வெற்றிக்குரிய சிறந்த வழி!
மனிதனுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் தலையாயது, தன்னம்பிக்கை ஆகும். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள், தன்னம்பிக்கை என்ற ஏணியின் மூலம் ஏறி உயர்வடைந்து மேன்மை பெற்றவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தன்னம்பிக்கை இல்லாமல் சிறந்ததொரு வாழ்க்கை இல்லை. அமெரிக்க அறிஞன் எமர்ஸன், “தன்னையே நம்புவதுதான் தன்னம்பிக்கை ஆகும்” என்றார். உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால், வேறு யாரைத்தான் நம்பப்போகிறீர்கள்? “உன்னால் இந்தச் செயலை நிச்சயமாக முடிக்க முடியாது” என்று மற்றவர்கள் உங்களிடத்தில் சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்கள் அனைவரும் உங்களுடைய திறமையில் சந்தேகப்படுகிறார்கள். உங்களுக்குத் திறமை இருப்பதைத் தெரிந்தும், உங்கள்மேல் கொண்ட பொறாமையின் காரணமாக வேண்டுமென்றே கூட உங்களால் நிச்சயமாக இந்தச் செயலைச் செய்து முடிக்க முடியாது” என்று சொல்லலாம்.
ஆனால் நீங்கள் உங்களுடைய திறமையின்மீது எள்ளளவும் கூடச் சந்தேகப்படாதீர்கள்! என்னால் இந்தச் செயலை மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட பெரிய செயலையும் செய்து காட்ட முடியும்! “என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களுடைய ஆற்றலின் மீது நீங்கள் கடுகளவு கூடச் சந்தேகப்படாதீர்கள்! சந்தேகம் உங்களைப் படுபாதாளத்தில் தள்ளிவிடும்.”
“தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்.” என்ற உடுமலை நாராயணகவியின் பாடலை நெஞ்சில் நிறுத்துங்கள். “சந்தர்ப்பம், சூழ்நிலை தாய் தந்தையாகும்” என்கிறார், கவிஞர், எந்தச் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வந்து உங்களைக் கெடுக்க நினைத்தாலும், உங்கள் மேல் கொண்ட நம்பிக்கையைச் சிறிதும் தளர விடாதீர்கள்!
சிலர், “என்னால் இந்தக் காரியத்தை முடிக்க முடியுமா?” என்று மலைத்துப் போய், எந்தச் செயலையும் செய்வதற்கும் அவர்களால் முடியாமல் திக்கற்றுப்போய், திகைத்து நிற்கிறார்கள். பலம் சிறிதும் இல்லாதவன் கூட. ஊக்கத்தோடு ஒரு செயலை முடிப்பதற்கு முழு மூச்சாக நிற்கிறான். அப்படியிருக்கும் போது நீங்கள், உங்களை நம்பாமல் – உங்களுடைய திறமையை நம்பாமல் மௌனமாக நிற்கலாமா?
சிலர் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் மற்றவர்களின் தயவை எதிர்பார்த்து நிற்கிறார்கள். இப்படிப் பட்ட நிலை உங்களுக்கு வரலாமா? உங்கள் கால்களில் நீங்கள் நில்லுங்கள்!
பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞர் மாண்டெய்னும் “மனிதர்கள் தங்களுடைய ஆற்றலைப் பயன்படுத்தாமல் பிறருடைய உதவியை எதிர்பார்த்தே ஏங்கி நிற்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவர்களுடைய உதவியே போதுமானதாக உள்ளது” என்று கூறுகிறார்.
உங்களுக்குள்ளே ஆற்றரிலின் ஊற்று, மடை திறந்த வெள்ளம் போலப் பெருகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஏராளமான ஆற்றல் இருக்கிறது. அவைகளைக் கண்டு பிடித்து, அந்த ஆற்றலைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னுக்கு வருவதே விவேகமாகும்.
“ஒவ்வொரு மனிதனுடைய நம்பிக்கையும் அவனுள்ளே அமைந்திருக்கிறது! “ என்று கூறினான், உரோமானியக் கவிஞர் வர்ஜில்.
“எல்லா உதவிகளுக்கும் நான் என்னையே மிகவும் நம்புகிறேன்! “ என்று மாண்டெய்ன் எடுத்துரைக்கிறான்.
“தன்னையே மட்டும் தான் நம்பியிருத்தல் போன்ற நிச்சயமானது வேறொன்றுமில்லை;! “ என்று கூறியுள்ளான், ஜான்டே.
மற்றவர்களை மட்டும் நீங்கள் நம்பி வாழ்வது என்பது, உங்களைப் பற்றி உயர்ந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லாததே ஆகும்! ஊனமுற்றவர்களில் பலர் தன்மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்கிறர்கள். மற்றவர்களை அவர்கள் ஒரு போதும் நம்புவது இல்லை. மற்றவர்களின் உதவியை நாடுவதும் இல்லை. அப்படியிருக்கும் போது, உடரில் எந்த ஊனமும் இல்லாமல் நல்ல உடற்கட்டோடும், சிறந்த ஆரோக்கியத்தோடும் இருக்கும் நீங்கள் மற்றவர்களின் உதவியை நாடுவது மிகவும் கேவலமாகத் தெரியவில்லையா! சிந்தித்துப் பாருங்கள்!
தன்னுடைய கால்களில் நிற்கத் தெரிந்து கொண்ட மனிதன்தான், மிகச் சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளான் என்பதை நினைவில் வையுங்கள்! ரிலையன்ஸ் (தங்ப்ண்ஹய்ஸ்ரீங்) குழுமத்தின் நாயகர்களாக விளங்கும் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மிகச்சிறந்த தொழிலதிபர்கள், டாடா பிர்லா போன்றோர் கோடிகோடியாகச் செல்வத்தைக் குவித்துக் கொண்டே போகிறார்கள், என்றால் அதற்கு என்ன காரணம்? தளராத உழைப்பும், எவராலும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், தன்னை மட்டுமே நம்பும் மேம்பாடும், இடைவிடாத முயற்சியும்தான் காரணமாகும்..
உங்கள் கால்களில் நீங்கள் நிற்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்து விடாதீர்கள்!
இந்தக் காரியத்தை நான் செய்து முடிப்பேன்! “ என்று எண்ணி, அதில் மிகுந்த பிடிவாதம் உள்ளவர்களாகத் திகழவேண்டும். இந்தப் பிடிவாதம் உங்களுடைய வெற்றிக்கு வழி வகுக்குமேயல்லாமல், தோல்விப்படுகுழியில் உங்களைத் தள்ளிவிடாது. சிலர் தகாத காரியங்களைச் செய்வதற்கும், மற்றவர்களைத் துன்பக் கடரிலில் ஆழ்த்துவதற்கும் தேவையில்லாமல் முரட்டுப் பிடிவாதம் பிடிப்பார்கள். ஆனால் உங்களுடைய பிடிவாதம் கொள்கைப் பிடிவாதமாகும். இந்தப் பிடிவாதம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. இந்தப் பிடிவாதம் ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். உங்களுடைய கொள்கையை நிறைவேற்றும் முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடும்போது உலகமே உங்களை எதிர்த்தாலும் சிறிதும் கலங்காதீர்கள்! தைரியமாக எதிர்த்து நின்று போராடுங்கள்!
தன்னம்பிக்கை நிரம்பப் பெற்றவர்கள், தங்களை மேன்மக்களாகவே நினைத்துக் கொள்வார்கள். சங்கு சுட்டாலும் மிக்க வெண்மை தரும். கெட்டாலும் மேன்மக்கள், மேன்மக்களே! என்ற ஒப்பற்ற மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள். விதிவசத்தால் அவர்கள் தாழ்ந்து போனாலும் தன்னம்பிக்கை உணர்வு நிரம்பப் பெற்ற அவர்கள் மீண்டும் எழுந்து தலைநிமிர்ந்து ராஜ நடை போடுவார்கள். மிக உயர்ந்த நிலையை அடைந்தே தீருவார்கள்.
தன்னம்பிக்கை நிரம்பப் பெற்றவர்கள், தங்களுக்கு வரலாற்றில் ஒரு இடம் உண்டு என்று உறுதியாக நம்பக் கூடியவர்கள் ஆவார்கள்.
தாமஸ் ஆல்வா எடிசன் எரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்தார். தன் முயற்சியில் முழு வெற்றி பெற்றார். தன்மேல் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையே அவருடைய வெற்றிக்குக் காரணம் ஆகும்.
தன்னம்பிக்கை மிகுந்தவர்கள், உலகில் புகழ் பெற்ற மனிதர்களாக விளங்குகிறார்கள். இவர்கள்தாம், உண்மையில் உயிர் வாழ்பவர்கள் ஆவார்கள். தன்னம்பிக்கை இல்லாதவன், உயிரோடியிருந்தும், உயிரற்றவனாகவே மதிக்கப்படுவான்.
அவனால் உலகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தங்களையும், தங்களுடைய செயல்களையும் அதிகமாக நம்புகிறார்கள். தங்கள் மேல் மிகுந்த பற்று வைத்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகச் சிறந்த அற்புதமான வாழ்வை வாழ்ந்து காட்டும் திறம்படைத்தவர்களாக விளங்குகிறார்கள். அமெரிக்க அறிஞன் எமர்ஸன் ‘இறைவனும், ஏனைய மனிதர்களும் தன்னம்பிக்கை மிகுந்தவனை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.” என்கிறார்.
நீங்கள் உங்களுடைய திறமையில் நம்பிக்கை கொண்டு, அரிய செயல்களையெல்லாம் சிறப்பாகச் செய்து முடித்தால், உலகம் உங்களைப் பாராட்டும். எந்தச் செயல்களை நீங்கள் செய்து முடிக்க எண்ணுகிறீர்களோ, அவைகளை உடனே செய்து முடித்து விடுங்கள். அது உங்களுக்குச் சிறந்த புகழைத்தரும்.
நீங்கள் உங்களிடம் வைத்திருக்கும் தன்னம்பிக்கை என்ற செல்வத்தை மற்றவர்களுக்கும் அள்ளிக் கொடுங்கள். இதனால் மற்றவர்களும் மனம் மகிழ்வதோடு புதிய சாதனைகளைப் படைப்பதற்கும் தயாராக இருப்பார்கள்.
நீங்கள் தன்னம்பிக்கை என்ற பேரொளியை உங்களுடைய உள்ளத்தில் பாய்ச்சுவதோடு மட்டும் நின்று விடாதீர்கள்! இந்த அவனியெல்லாம், அந்த அழியாத பேரொளியைப் பரப்புவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுடைய நண்பர்கள், உங்களைச் சந்திக்கின்றவர்கள், உங்களுடைய உறவினர்கள் என்று எல்லோருக்குமே தன்னம்பிக்கை என்ற பேரொளியைப் பாய்ச்சுங்கள். அவர்களின் உள்ளங்களில் அந்தப் பேரொளி படரட்டும் ! உலகமெல்லாம் தன்னம்பிக்கை என்ற பேரொளி பிரகாசமாகக் காட்சியளிக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும?
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
என்ற பாரதிதாசனின் முழக்கம் அற்புதமாக நிறைவேறியிருக்கும்.
இன்றைய இளைஞர்கள் யாரையும் சார்ந்து நிற்காமல் தங்கள் கால்களில் நிற்கப் பழகிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை என்ற ஆடையை அணிந்து கொண்டு செயற்கரும் செயல்களைச் செய்து இந்த உலகை வலம் வர வேண்டும்.
நீங்கள் அவர்களுக்குத் தகுந்த வழிகாட்டிகளாக விளங்க வேண்டும். எண்ணம் போலத்தானே வாழ்வு அமையும். எனவே ‘மற்றவர்களின் சொத்துக்கும், பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன்”, என்ற உறுதியை மனதில் ஏற்றி அதை நிறைவேற்றும் வகையில் உங்களுடைய ஓயாத உழைப்பைச் சிந்தி வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இடை இடையே வரும் தோல்விகளை அன்போடு ஏற்றுக் கொண்டு, மனம் தளராமல் பாடுபட வேண்டும். நீங்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் தன்னம்பிக்கையின் துணை கொண்டு புதியதோர் உலகம் செய்யப்புறப்படுங்கள்…! வாழ்க்கையில் மிகச் சிறந்த வெற்றிகளைப் பெறுங்கள்…! வெற்றிக் கொரு வழி, தன்னம்பிக்கை தரும் வழி!
0 comments Posted in Articles