குறள் தரும் பாடம் பணியாளையோ, துணையாளையோ தேர்வு செய்வதற்கு மட்டுமின்றி தொழில்துறை, நிர்வாகவியல் துறை, வணிகவியல்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை போன்ற எல்லாத்துறைகளுக்கும் எல்லாத் தொழில்களுக்கும் இந்த குறளை ஒப்பிட்டுத் தேர்வு செய்யலாம்.

    ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தால் பலம் என்ன…? பலவீனம் என்ன…? என்று பட்டியலிடு, அது பலம் என்றால் தொடங்கலாம். பலவீனம் என்றால் விட்டுவிடலாம். இந்தக் குறளினுடைய கருத்தை உங்கள் வாழ்வின் எல்லா இயல்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.

    கற்பது, கேட்பது, பணிசெய்வது, நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது, பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது, தொழில் தொடங்குவது, வியாபாரம் தொடங்குவது, ஒரு காரியத்தை செய்வது, ஒரு முயற்சியில் ஈடுபவடுவது, ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுவது, ஒரு சொத்தை வாங்குவது அல்லது விற்பது, ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுவது, முதலீடு செய்வது, குடும்ப நிர்வாகம், பொது நிர்வாகம், உங்கள் கீழ் பணிபுரியும் அதிகாரிகளையோ, அலுவலர்களையோ பங்குதாரர்களையோ தேர்வு செய்வதில் இந்த குறளின் கோட்பாடு மிகப்பெரிய வழிகாட்டியாக அமையும்…

    முத்தாய்ப்பாக உங்கள் வாழ்வியலுக்கு எது தேவை என்று எங்கெல்லாம் தேடல் தொடங்குகிறதோ, அங்கெல்லாம் இந்த குறளின் ஒப்பீடு உங்களின் செயல் திறனையும் வாழ்வியலையும் மேம்படுத்தும்…

    ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சொல்லப்பட்ட இந்த குறளினுடைய கோட்பாட்டுடன், தற்போது நாம் நடைமுறையில் பின்பற்றி வரும் நிர்வாகவியலின் தாரக மந்திரம் என்று சொல்லப்படுகிற கோட்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் SWOT ஆனந்தமும், ஆச்சரியமும் ஏற்படும்…

    SWOT கோட்பாடு என்பது ஆல்பர்ட் ஹாம்ரே என்ற அமெரிக்காவைச் சேர்ந்த வணிக மற்றும் நிர்வாகவியல் நிபுணரால் 1960-1970களில் கண்டுபிடிக்கப்பட்டது…

           S  –   Strength – பலம்  குணம்

          W – Weakness    – பலவீனம்  குறைகள்

          O – Opportunity   – வாய்ப்புகள்

          T  – Threats       – பயமுறுத்தல்கள்

    – என விளக்கம் தரப்பட்டுள்ளது.

    இந்தக்கோட்பாடு தற்போது உலகம் முழுவதும் நிர்வாகவியல், வணிகவியல் மாணவர்களுக்கு ஒரு சூத்திரமாக சொல்லப்படுகிறது.  இந்த நரஞப கோட்பாட்டை எல்லாத்துறைகளிலும் பயன்படுத்த வேண்டும், பின்பற்றவேண்டும் என்ற நியதி கூட பேசப்படுகிறது. இந்த கோட்பாட்டைப் பின்பற்றினால் தான் தொழில்துறை, வணிகத்துறை சிறந்து விளங்கும் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

    ஒரு தொழிலைத் தொடங்கும் போது தொழிலிலோ அல்லது வணிகத்திலோ பலம் என்ன…? பலவீனம் என்ன…? எதிர்காலத்தில் என்ன வாய்ப்புகள் அதனால் உண்டு…? இதற்கு என்ன வகையான பயமுறுத்தல்கள் அல்லது அச்சுறுத்தல்கள் வரும் என தீவிரமாக தெளிந்து பின்பு உங்கள் தொழிலைத் தொடங்கலாம் என்று சொல்லித்தரப்படுகிறது…

    இந்தக் கோட்பாடு ஈராயிரம் ஆண்டுகளுக்க முன்பு வள்ளுவர் சொல்லித்தந்த குணம்நாடி, குற்றம் நாடி என்றகோட்பாட்டுடன் நூற்றுக்கு நூறு பொருந்துகிறது…

    Strength – என்றால் பலம் அல்லது குணம் என்றும் Weakness – என்றால் பலவீனம்  அல்லது குறைகள் என்றும் வைத்துக் கொண்டு பார்த்தால்  குறளின் முழுக்கருத்தும் இந்த கோட்பாட்டுன் ஒத்துப்போகிறது. அந்தக் குறளைப் பின்பற்றிதான், இந்தக் கோட்பாடு எழுதப்பட்டுள்ளதோ என்று ஐயம் தோன்றுகிறது. இந்த ஒப்பீடு நிர்வாகவியல், மேலாண்மையியல், வணிகவியல், மனிதவள மேம்பாட்டுவியல் போன்றத்துறைகளில் வள்ளுவப்பெருந்தகைக்கு இருந்த ஞானம் ஒப்பு உயர்வற்றதாக உள்ளது…

    வருந்தத்தக்க  செயல் என்னவென்றால் வள்ளூவர் சொன்னதை மறந்து விட்டோம். மேலைநாட்டு அறிஞர் சொன்னதை தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம். வள்ளூவர் சொல்லியிருந்தாலும் சரி, மேலைநாட்டு அறிஞர் சொல்லியிருந்தாலும் சரி, நாம் ஒன்றைபுரிந்து கொள்ள வேண்டும். குணம் என்னும் பலத்தையும், குறைகள் என்னும் பலவீனத்தையும் ஆராய்ந்து தெளிந்து நமது முயற்சியை தன்னம்பிக்கையோடு தொடங்கினால் வெற்றி என்ற லட்சியத்தை அடைய முடியும்…

    ஒரு சொட்டு நீர்

    பூமிக்கோ அது அலட்சியம்

    புல்லுக்கோ அது லட்சியம்

    வாழ்க்கை அவரவர் சம்பந்தப்பட்டது…

    தூண்டில்

    தோரணவாயில் பச்சைப்பசேலென்று அழகாக இருந்தது! தென்னை ஓலைகள், கிளிப்பச்சை நிறமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் நேர்த்தியாக முடைந்து அடிக்கும் தலைக்கும் அளவு எடுத்து இரவு விடியும் வேளையிலே யாரோ ஒரு இரசனை மிகுந்த கலைஞனை அந்தத் திருமண மண்டபத் தோரண வாயிலை இரசித்து, இரசித்து வடிவமைத்திருந்தான்…

    குழந்தைகள் அவரவர் அம்மாக்களால் தேடப்படும் வரை கிடைத்த சுதந்திரத்தில் ஓடிக்கொண்டு குறுக்கு, முறுக்கில் சரிப்பு மணிகளை சிதறவிட்டு உற்சாக அலையை வீசிவிட்டு விசிறிகளாய் சென்றனர். ‘இதோ’ சற்று வேளைக்குள் அவர்கள் மணமக்களோடு வெதுவெதுப்பான ஒளியில் நிழல்படத்தில் சிறைப்படுவதற்கான வரிசைக்கு கட்டப்படுத்தி எடுத்துச் செல்லப்படுவார்கள்.

    தென்னம் பாளையில் இருந்து மஞ்சள் வெண்முத்துக்கள் பொழிய பொழிய கட்டியிருந்தார்கள். இதையெல்லாம் அரை நிமிடத்தில் கடந்து போக மனம் வரவில்லை. ஆனாலும், கால் கடந்து விட்டது, காலமும் கடந்து விடுமே. புறநகர் மண்டபம் ஒன்றில் அதிகம் அறிமுகமாகாத, ஆனால் மனமுவந்து, குடும்பத்தோடு அழைப்பு வைத்த நண்பர் ஒருவரது மகன் திருமணம். அடுத்து கலந்து கொள்ள வேண்டிய அலுவலகக் கூட்டம் நினைவில் நிற்க கதிரேசன் திருமண விழாவின் அந்த வினாடி மகிழ்ச்சியால் அதை மாற்றிக் கொண்டிருந்தார். நண்பரைத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியாத விழா. தனியாக வந்தாயிற்று, எல்லோரும் யாரோடாவது புன்னகைத்து பேசிக்கொண்டிருக்க, ஐந்து நிமிடம் அமர்ந்து மனமாற மணமக்களை வாழ்த்துவோம் என நினைத்தார். வரிசை ஆரம்பித்திருந்தது.

    முகூர்த்தம் காலை 9.00  முதல் 9.30 என திட்டமிட்டிருக்க மணவிழா சடங்குகள் களைகட்டியிருக்க வாழ்த்துவோர் கூட்டம் வரிசை நகரத் தொடங்கி இருந்தது. யாரும், யாரென கேட்டால் எப்படி அறிமுகப்படுத்துவது என்ற கவலை, நடைமுறையில் நல்ல வேலையாக பரிட்சிக்கப்படவில்லை. தூரத்து, நண்பர் வெகுதொலைவில் ஒரு மிகமிக முக்கிய பிரமுகரை கவனித்து அழைத்து வருவதில் மும்முரமாக இருப்பது தெரிந்தது. சற்று நேரத்தில் வாகனத்தில் கதிரேசன் அலுவலகம் திரும்பும் பொழுதுதான் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய நிறைவைப் பெற்றிருந்தார். இதுபோன்ற அழைப்புக்கள் தூண்டில்கள் போல செல்லவிட்டால் என்ன ஆவது என்று தோன்றுகின்றன. நட்பு பாராட்ட நாம் சென்றாக வேண்டும் என்று உத்வேகம் அடைகின்றோம். வெளியூரிலிருந்து பலநாள் பழகிய தோழர்கள் அழைக்கையில் அவர்களது வாழ்நாளில் நமது வாழ்நாளில் சிறப்பாக நடந்தேறும் அந்த ஒரு விழா அவசியமாக சென்றாக வேண்டும் என்ற ஆர்வத்தை, மட்டற்ற முனைப்பை ஏற்படுத்துகின்றது. அவர்கள் இதற்கான சிரமப்பட்டு நீண்ட தூரம் பயணித்து வந்து மணமக்கள் மற்றும் குடும்பத்தினரோடு அழைப்பு வைக்கின்ற திருமணங்கள் இன்னும் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. எப்படியும் விடுவிப்பு பெற்று செல்ல வேண்டும் என்று திட்டமிட வைக்கின்றன. நாட்கள் நெருங்கும் பொழுது பணி விசுவரூபம் எடுக்கும் பொழுது நடுவில் பட்டிமன்றம் நடக்கின்றது. அதில் வேறுவேறு தரப்புகள் வேறுவேறு சூழ்நிலைகளை எடுத்து வைத்து நியாயம் கோருகின்றன. சுவாரஸ்யமான நிகழ்வுதான் கதிரேசன் இதுபோன்றகட்டுரை கதைகள் எழுதுவதைக் கூட கலந்து கொள்ளத் தூண்டிய ஏதோ ஒரு விழா, அழைப்பிதல் அளித்த மகிழ்ச்சி வாய்ப்பை நழுவ விட்டுவிட்டதால் கிடைத்த நேரத்தில்தான். நண்பரொருவர், அழைக்கப்பட்ட எல்லா விழாக்களிலும், விருதுகளிலும் கலந்து கலக்குவார் என்று கேள்விப்பட்ட கதிரேசன் அசந்து போனார். எல்லா தூண்டில்களும் சுவையானவையே. இக்கட்டுரை தூண்டில் என்பதனை எதிர்மறை பொருள் நீக்கிப்பார்க்க விழைகின்றது. மகாகவி பாரதியார், தனது…  “நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா…!” என்று தொடங்கும் பாடலில் “நல்லது, தீயது நாமறியோம்…! நாமறியோம்” என்று பாடியிருப்பார். தூண்டில்கள் மீன்களுக்கு நம்மை செய்யக் கூடும்… கண்ணம்மா என்கின்ற பராசக்தி, மீனின் பிறவிப் பெருந்துயர் நீக்கத்தலைப்பட்டாள், என்றே பொருள் கொள்வோம் நாம்…

    இன்றைய ஆண்ட்ராய்டு செல்லிடத் தொலைபேசிகள் மீது கவிழ்ந்து கிடக்கும் சமுதாயம் குறித்து “தொடுதிரை அடிமைகள்” என்கின்றதொரு அற்புதமான கட்டுரையை, தமிழ் இந்து (17/06/15) பத்திரிக்கையில் சீனாவில் பதிவு பெற்ற பொறியாளர் திரு மு. இராமநாதன் என்பவர் எழுதி இருந்தார். கதிரேசனின் மேலதிகாரி ஒருவர், இவர் கட்டாயமாக ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் “வாட்ஸ் அப்” ஐ சரிபார்த்து ஏதேனும் கேள்வி இருந்தால் பதில் அனுப்பிவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். தொடுதிரை கூட ஒரு தூண்டிலோ…? என்று தோன்றியது. அனிச்சை செயல் போல, இதுபோன்றஒரு கட்டுரை எழுதும்பொழுது கூட ஐந்துமுறைதொடுதிரை செல்போனை சரிபார்த்து பதிலிடுவது நடந்து கொண்டிருப்பது நல்லது…? என்று தெரியவில்லை. இணையதள சமூக ஊடகங்கள் வழியாக இன்றைக்கு தகவல்கள் ஏன் வரவில்லை என்று நண்பர்கள் சற்று நேரம் தாமதமானாலே… கவலைப்பட ஆரம்பிப்பது எந்தவிதமான நேர்மறைசிந்தனையில் சேர்த்தி என்று ஆச்சரியம் பிறக்கிறது.  பரஸ்பரம் தூண்டிலாக… நட்பு உலகம் கண்களை சிவக்க வைத்துக் கொண்டு இருப்பதாக தோன்றுகிறது.

    நோமோஃபோபியா என்கின்ற வியாதி கழுத்து வலி முதல் பல சிக்கல்களை செல்போனினால் உருவாக்கிவிடுவதாக கூறினார்கள். ஃபோமோ (Fomo) என்கின்றஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட் என்பது இன்னொரு வகையான உளவியல் சிரமம். பல இளைய தலைமுறையினரின் இரவு உறக்கம் வந்து சேர்ந்து விட்டால் வாட்ஸ் அப் பதில் வந்து விட்டதா… அனுப்பி வைத்த ஃபேஸ்புக் புகைப்படம் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து பெறவேண்டிய லைக்குகளை பெற்றதா…? என்று விழித்து காத்திருப்பதிலேயே கழிந்து போய்விடுவது ஃபோஃமோவில் சேர்த்தி. இப்படியெல்லாம் கோணம் இருப்பதாகப் பார்த்தால் வேகம் இன்னும் வேகம் என்று ஆர்வமூட்டும் வலைதளம்… இணைய தூண்டிலே என்று வாதாடிவிடலாம். இந்த தூண்டிலில் நன்மைபுழு இல்லாமல் இல்லை. ஒரு சாதாரணமான மீன் மாட்டிக்கொள்கிறது சாமார்த்தியமான மீன்கள் புழுக்களை மட்டும் கபளீகரம் செய்துவிட்டு தூண்டிலுக்கு முத்தமிட்டுச் சென்று விடுகிறன்றன.

    இந்திய ஆட்சிப்பணி தேர்வு முடிவுகள்  4/07/2015 தெரியவந்தன. இந்த செய்தி – தூண்டிலாக இழுத்தது. ஆர்வமிகுதியால் பார்க்கையில், முதலில் லபாஸ்னா (LBSNAA) என்கின்ற இ.ஆ.ப., அதிகாரிகள் பயிற்சி மையத்தில் உள்ள உணவு விடுதி மற்றும் அங்காடியில் பணிபுரியும் ஒரு ஒப்பந்த உதவியாளர் தேர்ச்சி பெற்றதாக செய்தி வெளியானது. ஒரே பெயர் ஒரே விருப்பப்பாடம் எடுத்திருந்துள்ள இன்னொரு மாணவர் என பின்னர் தெரியவந்தது. அது பரவாயில்லை. அவர் பணிச்சுமைக்கு மத்தியில், ஒரு எளிய பின்னணியில் இருந்து இ.ஆ.ப., நேர்முகத் தேர்வு வரை சென்று வந்ததே பிரமிப்பூட்டும் செய்தி என்று கருதி அவர் அடுத்த முயற்சியில் வெற்றி பெறவேண்டும் என்று அனைத்து நல்உள்ளங்களும் வாழ்த்தி இருந்தன. அவர் பெயர் இரவி. சமீபத்தில் கோவையில் தமிழக குடிமைப்பணி தேர்வெழுதும் மாணவர்களுக்கான பயிற்சி ஒன்றில் பேச நேர்ந்தது. அதில் இலக்கு நம்முடைய சிறிய தூண்டிலாக மாறிவிடக்கூடாது என்னும் பொருள்பட பேசி இருந்தார். கதிரேசன். அதாவது, தனக்குத்தானே ஒரு இளைஞன் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துக் கொண்டாலும் சரி. அது ஒரு தூண்டில் போல அவனை இழுக்கின்றது. அதனால், இ.அ.ப., என்று ஒரு இலக்குத் தூண்டில் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பெரிய தூண்டிலில் இஷ்டப்பட்டுச் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று பொருள் பட பேசினார். உங்களுக்குள்ளே இருக்கின்றஇந்திய ஆட்சிப்பணி அதிகாரியை நீங்கள் தேர்வெழுத விண்ணப்பிக்காத காரணத்தால் மனதுக்குள்ளே அடக்கி சிறைவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

    இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது, ஒரு சிரமமான சூழ்நிலையில் இருந்த போதிலும் மனம் தளராமல் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” (குறள் எண்: 596) என்று திருவள்ளூவர் கூறிய, உயர்வான இலக்கை வைத்த இரவி… ஒரு உன்னதமான எடுத்துக்காட்டாய் தெரிவிக்கின்றார். பெரிய தூண்டிலை தேர்ந்தெடுப்போம்.

    திரு. நாகூர் ரூமி அவர்கள் எழுதிய “இந்த வினாடி” என்கின்ற புத்தகம், தற்செயலாக, எதிர்பாராத விதமாக கிடைத்தது. படித்தால் அதில் “தற்செயல்” என்ற ஒரு அத்தியாயமே வைத்து விவரித்து எழுதியிருக்கின்றார். சத்தியமான வார்த்தைகள். எளிய தமிழில் டாக்டர் தீபக் சோப்ரா அவர்களின் கருத்துக்களின் ஆழமான சாராம்சத்தை அழகாக சொல்கின்றார். தற்செயலாக தோன்றுகின்ற நிகழ்வுகள் எல்லாம் உள்மன ஆற்றலினாலும் இறையருள் அல்லது இயற்கை அருளாலும் நடப்பதாக எழுதி அவற்றை அறிவியல், நடப்பியல் ஆதாரங்களோடும் கலந்து கொடுத்திருக்கின்றார். அதுமட்டுமின்றி சில நடைமுறை பயிற்சிகள் மூலம், ஆஃல்பா தியானம் மூலம் எவ்வாறு நேர்மறை மனநிலை கொள்வது எனறு விலாவரியாக விவரித்திருக்கின்றார்.

    “காற்றைப்பிடிக்கும் கணக்கறிவாளருக்கு

    கூற்றைஉதைக்கும் குறி அது ஆமே”

    என்று திருமூலர்

    திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். அதன் பொருள், கணக்கு போடுவது போல மூச்சை உள்ளே இழுக்கும் நேரம், உள்ளே வைத்திருக்கும் நேரம், வெளிவிடும் நேரம் (முறையே, பூரகம், கும்பகம், ரேசகம் என்று திருமந்திரம் கூறிகின்றது) என்பனவற்றை கணக்குப் போட்டு மூச்சு விடுபவர்களால், கூற்றுவன் என்று சொல்லக்கூடிய, எமனையும் உதைக்கலாம் என்பது ஆகும். இந்த மாதிரி மூச்சு விடுதல் குறித்து இன்றைய தமிழில் ரூமி அவர்களது புத்தகம் விளக்கமாக, நடைமுறையில் செய்வதற்கு வசதியாக உடனே வைத்தக் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக சொல்லித்தருகின்றது. இதனை ஒரு நல்ல தூண்டில் என்று ஒப்புக் கொள்வதற்கும் இதுபோன்ற புத்கங்களை படித்துப்பலன் அடைவதற்கும் கதிரேசன் விரும்பினார்.

    இவ்வாறான பயிற்சிகளை கதிரேசன் மாணவப் பருவத்தில் அரசல் புரசலாக அங்குமிங்கும் கற்றுக்கொண்டார். அதனால் பல தேர்வுகளை வெற்றி கொள்ள முடிந்து இருக்கின்றது. ஒருவேளை ஆழமாகக் கற்றுக் கொண்டிருப்பின், அதற்கேற்ப நன்மை விளைந்து இருக்கும்.  தெய்வப்புலவர், திருக்குறளில் உழைப்பிற்குத் தகுந்த கூலி, நிச்சயம் கிடைக்கும்  – என்று மெய்வருத்தக் கூலி தரும் 24. குறள் என்று முடியும் குறளில் கூறியுள்ளார். சமீபத்தில் தொலைபேசி அழைப்பொன்றை இழக்க நேர்ந்தது. புகழ்பெற்றஆங்கில திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன், உலகின் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவரான வாரன் பாஃபெட் இவர்களாலேயே வாங்க முடியாத ஒரு பொருளை நம்மால் வாங்க முடிந்திருக்கிறது. ஆஹா… நாம் எவ்வளவு பொருள்வளம் மிக்கவர்கள் தான். அதுசரி மிஸ்ஸிடு காலை ரிடர்ன் செய்வோம் என்றால்…. எதிர் முனையில் இருந்தவர் தனது முக்கியமான அலுவலில் இடையூறாக கதிரேசனின் அழைப்பை நினைத்து விட்டார். ஒரே கோபம் மற்றும் அவசரமான தொனியில் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்றரீதியில் கடுமை குரல் காதுகளை பதம் பார்த்து இதயத்தில் காயம் ஏற்படுத்த முயன்றது. ஒரு தூண்டிலில் மாட்டிய வலி என்று ஒப்பிடலாம். ஏனப்பா வம்பு என கதிரேசன் இணைப்பை துண்டித்தால், அவர் விடவில்லை. வலிந்து மீண்டும் அழைத்து கதிரேசனை யாரென விசாரித்தார். அடையாளம் தெரிந்த பின்னர் கதிரேசன் மதிக்கத்தக்க மனிதர் என்று முடிவு செய்து மன்னிப்புக் கோரினார்.

    தூண்டிலில் குத்திய பிறகு வைத்தியம் பார்ப்பது போல தீயினால் சுட்டதை காட்டிலும் ஆறாத புண்கள் மிஸ்ஸிடுகால்களில் உருவாகி விடும் போல. அன்பான இனிய சொற்கள் நல்ல தூண்டில்கள். மிஸ்ஸிடுகால்களால் நடக்கும் இணைந்த குடும்பங்கள் ஏராளம். நாம் சொல்வதெல்லாம் தவறி அழைத்து விட்டாலும் தன்மையாக பேசுவோம். அடையாளம் தெரியாதோரிடத்திலும் அன்பு காட்டுவோமே என்றுதான். அன்னை தெரசா சொல்வது போல் சக மனிதரை நேசிக்க முடியாதவர்கள் கண்ணிற்குத் தெரியாத கடவுளை எப்படி நேசிப்பார்கள். திருவள்ளூவர் என்ன சொல்கின்றார் இப்படி மிஸ்ஸிடுகால் தவறாக போனால் தன்னை விட மேலிருப்பவர் உடன் நாம் எப்படி பேசுவோமோ…? அவ்வளவு பவ்யமாக மெல்லியவர்களிடத்தும் பேசலாமே என்று அறிவுரை வழங்குகின்றார் (குறள் எண். 250). கடைசியில் கதிரேசனை மூன்று முறைதொடர்பு கொள்ள மிஸ்ஸிடு கால் கொடுத்தவர், தவறுதலாக பட்டனை அழுத்தியவராம். எதற்கும் கோபப்படும் முன்பும், தூண்டிலிடும் முன்பும் சற்று சரிபார்ப்பது நல்லதே…!

    தற்செயலாக… திருமண மண்டபத்திலிருந்து கிளம்புகையில் கதிரேசனின் கைகளைப் பிடித்துக் கொண்டார் நண்பர். தூரத்து நண்பர் நெஞ்சளவில் நெகிழ்ந்து மகிவும் நெருங்கிவிட்டார். சரிவர கவனிக்கவில்லையே என உருகினார். உணவுசாலைக்கும் அழைத்தார். கதிரேசன் முகமலர்ச்சியுடன் தாம் திருப்தியாக உணவுண்ட மணமக்களை மனதார வாழ்த்தியதாக தெரிவித்தார். நண்பரும் அகமகிழ்ந்தார். கதிரேசனும் ஒரு வித்தியாசமான கல்யாணத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ந்தார். நாகூர் ரூமி அவர்கள் புத்தகத்தில் கூறியவாறு, நண்பர் தற்செயலாக வந்திருக்க மாட்டார், எல்லாம் வல்ல நல்லெண்ணம். மண்டபவாசலுக்கு அவரை வரவழைத்து… திரும்ப போகையில் நிறைவாக, திருப்தியாக போக வைத்தது. அடுத்த தூண்டில் எந்த நிமிடம் கிடைக்கும் என ஏங்க வைத்தது. மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்…. தற்செயலாக…..