அங்கரதம்
ஒரு கதையோ அல்லது கட்டுரையோ…. சிறுகதையோ? இந்தப் பொருளை பற்றித்தான் எழுதலாம். இதெல்லாம் கூட எழுதலாமா? என்றெல்லாம் காலங் காலமாக நாமே ஒரு எழுதப்படாத வரையரை செய்து கொண்டு வாழ்ந்தும், எழுதியும், படித்தும், புரிந்தும், ஒப்புக் கொண்டும் வருகிறோம். அதில் இது அடங்குமா? என தெரியவில்லை. ஆனால், ஐந்து கோல்கள் ஒரு நாளில் கால்பந்தில் அடிப்பது ஆழ்மனதில் கால்பந்து உறைந்துபோன ஒருவரால்தான் இப்படி அடிக்க முடியும் என்று தோன்றியது. மத்திய பகுதியிலிருந்து சற்றே உயரமாக குதித்தெழுந்து வந்த பந்தை கோல் கீப்பரின் பக்கம் முதுகை வைத்து நின்று இருந்த ஸ்ட்ரைக்கர் சுழன்று திரும்பி அப்படியே கம்பத்திற்குள் செலுத்தி ஆடுவது என்பது பார்த்துக் கொண்டிருந்த முப்பது நாற்பது ஆட்டக்காரர்களுக்கும் கண்களுக்கு விருந்தாகத்தான் அமைந்து இருந்தது. ஆனால், அதை தத்ரூபமாக அப்படியே எழுதி, படிக்கிறவர்கள் கருத்துக்கும் விருந்தாக்க முடியுமா?
நாற்பத்திரண்டு வயதில் தினமும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கால்பந்து விளையாடுவது கொஞ்சம் அதிகமோ? என்று கேட்கத் தோன்றுகின்றது. ஆனால், இது கடந்த மூன்று நாட்களாக மட்டுமே… அதற்கு முன்பெல்லாம், வார இறுதியில் ஒரு நாள் மட்டும் என்று அளவோடு இருந்து வந்தது. இப்பொழுது புது நண்பர்களின் வரவால் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. கிட்டத்தட்ட இருபது முதல் அறுபது வரையிலான வயதில் மொத்தம் ஐம்பது வரையிலான எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சி அமைந்துள்ள அழகான செயற்கை புல்தரை கால்பந்து மைதானத்திற்கு வந்து விளையாடிச் செல்கின்றனர். ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதாலும், கால்தடுக்கி விழுந்தால்… லிகமென்ட் டியர், ஸ்பெரெய்ன் முதல் எலும்பு முறிவு வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்பதாலும் வீரர்கள் பலர் கிரிக்கெட்டோடு விளையாட்டை நிறுத்திக் கொள்வதுண்டு. அதுவும், இரப்பர் பந்து டென்னிஸ் பந்து என்று இன்னும் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.
புனித இரமலான் திருநாளை ஒட்டி மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்ததில் கால்பந்து ஜூரம் அதிகமானது. முதல் நாளே கால்பந்து விளையாடியது மற்றும் அதற்கும் முதல் நாள் நிறைய இடைவெளி கழித்து நெடுந்தூரம் பேருந்து பயணம் மேற்கொண்டது எல்லாம் சேர்ந்து தொண்டை கரகரப்புடன் சளிபிடிக்க தொடங்கியிருந்தது. வழக்கமாக இப்படியானால் ஒருவாரத்தில் ஒருநாளேனும் கொஞ்சம் அதிக நேரம் படுக்கையில் தூங்கும் லெவலுக்கு ஓய்வெடுக்க வேண்டி வந்துவிடும். ஆனாலும், இம்முறை புதிதாக இரண்டு மூன்று விளையாட்டு வீரர்கள் சேர்ந்துள்ளதாலும், அவர்களே வீட்டிலிருந்து அழைத்துச் சென்று திரும்பிவிட்டு செல்வதாலும், அந்த தொடர்ச்சி விட்டுப்போய்விடக்கூடாது என்கின்ற எண்ணத்தால் சளிப்பிடித்தது கூடத் தெரியாத அளவு விளையாட்டு மும்முரமாக ஜெகஜோதியாக நடந்தது. வாழ்விற்கு கால்பந்து எப்படி பயன்படும்? என்மகன் எட்டாவது படிக்கிறான். அவனை கால்பந்து விளையாட்டில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்று எல்லாம் நிறைய கேள்விகளை மனதிலும், முக நூலிலும் எதிர்கொள்ள நேர்ந்தது.
பலன் கருதிச் செய்கின்ற பணிகள், இலக்கு நோக்கி பயணிக்கின்ற வாழ்வு இவை நல்லதே. ஆனால், நிறைய வெற்றிபெற்ற சாதனையாளர்கள் தம் வாழ்வில் பலன் கருதாமல் ஈடுபாடு மட்டுமே கருதி சில செயல்பாடுகளில் நேரம் செலவழிப்பது உண்டாம். இசை, கலை, ஓவியம், நடனம், விளையாட்டு, நாடகம் நடித்தல், கதை சொல்லுதல், கவிதை எழுதுதல், பாடுதல் என்று எண்ணற்ற மனதிற்கு விருப்பமான, பயன்கருதா அல்லது பயநோக்கமில்லா கலை அல்லது பொழுது போக்கு நடவடிக்கைகள் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. சுத்தமாக இவை அனைத்திற்கும் பயனேதுமில்லை என்று ஒரேயடியாக ஒதுக்கி வைத்துவிட இயலாது.
ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவமுறை இப்பொழுது மனதை நோக்கியும் திரும்பியிருக்கிறது என்றால் நம்புவது சிரமமே. மனதும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படும் நிகழ்வுகளின் பொழுது உடலில் இருக்கின்ற பல்வேறு நோய்கள் குணமாவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது என்று சமீபத்திய “நோய் எதிர்ப்பியலின் எல்லைப்புறம்” என்கின்ற அறிவியல் பத்திரிக்கையில் வந்த கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது.
சென்ற மூன்று வாரங்களுக்கு முன்பு பணி மாறுதல் ஏற்பட்டது. புதிய பணியிடத்தில் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். மூளை வேகமாகப் பணியாற்ற விளையாட்டு உறுதுணையாக அமைகிறது. டாக்டர் புரூஸ் லிப்டன் என்பவரது புத்தகம் உடல் ஒரு கோடி செல்கள் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டுக்குடும்பம் என்று சொல்கின்றது.
புதிய உயிரியல் என்ற ஒரு தத்துவத்தை சொல்லித்தர முயற்சிக்கும் அந்தப் புத்தகம் மிகவும் அற்புதமாக தெய்வீகத்தன்மையையும், அறிவியலையும் இணைக்கின்றது என்றால் மிகையாகாது. சரி அதற்கும், கால்பந்திற்கும், தலைப்பான, அங்கரதத்திற்கும் என்னங்க தொடர்பு? என்று நீங்கள் கேட்கலாம்? 2004ல் வந்த பட்டர்ஃபிளை எஃபக்ட் குறித்து விபு கிருஷ்ணா சென்ற வார யு.பி.எஸ்.ஸி. பயிற்சி வகுப்பில் பேசிய பொழுது மேற்கண்ட கேள்விக்கான பதிலை பட்டர்ஃபிளை எஃபக்ட் என்றால், ஒரு விஷயத்தை நாம் மாற்றும் பொழுது, எல்லா விஷயங்களையும் மாற்றுகின்றோம் என்று கூறியதிலிருந்து எடுக்கலாம். அப்படியானால்… விளக்கத்திற்கே விளக்கம் கொடுக்க முற்படுவோமேயானால், சுருக்கமாக உலகில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டேதான் நடைபெறுகின்றன என்பதே ஆகும்.
மேற்கண்ட பத்தி முதல் முயற்சியில் எழுதப்பட்டது. மதுரை பேராசிரியர், செந்தில் சார் கூறுவார், உங்களுடைய ஒவ்வொரு கட்டுரைக்கும் ஐந்து கட்டுரைகள் அளவு விரித்து விளக்கம் எழுத வேண்டும். ஏன், என்றால், கட்டுரை புரிகின்ற மாதிரி தான் இருக்கிறது. ஆனால், புரியவில்லை, புரிந்தாலும் சரியாய்த்தான் புரிந்து கொண்டோமா? என்று சந்தேகம் வருகிறது. என்றார். அதற்கேற்ப மொத்த கட்டுரையையும் விளக்கி எழுதாவிட்டாலும் மேற்கண்ட பத்தியை விரித்து எழுதலாம்.
விபு கிருஷ்ணா ஈரோட்டைச் சார்ந்த மாணவர். இந்திய ஆட்சிப்பணித்தேர்வுக்கு தயாராகிறார். அவர் பட்டாம்பூச்சி விளைவு என்று 2004ல் வெளிவந்த ஆங்கில திரைப்படம் குறித்து ஒரு பயிற்சி வகுப்பில் குறிப்பிட்டார். அத்திரைப்படத்தின் தத்துவம், மையக் கருத்து என்னவென்றால், ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்புக்கும், உலகின் மறுபாகத்தில் வேறெங்கோ நடக்கும் நிகழ்வு ஒன்றுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்யும் என்பதாகும். இதைப் படித்தப் பிறகு தொடர்பு நீங்கள் மீண்டும் ஒருமுறை மேலே உள்ள பத்தியைப் படிப்பீர்கள். சரிபார்ப்பீர்கள். ஏனென்றால், நானும் அதையே செய்தேன்.
கால்பந்து எபிஜெனிடிக்ஸ் எனப்படும் சுற்றுப்புற சூழல் ஜீன்களின் வெளிப்பாட்டை மூலக்கூறு அளவில் மாற்றி அமைக்கின்றது என்கின்ற கோட்பாட்டின் படி உடல் உறுதி மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றது. எபிஜெனிடிக்ஸ் என்பது சூழ்நிலை மற்றும் பிற புற காரணிகள் மரபணுக்களின் பண்பு. வெளிப்பாட்டை எப்படி மாற்றி அமைக்கின்றது? என்று ஆராய்வது அறிவியல் துறை ஆகும். அதாவது கால்பந்தால் உடல் ஆரோக்கியம் உள்ள செயல்பாடுகள் உயர்கின்றது எனலாம்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது திருமந்திரம். உடற்பயிற்சி மையங்களில் பெயர் தருவதும், பலவிதமான இயந்திரங்களை நிறுவதும் இக்காலத்தில் மிகவும் விரும்பப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. ‘சாப்பிடும் பொழுது’ உடல் எடையை குறைப்பதைப் பற்றி கவலைப்படக் கூடாதுங்க, நாளைக்கு நாலு இரவுண்டு அதிகமாக ஓடிக்கலாம் என்று ஊக்குவிக்கும் உறவினர்களும், நண்பர்களும் இல்லத்தினரும் உண்பவர்களுக்கு, உண்மையிலேயே நன்மை புரிவதாகத்தான் நம்பிக் கொண்டு உள்ளனர்.
தியானம் செய்வதன் மூலமும், கடவுளின் மந்திரங்கள் போல ஒரே நினைவில் திரும்பத்திரும்ப ஜெபிப்பதன் மூலமும், மனக்கட்டுப்பாடு உருவாகி… அது உணவுக்கட்டுப்பாடாக மறுஉருவாகி, உடம்பின் கட்டுக்கோப்பிற்கு அடித்தளம் அமைக்கின்றது. உயிர் வளர்க்கும் உபாயம் உடம்பை திருத்தமாக வளர்ப்பதில்தானே இருக்கின்றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா. மனம்போல் வாழ்வு என்பதன் மறுபொருளே தெய்வீகத்தன்மை, இனிய தெய்வப்பாடல்களில் “குûயொன்றுமில்லை… குருமூர்த்தி கண்ணா” என்று மனமுருகி பாடியதன் பிறகு… எங்கேயும் நல்லெண்ணம் நிறையும் அன்றோ. அத்தகைய நல்லெண்ணங்கள் நமது “சென்ட்ரல் டாக்மா” என்னும் மைய உயிரியல் கொள்கையை மாற்றி மிகச்சிறப்பான… என்ன விளைவை உருவாக்கும்?
அதாவது சூழ்நிலை அல்லது மனதின் நம்பிக்கை டி.என்.ஏ.க்களின் பண்பு வெளிப்பாட்டை முடிவு செய்கின்றதாம். காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின், தன்மையின் நூறு ஆண்டுகள் என்கின்ற நாவலில் வரும் நம்ப முடியாத நகைச்சுவை நிறைந்த வர்ணனைகளைப் போல… எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டுமானால்… நமக்கு சளி குமாகிவிடுமென்றால் குணமாகிவிடும் என்பதில் தொடங்கி கேன்சர் கூட நலமாகிவிடும் என்று திடமாக நம்பினால் சரியாகிவிடும் என்று எபிஜெனிடிக்ஸின் நவீன புதிய உயிரியல் விஞ்ஞானம் கூறுவதாக புரூஸ் லிப்டன் கூறுகிறார். அங்கம் என்றால் உடல் என்று பொருள் கொள்ளலாம். உடலின் உறுப்புகள் என்றும் உடற்பாகங்கள் என்றும் பொருள் கொள்ளலாம். கே லேப்ஸ் என்றொரு அறிவு ஆய்வகம் நடத்தி வரும் அரவிந் கால்பந்தினால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்களும் முக்கால்வாசி நேரம் மைதானத்திற்கு வெளியே அமர்ந்தவாறும், அதற்காக புதிய கால்பந்து காலணி முதலியவை வாங்கி (டெம்போ செவச்செல்லாம் கடத்தியிருக்கிறோம்…) பத்து நிமிடங்கள் களத்தில் கலவரம் ஊட்டியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். ஈரோட்டை சேர்ந்த இவர் வார இறுதியில் ஊருக்குக் போகாமல் விளையாடியதில் காலின் பல தசைகள் பிடித்துக்கொண்டதாகவும், இருந்தாலும் பிடிவாதமாக இவர் விளையாட்டைத் தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.
இரதம் ஓடுவது போல ஒரு நாளைக்கு மூன்று கிலோமீட்டர் தொடர்ந்து ஓடுவது முதல் கி.மீ., 7 நிமிடம், இரண்டாவது ஆறு, கடைசி ஐந்து நிமிடம் என்று மொத்தம் 18 நிமிடத்தில் ஓடிய பிறகு ஜிம்மில் சில எடைப்பயிற்சிகள் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் நீச்சல்குளத்தில் நிதானித்தல் என்றவாறு அதிகாலை நேரங்கள் அற்புதமாக திட்டமிடப்படுவதால் தங்க ரதம் போல அங்க ரதம் பளபளக்கும் என்கின்ற கருத்தின் அடையாளமாகத்தான் அங்க ரதம் என்னும் தலைப்பு இடப்பட்டுள்ளது.
முகநூலில் பதிவேற்றிய கால்பந்தின் ஒளிப்பட திரைப்படப்பதிவில்… நிறைய நண்பர்கள் லைக் கொடுத்திருந்தனர். அதில் இருவர் கோல் அடித்தது ஆஃப் கைடு போல தெரிகின்றதே என்றனர். ஒருவர் கோவை இன்னொருவர் டையூ (மும்பை அருகே) தொழில்நுட்பம் நிறைந்த இந்நாளில் கூட நட்பே… கால்பந்து உணர்வால் நம்மை இணைக்கின்றது.
ஏழு பேர், ஐந்து பேர் என்று எண்ணிக்கையை குறைத்து விளையாடும்… நவீன கால்பந்து விளையாட்டு கிரிக்கெட்டின் ட்வென்டி ட்வென்டி போல பரபரப்பான மினியேச்சர் அம்சம் ஆகும். இதில் படுவேகமாகவும் பரபரப்பாகவும் பந்து பறக்கின்றது. ஆட்களும்தான் முன்கள வீரர்கள், சந்தர்ப்பத்தை துல்லியமாகப் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. பொறுமையும் வேகமும் நுணுக்கமும் உடல் வலிமையும், புத்திசாலித்தனமும், சமயோசித்த உணர்வும் சாமர்த்தியமும் தந்திரமும் ஒருங்கிணைந்த ஒரு வெளிப்பாடு பந்தினை கோலாக மாற்றுவதற்கு தேவைப்படுகின்றது. எத்தனையோ விளையாட்டுக்கள் இருந்தாலும், கால்பந்துக்கு என்றொரு கௌரவமும் இரசிகர்களும் உலகெங்கிலும் விரவிக்காணப்படுவதை நாம் அவசியம் ஆமோதிப்போம். ரொனால்டோவும், மெஸ்ஸியும் நிறைய மனதுகளின் சிம்மாசனத்தில் கோலோச்சுவதும் ஃபிலேயும், மாரடோனாவும் உலக வரலாற்றில் அபாரமான இடம் பிடித்திருப்பதும் சச்சினைக் கொண்டாடும், தோனிக்கு வானம் தொடும் வாழ்த்துத்தரும் இந்தியாவிலும் நடந்து வருவதுவே.
கால்பந்தின் முன்கள வீரர்களுக்கான குணப்பட்டியலில் முரட்டுத்தனமும் இருப்பதாக கருதுபவர்கள் கணிசமானவர்கள். பள்ளிப்பருவத்தில், என்பையன் கால்பந்து அணியில் இருக்க இடம்பெற கூடாது என தலைமையாசிரியடம் கூறித்தடுத்தவர் அன்புள்ள அப்பா… எவ்வளவோ வருடங்கள் கடந்தும் விளையாடும் உடல்தகுதியோடு வைத்திருப்பது எல்லாம் வல்ல இறைவன் திருவிளையாடல். அவனருளாலே அவன்தாற் வணங்கி… என்பது திருவாசகம். அதாவது, நாம் என்ன நினைக்கிறோமோ? அதை நினைக்கச் செய்வதும் இறையருளே! என்கின்றார் வாதாவூரார் மாணிக்கவாசகர். உருகுவாரா? என்று பார்ப்போம் என்றே அங்கரதம் ஓடுகின்றது.
கால்பந்தில் சோமு, கலை, சுதாகர், வேலு, எழில், சாம், பிரபா, பரத் என்று உடன் விளையாடுபவர்கள் வட சென்னையின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தாலும், களத்தில் இறங்கிய பிறகு… ஒரு கையின் ஐந்து விரல்கள் போல ஏதோ ஒரு ஒருங்கிணைந்த சிந்தனை மூளைக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது போல ஏழு பேரும் ஒரு நரம்பு தொலை தொடர்பு மண்டலத்தோடு இயங்குவோம். கோல் போஸ்ட்டை திரும்பத்திரும்ப பார்க்காமலேயே அது எங்கிருக்கிறது என்றும்… ஓடும் வேகத்தில் பந்திற்கு எந்த கோணத்தில் எவ்வளவு வேகம் அழுத்தம் தந்து உதைத்தால் இடையே ஓடிவரும் எதிர் வீரர்களை தவிர்த்து நம் அணி வீரர்கள் காலை அடையும் என்றெல்லாம் கணக்கிட்டு உதைப்பதை கண்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.
ஆக மொத்தம்… இப்படியொரு கால்பந்து உலகத்தில் நுழைந்த பின்னர் நமக்கு அடுத்த வேளை உணவு முதல் மாமியார் உடைய இரயில்பயணச்சீட்டு வரை எல்லாமே மறந்து போய்விடுகின்றது. மீண்டும் உடலில் கோடி செல்களில் வலி பிறக்கும்பொழுது மறுபடியும் ஒரு வாரம் முடிந்து… அங்கரதம் புல்தரையில் ஓடத்தொடங்குகிறது.
வயதான காலத்தில் உடற்பயிற்சியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நண்பரின் கோரிக்கை, அறிவுரை நினைவில் வந்தது. பாஸ்கர் (56), நாகேஷ் (67) போன்ற பழைய இந்திய அளவிலான விளையட்டு இளைஞர்களை களத்தில் சந்தித்தபோது, வயதும் மனதில்தான் இருக்கின்றதோ என்கின்ற எபிஜெனிடிக்ஸ் ஞானம் பிறந்தது. மனமிருந்தால், ஆட்டம் இருக்கும் போல… வள்ளுவர் சொன்ன உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் உள்ளம் கொண்டு, வயது என்பது வெறும் நம்பர்தான்… எண்தான் என்று எண்ணிக்கொண்டே.. உருளும் கால்பந்தைத் தொடர்ந்து ஓடத்தொடங்குகின்றது அங்கரதம்!… இப்படியே… ஒரு … எழுதலாமா? என்று தயங்கிய கட்டுரையும் ஓடியிருக்கிறது! ஆச்சரியமே!…
0 comments Posted in Articles