– 2017 – April | தன்னம்பிக்கை

Home » 2017 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றிக்குரிய சிறந்த வழி!

    மனிதனுக்கு இருக்க  வேண்டிய  சிறந்த  பண்புகளில்  தலையாயது, தன்னம்பிக்கை  ஆகும். வாழ்க்கையில்  வெற்றி  பெற்ற  மனிதர்கள், தன்னம்பிக்கை என்ற  ஏணியின்  மூலம் ஏறி  உயர்வடைந்து  மேன்மை  பெற்றவர்களாகத்  திகழ்ந்திருக்கிறார்கள். தன்னம்பிக்கை இல்லாமல்  சிறந்ததொரு  வாழ்க்கை இல்லை. அமெரிக்க அறிஞன்  எமர்ஸன், “தன்னையே நம்புவதுதான் தன்னம்பிக்கை ஆகும்” என்றார்.  உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால், வேறு யாரைத்தான் நம்பப்போகிறீர்கள்? “உன்னால்  இந்தச்  செயலை நிச்சயமாக முடிக்க  முடியாது” என்று  மற்றவர்கள் உங்களிடத்தில்  சொன்னால் அதை நீங்கள்  ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்கள் அனைவரும் உங்களுடைய திறமையில் சந்தேகப்படுகிறார்கள். உங்களுக்குத்  திறமை இருப்பதைத்  தெரிந்தும், உங்கள்மேல்  கொண்ட  பொறாமையின் காரணமாக  வேண்டுமென்றே கூட உங்களால்  நிச்சயமாக  இந்தச் செயலைச்  செய்து  முடிக்க முடியாது” என்று சொல்லலாம்.

    ஆனால் நீங்கள் உங்களுடைய  திறமையின்மீது  எள்ளளவும்  கூடச் சந்தேகப்படாதீர்கள்! என்னால்  இந்தச்  செயலை மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட  பெரிய  செயலையும்  செய்து காட்ட முடியும்! “என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களுடைய ஆற்றலின் மீது நீங்கள் கடுகளவு கூடச் சந்தேகப்படாதீர்கள்! சந்தேகம் உங்களைப் படுபாதாளத்தில்  தள்ளிவிடும்.”

    “தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்.” என்ற உடுமலை நாராயணகவியின் பாடலை  நெஞ்சில்  நிறுத்துங்கள். “சந்தர்ப்பம், சூழ்நிலை தாய் தந்தையாகும்” என்கிறார், கவிஞர், எந்தச்  சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வந்து  உங்களைக் கெடுக்க நினைத்தாலும், உங்கள் மேல் கொண்ட  நம்பிக்கையைச்  சிறிதும் தளர விடாதீர்கள்!

    சிலர், “என்னால்  இந்தக் காரியத்தை  முடிக்க  முடியுமா?” என்று மலைத்துப்  போய், எந்தச்  செயலையும்  செய்வதற்கும் அவர்களால்  முடியாமல்  திக்கற்றுப்போய், திகைத்து  நிற்கிறார்கள். பலம் சிறிதும்  இல்லாதவன் கூட. ஊக்கத்தோடு ஒரு செயலை  முடிப்பதற்கு முழு மூச்சாக  நிற்கிறான். அப்படியிருக்கும் போது  நீங்கள், உங்களை நம்பாமல்  – உங்களுடைய திறமையை நம்பாமல்  மௌனமாக நிற்கலாமா?

    சிலர் எந்தச்  செயலைச்  செய்வதாக  இருந்தாலும் மற்றவர்களின்  தயவை எதிர்பார்த்து நிற்கிறார்கள். இப்படிப் பட்ட நிலை  உங்களுக்கு வரலாமா? உங்கள் கால்களில்  நீங்கள் நில்லுங்கள்!

    பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞர்  மாண்டெய்னும் “மனிதர்கள் தங்களுடைய ஆற்றலைப்  பயன்படுத்தாமல்  பிறருடைய உதவியை எதிர்பார்த்தே  ஏங்கி நிற்கிறார்கள்.  ஆனால்  அவர்களுக்கு அவர்களுடைய  உதவியே போதுமானதாக உள்ளது” என்று கூறுகிறார்.
    உங்களுக்குள்ளே ஆற்றரிலின்  ஊற்று,  மடை திறந்த வெள்ளம் போலப் பெருகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஏராளமான ஆற்றல்  இருக்கிறது.  அவைகளைக் கண்டு பிடித்து,  அந்த ஆற்றலைப் பயன்படுத்தி  வாழ்க்கையில் முன்னுக்கு வருவதே  விவேகமாகும்.

    “ஒவ்வொரு மனிதனுடைய நம்பிக்கையும் அவனுள்ளே அமைந்திருக்கிறது! “ என்று கூறினான், உரோமானியக்  கவிஞர் வர்ஜில்.
    “எல்லா உதவிகளுக்கும் நான் என்னையே மிகவும் நம்புகிறேன்!  “ என்று  மாண்டெய்ன் எடுத்துரைக்கிறான்.
    “தன்னையே மட்டும் தான் நம்பியிருத்தல்  போன்ற நிச்சயமானது வேறொன்றுமில்லை;! “  என்று  கூறியுள்ளான், ஜான்டே.

    மற்றவர்களை மட்டும் நீங்கள்  நம்பி  வாழ்வது  என்பது,  உங்களைப்  பற்றி  உயர்ந்த  நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லாததே  ஆகும்! ஊனமுற்றவர்களில் பலர்  தன்மானமுள்ளவர்களாக  இருக்கிறார்கள்.  அவர்கள்  தங்களுடைய தேவைகளைத்  தாங்களே  நிறைவேற்றிக்  கொள்கிறர்கள். மற்றவர்களை அவர்கள் ஒரு போதும்  நம்புவது  இல்லை. மற்றவர்களின்  உதவியை  நாடுவதும்  இல்லை.  அப்படியிருக்கும் போது, உடரில்  எந்த ஊனமும் இல்லாமல்  நல்ல உடற்கட்டோடும், சிறந்த  ஆரோக்கியத்தோடும் இருக்கும்  நீங்கள்  மற்றவர்களின்  உதவியை நாடுவது  மிகவும்  கேவலமாகத்  தெரியவில்லையா!  சிந்தித்துப் பாருங்கள்!

    தன்னுடைய  கால்களில்  நிற்கத்  தெரிந்து கொண்ட  மனிதன்தான், மிகச்  சிறந்த  சாதனைகளைப்  படைத்துள்ளான் என்பதை  நினைவில்  வையுங்கள்! ரிலையன்ஸ் (தங்ப்ண்ஹய்ஸ்ரீங்) குழுமத்தின்  நாயகர்களாக விளங்கும்  அனில்  அம்பானி, முகேஷ் அம்பானி மிகச்சிறந்த தொழிலதிபர்கள், டாடா பிர்லா  போன்றோர் கோடிகோடியாகச்  செல்வத்தைக்  குவித்துக்  கொண்டே போகிறார்கள், என்றால்  அதற்கு  என்ன  காரணம்? தளராத உழைப்பும்,  எவராலும்  அசைக்க  முடியாத  தன்னம்பிக்கையும், தன்னை  மட்டுமே  நம்பும் மேம்பாடும், இடைவிடாத  முயற்சியும்தான்  காரணமாகும்..

    உங்கள்  கால்களில்  நீங்கள் நிற்க  வேண்டும் என்ற எண்ணம்  உங்களுக்கு  எப்பொழுதும் இருந்து  கொண்டே  இருக்க வேண்டும் என்பதை  நீங்கள்  ஒருபோதும்  மறந்து  விடாதீர்கள்!

    இந்தக் காரியத்தை  நான்  செய்து  முடிப்பேன்! “ என்று  எண்ணி,  அதில்  மிகுந்த பிடிவாதம் உள்ளவர்களாகத்  திகழவேண்டும். இந்தப் பிடிவாதம் உங்களுடைய வெற்றிக்கு வழி வகுக்குமேயல்லாமல், தோல்விப்படுகுழியில்  உங்களைத் தள்ளிவிடாது.  சிலர் தகாத  காரியங்களைச்  செய்வதற்கும், மற்றவர்களைத் துன்பக் கடரிலில்  ஆழ்த்துவதற்கும் தேவையில்லாமல்  முரட்டுப் பிடிவாதம்  பிடிப்பார்கள். ஆனால்  உங்களுடைய பிடிவாதம் கொள்கைப்  பிடிவாதமாகும். இந்தப்  பிடிவாதம் ஒவ்வொரு மனிதனுக்கும்  தேவை. இந்தப் பிடிவாதம் ஒரு மனிதனை உயர்ந்த  இடத்திற்கு  அழைத்துச் செல்லும். உங்களுடைய கொள்கையை நிறைவேற்றும் முயற்சியில்  நீங்கள்  தீவிரமாக ஈடுபடும்போது  உலகமே உங்களை  எதிர்த்தாலும் சிறிதும்  கலங்காதீர்கள்!  தைரியமாக  எதிர்த்து நின்று போராடுங்கள்!

    தன்னம்பிக்கை  நிரம்பப் பெற்றவர்கள், தங்களை மேன்மக்களாகவே நினைத்துக் கொள்வார்கள். சங்கு  சுட்டாலும் மிக்க  வெண்மை தரும்.              கெட்டாலும் மேன்மக்கள், மேன்மக்களே! என்ற ஒப்பற்ற மொழிக்கு   எடுத்துக்காட்டாக விளங்குவார்கள். விதிவசத்தால்  அவர்கள்  தாழ்ந்து போனாலும் தன்னம்பிக்கை  உணர்வு  நிரம்பப் பெற்ற அவர்கள்  மீண்டும் எழுந்து  தலைநிமிர்ந்து  ராஜ நடை  போடுவார்கள். மிக உயர்ந்த நிலையை அடைந்தே  தீருவார்கள்.

    தன்னம்பிக்கை நிரம்பப்  பெற்றவர்கள், தங்களுக்கு வரலாற்றில் ஒரு இடம் உண்டு  என்று  உறுதியாக நம்பக் கூடியவர்கள் ஆவார்கள்.
    தாமஸ் ஆல்வா  எடிசன்   எரிந்து சாம்பலாகாத  இழைகளைக் கொண்ட  மின்சார பல்பை  உருவாக்குவதற்குப் பல  ஆண்டுகள்  ஆராய்ச்சி செய்து,  அல்லும்  பகலும்  பாடுபட்டு உழைத்தார். தன்  முயற்சியில்  முழு வெற்றி பெற்றார்.  தன்மேல்  கொண்ட  அசைக்க  முடியாத நம்பிக்கையே அவருடைய வெற்றிக்குக் காரணம் ஆகும்.

    தன்னம்பிக்கை மிகுந்தவர்கள், உலகில்  புகழ் பெற்ற மனிதர்களாக விளங்குகிறார்கள். இவர்கள்தாம், உண்மையில்  உயிர்  வாழ்பவர்கள் ஆவார்கள். தன்னம்பிக்கை இல்லாதவன், உயிரோடியிருந்தும், உயிரற்றவனாகவே மதிக்கப்படுவான்.

    அவனால்  உலகத்திற்கு  எந்தப்  பயனும்  இல்லை. தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தங்களையும், தங்களுடைய செயல்களையும் அதிகமாக நம்புகிறார்கள். தங்கள் மேல்  மிகுந்த பற்று வைத்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகச்  சிறந்த அற்புதமான  வாழ்வை  வாழ்ந்து  காட்டும் திறம்படைத்தவர்களாக  விளங்குகிறார்கள். அமெரிக்க அறிஞன் எமர்ஸன் ‘இறைவனும், ஏனைய மனிதர்களும் தன்னம்பிக்கை மிகுந்தவனை  மிகுந்த  மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.” என்கிறார்.

    நீங்கள் உங்களுடைய திறமையில்  நம்பிக்கை கொண்டு, அரிய  செயல்களையெல்லாம்  சிறப்பாகச்  செய்து முடித்தால்,  உலகம்  உங்களைப் பாராட்டும். எந்தச் செயல்களை நீங்கள்  செய்து  முடிக்க எண்ணுகிறீர்களோ, அவைகளை உடனே  செய்து முடித்து விடுங்கள். அது  உங்களுக்குச் சிறந்த புகழைத்தரும்.

    நீங்கள் உங்களிடம் வைத்திருக்கும் தன்னம்பிக்கை  என்ற செல்வத்தை  மற்றவர்களுக்கும்  அள்ளிக் கொடுங்கள்.  இதனால்  மற்றவர்களும் மனம் மகிழ்வதோடு புதிய  சாதனைகளைப்  படைப்பதற்கும்  தயாராக இருப்பார்கள்.

    நீங்கள் தன்னம்பிக்கை என்ற பேரொளியை உங்களுடைய உள்ளத்தில்  பாய்ச்சுவதோடு மட்டும் நின்று  விடாதீர்கள்!  இந்த அவனியெல்லாம், அந்த அழியாத பேரொளியைப் பரப்புவதற்கு  முயற்சி  செய்யுங்கள். உங்களுடைய  நண்பர்கள், உங்களைச் சந்திக்கின்றவர்கள், உங்களுடைய உறவினர்கள் என்று  எல்லோருக்குமே  தன்னம்பிக்கை என்ற பேரொளியைப்  பாய்ச்சுங்கள். அவர்களின்  உள்ளங்களில்  அந்தப் பேரொளி படரட்டும் ! உலகமெல்லாம்  தன்னம்பிக்கை என்ற  பேரொளி பிரகாசமாகக் காட்சியளிக்குமானால்  எவ்வளவு  நன்றாக  இருக்கும?

    புதியதோர்    உலகம்     செய்வோம் –     கெட்ட   போரிடும்    உலகத்தை   வேரோடு    சாய்ப்போம்.
    என்ற பாரதிதாசனின் முழக்கம் அற்புதமாக  நிறைவேறியிருக்கும்.

    இன்றைய இளைஞர்கள் யாரையும் சார்ந்து  நிற்காமல்  தங்கள் கால்களில்  நிற்கப் பழகிக்  கொள்ள வேண்டும்.  தன்னம்பிக்கை  என்ற ஆடையை அணிந்து கொண்டு செயற்கரும் செயல்களைச்  செய்து  இந்த  உலகை  வலம் வர  வேண்டும்.

    நீங்கள் அவர்களுக்குத்  தகுந்த வழிகாட்டிகளாக விளங்க  வேண்டும்.  எண்ணம்  போலத்தானே வாழ்வு  அமையும். எனவே  ‘மற்றவர்களின்  சொத்துக்கும், பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன்”, என்ற  உறுதியை  மனதில்  ஏற்றி  அதை நிறைவேற்றும் வகையில்  உங்களுடைய ஓயாத உழைப்பைச் சிந்தி  வாழ்க்கையில்  முன்னுக்கு வருவதற்கு  முயற்சி  செய்ய வேண்டும்.  இடை இடையே வரும் தோல்விகளை அன்போடு  ஏற்றுக் கொண்டு, மனம் தளராமல்  பாடுபட வேண்டும். நீங்கள் உங்கள்  மேல்  வைத்திருக்கும்  தன்னம்பிக்கையின் துணை கொண்டு புதியதோர் உலகம்  செய்யப்புறப்படுங்கள்…! வாழ்க்கையில்  மிகச்  சிறந்த  வெற்றிகளைப் பெறுங்கள்…! வெற்றிக் கொரு வழி, தன்னம்பிக்கை தரும் வழி!

    சக்தியும் இளமையும்

    உயிர் நண்பர்களே! உயிர்ப்போடு இருப்பதுதான் இளமை என்று நாம் முதல் அத்தியாத்திலேயே பார்த்தோம். நம் உயிரின் செறிவு அதிகமாக  இருக்கும் வரைதான் நமக்கு இளமைத் தன்மை இருக்கும். நம் உயிர்ச் சக்தியை நிலையாகச் செறிவுத் தன்மையில் வைக்கத் தெரிந்துகொண்டால் நாம் என்றும் இளமையாக இருக்க முடியும். ஆக, அந்த நுட்பங்களைப் பற்றி இனி நாம் பார்ப்போம்.

    1. சக்தி மருத்துவம்: நம் உடலின் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் ஆங்கில மருத்துவ இரசாயனங்களை எடுத்துக்கொள்வதற்கு பதில் மாற்று மருத்துவ, சக்தி மருத்துவத்தை நாடுவது நல்லது. ஆங்கில மருந்துகள் பின் விளைவுகளைத் தருவதோடு நம் இளமையின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் உயிர்ச் சக்தியை கணிசமாகப் பதம் பார்க்கும். நம் சக்தி மருத்துவங்களோ நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். எது வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
    2. ஹோமியோபதி மருத்துவம்: ஹோமியோபதியில் ஜின்சங் (Ginseng) என்ற மருந்து உடல் மற்றும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எங்கேயும் போக வேண்டாம். நாமே இலகுவாக செய்யலாம். கால் முனை முதல் தலை வரை இருக்கும் அசையும் மூட்டுகளை (Joints) ஒவ்வொன்றாக அசையும் விதமாக உடற் பயிற்சி செய்வதால் மூட்டோடு இணைந்துள்ள நரம்பும் உடல் பகுதியும் புத்துணர்வு பெறும்.
    3. இலட்சிய நெருப்பு மற்றும் நேர்மறைச் சிந்தனைகள்: நாம் இனம் கண்டு வைத்துள்ள நமக்கான இலட்சியங்களின் நெருப்பு நமக்குள்ளே அனையாமல் இருக்குமாயின், நம் உயிர்ச் சக்திச் செறிவாக இயங்கும். அப்படி ஒரு இலட்சிய வெறி இருக்கும் வரை நம் முந்தைய நோய்கள் மற்றும் சக்தி குறைபாடுகள் பறந்து போகும். என்ன கதை விடுகிறேன் என்று நினைக்காதீர்கள். உண்மையை உணர வேண்டுமாயின், நீங்களும் உங்கள் இலட்சியத்தில் கருத்தாய் நெருப்பாய் இருந்து பாருங்கள். உங்கள் உயிர்ச் சக்தி அதற்குத் தயாராய் மாறிடும் அதிசயத்தை உணர்வீர்கள். இந்த இலட்சிய வெறியோடு நம் சிந்தனைகளை நேர்மறையாக வைத்துக் கொள்வோ மேயாயின், நம் உயிர்ச் சக்தி பிரவாகம் எடுக்கும். அப்படி இருந்து வாழ்வினில் வெற்றி காண வாழ்த்துக்கள். பிறர் நம்மை வாழ்த்தும்படி வாழ்வதாலும் நமக்குள் உயிர்ச் சக்தி பெருகும். இறுதியாக நம் பிறப்பின் அர்த்தம் புரிந்து அது நோக்கிய பயணமாக நம் வாழ்க்கை அமைந்தாலும் இளமையாக இருக்கலாம்.
    4. சக்தி பானங்கள்: பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள் பஸ்பங்கள், முதலியன நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். நுனா பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் நோனி பானம் நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கிறது. இயற்கையாக தயாரிக்கப்படும் சக்தி பானங்களும் நம் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
    5. சக்தி ஸ்தலங்களுக்கு விஜயம்: சக்தியுள்ள வழிபாட்டுத் ஸ்தலங்கள் நம் உயிர்ச் சக்தியை செறிவாக்க உறுதுணையாக இருக்கும். நாம் சக்தி உள்ள ஸ்தலங்களுக்குச் செல்லும்போது, துரிய தியானம் கற்றவர்க்கு துரியச் சக்கரம் (உச்சம் தலை) விழிப்பு பெரும். கோவில் கருவறையில் நிலை நிறுத்தப் பட்டிருக்கும் சக்திச் சூழலுக்குள் நமது பூஜை பொருட்கள் உள் சென்று வெளியே வருவதால் அவைகள் சக்தியூட்டம் பெறுகின்றன. அவற்றை நாம் அங்கேயே சாப்பிடும்போது நாமும் அந்த சக்தியைப் பெறுகிறோம். கருவறையின் உள்ளே நம் பூஜை பொருட்களை மட்டுமே அனுமதிப்பதைவிட நம்மை அனுமதிப்பது இன்னும் சிறப்பானது. அவ்வவகை சக்தி ஸ்தலங்கள் எவை என இனம் கண்டு அங்கு நாம் கருவறை வரை சென்று முழுப் பலனைப் பெறுவது மிகவும் நல்லது. சக்தி வாய்ந்த ஸ்தலங்களுக்கு உதாரணமாக திருப்பதி ஏழுமலையான், ஆழியார் அறிவுத் திருக்கோவில், கோவை வெள்ளியங்கிரி ஈசா தியான லிங்க கோவில், மகான்களின் ஜீவ சமாதிகள், வேளாங்கன்னி பேராலயம், நாகூர் தர்கா, சாய்பாபா கோயில்கள் முதலியனவற்றைக் குறிப்பிடலாம்.

    “கற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்”

    இரண்டாம் படி:

    நாம் அடையும் இலக்கிற்கான செயல்பாடுகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்வதால், நாம் எப்படியாவது அந்த இலக்கை அடைய வேண்டும் என்ற உந்துதலுக்குத் தள்ளப்படுவோம்.

    “வினைத்திட்பம் என்பது ஒருவனது மனத்திட்பம்

    மற்றவை எல்லாம் பிற”. (குறள்: 661)

    என்ற வள்ளுவரின் வாக்கின்படி ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க மன உறுதி அவசியம். செய்யும் செயல்களில் வெற்றி, தோல்வி இரண்டும் வரும். வெற்றியின் போது மகிழ்ச்சியும், தோல்வியின் போது, அதற்கான தண்டனையை நமக்கு நாமே அளித்து, தவறுகளை சரி செய்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் மூன்று பிம்பங்கள் உண்டு.

    1. நமக்கு நம்மைப் பற்றிய அபிப்ராயம்
    2. மற்றவர்களுக்கு நம்மைப் பற்றிய அபிப்ராயம்.
    3. உண்மையான நம்முடைய பிம்பம்.

    மூன்றாவது படி:

    நாம் அடைய வேண்டிய இலட்சியத்திற்கு ஆகும் கால அவகாசம் பற்றி திட்டமிடுதல் ஆகும்.  காலத்தை கணக்கிடக்கூடியவர்களால் மட்டுமே கடமையைச் சரியாகச் செய்ய இயலும், அவர்களால் முடியாத காரியமே இல்லை என்ற கருத்தை

    “அருவினை என்ப உளவோ கருவியான்

    காலம் அறிந்து செயின்”.  (குறள்: 483)

    என்ற வள்ளுவரின் குறளும் வலியுறுத்துகின்றது. இந்த மூன்றாம்படியில் ‘கனவுபுத்தகம்’ (Dream Book) என்ற ஒன்றை பயன்படுத்த வேண்டும். இதில் தன் இலட்சியம் பற்றிய புகைப்படங்கள், ஒவ்வொன்றிற்கும் தேவையான ஆட்கள், தேவையான பொருளாதாரம், ஆகும் கால அளவு போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பின் அதன்படி  நடக்கின்றதா? என்று  தொடர்ந்து Review செய்ய வேண்டும்.

    நான்காவது படி:

    இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன, எப்படி, எந்த காலகட்டத்தில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பின், வரும் இடையூறுகளை தவிர்க்க ‘மந்திரச்சட்டம்’ (Magic Rule) ஐ கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் ‘21 நாட்கள்’ தொடர்ந்து கடைப்பிடித்தால் அதுவே ஒரு பழக்கம் ஆகிவிடும் என்பதுதான் அந்த மந்திரச்சட்டம்.  இலக்கை அடையும் வரை எந்த ஆசா -பாசங்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது. நம் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் தந்தை மகனிற்கு சொல்லிய அறிவுரை இங்கு குறிப்பிடப்படுவது மேலும் வலுவூட்டுவதாக இருக்கும்.

    “அப்துல்… முன்னேற்றம் காண்பதற்கு நீ இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும். ஒரு கூடு கூட இல்லாமல் தன்னந்தனியாக வானவெளியில் நாரை பறக்கவில்லையா? உன்னுடைய மகத்தான ஆசைகள் நிறைந்த இடத்தை அடைவதற்காக நீ பிறந்த இடத்தின் ஏக்கத்தை உதறியே தீரவேண்டும். எங்களது, பற்றோ அல்லது தேவைகளோ உன்னை கட்டுப்படுத்தி வைக்காது”. இத்தகைய ஆசிர்வாதம் அவருடைய மகனை உலகப்புகழ் மிக்க விஞ்ஞானியாக மாற வழிவகுத்தது. எதிர்வரும் இடையூறுகளை எதிர்த்து நாம் செய்யும் காரியத்தை வைராக்யத்துடன்  வெற்றிகரமாக முடிக்கும் போது உலகம் எய்திய இன்பபெருக்கும் புகழ் மாலையாக வினைக்குரியவரை வந்தடையும் என்பதை

    “ துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

    இன்பம் பயக்கும் வினை”. (குறள்: 669)

    என்ற குறள் வலியுறுத்துகின்றது.

    ஐந்தாவதுபடி:

    நாம் நம் இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுத்த ஆரம்பித்ததிலிருந்து அதற்கான ஊக்கமும், உற்சாகமும் சிறிது கூட குறையாமல் இருக்க வேண்டும். நம் வாழ்க்கை என்ற தீபம் எப்பொழுதும் சுடர்விட்டு ஒளிவீசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால், ஊக்கம் என்ற எரிபொருள் தொடர்ந்து போடப்பட வேண்டும்.

    “ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

    ஊக்கம் உடையான் உழை”. (குறள்: 594)

    என்ற வள்ளுவரின் குறள் இத்தகைய ஊக்கமுடன் உழைப்பவரின் உழைப்பிற்கு ஏற்ற செல்வம் அந்த வினைக்குரிய வரை தானாகவே வந்து சேரும் என்று எடுத்துரைக்கின்றது. மேலும், கலங்கரை விளக்கம் மூலம் விவரிக்கப்பட்ட வழிமுறைகள் ஒருவரை “தனக்கு முன்னால் இருப்பதோ, பின்னால் இருப்பதோ முக்கியமில்லை தனக்குள்தான் எல்லாம் இருக்கின்றது” என்பதை உணரச்செய்து,

    “ ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

     தாழாது உஞற்று பவர்”. (குறள்: 620)

    என்ற வள்ளுவரின் குறளில் கூறியுள்ளபடி எந்த வித பயமோ அல்லது தளர்ச்சியோ இன்றி, ஊக்கத்துடன் தன் இலக்கை அடைய உழைப்பவர்கள் விதியையும் வெல்லத்தக்கவர்களாக விளங்கச் செய்யும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

    அடுத்த படியாக ‘மல்யுத்த வீரர்’  பற்றிய விளக்கங்கள் தொடரும்….

    ஸ்ரீ லங்கா- சுற்றுலா

    கொழும்பு கடை வீதி – பீச்

    ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்தினோம். டூர் கைடிடம் நல்ல ஓட்டலில் தங்குமாறு விசாரிக்கச் சொன்னோம். தமிழ் பேசும் டிரைவர் ராஜா உடன் வர 20 பேரும் ஷாப்பிங் புறப்பட்டோம்.

    சுமார் 2. 30 மணிநேரம் கடைவீதியைச் சுற்றிப்பார்த்து உடைகள், பொம்மைகள் எனப் பலவும் வாங்கினார்கள். அதன் பின் எல்லோரையும் பீச்சுக்கு அனுப்பிவிட்டு, காரில் சென்று இரவு தங்க ஏற்பாடு செய்துள்ள அறைகளைப் பார்த்தேன்.

    வில்வகர்மா சங்க கட்டிடம்; கிரிஸ்கோ ஓட்டலில் தங்கினோம். அறைகள் சுத்தமாக இருந்தன. வை-பை வசதியும் இருந்தது. ஒருவார காலமாக வாட்ஸ் ஆப்பில் வந்த செய்திகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்தன. அறைகளைப் பதிவு செய்து விட்டு பீச்சுக்கு நானும் சென்றேன்.

    சூரியன் கடலுக்குள் மூழ்கும் காட்சியைப் படம் பிடித்தோம். கால்பேஸ் பீச் என்று பெயராம், கடலில் கால்களை நனைத்து மகிழ்ந்தனர். அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலின் பெயராலேயே இந்த பீச்சும் அழைக்கப்படுகிறது.

    இரவு உணவு சூர்யா உணவகத்தில் சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. அறைகளுக்குச் சென்று உறங்கினோம்.

    மறுநாள் விமானத்துக்குச் செல்வதால், தாமதமாக எழுந்தால் போது மென்றேன். சகோதரிகள் 7 மணிக்குள் தயாராகி, கீழே சென்று கணபதி கோயிலில் வழிபட்டு, சிவப்பரிசிக் கஞ்சி பிரசாதம் சாப்பிட்டு மகிழ்ந்தனர். பின் அடுத்த தெருவில் உள்ள கதிரேசன்( முருகன்) கோயில் மற்றும் கணபதி, வெங்கடாஜலபதி கோயில் பார்த்து திரும்பினோம்.

    அறைகளைக் காலி செய்து, வாகனத்தில் புறப்பட்டு, நல்ல உணவகமான தவளகிரி சென்றோம். கூட்டம் நிற்பதற்கே இடமில்லை. 10 நிமிடம் காத்திருக்கலாம் என்றேன். ஒருவர் இருக்கை காலியாக அரைமணி நேரத்திற்கு மேலாகும் என்றதால், அருகிலிருந்த அமிர்தவிலாஸ் ஓட்டலில் இட்லி, வடை, தோசை சாப்பிட்டோம். சுமார்தான்.

    விமானம் பகல் 2.45 க்கு என்பதால் பகல் 12 க்குள் விமான நிலையம் செல்ல வேண்டுமென்பதால். மதிய உணவாக இட்லி தோசை வடை கட்டிச் செல்லாம் என்ற என் பேச்சு எடுபடவில்லை. டூர் கைடுக்கு நரி முகத்தில் விழித்து விட்டாற் போல் ரூ 2000 மிச்சம்.

    வட்டாலை பகுதி சென்று ஆர்பிகோ என்ற பெரிய சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையின் தனிச்சிறப்பு பிஸ்கட் மெலிபன் இஞ்சி மற்றும் எலுமிச்சை கிரீம் வாங்கினோம். நன்றாக சுவையாக இருந்தது.

    விமான நிலையம் சென்று, கைவசமிருந்த தயிரில் சர்க்கரை கலந்து லெஸி தயாரித்து சாப்பிட்டு பழங்களுடன் பசியாறினோம்.

    டூர்கைடு எவ்வித வழிகாட்டுதலுமின்றி சென்று விட்டார். நாங்கள் பெட்டிகளை செக் இன் செய்து, பாதுகாப்பு பரிசோதனை முடித்து ஸ்னபஸ் ஜெட் விமானத்தில் பகல் 2.40 க்கு புறப்பட்டு 3.30 மதுரையில் இறங்கினோம்.

    வாகன ஓட்டுநர்கள் ராஜா மற்றும் சமான் இருவருக்கும் மொத்தமாக ரூ. 4000 டிப்ஸ் கொடுத்தோம். சோதனைகள் முடித்து, வெளியே வந்து தயாராக காத்திருந்த மினி பஸ்ஸில் 17 பேர் பயணப்பட்டு 4.15 க்கு புறப்பட்டு, திண்டுக்கல் அருகில் கீரீன் பார்க் உணவகத்தில் டிபன் சாப்பிட்டு இரவு 9 க்கு நலமுடன் கோவைக்குத்திரும்பினோம்.

    மீதி 3 பேர் மதுரைக்கு சென்று, இல்லம் திரும்பினர். ஒரு வார கால இலங்கைச்சுற்றுலா இனிதே முடிந்தது. கைவசமிருந்த இலங்கை ரூபாயை கோவையில் நம் ரூபாயாக மறுநாள் மாற்றினோம்.

    வாழ்க வளமுடன்

    இங்கு இவர் இப்படி

    திருமதி. ஞானாம்பாள்

    யோகாசன சாதனையாளர்.

    முதுமை என்றாலே, முகத்தில் சுருக்கம், மூட்டுவலி பார்வைக் குறைபாடு தளர்ந்து நடை போடுவோர்களுக்கு மத்தியில், நோய் நொடிகளைப் புறந்தள்ளி, , யோகசானத்தில் சாதனை படைத்து வருகிறார் ஞானம்பாள் அவர்கள். தள்ளாத வயதிலும் ஓர் தன்னம்பிக்கை. அதிவிரைவான வாழ்க்கையில், ஆரோக்கியம் குறைந்து விட்ட இன்றைய காலகட்டத்தில், முதுமையிலும் ஒரு முன் உதாரணமாக நலமாக வலம் வருகிறார். நடை பழகிய நாளில் இருந்தே யோகாசனக்கலையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, அவற்றை இன்று வரைக்கும் அசராமல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

    எது நடந்தாலும் நம்பிக்கையோடு நடை போட பழக வேண்டும் இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே, எவர் ஒருவர் மனதை அடக்கி ஒருமுகபடுத்துகிறாரோ அவர்களே வாழக்கையில் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். அந்த வகையில் 98 வயதிலும் நோய் நொடியில்லாமல், புன்னகையோடு பல்வேறு யோகாசனத்தை பாங்குடன் செய்து, இன்று ஜனாதிபதி கையால் விருது பெற்று சாதனை படைத்திருக்கிறார் யோகா பாட்டி திருமதி ஞானாம்பாள் அவர்கள். ஆசனப்பயிற்சியால் அனைவரையும் அசர வைக்கும் அவரே சொல்லக் கேட்போமா?

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியபுரம் தான் என்னுடைய சொந்த ஊர். சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு, அன்றாடம் யோகாசனம் செய்வதில் ஓர் ஈடுபாடு. அதற்கு என் தாத்தா – பாட்டி, அம்மா – அப்பாதான் குருக்கள்.

    நான் அவ்வளவாகப் படிக்கவில்லை, அந்தக் காலத்தில்  பெண் பிள்ளைகளை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். இந்நிலையில், வீட்டுப்பணிகளுடன் என் அன்றாட வாழ்க்கையும் இருந்தது.

    ஒருவரின் தனித்திறமை அவர்களின் இளம் வயதிலேயே தெரியும் என்று சொல்வார்கள். அப்படி எனக்குள் இருந்தது தான் யோகாசனக் கலை. இந்தக்கலையின் ஈர்ப்பு எனக்கு சிறு வயது முதலே அதிகமாக இருந்தது. இதனால் இந்தக்கலையை நான் முழுவதுமாகக் கற்றுக் கொள்ள முனைந்தேன்.

    அக்கலையை முறையாகக் கற்றுக் கொண்ட காலத்திலிருந்து, இன்று வரை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறேன். இதற்கு விடுப்புக் கொடுத்ததே இல்லை. அசராமல் ஆசனம் செய்து வரும் நான், நெகமம் சந்திராபுரத்தைச் சேர்ந்த சித்தவைத்தியரான திரு. வெங்கடசாமி அவர்களை மணம் புரிந்தேன். பிறந்த வீட்டில் தொடங்கிய யோகாசனக்கலை, புகுந்த வீட்டிலும் தொடர்ந்தது. சித்தவைத்திய குடும்பத்தில் யோகக்கலையும் ஐக்கியமாகிவிட்டது. எனக்கு 5 பிள்ளைகள்.  எனது கணவர் உட்பட, என் ஐந்து பிள்ளைகளும் யோகக்கலையை ஆர்வமுடன் கற்றுத் தேர்ந்தனர்.  அந்தக் கற்றல் இன்றைக்கு அவர்களை ஆசிரியர்களாக்கி, அவர்கள் வசிக்கும் இடங்களில் யோகா மையத்தை அமைத்து, ஆயிரம் ஆயிரம் பேருக்கு கற்றுக்கொடுக்க வைத்துள்ளது.

    அதனோடு, சித்த வைத்தியத்தையும் முறையையும் முறையாக அளித்து வருகின்றனர், எம் பிள்ளைகளைத் தொடர்ந்து, அவர்கள் பிள்ளைகளும் அதாவது எனது பேரன் – பேத்திகளும் யோகாசனத்தை முறைப்படி கற்று, அவற்றை முறையாக எடுத்துப்படித்தும் பலருக்கு பயிற்சி அளித்தும் வருகின்றனர். அவர்கள் இன்று யோகாசனக்கலையில் வல்லவர்களாகவும் வலம் வருகிறார்கள். தலைமுறை தாண்டியும் தொடரும் இந்த யோகாசனக்கலையால் எங்களுக்கு பெருமையும் வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது. யோகா குடும்பம் என்பதால் ஒற்றுமையும் எங்களுக்குள் நிலைத்திருக்கிறது.

    யோகாக்கலையும், சித்த வைத்தியமும் கலந்த எங்கள் குடும்பத்தில் நவீன மருத்துவத்தை நாடிச் சென்றதில்லை. மாத்திரை மருந்துகளைச் சாப்பிட்டதில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் சுகப்பிரசவம் தான்  என்கிறார் ஞானம்பாள் அவர்கள்.

    மூச்சுப்பயிற்சி, நின்றநிலை ஆசனம், நிமிர்ந்த நிலை ஆசனம், பத்மாசானம், பாதாசனம், சர்வாங்காசனம், சிரசானம், சித்தாசனம், சோமாசனம், ஹாலாசனம், என்று 50திற்கும் மேற்பட்ட ஆசனங்களை அசராமல் செய்து பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறார்.

    படிப்பு இல்லை, கலையின் மீது பிடிப்பு இருந்தது இது யோகக்கலையில் வெற்றியைத் தேடித் தந்தது இவருக்கு. பல்வேறு விருதுகள், பாராட்டுகள் என்று பதக்கங்களுக்கும் பஞ்சமில்லை. கடந்த 2012ம் ஆண்டு திருப்பூரில் நடந்த இன்டர்நேசஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் சார்பில் மாநில அளவில் முதலிடம். அந்தமானில், 50வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கம் வென்றார். 2017ம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி  பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி விருதும் பாராட்டும் குவிந்தது.

    நான் கற்ற இந்தப் பயிற்சி, மனிதனின் ஆனந்தத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். நாம் கற்றதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாலே போதும்,  ஒருவித மன நிம்மதி கிட்டும். அவை எனக்கு கிட்டி இருக்கிறது.

    கலைகளைக் கற்பதும் கவலைகளை விரட்டுவதும் நம் கையில்தான் இருக்கிறது. அன்றாடம் காலை 5 மணிக்கே எழுந்து விடுவேன். காலைக்கடன்களை முடித்து, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இத்தருணத்தில் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். இந்த வேளையில் யோகாசனம் செய்ய வேண்டும். அவற்றை தொடர்ந்து நாம் செய்ய வேண்டும். காலையும் – மாலையும் இவற்றை தொடர்ந்தால் எந்தவொரு நோய் நொடியும் நம்மை அண்டவே அண்டாது.

    உணவு முறை என்று பார்த்தால் அனைத்து வகையான காய்கறிகள், பயறு வகைகள், கனிகளை கழிக்காமல் உண்ண வேண்டும். குறிப்பாக, குறைந்த விலையில் கிடைக்கும் சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயிறை அன்றாடம் சேர்த்துக்கொண்டால் எலும்பு வலுப்பெறும். பால் – பழங்கள் இருக்க வேண்டும் என்றில்லை, கிடைக்கும் பழங்களை உண்ணலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதற்கேற்றாற் போல் அளவுடன், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இவைகளே எனது ஆரோக்கியத்திற்கான ரகசியம் என்று ஆரோக்கிய குறிப்புகளை பூரிப்போடு எடுத்துரைக்கிறார்.

    இந்த தள்ளாத வயதிலும், துள்ளும் மனதுடனும், வெல்லும் தன்னம்பிக்கையுடனும் லட்சக்கணக்கானோருக்கு ஆசனப்பயிற்சி அளித்து, யோகாசனத்தில் சாதனை புரிந்து வரும் இவரை நாமும் பின்பற்றுவோம். ஆதிகலையாம் யோகக்கலையின் உன்னதம் அறிந்து, உடலில் ஆரோக்கியத்தைப்  பேணுவோம். மனதில் ஆனந்தத்தைப் பூணுவோம்…

    வெற்றி உங்கள் கையில் – 40

    வெற்றி என்பது…

    இந்தியநாடு பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த நாடாக அமைந்துவிட்டது. ஏராளமான காடுகள் நிறைந்த பூமியாக இது திகழ்கிறது. இங்கு, மலைகள், பாறைகள் என எத்தனையோ மேடு பள்ளங்கள் நிறைந்துள்ளன. மரங்களே வளராத பாலைவனமாய் காட்சியளிக்கும் நில அமைப்பும் இங்குதான் உள்ளது. மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட இந்தியத் திருநாட்டில், புவியியலின் அடிப்படையில் பல்வேறு வேற்றுமைகளைக் காணலாம்.

    இந்தியாவில் நிலப்பகுதி பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, அசாமி, காஷ்மீர், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், உருது, சாந்தலி, சிந்தி, டோக்ரி, போடோ, பெங்காலி என விதவிதமான மொழிகள் பேசும் வெவ்வேறு மனிதர்கள் நிறைந்த பூமியாக இந்தியா காட்சியளிக்கிறது.

    இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம், சீக்கியம் என  வெவ்வேறு மதங்களை தழுவி வாழுகின்ற மக்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அரசியலில் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புகளும், கட்சிகளும் நிறைந்துள்ளன. பல்வேறு இனங்களாகவும், இதன் உட்பிரிவுகளாகவும் பிரிந்து நின்று “யார் உயர்ந்தவர்கள்?” என்ற கேள்வி எழுப்பி வேற்றுமை உணர்வை நெஞ்சத்தில் நிரப்பி வாழும் மாந்தர்களும் உள்ளனர்.

    இப்படிப்பட்ட வேற்றுமைகளெல்லாம் இந்தியாவில் இருந்தபோதும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது தாரக மந்திரமாக மக்கள் மனதில் இருப்பதால்தான், இன்று இந்தியா பிளவுபடாமல் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

    அரசியல், தொழில்நுட்பம், மனிதவளம் என பல நிலைகளில் உலக நாடுகளுக்கு இணையான முன்னேற்றத்தை இந்தியா முன்னிறுத்தி வருகிறது.

    ஆனால், சமீபகாலமாக தீவிரவாதம், மத பிரச்சனைகள், இனப்பிரிவினைகள், மொழிச்சிக்கல்கள், வட்டார வன்முறைகள், அரசியல் அடிதடிகள், வார்த்தைச் சேற்றை வாரித்தூவும் மனநிலைகள் என ஒன்றுபட்ட இந்தியாவில் பிளவுகள் ஏற்படும் விதத்தில் சில பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்குகின்றன. கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த இதயங்களின் உறவுகள் இன்று இடியாப்ப சிக்கலைப் போல உருமாறி தனிக்குடித்தனமாய், ஒற்றைப் பனைமரமாய் உலா வருகின்ற காட்சிகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

    இத்தகைய சூழல்கள், இந்தியாவின் ஒற்றுமையில் அணுகுண்டை வைப்பதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

    இதனால்தான், “பாட்டுக்கொரு புலவர்” பாரதியார்,

    “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

    நன்றிது நேர்ந்திடல் வேண்டும் – இந்த

    ஞானம்வந்தால் பின் நமக்கெது வேண்டும்”.

    – என்று பாடி, சுதந்திர உணர்வை தட்டி எழுப்ப அன்றே குரல் கொடுத்தார்.

    ஒன்றுபட்ட சக்தியை உருவாக்க, தேசத் தலைவர்களெல்லாம் அன்று தேசிய உணர்வை கொடுத்து “வேற்றுமை களை” களை நீக்கி, ஒற்றுமை உணர்வை மக்களிடம் ஒளி பெறச் செய்தார்கள்.

    இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும், இந்தியா முழுவதும் கொண்டாடும் தேசிய விழாக்களாக – சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, ஹோலி பண்டிகை, தீபாவளி திருநாள் என வெவ்வேறு விழாக்களை இந்தியா முழுவதும் அந்தத்த தலைவர்கள் கொண்டாடச் செய்தார்கள்.

    தேசிய கீதம், தேசியச் சின்னம், தேசியக் கொடி, தேசியப்பாடல் என இந்தியா முழுவதும் ஒற்றுமை உணர்வை விதைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்தியாவில் சமூக நீதி காக்கவும், மதச்சார்பின்மையை நிலைநாட்டவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும் பல்வேறு விதத்தில் மக்களும், தலைவர்களும் செயல்பட்டார்கள்.

    இன்று – உலகமயமாக்குதல் (Globalisation), தாராளமயமாக்குதல் (Liberalisation), தனியார்மயமாக்குதல் (Privatisation) என்ற கொள்கைளை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் “இந்தியா” என்ற எல்லையைத் தாண்டி “உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் நமது சகோதரர்கள்” என்ற உணர்வை வளர்க்க வேண்டிய நிலை கண்டிப்பாகத் தேவை.

    அசுர வேகத்தில் வளரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்புகளை மிக எளிதாக்கிவிட்டது. இந்த நிலையில், தனிமனித முன்னேற்றம்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு  அடிப்படை என்றாலும், தன்னைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் முன்னேறுவதற்காக முன்னேற்றப்பாதையைப் பற்றி சிந்திப்பது வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகிறது.

    “நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும்”, “என் பிள்ளைகள் மட்டும் சிறந்து விளங்கினால் போதும்”, “என் குடும்பம் மட்டும் வெற்றி பெற்றால் போதும்” – என்ற குறுகிய எண்ணத்தோடு வாழ்வது தனிமனித வெற்றிக்குத் துணையாக இருக்கலாம். ஆனால், உலக மக்களின் வெற்றிக்கு தனிமனித வெற்றி மட்டும் பெருமளவில் உதவாது. தன்னோடு வாழுகின்ற மற்றவர்களின் வெற்றியைப் பற்றியும் சிந்தித்து, அவர்களோடு இணைந்து பழகி, அவர்களையும் வெற்றிப் பெற செய்வதுதான் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாக அமைகிறது.

    சமீபத்தில் ‘வாட்ஸ்அப்’ பில் உலா வந்த ஒரு ‘உண்மைச் சம்பவம்’, நம்மை மேலும் சிந்திக்க வைக்கிறது.

    அது ஒரு வகுப்பறை.

    ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ரொட்டியைப் பற்றி பாடம் நடத்தியபோது ஒரு கேள்வியை மாணவர்களிடம் கேட்டார்.

    “ரொட்டியை எவ்வாறு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?” –  என்பது ஆசிரியர் கேட்ட கேள்வி.

    ஒரு மாணவர் எழுந்தான். “ரொட்டியின் மீது வெண்ணையைத் தடவி சாப்பிட்டால், அது நன்றாகவும், சுவையாகவும் இருக்கும்” என்றான்.

    அவன் சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு மாணவன் எழுந்து, “வெண்ணெய் தடவி சாப்பிடுவதைவிட, ஜாம் தடவி சாப்பிட்டால் ரொட்டி ரொம்ப நன்றாக இருக்கும்” என்றான்.

    உடனே அடுத்த மாணவன் எழுந்து, “இவைகளைவிட ரொட்டியை பாலோடு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்” என்றான்.

    அடுத்த மாணவன், “ரொட்டியை தேனோடு சாப்பிட வேண்டும். அப்போதுதான் சுவை அதிகமாக இருக்கும்” என்று பதில் தந்தான்.

    “ரொட்டியை பஞ்சாமிர்தத்தோடு சேர்த்து சாப்பிட்டால் நல்ல சுவையோடு இருக்கும்” என்றான் இன்னொரு மாணவன்.

    ஆசிரியர் தனது பதிலை சொல்வதற்குள் இன்னொரு மாணவன் எழுந்து  நின்றான்.

    “சார்… ரொட்டியை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து சாப்பிட்டால்தான் மிகவும் சுவையாக இருக்கும்” என்று சொன்னான். ஆசிரியர் மனமகிழ்ந்து பாராட்டினார்.

    ரொட்டியை மட்டுமல்ல வெற்றியையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போதுதான் தனிமனித வெற்றி, நாட்டின் வெற்றியாக மாறுகிறது.  ஒரு நாட்டின் வெற்றி உலகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது.

    எனவே – “வெற்றி” என்பது திடீரென கிடைக்கும் அதிர்ஷ்டம் அல்ல. திட்டமிட்டு முயற்சி செய்து பயிற்சிகள் மேற்கொண்டு செயல்படும்போது அந்த வெற்றி அனைவரின் வெற்றியாக மாறுகிறது. மக்கள் அனைவரும் வெற்றி வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அடிப்படை சிந்தனைதான் ஒருவரின் உண்மையான வெற்றியாகும்.

    தேர்ந்து விடு உயர்ந்து விடு

    தேர்வு செய் தீர்வு மெய் இங்கு எதையும் தேர்தெடுக்கும் உரிமை உனக்கு மட்டும் உண்டு. தேர்வு செய்வது என்பது வாழ்க்கைக்கு இன்றிமையாத தன்னம்பிக்கைக்கு உந்து சக்தியாகவும் இருந்து உயர்வளிக்கும் ஓர் உன்னத செயல் முறை.

    நம் வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும், பல்வேறு திருப்பங்களை நேரம் முதற்கொண்டு, கல்வி, வேலை, வாழ்க்கை தரம், வாழ்க்கைத்துணை வரை மேன்மையடைய தேர்தெடுத்தல் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், நமது வாழ்க்கையை நிர்ணயிக்க கூடிய தேர்தெடுத்தல் செயலில் அவசரமும் அலட்சியமுமாய் செயல்பட்டு எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொள்கிறோம்.

    நம் அனைவருக்கும், இலட்சியமாக இருந்தாலும் சரி, அல்லது தினசரி வாழ்வில் நடக்கும் செயல்களிலானாலும் சரி ஒரு விஷயத்தைத் தேர்தெடுத்து, அதில் வெற்றி பெறுவது என்பது பெரும் போராட்டமாகவும் சவாலாகவும் இருக்கிறது.

    கல்விக்குத் தேர்வும் நாட்டிற்கு தேர்தலும் எப்படி தேர்ந்து எடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதுபோல வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்கும் சக்தி தான் தீர்மானிக்கிறது.

    இரவுக்குப் பின் விடியல், குளிருக்குப் பின் கோடை, துயரத்திற்குப் பிறகு மகிழ்வு, தோல்விக்குப் பின் வெற்றி என்ற தன்னம்பிக்கை முதிர்ச்சியும், தேர்தெடுக்கும் மனப்பக்குவமும் பெற்றவர்கள்தான் காலத்தில் வாழ்க்கை சாதனையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுத்து வாழ்ந்த தன்னம்பிக்கையாளர்களின் வாழ்க்கை தான் வரலாறாக மாறுகிறது.

    அப்படி நாமும், தேர்தெடுக்கும் செயல் சாதனையாக வரலாறு படைக்க, எதை எப்படி தேர்தெடுப்பது? முதலில், நாம் ஒன்றை தேர்தெடுப்பதில் செயல்படும் விதத்தைப் பார்ப்போம்.

    இன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் வாழ்க்கை ஏமாற்றங்களுக்கும், தோல்விகளுக்கும் பிறரைத்தான் பழி சொல்கிறார்கள். இதற்கு சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளி சேர்க்கும் முன் ‘தேர்ந்தெடுத்தல்’ முறையில் செய்த தவறுகளும், விழிப்புணர்ச்சியற்ற முறையே காரணமாக சொல்லப்படுகிறது.

    நல்ல பள்ளி உயர்தர கல்வி என்பதை தேர்வு செய்து தாங்கள் வருமானத்திற்கு மேலாக கடன்பட்டு, படிப்பிற்காக அதிகம் செலவழிக்கிறார்கள். தொடர்ந்த கால கஷ்டங்களில், மேற்கொண்டு படிக்க வைக்க முடியாமல், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். இதனால், குழந்தைகளின் கல்வி எதிர்பார்ப்பும், மனநலமும் பாதிக்கப்பட்டு, அவர்களால் எதையும் தேர்வு செய்ய முடியாமலும், பெற்றவர்களின் சரியான தேர்வு இல்லாததால், வாழ்க்கையில் இலட்சியம், தன்னம்பிக்கை இழந்து வாழ்க்கை வீணானதற்கு பெற்றவர்களையே காரணம் காட்டி, இந்த ஜென்மம் முழுவதும் சொல்லி திரிகிறார்கள். நாமும் பார்க்கிறோம்! இது போல எத்தனையோ வகையில் “தேர்ந்தெடுத்தலில்” தவறி போய் தவறு செய்கிறோம்.

    பொதுவாக நாம் ஒன்றை தேர்ந்தெடுக்கும் போது 3 கேள்விகள் உள்ளன. ஒன்று… விருப்பமான இரண்டில் ஏதோ ஒன்று தேர்வு செய்ய சொல்வது எப்படி?

    இரண்டாவது… விருப்பமான ஒன்றை தவிர, வேறொன்றை தேர்வு செய்வது எப்படி?

    மூன்றாவதாக… விரும்பிய விஷயத்தில், விரும்பாத ஒரு விஷயமும் கலந்திருந்தால் என்ன செய்வது?

    விருப்பமான இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும்போது… நிதானமாக, அறிவுப்பூர்வமாக, இரண்டில் எது சிறந்தது? அவசியமானது, முக்கியமானது, என்றும் குடும்பம் தேவை அறிந்தும், தன்னுடைய நலன் கருதியும், சமுதாய மதிப்பை உணர்ந்தும் யோசித்து இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்து எடுத்த பின்பு யோசிக்க கூடாது.

    அடுத்து, விருப்பமான ஒன்றை தவிர, வேறொன்றை தேர்வு செய்ய, மிகுந்த துணிச்சலும், மனோ தைரியமும் வேண்டும். தான் விரும்பிய கல்வியையோ, அல்லது காதலித்த நபரையோ விட்டு வேறு ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட நேர்ந்தால், அதற்குன்டான மனவலிமை இருந்தால் மட்டுமே தேர்ந்தெடுப்பதில் வெற்றி பெற முடியும்.

    மூன்றாவதாக விரும்பிய ஒன்றில் (விஷயத்தில்) விரும்பாத ஏதோ ஒரு விஷயம் கலந்திருந்தால் அதாவது, தான் விரும்பியவரையே தேர்ந்தெடுத்தால், அடுத்து அவரிடம் உங்களுக்கு பிடிக்காத பழக்கம், செயல்பாடுகள் இருந்தால், தேர்ந்தெடுக்க முடியாமல் திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    அதே போல், விரும்பிய கம்பெனியில் விரும்பாத வேலை, படித்த படிப்பிற்கு, அமையாத வேலை என்ற நிலையில் மனப்போராட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேர்ந்தெடுப்பது என்பது குழப்பமான நிலை. இதனால், ஏற்படும் விளைவுகள், கால விரயம், வாய்ப்பு இழப்பு, தீர்மானிக்க முடியாத தவிப்பு, அவசரத்தில் சாதாரணமாக ஒன்றை தேர்ந்தெடுத்தல், பிறகு சலிப்பு, சங்கட்டமான செயல்பாடு, விரத்தி, வெற்றி பெற முடியாத நிலையில் பிறர் மீது பழி போட்டு பகையாவது தான் முடிவு. எனவே, விரும்பாதவையிருந்தால், அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வகைத்துக் கொள்ளுங்கள்.

    வாழ்க்கை என்பது பத்துவகை தர்மங்களுக்கு உட்பட்டது. அது, உயர்வு – தாழ்வு, புகழ்ச்சி – இகழ்ச்சி, விருப்பு – வெறுப்பு, நன்மை – தீமை, சரி – தவறு என்பது தான். இதில் எதை நம் மனம் விரும்பும் என்று தெரியும். ஆனாலும் நாம் தேர்ந்தெடுக்கும் வகையில் இவை இரண்டும் கலந்தேதான் இருக்கும்.

    இது போன்ற நிலையில், “தேர்தெடுப்பது” சற்றே சிரமமாக தோன்றினாலும், இதை வேறு வகையில் யோசித்து கையாள்வதன் மூலம் தேர்வு செய்வது நல்லது. அதாவது, பார்வையற்றவருக்கு மல்லிகை மலரை பார்க்க முடியாவிட்டாலும், மல்லிகை மணம் நுகர்ந்து உணர முடியும். இது மல்லிகை மலரின் சிறப்பு. அதே போல், வாழ்க்கைபற்றி தெரியாவிட்டாலும், தேர்ந்து எடுக்கும் வகையறிந்தாலே வாழ்க்கையின் அர்த்தமும், தத்துவமும் புரிந்துவிடும். இது அனுபவபூர்வமான உண்மை.

    அந்த வகையில், தேர்ந்தெடுப்பது சிரமம் என்று, தற்காலிகமாக மனபோராட்டத்திலிருந்து விடுபட, அவசர முடிவுகளை எடுக்காமல் நல்லது என்று தேர்ந்தெடுத்த ஒன்றில், தீமை கலந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவோ, எதிர்கொள்ளவோ, துணிச்சலும்  மனோ தைரியமும், அல்லது மாற்றியமைக்கலாம் என்ற தன்னம்பிக்கையோ இருந்தால், இது போன்ற தேர்ந்தெடுக்கும் வகை குழப்பங்களை தவிர்த்து தெளிவான முடிவு எடுக்கலாம்.

    அதாவது, ரோஜா மலரும் தேவை. முள்ளும் குத்துகிறது. என்ன செய்யலாம்? முள்ளுக்காக ரோஜாவை இழக்க முடியவில்லை என்றால், அந்த முள்ளை குத்தாமல் கையாளும் திறமையோ முள் குத்தினாலும் பரவாயில்லை ரோஜா மலர் தான் தேவை என்று தேர்ந்து எடுத்துவிட்டால், முள்ளைப்பற்றி கவலையின்றி, ரோஜாவோடு சந்தோஷிக்கலாம். அதன் பிறகு வரும் விமர்சனங்களில் துவண்டு விடக்கூடாது. தேர்ந்தெடுத்ததில் வெற்றி பெறும் தன்னம்பிக்கை மட்டும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

    எனது நண்பரின் தங்கைக்கு அவர்கள் பெற்றோர்கள் வசதியான அவள் படிப்பிற்கு இணையாக படித்த நல்ல வரனை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், நண்பனின் தங்கையோ பிடிவாதமாக மறுத்துவிட்டாள். வேறு யாரையும் காதலிக்கவும் இல்லை. பிறகு வேறு காரணம்? தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று தேர்வு செய்து வைத்திருப்பதில், பெய்றோர்கள் பார்த்த மாப்பிள்ளை பொருந்தவில்லையாம். திருமணமின்றி காலம் கடந்து தற்போது, தன் தேர்வுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத வரனுடன் திருமணம் முடிவாகிவுள்ளது. இப்படித்தான் “தேர்ந்தெடுக்கிறேன்” என்று, சிலர் வாய்ப்புகள் இருந்தும் சரியாக தேர்வு செய்யாமல் வாய்ப்புகளை இழக்கிறார்கள். வாய்ப்புகளுக்காக காத்திருப்பதை விட, வாய்ப்புகளை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கு சரியான நேரத்தில், சரியான தேர்வு செய்தல் அவசியம்.

    ஆக, இளைய சமுதாயமே! உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற தீர்மானம் செய்து, அதற்குரிய தேர்வு நிலைகளில் செயல்பட்டு சிந்திக்கும் சக்தியை இழக்காமல், வாய்ப்புள்ள வழிமுறைகளில், சிறந்த நெறிமுறைகளில், சிறந்ததை ஆராய்ந்து தெளிவான நோக்கத்தோடு, ஒன்றை தேர்ந்து எடு. அதை சேர்ந்து விடு. அதில் வாழ்ந்து விடு! உயர்ந்து விடு! பிறகென்ன? வாழ்க்கை நிச்சியம் வரலாறு படைக்கும். அதை, இனி வரும் நம் சந்ததிகள் வரலாறாய் படிக்கும். அதையே தன் வாழ்நாளில் கடை பிடிக்கும்.

    இளமை மாறாத இளமையுடன்….

    சில்லென அடிக்கும் காற்று, மெட்டு படிக்காமலே ராகத்துடன் பாடும் குயில், ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நீரலைகள் என இவற்றுக்கு இடையில் எனது எண்ணத்தைச் சுமந்து கொண்டு நதி ஓரமாய் நடந்து கொண்டிருந்தேன். உடனே ஒரு எண்ணம் எதிர்மறையாய் கூறியது. அதாவது, இளமையை வீணடித்துக் கொண்டிருக்கிறாய் என்று. அதற்று இல்லை என்று குறிக்கிட்டது மற்றொரு எண்ணம். இப்படித்தான் அவ்வப்போது என்னைப் போன்ற இளைஞர்களிடம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவர்கள் சிலர்தான். மேலும், தெரியாதவர்கள்தான் பலபேர்.

    அப்படிப்பட்டவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். பயிர் அறுவடைக்கு வந்தும், அதை கண்டுகொள்ளாமல் விட்டால் வீணாக போய்விடும். அதுபோலத்தான் இளமையின் வேகத்தையும், விவேகத்தையும் அறியாதவர்கள் அதன் மேல் குறைப்பட்டுக் கொண்டால் பயிருக்கு ஏற்பட்ட அதே நிலைமைதான் ஏற்படும்.

    சரி நேராக விஷயத்திற்கு வருகிறேன். இன்றைய இளைஞர்களின் வாழ்வு எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை பார்த்தால் வியப்பாகவும் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. வியப்பு என்னவென்றால், மீசை முளைக்காத வயதிலும் சரளமாய் காதல் கவிதைகள் எழுதுவது. தன்னை வளர்த்தெடுத்த பெற்றோர்களுக்காக இரவு – பகல் பாராமல் உழைப்பது, பசியிருந்தும் காதலி பார்க்கவில்லையே என்று பட்டினி இருப்பது… என்று இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

    புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என அறிந்தும் வட்டவட்டமாக இழுத்து புகைவிடுவது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பதை அறிந்தும் சந்தோசம் என்று கூவிக்கொண்டு கும்மாளமாய் குடிப்பது. மரியாதை தெரிந்தும் அதைக்கொடுக்காமல் அகங்காரமாய் பேசுவது… இதெல்லாம் யாருக்கு பாஸ் தெரியாது? என்று கூறலாம். ஆனால் தெரிந்தும் ஏன், இதை செய்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

    இப்படியெல்லாம் நான் பார்த்த இளமையின் வகைப்பாடுதான் இந்த இளமை மாறாத இளமையுடன் என்னும் தொடரின் நோக்கம். எனவே, இளமையை நோக்கி மீண்டும் ஒருமுறை அன்புடன் அனைவரையும் வரவேற்கிறேன். இத்தருணத்தில் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். அதாவது நமது பாரதம் 60 சதவீத இளைஞர்களை கொண்டுள்ள தேசமாமம். இருந்தும் என்ன பயன்? இன்னமும், பசி, பட்டினி, திருட்டு என எதுவும் ஒழியவில்லை. அதற்கு பலரும் கூறும் ஒரு வகையான கருத்து இளைஞர்கள் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்று. அனால், அதை மட்டும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

    இன்று வழிமாறிப் போகும் பல இளைஞர்களுக்கும் உள்ள குறைவாடு என்னவென்றால் சரியான வழிகாட்டுதல் இல்லாத வாழ்க்கை முறைதான்.

    வாழ்க்கையை தயார்படுத்திக் கொள்ள இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்ப்பது ஒரு சிறந்த வழிகாட்டியைத்தான். அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு முக்கியமாக வேண்டும் என்பதை மாறிவரும் கலாச்சாரத்தை பார்த்தாலே புரியும்.

    நான் பார்த்த ஒரு சம்பவத்தை விளக்குகிறேன். அந்த சிறுவனுக்கு வயது அநேகமாக 10க்குள்தான் இருக்கும். அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். அவரும் சரியான குடிகாரர். ஆனால், அந்த சிறுவனோ, அதற்கு அப்படியே எதிர்மறை. நன்றாக படிப்பான், பேசுவான், அன்பாக பழகுவான். இருந்தும், ஊருக்குள் அவனுக்கு என்ன பெயர் தெரியுமா? குடிகாரனின் மகன். பாருங்கள் இதுதான் விதியின் விளையாட்டா அல்லது பூர்வ ஜென்மத்தின் பலனா…. அதற்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    இப்படி அந்த சிறுவனுக்கு மட்டும் அல்ல பலருக்கும் பலவிதமான குற்றம் சார்ந்த சுமைகள். ஆனால் இன்னும் பலருக்கு அந்த சுமைகளில் இருந்து விடுபடவில்லை என்பதுதான் வேதனை.

    அதுபோன்ற வேதனையில் இருந்து வெளியேறி வந்தவர்கள் பலரும் உள்ளனர். அதிலும் நான் பார்த்து வியந்து படித்த ஒருவரின் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோடுகிறேன்.

    அவர் ஐந்தாம் வகுப்புவரைதான் படித்து இருந்தார். பின்பு அவருக்கு படிப்பு ஒத்துவரவில்லை. குடும்ப சூழ்நிலையும் அதற்கு ஏற்றாற்போல் ஒத்துவரவில்லை. பின்பு பிழைப்புக்காக வேறு வேலைகளுக்கு செல்கிறார். அவை மளிகைக்கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு, மெஷின் வேலை, கம்பாசிடர், மதுரை சென்ரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டு புத்தகம் விற்றது.  கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது. இங்க் பாக்டரியில் கைவண்டி இழுத்தது, புரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர் என்று அவரின் வாழ்க்கை கால ஓட்டங்கள் தொடராய் வந்து கொண்டே இருந்தது.

    அப்படிப்பட்டவர்கள் யார்? என தெரியுமா? (அவசரப்படாதீர்கள் சொல்லி விடுகிறேன்) இந்திய அரசின் ஞானபீட விருதும், சாகித்ய அகாதமி பரிசும், இன்னும் பல விருதுகளும், பட்டங்களும், பாராட்டும் பெற்ற சிறுகதை மன்னன் ஜெயக்காந்தன் அவர்களே.

    இவரின் கதைகளைப்படித்தால் இப்படியும் ஒரு உலகத்தில், இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்களா? என்று தோன்றும் அளவுக்கு கற்பனைனையும், அதே நேரத்தில் உண்மையும் இருக்கும்.

    “சாகும் போது தோன்றும் ஞானம் வாழவா பயன்படும்”! என்னும் இவருடைய வாசகம் மரணத்தை நினைக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

    எனவே, அவரைப்போல் தன்னம்பிக்கையை மட்டும் தளர விடாமல், விடாமுயற்சியுடன் பயணித்தால், கண்டிப்பாக அவர்களும் வரலாற்றில் வெற்றியாளர்கள்தான்.

    ஆகவே, இளைஞர்கனே நமக்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளது. அவைகளை மட்டும் சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெற்றியின் வாசற்கதவுகள் உங்களை வரவேற்கும். அதேபோல் மாறுபட்ட வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.

    இருந்தும் இன்னும் செய்தித்தாள்களில் மனஅழுத்தம் தாங்காமல் ஒரு இளைஞன் இறந்துவிட்டான், காதலி ஒப்புக்கொள்ளாததால் ஆசிட்ட வீசிட்ட இளைஞர் கைது, மது போதையில் அடித்தடியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், அப்பா அம்மாவை மதிக்காமல்  திட்டும் இளைஞர்கள், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகள் என்று அடுக்கு அடுக்காக இளைஞர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களை எண்ணினால் வேதனையின் விழிப்பில் உள்ளம் வெந்து கண்ணீராகத்தான் பாய்கிறது.

    இதற்கெல்லாம் இளமைதான் காரணம் என்று சொல்வதை விட சமூகத்தின் அறப்பயனாய் அரங்கேறும் குற்றச்சாட்டுகள், மேற்கத்திய கலாச்சாரம், கல்விமுறை, பெற்றோர் வளர்ப்பு முறை என்பவைகள்தான் காரணம் என்பதை ஆராயந்து பார்த்தால் புரியும்.

    ஆனால், அதற்கு முன்னரே இந்த பையனா? இவ இப்படித்தான் எதுக்கும் உருப்பட மாட்டான் சரியான தரித்தரம்…

    இப்படியெல்லாம் சொன்னால்தான் புரிந்துகொள்வார்கள் என்று யாராவது எண்ணினால் தயவு செய்து விட்டுவிடுங்கள். இல்லையென்றால் அரசாங்கம் கூறுவதுபோல் 15-25 வயது வரை உள்ள இளைஞர்கள்தான் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது இன்னும் அதிகமாகி விடும் எனவே, கொஞ்சம் சிந்தியுங்கள்.

    உடனே இவனுக்கெல்லாம் என்ன மனஉளைச்சல் என்று கேட்டு விடாதீர்கள் பொறுங்கள் சொல்கிறேன்.

    இன்னும் இளமை மாறாத இளமையுடன்… இளந்தென்றல் வீசும்….

    இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி…?

    காளிதாசனும், பாரதியும் காளி குறித்தோ, கண்ணாம்மா குறித்தோ பாடல்களை இயற்றுகின்ற போது எங்கிருந்து அந்த கவித்துவமான வார்த்தைகள் வருகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? சரி அதைக் கூட ‘சிந்தனைப்பயிற்சியால்’ என்று சொல்லிவிட முடியும். அனால், ஒரு இளையராஜாவோ, ரகுமானோ இசையமைக்கும் போது அந்த இசை எங்கிருந்து வருகின்றது என்று சிந்தித்திருக்கிறீர்களா? நாம் மனத்தைக் கொண்டு உருவங்களால், வார்த்தைகளால் யோசிக்கிறோம். ஆனால், இசை வடிவமற்று, வார்த்தைகளற்றதாயிற்றே.

    அது எங்கிருந்து வருகிறதோ, அதைத்தான் நான் இதயம் என்கிறேன்.

    கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகளில் சொன்னால்…

    அந்த இதயத்தின  மொழியைத்தான் வாசிப்பது எப்படி?

    தாயின் காப்பகத்தில் முதலில் உருவாகும் உறுப்பு இதயம்தான். நமது உணர்ச்சிகளை தனது துடிப்பின் மூலம் முதலில் வெளிப்படுத்துவது அந்த இதயம்தான். லப்டப் என்று  ‘ஸ்டெதஸ்கோப்’  செவிகளுக்கு மட்டுமே கேட்கும். டெசிபல்லில் மட்டும்மே பேசும் என்றில்லை. அது உணர்வுப்பூர்வமாக உங்களோடு உரையாற்றும். அது மிகப்பழமையான மொழி. அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் அவ்வளவே. ஆம், அது தேசிய பாஷையல்ல, உலக பாஷை.

    இதயத்தின் மொழியை மனிதர்களைக் காட்டிலும், மற்ற உயிரினங்கள் எளிதில் புரிந்து கொள்கின்றன.

    நமக்கெல்லாம் தெரிந்த உதாரணத்தையே சொல்கிறேன். நமது நாட்டின் பழமையான வேடந்தாங்களல் பறவைகள் சரணாலயத்திற்கு, ஒவ்வொரு வருடமும் கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா போன்ற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து 45,000 பறவையினங்கள் வருகின்றன.

    உங்கள் நண்பர் முதல் முறையாக உங்கள் ஊருக்கு, உங்கள் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் உங்கள் முகவரி இருக்கிறது. ஆனாலும், சுலபமாக வந்து சேர்ந்து விட முடிகிறதா? எத்தனை நபர்களிடம் விசாரிப்பார். எத்தனை முறை போன்  செய்வார். பிள்ளையார் கோயில், பேக்கரி என்று பத்து பகுதிகளை அடையாளமாகச் சொல்லியிருந்தாலும், அவருக்கு தடுமாற்றம் இருக்கவே செய்யும். ஆனால், அந்தப் பறவைகள் எப்படி கச்சிதமாக வந்து சேருகின்றன?

    இந்தியாவின் தெற்கே இருக்கும் தமிழகத்தில், செங்கல்பட்டுக்கு பக்கத்துல வேடந்தாங்கல் என்று ஒரு இடம் இருக்கு. அங்கு கடம்ப மரங்கள் நிறைய நிறைந்திருக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நல்ல தட்பவெப்பநிலை இருக்கும். இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடம் அது; என்று  அந்த பறவைகளுக்கு எப்படித் தெரியும்? காரணம் இதயத்தின் உள்ளுணர்வுதான்.

    நமது அறிவை விட உள்ளுணர்வு உயர்ந்தது. அதுதான் நமது மிகப்பெரிய வழிகாட்டி.

    உங்களுக்கு கர்ணப்புறா போட்டிகள் தெரியுமில்லையா? தாம் பழக்கப்படுத்திய பறவைகளை பல மைல் தள்ளி அதன் உரிமையாளர் விட்டுவிடுவார். அது எங்கிருந்தாலும் தனது குடிலுக்கு வந்து சேர்ந்துவிடும். ஒரு நாய்க்குட்டியை எங்கே விட்டாலும், அது வீட்டுக்கு வந்துவிடும். அது மோப்பசக்தி என்று சொல்லாம். ஆனால், வானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் வல்லூறுக்களின் தடைகளைத் தாண்டி, திசையைக் கண்டுபிடித்து தூரத்தைக் கணக்கிட்டு ஒரு பறவை வந்து சேர்கிறது என்றால் எப்படி சாத்தியம்?

    அதற்கு, அதன் இதயத்தின் மொழியை வாசிக்கத் தெரிகிறது என்பதுதான் காரணம். புறாக்களை தூதுக்கு பயன்படுத்தியதும் அதனால்தான்.

    இந்த இதயத்தின் குரலான உள்ளுணர்வைக் கேட்டு நடப்பவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள்.

    இந்திய விடுதலைப்போரில்  தனித்துவமானது மகாத்மா காந்தியின் தண்டி உப்பு சத்தியாக்கிரகம். இந்த போராட்டத்தில் காந்தியடிகள் 24 நாட்களில் 241 மைல்கள் நடந்தார். 97 தொண்டர்களுடன் புறப்பட்ட யாத்திரை முடிவடையும்போது 2 மைல் நீளம் இருந்தது. ஏப்ரல் 5, 1930 அன்று காலை 8.30 மணிக்கு மகாத்மா உப்பைக் கையில் அள்ளினார். அந்த கைப்பிடியளவு உப்பு 1600 ரூபாய்க்கு ஏலம் போனது. உலகிலேயே விலை உயர்ந்த உப்பு டாட்டா சால்டோ, கிறிஸ்டல் சால்டோ அல்ல, காந்தியின் கைபிடி உப்புதான்.

    காந்திஜியிடம் இந்த உப்பு சத்தியாகிர யோசனை எப்படி வந்தது? என்று கேட்டபோது, அது ‘அந்தராமத்மாவின் குரலாக வந்தது’ என்றார். அந்த குரலைத்தான் இதயத்தின் மொழி என்கிறேன் நான்.

    ‘ஏதோ, ஒரு இனம் புரியாத உணர்வு அதான் உங்களைப் பார்க்க வந்தேன்’ என்போம். திடீர் என்று மனதில் காரணம் புரியாத அவஸ்தை ஏற்பட்டிருக்கும். அந்த நேரத்தில் உங்கள் நண்பருக்கு விபத்து நடந்தது பின்னால்தான் தெரியவரும். இதையெல்லாம் உங்கள் வாழ்வில் கண்டிருப்பீர்கள். அப்போதெல்லாம் இதயம் உங்களிடம் பேசுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் தொழிலில் நீங்கள் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுகிறீர்கள் என்றால் உங்கள் இதயம் அதில் வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தரும். நீங்கள் யாரை சந்திக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூட உள்ளுணர்வாக உணர்த்தும். மகான்களுக்கும், ஞானிகளுக்கும் எல்லா நேரமும் இதயத்தின் வழிகாட்டுதல் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு எப்போதாவதுதான் கிடைக்கிறது.

    ஆங்கிலத்தில் இதயத்தை Heart என்கிறோம். அவற்றை He art என்று பிரிக்கும் போது அவனின் (இறைவனின்) கலைப்படைப்பு என்று கூறலாம்

    ‘என் அன்பு மொத்தத்தையும் உனக்கு அர்ப்பணித்துவிட்டேன்’, என்பதைத்தான் இதயத்தை இழந்து விட்டேன் என்று கவித்துவமாக கூறுகிறோம். ஆக, அது அன்பை நிறைத்து வைத்திருக்கும் அமுதசுரபியாகவும் இருக்கிறது.

    கலில் ஜிப்ரான் தனது தீர்க்கதரிசியில் கடவுள் உங்கள் இதயத்தில் இருக்கிறார் என்று சொல்லாதீர்கள். கடவுளின் இதயத்தில் தான் நாம் இருக்கிறோம் என்கிறார். கடவுளின் இதயம்தான் இந்த பிரபஞ்சம். அந்த பிரபஞ்ச இதயத்தில் இருந்து நமது இதயத்திற்கு எப்போதும் ஒரு இணைப்பு இருக்கவே செய்கிறது. அந்த இணைப்பின் வழியாக வரும் செய்திகளை நாம் வாசிக்க முயல வேண்டும்.

    அதற்கு என்ன செய்ய வேண்டும். அதைப்பற்றித்தான் இனி பேசப்போகிறோம்.

    ஹெப்படைட்டிஸ் ஏ (Hepatitis A)

    இந்நோய் தண்ணீரினால் பரவுக்கூடிய  மஞ்சள்காமாலை நோய் ஆகும்.

    நோய் தொற்றுக் கிருமி

    ஹெப்படைட்டிஸ் ஏ என்ற வைரஸ் ஆர்.என்.ஏ (RNA) வைரஸ். இது ஹெப்பட்டோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

    குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் பொதுவாகக் காணப்படுகிறது. குறைவான தன்சுத்தம், சுத்தமில்லாத நீர், சுற்றுசூழல் மாசுபாடு, தவறான உணவுமுறை பழக்கவழக்கத்தினால் அதிகமாகக் காணப்படுகிறது.

    தொற்றும் முறை

    • பாதிக்கப்பட்டவரின் மலம் வழியாகப் பரவுகிறது.
    • சுத்தமில்லாத உணவு மற்றும் நீர் மூலமாகப் பரவுகிறது.

    நோய்க்கிருமி தாக்கியபின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்காகும் காலம் (Incubation Period)

         15 – 50 நாட்கள்

    அறிகுறிகள்

    • மஞ்சள் நிற மலம் மற்றும் சிறுநீர்
    • மஞ்சள் நிறத்துடன் கூடிய கண், நகம், உள்ளங்கை, உள்ளங்கால்
    • காய்ச்சல், தலைவலி
    • பசியின்மை, வாந்தி எடுத்தல்
    • கல்லீரல் வீக்கம்
    • மண்ணீரல் வீக்கம்
    • வயிற்று வலி
    • எடை குறைவு

    சோதனை முறை

    • சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை
    • புரோத்ரோம்பின் நேரம், பிளிருபின் , சீரம் ஆல்புமின் ஹபோகிளைசீமியா.
    • இரத்தத்தில் ஹெப்படைட்டிஸ் ஏ வைரஸ் தொற்று கிருமி உள்ளதா என கண்டறியப்படுகிறது.

    சிகிச்சை முறை

    • நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தல்
    • கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளைக் கொடுத்தல்
    • நீராகரங்களை அதிகமாகக் கொடுத்தல்

    தடுப்பு முறை

    • திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுத்தல்
    • கிராமப்புற மக்களுக்கு இந்நோயைப்பற்றி விழிப்புணர்ச்சி கொடுத்தல்
    • ஹெப்படைட்டிஸ் தடுப்பூசி அளித்தல்

    ஹெப்படைட்டிஸ் பி

    (Hepatitis B)

    இந்நோய் இரத்தத்தினால் பரவுக்கூடிய  மஞ்சள்காமாலை நோய் ஆகும்.

    தொற்று நோய் கிருமி

    ஹெப்பட்டைட்டிஸ் பி வைரஸ் ஒரு  டி.என்.ஏ (DNA) வைரஸ் ஆகும். இது ஹெப்பெடுனா (Hepadna) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

    தொற்றும் முறை

    பாதுகாப்பற்ற இரத்தம் செலுத்தல் முறை மூலமாகப் பரவுகிறது.

    நோய்க்கிருமி தாக்கியபின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்காகும் காலம் (Incubation Period)

    50 – 180 நாட்கள்

    அறிகுறிகள்

    • முதலில் கல்லீரல் வீக்கம்
    • கல்லீரல் புற்றுநோய்
    • உடல் சோர்வு, எடை குறைவு
    • பசியின்மை, வாந்தி எடுத்தல்
    • காய்ச்சல், தலைவலி
    • வயிற்றுவலி

    சோதனை முறை

    • சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை முறை.
    • இரத்தத்தில் ஹெப்படைட்டிஸ் பி வைரஸ் தொற்று கிருமி உள்ளதா என கண்டறியப்படுகிறது.

    சிகிச்சை முறை

    • நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தல்
    • நோயாளிக்குத் தடுப்பூசி ஹெப்படைட்டிஸ் பி அளித்தல்.
    • இந்நோயைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி தூண்டுதல்.