உங்கள் புத்தகம் மூலம் உங்கள் செயல்பாடுகள் மூலம் உங்களை என் முன்மாதிரியாக வைத்துள்ளேன். சமீபத்தில் 7 கிலோ மீட்டர் தொலைவை நீங்கள் நீந்தி கடந்த சாதனையையும் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்புப் பணியில் நீங்களே நேரடியாக ஈடுபட்டதைப் பத்திரிக்கை வழியாக அறிந்தேன். என் போன்ற இளைஞர்களுக்கு நீங்களே முன் உதாரணம் ஐயா.
அரசின் உயர்ப்பதவியில் வளர விரும்பும் இளைஞர்கள் விரைந்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
நேர நிர்வாகத் திறன் வளர்த்துக் கொள்வது எப்படி?
டி.யோகானந்தன்
திருப்பூர்
எனது புத்தகங்களைப் படித்து விட்டீர்கள் என்பதை அறிந்து மிகிவும் மகிழ்ச்சி அடைகிறேன். புத்தகங்கள் படிப்பது ஒரு நல்ல பழக்கம். தொடர்ந்து வாசியுங்கள். அரசுப் பணிக்கு வரவிரும்பும் இளைஞர்கள், அது ஒரு காவலர் வேலையாக இருந்தாலும் சரி, இளநிலை உதவியாளர் வேலையாக இருந்தாலும் சரி, ஒரு IAS அதிகாரிப் பதவியாக இருந்தாலும் சரி, நிறையப் புத்தகங்கள் வாசித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே வேளையில் சில நூல்கள் எழுதியுள்ளேன் என்பதாலோ அல்லது அரசு உயர்ப் பதவியில் இருக்கிறேன் என்பதாலோ என்னை ஒரு முன் மாதிரியாக நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால் எவரையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவரின் சாதனையைப் பார்த்து வியப்படையலாம் அல்லது பாராட்டலாம். ஆனால், அவரைப்போலவே வரவேண்டும் என்று நினைப்பது பயனற்றது. ஏனென்றால் நீங்கள் வேறு, அந்தச் சாதனையாளன் வேறு. அந்தச் சாதனையாளன் திறமைகள் வேறு துறையிலும், உங்களது அடிப்படை திறமைகள் வேறு துறையிலும் இருக்கலாம். சில வேளைகளில், நீங்கள் முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டவரை விட அதிகமான திறமை உங்களிடத்தில் இருக்கும், அதை வைத்து அதிகமாக உங்களால் சாதிக்க முடியும். இவரைப்போல் செயலாற்றுகிறார் என்று மற்றவர்கள் சொல்வதை விட ‘தனித்தன்மையுடன் ஜொலிக்கிறார்’ என்று இருப்பதே சிறந்தது என்று நான் கருதுகிறேன். உங்களுக்கென்று ஒரு ஆளுமையை (Personality) உருவாக்குங்கள். அப்போது உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்கும். உங்களுக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படும்.
(அ)நீச்சல்…
சிறுவயது முதல் ஆற்றில் நீந்துபவன் நான். எங்கள் ஊரில் எல்லோருக்குமே நீச்சல் தெரியும். ஆறு, குளம், கிணறு என்று நீந்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நான் தேசியப் போலீஸ் அகாடமியில் சேர்ந்த போது நீச்சல் தெரிந்திருந்தாலும் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர், நீச்சல் வீரர் செல்வராஜ் என்ற போலீஸ் காவலரிடம் முறையாக Free Style, Breast stroke, Back stroke, Butterfly ஆகிய நீச்சல்களைக் கற்றுக்கொண்டேன். அதே போலீஸ் தேசிய நீச்சல் வீரர் செல்வராஜ் 1993ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் தந்த பயிற்சிக்குப் பின்னர் ஐதராபாத் தேசிய போலீஸ் அகாடமியில் நடைபெற்ற நீச்சல் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று ‘RD Single Cup for Swimming’ என்ற கோப்பையை வென்றேன். அன்று முதல் இன்றுவரை நீச்சலை விடவில்லை.
கடந்த ஓராண்டுகளாக 45 நீச்சல் வீரர்களுக்கு கமாண்டோ பயிற்சி அளித்து வருகிறேன். இதில் 15 பேர் தேசிய நீச்சல் வீரர்கள். இவர்களுக்கு உயிர்காக்கும் பயிற்சியும் தரப்படுகிறது. மெரினா கடற்கரையில் தண்ணீரில் மூழ்குபவர்களைக் காப்பாற்ற இந்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கடந்த அக்டோபர் மாதம் பாம்பன் பாலத்திலிருந்து குருசடி தீவுவரை 7 கி.மீ., தூரத்தை இரண்டுமணி நேரத்தில் கடந்தோம். கடந்த நவம்பர் மாதம் வான் தீவுக்கும் தூத்துக்குடி நகருக்கும் இடையிலான 8கி.மி., தொலைவை மூன்றரை மணிநேரத்தில் நீந்திக்கடந்தோம். இந்த நீச்சல் பயிற்சி, எங்களுக்கு சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது 1000த்திற்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்ற உதவியது. அதுவும் எந்த இயந்திரப்படகும், இராணுவமும் வருவதற்கு முன்னரே 300க்கும் மேற்பட்டோரை எங்களது உயிர் மீட்பு படகுகள் மூலமாக நீந்திச் சென்று காப்பாற்றினோம்.சென்னைக்கு அருகில் உள்ள மணப்பாக்கம் என்ற இடத்தில் இரண்டாவது மாடியிலும் தண்ணீர் புகுந்தது. குடும்பத்தினர் அனைவரையும் சின்னப் படகில் அழைத்து வந்து பெரியப் படகில் ஏற்றினோம். ஒரு பெண்மணி மட்டும் எனக்கு நீச்சல் தெரியும், நீந்தி வருகிறேன் என்று சொல்லி வீட்டிலிருந்து பெரியப் படகுவரை நீந்தியே வந்தார். ஆச்சரியமாக விசாரித்தேன். அவர், பெங்களூரில் பிறந்தவர், தேசிய வீராங்கனை என்று கூறினார்.நீச்சல் மட்டும் சென்னை மக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தால், அவர்களை மீட்க இராணுவம் தேவைப்பட்டிருக்காது. வெள்ளப்பெருக்கு கூட ஒரு நீச்சல் குளமாயிருக்கும்.
(ஆ)முடிவெடுக்கும் திறன்…