கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
பேச்சுக்கலை …..
பெருங்கலை. “மனிதனை மனிதனாக்கிய அருங்கலைகளில் ஒன்று சொல்லாடல்; எனவே தான் பேசுபவரை ‘சொற்செல்வர் என்றும், கேட்கிறவரை ‘செவிச்செல்வர்’ என்றும் தமிழ்மரபு பேசுகிறது” என்பார் பேராசிரியர், முனைவர் தொ.பரமசிவன்.
மனம் ஒரு மாயக்குழந்தை. அது இசைக்க இசைக்க இதயம் சுரக்கிறது. கவிதையாய் அது பாரதிக்குள் வந்து கொட்டுகிறது. “கானப்பறவை கலகலெனும் ஓசையிலும்; காட்டு மரங்களிடை காட்டும் இசைகளிலும், ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும், நீலப் பெருங்கலந் நேரமுமே தானிசைக்கும் ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும், மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்றநீர்ப்பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும், சுண்ணமிடிப்பார்தஞ் சுவை மிகுந்த பண்களிலும், பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும், வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், வேயின் குழலோடு வீணை முதலாமனிதர் வாயினிலும், கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்”.
இயற்கையோடு இசையை ரசிக்கும்போது அவர் கவிதைக்குள் நெஞ்சை பறிகொடுத்தார். கவிதையை ரசிக்கும்போது ஒருவன் கவிஞனாகிறான்; பாட்டை ரசிக்கும்போது பாடாகனாகிறான்; பேச்சை ரசிக்கும்போது அவன் பேச்சாளனாகிறான். உள்ளத்தில் ஊற்று இருந்தால் மட்டுமே போதுமானது.
உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறுபேரில் ஒருவருக்கு வாய்க்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வார். ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பார் நம் ஒளைவைப் பிராட்டி. “தோன்றிற்புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்றஇக்குறட்பா மேடைப் பேச்சாளர்களுக்கும் சேர்த்தே கூறியதுபோல் தோன்றுகிறது.
‘எனக்கொரு கனவு இருக்கிறது’ என்று மார்ட்டின் லூதர் கிங் சொல்லியவை நூற்றாண்டைக் கடந்தாலும் காலத்தின் கன்னத்தில் அழியாத அழகு மச்சங்களாக நின்றுவிடுகின்றன. அவை சொல்வெட்டுகள் அல்ல; கல்வெட்டுகள் என்பார் இறையன்பு. அப்படியொரு சொற்பொழிவை ஆற்றும் உரிமை மனித உரிமை போராளி மார்ட்டின் லூதருக்கு மட்டுமே கிடைத்தது.
0 comments Posted in Articles