Dr. K. K.கிருஷ்ணமூர்த்தி
ISCOP (Indian Society for Certification of organic products) தலைவர்.
ACCOPSA(Agricultural College Coimbatore Past Students’ Association) தலைவர்.
Homeopathist, கோவை.
குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் காட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குண இணையவும்
அமைபவன் நூல் உரை ஆசிரியனே…
எனும் நூற்பாவில் நன்னூலார் நல்லாசிரியர் பற்றி எட்டு வகை பண்புநலன்களை வரிசைப்படுத்திக்கூறுவர். இவ்வரிசையில் சற்றும் வழித்தவறாதவர்.
இறை நம்பிக்கையோடு தன்னம்பிக்கையால் இன்று தரணியெங்கும் தனிமுத்திரை பதித்துவருபவர்.
வேளாண் அறிவியல் துறையில் ஆழ வேரூன்றியவர். மண்ணியல் துறையில் மகத்தான சாதனை புரிந்தவர்.
இறைவா இறைவா என்று இருந்தால் எப்போதும் நிறைவாய் நிறைவாய் இருப்பாய் என்பது தான் இவரின் தாரக மந்திரம்.
பழகுவதற்கு எளியவர், பண்பில் பெரியவர், எழுத்தாளர், பேச்சாளர், வேளாண் ஞானி, ஹோமியோபதி மருத்துவர், என பன்முகத்திறமை கொண்ட பேராசிரியர், ISCOP மற்றும் ACCOPSA ஆகியவற்றின் தலைவர், KKK என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் DR. K. K.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.
கே: உங்களின் பிறப்பும் இளமைக் காலத்தைப் பற்றியும் சொல்லுங்கள்?
பழைய சேலம் மாவட்டம் இன்றைய நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொன்னையார் என்னும் குக்கிராமம். அப்பா காளியண்ணன் கவுண்டர் மிராசுதாரர் என்று அழைப்பார்கள். விவசாயப் பின்னணி உடைய குடும்பம். எங்களுக்குச் சொந்தமாக நிறைய விளை நிலங்கள் இருந்தன. காலப்போக்கில் எங்களால் விவசாயத்தைத் தொடர்ந்து கவனிக்க முடியவில்லை. இதனால் எங்கள் பண்ணையில் வேலை பார்த்தவர்களுக்கே நிலத்தை விற்றுவிட்டோம். என்னுடைய பள்ளிக்கல்வி என்று பார்த்தால் திருச்செங்கோடு அரசுப்பள்ளியில் தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன். ஆசிரியர்களிடத்தில் நற்பெயர் கொண்ட மாணவன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் மேற்படிப்பு படிக்கச் சென்று விட்டேன். என்னுடைய கனவு ஒரு மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த ஆண்டு மருத்துவத்துறையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் வேளாண் கல்லூரியில் சேரலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.
கே: சொந்த ஊரிலிருந்து கோவை வந்தது குறித்து சொல்லுங்கள்?
மருத்துவராக வேண்டும் என்ற கனவு சில காரணங்களால் தடைப்பட்டது. இதனால் கோவையிலுள்ள வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி (அக்ரி) பட்டத்திற்கு விண்ணப்பித்தேன்.அதன் படி எனக்கு அங்கு பயில அனுமதி கிடைத்தது. பி.எஸ்.சி யில் சேர்ந்தேன். ஆனாலும் மருத்துவராகவில்லையே என்று எனக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு ஆதங்கம் இருந்தது. ஒரு வருடம் பி.எஸ்.சி முடித்தவுடன் அடுத்த ஆண்டு மருத்துவதுறைக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த சில நாட்களில் எனக்கு பயில இடம் கிடைத்தது. ஆனால் எனக்கு இளம் வயதிலிருந்தே இறை நம்பிக்கை அதிகளவில் இருந்ததால் பி.எஸ்சி(அக்ரி)யை வெற்றிகரமாக முடித்தேன். அக்காலத்தில் பி.எஸ்.சி முடித்தால் மேற்படிப்பு படிக்க இங்கு இடம் இல்லை. ஒன்று டெல்லி செல்ல வேண்டும் இல்லையென்றால் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே கல்லூரியில் அதே ஆண்டு எம்.எஸ்.சி பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார்கள். அப்போதும் நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். மீண்டும் அதே கல்லூரியில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புப் பெற்று வெற்றிகரமாக முடித்தேன்.
கே: மண்ணியல் துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணத்தைச் சொல்லுங்கள்?
வேளாண் துறையில் பல துறைகள் இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த துறை மண்ணியல் துறை ஆகும். இதனால் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கும் மண்ணியல் துறையில் தான் ஆய்வு செய்தேன். இப்பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் நான்தான். அப்போது என்னுடன் படித்த நண்பர்கள் எம்எஸ்சி முடித்தவுடன் DAO பணியில் சேர்ந்து விட்டார்கள். இப்பணியில் பணியாற்றும் போது அவர்களுக்குத் தனி வாகனம் தரப்பட்டது மற்றும் பச்சை மையில் கையெழுத்து இடலாம் அந்தளவிற்கு அது (GAZETTED OFFICER) உயர்ந்த பதவி தான். அவர்கள் என்னைப் பார்த்து இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறாயா என்று ஏளனமாகக் கேட்பார்கள். என்னுடைய ஓரே ஆசை எப்படியும் முனைவர் பட்டம் (Ph.D) முடிக்க வேண்டும் என்பதுதான்.
கே: நீங்கள் பணியாற்றிய முதல் வேலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
பி.எச்.டி முடித்தவுடன் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். அரசு வேளாண் வேதியியலார் (Govt Agri Chemist) என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய 32 ஆம் வயதில் பேராசிரியர் பதவி வகித்தேன். 1971 ஆம் ஆண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகமாக உருவானது. அப்போது அப்பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியர் நான். என்னுடன் என்னுடைய குரு டாக்டர். மரியகுழந்தை மற்றும் ஜான் துரைராஜ் அவர்களும் பணியாற்றினார்கள். பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு மதுரைக்குப் பணிமாறுதல் கிடைத்தது. அடுத்த நாளே செல்ல வேண்டும் என்று என்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் செய்ய பேராசிரியர் இல்லாமல் போய்விடுமே என்று எங்கள் கல்லூரி முதல்வர் நினைத்தார். இதனால் என்னை அழைத்து மதுரைக்குச் செல்ல வேண்டாம். இங்கேயே பணியாற்றுங்கள் என்று சொல்லிவிட்டார். நாட்கள் சென்றன அடுத்தடுத்து சில பதவி உயர்வுகள், அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வந்தேன்.
கே: மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நீங்கள் முதல்வராய் பொறுப்பேற்ற பின் கொண்டு வந்த திட்டங்கள் பற்றி?
மதுரை வேளாண் கல்லூரி அப்போது மாணவர்களின் சண்டைக்கும் சச்சரவுக்கும் மிகவும் பெயரெடுத்த கல்லூரியாக இருந்தது. அப்போது ஓரு நாள் திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பில் சார் கல்லூரி முழுவதும் ஒரே பிரச்சனையாக இருக்கிறது நீங்கள் உடனே வாருங்கள் என்று சொன்னார்கள். நானும் விரைந்து சென்று பார்க்கும் பொழுது கல்லூரியில் நிறையப் பொருட்கள் சேதாரமாகி இருப்பதைப் பார்த்தேன். காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனார்கள் அவர்களுக்கு ‘உங்களால் கல்லூரி பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கிறது, இதனால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் தான் மீண்டும் இக்கல்லூரி திறக்கப்படும் என்று கடிதம் அனுப்பினேன். நான் குறிப்பிட்ட நாளுக்குள் அனைத்து மாணவர்களும் முழுமையாக பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். பணியில் சேர்ந்த முதல் நாளே, “இத்தனை நாட்கள் கல்லூரி எப்படியிருந்தது என்று எனக்குக் கவலையில்லை, இனிமேல் இக்கல்லூரி கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையதாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் அழைத்துக் கட்டளையிட்டேன். அப்போதே நான் கண்டிப்பான ஆசிரியர் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
உங்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனுக்குடன் என்னிடம் நேரடியாகத் தெரிவியுங்கள் என்று சொல்லியிருந்தேன். நிறைய மாணவர்கள் முதல்வரை சந்தித்துப் பேசுவதற்கு அச்சம் கொள்வார்கள். ஆனால் அப்போது சைலேந்திரபாபு என்ற இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்னைப் பார்க்க அனுமதி கேட்டிருந்தார். உள்ளே வந்தவுடன் மாணவர்கள் விடுதியில் சில பிரச்சனைகள் இருக்கிறது, அதை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று விடுதிக்குச் சென்று பார்த்தேன். அதை உடனே நிவர்த்தி செய்து வைத்தேன். அவர்தான் தற்போது காவல் துறையில் பணியாற்றும் Dr.சி.சைலேந்திரபாபு IPS, DGP, ரெயில்வே துறை, தமிழ்நாடு அவர்கள்.
அதே போல் ஒரு நாள் கல்லூரியின் கடைநிலை ஊழியர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் ஐயா நாம் கல்லூரியின் நுழைவாயிலில் உள்ள பவுன்டன்(Fountain) உடைந்து விட்டது. அதை சரிசெய்யுங்கள் என்று என்னிடம் கூறினார். அதையும் உடனே நிவர்த்தி செய்தேன்.
கல்லூரியில் முதல்வர் பொறுப்பை ஏற்ற முதல் நாளே ஏற்கனவே திட்டமிட்டபடி வட இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா போன்ற இடங்களுக்கு வேளாண் அறிவியல் கருத்தரங்களில் ஒரு வாரத்திற்கு போய் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அங்கிருந்து திரும்பி கோவை வந்தேன்.
மேலும் கல்லூரியில் விளையும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றை வெளியில் கொடுப்பதை விட, விடுதி மாணவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன்.
கே: முத்தமிழ் விழா தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?
நான் எது செய்தாலும் மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தால் மட்டுமே அதை நடை முறைப் படுத்துவேன். அப்படிக் கொண்டு வந்த பல திட்டங்கள் ஏராளமாக இன்றளவிலும் அக்கல்லூரிரியில் நினைவு கூறத் தக்க வகையில் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த முத்தமிழ்விழா முதல்நாள் தொடக்க விழாவில் ஒரு மாணவன் என்னை அறிமுகம் செய்து வைக்கும் பொழுது KKK என்பது அவரின் பெயர் சுருக்கம் மட்டுமல்ல கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்பதின் சுருக்கம் என்று சொன்னார். மேலும் நீங்கள் வெண்மைப்புரட்சி, நீலப்புரட்சி, பசுமைப்புரட்சி போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள், இந்தக் கல்லூரியில் முதல்வர் அய்யா செய்வதே அன்புப் புரட்சி என்று கூறி என்னை நெகிழ வைத்தார்கள்.
கே: நீங்கள் எழுதிய நூல்கள் பற்றி?
எண்ணங்களும் வாழ்க்கையும், அமைதியைத் தேடி, உலக மதங்களும் உன்னத நோக்கும், வாழ்வில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை, Organic Agriculture for Sustainability போன்றவை.
கே: பணி ஓய்வுக்குப்பின் ISCOP தொடங்கலாம் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?
மனமே சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கிறது. ஓய்வெடுத்தால் மனமும் உடலும் துருப்பிடித்துவிடும். மேலும் நீங்கள் குளங்குட்டையாகவும் இருப்பதை விட நதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். நதி ஓடும் இடமெல்லாம் பசுமையைத் தந்து விட்டுச் செல்லும். இறுதியாகக் கடலில் கலக்கும், அதுபோலத் தான் மனிதனும் இருக்கும் வரை மற்றவர்களுக்கு உதவி புரிந்து இறுதியாக இறைவனை அடையவேண்டும்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. நான் கற்ற கல்வி மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணித் தொடங்கியது தான் இந்த ISCOP நிறுவனம்.[hide]
கே: ISCOP நிறுவனத்தின் நோக்கங்கள் என்ன?
இஸ்காப் நிறுவனம் இயற்கை வழிச் சான்றிதழ் வழங்குகிறது. இதற்குரிய ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இஸ்காப்பில் சான்றிதழ் மட்டுமே தர முடியும்.
இந்நிறுவனத்தில் நான்கு விதமாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அவை
- பயிர் உற்பத்தி செய்தல் (CROP PRODUCTION)
- பதனிடுதல் சான்றிதழ் (PROCESSING)
- கணக்கிடுதல் சான்றிதழ் (TRANSACTION)
- விற்பனை சான்றிதழ்( TRADE)
உதாரணமாக நீங்கள் நாளை ஆர்கானிக் (ORGANIC) விவசாயம் செய்கிறீர்கள் என்றால் இன்றே நீங்கள் இராசயன இடுபொருட்கள் எதுவும் பயன்படுத்தக்கூடாது. இயற்கை இடு பொருட்ககளைத் தான் இடவேண்டும்.
ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு என்று எங்களிடம் ஒரு விண்ணப்பம் இருக்கிறது. அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்கு சொந்தமாக நிலம் எவ்வளவு இருக்கிறது. பட்டா, சிட்டா , நிலம் வரைப்படம் போன்றவற்றை அதில் குறிப்பிட வேண்டும். இதைப் போன்ற பல தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும் ஒரு விரிவான படிவத்தை அவர்கள் நிரப்பி எங்களுக்கு அனுப்ப வேண்டும்
அதன் பிறகு எங்கள் நிறுவன விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் விவசாயிகளின் நிலத்திற்குச் சென்று நேரடியாகப் பார்வையிடுவார்கள், அவர்கள் பார்த்து ஆய்வறிக்கை கொடுப்பார்கள் அதை மதிப்பிடுவார், மதிப்பிட்ட பின்னர் அதை தரக்கட்டுப்பாடு அதிகாரிக்கு அனுப்பி வைப்போம், அதன்பிறகு எல்லாமே சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இறுதியாக என்னிடம் வரும். அதை நான் சரிபார்த்த பின்னர், தகவல்களை டெல்லிக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் அதைச் சரிபார்த்து சான்றிதழ் கம்யூட்டர் மூலம் அனுப்புவார்கள் அதில் நான் கையொப்பமிட்ட பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.
இச்சான்றிதழை ஒரு ஆண்டுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும், ஒரு ஆண்டு முடிந்ததும் மீண்டும் அதைப் புதுப்பிக்க வேண்டும். முதல் ஆண்டு சான்றிதழை சி1 என்றும், இரண்டாமாண்டு சி2 என்றும், மூன்றாமாண்டு சி3 என்றும் சான்றிதழ் தருகிறோம். மூன்று ஆண்டுகள் இப்படி சான்றிதழைப் பெற்று விட்டால், மூன்றாம் ஆண்டு முடிவில் இது ஆர்கானிக் விவசாயம் தான் என்று சான்றிதழ் கிடைத்துவிடும்.
எங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இருக்கிறார்கள். அனைவரும் சரியாக ஆர்கானிக் முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
கே: KIADEF யில் நீங்கள் இணைந்து கொண்டது பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள்?
இந்த KIADEF (Krishnamurthi International Agricultural Development Foundation) நிறுவனம் என்னுடைய குருவும் வழிகாட்டியாகவும் விளங்கியபேராசிரியர் முனைவர் S. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் துவங்கப்பட்டது. Dr.S.K அவர்கள் தனக்குப் பின்னர் நான் தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். அவரின் வேண்டுதலாலும் வழிகாட்டுதலாலும் நான் இந்நிறுவனத்தில் என்னுடைய பொறுப்பில் எடுத்து நடத்தி வருகிறேன்.
கிடாஃப் நிறுவனத்தின் மூலம் தேவையானவர்களுக்கு நிலத்தை மேம்படுத்தவும், பால்பண்ணைண பராமரிக்கவும் மற்றும் வேளாண்மை சம்மந்தப்பட்ட பல விதமான ஆலோசனைகளும் உத்திகளும் தரப்படுகின்றன. இதற்கு வேண்டிய புராஜெக்ட் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் வேளாண்மை சார்ந்த பல தொழில் நுணுக்கங்கள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு நாள் காளான் வளர்ப்புப் பயிற்சி போன்றவை.
கே: இந்த நிறுவனங்கள் வேளாண் விஞ்ஞானிகள்,எந்தெந்த துறையில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்? அவர்களின் பணி குறித்து?
வேளாண்மையில் பலதுறைகள் உள்ளன. மண்ணியல், உழவியல், தாவரவியல், பயிர்ப்பூச்சி இயல், பயிர் நோயியல், பொருளாதாரம், வேளாண்மை விரிவாக்கம் போன்றவை. இதில் ஒவ்வொரு துறையிலும் பல்லாண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற வல்லூநர்கள் 18 பேர் இஸ்காப்பில் பணிபுரிகிறார்கள்.
கே: வேறு நாடுகளில் இயற்கை வேளாண்மை உள்ளதா?
உலகத்தில் சுமார் 138 நாடுகளில் இயற்கை வழி வேளாண்மை பின்பற்றப்படுகிறது. இதில் முதன்மையில் இருப்பது கியூபா, ஆஸ்ட்ரியா, ஆஸ்திரேலியா, பூடான் போன்ற நாடுகள்.
கே: இயற்கை வேளாண்மை செய்து, நமது இந்தியாவின் உணவு வேளாண் உற்பத்தி இலக்கை எட்டி விட முடியுமா?
எல்லா விவசாயிகளும் பெரிய அளவில் இயற்கை வழி வேளாண்மையை மேற்கொண்டால் நம்முடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது திண்ணம். இதற்கு அரசின் துணையும் நிதி உதவியும் தேவை.
கே: ஹோமியோபதி, பிராண சிகிச்சை போன்றவற்றிலும் தாங்கள் அறிவாற்றல் மிக்கவராக விளங்குகிறீர்கள். அதில் எப்படி தங்களுக்கு ஆர்வம் உண்டானது?
நான் மக்கள் நல்ல உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளேன். நான் முதலில் கூறியது போல மெடிக்கல் கல்லூரியில் சேர முடியவில்லை என்றாலும் என்னுடைய ஆழமான எண்ணம் ஹோமியோபதி, பிராண சிகிச்சை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள என்னை என்னுடைய உள்ளுணர்வு இறை உணர்வு தூண்டியதன் மூலம் நான் மற்றவர்களின் நலனுக்காகவே இதை மேற்கொண்டுள்ளேன்.
கே: சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, வேளாண் துறையில் மிக உயர்ந்த நிலைக்கு வந்துள்ளீர்கள்? அதற்கு எவை காரணமாக இருக்கும் என்று நம்புகிறீர்கள்?
தன்னம்பிக்கை, தளராத உழைப்பி நல்லெண்ணம், கனிவு, கருனை, பிறர்நலத்தில் மிகுதியான நாட்டம் இவற்றுடன் இறையருளும் சேர்ந்து என்னை உயர்த்தியிருக்கின்றது என்பதை அனுதினமுமத் உளமார உணர்கிறேன்.
கே: குடும்பம் குறித்துச் சொல்லுங்கள்?
மனைவியார் திருமதி. சௌந்தரம் இல்லத்தரசி. எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு ஆண் பிள்ளை இருக்கிறார்கள். முதல் பெண் டாக்டர் சாந்தி அவரின் கணவர் டாக்டர் தேவராஜ், இவர்களுக்கு விவேக் தேவராஜ், நிவேதிதா தேவராஜ் என்ற குழந்தைகள். விவேக் திருமணமாகி அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நிவேதிதா எம்.டி பட்டம் பெற்றுள்ளார். இவர்களும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இரண்டாவது பெண் சக்தி பொறியியலாளர் இவர் கணவர் செந்தில் இருவரும் பொறியியல் துறையைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு சவிதா என்ற மகள் இருக்கிறார்கள். எனது மகன் கிருஷ் சிவக்குமார் அவரின் மனைவி ஹேமலதா இவர்களின் குழந்தைகள் நிலா சிவக்குமார் மற்றும் ஆதவ் சிவக்குமார் இவர்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
கே: தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் இல.செ.க அவர்கள் தங்களோடு பணியாற்றியவர். அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்?
திரு.இல.செ.க அவர்கள் மிகச்சிறந்த அறிவாற்றலுடையவர். தான் நினைத்ததை அப்படியே சொல்பவர். செயலாற்றுபவர், நேரம் உயர் போன்றது எனக் கருதுபவர். வேளாண்மையில் வித்தகராகிப் பல நூல்கள் எழுதியுள்ளார். மற்றவர்கள் நலம் கருதி சர்வ சதாகாலமும் உழைப்பவர். குறிப்பாக இளைஞர்களை நல்வழிப்படுத்துவர், நல்ல நண்பர்.
கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள்?
ஆக்கம் அதிர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
இக்குறளின் வழி பத்து வகை உடைமைகளை கடைபிடித்தால் நீங்கள் மிகச்சிறந்த மனிதர்களாக வாழ்ந்து வளமைப் பெற முடியும்.[/hide]
இந்த இதழை மேலும்