நீங்கள் தனித்தன்மையோடு இருங்கள்
தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் செயல்பட்டு வரும் நீங்கள் உங்களுக்கென்று ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உடையிலோ, நடையிலோ, செயல் முறைகளிலோ எதிலாகட்டும், அவைகளில் நீங்கள் தனித்தன்மையோடு இருந்தால் உலகம் உங்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கறுப்புக் கண்ணாடி அணிந்து தலையில் வெள்ளைத் தொப்பியுடனும், தூய வெள்ளை உடையுடனும் இறுதி வரையிலும் காட்சியளித்தார். அவர் எங்கே சென்றாலும், இந்தப் பாணியில் செல்வது தான் அவர் வழக்கம். இதன் மூலம் தமிழக மக்களை அவர் எளிதாகக் கவர்ந்து விட்டார். முன்னாள் பாரதப் பிரதமர் நேரு ஷர்வாணி உடையுடனும், தலையில் தொப்பியுடனும் காட்சி தந்தார். ‘ரோஜாவின் ராஜா’ என்று அழைக்கப்பட்ட நேரு, உடையிலும், நடையிலும், பாவனையிலும், கொள்கையிலும் ஒரு தனித்தன்மையை ஏற்படுத்தினார் என்பதை உலகமே அறியும். அது போன்று நீங்களும் ஒரு பாணியை வகுத்துக் கொண்டு தனித்தன்மையோடு இருக்கலாமே! தன்னம்பிக்கை மிகுந்தவர்களால்தான் தனித்தன்மையோடு திகழ முடியும். தன்னம்பிக்கை இல்லாதவர், ‘நான் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டால் என்னை விமர்சனம் பண்ணுவார்களா? நான் அந்த உடையைப் போட்டுக் கொண்டால் என்னைத் திட்டுவார்களா? நான் மீசையை மழுங்க எடுத்து விட்டால் என்னைக் கேலி பேசுவார்களா?” என்றெல்லாம் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, எதையும் செய்ய முடியாமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருப்பார். நீங்கள் இவ்வாறு இல்லாமல் தன்னம்பிக்கையை மனதிலேற்றி, மற்றவர்கள் உங்களை நல்ல முறையில் பாராட்டும் வண்ணம் தனித்தன்மையோடு இருங்கள்!!
அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகியோர் மிகச்சிறந்த வீரர்களாக விளங்கியதற்குக் காரணம், அவர்கள் மற்றவர்களின் பாணியைப் பின்பற்றாமல் தனித் தன்மையோடு விளங்கியது தான்! தன்னம்பிக்கை என்ற சிறந்த வெற்றிக் கொடியை ஏந்திக் கொண்டு உலகையே அவர்கள் வலம் வந்தார்கள். எவரையும் அவர்கள் சார்ந்திருக்காமல் தங்களுக்கென்று தனித்தன்மையோடு விளங்கியது தான்!! தன்னம்பிக்கை என்ற சிறந்த வெற்றிக் கொடியை ஏந்திக் கொண்டு உலகையே வலம் வந்தார்கள்.
மற்றவர்கள் உங்களைப் பாராட்ட வேண்டும் என்று ஏங்காதீர்கள்
மற்றவர்கள் உங்களைப் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பாதீர்கள். அவர்கள் உங்களைப் பாராட்டிவிட்டு, நீங்கள் இல்லாத சமயத்தில் மற்றவர்களிடம் உங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவார்கள். இவர்கள் பாராட்டையெல்லாம் நீங்கள் விரும்பத்தான் வேண்டுமா? அவர்கள் எப்பொழுதும் உங்களைப் பாராட்டிக் கொண்டே இருந்தால், அந்தப் புகழ்ச்சியில் மதி மயங்கி, அவர்களை நன்முறையில் மகிழ்விக்க வேண்டும் என்பதிலேயே உங்களுடைய கவனம் சென்றுவிடும். அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு கொள்கை இல்லாமலேயே போய்விடும். மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள் என்று ஏங்கிக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்கள் உங்களைச் சீராட்டினாலும், பாராட்டினாலும் நீங்கள் அவைகளில் லயித்து விடாமல் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அந்தச் செயல்களைச் செய்து கொண்டே இருங்கள்.
உங்களைக் கெடுப்பதற்கு உங்களால்தான் முடியும்
சில செயல்களை நீங்கள் செய்ய வேண்டும் என்று மற்றவர்கள், உங்களைத் தூண்டி விட்டுக் கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் அந்தச் செயல்களை நீங்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. “என்னால் முடியாது” என்று மறுத்து விடுங்கள். அப்படி நீங்கள் மறுத்து விடுவதன் மூலம் உங்களை வெறுத்து விடுவார்களா என்ன? அவர்கள் உங்களை வெறுக்கட்டுமே! அதனால் நீங்கள் கெட்டுப் போய் விடுவீர்களா?
உங்களைக் கெடுப்பதற்கு எவராலும் முடியாது. உங்களைக் கெடுப்பதற்கு உங்களால்தான் முடியும்! ஆம்!! உங்கள் மனதில் உறுதியில்லாவிட்டால், உங்களை அடுத்துக் கெடுப்பவர்கள் ஏராளமாக இருப்பார்கள். அவர்கள் தகாத வழிக்கு உங்களை இழுத்துச் சென்று உங்களைக் கெடுத்து விடுவார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடாதீர்கள். மனதில் உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். மனதில் உறுதி இருக்குமானால் நீங்கள் எவர்க்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை! புதியதோர் உலகம் செய்திடப் புயலெனப் புறப்படுங்கள்.
நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவனே உண்மையான நண்பன்
இளமைப்பருவத்தில் நீங்கள் உங்களுக்கே உரிய வழியில் செல்லாமல், நண்பர்கள் விரிக்கும் மோக வலையில் விழுந்து விடாதீர்கள் ஒருவர் பொறை, இருவர் நட்பு என்றவாசகத்தை இன்றைய நண்பர்களின் திருக்கூட்டம் பொய்யாக்கி விடத் துடிக்கின்றார்கள். உங்களை உங்கள் வழியிலிருந்து பிரித்துத் தங்களுடைய வழிக்கு அழைத்துச் செல்லக் கவர்ச்சிகரமான வலைகளை விரிக்கின்றார்கள். நீங்கள் அந்த வலைகளில் விழுந்து விடாதீர்கள். உங்களை உங்கள் வழிக்கே செல்லுமாறு தூண்டி உங்களுக்காகப் பல தியாகங்களையும் செய்யத் துடிப்பவனே, உண்மையான நல்ல நண்பன் ஆவான். உங்கள் கொள்கைகளையும், செயல்களையும் உங்கள் பாணியில், அதாவது உங்களுடைய தனித்தன்மையில் உங்களைச் செய்ய விடாமல் தடுப்பவர் எவராக இருந்தாலும் சரி அவரை நீங்கள் ஒதுக்கி வைத்து விடுங்கள். அவரால் உங்கள் தனித்தன்மை, தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, நல்ல நட்பு, மனமகிழ்ச்சி, அன்பு ஆகிய எல்லாமே போய்விடும். திருவள்ளுவரும் ‘நட்பு ஆராய்தல் என்ற அதிகாரத்தைப் படைத்ததன் நோக்கம், நல்ல தோழமை உறவை ஒருவன் பெறவேண்டும் என்ற கருத்தில் தான். புணர்ச்சி பழகுதல் வேண்டாம் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் வள்ளுவர். பண்புள்ள நல்ல தோழமை உறவை ஏற்படுத்திக் கொள்ளாதவன், தனித்திருந்து வாழ்க்கையில் வறட்சியைக் காண வேண்டியதுதான். ஆனால் இது எவ்வளவோ மேலானது.
தீய நண்பர்களுடனோ நீங்கள் அல்லது விரும்பத் தகாத நண்பர்களுடனோ உறவை வைத்துக் கொண்டு உங்களுடைய தனித்தன்மையை இழந்து பத்தோடு பதினொன்றாக நீங்கள் வாழும் போது அதனால் என்ன பயன்? உங்களுக்கென்று ஒரு ஆளுமை வேண்டாமா? உங்களுடைய தனித்தன்மையை வெளியுலகுக்கு வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையின் மூலம் உயர்வு பெற உங்களுடன் உறவாடி மகிழும் உத்தமமான நண்பரையே நீங்கள் மிகச்சிறந்த துணையாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.,
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
என்றும் கூறும் வள்ளுவரின் கருத்து சிந்திக்கத்தக்கது. ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பினையும், குற்றத்தையும், குறைவற்ற சுற்றத்தையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும். அவ்வாறு உங்களால் ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பனே, நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவான்.
நற்பண்புகளிலிருந்து நழுவிவிடாதீர்கள்
பிறரிடம் அன்பு காட்டுதல், இரக்கம் கொள்ளுதல், இனிய வார்த்தைகளை இதமாகப் பேசுதல், கருணைமிக்க உள்ளத்தை பெற்றிருத்தல், ஏழைகளிடம் கூட இன்முகத்துடன் பேசுதல், எவராக இருந்தாலும் அவரை மதித்துப் போற்றுதல் எப்பொழுதும் உண்மையே பேசுதல் நடுநிலைமையைப் பின்பற்றுதல், நீதி நெறியோடு வாழ்தல், மற்றவர்களை இழிவாகப் பேசாமலிருத்தல், கர்வப்படாமலிருத்தல் ஆகிய மிக உயர்ந்த நற்பண்புகளுடன் நீங்கள் எப்பொழுதும் விளங்குங்கள். உங்களைச் சூழ்ந்திருக்கும் கூட்டமும், நண்பர்கள் குழாமும் நற்பண்புகளுடன் விளங்கும் உங்களைத் தங்களுடைய அணியில் சேர்த்துக் கொள்ள, உங்களுக்கு வலை வீசுவார்கள். அவர்கள் வீசும் அந்தக் ‘கவர்ச்சி” வலையில் விழுந்து விடாதீர்கள். தீய பண்புகளை நாளும் வளர்த்துக் கொண்டே போகும் அந்தத் “திருக்” கூட்டத்தில் சேர்ந்தால் உங்களுடைய கௌரவம் உயரும் என்று ஒரு போதும் எண்ணி விடாதீர்கள்.
வானமே இடிந்து விழுந்தாலும் நீங்கள் உங்களுடைய நற்பண்புகளிலிருந்து நழுவி விடாதீர்கள்! நீங்கள் தனித் தன்மையோடு விளங்கினால் அதற்குக் கிடைக்கும் மரியாதையை யாராலும் மதிப்பிட முடியாது.
உங்களுக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்
மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. உலகம் போற்றும் அவருடைய அறவழியும், அவர் உடுத்தியிருந்த அரை ஆடையும் மக்கள் மனத்தைக் கவர்ந்தது. மனிதர்களில் மாறுபட்ட மனிதராக அவரை அடையாளம் காட்டி அவருக்கு மாபெரும் புகழைப் பெற்றுத் தந்தது. காமராசரின் தோற்றமும், குழைவான பேச்சும், ஓயாத தொண்டும் அவர்க்கு ஒரு தனித்தன்மையை உண்டாக்கியது. ‘கர்ம வீரர்’ என்று மக்கள் அனைவருமே அவரைப் புகழ்ந்து போற்றினார்கள். தலைப்பாகையுடன் கம்பீரமாகத் தோற்றமளித்த டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் தன்னுடைய அறிவாற்றலால் இந்தியாவின் பெருமையைப் பன்மடங்கு உயர்த்திக் காட்டினார். புத்தருடைய தவமும், தனித்தன்மையும் “பௌத்த மதம்” என்ற ஒரு மதமே உருவாகக் காரணமாக அமைந்தது. விவேகானந்தரின் கம்பீரமான தோற்றமும், “சகோதரர்களே! சகோதரிகளே!” என்று ஆரம்பித்து (அமெரிக்காவில்) பேசிய பேச்சும், அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தன. நீங்களும் இவர்களைப் போன்று தனிப்பாணியை அமைத்துக் கொண்டு, தொண்டு செய்கின்றபோதுதான் உலகம் உங்களை ஏறெடுத்துப் பார்க்கும். நீங்கள் நீங்களாகவே இருந்து உழைக்கின்றபோது, புகழின் உச்சிக்கே நீங்கள் சென்று விடுவீர்கள்.
எவருடைய பாணியையும் பின்பற்றாதீர்கள்
பாரதப் பிரதமர் நேருவின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்ற எண்ணாதீர்கள். சுவாமி விவேகானந்தர் பாணியில் உடை அணிய வேண்டும். தலைப்பாகை அணிய வேண்டும். அவருடைய பாணியைப் பின்பற்றவேண்டும் என்று எண்ணாதீர்கள். அவர்களுடைய பாணியைப் பின்பற்றுபவர் என்று சொல்லி ரசிப்பார்களே தவிர, உங்களுக்குத் தனித்தன்மை உண்டு என்று எவராவது புகழ்ந்து பேசுவாரா?
நீங்கள் நீங்களாகவே இருந்தால் உங்களுக்கென்று ஒரு தனிப்பாணி அமைந்து விடும். இந்த உலகமே உங்களை வியப்புடன் பார்க்கும். மக்கள் மனதில் உங்களுடைய தனித்தன்மை பதிவாகிவிடும். அந்தப் பதிவை யாராலும் அழிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையை அடையுங்கள். அதாவது நீங்கள் நீங்களாகவே இருங்கள். மற்றவர்களின் பாணியை நீங்கள் கடைப்பிடிக்கும் போது, தான் உங்களுக்குள்ளே மறைந்திருக்கும் திறமைகள் அனைத்தும் அமுக்கப்பட்டுவிடும் .உங்களுடைய ஆற்றல்கள் அனைத்தும் வெளிப்படையாகத் தெரியவேண்டுமானால் நீங்கள், உங்களுக்கென்று சிறந்த ஒரு தனிப்பாணியை விரைந்து உருவாக்கிக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் நீங்களாகவே இருங்கள்! நீங்கள் ஒரு போதும் எவருக்கும் ‘ரப்பர் ஸ்டாம்பு’ ஆக இருக்காதீர்கள்.
உங்கள் மேல் உங்களுக்கு அபரிமிதமான தன்னம்பிக்கை இருக்குமானால், நீங்கள் நீங்களாகவே ஆகி விடுவீர்கள்! உங்களுக்கென்று பல்லாயிரக்கணக்கில் இரசிகர்கள் தோன்றுவார்கள். அவர்களின் இதயங்களைக் கவர்ந்தமைக்குக் காரணம், நீங்கள் நீங்களாகவே இருந்ததுதான! எப்பொழுதும் இடைவிடாது நீங்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை, யாரும் கொடுக்காமலேயே இயல்பாக அமைந்து விடும். அது உங்களுக்கு மேலான உயர்வுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஹிட்லர், முசோலினி, சதாம் உசேன், இடிஅமீன், பின்லேடன் போன்றோர்களும் தனித்தன்மையோடு திகழ்ந்தவர்கள்தான். அபாரமான தன்னம்பிக்கையும், அளவுக்கு மீறிய ஆற்றலும் அவர்களுக்கு இருந்த போதிலும் உலகையே நடுங்க வைத்து விட்டார்கள். இப்படிப்பட்டவர்களால் உலகத்திற்கு என்ன பயன்? இவர்கள் வழியை நீங்கள் பின்பற்றலாமா? எவரையும் சார்ந்திருக்காமல் தனித்தன்மையோடு விளங்கும் நீங்கள் வாய்மை, தூய்மை, நேர்மை ஆகிய பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, தன்னம்பிக்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிப் பல வெற்றிகளைப் பெறுவதற்கு, நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
இந்த இதழை மேலும்