– 2014 – April | தன்னம்பிக்கை

Home » 2014 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் பள்ளி

    திரு. S. அங்கண்ணன்

    உதவியாளர் & தேர்வாணையர் அலுவலகம்

    பாரதியார் பல்கலைக்கழகம்

    எந்தவித எதிர்பார்ப்பும், தேவைகளும் இல்லாமல்  பயமும், பதற்றமுமாக  செல்லும் ஓர் இடம் ஆரம்பப் பள்ளி. அந்த ஆரம்பக் கல்வி தந்த அனுபவங்களை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்த வகையில் தன் கல்வி வாழ்க்கையை அழுத்தமான நினைவுகளுடன் பகிர்கிறார் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வாணையர் அலுவலத்தில் உதவியாளராய் பணிபுரியும் திரு. எஸ். அங்கண்ணன் அவர்கள்.

    எனது ஆரம்பப் பள்ளி மருதாபுரம் அரசினர் பள்ளியில் ஆரம்பமானது. அப்பொழுது கல்வியின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமாக இருந்தது. பிறகு ஆறாம் வகுப்பு மருதமலை தேவஸ்தான அரசினர் பள்ளியில் சேர்ந்தேன். அப்பள்ளியில் அடிப்படை வசதிகள் கூட இருந்ததில்லை. சாலைக் கூரையில் தான் வகுப்பு எடுக்கப்பட்டது. மழைக் காலங்களில் பள்ளிக்கு விடுமுறை தந்துவிடுவார்கள். அரை நாள் மட்டுமே பள்ளி நடக்கும்.

    வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் பேருந்துக் கட்டணம் 25 பைசா. அந்த 25 பைசா கொடுத்து பேருந்தில் செல்ல முடியாத நிலையில் தான் நான் இருந்தேன். குடும்ப வறுமையின் காரணமாக பேருந்துக் கட்டணம் வேண்டும் என்று என் பெற்றோர்களிடம் கேட்காமல் 3 கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்குச் செல்வேன். ஆண்டுக்கு ஒருமுறை தான் பள்ளிச்சீருடை. அதை தினமும் துவைத்து, கிழிந்தால் தைத்துக் கொண்டு தான் அதே சீருடையை அணிந்து செல்வேன்.

    மதிய உணவு வேளைகளில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். நான் அவர்களுடன் கலந்துகொள்ள மாட்டேன். குடும்ப வறுமையின் காரணமாக பல நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறேன். மாணவர்கள் என்னை தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பார்கள். என்றாலும் கடின உழைப்பு, அன்பு, இரக்கம், மற்றவர்களுக்கு எந்த பலனையும் எதிர்பாராமல் உதவி செய் என்று எனது தந்தை கூறியதை இன்று வரை கடைபிடித்து வாழ்ந்து வருகிறேன்.

    எனது பள்ளிக் காலத்தில் என்றும் மறக்க முடியாத ஆசிரியர்கள் என நிறைய பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்தும் ஒவ்வொரு விசயங்களைக் கற்றுக்கொண்டேன். திரு. கனகராஜ் ஆசிரியர், திருமதி லீலாவதி ஆசிரியை, திருமதி அங்கம்மாள் ஆசிரியை ஆகியோர் எனது வாழ்நாளில் மறக்கமுடியாத ஆசிரியர்கள். திரு. சோமசுந்தரம் ஆசிரியர் அவர்கள் எனது வறுமை நிலைகண்டு எனக்கு இலவசமாக டியூசன் சொல்லிக்கொடுத்தார். எனது அப்பாவிற்கு வருமானம் குறைவாக இருந்தாலும் என்னை படிக்க வைப்பதில் ஆர்வமாகவே இருந்தார்.

    என்னையும் விட எனது படிப்பில் ஆர்வமாக இருந்த எனது அப்பா பள்ளிக்காலம் முடிவடைவதற்குள் காலமாகிவிட்டார். அவரது இறப்பு என்னால் தாங்க முடியாத அளவிற்கு துயரத்தைத் தந்தது. மேற்கொண்டு என்னால் படிக்கவும் முடியவில்லை. என் தாயார் அரவணைப்பில் இருந்தாலும் தொலைதூரக்கல்வியில் பி.ஏ. பயின்றேன். வறுமையின் பிடியில் இருந்தாலும் ஒருவர் உதவியையும் நாடாமல் எனது தந்தையின் வாக்கைக் கடைபிடித்தேன். அப்போதைய மாத வருமானம் ரூ. 16. பகுதி நேர வேலையாக மருந்துக் கடை ஒன்றில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் வேலை செய்தேன்.  1990ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் காகிதம் சுமக்கும் வேலைக்கு முதலில் சேர்ந்தேன்.  நேரங்களைச் சரியாக பிரித்து வேலைகளை காலை முதல் இரவு 12 மணி வரையிலும் இடைவிடாது செய்து வந்தேன்.

    எனக்கு துன்பம் வந்த நேரங்களில் பெரும் உதவிபுரிந்தவர்களில் முதன்மையானவர்களாக இருந்தவர்கள் டாக்டர் உஷா மேத்தா, கீர்த்திலால் காளிதாஸ், திரு. ஈழ். கண்ணன், ஐஅந ஆகியோர் முக்கியமானவர்கள். துன்பத்தில் இருந்த நேரங்களில் யார் ஆதரவுக்கரம் தருகிறார்களோ அவர்கள் நிச்சயம் நமது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதவர்கள் .

    இப்பொழுது படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோர் பேச்சைக் கேட்டு நடந்தாலே வாழ்க்கையில் எல்லாவிதமான வெற்றிகளையும் அடைந்துவிடுவார்கள். மாணவர்கள் முதலில் குடும்பநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். வறுமை எப்பொழுதும் நல்ல வழி காட்டும் என்பதை மாணவர்கள் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொருவரது வெற்றிக்கும் குடும்ப பின்னணியும், சமுதாய பின்னணியும் பிணைந்திருப்பது நிச்சயம். எனது வெற்றிக்கு என் அம்மா விஜயலட்சுமி மற்றும் துணைவியார் திருமதி. சுமதி அவர்கள் பெரிதும் துணையாக இருக்கிறார்கள். என்னுடைய மகன்கள் திரு. பிரகாஷ், திரு. சஞ்ஜிவ் இவர்கள் இருவரும் தற்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    2001ம் ஆண்டு டாக்டர் திரு. இன்னாசிமுத்து துணைவேந்தராக இருந்தபொழுது எனக்கு பணிநியமனம் கிடைத்தது. நான் இதுவரையிலும் ஆறு துணைவேந்தர்களின் கீழ் பணியாற்றி இருக்கிறேன். அவர்களிடமிருந்து கிடைத்த அனுபவங்கள் எனது பணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இப்பொழுது பணியாற்றும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் திரு. ஜேம்ஸ் பிச்சை அவர்களின் வழிகாட்டுதலில் தற்போதைய எனது பணி சீராகவும், சிறப்பாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், தினக்கூலி பணியாளர்கள் ஆகியோர் என் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு துணையாக இருக்கிறார்கள் என்பதில் பெரிதும் பெருமைப்படுகிறேன்.

    “யாரிடமும் எதையும் எதிர்பாராமல், தன்னை மட்டுமே நம்பினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்று தன்னம்பிக்கைக்கு உதாரணமான திரு. எஸ். அங்கண்ணன் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கிறது தன்னம்பிக்கை…

    இந்த மாத இதழை

    சாதிக்கலாம் வாங்க

    -ஜெட்லி

    நமது நாட்டில் தோன்றி பின்னர் ஜப்பான், சீனா போன்றநாடுகளில் பெரிதும் பரவிய கராத்தே, குங்பூ போன்றகலைகள் மீண்டும் நமது நாட்டில் தற்போது தான் வளர்ச்சி பெற்று வருகின்றது. தற்காப்பு கலைகளான இவை நமது நாட்டிலிருந்து தான் ஜப்பான், சீனா போன்றநாடுகளுக்கு அறிமுகமானது என்பது வரலாற்று உண்மை. அப்படிப்பட்ட இந்த கலை வெளிநாட்டினரிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றிருப்பது இதன் சிறப்பு.

    இச்சிறப்பு பெற்ற தற்காப்புக் கலைகள் உருவெடுத்த இந்த மண்ணில் இன்னும் நல்ல வளர்ச்சி நிலையை அடையவில்லை என்பது தான் கவலைப்பட வேண்டிய ஒன்று. எனினும் ஒருசிலர் மிகுந்த ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் இந்தக் கலையை முறையாகக் கற்று இந்தக் கலையால் அவர்களும், அவர்களால் இந்தக் கலையும் பெருமைப்படும் படியாக இக்கலையை வளர்த்து வருகிறார்கள். அந்த ஒருசிலரில் ஒருவர் தான் தீர்த்தமலை என்ற பெயர் கொண்ட ‘ஜெட்லி’. தற்காப்பு கலைகளில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார் இவர். இவரைப் பற்றிய அறிமுகம் இதோ…

    “என்னுடைய ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். அங்குள்ள அரசுப்பள்ளியில் தான் 10ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளி காலத்திலேயே விளையாட்டின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அப்பொழுது தான் ‘கராத்தே’ என்ற தற்காப்புக் கலையை கற்க ஆரம்பித்தேன். வீட்டில் வசதியின்மை காரணமாக 10ம் வகுப்பிற்கு மேல் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. பின்னர் ஓட்டப்பயிற்சி, தற்காப்புப் பயிற்சி போன்றவற்றில் எனது ஆர்வத்தைச் செலுத்தினேன். அப்பொழுது தான் கோவையில் திரு. சிவானந்தம் அவர்களிடம் 3 ஆண்டுகள் பயிற்சியை மேற்கொண்டேன். 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரையிலும் கராத்தே, குங்பூ, ஓட்டப்பந்தயம், ஜிம் போன்றபயிற்சிகளை மேற்கொண்டேன். எனது 18ம் வயதில் கருப்பு நிறபெல்ட்டை பெற்றேன்.

    அதன் பிறகுதான் இப்பயிற்சிகளில் சாதனைகள் செய்ய வேண்டும் என்றஎண்ணம் எனக்குத் தோன்றியது. நமது தேசத் தலைவர்களின் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றநாட்களில் மட்டுமே ஏதேனும் சில சாதனை முயற்சிகளைச் செய்து வந்தேன். 2000ம் ஆண்டில் 12 டன் பேருந்தை தலைமுடியில் கட்டி அரை கிலோ மீட்டர் தூரம் வரையில் இழுத்திருக்கிறேன்.அதன்பிறகு லாரியைக் கட்டி இழுத்தேன். இந்த சாதனைகள் பாராட்டு பெறும் அளவிலேயே இருந்தது. லிம்கா, கின்னஸ் போன்றபுத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு பெரிய அளவில் சாதனை படைக்க வேண்டும் என்றஎண்ணத்தை முயற்சிகளாக மேற்கொண்டேன். அந்த அளவிற்கு சாதனைகள் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய அறிவு கிடைக்கப் பெறாமல் இருந்தது. பின்னர் நட்பு வட்டம் பெருக பெருக இதைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

    அப்பொழுது தான் லிம்காவிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் நிறைய விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அந்த விதிமுறைகளின் படி சாதனை செய்தேன். 2003ம் ஆண்டில் லிம்காவில் என் பெயர் இடம் பெற்றது.

    இந்த 16 வருடத்தில் 100 சாதனைகளைச் செய்திருக்கிறேன். அதில் 50 சாதனைகள் இந்தியாவிலும், லிம்காவில் இடம்பெற்றசான்றிதழ்கள் இருக்கின்றன. என்னுடைய சாதனை எனக்கு மட்டும் பயன்தந்தால் போதாது. மற்றவர்களுக்கும் இந்த சாதனையில் பங்கு வேண்டும் என்று விரும்பி 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தேன். அதன்மூலம் அவர்கள் தேசிய மற்றும் உலக அளவில் சாதனை படைத்திருக்கிறார்கள்.

    2004ம் ஆண்டு சுனாமி வந்தபோது நிறைய பேர் இறந்தார்கள். அவர்களின் நினைவாக ஐந்து நாள் பெங்களூரிலிருந்து திருச்சி வரை மாரத்தான் ஓடி வந்தேன். இதற்காகவும் பாராட்டுகள் கிடைக்கப்பெற்றது. அதிக அளவில் இரத்த தான விழிப்புணர்வு, உலக அமைதி போன்றவற்றிற்காக பல இடங்களில் ஓடி இருக்கிறேன். 20 முறைகள் எனது மார்பின் மீது 2 டன் எடையுள்ள கார் ஏற்றி சாதனை முயற்சிகள் செய்திருக்கிறேன். சுட்டு விரலில் ‘குவாலிஸ்’ காரை 22 நிமிடத்தில் 200 மீட்டர் தூரம் இழுத்திருக்கிறேன். இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கிறது. என் கண் புருவத்தின் இடையில் ஒரு கிலோ எடையுள்ள 10 கம்பிகளை தூக்கி சாதனை படைத்திருக்கிறேன்.

    உலக நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு 3 முதல் 5 வயதுகளில் இயல்பாகவே 92 வகையான திறமைகள் இருக்கும். இதை பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அல்லது உறவினர்கள் அறிந்து அவர்களை ஊக்கம் கொடுத்து வந்தால் நிச்சயம் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சாதனையாளர்கள் உருவாவது உறுதி.

    என்னுடைய ஒரே நோக்கம் 2020க்குள் 100 உலக சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே. இந்தியாவில் இப்பொழுது 6 லட்சம் பேர் கராத்தே, குங்பூ போன்றபயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது வெறும் தற்காப்பு சார்ந்ததாக மட்டும் இல்லாமல் உடற்பயிற்சிகள் சார்ந்ததாகவும் இருக்கிறது. இதனால் உடற்பயிற்சியின் மீது இப்பொழுதுதான் ஆர்வம் வந்துள்ளது என்று நினைக்கிறேன். 2003ல் திருச்சியில் கலெக்டராக இருந்த திரு. மணிவாசகம் அவர்கள் தனது சொந்த செலவிலேயே 20 ஆயிரத்திற்கு உடற்பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து பெரிதும் ஊக்குவித்தார். கராத்தேவில் எனக்கென்று தனித்திறமை என்றால் தண்டால் என்னும் பயிற்சி செய்வேன். இதில் மட்டும் நான் ஐந்து முறைஉலக சாதனை படைத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் யோகாவில் நான்கு முறை உலக சாதனை படைத்துள்ளேன். கண்ணாடி டம்ளரைக் குப்புர சாய்த்து தலையில் ஒன்று, கைக்கு இரண்டு என்று இரண்டு கட்டை விரல்களை மட்டும் ஊன்றி 4 நிமிடம் தலைகீழாக நின்று உலக சாதனை படைத்திருக்கிறேன். தண்டால் ஒரு நிமிடத்திற்கு 160 வரை எடுப்பேன். முதுகில் 20 கிலோ எடை வைத்துக்கொண்டு 1 நிமிடத்திற்கு 38 தண்டால் எடுப்பேன். இந்த முயற்சி 2014ம் ஆண்டின் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

    என்னுடைய பயிற்சியாளர் ஜப்பானில் இருக்கிறார். இரண்டு வருடத்திற்கு ஒருமுறைமட்டுமே இந்தியாவிற்கு வருவார். அவரிடம் நான் 5 முறைஉலக சாதனை பெற்றதற்காக சான்றிதழ் வாங்கி இருக்கிறேன். இது என்னால் மறக்க முடியாத ஒன்றாகும். எனக்கு பயிற்சி கொடுத்தவர்களில் முக்கியமான பயிற்சியாளர் தென் இந்தியாவின் தற்காப்பு கலையின் தலைமைப் பயிற்சியாளர் திரு. கோகுல கிருஷ்ணமூர்த்தி. அவரிடம் வருடத்திற்கு 2 முறைபயிற்சிகளை கற்றுக்கொள்வேன். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு யோகா மற்றும் தற்காப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறேன்.

    என்னால் இயன்றஅளவில் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த தற்காப்புக் கலைகளால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க சாதனை முயற்சிகளை மேற்கொள்வேன். இந்த சாதனைகள் மூலம் பிறகுழந்தைகளும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம்.

    சிறு வயது முதலே பெற்றோர்கள் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுகளிலும் நன்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்களது எதிர்கால பணிகளுக்கும் விளையாட்டு சிறந்த விதத்தில் துணைபுரியும். என் எதிர்கால திட்டமாக, ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்து

    நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என்ற இவரின் இலட்சியப் பணிகள் மேலும் மேலும் சிறக்க, இவரது புகழ் பெருக, தன் எதிர்காலத் திட்டம் செம்மையுடனும், செழிப்புடனும் தொடர தன்னம்பிக்கை இதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    இந்த மாத இதழை

    மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்

    முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 

    டாக்டர் கோ. இராமநாதன் பல ஆண்டுகளாக என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார். கடின உழைப்பால் படித்து தன்னை முழுமையான மருத்துவராக தயாராக்கிக் கொண்டார். பிறகு தொடர்ந்த இடைவிடாத உழைப்பினால் முன்னேறி ஜி.ஆர். மருத்துவமனை என்ற ஒரு நல்ல மருத்துவ குழுமத்தை உருவாக்கினார்.

    டாக்டர் தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை அனைத்திலும் வெற்றி பெற்றார். “தன்னம்பிக்கை மாத இதழ்” தான் நடத்திவந்த மருத்துவ இதழான “இன்றைய மருத்துவம்” மூலமாக நல்ல விதைகளை சமுதாயத்திற்கு விதைத்து வந்தார். நோய் வராமல் தடுக்கக்கூடிய வழிமுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். ஆகவே அவர் வாழ்க்கையில் முழுமையான வெற்றி பெற்றார் என்றே நாம் கூறமுடியும். தன் நிறுவன பணியாளர்களுக்கு பயிற்சிகள் நடத்த என்னை பலமுறை அழைத்துள்ளார். பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர் நம்மை விட்டு செல்வதற்கு முன்பு, பல மாதங்களாகவே ஒவ்வொரு முறை நான் சந்தித்துப் பேசும் போதும் அவர் கூறியது, “சூரியன், குடும்பத்தையும், தொழிலையும் சரியாக உருவாக்கிவிட்டேன். இனி இருக்கும் அமைப்பை அவர்களாகவே நிர்வாகம் செய்து கொள்வார்கள். நான் சமுதாயத்திற்கு பல விசயங்களை செய்ய விருப்பப்படுகிறேன். அதற்காக திட்டங்களையும் தீட்டி வருகிறேன்”. சமூக அக்கறையுடன் இதயப்பூர்வமாக மேற்கண்டவற்றை சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இயற்கை அவரது உயிரைப் பறித்துக் கொண்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்த உலகத்திற்கு நிறைய நல்லவை செய்திருப்பார். அவரது இழப்பு ஒரு பேரிழப்பாகும்.

    அவரோடு பழகிய அனுபவத்தில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

    • அவர் நோயாளிகளை கவனிக்கும்போது அமைதியாக, முழுக்கவனத்துடன் நோயாளிகள் சொல்வதை பொறுமையாக கேட்பார். முழு அக்கறையுடன் நோயினை தீர்மானித்து வைத்தியம் செய்வார். ஆறுதல் வார்த்தைகளை கூறுவார். தைரியம் ஊட்டுவார். நோயாளிகள் அவரைப் பார்த்து முடித்தபின்பு மன நிறைவோடும், நம்பிக்கையோடும் வெளிவருவார்கள்.
    • நிறைய ஏழை மக்களுக்கு கட்டணம் பெறாமலே சேவை செய்துள்ளார். சில சமயங்களில் சில நேரங்களில் இருக்கும் பணத்தைக் பெற்றுக் கொண்டு மீதிப்பணத்தை ஊருக்குச் சென்று மெதுவாக அனுப்பவும் அனுமதிப்பார்.
    • உரிய சமயத்தில் மருந்துகளைவிட உணவுக்கட்டுப்பாடே நோய்களை தீர்க்கும் என்பதை நன்கு விளக்கிச் சொல்வார்.
    • எல்லோரிடமும் அன்பாகவும், எந்த நேரத்திலும், பொறுமையாக, மென்மையாக, இனிமையாக பேசுகின்றதன்மை, பெருந்தன்மையாக நடந்து கொள்கிற தன்மை, மற்றவர்களின் சிறந்த குணங்களை பாராட்டுகின்றநல்ல மனம், எப்பொழுதும் சிரித்த முகம்… இவையெல்லாம் அவருடைய சிறப்பு குணங்களாகும்.

    நேர ஒழுங்குத்தன்மையை அவர் கையாள்வார். அவரிடம் இதுபற்றி நான் கேட்டபோது, “ஆரம்பத்தில் மருத்துவராகப் பணியைத் துவங்கிய போது காலை முதல் இரவு வரை தொடர்ந்து உழைப்பு… உழைப்பு மட்டும் தான். இப்படிப் பல ஆண்டுகளைக் கழித்தேன். அதற்குப் பிறகு, உணவிலும், வாழ்க்கை முறையிலும் ஒழுங்கு செய்தேன். யோகா, தியானப் பயிற்சி, நடை பயிற்சி, எழுதுதல் என்று எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்கி திட்டமிட்டு வாழ்வினை ஒழுங்குபடுத்தியுள்ளேன்” என்று கூறினார்.

    அந்த நல்ல மனிதர், பலரின் இதயத்தில் இடம்பிடித்த மனிதர், இன்று நம்மிடம் இல்லை. இப்போது அவர் விட்டுச்சென்ற பணியை ஜி.ஆர். மருத்துவமனையின் நிறுவனமும், அவரது குடும்பமும் தொடர்ந்து செய்து வருகின்றது. அவரது ஆத்மா நிறைவு கொள்ள நம் முதலாமாண்டு பிரார்த்தனைகள்!

    இந்த மாத இதழை

    சான்றோர் சிந்தனை

    காபி குடிப்பதனால் ஞாபக சக்தி கூடுமா?

    காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதால் நமது ஞாபக சக்தி கூடும் என்ற இனிய செய்தியை இன்றைய தலைமுறை முழுமையாக நம்புகிறது.

    ஆவி பறக்கும் காபி ஒரு கையிலும் சூடு பறக்கும் செய்திகளைத் தாங்கிய செய்தித்தாள் ஒரு கையிலுமாக காலைப் பணியை ஆரம்பிக்கும் நிகழ்வு பல காலங்களாக நம் நாட்டு வழக்கமாகி விட்டது. நவீன செய்தி தொடர்பின் யுகத்திலும் இதில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை.

    எப்படியானாலும் நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய உற்சாகமும், ஊக்கமும், புத்துணர்ச்சியும் தரும் சக்தி இந்த காபிக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகி விட்டது.

    காபி குடிப்பதால் நினைவுகள் குறைந்து போகுமா? என்ற சந்தேகம் பலருக்கு இன்று வந்து விடுகிறது.

    வயோதிகத்தின் காரணமாகவும், வேறு உடல்நலக்குறைவின் காரணமாகவும் வயதானவர்களுக்கு நினைவுத்திறன் சற்று குறைந்து விடும்.

    இதைத் தவிர்க்க காபி அருந்துவதுதான் நிவாரணம் தரும் வழி என நிரூபிக்கப்பட்டுள்ளது. நினைவுத்திறனை அதிகரிக்கும் சக்தி காபிக்கு உண்டு என்பது இப்போதைய கண்டுபிடிப்பு.

    அமெரிக்காவில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் முதியோரின் நினைவுத்திறன் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    காபியில் அடங்கியுள்ள காஃபீன் என்றவேதிப்பொருள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின்  ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

    மேலும் காபி குடிப்பதால் அல்சைமர்,  பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் வாதம், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் கூறுகிறார்கள்.

    மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன்  குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    வயது கூடகூட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  ஞாபக சக்தி சில நேரங்களில் கூடுகிறது (அல்லது) சில நேரங்களில் குறைகிறது. அதிகாலையில் ஞாபக சக்தி அதிகமாகவும், நண்பகலுக்கு மேல் குறைந்தும் விடுகிறது. காபி உட்க்கொள்ளும் போது நினைவுத்திறன் மாறுபாடு முற்றிலுமாக நீக்கப்படுகிறது.

    மூளையின் செல்களைச் சோர்வடையச் செய்து நினைவுத்திறனைத் தாறுமாறாக்கும் ‘அல்#ல்மேர்ஸ்’ என்ற நோயைக் கூட காபி அருந்துவதால் தடுத்து நிறுத்த இயலும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நல்ல காபி ஒரு மந்திரக்கோல். மூளையினுடைய செயல்கள், வேலைகள், நினைவாற்றல் மற்றும் சக்தி அளவு ஆகியவற்றை காபி அதிகப்படுத்துகிறது. மிகப்பெரிய அளவிலே Anti Oxidents – யை உருவாக்குகிறது. நேர்மறையான ஆரோக்கிய விளைவுகளை உண்டாக்குகிறது. அது Chi-Gong பயிற்சிகளை போல உடலிலும் உள்ளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தசை நார்களை  வலுப்படுத்த உதவுகிறது.

    காபி உபயோகப்படுத்தும் முறை இந்தியாவிற்கு 17ம் நூற்றாண்டிலேயே வந்திருந்தாலும் கூட இந்தியாவின் தென்பகுதியில் 19ம் நூற்றாண்டில் தான் நன்கு அறிமுகமானது.

    • காபி அருந்துவதன் மூலம் உடலிலுள்ள சர்க்கரை அளவை சீர்படுத்தி இரண்டு வகையான சர்க்கரை நோய்கள் வராமல் கட்டுபடுத்தலாம்.
    • காபி ஒரு சில வகையான புற்று நோய்கள் குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
    • காபி மனஅழுத்தத்தை குறைக்கும் பானமாகும் (Good Anti – depressant drink). மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. ஓய்வைத் தருகிறது
    • காபி அருந்துவது இதயத்திற்கு நல்லது. காபியில் கலந்துள்ள டெனின் இதய தசைகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. சிறிய அளவிலே காபி அருந்துவது இதயத்தைப் பலப்படுத்துகிறது. எந்த விதமான எதிர்மறை விளைவையும் ஏற்படுத்துவதில்லை.
    • கல்லீரலுக்கும் உதவிகரமாக இருக்கிறது. கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம் வராமல் தடுக்கிறது.
    • ஆஸ்துமா நோய் வராமல் தடுக்கிறது. காபியில் கலந்துள்ள Coffeine சுவாசத்தை சீராக்கி ஆரோக்கியத்தைத் தருகிறது.
    • கண்ணுக்கு சக்தி அளிக்கிறது
    • வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது.
    • உடலின் செல் அமைப்புகளை விரிவுபடுத்துகிறது
    • இரத்திலுள்ள Serum Cholestrol – யை சமநிலைப்படுத்துகிறது.
    • சருமத்திலுள்ள சுருக்கங்களை குறைத்து சருமத்தை அழகுபடுத்துகிறது
    • சிறுநீரகத்தின் பணிகளை சீர்படுத்துகிறது
    • ஜுரண சக்திக்கு உதவுகிறது
    • நோய் தடுப்பாற்றல் சக்தியை பலப்படுத்துகிறது
    • சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது
    • உடலிலுள்ள உறுப்புகளின் வீக்கங்களை தடுக்கிறது
    • புத்துணர்ச்சி தருகிறது

    காபியை அதிகமாக அருந்துவதால் சில தீமைகளும் உண்டு

    • காபி மனிதனை அதற்கு அடிமையாக்குகிறது
    • அதிகமான மன அழுத்தத்தையும், நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
    • குடற்புண்ணை உண்டாக்குகிறது
    • திட உணவு எடுத்துக் கொள்ளாமல் காபி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

    நினைவுத்திறன் அதிகமாக வேண்டுமெனில் காபி அருந்துங்கள். இதனால் உடலில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கூடும். ஊக்கமும் நினைவுத்திறனும் அதிகமாகும். காபி அருந்துவது உடலுக்கு நலம் காக்கும் மற்றும் உள்ளத்துக்கு நலம் பயக்கும் அருமருந்தாக அமைந்துள்ளது. எனவே காபியை அளவாகக் குடித்து வளமாக வாழ்வோம்.

    இந்த மாத இதழை

    கவலை நம்மிடம் வராது

    நாம் நாள்தோறும் கால்மணிநேரம் கருத்தூன்றிக் கடினமாகக் கற்றால், எந்தக் கலையைக் கற்றுக்கொள்கிறோமோ, அந்தக் கலையில் பதினைந்து ஆண்டுகளில் பேரறிஞனாய் திகழ முடியும்” என்கிறார் சாக்ரடீஸ்.

    இப்படிப்பட்ட உயர்ந்த ஆற்றல் நம்மிடம் இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அறிஞராகக் கூடிய சக்தியும், ஆற்றலும் நம்மிடம் இருக்கும்பொழுது சாதாரண கவலையைவிட்டு ஒழிக்க முடியாதா? கவலையைக் கழற்றி எறிய முடியாதா என்ன? கட்டாயம் நம்மால் முடியும். குப்பையிலே கிடக்கின்ற நம்முடைய வாழ்வு கோபுரக் கலசமாவது எப்போது என்ற ஏக்கம் இனியும் வேண்டாம். நம்மால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும்.

    நம்முடைய மூளை பெரிய வயல். அதில் இயற்கை எண்ணங்கள் விதைகளைத் தூவுகிறது. பயிர் வளரும் அழகு சூழ்நிலையாகிய மண்ணையும், சிந்தனையாகிய எருவையும் பொறுத்தது.

    வயலில் நல்ல விளைச்சல் ஏற்பட நாம் தான் விதைக்க வேண்டும். விதைக்காவிட்டால் அறுவடை செய்ய முடியாது. நல்ல விதையை விதைத்தால் பயிர் வளர்ந்து பயன்கொடுக்கும். ஒன்றும் செய்யாமல் சோம்பி உட்கார்ந்துகொண்டு கீதை, குரான், பைபிள் இவற்றைப் படித்துக் கொண்டிருப்பதனால் மட்டும் எந்தவிதமான வெற்றியும் பெற்றுவிட முடியாது. காலையில் எழுந்ததும் இன்று நான் மகிழ்ச்சியுடன் இருக்கப் போகிறேன் என்று முடிவு எடுத்துக்கொண்டு அதனை பல தடவை மனதிற்குள் சொல்ல வேண்டும். அப்போது முகமலர்ச்சி ஏற்படும். மகிழ்ச்சியுடன் பணியாற்றினால் கவலைக்கு இடம் ஏது?

    உலகப் புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு கட்டுரையை ஆணித்தரமாக எழுதினார். இதை அறிந்த கல்லூரி நிர்வாகிகள் ஷெல்லியை கல்லூரியை விட்டு வெளியேற்றினார்கள். கல்லூரிப் படிப்பை இழந்ததற்கு ஷெல்லி கவலைப்படவில்லைய், தன்னுடைய இலட்சிய வாழ்வுக்குக் குறுக்கே நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிவதில் சற்றும் அவர் பின்வாங்கவில்லை. தனக்கு விருப்பமான கவிதைகளைத் தொடர்ந்து இயற்றி சாகாவரம் பெற்றார். செய்யும் பணியில் ஆர்வம் காட்டுவதில் அவர் நிறுத்தவே இல்லை. இறக்கும் வரையில் இன்புற கவிதைகளை இயற்றினார். எதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டால் கவலை எப்படி உள்ளே வரமுடியும்?

    இந்த உலகத்தைப் பார்க்க முடியாதவர்களும், நடக்க இயலாதவர்களும், பேச முடியாதவர்களும் இருக்கும்பொழுது, நமக்கு உலகத்தைப் பார்க்கவும், விரைவாக நடக்கவும், அன்பாகப் பேசவும் வரம் அருளப்பட்டு இருக்கிறது. இந்த வரத்தை நாம் பயன்படுத்திக் கொண்டால் கவலைக்கு இடம் ஏது? இந்த வரம் நமக்கு இருக்கும் பொழுது எதற்காகக் கவலைப்பட வேண்டும்?

    நம்முடைய சோகத்தைக் கால்களுக்கு அனுப்பி நடக்கும் சக்தியை இழக்க அனுமதி கொடுத்துவிடக் கூடாது. நம் மனம் துடிப்புடன் இருந்தால் கால்களும் துடிப்புடன் செயல்புரியும். இந்தத் துடிப்பு நம்மிடம் இருந்தால் செயலைச் செய்யும்போது எப்படி கவலை ஏற்பட முடியும்? உடல் முழுவதும் ரத்தத்துடன் ரத்தமாக உற்சாகத்தின் சாறு கலந்து ஓட வேண்டும்.  பாரதியாரிடம் ஒரு கிழவிக்கு அளவு கடந்த அன்பு இருந்தது. ஒருநாள் மாலைப் பொழுதில் பாரதியார் வந்து கொண்டிருந்த வண்டி அவளுடைய வீட்டின் முன் நின்றவுடன் கிழவி தான் சமைத்து வைத்திருந்த உணவைக் கொடுத்தாள்.

    பாரதியார் அதனைப் பெற்றுக்கொண்டு சாப்பிட்டபோது, அவை மிகவும் சுவையாக இருப்பதைக் கண்டு “அமிர்தம், அமிர்தம்” என்று கூறியபடி, “சரி, ஓட்டடா தேரை” என்றார்.

    அவர் தன்னை தேவன் என்றும், தான் அமர்ந்து இருப்பது தேர் என்றும் எண்ணினார். தன்னை மிகவும் உயர்வாக எண்ணி இருந்தபடியினால் தான் சாகாவரம் பெற்ற கவிதைகளை இயற்றினார். தன்னை நம்பினார். அந்த நம்பிக்கை நலமுடன் இருந்து வாழ்வாங்கு வாழ்ந்து வளமான கவிதைகளை உருவாக்கினார். அதனால்தான் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு மனிதனிடம் உள்ள ஆற்றல் தான் நம்மிடமும் உள்ளது. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் நாம் தான் இதனை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறோம். உணர்ந்து கொண்டால் கவலைப்பட மாட்டோம். தேவை இல்லாத கவலையைப் பிடித்துக் கொண்டு வந்து இருக்க மாட்டோம். கவலை வாழ்க்கைக்குத் தேவையே இல்லை என்பதை கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அது நம்மைவிட்டுப் போக விரும்பாமல் அதற்கு வேண்டிய எல்லா சௌகரியங்களையும் கொடுத்து வைத்ததே நாம் தான். நம்முடைய நினைவினால் ஏற்பட்ட விளைவுதானே அது.

    “தெளிவான உள்ளம், கடுமையான உடலுழைப்பு, பிறருக்காக பாடுபடும் பண்பு இவை தான் மகிழ்ச்சியின் ஆரம்பம்” என்கிறார் ஹெலன் கெல்லர். மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் கவலையைச் சேர்த்துக் கொள்வதனால் அது நம்மிடம் அடைக்கலமாகி நம்மை அடியோடு அழித்துவிட ஆரம்பாகி விடுகிறது. அதனுடைய தன்மை அப்படிப்பட்டது.

    நாம் யார்? பிராணியாகப் பிறக்காமல், தாவரமாக உருவாகாமல், மனிதனாகப் பிறந்திருக்கிறோம். அதற்கே நாம் பெருமைப்பட வேண்டும். கூன், குருடு, செவிடு, ஊமை போன்றஉடல் குறைஇல்லாமல் பிறந்து இருப்பதே அரிய பெரிய செயலாகும்.ஏன் தான் பிறந்தோமோ என்று பலமுறை சொல்லி அங்கலாய்த்து இருக்கிறோம் என்பது நம்முடைய மனதிற்கும் தெரியும். மனிதனாகப் பிறந்து இருப்பதற்கே மகிழ்ச்சியும், திருப்தியும் பெறவேண்டும்.

    நம்மைவிட உயர்ந்தது எதுவும் கிடையாது என்ற எண்ணம் மட்டும் நம்மிடம் உறுதியாக இருந்தால் கவலை நம் பக்கமே வராது.

    இந்த மாத இதழை

    விருப்பு வெறுப்பு விடுவோம்

    வாழ்க்கையில் எல்லா நல்லதும் நடக்க நல்லவராக இருப்பது மட்டும் போதாது. இன்னொன்றும் வேண்டும். அந்த இன்னொன்று என்ன? அதைச் சொல்லுங்கள் முதலில் என்று அவசரப்படும் முன், அந்த இன்னொன்றை சரியாகப் புரிந்து கொள்ள விருப்பு வெறுப்பை விடவேண்டும். “அய்யோ! விருப்பு வெறுப்பை விடுவதா? ஆளை விடு சாமி!” என்றாலும் உங்கள் வாழ்க்கையின் துன்பங்கள் உங்களை (ஆளை) விடாது..

    நம் முன்னோர்களும் பெற்றவர்களும் நம்மை நல்லவர்களாக இருக்க வலியுறுத்தினார்கள். தலைமுறைகள் பல தாண்டியும் நல்லவர்களாக இருந்தும் பலன் அடைந்தோமா? என்று பாருங்கள். அதற்காக நாம் கெட்டவர்களாக மாறச் சொல்லவில்லை. அப்படி கெட்டுப் போனால் உங்கள் சுதந்திரம் பறிபோய் மேலும் துன்பத்திற்கு ஆளாவீர்கள். ஆகவே நல்லவர்களாக இருங்கள். அத்துடன் வாழ்வில் சரியானதை தெரிவு செய்து செயல்படுங்கள். இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் பார்ப்போம்.

    நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவர் என்று வைத்துக் கொள்வோம். ஏன் உலகத்திலேயே நீங்கள் தான் மிக நல்லவர் என்று வைத்துக் கொள்வோம் (உண்மையில் அப்படித்தானே?) இவ்வளவு நல்லவரான நீங்கள் ஒருநாள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கொடிய விஷத்தைக் குடித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த விஷமோ குடித்தவுடன் கொல்லக்கூடியது. அப்படியாயின் நீங்கள் உலகத்திலேயே மிக நல்லவராக இருந்தாலும் உடன் உயிர் போவது நிச்சயம்தானே? ஆகவே நீங்கள் நல்லவராக இருப்பது மாத்திரம் போதாது, சரியானவராகவும் இருக்கவேண்டும், புரிகிறதா?

    சரி, சரியானது எது? சரியில்லாதது எது ? என்று எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு ஏதேனும் கருவி உள்ளதா? நிச்சயமாக ஒரு கருவி உண்டு. அந்தக் கருவி விருப்பு வெறுப்பு இல்லாத மனம் தான்.

    விருப்பு வெறுப்பை விடுவது பற்றி “மகான் வேதாத்திரி மகரிஷி’ அவர்கள் துறவு என்ற அளவுகோலைக் கொண்டு விளக்குகிறார். துறவு என்பது உண்மையில் எல்லாவற்றையும் விட்டு விட்டு விலகுவதோ, ஓடுவதோ அல்ல. துறவு என்பது து ‘ உறவு என்று பிரித்து பார்க்க வேண்டும்.  ‘து’ என்பது தூரம் என்பதன் குறுக்கம் ஆகும். ஆக, துறவு என்பது தூரம் ‘ உறவு என்ற பொருள் கொண்டது. இதைத் தெளிவுபடுத்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் “உறவினிலே கண்ட உண்மை நிலைத் தெளிவே துறவு” என்று கூறியுள்ளார். ஒவ்வொருவருடனும், ஒவ்வொரு பொருளுடனும் எந்த அளவுக்கு தூரம் மற்றும் உறவு கொள்ள வேண்டும் என்று புரிந்திருப்பதே துறவு ஆகும். ஆக, பொருளோடும், மக்களோடும் அளவு முறை தெரிந்த உறவே துறவாகக் கூறுகிறார். இந்த துறவு என்ற அளவுகோளைத்தான் விருப்பு வெறுப்பை விடுவதில் பின்பற்ற வேண்டும். வெறுப்பு என்பது துறக்கிறேன் என்று எல்லாவற்றையும் விட்டு ஓடிவிடுவது அல்ல. விருப்பு என்பது அனுபவிக்கின்றேன் என்று அளவுமுறை கடந்து ஒட்டி உறவாடுவதும் அல்ல. பட்டும் படாமல் வாழும் நுட்பமே (Technology) துறவு ஆகும்.

    நண்பர்களே! உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்பதற்காக குலோப்ஜாமூன்களை அளவுக்கு மீறி சாப்பிட்டால் துன்பம்தானே? அதேபோல் உங்களுக்குப் பிடிக்காது என்பதற்காக பாகற்காய் சாப்பிடாவிட்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்களுக்கு ஆளாகி துன்பப்படுவீர்கள் தானே?

    ஒரு விஷயத்தை விருப்பத்தோடு அணுகும்போது தப்பானதுகூட சரியாகத் தோன்றும். அதே விஷயத்தை வெறுப்போடு அணுகும்போது சரியானது கூட தப்பாகத் தோன்றும். அதுபோலவே, விருப்பமானவர்கள் சொல்வதெல்லாம் சரியாகவே இருக்கும் என்று நம்புவதும், நமக்கு விரோதமானவர்கள் சரியில்லாததைத்தான் செய்வார்கள், சொல்வார்கள் என்று நம்புவதும் சரியில்லைதானே?

    விருப்பு வெறுப்போடு எண்ணம், சொல், செயல் நிகழும்போது உணர்ச்சி நிலையில் அதிகம் செயல்படுவோம். அறிவு நிலையில் குறைந்து விடுவோம். ஆனால் விருப்பு வெறுப்பற்ற நிலையில் உணர்ச்சிவசம் இல்லாததால், அறிவு வசம் செயல்படுவோம். ஆக, நல்லவராகவும், அறிவால் வல்லவராகவும் இருந்தும் உணர்ச்சி வசத்தால் சரியில்லாததை தெரிவு செய்தால் துன்பம்தானே மிஞ்சும்?

    செயல்முறை: உங்களுக்கு ரொம்ப பிடித்தவரை வெறுத்துப் பாருங்கள். உங்கள் விரோதியை நேசித்துப் பாருங்கள். அபத்தமாகத் தானே தெரிகிறது? அது போலத்தான் உங்களுக்கு விருப்பமானவரை மட்டும் நேசிப்பதும், வேண்டாதவரை வெறுப்பதும் அபத்தமானது என்று புரிந்து கொள்ளுங்கள். இன்று ஒருநாள் உங்களுக்குப் பிடித்தமான உணவை தவிர்த்திருங்கள். பிடிக்காத உணவு வகையைச் சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குள் விருப்பு வெறுப்பு அற்ற சமநிலையை உணர்வீர்கள்.

    நல்லவராகவும் சரியானவராகவும் வாழப் பழகுங்கள்.

    “துறவு என்ற அளவுகோல் கொண்டு          

    விருப்பு வெறுப்பு விட்டால்,

    உறவு என்ற மேற்கோளுக்கு             

    உதாரணமாக நிலைக்க முடியும்!”

    இந்த மாத இதழை

    உரிமையும்! கடமையும்!!

    பஸ் பயணம்

    முன்பு பஸ்களில் பயணம் செய்யும்போது, நாம் அமர்ந்துள்ள இருக்கைக்குப் பின்புறமுள்ள இருக்கையில் அமர்ந்திருப்பவர், தன் கால்களைத் தூக்கி, நமது இருக்கையின் பின்புறம் பாதங்களை வைப்பார். அவர் பாதம் நம் உடலின் பின் பகுதியில் படும். இது உதைப்பது போலிருக்கும்.

    பின்புறம் திரும்பி, கோபமாகப் பார்த்து, “காலைக் கீழே போடு” என்று சப்தம் போட்டால், கீழே வைத்துக் கொள்வார். எனக்கு இதுபோல் பலமுறை நடந்துள்ளது. உங்களுக்கும் நடந்திருக்கலாம். இப்போது அதற்கான வாய்ப்பே இல்லை.

    ஏனென்றால் பஸ்களில் இருக்கை அமைக்கும் போதே, பின்புறம் முழுமையாக மூடிவிடுகின்றனர். பின்புறம் அமர்ந்துள்ளவர் பாதம் நம்மீது படாது. எனவே பிரச்னையில்லை.

    ரயில் பயணம்

    ரயில் பயணங்களில் இதைவிட மோசமாகப் பயணிகள், படித்தவர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடில்லாமல் நடந்து கொள்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் நீங்கள் வாசிப்பது.

    எதிரெதிர் இருக்கைகள். எதிர் இருக்கையில் உட்கார்ந்திருப்பவர், தன் எதிரிலுள்ள இருக்கை மீது (Seat & Berth) தன் கால்கள் இரண்டையும் நீட்டி வைப்பதுதான் கெட்ட பழக்கம். ஆட்கள் அமர்ந்திருக்கும்போதே, உள்ள இடைவெளியில் (Gap) எதிரிலுள்ளவர்கள் தன் காலை வைப்பார்கள். எழுந்து பாத்ரூம் வரை சென்று வருவதற்குள், தம் கால்களை நீட்டி வைத்துக்கொள்வார்கள்.

    அமரும் இருக்கையில் தம் கால் பாதங்களை வைத்து அசுத்தப்படுத்துகிறோமே என்ற உணர்வு கொஞ்சமும் அவர்களிடம் இருக்காது. ஒருமுறை எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை சப்தமும் போட்டேன். உட்காரும் இடத்தில் இப்படிக் காலை வைக்கலாமா? என்று.செவிடுபோல் கண்டும் காணாமல் இருந்துவிட்டார். ஒவ்வொருமுறை இரயில் பயணத்தின் போதும் இந்தக் காட்சிகள் நடந்து கொண்டே உள்ளன. அதிலும் குறிப்பாக மாணாக்கர்கள், இளைஞர்கள் – இவர்களிடம் இந்தக் கெட்ட குணம் அதிகமாக உள்ளது.

    இதன் உச்சகட்டம் சமீபத்தில் நான் கண்டது. அரக்கோணம் தனியார் பள்ளி பதினோராம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஐந்து பேரை ஓர் ஆசிரியர் திருப்பூருக்கு ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றார். அனைவருக்கும் பயணம் செய்ய இருக்கை கிடைக்கவில்லை. கிடைத்தவற்றில் மாணவ, மாணவிகள் முந்திச்சென்று உட்கார்ந்து கொண்டனர்.

    உடன்வந்த ஆசிரியர் தொலைவில் நின்று கொண்டார். ஒருசில சமயம் அருகில் வந்தபோதும், அமர்ந்திருந்தவர்கள் மரியாதையின்றியே அமர்ந்திருந்தனர். ஆசிரியர்களுக்கு மரியாதை தருவதைக் கடமையாக அல்லவா செய்ய வேண்டும் மாணவ சமுதாயம்? ஆனால், உரிமை என்றல்லவா இன்று செயல்படுகின்றனர். இதைப்பார்த்து மனம் பொறுக்காமல் ஈரோடு வந்தவுடன் அந்த மாணவர்களிடம் அவர்களது தவறை சுட்டிக் காட்டினேன். வருத்தம் தெரிவித்து, எழுந்து ஆசிரியருக்கு, அமர்வதற்கு இடம் கொடுத்தனர்.

    இளம் வயதிலேயே உரிமை, கடமை இவற்றைத் தெளிவாகச் சொல்வது சமுதாயத்தின் கடமை. சமுதாயம் என்பது வீட்டிலுள்ள பெற்றோர் மற்றும் பெரியவர்களும், கல்விக்கூடங்களிலுள்ள ஆசிரியர்களும் தான். ஆசிரியர்கள் சொல்வதைவிட பெற்றோர் இப்பொறுப்பை அடிப்படைக் கடமையாகச் செய்ய வேண்டும்.

    ஆனால் எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுகின்றனர். நல்ல பண்புகள், பழக்கங்களைச் சொல்லித் தருகின்றனர். அல்லது நல்ல உதாரணமாய் வாழ்ந்து காண்பிக்கின்றனர்.

    நீங்களே யோசியுங்கள்!

    இரயில் பயணத்தில் தலைமை அலுவலக (Head Office) EQ ஒதுக்கீட்டில் (எமர்ஜன்ஸி கோட்டா) இருக்கை பெற்ற ஒருவர், தாமதமாய் வந்து வேறு பெட்டியில் ஏறிக்கொண்டார். ஒரு மணி நேரமானது, குறிப்பிட்ட பயணி வரவில்லையென டிக்கெட் பரிசோதகர் (TTE) அந்த இருக்கையை வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டார்.

    அதன்பின்னும் அரை மணிநேரம் கழித்து, அந்த எண்ணுள்ள இருக்கைக்குப் பதிவு செய்தவர் வருகிறார். இப்போது TTE-யின் நிலை என்ன? அவர் கேட்டார். “ஏன் இவ்வளவு நேரம் வரவில்லை”. இவர் பதில், “ரயில் புறப்படும்போது அவசரமாய் ஏறினேன். வேறு பெட்டியில் ஏறி, இந்தப் பெட்டிக்கு இப்போதுதான் வந்தேன்”. வேடிக்கையாக இருந்தது. இதில் யாரைக் குற்றம் சொல்வது? அந்தப் பயணி ஒரு மாணவி. இளம் வயதிலேயே ஒரு சோம்பேறித்தனம் தான் வெளிப்பட்டது.

    இன்னொரு சம்பவம். குறிப்பிட்ட இருக்கையில், உரிய டிக்கெட்டுடன் பயணம் செய்பவர் அமர்ந்து கண் அயர்ந்துவிட்டார். TTE வந்தவர், அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. எழுப்பவும் இல்லை. சுமார் ஒரு மணிநேரம் கழித்து, வேறு ஒருவர் வந்து, இவரைத் தட்டி எழுப்பி, இந்த சீட் எனக்கு TTE வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கிறார். அமர்ந்திருந்தவர் பேந்தப் பேந்த விழித்தார். எதிரிலிருந்த நான் விபரம் கூறியவுடன் அவர் சொன்னார். TTE என்னிடம் டிக்கெட்டை சோதிக்காமல் சென்றது தவறல்லவா? தவறு தான். அவரது கடமையே, பயணிகளிடம் கேட்டு, சீட்டை வாங்கிச் சரிபார்ப்பது தான். இங்கு TTE கடமையிலிருந்து தவறிவிட்டார். இவர் சென்று டிக்கெட்டைக் காண்பித்து வந்தவுடன் பிரச்னை முடிந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது, உரிமையும் கடமையும் என்ன என்று மிகப்பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை.

    உரிமை

    நாம் ஒவ்வொருவரும் பிறந்தது முதல் வாழும் காலம் முடியுமட்டும், நம் வாழ்க்கைக்குத் தேவையான அவசியமான அனைத்தையும் காலாகாலத்தில் பெற்று, அனுபவிப்பதற்கான சுதந்திரமே உரிமை ஆகும். இந்த உரிமை நமக்கு கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை தான்.

    என்ன செய்வது? பொருளாதார ஏற்றத்தாழ்வு; ஜனநாயகம் என்ற பெயரில் அன்பளிப்புக்கு, இலவசத்துக்கு ஆசைப்பட்டு, வாக்கின் மகிமை தெரியாமல் ஓட்டளிக்கும் அப்பாவி மக்கள்; அதிகாரம் என்ற போர்வையில் மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை என ஒதுங்கிவிட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற இன்றைய நிலையில் உரிமை முழுமையாக இல்லை தான்.

    அதற்காக எதிர் சீட்டில் பயணிகள் அமர்ந்துள்ள போதும், எழுந்து திரும்பி வரும் இடைவேளையிலும், தம் பொன்னான பாதங்களை வைப்பதை உரிமை என்று செய்வது தவறே.

    கடமை

    நாம் வாழத் தேவையான அனைத்தையும் பெறுவதுடன் அவைகளை அளவுமுறையோடு அனுபவிப்பது இவற்றோடு, அறியாதவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் உதவி செய்வது கடமை தான்.

    நீங்கள் சிந்தியுங்கள். அவரவர் சம்பாத்தியத்துக்கேற்றவாறு தேவைகளைப் பெறுகிறோம். அவைகளை அளவுமுறைமீறாமலா உபயோகிக்கிறோம்? எல்லாவற்றிலும் முரண்படுகிறோமேÐ இன்றைக்கு நம் பாரம்பரிய உணவுப்பழக்கத்தைத் தொலைத்துவிட்டு, நோயாளிகளாக நடமாடிக் கொண்டிருப்பவர்கள் பலர்.

    புதுப்புதுக் கருவிகளை அதிக விலை கொடுத்து வாங்கி, அளவுக்கு மீறி உபயோகித்து, அதன் பாதிப்பால் கண், காது என்ற உறுப்பெல்லாம் கெட்டு, மின்விசிறி, ஏ.சி., என்ற நிலைக்கு அடிமையானவர்கள் பலர்.

    சிறு உதாரணம்

    இரு சக்கரவாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் (Helmet) அணிவது சட்டபூர்வமான கடமை. இன்று இரு சக்கரம் ஓட்டுபவர்களில் 10% கூட அணிவதில்லையே. இது தான் கடமையா?

    இதை அணிந்தால், தனக்குத்தான் பாதுகாப்பு என்பதை ஏன் பலர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். சட்டத்துக்கு கீழ்படிதல் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது தான் காரணம்.

    மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் நன்மையா செய்கிறது? உடல், வீடு எல்லாவற்றுக்கும் பாதிப்புதான். நாட்டுக்கு வருமானம். இந்த வருமானம் தேவையில்லை என்று தானே முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    உலகப் பொதுமறையாம் திருக்குறளில்,

    திருவள்ளுவர்

    களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

    குளித்தானத் தீந்துரீஇ யற்று – குறள் 929

    என்றார். நீருக்குள் ஒருவன் மூழ்கிவிட்டான். அவனைத் தேடுவதற்குத் தீவிளக்கு ஏந்திச் சென்றால் என்னாகும்? நீர் பட்டவுடனே நெருப்பு அணைந்துவிடும். அதுபோன்றதே மதுவால் வரும் வருவாயும், அதனால் பெறும் பயன்களும் என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய நாட்டில் நடந்த நிகழ்ச்சியைப் பாருங்களேன்.

    கோவையில் ஒரு பகுதியில் பள்ளி மற்றும் மக்கள் குடியிருக்கும் இடத்தில் புதிதாக அரசு அனுமதியுடன் துவங்கிய மதுக்கடையை அங்கு வசிக்கும் பெண்கள் பூட்டிவிட்டு அந்தக்கடையை உடனே அகற்றவேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் சாவியை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைத்ததாய் பத்திரிக்கைச் செய்தி.

    மேற்கு வங்கத்தில் மது போதையால் மதி மயங்கி குடும்பத்தை மறந்த கணவர்களது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து, மதுக்கடையை சமீபத்தில் அடித்து நொறுக்கியதும் செய்தியாக வந்ததை எத்தனை பேர் படித்தோம்? பெண்கள் திரண்டால் மட்டுமே மது எனும் அரக்கனை அடியோடு அகற்றமுடியும். இதுவல்லவா கடமை.

    கடமைகள், உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

    குழந்தைப் பருவத்தில் பசித்தால் உணவு, சோர்ந்தால் தூக்கம், வளர்ந்த மாணவப் பருவத்தில் உடலளவில் தற்சார்புடன் இருந்தாலும், சிந்தனையில், அறிவில் முதிர்ச்சி பெறாததால் பெற்றோரைச் சார்ந்தே உள்ளனர். எனவே நல்ல கீழ்படிதலான பண்புகளை அவசியம் கடமையாகச் செய்ய வேண்டும். வாலிபப் பருவத்தில் பொருளீட்டி, பெற்றோரிடம் தருவது கடமை. அத்தியாவசியச் செலவுக்குப் பணம் பெறுவது உரிமை. அதிகச் செலவு செய்வதும், பிறர் மனதில் மாயையான தோற்றத்தை உருவாக்குவதும் தவறே.  இல்லறத்தில், திருமண வாழ்வில், கணவன், மனைவி இருவரும் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்வதும் மனம் புண்படுமாறு பேசாமலிருப்பதுமே அவசியம்.

    பணியாளராக, தொழில் நிபுணராக, தாம் பார்க்கும் பணியை முழுமையான ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் செய்ய வேண்டும். அதனால் பெறும் ஊதியம் தான் உயர்ந்தது. முதியோராக, உலக மக்கள் அனைவருமே உடன் பிறவாச் சகோதர, சகோதரிகள் என்ற எண்ணத்துடன் உதவும் மனப்பான்மையுடன், ஒத்தும், உதவியும் வாழ வேண்டும். தனியாக ஒருவன் சப்தம் போட்டால் 2 காரணம் தான். ஒன்று பைத்தியம். மற்றது மதுபோதை. ஆனால் பலர் குழுவாக இணைந்து, மற்றவர்களுக்கு இடைஞ்சலாக காரியங்கள் செய்வது இன்று அதிகரித்து வருகிறது. இந்நிலை தவிர்க்கப் பட வேண்டும். நாம் பைத்தியமாகவும் வாழ வேண்டாம்; மற்றவர்களுக்கு இடைஞ்சலாகவும் வாழ வேண்டாம். இதுவே உரிமையுமாகும், கடமையுமாகும்.

    இந்த மாத இதழை

    பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்

    வளர்ந்து வரும் மாணவர்கள் சமுதாயத்தை ஓர் ஆக்கபூர்வமான சக்தியாக மாற்றுவதில் உயர்கல்வி பெரும்பங்கு வகிக்கின்றது. மாணவர்களின் ஆர்வத்திற்கும், திறமைகளுக்கும் ஏற்றாற்போல் உயர்கல்வி அமைவதில் அவர்களின் எதிர்கால வாழ்வு மிகச்சிறந்த நிலையை அடைவதுடன் பொன்னும் பொருளும் அதிக அளவில் வந்துசேரும்.

    அதற்கு மாறாக, ஒரு சில மாணவர்கள் தங்களின் எதிர்கால நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக மனதில் கொள்ளாமல் ஏனோதானோ என்றும், மற்றவர்களின் அறிவுரைப்படி கல்லூரியையும், அதன் படிப்பையும் தேர்வு செய்வதனால் பல மாணவர்கள் தங்களது உயர்கல்வியை முழுவதுமாக முடிக்காத நிலையில் தடுமாறி நிற்கின்றனர்.

    2014ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வை எழுதும் மாணவனுக்கு எதிர்காலம் வளமாக அமையுமா? இல்லையா என்பது 2014ம் ஆண்டுவாக்கில் தான் தெரியவரும். அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு நமது செயல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே சரியாக தேர்வு செய்தால் அது அவர்களின் நிலையை மேன்மையடையச் செய்வதுடன், தான் எடுத்தது சரியான உயர்கல்வி என்பதும் சரியாக தெரியவரும். 8.5 லட்சம் மாணவர்கள் இந்தாண்டு ப்ளஸ் டூ முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இவர்களில் எத்தனை மாணவர்கள் சரியான இலக்கை நோக்கி பயணிக்கப் போகின்றனர் என்பது அவரவர் தேர்ந்தெடுக்கும் உயர்கல்வியைப் பொறுத்தே அமையும்.

    பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் சரியான திட்டம் இல்லாமையால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் தடுமாறுவதும், குறைந்த மதிப்பெண்களுடன் தேர்வாகிய மாணவர்கள் சரியான உயர்கல்வி வழிகாட்டுதல் இல்லாமல் நல்லதொரு நிலையை அடையமுடியாமல் தவிப்பதும். ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாக நடந்துகொண்டு தான் உள்ளது.

    ப்ளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் வாழ்வில் மேன்மை அடைய மாட்டார்கள் என்று எண்ணுவது தவறு. சரியான திட்டமும், இடைவிடாத பயிற்சியும் பெற்றால் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களும் கூட சாதனையாளர்கள் ஆவார்கள் என்பது சாத்தியமே.

    வேலை கிடைக்கவில்லையா?

    உயர்கல்வி தேர்வில் பலவகையாக பிரிவுகள் இருந்தாலும் பொறியியல் துறைக்கென்று தனி இடம் உள்ளது. சமீப காலமாக பொறியியல் படித்தால் வேலை இல்லை என்ற தவறான எண்ணம் இருந்து வருகிறது. பொறியியல் படித்தவர்களில் பலருக்கு வேலை சரியாக அமைவதில்லை. உண்மையில் பொறியியல் துறையில் வேலை செய்யும் அளவிற்கு தகுந்த திறமையுள்ள பொறியாளர்களை பொறியியல் கல்லூரிகள் உருவாக்கவில்லை. உண்மையான ஆர்வம் உள்ள ஒவ்வொரு மாணவனும் பொறியியல் துறையில் சாதிக்கிறான் என்பது மறுக்கமுடியாதது. உதாரணமாக, பக்கத்து வீட்டுப் பையன் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்து வேலை இல்லாமல் இருக்கிறான் என்பதால் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்று எண்ணுவது தவறான கருத்து. அவனிடம் காரணம் கேட்டால், அவன் தேர்வு செய்தது சரியானதாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை சரியாக பயன்படுத்தினானா? வேலைக்குத் தேவையான தகுதிகளை திறம்பட செய்தானா? போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பினால் தான் அதற்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.

    பொறியியல் கல்வியின் உயர்வு

    தொழிற்கல்வியின் உயர்வு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த தமிழக அரசு ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாயை மாணவர்களின் பொறியியல் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

    குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்கம் மாணவர் பொறியியல் கல்வியைத் தேர்வு செய்தால் அவருடைய ஆண்டு கட்டணம் ரூ.20,000 மட்டுமே. இதுவே அதே மாணவன் கலை அறிவியல் பிரிவைத் தேர்வு செய்தால் ரூ.25,000 ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

    மூன்று ஆண்டுகள் கலை அறிவியல் படிப்புக் கல்விக்கட்டணத்தை விட நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்புக்கான கட்டணம் குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டு மட்டும் 77,000 மாணவர்கள் ஆண்டிற்கு ரூ.20,000 மட்டுமே செலுத்தி, இந்த முதல் பட்டதாரி கட்டணச் சலுகைகளில் மூலம் படித்துள்ளனர்.  பெரிய கம்பெனிகள் பல கலை அறிவியல் பாடங்களைக் காட்டிலும், பொறியியல் மாணவர்களின் மீது அதிக ஈடுபாடு காட்டுவதால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தர முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

    இரண்டாவது, பெரிய கல்விக் கட்டணச் சலுகையாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் முழு கல்விக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். இதனால் SC/ST மாணவர்கள் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கலாம். அரசு அளிக்கும் கல்விக் கட்டணமும், பொறியியல் நிறுவனங்கள் காட்டும் ஆர்வமும் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும். பொறியியல் துறையைத் தன் எதிர்கால உயர்கல்வியாக எடுக்க நினைக்கும் மாணவர்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு குழம்ப வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக என்னுடைய கருத்துப்படி நீ எந்தப் படிப்பை எடுத்து படித்தாய் என்பது முக்கியமல்ல. நீ அதை எப்படி படித்தாய் என்பதே முக்கியம். எந்தப் படிப்பையும் ஆர்வமுடன் படித்தால் அதற்கான பலன் கைமேல் காத்திருக்கும் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

    மாணவர் பணியே மகேசன் பணி எனக் கொண்டு செயல்பட்டு வரும் செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம் நேர்முகமாகவும், தொலைபேசி வழியாகவும் ஆலோசனைகள் பல தந்து கல்விக்கு வழிகாட்டி வருகிறது. இதில் பயன்பெற வேலை நாட்களில் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை 0424 2500073 என்ற எண்ணிற்கு அழைத்து ஆலோசனைகளைப் பெறலாம்.

    மருத்துவக்கல்வி …

    அடுத்த இதழில் மலரும்…

    இந்த மாத இதழை

    பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்

    இவ்வுலகில் நோயின்றி வாழ வேண்டுமானால் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது அவசியமாகும். நல்ல பழக்கவழக்கம் என்பது தன் சுத்தம் பேணிக் காப்பதேயாகும். ஆரோக்கியமாய் வாழுவதற்கு சுத்தமாய் இருப்பது அவசியமாகும். பொதுவாய் சுத்தமாய் இருத்தல் என்பது ஒருவர் தன் உடம்பை அதாவது தோல் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளான முடி, கால், கை, நகங்கள் மற்றும் வாயையும் சுத்தமாக வைத்திருப்பதாகும். குழந்தைப் பருவத்தில் எப்படி சுத்தம் செய்வது என்று அறியாமல் போகும் பொழுது பல துன்பங்கள், நோய்கள் வர நேருகிறது.

    சுத்தமாய் இருப்பதன் முக்கியத்துவம்

    – நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கு சுத்தமாய் இருத்தல் அவசியம்.

    – சுத்தமாகவும், நல்ல தோற்றத்துடன் இருப்பதே நமது கலாச்சாரம்.

    – தினமும் பல் துலக்குவதினால், பல் சொத்தை ஈறுகளில் ரத்தக் கசிவு, வாய் துர்நாற்றம் இல்லாமல் ஆரோக்கியமாய் இருக்க முடியும்.

    – தினமும் குளிப்பதனால் தோலின் ஆரோக்கியம் மூலம் உடம்பின் ஆரோக் கியம் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில் தோல் தான் நமது உடலில் தட்ப வெப்ப நிலையை சீராக்குகிறது மற்றும் நோய்க் கிரு மிகள் உடலினுள் செல்லாமல் தடுக்கிறது.

    – தினமும் தலையைச் சுத்தமாய் வைத்திருப்பதாலும், வாருவதாலும், வாரத்தில் இரண்டு முறையாவது தலைக்கு குளிப்பதனாலும், பேன், பொடுகு இல்லாமல் இருக்கலாம்.

    – நகங்களை வெட்டி சுத்தமாக வைப்பதால் வாய் மூலம் பரவும் நோய்களான மஞ்சள் காமாலை, டைபாய்டு, இளம் பிள்ளை வாதம், குடற்புழு நோய் பரவுதலைத் தவிர்க்க முடியும்.

    – கைகளை நன்கு கழுவுவதனால் மலம் – வாய் வழியாக பரவும் நோய்களைத் தவிர்க்க முடியும்.

    – ஒவ்வொரு முறையும் சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பதனால் உணவுத் துணுக்குகள் பற்களின் இடையில் தங்குவதைத் தடுக்க முடியும். ஏனென்றால் இவ்வுணவுத் துணுக்குகள் நோய்க் கிருமிகள் வளர்வதற்கு ஏதுவாகிறது.

    – வெளியில் சுகாதாரமின்றி ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி உண்ணாமல் இருப்பதன் மூலம் ஈக்கள் வழியாக நோய்கள் பரவுவதைத் தவிர்க்க முடிகிறது.

    – காலில் செருப்பு அணிவதன் மூலம் சிறு காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் கால் வழியாக குடற்புழு நோய் பரவுவதைத் தவிர்க்கலாம்.

    பல் துலக்கும் முறை

    – தினமும் பல் துலக்குவதினால் பல் சொத்தை ஈறுகளில் இரத்தக் கசிவு, வாய் துர்நாற்றம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

    – காலையில் எழுந்தவுடனும் இரவில் படுக்க போகும் முன்னும் பல் துலக்க வேண்டும்.

    – முதலில் பல் குச்சியை நனைக்கவும். பிறகு சிறிதளவு பற்பசையை எடுக்கவும்.

    – நனைத்தபின், முதலில் பல்லின் வெளிப்புறத்தை நன்கு அழுத்தி சுழற்சி முறையால் மேலும், கீழும் தேய்க்க வேண்டும்.

    – இதே மாதிரி பல்லின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும்.

    நகம் வெட்டும் முறை

    – இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை நகம் வெட்ட வேண்டும்.

    – நகம் வெட்டும் முன் ஒரு பேப்பரை விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது கைகளையோ கால்களையோ வைத்து நகவெட்டி மூலம் நகம் வெட்ட வேண்டும்.

    – நகம் வெட்டியவுடன் பேப்பரில் உள்ள நகத்துணுக்குகளை அப்படியே பேப்பருடன் சுற்றி குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

    – பின் நன்கு சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.

    கை கழுவுவது எப்போது

    – கழிப்பறை உபயோகித்த பின்

    – சாப்பிடப் போகும் முன்

    – செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பின்

    – மைதானத்தில் விளையாடியவுடன்

    – மூக்கை சிந்தியவுடன்

    கை கழுவும் முறை

    – முடிந்தவரை மிதமான வெந்நீரில், நன்றாக சோப்புப் போட்டு 30 வினாடி வரை கழுவ வேண்டும்.

    – முக்கியமாக விரல் இடுக்குகளிலும், நகத்தைச் சுற்றியும் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.

    – தேய்த்த பின் நன்கு தண்ணீர் ஊற்றி மேலிருந்து கீழ் நோக்கி கழுவ வேண்டும்.

    – கழுவிய பின் நல்ல சுத்தமான துணியால் கையைத் துடைக்க வேண்டும்.

    கால் பராமரிப்பு

    – எப்பொழுதும் செருப்பு அணிய வேண்டும். முக்கியமாக கழிப்பறைக்குச் செல்லும் போது.

    – இரவில் படுக்கப் போகும் முன் கால்களை கழுவிவிட்டு சுத்தமான துணியால் துடைத்தபின் படுக்க வேண்டும்.

    உணவு உண்ணும்போது கடைபிடிக்க வேண்டியவை

    – சாப்பிடப் போகும் முன் நன்கு கைகளை கழுவ வேண்டும்

    – சாப்பிடும் பொழுது தட்டைச் சுற்றி உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்.

    – கீழே விழுந்தவற்றையும், மீதமானவையும் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

    – உணவு உண்ட பின் கைகளையும் , வாயையும் நன்கு கழுவ வேண்டும்.

    – எப்போதும் கொதித்து ஆறவைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

    – வெளியில் சுகாதாரமின்றி விற்கும் ஈமொய்த்த பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது.

    செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை 

    1. காலையில் எழுந்தவுடனும் இரவில் படுக்கபோகும் முன்னும் பல் துலக்க வேண்டும் காலையில் சாப்பிட்டபின் பல் துலக்கக்கூடாது.

    2. தினமும் காலையில் குளிக்க வேண்டும் குளித்தபின் அதே ஆடையை அணியக்கூடாது.

    3. குளித்த பின் சுத்தமான உள்ளாடைகளை அணியவும் கீழே விழுந்த உணவுப் பொருட்களை  சாப்பிடக்கூடாது.

    4. நகத்தை வெட்டி எப்பொழுதும் சுத்தமாக வைக்க வேண்டும் நகத்தைப் பற்களால் கடிக்கக் கூடாது.

    5. கழிப்பறையை உபயோகித்த பின்னும், சாப்பிடபோகும் முன்னும் கை கழுவ வேண்டும், வெளியில் சுகாதாரமின்றி விற்கும் ஈ மொய்த்த தின்பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது.

    6. செருப்பு அணிந்து எங்கும் செல்ல வேண்டும். திறந்த வெளியில் மலம் கழித்தல் கூடாது.

    குழந்தைகள் சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். இதனால் நோயின்றி ஆரோக்கியமாய் வாழலாம். நல்ல பழக்க வழக்கங்களை பற்றிய அறிவுத்திறன் உள்ள குழந்தைகள் நிச்சயமாக மற்ற குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் இருக்க முடியும்.

    இந்த மாத இதழை

    வெற்றி உங்கள் கையில் – 4

    தோல்வி  தரும் பாடங்கள்

    வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒரு உண்மை நமக்குத் தெளிவாகப் புரியும்.

    ஒரே நாளில் ஒரு மாளிகையை எழுப்பிட முடியாது. ஆயிரம் நாட்களுக்கு மேலாக கல், செங்கல், மண், சிமெண்ட் போல பலவித கலவைகளால் உருவாக்கப்பட்டதுதான் மாளிகை. இதைப்போலவே ஒரே நாளில் வெற்றியை பெற்றுவிட முடியாது. ஒரு வெற்றிக்குப்பின்னால் எத்தனையோ விதமான அனுபவங்களும், தோல்விகளும், அவமானங்களும் மறைந்துகிடப்பதை வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.

    முதன்முதலில் தண்டவளாங்களைக் கண்டுபிடித்தார்கள். அதன்மீது புகைவண்டிகளை இயக்க முடியும் என்று பின்னர் அறிந்தார்கள். இரயில்வே தண்டவாளங்களின்மீது புகைவண்டி செல்லும்போது பல இடங்களில் தண்டவாளங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சூரிய ஒளி தண்டவாளத்தின் மீது படும்போது இரும்பால் செய்யப்பட்ட தண்டவாளங்கள் பாதிப்படைந்தன. மிகப்பெரிய இரயில் போக்குவரத்துக்கு சோதனை அந்தக்காலத்தில் “தண்டவாளம்” வழியாக வந்தது.

    இரயில்வே என்ஜினியர்கள் அதிர்ந்து போனார்கள். தண்டவாள விரிசலை சரிசெய்யும் விதத்தில், தண்டவாளங்கள் மீண்டும் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டது. அதன்பின்னர் தான் ரயில் போக்குவரத்து வளர்ச்சி அடைந்தது.

    தோல்வியை சந்திக்கும்போதே, தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்குபவர்கள் வெற்றியின் ரகசியத்தை அறிந்துகொள்கிறார்கள்.

    “தவறுகள் செய்வதும், அந்தத் தவறுகளை எதிர்காலத்தில் தவிர்ப்பது பற்றி சிந்திப்பதும்” ‘கற்றல்’ (Learning) என்பதன் முக்கிய குறிக்கோளாக விளங்குகிறது.

    சைக்கிள் ஓட்டப்பழகும்போது எத்தனை முறைகீழே விழுந்திருக்கும் வாய்ப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கும்.

    “விழுவதெல்லாம் அழுவதற்கு அல்ல. எழுவதற்கே” என்னும் கருத்தை நெஞ்சில் நிறுத்திக் கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

    ஒவ்வொரு அனுபவங்களும் நமக்குப் பல பாடங்களை உணர்த்துகின்றன.

    தனது தந்தையிடம் வந்தான் மகன்.

    “அப்பா… எனது வாழ்க்கை மிகவும் துன்பமயமாகிவிட்டது. எப்படித்தான் இந்த உலகில் வாழப்போகிறேனோ? எனக்குப் பயமாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் ஒரே சண்டையும் சச்சரவும்தான் என் வாழ்க்கையில் முக்கியமாகிவிட்டது. எல்லா நேரமும் குழப்ப மனதோடு நான் இருக்கிறேன். ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனை வந்துவிடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மகன் வருத்தப்பட்டு தனது தந்தையிடம் சொன்னான். மகனுக்கு வயது 21. அவனது தந்தை மிகப்பெரிய சமையல்காரராக இருந்தார். எனவே மகனின் வருத்தத்தைக் கேட்ட தந்தை, அவனை தான் பணியாற்றும் சமையல் அறைக்கு வரச்சொல்லி அழைத்துச்சென்றார். 3 பானைகளை கையில் எடுத்துக் கொண்டார். பின்னர், அந்தப் பானைகளில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து தனித்தனியாக சூடேற்றினார்.

    முதல் பானையில் உருளைக்கிழங்கை போட்டார். இரண்டாவது பானையினுள் முட்டைகளை வைத்தார். மூன்றாவது பானைக்குள் காப்பிக் கொட்டைகளைப் போட்டார். அதன்பின்னர் தனது மகனை அருகில் அழைத்து உட்காரச்சொன்னார். அடுப்பில் இருந்த பானைகள் நன்றாகக் கொதித்தன.

    மகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    “என்னப்பா செய்கிறீர்கள். சும்மா காத்திருந்து, அடுப்பு எரிவதை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா” என்று கேட்டான் மகன்.

    சுமார் 20 நிமிடங்கள் கழிந்தது. அதன்பின்னர் அடுப்பில் எரியும் தீயை அணைத்துக்கொண்டார். பின்னர் முதலில், முதல் பானையில் இருந்த உருளைக்கிழங்குகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்தார். அதன்பின்னர் அடுத்த பானையில் இருந்த முட்டைகளை எடுத்து இன்னொரு கின்னத்தில் வைத்தார். மூன்றாவது பானையிலிருந்து காபியை வெளியே ஒரு கப்பில் ஊற்றினார். பின்னர் தனது மகனை அழைத்து, “இந்த 3 கின்னத்தைப் பார்த்ததும் உனக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்டார்.

    உடனே அவரது மகன் “உருளைக்கிழங்கு, முட்டை, காப்பிபொடி” என்றான்.

    “நன்றாக கூர்ந்து கவனித்துப்பார்” என்று தனது மகனுக்கு அறிவுரை சொன்னார்.

    பின்னர் உருளைக்கிழங்கை கையில் எடுத்து காண்பித்தார். அது மிகவும் மிருதுவாக இருந்தது. பிறகு, முட்டை தோட்டை உடைத்து உள்ளே இருந்த முட்டையை வெளியே எடுத்தார். அந்த முட்டை நன்றாக அவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், காப்பி கின்னத்தை எடுத்து தன் மகனிடம் கொடுத்தார். காப்பியின் மனம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

    “அப்பா நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று ஆர்வம் அதிகரிக்க கேட்டான்?” மகன்.

    தனது மகனுக்கு விளக்கம் தந்தார் அப்பா.

    “மகனே உருளைக்கிழங்குகளும், முட்டைகளும், காப்பிக் கொட்டைகளும் ஒரே விதமான பிரச்சனையைத்தான் சந்தித்தன. அதாவது இந்த மூன்றையும் ஒரே நேரத்தில், ஒரே அளவில் தீயின் வெப்பம் அவைகளை தாக்கியது. இருந்தபோதும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக அந்த வெப்பத்தை சந்தித்தன. மிகவும் கடினமாக இருந்த உருளைக்கிழங்கு சுடுநீரில் அவிக்கப்பட்டதால் மிகவும் மிருதுவாகிவிட்டது. முட்டை ஓட்டுக்குள் நீர் வடிவத்தில் இருக்கும் முட்டை சுடுநீரால் கடினமான பொருளாகிவிட்டது. தோடு உடைக்கப்பட்டபின்பும் அதன் கடினத்தன்மை அதிகமாகவே இருக்கிறது. இருந்தபோதும் காப்பி கொட்டை தன்னுடைய தனித்தன்மையோடு விளங்குகிறது. சுடுதண்ணீரின் வெப்பம் பலமாக தாக்கியதும் அந்த நீரையே மாற்றி சுவையுள்ளதாகவும், புதியதாகவும் உருவாக்கி தன்னை கரைத்துக் கொண்டது” என்றார் அப்பா.

    இதில் “நீ எந்த ரகம்”? உருளைக்கிழங்கா? முட்டையா? காப்பி கொட்டையா? என்று அப்பா மகனிடம் கேட்டபோது மகன் திகைத்து நின்றான்.

    அப்பா மீண்டும் தொடர்ந்தார்.

    “தோல்வி வருகின்ற பொழுது சிலர் உருளைக்கிழங்கைப்போல உருக்குலைந்து போகிறார்கள். தங்களின் தனித்தன்மையை இழந்துவிடுகிறார்கள். வேறுசிலர் தோல்வியை சந்திக்கின்ற பொழுது தங்களின் இளகிய மனதை கடினமாக்கி முரட்டுத்தனமாக மாறிவிடுகிறார்கள். ஆனால் காப்பி கொட்டை தோல்வி வருகின்றபொழுது அந்தத் தோல்வியை ஒரு பிரச்சனையாக மாற்றாமல் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு சுடுநீரூடன் ஒன்றாகக் கலந்து சுவையான காப்பியாக மாறி பிறருக்கு பயன்படுகிறது. இதைப்போலத்தான் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு அந்த மாற்றத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றம் ஏற்படுத்துவதுதான் வெற்றியாளர்களின் நோக்கமாக அமையும்” என்றார் அப்பா.

    இதிலிருந்து ஒரு உண்மை நமக்குப் புலப்படுகிறது. நாள்தோறும் பல பிரச்சனைகள் நம்மைத் தாக்குகின்றன. சில தோல்விகள் நம்மை சுற்றி வளைத்து திக்குமுக்காடச் செய்துவிடுகின்றன. கதறி அழும் சம்பவங்களும், தோல்வி வடிவத்தில் வந்து தொல்லை கொடுக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் சூழல் ஒன்றாகவே அமைகிறது. இருந்தபோதும் அந்த சூழலை எதிர்கொள்வது எப்படி? என்று புரிந்துகொண்டவர்கள் எந்தத் தோல்வியையும் வெற்றியாய் மாற்றிவிடுகிறார்கள்.

    தோல்வி என்பது நிரந்தரமல்ல. வாழ்க்கையில் நடக்கும் சின்னஞ்சிறு தவறுகளால் நடக்கும் பின்னடைவுதான் தோல்வி. தோல்வி ஏற்பட்டவுடன் அந்தத் தோல்வியை பற்றி சிந்திந்து அதற்கான காரணங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். தோல்வியை உருவாக்கும் காரணிகளை அறிந்துகொண்டு அவற்றை நீக்க முயற்சி செய்யவேண்டும். தோல்விக்கு காரணமாக அமையும் மனிதர்களை சந்திப்பதை தவிர்க்கலாம். தோல்விகள் ஏற்படும் சூழல் உருவானால் அதனை தள்ளிப்போடும் நிலையை எப்படி உருவாக்க வேண்டும்? என்றும் சிந்திக்கலாம். மொத்தத்தில் தோல்வி நெருங்கிறது என்றால் அதனை எதிர்கொள்வதற்கும், மாற்று வழியில் சந்திப்பதற்கும் மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் இருந்தால் வெற்றியின் தூரம் வெகுதொலைவில் இல்லை.

    இந்த மாத இதழை