– 2014 – November | தன்னம்பிக்கை

Home » 2014 » November (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றி வேண்டுமா? – 2

    ஆரம்பம் ஆர்வத்துடன் அமையட்டும்

    தனக்கான தொழிலோ, வணிகமோ, தேர்ந்தெடுத்து பிறிதொரு சிறப்பான நிறுவனத்தில் பயிற்சி எடுத்தபின் புதிய முயற்சிக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். பயிற்சி எடுத்த நிறுவனத்தில் பயிற்சியின் போது கிடைத்த அனுபவங்களை அன்னப்பறவை போல் தேர்ந்தெடுத்து கொள்ளுதல் சிறப்பு. நம்முடைய புதிய சிந்தனைகளையும் செயல்படுத்துவதில் தவறில்லை. ஆரம்பம் ஆடம்பரமாக இல்லாமல் தனது ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கட்டும். “முயலாக ஓடி தோற்பதை விட ஆமையாக நடந்து சென்று வெற்றி பெறுவதே சாமர்த்தியமாகும்”.

    தொழிலுக்குத் தேவையான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தெளிவாக இருக்க வேண்டும். மிகச்சிறப்பான இடமாகவும், மலிவான மதிப்பிலும் இருந்தால் பொருளாதார வலிமை தாராளமாக இருந்தால் சொந்தமாக ஆக்கிக் கொள்வது சிறப்பு, தொடக்கத்தில் சிறுகச்சிறுக வளர்ந்து பெரிதாக வளரும்போது வாய்ப்பாக இருக்கும். வாடகை இடமாக இருந்தால் நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என ஆராய வேண்டும். குடியிருக்கும் வாடகை வீடு போல் தொழில் நிறுவனங்களை அடிக்கடி இடம் மாற்றுதல் செலவும் கூடுதல் சிரமமும் கூடுதல். தொழிலுக்கான இடம் மக்கள் தயக்கமின்றி வந்து போகும் இடமாகவும், போக்குவரத்து, தண்ணீர் வரவும், கழிவு நீர் போகவும், மின்சாரம், காற்று, வெளிச்சம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியதாக இருத்தல் நல்லது.

    ஆடம்பரமும், கவர்ச்சியையும் விட அமைதியும், சுத்தமும் முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலுக்குள் நுழைந்துவிட்டால், ஓய்வு பொழுதுபோக்கு அம்சங்கள் சிறிது காலம் ஒத்தி வைத்துவிட வேண்டும்.

    “மெய்வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்

    எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி

    அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்

    கருமமே கண்ணாயினார்”                                                                                                                        (குமரகுருபரர்)

     முதலீடு முடங்கிப் போக வேண்டாம்

    சரியான தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதற்கான இடத்தைத் தேர்வு செய்துவிட்டு தொழிலுக்கான முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். வளர்ந்துவிட்ட நிறுவனத்துக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் போட்டி போட்டி நிதிஉதவ முன்வருவார்கள். ஆனால் புதிதாக தொழில் தொடங்குவோரின் ஆரம்ப காலகட்டத்தில் உதவ யோசிப்பார்கள். எனவே சொந்த முதலீடு ஓரளவுக்கு இருத்தல் அவசியம். அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்குதல் ஆபத்து. எனவே தான் நமது முதலீட்டுக்குத் தகுந்தபடி ஆரம்பத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    வளர வளர பணியாளர்களையும், தொழில்நுட்ப இயந்திரங்களையும் கூட்டிக் கொள்வது சிறப்பு. “சிறுகக் கட்டி பெருக வாழ்” என்பது பழமொழி. தொழில் சிறக்க, சிறக்க, சிந்தனையுடன் செயல்பட்டு வேண்டிய வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். விடாமுயற்சியும், கடுமையான உழைப்பும் தீவிரமான தேடுதலும் முழுமையான ஈடுபாடு இருக்கும் பொழுது வெற்றிக்கனி உங்கள் கைகளில். தங்களின் வளர்ச்சியைக் கண்டு யோசித்தவர்கள் உங்களுடைய முகவரிக்காக தவம் கிடப்பார்கள். தாங்கள் உயர்ந்து நிதியைப் பெறவாய்ப்புக் கிடைத்தால், சிறந்த தொடர்பு வைத்து சிறப்பான வாடிக்கையாளராக வளர்ச்சி அடையுங்கள். வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்! உயருங்கள் உங்கள் உழைப்பால்!

    உழைப்பிற்கும் உண்டோ உற்ற எல்லை?

    விடாமுயற்சிக்கு என்றுமே தோல்வி இல்லை.

    இந்த இதழை மேலும்

    தொழில் திறனை வளர்ப்பது எப்படி?

    அன்பு மிக்க தொழில் முனைவோருக்கு வணக்கம். உற்பத்தியாளர்கள், சந்தைப்படுத்துவோர், வியாபாரிகள் என பல்வேறு பகுதிகளைக் கொண்டது வணிகத்துறை.

    இதில் வெற்றி பெற சில விபரங்களை கீழே தந்திருக்கிறேன். இவை அனுபவமிக்க நிதர்சனங்கள். இதில் சில உற்பத்தியாளர்களுக்கு, சில சந்தை படுத்துவோருக்கு, சில வியாபாரிகளுக்கு பொருந்தும். பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் படியாக விபரங்களைத் தொகுத்திருக்கிறேன்.

    யாரொருவருடன் நீ வியாபாரம் செய்கிறாயோ அவன் நஷ்டமடையாமல் நீ பார்த்துக் கொள்ள வேண்டும்.

    Good Packing is a Silent Salesman- நேர்த்தியாக பேக் செய்யப்பட்ட பொருள் அமைதியான விற்பனையாளன். எனவே பொருட்களை பேக் செய்வதில் தனித்திறன் வேண்டும்.

    கொடுக்கும் காசுக்கு முழுமதிப்பு இருக்கிறது என நுகர்வோர் உணர வேண்டும்.

    “இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண்விடல்” என்ற குறளுக்கு ஒப்ப எந்தப் பணியை எவர் திறம்பட செய்வர் என்று ஆராய்ந்து அந்த பணியை அவரிடம் விட வேண்டும்.

    வாடிக்கையாளர்களை மதிப்புடன் கையாள வேண்டும்.

    நமக்கு போட்டியாக சந்தையில் உள்ள பொருள்களை விட எல்லாவிதத்திலும் நம் பொருளை முன் நிற்கச் செய்ய வேண்டும்.

    கடைசியாக நுகர்வோரே நம் முதலாளிகள் என அனைத்து தரப்பினரும் எண்ணி செயல்படுதல் வேண்டும்.

    காலத்தால் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கபடி நம் தொழிலிலே புதுமைகளைப் புகுத்தி நல்ல பரிணாம வளர்ச்சியைக் கொண்டு வருதல் வேண்டும்.

    பொதுவாக தலைமை பொறுப்பில் உள்ளவர் கவனிக்க வேண்டிய மூன்று அம்சங்கள்.

    அ         நிதி நிலையை சீராக பராமரித்தல்.

    ஆ.       தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையே நல்லுறவு இருக்கச் செய்தல்.

    இ. உற்பத்தியாகும் பொருட்கள் சரியாக சந்தைப்படுத்தப்படுகிறதா? என்பதை இடையறாது கண்காணித்தல்.

    நிறுவனங்களுக்கு தரப்படும் விளம்பரங்களிலே மனதில் நிற்கும் வாசகங்களை இடம்பெறச் செய்தல்

    உதாரணமாக, திருப்பூரில் ஒரு புகழ்பெற்ற ஜவுளி நிறுவனம் நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் அவர்களது விளம்பரத்தில் கையாளும் வாசகம்

    “அணிபவர்கள் சிறப்பை, ஆடைகள் பேசட்டும்” என்பதாகும்.

    Quick fix என்கிற ஒரு ஒட்டும் பசையின் அட்டைப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம்

    Quick fix fix Every Thing

    Except Broken Hearts.

    இந்த இதழை மேலும்

     

    சிரிப்பு

    சிரிப்பு என்ற தலைப்பை பார்த்தவுடன் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை வந்து சேர்ந்தது மனதில்…

    “ஒருத்தி சிரிக்க கூடாத இடத்தில்

    சிரித்துத் தொலைத்தாள்

    அதுதான் மஹாபாரதம்”,

    “ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில்

    சிரிப்பை தொலைத்தாள்

    அதுதான் இராமாயணம்”

    ஆக, இந்திர பிரஸ்தத்திலே தங்களது மாளிகைக்குள் கால் தடுமாறிய துரியோதனனை கண்டு சிரித்த, பாஞ்சாலியைப் பாடியது பாரதம். இராமனுக்கு முடிசூட்ட ஊரே மகிழ்ந்து இருக்க கண்டும், சிரிக்க வேண்டிய நாளில் கைகேயி வருத்தப்பட்டுப் போனதால் பிறந்தது இராமாயணம். இவ்வாறு பல காவியங்களுக்கு சிரிப்பு காரணமாக இருக்கின்றது.

    சிரிப்பு ஒரு மனநிலையின் வெளிப்பாடு என அடையாளம் காணப்படுகின்றது.  மனதை கட்டுப்படுத்துபவர்களால் துன்பத்திலும் சிரிக்க முடியும். இரமண மஹரிஷி, “இடையறாத மகிழ்வான நிலையே இயற்கை. அதைத்தவிர துன்பம் அழுகை எல்லாம் மனதில் வந்துபோகும் ‘பிரமை’ யின் வெளிப்பாடே” என்கின்றார்.

    நண்பர்களோடு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா மூன்று தங்கங்கள் சென்ற போட்டியைக் காட்டிலும் குறைச்சலாகவே பெற்றிருக்கின்றது. மொத்தம் 11. ஆனால்  கபடிப் போட்டி மற்றும் ஹாக்கிப் போட்டிகள் தொலைக்காட்சியில் கண்டபோது மகிழ்ச்சியின் எல்லைக்கே எடுத்துச் சென்றன.

    ஆண்கள் கபடி அணி ஒரு கட்டத்தில் எதிர் ஈரான் அணியை விட, ஏழு புள்ளிகளுக்கும் கீழே தாழ இருந்தது. இந்திய அணியினர் வயது கூடி தெரிந்தனர். ஈரான் அணியினர் இளைஞர்களாக இருந்தனர். இறுதியில் இந்திய அணி கடுமையாக போராடி வென்றது. அணித் தலைவர் இராகேஷ் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தது. ஒவ்வொரு முறையும் பாடிச் செல்லும் வீரரும் ஈரானிய கோட்டுக்குள் செல்லும்பொழுது நாற்காலிக்குள் இருப்பு கொள்ள முடியவில்லை. அனுப் என்றொரு ஆட்டக்காரர் தன் தொடையைத் தட்டியபொழுது தரையின் மேல் கால் பரவி நிற்காமல் துள்ளிக்குதித்தது மனதும் உடலும். நமக்குத்தான் என்றில்லை, 72 வயதான மற்றொரு பார்வையாளரும், எல்லோரையும் விட வேகமாக கைதட்டலும்  வயதை தாண்டி பரபரப்பாக துடித்து வெடித்து சிரித்தார்.

    அறிமுகப்படுத்தப்பட்ட 1998 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கபடியில் இந்திய அணி தோற்றதில்லை என்கின்ற செய்தி வேறு அதிக புன்னகைக்கு ஆதாரமானது. முன்னதாக மகளிர் அணியிலும் தங்கத்தைப் பெற்றிருந்தது இந்தியா. எமிலி டிக்கென்ஸ்னின், “வெற்றி என்பது கரகோஷமும், உற்சாகமும் நிறைந்த போட்டி மகிழ்ச்சிக்குரியதாக கருதப்படுகின்றது என்று  தொடங்கும் பாடலில் “ஜெயிப்புடைய அருமை தோற்றுப் போனவனுக்குத்தான் நன்றாக தெரியும்” என்று சொல்லி இருப்பார்கள். அந்த எழுத்தாளரின் மனது அப்படி. எட்கார்ட் டல்லி, சொல்லி வருகின்ற“வலியுடல்” மனதுக்குள்ளே நிறைந்து போய்விடுகின்றது போல… அதாவது, மனதில் (அது உருவாகும் பொழுதே) சந்தோசம், சோகம், துக்கம், கிண்டல், துடிதுடிப்பு, சுறுசுறுப்பு, சோம்பல், மகிழ்ச்சி, ஆச்சரியம், அளப்பறை, பெருமிதம், கர்வம், கோபம், கரிப்பு, பொறாமை, கருணை, கண்ணோட்டம், கண்டிப்பு, பெருந்தன்மை என கலவையான சமாச்சாரங்களைக் கிலோ கிராம் கணக்கில் கலந்துகட்டிக் கொள்கின்றோம் போல. உடல் வளர்ந்து ஒரு பருவத்திற்கு அடைந்து மூப்படைவது போல மனம் வளர்ந்து அப்படியே உச்சநிலையை அடைந்து பிறகு தேய்மானம் அடைவது போல தெரியவில்லை. எல்லா உடல்களுக்கும் மேக்கப்போட்டு அழகாக்கி கூட்டி குறைப்பது போல மனதை ஃபேர் அண்ட் லவ்லி போட்டு சிவப்பழகை கூட்டுகின்ற குறைக்கின்ற கீரீம்கள் வெகுஜன மார்க்கெட்டிலே விற்பனைக்கு காணோம். இப்படி நிலைமை இருக்க, இன்றைக்கு நான் நல்ல மூடில் இல்லை என்று நிறைய பேர் முடிவு செய்துவிட்டால் பிறகு சிரிப்பாய் சிரித்துவிடுகின்றது அந்த சுற்று வட்டாரமே. உடனே தெர்மா மீட்டர் வெச்சு, சூடு பார்ப்பது போல ஒரு கம்ப்யூட்டரைக் கனெக்ட் செய்து ‘மூடு’ பார்த்துவிட்டால், அதற்கு தகுந்தாற்போல சுற்றியுமிருப்பவர்கள் சுதாரித்துக்கொள்ள முடியும்.

    ஆக, மகிழ்ச்சியின் அளவை நிர்ணயித்துவிட்டால் பிறகு அந்த ஃப்ரபோர்ஷனில் (ல்ழ்ர்ல்ர்ழ்ற்ண்ர்ய்) மாற்றம் எதுவும் வராதா? என்று கராராக கேட்பவர்களுக்கு கள்ளிக்காட்டு இதிகாசத்திலிருந்து ஒரு வரி, பால் திரியுறநேரம் பாத்திரத்திற்கு தெரியாது என்பது போல… மனித மனம் மாறுகின்றநேரம் வாழ்பவருக்கே தெரியாதாம்.

    பிறகு திருவள்ளுவர் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொன்னதுக்கு என்ன அர்த்தமாம்? சமீபத்தில் கால்பந்துப் போட்டி ஒன்றில், 62 வயதுக்கார அனுபவ ஆட்டக்காரர்களோடு (“வயது… மனசில’ இருக்குங்க தம்பி”  – அந்தோணி – அறுபத்திரண்டு) மோத நேர்ந்தது. முப்பதுகளிலும் ஆட்டக்காரர்கள் இருந்தனர். பந்து நெஞ்சளவு வந்தபோது (உலகக்கோப்பை 2014 இறுதிப்போட்டியில் கோட்ஸி அடித்தது போல) உயர எழும்பி தொடையில் வாங்கி அது தரையைத் தொடும் முன்பு மடக்கி வளைத்து அடித்து, கோல் கீப்பரின் கற்பனை சாம்ராஜ்ய சம்பந்தமே இல்லாத கோணத்தில் பந்து கோலாக மாற்றப்பட்டது. அதன்பிறகு இரண்டு மூன்று வாரமானாலும் நினைக்கும் பொழுதெல்லாம் எங்கே இருந்தாலும் புன்னகைக்க வைக்கின்றதே இது… அதுபோல…

    முன்கள ஆட்டக்காரர்கள் போல வாழ்க்கை சிக்கல் வடிவில் பந்து சப்ளை ஆகிறது. அதற்குத் தகுந்து குதித்து, குமுறித்தான், ரிசீவ் செய்ய வேண்டியிருக்கின்றது பிரச்சனைகளை, அதற்கு தினந்தோறும் ஐந்து கீலோமீட்டர் ஓடி வலுவாக வைத்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது, உடலை. மனதோ… இன்னும் இன்னும் அலெட்டாக இருக்க வேண்டியுள்ளது. ஒன்பது பேருடைய உழைப்பால் முன்னேறி வரும் பந்து கோலாக்கப்படாவிட்டால், பாழாக்கப்பட்டு விடுகின்றது. அப்புறம் பால்தான்… அடுத்த… ஆஹ தான்… எதற்கு வம்பு என முன்னேறி ஆடாமல்… பெஞ்சில் அமர்ந்துவிடக் கூடாது… அதனால்தான்… இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்லியிருக்கின்றார் பொய்யா மொழியார். உண்மையில் அதுதான் கோலாக மாறும் வாய்ப்புள்ள விஷயம்.

    ஆசிய ஆண்கள் ஹாக்கி போட்டியிலும் தங்கம் வென்றது இந்தியா. அது டை பிரேக்கர் வரை எடுத்துச் செல்லப்பட்டது. 1998-க்கு அப்புறம் ஆசிய சாம்பியன் ஆகின்றோம். கட்டுரையை எழுதுபவர் கல்லூரியிலிருந்த காலம். இராஜீவ் காந்தி கேல் ரத்னா (1999-2000) மற்றும் அர்ஜினா விருது பெற்றதமிழர் (1985) தன்ராஜ் பிள்ளை சாதித்தது. எவ்வளவு மாற்றங்கள். (ஏமாற்றங்கள் கூட) இப்பொழுதெல்லாம் விளையாட்டில் டைம் குறைத்து விட்டார்கள். இருபது நிமிடங்களாக நான்கு கால் பங்கு விளையாட்டாக (கால் வலிக்காதிருக்கவோ?) ஆடிய பின்னர் டை பிரேக்கர்… பெனால்டி அடிப்பதும் நேருக்கு நேராக கோலியை நோக்கி ஒற்றை ஆட்டக்காரர், பந்தை மட்டையால் டிரிப்பிள் செய்து சென்று கோலடிக்க முட்படுகையில் கோலி ஆக்ரோஷமாக நின்று விழுந்தும் தடுக்கின்றார். இந்தியா ஜெயித்த பொழுது எல்லார் முகத்திலும் சிரிப்பு தான். இருபத்தெட்டு வருசத்து சிரிப்புங்க…

    இதனுடைய வீடியோ பதிவு கிடைக்கும், பார்க்கலாம். ஆனால் முன்பு சொன்ன சொந்த கால்பந்து நிகழ்வு மனசுக்குள்ளே வார்த்தைகளாக மட்டுந்தான் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அதுமாதிரி முன்பு நடந்த சந்தர்பங்களோடு… கடைசி ஓவரில் கடுமையாக அடிக்கனும், டைபிரேக்கரில் கோல் அடிக்கனும் என்கின்றபோது பசங்க கண்ணுல சிரிப்பு தெரியுதாண்ணு… பாருங்க… இருக்கறதில்ல… இருந்தா எப்படியிருக்கும்…

    தசையினை… தீச்சுடினும்… சிவ சக்தியை… பாடும் நல் அகம்… கேட்டேன்னு பாரதியார் சொல்றது இதுதான். நம்பிக்கை நிறைய இருந்தால் முகத்தில சிரிப்பு வந்தாகணுமே. அப்புறம் வெற்றிச்சிரிப்புதான். தன்செயல் என்று நினைத்து தவிப்பது தீர்ந்து போனபிறகு பாரதி சொல்றாரு, தோற்றாலும் சிரிப்புதான்.

    இராபின் சர்மா தனது Greatness Guide புத்தகத்தில் MANA’S என்கின்ற இசைத்தட்ட சிலாகிச்சு எழுதியிருந்தார். மெக்ஸிகன் இலத்தீன் மொழியில்… Amar Es Combatir என்கின்ற ஆல்பம். கேட்டுப் பார்த்தால் நன்றாகத்தான் இருக்கின்றது. காதல் ஒரு போர் என்பது தலைப்பின் பொருள். ஆமாம், ஆமாம், அது போக, சிரிக்கவும் துணிச்சல் தேவைப்படுதே. கண் தெரியாத முகங்கள், மாற்றுத்திறனாளிகளோட முகங்கள் பெரும்பாலும் மலர்ந்தே இருக்கின்றதை கவனிச்சிருக்கோமா? எதையாவதொன்றை நினைச்சுப் பார்த்து சிரிச்சிக்கிட்டோம்னா? மனசும் முகமும் பூத்திடாதா?

    அரைச்ச மாவையே அரைக்காத வாழ்க்கை அன்னிக்குப் பூத்த மல்லிப்பூ மாதிரிங்க. எங்கேயோ கேட்ட நல்ல விஷயம் நாலு… எடுத்து மனசோட பாக்கெட்ல போட்டு வெச்சிக்கிட்டம்னா… திட்டு வாங்குகின்ற சமயங்கள்ள புத்திய தீட்டி வச்சுக்க யூஸ்  பண்ணிக்கலாம். பியூஸ்  புடுங்கினா கூட பீஸ் ஃபுல்லா இருக்கலாம்.

    சந்திரபாபு, சார்லி சாப்லின், எம்.ஆர். ராதா எல்லாம் நெச வாழ்க்கையில சிரிப்பை மிக்ஸ் பண்ணி அடுத்தவங்களுக்கு ஆனந்தத்தை கொடுத்தாங்க. நிறைய ஆச்சரியப்படற விஷயம் என்னன்னாக்க, தூங்கிகிட்டிருக்கிற குழந்தைங்க கூட எதையோ நினைச்சு சிரிச்சிக்குது. மலர்ந்த முகமா மணம் பரப்பி தூங்குது. ஆனா பெரியவங்க கனவு கூட நினைப்புக்கு தகுந்தா மாதிரி காணுறாங்க, கண்ணாலேயே. எல்லாரும் காவல்துறையினர் மாதிரியே ஆராய்ச்சி பண்ணியே குத்திக் கிழிக்கிறாங்க. பயப்பட்டு பயப்பட்டு பயங்கரமா பாக்கிறாங்கோ. பேசும் முன்னாடியே பேயறைஞ்சா மாதிரி ஆகிடறாங்கோ. வொய்… திஸ்… கொலவெறிங்கறேன்…

    சிரிப்பு ஒரு ஆஃக்ஸ்  டி-ஒடோரன்ட்  மாதிரிதான். சட்டுன்னு பத்திக்க வைக்க தெரியனும். ஒருத்தனை கண்ணீர் விடவைக்க கண்ணிமைக்கும் நேரம் போதும். ஆனா புன்னகைக்க வைக்க நிறைய ஃஸ்பிரே  பண்ணா பத்தாது. நெசமாவே ப்ரே பண்ணியாகனும் ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம கொடுக்கிற அளவுதான் முக்கியத்துவம் இருக்குன்னு சொல்றாங்க. ஓஷோ, சந்தோஷத்துக்குள்ளே சாமி இருக்கிறார்னு சொல்றார். ஜன்ஸ்டீன் நம்ப பூமியே ஒரு ஆவரேஜ் கோள்ன்னார். அட, மங்கள்யான் விட்ட நாடு நம்மது. பெரிசா யோசிச்சாக்க சிரிப்பு நிரந்தரமாயிடும். அப்புறம் சிரிச்சாலும் தொலையாது! சிரிப்பும் தொலையாது! அடுத்து நாம யாரையாவது பார்க்கையில் முதல் சிரிப்பு நம்மதாக இருக்கட்டும்!

    இந்த இதழை மேலும்

    அச்சம் என்பது மடமையடா…

    பலர் முன்னிலையில் மைக் பிடித்துப் பேச அழைத்தால், “எனக்குப் பேச வராது; பேசிப்பழக்கமில்லை” என்று சொல்லி வாய்ப்பை மறுக்கிறோம்.

    பஸ் பயணம்; நான்கு ரோடு சந்திப்பில் சிக்னலுக்காகக் காத்திருக்கும் போதே, பயணிகளை அவசர அவசரமாக இறக்கிவிடும் கண்டக்டரிடம், “பஸ் நிறுத்தத்தில் தான் இறங்குவேன்” என்று சொல்ல முடியாமை,

    இளம் வாலிபன், தன் வயதை ஒத்த கன்னிப்பெண்ணைப் பார்த்து, பேச விரும்புகிறான்; அவள் பேச வரும்போது, இவனுக்குப் பேச இயலாமை,

    பயிலரங்கம் ஒன்றில் பயிற்சியாளர் கேட்கும் கேள்விக்கு நன்றாகப் பதில் தெரிந்தாலும், எழுந்து சொன்னால் தப்பாகிவிடுமோ என்ற எண்ணம்,

     பேச்சுப்போட்டியில் பேசத் தயார்நிலையில் உள்ளபோது, முதலில் சென்று பேச முன்வராத நிலை,

    வாசகர்களே! மேலே நீங்கள் படித்தது போன்ற ஏதோ ஒரு நிலையைப் பலர் அனுபவித்திருக்கலாம். இதற்கு என்ன காரணம்?

    பயம்.

    ஆம்! பயம் தான் அனைத்துக்கும் காரணம்.

    சுவாமி விவேகானந்தர், 1893 செப்டம்பர் 11, சிகாகோவில் சர்வமத மகாசபையில் பேசுவதற்காகவே சென்றார். ஆனால், முற்பகலில் தன்னைப் பேச அழைத்த போது, பேசவில்லை. பிற்பகலில் தான் பேசினார். அந்தப் பேச்சும் சுமார் 6 நிமிடங்கள் தான். நியூயார்க் ஹெரால்டு என்ற செய்திப் பத்திரிக்கை, இந்தப் பேச்சுத்தான் தலைசிறந்த பேச்சு; சுவாமி விவேகானந்தரே தலைசிறந்த பேச்சாளர் என்ற செய்தியை வெளியிட்டது.

    இந்த பயம் என்ற உணர்ச்சி (மனநிலை) மனிதராகப் பிறந்து வாழும் அனைவருக்குமே உள்ளது. இது மனதின் ஒருநிலை தான். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மனிதன் குரங்கிலிருந்து தான் தோன்றினான் என்று உறுதிபடக் கூறிவிட்டனர். பயம் என்ற ஒரு குணம். நமக்கு மிருக குணமாகவே வந்துவிட்டது. இது மட்டுமல்ல, இன்னொரு மிருக குணமான கோபமும் சேர்ந்தே வந்துவிட்டது. கோபமும் பயமும் எதிரெதிர் துருவங்கள். ஆனால் நம்மிடம் இரண்டுமே உள்ளன.

    தோற்றம்

    விலங்கினங்கள், தாம் உயிர் வாழத் தேவையான உணவுக்கு தாவரங்களையும், மற்ற உயிரினங்களையுமே நம்பி இருந்தன  இருக்கின்றன. பலமுள்ள பெரிய விலங்கு. பலம் குறைந்த சிறிய விலங்கைத் துரத்திப்பிடித்து, உணவாக உட்கொண்டது (உம்) சிங்கம் தன் உணவுக்காக மானைத் துரத்தியது; மானோ தன் உயிரைக் காத்துக்கொள்ள, சிங்கத்திடம் பிடிபடாமல் ஓடியது.

    பசியால் சிங்கம் கோபத்துடன் துரத்தியது; உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மான் பயத்தால் ஓடியது. இந்த நிலையில் தான் பயமும், கோபமும் உண்டாயின என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயம்

    தைரியமில்லாத மனநிலை, அச்சம், தயக்கம் போன்ற சொற்களாலும் பயத்தைக் கூறலாம். ஒன்றின் மேலுள்ள ஆசை அல்லது விருப்பத்தின் காரணமாக செய்ய வேண்டிய செயலை, ஏதோ காரணத்தால் செய்யாமல் வாழும் மனநிலை தான் பயம்.

    “பசி வந்திடப் 10-ம் பறந்து போகும்” என்பது முன்னோர் சொன்ன அனுபவ மொழி. அதுபோன்றே“பயம் வந்திடப் பின்னே செல்வோம்” என்பது உண்மை மொழி. பயமானது நமது நிகழ்காலத்தையும் வீணாக்குவதுடன், எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. ஒருசிலர் மட்டுமே இதற்கு விதி விலக்காயுள்ளனர். மனித இனம் தோன்றியது முதற்கொண்டு, பயம் என்றஉணர்வானது நம் மனதிலேயே முகாமிட்டுள்ளது.

    பய உணர்விலிருந்து வெளிவந்து, நம் மனநிலையை மாற்றிவிட்டால், வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும். பயம், கோபம் போன்ற உணர்வுகளை மிருகங்களுக்கு வழங்கிய இறைநிலை. மனிதனுக்கு சிந்தித்துச் செயல்படும் 6-வது அறிவை அளித்துள்ளது.

    காரணம்

    பிறந்த குழந்தைக்கு விபரம் புரியும் வரை இந்த பய உணர்வு இல்லை. அது தேளையும் பயமின்றிப் பிடிக்கும்; நெருப்பையும் துணிச்சலுடன் தொடும். அறிந்தபின் மீண்டும் மீண்டும் அதையே செய்யும். ஏனென்றால், அதனால் வரும் விளைவுகளை அக்குழந்தை, ஆராய்ந்து தெளியும் அறிவாற்றலில் உயரவில்லை.

    வளர்ப்பு முறை, விபரம் தெரிதல், கேள்வி கேட்டல் போன்ற பல முறைகளால், ஒரு செயல் செய்தால், அது மோசமான பாதிப்பைத் தரும் என்று தெளிந்தபின், மீண்டும் அச்செயலைச் செய்யாது.

    ஆனாலும் அதை வளர்ப்பவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிந்து, மீண்டும் மோசமான பாதிப்பைத் தரும் செயல்களைச் செய்யும்போது, அதனால் வந்த பலன்களை அனுபவிக்கும் நிலையில் பயம் என்ற உணர்ச்சி உண்டாகிறது.

    அடிப்படைக் காரணம் முந்தைய ஒரு நிகழ்வு அல்லது வேறொருவருடைய அனுபவத்துடன் ஒப்பீடு செய்வதால் உண்டாகும் மனநிலை தான் பயம்.

    உதாரணம்

    லூயிஸ் எல். ஹே என்ற பாட்டி தற்போது 80 வயதுக்கு மேல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வருகிறார். சிறு வயதில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையான சூழலில் ஆரம்பக் கல்வி பயின்றபோது, ஒருநாள் மாணாக்கர்களுக்கு கேக் இலவசமாக வழங்கப்பட்டது.

    வசதியான மாணாக்கர்கட்கு அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்டதைக் கண்டு, தன் முறைவரும்போது, தான் ஆசைப்படும் கேக் கிடைக்குமா? என நினைத்துக் கொண்டிருந்தார். இவரது முறையும் வந்தது; அதற்கு முன்பே கேக் அனைத்தும் தீர்ந்துவிட்டது. ஆசிரியை கேக் துகள்களைத் திரட்டிக் கொடுத்தார். அவருக்கு இவரது ஏழ்மை நிலைதான் தெரியுமே.

    அந்த லூயிஸ் எல். ஹே வாழ்க்கையில் பிறபெண்கள் படக்கூடாத துன்பங்களையெல்லாம் கடந்த பின், பயம் என்ற ஒன்றைத் தன்னிடமிருந்து நீக்கும் வழியைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தினார்.

    அதன்பின் அவரது வாழ்க்கை வளமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைந்தது. அவர்தம் அனுபவங்களை ‘நம் வாழ்வு நம் கையில்’ என்றநூலில் விரிவாக எழுதியுள்ளார். இந்த நூல் உட்பட இவரது 27 புத்தகங்களும் 26 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு சுமார் 50 நாடுகளில் அதிக அளவில் விற்பனையாகின்றன.

    “பயத்திலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது மனப்பயிற்சிகளே” என்கிறார் இவர்.

    இராமாயணம்

    பயத்தின் மறுமுனை தைரியம். சீதையைத் தேடி இலங்கை சென்ற அனுமனைப் பிடித்து, இலங்கை அதிபதி இராவணன் முன் நிறுத்திய போது, இவர், தன் வாலையே ஆசனமாக்கி, இராவணனுக்கு சமநிலையில் அதன்மீது அமர்ந்து இருந்த காட்சியை நினைத்துப் பாருங்கள்.

    தனி ஒருவராகச் சென்ற அவருக்கு, இவ்வளவு தைரியம் எப்படி வந்தது?

    தன்னை, தன் திறமையை அறிந்திருந்ததால் தான் என்பதே உண்மை.

    விலை உயர்ந்த தேநீர்

    பொதுவாக நன்றாக உடை உடுத்தியிருப்போர், செல்வந்தர்கள், பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்கள் நம்மில் பலருக்கு கனவுகளாகவே இருக்கும். தன்னை அறிந்த இளைஞன், தன் திறமையை முழுமையாக நம்பினான். அந்த மாதிரி ஓட்டலுக்கு வருபவர்களைத் தன் வாடிக்கையாளர்களாக்க முடிவு செய்தான். தினமும் தேநீர் அருந்துவதை நிறுத்தி, அந்தத் தொகையைச் சேமித்தான்.

    கணிசமாகச் சேர்ந்தபின், நல்ல உடை ஒன்றை வாடகைக்கு எடுத்து அணிந்தான். நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல் ஒன்றுக்குச் சென்றான். செல்வந்தர்கள் பலர் குழுமியிருந்த பகுதிக்குச் சென்று ஒரு தேநீர் கொண்டுவரச் செய்தான். எல்லோரிடமும் அறிமுகமானான். தன் திறமைகள் என்ன என்பதைச் சிறுகாட்சி மூலம் செய்து காண்பித்தான்.

    மனம் மகிழ்ந்த பலர் தம் நிறுவனத்தில் பயிற்சி வழங்க வாய்ப்பு தந்தனர். உலகின் போற்றத்தகுந்த பயிற்சியாளரானார். பல சுயமுன்னேற்ற நூல்களையும் எழுதி, விற்பனையிலும் சாதனை படைத்தார்.

    யார் அந்த அமெரிக்கர்?

    பதில் தேடுங்கள்; பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பயம் நீங்கப் பயிற்சிகள்

    சிறு ஆலம் விதை தான்; அதனை மூடியுள்ள உறை, அதனை வெளிப்படுத்துவதில்லை. அந்த உறை நீங்கியபின், நிலத்தில் விழுந்து அபார வளர்ச்சி பெற்று ஆகாயத்தையே மறைக்குமளவு வளர்கிறது.

    மனிதர் அனைவருமே திறமைகளுடனேயே பிறக்கின்றனர். பயம் என்ற உறை, அந்தத் திறமைகளை மூடியிருப்பதால், தெரிவதில்லை.

    “என்னால் முடியாது,

    எனக்கு வசதியில்லை”

    இதுபோன்ற பலவற்றைப் பேசுபவர்கள், பயம் என்ற ஒன்றிடமிருந்து விடுபட்டுவிட்டால், எதையும் சாதிக்கும் சாதனையாளர்களாகி விடுவதைப் பார்க்கிறோம்.

    நம்மை மூடியுள்ள அறியாமையால் மூடன் என்ற பெயர் பெறுகிறோம். வானத்தை மேகம் மறைத்ததை, மேக மூட்டம் என்று சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். அறியாமையை அகற்ற ஓரளவு செய்திகளை, விசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

    அறியாமை நீங்கிய நிலையில் ஆணவம் என்ற ஒன்று இயல்பாக வந்து, அலட்சிய மனோபாவத்தைத் தரும். விழிப்பு நிலையில் இருந்து ஆணவம், அலட்சிய மனோபாவம் இரண்டையும் அருகில் வரவிடாமல் செய்யவும்.

    அதன்பின் உணர்ச்சிவயப்படுகின்ற பொழுது பழக்கத்தின் காரணமாக, பயமனநிலைக்குச் சென்று விடும் வாய்ப்பு அதிகமுள்ளதாய், நிதானமாக, திட்டமிட்டவாறு, அடிமேல் அடிவைத்து, செயல்பட்டால், பயம் என்ற மனநிலை நம்மிடம் வரவே பயப்படும்.

    திருவள்ளுவரும் “தீவினை அச்சம்” என்ற தலைப்பில் 10 குறட்பாக்களில் தீய செயல்கள் செய்ய அச்சப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

    பயம் என்ற மனநிலையிலிருந்து விடுபட கீழுள்ள நல்ல பண்புகளை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

    சுயநேசிப்பு

    “உன்னை நீ நேசி”  இதன் விளக்கம். எதற்காகவும், எப்போதும் தன்னைக் குறைசொல்லாத மனநிலை. இந்த மனநிலை அவசியம் தேவை. இதைப் பெற, அதிகாலை நேரம், முகம் பார்க்கும் கண்ணாடியில், அவரவர் முகம் பார்த்து, அந்த உருவத்தை நேசிப்பதாய் சொல்ல வேண்டும். இது பல அற்புதங்களை அளிக்கும்.

    அக்குபிரசர்

    பயத்தால் அட்ரினல் சுரப்பி, அதிகம் சுரந்து, குளுக்கோசை அதிக அளவு இரத்தத்தில் கலக்கச்செய்து கூடுதல் சக்தியை உருவாக்கும். இந்த ஆற்றல் பயத்தை வெளியேற்ற, நம் உடல் மேற்கொள்ளும் வழி. நாம் நம் உள்ளங்கையில் அட்ரினல் சுரப்பி மையத்தை (ஆட்காட்டி விரல், நடுவிரல் இரண்டும் உள்ளங்கையில் சேருமிடத்திற்குக் கீழே சுமார் அரை இஞ்ச் தூரத்திலுள்ள புள்ளி) அழுத்தி, அழுத்தி விடுவதால், அட்ரினல் சுரப்பி, சரியாகச் சுரந்து பயம் என்ற உணர்வை நம் மனதிலிருந்து உதறிவிடும்.

    முத்திரை

    பயம் நீங்க தன்னம்பிக்கை முத்திரை செய்வது உடனடி பலன் தருகிறது. உள்ளங்கையில் நான்கு விரல்களை மடித்து வைத்து, அதன்மீது கட்டை விரலை வைத்து அழுத்திக் கொள்வது தான் இம்முத்திரை. தினமும் காலை, மாலை தலா 5 நிமிட நேரம் இருகைகளிலும் செய்துவந்தால் தைரியம் தானே வரும்.

    மலர் மருத்துகள்

    சிலருக்கு காரணத்துடன் கூடிய பயமும், காரணமே இல்லாத பயமும் இருக்கும். விபத்து, தோல்வி, பேய் போன்றபயங்களும் வரும். இருக்கின்ற பயங்களிலேயே பெரிய்ய்ய பயம்  மரண பயம் தான். மேலுள்ள பயிற்சிகளுடன் ரெஸ்கியூரெமிடி, மிமுலஸ், ஆஸ்பென், ராக்ரோஸ் போன்ற மலர் மருந்துகளை மனநிலைக்கேற்றவாறு சாப்பிட்டால், மிகக்குறுகிய கால அளவில் பயம் நீங்கிய மனிதராகலாம்.

     “அதன்பின் ஜெயமுண்டு; பயமில்லை” என்ற நிலை தான். அச்சம் எனும் பயத்தை அகற்றி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்.

    இந்த இதழை மேலும்

    தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?

    பள்ளி – கல்லூரிகளில் படிக்கும்போதே இந்த வெற்றியின் வாசலைத் தேடும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபடுவது நல்லது.

    பள்ளியில் பயிலும்போதே இளைய உள்ளங்கள் தங்களின் வாழ்க்கையின் குறிக்கோளை (Career goal) தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதாவது, டாக்டராக வேண்டுமா? தொழிலதிபராக வேண்டுமா? வழக்கறிஞராக வேண்டுமா? என்ஜினியராக வேண்டுமா? ஆசிரியராக வேண்டுமா? அல்லது வேறு ஏதேனும் ஒரு தொழில் அல்லது வேலை செய்ய வேண்டுமா? என்பதை இளம்வயதிலேயே முடிவுசெய்துகொள்ள வேண்டும். ஏனென்றால், ஏதேனும் ஒரு தொழில் அல்லது வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கையாக அமைகிறது. தான் செய்கின்ற தொழில் அல்லது வேலையை ஒருவர் அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தால் வாழ்க்கையின் பொன்னான நேரங்கள் வீணாகிவிடும். எனவே இந்தக் குழப்பத்திற்குத் தீர்வுகாண விரும்புபவர்கள் இளமையிலேயே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

    பஸ் பயணத்தில், “எந்த ஊருக்குச் செல்ல வேண்டும்?” என்பதை முதலில் முடிவு செய்தால்தான், “எந்த பஸ்ஸில் செல்ல வேண்டும்?” என்பதைப்பற்றி முடிவு எடுக்க முடியும். இதைப்போலவே, வாழ்க்கையில் “என்ன ஆக வேண்டும்?” என்பதை இளைஞர்கள் முதலிலேயே முடிவு செய்தால்தான் மேற்படிப்பில் என்ன பாடம் எடுத்துப் படிக்க வேண்டும்? எங்கு படிக்க வேண்டும்? என்றமுடிவுகளை எடுக்க இயலும்.

    மேற்படிப்புக்கு ஆலோசனைகள் கேட்க வரும் பல மாணவ – மாணவிகள் என்னிடம் முதலில் கேட்கும் கேள்வி இதுதான்.

    “சார்…. நான் பிளஸ் 2 தேர்வில் 1000க்குமேல் மார்க் வாங்கியிருக்கிறேன். நான் மேற்படிப்பாக எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்?”.

    இதைப்போலவே பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளும் இப்படித்தான் இருக்கிறது.

    “சார்… என் பிள்ளை நன்றாகப் படிக்கிறாள். பிளஸ் 2 தேர்வில் 900 மார்க்குக்குமேல் வாங்குவாள். இவளை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம்? என்ன பாடம் எடுத்துப் படிக்க வைக்கலாம்?” – என்னும் கேள்விகளைக் கேட்பதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தவறுவதில்லை.

    அன்று தகவல்கள் (Information) கிடைக்காமல் பலர் தவித்தார்கள். ‘வாழும் வாழ்க்கைக்கு ஒரே வழிகாட்டி ஆசிரியர்தான்’ என்றும் நம்பினார்கள். இதனால் சரியான தகவல்களை மாணவ – மாணவிகளுக்கு வழங்கி அவர்களுக்குத் தேவையான முடிவுகள் எடுத்தவர்கள் ‘குரு’ என்று அழைக்கப்பட்ட ஆசிரியர்கள்தான். ஏனென்றால் “தகவல்கள் தெரிந்தவர்கள்”, “விவரம் புரிந்தவர்கள்”, “உலக ஞானம் தெரிந்தவர்கள்” என ஆசிரியர்களை மாணவ – மாணவிகள்  நம்பினார்கள். ஆசிரியர்கள் தகவல்களை மட்டும் சேகரித்து வைக்காமல் மாணவ – மாணவிகளின் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளையும் எடுத்து அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உதவினார்கள்.

    இன்று கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. ஆசிரியரை மட்டுமே நம்பியிருந்த கல்விமுறைஇன்று தொழில்நுட்பத்தை நம்ப ஆரம்பித்துவிட்டது. பேஸ்புக் , டுவிட்டர் , வாட்ஸ்அப்   என புதிய தொழில்நுட்ப வசதிகளை இளைஞர்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

    ஆயிரக்கணக்கான தகவல்கள் நாள்தோறும் இளைஞர்களைத் தேடி வர ஆரம்பித்துவிட்டன. தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இண்டர்நெட், செல்போன், காமிரா, வீடியோ கேம், யு டியூப் என பல வழிகளில் தகவல்கள் இளைய உள்ளங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களிடம் வந்து சேர்ந்துவிடுகின்றன.

    தகவல்கள் இப்போது தாராளமாய், ஏராளமாய் இலவசமாய் கிடைக்கிறது.

    இந்தத் தகவல்கள் மன உறுதியையும், நல்ல நம்பிக்கையையும் அவர்களுக்கு வழங்குகிறது. ஆனால் சிறந்த முடிவுகள் எடுக்கும் திறமையை இந்த தகவல்கள் மட்டும் வழங்குவதில்லை. போதிய அனுபவமும்,  முடிவெடுக்கும் திறமையும் தெளிவான சிந்தனையும்  கொண்ட ஆசிரியர்களால் சிறந்த முடிவுகளை எடுக்க இயலும்.

    இப்போது இந்தத் திறமைகள் பெரும்பாலான மாணவ – மாணவிகளிடம் இல்லாத நிலையில் காணப்படுவதால் அவர்களால் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விடுகிறது.

    முன்பு மாணவ – மாணவிகளுக்காக முடிவு எடுத்தவர்கள்  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள். ஆனால் இன்று மாணவ – மாணவிகளே தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்.

    ‘முடிவு எடுத்தல்” என்பது ஒரு தனிக்கலையாகும். வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள்தான் ஒருவருடைய வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. வாழ்க்கை முடிவுகளை தீர்மானிப்பதற்குமுன்பு முடிவெடுப்பதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்துக்கொண்டு அந்தத் தகவல்கள் சரியானவைதானா என்பதை உறுதி செய்து நமது வாழ்க்கையின் குறிக்கோளோடு இணைத்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

    “டீன் ஏஜ்” எனப்படும் வளர் இளம்பருவத்தில் வாழ்வில் முன்னேற்றத்திற்குத் தேவையான தகவல்களில் மட்டுமே கவனம் செலுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செயல்பட இயலாத சிலர் தொழில்நுட்ப உதவியோடு தேவையற்ற தகவல்களையும் சேகரித்து வைக்கிறார்கள். இதனால் வாழ்க்கை முழுவதும் சேதம் அடைந்துவிடும் என்பதை இந்த இளைய உள்ளங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான தகவல்களை அதிக அளவில் சேகரித்து நல்ல முடிவுகளை எடுப்பதற்கான பயிற்சியினை முறையாக மேற்கொள்வது அவசியமாகும். குறிப்பாக – பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்? என்னும் முடிவை பள்ளியில் படிக்கும்போதே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

    அது ஒரு நகரத்தின் சாலை.

    அந்த சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் மாலை வேளைகளில் ஒருவர் வழக்கமாக தனது நாயோடு வந்து உட்கார்ந்திருப்பார். இதனை நாள்தோறும் கவனித்த இன்னொருவர் “சார்…. நீங்கள் தினந்தோறும் உங்கள் நாயோடு வந்து இங்கு உட்கார்ந்து கொள்கிறீர்கள். ஆனால், உங்கள் நாய் இந்த ரோட்டில் செல்கின்றவாகனங்களைப் பார்த்ததும் சத்தம் போடுகிறது. கார், மோட்டார் சைக்கிள் இவைகள் செல்லும்போது அதிகமாக சத்தம் போட்டபடியே வேகமாக அந்த வாகனங்களின் பின்னால் ஓடுகிறது. பிறகு உங்களிடமே வந்து உட்கார்ந்துகொள்கிறது. அந்த வாகனங்களை முந்திச் செல்லமுடியாது என்பதை தெரிந்தபின்பும் உங்கள் நாய் ஓடி, ஓடி சத்தம்போடுகிறதே! இது உங்களுக்கு இடையூறாக இல்லையா?” என்று கேட்டார்.

    நாயின் உரிமையாளர் மெதுவாகச் சிரித்தார்.

    “இந்த நாயினுடைய செயல்களைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அந்த நாயால் எந்த வாகனத்தையும் ஓடிச்சென்று முந்த முடியாது என்பது எனக்குத் தெரியும். அதனால் பிரச்சனையில்லை. ஆனால், இந்த நாய் யாரையாவது கடித்துவிட்டால் பிரச்சனை உருவாகிவிடும். அதன்பின்புதான் நான் இந்த நாயைப்பற்றி கவலைப்பட வேண்டும்” என்றார் அவர்.

    இந்த நாயின் செயலைப்போலத்தான் பலர் தனது வாழ்க்கையில் அர்த்தமற்ற குறிக்கோளை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் அலைகிறார்கள். இதனால்தான் கிராமத்தில் “நாய்க்கு வேலையும் இல்லை, உட்கார நேரமும் இல்லை” என்று பழிமொழியாக இதனைக் குறிப்பிடுவார்கள்.

    அர்த்தமற்ற குறிக்கோள்களை தங்கள் வாழ்க்கையில் வைத்துக்கொண்டவர்கள் தேவையில்லாமல் அங்கும், இங்கும் அலைய வேண்டிய சூழல் ஏற்படும். இவர்கள் நல்ல தகவல்களைத் தேடி அலைந்து திரிந்தாலும் அவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதில்லை. செல்போன், இண்டர்நெட், டி.வி., என நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் இவர்களுக்கு சிறந்த தகவல்கள் கிடைப்பதில்லை. இவர்களது ‘நோக்கம்’ எனப்படும் ‘குறிக்கோள்’ சரியாக இல்லாததால்தான் இவர்களுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. சரியான தகவல்கள் கிடைக்காதபோது எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறான முடிவுகளாக மாறிவிடும். எனவேதான் வாழ்க்கையின் குறிக்கோள்கள் மற்றும் சேகரிக்கும் தகவல்கள் ஆகியவற்றை சிறந்ததாக வைத்துக்கொள்ள வேண்டும். இவை, இரண்டும் தெளிவாக இருந்தால் நல்ல முடிவுகள் தானாக உருவாகும்.

    நல்ல தகவல்கள் நல்ல முடிவுகளை எடுக்க அடிப்படையான ஒன்றாக அமைகிறது. ஆனால், வெறும் தகவல்கள் மட்டுமே வாழ்க்கை முடிவுகளை எடுப்பதற்கு உதவாது. பெற்றோர்களுடைய ஆலோசனையும், பெரியவர்களுடைய வழிகாட்டலும், ஆசிரியர்களின் அறிவுரையும், நல்ல நண்பர்களின் துணையும், சிறந்த புத்தகங்களின் கருத்துக்களும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கு பக்கபலமாக அமையும்.

    பள்ளியில் படிக்கும்போதே என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்க வேண்டும்? என்ன வேலையில் சேர வேண்டும்? என்ன தொழிலில் ஈடுபட வேண்டும்? என்பதைத் தெளிவாக தெரிந்துகொண்டு தேவையான தகவல்களை முறைப்படி சேகரித்துக்கொண்டால் வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். இதன்மூலம் இளம் பருவத்து முடிவுகள் வாழ்க்கைப் பயணத்தின், வெற்றிகரமான முடிவுகளாக நிச்சயம் மாறும்.

    இந்த இதழை மேலும்

    அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!

    நோபல் பரிசாளர் கைலாஷ் சத்யார்த்தி

    2014ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, குழந்தைகள் நல உரிமைகளுக்காக போராடிய இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாயிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    கைலாஷ் சத்யார்த்தி, அன்னை தெரசாவுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலம் விதிஷாவில் பிறந்தவர். இஞ்ஜினியராக, சராசரி மனிதராக இருந்தவர் 1983ம் ஆண்டு ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்’ என்ற குழந்தைத் தொழிலாளர் மீட்பு தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி காந்திய வழியில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்க அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி இதுவரை 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இவரின் தன்னலமற்ற அயராத பணிக்காக அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு விருதுகளை இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

    குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது தான், “வேலையில்லா திண்டாட்டம்”, நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை, குழந்தைகள் கடத்தல் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது என்கிறார் இவர்.

    ஆசிஃப் என்ற சிறுவன் இவரிடம் வேலைக்கு செல்லும் இடத்தில் ‘வலியால் அழுது எங்களை விட்டு விடுங்கள் என்றால் முகத்தில் அறைவார்கள்’ என்றும், காலை 8 மணிமுதல் அடுத்த நாள் காலை 1 மணி வரை நாள் முழுவதும் என் கால்களை ஒரு அங்குலம் அளவும் நகர்த்தாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே தைத்துக் கொண்டிருந்து ஒரு காலை சற்றே அசைத்தால் கூட அடிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறான். இச்சம்பவத்தை கேட்டதிலிருந்து உலகளவில் குழந்தைத் தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்கிற நோக்கத்துடன் இவரால் உருவாக்கப்பட்டதுதான் “பச்பன் பச்சாவ் ஆந்தோலன்” என்ற இயக்கமாகும்.

    30 வருடமாக குழந்தைகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், அனைவருக்கும் கல்வி என்கிற உரிமைக்காகவும் போராடி வரும் இவர், ‘ரக்மார்க்’ என்ற ஒரு புதிய முத்திரையை ஏற்படுத்தி வடமாநிலங்களில் கார்பெட் எனப்படும் தரைவிரிப்பு தயாரிப்பில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை அறிந்து, அதை தடை செய்தார். தரைவிரிப்புகளில் இருந்த விரிப்பான் குழந்தைகளால் தயாரிக்கப்படவில்லை என்று ரக்மார்க் முத்திரை குத்தி உலக நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பச் செய்தார். இதன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான இயக்கங்கள் இவருடன் சேர்ந்து, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கப் பாடுபட்டது. குழந்தையை வேலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெறும் இன்னல்களை நேரடியாக கிராம மக்களிடம் சென்று விழிப்புணர்வு சார்ந்த படங்கள், துண்டுச்சீட்டுகள் மூலம் விளக்கப்பட்டது. அதன்மூலம் நல்ல பலன் கிடைத்தது.

    இவரின் இயக்கத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் சிறு வயதிலேயே சில குழந்தைகள் வாழ்க்கையில் பாதை மாறிப்போய்விடுகிறார்கள். இதனால் திருட்டு, சுரண்டல், முறைகேடு, கடத்தல் போன்ற தொழில்களில் இருப்பவர்களை இனம்கண்டு அவர்களை மீட்டுதல் பணி செய்து வாழ்க்கையில் ஒளிமிக்க கல்வியை பலருக்கு இன்று கொடுத்துள்ளார்.

     “வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தாமல் பள்ளிக்கு அனுப்பி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைக்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

    வயது அடிப்படையில் தான் சிறுவர்களை வேலைக்கு அனுப்ப வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குழந்தைத் தொழிலாளர்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    தனியார் நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில் இங்கு குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என்று அரசாங்கத்திடம் சான்றிதழ் பெறவேண்டும்” என்றெல்லாம் வலியுறுத்தி வருகிறார்.

    நோபல் பரிசு அறிவிப்பு குறித்து கைலாஷ் சத்யார்த்தி அவர்கள்…

    “நவீன காலத்தில் நலிவுற்ற நிலையில் கோடிக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் அமைப்பு பரிசை அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள் உரிமைகளுக்கான எங்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது. குழந்தைகள் நலன் பேண தொடர்ந்து போராடுவேன் என்றும், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு இவ்விருதை சமர்பிப்பதாகவும் அறிவித்தார். 60-வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி தற்போது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

    மலாலா யூசப்சாய்

    மலாலா யூசப்சாய் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள அங்கோராவில் 1997, ஜூலை 12ல் பிறந்தார். இவரது தந்தை ஜியாவுதின் யுசப்சாய், தாயார் தூர்பெகாய் யுசப்சாய். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலிபான்கள் தடைவிதித்தனர். இதனை எதிர்த்து மலாலா பள்ளி சென்று வந்தார். பெண்களின் உரிமைகள் மற்றும் கல்விக்காக சிறுவயதிலேயே போராட துவங்கினார். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்ந்து இணையதளத்தில் கருத்துகள் வெளியிட்டு வந்தார். இதனால் 2012, அக்டோபர் 9ல் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளானார். தலையில் குண்டடிபட்ட மலாலாவுக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் வசித்து வருகிறார்.

    2013ம் ஆண்டு ஜூலை 12ல் மலாலா தனது 16வது பிறந்த நாள் விழாவில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கோரிக்கையை வைத்தார். அதில் பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்று நேரடியாக விவாதித்தார். இந்த நிகழ்வைப் பாராட்டி ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தை மலாலா தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார்கள். அதன்பின்னர் கைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலாவுக்கும் அமைதிக்கான 2014ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் அமைதிக்கான நோபல்பரிசை வாங்கும் முதல் பெண் மலாலா தான். மிகச்சிறிய வயதில் விருது பெற்றவரும் இவரே..

    அமைதிக்கான நோபல் பரிசு குறித்து நார்வே நோபல் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பணத்துக்காக குழந்தைகள் சுரண்டப்படுவதை எதிர்த்து காந்திய வழியில் பல்வேறு அமைதிப் போராட்டங்களை நடத்தியது. பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஓர் இந்து ஓர் முஸ்லிம், அதிலும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் இருவரும் ஒரே மாதிரியாக கல்வி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று உலகில் 168 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 2000ம் ஆண்டில் இதைவிட 78 மில்லியன் அதிகம் இருந்தது. எனவே குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்காமல், முற்றிலும் இல்லாமல் செய்யும் லட்சியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலாலா பெண் குழந்தைகள் கல்விக்கான அடையாளமாக மட்டுமின்றி உலக அமைதிக்கான அடையாளமாகவும் திகழ்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

    பெற்ற விருதுகள் விபரம்

    சத்யார்த்தி அவர்கள் சேவையைப் பாராட்டி பல நாடுகள் இவருக்கு பரிசுகளும், விருதுகளும் கொடுத்து கௌரவித்துள்ளன.

    •         தி ஆக்னெர் சர்வதேச அமைதிக்கான விருது
    •         தி ட்ரம்ப்டர் விருது
    •        தங்க கொடி விருது
    •        விடுதலை விருது
    •        இத்தாலிய செனட் பதக்கம்
    •          ஜனநாயக பாதுகாவலர் விருது

    போன்ற விருதுகள் பெற்று தனது சேவையின் மகத்துவத்தை உலகம் போற்றும் வண்ணம் வெளிப்படுத்தியுள்ளார்.

    ஆல்பிரட் நோபல் யார்?

    இவர் ஸ்வீடன் நாட்டில் அக்டோபர் 21, 1833ம் ஆண்டில் பிறந்தார். பெற்றோர் இமானுவேல் நோபல், கரோலினா அன்ரியெட்டே நோபலுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார்.

    இளம் வயதில் பொறியாளராக பணியாற்றினார். அதன்பிறகு வெடிமருந்து பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். இவர் வேதியியாளராகவும், பொறியாளராகவும், ஆயுதத் தயாரிப்பாளராகவும் பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்தார். ஆயுதப் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கி அதன் பொறுப்பாளராக பணியாற்றினார். அதன்மூலம் பெரிய செல்வந்தரானார். தனது இறுதி காலத்தில் தான் பெரும் மதிப்பு மிக்க சொத்தைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார். டிசம்பர் 10, 1896ம் ஆண்டு இத்தாலியில் மறைந்தார். இவர் நினைவாக ஆண்டுதோறும் பல்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவம் செய்யப்படுகின்றது.

    நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

    ஆண்டுதோறும் வழங்கப்பெறும் இப்பரிசு பல பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அவை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், உலக அமைதி ஆகிய பிரிவின் கீழ் வழங்கப்படும். இதுவரை இந்திய அளவில் நோபல் பரிசு பெற்றவர்களின் விபரங்கள்.

    •       இரவீந்திரநாத் தாகூர் – இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1913ம் ஆண்டு பெற்றார்.
    •       சர்.சி.வி. இராமன்  இயற்பியலுக்கான நோபல் பரிசை 1930ம் ஆண்டு பெற்றார்.
    •       ஹர்கோவிந்த் கொரானா  மருந்தியலுக்கான நோபல் பரிசை 1968ம் ஆண்டு பெற்றார்.
    •       அன்னை தெரசா  உலக அமைதிக்கான நோபல் பரிசை 1979ம் ஆண்டு பெற்றார்
    •       சுப்ரமணிய சந்திரசேகர்  இயற்பியலுக்கான நோபல் பரிசு 1983ம் ஆண்டு பெற்றார்
    •      அமர்த்தியா சென்  பொருளியல் துறைக்கான நோபல் பரிசை 1998ம் ஆண்டு பெற்றார்
    •       கைலாஷ் சத்யார்த்தி – அமைதிக்கான நோபல் பரிசு 2014ம் ஆண்டு பெற்றார்.

    2014ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்

    ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதான நோபல் பரிசு 2014ம் ஆண்டு பெற்றவர்கள்,

    வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எரிக்பெட்சிக், வில்லியம் ஈமோர்னர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மருத்துவம் மற்றும் உடலியல் துறைசார்ந்த விருதினை நார்வே நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் மோசர், மே-பிரிட் மோசர் ஆகியோருக்கும், அமெரிக்காவைச் சார்ந்த ஜான்ஓகீஃப்-க்கும் வழங்கப்பட்டுள்ளது

    இயற்பியலுக்கான நோபல் பரிசு இசாமு அக்காசாக்கி, இரோசி அமானோ ஆகியோருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த சுக்கி நாக்காமுரா என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    பொருளியலுக்கான பரிசை சோலன் திரோல் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மொதியானோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    கடலோர காவல்படையின் சார்பாக அமெரிக்கா சென்ற பயண அனுபவங்கள்?

    கே. வெள்ளியங்கிரி

    அடிவல்லி, உடுமலை

    “பயண அனுபவங்களை மறக்கமுடியாத அனுபவங்கள்” என்பர். அது போல எனக்கும் இந்தஅனுபவம் மறக்கமுடியாத அனுபவமாகவே இருந்தது. வெளிநாட்டுபயணங்களில் பலவித அனுபவங்களை நாம் பெற முடிகிறது. இதுவே ஒரு கல்வியாகும். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குத் தரப்படும் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். இது என் இரண்டாவது அமெரிக்க பயணம். வாஷிங்டன் DC (இது அமெரிக்காவின் தலைநகரம்) மற்றும் நியூயார்க் நகரில் பயிற்சி நடந்தது. NYBD இது நியூயார்க்மாநகரகாவல்துறை ஆகும். இந்தபயிற்சி நிறுவனம்தான் உலகிலேயே மிகப் பெரிய காவல் துறையாக கருதப்படுகிறது.

    இத்துறையுடன் பிறதுறைகளுடன் இணைந்து பயிற்சி நடத்தப்பட்டது. இதில் 2001, செப்டம்பர் 9, நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களைத் தீவிரவாதிகள் தாக்கிய போது அந்தத் தீவிரவாத தாக்குதலை நேர்கொண்ட அதிகாரிகள், பாஸ்டன் மராத்தான் குண்டுவெடிப்பின் போது தீவிரவாதி களைத் துரத்திப் பிடித்த அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்களின் அனுபவங்களையும் ,எதிர்கொண்ட முறைகள் பற்றியும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஒரு புதிய நாடாக இருந்தாலும் 30 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய நாடாகவே இருக்கிறது. இந்தியாவை விட நான்குமடங்கு நிலப்பரப்பு அதிகம். இயற்கை வளங்கள், மனித வளம் அதிக அளவில் இருக்கும் நாடு. தொழில்நுட்பம், கல்வி, வர்த்தகம், விளையாட்டுத் துறை மற்றும்ஆராய்ச்சி துறையில் நல்ல முன்னேறிய நாடு எனக் கூற முடியும்.

    இவர்கள்தேசியபாதுகாப்புக்கு (உள்நாட்டு, வெளிநாட்டு) மிகவும்முக்கியத்துவம் தருகிறார்கள்.செப்டம்பர் 9 நியூயார்க்நகரில்நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் மிகவும் கவனமாகபாதுகாப்புக்கொடுத்து வருகிறார்கள். இதைமேலும் பலப்படுத்த தாய்நாடு பாதுகாப்புத்துறையை ஏற்படுத்தி காவல்துறை உட்பட அனைத்துதுறைகளையும் அதன் கீழ் கொண்டுவந்துள்ளார்கள். இதன்மூலம் அமெரிக்காவுக்கு வருகின்ற அனைத்துப் பயணிகளையும் தீவிரமாக பரிசோதிக்கிறார்கள். ஒருநாள் மட்டும் 11 இலட்சம் விமானப் பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சோதனைக்குஉட்படுத்தப்படுகிறார்கள்.

    சட்டத்திற்குப் புறம்பான எந்த ஒரு பொருளையும் அமெரிக்காவிற்குள் கொண்டு வர அனுமதிப்பதில்லை. அமெரிக்காவிற்குள் வரக்கூடிய சரக்குகப்பல்கள் அமெரிக்காவிலேயே சோதனை செய்கிறார்கள். புறப்படும் நாட்டிலேயே இக்கப்பல்களைப் பரிசோதனை செய்கிறார்கள். அமெரிக்காவிற்குச் செல்லும் ஒவ்வொருவரையும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். தங்கள் நாட்டில் சட்டத்திற்குப்  புறம்பாக குடியேறுபவர்களைத் தடுக்க மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காகபெரும்முயற்சி எடுக்கிறார்கள்.

    சட்டத்திற்குப் புறம்பாக அந்நாட்டில் குடியேறுவது  இங்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது. உள்நாட்டைப் பாதுகாக்கும் காவல்துறைக்கு மிகப்பெரிய வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். நியூயார்க் நகர காவல்துறைக்கு ‘ஹெலிகாப்டர்கள்’ ரோந்து பணிக்காக தரப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்மூலம் கேமராக்களைக் கொண்டு  ஒவ்வொரு தெருவையும் கண்காணிக்கிறார்கள்.

    கணினி தொழில்நுட்பம், துப்பாக்கி தடவியல்தொழில்நுட்பம், புலனாய்வுதொழில்நுட்பம் போன்றவை நிலையாக பயன்படுத்தப்படுகின்றது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது. நமது நாட்டில்வேறு விதமான பிரச்சனைகளை சமாளித்து அதைச்சார்ந்த அனுபவங்கள் நமக்கு நிறைய இருக்கின்றது. இந்த அனுபவங்களை எல்லாம் அமெரிக்கதுறையினர் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    அமெரிக்காவாய்ப்புகள் பல நிறைந்தநாடாக  இருக்கிறது. இங்குபடிப்பறிவும், தொழில்நுட்பவல்லமையும், உழைக்க விருப்பமும், புதிதாக எதையாவது கண்டுபிடிக்கவேண்டிய முனைப்பும் இருந்தால் உயர்ந்த நிலைக்கு வந்துவிடலாம். இதன் மூலம் பெருமைகளும் பெரிதளவில் கிடைக்கின்றது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து சென்ற மருத்துவர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், தொழில்அதிபர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

    பொள்ளாச்சியைச்சேர்ந்த கார்த்திகேயினி என்ற டாக்டரையும், அவரது கணவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரான சிங்காரவடிவேலு அவர்களையும் அங்கு சந்தித்தேன். அவர்கள் எனது நண்பர்கள். இவர்கள் அயராத உழைப்பால் அங்கு உயர்ந்த  நிலையில் இருக்கிறார்கள். எனினும் எளிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்கள் பலருக்கு கல்விக்கென உதவிகள் செய்து கொண்டு வருகிறார்கள்.

    பிறகு என்னுடன் கல்லூரியில் படித்த கோவையைச் சேர்ந்த மன்சூர் அலி என்பவரது குடும்பத்தைச்சந்தித்தேன். மன்சூர்அலி அங்கு ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக உயர்நிலையில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி பல நண்பர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. ஒரு சிலரை மட்டும் சந்திக்கவாய்ப்பு கிடைத்தது.

    இந்தியாவிலிருந்து சென்ற சத்தியனெத்தல்லா என்ற இளைஞன் உலகிலேயே மிகப்பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியான மைக்ரோசாப்ட் கம்பெனியில் முதன்மை அதிகாரியாக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து மகிழ்வடைந்தேன். இது பெருமைப்படக்கூடிய நிகழ்வு. இந்த செய்தியை படிக்கும் இளைஞர்களான  நீங்கள் உங்களின் கல்வித்தரத்தையும், தொழில்நுட்ப மேலாண்மையையும், வேலை பார்க்கும் ஆர்வத்தையும், தலைமைப் பண்பையும், தொழில்திறனையும் வளர்த்துக் கொண்டால் அமெரிக்காவில் வேலையில் சேரமுடியும் என்பது மட்டுமல்லாமல் வேலைக்குச் சேர்ந்த பிறகு பிறநாட்டு மக்களோடு நடக்கும்போட்டிகளில் வெற்றி பெற்று பல நிறுவனங்களில் உயர்பதவியைப் பெறமுடியும்.

    இறுதிகாலங்களில் நீங்கள்  ஈட்டிய செல்வங்களை வைத்து தாய்நாட்டிற்கு திரும்பி ஒரு சிறந்த தொழில்தொடங்கி பல்லாயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை தர முடியும்.

    நாசாவிற்கு சென்றிருந்தேன். அங்கு சந்திரனில் சென்ற விஞ்ஞானி சார்லஸ்போல்டன் அவர்கள் தரையிறங்க சிரமப்பட்ட தருணம் அது. அப்பொழுது “இதை வெற்றிகரமாக செய்வீர்களா?” என்ற கேள்வி எழுந்தது.“தோல்வி என்பது எனக்கு பொய்யான வார்த்தை. அந்த வார்த்தை என் வாழ்வில் இருக்கவே இருக்காது என்று கூறினார். எவ்வளவு பெரிய ஆபத்தான சூழ்நிலையாக இருந்தாலும் தோல்வியே இருக்காது என்று சந்திரனிலிருந்து அந்தவிஞ்ஞானி கூறியவார்த்தைகள் இந்தியாவரும்வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    தோல்வியைக் கண்டு அஞ்சாதவர்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். பலமுறை தோற்றபிறகு தான் மின்சார விளக்கைக்கண்டு பிடித்தார் தாமஸ் ஆல்வா எடிசன். விமானத்தைக் கண்டுபிடித்த ரைட்சகோதரர்கள், தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல், இயற்பியல் தத்துவஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் போன்றவர்கள் உலகறிந்த சான்றோர்கள்.

     சிங்கார வேலு மற்றும் மன்சூர் அலி, கார்த்திகேயினி ஆகிய தமிழ்மக்கள் அமெரிக்காவில் சாதித்ததைப்போல உங்களாலும் சாதிக்கமுடியும்.அதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பயிற்சியை இன்று, இப்பொழுது தொடங்குங்கள்.அதுதான் பிறந்த நாட்டிற்கும், பெற்றெடுத்த பெற்றோருக்கும் பெருமையும், மகிழ்ச்சியும் தரும் என்பதில் சற்றும் ஐயப்பாடில்லை.

    இந்த இதழை மேலும்

    உள்ளதோடு உள்ளம்

    நீண்டநாட்களாய்அந்தப்பேருந்தில் தவறாமல்பயணித்து வரும் பயணி அவர். ‘பேருந்துநாள்’ கொண்டாட்டம் பிரம்மாண்டமாகநடந்தபோதுபத்திரிக்கையாளர் ஒருவர், அந்தப்பயணியிடம்இந்தப்பேருந்தில்உங்களுக்கு கிடைத்தஅனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்என்றார்.

    உடனே அவர், “ஒருமுறை சரியான சில்லறை கொடுத்துபயணச்சீட்டு எடுக்கவில்லை என்பதற்காக அன்றைய நடத்துனர் என்னை படாதபாடுபடுத்திவிட்டார். அதனை என்னால் மறக்கமுடியாது”என்றார்.

     “அவர் பெயரைச் சொல்ல முடியுமா?”

    “நன்றாக ஞாபகம்இருக்கிறது. அவர் பெயர் ரவி”என்றார்.

    “இன்னும் வேறு ஏதாவது அனுபவம்…”

    “இருக்கிறதே… ஒருமுறை அவசரத்தில்பேருந்தில் ஏறிவிட்டேன். பயணச்சீட்டு எடுக்கக்கூட பணம் இல்லை. அப்போது அன்றைய நடத்துநர் பரவாயில்லை நாளைக்கு கொடுங்க”என்று அன்று பயணம் செய்ய உதவினார்.

    அருமை…அவர்பெயரைசொல்லமுடியுமா?

    மன்னிக்கணும்…அவர் பெயர் ஞாபகத்தில் இல்லைஎன்றார்அந்தப் பயணி.

    நல்லது அல்லாதவற்றை மனம் என்றும் சுமக்கிறது. நல்லதை மனம் எளிதாக தவிர்த்துவிடுகிறது. இந்நிலையிலிருந்து மாறுவோம்…தீயவைகளை மனதிலிருந்து அழிப்போம். நல்லவைகளை மனம் எங்கும் ஆழமாய் பரப்பிவைப்போம்.

    நம்மோடு எப்போதும் பயணப்படும்

    அர்த்தமுள்ள வாழ்வு… ஆயுள் முடியும்வரை…