வாழ நினைத்தால் வாழலாம் – 4
கட்டளைகள்
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே!
“பணிதல்” பிடிக்குமா? “அடி பணிதல்” பிடிக்குமா?
ஒரு பிரபலமான Corporate நிறுவனத்தில் தொழிலாளர்களின் மேம்பாடு குறித்த எனது பயிற்சி வகுப்பில் இந்த கேள்வியை நான் கேட்டபோது – தொழிலாளர்களிடம் இருந்து மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின், முதலாளியிடம் இருந்தும் குழப்பமான பதில்களே கிடைத்தன.
பணிதலுக்கும், அடிபணிதலுக்கும் இடையில் உள்ள வியத்தகு வித்தியாசம் புரியாததால், பலரும் குழப்பமே உருவாய் குழம்பினர்.
பணிதல்:
உள்ளத்தை உணர்ந்து நமக்கு இட்டுக்கொள்ளும் இசைவு. இங்கே அதிகாரம் செய்வது உங்கள் உள் மனமும், அறிவும் தான். பணியச்சொல்வதும் உங்கள் உள் மனமும், அறிவும்தான்.
தெளிவான சிந்தனை கொண்டவன், நன்றாக புரிந்து கொள்வது பணிதலால் ஏற்படும் நன்மையே.
EGO – வை விரட்டியவனின் பண்புகளின் ஒன்று பணிதல்.
அடிபணிதல்:
அடுத்தவரின் அதிகாரம் தரும் அச்சுறுத்தல். சுய சிந்தனையை சோதித்துப் பார்க்காதவன் அவ்வப்போது செய்யும் அபத்தம். அறிவுக்கு இங்கே வேலை இல்லை. ‘கட்டளைகள்’ பணிதலுக்கும் பயன்தரும். அடிபணிதலுக்கும் பயன்தரும். கண்ணனின் கட்டளைகளுக்குப் பணிந்த பாண்டவர்கள், பின்பு தன் நிலத்தை ஆண்டவர்கள் ஆனார்கள்.
Hitler – ன் கட்டளைகளுக்கு அடிபணிந்த வீரர்கள், அவரை உலகம் மறவா நிலைக்கு உயர்த்தினார்கள்.
நன்மைகள் சரி!!
தீமைகள்??
சில தவறான அரசியல் தலைவர்களின் கட்டளைகள், சிரமேற்கொண்டு பணிந்த தொண்டர்களின் வாழ்க்கையை சிரமத்துக்குள்ளாக்கியது.
சில தீவிரவாத தலைவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்த மூடக்கூட்டம், தன் உயிரையும் குடும்பத்தையும் மட்டும் அல்ல – தன் சமூகம் மற்றும் சுற்றத்தையும் அளவிட முடியாத துன்பத்துக்கு அழைத்துச் சென்றதை காலம் மறக்குமா?
ஒரு நாள் ஒரு அரசன் தன் மகனின் வாள்வீச்சுப் பயிற்சியை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த போது, மகனின் வாள் தவறுதலாக மன்னனின் சுட்டு விரலை வெட்டியது. மன்னன் துடித்தான். ஆனால் மந்திரி, மன்னனிடம் “எல்லாம் நன்மைக்கே” என்றதும், மன்னனின் கண்களில் கோபக்கதிர்களை கக்கியது.
விளைவு!!
மந்திரியை பாதாளச் சிறையில் அடைக்கும்படி மன்னன் கட்டளையிட்டான்.
மந்திரி அதையும் “எல்லாம் நன்மைக்கே” என்று ஏற்றுக்கொண்டான்.
சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் வேட்டையாட சென்ற மன்னன் வழிதவறி பயணிக்க காட்டுவாசிகளின் கையில் சிக்கிக் கொண்டான்
மன்னனை காட்டு தேவதைக்கு காணிக்கையிட ஆதிவாசிகள் ஆசைப்பட்டனர்.
குறைவில்லா வாழ்க்கை வாழ்ந்த மன்னனின் கையில் விரல் ஒன்று குறைந்திருந்ததைக் கண்ட அவர்கள், தங்களின் தலைவனின் “கட்டளைக்கு” அடிபணிந்து மன்னரை விடுவித்தனர்.
உயிர் பிழைத்த மகிழ்ச்சி மன்னருக்கு.
“பணிந்ததால்” கொண்ட துன்பத்தையும், தங்கள் தலைவனின் கட்டளைக்கு ஆதிவாசிகள் அடிபணிந்ததால் – தான் கண்ட இன்பத்தையும் உணர்ந்தார்.
எல்லாம் நன்மைக்கே என்ற மந்திரியின் வார்த்தையின் அர்த்தத்தையும் அறிந்தார்.
மந்திரியை மன்னித்தார். விடுதலை செய்தார்.
அப்போதும் – “எல்லாம் நன்மைக்கே” – என்றான் மந்திரி.
இதுதான் பணிதலுக்கும், அடிபணிதலுக்கும் உள்ள எதார்த்த வித்தியாசம்.
“கட்டளைகள்” – காலம் கற்றுக்கொடுக்கும் கல்வெட்டுக்காவியம். “கட்டளைகள்” – துயரத்தில் இருப்போரின் துருப்புச்சீட்டு. கட்டளைகள் – துன்பமெனும் கடல் பயணத்தில் கலங்கரை விளக்கு.
“கட்டளைகள்” – விளங்காத கேள்விகளுக்கும் விடைசொல்லும் விக்கிபீடியா.
“கட்டளைகள்” – ஆனந்தமான வாழ்க்கையின் அரிச்சுவடி பாடங்கள்.
இந்த சமூகம் நமக்கு எத்தனையோ பாடங்களை எடுத்துச் சொல்கிறது. அறிந்து கொள் மனிதா என்று ஆசை காட்டுகிறது.
“இனியொரு விதி செய்வோம்” – என்ற கட்டளை, சமுதாய ஏற்றத்தை சத்தமின்றி செய்கின்றது. “சத்தியாக்கிரகம்” – என்று மகாத்மா தன் மனதில் கொண்ட கட்டளை – சுதந்திரத்தை கத்தி இன்றி இரத்தம் இன்றி கைகளில் தந்தது.
“நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது – இங்கு, பெண்ணும், ஆணும் வாழும் வாழ்க்கை இனியது” – என்று நம் பாரதத்தின் மேன்மையை பறைசாற்றுவது எனக்கும் உண்டு. தேசப்பற்று என்ற கட்டளையின் எதிரொலியே.
இதோ!! மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில கட்டளைகள்.
வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த நாலும் தெரிந்து நடந்துகிட்டா நல்லா இருக்கலாம். உன்னை கேட்டு என்னை கேட்டு எதுவும் நடக்குமா? – அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா என்பது, இறை சக்தியின் பால் பக்திக்கட்டளை”.
இப்படி எத்தனையோ விஷயங்களில் அறிவு சொல்லும் கட்டளைகள். உண்டு உங்கள் இதயம் கொள்ளும் உணர்ச்சிகளுக்க – முழுவடிவம் கொடுப்பது மூளை. அந்த மூளை முன் மொழியும் கட்டளைகளை – அறிவுப்பூர்வமாக அணுகுங்கள்.
“ஆடிய வண்ணப்பூவாய்
அளப்பரிய செல்வம் பெறுவாய்
தேடிய பொன்னும் பொருளும்
திறந்திட உழைப்பைத் தருவாய்
கூடிய சுற்றம் பின்னிய
கூட்டினை உடைத்து நீயும்
பாடிய வெற்றிப் பண் – உன்
பரிசாக கட்டளை இட்டேன்” – என்ற என் கட்டளையும் துணை நிற்கும்.
கட்டளைகளுக்குபணியுங்கள்”!! “அடிபணியுங்கள்”!!
சிறப்பான உங்கள் வாழ்க்கை சிகரத்தில் சீக்கிரத்தில்
“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”
“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”.
0 comments Posted in Articles