– 2015 – August | தன்னம்பிக்கை

Home » 2015 » August (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இடைவெளியை பூஜ்யமாக்கும்

    ஆசையின்றி வாழ முடியுமா…? நிச்சயமாக முடியாது…

    ஆனால், ஆசையே துன்பத்துக்குக் காரணம் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செல்லியுள்ளார்களே…!

    ஆசைப்படாதவர்கள் யார் என சிந்திப்போம். இதுவரை பிறக்காதவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் ஆசை தேவையில்லை. இதில் கூட, இறந்தவர்களின் நிறைவேறாத ஆசைகள் தொடரும் என்று சொல்கிறார்கள். நாம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.

    தற்போது வாழ்ந்து வரும் அனைவருக்குமே ஆசைகள் அவசியம் தேவை. நம் முன்னோர்களே மண், பெண், பொன் என மூன்று வகையாக ஆசைகளைக் கூறியுள்ளனர்.

    ஆணுக்கு மட்டும் பெண் ஆசை தேவை; பெண்ணுக்கு ஆண் ஆசை வேண்டாமா? என்றகேள்வியும் எழும்.

    மண் என்பதை வசிப்பிடம், விளைநிலம்; பெண் என்பதை பருவத்தில் வாழ்க்கைத் துணை;

    பொன் என்பதை பொருட்கள் மற்றும் பணம்;

    என்றும் நாம் சுருக்கமாகச் சொல்லுவோம். உயிருடன் வாழ வேண்டும் என்பதே அப்படை ஆசை தானே.!

    இதிலிருந்து ஆசை என்பது கட்டாயம் தேவை ஆனால், நிறைவேறாத ஆசைகளோ, பிறருக்குத் துன்பம் தரும் ஆசைகளோ அனைத்தும் தனக்கே வேண்டும் என்றபேராசையோ துன்பம் தருபவை. இவை தேவையற்றவை.

    மனிதராய் பிறந்து வாழும் எல்லோருமே உயிர்வாழ ஆசைப்படுகிறோம். அதே சமயம், ஏதேனும், சிறு விபத்து அல்லது வியாதி என்றாலும் சாவுக்கு பயந்து கொள்கிறோம். சிறு உதாரணம் மூலம் விளக்கம் பெறுவோம்.

    ஒரு மனிதன் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக அடுத்த ஊருக்கு நடந்து செல்கிறான். இவனது போறாத காலம், கரடி ஒன்று இவனைப்பார்த்து துரத்துகிறது. எப்படியோ, ஓடி ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொள்கிறான்.

    ஆசுவாசப்படுத்திக் கொண்டு மரத்தைப் பார்க்கிறான். வேறு ஒரு கிளையில் ஒரு குரங்கு இரு குட்டிகளுடன் உட்கார்ந்து இவனையே பார்த்துக் கொண்டிருந்தது, இவனுக்கோ பயம்.

    கண்களை இறுக மூடி, மரக்கிளையைக் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். பகல் மறைந்து இரவானது, இரவு கரைந்து பகலானது. மீண்டும் இரவு வந்தது.

    பயம் இருந்தாலும், பசி வயிற்றைக் கிள்ளியது. இந்த இடைப்பட்ட நேரத்தில், இவனால் துன்பமில்லை என்று முடிவு செய்த குரங்கு, அந்த மனிதனிடம், “மனிதா” இரு நாட்களாக நீ பசியோடு இருக்கிறாய்.  கரடியும் கீழே காத்திருக்கிறது. என் குட்டிகளைப் பார்த்துக்கொள். உனக்கு சில பழங்கள் பறித்து வருகிறேன் என்று கூறிச் சென்றது.

    மனிதனுக்கு ஆச்சரியம், குரங்கு பேசியது. அதுவும் இவன் பசிபோக்க பழங்களை கொண்டு வருவதாய், சொன்னதும், சிறிது தெம்பு வந்தது.

    குரங்கும் பழங்களுடன் திரும்பி வந்தது. அந்த மனிதனும் அவற்றை சாப்பிட்டு நன்றி கூறினான்.

    இடைப்பட்ட நேரத்தில் இவனுடன் கரடியும் பேசியது. “மனிதா” நீ எத்தனை நாள்தான் மேலே உட்கார்ந்து இருப்பாய். எனக்கும் பசியாக இருக்கிறது. அந்தக் குரங்குக் குட்டிகளையாவது கீழே தள்ளி விடு. நான் சாப்பிட்டுவிட்டு என் வழியே செல்கிறேன். நீயும் சென்று விடலாம் என்றது…

    பழங்களைச் சாப்பிட்டு விட்டு தோலைக் கீழே வீசினான். கரடியும் சாப்பிட்டு, காத்திருந்தது. மேலும் ஒரு நாள் கடந்தது. குரங்கு இவனுக்கு பழங்கள் பறித்து வரச் சென்றது. கரடி, மீண்டும் இவனிடம், “மனிதா! இப்போதாவது அந்தக் குரங்குக் குட்டிகளைக் கீழே தள்ளி விடு” என்றது. மனிதன் யோசித்தான்.

    தான் உயிர் பிழைத்துத் தப்பிச் செல்ல வேறு வழியே கிடையாது. எனவே, குரங்குக் குட்டிகளைச் கீழே தள்ளி விட்டு, அவற்றைத் தின்று விட்டு, கரடி சென்றால் தான் தப்பமுடியும் என நினைத்தான்.

    திட்டமிட்டு செயல்படுத்தினான். கரடியும் நன்றி கூறி, காரியத்தை முடித்துவிட்டு, மரத்தடியிலிருந்து சென்றது.

    அவசரமாக மனிதன் மரத்திலிருந்து இறங்கி ஓட ஆரம்பித்தான். திரும்பி வேகமாக வந்த கரடி இவனையும் கொன்றது.

    மனிதனுக்குப் பழங்களைப் பறித்து வந்த குரங்கு, மரத்தில் குட்டிகளையும், மனிதனையும் காணாமல் திடுக்குற்றது. கீழே பார்த்தது, எலும்புகள் சிதறிய உடல்

    துண்டுகளைக் கண்டு, அந்த மனிதனின் மிருக புத்திக்கு கண்ணீர் வடித்தது.

    இந்தச் செய்தியிலிருந்து நாம் தெரிந்து சொள்வது என்ன? யோசியுங்கள்.

    உயிர் மேலுள்ள ஆசை, மனித நேயத்தை மறக்கடித்தது. விபத்தென்றால், தன் அன்புக்குரிய மனைவி, குழந்தைகளை விடவும் தனது உயிர் முக்கியம் எனச் செயல்படும் குணம் மேலோங்குவதை நாம் பார்த்திருக்கிறோம்.

    ஆசை என்பதை திருவள்ளுவர் எல்லா உயிர்களுக்கும், எக்காலத்திலும் தொடர்ந்துவரும் பிறவித் துன்பத்தை உண்டாக்கும் விதை என்றார்.

    அவாஎன்ப எல்லா உயிர்க்கும்

    தவாஅப் பிறப்பீனும் வித்து    – குறள் 361

    ஆசை, பற்று, இச்சை, வேட்கை, விருப்பம், அவா காமம் எனப் பல சொற்களால் சொல்லுகிறோம். ஆசைக்கும் துன்பத்துக்குமான இடைவெளியை பூஜ்மாக்குவது வெகு சுலபம்.

    ஒரு தேவை நிறைவேறும் போது பெறும் உணர்வு இன்பம், (உ-ம்) பசி – தேவை: நிறைவேற்றம்  உண்ணுதல், இந்த இன்பத்தில் திருப்தியில் நம் மனம் (உயிர்) மயங்கி விடுகிறது. பிறகு உண்மையான தேவையில்லாமலேயே ஆசைப்படுகிறது. இந்த ஆசைக்குப் பெயர் செயற்கை ஆசை: இதைக் கட்டுபடுத்தி விட்டால் துன்பமே கிடையாது. (உம்) பசியை போக்கி நிறைவைத் தந்த உணவின் ருசி மீண்டும் தேவையென, பசியில்லாமலேயே அங்கு சென்று ருசிக்காக உண்ணுதல்.

    இன்னும் எளிமையாக விளக்கலாம், பசி நீங்க ருசியான உணவைச் சாப்பிட்டோம். உணவு என்பது பொருள்: உணர்வு என்பது திருப்தி (இன்பம்).

    நாம் மனமானது (எண்ணம்) உணர்வை விட்டு விட்டு, உணவைப் பிடித்துக் கொள்வதுதான் துன்பம் தரும்: இது பற்று ஆகும்.

    எப்படி நிறுத்துவது?

    வாங்கிய பாலை வீட்டில் அடுப்பில் வைத்துக் காய்ச்சுகிறோம். சரியான நேரத்தில் இறக்கினால் நல்லது. இதேபோல சாதம் சமைக்கிறோம். பாத்திரத்தின் அடிப்பகுதியில் அந்த சாதம் தீய்ந்து விடாமல் (அடிப்பிடிக்காமல்) சரியான நேரத்தில் இறக்கினால் சிறப்பு.

    இதற்குத் தேவை விழிப்பு நிலை:

    செய்யும் செயலில் ஆர்வத்ததுடன் கூடிய செயல்பாடு.

    நெருப்புக்கும் பாத்திரத்துக்குமான (உறவை) தொடர்பை, சரியான நேரத்தில் நிறுத்துவதுதான் துறவு என்பார் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி.

    விழிப்பு நிலை தவறி, உறவைத் தொடரவிட்டால், பால் பொங்கும். அவசரப்பட்டு, பால் பாத்திரத்தை, கையில் எடுப்போமா? மாட்டோம்.

    ஒரு துணியால் பிடித்து, அந்தப் பாத்திரத்தின் சூடு நம்மைப் பாதிக்காமல் தான் எடுக்கிறோம்.

    இந்த அளவு விழிப்பு நிலையில் நாம் நமக்குத் தேவையான நாம் ஆசைப்படும் பொருள், உறவுகள், செல்வாக்கு, அதிகாரம் மற்றும் புகழ் இவை ஐந்தில் (துறவு மனப்பான்மை) தேவையளவில் துண்டிக்கும் மனநிலைதான் ஆசைக்கும் துன்பத்துக்குமான இடைவெளியை பூஜ்யமாக்கும்.

    இடைவெளி இருக்கும் வரை, அதாவது அந்த ஆசை நிறைவேறாத வரை துன்பம் நீடிக்கும். அருவி நீரில் குளிப்பது இன்பம்தான். ஆனால், அதிலே மூழ்கி விடக்கூடாது.

    பயிற்சி: ஆசைகளை வரிசைப்படுத்தி, பயிற்சி மூலம் தெளிவு பெற்று, தேவையான ஆசைகளை நிறைவேற்றியும். தேவையற்ற தீய ஆசைகளையும் நிறைவேற்றவே முடியாத (நிராசை) ஆசைகளையும் மனதிலிருந்து நீக்கி விடலாம்.

    ஓர் ஆசையை எடுத்துக் கொள்வோம். கார் வாங்க வேண்டுமென்ற ஆசை.

    இதை நான்கு கோணங்களின் ஆராய்வோம்.

    தேவை : கார் நமக்குத் தேவையா ? நிறுத்துவதற்கு இடம், கார் ஓட்டத் தெரிந்திருப்பது, காருக்கு எரிபொருள் நிரப்ப தேவைப்படும் பணம், இவைகளை ஆராய்ந்து சரியென்றால், அடுத்த நிலைக்குச் செல்லலாம்.

    வசதி : கார் வாங்கப் போதிய பொருளாதார வசதி உள்ளதா? கடன் வாங்கினால், மாதாமாதம் திருப்பிச் செலுத்த முடியுமா? இவற்றை ஆராய்ந்து அடுத்த நிலையை ஆராய்வோம்.

    விளைவு : கார் வாங்கியபின் வீட்டிலுள்ள அனைவருமே இன்பமும், திருப்தியும் அடைகின்றனரா? உங்களுக்கும், எதற்காக வாங்கினீர்களளோ, அந்த நோக்கம் நிறைவேறுகிறாதா? அல்லது போக்குவரத்து நெரிசலில் காரில் செல்வது தாமதமாகிறதா? என ஆராய்வது.

    சமுதாய ஏற்பு : நீங்கள கடன் வாங்கி, கஷ்டப்பட்டு கடனைக் கட்டினாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்களும், உறவுகளும் இதை இயல்பாக ஏற்றுக் கொள்வார்களா? அல்லது பிரச்னை வருமா? என ஆராய்தல்.

    இந்த நான்கு கோணங்களின் ஆராய்ச்சியும் துன்பமில்லை கார் வாங்கலாம் என்றால், தாராளமாக ஆசையை செயல்படுத்தலாம். இல்லாவிட்டால் ஒத்தி வைக்கலாம் அல்லது நீக்கி விடலாம்,

    இம்மாதிரி செயல்படாமல் மிகப்பெரும்பாலானவர்கள் நிறைவேறாத ஆசைக் குப்பைகள் பலவற்றை மனதில் குவித்து, குப்பை மேடாக்கி வாழ்க்கையை கடனுக்கு வாழ்ந்து கொண்டுள்ளனர்.

    விதைப்பது தானே முளைக்கும்

    மனித ஆசை : ஒருமுறை கடவுள் கழுதை, நாய், குரங்கு மற்றும் மனிதனுக்கு ஆயுட் காலத்தை நிர்ணயிக்க முடிவு செய்து வரவழைத்தார்.

    முதலில் கழுதைக்கு 60 வருடங்கள் வழங்குவதாய் கூறினார். கழுதை எனக்கு 30 வருடங்களே போதும் என்று பெற்று கொண்டது; பிறகு நாய்க்கு 40 வருடம் என்றார்; அதுவும் பாதி போதுமென 20 ஆண்டுகள் பெற்றது. பின் குரங்கு, கடவுள் வழங்கிய 40 வருடங்களில் 20 மட்டும் போதுமெனத் திருப்தியடையுடன் பெற்றது.

    கடைசியில் மனிதனுக்கு 20 வருடங்கள் என கடவுள் சொன்னார். திருப்தியடையாத மனிதன் மற்றஉயிரினங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய 70 வருடங்களையும் சேர்த்து வழங்கிமாறு வேண்டிய பெற்று மகிழ்ந்தான்.

    மனிதனின் வாழ்க்கை முதல் 20 வருடங்கள், எவ்விதப் பொறுப்புமில்லாமல் பெற்றோர் அரவணைப்பில் மகிழ்ச்சியாகக் கழிகிறது.

    அடுத்த 30 வருடங்கள் வேலை, திருமணம், குடும்பம், குழந்தைகள் எனக் கடுமையாக கழுதைபோல் உழைத்துப் பொருளீட்டும் பருவமாகிறது.

    அடுத்த 20 ஆண்டுகள் ஈட்டிய பொருளை நாய் எலும்புத் துண்டை விடாமல் கவ்வியிருப்பது போல் பராமரிப்பதும், சொத்துக்களை பத்திரப்படுத்திவதிலும் கழிகிறது? ச்சே! என்ன நாய்ப் பிழைப்பு எனப் பலர் புலம்புவது காதில் விழும்.

    அடுத்த 20 ஆண்டுகள், மரத்துக்கு மரம்தாவும் குரங்குகள் போல், முதுமையில் சொத்து, உறவுகள் இருந்தும், தனது பராமரிப்புக்கு மகன் வீடு, மகள் வீடு என இங்கும் அங்கும் மாறிமாறி அலைந்து அல்லல்படும் நிலை இன்றைய வாழ்க்கை முறை ஓரளவு இதுபோல் தான் உள்ளது.

    எனவே, ஆசைகள் துன்பம் தராமலிருக்க பயிற்சி செய்து பலனடைவோம்.

    அது சரி! மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன? பொறுத்திருப்போம்.

    தன்னம்பிக்கை மேடை

    படித்து முடித்து ஆசிரியர், கிளார்க் போன்றவேலை கிடைத்ததும்  ‘டென்ஷன்’ இல்லாத வேலை, பரவாயில்லாத சம்பளம், இதுவே போதும் என்று சிலர் அப்படியே வாழ்க்கையை ஓட்டிவிட நினைக்கிறார்களே, அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன…?

    எஸ். மோகன்,15 பாரத் நகர் மெயின் ரோடு,கோவில்பட்டி – 628501.

    ஒவ்வொரு இளைஞனும் பெரியதாக ஆசைப்பட வேண்டும்; தனக்கு என்று ஒரு மிகப்பெரிய இலட்சியத்தை உருவாக்கி அதை அடைய ஒவ்வொருநாளும் முயற்சிக்க வேண்டும்; வசதிகளும், வாய்ப்புகளும் குறைந்த குடும்பத்தில் பிறந்த சிலர் உயர்ந்த நிலையை அடைந்து விட்டார்கள் என்பதை மேற்க்கோள் காட்டி பேசியும், எழுதியும் வருகிறேன். சில தினங்களுக்கு முன் இறந்த மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்களைப்பற்றியதொரு செய்தி. அவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே அவரது தந்தையார் இறந்து விட்டார். துயரமான சூழ்நிலை, ஆனால் அவர்  இசையைக் கற்றுக்கொண்டு இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். அவரையே அவர் உருவாக்கி இருக்கிறார். அவரது பாடல்கள் பலவற்றை மக்கள் மனமுவந்து முணுமுணுத்துக் கொண்டிருகிறார்கள். இந்த சூழ்நிலையில் உங்களது கேள்வியை ஆராய்வோம்….

    பெரும்பாலும் நடுத்தரக்குடும்பம் அல்லது ஏழைக்குடும்பத்து பிள்ளைகள் ஆசிரியர், கிளார்க் போன்றவேலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு காரணம், அதில் ‘டென்ஷன்’ இல்லை என்பதற்காக மட்டும் அல்ல, இந்த வேலைதான் நம் போன்ற வசதியில்லாதவர்களுக்கு அல்லது திறமையில்லாதவர்களுக்கு உரியவை என்றஎண்ணமும், நமது முயற்சிக்கு இதுதான் கிடைக்கும் என்ற ஒருவித நம்பிக்கையும் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

    எதுவாக இருந்தாலும் ஆசிரியர், கிளார்க் போன்ற வேலை ‘டென்ஷன்’ இல்லாத வேலை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இந்த வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை அல்லது உயர்ந்த அந்தஸ்து இல்லை என்பதைப் போன்ற ஒரு எண்ணம் நிலவி வருகிறது. உங்களது கேள்விகள் மறைமுகமாக அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. இதை நான் மறுக்கிறேன். நாடக கம்பெனிகளில் ஒன்று சொல்வார்கள், ‘no rule is a small role’. அதாவது எந்த கதாப்பாத்திரமும் சிறிய கதாப்பாத்திரம் அல்ல என்பதுதான் அது. ஆக சமுதாயத்தில் பல வேலைகள் இருக்கும் போது சில வேலைகளைக் குறைவாக எடை போட முடியாது. எல்லா வேலைகளிலும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது. வேலைகளுள் வேற்றுமை இருக்கலாம், ஏற்றத்தாழ்வு இல்லை என்பது ஆழ சிந்தித்தால் புரிந்து விடும்.

    ஒரு பணியில் சேர்ந்த பிறகு அந்த பணி சிறந்ததா, இல்லையா என்பது அவர் அந்த வேலையைச் செய்யும் விதத்தில்தான் இருக்கிறது. சில கிளார்க்குகள் தங்கள் பணிகளை கண்ணும் கருத்துமாகச் செய்து, அதில் நிபுணத்துவம் பெறுகிறார்கள். சட்டங்களைக் கற்றுத்தெரிந்தும், பல உத்தரவுகளை படித்தும் தங்களது குறிப்புகளை கோர்வையாக நல்ல மொழிப்புலமையுடனும், கருத்துடனும் எழுதி விடுவார்கள். இவர்கள் நிர்வாகத்திற்கு மிகவும் இன்றியமையாதவர்களாக உள்ளார்கள். பணி ஓய்வு பெற்றபின்னரும் இந்த கிளார்க்குகளுக்கு மதிப்பு உண்டு; அவர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. இதை நாம் கண் கூடாகப் பார்க்க முடியும். ஒரு கம்பெனியில் கிளார்க்காக வேலை செய்தவர்தான், ரிலைன்ஸ் கம்பெனி நிறுவனர், திரூபாய் அம்பானி. இவர்தான் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார். ஒரு வங்கியில் கிளார்க்காக சேர்ந்து எனது கல்லூரித்தோழர் சந்திரசேகர் வெளிநாட்டு வங்கியின் உபதலைவராக இருந்தார். ஒரு ஆசிரியர், ஒரு காலத்தில் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்தார், அவர்தான் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள்…

    கல்விப்பணி செய்யும் ஆசிரியர் வெறும் பாடங்களை மட்டும் மாணவர்களுக்கு சொல்லித்தருபவர்கள் அல்ல. மாணவர்களுக்கு அந்தப் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் பொறுப்பில் இருப்பவர். தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்; எனவே, அவர் கல்வி கற்க நிறைய உள்ளது. ஒரு நூல் படிக்கும் மாணவராகவும், சிந்தனையாளராகவும், நூல் எழுதிய நூலாசிரியராகவும், ஒரு மனநல ஆலோசகராகவும் ஒரு தாயாகவும், தந்தையாகவும், ஆசிரியர் திகழ்கிறார்.  இது சாதாரணமாக வேலை என்று சொல்ல முடியுமா…? இதில் எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறது…? எவ்வாறு போராட வேண்டியுள்ளது…? இப்படிப்பட்ட வேலையை ‘டென்ஷன்’ இல்லாமல் செய்துவிட முடியுமா….? 50 மாணவர்களுக்கு பொறுப்பு ஆசிரியர் என்கிறபோது, அதில் பல சிரமங்கள், சிக்கல்கள் ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. அப்படியே ஒரு தலைமை ஆசிரியாராகும் போது ஆயிரம் மாணவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அது மிகவும் பொறுப்பு மிக்க பணி அல்லவா? ‘ஆசிரியர் பணி மற்றஅனைத்துப்பணிகளையும் உருவாக்கும் பணி’ என்பது உலக பழமொழி.

    தனது பணித்திறமையை மேம்படுத்த நினைக்கும் எவரும் உயர்ந்த பதவியில் இருப்பவர்தான். அது, டாக்டரானாலும் சரி,  துப்பரவு தொழிலாளியானாலும் சரி, இராணுவத்தளபதி ஆனாலும் சரி; அவர்கள் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். அவருடைய அந்த போராட்டத்தை (அல்லது நீங்கள் கூறும் ‘டென்ஷனை’)

     விரும்பி வரவேற்றால், அதுவே ஒருவித சுகமாகக்கூட மாறி விடலாம். ‘டென்ஷன்’ இல்லாத வாழ்க்கை ஒரு சவால் இல்லாத வாழ்க்கை என்றே கூறுவேன்.

    சின்ன வேலைகளில் கைதேர்ந்தவர்களுக்குத்தான் பெரிய வேலையே கிடைக்கும் என்றார் – தியோடர் ரூஸ்வெல்ட், அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி.

    நீங்கள் குறிப்பிடும் ‘வாழ்க்கையை ஓட்டிவிட நினைப்பவர்கள் ஒவ்வொரு பதவியிலும், எல்லாத்துறையிலும் உள்ளனர். அவர்களுக்கு நான் கூறும் அறிவுரையே ‘வேலையில் வளருங்கள்’ என்பதுதான். அதாவது வேலையில் சேர்ந்த அன்றிலிருந்து தினமும் முதிர்வு அடைய வேண்டும். முதிர்வு என்பது வயதாகிக்கொண்டிருப்பது ஆகாது…! 25 வயதில் ஆசிரியராகச் சேர்ந்தவர் 30 ஆண்டுகள் கழித்து 55 வயதான ஆசிரியராகி விடுவார். அதைச் சொல்லவில்லை. 30 ஆண்டுகளில் எவ்வளவு நூல்களை படித்தார்? எவ்வளவு பிறகலையைக் கற்றார்? எத்தனை  மாணவர்களை திருந்தினார்? எத்தனை பேருக்கு கதாநாயகன் ஆனார்? எத்தனை மரம் நட்டார்? எத்தனை நூல்கள் எழுதினார்? என்பதை வைத்து வளர்ச்சியின் அளவை கணக்கிட வேண்டும்.

    முதிர்வு என்பது வளர்ச்சியைக் குறிக்கும்; ஆற்றலால், சிந்தனையால், மனப்பான்மையால், மனிதநேயத்தால், உடல் உறுதியால், வளர்ச்சி அடைய வேண்டும் என்பது அவசியம்…

    எப்போது நாம் முதிர்வு அடைகின்றோம்…?

    1. நம்மோடு நாம் சமாதானம் செய்து கொள்ளும் போது.
    2. மற்றவர்களை மாற்றப் புறப்படுவதை விட்டுவிட்டு, நம்மை மாற்றமுயற்சி செய்யும்போது.
    3. பிறரது குறைகளைப் பார்க்காமல், நமது குறைகள் மீது, கவனம் செலுத்தும் போது.
    4. பிறர் நம்மை எப்பொழுதும் பாராட்ட வேண்டும் என்றஎதிர்பார்ப்பு இல்லாத போது.
    5. நமக்கு கிடைக்காததைப்பற்றி வருத்தப்படாமல், கிடைத்திருப்பதை நினைத்து திருப்தி அடையும் போது.
    6. நமது அமைதியையும், மகிழ்ச்சியையும் நாம் செய்யும் செயலைப் பொறுத்து என்று உணர்ந்த போது.
    7. ஒரு செயலை ஒருவர் ஏன் செய்கிறார் என்றபுரிதல் ஏற்படும் போது.
    8. ஒவ்வொரு மனிதனும் ஒருவிதம், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வளர்ந்த போது.
    9. நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ளும் போது.
    10. உலக பொருட்களில் மட்டும் மகிழ்ச்சி இல்லை என்பதை உணர்ந்த போது.

    ஆக சம்பளம் குறைவான வேலை என்றால் சின்ன வேலை என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.  எல்லா வேலைகளிலும் வளர்ச்சி அடைய, கணக்கிலடங்கா வாய்ப்புகள் உண்டு. நல்ல மனப்பான்மையில் விரும்பி வேலை செய்யுங்கள், அப்போது சின்ன வேலையாக கூறும் பணியும் பெரிய வேலை ஆகும்; அந்தப்பணி ‘அறப்பணி’ ஆகிவிடும்.

    படித்து முடித்து ஆசிரியர், குமஸ்த்தா வேலைக்கு சேர்வது நல்ல முடிவு, ஆனால் அதற்குப் பிறகு ‘இதுபோதும்’ என்று அப்படியே ஓட்ட நினைப்பவர்கள் உடலால், மனதால் அறிவால் பொருளால், ஈகையால் வளர முடியாது. அவர்களுக்கு நல்ல வரவேற்பு சமூதாயத்தில் இருக்காது. எனவே அவர்களுக்கு நான் தரும் அறிவுரை; இந்த வேலைகள் உயர்ந்தவை, நீங்களும் உயருங்கள். அதற்கு நீங்கள் தொடர்ந்து கல்வி கற்றுக் கொள்ளுங்கள். ‘சுயகல்வி’ தான் நான் அதற்கு ஒரே வழி…

    உள்ளத்தோடு உள்ளம்

    அசாம் காடுகளில் நெபந்தஸ் என்கிற ஜாடித்தாவரம் விசித்திரமானது. இத்தாவரம், இலையின் மத்திய நரம்பில் இருந்து ஒரு நீண்ட பாகத்தை உருவாக்கி வளர்க்கும். அது பார்ப்பதற்கு ஜாடியைப் போலவே இருக்கும்.அந்த ஜாடியின் வாய்ப்பாகத்தில் இனிப்பான திரவத்தைச் சுரக்கும். பூச்சிகள் அந்த இனிப்பான திரவத்தை உண்ண ஜாடியின் வாயருகே வந்தவுடன் அந்த ஜாடி உள்ளிழுத்து விடும்.  அங்கு சிக்கிக் கொண்ட பூச்சி கொஞ்ச நேரத்தில் உயிரிழந்து விடும். உடனே உயிரிழந்த பூச்சிகளை  செரிக்கும் சக்தி உள்ள திரவத்தைச் சுரந்து, அதனை தனக்கு உணவாக்கி கொள்ளும்.

    வெளியுலக கவர்ச்சிகளுக்கு, பாவ செயல்களுக்கு மயங்கினோம் என்றால் முதலில் அது இன்பமாகவே தெரியும். பின்பு அதுவே வாழ்வைச் சீரழித்து விடும்.

    இன்றைய நிலையில் ஆற்றல் மிக்க இளம் சமுதாயம் அழகையும், கவர்ச்சியையும் போதையையும் பெரிதும் நம்பி அதனால் பாதையை மாற்றி அழகான வாழ்வை அலங்கோலமாக்கிக்கொள்ளும் அவலம் நாளுக்கு நாள் பெருக்கெடுத்து வருகிறது.

    இந்நிலை மாறவேண்டும். ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் எச்சரிக்கை உணர்வு எழ வேண்டும். எதிலும் சிந்தித்து நற்செயல் புரிபவராக ஒவ்வொருவரும் மாறவேண்டும். அந்த மாற்றம் தரும் ஏற்றமே “””எதிர்கால இந்தியா எதிரிகளாலும் வெல்ல முடியாத இந்தியா” என பெயரெடுக்க வைக்கும்.

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்