– 2016 – January | தன்னம்பிக்கை

Home » 2016 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் பள்ளி

    என்.கே.வேலு

    கூடுதல் காவல் துறை

    கண்காணிப்பாளர் (பணி நிறைவு)

    கோவை மாவட்டம் பல்லடத்திற்கு அருகிலுள்ள கரடிவாடி என்னும் கிராமத்தில் தான் பிறந்தேன். பெற்றோர் நாச்சிமுத்து ராமாத்தாள் மிகவும் ஏழ்மையான குடும்பம். வறுமையின் வாசனை தினம் தினமும் எங்கள் வீட்டில் வீசிக்கொண்டே இருந்த சூழல் அது. இதனால் பள்ளியில் சேர முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டது. 5 வயதில் சேர வேண்டிய பள்ளிப்படிப்பு எனக்கு மட்டும் 7 வயதில் தான் கிடைத்ததது.

    பள்ளிப்படிப்பைப் படிக்க வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் இருந்ததால் படிப்பின் மீது ஆர்வம் அதிகயளவில் ஏற்ப்பட்டது .இதனால் குனியமுத்தூர் அரசு ஆரம்பப்பள்ளியில் படித்தேன்.  குடும்பம் வறுமையாக இருந்தாலும் என்னை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை என் பெற்றோர்களுக்கு அதிகமாக இருந்தது. இதனால் சின்ன வயதிலிருந்தே படிப்பை ஒரு துடிப்போடு படிக்கத் தொடங்கினேன்.

    ஆசிரியர்களும் எங்களுக்கு நல்லதொரு ஊக்கத்தைக் கொடுத்தார்கள். குறிப்பாக திரு.நாராயண சம்பந்தர், திரு.துரைசாமி நாயுடு அவர்களின் அனுபவத்தை எங்களிடம் வகுப்பில் சொல்லும் பொழுது இவர்களைப் போலவே சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்க வைத்தது.படிக்கின்ற காலத்திலேயே படிப்பிற்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் கொடுத்தேன்.

    பி.யு.சி வரை கோவையிலேயே படித்தேன். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்ப்பட்டது. ஆசையை என் பெற்றோர்களிடம் சொன்னேன் அவர்களும் என் ஆர்வத்தைப் பார்த்து படிக்க வைக்க சம்பதித்தார்கள். இதனால் பட்டப்படிப்புப் படிக்க பெங்களூரு சென்றேன்.

    கல்லூரி வாழ்க்கை மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சிவுடனும் அமைந்தது. அங்குப் பணியாற்றிய ஆங்கிலப் பேராசிரியர் கோபால கிருஷ்ணன் அவர்கள் பாடம் நடத்தும் விதம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும், அவர் வகுப்பில் பாடத்தை நாடகமாக நடத்திக்காட்டி விளக்குவார். இந்த முறை எல்லாருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

    எனக்கு சின்ன வயதிலிருந்தே காவல்துறையின் மீது அளப்பறியாப் பற்று இருந்தது. நிச்சயம் போலிஸ் ஆகி நிறைய நம்மைகள் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் எப்பொழுதும் இருந்தது. இதனால் காவல் துறை குறித்து அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்றேன். அப்பொழுதுலாம் தேர்வு மிக நேர்மையாக நடைபெறும்.

    1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இத்தேர்வில் கலந்து கொண்டார்கள். இதில் 50பேர் மட்டுமே இறுதிக்கட்டமாக தேர்ச்சிப் பெற்றோம். தேர்ச்சிப் பெற்றவுடன் சேலம் அருகிலுள்ள தலைவாசலில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்தேன்.

    இங்குப் பணியாற்றிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்டத்ததில் பணியில் சேர்ந்தேன். பின்னர் பணி உயர்வு, பணி இடமாற்றம் என்று ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினேன். ஆரம்பக்காலத்தில் பெரிய அளவில் லஞ்சம் குற்றங்கள் கிடையாது, நாளடவில் பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தான் தவறுகள் அதிகரிக்கத் தொடங்கியது.

    லஞ்சம் தலை விரித்து ஆடும் இந்த நாட்டில் நான் எனது குடும்பம், எனது குழந்தைகள் என்று தன் முன்னேற்றத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் நாடு நிச்சியம் முன்னேற்றம் அடையாது. ஒவ்வொருவரும் தவறுகள் தன் முன்னே நடந்தால் நிச்சயம் தட்டிகேட்க வேண்டும் லஞ்சம் கேட்டாலோ அரசாங்கத்தில் கேட்கும் வேலைகளில் தாமதப்படுத்தினாலோ எங்கள் இயக்கத்தை அணுகினால் இந்தப் பிரச்சினை முடித்துத் தரப்படும்.

    நம்மை நகர்த்தும் நம்பிக்கை

    உலக வாழ்வின் உள்ளடக்கம் என்ன தெரியுமா?அதன் பேர் தான் “நம்பிக்கை’. நம் வாழ்வு என்பது ஒவ்வொரு நிமிடமும், ஒரு நம்பிக்கையில் இருந்து, மற்றொரு நம்பிக்கையை நோக்கிய பயணமாக இருக்கின்றது. நம்பிக்கை என்பது எந்த ஒரு வரையறைக்குள்ளும் ஆட்படாத வானாளவியதாகும்.

    நாம் ஒவ்வொருவரும் இப்புவியில் பிறந்ததே ஒன்றை நம்பித்தான் அதுபோல இறப்பதும் ஒன்றை நம்பித்தான். பிறப்பு இறப்பு என்ற இரு கரைக்கும் இடையிலே வாழ்வு நம்பிக்கை நதியாக ஓடுகின்றது. வாழ்வில் ஒவ்வொரு கணமும், ஒரு நம்பிக்கை தோன்றுகிறது. ஒன்றைப் போல் ஒன்று இருப்பதில்லை. ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் புதிதாகவே தோன்றுகிறது.

    தடாகத்தின் நீர் மட்டம் உயர, உயர அதிலுள்ள தாமரையின் உயரமும் உயர்வது போல, நம் தகுதி உயர, உயர நம் நம்பிக்கையும் உயரத்தான் செய்கிறது. இதை யாறும் மறுக்க முடியாது.அதுபோல் எப்போது நம் தகுதிக்கு மீறிய நம்பிக்கை நம்மில் உருவாகின்றதோ, அப்போது நாம் ஒன்று அழிக்கின்றோம், அல்லது கேலிக்கு ஆளாகின்றோம். இதுவும் நமக்கு காலங்காலமாக கற்றுத் தந்து கொண்டிருக்கும் வாழ்கைப்பாடமாகும்.

    நம்மைத் தேடி வரும் காலத்திற்கேற்வும் காசு பணத்திற்கேற்பவும், எப்போதும் நம் நம்பிக்கையில் மாற்றம், ஏற்படத்தான் செய்கிறது, என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆம் வாழ்வில் அனுபவம் சேரச் சேர அறிவும் பெருகப்பெருக கட்டாயம் நம் நம்பிக்கையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

    இங்கே, நம்பிக்கையில் விளைந்த வெற்றியை விட, தோல்விகள் தான் அதிகம். என்றால் யாரும் நம்பவா போகின்றீர்கள்,ஆனால் ஏதார்த்தம் அதுதான். தோல்விதான் நம் அறியாமையின் அடையாளம் என்பது இங்கே பல பேருக்கு உடனடியாகத் தோன்றுவதில்லை.பட்டு, அனுபவித்த பின்பு தான் பலர் அதைக்கண்டு தெளிந்து அல்லது அனுபவசாலிகளைக் கேட்டு உணர்ந்து, தன்னம்பிக்கை உள்ளவர்களாகி தைரியமாக, தடைகளை தகர்த்தெரிந்து வெற்றியாளரர்களாக விளைகின்றார்கள்.

    தன்னம்பிக்கை மிக்கவரிடத்ததில் எப்போதும் அச்சம் அரிதாகத்தான் இருக்கும்.எங்கே அச்சம் என்பது இல்லையோ, அங்கே அறிவுச்சுடர் ஒளி பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தன்னம்பிக்கை குறித்து பேசும் போது இதையும் நாம் கோடிட்டுக் காட்டாமால் இருக்க முடியவில்லை. அது வேறு ஒன்றும் இல்லை. இங்கே குறுட்டுத்தனமான நம்பிக்கை என்பது எப்போதும் நம் கூடவே வராது என்பது உறுதி. தன்னில் தெளிந்து வெளிப்படும், தன்னபிக்கையே, சாகும் காலம் வரை நம்முடனே வந்து நம்மை உயர்த்திப்பிடிக்கும்.

    வந்தோரை வாழவைக்கும் வாழ்வியல் பூங்கா

    வாழ்க்கை மர்மங்களின் முடிச்சு. ரகசியங்களின் செல்லப்பிள்ளை. திரைவிலக்கப்படாத திரைப்படம். இயற்கை மட்டுமே இத்தனை பிரமாண்டங்களையும் தன்னுள் இறக்கி வைத்து அழகு பார்க்கும் அபூர்வம்.
    கடல் — அலைகளின் தழுவல்
    மலை — இயற்கையின் எழிலோவியம்
    நட்சத்திரம் — வானின் கண்சிமிட்டல்
    மழை — மேகத்தின் முத்தம்.

    இப்படி, இயற்கைத் தன் மடிப்புக் கலையாத இதயமுடிச்சில் பல இரகசியங்களை அள்ளி வைத்திருக்கிறது. காலத்தின் கையில் தன் இதயத்தின் இராகங்களை ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    எல்லாம் இயற்கையின் அங்கம் என்றாலும், சில வேளைகளில் இயற்கைதான் தன் கெடுபிடியான எடுபிடி வேலைகளைச் செய்து விடுகிறாள். வாட்டத்தைப் போக்கியவள் வாள்வீச்சு நடத்துகிறாள். இயற்கை முத்தம் கொடுத்த நீயே ஏனிப்படி உதைத்து விட்டாய்….? பூமியிலே ஏன் போட்டுடைத்தாய் பொறுக்குமா இந்த பூமி…? அத்தனை நெருக்கமா மனிதனின் மேனி.

    வான் பார்த்த மக்களின் இதயங்களை நனைத்தவளே, வாடிய முகங்களின் ஏக்கத்தை நீக்கினாயா…? தூக்கத்தைப் போக்கினாயா..? இயற்கை சதிவலையில் எத்தனைப் பின்னல்கள்…? இத்தனையும் பிரிக்க முடியாத கற்பனைக் கோடுகளாகவே காட்சியளிக்கின்றன. பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன, தெருக்கள் ஆறாகவும், சென்னை முக்கடல் சங்கமிக்கும் முக்கூடலாகவும் காட்சியளிக்கின்றன. ஆற்றோரத்தில் வசித்தோரின் அவலங்களையும், காற்றாடியாய் அவர்கள் வீசி அடிக்கப்பட்டதையும் ஊடகத்தின் செய்திகள் கொடுத்தாலும், கண்களில் கரையிருந்தாலும் சென்னை வெள்ளம் போல் கண்ணீராய் ஓடியது.

    இளமையின் அவசியம்

    நம்மில் பலர் ஏதோ கல்யாணம் ஆகும் வரை இளமைத் தோற்றம் இருந்தால் போதும் என்ற அளவிலேயே இருக்கின்றோம். அப்படியில்லா விட்டால் கல்யாணமே நடக்காதே. மற்றும் சிலர், நம் பிள்ளைகளுக்கு கல்யாண வயது வந்துவிட்ட பின்னர் இளமையாக இருக்க நினைப்பது குற்றம் என்ற அளவில் இருக்கிறோம். இன்னும் சிலர்  இளமையாக இருக்க முனைபவரையும் இளமைத் துள்ளுதோ! என்று இளக்காரம் பேசுகிறோம். இதற்கெல்லாம் காரணம் இளமை என்பது ஒரு குறுகிய காலத்திற்குள் அழியக்கூடிய ஒரு பொருளாக பாவனை செய்வதேயாகும்.

    இளமை என்பது வாழ்நாளெல்லாம் உயிர்த் துடிப்புடன் வாழ்வது என்ற புரிதலுக்கு வரும்போதுதான் நாம் இளமையாக வாழ்வதன் அவசியத்தை உணர்வோம். ஆக, நாம் இளமையாக  வாழ வேண்டுமா  வேண்டாமா என்று முடிவு செய்தால்தான் அதற்கான வழியினை நாம் பார்க்க முற்படுவோம். அன்பர்களே! நம் இளமைத் தன்மையால் நமக்கு கிடைக்கும் அற்புத பரிசுகளைப் பற்றி நாம் முதலில் பார்ப்போமா?

    புத்திக் கூர்மை:

    இளமையாக நாம் இருந்தால், பிரச்சனைகள் மிகக் குறைவாகவும் அவற்றைத் தீர்த்துக்கொள்ள புத்திக் கூர்மை மிக அதிகமாகவும் நம்மிடம் இருக்கும். இதுவே முதுமைத் தன்மையால் பிரச்சனைகள் அதிகமாகவும் அவற்றைத் தீர்க்க புத்திக் கூர்மை குறைவாகவும் இருக்கும் போது திண்டாட்டம்தான் அதிகமாக இருக்கும். எது வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

    நோயற்ற தன்மை :

    நோய்க்காக அவதிப்படுவது, அதற்காகப் பணம் செலவழிப்பது, அதனால் சம்பாத்தியம் பாதிப்படைவது, நிம்மதி பறிபோவது ஆகிய யாவும் இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இதுவெல்லாம் வேண்டுமாயின் நாம் என்றும் இளமையாக இருக்க வேண்டும்.

    நிம்மதியான வாழ்க்கை:

    இளமைத் தன்மையால், நமக்குப் போதிய ஆற்றலும் அறிவுத் திறனும் இருக்கும். அவற்றைக்கொண்டு நாம் தரமாகச் செயல்பட்டு நம் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய முடியும் ஆகையால் நமக்கு நிம்மதி கிட்டும். இதுவே முதுமைத் தன்மையால் ஆற்றல் குறைந்து செயல்திறன் குறையும் போது நம் எதிர்பார்ப்புகள் நிராசைகளாகி நிம்மதியிழந்து நிற்க வேண்டியிருக்கும். ஆகவே, நாம் இளமையைப் போற்றுவோம்.

     

    இள வயதில் உடல் பருமன்

    பழங்காலத்தில் உடல் பருமனாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கருதப்பட்டது. ஆனால் உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்குப் பலவிதமான நோய்கள் வரும்; முக்கியமாக இரத்த கொதிப்பு அதிகரித்தல், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது, 50 – 80 சதவீத உடல் பருமனான குழந்தைகள் வாலிப வயதிலும் உடல் பருமனாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

    வரையறை

    உடல் பருமன் என்பது உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்து நிறைந்து காணப்படுதல்.

    உடல் பருமனை அளக்கும் முறை

    உடற்பருமன் கூட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் கண்டறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு,

    உடல் எடை (கிலோ)

    உடற்பருமன் கூட்டு (BMI)   – உடல் உயரம் ( மீ)  ஷ் உடல் உயரம் (மீ)

    உடற்பருமன் கூட்டு எண் 18.5 முதல் 24.9க்குள் இருக்குமெனில் அது ஆரோக்கியமான உடல் எடைக்குச் சான்று, BMI 24.9 அதிக அளவு இருந்தால் (24.9க்கு மேல்) அது உடல் பருமனுக்குச் சான்று.

    காரணங்கள்

    அ) வாழ்க்கை முறையில் மாற்றம்

    தவறான உணவு பழக்கவழக்கங்கள்

    • பழங்காலத்தில் உள்ள சத்து நிறைந்த உணவு பொருட்களைத் தற்போதுள்ள துரித உணவு மாற்றி அமைத்துள்ளது.

     

    • அதிக அளவு கொழுப்புச்சத்து நிறைந்த உணவு பொருட்களை உண்பதால் மற்றும் துரித உணவை உட்கொள்ளுவதால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

     

    • துரித உணவு சுலபமாக கிடைப்பதாலும், விலைகுறைவாகவும், மலிவாகவும், ருசியாகவும் உள்ளதாலும் குழந்தைகள் அவற்றை விரும்பி உண்கின்றனர்.

     

    • பள்ளியில் கிடைக்கும் பப்ஸ், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் குழந்தைகள் அதிகமாக உண்கின்றனர்.

     

    • இவ்வகை துரித உணவுகளில் ட்ரேன்ஸ் என்னும் கொழுப்பு நிறைந்த எண்ணெய் உபயோகிக்கப் படுகிறது.

     

    • இவ்வகை உணவுகளில் புரதம், வைட்டமின்கள் ஆகியவை குறைவானதாகவே இருக்கும்.

     

    உடல் உழைப்பு இல்லாமை (Sedentary Life Styles)

    குழந்தைகள் டி.வி. யின் முன் அமர்ந்து உணவுகளை உண்பதால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவில்லாமல் உண்கின்றனர்.

    பள்ளி மற்றும் டியூசன்

    • இந்தியாவில் உடல் பருமன் வர ஒரு முக்கியமான காரணம் பள்ளி மற்றும் டியூசன் வகுப்புகளுக்குக் குழந்தைகள் செல்வதால் ஏற்படுவதாகும்.

     

    • பெரும்பாலான குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு நேரம் இல்லாமல் இருக்கும்.

     

    • பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் என்பது இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் உடல் பருமன் வர வாய்ப்பு உள்ளது.

     

    மரபணு குறைபாடுகள்

    • பரம்பரையாக பருமனாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

     

    • பசி மற்றும் ஜீரணத்தைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களின் குறைபாடு இருந்தாலும் இளவயதிலேயே உடல் பருமன் ஏற்படும்.

     

    • கர்ப்ப காலத்தில் தாய் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை உடல் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

     

    • குழந்தையின் உயரம் குறைவாக இருந்தால் உடல் எடை அதிகமாகத் தெரியும்.

     

    நிண நீர் சுரப்பிகளின் குறைபாடுகள்

    தைராய்டு, ஹைபோதெலாமஸ், பிட்யூட்டரி மற்றும் அட்ரினல் ஆகிய சுரப்பிகள் குறைவாகவோ, அதிகமாகவோ சுரப்பதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படும்.

    மருத்துவ காரணங்கள்

    ஆன்மீகம் அறிவோம்

    ஆன்மீகம் உள்நிலை வளர்ச்சிக்கு வேண்டும்.

    மனித நேயம், ஆன்ம நேயம் இவைதான் ஆன்மீகத்தின் சாரம். எனவே, நுட்பமான அறிவியல் பயிலும் இளைஞர்களுக்கு சிறந்த தெளிவை நாம் தர வேண்டும். இளைஞர்கள் சிலர் பல துறைகளில் ஈடுபட்டு புகழும், பொருளும் பெற கடுமையாக முயற்சி செய்யலாம். இது நிச்சயம் தேவைதான். ஆனால், அவர்கள் தொழிலில் வளர்வது மட்டுமே வாழ்வின் இலட்சியமாகி விடாது.

    இலட்சியம் என்பது சமூகத்திற்கு இளைஞர்கள் செய்ய விரும்பும் தொண்டு. நல்ல புகழும் பொருளும் ஈட்டுவது, சமூகத்திற்கும் உதவும் என்பதுதான், தன் வாழ்வின் வழியாக விளங்க வேண்டும்.

    இன்றைய இளைஞர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சுய தேவைகளை நிறைவு செய்யத்தான் தொழில் செய்கிறோம். ஆனால், சுய தேவைகள் அனைத்தும் பூர்த்தியடைந்த பிறகும் தன்னிறைவும், மனத்திருப்தியும் கிடைப்பதில்லை.

    உள்மனம் எதையோ நாடுகிறது. அதுதான் இந்த மானிட சமூகத்திற்கும் பயன்படும் படி நாம் வாழ்வது ஆகும். அதைப்புரிந்து கொள்ளாமல், ஜோதிடம், பரிகாரம் கோவில் கோவிலாகப் போவது என்று நாம் தொடங்கிவிடுகிறோம்.

    மதம் (சமயம்) போன்றவைகள் எல்லாம் பாமரர்களிடம் ஆன்மீகத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகளாகத்தான் தோன்றின. பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு எல்லாம் மதம் தேவையில்லை. அவர்கள் படித்து சரியாக இருந்தால், சரியாகப் படித்திருந்தால் உண்மையாக படித்து முடித்தவர்களது எண்ணங்களும், சிந்தனைகளும், செயல்களும் இறைத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். காலப்போக்கில் வழிபாடு என்பது சுய தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் வேலையாக மாறிப்போய்விட்டது. கோவில், பண்டிகை நாள், நேரம், நட்சத்திரம் என்று மாறிவிட்டது.

    இப்படி, பூஜை, புனஸ்காரத்தில் மட்டும் ஈடுபாடு காட்டும் பழைய இடங்களை விடவும், ஆன்மீகத்தை நடைமுறைக்கு ஏற்ப புதிய முறையில் நேர்மறை எண்ணம் ஊட்டும் விதமாய் பயிற்றுவிக்கும் புதுமையான துறவிகளிடம் கூட்டம் கூடுகிறது. பழைய இடங்களில் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.

    பல்வேறான மகான்களும், சித்தர்களும், யோகிகளும் இந்த சமூகம் சார்ந்து, மனிதர்களின் உள்நிலை சார்ந்து தங்களது நெறிமுறைகளை உண்மையான வாழ்வின் கொள்கையாக வகுத்தனர்.

    பயன்பட வாழ உறுதி எடு! பாரதம் போற்றப் பெயர் எடு!!

    திரு. M. மணி

    வலசுமணி ஃபார்ம் மிஷின்ஸ் பிரைவேட் லிமிடெட்,

    சிவகிரி, ஈரோடு

    ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கும். அந்த நோக்கத்திற்கு எவரொருவர் முதன்மை கொடுக்கிறாரோ, அவரே முன்னேறுகிறார் என்பதற்கு உதாரணமானவர் இவர்.

    கல்லூரிக்கல்வியைத் தொடாவிட்டாலும், நடைமுறை அறிவைப் பெருக்கிக் கொண்டு எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தொழிலை வடிவமைத்துக் கொண்டு விவசாயத்திற்குப் பயன்படும் தொழில் நிறுவனர் இவர்.

    கடின உழைப்பு, தெளிவான திட்டம், செய்யும் தொழிலில் நேர்மை  இருந்தாலே குறிக்கோளை அடையத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை சக்தி கொடுக்கும் என நம்பி செயல்படக் கூடியவர் இவர்.

    செய்யும் தொழிலில்தனித்துவமான சாதிப்புகளை நிகழ்த்தி விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.

    உயர் தன்மைக்கு முதல் அறிகுறி, எளிய தன்மை என்று சொல்வார்கள்.  அந்த எளிய தன்மையுடன் நாள்தோறும் தொழில்நுட்ப வளர்ச்சியை விவசாயத்தில் புகுத்தி வருபவர் இவர்.

    இத்தகைய சிறப்புகள் மிக்க திரு. M. மணி அவர்களை நாம் நேரில் சந்தித்ததிலிருந்து இனி…

    உங்களின் பிறப்பு, இளமைக் காலம் குறித்து…?

    ஈரோடு மாவட்டம் சிவகிரி வட்டத்தைச் சேர்ந்த லிங்ககவுண்டன் வலசு என்றகுக்கிராமத்தில் பிறந்தேன். ஐந்து பேர் கொண்ட எளிய குடும்பம். தந்தையார்

    திரு. முத்துச்சாமி கவுண்டர், தாயார் ராமாயி அம்மாள், கொஞ்ச நிலத்தில் வேளாண்மை செய்து வந்தார்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அந்த வேளாண்மை தொழிலிருந்து கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை..

    என்றாலும், பெற்றோர் என்னை படிக்க வைத்தார்கள். எனக்கு படிப்பைக் காட்டிலும் தொழில் மீதான ஆர்வமே அதிகம் இருந்தது.. பதினொன்றாம் வகுப்பு வரை படித்தேன்.

    நான் பள்ளி செல்லும் வழியில் ‘லேத் மெஷின்’ சார்ந்த ஒரு தொழில் நிறுவனம் இருந்தது. தினமும் அதைப் பார்த்தவாறேபள்ளிக்குச் செல்வேன். அப்பொழுது இந்தத் தொழிலின் மீது எனக்கு மிகுந்த பற்று உருவானது. இதனால், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இத்தொழிலைச் செய்ய வேண்டும் என்றஓர் உந்துதல் எனக்குள் அன்றைக்கே ஏற்பட்டது. இதனால், அருகிலிருந்த ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.

    தாங்கள் முன்னெடுத்த முதல் தொழில்…?

    நான் படித்து முடித்து நன்றாக ஒரு வேலைக்கு போக வேண்டும் என்பது தான் என் பெற்றோரின் ஆசையாகவும், கனவாகவும் இருந்தது. ஆனால், எனக்கு கல்லூரிப் படிப்பைத் தொடர வசதியில்லை. அப்போது, ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்.

    ஆனால், நாம் செய்யும் வேலை பலருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பது மட்டும் எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. நானும் சின்ன வயதிலிருந்தே விவசாய இயந்திரம் சார்ந்த வேலைகளைப் பார்த்து வளர்ந்ததால், அது சார்ந்த ஒரு நிறுவனத்தில் சில வருடம் பணிபுரிந்தேன். பிறகு அதே நிறுவனத்தில் சில வருடங்கள்  பங்குதாரர்  இருந்தேன். அதன் பிறகு 1985ம் ஆண்டு நான் மட்டும் “வலசு மணி லேத் ஒர்க்ஸ்” என்ற நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சிப் பெற்று வலசுமணி “ஃபார்ம் மிஷின்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்தை நடத்தி தற்போது வருகிறோம்.

    சட்டென படிப்பை விட்டு தொழில் நிறுவனத்தை அமைத்த போது பெற்றோரின் ஊக்கம் கிடைத்ததா…?

    எங்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் அளவில் நிலம் இருந்தது. இந்நிலத்தில் தான் நாங்கள் விவசாயம் செய்து வந்தோம்… சின்ன வயதிலிருந்தே மின்சாரம் சம்பந்தமான, இயந்திரம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் நான் நன்றாகக் கற்றுணர்ந்து அவ்வேலைகளைச் செய்வேன். என்னுடைய இந்த ஆர்வத்தை என் பெற்றோர்கள் எப்பொழுதும் ஊக்குவித்துக் கொண்டேதான் இருந்தார்கள்..

    நான் செய்யும் ஒவ்வொரு வேலையும் நுணுக்கமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்பதால் என் பெற்றோரும் என் ஆசையைப் புரிந்து கொண்டு எனக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்து என்னைப் பயணிக்க வைத்தார்கள்.

    எப்படியும் நான் சாதித்து விடுவேன் என்பதை என் ஆர்வத்தையும், வேகத்தையும் கொண்டு என்னை நன்றாக கணித்தார்கள். அவர்களின் கணிப்பை நான் இதுவரை பொய்யாக்கியதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    சொந்த ஊரிலேயே தொழில் நிறுவனம் தொடங்கியதற்குக் காரணம்…?

    நான் ஒரு பெரிய நிறுவனத்தைத் தொடங்க வேண்டும், அதன் மூலம் நிறைய விவசாயிகள் பயனடைந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இந்நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பக்காலத்தில் விவசாயம் சார்ந்த தொழில் கருவிகள் தேவை, என்றால், பெரிய நகரம் என்று சொல்லக்கூடிய சென்னை, கோவை, சேலம், திருச்சி போன்ற நகரங்களுக்குத் தான் சென்று வரவேண்டும்.

    என்னிடம் நிறைய விவசாயிகள் இது ஒரு மிகப்பெரிய குறையாகச் சொன்னார்கள். இதனால் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவுதான் எங்கள் ஊரான சிவகிரியில் இந்த நிறுவனத்தைத் தொடக்கக்காரணமாக அமைந்தது.

    மேலும் தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களுக்கும் எங்கள் இயந்திரத்தின் தேவை அதிகமாக தேவைப்பட்டது.

    பிறந்த மண்ணில் நாமும் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கி விவசாயிகளுக்கு நன்மைகளை செய்வதன் மூலம் மனநிறைவு கிடைத்திருக்கிறது.

    தங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம்…?

    நம்பகத்தன்மை உள்ளவர்களிடம்தான் மக்கள் தேடிச் செல்வார்கள் என்பதை நம்புபவன் நான். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் இத்தொழிலைச் செய்து வருகிறேன். எங்களிடம் இயந்திரத்தை வாங்கிச் சென்றவர்கள் முழுப்பலனையும் அடைந்துள்ளனர். அதில் எவ்வித குறைபாடுகளையும் கூறியதில்லை.

    ஒருமுறை இயந்திரத்தை எங்களிடம் வாங்கிச் சென்றால் அடுத்தமுறை, அடுத்தமுறை என்று வந்து கொண்டேதான் இருப்பார்கள். இவர்கள் ஆர்வமாக வருவதுதான் எங்களின் வெற்றி என்றே சொல்வேன்.

    நம்பி வருபவர்களின் நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் வீணாக்கியது இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்வேன்.

    பிரச்சனைகள் தரும் பாதிப்புகள்

    வெள்ளத்தினால் ஏற்பட்ட பயங்கர பாதிப்பால் சென்னையும், கடலூரும் தத்தளித்த நேரம்.

    உயிரையும், உடமைகளையும் இழந்து ஆபத்தில் சிக்கி அச்சத்தில் உறைந்த இலட்சக்கணக்கான மக்கள்.

    ஆதரவுக்கரம் நீட்டுபவர்களை நோக்கி தங்கள் பார்வைகளோடு அவர்கள் காத்திருந்த காலம்.

    வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஏராளமான பணத்தையும், பொருட்களையும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் கொடுத்து உதவினார்கள். தன்னார்வத் தொண்டர்களாக ஓடோடி வந்து அவர்களுக்கு உதவி செய்த உள்ளங்களும் உண்டு.

    இந்தக் கவலைதரும் வேளையில் பெரிய வெள்ளம்னு சொல்றாங்க. அதுக்கு நாம் என்ன செய்யமுடியும்…? அவனவன் கதையைப் பார்க்கிறதுக்கே இங்கே நேரமில்லை. நம்ம குடும்பப் பிரச்சனையே நமக்கு ஆயிரம் ஆயிரமாய் இருக்குது. இதுலபோய் நாம் என்ன செய்ய முடியும்…? என்றார் ஒருவர்.

    “நீங்கள் சொல்றது சரிதான் அண்ணே. நமக்கு ஒரு பிரச்சனை என்றால், எவன் ஹெல்ப் பண்ண வாரான். நம்ம வீட்டு கதையை நாம்தானே பார்த்துக் கொள்ள வேண்டும். 50 ரூபாய் கடன் கேட்டால் கூட யாராவது தருகிறார்களா…? நம்ம குடும்பத்தை நடத்துவதற்கே நமக்கு வழியில்லை. இதில் மற்றவர்கள் பிரச்சனையைப் பார்க்க நமக்கு எங்கே நேரம் இருக்கிறது…?” என்றார் மற்றவர்.

    இவர்கள் பேச்சைக் கேட்டபோது சமூக வலைதளங்களில் அடிக்கடி உலாவரும் நிகழ்வின் தொகுப்பு ஒன்று நினைவுக்கு வந்தது. இது கற்பனை நிகழ்வு என்றாலும் நம் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைகிறது.

    இரவு நேரம் எலி ஒன்று தனது இரையைத் தேடப்புறப்பட்டது.

    “யாராவது வருகிறார்களா…?” என கூர்ந்து கவனித்தது.

    அப்போது அந்த எலி வாழும் வீட்டின் கணவனும், மனைவியும் ஏதோ ஒரு பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

    “நல்ல உணவு இன்று கிடைத்துவிட்டது” என்ற நம்பிக்கையில் எலி எட்டிப்பார்த்தது.

    அந்தப் பார்சலுக்குள் ஒரு “எலிப்பொறி” இருப்பதைப் புரிந்து கொண்டதும் எலி அதிர்ந்து போய்விட்டது.
    பயம் அதிகமானது.

    “என்னை கொன்றுவிடுவார்களோ…!” என்ற அச்சத்தின், உச்சத்தில் நின்று திகைத்தது.

    அந்த வீட்டில் தன்னோடு இருக்கும் கோழியிடம் போய் தனது பயத்தைச் சொன்னது.

    “இந்த வீட்டில் எலிப்பொறி வாங்கிவிட்டார்கள். ஓரிருநாளில் நான் இறந்து விடுவேன். நான் என்ன செய்யலாம்…?” என ஆலோசனை கேட்டது.

    கோழி ஏளனமாய் சிரித்தது

    “இது உன் பிரச்சனை. நீதான் இதற்கு கவலைப்பட வேண்டும். நான் என்ன செய்ய முடியும்…?” அந்தக் கோழி சொல்லிவிட்டு, தன் இரையைத் தேடி நகர்ந்தது.

    எலிக்கு பயம் அதிகமானது.

    சிறிது நேரம் கழிந்து அந்த வீட்டில வளரும் வான்கோழியிடம் வந்து தனது கவலையை எலி சொன்னது.

    “எலிப்பொறியைக் கண்டு நான் பயப்படத் தேவையில்லை. இதற்கு நீதான் ஏதாவது செய்ய வேண்டும்” என சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றது.

    எலி மீண்டும் பயந்து நடுங்கியது. அந்த வீட்டில் வளரும் ஆடு ஒன்றிடம் தனது “எலிப்பொறி” பிரச்சனையைப்பற்றி சொன்னது.

    “எனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. உன் பிரச்சனையைக் கவனிக்க எனக்கு நேரமில்லை. இந்த எலிப்பொறியால் என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டு ஆடு அமைதியாக போய்விட்டது.

    நடுங்கிப்போன எலி, வீட்டின் ஒரு மூலையில் போய் முடங்கிக் கொண்டது.

    பாரிஸ் பருவநிலை மாநாடு-2015

    உலகம் பருவநிலை மாற்றம்” குறித்த ஐ.நா.வின் 21-வது சர்வதேச மாநாடு அண்மையில் 2015 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். புவி வெப்பம் அதிகரித்து வருவதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காகவும் 1992ம் ஆண்டு முதல் ஐ.நா. நடத்திவரும் பேச்சுகள் முடிவுக்கு வந்துள்ளன. முதன் முறையாக ஒரு உலகளாவிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இத்தருணத்தில் மாநாட்டிற்கு முன்பு இதுவரை நடந்தவற்றையும், மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் விளக்குவதே கட்டுரையின் நோக்கம்.

    வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உள்ளிட்ட சில வாயுக்களின் அளவு அதிகரிப்பதன் காரணமாக பூமியின் சராசரி வெப்ப அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதைத்தான் “குளோபல் வார்மிங்’ என்கிறோம்.

    பூமிக்கு ஒளியையும் வெப்பத்தையும் சூரியன் தருகிறது. பூமிப்பரப்பில் எழுகிற வெப்பம் மீண்டும் விண்வெளிக்கே அனுப்படுகிறது. இயற்கையாக விண்வெளிக்கு அனுப்படும் வெப்பக்கதிர்வீச்சை இடைமறித்து மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பி விடுகிற வேலையயை பூமியிலிருந்து வெளியாகின்ற சில வாயுக்கள் செய்கின்றன. இவ்வாயுக்கள் “பசுமை இல்ல வாயுக்கள்’ எனப்படும்.

    காற்று மண்டலத்தில் இடம் பெற்றுள்ள பசுமை இல்ல வாயுக்கள் பெரும்பாலும் செல்வந்த நாடுகளின் தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளினால் உருவானவையாகும். இவை ஒரு பரந்த போர்வை விரிப்பு போல இருந்து கொண்டு புவியின் மேற்பரப்பில் எழும் வெப்பத்தை வெளியேற்றாமல் தடுத்து விடுகிறது. இதன் காரணமாக புவியின் காற்றுமண்டல வெப்பம் அதிகரிக்கிறது. இதனை  ‘பசுமை இல்ல’ விளைவுகள் ( கிரீன் ஹவுஸ் எஃபக்ட்) என்கிறோம்.

    பூமி வெப்பமடைந்து வருவதன் காரணமாக இரண்டு துருவப்பனிப்பாறைகளும் உறுகத் தொடங்கி விட்டன. இதன் காரணமாக கடல் மட்டம் உயருகிறது. பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கடல் நீர் சூடாவதின் காரணமாக மேலும் கடல் மட்டம் உயருகிறது.

    இந்த நிலை தொடருமேயானால் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளை விழுங்கி விடும் அபாயம் உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க், மன்ஹாட்டன் தீவுகள், புளோரிடாவின் புகழ்பெற்றகடற்கரை நகரமான மியாமி, நெதர்லாந்து, கொல்கத்தா, வங்கதேசத்தின் சில பகுதிகள் ஆகியன கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

    இந்தப் பேராபத்து குறித்து பல்லாண்டு காலமாக உலகளவில் பல மாநாடுகளும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

    ரியோடிஜெனிரோ மாநாடு ( 1992)

    முதன் முதலாக தென்அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் ரியோடிஜெனிரோவில் 1992  ல் ‘புவி உச்சி மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டில் பசுமைப்பாதுகாப்பு பற்றியும், வெப்பத்தாக்குதல் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதில் தட்பவெப்பம் குறித்து தீர்மானம் ஒன்றை ஐ.நா., வெளியிட்டது.

    அதில் புவிவெப்பத்துக்கு செல்வந்த நாடுகளான வளர்ச்சியடைந்த நாடுகள்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. மேலும், ஏழை நாடுகளான வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியில் அக்கறைகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதனால், அத்தகைய நாடுகள் புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமிலவாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ நாட்டின் நலத்திற்கு உகந்ததாக அமையாது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆக, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமை வளர்ச்சியடைந்த நாடுகளையே சார்ந்தது என்று சொல்லாமல் சொல்லியது அந்தத் தீர்மானம்.

    சின்னச் சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோமா?

    Great things are not done by impulse

    but by a series of small things brought together

    – Vincent Van Gogh

     

    The spur of delight comes in small ways and in small things

    – Robert L. Stevenson

     

    Attitude is a little thing that makes a big difference

    – Winston Churchill

    எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

    உட்பகை உள்ளதாங் கேடு.

    ஒருவனிடம் தற்போதுள்ள உட்பகையானது எள்முனை அளவினைவிட சிறிதாக இருந்தாலும் கூட அது எதிர்காலத்தில் அவனுடைய பெருமையையும், புகழையும் பெரிய அளவில் கெடுக்கும் தன்மையுடையதாக அமையும்.

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

    சால மிகுத்துப் பெயின்.

    மிகச் சிறிய அளவு எடையுடைய மென்மையான மயில் இறகுகளை ஒன்று சேர்த்துக் கட்டி அளவுக்கு அதிகமாக வண்டியில் பாரமாக ஏற்றினால் அந்த எடையைத் தாங்காது வண்டியினுடைய அச்சு முறிந்து விடும். – வள்ளுவர்

    சிறு துளி பெரு வெள்ளம்

    சிறு துரும்பும் பல் குத்த உதவும். – பழமொழி

    நாம் சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்துகிறோமா…? என்பது ஒரு முக்கியமான கேள்வி. பல நேரங்களில் பல காரணங்களினால் நம்மை சுற்றியுள்ள சின்ன விசயங்களையும் நாம் கவனிக்காமல் விட்டு விடுவதுண்டு. சின்ன விசயங்கள் தானே என்று கவனம் இல்லாமல் இருந்து விடுகிறோம். சில நேரங்களில் அந்தக் கவனக்குறைவு பெரும் இழப்பிற்குக் காரணமாக அமைந்து விடுவதுண்டு.

    ஒரு போர்க்களத்தில் போர் தொடங்குவதற்கு முன்பாக குதிரையின் காலிலுள்ள லாடத்தைப் பிடித்துக் கொள்கிற சிறிய ஆணி தவறி விடுகிறது. அந்தக் குதிரை வீரன் அந்தச் சின்ன ஆணியைக் கவனிக்காமல் விட்டு விடுகிறான். போர் தொடங்குகிறது. இந்தச் சின்ன ஆணி இல்லாததால் லாடம் விழுந்து விடுகிறது. லாடம் விழுந்து விட்டதால் குதிரை வேகமாக  ஓட முடியவில்லை. குதிரை வேகமாக ஓட முடியாததால் போரிலே குதிரைவீரனால் வேகமாகப் பயணிக்க முடியவில்லை. குதிரை வேகம் குறைவதால் போர்வீரனுடைய வேகம் குறைகிறது. போர் வீரனுடைய வாள் வீச்சு குறைவதால் போரிலே தோல்வி ஏற்படுகிறது. இந்தப் போரிலே ஏற்பட்ட தோல்விக்கு போர் வீரனுடைய திறமையின்மை காரணமல்ல. குதிரையும் காரணமல்ல. லாடத்தை தாங்கிப் பிடிக்கின்ற சிறிய ஆணி இல்லாததுதான் காரணம். ஆணி சிறியதுதான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது.

    ஒரு சிறிய பாய்மரக்கப்பல் அதன் அடிப் பாகத்தில் சிறிய ஓட்டை இருந்துள்ளது. யாரும் அதைக்கவனிக்கவில்லை. நடு கடல் வழியே அதன் பயணம் போகிறது. அந்த ஓட்டை வழியாக கடல்நீர் உள்ளே புகுகிறது. கப்பல் கவிழ அந்தச் சிறு ஓட்டை காரணம் ஆகிறது. அந்தச் சின்ன ஓட்டையைக் கவனித்து பராமரித்து இருந்தால் கப்பல் மூழ்குவதைத் தவிர்த்திருக்கலாம்.

    ஒரு கார் புறப்படுவதற்கு முன்பு ஓட்டுநர் கார் சக்கரத்தில் காற்று இருக்கிறதா…? இல்லையா…? என்பதைப் பார்க்காமல் விட்டு விட்டால் வண்டி நடுவழியிலேயே நிற்கும் சூழல் ஏற்படும். பயணம் தடைபடும் அதைப்போலவே, காரில் ஓட்டுநருக்கு முன்னால் உள்ள மீட்டரில் எரிபொருள் இருக்கிறதா…? இல்லையா…? என்று காட்டும் மீட்டர் உள்ளது. இதை, கவனிக்காமல் வண்டி ஓட்டிச் சென்று டீசல் இல்லாத காரணத்தினால் நடு வழியிலே கார்கள் நின்ற கதைகள் நிறைய உண்டு.

    வீட்டைப் பூட்டிவிட்டு புறப்படும் போது எலக்டிரிக் சுவிட்சுகள், பேன், டி.வி., பிரிட்ஜ் இவைகளை பலபேர் அணைப்பதை சின்ன விசயமாக மறந்து விடுகிறார்கள். அதனால், பாதிப்பு அதிகமாக உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. திறந்து விட்ட தண்ணீர் குழாயை மூட மறந்து போய் டி.வி., சீரியலில் மூழ்கிப்போன பெண்களினால் எற்பட்ட இழப்பு குறைவானதல்ல.

    சின்ன தொடு கைபேசியை கவனமில்லாமல் தன் பெண் குழந்தைகளுக்கு வாங்கித் தந்தால் அந்தப் பெண் குழந்தைகளுடைய வாழ்க்கை சீரழிந்து போன நிகழ்வுகளும் ஏராளம்.

    வண்டி ஓட்டுநர், பள்ளி வேனில் ஒரு சிறு பலகையிலிருந்த ஆணியைக் கவனிக்காமல் விட்டதால், அந்தப்பலகை நகர்ந்து அந்த ஓட்டை வழியாகப் பள்ளிக்குழந்தை விழுந்து இறந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியதையும் பார்த்திருக்கிறோம். ஒரு பெண் ஓடுகின்ற பேருந்தின் ஓட்டையில் கீழே விழுந்து தப்பித்த நிகழ்வையும் பார்த்திருக்கிறோம்.

    ஒரு எல்.கே.ஜி., படிக்கின்ற குழந்தையை காலையில் பள்ளிக்கு அவசரம் அவசரமாக புறப்பட வைக்கும் போது அந்த தாய் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பட்டுப்பாதத்தைக் காலணிக்குள் நுழைக்கிறாள். காலணிக்குள் ஒரு சிறு தேள் இருப்பதை தாய் கவனிக்கவில்லை. உள்ளே இருந்த தேள் குழந்தையைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. குழந்தை தேள்கடி விஷத்தால் இறந்து விடுகிறது. குழந்தையின் இறப்பிற்கு கவனமின்மை காரணமாக அமைகிறது. அந்தத் தாய் காலணியை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன்பு சுத்தம் செய்திருந்தால் அந்த உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். இது உண்மையில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு. எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்தது.