முதுமையா? முதிர்ச்சியா?
ஒரு இலை பழுத்து உதிர்வது முதுமையாகும் (Senescence) அதுவே, ஒரு காய் பழமாகிக் கனிந்து இனிப்பது முதிர்ச்சியாகும் (Maturity). அதுபோலவே, ஒரு மனிதன் வளர்ந்த பின் தேய்ந்து, தளர்ந்து, உதிர்வது முதுமையாகும். ஆனால், அதுவே வளர்ந்து, பண்பட்டு, அனுபவத்தில் பழுத்து இன்முகத்தில் மலர்ந்து ஞானவான் ஆவதுவே முதிர்ச்சியாகும். என் பாட்டியம்மாள் திருமதி சொர்ணாம்பாள் நடேசன் அவர்களின் வாழ்க்கையை நீங்களும் தெரிந்துகொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆக, என் பாட்டி வாழ்ந்த கதை இதோ!
என் பாட்டியின் ஆரம்ப திருமண வாழ்க்கையானது கொடுமையான வறுமையை ஒட்டியே அமைந்திருந்தது. ஒருமுறை அவர் சொல்லக் கேள்விப்பட்டது என்னவென்றால், நிறைய முறை காய்கறிகள் வாங்குவதற்கு பணமில்லாமல், வீட்டிற்கு வெளியே வளர்ந்திருக்கும் குப்பைக் கீரையை கிள்ளி வந்து துவட்டி வெந்த சாதத்தோடு கலந்து கிண்டிதான் சாப்பாடு போடுவாராம். அந்த வறுமைச் சூழலிலும் அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். அவர்கள் அனைவரும் வீட்டு சுகப்பிரசவத்திலேயே பிறந்தார்களாம். என் பாட்டியார் சர்வசாதாரணமாக இப்படிச் சொல்வார் “பிரசவத்தின் போது தலை தெரியும் குழந்தையை வெளியே இழுத்து கடாசிவிட்டு வேலைப் பொழப்பை கவனிக்கப் போய்விடுவாராம். அப்போதுதான் அடுத்த வேளைக்குச் சோறு கிடைக்குமாம். அப்புறம் பிள்ளைகள் வளர்ந்து பல தொழில்களில் சிறக்க ஆரம்பித்த போது அவர்களின் பொருளாதாரமும் முன்னேற்றம் கண்டது. ஆக, வறுமையிலும் அதிகமாகப் பிள்ளை பெற்றதன் பலனை பொருளாதார முன்னேற்றத்தில் கண்கூடாக கண்டனர்.
அப்புறம் என் பாட்டிக்கு மருமகள்கள் வந்த பின்னர் ஒவ்வொரு மருமகளோடும் சதா சண்டைகள்தான் நடக்கும். இதை நாங்கள் வளர்ந்த பின்னர் பார்க்கும்போது என் பாட்டி மீதுதான் எனக்கு கோபம் வரும். காரணம் நான் அம்மா பக்கம் இருந்தேன். ஆனால், நான் பின்னாளில் பக்குவப்பட்டு நோக்கும்போதுதான் புரிந்தது என் பாட்டியிடம் சண்டைக்கு நிற்பது பக்குவப்படாத என் அம்மாதான் என்று. அப்புறம் என் பாட்டியை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோதுதான் எனக்கு அவரின் ஆழ்ந்த அனுபவப் பக்குவமும், வாழ்க்கை ஞானமும் தெரிய ஆரம்பித்தது. ஆக, என் வாழ்க்கையின் முதல் ஞான குரு என் பாட்டிதான். அன்று அங்கு தொடங்கிய என் ஞானப் பாதைதான் இன்று பல ஞான குருமார்களின் ஞானத்தாலும் அருளாசியாலும் ஒரு ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிந்தது.
அப்புறம் விஷயத்திற்கு வருவோம். என் பாட்டியார் ஒரு முறை பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டு கோமா நிலைக்குப் போய்விட்டார். அவரின் பிள்ளைகளும் மகள்களும் அடுத்து அவரின் காரியங்களுக்கு என்ன செய்யலாம் என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள். அப்புறம் நானும் என் இரட்டையர் தம்பியும் ஊரிலிருந்து வந்து பார்த்ததும், எங்கள் ஹோமியோபதி மருத்துவரின் துணையோடு அவரை மீட்டெடுத்தோம். அப்புறம் எங்கள் பாட்டியின் முழு ஆசிர்வாதமும் எங்கள் இருவர்க்கு மட்டும்தான் கிடைத்தது. அப்புறம் அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகள் சுகமாக வாழ்ந்தார்.[hide]
அப்புறம், என் பாட்டி ஒரு ஞானிதான் என்பதை அவரின் மரண தினத்தில் தெரிந்து கொண்டேன். அன்று காலை ஒரு ஒன்பது மணிக்கு என் பாட்டியார் குளித்து முடித்து, தன் துணிகளைத் தானே துவைத்து அலசி, மாடியேறி காயவைத்துவிட்டு, நாலு இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு, தூணில் சாய்ந்து கொண்டு, சொன்ன வார்த்தைகள் “ஏண்டியம்மா! சீக்கிரம் மதியச் சமையலை முடித்து, சாப்பாட்டையும் முடிங்கடியம்மா! நான் மதியத்திற்குள் இறந்துவிடுவேன். அப்புறம் இழவு வீட்டில் சாப்பிட முடியாது” என்று எந்த ஒரு பதட்டமும் இன்றி கூறினார். வீட்டிலிருந்த எல்லோரும் “கிழவிக்கு கிறுக்கு பிடித்துவிட்டது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கடி” என்று கூறிக்கொண்டனர். ஆனால், அன்று காலை பதினோரு மணி அளவில் என் பாட்டியார் இறைவனடி சேர்ந்தார். நமக்கு வருமா இந்தப் பக்குவம்?
நாம் வாழ்வது ஒரு முறைதான்;
அப்படி வாழும் வாழ்க்கையை.
நமக்கு அடுத்து வரும் தலைமுறைகள்
அதை மறக்காதிருக்கட்டும்.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles