– 2017 – August | தன்னம்பிக்கை

Home » 2017 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அங்கரதம்

    ஒரு கதையோ அல்லது கட்டுரையோ…. சிறுகதையோ? இந்தப்  பொருளை பற்றித்தான் எழுதலாம். இதெல்லாம் கூட எழுதலாமா? என்றெல்லாம் காலங் காலமாக நாமே ஒரு எழுதப்படாத வரையரை செய்து கொண்டு வாழ்ந்தும், எழுதியும், படித்தும், புரிந்தும், ஒப்புக் கொண்டும் வருகிறோம். அதில் இது அடங்குமா? என தெரியவில்லை. ஆனால், ஐந்து கோல்கள் ஒரு நாளில் கால்பந்தில் அடிப்பது ஆழ்மனதில் கால்பந்து உறைந்துபோன ஒருவரால்தான் இப்படி அடிக்க முடியும் என்று தோன்றியது. மத்திய பகுதியிலிருந்து சற்றே உயரமாக குதித்தெழுந்து வந்த பந்தை கோல் கீப்பரின் பக்கம் முதுகை வைத்து நின்று இருந்த ஸ்ட்ரைக்கர் சுழன்று திரும்பி அப்படியே கம்பத்திற்குள் செலுத்தி ஆடுவது என்பது பார்த்துக் கொண்டிருந்த முப்பது நாற்பது ஆட்டக்காரர்களுக்கும் கண்களுக்கு விருந்தாகத்தான் அமைந்து இருந்தது. ஆனால், அதை தத்ரூபமாக அப்படியே எழுதி, படிக்கிறவர்கள் கருத்துக்கும் விருந்தாக்க முடியுமா?

    நாற்பத்திரண்டு வயதில் தினமும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கால்பந்து விளையாடுவது கொஞ்சம்  அதிகமோ? என்று கேட்கத் தோன்றுகின்றது. ஆனால், இது கடந்த மூன்று நாட்களாக மட்டுமே… அதற்கு முன்பெல்லாம், வார இறுதியில் ஒரு நாள் மட்டும் என்று அளவோடு இருந்து வந்தது. இப்பொழுது புது நண்பர்களின் வரவால் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. கிட்டத்தட்ட இருபது முதல் அறுபது வரையிலான வயதில் மொத்தம் ஐம்பது வரையிலான எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சி அமைந்துள்ள அழகான செயற்கை புல்தரை கால்பந்து மைதானத்திற்கு வந்து விளையாடிச் செல்கின்றனர். ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதாலும், கால்தடுக்கி விழுந்தால்… லிகமென்ட் டியர், ஸ்பெரெய்ன் முதல் எலும்பு முறிவு வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்பதாலும் வீரர்கள் பலர் கிரிக்கெட்டோடு விளையாட்டை நிறுத்திக் கொள்வதுண்டு. அதுவும், இரப்பர் பந்து டென்னிஸ் பந்து என்று இன்னும் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.

    புனித இரமலான் திருநாளை ஒட்டி மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்ததில் கால்பந்து ஜூரம் அதிகமானது. முதல் நாளே கால்பந்து விளையாடியது மற்றும் அதற்கும் முதல் நாள் நிறைய இடைவெளி கழித்து நெடுந்தூரம் பேருந்து பயணம் மேற்கொண்டது எல்லாம் சேர்ந்து தொண்டை கரகரப்புடன் சளிபிடிக்க தொடங்கியிருந்தது. வழக்கமாக இப்படியானால் ஒருவாரத்தில் ஒருநாளேனும் கொஞ்சம் அதிக நேரம் படுக்கையில் தூங்கும் லெவலுக்கு ஓய்வெடுக்க வேண்டி வந்துவிடும். ஆனாலும், இம்முறை புதிதாக இரண்டு மூன்று விளையாட்டு வீரர்கள் சேர்ந்துள்ளதாலும், அவர்களே வீட்டிலிருந்து அழைத்துச் சென்று திரும்பிவிட்டு செல்வதாலும், அந்த தொடர்ச்சி விட்டுப்போய்விடக்கூடாது என்கின்ற எண்ணத்தால் சளிப்பிடித்தது கூடத் தெரியாத அளவு விளையாட்டு மும்முரமாக ஜெகஜோதியாக நடந்தது. வாழ்விற்கு கால்பந்து எப்படி பயன்படும்? என்மகன் எட்டாவது படிக்கிறான். அவனை கால்பந்து விளையாட்டில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்று எல்லாம் நிறைய கேள்விகளை மனதிலும், முக நூலிலும் எதிர்கொள்ள நேர்ந்தது.

    பலன் கருதிச் செய்கின்ற பணிகள், இலக்கு நோக்கி பயணிக்கின்ற வாழ்வு இவை நல்லதே. ஆனால், நிறைய வெற்றிபெற்ற சாதனையாளர்கள் தம் வாழ்வில் பலன் கருதாமல் ஈடுபாடு மட்டுமே கருதி சில செயல்பாடுகளில் நேரம் செலவழிப்பது உண்டாம். இசை, கலை, ஓவியம், நடனம், விளையாட்டு, நாடகம் நடித்தல், கதை சொல்லுதல், கவிதை எழுதுதல், பாடுதல் என்று எண்ணற்ற மனதிற்கு விருப்பமான, பயன்கருதா அல்லது பயநோக்கமில்லா கலை அல்லது பொழுது போக்கு நடவடிக்கைகள் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. சுத்தமாக இவை அனைத்திற்கும் பயனேதுமில்லை என்று ஒரேயடியாக ஒதுக்கி வைத்துவிட இயலாது.

    ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவமுறை இப்பொழுது மனதை நோக்கியும் திரும்பியிருக்கிறது என்றால் நம்புவது சிரமமே. மனதும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படும் நிகழ்வுகளின் பொழுது உடலில் இருக்கின்ற பல்வேறு நோய்கள் குணமாவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது என்று சமீபத்திய நோய் எதிர்ப்பியலின் எல்லைப்புறம் என்கின்ற அறிவியல் பத்திரிக்கையில் வந்த கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது.

    சென்ற மூன்று வாரங்களுக்கு முன்பு பணி மாறுதல் ஏற்பட்டது. புதிய பணியிடத்தில் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். மூளை வேகமாகப் பணியாற்ற விளையாட்டு உறுதுணையாக அமைகிறது. டாக்டர் புரூஸ் லிப்டன் என்பவரது புத்தகம் உடல் ஒரு கோடி செல்கள் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டுக்குடும்பம் என்று சொல்கின்றது.

    புதிய உயிரியல் என்ற ஒரு தத்துவத்தை சொல்லித்தர முயற்சிக்கும் அந்தப் புத்தகம் மிகவும் அற்புதமாக தெய்வீகத்தன்மையையும், அறிவியலையும் இணைக்கின்றது என்றால் மிகையாகாது. சரி அதற்கும், கால்பந்திற்கும், தலைப்பான, அங்கரதத்திற்கும் என்னங்க தொடர்பு? என்று நீங்கள் கேட்கலாம்? 2004ல் வந்த பட்டர்ஃபிளை எஃபக்ட் குறித்து விபு கிருஷ்ணா சென்ற வார யு.பி.எஸ்.ஸி. பயிற்சி வகுப்பில் பேசிய பொழுது மேற்கண்ட கேள்விக்கான பதிலை பட்டர்ஃபிளை எஃபக்ட் என்றால், ஒரு விஷயத்தை நாம் மாற்றும் பொழுது, எல்லா விஷயங்களையும் மாற்றுகின்றோம் என்று கூறியதிலிருந்து எடுக்கலாம். அப்படியானால்… விளக்கத்திற்கே விளக்கம் கொடுக்க முற்படுவோமேயானால், சுருக்கமாக உலகில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டேதான் நடைபெறுகின்றன என்பதே ஆகும்.

    மேற்கண்ட பத்தி முதல் முயற்சியில் எழுதப்பட்டது. மதுரை பேராசிரியர், செந்தில் சார் கூறுவார், உங்களுடைய ஒவ்வொரு கட்டுரைக்கும் ஐந்து கட்டுரைகள் அளவு விரித்து விளக்கம் எழுத வேண்டும். ஏன், என்றால், கட்டுரை புரிகின்ற மாதிரி தான் இருக்கிறது. ஆனால், புரியவில்லை, புரிந்தாலும் சரியாய்த்தான் புரிந்து கொண்டோமா? என்று சந்தேகம் வருகிறது. என்றார். அதற்கேற்ப மொத்த கட்டுரையையும் விளக்கி எழுதாவிட்டாலும் மேற்கண்ட பத்தியை விரித்து எழுதலாம்.

    விபு கிருஷ்ணா ஈரோட்டைச் சார்ந்த மாணவர். இந்திய ஆட்சிப்பணித்தேர்வுக்கு தயாராகிறார். அவர் பட்டாம்பூச்சி விளைவு என்று 2004ல் வெளிவந்த ஆங்கில திரைப்படம் குறித்து ஒரு பயிற்சி வகுப்பில் குறிப்பிட்டார். அத்திரைப்படத்தின் தத்துவம், மையக் கருத்து என்னவென்றால், ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்புக்கும், உலகின் மறுபாகத்தில் வேறெங்கோ நடக்கும் நிகழ்வு ஒன்றுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்யும் என்பதாகும். இதைப் படித்தப் பிறகு தொடர்பு  நீங்கள் மீண்டும் ஒருமுறை மேலே உள்ள பத்தியைப் படிப்பீர்கள். சரிபார்ப்பீர்கள். ஏனென்றால், நானும் அதையே செய்தேன்.

    கால்பந்து எபிஜெனிடிக்ஸ் எனப்படும் சுற்றுப்புற சூழல் ஜீன்களின் வெளிப்பாட்டை மூலக்கூறு அளவில் மாற்றி அமைக்கின்றது என்கின்ற கோட்பாட்டின் படி உடல் உறுதி மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றது. எபிஜெனிடிக்ஸ் என்பது சூழ்நிலை மற்றும் பிற புற காரணிகள் மரபணுக்களின் பண்பு. வெளிப்பாட்டை எப்படி மாற்றி அமைக்கின்றது? என்று ஆராய்வது அறிவியல் துறை ஆகும். அதாவது கால்பந்தால் உடல் ஆரோக்கியம் உள்ள செயல்பாடுகள் உயர்கின்றது எனலாம்.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது திருமந்திரம். உடற்பயிற்சி மையங்களில் பெயர் தருவதும், பலவிதமான இயந்திரங்களை நிறுவதும் இக்காலத்தில் மிகவும் விரும்பப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. சாப்பிடும் பொழுது உடல் எடையை குறைப்பதைப் பற்றி கவலைப்படக் கூடாதுங்க, நாளைக்கு நாலு இரவுண்டு அதிகமாக ஓடிக்கலாம் என்று ஊக்குவிக்கும் உறவினர்களும், நண்பர்களும் இல்லத்தினரும் உண்பவர்களுக்கு, உண்மையிலேயே நன்மை புரிவதாகத்தான் நம்பிக் கொண்டு உள்ளனர்.

    தியானம் செய்வதன் மூலமும், கடவுளின் மந்திரங்கள் போல ஒரே நினைவில் திரும்பத்திரும்ப ஜெபிப்பதன் மூலமும், மனக்கட்டுப்பாடு உருவாகி… அது உணவுக்கட்டுப்பாடாக மறுஉருவாகி, உடம்பின் கட்டுக்கோப்பிற்கு அடித்தளம் அமைக்கின்றது. உயிர் வளர்க்கும் உபாயம் உடம்பை திருத்தமாக வளர்ப்பதில்தானே இருக்கின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா. மனம்போல் வாழ்வு என்பதன் மறுபொருளே தெய்வீகத்தன்மை, இனிய தெய்வப்பாடல்களில் “குûயொன்றுமில்லை… குருமூர்த்தி கண்ணா” என்று மனமுருகி பாடியதன் பிறகு… எங்கேயும் நல்லெண்ணம் நிறையும் அன்றோ. அத்தகைய நல்லெண்ணங்கள் நமது “சென்ட்ரல் டாக்மா” என்னும் மைய உயிரியல் கொள்கையை மாற்றி மிகச்சிறப்பான… என்ன விளைவை உருவாக்கும்?

    அதாவது சூழ்நிலை அல்லது மனதின் நம்பிக்கை டி.என்.ஏ.க்களின் பண்பு வெளிப்பாட்டை முடிவு செய்கின்றதாம். காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின், தன்மையின் நூறு ஆண்டுகள் என்கின்ற நாவலில் வரும் நம்ப முடியாத நகைச்சுவை நிறைந்த வர்ணனைகளைப் போல… எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டுமானால்… நமக்கு சளி குமாகிவிடுமென்றால் குணமாகிவிடும் என்பதில் தொடங்கி கேன்சர் கூட நலமாகிவிடும் என்று திடமாக நம்பினால் சரியாகிவிடும் என்று எபிஜெனிடிக்ஸின் நவீன புதிய உயிரியல் விஞ்ஞானம் கூறுவதாக புரூஸ் லிப்டன் கூறுகிறார். அங்கம் என்றால் உடல் என்று பொருள் கொள்ளலாம். உடலின் உறுப்புகள் என்றும் உடற்பாகங்கள் என்றும் பொருள் கொள்ளலாம். கே லேப்ஸ் என்றொரு அறிவு ஆய்வகம் நடத்தி வரும் அரவிந் கால்பந்தினால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்களும் முக்கால்வாசி நேரம் மைதானத்திற்கு வெளியே அமர்ந்தவாறும், அதற்காக புதிய கால்பந்து காலணி முதலியவை வாங்கி (டெம்போ செவச்செல்லாம் கடத்தியிருக்கிறோம்…) பத்து நிமிடங்கள் களத்தில் கலவரம் ஊட்டியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். ஈரோட்டை சேர்ந்த இவர் வார இறுதியில் ஊருக்குக் போகாமல் விளையாடியதில் காலின் பல தசைகள் பிடித்துக்கொண்டதாகவும், இருந்தாலும் பிடிவாதமாக இவர் விளையாட்டைத் தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இரதம் ஓடுவது போல ஒரு நாளைக்கு மூன்று கிலோமீட்டர் தொடர்ந்து ஓடுவது முதல் கி.மீ., 7 நிமிடம், இரண்டாவது ஆறு, கடைசி ஐந்து நிமிடம் என்று மொத்தம் 18 நிமிடத்தில் ஓடிய பிறகு ஜிம்மில் சில எடைப்பயிற்சிகள் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் நீச்சல்குளத்தில் நிதானித்தல் என்றவாறு அதிகாலை நேரங்கள் அற்புதமாக திட்டமிடப்படுவதால் தங்க ரதம் போல அங்க ரதம் பளபளக்கும் என்கின்ற கருத்தின் அடையாளமாகத்தான் அங்க ரதம் என்னும் தலைப்பு இடப்பட்டுள்ளது.

    முகநூலில் பதிவேற்றிய கால்பந்தின் ஒளிப்பட திரைப்படப்பதிவில்… நிறைய நண்பர்கள் லைக் கொடுத்திருந்தனர். அதில் இருவர் கோல் அடித்தது ஆஃப் கைடு போல தெரிகின்றதே என்றனர். ஒருவர் கோவை இன்னொருவர் டையூ (மும்பை அருகே) தொழில்நுட்பம் நிறைந்த இந்நாளில் கூட நட்பே… கால்பந்து உணர்வால் நம்மை இணைக்கின்றது.

    ஏழு பேர், ஐந்து பேர் என்று எண்ணிக்கையை குறைத்து விளையாடும்… நவீன கால்பந்து விளையாட்டு கிரிக்கெட்டின் ட்வென்டி ட்வென்டி போல பரபரப்பான மினியேச்சர் அம்சம் ஆகும். இதில் படுவேகமாகவும் பரபரப்பாகவும் பந்து பறக்கின்றது. ஆட்களும்தான் முன்கள வீரர்கள், சந்தர்ப்பத்தை துல்லியமாகப் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. பொறுமையும் வேகமும் நுணுக்கமும் உடல் வலிமையும், புத்திசாலித்தனமும், சமயோசித்த உணர்வும் சாமர்த்தியமும் தந்திரமும் ஒருங்கிணைந்த ஒரு வெளிப்பாடு பந்தினை கோலாக மாற்றுவதற்கு தேவைப்படுகின்றது. எத்தனையோ விளையாட்டுக்கள் இருந்தாலும், கால்பந்துக்கு என்றொரு கௌரவமும் இரசிகர்களும் உலகெங்கிலும் விரவிக்காணப்படுவதை நாம் அவசியம் ஆமோதிப்போம். ரொனால்டோவும், மெஸ்ஸியும் நிறைய மனதுகளின் சிம்மாசனத்தில் கோலோச்சுவதும் ஃபிலேயும், மாரடோனாவும் உலக வரலாற்றில் அபாரமான இடம் பிடித்திருப்பதும் சச்சினைக் கொண்டாடும், தோனிக்கு வானம் தொடும் வாழ்த்துத்தரும் இந்தியாவிலும் நடந்து வருவதுவே.

    கால்பந்தின் முன்கள வீரர்களுக்கான குணப்பட்டியலில் முரட்டுத்தனமும் இருப்பதாக கருதுபவர்கள் கணிசமானவர்கள். பள்ளிப்பருவத்தில், என்பையன் கால்பந்து அணியில் இருக்க இடம்பெற கூடாது என தலைமையாசிரியடம் கூறித்தடுத்தவர் அன்புள்ள அப்பா… எவ்வளவோ வருடங்கள் கடந்தும் விளையாடும் உடல்தகுதியோடு வைத்திருப்பது எல்லாம் வல்ல இறைவன் திருவிளையாடல். அவனருளாலே அவன்தாற் வணங்கி… என்பது திருவாசகம். அதாவது, நாம் என்ன நினைக்கிறோமோ? அதை நினைக்கச் செய்வதும் இறையருளே! என்கின்றார் வாதாவூரார் மாணிக்கவாசகர். உருகுவாரா? என்று பார்ப்போம் என்றே அங்கரதம் ஓடுகின்றது.

    கால்பந்தில் சோமு, கலை, சுதாகர், வேலு, எழில், சாம், பிரபா, பரத் என்று உடன் விளையாடுபவர்கள் வட சென்னையின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தாலும், களத்தில் இறங்கிய பிறகு… ஒரு கையின் ஐந்து விரல்கள் போல ஏதோ ஒரு ஒருங்கிணைந்த சிந்தனை மூளைக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது போல ஏழு பேரும் ஒரு நரம்பு தொலை தொடர்பு மண்டலத்தோடு இயங்குவோம். கோல் போஸ்ட்டை திரும்பத்திரும்ப பார்க்காமலேயே அது எங்கிருக்கிறது என்றும்… ஓடும் வேகத்தில் பந்திற்கு எந்த கோணத்தில் எவ்வளவு வேகம் அழுத்தம் தந்து உதைத்தால் இடையே ஓடிவரும் எதிர் வீரர்களை தவிர்த்து நம் அணி வீரர்கள் காலை அடையும் என்றெல்லாம் கணக்கிட்டு உதைப்பதை கண்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

    ஆக மொத்தம்… இப்படியொரு கால்பந்து உலகத்தில் நுழைந்த பின்னர் நமக்கு அடுத்த வேளை உணவு முதல் மாமியார் உடைய இரயில்பயணச்சீட்டு வரை எல்லாமே மறந்து போய்விடுகின்றது. மீண்டும் உடலில் கோடி செல்களில் வலி பிறக்கும்பொழுது மறுபடியும் ஒரு வாரம் முடிந்து… அங்கரதம் புல்தரையில் ஓடத்தொடங்குகிறது.

    வயதான காலத்தில் உடற்பயிற்சியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நண்பரின் கோரிக்கை, அறிவுரை நினைவில் வந்தது. பாஸ்கர் (56), நாகேஷ் (67) போன்ற பழைய இந்திய அளவிலான விளையட்டு இளைஞர்களை களத்தில் சந்தித்தபோது, வயதும் மனதில்தான் இருக்கின்றதோ என்கின்ற எபிஜெனிடிக்ஸ் ஞானம் பிறந்தது. மனமிருந்தால், ஆட்டம் இருக்கும் போல… வள்ளுவர் சொன்ன உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் உள்ளம் கொண்டு, வயது என்பது வெறும் நம்பர்தான்… எண்தான் என்று எண்ணிக்கொண்டே.. உருளும் கால்பந்தைத் தொடர்ந்து ஓடத்தொடங்குகின்றது அங்கரதம்!… இப்படியே… ஒரு … எழுதலாமா? என்று தயங்கிய கட்டுரையும் ஓடியிருக்கிறது! ஆச்சரியமே!…

    தேசத்தின் மீது நேசம் வை

    தேசம் காக்க களம் சென்றவர்கள் எத்தனையோ பேர்.

    தம் உயிரை விட இம்மண்ணை அதிகம் நேசித்தவர்கள் எண்ணற்றோர்.

    தாய் மண்ணைக் காக்க களம் செல்லாவிட்டாலும், இத்தேசத்தின் மீது நேசம் கொண்டவனாக என்றும் இரு.

    இளைஞர்கள் பெண்ணைக் காதலிப்பார்கள். ஆனால் பாரதி என்ற அந்த இளைஞனோ தாய் மண்ணைக் காதலித்தான். அதற்காகவும் அவன் கொள்கைக்காகவும் தன் உயிரைத் (நீத்தான்) துறந்தான். அப்படிப்பட்ட கவிஞர் பாரதியைப் போல் தேசப் பற்றுள்ள தேசப் பக்தனாகத் திகழ்.

    தன்னை நேசித்தவன் இம் மண்ணையும் நேசிப்பான். இம் மண்ணை நேசிப்பவன் எதையும் இழப்பான், எதையும் துறப்பான், எதையும் செய்வான்.

    உண்மையிலேயே இம்மண்ணை நேசிக்கிறான் என்பதற்கான சான்றும் அதுவே.

    நம் முன்னோர்கள் யாகம் செய்தா விடுதலை பெற்றனர்? யாகம் செய்து பெறவில்லை, தியாகம் செய்து தான் பெற்றனர்.

    சான்றோர்களின் தியாகத்தினால் தான் சுதந்திரக் காற்றை அடைந்தோம். அடிமைக் காற்றை அகற்றினோம்.

    நம் கைகளுக்குப் பூட்டப்பட்டிருந்த அடிமை விலங்கு பெரியோர்களின் தன்னலமற்ற செயலால் திறக்கப்பட்டது.

    தன்மானத்தைத் தானம் செய்யாமல் உயிரைத்தானம் செய்து சுதந்திரம் பெற்ற நாடு இந்தியாவென்பது உலகுக்கும் தெரியும்.

    பழைய உலக ஏடுகளைப் புரட்டிப்பாருங்கள். உலக நாடுகள் அனைத்தையும் விட அதிக இழப்பை இழந்தவர்கள் நாம், அதிக இழப்பை இழந்த நாடு இந்தியா.

    நாட்டைக்காத்து நம்மை வளர்த்த சமூகத் தந்தைகள் செய்த நன்றியை என்றும் மறக்கவும், மறுக்கவும் காரணமாயிராதே. இவர்களை எண்ணாமல் இச் சமூக தந்தைகளின் கொள்கையை கைவிட்டுவிட்டு நடிகர் நடிகை என்ற பெயரில் ரசிகர் மன்றங்களை ஏற்படுத்தி நீயும் கெட்டு அவர்களையும் கெடுத்தது போதவில்லையா? இந்தக் கூத்தாடிகள் மீது இவ்வளவு மோகம் எதற்கு? இந்த மோகத்தால் சோகமடைவது உன் எதிர்காலம். இவர்கள் மீது அளவு கடந்த பற்று தேவைதானா? நன்றாக யோசித்துப்பாருங்கள். இவர்களது சமூக சேவையையும், தேவையையும், நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் பட்டியலிடு.

    இளைஞர்களே! நாட்டுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் தீமை செய்யாதீர்கள்.

    இந்தியனே, அதோ வானில் அழகாகப் பறக்கின்றதே நம் இந்திய தேசக் கொடி அதை வெறும் தேசக்கொடி என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்.

    நம் தாயின் மணிக்கொடியில் நம்மால் என்றும் மறக்க முடியாத இரண்டு நூற்றாண்டு நினைவுகளும், இருநூறு ஆண்டு கனவுகளும், இருநூறு வருட சரித்திரங்களும், நான்கு ஐம்பது வருட சாதனைகளும், கடந்த நூற்றாண்டின் வேதனைகளும், 18, 19, 20 ஆகிய மூன்று  நூற்றாண்டுகளின் வரலாறுகளும், எண்ணற்ற தியாகிகளும், கணக்கற்ற தியாகங்களும் அடக்கியது தான் நம் பாரதக் கொடி.

    சுதந்திரப் போரில் இறந்தவர்களின் உயிர் விலைமதிப்பற்றது. தங்கத்தையும், வைரத்தையும் வைடூரியத்தையும் ஒரு கணிதமேதை மதிப்பிட்டு விடலாம். ஆனால் விடுதலைப் போரில் வீர மரணமடைந்தவர்களின் உயிரை மதிப்பிட இயலாது.

    பிரிவினைகள் ஒழிய வேண்டும்.

    சாதி, மதம், பேதம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்று இது போன்றுள்ளவைகள் சமுதாயத்திற்குள் புகுந்து அமைதியை, ஒற்றுமையை சீர்குலைத்து சமூகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டு வருகிறது. இவை என்று அடியோடு(வேறோடு) ஒழிகிறதோ அன்று தான் மனித சமுதாயம் ஏற்றம் பெறும். இவை உயிரோடு இருக்கும் வரை நாட்டில் சண்டை சச்சரவுகள், வன்முறைகள், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவைகளும் உயிரோடு இருந்து கொண்டு தான் இருக்கும். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இவைகள் என்றும் உகந்தவைகள் அல்ல.

    இன்னும் ஏன் இந்த நிலை?

    பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் அனைத்திலும் உலக நாடுகளுக்கெல்லாம் மிக உயர்ந்த தலை சிறந்த நாடு இந்தியா. புத்தர்,காந்தி, விவேகானந்தர், வள்ளுவர், சிறந்த எழுத்தாளர் இல.செ.கந்தசாமி என உனை வழி நடத்திச் செல்லவும், தன்னம்பிக்கையூட்டவும் ஆயிரமாயிரம் வரலாற்றவர்களும், சான்றோர்களும் வரலாற்றில் இருக்கையில் ஏன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, மறந்துவிட்டு நாட்டிற்கு ஒன்றுமே செய்யாத உனக்கும் வழிகாட்டாத, தன்னம்பிக்கையூட்டாத, உதவாத நடிக நடிகையரின் கொள்கை தான் நாட்டிற்குத் தேவையென்றும், பெரிதென்றும் நடிகைக்குக் கோயில் கட்டினாய்.

    இச்சம்பவம் நடந்தது இந்தியாவில், அதுவும் நம் தமிழ்நாட்டிலல்வா. இச்செயல் நம் தமிழகத்தையே இழிவு செய்யும் மிகவும் கேவலமான செயல் அல்லவா. இந்தியாவில் ஆங்கிலேயர்களை முதன் முதலில் எதிர்த்துப் போரிட்டு விரட்டிய மாவீரன் தீரன் சின்னமலை, காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், போன்றவர்களுக்கு கோயில் கட்ட ஏன் மறந்தாய்?  சுதந்திரம் என்னும் சுவாசக் காற்றை நாம் சுவாசிக்க காரணமானவர்களை துதிக்கவும், வழிபடவும் ஏன் இன்னும் தாமதிக்கிறாய்? யோசிக்கிறாய்? அதை விட்டுவிட்டு சினிமா என்னும் சிற்றின்பத்தில் முழ்கியிருப்பதை விட மேற்சொன்ன தியாகத் தலைவர்களில் யாரேனும் ஒருவரை முன்னோடியாக மனதில் வைத்துக் கொண்டு பொது நலனில் செயலாற்ற வேண்டும். செயலாற்ற முன் வரவேண்டும். அப்பொழுது தான் முதுகெலும்பாக இளைஞர்களை நம்பியிருக்கும் இந்த பாரத தேசம் அதிரடியாய் வளர்ச்சியுறும் வல்லரசாகும்.

    பத்திரிகைகளைப் படியுங்கள்

    புத்தகங்களைப் படியுங்கள் அது உங்கள் வெற்றிக்கு பக்க பலமாக என்றும் இருக்கும், உமது அறிவுக்கும் சிந்தனைக்கும் பல வழியில் பல வகையில் பெரிதும் பயன்படும். நமது அப்துல்கலாம் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். தனது சாதனைக்குப் பயன்பட்டது பத்திரிகை தான். இது இன்றி எனது வெற்றியும் இல்லை. எனது சாதனையின் முதுகெலும்பே புத்தகங்கள் தான் என்று கடுமையாக அழுத்திச் சொல்லியிருக்கின்றார்.

    அனைவரது நோக்கத்திற்கும் இதழ்கள் வழிகாட்டும் என்பது உண்மை.

    உலகம் ஒரு ஓட்டப்பந்தயம்

    உலகம் என்பது பந்தய மைதானம் மாதிரி. அதில் உலகில் உள்ள உனது துறை இலட்சியத்திலேயே கூட பலர் ஓடக்கூடும். தாங்கள் முதலாவதாக ஓடிவர முயற்சி செய்ய வேண்டும். முதலில் வர என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அருகில் ஓடி வருபவனை காலை வாரி நயவஞ்சகமாகக் கீழே தள்ளிவிட்டால் நாம் ஜெயித்துவிடலாம் என்கிற எட்டப்பனது தீய எண்ணங்கள் மனதிலும் சிந்தனையிலும் எப்பொழுதும் இருக்கக்கூடாது. ஆனால் பலருக்கு இன்று எண்ணங்கள் இப்படித்தான் உள்ளது. ஒருவரை தாழ்த்தினால் நாம்  உயர்ந்துவிடலாம் என்று எதிர்மறையாக கருதுவதை விட நம்மை உயர்த்தினாலே அவர் தாழ்ந்து விடுவார் என்கிற நல்ல நேர்மறையாக சிந்திப்பதற்கும் செயல்படவும் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உயர வேண்டும் என்பது பிறரைத் தாழ்த்த வேண்டும் என்பதற்காகவுமல்ல நீங்கள் உயர வேண்டும் என்பதற்காகவே.

    வாழ்வின் உயானவுக்கான சூத்திரங்கள் மூன்று

    “ In Life we cannot avoid change, we cannot avoid loss.

    Freedom and happiness are found in the flexibility and

    ease with which we move through changes.”

    –  BUDDHA

    வாழ்க்கையில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது,  இதில் இழப்புகளும் தவிர்க்க முடியாதது, மாற்றங்களை நோக்கி நாம் பயணிக்கும் போது நம்முடைய அனுசரித்துப் போகும் குணத்தாலும், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தாலும், மகிழ்ச்சியும், சுதந்திரமும் கிடைக்கின்றன” என்று புத்தர் சொல்கிறார்.

    வாழ்க்கைமுறை மாற்றம் என்பது (Career Change) நமக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய வரப்பிரசாதம்,  ஒரு சிலர்  தன் வாழ்க்கையை  ஒரு நிலையில்  தொடங்கி அதே நிலையில்  ஓய்வு பெறுவதும் உண்டு.   சிலருக்கு  ஒரு நிலையில் தொடங்கி  மேலும் மேலும் உயர் நிலையை அடையும் வாய்ப்புகள் வருவதுண்டு,  சிலருக்கு   ஆரம்பத்தில் ஒரு சிறிய தொழிலைத் தொடங்கி தன் முயற்சியால் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு  பல தொழில்களுக்கு அதிபராக மாறக் கூடிய நிலையும் வருவதுண்டு.

    மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் நம்  மனநிலைதான் நம் வெற்றிக்கு மூல காரணமாக அமைகிறது, அந்த மனநிலையை  உயிர்ப்பிக்க கூடிய சூத்திரங்கள் மூன்று.

    1) வருகின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்துதல்

    2) புதிய சூழ்நிலைக்கேற்ப மனோநிலையை மாற்றிக் கொள்ளுதல்

    3) எண்ணங்களை நெறிப்படுத்துதல்

    இவை மூன்றும் வாழ்வில் உயர  உன்னத சூத்திரங்களாக அமைகின்றன.

    வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் வருவதல்ல, நீங்கள் தேர்வு செய்து கொள்வது ,  அது  காத்திருந்து பெறுவதுமல்ல, தற்செயலாய் நிகழ்வதும் அல்ல, முயற்சியினால் மட்டுமே பெறக்கூடியது, வெற்றி என்பது ஒரு முடிவு எடுத்து அந்த இலக்கை நோக்கி முயன்று, முன்னேறி அதை தொட்டு  சுவைப்பது தான் சரியான வெற்றியாகும்,  நீங்களும்  வாழ்க்கை பற்றிய உங்களின்  மனோபாவம் ஆகிய இரண்டும் தான் உங்களின் வாழ்க்கையின் உயர்வைத் தீர்மானிக்கின்றன.

    1)வாய்ப்புகளை பயன்படுத்துதல்

    ‘கொக்கைத்  தேடி குளம் வராது’, ‘பறவையைத் தேடி பழம் வராது’, என்பதைப் போல வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது, அதை நாம்தான் தேடிச் செல்ல வேண்டும்.

    அது ஒரு மழைக்காலம், ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கிறது. கடும் மழை பெய்ய ஆரம்பிக்கிறது, பக்கத்தில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் நுழைகிறது,மக்கள் தப்பித்துக் கொள்ள மேடான பகுதியை நோக்கி ஓடுகிறார்கள், தெருக்களிலே தண்ணீரின் மட்டம் ஏறிக் கொண்டே இருக்கிறது, அந்த மத குரு மட்டும் ஓடாமல் நின்று கொண்டே இருக்கிறார்  ஊர் மக்கள் படகுகளில் ஏறி தப்பிக்கிறார்கள், அவர்கள் தப்பிக்கும் போது மத குருவை நோக்கி தண்ணீர் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, “  உயிர் தப்பிக்க நீங்களும் எங்களோடு வந்து விடுங்கள்  ”என்று அழைக்கிறார்கள். குரு, “நான் கடவுளை நம்புகிறவன். அவர் என்னைக் காப்பாற்றுவார்  என்று வர மறுத்து விடுகிறார். அடுத்து ஒரு படகு வந்தது, அதில் இருந்தவர்களும்  அவரை தங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.  ஆனால் அவரோ அதை மறுபடியும் மறுத்து விட்டார்.

    நீரின் மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது, அவர் கழுத்து வரை நீர் வந்து விட்டது, அப்போது மூன்றாவது படகு வந்தது, அவரைக் காப்பாற்றவே வந்த படகு அது, அந்தப் படகில் இருந்தவரிடமும் “நான் வரவில்லை, கடவுள் ஒரு போதும் என்னைக் கைவிட மாட்டார். அவர் கண்டிப்பாக என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னார். மூன்றாவது படகும் போய் விட்டது, குரு நீரில் மூழ்கி இறந்து போனார். நேராக சொர்க்கம் போனார்  “ நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை”  என்று கடவுளிடம் மண்டியிட்டுக் கேட்டார்.

    கடவுள் பதில் சொன்னார். “நான், உனக்காக மூன்று படகுகளை அனுப்பினேன், நீதானே படகில் எறிக் கொள்ள மறுத்தாய், உனக்காக மூன்று வாய்ப்புகளைத் தந்தேன், நீ மூன்று வாய்ப்புகளையும் தவற விட்டுவிட்டாய்” என்றார்.

    இதுபோலத்தான் நம் வாழ்க்கையில் வாய்ப்புகள் சில முறைதான்  வரும், வாய்ப்புகளைச் சரியாக நாம்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், சாமர்த்தியமும் அறிவும் உள்ளவர்களே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுகிறார்கள்,

    ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நம் வாழ்க்கை முறை மாறும் போது புதிய சூழலில் நாம் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இடமும் மாறுகிறது, பதவிகள் மாறுகின்றன, சுற்றிலும் உள்ள மனிதர்கள் மாறுகிறார்கள், புதிய அறிமுகங்கள் ஏற்படுகின்றன, அப்போது வாய்ப்புகளும் புதிதாக அமைகின்றன, அந்த புதிய வாய்ப்புகளை சரியாக அடையாளம் காண வேண்டும், வாய்ப்புகளுக்காக காத்திருந்து அவை கிடைக்கும் போது விழிப்புணர்வுடன் அதைப் பயன்படுத்தி முன்னேறுவது ஒரு வகை, வாய்ப்புகளை உருவாக்கி கொள்வது இன்னொரு வகை, வருகின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்பவன் வெற்றி பெறுகிறான், வாய்ப்புகளை உருவாக்கி கொள்கிற சாமர்த்தியசாலி சாதனை புரிகிறான்.

    2) மனோநிலையில் மாற்றம்

    வாழ்க்கை முறை மாற்றத்திற்கேற்ப நமது மன நிலையும்  மாற்றிக்கொள்ள வேண்டும். இடத்திற்கேற்றபடி  அனுகூலமான முறையில் நமது மனமாற்றம் ஒத்துப் போனால் தான் அங்கு நெருடல் இல்லாத  ஒரு புதிய சூழலுக்கேற்ப நமது வாழ்க்கை முறை சீராக, ஒழுங்காக அமையும், இருக்கும் இடத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப நம் மனம் ஒத்துப் போகவிட்டால் அங்கு வாழ்க்கைமுறை சிக்கலாகும், புதிய சிந்தனைகள், புதிய சூழலுக்கேற்ப மாற்றி யோசித்தல் அனுசரித்துப் போதல்,  அரவணைத்துப் போதல், இவைகள் மாற்றத்திற்கு துணை நிற்கும், எடுத்துக்காட்டாக ஓட்டல் தொழிலிருந்து ஒரு தயாரிப்புத் தொழிலுக்கு நீங்கள் மாறும் போது  சூழல் முற்றிலுமாக மாறுகிறது,  ஓட்டல் தொழிலில்  நீங்கள் பெற்ற அனுபவங்கள்  தற்போது உள்ள தொழிலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பழைய மனோ நிலையில் ஓட்டல் தொழில் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால்  புதிய தொழிலில் நீங்கள் பிரகாசிக்க முடியாது,  அந்த இடத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப  நம்  புதிய சிந்தனைகளும்,மாற்றியோசிக்கும் தன்மையும்  வெற்றிகரமான மாறுதலுக்கு இட்டுச் செல்லும்,

    3) எண்ணங்களை நெறிப்படுத்துங்கள்

    நேர்மறையான எண்ணங்கள், நேர்மறையான விளைவைத்தரும்,  எதிர் மறையான எண்ணங்கள் எதிர்மறை  நிகழ்வை உண்டாக்கும். ஒரு புதியத் தொழிலை தொடங்கும் போது இதில் நாம் தோல்வியடைந்து விடுவோமா? என்ற பயமும், புதிய அறிமுகங்களும், புதிய சூழலும், நமக்கு ஒத்துப்போகுமா? என்ற எண்ணமும், இதில் நாம் ஜெயிக்க முடியுமா? என்ற தாழ்வு மனப்பான்மையும், எதிர் மறையாக அமைந்து  வளர்ச்சியைத் தடுக்கும், செய்ய முடியுமா? என்று திகைத்து நிற்கும் போது  ‘முடியும் ’ என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்,வழக்கமான சிந்தனைகள்  வாழ்க்கைப் பயணத்தை சுமூகமாகத் தொடர வழிவகுக்குமே தவிர  வாழ்க்கையை மேம்படுத்த உதவாது,  புதிய சிந்தனைகள் புதிய பாதையைக் காட்டும், ஆதலின் எதிர்மறை சிந்தனைகளை  நேர்மறை சிந்தனைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

    மாற்றுச் சிந்தனைகள்  மனதில் உதயமாகி  கொண்டே  இருக்க வேண்டும், அது புதிய முயற்சிகளில் ஈடுபட  மனோதைரியத்தை    தரும்,  அதுவே விடமுயற்சியாக மாறி  எதிர்ப்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும், எதையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனோபாவம் வளரும்.

    புதிய சிந்தனைகள் மலரும் போது உடனடியாக அதற்கு செயல் வடிவம் கொடுக்க முயல வேண்டும்,  அதை செயல்படுத்த என்னென்ன தேவையோ  அந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,  ஆதலின், மாற்றங்களை ஏற்றுக்கொண்டு புதிய சூழலுக்கேற்ப புதிய சிந்தனைகளை செயல்படுத்தி வெற்றிபெற இந்த மூன்று வழிமுறைகள் வாழ்வின் உயர்வுக்கு உன்னதமான சூத்திரங்களாக அமைகின்றன  என்பது ஆணித்தரமான உண்மையாகும்,

    “செய்ய வேண்டியவைகளை எல்லாம் ஆராய்ந்து தகுதியான இடத்தில் ஒருவர் செய்தால் அவருக்கு மன உறுதியைத் தவிர வேறு துணை எதுவும் தேவையில்லை” என்கிறது வள்ளுவம்.

    “அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

    எண்ணி இடத்தாற்  செயின்”,

    எனும் குறள்  இதற்கு முற்றிலும் பொருத்தமாக அமைந்துள்ளது.

    வாழ நினைத்தால் வாழலாம்

    நம்பிக்கை

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    மனித வாழ்க்கை வளர்ச்சியை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். உடல் வளர்ச்சி மட்டுமல்ல, அறிவு வளர்ச்சியையும் உள்ளடக்கியது தான் உண்மையான உயர்வு. நாளது தேதியில் நாம் அப்படி இருக்கிறோமா? பயணிக்கிறோமா? – என்பதே கணைகளாய் துளைக்க வேண்டிய கேள்விகள்.

    “ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி” – என்ற பட்டுக்கோட்டயாரின் பாடல் வரிகளுக்கு உதாரணமாக – வரிசையில் நிற்கும் கூட்டத்தில் நாமும் உண்டா?

    “நமக்கும் பெரிய சக்தி ஒன்று நம்மை வழி நடத்துகிறது” என்பது – எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு எதார்த்தம். கடவுள், இறைவன், இயற்கை, விதி, மதி, புத்திசாலித்தனம் – என்று பலப்பல பெயரிட்டு நாம் நம்மில் பெரிய அந்த சக்தியை போதிக்கிறோம், போஷிக்கிறோம்.

    “நம்பிக்கை” என்ற சொல்லுக்கு பலப்பல துணைப்பெயர்களை, சந்தர்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப சூட்டி மகிழ்கிறோம். இவை அனேகமாக ஆறு தலைப்புகளில் அடங்கி விடுகிறது – பெரும்பாலும். காற்றழுத்தம் காரணமாக கண்டபடி மழை வரும் – என்று வானிலை மையம் அறிவித்ததை ஏற்றுக்கொண்டு “குடையுடன்” கிளம்புகின்றோமே ! அதற்கு நாம் இட்ட பெயர் தான் FAITH.

    உயர உயர தூக்கி வீசப்படும் குழந்தை முகத்தில் எப்போதும் ஒரு குதூகலம், மகிழ்ச்சி.  தன்னை கீழே போட்டுவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை.  காரணம், தன்னோடு விளையாடுபவர் தன் தந்தை என்றும், தன் மீது அவர் கொண்டுள்ள பாசமும், அன்பும் இந்தப் பிரபஞ்சத்தை விட பெரியது என்று அந்த அறியாத மனது அறியும்.  அதற்கு நாம் இட்ட இன்னொரு பெயர் தான் TRUST.

    காலையில் கட்டாயம் எழுவோம், இப்புவியில் இன்னுமொரு நாளை இனிதே வாழ்வோம் – என்று அலாரம் வைத்து அமைதியாய் உறங்கப்போகிறோமே ! அதற்கு இன்னொரு பெயர் தான் HOPE.

    நாளை என்பது நிச்சயம் இல்லை என்று அறிந்தும், நம் அடுத்த நொடியின் சுவாசமே ஆண்டவனின் அருள் கொடை என்று தெரிந்தும் – எதிர்காலத்திற்கான நீண்ட, நெடிய திட்டப்பட்டியல் தீட்டி – திருப்தி இல்லாமல் திரும்பத்திரும்ப அதை திருத்துகிறோமே !  அதற்குப்பெயர் தான் CONFIDENCE.

    பல குடும்பங்களின் சண்டைகளை கண்ட பின்பும், மண வாழ்க்கை என்பது மன வாழ்க்கை என்று புரியாதபோதும் – திருமணம் செய்ய தயாராகும் நம் நம்பிக்கைக்கு உள்ள இன்னொரு பெயர்தான் LOVE.

    அறுபது வயது முதியவர் ஒருவர் சொன்னார் “நான் அறுபது வயது கிழவனல்ல.  எண்ணத்தாலும், இதயத்தாலும் என்றும் பதினாறு தான்.  ஆகவே, நான் பதினாறு வயதும் அதனுடன் நாற்பத்தி நான்கு வருட அனுபவமும் சேர்ந்த, இன்னும் வாழத்துடிக்கும் வாலிபன்” என்றார்.  அதற்கு நாமிட்ட பெயர்தான் ATTITUDE.

    இதுபோன்ற உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் அனைவருக்கும் சாத்தியமா?

    சாத்தியமே !

    பிரச்சனைகளக்கண்டு பதறாமல் இருக்க பழகுங்கள்.  அமைதியான மனநிலையில் ஆராய முற்படுங்கள்.

    அறிவுக்கண் கொண்டு ஆராயுங்கள். புதிய கோணத்தில் சிந்தித்தால் உங்கள் புத்திக்கு தோன்றும் தீர்வுகள்.

    ஒரு வயோதிக வணிகன்.

    இறுதி மூச்சு என்னும் எத்தனை முறை என்று பார்ப்பவர் யாவரையும் பதற வைக்கும் வகையில், தளர்ந்துபோன தேகக்கட்டுடன் தோற்றம்.“மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை” – என்ற நடைமுறை பழமொழிக்கு நம்பிக்கை ஒளி ஊட்டுபவன்.

    தன்னிடம் கடன் வாங்கிய ஒரு ஏழையின் இயலாமையை இலக்கு வைத்தான்.

    “வட்டியும் வட்டிபோட்டு, அசலோடு சேர்ந்ததால், நீ ஒரு பெரும் தொகை எனக்குத் தர வேண்டி உள்ளது.  உன்னால் தர முடியாது என்று உனக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியும்.  ஆகவே, உன் 18 வயது பருவப்பெண்ணை எனக்கு திருமணம் செய்துவைத்து கடனிலிருந்து உன்னை காப்பாற்றிக்கொள்” என்றான்.

    ஏழை பாவம் !  எதிர்க்க முடியவில்லை. இருந்தும், தன் மகளுக்கும் இதில் உடன்பாடில்லை என்று அந்த வயோதிக வணிகனின் வாசலில் நின்றான்.

    நீண்ட வாதத்துக்கு பிறகு, வணிகன் “அபாயமான” ஒரு “உபாயம்” சொன்னான். “ஒரு துணிப்பையில் சிறு “வெள்ளை” கூழாங்கல்லையும் “கருப்பு” கூழாங்கல்லையும் போடவேண்டும்.  ஊர் மக்கள் முன்னிலையில் உன் மகள் ஒரு கல்லை எடுக்க வேண்டும்.

    “வெள்ளை” – சமாதானத்தின் சின்னம்.  கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.  உன் மகளை நீ வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.  அவர்களின் வாழ்க்கை இனிக்க, இன்னும் கொஞ்சம் பணம் இலவசமாகத் தருகிறேன்.

    “கருப்பு” – துக்கத்தின் அம்சம்.  உன் மகளுடனான என் திருமணம் நடந்தே ஆக வேண்டும்.

    “மூன்றாவது” – உன் பெண் இந்த உபாயத்திற்கு உடன்படவில்லை என்றால், நான் போலீசிடம் புகார் தருவேன்.  நீ கைது செய்யப்படுவாய்.  ஆதரவுக்கு ஆளில்லாமல் உன் மகள் தனிமையில் தவிப்பாள்.

    இந்த மூன்றில் ஒன்றை முடிவு செய்து – தேதியுடன் திரும்பிவா!” – என்று அனுப்பி வைத்தான் வணிகன். மகளின் மனதில் இப்போது குழப்ப எண்ணங்களின் அலை மோதல்.“வெள்ளையை” எடுத்து விடுதலை ஆவதா? “கருப்பை” எடுத்து கண்ணீரில் வாழ்வதா? “மறுப்பை” தெரிவித்து, தன் தந்தையின் வாழ்க்கையை கம்பிகளுக்குப்பின்னால் கழிய வைப்பதா?

    அமைதியான மன நிலையில் – தீர்வுகளைத் தேடினாள். இறுதியில், இறைவனின் மீது “நம்பிக்கை” கொண்டவள் கடவுளின் சித்தப்படியே என் வாழ்க்கை இருக்கட்டும் என்று முடிவெடுத்து – சவாலுக்கு தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். பொதுமக்கள் சூழ்ந்திருக்க – போட்டியின் நாளும் வந்தது.

    வணிகன் தந்திரன். சாமர்த்தியமாக இரண்டுமே “கருப்பு” கூழாங்கல்லாய், பையில் எவருக்கும் தெரியாமல் எடுத்துப்போட்டான். கவலைக்கும், கண்ணீருக்கும் நடுவிலும் இந்தக்காட்சி அந்த பெண்ணின் பார்வையில் பட்டது. கடவுள் அந்த பெண்ணின் பக்கம்.

    பையில் இரண்டுமே “கருப்பு” கற்கள். தவித்தபடியே தன் கையை விட்டு எடுத்தாள் ஒரு கல்லை.

    மற்றவர் யாவரும் பார்க்கும் முன்னர் தடுமாருவதுபோல் நடித்து தவறவிட்டாள் அந்தக்கல்லை. அது, தரையில் உள்ள மற்ற கற்களுடன் கலந்து கரைந்தது.  எடுத்தது எந்த கல் என்று எவருக்கும் தெரியாமல் போனது.

    தன்னையே சினந்தால் – தற்காப்பு கலை போலே. பையில் உள்ள மற்றொரு கல் “கருப்பாக” இருந்ததால் – அவள் எடுத்தது “வெள்ளை” கல்லே  என்று ஊரும் நம்பியது.

    வாயடைத்துப்போனான் வணிகன்.

    தன் சாமர்த்தியம் சமாதியானது கண்டு வெட்கினான். ஒப்பந்தப்படி கடனை தள்ளுபடி செய்தான். இதுதான் புதிய கண்ணோட்டம் நமக்கு உணர்த்தும் உண்மைத் தீர்வை. உங்கள் வாழ்வில் – எத்தனை இடர்கள் எதிர்பட்டாலும் நம்பிக்கை இழக்காதீர்கள்.

    “நம்பிக்கை” – வெற்றித்திருமகளின் நெற்றிப்பொட்டு.

    “நம்பிக்கை”- ஆழ்கடலையும் அறியவைக்கும் நங்கூரம்.

    “நம்பிக்கை”- குழப்ப இருளினை புலர வைக்கும் பூபாளம்.

    “நம்பிக்கை”- தாழ்வு மனப்பான்மையை தகர்க்கும் தரமான உளி.

    “நம்பிக்கை”- உறுதியான மனத்தின் உரம்.

    “நம்பிக்கை”- விசேஷமான சிந்தனைகளின் விலாசம்.

    நாட்டை ஆண்ட மன்னனின் காலம் தொடங்கி, பாட்டை ஆண்ட கண்ணனின் தாசன் வரை உதாரணங்கள் தரும் உத்தரவாதம் அநேகம்.

    இரண்டு மனம் வேண்டும்– என்று இறைவனிடமே கேட்கும் துணிவை தரும்.

    இரவும் பகலும் இரண்டானால், இன்பமும் துன்பமும் இரண்டானால்

    உறவும் பகையும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே– என்று தெளிய வைக்கும்.

    சரியான வாழ்க்கை வாழ்ந்து, அதை சிறப்பான வாழ்க்கையாக ஆக்கி, கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா கணக்கை முடித்துவிட்டேன் ஒரு கவலை ஒழிந்ததடா– என்று நிம்மதியான வாழ்வை நித்தமும் வாழ வைக்கும்.வின்னைதொடும் விலைவாசி கொண்ட இந்த காலகட்டத்தில், செழுமையான வாழ்க்கை எனக்கும் இருக்கும் என்ற நம்பிக்கை நம்மை பொருளாதாரத்திலே பொருள் தானா தாரம் இன்று

    இருவர் உழைத்தால்தான் இந்நாளில் பசி தீரும்– என்று உழைப்பின் மேன்மைக்கு உத்தரவாதம் தரும்.

    ஏறும்போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான் வாழும் நேரத்தில் வருகின்றான் வறுமை வந்தால் பிரிகின்றான் – என்று தன்னை சுற்றி இருக்கும் சுயநலக்கூட்டத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி வாகை சூடவைப்பதற்க்கு “நம்பிக்கை” அவசியம் தேவை.

    பணத்தின்மீது தான் பக்தி என்ற பின் பந்தபாசமே ஏனடா மனிதஜாதியின் துயரம் யாவையும் மனதினால் வந்த நோயடா– என்று மனதை புரிந்து கொள்வது, நம்பிக்கையை நோக்கி நாம் எடுத்துவைக்கும் அடுத்த அடி.

     இந்த வைர வரிகள் உன் நம்பிக்கைக்கு நம்பிக்கை ஊட்டட்டும்.

    வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்

    வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்

    வெற்றி உங்கள் கையில் – 44

    உதவி கேட்கலாமா?       

    வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயித்து, அந்தக்குறிக்கோளைப் பற்றி அழமாக சிந்தித்து குறிக்கோளை நோக்கிய சீரிய பயணத்தை சிறப்பாகத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள் வெற்றியை எளிதில் பெறுகிறார்கள். இருந்தபோதும், “என்னால் சாதிக்க முடியவில்லையே” என்று சிலர் வருத்தப் பெருமூச்சோடு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

    வாழ்க்கையின் குறிக்கோள்கள் தெளிவாக இருந்தபோதும், வெற்றி பெற முடியாத நிலை சிலருக்கு உருவாகிவிடுகிறது. இதற்கான காரணங்களைப் பற்றி தெளிவாக சிந்தித்தால் ஒரு உண்மை நமக்கு விளங்கும்.

     “என்னால்தான் இந்த சாதனையைச் செய்ய முடியும்”.

     “என் பணத்தால்தான் நான் அந்தக்காரியத்தை செய்து முடித்தேன்”.

    “என் அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் நான் வெற்றி பெற்றேன்”.

    “என் திறமை மட்டும்தான் என் வெற்றிக்கு காரணம்”.

    – என்றெல்லாம் சிலர் அவ்வப்போது நம் காதுபட பேசக் கேட்கலாம்.

    ஒருவரின் தன்னம்பிக்கை, பணம், அதிகாரம், திறமை மட்டுமே ஒருவரை வெற்றியாளராக மாற்றுவதில்லை. மாறாக தன்னோடு இணைந்துள்ள மக்களின் தகுதிகள், திறமைகள் ஆகியவை ஒருவரின் பலத்தோடு இணையும்போதுதான், அந்த வெற்றி அவருக்கு எளிதில் கிடைக்கிறது.

    நான் நாள்தோறும் கஷ்டப்படுகிறேன். எந்தவித முன்னேற்றமும் என் வாழ்க்கையில் இல்லை. ஆனால், எங்கள் ஊரிலுள்ள சுரேஷ் 10 வருடத்திற்குள் மிகப்பெரிய பணக்காரனாகிவிட்டான். எல்லாம் அவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான்  என்று ஒருவரின் வெற்றியைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அல்லல்படுபவர்களும் உண்டு.

    சிறந்த குறிக்கோளேணுல், முறைப்படி உழைப்பவர்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். தன்னால் ஒரு செயலை செய்து முடிக்காத நிலையில் அவர்கள் மற்றவர்களுடைய உழைப்பையும், திறன்களையும் உரிய நேரத்தில் உதவி கேட்டுப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், மட்டுமே சிலருக்கு குறுகிய காலத்தில் வெற்றி கிடைக்கிறது.

    அவன் ஒரு இளைஞன்.

    காட்டு வழியில் தனது தந்தையோடு சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தான். அவர்கள் நடந்து சென்ற பாதையின் குறுக்கே மிகப்பெரிய மரக்கிளை ஒன்று விழுந்து கிடந்தது. அந்த வழியே செல்பவர்களுக்கு இடையூறாக அது அமைந்தது. அதைப்பார்த்த இளைஞன் தனது தந்தையிடம் குறுக்கே கிடக்கும் கிளையை என்னால் அப்புறப்படுத்த முடியுமா? என்று கேட்டான்.

    அவனது தந்தை அவனுக்கு தைரியம் கொடுத்தார்.

    “உனது பலம் முழுவதையம் நீ பயன்படுத்தினால், உன்னால் அந்த மரக்கிளையை அப்புறப்படுத்த முடியும்” – என நம்பிக்கை விதையை அவனுள் தூவினார்.

    அந்த இளைஞன் தனது முழு பலத்தையும் உபயோகித்து, மரக்கிளையை அப்புறப்படுத்த முயன்றான். அவனால் அந்த மரக்கிளையை அசைக்கக்கூட முடியவில்லை.

    “அப்பா நீங்கள் பலசாலியாக இருக்கிறீர்கள். என்னால், அந்த மரக்கிளையை அசைக்கக் கூட முடியவில்லை” ,என்று வருத்தப்பட்டான்.

    தந்தை அவனுக்கு  மீண்டும் தைரியம் சொன்னார்.

    “இன்னும் ஒருமுறை உன் முழு பலத்தையும் உபயோகித்து நீ முயற்சி செய்து பார். உன்னால் இந்தக்கிளையை எளிதில் அகற்ற முடியும்” – என்றார்.

    இளைஞன் மீண்டும் முயற்சி செய்தான். அவனால், மரக்கிளையை நகர்த்த முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு வேகமாக மரக்கிளையைத் தள்ளிப்பார்த்தான். ஆனால், எந்த முயற்சி செய்தாலும் அவனால், அந்த மரக்கிளையை அசைக்க முடியவில்லை.

    அப்பா என்னால் மரக்கிளையை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை – என்று தனது தோல்வியை ஒப்புக்கொண்டான்.

    இளைஞனின் தந்தை அவனைப்பார்த்து சிரித்தார்.

    “மகனே… நீ உன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து மரக்கிளையை அப்புறப்படுத்தச் சொன்னேன். ஆனால், நீ உன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தவில்லை. நீ என்னுடைய உதவியைக் கேட்கவில்லை. என்னுடைய உதவியைக் கேட்டிருந்தால், உன்னுடைய முழு பலத்தையும் நீ பயன்படுத்தி இருக்கலாம்” – என்று சொல்லி சிரித்தார்.

    பின்னர் இருவரும் இணைந்து முழு பலத்துடன் மரக்கிளையைத் தள்ளினார்கள். இப்போது, மரக்கிளையை  பாதையைவிட்டு நகர்த்தினர்கள். அவர்கள் பயணம் தொடர்ந்தது.

    இந்த சிறு நிகழ்வு நமக்கு பல கருத்துக்களை தருகிறது.

    நாம் நம்முடைய பலம் எது? என்பதையும், பிறரால் பாராட்டப்படும் நமது சிறப்புத் திறமை எது? என்பதையும், நம்மிடமுள்ள அபூர்வ சக்தியையும், மற்றவர்கள் நம்மீது கொண்டுள்ள அன்பையும், அவர்கள் நம்மீது கொண்டுள்ள அக்கறையையும் பல நேரங்களில் உணர்வதில்லை.

    “மற்றவர்கள் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்பதை உணர்ந்து கொண்டு நாம் செயல்படாதபோது வெற்றி நமக்குக் கிடைப்பதில்லை. நமது பலம் சுதந்திரமாக செயல்படுவதில் அமைவதில்லை. ஆனால், மற்றவர்களோடு இணைந்து செயல்படும்போது நமது பலம் மிகப்பெரிய பலமாக மாறி வெற்றியைத் தருகிறது.

    “என்னிடம் புத்தகம் இல்லை. நான் எப்படி நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்?” – என்று வருத்தப்படுவதைவிட  யாரிடம் புத்தகம் இருக்கிறது?” என்று தெரிந்து கொண்டு சில பக்கங்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்துப்படித்து முதலிடம் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

    “எனக்கு உதவ யார் இருக்கிறார்கள்?” என்று கவலைப்படுவதற்குப்பதில், சரியானவர்களிடம் உதவிகேட்டு நமது செயலில் வெற்றி பெற முயற்சி செய்வது சிறந்தது.

    அடுத்தவர்களிடம் போய் உதவி கேட்பது பிச்சை எடுப்பதைப்போல ஆகிவிடுமே என்று சிலர் தயங்கி நிற்பதுண்டு. இந்தத் தயக்கம் தேவையில்லாத ஒன்று ஏனென்றால், தனியாக நாம் இந்த பூமியில் வாழவில்லை. நம்மைச் சார்ந்தவர்கள் நம்மிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். இதேபோல், மற்றவர்களிடம் இருந்தும் பல உதவிகளைப் பெற்றுத்தான் நாம் நமது வாழ்க்கையை சிறப்பாக மாற்றி வருகிறோம். எனவே, தேவையான நேரத்தில் மற்றவர்களிடம் உதவி கேட்பது தவறல்ல. ஆனால், அதேவேளையில் மற்றவர்கள் உதவி செய்யவில்லையென்றால் வருத்தப்படுவது நல்லதல்ல.

    “ஏதோ, ஒரு சூழலில் அவரால் நமக்கு உதவி செய்ய இயலவில்லை” என்று நினைத்து செயல்படுவதால், தன்னம்பிக்கை இழக்கும் நிலையும் உருவாகிவிடும். இதனால், தேவையான சூழலில் மட்டும் மற்றவர்களின் உதவிக்கரத்தை எதிர்பார்ப்பது நல்லது.

    ஒரு தனிமனிதனிடம் எல்லாவிதமான சக்திகளும், வளங்களும், தகுதிகளும் இருப்பதில்லை. அதனால்தான், நம்மோடு இருப்பவர்களிடம் இணைந்து வாழ வேண்டிய நிலை உள்ளது.

    இதனால், மற்றவர்களிடம் உதவிகள் கேட்கவும், அவர்களது ஆதரவைப் பெறவும் நாம் தயங்க வேண்டிய அவசியமில்லை. உதவி கேட்க தயங்கினால், அது நமது பலவீனத்தின் அறிகுறியாக மாறிவிடும். எனவே, மற்றவர்களோடு இணைந்து பழகி அவர்களின் பலங்களை (strength), நம் பலங்களாக மாற்றிக்கொள்வது விவேகமான செயலாகும்.

    மற்றவர்களுக்கு எப்போதும் உதவிக்கரம் நீட்டவும், தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவியைப் பெறவும் தயார் நிலையில் இருப்பவர்கள் சிறப்பான  வெற்றியைப் பெறுகிறார்கள்.

    நம்பிக்கை கொள்வது எப்படி

    கடவுளிடம் கொள்ளும் நம்பிக்கைக்கு முன்பே, ஒருவர் தன்மீது நம்பிக்கை கொள்ளுதல் மிகவும் உயர்ந்த செயலாகும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    துறவும் தொண்டும் இரு கண்கள் என வாழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். முதலில் பலம், அடுத்தே நற்குணம் எனும் அணுகுமுறையினை போதித்தவர் இவரைப் பின்பற்றி வாழ்வோமானால், அவ்வணுகுமுறை நமது வாழ்வினில் பெரியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தும். வாழும் இந்த வரலாற்று காலத்தில் எல்லா மதங்களும் அவர்களுக்குரிய கடவுளின் மீது நம்பிக்கை வளர்த்துக் கொள்ளுமாறு போதிக்கின்றன. ஒருவரின் குறிக்கோளினை அடைய, தன்னம்பிக்கை இல்லாமல் கடவுளின் மீது நம்பிக்கை கொள்ளுதல் எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவாது என்பதை விவேகானந்தர் அவர்கள் கண்டார்.

    யார் ஒருவர் தன்னையும் பார்த்துக் கொண்டு பிறருக்கும் உதவி செய்து கொள்கின்றாரோ கடவுள் அவர்களுக்கு உதவுகின்றார்.
    முதலில் தன் மீது நம்பிக்கை, அடுத்ததே கடவுள் மீது நம்பிக்கை என்னும் மந்திரத்தை உபதேசித்தார். ஆனால் இறுதியில் இரண்டுமே தேவைப்படும் என்று வழிவுறுத்துகிறார்.

    நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லையெனில் நம்மால் எந்த செயலையும் சாதிக்க இயலாது. நமது வளம் மிக்கதொரு குறிக்கோளினை அடைய விரும்பும் அனைவரும் முதலில் தன்னம்பிக்கை என்பதனை வளர்த்துக் கொள்வதே அக்குறிக்கோளினை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடியாகும். எவ்வாறு இதனை அடைய வேண்டும்?

    இதோ! சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள்…

    நம் மீது நாம் கொள்ளும் கொள்கையில் தன்னம்பிக்கை நமக்கு மிகச் சிறந்த உதவியாக இருக்கிறது. இத்தன்னம்பிக்கையானது இன்னும் அதிக அளவில் விரிவாக கற்று, நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுமேயானால் நம்மிடம் உள்ள தீமைகளும், துன்பங்களும் மறைந்து போகும்.

    இதுநாள் வரையில் உள்ள மனித குல சரித்திரத்தில் எல்லா உயர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்வினில் மற்றவரை விட சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளின் சக்தியானது அவர்களிடம் அதிகமாக இருந்ததாலே சாதித்தார்களள் அதுவே அவர்கள் கொண்ட தன்னம்பிக்கை ஆகும். நாமும் அதுபோலவே தன்னம்பிக்கை கொண்டு சாதிப்போம்.

    ஒருவருக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் தெரிந்து கொண்டு அவற்றை செயல்படுத்துவதே, ஒருவருக்குள் நம்பிக்கையினை வளர்த்துக் கொள்வது என்பதாகும்.

    ஈடு இணையில்லாத எல்லையற்ற சக்தி நமக்குள் இருக்கும் பொழுது அச்சக்தியினை நமது பயன்பாட்டிற்கும், சமுதாயப் பயன்பாட்டிற்கும் உபயோகிக்க வேண்டும்.

    நமக்கு நமது செயல்களின் மீதும், எண்ணங்களின் மீதும், கட்டுபாடு கிடையாது என்று நாம் எண்ணுகிறோம்.

    அக்கட்டுபாட்டினை அடைவது எப்படி?

    உடல், மனம் சார்ந்த நுண்ணிய அசைவுகளின் எண்ணங்கள் மீது நமக்கு கட்டுபாடு ஏற்பட்டால் அவ்வசைவுகள் செயலாக வடிவம் பெருவதற்கு முன்பே அவ்வெண்ணங்களின் வேறினை நாம் உறுதியாக கொண்டேமானால், முழுமையாக அவ்வசைகளிலும் நம்மால் கட்டுபாட்டினைக் கொள்ளுதல் இயலும்.

    நம்மை நாமே அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு இறுதியில் அச்சக்திகளையும், நுண்ணிய காரணங்களையும் பற்றிக் கொண்டு விட்டால், அதன் பிறகு நம்மீது நாம் நம்பிக்கைக் கொள்வது என்பது எளிதான செயலாகும்.

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி

    ஏதேனும் ஒரு துறையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தங்களுடைய எதிர்காலத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? அவர்களால் சமுதாயத்திற்கு என்னவெல்லாம் செய்ய முடியும்?

    ஆர். பார்த்திபன் ராமசாமி

    ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்

    சேலம்.

    நீங்கள் ஒரு நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஓய்வு பெறும் வயதிலும் ஓய்வு பெறும் மனநிலையிலும் உள்ள அதிகாரிகள் கேட்க வேண்டிய கேள்வி இது. அவர்கள் வலுவான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும், சமுதாயத்திற்கு எதாவது நன்கொடையை தரவேண்டிய பொறுப்பிலும் இருக்கிறார்கள்.

    ஓய்வு வயது:

    மாநில அரசு அதிகாரிகள் ஓய்வு வயது 58 என்றும், மத்திய அரசு அதிகாரிகள் ஓய்வு வயது 60 என்றும் உள்ளது. பெரும்பாலும் அதிகாரிகள் ஓய்வு வயதை எட்டியபின் உண்மையில் ஓய்வு எடுக்கச் சென்று விடுகிறார்கள். சிலர், அரசு பதவியிலிருந்து ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாகவே மனதளவில் ஓய்வு பெற்று விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் ஓய்வு பெற்ற பின்னரும் பல ஆண்டுகள் வேலை செய்கிறார்கள்.

    உண்மை என்னவென்றால், 58 வயது என்பது ஒரு பெரிய வயதே இல்லை. நார்வே, சுவீடன், பின்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் மனிதர்கள் சராசரி 88 ஆண்டுகள் வாழ்கிறார்கள்,  அவர்கள் அந்த 88 வயதுவரை உழைக்கிறார்கள். முடியாத பட்சத்தில் ஓய்வு எடுக்கிறார்கள், ஆனால் முடிந்தவரை அவர்களது கடமைகளை அவர்களே செய்கிறார்கள்.

    இன்று நீண்டநாள் வாழ்கிறோம்:

    ஓய்வு வயது 58 என்பது பல ஆண்டுகளுக்கு முன் முடிவானது. அப்போது இந்தியர்கள் பெரும்பாலும் சிறு வயதில் இறந்து விட்டார்கள். நமது முன்னோர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்பது உண்மை அல்ல, அதற்கு ஆதாரமும் இல்லை. ஒரு சிலர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திருக்கலாம், ஆனால் பெரும்பாலும் மக்கள் குறுகிய வயதில் இறந்துள்ளார்கள். 1947 ம் ஆண்டு இந்தியர்களின் சராசரி வயது 32 தான்! இன்று ஆங்கில மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பதாலும், உணவு பெருவாரியாக மக்களுக்கு கிடைப்பதாலும் சராசரி வயது ஆண்களுக்கு 68 என்றும் பெண்களுக்கு 67 என்றும் உயர்ந்துவிட்டது.  இந்திய விவசாயிகளும், MBBS படித்த மருத்துவர்களும் நமது வாழும் வயதை அதிகரித்து தந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லலாம்.

    அரசுத்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றபிறகு நிறைய நேரம் இருக்கும். அதை ஆக்கப்பூர்வமாக செலவு செய்வது மிகவும் அவசியம். அப்படிச் செய்யாமல் ஓய்ந்து விட்டால், மனச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி ஏற்பட்டு மனநோயாளி ஆவதற்கும் வாய்ப்பு உண்டு. 80 வயதைத்தாண்டியும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் களப்பணியாற்றிய பாரத ரத்னா டாக்டர். கலாம் அவர்களை நாம் கண்டோம்.

    சும்மா இருக்கக் கூடாது:

    ஒய்வு என்றால் சும்மா இருப்பது என்றும் பலர் புரிந்து கொண்டுள்ளார்கள். சும்மா இருப்பதே நன்று, அதுவும் பக்திமானாக இருந்தால் போதும், அதுவே ஒரு பெரிய பாக்கியம்! என்று கூட பலரும் நம்புகிறார்கள். சும்மா இருந்து கொண்டு சாப்பிடுபவர்களுக்கு ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. ஜமீன்தார்கள் அப்படித்தான் சுகபோக வாழ்க்கையை நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்கள். ஆனால் சும்மா இருப்பது உடலுக்கும் மனதுக்கும் ஆபத்தானது.

    சும்மா இருந்து சாப்பிட்டால்:

    • உடல் நலன் கெடும்
    • மன நலம் கெடும்
    • வருமானம் குன்றும்
    • மனிதர்களுடனான உறவு முறியும்
    • சுயமதிப்பு குறையும்
    • மகிழ்ச்சி மறையும்
    • தூக்கம் வராது
    • பிறரை வெறுக்கும் மனநிலை வரும்

    ஆக, ஓய்வு பெற்றவர்கள் எதாவது ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபட வேண்டும். அதிகாரிகள் எந்த துறையில் பணியில் ஈடுபட்டிருந்தாரோ அந்தத் துறை சார்ந்த பணியில் ஈடுபடலாம்.

    • ஓய்வு பெற்ற இராணுவ வீரர், ஒரு செக்யூரிட்டி நிறுவனம் துவங்கலாம் அல்லது அதுபோன்ற துறையில் பணியாற்றலாம்.
    • ஓய்வு பெற்ற ஆசிரியர், ஒரு தனியார் பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் அல்லது பள்ளி ஒன்று துவங்கலாம்.
    • ஓய்வு பெற்ற சிவில் இன்ஜினியர், சுயமாக ஒரு கட்டுமான நிறுவனம்(Civil Construction Compay) துவங்கலாம் அல்லது ஒரு நிறுவனத்தில் பணியில் சேரலாம்.
    • ஓய்வு பெற்ற அரசு மருத்துவர், தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவர் ஆகலாம். மருத்துவர்களுக்கு ஓய்வு இல்லை.
    • ஓய்வு பெற்ற நூலக ஊழியர், நூல் அச்சிடலாம் அல்லது நூல் எழுதலாம் அல்லது ஊர் ஊருக்கு பொது நூலகம் திறக்கலாம்.

    விவசாயம்:

    இப்படி பல பணிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைச் செய்ய ஆர்வம் வேண்டும், அவ்வளவுதான். ஒன்றுமில்லை என்றால் சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்யலாம். அதையும் தீவிரமாகச் செய்யலாம். மற்ற விவசாயிகள் பார்த்து மகிழும்படியாகவும், பார்த்துப் படிக்கும்படியாகவும் விவசாயம் செய்யலாம். நானும் அதைத்தான் செய்யலாம் என்று இருக்கிறேன். ஆனால் அதற்கு நிலம் வேண்டும். என்னிடம் நிலம் இல்லை. வாங்க வேண்டும். ஓய்வு பெற்ற பின்னால் வாய்ப்பு கிடைக்கும். பார்ப்போம்.

    ஓய்வு பெற்றவர்கள் இப்படி உருப்படியாக ஏதாவது ஒன்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் பொழுது போகும். மனநலம் மற்றும் உடல் நலம் காக்கப்படும். வருமானமும் பெருகும். ஆனால் உளமாற ஆனந்தம் ஏற்பட வேண்டும் என்றால் அவர்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். அதுவும் இலவசமாகச் செய்ய வேண்டும் அதுதான் ‘சேவை.’ அந்த சேவைதான் உண்மையான மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் உயர் சுயமதிப்பையும் தரும். வாழ்க்கைக்கு ஒரு பொருளையும் பெரு நோக்கத்தையும் அது தரும்.

    ஆனந்தம் பெற என்ன செய்யலாம்?

    • ஒரு ஆசிரியர், 100 மாணவர்களுக்கு இலவச பயிற்சி தரலாம். ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடப் பயிற்சி மிகவும் உயர்வானது.
    • ஒரு டாக்டர், இலவசமாக சிகிச்சை தரலாம். பல்லாயிரம் ஏழைகள் பயனடைவார்கள். டாக்டர் பூரணி ரவிச்சந்திரன் என்ற மகப்பேறு மருத்துவர் கோத்தகிரி பகுதியில் தங்கியிருந்து மலை வாழ் பெண்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார்.
    • விளையாட்டுத் துறையில் வேலை பார்த்தவர்கள், பிள்ளைகளுக்கு ஓட்டம், சைக்கிள், நீச்சல், கைப்பந்து, கால்பந்து  போன்ற விளையாட்டுகளில் பயிற்சி தரலாம். ஒரு விளையாட்டு கிளப் நிறுவலாம். ஒரு உடற்பயிற்சி மையத்தையும் நிறுவலாம்.
    • பத்து ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். அதற்கு நிதி திரட்டலாம்.

    இப்படியான மார்க்கங்கள் பல உண்டு. எந்த பண முதலீடும் இல்லாமலே சில தொழில்கள் செய்யலாம். எனக்கும் ஒரு ஆசை, ஓய்வு பெற்ற பின்னர் இளைஞர்களுக்கு அறிவியல் போதிக்க வேண்டும் என்பதே அது. அதற்காக இப்போதே பல அறிவியல் நூல்களை படித்தும், அறிவியல் அறிஞர்களைப் பற்றி விவாதித்தும் வருகிறேன். விஞ்ஞானத்தை புரிந்து கொண்ட பிள்ளைகள் நல்வழியில் நடப்பார்கள், நாகரீகமாக வாழ்வார்கள், பிறரை எளிதில் வெறுக்கவும், குறை கூறவும் மாட்டார்கள். அவர்களது செயல்பாடு சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

    என்ன செய்யக் கூடாது:

    ஓய்வு பெற்றவர்கள் என்ன செய்யக் கூடாது என்பதும் முக்கியம்.

    • இளைஞர்களை குறைகூறிக் கொண்டு இருக்கக் கூடாது.
    • எல்லாம் கெட்டுப்போய் விட்டது என்று கூச்சலிடக்கூடாது.
    • சாதி மத அமைப்புகள் உருவாக்கி கலாட்டா செய்யக்கூடாது.
    • மூடநம்பிக்கைகளை பரப்பக்கூடாது.

     முதுமை வியாதி:

    ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாமலே போவதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களது உடல் நலக் குறைவு எனலாம். சர்க்கரை வியாதி, இருதய நோய், சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இல்லாதது போன்ற பெரிய பிரச்சனைகள் பலருக்கு உண்டு. ஆனால் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் இவை எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    • அதிக உணவு உண்பது
    • உடற்பயிற்சி இல்லாதது
    • உறக்கம் குறைவு
    • கவலைப்படுவது
    • அளவுக்கதிகமாகப் பயப்படுவது
    • விஞ்ஞான மருத்துவத்தைப் புறக்கணித்து போலி மருத்துவத்தை நாடுவது

    ஆக, அறிவியல் மருத்துவத்தின் மீது கவனம் செலுத்தி, அறிவியல் கண்டுபிடிப்புகளை நம்பி, ஆதாரம் உள்ள உடல் நலக்குறிப்புகளை அறிந்து உடல் நலம் பேணினால் 88 வயது வரை வாழலாம். ஓய்வு பெற்ற பின்னர், 30 ஆண்டுகள் சேவை செய்யலாம். ஒரு நோக்கத்தோடு வாழ்ந்தோம் என்ற திருப்தியுடன் கண்களை மூடலாம். நமது உடம்பில் இருக்கும் அணுக்களும், மூலக்கூறுகளும், கார்பன், ஹைட்ரஜன் உள்ளிட்ட 118 தனிமங்களும் நாம் இறந்த பின்னர் வந்த மண்ணிலேயே கலந்து விடும். அதற்கு பிறகு எதுவும் இருக்காது, எல்லாம் இருட்டு என்ற நிலைதான். இறந்தவர்களைப் பொறுத்துவரை வேறு எதுவும் இல்லை.

    முடிவு:

    முதல் 25 ஆண்டுகள் கற்கிறோம், அடுத்த 20 ஆண்டுகள் கடமையாற்றுகிறோம், இறுதி 25 ஆண்டுகள் சமுதாயத்திற்கு நமது பங்கைத் திருப்பித் தருகிறோம். இதுவே நல்ல ஒரு கோட்பாடு. இதில், இறுதி 25 ஆண்டுகள் நாம் ஆற்றும் நற்பணி இந்த நாட்டிற்கு நமது பங்களிப்பு. அப்படி பெரியதொரு பரிசை சமுதாயத்திற்கு வழங்க இன்றே நம்மை தயார்படுத்த வேண்டும்.

    துவளாமல் உறுதி எடு… துணிந்து சிகரம் தொடு…

    Dr J. ராஜேந்திரன்,

    சேர்மன், JRD Realtors  Pvt.Ltd  

    கோவைப்புதூர்,         

    கோயமுத்தூர்.

    • தாழ்ந்து வேலை செய்வதால் தாழ்ந்தவர் ஆக முடியாது. உயர்ந்து வேலை செய்வதால் உயர்ந்தவராக முடியாது. எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி வேலையைச் செய்கிறோம் என்பதில் தான் வெற்றியின் வீரியம் அடங்கியுள்ளது என்பதை நன்குணர்ந்து அதற்கு ஏற்றார்போல் வாழ்ந்து வருபவர்.
    • புதுமையும், கடமையும் இருகண்களாகக் கொண்டு, தான் செய்துவரும் தொழிலில் செயல்திறன் மிக்கவராக விளங்குபவர்.
    • உழைப்பே உயர்வு தரும், உழைப்பே உன்னதம் தரும், உழைப்பே சாதனையைத் தரும் என்று உழைப்பை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்க்கையில் அனுதினமும் எதிர்நீச்சல் போட்டு வருபவர்.
    • படித்தது குறைவு என்றாலும், இவர் அறிந்தது அதிகம். தம் வாழ்நாளில் எதிர்கொண்ட அனுபவத்தில் எவ்வித குறையுமின்றி, தனக்கென்று தனி பாதையை உருவாக்கி தடம் மாறாமல் தரணியை வென்று வருபவர்.
    • தன்னை நம்பி வருவர்களின் நம்பிக்கையை எள்ளவும் சிதைக்காமல், எண்ணியதை எண்ணியவாறு தருவதில் தலை சிறந்தவர்.

    இப்படி, எண்ணற்ற பண்புகளைக் கொண்டு கட்டுமானத்துறையில் தனித்துவம் படைத்து வரும் JRD Realtors Pvt.Ltd நிறுவனத்தின் சேர்மன் அனைவராலும் JRD என்று அழைக்கப்படும் Dr J. ராஜேந்திரன் அவர்களின் நேர்முகத்திலிருந்து இனி…

    கே: உங்களின் இளமைக்காலம், படித்தது, வளர்ந்தது பற்றிச் சொல்லுங்கள்?

    கற்கோயில்கள் நிறைந்த கல்வி மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தேன். பெற்றோர் ஜெயகோபால் – சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். அன்றாடம் வறுமையைப் பங்கீட்டு வாழும் குடும்பம். என் அப்பா இந்த கிராமத்தில் ஒரு சின்ன மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். கடை சின்னதாக இருந்தாலும், எங்கள் ஊரில் தரமான கடை என்று பெயரெடுத்திருந்தது. இதற்கு காரணம் என் அப்பாவின் நேர்மையும் உழைப்பும் ஆகும். எதை செய்தாலும் அதில் தரம் இருக்கிறதா என்று பல முறை ஆராய்ந்து அதற்கு பின்னரே அதை மக்களுக்கு கொடுப்பார்.

    என் தந்தை நினைத்தது எல்லாம்  என்னை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதாகவே இருந்தது. அது அரசு பணியோ, தனியார் பணியோ, அல்லது சொந்த தொழிலோ கஷ்டப்படும் வாழ்க்கையை அனுபவிக்கமால் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் நோக்காக இருந்தது. பள்ளிப்படிக்கும் வயது வருவதற்கு முன்பே என் தந்தையோடு பல நாட்கள் கடையில் இருந்திருக்கிறேன் அவர் மற்றவர்களுக்குக் கொடுக்கும் அணுகுமுறையைப் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருக்கும் அந்தளவிற்கு அனைவரிடமும் நெருங்கி பழகுவார். எனக்கும் பள்ளி வயது வந்தது இதனால், கிராமத்திலிருந்த அரசுப்பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள். தினமும் சென்ற கால் தீடிரென்று நிற்காது இதனால் தினமும் படிப்போடு கடையையும் நான் கவனித்து வந்தேன். கடை என் மனதில் நின்ற அளவுக்கு கல்வி நிற்கவில்லை. இதனால், எட்டாம் வகுப்போடு எனது கல்விப்பயணம் நின்றது.

    கடையில் நான் வேலை செய்யும் ஆர்வத்தை என் தந்தை நன்கு புரிந்து கொண்டார்.  இதனால், முழுநேர பணியாகவே கடையைப் பார்த்து வந்தேன். எனது தந்தையின் அத்துனை நற்குணங்களையும் எனது வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கத் தொடங்கினேன். இளம் பருவத்தில் பதியும் நற்குணம் தான் எதிர்கால வாழ்வின் அச்சாணி என்று சொல்வார்கள். அப்படி தினந்தினமும் என்னை நான் சீர்படுத்திக் கொண்டேன். வாழ்க்கையின் நகர்வு நத்தைப் போல் நகராமல் நதியைப் போல வேகமாகவே ஓடியது.

    கே: சொந்த ஊரில் மளிகைக் கடையை நடத்தி வந்த நீங்கள், கோவைக்கு வந்தது குறித்து சொல்லுங்கள்?

    நாட்கள் ஓடின. காலச்சக்கரம் இன்பம் துன்பங்களையும், மேடு பள்ளங்களையும் கடந்து ஓடின.  1989 ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. மனைவி ஆஷா ராஜா டி. பார்ம் படித்தவர். நானும் கடையைப் பார்த்துக் கொண்டு அவருக்கும் ஒரு மெடிக்கல் கடையை வைத்துக் கொடுத்தேன். ஆனால், தொடங்கிய சில மாதத்தில் கடை பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

    இதனால் பெரும் மனசங்கடத்திற்கு ஆளாயினோம். மெடிக்கல் கடைக்கு நிறைய கடன் வாங்கியிருந்தேன். இதனால், மிகவும் சிரமம் அடைந்தேன். இனியும், இங்கேயே இருந்தால் கடன் என் கனவைத் தகர்த்து விடும் என்பதால் நாமக்கல்லில் இருந்து கோவைக்கு குடிபெயர்ந்தோம்.

    என் தாயார் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். இதனால், அடிக்கடி என்னிடம் ஒரு வார்த்தைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்.  நீ  எங்கு செல்ல வேண்டும் என்றாலும் காவிரி ஆற்றைக் கடந்து செல், நீ வென்று விடுவாய் என்பதுதான் அந்த வார்த்தை. இதனால், கோவைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

    கோவைக்கு வந்த உடன் அனைத்துமே புதியதாகவே இருந்தது. இடம் புதுமை, மக்கள் புதுமை இப்படி கண்ணில் பட்டதெல்லாம் வித்தியாசமாக இருந்தது. எங்கு வேலைத் தேடுவது, என்ன வேலைத் தேடுவது என்று எனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இரவு முழுவமும் தூங்காமல் கண்விழித்து யோசித்துக் கொண்டேயிருந்தேன். அப்போது  என்னுடைய உறவினர் ஒருவர் இங்கு வசித்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டு அவரையும் சந்தித்தேன். அவர் ஒரு ஹோட்டலில் உதவியாளர் பணி இருக்கிறது அங்கு சென்று பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை மற்றவர்களிடம் கையேந்தும் வேலை மட்டும் செய்ய கூடாது என்று எண்ணி அடுத்த நாளே ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றேன். பகல் முழுவதும் வேலை செய்து கொண்டேயிருந்ததால் இரவு எங்கே தங்க போகிறோம்  என்று கூட நினைக்கவில்லை. அதன் பிறகு நண்பரின் உதவியால் கோவைப்புதூர் பகுதியில், குறைந்த வாடகையில் வீடு கிடைத்தது. ஆரம்பத்தில் வருமானம் குறைவாகக் கிடைத்ததால் வாடகை, உணவு இதற்கே சரியாக இருந்தது. எவ்வித கையிருப்பும் இல்லாமல் இப்படியே ஆறுமாதம் சென்றது.

    கே: கட்டுமானத்துறைக்குள் வந்தது குறித்துச் சொல்லுங்கள்?

    தினமும் 15 ரூபாய் சம்பாத்தியத்தில் தான் என் குடும்பம் நகர்ந்தது. நான் தினமும் வேலையை முடித்து இரவு நேரத்தில் பேருந்தில் தான் பயணம் செய்வேன். அவ்வாறு பயணம் செல்லும் போது, சில அறிமுகமில்லாத நபர்கள் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்குத் தெரிந்த இடத்தில் ஏதாவது வீடு இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அவ்வாறு இருந்தால் சொல்லுங்கள், உங்களுக்கு கமிஷன் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். வறுமையின் பிடிப்பில்  இருந்ததால் இந்த வேலை எனக்கு கைக் கொடுக்கும் என்று நம்பினேன். அதற்காக என்னை நன்கு தயார்படுத்திக் கொண்டேன். இந்த வேலையில் இரண்டை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் அதில் நேர்மையும், நம்பகத்தன்மையும் இருந்தால் இதில் சாதிக்க முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எந்த ஒரு வேலை செய்தாலும் மக்கள் உடனுக்குடனே நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எல்லா வாடிக்கையாளரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நிறையை எப்படி சொல்வார்களோ, அது போலவே குறையையும் சொல்வார்கள். அந்த குறையை மட்டும் அறிந்து நிவர்த்தி செய்தால் நிச்சயம் வெல்லலாம்.

    நான் இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன் பல முறை யோசித்து தான் முடிவெடுத்தேன். எதையும் ஆழம் தெரியாமல் காலை விட நான் ஒருபோதும் விரும்பியதில்லை. பல வாடிக்கையாளர்களைப் பார்த்துவிட்டதால் இந்த கட்டுமானதுறையில் மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் மண்ணிலிருந்து முளைக்க விதை எவ்வளவு முயற்சி எடுக்குமோ அந்த அளவிற்கு கடும் உழைப்பைக் கொண்டு உருவானவன் தான் நான்.

    கே: உங்களின் வளர்ச்சியின் மூலதனமாக நீங்கள் நினைப்பது?

    என்னுடைய நேர்மையைத் தவிர வேறொன்றுமில்லை. வாடிக்கையாளர்களை  நான் கடவுளாகப் பார்க்கிறேன். அவரின் தேவைகளை பெரிதும் மதிக்கிறேன். அவர்களின் எதிர்பார்ப்பைக் கேட்டறிந்து நினைத்ததை நினைத்தவாறு நிறைவேற்றிக் கொடுக்கிறோம்.

    அவர்கள் ஒரு வீடு கட்டுவதற்கு முன்பே மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தை மூலதனமாகப் போட்டு தான் கட்டிடத்தையே தொடங்குவோம். தரத்தை உயர்த்தி எண்ணத்தை மேன்மை அடைய செய்ய வேண்டும். பொய் என்ற வார்த்தையை புறம் தள்ளினாலே வெற்றி பெறலாம். தொழிலில் சாதிக்கலாம்.

    நம்மை நாமே செதுக்கிக் கொண்டு ஒரு சீர்திருத்தவாதியாகச் செயல்படுத்த வேண்டும். பகட்டு வாழ்க்கை வெற்றிப் பெறாது. பாதை தவறாமல் வாழும் வாழ்க்கையே வெற்றியைத் தரும்.

    கே: உங்களின் தனித்தன்மை என்று நீங்களே பார்ப்பது?

    நாம் மற்றவர்களை நேசிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர் நம்மை நேசிப்பர். இதுதான், என்னுடைய வாழ்க்கையின் வேதவாக்கு. நவீன வாழ்க்கையில் உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டது. இதனால், முகநூல் (Facebook), வாட்ஸ்அப்  போன்ற வலைதளங்களைப் பயன்படுத்துகிறோம். நானும் முகநூலை தினமும் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய கணக்கில் 10000 த்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் தினமும் 50 பேருக்காவது பிறந்தநாள் வரும். நான் அந்த 50 பேருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதை வழக்கமாகப் பின்பற்றி வருகிறேன். அவ்வாறு சொல்லும் போது அவர்களுக்கு ஒரு நிமிடம் சந்தோஷம் ஏற்பட்டாலும் அது எனக்கு மகிழ்ச்சிதான்.

    எங்களைப் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை நாங்களே நேரடியாகச் சென்று அழைத்து வந்து அவரின் தேவையைக் கேட்டறிவோம். வளர்ந்துவிட்டோம் என்பதால் மற்றவர்களை அனுப்பி வைப்பதுமில்லை அதை நான் விரும்பவதுமில்லை.

    எங்களின் பணியை நாங்களே செய்ய வேண்டும். அப்போது தான் வாடிக்கையார்களுக்கும் எங்களின் மீது ஒரு நம்பகத்தன்மை ஏற்படும்.. எங்களின் தரத்தைக் கேட்டறிந்து அவர்களே எங்களை நாடி வருவார்கள். அதுதான் என்னுடைய தனித்தன்மையாகப் பார்க்கிறேன்.

    கே: ஒருவர் ஓரே நேரத்தில் பலதொழில்களில் ஈடுபடுகிறார் அவ்வாறு ஈடுபடும் பொழுது அவரால் சாதிக்க முடியுமா?

    இங்கு எதுவும் சாத்தியம் தான். முடியும் என்று நினைத்துவிட்டால், நிலவையும் தொடலாம் என்பதுதான் உண்மை. ஒரு தொழிலைத் தொடங்கும் முன் நம்மால் இத்தொழிலில் சாதிக்க முடியுமா? என்று நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு கேள்விகளைக் கேட்க தவறுபவர்கள்தான் சாதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

    ஒரு தொழிலில் சாதிக்க முடியவில்லை என்று வேறு ஒரு தொழிலைத் தொடங்கக் கூடாது. அதிலேயே ஆழத்தைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு படியாக அடியெடுத்து வைக்க வேண்டும். அப்போது தான், வெற்றி என்னும் சிம்மாசனத்தை அடைய முடியும்.

    எந்த தொழிலை செய்தாலும் கௌரவம் பார்க்க கூடாது. கடமையை கண்ணியமாக கொள்ள வேண்டும்.. சிலருக்கு ஒரு தொழிலை வழிநடத்துவதிலேயே பல மன அழுத்தம் ஏற்படுவதை இங்கு பார்க்க முடியும். ஒரு சிலர் பல வேலைகள் செய்தாலும் எப்போதும் சந்தோஷமாகவும் இன்முகமாகவும் இருப்பர் காரணம் அவர்கள் எவ்வாறு தங்களின் வேலையை நேசிக்கிறார்கள் என்பதில் அது புலப்படும். இதனால் செய்யும் வேலையை நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசித்து செய்தால் எதுவும் வெல்லலாம்.

    கே: கட்டுமானத்துறையில் உள்ள சவால்கள் பற்றி?

    வாழ்க்கையில் சவால்கள் என்று எதுவுமில்லை. சவால் என்று நாம் நினைப்பது என்னவென்றால், மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவது. அவ்வாறு ஒப்பிடும்போது சவால்கள் என்ற நிலை உருவாகிறது.

    எங்கள் நிறுவனத்தை விட பல மடங்கு பெரிய நிறுவனங்களும் உண்டு. அதோடு போட்டிப் போட வேண்டுமென்றால் அங்குதான் சவால்கள் பிறக்கும். நான் ஒருபோதும் மற்றவர்களோடு போட்டிப்போட்டு எங்கள் நிறுவனத்தை தனிமைப்படுத்தியதே கிடையாது. எல்லோரும் செய்கிறார்கள், நானும் செய்கிறேன். மற்றவர்களுக்கு வருமானம் பெருகுகிறது, எனக்கு அதிகம் கிடைக்கவில்லை என்று ஒருபோதும் நான் நினைக்க மாட்டேன்.

    உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தாலே போதும். அதிகம் கிடைக்க வேண்டும் என்று அல்லல் பட்டால் நிறைய இழக்கநேரிடும். அதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன்.

    கே: படித்தப்படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையென்று நிறைய இளைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். அதுபற்றி?

    இது, சற்று சிந்திக்க வேண்டிய விஷயம். நான் படித்துவிட்டேன். எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு போதும் இளைஞர்களாகிய நீங்கள் சிந்திக்கக் கூடாது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பார்  திருவள்ளுவர். அந்த உலகப்பொதுமறையின் வாக்கை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ஆனால், பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறையைப் படிக்கும் மாணவர்களின் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்? என்றால், படித்து முடித்தவுடன் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கும்.

    இந்நிலை மாணவர்களிடையே மாற வேண்டும். அப்படி ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்தாலும் அவருக்கு மனநிறைவைத் தராது. காரணம் அவர் செய்யும் வேலை இயந்திரம் போன்றது. அவன் இயந்திரம் போல் வேலை செய்தாக வேண்டும். இதனால் அவர் நிறைய ஆசைகளை தியாகம் செய்தாக வேண்டும்.

    ஆனால், இதுவே படித்து முடித்து அவன் சொந்தமாக ஒரு கடையை நிறுவி, அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறான் என்றால், அது அவனுக்கு மிகப்பெரும் மனநிம்மதியைக் கொடுக்கும். அக்கடையின் மூலம் நிறையப் பேருக்கு வேலையைக் கொடுக்க முடியும்.

    இப்படித்தான், வாழ்க்கையை சிந்திக்க வேண்டும். பறவையாய் சிறைபடாமல் சுதந்திரப்பறவையாய் வானில் வட்டமிடுங்கள், வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.

    கே: கட்டுமானத்துறையில் இயந்திரங்களின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?

    இயந்திரமில்லாமல் இப்பொழுது எந்தத்துறையும் இயங்குவதில்லை என்றே சொல்லலாம். காரணம் ஆட்கள் பற்றாக்குறை இன்னும் பல காரணங்களைக் கூறலாம்.

    ஆனால் ஆரம்ப காலத்தில் எவ்வித இயந்திரப் பயன்பாடும் இல்லாமல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்று கோயில்கள் இங்கு ஏராளம் உண்டு. பல இயற்கை சீற்றங்களைத் தாண்டியும் வரலாற்றுச் சின்னங்களாக இன்றுவரை  பிரதிபலிக்கிறது என்றால் நம் முன்னோர்கள் கடைபிடித்த கட்டிடக்கலையின் சிறப்புகள்தான். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது. கட்டக்கலையில் வெறும் மனிதர்கள் மட்டும் செய்யும் வேலை மிகக் குறைவு தான். மனிதர்களும் இயந்திரங்களும் இணைந்து செய்வதே இன்றைய நிலையாகி விட்டது. இப்பொழுதும் இனியும் இந்த நிலையை மாற்றவோ, மறுக்கவோ முடியாது என்பது தான் நிதர்சனம் என்று சொல்வேன்.

    கே: இத்துறையில் தமிழர்களை விடவும், பிற மாநிலத்தவரே அதிகம் ஈடுபடுகிறார்கள். என்று நினைக்கிறேன் அதற்கான காரணம் என்ன?

    வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இங்கு பிழைப்புக்காக வருகிறார்கள். அவர்கள் உழைத்தால் தான் அவர்களால் வாழ்க்கை வாழ முடியும்.

    கட்டுமானப்பணி சற்று கடினமாக இருக்கும் என்பதை தமிழர்கள் நினைக்கிறார்கள். இதைவிட எளிமையான வேலை நிறைய இருக்கிறது என்று நினைத்து வேறு வேலை செய்கிறார்கள்.

    ஆனால், அவர்கள் உழைக்க வேண்டும் என்று ஒருவித வெறியோடு வருவதால், எந்த வேலையையும் எளிமையாகவே செய்கிறார்கள். இவர்களை போலவே தான் தமிழர்கள் வேறு ஒரு மாவட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் அங்கு அவர்கள் முறையாக வேலை செய்வார்கள். இவ்வளவுதான் வேறுபாடு.

    கே: நீங்கள் தொடங்கிய இந்தத் தொழிலை, குறிப்பாக உங்கள் மகன் இதை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    எனது மகன் தீபக் விக்னேஷ்வர். நான் கற்றுக் கொண்டே என்னுடைய அனுபவத்தின் பிரதிபலிப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவர் ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர் என்றாலும், இந்தக் கட்டுமானத் தொழிலை என்னைவிட பல மடங்கு புதுமையைப் புகுத்தி வருகிறார். இதனால் ஒருபோதும் என் தொழிலின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டது கிடையாது. நான் என் கண் முன்னே அவரின் செயல்பாட்டை பார்த்து வருகிறேன் என்பதால் மேலும் வளர்ச்சி நிலைக்கு நிறுவனத்தைக் கொண்டு செல்வார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

    என் மகனின் உழைப்பு என்னை பிரமிப்பிற்கு உள்ளாக்கியது. கணினி வழி அவருக்குத் தெரியாதது என்று எதுவுமில்லை எனலாம். அந்தளவிற்கு அவரின் அர்ப்பணிப்பு குணம் அதிகம். இன்னும் பல வளர்ச்சி சார் நிலைகளுக்கு என் மகன் கொண்டு செல்வார் என்பதில்  எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

    கே: புதிதாய் தொழில் தொடங்க வருபவர்களுக்கு உங்களின் ஆலோசதனை?

    ஒரு இலக்கோடு வாருங்கள். இங்கே வாழ பல வழிகள் உண்டு. அதை பயன்படுவதும் பாதை தவறுவதும் அவரவர் கையில் மட்டுமே உள்ளது. எதைச் செய்தாலும், உண்மையோடும் நம்பிக்கையோடும் செய்யுங்கள். பொய், ஏமாற்று வேலை போன்ற தீய குணங்களை ஒருபோதும் செய்தல் கூடாது. தினம் தினம் நன்றாக, புதிதாக யோசிக்க வேண்டும்.

    கே: தங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

    ஒரு தனிமனிதன் வெற்றியாளனாய் வலம் வருகிறான் என்றால், அதற்கு குடும்பம் மிகப்பெரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு தனிமனிதன் சாதிக்க முடியும். அந்த வகையில், நான் மிகப்பெரும் சாதனையாளன்தான். என்னுடைய மனைவி ஆஷாராஜா அவர்கள் என் வெற்றி – தோல்விகளில் சமமாக பங்கிட்டு என்னை தட்டிக்கொடுத்து வருபவர். எத்தனையோ துன்பத்திலும், என் கண்ணீரைத்துடைத்து வாழ்க்கையின் மகத்துவத்தைப் புரிய வைத்திருப்பவர். என்னுடைய அன்பு மகள் நந்தினி,மகன் தீபக் விக்னேஷ்வர். அவருடைய மனைவி உமாபாரதி பேத்தி தியா சரஸ்வதி.

    இவர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

    கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?

    உங்கள் புத்தகமே தான் இந்தக் கேள்விக்கு சரியான பதில். நம்பிக்கையை நேசிக்க வேண்டும். அதைவிட, தன் மேலே உள்ள நம்பிக்கையை  ஒருபோதும், கைவிடக்கூடாது. அதுதான் தன்னம்பிக்கை. இதை அனைவரும் உணர வேண்டும் வாழ்க்கையில் உயர வேண்டும்.

    உள்ளத்தோடு உள்ளம்

    உலக நாடுகளிலேயே வேற்றுமைகள் பல கொண்டும் ஒற்றுமையாக வாழும் நாடுகளில் இந்தியா தான் முதன்மையாகத் திகழ்கிறது. இனத்தால் மொழியால், மதத்தால் பிரிந்திருந்தாலும், மனதால் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நாடு இந்தியா.

    29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 1618 மொழிகள், 6400 சாதிகள், 6 மதங்கள், 6 இனங்கள் என பல பிரிவுகள் என்றாலும் நாடு என்பது ஒன்று மட்டுமே. இவ்வளவு வேற்றுமைகள் நிறைந்து காணப்பட்டாலும் நாம் ஒற்றுமையாய் வாழ்வதற்கு வழிவகுப்பது நாட்டுப்பற்றும், தேசம் சார்ந்த திருவிழாக்களுமே ஆகும்.

    இந்திய கலாச்சாரத்தின் படி விழாக்களுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுப்பார்கள். காரணம் ஒற்றுமை உணர்வுடன் கூடி வாழ வேண்டும் என்பதால் மட்டுமே.

    அந்நியர்கள் நம் மண்ணில் கால் ஊன்றிய பொழுது தொடக்கத்திலேயே பலர் ஒற்றுமையாகக் கழகக் குரலை எழுப்பினார்கள். ஒற்றுமையைக் கண்டு கதிகலங்கினார்கள் அந்தியர்கள்.

    நாம் இன்று சுதந்திர நாட்டில் இருக்கிறோம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என்றால் இது சாதாரணமாகக் கிடைக்கவில்லை. உண்ணாமல், உறங்காமல் போராடியவர்கள், குடும்பத்தை விட்டு நாட்டு விடுதலைக்காகக் குண்டு அடிப்பட்டு மாய்ந்தவர்கள், சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதை அனுபவித்து இறந்தவர்கள் என்று இவர்களின் வீரத்தின் அடையாளம் நமது சுதந்திர நாடும், தேசிய கொடியும்.

    இந்நாளில் நாட்டின் நலனுக்காக தன் நலத்தையும், குடும்ப நலத்தையும் பார்க்காமல் பனிப்பிரதேசங்களிலும், கடும் வெயிலிலும், மழையிலும் நம்மை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களுக்கு இந்நாளில் நாம் நன்றியினைச் செலுத்துவோம்.

    நாட்டிற்காக உழைத்தவர்களுக்கும், உயிரை மாய்த்தவர்களும், தற்போது உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்துக் கொள்வோம்.

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…