– 2017 – April | தன்னம்பிக்கை

Home » 2017 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாழ நினைத்தால் வாழலாம் – 4

    கட்டளைகள்

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே!

    “பணிதல்” பிடிக்குமா? “அடி பணிதல்” பிடிக்குமா?

    ஒரு பிரபலமான Corporate நிறுவனத்தில் தொழிலாளர்களின் மேம்பாடு குறித்த  எனது பயிற்சி வகுப்பில் இந்த கேள்வியை நான் கேட்டபோது  – தொழிலாளர்களிடம் இருந்து மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின், முதலாளியிடம் இருந்தும் குழப்பமான பதில்களே கிடைத்தன.

    பணிதலுக்கும், அடிபணிதலுக்கும் இடையில் உள்ள வியத்தகு வித்தியாசம் புரியாததால், பலரும் குழப்பமே உருவாய் குழம்பினர்.

    பணிதல்:

    உள்ளத்தை உணர்ந்து நமக்கு இட்டுக்கொள்ளும் இசைவு. இங்கே அதிகாரம் செய்வது உங்கள் உள் மனமும், அறிவும் தான். பணியச்சொல்வதும் உங்கள் உள் மனமும், அறிவும்தான்.

    தெளிவான சிந்தனை கொண்டவன், நன்றாக புரிந்து கொள்வது பணிதலால் ஏற்படும் நன்மையே.

    EGO – வை விரட்டியவனின் பண்புகளின் ஒன்று பணிதல்.

    அடிபணிதல்:

    அடுத்தவரின் அதிகாரம் தரும் அச்சுறுத்தல். சுய சிந்தனையை சோதித்துப் பார்க்காதவன் அவ்வப்போது செய்யும் அபத்தம். அறிவுக்கு இங்கே வேலை இல்லை. ‘கட்டளைகள்’ பணிதலுக்கும் பயன்தரும். அடிபணிதலுக்கும் பயன்தரும். கண்ணனின் கட்டளைகளுக்குப் பணிந்த பாண்டவர்கள், பின்பு தன் நிலத்தை ஆண்டவர்கள் ஆனார்கள்.

    Hitler – ன் கட்டளைகளுக்கு அடிபணிந்த வீரர்கள், அவரை உலகம் மறவா நிலைக்கு உயர்த்தினார்கள்.

    நன்மைகள் சரி!!

    தீமைகள்??

    சில தவறான அரசியல் தலைவர்களின் கட்டளைகள், சிரமேற்கொண்டு பணிந்த தொண்டர்களின் வாழ்க்கையை சிரமத்துக்குள்ளாக்கியது.

    சில தீவிரவாத தலைவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்த மூடக்கூட்டம், தன் உயிரையும் குடும்பத்தையும் மட்டும் அல்ல – தன் சமூகம் மற்றும் சுற்றத்தையும் அளவிட முடியாத துன்பத்துக்கு அழைத்துச் சென்றதை காலம் மறக்குமா?

    ஒரு நாள் ஒரு அரசன் தன்  மகனின் வாள்வீச்சுப் பயிற்சியை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த போது, மகனின் வாள் தவறுதலாக மன்னனின் சுட்டு விரலை வெட்டியது. மன்னன் துடித்தான். ஆனால் மந்திரி, மன்னனிடம் “எல்லாம் நன்மைக்கே” என்றதும், மன்னனின் கண்களில் கோபக்கதிர்களை கக்கியது.

    விளைவு!!

    மந்திரியை பாதாளச் சிறையில் அடைக்கும்படி மன்னன் கட்டளையிட்டான்.

    மந்திரி அதையும் “எல்லாம் நன்மைக்கே” என்று ஏற்றுக்கொண்டான்.

    சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் வேட்டையாட சென்ற  மன்னன்  வழிதவறி பயணிக்க காட்டுவாசிகளின் கையில் சிக்கிக் கொண்டான்

    மன்னனை காட்டு தேவதைக்கு காணிக்கையிட ஆதிவாசிகள் ஆசைப்பட்டனர்.

    குறைவில்லா வாழ்க்கை வாழ்ந்த மன்னனின் கையில் விரல் ஒன்று குறைந்திருந்ததைக் கண்ட அவர்கள், தங்களின் தலைவனின் “கட்டளைக்கு” அடிபணிந்து மன்னரை விடுவித்தனர்.

    உயிர் பிழைத்த மகிழ்ச்சி மன்னருக்கு.

    “பணிந்ததால்” கொண்ட துன்பத்தையும், தங்கள் தலைவனின் கட்டளைக்கு ஆதிவாசிகள் அடிபணிந்ததால் – தான் கண்ட இன்பத்தையும் உணர்ந்தார்.

    எல்லாம் நன்மைக்கே என்ற மந்திரியின் வார்த்தையின் அர்த்தத்தையும் அறிந்தார்.

    மந்திரியை மன்னித்தார். விடுதலை செய்தார்.

    அப்போதும் – “எல்லாம் நன்மைக்கே” – என்றான் மந்திரி.

    இதுதான் பணிதலுக்கும், அடிபணிதலுக்கும் உள்ள எதார்த்த வித்தியாசம்.

    “கட்டளைகள்” – காலம் கற்றுக்கொடுக்கும் கல்வெட்டுக்காவியம். “கட்டளைகள்” – துயரத்தில் இருப்போரின் துருப்புச்சீட்டு. கட்டளைகள் – துன்பமெனும் கடல் பயணத்தில் கலங்கரை விளக்கு.

    “கட்டளைகள்” – விளங்காத கேள்விகளுக்கும் விடைசொல்லும் விக்கிபீடியா.

    “கட்டளைகள்” – ஆனந்தமான வாழ்க்கையின் அரிச்சுவடி பாடங்கள்.

    இந்த சமூகம் நமக்கு எத்தனையோ பாடங்களை எடுத்துச் சொல்கிறது. அறிந்து கொள் மனிதா என்று ஆசை காட்டுகிறது.

    “இனியொரு விதி செய்வோம்” – என்ற கட்டளை, சமுதாய ஏற்றத்தை சத்தமின்றி செய்கின்றது. “சத்தியாக்கிரகம்” – என்று மகாத்மா தன் மனதில் கொண்ட கட்டளை – சுதந்திரத்தை கத்தி இன்றி இரத்தம் இன்றி கைகளில் தந்தது.

    “நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது – இங்கு, பெண்ணும், ஆணும் வாழும் வாழ்க்கை இனியது” – என்று நம் பாரதத்தின் மேன்மையை பறைசாற்றுவது எனக்கும் உண்டு. தேசப்பற்று என்ற கட்டளையின் எதிரொலியே.

    இதோ!! மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில கட்டளைகள்.

    வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த நாலும் தெரிந்து நடந்துகிட்டா நல்லா இருக்கலாம். உன்னை கேட்டு என்னை கேட்டு எதுவும் நடக்குமா? – அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா என்பது, இறை சக்தியின் பால் பக்திக்கட்டளை”.

    இப்படி எத்தனையோ விஷயங்களில் அறிவு சொல்லும் கட்டளைகள். உண்டு உங்கள் இதயம் கொள்ளும் உணர்ச்சிகளுக்க – முழுவடிவம் கொடுப்பது மூளை. அந்த மூளை முன் மொழியும் கட்டளைகளை – அறிவுப்பூர்வமாக அணுகுங்கள்.

    “ஆடிய வண்ணப்பூவாய்

    அளப்பரிய செல்வம் பெறுவாய்

    தேடிய பொன்னும் பொருளும்

    திறந்திட உழைப்பைத் தருவாய்

    கூடிய சுற்றம் பின்னிய

    கூட்டினை உடைத்து நீயும்

    பாடிய வெற்றிப் பண் – உன்

    பரிசாக கட்டளை இட்டேன்” – என்ற என் கட்டளையும் துணை நிற்கும்.

    கட்டளைகளுக்குபணியுங்கள்”!! “அடிபணியுங்கள்”!!

    சிறப்பான உங்கள் வாழ்க்கை சிகரத்தில் சீக்கிரத்தில்

    “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

    “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”.

    ராஜா வீட்டுத் திருமணம்

    கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் டாக்டர். பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் என்றும் என் நெஞ்சில் நிறைந்த, பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரிய, என் இதயங்கவர்ந்த இனிய நண்பர் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

    உயர்ந்த குணங்களினுடைய ஒட்டு மொத்த சாரம், கனிகளை மட்டுமே கொடுக்கத் தெரிந்த கற்பக விருட்சம், நட்புக்கு இலக்கணம் வகுத்த நறுமணத் தென்றல், ஆன்மீகம் கலந்த ஒழுக்கம் அவருடைய ஆன்மாவின் பலம், கேட்பவர்களை மயங்க வைக்கும் மிகச்சிறந்த பேச்சாளர், வாழும் விவேகானந்தர் என்று போற்றப்படும் நன்னெறியாளர், காந்தியத்தின் வழியில் உண்மையையும், நேர்மையையும், இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்து வரும் உன்னத பண்பாளர், இவர் பேச்சில் எப்போதும் ஒரு மந்திர அலை இருந்து கொண்டே இருக்கும், சந்தன சிற்பமாக மாற்றவும் இவருக்குத் தெரிகிறது.

    இந்த இளைய சமுதாயம் ஏற்றம் காண வேண்டும் என்கின்ற ஒரு கொள்கைப்பிடிப்பும், இந்தியா ஒரு வல்லரசு ஆக வேண்டும் என்ற முனைப்பும்,  அதற்கு விவேகானந்தர் காட்டுகிற வழிதான் சரியானது என்ற திடமான நம்பிக்கையும் அவரை சராசரி சாதாரண மனிதர்களில் இருந்து வேறுபடுத்தி, உயர்த்திக் காட்டி ஒரு சாதனை மனிதாராக, தலைசிறந்த சிந்தனையாளராக, உதாரண புருஷராக மாற்றியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

    அவர் வாழும் காலத்திலே வாழ்ந்து, அவரை நண்பராகக் கொண்டிருக்கிறோம் என்ற பெருமைதான் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்களின் திருமகனின் திருமண விழா மற்றும் நல்ல நிகழ்வுகள் எல்லாவற்றிலும் நான் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பினைப் பெற்றேன்.

    திருமிகு. வாணவராயர் அவர்கள் எதைச் செய்தாலும், எப்போது செய்தாலும் அதில் ஒரு நேர்த்தியும், ஒரு அழகும், மற்றவர்கள் மனதை இழுக்கும் ஒரு காந்த ஈர்ப்பும் என்றும் இருக்கும்.

    விழாக்கள் நடத்துவதிலே ஒரு இணையில்லாத செம்மையும் (Excellence), எள் முனையளவும் மாறாத பரிபூர்ணத்தையும் (Perfection) எதிர் பார்க்கிற அவர், தன்னுடைய ஒரே மகனின் திருமணத்தை எப்படி நேர்த்தியோடும், அழகோடும், கலைநயத்தோடும், பிரமிப்போடும், பிரம்மாண்டமாகவும், செய்திருப்பார் என்பதை ஒரு நொடி நினைத்துப் பார்த்தால் அதன் சிறப்பம்சம் தெரியும். மிகச் சரியான திட்டமிடலும், மேலான நிர்வாகமும் அவருக்குக் கைவந்த கலை.

    “இதனை, இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

    அதனை அவன்கண் விடல்”

     என்ற குறளுக்கு ஏற்ப எந்தெந்தப் பணிகளை யார் யாருக்குத் தர வேண்டும் என்று ஆய்ந்து, அதன்படி பொறுப்புகளை அளித்து உன்னதமாக திருமண விழாவை நடத்திக் காட்டினார்கள்.

    மணமகனோ பத்மபூஷன் அருட்செல்வர் அய்யா அவர்களுடைய மகள் திருமதி. கருணாம்பிகைத்தாய், திருமிகு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்களின் புதல்வன் திருவளர்ச் செல்வன் திரு. சங்கர் வாணவராயர். மணமகளோ, அருட்செல்வர் அவர்களின் தவப்புதல்வர்களில் ஒருவரான பெருமைக்குரிய அடக்கத்தின், சின்னமான அமைதியின் மறு உருவமான திரு. என். பாலசுப்பிரமணியம், திருமதி. வினோதினி அவர்களின் புதல்வி திருவளர் செல்வி சம்யுக்தா, கேட்கவா வேண்டும் அந்த வைபவத்தின் மேன்மையை.

    அந்த திருமண விழாவில் கலந்து கொண்ட எல்லோர் மனதிலும் ஏற்பட்ட அதிர்வினைப் போல, என் மனதிலும் ஒரு ஈர்ப்புக் கலந்த விவரிக்க இயலாத ஒரு வியப்பு அரும்பியது.

    திருமணம் முடிந்து 10 நாட்கள் கழித்து, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்தத் திருமண நிகழ்வின் சிறப்புக்களை சொல்லி மகிழ்ந்தேன். ‘இதைப்பற்றி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதப் போகிறேன்’ என்றும் சொன்னேன். வேலைப்பளு காரணமாக அக்கடிதம் எழுதுவது பற்றி நான் மறந்து விட்டேன். அடுத்த சந்திப்பின் போது அவர் கடிதம் எழுதுகிறேன் என்று சொன்னீர்களே ஏன் எழுதவில்லை? என்று கேட்டார்கள். உடனடியாக என் மனதில் கருவானதை எழுத்துக்களாக வடித்து மனம் திறந்த கடிதம் ஒன்றினை அவருக்கு அனுப்பி வைத்தேன்.

    அந்தக்கடிதம் அவர் மனதிலே ஒரு மகிழ்ச்சி அலையை தோற்றுவித்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அதனால்தான் அந்தக் கடிதத்தை 100க்கும் மேற்பட்ட நகல்கள் எடுத்து தன் இனிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து மகிழ்ந்தார்கள். சக்தி மாத இதழில் அந்தக் கடிதத்தை வெளியிட்டு இருந்தார்கள்.

    அந்தக் கடிதத்தை படித்த பலர் என்னிடம் அவ்வளவு தத்ரூபமாக நாங்கள் நேரில் பார்ப்பதைப் போல ஒரு நிழல் படம் போல, அது உள்ளது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.

    குறிப்பாக கே.ஜி. மருத்துவமனையினுடைய தலைவர் டாக்டர் கே. ஜி. பக்தவச்சலம் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு, அந்தக் கடிதத்தை எப்படி எழுதினீர்கள் என ஆச்சரியத்தோடு பாராட்டினார்கள். இதோ, அந்த திறந்த கடிதத்தின் வரிகள். காலத்தின் பதிவிற்காகவும் உங்களின் பார்வைக்காகவும்.

    பணிவான வணக்கங்கள்.

    தங்கள் இல்லத் திருமணம்

    ஒரு தெய்வீகமான திருக்கல்யாண வைபவம்,

    பழமையின் தழுவலும்,

    பாரம்பரியத்தின் சாயலும்

    புதுமையின் நளினமும்

    கலை நுணுக்கத்தின் அழகும்,

    சரிவிகிதத்தில் இணைந்து கலந்த

    உன்னதமான மகா உற்சவம்.

    இதில் எது அதிகம், எது குறைவு,

    என்று எந்த நிபுணராலும் சொல்லிவிட இயலாது,

    அரங்கில் நுழைந்த ஒவ்வொரு நொடியும்,

    சுகமான நினைவுகள்,

    சுவையான அனுபவங்கள்,

    மலரும் மகரந்த நினைவுகள்,

    மனம் நிறைந்த நேர்த்தியான காட்சிகள்

    எங்கு நோக்கினும் வியப்பின்,

    எல்லை தொட்ட நெஞ்சங்கள்

    … அருமையிலும் அருமை.

    அரங்கின் முகப்புத் தொடங்கி,

    நுழைவுவாயில் வரை சிவப்புக் கம்பள விரிப்பு,

    அருட் செல்வர் அமர்ந்திருக்க, அன்னை அருகிருக்க

    அருந் தவப்புதல்வர்களும், சுற்றமும், நட்பும் சூழ நிற்க,

    வானத்தைப் போல மனம் படைத்த  மன்னவர் வாணவராயர்

    கருணாம்பிகை தாயோடு,

    ராஜ கம்பீரப் பொலிவுடன் சிரிக்க,

    அன்றலர்ந்த தாமரைப் பூப்போல,

    முகம் மலர்ந்த வரவேற்பு,

    நின்றவர்கள் வந்தவர்கள் என

    ஒவ்வொருவர்,

    முகத்திலும் அளவு கடந்த பூரிப்பு,

    சுற்றங்கள் மற்றும் நட்புகள் நெஞ்சினிலே,

    ஓர் ஆனந்தக் களிப்பு

    … அதிசயத்திலும் அதிசயம்!

    பொதுவாகத் திருமணங்கள் என்றாலே,

    குழந்தைகளின் ஆராவாரம்,

    பட்டுப்புடவைகளின் பரவசமான விமர்சனங்கள்,

    தங்கத்திற்கும், வைரத்திற்கும்,

    பட்டிமன்றம்,

    ஆனந்தங்களின் கோலாகலம்,

    அரட்டைகளின் உச்சக்கட்டம்,

    கும்பல் கும்பலாக குசல விசாரிப்புகள்,

    சப்தங்களின் யுத்த அரங்கேற்றம்,

    இவைகள் நடப்பது இயல்பு.

    … ஆனால், இங்கே மேலே சொன்னது ஏதும் இல்லை!

    இங்கோ, அரங்கினுள் அப்படி ஓர் ஆழ்நிலை அமைதி,

    அசர வைக்கும் அலங்கார ஓவியங்கள்,

    ஆச்சரியப்பட வைக்கும் ஓர் ஒழுங்கு,

    பிரமிக்க வைக்கும் ஓர் தெய்வீக அம்சம்,

    இந்திர லோகம் போன்ற,

    கலை நுணுக்க அமைப்பு

    அரண்மனையின் திருக்கதவு போன்ற

    மேடையின் பின் அலங்காரம்,

    அந்த திருக்கதவு முன்பு,

    மணப்பெண்ணின் சீர்க் கோலம்,

    மங்களகரமான முன்மாலை விழாக்கோலம்

    பாரம்பரியம் விட்டுப்போகாமல்,

    கலாச்சாரம் தொட்டுப் பேசும்,

    கலை நேர்த்தியோடு பழமையும் புதுமையும்,

    கை கோர்த்து நர்த்தனமாடும் – வர்ண வியப்புகள்,

    இத்தோடு இசை என்னும் இன்ப ஊற்று,

    தேனினும் இனிய தேவ கானமாய்

    …. ஆனந்தத்திலும் ஆனந்தம்!

    மறுநாள் அதிகாலைப் பொழுது

    இம்மியளவும் மாறாத அதே இனிமையான,

    இதயம் வருடும் இதமான வரவேற்பு.

    திருக்கோயில் மண்டப வடிவில்,

    மேடையின் அமைப்பு,

    சிற்ப எழிலோடு திருக்கல் வடிவத்தூண்கள்,

    மயன் அமைத்த மணமேடை,

    அழகான ஆயிரம் தாமரை மொட்டுகள் மலர்ந்தது போல,

    தெய்வீக ஸ்ரீ சக்கர அலங்காரம்,

    தாமரை மலர் மீதமர்ந்த வெங்கடாச்சல பெருமாள் வடிவில்,

    திருவளர்ச் செல்வன் சங்கர் வாணவராயர்,

    திருமகள் பத்மாவதி தாயார் வடிவில்,

    திருவளர்ச் செல்வி சம்யுக்தா.

     … அம்சத்திலும் அம்சம் தெய்வீக அம்சம்!

    ஒரு புறம் வேத முழக்கம்,

    மறுபுறம் தேவார இன்னிசை,

    இடையே புனித மேடையில் தமிழ்மறை ஓத,

    அருட் செல்வர் தம்பதியர் திருமாங்கல்யம்,

    எடுத்துத் தர தேவர்கள் பூச்சொரிய,

    மகான்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள்,

    சுற்றங்கள், நட்புகள், அட்சதை வாழ்த்து தோரணங்கள்,

    ஆசிகளுடன் மாங்கல்ய தாரணம்,

    மங்கள நிகழ்வுகள் மகிழ்வாய் நிறைந்தன.

    புனிதம் அங்கே பூக்களாய் மலர்ந்தன.

    புண்ணியம் அங்கே புனல்களாய் வழிந்தன.

    … அற்புதத்திலும் அற்புதம்!

    அறுசுவை விருந்து,

    நேர்த்தியான வழி நடத்தல்,

    நெருக்கமும், நெருடலும் இல்லாத பந்தி அமைப்பு,

    மேலான மேற்பார்வை,

    ஈடு சொல்ல முடியாத நிர்வாகம்,

    கேட்டுக் கேட்டு, பார்த்து பார்த்து பரிமாறிய விதம்,

    ரசித்து ரசித்து உண்ட அழகு,

    உண்மையிலேயே இது ஒரு கனகசபை திருவிருந்து.

    … ஒரே வரியில் – அபாரம்! பேஷ்! பேஷ்!

    வரவேற்பு விழா மங்களம்,

    நல்ல நேர்த்தியான கட்டுப்பாடான கூட்டம்

    திருமதி அருணா சாய்ராமின் இன்னிசை நிகழ்ச்சி

    “குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடல்

    திருக்கல்யாண வைபோகத்தில் குறை ஒன்றும் இல்லை

    எனச் சொல்லாமல், சொல்லி மகிழ்ந்தது போல இருந்தது.

    … இனிமையிலும் இனிமை!

    இதைப் போன்ற விழா இதுவரை நடந்ததுமில்லை.

    இனி நடக்கப்போவதும் இல்லை.

    ஓ!என்ன அழகு!

    என்ன அதிசயம்!

    இப்படியும் ஒரு திருமண வைபவமா?

    எப்படி சாத்தியமாயிற்று?

    இது ஒருவரால் மட்டுமே முடியும்.

    எதைத் தொட்டாலும் தனித்துவம்

    அதை செய்து காட்டுவதில் தனி மகத்துவம்

    தடம் பார்த்து நடந்தால் மனிதன்

    தடம் பதித்து நடந்தால் மாமனிதன்

    சிலர் வரலாறு படிப்பார்கள்

    சிலர் வரலாறு படைப்பார்கள்.

    … இங்கே தடம் பதித்த மாமனிதர்களையும், வரலாறு படைத்தவர்களையும், மனம் குளிர வாழ்த்தி மகிழ்கிறேன்.

    நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 3)

    டி.என்.ஏ. (DNA) வின் வடிவமைப்பை (Structure) கண்டுபிடித்த பிறகுதான் உயிரினத்தின் ஆரோக்கியம் மற்றும் நோய்கள் பற்றிய பல்வேறு சிக்கலான முடிச்சுகள் அவிழ்க்கப்பட ஆரம்பித்தன புதுமையான வினை காரணிகள் (Reagents) மற்றும் கருவிகள் கொண்டு மனித மரபாகராதி திட்டம் (Human Genome Project) 1990ம் ஆண்டில் உலக நாடுகளின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டது.

    ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2001ம் ஆண்டு முதல் மனித வரைவு மரபாகராதி (First Draft Genome) சம்பந்தமான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. பிறகு 2003ம் ஆண்டில் இத்திட்டம் முடிவு பெற்றது. இத்திட்டத்தின் செயல்பாட்டில் மிகப்பெரும் தடையாக இருந்தது, குறைந்த செயல் வீதம் (Low Throughput) மற்றும் மிக அதிக பண மதிப்பு கொண்ட டி.என்.ஏ., வரிசைமுறை இயந்திரம் (Sequencing Machine) இத்திட்டத்தின் முடிவே நவீன (Modern) டி.என்.ஏ., வரிசை முறைப்படுத்தும் (DNA Squencing) சகாப்தம் உருவாகுவதற்கான தொடக்கமாக அமைந்தது. ஆம், கடந்த 10 ஆண்டுகளில் டி.என்.ஏ, வை வரிசை முறைப்படுத்துவதில் பல்வேறு பரிமாண முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவைகளைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.

    1977ம் ஆண்டு சாங்கேர் (Sanger) என்பவர் டி.என்.ஏ., வரிசை முறையை (DNA Squencing) உருவாக்கும் வேதியியல் (Sequencing Chemistry) முறையை கண்டறிந்தார். பின் இந்த முறையை உபயோகித்து தனிச்சையாக டி.என்.ஏ., வரிசை முறைப்படுத்தும் இயந்திரம் (Automated Squencing Machine) உருவாக்கப்பட்டது. இதுவே முதலாம் தலைமுறை வரிசையாக்கம் (First Generation Sequencing) என அழைக்கப்படுகிறது. இது உயிரியல் ஆராய்ச்சியில் மிக முக்கிய புரட்சியை உண்டாக்கியது என்றே கூற வேண்டும். ஏனென்றால், இந்த வரிசைப்படுத்தும் இயந்திரத்தைக் கொண்டுதான் மனித மரபாகராதி (Human Genome Sequence) உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த தொழில் நுட்பத்தில் அதிக அளவில் பணச்செலவும், மனிதனின் உழைப்பும் (Laborious) தேவைப்பட்டது. ஆதலால், பெரும்பாலான ஆய்வகங்களால் இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, முடியாத ஒன்றானது.

    2005ம் ஆண்டில், இரண்டாம் அல்லது அடுத்த தலைமுறை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பம்  (Next Generation Sequencing Technology) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தின் வருகையால், அடிப்படை, பயன்சார் மற்றும் மருத்துவ துறை சார்ந்த அறிவியல் அணுகுமுறையில் பல்வேறு மாற்றம் உருவாகியது. இத்தொழில் நுட்பத்தால் டி.என்.ஏ., மற்றும் ஆர்.என்.ஏ., சம்பந்தமான தரவுகளை, மிக அதிகளவில் மிக குறைந்த செலவில் பெற்றுக் கொள்ள முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளில்  மரபுத்தொழில்நுட்பத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சியால் தான், இந்த மரபுத்தொகையியல், அசைக்க முடியாத பெருந்துறையாக இன்று உருவெடுத்துள்ளது.

    முதலில், டி.என்.ஏ., எவ்வாறு வரிசைப்படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம். இந்த தொழில்நுட்பத்தில் பின்பற்றப்படும் நெறிமுறை என்னவென்றால், முதலில் செல்லின் உயிரணுக் கருவில் இருக்கும் டி.என்.ஏ., வானது முழுமையாக (Complete DNA) பிரித்து எடுக்கப்படுகிறது. பின் இந்த டி.என்.ஏ., சிறு, சிறு துண்டுகளாக (Fragments) வெட்டப்படுகிறது. பின் துண்டாக்கப்பட்ட டி.என்.ஏ.,கள் வரிசைப்படுத்தும் இயந்திரத்தினுள் (Sequencing Machines) செலுத்தப்படுகிறது.

    இயந்திரத்தினுள், ஒவ்வொரு துண்டுகளும் பன்மடங்காக பெருக்கப்பட்டு (Library Construction) அவைகள் டி.என்.ஏ., துண்டு தரவுகளாக (Sequencing read of A,T,G,C bases Corresponding to the Fragment DNA) பெறப்படுகிறது. இறுதியில், இந்த துண்டு தரவுகள் கணிப்பொறி மென்பொருட்களால் (Softwares) முறையாக வரிசைப்படுத்தப்பட்டு, துண்டாக்கப்பட்ட டி.என்.ஏ., வானது முழு நீள அளவில் மறுபடியும் திரும்ப கட்டப்படுகிறது (Reconstructed/ assembled). இவ்வாறே, உயிரினங்களில் மிக நுண்ணிய அளவில் இருக்கும் டி.என்.ஏ., தரவுகளை நாம் மிக சீரிய முறையில் பெற்று பல்வேறு ஆராய்ச்சிகளை எளிதில் செய்ய முடிகிறது. மேற்கூறிய முறையில்தான், ஆர்.என்.ஏ () மூலக்கூறு எடுக்கப்பட்டு இவ்வாறே வரிசைப்படுத்தப்படுகிறது.

    இவ்வாறான வரிசைப்படுத்தும் இயந்திரத்தை உருவாக்கும பணியை சில நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவைகள், 454 லைப் சயின்ஸ் (Roche 454 life technologies), இல்லுமினா (Illumina), லைப் டெக்னாலஜிஸ் (Solid Life Technologies), பயோ சயின்ஸ் (Helicos Biosciences), மற்றும் பயோ பிரோசயின்சஸ் (Pacific Biosciences) ஆகும். இந்த நிறுவனங்களின் இயந்திரங்கள் பெரும்பாலும், விலை (Cost) செயல் வீதம் (High Thorughput) துண்டாக்கப்பட்ட டி.என்.ஏ.,களை வரிசைப்படுத்தும் வேதிவினை (Sequence Chemistry), டி.என்.ஏ., துண்டு தரவு அளவு (Sequence read size) மற்றும் கால அளவு (time) போன்ற செயல் முறைகளில் வேறுபடுகின்றன.

    இவைகளில், இல்லுமினா (Illumina) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள வரிசைப்படுத்தும் இயந்திரங்களே பெரும்பாலான அறிவியலாளர்களால் விரும்பப்படுகிறது. இதற்கு காரணம், விரைவு, உயரிய செல் வீதம் மற்றும் இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கான எண்ணற்ற மென்பொருட்கள் (Softwares) இருப்பதே. தற்போதைய நிலவரப்படி, எண்ணற்ற முன்னேற்றங்கள் இந்த வரிசைமுறைப்படுத்தும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக கூற வேண்டுமானால் ஒரே நாளில் கிட்ட தட்ட 48 மனிதனின் டி.என்.ஏ., வை முழுமையாக வெறும் 100 டாலர் மதிப்பில் வரிசை முறைப் (Sequencing) படுத்த முடியும். இது காலப்போக்கில் மேலும் குறைந்த செலவில் மிக அதிக அளவு மனிதர்களின் டி.என்.ஏ., வரிசை முறையை உருவாக்கும் என்பது உறுதி. ஏனென்றால், அதற்கான முயற்சிகள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிகள் மரபுத்தொகையியலின் கீழ் தாவர மற்றும் மனித மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ராக்கெட் என்று சொன்னால் அது மிகையல்ல. அடுத்த இதழில் இவ்வகையான தொழில்நுட்பம் தாவர இனப்பெருக்கவியலில் (Plant Breeding) ஏற்படுத்திய ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைக் காணலாம்.

    ராசியான வாழ்க்கைக்கு எட்டு

    ‘வாழுங்கள் அல்லது வாழ்வதற்கு வழிவிடுங்கள்’ எத்தனை அர்த்தமுள்ள வரிகள்! இவ்வரிகளுக்கும் தற்போதைய வாழ்க்கை நடைமுறைக்கும் ஒரு சமரசம் உண்டு. அதாவது, நாம் வாழ வேண்டும் அல்லது பிறரையாவது வாழ வைக்க வேண்டும். ஆனால், இன்றைய மனித நாகரிகமானது முதலாவது கோட்பாட்டினை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இரண்டாம் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்வதில்லை. அதனை மாற்றும் பொருட்டு, தற்போது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், இயற்கை மருத்துவமானது எங்கும் எவரிடத்திலும் ஆட்கொண்டு அரங்கேறி வருகிறது என்பதற்கு காலமே சாட்சி.

    அவ்வழித்தோன்றல் மூலம் உருவானது தான் எட்டுவடிவ நடைப்பயிற்சி அமெரிக்காவில் எட்டுவடிவ நடைப்பயிற்சியை Infinity Walk எனக் கூறுகிறார்கள். எட்டு என்ற எண் படுத்த வடிவில்Infinity என்பதைக் குறிக்கும். இதற்கு இப்பெயரை அளித்தவர் டாக். டெபோரா சன்பெக் என்னும் ஒரு பெண் மருத்துவர். நியூயார்க் நகரில் (NORTH EAST CENTRE FOR SPECIAL CARE) என்ற மருத்துவமனையில் உள்ள மூளைபாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் மூலம் மாற்றம் கண்ட டெபோரா அவர்கள் அதற்கென்று வழிமுறைகளையும் வகைப்படுத்தியுள்ளார்.

    அவைகள்

    • சாக்பீஸ் எடுத்து முதலில் தரையில் கிழக்கு மேற்காக எட்டு வரையவும்.
    • தெற்கிலிருந்தோ வடக்கிலிருந்தோ தொடங்கி, கிழக்கு மேற்காக வரையப்பட்ட வடிவத்தின் மீது மெதுவாக நடக்கவேண்டும்.
    • தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்.
    • கண்களை மூடக்கூடாது.
    • 15 நிமிடத்திற்குப் பிறகு இடைவெளி விட வேண்டும்.
    • சரியான காலணி அணிய வேண்டும்.
    • கைகளில் எதையும் வைத்திருக்கக் கூடாது.
    • மூட்டுவலி உள்ளவர்கள் அரைமணிநேரமும், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முக்கால் மணி நேரமும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு மணி நேரமும் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    பயிற்சியின் நன்மைகள்

    • எட்டுவடிவில் நடப்பதால் மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை சக்தி பெறுகிறது.
    • பேச்சை இழந்து வாய் குழறுபவர்கள் கூட இப்பயிற்சியின் மூலம் குணம் அடையலாம்.
    • இந்த நடைப்பயிற்சியில் பிராணவாயு அதிக அளவில் உள்ளிழுக்கப்படுவதால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பயன் அடையலாம்.
    • சைனஸ், தலைவலித் தொல்லைகள் நீங்கும், கண்பார்வை தெளிவடையும், காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
    • மார்பில் சளி நீங்கும், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, உயர் அழுத்தம் குறையும், கணையம் பயிற்சிடைந்து இன்சுலின் சுரப்பதால் சர்க்கரை நோய் குறையும். மேலும் உடலிலுள்ள ஊளைச் சதை குறையும்.
    • சிறுநீரகம் நன்றாக இயங்கும். மலச்சிக்கல் தீரும், குடலிறக்கம் இருந்தால் சீராகும்.

    இப்படி எத்தனையோ நன்மைகள் இதற்கு உண்டு. இந்தியாவில் சித்தர்கள்  காலத்தில் தொடக்கப்பட்ட இப்பயிற்சி. சீனா நாட்டில் தெய்வீகமான நடையாகக் கருதப்படுகிறது.. எட்டு வடிவில் நடக்கும் போது, தீய சக்தி வெளியேறி நல்ல சக்தி உள்ளே புகுவதாகக் கருதப்படுகிறது. மேலும் அந்த நல்ல சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள, இந்த நடைப்பயிற்சி செய்து முடித்ததும், எட்டு வடிவின் நடுவே அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். இதனின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதனை அறிமுகப்படுத்தியது நமது தமிழினம் தான்.

    இது போலத் தான் நம்மிடம் உள்ளத் தோப்புக்கரணத்தையும் சீனாக்காரன் மிகப்பெரிய யோகக் கலையாகக் கருதி பள்ளி மாணவர்களுக்குப் போதிக்கிறான். ஆனால், நாமோ அதை மறந்து ஞாபகசக்திக்கு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே நமது பாரம்பரியம் மகத்தானது. அதனை கட்டிக்காப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.

    தொப்புள் கொடி!

    இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையம் உத்திரபிரதேசத்தில் பரேய்லி நகரத்தில் உள்ள இஸாட் நகர் என்னும் இடத்தில் இருக்கின்றது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு பிறகு தான் படித்த இடத்தை மீண்டும் சென்று பார்ப்பது என்பது மிக நெகிழ்ச்சியான விஷயம். அது மனதிற்கு புதுமையான அனுபவத்தை தருகின்றது. உத்திர பிரதேச மாநிலம் நானூற்றி மூன்று சட்டமன்றத் தொகுதிகளை கொண்டு (தமிழ்நாடு 234) கிட்டத்தட்ட தமிழ்நாட்டை காட்டிலும் இருமடங்கு பெரிய அளவில் அமைந்திருக்கின்றது. சாலைகள் நீளமாக சென்று கொண்டே இருப்பது போல தோன்ற வைக்கின்றன. இலக்னோவில் இருந்து சீதாபூர் வழியாக பரேய்லி சென்றடைய எட்டு மணி நேரம் ஆனது . . . வாகனத்தை எண்பது கி.மீ.க்கு மேல் அனுமதித்த சாலைப்பகுதி அவ்வப்போது வந்து போனது. அதைத் தவிர போக்குவரத்து நெரிசலும் சாலை பணிகளும் மீத வேகத்தடையாக செயல்பட்டன. ஐ.வி.ஆர்.ஐ க்கு செல்வது ஏன் இவ்வளவு மகிழ்ச்சி தரவேண்டும்? அதை ஏன் தொப்புள்கொடி என்ற தலைப்பில் கட்டுரையாக எழுத வேண்டும்?

    பயணம் முடிந்த பல நாட்கள் ஆகியும் . . . படித்து முடித்தோ? வருடக் கணக்கில் ஆகியும் . . . ஏன் அந்த நினைவுகளைப் போல இந்த நினைவுகளும் எழுத்து வடிவம் பெற நம்மை தூண்ட வேண்டும்? என்ற மூன்று கேள்விகளுக்கும் உளவியல் ரீதியாக ஒரே காரணத்தை சொல்லி விடுவது இந்த பயண கட்டுரை ஏன் பிறந்தது என்று சொல்லவும் உதவும்.

    நம்மை வளர்த்தெடுத்து, உரமூட்டி, உற்சாகப்படுத்தி, பாதுகாத்து, வசதியாக வைத்திருந்து, அன்பு காட்டி அரவடைத்து, பாசம் பகிர்ந்து, பண்பு வளர்த்து, வலிமை ஏற்றி, நட்புக் காட்டி, நடையிட பழகித் தந்து, போராட மனவலிமை கொடுத்து, போதுமான புத்தகங்களை கொடுத்து இறுதியில் வெற்றிகரமான ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியினை பிரசவித்த பிறகும் தன் தொப்புள் கல்வி பாச கொடியினை அறுத்துக் கொள்ளாத அறிவுத் திருக்கோவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கலாம். ஒன்றுக்கும் மேலும் இருக்கலாம். . . ஆசிரியருக்கு அது . . . ஐ.வி.ஆர்.ஐ. .

    கால்நடை மருத்துவம் படித்த கையோடு, ஏதாவதொரு முதுகலை படிப்பு ஆனால் ஐ.வி.ஆர்.ஐ ல் கொடுங்கள் என்று கேட்டு சேர்ந்தபொழுது ஆண்டு இரண்டாயிரம். இன்று பதினேழு வருடங்கள் உருண்டோடி போயின. சமீபத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் உடைய சுயசரிதம் படித்தோம். அதில் அவர் சுமார் 40,000 நாட்கள் வாழ்ந்தார். சராசரியாக 50,000 நாட்கள் வாழ்ந்திருக்கலாம். . . என்று நாள் கணக்கை எழுதியிருந்தார்கள். அது படிக்கும்பொழுது ஒரு ஆச்சரியமான உணர்வை கொடுத்தது. வாழ்க்கை ஒரு கிரிக்கெட் மேட்சைப் போல அளந்து ஆடிவிட முடியக்கூடிய ஒன்று தான். மிடில் ஆர்டர் டெயில் ஆர்டர் என்று ஓபனிங்கை தொடர்ந்து ஒவ்வொன்றாக ஓவர்கள் நகர்ந்து கொண்டே இருக்கப் போவது நிஜம் தான். பால் டு பால் வாட்ச் பண்ணுவது போல் நாள் டு நாளும் வாட்ச் பண்ண வேண்டும் தான்.

    கொஞ்சம் கொஞ்சமாக கரையும் நாட்களில் ஓபனிங் மிக நன்றாக இருந்தால் அனைவரும் பாராட்டி பேசுவார்கள். அப்படியொரு ஓபனிங்கை அமைத்துக் கொடுத்த இடங்கள். ஆரம்பப் பள்ளி முதல் ஐ.வி.ஆர்.ஐ. வரையிலான பல தொப்புள் கொடிகள்.

    கருவரையில் இருக்கையில் உதிரம் வழியாக உணவுப் பொருள்களை ஊட்டி வளர்ப்பது தொப்புள் கொடி; கற்கும் அறையில் இருக்கையில் பாடம் வழியாக உணர்வுப் பொருள்களை ஊட்டி வளர்ப்பது ஒரு கல்வி நிறுவனம் என்றால் மிகையாகாது.

    கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் மொழி தெரியாத புது மாநிலத்தில் எப்படியும் சமாளித்து வளர்வோம் என்கின்ற தன்னம்பிக்கையோடு வந்து இறங்கிய பொழுது நடந்த சின்னச்சின்ன புதுமையான சம்பவங்களும் திரும்ப சென்றபொழுது வரிசையாக நினைவில் வந்தன.

    பதினேழு வருடங்கள் கழிகையில் மகன் மட்டும் அல்ல தாயும் உருமாறிப் போகிறாள். ஐ.வி.ஆர்.ஐ காலத்தில் நவீனமடைந்திருந்தாலும் முன்பு கண்ட ஆய்வக அறை விடுதியின் முதல்மாடி அறை, உணவு

    அருந்தும் மெஸ் அறை, அதில் பரிமாறும் ககன், பேஸ்கட்பால் விளையாட்டு மைதானம், கால்பந்து மைதானம் (புல்வெளி பிரமாதமாக பராமரிக்கப்படுகிறது) பசுவநாத் கோவில் என்று பழைய ஞாபகங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருப்பது போல தோன்றியது.

    “நீ எங்கே இருக்கிறாய் என்று சொல், நான் அங்கு வந்து உன்னை, என் வீட்டிற்கு முதலில் அழைத்துச் செல்கிறேன். . . அங்கே உணவு உண்ட பிறகு . . . கல்லூரியை சுற்றிக் காட்ட நானே அழைத்துச் செல்கிறேன்.. . .”

    நீ என் முன்பு கூறியது போல . . . எங்கள் வீட்டில் வந்து தங்கவில்லை . . . தம்பி . . . எங்கள் குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த ஆர்வத்துடன் உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தோம் . . .

    நீதான் என் முதல் மாணவன் . . . உனக்குப் பின்பு . . . ஏழு மாணவர்களை . . . முதுகலை படிக்க வழிகாட்டி உள்ளேன் . . . அதில் இருவர் பி.ஹெச்.டி . . . ம் ம் ம் . . . காலம் வேகமாக உருள்கின்றது. . . இப்பொழுதும் ஒரு தமிழ் மாணவி என்னிடம் பறவை உடற் செயலியல் ஆய்வகத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கிறார் . . . அவர் பெயர் . . . தண்மதி . . . இதோ அவரையும் அழைக்கிறேன் . . .

    இது தான் என் மகள் “பரிதி”. அவள் பதினொன்றாம் வகுப்பு வந்து விட்டாள். நீ இருக்கையில் சிறு குழந்தை. எனக்கு, ஹரியானா சென்று, கிராமத்தில் வயதான தாயுடன் வாழ வேண்டும் என்று தான் ஆசை . . . ஆனாலும் மனைவி மக்களின் விருப்பத்தின் பேரில் . . . பரேய்லியிலேயே வாடிநந்து வருகிறேன்.

    என்று எனது முதுகலை வழிகாட்டி முதன்மை அறிவியலறிஞர், திரு. ஜக்பீர்சிங் தியாகி அவர்கள் மிகுந்த பாசத்துடன் பேசினார். (அவர் டீடோட்லர்) ஐ.வி.ஆர்.ஐ. யில் தமிழ் மாணவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். . . அவர்களுடன் கூட தகவல் தொடர்பு இல்லை . . . காலம் மிக அதிகமாகிப் போனதால் . இடைவெளி எழுந்துவிட்டுள்ளது என்று என்னுடன் படித்த டாக்டர் இராஜமாணிக்கம் கூறினார்.

    அந்த சூடிநநிலையில் வழிகாட்டி (Guide) அவர்களது தொடர்ந்த தொப்புள்கொடி பாசமழை காரணமாக பரேய்லி சென்று காண முடியும் என்கின்ற மகிழ்ச்சி கலந்த நம்பிக்கை இருந்தது.

    வேறு மொழி பேசக்கூடிய மனிதர்களும் கல்வி ஒன்றின் மகத்துவம் காரணமாகவும் பண்பான பழக்கத்தின் காரணமாகவும் நட்பு பாராட்டும்பொழுது. . . அதுவும் பல காலம் கழிந்த பின்னரும் முதல் நாள் சந்தித்த அதே அளவு பாசம் காட்டும்பொழுது உண்டாகும் மகிழ்ச்சியை வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது சிரமம்.

    ஜக்பீர்சிங் தியாகி சார் சுமார் ஐந்தரை அடி உயரம், நல்ல சிகப்பு நிறம், அவரை ஒல்லி என்று அல்லது குண்டு என்று வகைப்படுத்த முடியாமல் பூசிய உடல்வாகு என்று கூறலாம். தினந்தோறும் டேபிள் டென்னிஸ் விளையாட போகின்றேன் என்றார். தலைமுடி சற்றே நரை விழுந்து இருந்தாலும் வழுக்கை விழாமல் . .  அடர்த்தி குறைவாக ஆனால் ஒவ்வொரு முடியும் உறுதியாக நின்றிருந்தது. பேசுகையில் ஆங்கிலத்தில் ஆரம்பித்து இந்தியில் முடிக்கின்றவர். “என் மகன் போல” என்கின்ற உரிமையும், ‘தங்கல்’ படத்தில் கண்ட, ஹரியானவின் மஹாவீர் சிங் பொஹாட் . . . போன்ற முரட்டுத்தனமான ஒரிஜினல் பாசமும் கொண்டு . . . மறைமுகமாக அன்பை காட்டி . . . மேல்முகமாக . . . மிரட்டல் தொனியில் கண்களை கொஞ்சம் சிமிட்டி . . . போலிக் கோபத்தில் இருப்பது போலவே . . . பேசுகின்ற இந்த வட இந்திய பாசக்கார . . . கிராமத்துப் பெருசை . . . படித்த நாட்டாண்மையை . . . எனக்கு குருவாக அமைத்து வைத்த இயற்கையை எண்ணி எண்ணி மகிழ்ந்து வியந்து கொண்டே அவருடன் கல்லூரியில் பேசிக் கொண்டு இருந்தோம்.

    முகநூல் . . . மற்றும் புலனம் மூலம் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு இருந்ததில் குருநாதர் அதிக இடைவெளியில் தெரியவில்லை. அவர்கள் இல்லத்தரசி . . . நாங்கள் காலை உணவாக ஆலு பரோத்தா உண்டு . . . அதன் பின்னர் தான் வந்து இருக்கின்றோம் என்றாலும் . . . சாலட், இனிப்பு, சோலா என்று பல விஷயங்களை உண்ண அடுக்கி தன் மகிழ்ச்சியையும் விருந்தோம்பல் பாங்கையும் ஒருசேர வெளிப்படுத்தினார். கண்காணாத தேசத்தில் கடவுள் நம்மை கைவிட்டுவிடுவதில்லை என்று திரும்பத் திரும்ப அன்பின் செய்தி அனுப்பிக் கொண்டேயிருப்பதாகத் தோன்றியது.

    விமானப் படையில் கர்னலாக இருக்கின்ற தன் தந்தையோடு தண்மதி வருகின்றார்கள். வந்த பிறகு தமிழ் மாணவர்கள் ஏறத்தாழ எழுபது பேர் ஐ.வி.ஆர்.ஐ யில் தற்பொழுது படித்து வருன்றார்கள் என்று தெரியவந்தது. ஒரே மகிழ்ச்சி. . . இந்திக் கடலின் நடுவில் ஒரு தமிழ்த் தீவு தட்டுப்பட்டால் அதில் ஒரு பரவசம் இருக்கத் தான் செய்யும். தமிழ்ப் பால் குடித்து, தொப்புள் கொடி வலிமையடைந்த தருணங்களை நினைவு கூர்ந்தோம்.

    Dr. தேவராஜன் என்னும் முதுகலை மாணவர் ஒரு சிறிய மாணவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். கால அவகாசம் குறைவாக இருந்தாலும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நிறைவாக முப்பது நிமிடம் பேசிக் களித்தனர். குழு புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டோம்.

    நாம் நடந்த பாதையில் தொடர்ந்து நடை போடும் இளைய தலைமுறையிடம் கடந்து வந்த திருப்பங்களை, அடைந்த ஆச்சரியங்களை, சிரிக்க வைத்த சோகங்களை, சேர்ந்து பிரிந்த நண்பர்களை, உதவி செய்து உடன் பிறவா சகோதர சகோதரிகளை நினைவு கூர்ந்த பொழுது இளையவர்கள் மெய்சிலிர்த்தார்கள்

    பாரி என்கின்ற கல்லூரித் தோழன் ஐ.ஏ.எஸ். ரிசல்ட் வந்த நாளில் பதட்டத்தில் சைக்கிளில் இருந்து விழுந்தடித்து ஓடி வந்து மூச்சிரைக்க ‘ரிசல்ட்’ பார்க்க “போலாண்டா” என்று படபடப்பாக அழைத்துச் சென்ற இடத்தை பார்த்த உடன் மனசு பழைய நாட்களுக்கு சென்று திரும்பியது. ரிசல்ட்டை கீழேயிருந்து பார்த்தோம் . . . நூறு வரைக்கும் என் நம்பர் வரவில்லை என்ற பொழுது அங்கே உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் பதினைந்து வருடம் பின்னால் பாய்ந்த என்னோடே பெருமூச்சு விட்டனர் . . . அப்பொழுது ஒரே தொப்புள் கொடி வழியாக உயிர்ச்சத்து துகள்களை பகிர்ந்து கொள்ளும் ஓர் தாய் மக்கள் நாமென்போம் என்றே தோன்றியது.

    இந்தியன் வெட்டனரி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் என்பது தான் ஐ.வி.ஆர்.ஐ என்று பலமுறை முன்பு குறிப்பிடப்பட்டிருந்த அரசு கல்வி நிறுவனத்தின் பெயர். இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என்று ஏற்கனவே தமிழில் குறிப்பிட்டு இருக்கின்றது. பதினைந்து வருடங்கள் முன்பு தங்கியிருந்த விடுதி அறை எண். 37 க்கு சென்றோம். அங்கே ஒரு மேற்கு வங்காள மாணவன் இருந்தார். புகைப்படம் எடுத்துக் கொடுத்தார்.

    Dr. இராஜமுருகன், இ.ஆ.ப., மற்றும் நண்பர்கள் ஒன்றாக கூடைப் பந்தாடிய விளையாட்டுக் களத்தை பார்த்தோம். இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்த அவர் நினைவு மனதில் நிழலாடியது. பகிர்ந்து கொண்டபொழுது. . . இப்போது படித்து வரும் இளம் மாணவர்கள் வருத்தம் அடைந்தனர். இலேசாக அவர்கள் வரலாற்றை கேள்விபட்டு இருந்தனர்.

    காலம் காயங்களை மெதுவாக ஆற்றுகின்றது. பழைய நினைவுகள் நிகடிநகாலத்திற்கு பின்னோக்கி அழைத்துச் சென்றுவிட முயன்றாலும் எக்கார்ட் டோலி அவர்களின் “இப்பொழுது” எனும் தமிழ்படுத்தப்பட்ட புத்தகத்தில் படித்தது போல (கண்ணதாசன் பதிப்பகம்) கடந்த காலத்தை நிகடிநகாலத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சி செய்தோம். இளைய மாணவர்களே! நண்பர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கு தானாக உதவி வந்து சேரும்! என்று இதுவரை உயர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம்.

    சமீபத்தில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் மேட்சை (4 – 2 மார்ச் 2017) வென்று சமன் படுத்த உதவினார். குறைந்த டெஸ்ட் மேட்சுகளில் இருபத்தைந்து முறை ஐந்து விக்கெட்டுகளுக்கும் மேல் எடுத்த சாதனை புரிந்திருக்கிறார். இது போல ஒரு கிரிக்கெட் மேட்ச் தான் நம் வாழ்க்கை என்றால் . . . அதில் கடந்து வருகின்ற பாதையில் கற்றுக் கொண்ட ஆட்ட நுணுக்கங்களை அடுத்து ஆட வருபவர்களுக்கு கற்று கொடுப்பது நல்ல விஷயமே.

    தியாகி சார் மாணவர்களுடன் பேசி முடிக்கும் வரையிலும் உடனேயே காத்திருந்தார். அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர்கள் பரப்பில் பரந்து விரிந்திருந்த பரேய்லி ஐ.வி.ஆர்.ஐ நன்றி உணர்வுடன் மீண்டும் மீண்டும் பாசக் கண்களால் தடவி, நேச நெஞ்சுக்குள் வாஞ்சையுடன் நிரப்பிக் கொண்டோம்.

    பரேய்லியின் குளிர் காலங்கள் நடுக்கத்துடன் நினைவு கொள்ளத்தக்கவை. பத்து அடி தொலைவு மட்டுமே கண்ணுக்குத் தெரியும் பனிக்காலத்தில், இரண்டரை அடி உயரம் மட்டுமே இருக்கும் . . . பல கரங்கள் மாறி நம்மை வந்து அடைந்திருக்கும் . . . நீல நிறமும் . . . அங்கங்கே சின்னதாக துரு பிடித்து பெயின்ட் உதிர்ந்திருக்கும் சைக்கிளில், விளையாட்டு மைதானத்தை நோக்கி கிடுகிடுவென தந்தியடிக்கும் பற்களோடு விடுவிடுவென மிதி வண்டியை மிதித்த நாட்கள் ஞாபகம் வந்தன. கோபி, IFS இராஜமுருகனுடைய 2009 ஆம் வருட பேட்ச்மேட். இராஜமுருகன் ஐ.வி.ஆர்.ஐ. யில் ஜெனிடிக்ஸ் படித்த ஜூனியர். விளையாட்டில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவரது அகால மறைவை குறித்து வேறோர் கட்டுரையில் விளக்கமாக முன்பே எழுதியிருப்பதால் இந்த கட்டுரையில் இத்தோடு விலகுகின்றோம்.

    ஆறு நண்பர்கள் இராஜமாணிக்கம், சுரேஷ், பாரி, சங்கர், கிரி, . . . என மிகவும் ஒற்றுமையாக இருப்போம். இருக்கின்றோம். நாங்கள் ஒரே வருடத்தில் படித்து வந்தோம். ஜூனியர்களிலும் சீனியர்களிலும் நிறைய நண்பர்கள். அவர்கள் அனைவருமே எங்களது இந்த ஆறு முகங்களின் நட்பை மிகவும் பாராட்டுவார்கள். சங்கர் செய்யாறு அருகே கால்நடை மருத்துவராக இருக்கிறார்.

    சங்கரும் நானும் ஒரே துறையில் பறவையின அறிவியல் பாடத் திட்டத்தில் முதுகலை படித்து வந்தோம். பலவிதமான அறிவியலறிஞர்களிடம் பலவிதமான பெயர்பெற்று இருந்தோம். உடன் வடநாட்டு நண்பர்கள் பலர் படித்து வந்தனர். குளிர் காலத்தில் காலை ஐந்து மணிக்கு எழுந்து சென்று காய்கறி வாங்கி வந்து மாணவர் உணவகத்தை நிர்வாகம் செய்த காட்சிகள் நினைவில் வந்தன.

    பாரியோடு . . . வெளி உணவகத்திற்கு சென்று விருந்து அருந்துவதே மிக நினைவு கூறத்தக்க அனுபவம்.

    தேர்வுக்கு தயாரிக்கும்பொழுது . . . படிக்கும் புத்தகங்கள், கல்விப் பணி, படிக்கும் நேரம், படிக்கும் முறை ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் நாம் . . . நமக்கு மிகவும் உதவியாக இருந்து நம் உடல் நலனிலும் உள்ள வளத்திலும் கவனம் செலுத்தும் நண்பர்களை . . . அவர்களது பங்களிப்பை போதுமான அளவு பாசத்துடன் நினைவு கூர்ந்து பாராட்ட வேண்டும். தொப்புள் கொடி போல நல்ல மனப்பாங்கை பாதுகாத்து நம் சந்தோசத்தில் சிரித்து, சுகத்தில் திளைத்து, உடன் விளையாடி, உணவு கொண்டு, உணர்வு பகிர்ந்து, அன்பை நேசித்து, உடல் நலம் பேணி, சோகத்தில் பகிர்ந்து, துயரத்தை பாதியாக்கி, துவள்கையில் தோள்கொடுத்து, துணிகையில் தட்டிக் கொடுத்து, சாதனைகளில் பிரமித்து, சாதாரணங்களை ஊக்குவித்து, இரணங்களுக்கு களிம்பிட்டு . . . ஆக மொத்தம் கும்பிட்டு போற்றும் அளவு அந்த ஆறு முகங்களும் மேலும் நூறு முகங்களும் கொண்ட வளர்ந்த தாய்வீடு போன்ற ஒரு இடம் ஐ.வி.ஆர்.ஐ. இதன் கொடி என்றும் உயரப் பறக்கும்! தொப்புள் கொடி!

    திரையரங்குகள் தினம் – ஏப்ரல் 18

    ‘திரையரங்குகளின் தலைமகன்’ என்று அன்போடு அழைக்கப்படும் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த தினமான ஏப்ரல் 18ம் தேதி (1883), அவரது நினைவைப் போற்றும் வகையில், ‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க’ தீர்மானத்தின்படி 2014ஆம் ஆண்டு முதல் ‘திரையரங்குகள் தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.  அன்றைய தினம் திரையரங்குகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்படுவது வழக்கம்.

    வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திரையரங்குகள் உள்ளன.  சாதி, மத, இன மொழி உள்ளிட்ட எவ்வித பேதமும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து திரைப்படங்களைக் கண்டுகளிக்கும் இடம் திரையரங்குகளே.  அந்த வகையில் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மக்கள்தான் திரையரங்கின் மாய சக்தியை முதன்முதலில் அனுபவித்து மகிழ்ந்தவர்கள் என்றால் அது மிகையில்லை.

    தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் சாமிக்கண்ணு வின்சென்ட்.  திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் ‘டூபான்’ என்ற பிரெஞ்சுக்காரரிடமிருந்து ‘பதே’ என்னும் புரஜக்டரை இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினார்.  அக்காலத்தில் அது பெருந்தொகை.  உறவினர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த புரஜக்டரை வாங்கியுள்ளார்.    அதுதான் இன்றைய தென்னிந்திய சினிமாத் தொழிற்சாலையின் முதல் விதை.

    சென்னையில் முதன்முறையாக கொட்டகைத் திரையரங்கை (டூரிங் டாக்கீஸ்) அமைத்தார் வின்சென்ட்.  கொட்டகைக்குள் படம் காட்டலாம் எனச் சிந்தித்ததே ஒரு பெரிய சாதனைதான்.  காரணம் சினிமா என்பது மேட்டுக்குடி மக்களின் கலையாக மட்டுமே பார்க்கப்பட்ட காலம் அது.  ஆங்கிலேயருக்கும் பிற செல்வந்தர்களுக்குமாகத்தான் சினிமா இருந்தது. வின்சென்ட் சினிமாவை மேட்டிலிருந்து பள்ளத்துக்கு கொண்டு சென்றார்.  ஏழை எளிய மக்களும் சினிமாவைக் கண்டு களிக்க வேண்டும் என விரும்பினார்.  எவ்வளவோ துன்பங்களுக்கு இடையில் சினிமாவை ஒரு தொழிலாக மாற்றிக் காட்டியவர் வின்சென்ட்.

    தென்னிந்தியாவில் முதல் திரையரங்கை கோயம்புத்தூரில் கட்டி தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் வின்சென்ட். 1900 ம் ஆண்டில் வின்சென்ட் கோயமுத்தூரில் வெரைட்டி ஹால் டாக்கீஸ் எனும் ஊமைப்படத் திரையரங்கைக் கட்டினார். அந்தத் திரையரங்கின் பெயரைக் கொண்டு தான் அந்தச் சாலைக்கு பின்னாளில் வெரைட்டி ஹால் ரோடு என்று  பெயரிடப்பட்டது. உரிமையாளர்கள் மாற்றம் காரணமாக இந்தத் திரையரங்கு டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இன்னும் உள்ளது.

    ஒரு திரையரங்கில் ஆரம்பித்து 12 திரையரங்குகளை கோயம்புத்தூரில் நிறுவினார் வின்சென்ட். அவற்றுள் ராதா டாக்கீஸ்( மேம்பாலம் அருகே இருக்கும் முருகன் தியேட்டர்) லைட் ஹவுஸ் ( ஆர்.எஸ் புரத்திலுள்ள கென்னடி தியேட்டர்) பேலஸ் டாக்கீஸ்( டவுன் ஹாலிலுள்ள நாஸ் தியேட்டர்) ஆகிய திரையரங்குகளை இன்றும் காணலாம். இவரது பெயரில் அமைந்தது தான் பெரிய கடை வீதியிலிருந்து உக்கடம் செல்லும் வின்சென்ட் சாலை. திரையரங்குகளை கட்டியதோடு வள்ளிதிருமணம் என்ற படத்தை 1933 ல் தயாரித்து பெரும் வெற்றி கண்ட வின்சென்ட் மேலும் சில படங்களை சென்ட்ரல் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்தார்.

    கனவுத் தொழிற்சாலையாக விளங்கும் சினிமாத்துறையின் முக்கிய மையமாக கோவை 1930 மற்றும் 1940 களில் விளங்கியுள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்டுடியோக்களாக சென்டல் ஸ்டுடியோ மற்றும் பக்ஷிராஜா ஸ்டுடியோ திகழ்த்திருக்கின்றன. சென்ட்ரல் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட திரைப்படம் தான் எம்.ஜி.ஆர் நடித்த மர்மயோகி திரைப்படம். திரை உலகில் புகழ் பெற்ற அந்தக்கால நட்சத்திரங்கள் தங்கள் ஆரம்ப நாட்களை இங்கு தான் கழித்திருக்கிறார்கள்.

    இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்குண்டு.  இந்தியாவில் தயாராகும் சினிமாக்களில் தென்னிந்திய சினிமாக்களே அதிகம்.  எண்ணங்களில் நீங்கா இடம் பெற்ற பல படங்களைத் தந்தது தென்னிந்திய சினிமாதான்.  இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா அரிச்சந்திரா’-வை இயக்கி 1913ஆம் ஆண்டு வெளியிட்டார் தாதாசாகேப் பால்கே.  1895ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் சலனப்படக் கலை (Motion Pictures) கண்டறியப்பட்டது. அந்தத் தொழில் நுட்பத்தை, 18 ஆண்டுகளிலேயே ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய நாட்டில் கையாண்டு வெற்றி அடைந்தார் பால்கே. அவர் இயக்கிய முதல் படம் வெளியான 1913ஆம் ஆண்டை கணக்கில் கொண்டுதான் 2013ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டது.  தென்னிந்திய சினிமாவின் தாய்வீடான சென்னையில் தமிழக அரசும் திரைத்துறையும் இணைந்து 2013இல் நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடின. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    வின்சென்ட் அவர்களால் துவக்கப்பட்ட நிரந்தரத் திரையரங்குகள் என்ற புரட்சி தமிழகம் முழுவதும் பரவி, ஒரு காலகட்டத்தில் 2000 திரையரங்குகளுக்கு மேல் ஏற்படுத்தப்பட்டு தமிழ் சினிமாவுக்கு வசந்த காலத்தை ஏற்படுத்தியது.  ஆனால் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் திரையரங்குகள் பல நெருக்கடிகளுக்கு உள்ளாயின.

    பொழுதுபோக்கு என்றாலே திரையரங்குதான் என்ற நிலை, தொலைக்காட்சியின் வரவால் மாறிப் போனது.  மேலும்,தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கப்பெருக்கத்தால் திரையரங்குகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.  அத்துடன் கேபிள், டிவி சேனல்கள், டிவிடி, இணையதள வீடியோக்கள் என்று பல வழிகளில் திரைப்படங்களை வீட்டிலிருந்தபடியே பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது.  திரையரங்கிற்கு வரும் மக்கள் கூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பிக்க, பல திரையரங்குகள் மூடப்பட்டன.  சில திரையரங்குகள் வணிக வளாகங்களாக மாறி விட்டன.

    சென்னையின் அடையாளங்களாக இருந்து வந்த சபையர், மேகலா, பைலட், சன் தியேட்டர் போன்ற திரையரங்குகள் உருமாறி போய்விட்டன.  அந்த வரிசையில் அண்மையில் சாந்தி திரையரங்கமும் சேர்ந்து விட்டது.

    சென்னை அண்ணா சாலையின் அடையாளங்களுள் ஒன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான  சாந்தி தியேட்டர்.  சென்னையில் முதல் ஏசி திரையரங்கு என்ற பெருமை இதற்குண்டு.  அப்போதைய தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரால் 1961 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. நடிகர் திலகத்தின் மூத்த மகளின் பெயரான ‘சாந்தி’என்பதே திரையரங்கிற்கு பெயராக வைக்கப்பட்டது.  சிவாஜி கணேசன் நடித்த ‘பாவமன்னிப்பு’ திரைப்படம் முதன்முதலாக திரையிடப்பட்டது.  அதன் பிறகு சிவாஜிகணேசன் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன.  திருவிளையாடல், வசந்தமாளிகை, முதல்மரியாதை உள்ளிட்ட பல திரைப்படங்கள் இங்கு 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்துள்ளன.  திரிசூலம் படம் ஓராண்டுக்கு மேலாக ஓடியது. பிறகு நடிகர் திலகத்தின் மகன் பிரபு நடிக்க வந்த பிறகு அவரது படங்களும் இந்தத் திரையரங்கில் திரையிடப்பட்டன.  அதன் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு நடித்த திரைப்படங்கள் உட்பட பிற நடிகர்கள் படங்களும் திரையிடப்பட்டு வந்தன.  சிவாஜி புரடக்ஸன்ஸ் தயாரித்த ‘சந்திரமுகி’ இத்திரையரங்கில் 888 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.  2006ஆம் வருடம் சாந்தி தியேட்டர் மாற்றம் செய்யப்பட்டு சாந்தி, சாய் சாந்தி என இரண்டு திரையரங்குகளாக உருவாயின.

    சிவாஜி ரசிகர்களின் அங்கமாகவும்,55 ஆண்டு கால பாரம்பரிய பெருமைமிக்கதுமான சாந்தி தியேட்டர் சென்ற ஆண்டு (2016) மூடப்பட்டது.  இத்திரையரங்கில் திரையிடப்பட்ட கடைசிப்படம் சூர்யா நடித்த ‘24’ திரைப்படமாகும். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகவும் பிடித்த திரையரங்குகளில் இதுவும் ஒன்று என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

    சினிமா தியேட்டர் என்பது ஒரு புனிதமான இடமாக இருந்தது.  அங்கே மக்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். சிரித்து மகிழ்ந்தனர்.  டூரிங் டாக்கீஸ் எனப்படும் ‘டென்ட் கொட்டாய்’ மூத்த குடிமக்களால் மறக்க முடியாத ஒன்று.

    சினிமா ஒரு சிறப்பான ஊடகம்.  கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், ஆன்மிகம், அரசியல் போன்றவற்றை அழகாகவும், எளிமையாகவும் மக்கள் மனத்தில் பதிய வைக்கும் ஆற்றல் வாய்ந்தது. பல திரைப்படங்கள் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தி உள்ளன. தமிழ் நாட்டில் ஐந்து  முதல்வர்களைக் கொண்டு வந்தது திரைப்படத்துறை.

    கடந்த சில ஆண்டுகளாக மல்டிபிளக்ஸ் எனப்படும் பல திரையரங்குகளை உள்ளடக்கிய, எல்லா வசதிகளும் கொண்ட பொழுதுபோக்கு வளாகங்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் உருவாகி வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.  எனினும் அமெரிக்காவில் பத்து லட்சம் மக்களுக்கு 117 திரையரங்குகள் என்ற அளவில் உள்ளன.  ஆனால் தமிழகத்தில் பத்து லட்சம் மக்களுக்கு 13 திரையரங்குகள்தான் உள்ளன. அமெரிக்க அளவுகோலின்படி பார்த்தால் தமிழகத்தில் சுமார் 8000 திரையரங்குகள் இருக்க வேண்டும். அவ்வளவு இல்லையென்றாலும் 2000 திரையரங்குகளாவது கொண்டு வர அரசும் திரையுலகமும் முயற்சித்தால், தமிழ்த் திரையுலகம் நிலைபெறும்.

    எதிர்மறை எண்ணத்தை எடுத்தெறி

    நம் ஆனந்தத்தை அழிக்கக்கூடிய எதிர்மறை எண்ணத்தை எடுத்தெறிய எவ்வித தயக்கமும் கூடாது. நமக்குள் தோன்றும் எதிர்மறை எண்ணம் நமக்குள் இருக்கும் வரை அது நம்மை, அணுஅணுவாய் அழித்து விடும். அந்த எண்ணத்தை நாம் வெளிப்படுத்திவிட்டால், அதைவிட ஒரு பெரிய ஆபத்து நமக்கு நேரபோவதில்லை, ஆம் நாம் எதிர்மறை எண்ணத்தாளர் என்பதை அறிந்து கொண்ட ஒவ்வொருவரும், நம்மை அவர்களின் அடிமையாக்கி, அழித்திடவே பெரும்பாலும் துடிக்கிறார்கள்.

    எதிர்மறை எண்ணம் என்கின்ற குற்றவுணர்வை, தவறான கருத்தை, நமக்குள் அடக்கி வைத்துக் கொண்டே போனால், அது விரைவில் விஷமாகி நம்மை அழித்துவிடும். குற்ற உணர்வு கொண்டவர்களை எங்கே வேண்டுமானலும், எளிதில் தள்ளிவிடலாம். அவர்கள் அந்த அளவிற்கு, தன்மானத்தையும், தன்மதிப்பையும் இழந்த பலவீனர்களாக இருப்பார்கள்.

    எனவே பாவம் என்கிற முத்திரையை, நமக்கு நாமே, அல்லது நம்மீது பிறரோ குத்திவிடும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது. ஏதோர் வகையில் அம்முத்திரை நம்மீது குத்தப்பட்டுவிட்டால், பயம் வந்து நம்மை பாடாபடுத்தி எடுக்கும். நாம் நாமாக இருக்கவிடாது அது அடிக்கடி நம்மை தொந்தரவு செய்யும்.

    மேற்கண்ட கருத்து எதை நமக்கு நினைவுறுத்திருக்கிறது என்றால் ஒரு மனிதன் மீது அச்சத்தை விதைத்து விட்டால், அவனை நம் இஷ்டத்திற்கு ஏற்ப எப்படி வேண்டுமென்றாலும், ஆட்டிப்படைக்க முடியும் என்ற ஆதிகால சர்வாதிகாரிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் காட்டுகிறது. நம்மைச்சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை எல்லாம் அதனுடன் தொடர்பு படுத்திப் பாருங்கள், அது தெளிவாய் புரியும்.

    எப்போது நாம் உண்மையான தைரியசாலியாக இருக்கின்றோமோ அப்போது நம்மிடம் பேராசையும், பயமும் இருக்காது. நாம் நாமாக இருக்கும் போது,நமது சொந்த சுபாவப்படி இயல்பான முறையில் வாழும் போது, நமக்காக என்னவெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதனுடன் ஆனந்தமாய் வாழ ஆரம்பிக்க வேண்டும். ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமான காரியமாகும். ஆனந்தம் ஆண்டவன் அருளியது அனைத்து உயிர்களுக்கும்.

    ஆனந்தத்தை ஆத்மார்த்தமாக அனுபவிப்பவர்களே தன் மீது தானே ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலை பெற்றவர்கள். மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த அவர்கள் விரும்பமாட்டார்கள். தன்னை கட்டுக்குள் வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் ஒன்றே தனக்குப் போதும் என்ற எண்ணம கொண்டவர்களாக இருப்பார்கள்.

    உங்கள் செயலை உங்கள் பிரக்ஞை முடிவு செய்யட்டும் உங்கள்  மனசாட்சியிடம் அதை விட்டுவிடாதீர்கள். அது உங்களுடையது அல்ல. மற்றவரிடமிருந்து கடன் வாங்கியது.

    விழிப்பாக இருங்கள்

    அதிகம் அன்பு கொண்டவராய் இருங்கள்

    மிக இயல்பாக,சுருக்கமாக, நீங்கள் நீங்களாகவே இருங்கள்

    எப்போதும் ஆனந்தம் மிக்கவராக…

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    படித்தும் பட்டம் பெற்றும் படிப்பிற்கு ஏற்ற வேலை வரட்டும் என்று வீட்டிலேயே நிறைய பேர் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை…?

    கவிப்பிரியா, ஆசிரியர்,

    சேலம் மாவட்டம்

    வேலையில்லை என்பது ஒரு நாட்டின் வேதனையான நிலை. அதுவும் படித்து பட்டம் பெற்றபின்பும் வேலையில்லை என்பது பரிதாபமானது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இதில் எத்தனைப்பேர் இன்னும் எந்த வேலையும் செய்யாமல் “சும்மா” இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெரும்பாலானோர் அப்படித்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

    இதில் நீங்கள் கேட்ட கேள்வியில் ஆழமான பொருள் இருக்கிறது. அதாவது, வேலை கிடைக்கும்; ஆனால் அது பட்டப்படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை என்பதால் அதில் சேராமல் வீட்டிலேயே இருந்து பொழுதைக் கழிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு நாம் என்ன ஆலோசனை கூறுவது என்று கேட்டுள்ளீர்கள். இப்படி எந்த வேலையும் செய்யாமல்  இருப்பது நியாயம் தானா என்று வேலை இல்லா பட்டதாரிகள் தங்களையே தாங்கள் கேட்டுக்கொண்டால் அது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

    நிஜ ஊதியம்:  சில முனைப்பான இளைஞர்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வேலையைச் செய்து, கிடைக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்கள். இவர்களை மனதாரப் பாராட்டலாம். ஆனால் பல பட்டதாரிகள் நல்ல வேலை வரட்டும் என்று காத்துக்கிடந்து நேரத்தை வீணடிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நான்கு ஆண்டுகள் கல்லூரிகளில் படித்தவற்றையும் மறந்துவிடுகின்றனர்.

    சம்பளம் குறைவு என்பதால் தனியார் பள்ளியில் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் பட்டதாரி ஆசிரியரைப் பார்க்கிறோம். அவர் அரசு வேலை வரட்டும் என்று காத்துக்கிடக்கிறார். அதற்கு பல ஆண்டுகள் கூட ஆகும். இது தவறல்லவா? சிலர் இந்த இடைவேளியில் திருமணம், மகப்பேறு என்று பழங்காலக் கடமைகளைச் செய்ய முற்படுகிறார்கள். இதை நல்லது என்று பாராட்ட முடியாது. சிறிய பள்ளி என்றாலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை சந்தித்து அவர்களோடு உரையாடி அவர்களுக்கு அறிவியலையும், கணிதத்தையும், தமிழையும், ஆங்கிலத்தையும் போதிக்கும் பணி மகத்தானது. அந்தப் பணியில் ஈடுபடும்போது மீண்டும் மீண்டும் கற்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்!. இவை அனைத்தும் தரப்படாத ஊதியம் என்று ஏன் சொல்லக்கூடாது? காலை 5 மணிக்கு எழுந்து, குளித்து, தூய்மையான ஆடை உடுத்தி பள்ளிக்குச் செல்லும் ஒரு அனுபவமும் ஒரு தரப்படாத ஊதியம் அல்லவா? இப்படி சிறுபள்ளியில் பயிற்சி பெறும் ஆசிரியர்களின் அறிவுத்திறன், போதிக்கும்திறன் மற்றும் ஆளுமைத்திறன் முறுக்கேறி அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த ஆசிரியர் ஆனபோது, அவருக்கு இன்னும் பெரிய பள்ளியில் வேலை கிடைத்துவிடுமல்லவா? இவரது மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்வதை அவர் கண்கூடாகப் பார்ப்பார் அல்லவா? இவை அனைத்தும் சும்மா வீட்டில் இருந்து விட்டால் அல்லது திருமணம் செய்து விட்டால் மட்டும் கிடைத்து விடாது அல்லவா?

    ஆக ஒர் தகுதி சான்றிதழ் பெற்ற பட்டதாரி ஆசிரியர், ஒரு தொழில்முறை பட்டயம் பெற்றவர், ஒர் பட்டதாரி செவிலியர் போன்றவர்கள் கிடைக்கும் வேலையில் உடனே சேர்வதுதான் நல்லது. படிப்பிற்கேற்ற வேலை; அரசு ஊதியத்திற்கு நிகரான ஊதியம் கிடைத்தால்தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பது நல்லது இல்லை.

    கிடைத்த வேலையைச் செய்யுங்கள்: ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் கல்லூரிகளிலிருந்து வேலைவாய்ப்புச் சந்தைக்கு வந்து விடுகின்றான். இதில் பத்தாயிரம் பேருக்கும் குறைவானவர்களுக்கே வேலைகள் கிடைப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு. ஒரு பொறியாளருக்குரிய வேலை இவர்களுக்குத் தெரியாது என்பதுதான் அந்த காரணம். எடுத்துக்காட்டாக 80 சதவீதம் கணினி பொறியாளர்களுக்கு கணினி புரோகிராம் எழுதத் தெரியாது; அல்லது கணினி மொழி தெரியாது. ஆக இவர்களுக்கு நல்ல வேலை கிடைக்காது, பெரிய நிறுவனத்தில் நிச்சியமாக வேலை கிடைக்காது. இவர் இப்போது என்ன செய்ய வேண்டும்? எதாவது ஒரு நிறுவனத்தில் சிறிய வேலை, அது BPO ஆக இருந்தாலும் பரவாயில்லை என்று சேர்ந்துவிட வேண்டும். வேலை செய்யத் தயக்கம் காட்டாமல் அந்த வேலையைச் செய்தால் அதைப்பற்றிய நுணுக்கங்களை கற்க முடியும். ஆங்கில மொழியைக் கற்க ஒரு வாய்ப்பாகவும் அது அமையும். உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும். இப்படி இரண்டு ஆண்டுகள் இந்த குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும்போது சம்பள உயர்வு வரலாம், அல்லது இதே வேலைக்கு அதிக சம்பளம் தரும் பெரிய நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம். சும்மா இருந்து வீணாய்ப் போவதை விட இது நல்லது தானே

    தயக்கம் வேண்டாம்: சமீபத்தில் ஒரு சொகுசு படகில் பயணம் செய்தேன். மூன்று பேர்கள்தான் அந்த படகின் மொத்த ஊழியர்கள். அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! 25 பேர் பயணம் செய்யும் ஒரு சொகுசு படகை (Yatch) எப்படி மூவர் செலுத்தமுடியும்? அவற்றுள் மூன்று அறைகள் உண்டு, அதில் மூன்று கழிப்பறைகளும் உண்டு, இயந்திரங்கள் உண்டு, படகு ஓட்டும் கட்டுப்பாட்டு அறை உண்டு. கேட்டுவிட்டேன் அந்த மாலுமியிடம். அவர் சொன்னது இதுதான். நாங்கள் மூன்றுபேருமே கடல்சார் பொறியாளர்கள், எங்களுக்கு இந்தப் படகை செலுத்தவும் தெரியும், இஞ்சின்களைப் பழுதுப் பார்க்கவும் தெரியும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் தெரியும், ஒரு வேளை ஒருவர் தவறித் தண்ணீரில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற நீச்சலும் தெரியும், மீன் பிடிக்க தெரியும், சமைக்கவும் தெரியும் என்றார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் ஒருலட்சம். இதேவேலையைச் செய்ய நம்மவர்களை நியமித்தால் படகிற்கு 10 பேராவது தேவைப்படுவார்கள். அந்த சொகுசு படகை சிறப்பாக இயக்கவும் மாட்டார்கள், என்றார் அதன் உரிமையாளர். இந்தியர்கள் செய்து வந்த கப்பல் துறை பணிகள் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு பறிபோய் விட்டதற்கான காரணம் இதுதான்.

    சுயதொழில்: படித்த படிப்பிற்கு வேலையில்லாத பொறியியல் பட்டதாரிகளுக்கு இன்னும் ஒரு அறிவுரை தரமுடியும். நீங்கள் சுயமாகத் தொழில் தொடங்கலாம். கணினி பொறியியல் படித்தவர்கள் கணிப்பொறி பழுதுபார்க்கும் கடைத் திறக்கலாம். இதில் எந்த தாழ்வும் இல்லை! நீங்கள் தான் முதலாளி; நீங்கள் தான் தொழிலாளி. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இரண்டு பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தலாம். அதைப்போல ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் படித்தவர்கள் கார் அல்லது மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் ஒன்றைத் துவங்கலாம். நீங்கள் பொறியாளர் என்பதால் உங்களது பணி மற்றவர்களை விட சிறப்பாக இருக்கும்; சொகுசு கார்களைக் கூட உங்களால் எளிதில் கையாள முடியும். இப்படி ஈடுபாட்டுடன் செய்யும் வேளையில் ஆராய்ச்சி செய்யவும் முடியும். ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகத்தைத் தயாரிக்கும் அறிவுத் திறமை கூட உங்களுக்கு வரக்கூடும். நீங்களும் ஒரு உதிரிபாகத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தை துவக்கவும் முடியும்.

    கவுரவக் குறைவு: இப்படி பொறியியல் பட்டத்தாரிகள்  ஒரு ஒர்க்ஸ்ஷாப்பில் நீலசட்டையுடன் வேலை செய்வது அல்லது ஒரு மின்பொறியாளர் பட்டதாரி வீடு வீடாகச் சென்று குளிர் சாதனப்பெட்டியைப் பழுதுபார்ப்பது இழுக்கு ஆகாதா என்ற கேள்வி எழும். இந்தக் கேள்விக்கு விடையாக நாம் கூறுவது இதுதான். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் தந்தையார் வருமானத்தில் உண்பதும் உடை அணிவதும் ஊர்சுற்றித்திரிவதும் தான் இழுக்கே தவிர ஒரு தொழில் செய்வது அல்ல. அதிகம் படித்த ஒருவர் ஒரு செயலை செய்யும் போது அதில் நல்ல தரம் இருக்கும். ஒரு வாகன ஓட்டுநர் வேலை கூட தரமான தொழில் நுட்பம் சார்ந்த வேலை தான். 100 சக்கரங்களைக் கொண்ட சரக்கு லாரிகளைக் கூடப்பார்த்திருக்கிறேன். அதை ஒரு பொறியியல் பட்டத்தாரி ஓட்டினால் பாதுகாப்பாக ஓட்டுவார். அது பாதசாரிகளுக்குப் பாதுகாப்பாகவும் அமையும் ஏனென்றால் ஒரு பொறியியல் பட்டத்தாரிக்கு அந்த லாரியின் தொழிற்நுட்பம் தெரிந்திருக்கும், சாலை பாதுகாப்பு விதிகள் நன்கு புரியும், வாகனத்தைப் பழுதுபார்க்கக்கூட தெரிந்திருக்கும். இந்த வாகன ஓட்டுநர் அறை கூட குளிரூட்டம் செய்யப்பட்டதுதான். இது போன்ற ஒரு பெரிய ‘’Truck’’  ஓட்டுபவர்களுடைய ஊதியம் ரூபாய் 40,000/-. இது சராசரி பொறியியல் பட்டத்தாரிகளின் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

    முடிவு: நான் சுறுக்கமாகக் கூறுவது இதுதான். பட்டத்தாரிகள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றால் கவலையை விடுங்கள். கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்ளுங்கள், அதை ஈடுபாட்டோடு செய்யுங்கள். இன்றைய சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாக இன்று வேலை செய்வீர்களானால், பின்னொருநாள் செய்யும் வேலையை விட அதிக சம்பளம் உங்களுக்குக் கிடைக்கும். தகுதிக்கு குறைவான தொழில் என்று மற்றவர் கருதும் ஒரு தொழிலைச் செய்ய முற்படுங்கள். உங்களுது வாழ்க்கையில் வேலையில்லை என்ற நிலை இருக்காது. பின் ஒருநாள் மற்ற பட்டதாரிகளுக்கும் நீங்கள் வேலை கொடுப்பீர்கள்.

    வேளாண்மையின் வளம்! வெற்றியின் பலம்!!

    திரு. ரா. பெருமாள்சாமி

    தாளாளர்,

    காமதேனு கல்வி நிறுவனங்கள்

    சத்தியமங்கலம், ஈரோடு.

    • உயரம் தொட்ட பின்பும் எதார்த்தத்தையும், எளிமையையும் விட்டுவிடாமல் வாழ்ந்து வரும் மனிதர்.
    • சிந்தனையில், பேச்சில், செயல்படும் விதத்தில் என அனைத்திலும் உற்சாகமாய், தன்னம்பிக்கையாய் இருந்து வரும், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
    • இலட்சியத்தை நிர்ணயித்து, அதனை அடைய வழிமுறைகளை வகுத்து, நேரம் தவறாது, இடையறாது பாடுபடுவதில்தான் வெற்றி இருக்கிறது என்பதை உணர்ந்து,  அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாக இருந்து ஊக்கம் கொடுத்து வருபவர்.
    • இறைபக்தியும் கோயில் திருப்பணிகளை ஏற்று நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவர்.
    • தனக்கு எதிரியும் இல்லை அப்படி இருந்தாலும் காலப் போக்கில் அவரையே தனது நண்பனாக்கிக் கொள்ளும் பண்பு கொண்டவர்.
    • தற்பெருமை, தற்புகழ்ச்சி, தலைக்கனம் என எவ்வித குறையுமின்றி இரக்ககுணம் மட்டுமே கொண்ட நவீன கொடை வள்ளல் ஐயா “கொங்கு நாட்டுச் சாதனையாளர் திரு. ரா. பெருமாள்சாமி.
    • கல்விக்கண் திறந்த எத்தனையோ நல்ல தலைவர்கள் இங்குண்டு, தனக்கு கிடைக்காத இந்த கல்வி இனி எவருக்கும் கிடைக்காமல் இருக்கக் கூடாது  என்ற நல்ல எண்ணத்தோடு கல்வி நிலையத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் இனி அவரோடு நாம்…

    கே: உங்களின் பிறப்பும், பின்புலமும் பற்றிச் சொல்லுங்கள்?

    பொன்னாறும், முத்தாறும் பாய்ந்து வளம்கொழிக்கும் ஈராற்றின் இடையில் வாழை, கரும்பு, நெல், மஞ்சள் என எங்கும் நன்செய் நன்நிலமாக வீற்றிருக்கும் கொங்கு மண்டலத்திலுள்ள கோபிக்கு அருகிலுள்ள செம்மாண்டம்பாளையம்  என்னும் குக்கிராமத்தில் 1944ம் ஆண்டு பிறந்தேன். விவசாயம் மட்டுமே தெரிந்த குடும்பம் எங்கள் குடும்பம். என் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர், கடை மகனாக நான் பிறந்தேன்.

    முட்டையிலிருந்து வெளிவரும் மீன்களுக்கு யாரும் நீச்சல் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. அதுபோலதான் நாங்களும் விவசாயக் குடும்ப பின்னணியில் பிறந்தவர்கள் என்பதால் விவசாயத்தை நாங்கள் நன்றாகக் கற்றுக் கொண்டோம். எனது தந்தை மிகவும் கண்டிப்பு மிக்கவர். வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்று ஒரு வரையறைப்படி வாழக் கற்றுக் கொடுத்தார். என்னை ஆறு வயதில் எங்கள் ஊரில் உள்ள ஓர் ஆசிரியரிடம் கல்விக்கற்க வைத்தார்கள் . படிக்கின்ற காலத்திலேயே காலையில் படிப்பு மாலையில் விவசாயம் என மாறிமாறி செய்து கொண்டேயிருந்தேன்.

    படிப்பில் மிகவும் சுட்டித்தனமாக இருந்தேன். கரும்பலகையில் கணிதப் பாடத்தை நடத்தும் ஆசிரியரின் கணக்கை ஆசிரியர் சொல்வதற்கு முன் விடையை கண்டுபிடித்து பாராட்டை வாங்கிவிடுவேன். அந்தளவிற்கு படிப்பின் மீது பற்றுதல் கொண்டிருந்தேன்.

    கே: இவ்வளவு நன்றாகப் படித்த நீங்கள் ஏன் படிப்பைத் தொடரவில்லை?

    காலச் சூழ்நிலைக் காரணமாக என்னால் கல்விக்கற்க முடியவில்லை. நன்றாகப் படித்தும் இன்று போல் அன்று பள்ளி  வசதியில்லாததால் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டேன். அப்போது எங்களுக்கு சொந்தமாக ஒரு சிறிய புன்செய் நிலம் இருந்தது. அந்த நிலத்தில் தான் நான் விவசாயத்தின் நுணுக்கங்களையும், அணுகுமுறைகளையும் நன்கு கற்று தெளிவு பெற்றேன்.

    படிப்பின் மீது எவ்வளவு பிடிப்பு இருந்ததோ, அதைவிட பல மடங்கு விவசாயத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. ஏர்பிடிப்பது, பயிர் நடுவது, ஏற்றம் இரைப்பது களை எடுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் மிக நன்றாகச் செய்வேன்.

    ஒருநாள்  என் பெற்றோர் எங்கள் மூவரையும் அழைத்தார்கள். எங்கள் மூன்று பேருக்கும் எங்களுடைய பாரம்பரியமான சொத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டார்கள். கொடுத்தவுடன் எங்களிடம் என் தந்தை சொன்னது, எந்த சூழ்நிலையிலும் இதனை விற்பதோ,இதன் மேல் கடன் வாங்குவதோ கூடாது என்று கூறினார். இந்த நிலத்தை என்னிடம் கொடுக்கும் போது என்னுடைய வயது 19. அதாவது எனது தாத்தா எனது தந்தையாரிடம் ஒன்றரை ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார். எனது தந்தை அதனை 30 ஏக்கர் நிலமாக மாற்றி எங்கள் மூவருக்கும் தலா 10 ஏக்கர் நிலமாகப் பிரித்துக் கொடுத்தார். தற்பொழுது அந்த 10 ஏக்கர் நிலத்தை தாதுதோட்ட குடும்பத்தைச் சார்ந்த நாங்கள் மூவரும் 300 ஏக்கர் நிலமாக மாற்றியுள்ளோம், என்பதற்கு எங்களின்  மங்காத வாழ்வும் ஓயாத உழைப்பும், குறையாத முயற்சியும், தளராத தன்னம்பிக்கையும் கொண்டு செழிப்பான வேளாண்மைத் தொழிலைச் செய்து வருகிறோம் என்பதை இவ்விடத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம்..

    இப்பகுதியில் முதன் முதலில் ‘பவர் டில்லர்’  இயந்திரத்தைக் கொண்டு விவசாயம்  பார்த்தது நான்தான். அந்த அளவிற்கு விவசாயத்திலுள்ள புதுமைகளைக் கொண்டு வளர்ச்சியைப் பெருக்கியுள்ளேன்.

    கே: ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஒரு கல்வி நிலையத்தைத் தொடங்கியதன் நோக்கம் பற்றி?

    ஒருமுறை விவசாயத்திற்கு விதை சார்ந்த பயிற்சி கருத்தரங்கத்திற்கு பங்கேற்க ஜெர்மன் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அதில் இந்தியாவிலேயே முன்னோடி விவசாயிகளைத் தேர்வு செய்தனர், அதில் தமிழ்நாட்டிலிருந்து நானும், வலையபாளையத்தைச் சேர்ந்த வி.வி. ஜெகதீஷ் அவர்களும் சென்றோம்.

    கருத்தரங்கம் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. நானோ பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவன். அவர்கள் பேசியது எதுவும் எனக்குப் புரியவில்லை. பிறகு என்னுடன் வந்தவர்கள் எனக்குப் புரியும்படி விளக்கத்தைக் தமிழில் சொன்னார்கள். அன்று நினைத்தேன், அந்த நினைவு ஒரு மாபெரும் இலட்சியமாக மாறியது.

    அடுத்தநாள் நான் இன்று பெற்ற அனுபவத்தையும், ஆதங்கத்தையும் என் மண்ணில் பிறந்த எந்தவொரு பிள்ளைகளும் படக்கூடாது என்று எண்ணி, பண்ணாரி அம்மன் தொழிற்நுட்பக் கல்லூரிக்கு எதிரில் நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தில் 2000ம் ஆண்டு அடிக்கல் போட்டு காமதேனு கலை அறிவியல் கல்லூரியை நிறுவினேன்.

    கட்டிடம் கட்ட என்னிடம் பணமில்லை. ஆனால், நம்பிக்கை மட்டும் நிறைகுடமாக இருந்தது. முடியும் என்று காலை வைத்து விட்டேன். இனி பின்வாங்கினால் நம்மால் எதையும் எங்கும் சாதிக்கவோ, சமாளிக்கவோ முடியாது என்று ஒரே விடாப்பிடியாய் என்னிடம் இருந்த அத்துனைப் பணத்தையும் முதலீடாகப் போட்டு கட்டடத்தை எழுப்பினேன்.

    எண்ணியது நடந்தது. சிலர் என்னிடம்  இப்பகுதியில் நல்ல பள்ளி இல்லை. இதனால், நீங்கள் பள்ளிக்கூடத்தை நிறுவுங்கள் என்றனர்.

    நான் சொன்னேன் என்னுடைய நோக்கம் இந்நிலையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது அல்ல. இங்குள்ளவர்கள் அனைவரும் பட்டங்கள் பெற வேண்டும், பாரினுள் உயரவேண்டும்   என்று கூறினேன்.

    ஆரம்பத்தில் வெறும் 160 மாணவர்களுடன் ஆரம்பித்தோம். எங்களின் சிறப்புகளைக் கண்டு, இன்று 3200 த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிக்கிறார்கள். இது என் மனதிற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் கற்பனையிலும் எட்டாத உயரத்தை அடைந்து விட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

    கே: கல்வி நிறுவனத்தை கிராமப்புறத்தில் தொடங்கியது பற்றி?  

    என்னுடைய நோக்கமே கிராமப்புறத்தில் உள்ளவர்கள் பட்டங்கள் பெற வேண்டும் என்பது மட்டுமே.

    இந்தக்கல்லூரியில் படிக்கும் 90 விழுக்காடு மாணவ, மாணவிகள்தான் முதல் தலைமுறை பட்டப்படிப்புகள் படித்தவர்கள் என்பதுதான் உண்மை.

    பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொடங்கியிருந்தால், நகர்ப்புறத்தில் தொடங்கியிருப்பேன். அது என்னுடைய இலட்சியத்தையும், விருப்பத்தையும் தடை செய்திருக்கும். என்னைப் பொறுத்தவரை கிராமப்புறத்திலுள்ள விவசாயிகளின்  வாழ்க்கைத்தரம் உயர வேண்டும், இதன் மூலம் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.

    இன்று இங்கு படித்த எத்தனையோ மாணவ, மாணவியர்கள் பல நாடுகளில் பணிபுரிகிறார்கள். இதை  கேட்கும் போது  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது.

    கே: இந்தக் கல்லூரியின் தனிச்சிறப்புகள் பற்றி?

    • பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் எங்கள் கல்லூரியும் ஒரு சிறந்த கல்லூரியாக விளங்கி வருகிறது.
    • இயற்கையான சூழலில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நல்ல காற்றோட்டமான வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளன.
    • ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி. தூய்மையான உணவுகள் போன்றவையுள்ளன.
    • எந்த கிராமத்திற்குள்ளும் சென்று வர 27 கல்லூரிப் பேருந்து வாகன  வசதிகள் உண்டு.
    • பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகம், அதிநவீன வசதி கொண்ட ஆய்வகங்கள், விளையாட்டுத் திடல்களும் உண்டு. அதன் மூலம் மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் சாதனைப் புரிந்து வருகிறார்கள்
    • நல்ல திறம் வாய்ந்த முதல்வர், சிறந்த முறையில் கற்ற அனுபவமிக்க ஆசிரியர்கள், இங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஒழுக்கமும், உயர்ந்த பண்பும் கொண்டவர்கள்.
    • பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆராய்ச்சி நிதி உதவிகள் இக்கல்லூரிக்கு வழங்கப்படுகிறது.
    • ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதித்து வருகிறார்கள்.

    கே: ஒரு கல்வி நிறுவனத்தில் ஆசிரியர்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும்?

    ஒழுக்கமும் உயர்ந்த பண்பும் போதிக்கும் இடம்தான் கல்விக்கூடம். இந்த இரண்டையும் கற்றுக் கொடுப்பவர்கள் தான் ஆசிரியர்கள்.

    ஆசிரியப் பணி மிகவும் மகத்தானது. ஒரு நல்ல வருங்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு அளப்பரியது.

    வகுப்பில் ஆசிரியர்கள் அன்பு கலந்த கண்டிப்போடு அறிவு கலந்த அரவணைப்புடன் மாணவர்களை வழிநடத்த வேண்டும்.

    மாணவர்களுக்கு வெறும் பாடத்தை மட்டுமே போதிக்காமல், வாழ்க்கையின் சோதனைகளையும், அவர்களின் எதிர்கால கனவையும் நிறைவேற்றும் ஒரு பேரொளியாக இருந்து, அவர்களுக்கு நல்லதொரு வழியைக் காட்ட வேண்டும்.

    எவ்வித விருப்பு, வெறுப்புகள் இன்றி, ஒவ்வொரு பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் பாவித்து, அவர்களை இந்த சமுதாயத்தில் நல்ல மனிதராக உருவாக்க வேண்டும்.

    கே: உங்களின் வளர்ச்சிக்குக் காரணம் என்று நீங்கள் கருதுவது?

    எந்தத் தொழில் செய்தாலும் அதில் நேர்மை இருக்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படாமல், நாம் எப்படி முன்னேற வேண்டும் என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.

    மடியில் விதையைக்கட்டிக் கொண்டு இன்னும் விளைச்சல் வரவில்லை என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது முட்டாள்தனம். எதையும் துணிச்சலோடு எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட பழக வேண்டும். அப்போதுதான் சவால்களை சமாளிக்க முடியும்.

    எது செய்தாலும் தானும் முன்னேற வேண்டும். தன்னைச் சுற்றியிருப்பவர்களும் முன்னேற வேண்டும் என்பதுதான் என்னுடைய வேதவாக்கு.

    சின்ன வயதிலிருந்து விவசாயத்தை நேசித்தவன் என்பதால் விவசாயம் சார்ந்த அனைத்து புதுமைகளையும் கொண்டு வந்து விவசாயம் செய்வேன். புதுமைகள் என்றால் வாழைக்குள் வெங்காயம் பயிரிடுவது, தென்னைக்குள் மஞ்சள் பயிரிடுவது என்று ஊடுபயிர் தொழில் நுட்பத்தை அன்றே நான் உட்படுத்தினேன். அதனால் இலாபம் கொண்ட தொழிலாக விவசாயம் உருவெடுத்தது. எனவே விவசாயத்தில் இலாபம் இல்லை என்று சொல்பவர்பளும் இத்தொழிற் நுட்பத்தைப் பயன்படுத்தினால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இரட்டிப்பு இலாபம் பெறலாம்.

    காலணி இல்லாமல் ஒரு காலத்தில் சென்ற நான் இன்று சொகுசுக்காரில் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன் என்பதே எனது வாழ்வின் வளர்ச்சியின் அடிப்படைக் கூற்று ஆகும். நான் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை விட்டதே இல்லை. சாதிக்கப் பிறந்து விட்டோம். அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொண்டாக வேண்டும் என்று 73 வயதிலும் இன்னும் ஓடியாடி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

    எந்த வேலையைச் செய்தாலும் என்னுடைய நேர்ப்பார்வையின் கீழ்தான் அந்த வேலையை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

    முடியாது என்ற சொல்லை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதே இல்லை.

    கே. உங்களை வளர்த்தெடுத்த வேளாண்மையைப் பற்றி சற்றுக்கூறுங்கள்?

    நான் வேளாண்மைத் தொழிலை இன்றும் திறம்பட இலாபமுடன் செயல்படுத்தி வருகிறேன் என்றால் அதற்கு முழுமுதற் காரணமும் முதற் காரணமுமாய் இருப்பவர்கள் என்னுடைய தோட்டத்தில் வேலை செய்யும் வேலையாட்களே ஆவர். அதாவது ஒரு கூலியாள் தொடர்ந்து மூன்று வருடம் எனது தோட்டத்தில் பணியாற்றினால் அவர்களுக்கு 1 பவுன் தங்கம் கொடுக்கப்படும். ஆது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சரிசமமாக வழங்கி விடுவேன். பிறரிடத்தில் 6 மணிநேரம் வேலைப்பார்க்கும் வேலையாட்கள் என்னிடத்தில் 8 மணிநேரம் வேலைபார்ப்பார்கள் காரணம் அவர்கள் மீது நான் வைத்த நம்பிக்கையும், அவர்கள் என்னிடத்தில் வைத்த நம்பிக்கையுமே ஆகும்.  நான் இதுவரை வேலையாட்களிடம் வேலையை மட்டும் கூறிச்சென்றுவிடுவேன், திரும்பி வந்து பார்த்தால் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுத்தி இருப்பார்கள். எனவே ஒரு காலத்தில் இப்படி இருந்த வேளாண்மை அறிவுசார்ந்த தொழிற்நுட்பமாக மாறியது, அதிலும் தற்பொழுது மண்வெட்டியின்றி தொழிற்நுட்ப கருவிகள்  மூலம் விவசாயம் செய்து வருகிறேன்.

    என்னிடம் ஒரு பழக்கமுண்டு. எந்த ஒரு புதிய தொழிற்நுட்பம் வந்தாலும் அதனை உடனே முதன் முதலாக எனது தோட்டத்தில் பரிசோதித்து விடுவேன். அவற்றில் முக்கியமானதாய் அமைந்தது ஒரே நாளில் 600 மெட்ரிக் டன் கரும்பை கரும்பு அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்து அருகிலுள்ள சக்தி சுகர்ஸ்க்கு  அனுப்பினேன். அந்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை. அதுபோல் தொழிற்நுட்பம் மாறினாலும் இன்றும் எனது தோட்டத்தில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் வேலையாட்களுக்கு வீடு தொலைக்காட்சி போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளேன். மேலும் வேலையாட்களின் சுகத் துக்கங்களிலும் கலந்து கொள்வேன்.

    கே: கல்வி நிலையம் நடத்துவதிலுள்ள சவால்கள் என்னென்ன?

    ஆரம்பத்தில் தொடங்கும் பொழுது நிறைய சவால்களைச் சந்தித்தேன்.  அனுபவம் தானே சிறந்த பாடம். அப்படி என் அனுபவத்தின் மூலம் தான் சவால்களை சமாளிக்கும் ஆற்றல் எனக்கு கிடைத்தது.

    எதையும் எதிர்கொள்வேன், பின் வாங்கியதே இல்லை. நாம் ஒரு இலட்சியத்திற்காக தொடங்கிய இந்தக் கல்வி நிறுவனத்தை, என்ன பிரச்சனையாக இருந்தாலும், நாம் தான் சந்திக்க வேண்டும் என்று  மற்றவர்களை நாடுவதை  முற்றிலும் தவிர்த்து விடுவேன்.

    வரவு – செலவுகள் எல்லாம் ஒருவரையறைக்குள் உட்பட்டு இருப்பதால், அதிலும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது.

    சிறந்த முதல்வர் அவரின் ஆளுமை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவர்களின் பண்பு நலன்கள் அதற்கு தகுந்தார் போல் ஒழுக்கம் நிறைந்த மாணவ மாணவியர்கள் போன்றவர்கள் இருக்கும் போது எவ்வித சவாலையும் சமாளிக்கலாம்.

    கல்லூரி வாகன ஓட்டுனர்கள் அனைவரும் நல்ல பயிற்சி பெற்றவர்கள். முதல்வர் தொடங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அவர்களின் பொறுப்பை, பொறுப்புணர்ந்து செய்வதால், எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இதனால், எவ்வித சவாலையும் எதிர்கொண்டு வருகிறேன்.

    கே: காமதேனு என்று இக்கல்லூரிக்கு பெயர் சூட்டக்காரணம் என்ன?

    ஒரு ராஜா வேட்டையாடச் செல்லும் போது வேட்டை எதுவும் கிடைக்காததால், நெடுந் தூரம் பயணம் செய்து சென்றார்கள். நெடுந் தூரப் பயணத்தால் ராஜாவும்  அவருடன் சென்றவர்களும் மிகுந்த  சோர்வடைந்தார்கள் அவர்களுக்கு பசியும், தாகமும் மிகவும் வாட்டி வதைத்தது.

    அருகில் யாரேனும் இருந்தால் அங்கு சென்று தண்ணீர் வாங்கி வாருங்கள் என்று சொன்னார் ராஜா. அவரின் சொல்லை ஏற்று ஒருவர் கொஞ்சம் தொலைவில் சென்றார். தூரத்தில் ஒரு வீட்டில் ஒரு வயது முதியவரும், ஒரு பெண் பிள்ளையும் இருப்பதைக் கண்டார் அவர்களிடம் சென்று நடந்ததைச் சொல்லி ராஜாவுக்கு குடிப்பதற்கு ஏதேனும் கொடுங்கள் என்று கேட்டார்

    உடனே தனது மகளை அழைத்து சின்ன மாட்டின் பாலைக்கறந்து அனைவருக்கும் கொடுக்குமாறு கூறினார். மகளும் பாலைக்கறந்து வந்தவரிடம் கொடுக்க. பாத்திரத்தில் கொண்டு சென்ற பாலை, ஓய்வெடுத்த அனைவரும் குடித்தும் பால் மிச்சமாக இருந்தது. அப்போதுதான் ராஜா சொன்னார் சின்னமாட்டின் பாலை நம்மால் குடிக்க முடியவில்லை என்றால், அந்தப் பசு காமதேனுவாகத்தான் இருக்க முடியும். குறைவில்லாமல் பாலைத் தரும் பசு அது என்று சொன்னார். இதனால்தான், கொடுப்பதைக் குறைவில்லாமல் கொடுக்கும் காமதேனு என்று பெயர் வைத்தேன்.

    கே. புதியதாகத் தொடங்கப்பட்ட உங்களின் கல்வியியல் கல்லூரி(B.Ed) பற்றி?

    “ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி” என்ற கூற்றை உண்மைபட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2015- 2016 ஆம் ஆண்டில் மத்திய மாநில அரசு அங்கீகாரத்துடன் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கீழ் காமதேனு கல்வியியல் கல்லூரியைத் தொடங்கினேன். இதன் மூலம் தலைசிறந்த தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி அவர்கள் வருங்கால சமுதாயத்தை ஒரு வலிமை மிகுந்த சமுதாயமாக உருவாக்க வேண்டும், என்ற நோக்கத்தோடுத் தொடங்கியது தான் இந்த நிறுவனம்.  இது என்னுடைய இலட்சிய வர்ழ்வில் உருவான மற்றும் ஒரு மைல்கல் என்பதனை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

    கே: குடும்பம் பற்றி?

    எனது மனைவி திருமதி. ஜானகி இல்லத்தரசி. என்னுடைய வெற்றியின் பெரிய பலம். என்னைப் பொறுத்தவரை மனைவியை மதிக்காதவன் மனிதனே இல்லை. குடும்பத்தை நடத்துவதில் மிகவும்  வல்லவர். எனக்கு ஏழு மகள்கள் சகுந்தலாதேவி, மலர்செல்வி, சுதா, நித்யா, ஆர்த்தி, அருந்ததி, கிருத்திகா ஒவ்வொருவரும் இரண்டுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை படித்தவர்கள். வெவ்வொரு துறையில் ஒவ்வொருவரும் பணியாற்றி வருகிறார்கள். இறைவனின் அருளால் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்.

    கே: எதிர்காலத் திட்டம்?

    ஒழுக்கமும், பாரம்பரியமும் மிக்க இந்தக்கல்வி நிலையம் இதே வளர்ச்சியில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    எல்லாத்துறையிலும் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் கொண்டு வர வேண்டும்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

    கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு தாங்கள் கூறுவது?

    எந்தத் தொழில் செய்தாலும் அதில் உண்மையாக இருக்க வேண்டும்.

    தொழிலை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

    எதுவும் உங்களால் முடியும் என்று நினையுங்கள் அதுதான் வெற்றியைத் தரும்.

    சமூக அந்தஸ்த்தில் பொருளாதாரத்தில் உச்சம் தொட்டாலும் ஓயாத உழைப்பு, நேர்மை உண்மை  போன்ற கூற்றுகளை வாழ்வின் எல்லை வரை கடைபிடிக்க வேண்டும்.

    விவசாயத்தை படித்த பட்டத்தாரிகளும் செய்ய வேண்டும் அப்போது தான் விவசாயம் வளம் பெறும் நாடும் வளர்ச்சி பெறும்.

    உள்ளத்தோடு உள்ளம்

    “மனமே மனிதனின் எண்ணங்களைத் தீர்மானிக்கிறது. அந்த எண்ணங்களில் தலையாய ஒன்றான தன்னம்பிக்கை தான், மனித வாழ்வைத் தீர்மானிக்கிறது. தன்னம்பிக்கை மிகுந்தவர்கள், உயரத்திரல் பறப்பதும், தன்னம்பிக்கையற்றவர்கள் பள்ளத்தில் சரிவதும் இயல்பாகும். எனவே மரம் நடுவதைப் போல, மனித மனங்களிலே தன்னம்பிக்கையை நட வேண்டும். அதுவே என் மானுட வாழ்வின் நோக்கம்,”என்று முடிவு செய்து கொண்டு, அமரர் டாக்டர் இல.செ.கந்தசாமி அய்யா அவர்கள் தொடங்கியது தான் இந்த தன்னம்பிக்கை இதழ்.

    பயனற்ற எண்ணக்களைகள் படர்ந்து கிடக்கும் மனதிற்குள் இறங்கி, அவற்றை வேரோடு பிடுங்கி எறிந்து, தூர்வாரி, தூய்மைப்படுத்தும் பணியைச் செவ்வனே செய்து கொண்டு வருகிறது,  நமது தன்னம்பிக்கை இதழ்.

    இம்மாதம் 6- ம் தேதி, இவ்விதழின் நிறுவனர் டாக்டர் இல. செ.கந்தசாமி அவர்களின் நினைவு நாள் ஆகும். இந்த நாளில், வாசகர்களிடம் ஒரு வேண்டுகோளை வைத்திட விரும்புகிறோம். அது என்னவென்றால் இவ்விதழின் (CIRCULATION) சுற்று எண்ணிக்கையில் அதிகப்படுத்தி, இதன் அரும்பணியை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்திட வேண்டும் என்பது தான்.

    அலைகளில் சிக்கிய படகு போல, எண்ணற்ற வலைகளிலே சிக்கி, இளைய சமுதாயம் பரிதவிக்கிறது. தன்னுணர்வு, தன்னாற்றல், தன்னம்பிக்கை, தன்னிலக்கு அற்றவர்களாக, தடம்புரண்டு போய்க் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் எதையடைய விரும்புகிறது என்று அறியாமல், சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல, அது சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறது.

    அவ்விளைய சமுதாயத்தினர்க்கு, தன்னையறியும் வழிமுறைகளையும், தன்னை நம்பும் அறிவுரைகளையும் வழங்கி, பொறுப்புமிக்கவர்களாக மாற்ற வேண்டும். அதற்குரிய அடித்தளப்பணிகளைச் செய்வதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் உண்டு. எனில் அவர்களுக்குத் துணையாக நமது தன்னம்பிக்கை உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல.

    இவற்றை உதட்டளவில் சொன்னதாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், உள்ளத்தோடு உள்ளமாக வைத்துச் சொன்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் சுமார் 10 பேரையாவது நமது தன்னம்பிக்கையின் வாசகர்களாகவும், சந்தாதாரர்களாகவும் சேர்பித்துத் தாருங்கள்.

    அய்யா இல.செ.கந்நசாமி அவர்களின் நோக்கம் தன்னம்பிக்கை இதழ் மூலமாகவும், தங்களின் உதவிக்கரம் மூலமாகவும் நிறைவேறட்டும். அவநம்பிக்கையற்ற, தன்னம்பிக்கை மிக்க தலைமுறை உருவாகட்டும்.