– 2010 – December | தன்னம்பிக்கை

Home » 2010 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கணினி தொழில்நுட்பம்

    இணையக் குறிப்பேடு (Web Log)
    இன்டர்நெட்டின் தொடக்க காலங்களில் அதன் வெகுஜன பயன்பாடு இ-மெயில் மட்டுமே. 90களின் மத்தியில் இணையம் மாறத் தொடங்கியது. தவல்களை தொகுத்து தரும் கூடுகளாக மட்டுமே வலைதளங்கள் அல்லாமல் பிசினஸ் டு கன்ஸ்யூமர் (Business to Consumer) சுருக்கமாக B2C, பிசினஸ் டு பிசினஸ் (Business to Business) சுருக்கமாக B2B என இணையத்தை பயன்படுத்தி வர்த்தகம் புரியத் தொடங்கிய இந்தக் காலகட்டத்தை ‘இணையம் 1.0’ என அழைக்கிறார்கள்.
    அதற்குப்பிறகு இன்னும் பல நவீன வசதிகளுடன் இணையம் வளர்ந்த காலகட்டத்தை ‘இணையம் 2.0’ என அழைக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தின் முக்கியப் பயன்பாடு Blogging. இணையக் குறிப்பேடு என பொருள்படும் Web Log என்பதன் சுருக்கமே Blog. வலைப்பதிவு என தமிழில் பரவலாக அறியப்படுகிறது.
    மின்னல் வேகத்தில் நம் கருத்துக்களை, புகைப்படங்களை, ரசித்த வீடியோக்களை பலருடன் பகிர்ந்து கொண்டு அவர்களது மின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்வது இதில் சாத்தியம். நீங்களும் ஒரு பிளாக்கர் BL www.blogger. comstart வளைதளம் செல்லுங்கள்.
    சமூக வளைதளம்
    தனிமனிதர்களை இணைத்து சமூக குழுக்களை உருவாக்கும் சோஷியல் நெட்வொர்கிங் வளைதளங்களே சமூக வளைதளம். நம்முடன் படித்த சகாக்களை தேடிக்கண்டுபிடிக்கும் நோக்குடன் நிறுவப்பட்ட www.classmates.com தான் இணையத்தில் நிறுவப்பட்ட முதல் சமூக வளைதளம் www.facabook.com ஹார் வர்ட் பல்கலைக்கழக மாணவர்களால் தொடங்கப் பட்ட இந்த வளைதளத்தில் 160 மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

    சமூக வளைதளங்களால் என்ன பயன்?
    சமூதாயத்தின் வாழ்க்கை முறைப்படி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனைச் சுற்றிய நட்பு வட்டம் இருக்கும். அந்த வட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தத்தம் நட்பு வட்டம் இருக்கும். அடுக்கடுக்கான விரிந்து செல்லும் இந்த வட்டங்களை ஒருவரின் Social Graph என்கிறார்கள்.
    காந்தியாக இருந்தாலும், ஹிட்லராக இருங்தாலும் உலகில் வேறு எந்த மனிதராக இருந்தாலும், உங்களுக்கும் அவருக்கும் இடையே Social Graph இருந்தே தீரும்.
    அதிகபட்சம் ஆறேஅடுக்குகளில் இந்த இணைப்பு அமையும் என நிருபிக்கப்பட்ட விதியின் பெயர் 6 Degrees of Separation. இந்த விதியைத் தான் இணையத்தில் பயன்படுத்தி ஊஹஸ்ரீங் ஆர்ர்ந் உள்ளிட்ட சமூக குழு வலைதளங்கள் உருவாகின்றன.
    Logoff …
    உங்களுக்காக…
    மேஜிக் மேஜிக் www.themagictricksblog.com
    மேஜிக் தந்திரம் செய்ய கற்றுத்தரும் வலைப்பூ. கண்களால் பார்த்தே சீட்டுக்கட்டில் உள்ள ஒரு சீட்டை எப்படி வளைப்பது, ஒரு சோடா பாட்டிலுக்குள் எப்படி நாணயத்தை நுழைப்பது என பல்வேறு தந்திரங்களின் சூட்சுமம் சொல்லித் தருகிறார்கள். வீடியோ இணைப்பும் உண்டு.
    உள்ளங்கையில் உலகம்
    நேற்றுவரை நடந்த உலகத்தின் முக்கிய சம்பவங்களைப் படு சுருக்கமாக சிறந்த புகைப்படங்களுடன் தொகுத்து தரும் வெப்சைட். தவிர இன்றைய செய்திகள், புது இடங்கள், புதிய பயணங்கள், விலங்குகள், காட்டுவாழ்க்கை என நாம் பார்க்காத பார்க்கமுடியாத உலகத்தின் பக்கங்களைத் திறந்து விடுகிறது. ஒரு புகைப்படம் நாலுவரி செய்தி என்பதுதான் இதன் கான்செப்ட்.

    எது விளையாட்டு?

    இளம் பருவத்திலேயே உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சியும் விளையாட்டும் மிகவும் அவசியம்” என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.
    “சிறந்த விளையாட்டு மூலமே நோயில்லாத வாழ்க்கையை வாழமுடியும்” – என்பதும் எல்லோரும் அறிந்த செய்திதான். இப்படி தெரிந்து வைத்திருக் கின்றதகவல்களை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தும்போதுதான் பல நேரங்களில் சிக்கல்கள் உருவாகிறது.
    இதனால்தான் நமது உடலை கம்ப்யூட்டர் “ஹார்டுவேர்க்கு” (ஏஹழ்க்ஜ்ஹழ்ங்) ஒப்பிடுவார்கள். மூளையை “சாப்ட்வேர்” (நர்ச்ற்ஜ்ஹழ்ங்) என்பார்கள். நமது மூளை என்னும் “சாப்ட்வேர்” நன்றாக செயல்பட வேண்டுமென்றால் நமது உடல் என்னும் “ஹார்டுவேர்” நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
    பள்ளிகளில் பயிலும்போதே விளையாடு வதற்கென்றே தனியாக பாட நேரத்தில் நேரம் ஒதுக்கியிருப்பார்கள். விளையாட்டு ஆசிரியர் (Physical Education Teacher) என்று தனியாக ஒரு ஆசிரியரை நியமித்து, பள்ளியில் மாணவ, மாணவி களின் உடல்நலன் காக்க பள்ளி நிர்வாகம் பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளை யாட்டுகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் போன்றபயிற்சிகளும் மாணவ, மாணவி களுக்கு வழங்கி வருகிறார்கள்.
    மகாகவி பாரதியார் –
    காலை யெழுந்தவுடன் படிப்பு – பின்பு
    கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
    மாலை முழுதும் விளையாட்டு – என்று
    வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
    என்று பாப்பாவுக்குப் பாடல் பாடிவைத்து, விளையாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாலை நேரங்களில் கண்டிப்பாக விளையாட்டு களில் ஈடுபட வேண்டும் என்பது பாரதியாரின் கருத்தாகும்.
    ஆனால் – இன்று நடப்பது என்ன? “விளையாட்டு” என்றபெயரில் எத்தனையோ வித்தியாசமான நிகழ்வுகள் அந்த நவீன விளையாட்டுகளில் சில –
    ‘குறும்பு’ விளையாட்டு
    ‘வேடிக்கை’ விளையாட்டு
    ‘காப்பி’ விளையாட்டு
    ‘கமிக்ஷன்’ விளையாட்டு

    என எத்தனையோ பல வகையான விளையாட்டுகள் நடந்து வருகின்றன.
    சமீபத்தில் ஒரு பெற்றோர் ஆலோசனைக் காக என்னிடத்தில் வந்தார்கள். அவர்கள் முகத்தில் சோகம் நிரம்பியிருந்தது. ஏதோ பறிகொடுத்தவர்கள் போல பதட்டத்தில் காணப்பட்டார்கள்.
    “சார்… என் மகள் நன்றாக படிப்பாள். பிளஸ்-2 முடித்தவுடன் அந்தக் கல்லூரியில் சேர்த்துவிட்டேன். முதலாம் ஆண்டு தேர்விலும் 80 சதவீதத்திற்கு மேல் நன்றாக மதிப்பெண் பெற்றாள். கல்லூரி நன்றாக இருக்கிறது. விடுதியும் நன்றாக இருக்கிறது என்று போனில் சொல்வாள். ஆனால் கடந்த மூன்று மாதமாக நாங்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறோம்” என்று அந்த மாணவியின் அம்மா சொன்னார்கள்.
    தொடர்ந்து அந்த மாணவியின் தந்தை சில தகவல்களையும் சொன்னார்.
    “ஒரே மகள் என்பதால் நன்றாக படிக்க வைக்க ஆசைப்பட்டேன். சென்னை பக்கம்தான் இடம் கிடைத்தது. ஹாஸ்டலில்தான் தங்கி இருக்கிறாள். செலவைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மூன்று மாதத்திற்கு முன்பு அவளோடு படிக்கும் மாணவன் அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தான். என் மகள் நன்றாக படிப்பதைக் கண்டு பொறாமைப்பட்ட மாணவன் அவனுடன் சில மாணவர்களை சேர்த்துக்கொண்டு இவள் போகும்போது “ஆஹா… ஓஹோ…” என கிண்டல் செய்திருக்கிறான். அவளை அவமானப் படுத்துவதுபோல நடந்திருக்கிறான். அவள் கல்லூரி பேராசிரியர்களிடம் சொல்லியிருக்கிறாள். பேராசிரியர்கள் அந்த மாணவனை அழைத்து அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.
    அதன்பின்பு அவன் என் மகளை கிண்டல் செய்வதைவிட்டு விட்டுவிட்டான். ஆனால் அடிக்கடி முறைத்துப் பார்க்கிறான். நூலகத்திற்கு செல்லும்போது காறி உமிழ்கிறான்.
    ஒரே வகுப்பில் அந்த மாணவனும் படிப்பதால் இவளால் அந்த சூழலை தவிர்த்துக் கொள்ளவும் முடியவில்லை, நாங்கள் என்ன செய்வது? சார் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் நீர் கோர்த்தது. அருகிலிருந்த மாணவியின் அம்மா அழத் தயாராகிவிட்டார்.
    “என் மகள் தினமும் 9 மணிக்கு மேல் செல்போனில் கூப்பிட்டு, நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். வீட்டுக்கு வந்துவிடவா எனக்கு கல்லூரியை மாற்றித் தாருங்கள். எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்கிறாள். நான் திரும்பவும் ‘கல்லூரி முதல்வரிடம் சொல்’ என்றேன். முதல்வர் கூப்பிட்டு அந்த கல்லூரி மாணவனிடம் கேட்டபோது ‘சார் நான் விளையாட்டுக்குத்தான் செய்தேன்’ என்று சொல்லியிருக்கிறான். இப்படி ஒரு பெண்பிள்ளையின் படிப்பை கெடுப்பதா சார்…. விளையாட்டு அவள் என்ன செய்வாளோ? ஏது செய்வாளோ? என மூன்று மாதமாக துடிதுடித்துக் கொண்டிருக்கிறோம்? என்று சொல்லும்போதே அந்த அம்மா அழ ஆரம்பித்துவிட்டாள்.
    கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி? என்று அவர்களுக்கு விளக்கமாக சொல்லிவிட்டேன். அந்த வழிமுறைகளைப் பின்பற்றிய அவர்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள். அந்தப் பெற்றோர்களுக்கு நான் ஆலோசனை சொன்னாலும் அந்த மாணவனின் செயல்பாட்டை நினைக்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
    அந்த மாணவியின் அம்மா என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது – “எது விளையாட்டு சார்? என்றகேள்வியை கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு சரியான விடை தெரியாமல் இன்று பல இளைஞர் இருப்பது வேதனைக்குரியது ஆகும். இந்த “குறும்பு விளையாட்டு” சிந்தனையிலிருந்து விடுபடுவதற்குள், இன்னொரு விளையாட்டை விளையாடிய பிரதீப் சந்தர் போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த “வேடிக்கை விளையாட்டு” அவருக்கு விபரீதத்தைத் தந்துள்ளது.
    மதுரையைச் சேர்ந்த பிரதீப் சந்தர் கல்லூரி மாணவர். பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். போலீஸ் வேலைக்கு தீவிரமாக முயற்சி செய்தார். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வில் தோல்வியடைந்தார். தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தார். வேலை தர மறுத்த காவல் துறையை பழிவாங்க துடித்தார்.
    மதுரையில் கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக ஒரு கூரியர் நிறுவனத்தில் பணியாற்றியதால் அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். கோயம்புத்தூருக்கு அடிக்கடி வந்து அங்குள்ள இடங்களைத் தெரிந்து கொண்டார். காவல்துறையோடு தொடர்புகொண்டு கோயம்புத்தூரில் உள்ள முக்கிய நகரங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போன்மூலம் தகவல் தெரிவித்தார். அவர் கூறிய இடங்களில் தீவிரமாக தேடிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வெடிகுண்டை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் அவர் வேறு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக பூகம்பத்தை கிளப்பினார்.
    இப்படி 3 மாதங்களாக மதுரை, சிவகாசி, திருப்பூர், கோயம்புத்தூர் உள்பட தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் வெடிகுண்டு புரளியை விளையாட்டாக பரப்பினார். “108 ஆம்புலன்ஸ்”க்கு போன்செய்து என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள் என கூறிவிட்டு அவர்களையும் அலறவிட்டார். “முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்” என்று போலீசாரிடமும் சவால் விட்டார்.
    கல்லூரி வாசல் மற்றும் பொது இடங்களில் விற்கப்படும் “சிம்” கார்டுகளை போலி முகவரி ஆவணங்கள் கொடுத்து வாங்கி வந்தார். ஒருமுறைபேசிய எண்ணில் மறுமுறைபேசாமல் எச்சரிக்கையாக செயல்பட்டார். முடிவில் கையும், களவுமாக போலீசார் அந்த விளையாட்டு மாணவனை விசாரித்துப் பிடித்தார்கள்.
    “நவீன தொழில்நுட்ப கருவி உதவியுடன் நான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதைத் தெரிந்து போலீசார் கைது செய்துவிட்டனர். விளையாட்டுக் காகவும், போலீசை பழிவாங்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டேன் இப்போது மாட்டிக் கொண்டேன்” – என காவல் துறைக்கு கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார், விளை யாட்டுக்காக புரளி கிளப்பிய மாணவர் பிரதீப் சந்தர்.
    “எது விளையாட்டு” என்று தெரியாமல் விளையாட்டுத்தனமாய் வாழ்ந்த ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கை நிகழ்ச்சி இது.
    இந்த நிகழ்ச்சி பலருக்கு அவமானத்தைத் தந்திருக்கிறது. நிம்மதியையும் கெடுத்திருக்கிறது.
    “விளையாட்டு வினையாகிவிடும்” என்று தெரியாமலேயே சில மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது – துண்டுத்தாளில் எழுதிச்செல்வது, அடுத்தவர் களுடைய தேர்வுத்தாளை பார்த்து எழுதுவது புத்தகத்தின் பக்கங்களை கிழித்து தேர்வு அறைக்குக் கொண்டு சென்று மறைவாக வைத்துக்கொண்டு அதனைப் பார்த்து எழுதுவது போன்ற நடவடிக்கைகளைத்தான் “காப்பி அடித்து எழுதுவது என்று கூறினாலும், இன்று நவீன தொழில்நுட்பத்துடன் காப்பி அடித்து எழுது வதையும் விளையாட்டாக சில மாணவ, மாணவிகள் மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது வேதனைத்தரும் விஷயம் அல்லவா!”
    இன்றைய கல்லூரி மாணவர்களில் சிலர் விளையாடும் இன்னொரு விளையாட்டு “கமிக்ஷன் விளையாட்டு” ஆகும்.
    ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சேர்ந்து விளையாடிய கமிக்ஷன் விளையாட்டு ஒரு பொறியியல் கல்லூரி மாணவரை கொலை செய்யும் அளவுக்கு மாறிவிட்ட வேதனை, நெஞ்சைப் பிழிய வைத்த சோக சம்பவம் அல்லவா?
    ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் சென்னையிலுள்ள பல கல்லூரிகளில் மேற்படிப்பை தொடருகிறார்கள். அவர்களுள் ஒரு மாணவர் நிர்பே குமார் சிங். இவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகும். சென்னையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வந்தார்.
    நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்னையிலுள்ள அவரது வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, அவரை காரில் வந்து ஒரு ‘கும்பல்’ உருட்டுகட்டையால் தாக்கி, இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்றது. இந்தக் கொலை சம்பந்தமாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சென்னையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 8 மாணவர்களை போலீஸார் கைது செய்தார்கள்.
    இந்தக் கொலைக்கு காரணம் என்ன?
    சென்னையில் தங்கி இருக்கும் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்லூரியில் புதிய மாணவர்களை சேர்த்து விடுவதற்காக அந்த மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து 10,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை கமிக்ஷன் பெற்றுக்கொள்வது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

    கமிக்ஷன் பெற்றுக்கொள்வதை விளை யாட்டாக செய்துவந்த இந்த சில மாணவர்களிடம் அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. கொலை செய்யப்பட்ட மாணவரான நிர்வே குமார் சிங்கிற்கும் வேறு கல்லூரியில் படிக்கும் மற்றமாணவர்களுக்கும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. கமிக்ஷன் பணம் கையில் நிறைய விளையாடியதால் இவர்களில் சிலருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. ஒரு நாள் ஏற்பட்ட மோதல் நிர்வே குமார் சிங்கை அடித்து கொலை செய்யுமளவுக்கு தீவிரமாகிவிட்டது.
    கமிக்ஷன் விளையாட்டால் ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டதால் இன்று 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
    இப்படிப்பட்ட குறும்பு விளையாட்டு, வேடிக்கை விளையாட்டு, காப்பி விளையாட்டு, கமிக்ஷன் விளையாட்டு – என்னும் “வினோத விளை யாட்டுகள்” நடைபெறுவதற்கு காரணம் என்ன?
    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
    மண்ணில் பிறக்கையிலே – அவன்
    நல்லவனாவதும் தீயவனாவதும்
    அன்னை வளர்ப்பினிலே
    என்னும் பாடல் வரிகள் ஒரு குழந்தையை வளர்ப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.
    ஒரு மாணவனின் குழந்தைப் பருவத் திலேயே அவனுக்குத் தேவையான குணங்களான – உண்மை, நம்பிக்கை, மரியாதை போன்றவற்றை விளக்கி அவர்களுக்குத் தேவையான தன்னம்பிக் கையை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மேலும் குடும்பத்தில் ஒரு பாதுகாப்புச் சூழல் நிலவவும், பாச உணர்வுகள் மலரவும் வாய்ப்புகளை உருவாக்கி குழந்தை நிலையிலிருந்து இளமைப்பருவம் முழுவதும் கண்காணிப்புடன் வளர்க்க வேண்டும்.
    “விளையாட்டு” என்றால் அது உடல் நலத்தையும், மன பலத்தையும் உருவாக்குவதற்கு
    அமைக்கப்பட்ட களம் என்பதை விளக்கி நல்ல உடற்பயிற்சிகளையும், மன பயிற்சிகளையும் வழங்குவதற்கான சூழல்களையும் மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களும், பள்ளி – கல்லூரி நிர்வாகத்தினரும் ஏற்படுத்திக் கொடுத்து உண்மை யான விளையாட்டின் பலனை இளைஞர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.
    இளைய உள்ளங்களும் நல்ல விளை யாட்டின் நற்பயன்களை அறிந்து நல்விளையாட்டு மூலம் நலம்பெறநாளும் முயற்சி செய்ய வேண்டும். அந்த விளையாட்டுதான் அமைதியையும், ஆனந்தத்தையும் தந்து வெற்றிக்கு அடிப்படையாக அமையும்.

    – தொடரும்.

    சிந்தனை செய் நண்பனே- என்னைத் தெரியுமா?

    பல தருணங்களில் நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது. சில தருணங்களில் நம்மைப் பற்றி நமக்கே தெரியாது. இதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
    பிரதீப் ஒரு வங்கியின் மானேஜர் பொறுப்பில் இருப்பவர். அவருடைய மகன் அகில், ஒரு எம்.பி.ஏ. பட்டப்படிப்புப் படிக்கும் மாணவன். பிரதீப் தனது மகன் அகில் மற்றும் மனைவி ஸ்மிதாவுடன் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
    பிரதீப் பலதரப்பட்ட குணாதிசயங்களுடன் விளங்குபவர்.
    முதலாவதாகப் பார்த்தால், அவர் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். வாழ்க்கையில் முன்னேறி, வெற்றி பெற்று ஒரு இடத்தை அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர். ஆனால், அதனை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர். தான் எதில் சிறந்து விளங்குபவர் என்று அவருக்கே தெரியாது. அவருடைய நண்பர் களுக்கும் தெரியாது.
    இரண்டாவதாக பிரதீப் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர். எளிதில் கோபமடைந்து தனது மனைவி ஸ்மிதாவை, அடுத்தவர்கள் எதிரிலேயே திட்டிவிடுவார். இது குறித்து சில சமயங்களில் ஸ்மிதா மிகவும் வேதனை அடைவார். ஸ்மிதா என்ன நினைக்கிறார் என்பதுகூட தெரியாமல், தான் செய்வது தான் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் பிரதீப். அது மட்டுமல்லாமல் தனது மகன் அகில், எந்தத் துறையில் ஆர்வம் கொண்டுள்ளான் என்பதைக் கூடத் தெரியாமல், அவனும் தன்னைப்போலவே ஒரு வங்கி அதிகாரி ஆகவேண்டும் என்று அகிலிடம் கூறி வருகிறார்.
    மூன்றாவதாகப் பார்த்தால், பிரதீப் மிகவும் நல்ல மனிதர். நேர்மையானவர். நேரம் தவறாதவர். இது போன்ற குணங்களுக்காக, நண்பர்கள் மற்றும் உடன் பணிசெய்பவர்கள் மத்தியில் நல்ல மதிப்புப் பெற்றவர். வங்கியில் எந்தப் பணியாக இருந்தாலும் நேர்த்தியுடன் செய்பவர். தனது வங்கிச் சலுகைகள் எதனையும் தனது சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்தமாட்டார்.
    நான்காவதாக, அவருக்குத் தொலை பேசியில் பேசுவது சிறிதும் பிடிக்காத ஒரு விஷயம். தொலைபேசியில் பேசுவதைக்காட்டிலும், நேரில் சந்தித்துப் பேசுவது சிறந்தது என்று நினைப்பவர். ஆனால் அவருடைய பணிக்கு, தொலைபேசியில் பேசுவது மிகவும் அவசியமானது. தவிர்க்க முடியாதது. அவர் தனக்குப் பிடிக்காது என்பதால் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்ப்பதில்லை. தன்னுடைய விருப்பு, வெறுப்புகளைப் பணியில் காட்டமாட்டார் பிரதீப்.
    இவை அனைத்தும் அறியும் அகில், தனது தந்தைக்கு, அவருடைய பலம், பலவீனம், இரண்டையும் சுட்டிக்காட்ட முடிவு செய்கிறான். அதற்கு தான் படிக்கும் எம்.பி.ஏ. படிப்பில் இருந்து ‘Johari’s Window’ அதாவது, “ஜோஹாரியின் கதவுகள்” என்ற தத்துவத்தைப் பயன்படுத்தி புரியவைக்க முடிவு செய்கிறான். அவரை அழைத்துக் கொண்டு, ஒரு அறைக்குச் செல்கிறான். அகில் “உங்களைப் பற்றி சில கருத்து கூற நினைக்கிறேன் ‘ஜோஹாரியின் கதவுகள்” என்ற தத்துவத்தைப் பயன்படுத்தி” என்று கூறுகிறான். பிரதீப் மிகவும் ஆர்வம் பெற்று அகில் கூறுவதைக் கவனிக்கிறார்.
    1. உனக்குத் தெரியாது; எனக்குத் தெரியாது
    இதனை ‘கருப்புப் பெட்டி’ என்று கூறுவார்கள். அதாவது உங்களுக்கும் தெரியாது. அடுத்தவர்களுக்கும் தெரியாது. பிரதீப்பின் விஷயத்தில், அவர் எதில் சிறந்தவர் என்று அவருக்கும் தெரியாது. நண்பர்களுக்கும் தெரியாது. அதனால்தான் இதைக் ‘கருப்புப் பெட்டி’ என்று கூறுகிறோம். இதில் நாம் கவனம் செலுத்தி, எதில் சிறந்து விளங்க முடியும் என்று அறிய முனைய வேண்டும்.
    2. எனக்குத் தெரியாது; உனக்குத் தெரியும்
    இதனை ‘குருட்டுத்தன்மை’ என்று கூறுவர். அதாவது உங்களுக்குத் தெரியாது, அடுத்தவருக்குத் தெரியும். உதாரணம், பிரதீப் தனது மனைவி ஸ்மிதாவை கோபத்தில் அடுத்தவர் எதிரில் திட்டுவது தவறு என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரதீப்பிற்குத் தான் செய்வது தவறு என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. அதனை உணர்ந்து, அவர் நடந்து கொள்ள வேண்டும்.
    3. எனக்குத் தெரியும்; உனக்குத் தெரியும்
    இதற்கு, ‘திறந்த புத்தகம்’ என்று பெயர். அதாவது, உங்களுக்கும் தெரியும், அடுத்தவருக்கும் தெரியும். உதாரணத்திற்கு, பிரதீப் நல்லவர், நேரம் தவறாமையை கடைபிடிப்பவர். சலுகைகளை ஏற்காதவர் போன்ற விஷயங்கள் அவருக்குத் தெரியும். பிறருக்கும் தெரியும்.
    4. எனக்குத் தெரியும்; உனக்குத் தெரியாது
    இதனை ‘ரகசியம்’ என்பார்கள். அதாவது, உங்களுக்குத் தெரியும் பிறருக்குத் தெரியாது. சிலர் மிகவும் பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் வெளியில் தன்னிடம் ஒன்றுமே இல்லாததுபோல் காட்டிக் கொள்வார்கள். பிரதீப் விஷயத்தில், அவருக்குத் தொலைபேசியில் பேசுவது பிடிக்காது என்று யாருக்கும் தெரியாது. தனது வெறுப்புகளை பிறர் மேல் திணிக்காமல், தொலைபேசியில் அவர் பேசுவதால், அவருக்கு அது பிடிக்காது என்று யாருக்கும் தெரியாது.
    இதுதான் “ஜோஹாரியின் கதவுகள்” தத்துவம்.
    இதனைப்பற்றி அறிந்த பின்னர், பிரதீப் தனது குணாதிசயங்களை, அதில் பொருத்திப் பார்த்து, எதில் சிறந்து விளங்குகிறோம், எதில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார்.
    இந்த விவாதத்திற்குப் பிறகு, பிரதீப் தனது தவறை, “குருட்டுத்தன்மை” என்ற பகுதியில் அறிந்து கொண்டு, அதனை உணர்ந்து, இனிமேல் தன்னுடைய மனைவி ஸ்மிதாவை அடுத்தவர் முன்பு கடிந்து கொள்ள மாட்டேன் என்று கூறுகிறார்.

    அதேபோல, “கருப்புப் பெட்டி” பகுதியில் உள்ள தனது குறையைப் போக்கி தான் எதில் சிறந்தவர் என்பதைக் கண்டுபிடித்து, அதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
    இந்த அருமையான கருத்துக்களை கூறியதற்காக, அகிலிடம் தனது பாராட்டையும், நன்றியையும் கூறுகிறார்.
    நம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைக் கிறார்கள், நம்மைப்பற்றி நமக்கு எந்த அளவிற்குத் தெரியும் போன்றவற்றைஅறிந்துகொண்டு நம்மை நாம் மேம்படுத்திக் கொண்டால், வெற்றி நிச்சயம்.

    அதெல்லாம் ஒரு காலமுங்க!

    சுடு! சுடு!!! நல்லா சுடு!’ என்று பற்களை கடித்த படி, நாற்காலியின் நுனியில் அமர்ந்து தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் அருள். கணினி வீடியோ கேம் விளையாட்டில், தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தான் அவன். அதை தன் ஓரக் கண்களால் பார்த்துவிட்டு அன்றைய நாளிதழில் மீண்டும் நுழைந்தார் பாலு தாத்தா. நாளிதழ் படிக்கையில் அவர் அருகில் வேறொரு புத்தகத்தில் தன் மூக்கு கண்ணாடி வழியே எழுத்துக்களைத் துழாவிக் கொண்டிருந்தார் பாலு தாத்தாவின் நண்பர் ஒருவர்.
    “என்னங்க இது? செய்திகள் பார்த்தாலே எல்லாம் ஒரே கேவலமான விஷயங்களா இருக்கு? நாடு இப்பிடி குட்டிச் சுவராப் போயிடுச்சே! எப்போங்க இந்த நாடு திருந்தும்?’ என்றார் கவலை தேய்ந்த முகத்துடன் பாலு தாத்தாவின் நண்பர். தன் தாடையைச் சொறிந்து விட்டு, புருவங்கள் கூர்மையாக்கி நண்பரைப் பார்த்தார் பாலு தாத்தா.
    “எப்பிடிங்க திருந்தும்? நாடு எப்பிடித் திருந்தும்? ஒரு நாட்டோட வளர்ச்சி இளைஞர்கள் கையில தான் இருக்குன்னு ஒரு … ஒரு… அவர் பேர் என்ன… ம்… மறந்திடுச்சு! ஆனா நம்ம இளைஞர்கள் அப்பிடியா இருக்காங்க? எல்லாம் காதல் கத்திரிக்கான்னு காலத்த கடத்திக்கிட்டு இருக்கானுங்க!’ என்ற பாலு தாத்தாவின் உரத்த குரலுக்கு செவி மடுத்தார் அவர் நண்பர்.
    “வீட்டில பெத்தவங்கள பார்த்துக்க அவுங்களுக்கு நேரமில்ல… பாசம் நேசமெல்லாம் இந்த காலத்துல வெறும் வேஷம் தாங்க!’ என்று பாலு தாத்தா மேலும் அடுக்கி கொண்டே போக, அவரது மருமகள் அவருக்கும் அவர் நண்பருக்கும் காபி கொண்டு வந்தாள்.
    காபி குடித்த படியே “என்னங்க இருக்கு? இந்த காலத்து வயசானவங்களுக்கு? நாமெல்லாம் நம்ம அம்மா அப்பாவை எப்பிடி கவனிச்சிருப்போம்… அதெல்லாம் இந்த காலத்துப் பசங்களுக்கு சொன்னா புரியாதுங்க!’ என்று பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.
    “டேய் ராமு! எந்திரி! விளையாடின வரைக்கும் போதும்! போய் ரெடியாகு… ஸ்விம்மிங் கிளாசுக்கு நேரமாச்சு’ என்று விளையாடிக் கொண்டிருந்த தன் மகனை தயார்படுத்தி, தானும் அலுவலகம் செல்லத் தயாரானாள்.
    “என்னங்க சினிமா எடுக்கறாங்க? அந்த காலத்து நடிகர் நடிகைகளுக்குக் கிட்ட வர முடியுமாங்க இப்போ இருக்குற பொடுசுங்க எல்லாம்? எல்லாம் காசுங்க! சினிமா துறையே குப்பையாகி போச்சு. நல்ல சினிமாவே இல்ல! எல்லாம் நம்ம வாழ்ந்த காலத்தோடு முடிஞ்சு போச்சு!” என்று பாலு தாத்தா பேசிக் கொண்டு இருக்கையில் அவரது ஒரே மகன் வாசு, அலுவலகம் செல்லும் வேகத்திலேயே அங்காடிக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்திருந்தார். “வணக்கமுங்க!” என்று தன் அப்பாவுடன் அமர்ந்திருந்தவரிடம் சிரித்து விட்டு, “மாலினி… ரெடியா? டைம் ஆச்சுமா!’ என்று கூற, “இதோ வந்துட்டேங்க!’ என்று பதில் வந்தது.
    “அப்பா உங்களுக்கு இன்ஜெக்ஷன் போட்ரலாமா?’ என்று மகன் கேட்க, தொடர்ந்து சினிமா வளர்ச்சி பற்றி பேசிக் கொண்டிருந்த அவருக்கு அமைதியாய் மனதிற்குள் சிரித்தபடியே தேவையான மருந்தை ஊசி மூலம் செலுத்தினார் வாசு.
    “ரெடிங்க! டிபன் ரெடி! சாப்பிடலாம். மாமா வாங்க! ஐயா நீங்களும் வாங்க!’ என்றாள் மருமகள். “இல்லம்மா! பரவாயில்ல. நான் என் வீட்டுக்கு போய் சாப்பிடறேன்.’ என்றவரை விடாமல் பிடித்து அழைத்து வந்தார் பாலு தாத்தா. “வாங்க சார்! சாப்பிடுங்க! நம்ம காலத்துல சமைக்கும் போது எல்லாம் நம்ம வீட்டு பொம்பளைங்க அவுங்க கைப்பட எல்லாத்தையும் அரைச்சு சமச்சாங்க. கறி கொழம்பு வெச்சா அந்த வீதியே மணக்கும்! ஹம்! அது ஒரு காலமுங்க…’ என்று மேஜை மீது அமர்ந்தனர் எல்லோரும். மருமகள் பரிமாறினாள். அப்போது பாலு தாத்தாவின் நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தோடியது. அதை பார்த்த வாசு, அவர் மனைவியை பார்த்து செய்கையாலேயே குளிர் சாதன பெட்டியைப் போடச் சொன்னார். “சார்! ரொம்ப வேகுதுல்ல? ஏம்மா…’ என்று பாலு தாத்தா வாயை திறக்கும் முன்னரே குளிர் காற்று அவர் கண்களை வருடியது. மீண்டும் சாப்பிட ஆரம்பித்தனர். “காரம் தாங்க ஒரு சமையலுக்கு முக்கியம்! என்ன சொல்றீங்க?’ என்று தன் நண்பரிடம் பாலு தாத்தா வினவ, அவரும் தெளிவாகத் தலையாட்டினார்.
    “என்ன செஞ்சாலும், இப்போ இவ்வளோ அதி நவீன பொருட்கள் வந்தும் அந்த காலத்துச் சமையலுக்கு ஈடுக்கொடுக்க முடியல பாருங்க!” என்று பாலு தாத்தா மேலும் அடுக்கி கொண்டே போக, ஓரப் பார்வையில் தன் மனைவியைப் பார்த்தார் வாசு. வாசுவையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர் மனைவி.
    ‘ஒண்ணுமில்ல! கவலைப்படாதே!’ என்று கண்களால் அவர் சொன்ன ஆறுதல் அவளை புன்னகைக்கச் செய்தது. மீண்டும் தன் பழம் பெருமைகளை தானே பறைசாற்றிக் கொண் டிருந்தார் பாலு தாத்தா. அப்போது பாலு தாத்தா வின் பேரன், “அம்மா, எனக்கு இன்னொரு சப்பாத்தி. நல்லா இருக்கும்மா…’ என்று தன் விரல்களை நக்கியபடியே அம்மாவை பார்த்தான், வெகுளியாக. அது வரை கடகடவென தன் பேச்சாற்றலால் வானம் தொட்டதாய் நினைத்த பாலு தாத்தா, பூமி அடைந்தார், அவர் நண்பரோடு.

    விடாமல் முயலுங்கள் விரும்பியதை அடையுங்கள்

    வாழ்க்கையில் சிலருக்கு வெற்றி சுலபமாக கிடைத்துவிடுகிறது. ஆனால் சிலருக்கோ அது எட்டாக் கனியாகவே இருக்கிறது. ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு உழைப்பவர்களில் பலர் சாதிக்கத்தான் செய்கிறார்கள். பலர் வெற்றி கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து தங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதனாலேயே அவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள்.
    நம்முடைய வாழ்க்கையில் நாம் விரும்பும் எதையும் அடையலாம். அதற்குத் தேவை விடாமுயற்சி. நமது மனம் விநோதமானது. இதை நாம் இன்னும் உணராதவர்களாகவே இருக்கிறோம். நாம் ஒரு விஷயத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் அதற்கு மனவலிமை மிகமிக அவசியம். நாம் சாதிக்க நினைக்கும் விஷயத்தைக் குறித்து நாம் நமது மனதில் எப்போதும் அசைபோட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
    பாரததேசத்தில் மந்திரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவை நமது எண்ணத்தை உயர்த்தி நமது மனதிற்கு வலிமையைத் தருகின்றன. முற்காலத்தில் முனிவர்கள் முதல் மன்னர்கள் வரை பலர் அசுவமேத யாகம் முதலான பலவிதமான யாகங்களைச் செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள். அத்தகைய யாகங்களில் மந்திரங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் தற்காலத்தில் நாம் வாழ்க்கையில் வெற்றியடைய நமக்கும் சில மந்திரச் சொற்கள் தேவைப்படுகின்றன. நம்பிக்கையோடு அத்தகைய வெற்றிக்கான மந்திரச்சொற்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
    “என்னால் நிச்சயம் முடியும். நான் சாதிப்பேன்’ “நான் சாதிக்கப் பிறந்தவன்’ “முயல்வேன் முடிப்பேன்’ “இந்த உலகத்தை என் உள்ளங்கைக்குள் அடக்குவேன்’ “நான் அனைவருக்கும் உதாரணமாக விளங்குவேன்’.
    மேலே உள்ளவை வெற்றிக்கான சில மந்திரச்சொற்கள். இவற்றை நீங்கள் உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் மனம் வலிமை அடைவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.
    ஓர் ஊரில் ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் ஐந்து பேர்களும் சேர்ந்து விவசாயம் செய்ய முடிவு செய்தார்கள். அவர்கள் ஐந்து பேர்களுமாக சேர்ந்து கொஞ்சம் பணத்தைப் போட்டு அந்த கிராமத்தில் இருந்த ஒரு கரும்பு நிலத்தை வாங்கினார்கள். அவர்கள் ஒன்றாய் சேர்ந்து அதைத் திருத்தி விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார்கள்.
    “நண்பர்களே, இந்த இடத்தில் தண்ணீர் சுத்தமாக இல்லை. நாம் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் ஒரு கிணற்றை அவசியம் வெட்டியாக வேண்டும்’.
    ஒரு நண்பன் இப்படிச் சொன்னதும் மற்ற நண்பர்களுக்கு அவன் சொல்வது சரியென்று பட்டது.
    ஒரு நல்ல நாளில் அவர்கள் ஐந்து பேர்களும் தாங்கள் வாங்கிய இடத்திலிருந்து ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே ஒரு பெரிய கிணற்றைவெட்டத் தொடங்கினார்கள். ஐந்து பேர்களும் சேர்ந்து வேலை செய்தார்கள். நான்கு அடிகள் வரை தோண்டிவிட்டார்கள். இப்போது அவர்களில் ஒரு நண்பனுக்கு நம்பிக்கை போய்விட்டது. இந்த இடத்தில் எத்தனை ஆழம் வெட்டினாலும் தண்ணீர் கிடைக்காது என்று அவன் மனதில் தோன்றியது.
    “நண்பர்களே, இந்த இடத்தில் நிச்சயம் தண்ணீர் கிடைக்காது. நான் இதிலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறேன்’.
    மற்ற நான்கு நண்பர்களும் அவனுக்கு நம்பிக்கையூட்டினார்கள். ஆனால் அவன் கேட்க வில்லை. எனவே அவனுக்குச் சேர வேண்டிய தொகையினைக் கொடுக்க அவன் அதை வாங்கிக் கொண்டு போய்விட்டான்.
    தொடர்ந்து நான்கு நண்பர்களும் கிணற்றைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டார்கள். சில நாட்கள் கழிந்தன. தண்ணீர் வந்த பாடில்லை. நான்கு நண்பர்களில் ஒருவன் மனம் தளர்ந்தான்.
    “நண்பர்களே, இந்த இடத்தில் நிச்சயம் தண்ணீர் கிடைக்காது. நான் இதிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறேன்’.
    மூன்று நண்பர்களும் அவனுக்குச் சேர வேண்டிய நிலத்தின் மதிப்பைக் கொடுக்க அதை வாங்கிக்கொண்டு அவன் போய்விட்டான்.
    இப்படியே சில நாட்கள் சென்றன. மூன்றாவது நண்பனும் நம்பிக்கை இழந்து பிரிந்து சென்றான். இப்போது நிலம் கடைசியாக இருந்த இருவருக்குச் சொந்தமானது. கடைசியாக எஞ்சியிருந்த இருவரில் ஒருவனுக்கும் நம்பிக்கை போனது. அவன் மற்றொருவனிடம் இதைச் தெரிவிக்க அவனோ, “மனம் தளராதே. நிச்சயம் தண்ணீர் கிடைக்கும். விடாமுயற்சியோடு நாம் உழைப்போம்’ என்றான். ஆனால் அந்த நண்பன் அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. எனவே அவன் தன்னுடன் கடைசியாக இருந்த நண்பனுக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பினான். இப்போது கடைசியாக நம்பிக்கையுடன் இருந்தவனுக்கு நிலம் சொந்தமானது.
    அவன் மனதில் உறுதியோடு விடாமுயற்சி யோடு தனியே உழைக்கத் தொடங்கினான். தொடர்ந்து மூன்று நாட்கள் அவன் மட்டுமே பாடுபட்டு கிணற்றைவெட்டினான். நான்காம் நாள் காலை அந்த கிணற்றிலிருந்து ஊற்று பீறிட்டுக் கொண்டு தண்ணீரைக் கொட்டியது. கிணறு தண்ணீரால் நிறைந்தது.
    மன உறுதியோடும் விடாமுயற்சியோடும் கடைசிவரை போராடிய அந்த நண்பன் வெற்றி பெற்றுவிட்டான். அதன் பிறகு ஆட்களை வைத்து அந்த நிலத்தை சீர்செய்து பலவிதமான பயிர்களை விளைவித்தான்.
    செல்வச் செழிப்போடு நிம்மதியாக வாழ்ந்தான்.இது ஒரு கதை மட்டுமல்ல. சொல்லப்போனால் பலருடைய வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்.
    ஒன்றாகச் சேர்ந்து தொழிலைத் தொடங்குவார்கள். எந்தத் தொழிலும் தொடக்கத்திலேயே பணத்தைக் கொட்டாது. பல போராட்டங்களைச் சந்தித்த பின்னரே வெற்றி கிடைக்கும். ஒரு விதையை நட்டால் அது மரமாகி பலனைத் தருவதற்கு பல வருடங்கள் ஆகிறது. நாம் அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். இதை உணராமல் பாதியிலேயே பிரிந்து சென்றுவிடுவார்கள். அவர்களில் சிலர் விடாமுயற்சியோடு போராடுவார்கள். பிற்காலத்தில் பலனை அனுபவிப்பார்கள். பிரிந்து சென்றவர் வேதனையை அனுபவிப்பார்.
    எந்த ஒரு செயலிலும் இறங்குவதற்கு முன்னால் நன்றாக யோசிக்க வேண்டும். இது நம்மால் முடியுமா? இதில் நாம் வெற்றி காணமுடியுமா? என்ற பல கோணங்களில் யோசிக்க வேண்டும். முடியும் என்று தீர்மானித்து செயலில் இறங்கிவிட்டால் அதிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்கக்கூடாது. கடைசிவரை போராட வேண்டும். விடாமுயற்சியோடு தொடர்ந்து போராடி வெற்றி காண வேண்டும்.
    மேலே கூறிய வெற்றிக்கான மந்திரங் களோடு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விஷயமும் இருக்கிறது. அது கனவு. நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயத்தை முனைப்போடு செய்யத் தொடங்குங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் நீங்கள் சாதிக்க நினைத்த விஷயத்தை சாதித்து முடித்து விட்டதாகக் கருதி உங்கள் மனதிற்குள் கனவு காணுங்கள். அதற்காக உலகம் உங்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாக கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கற்பனை ஒருநாள் நிச்சயம் பலிக்கும்.
    அமெரிக்காவில் சிக்காகோவில் கன்சாலஸ் என்றொரு பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒருநாள் ஏழை எளிய மக்களுக்காக ஒரு சிறந்த தொழிற்கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. நல்லவற்றை போதிக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்க அவர் எவ்வளவு பணம் தேவை என்று கணக்குப்போட்டுப் பார்த்தார். அவர் விரும்பும் அந்த சிறந்த கல்விக் கூடத்தைத் தொடங்க சுமார் ஒரு மில்லியன் டாலர் தேவைப்பட்டது. அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. தம்மால் இது முடியாது என்று அவர் விட்டுவிடவில்லை. தினந்தோறும் இதே எண்ண மாகவே இருந்தார். எப்பொழுதும் இதைப்பற்றியே சிந்தித்து வந்தார். இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் தன் எண்ணத்தை நினைத்துப் பார்ப்பார். காலையில் கண் விழித்ததும் தனது கனவு கல்விக்கூடத்தை மனதில் காண்பார். இப்படியே சுமார் இரண்டு வருடங்கள் சென்றன.
    ஒருநாள் தான் விரும்பும் கல்வி நிறு வனத்தை விரைவில் எப்படியாவது நிறுவி விட வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்தபோது தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த பின்னர் தனது எண்ணத்தை வந்திருப்போரிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தார். அதன்படி 1890ம் ஆண்டில் ஒரு நாள் பிரார்த்தனை முடிந்ததும் தான் நிறுவ விரும்பிய கல்விக் கூடத்தைப் பற்றி மிகச்சிறப்பாக விரிவான முறையில் எடுத்துரைத்தார். அந்தக்கூட்டத்தில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ஆர்மர். கன்சாலஸின் பேச்சும் எண்ணமும் அவரை மிகவும் கவர்ந்துவிட்டது. உடனே பாதிரியாரை அணுகி தான் பத்து மில்லியன் டாலர் நன்கொடை தருவதாய்க் கூறினார். மேலும் கன்சாலஸ் தொடர்ந்து ஐந்து வருடங்கள் அந்த கல்வி நிறுவனத்தை தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பின்னர் ஆர்மர் தான் தருவதாய் கூறிய தொகையின் ஒரு பகுதியாக ஒரு மில்லியன் டாலர் பணத்தையும் கொடுத்தார்.
    கன்சாலஸ் ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு 1893ல் ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்றொரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அவரே அக்கல்லூரியின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 1940ஆம் ஆண்டில் ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் புதிய கல்வி நிறுவனம் செயல்படத் தொடங்கியது. இன்று உலகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. கன்சாலஸின் விடாமுயற்சி பலித்துவிட்டது.
    விடாமுயற்சி, வலிமையான எண்ணம் இவை இரண்டையும் மனதில் நிறுத்தி முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் எதையும் சாதிக்க முடியும். வெற்றியும் தோல்வியும் நம் மனதில்தான் இருக்கிறது. உங்களுக்கு வேண்டியது வெற்றியா தோல்வியா என்பதை முதலில் தீர்மானியுங்கள். எல்லோரும் விரும்புவது வெற்றியைத்தானே. விடாமல் முயலுங்கள். விரும்பியதை அடையுங்கள்.

    அர்த்தமற்ற இலக்குகள்

    ஒரு விவசாயிடம் ஒரு நாய் இருந்தது. அது எப்பொழுதும் அவர்களது வீட்டிற்கு பக்கத்திலுள்ள சாலையோரம் உட்கார்ந்து வாகனம் ஏதாவது வருகின்றதா என்று பார்த்துக் கொண்டே இருக்கும். அப்படி ஏதாவது வாகனம் வந்தால் அது குரைத்துக் கொண்டே ஓடி அந்த வாகனத்தை முந்துவதற்கு முயற்சி செய்யும். இதை பார்த்துக் கொண்டே இருந்த அந்த விவசாயியின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் அவரிடம் உங்கள் நாய் ஒரு நாளைக்காவது ஒரு வாகனத்தை பிடித்துவிடும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அப்பொழுது அவர் எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அப்படியே அது அதைப்பிடித்தாலும் அதை வைத்து அது என்ன செய்ய முடியும் என்பதேயாகும் என்று பதில் கூறினார்.

    நாமும் அர்த்தமில்லாத இலக்குகளை நோக்கி செல்வதைவிட நமது வாழ்க்கையை சுவாமி விவேகானந்தர் கூறியது போல ‘”ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அந்த ஒரு கருத்தையே நமது வாழ்க்கை மயமாக்கி, அதையே கனவு கண்டு, அந்த கருத்தையே ஒட்டி வாழ்ந்து நமது மூளை தசைகள், நரம்புகள், நமது உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இதுதான் வழி.” ஆகவே நாமும் அத்தகைய வாழ்க்கையை நோக்கி சென்று நாமும், நமது தாய்நாட்டையும் உயர்த்துவோமாக

    உடலினை உறுதி செய்

    விரதம் (Fasting)
    உடல் எடையைக் குறைப்ப தாக கூறி விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் உடலில் எந்த எடையைக் குறைப்பார்கள் என்று கூறுவது இல்லை. வெறும் எடையை குறைப்பார்கள் அவ்வளவு தான். பருமனாக இருப்பவர்களுக்கு உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்தது என்றால் வரவேற்கத் தக்கதே. ஆனால் பட்டினிக் கிடப்பதன் மூலம் அல்லது தினமும் ஒரு வேளை மட்டும் உண்பதன் மூலம் உடலில் உள்ள நீர் மற்றும் புரதத்தின் அளவு குறைந்து, அதன் மூலம் தசைகளின் அளவும் குறைந்து விடுகிறது. குறைக்கப்பட வேண்டிய கொழுப்பு உடலில் அப்படியே இருந்து விடுகிறது. குறைக்கப்படக் கூடாத செல்களும் நீரும் குறைந்து விடுகின்றன.
    விரதம் இருந்து ஒருவர் இரண்டு கிலோ எடை குறைத்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் உடலில் எவற்றையெல்லாம் இழந்திருப்பார் என்பதைப் பார்ப்போம்.
    அ. இழந்த உடல் எடை – 2 கிலோ
    ஆ. இழந்த நீரின் அளவு – 4 கிலோ
    இ. சம்பாதித்த கொழுப்பு – 3 கிலோ
    ஈ. இழந்த தசைகள் – 1 கிலோ
    விரதத்தின் மூலம் 4 கிலோ நீரையும், 1 கிலோ தசையை இழந்த இவர் அதே விரதத்தின் மூலம் 3 கிலோ கொழுப்பையும் உடலில் சேர்த்துக் கொண்டு விட்டார். இதில் 2 கிலோ எடை குறைத்தது ஒன்றும் விரும்பத்தக்க எடைக் குறைப்பே அல்ல. இன்னும் சொல்லப் போனால் இதனால் பாதிப்பே அதிகமாக இருக்கிறது. எனவே, அதிரடி எடைக் குறைப்பு செய்யாமல் இருப்பதே மேல்.
    எடை குறைக்கச் சென்றவர் மிகவும் பலவீனம் ஆவதோடு மட்டுமல்லாமல், பிற்காலத்தில் கொழுப்பைக் குறைக்கத் தேவையான தசைகள், தசைகளில் உள்ள செல்கள், என்சைம்கள், நீர் ஆகியவற்றை இழந்து வீடு திரும்புகிறார். இதனால், இந்த பட்டினி படலம் முடிந்து வழக்கமான உணவு உண்ணத் துவங்கியதும் உணவுப் பொருளிலுள்ள கொழுப்பு எரிந்து சக்தியாக மாற்றத் தேவையான என்ஸைம்கள் மற்றும் செல்கள் இல்லாததால் கொழுப்பு அதிக அளவில் உடலில் சேமிக்கப் படுகிறது. இவர் முதலில் இருந்த எடையை விட அதிகம் எடையுடையவர் ஆகிவிடுவார். அது மட்டுமல்லாமல், பல நாட்கள் விரதம் இருக்கும் போது உணவிற்காக ஏங்கிய இவர், எடைக் குறைந்ததும், வழக்கத்தை விட அதிகமாக உண்ண ஆரம்பித்துவிடுவார். இதனால் இந்த அதிரடி எடைக் குறைப்பு நிலையத்திலிருந்து விடுபட்டதும் இவர் எடை இதற்கு முன்னதாக இருந்த எடையை விட அதிகமாகி விடுகிறது.
    விரதம் வேண்டாம்; உடற்பயிற்சி போதும்
    எனவே விரதம் இருப்பதைத் தவிர்த்து அளவான எல்லா சத்துகளும் அடங்கிய உணவினை உட்கொண்டு ஏரோபிக் உடற்பயிற்சி (Aerobic Exercise) என்ற வகை உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். எடையைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது, காலையில் எழுந்ததும் கால்களில் ஷூவை மாட்டிக் கொண்டு வீட்டின் முன் கதவைத் திறந்து ஓட வேண்டியது தான். தேவைக்கு அதிகமா ன கொழுப்பு உங்களைவிட்டு ஓடி விடும். ஒரு வாரம் ஒரு கிலோ எடை குறைப்பதே போதுமானதாகும்.
    எந்த அதிரடி எடைக் குறைப்பு நிறுவனமும் ஒரு வாரம் ஒரு கிலோவிற்கு மேல் எடையைக் குறைத்துக் காட்டுகிறோம் என்றால் அதை நம்பாதீர்கள். ஏனென்றால் நீங்கள் மிதமான உணவு உண்டு போதுமான உடற்பயிற்சிகள் செய்தால் கூட உங்கள் உடலில் ஒரு கிலோவிற்கு மேல் கொழுப்பு கரைவதில்லை. வாரத்திற்கு ஒரு கிலோவிற்கு மேல் எடை குறைந்து விட்டது என்றால் அது கொழுப்பு கரைந்ததால் ஏற்பட்ட எடைக் குறைவு அல்ல. இந்த எடைக்குறைப்பு உடலில் உள்ள நீர் மற்றும் தசைகள் குறைந்து விட்டதால் ஏற்பட்டிருக்கும் எடை வீழ்ச்சியே அன்றி வேறொன்றாக இருக்க முடியாது.
    எனவே, நியாயமான எடைக் குறைப்பு நிலையங்களுக்குச் செல்வதாக இருந்தால் உங்கள் உடல் எடையை எடை இயந்திரத்தில் பார்ப்பதைப் போல இன்னொரு முறையையும் கையாளுங்கள். எடை குறையும்போது நீங்கள் அணிந்திருந்த ஆடை தளர்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பாருங்கள். இடுப்பைச் சுற்றி அணிந்திருந்த ஆடை தளர்ந்தால்தான் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு கரைந்திருக்கிறது என்று பொருளாகும்.
    கார்போஹைட்ரேட் குறைப்பு
    சில அதிரடி எடைக்குறைப்பு மையங்கள் அதிக புரதச்சத்துள்ள அதே வேளையில் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவை உண்ண வைத்து எடையினை குறைத்துக் காட்டுகிறார்கள்.
    ஒரு நாள் உண்ணும் உணவில் உள்ள மொத்த கலோரிகளில் 12 சதவீதம் புரதம், 23 சதவீதம் கொழுப்பு, 65 சதவீதம் கார்போ ஹைட்ரேட்கள் என்று இருத்தல் வேண்டும். உணவில் கார்போஹைட்ரேட் அளவு 65 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் உடனே வேதியல் மாறுகிறது. ஏதோ உணவு பற்றாக்குறை வந்துவிட்டது, எனவே உணவை சேமிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை உடல் எடுத்துவிடுகிறது. இது கூட மனித உடல் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடாகும். எனவே, உடலானது குறைந்த பட்ச கார்போஹைட்ரேட்டையும், இன்னும் சொல்லப்போனால் செல்களைப் பழுது பார்க்க வேண்டிய புரத்தையும் கூட கொழுப்பாக மாற்றி உடலில் தேக்கி வைத்துவிடும். ஆக, எடையைக் குறைக்க உணவில் கார்போ ஹைட்ரேட்டின் அளவைக் குறைக்கப்போய் அதன் மூலம் உடலில் கொழுப்பின் எடை அதிகமாகிவிடும்.
    கார்போஹைட்ரேட் அடங்கிய முழு கோதுமை, கைக்குத்தல் அரிசி, ராகி, கம்பு போன்ற தானியங்களை உட்கொள்ளலாம். அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் தீட்டப்படுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் களையப்படுகிறது. ஆனாலும் இவை அனைத்துமே கார்போ ஹைட்ரேட் தாம். இவை நமது வயிற்றில் மெதுவாகச் செரிப்பதால் அதிக அளவு குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்படுவது தடைபடுகிறது. எனவே உடல் எடை அதிகமாவதில்லை. அதே வேளையில் வெண் சர்க்கரை (சீனி) 100 சதவீதம் குளுக்கோஸ் ஆகும். இது உடனடியாக இரத்தத்தில் கலந்து விடுகிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் அது உடனே கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் தேக்கி வைக்கப்படுகிறது. எனவே உடல் நலத்தின் எதிரி தானியமோ, சோறோ அல்ல, நாம் உண்ணும் சர்க்கரையே (Sugar) ஆகும். இதைத் தவிர்த்தாலே, உடல் எடைக் குறையும்.
    விரதம் ஓர் என்ஸைம் கொல்லி
    நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைச் சக்தியாக மாற்றுவதும், அதிலிருந்து பல விதமான ஊட்டச்சத்துக்களைத் தயாரிப்பதும் என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் ஆகும். இந்த என்சைம்களும் புரதங்களே. பலவிதமான என்சைம்கள் உள்ளன. நமது தசைகளில் உள்ள செல்லுக்குள் குளுக்கோஸ் தானாகவே செல்ல முடியாது. குளுக்கோஸை இன்சுலின் என்ற ஹார்மோன் (இது கணையத்தில் உற்பத்தி ஆகிறது) எடுத்துச் செல்கிறது. தசைகளிலிலுள்ள செல்கள் பெருத்துவிட்டால் (உடல்பருமன் உள்ளவர்கள்) இந்த இன்சுலினால் குளுக்கோஸை செல்லுக்குள்ளே எடுத்துச் செல்ல முடியாமல் இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். இறுதியாக இந்த குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாறி பின்னர் மூன்று கொழுப்பு அமிலத்துடன் சேர்ந்து டிரைக் கிளிசரைடாக மாறிவிடுகிறது. டிரை கிளிசரைடுகள் கொழுப்புச் செல்லுக்குள் தஞ்சம் புகுந்து விடுகின்றது. இந்த டிரை கிளிசரைடுதான் நமது உடலில் இருக்கும் கொழுப்பு. இதனால் பருமனான நபர் மீண்டும் பருமன் ஆகிவிடுகின்றனர். தசையிலுள்ள செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு தகுந்த இசைவுதராமல் இருப்பதே இதற்கு காரணம். காலப்போக்கில் குளுக்கோஸ் இல்லாமல் செல்களும் செயலிழந்து தசைகளின் அளவும், எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது.
    இந்நிலையைத் தவிர்ப்பதற்கு நாம் மேற்கொள்வது விரதம் அல்ல; உடற்பயிற்சி செய்வதே ஆகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலிலுள்ள தசைகள் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவை இன்சுலின் கொண்டுவரும் குளுக்கோசை ஏற்றுக் கொள்கின்றன. இதனால் குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்படுவது தவிர்க்கப்படுகிறது.
    விரதம் இருப்பதைப் புறக்கணியுங்கள். முந்தைய இதழில் நான் குறிப்பிட்டுள்ள உணவு முறைகளைப் பின்பற்றிப் பாருங்கள். உடல் எடை குறையும். உடல் எடை குறைவது கூட ஓர் இன்பமான அனுபவமாகவும் இருக்கும்.
    உடல் பருமனைக் குணப்படுத்தும்
    சிகிச்சை முறை
    சத்தான உணவினைத் தெரிவு செய்து உண்பது, உடற்பயிற்சி செய்வது என்று உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியமானது. இந்த முறையைத் தவிர்த்து வேறொரு முறையை சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவே அறுவே சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சைக்கு Bariatic Surgery என்று பெயர்.
    பேரியாட்டிக் அறுவை சிகிச்சை இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது.
    அ. உணவைக் கட்டுப்படுத்தும் முறை
    இம்முறையில் இரைப்பையின் ஒரு பகுதியை Gastric Banding என்னும் முறைப்படி ஒட்டி அதன் கொள்ளளவைக் குறைத்து விடுகிறார்கள். இரைப்பையின் கொள்ளளவு குறைவதால் உண்ணும் உணவின் அளவும் குறைந்து விடுகிறது. இதனால் உடல் பருமன் படிப்படியாக குறையும்.
    ஆ. கிரகிக்கும் திறனைக் குறைக்கும் முறை
    இம்முறையில் இரைப்பையின் ஒரு பகுதியையும், சிறுகுடலின் ஒரு பகுதியையும் Gastric by-pass முறைப்படி தனிமைப்படுத்தி, அப்பகுதியை பயன்படாமல் செய்துவிடுகிறார்கள். இதனால் உண்ணும் உணவின் அளவும் குறைகிறது. உடலில் உறிஞ்சப்படும் ஊட்டச்சத்தின் அளவும் குறைகிறது. உடல் எடையும் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது.
    இரைப்பையைச் சிறதாக்கும் Gastric Banding என்னும் முறைதான் பிரபலமாக இருக்கிறது. நோய்
    வரும் அளவிற்கு உடல் பருமனுள்ள (Morbidly obese) பலர் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கிறார்கள். இந்தச் சிகிச்சையில் இறப்பு விகிதம் ஒரு சதவீதம் ஆகும். எனக்குத் தெரிந்த ஒருவர் இறந்தும் இருக்கிறார். என்ன பயமாக இருக்கிறதா? அந்த ஒரு சதவீதம் நாமாக கூட இருக் கலாம். மிக அதிகமாக உடல் பருமனாகிவிட்டால் உயிரைக் காக்க இந்த அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை.
    எனக்குப் பழக்கமான நண்பர்கள் சிலர் உடற்பயிற்சி செய்யத் தயங்குகிறார்கள். உடற்பயிற்சி செய்வது அவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் வலி ஏற்படுகிறது என்கிறார்கள். ஒருநாள் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் பொழுதுதான் உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி சுகமான வலி என்பது புரியும்.
    எனவே உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இந்த இரண்டும் தான் உடல் பருமனைத் தடுக்கும் எளிய இயற்கை முறைகளாகும்.

    மனிதப்பிறவி பெரும்பேறு

    மனிதன் ஐந்து அறிவு கொண்ட மிருக நிலையிலிருந்து ஆறறிவு கொண்ட மனிதனாக பரிணாமம் அடைந்துள்ளான். மனம் தான் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் பெரியோர்களால் ‘மனம் போல் வாழ்க’ என்று இன்றும் வாழ்த்துவதை காண்கிறோம், கேட்கிறோம்.. ஒருவருடைய வாழ்க்கை அவருடைய எண்ணப்படி தான் அமைகிறது. எண்ணம் தான் வாழ்க்கை. நல்ல எண்ணம் தான் நல்ல சூழ்நிலையை உருவாக்குகிறது. நல்ல எண்ணம் மனதில் இருந்தால் நல்லதே நடக்கும். தவறான எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு, நல்லதே நடக்க வேண்டு மென்று விரும்பினால் நடைபெறாது.
    எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லனவே எண்ணல் வேண்டும்
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்த நல்லறிவு வேண்டும்
    என்று பாரதியார் தெளிவாக கூறியுள்ளார்.
    மனதை தெளிவுபடுத்த வேண்டும். நெறிமுறைபடுத்த வேண்டும். ஒழுங்கு படுத்த வேண்டும். உரப்படுத்த வேண்டும். வலுப்படுத்த வேண்டும். அதற்குரிய முயற்சியுடன் கூடிய பயிற்சி வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் மனிதனிடம் குடி கொண்டுள்ள தவறான குணங்களாகிய பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சகம் குறைந்து நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சம நோக்கு, மன்னிப்பு என்ற நற்குணங்களாக மாறுகிறது.
    எண்ணம், சொல், செயல் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இயங்குகின்றது. தூய்மையான மனமும் நல்ல எண்ணம் கொண்டவர்களிடம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நிலை ஏற்படுவதில்லை. உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாக செயல்புரியும் வேகம் மனதுக்கு ஏற்படுவதில்லை. ஒழுக்கம் கடமை ஈகையுடன் கூடிய அறவாழ்க்கை வாழ விருப்பம் ஏற்படும். அறவாழ்க்கை அமைந்தால் இறையுணர்வு வாழ்க்கை இயல்பாக அமையும். அதனால் தற்காலத்திலோ பிற்காலத்திலோ தனக்கோ பிறருக்கோ தீமை செய்யக்கூடாது என்றஎண்ணம் ஏற்படுகிறது. அறிவுக்கு அறிவு அடிமையாவதை தவிர்த்து தனது நிலையில் தெளிவும் விளிப்பும் ஏற்படுகிறது. எதிர்பார்க்கும் எண்ணம் ஏற்படுவ தில்லை. இந்த மன நிலையையுடைய மனிதன் லஞ்சம் வாங்க மாட்டான். லஞ்சம் வாங்க ஆசைப் பட மாட்டான். லஞ்சத்தை விரும்ப மாட்டான். எதிர்பார்த்தால் ஏமாற்றமே தரும். மனத்தூய்மை யினால் தான் லஞ்சத்தைத் தவிர்க்க முடியும்.
    வாழ்க்கையே பிரச்சனை தான். பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வாகம் நடத்தப்படுகிறார்கள். அரசியல் கட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு எண்ணிக்கையில் அடங்காத கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளது. தடி எடுத்தவர் எல்லாம் தண்டல் காரர் என்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்வு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு கௌரவ பிரச்சனையில் தான் ஆட்சிமுறை நடந்து வருகிறது. மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகளிடம் மனிதாபி மானம் குறைந்து வருகிறது. சட்டம் போட்டு தடுக்கிறகூட்டம் தடுத்தாலும், திட்டம் போட்டு திருடறகூட்டம் திருடிக் கொண்டு தான் இருக்கிறது. மனிதனாக பார்த்து திருந்தாவிட்டால் லஞ்சத்தை ஒழிப்பது சிரமம்தான். எனவே இளைஞர்களுக்கு மனதை தூய்மைப்படுத்தும் மனபயிற்சி பழக்கத்தை பள்ளிப் பருவத்திலே கொடுத்துதவ வேண்டும். விஞ்ஞான அறிவு வளர்ச்சியடைந்த இந்த கால கட்டத்தில் தத்துவஞான விளக்கத்தை பரவலாக்கி மக்களிடம் அறிவையும் வளர்த்து மனத்தூய்மை செய்து அதன் மூலம் அரசியலை தூய்மை செய்ய வேண்டும். தூய்மையின் மூலம் குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.
    நிதி நிர்வாகம் பொருளாதார துறைகளில் நேர்மையும், உண்மையும் ஏற்பட்டால் லஞ்சம் ஊழல் ஒழியும். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னம்பிக்கையுடன் தன்னை உணர்ந்தால் தனி மனிதன் வாழ்க்கையில் அமைதி ஏற்பட்டு குடும்பத்தில் அமைதி ஏற்படும். அதன் மூலம் சமுதாயம் அமைதி பூங்காவாக மாறுகிறது. இந்த அமைதியை விட வேறு என்ன அமைதி வேண்டும். மனித பிறவியெடுத்ததே பெரும்பேறு என்பதை உணர வேண்டும்.

    வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…

    நான் வெளியூர் சென்றிருந்தேன். அங்கே வாக்கிங் சென்று கொண்டு இருக்கும் போது இரண்டு பாதைகள் பிரிந்து சென்றது. எதில் செல்வது என்ற குழப்பத்தில் பிரிவில் இருந்த நின்றிருந்த ஒரு சிறுவனிடம் நான் எந்தப் பாதையில் நடப்பது என கேட்டேன். எங்கே செல்ல வேண்டும் என என்னைக் கேட்டான். குறிப்பிட்ட இடத்திற்கு போக வேண்டியதில்லை. சும்மா நடக்க வேண்டும் ,என்றேன். அப்படியெனில் எந்தப் பாதையில் வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லி ஓடிவிட்டான். கொஞ்சம் நேரம் அவன் சொன்ன பதில் என்னைத் தவறு செய்தவன் போல உணர வைத்தது. எதையாவது ஒரு பாதையைச் சொல்லாமல் அவன் அப்படி செய்திருக்க கூடாது என்று மனதில் ஒரு துளி எண்ணம் எழுந்தது. ஆனால் அதே கணம் ஏன் அப்படி சொன்னான் என யோசித்த போது மனதில் பொறி தட்டியது. முதலில் கேள்வி கேட்டது நான் தான். எங்கே செல்வது என்று எனக்கே தெரியாமல் எங்கே செல்வது எனக் கேள்வி கேட்டால் பதில் நிச்சயம் இப்படித்தான் இருக்கும் என உணர முடிந்தது. இப்படித்தான் வாழ்க்கையில் எங்கே போக வேண்டும் எதை நோக்கி நம் பயணம் என தெரியாமல் சிலர் பல நேரங்களில் மனக்குருடர் களாக பாதை பிரிவில் தவிக்கிறார்கள். தடம் மாறுகிறார்கள்.
    உலகில் 3 சதவீதம் மக்கள் மட்டுமே எதை நோக்கி தங்களது வாழ்க்கைப் பயணம் என தீர்மாணித்து நடப்பதாக ஒரு தகவல். ஏன் இவ்வளவு குறைவான சதவீதம்?
    மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையின் பொறுப்புகளை முழுமையாக 100 சதவீதம் ஏற்றுக்கொள்வதில்லை. வெற்றியும் புகழும் அதுவாக வருவதாகவும்,அதிர்ஷ்டத்தில் விளைவது என்றும் முட்டாள் தனமாக நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களை விரித்துக் கொள்ளாமல் தங்கள் திறமைகளை குறுக்கிக்கொண்டு ஒருவித சொகுசு நிலையிலேயே(?) இருந்துவிட விருப்பப்படு கிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிபெறாததற்குத் தேவையற்றகாரணங்களைத் தெளிவாக சொல் கிறார்கள். அதிர்ஷ்டம் என்று ஒன்று இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது ஒரு விளைவு அவ்வளவு தான். காரணம் என்னவோ உங்களது கற்றலும்,விடா முயற்சியும்தான் என்பது தான் உண்மை.
    நிறைய வெற்றிக்கான கட்டுரைகளைப் படித்திருப்பீர்கள்,வெற்றியாளர்களின் பேச்சுக்களைக் கேட்டிருப்பீர்கள். ஆனாலும் என்னால் ஏன் வெற்றி பெறமுடியவில்லை என்றநினைப்பு உங்களுக்கு இருக்கிறதா?
    எதை நோக்கி உங்கள் வாழ்க்கை என்று தெளிவாக இன்னும் அறிந்திருக்க வில்லை என்று தான் அர்த்தம். பயணத்தின் நோக்கம் தான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் வெற்றி-காந்தம். அது வெற்றிக்கான விசயங்களைத் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்ளத் தெரியும். நம் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள பெரும் அளவில் உதவும். மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க வாழ்க்கைப் பயண நோக்கம் பெருமளவு உதவிகரமாக இருக்கும்.
    எனக்கு என் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் எப்படி அமைத்துக்கொள்வது என்றகுழப்பம் இருக்கிறது என்ன செய்வது என்றவருத்தம் உங்களுக்கு உண்டா?
    உங்களது பயணம் நல்லதை நோக்கிய தாகவும் உணர்வு தூண்டுதலாகவும் இருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் செல்லப் போகிறீர்கள் என்றால் சிங்கப்பூரைப் பற்றிய காட்சிகள் உங்கள் மனதில் நிச்சயமாக விரியும் அதை உங்களால் சிங்கப்பூர் போகமாலேயே ரசிக்க முடியும்;அந்த சந்தோசத்தை உணரமுடியும் .அதைப்போல உங்கள் பயணத்தின் இலக்கு நோக்கம் உங்களால் உணரப்பட வேண்டும். அதற்கு உங்கள் நோக்கத்தில் தெளிவு இருக்க வேண்டும், தகுதி தன்மை மற்றும் அதன்பால் ஈர்ப்பு கலந்த ஈடுபாடு இருக்க வேண்டும்.
    வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் தெளிவாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை நோக்கி என்னால் பயணிக்க முடியுமா என்றபயம் என்னைத் தடுக்கிறது என்ன செய்வது?
    பயம் மெய்யென்று தோன்றும் ஒரு பொய்யான சான்று. நம் குழந்தை பருவத்தில் இருந்தே நம் நம்பிக்கையுடன் ஒன்றிப்போன விசயங்களை நாம் மறுபடியும் குறிப்பிட்டு அனுபவ மாக சொல்கிறோம் அல்லது உணருகிறோம். ஆனால் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமாக உணரப்பட்ட அனுபவம் இருக்கலாம். அதனால் எல்லாவற்றையும் பொதுவான ஒன்றாக கருத தேவையில்லை. அவர் இப்படித்தான் தொடங்கினார், செய்தார், முடிவில் அவர் வெற்றி பெறாமல் போய்விட்டார் என்பதற்காக அவர் முயற்சித்த செயலை யாரும் செய்யக் கூடாது என்பதில்லை. ஒரு வியாபாரத்தை ஒருவர் செய்து தோல்வி கண்டபோது இன்னொருவர் அதே போல செய்து வெற்றிப் பெற்றதை நாம் அறிந்திருக்க முடியும். ஒருவேளை அதில் சிறுமாறுதல்கள் இருக்கலாம் அதுவே அவரின் வெற்றிக்கான அச்சாரமாக அமைந்து விடவும் வாய்ப்பு. ஆனால் அந்தத் தொழிலை முழுமையான பொறுப்புடன் பயம் தவிர்த்து தொடர்ந்தார் என்பது தான் உண்மை.பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் இருந்து நம் கடைவீதிகளில் காய்கறி, பனியன் வியாபாரம் வரை பயம் தவிர்த்த வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.
    வாழ்க்கைப் பயண நோக்கம் எதைச் சார்ந்ததாக இருந்தால் சிறப்பாக இருக்கும் ?
    வாழ்க்கைப் பயண நோக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றாலும் பொதுவாக சிலவற்றைமையப் படுத்தி பயணத்தை வெற்றிகரமாக பயணிக்கலாம்.
    சுய மேன்மைக்கான வளர்ச்சி வணிகம் அல்லது தொழில் சார்ந்த நோக்கம், பொருளாதார சுதந்திரம், உடல் நலம் குடும்ப நலம் மற்றும் முன்னேற்றம்
    உறவுகள்
    மேற்க்கூறிய பகுதிகளை மையப்படுத்தி உங்கள் வாழ்க்கைப் பயண நோக்கம் அமைந்தால் வெற்றிப் பயணத்தை சந்தோசத்துடன் பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உச்சமாக இருக்கவேண்டியவற்றைஎழுதி ஒரு இடத்தில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது அழகாக ஃபிரேம் செய்து கடவுள் படத்தை வைத்துக்கொள்வது போல் கூட அமைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கை. தினமும் கடவுள் பிரார்த்தனை செய்வது போல் உங்கள் வாழ்க்கைப் பயண நோக்கத்தைப் படியுங்கள். உங்கள் பயணம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள அது உங்கள் வாழ்க்கைப் பயண வரை படம்.
    நண்பர்களே, இந்தப் புத்தகத்தை கையில் வைத்திருக்கும் உங்களுக்குள் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றஉந்துதல் உணர்வு இருக்கும். அந்த உணர்வோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கான வரைபடத்தை தயாரித்துக்கொண்டு தொடங்குங்கள் உங்கள் பயணத்தை! பயணம் வெற்றி பெறபாதையில் மலர் கொத்துக்களோடு என்னைப் போன்றவர்கள் உங்களை வாழ்த்த காத்திருக்கிறோம் ,வாருங்கள்!!

    தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!

    திரு. ராஜராஜன்
    அஞ்சல் தலைவர், மேற்கு மண்டலம்
    நேர்முகம் : செந்தில் நடேசன்
    அதிர்ஷ்டம் என்பது நல்ல நேரம் அல்ல.

    Continue Reading »