வெற்றியாளன் தன்னம்பிக்கையாலும், தன் சுய சிந்தனையாலும், முயற்சியாலும் தன்னைச்சுற்றி வெற்றி வாய்ப்புகளை உருவாக்குகிறான். நீ எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனி. உன்னை மிகவும் கூர்மை அடையச் செய். வாய்ப்புகளின் கதவுகளை நீயே உருவாக்க திட்டமிடு. நீ செய்யும் பணியை வைத்தே உனது மதிப்பானது எடை போடப்படுகிறது.
வருவாயைப் பெருக்க நீ ஆக்கப்பூர்வமான எண்ணம் கொண்டு செயல்பட்டால், வெற்றி நிச்சயம். ஆக்கப்பூர்வ சிந்தனை உன் பலம். நீ விதைப்பதைத்தான் அறுவடை செய்கிறாய். உன் உழைப்பை ஆக்கபூர்வமான பாதையில் செல்ல அனுமதி. உன் உழைப்பு நல்ல நிலத்தில் விழுந்த விதையாகட்டும். மனிதனின் அறிவையும், ஆற்றலையும், திறமையையும், தகுதியையும் வீணாக்கும் செயலாக அச்சம் உணர்வு இருக்கிறது. உன்னிடம் அச்சம் புகுந்துவிட்டால் உன்னால் உன் ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் போய்விடுகிறது.
அச்சம் வாழ்க்கையின் ஓட்டத்தைத் தடைப்படுத்திவிடும். இதனால் உன் வாழ்வின் வாசல் மூடப்பட்டுவிடுகிறது. உன்னிடம் எவ்வளவு பெரிய திறமை, கல்வி, செல்வாக்கு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை இருந்தாலும் உன் வாழ்வில் கதவு அடைக்கப்பட்டு விடுகிறது. ஒரு புதிய நபரை சந்தித்து ஒருவன் தன் திறமையைக் காட்ட அச்சப்படுகிறான். நீ உன் திறமையை வெளிப்படுத்தினால் தான் உன் வாய்ப்பின் கதவை திறக்க முடியும்.
உன்னிடம் இருக்கும் அச்சத்தை உன் மனதால் அணுகுவதன் மூலம் தான் வெற்றி கொள்ள இயலும். வாழ்க்கை என்பது நீ மீண்டும் பூமிக்கு வருவது அல்ல. இந்த ஒருமுறைதான் உனக்கு அந்த வாய்ப்பு. அந்த வாய்ப்பை நீ பயன்படுத்தாமல் வாழ்ந்து மடிவதால் என்ன பயன்?
ஒரு வாழ்வின் பாதையைத் தேர்ந்தெடு. அதன் மூலம் உன் தலைமுறைக்கு ஒரு அடையாளத்தை விட்டுச்செல். திடமான நம்பிக்கையோடு நீ தேர்ந்தெடுத்துள்ள பாதையை அணுகு. ஆக்கப்பூர்வ எண்ணங்களால் உன் மனதை நிரப்பு. நீ ஆற்றல் நிறைந்தவன், மாமனிதன். இந்த உலகில் உன்னைப் போல் ஒருவன் இந்த மனித வரலாற்றில் இன்னும் பிறக்கவில்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை. நீ முற்றிலும் புதியவன் என்பதை உணர்ந்துகொள்.
இயற்கையைப் பார்!
அது கொடுக்கிறோம் என நினைத்துக் கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து வேண்டியதை எடுத்துக் கொள்கிறான்
உன்னிடம் உள்ளது.
“நதியில் உள்ள நீர் போல்
இருக்கட்டும்
தாக முடையவன் குடிக்க
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு – நீ சுத்தமாய்
கொடு – நீ சுகப்படுவாய்
கொடு அது
உன் இருத்தலை நியாயப்படுத்தும்”
– என்பார் கவிக்கோ அப்துல் ரஹ்மான்.
இயற்கை உன்னை எவ்வளவு நம்பிக்கையோடு படைக்கிறது? இயற்கையின் நம்பிக்கையைச் சிறிதும் குறைத்துவிடாதே. நீ இந்த பூமித்தாயின் குழந்தை. இயற்கை உனக்கு எந்த தீங்கையும் செய்யவில்லை. நீ இயற்கைக்கு எந்த தீங்கையும் உருவாக்காதே. இயற்கை உன்னில் மறைந்திருக்கிறது. உன் வாழ்வின் பயணத்தை முழுமையோடு நிறைவு செய்து, இயற்கையில் மறைய வேண்டும். எதற்காக நீ அஞ்ச வேண்டும்? துணிச்சலோடு நில். உன் தோள்களை வலிமைப்படுத்து. அஞ்சாத மாமனிதனைத்தான் இயற்கை விரும்புகிறது.
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் வாழ்வதற்காக இயற்கை வழங்கி இருக்கிறது. வாழ்க்கை அழகான நேர்த்தியான அம்பு. இயற்கை எய்த அம்பு நீ. எந்த நோக்கத்தோடு இங்கு வந்தாயோ அந்த நோக்கத்தை நேர்த்தியாக செய்துவிட்டு இங்கிருந்து செல்.
உன்னிடம் சேவை மலர்ந்த முகமும், வலிமையுள்ள தோளும், நேசம் நிறைந்த கரமும், அன்பு நிறைந்த குரலும் நிறைந்துள்ளது. கடமையில் கண்ணாய் இரு. யாருக்காகவும் காத்திருக்காதே. நேரம் இல்லை. நீயே தொடங்கு. உன்னை அறிய நீ சிறிது தியானம் செய்.
வெற்றியாளர்கள் ஒருபோதும் பயணத்தைவிட்டு வெளியேறுவதில்லை. வெளியேறியவன் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பயன்படுத்திக் கொள்ள தயாராகும் போது வாய்ப்புகள் வராது.
ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் திறமைசாலி. ஆனால் சோம்பேறி. அதே கிராமத்தில் திருமணம் செய்துகொள்ள ஒரு வீட்டில் பெண்கேட்டான். பெண்ணின் தந்தை ஒரு போட்டியை அறிவித்தார். மாட்டுத் தொழுவத்தில் 3 காளை மாடுகள் இருக்கு, ஒவ்வொரு மாடாக அவிழ்த்துவிடுவேன். ஏதேனும் ஒரு மாட்டின் வாலைப் பிடித்துவிட்டால் என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். சரியென்று பெண் கேட்க வந்தவனும் ஒப்புக் கொண்டான். முதல் காளையை விட்டான். சீற்றத்தோடு கொம்பை இங்கும் அங்கும் ஆட்டி வந்ததையும், மிகுந்த சீற்றத்தோடு வந்ததையும் பார்த்து அந்த மாட்டை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டான்.
இரண்டாவது காளை பெரிய காளை தரையைப் பிளந்து யார் வந்தாலும் கொம்பால் குத்திவிடுவேன் என்று மிரளமிரள பாய்ந்து வருவதைப் பார்த்தவன் குலைநடுங்கி, அடுத்த காளையின் வாலைப் பிடித்துக் கொள்ளலாம் என்று இதையும் விட்டுவிட்டான்.
அடுத்த மூன்றாவது காளை வத்தலா, தொத்தலா சாதுவாக வந்ததைப் பார்த்து இளைஞனுக்கு ஏகப்பட்ட சந்தோசம். இதன் வாலைப் பிடித்துவிடலாம் என்று 3வது காளையை நெருங்கியவனுக்கு அதிர்ச்சி. காரணம், காளைக்கு வாலே இல்லை. வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பயன்படுத்திக் கொள்ள தயாராகும்போது வாய்ப்புகள் வராமல் போகலாம். இப்படித்தான் நம்மில் பலருக்கும் வாழ்க்கையின் வாய்ப்புகளை வாலில்லாத காளையாக நழுவ விட்டு விடுகிறோம்.
1039 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் சோதனைக்கூடம் தீப்பற்றி எரிந்தபோது, அவர் தனது மகனிடம், “அம்மாவைக் கூப்பிடு, அம்மாவைக் கூப்பிடு. இப்படி சுடர்விட்டு எரிவதை அவள் இதுவரை பார்த்திருக்க மாட்டாள். அவள் பார்க்கட்டும்” என்றார்.
தனது சோதனைக்கூடம் எரியும்போது கூட நம்மால் மீண்டும் அதைச் செய்து சாதனை படைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை அவரால் மட்டுமே உணர முடிந்தது. காரணம், எத்தகைய சோதனையிலும் வாய்ப்பு என்பது ஒளிந்துதான் இருக்கும் என்பதை நாமும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு கதவு அடைக்கப்படும் போது, மறுகதவு தானாகவே திறக்கும் அதுவே வாய்ப்பு.
வெற்றி பெறுவதற்கு எது தேவையோ அதை நீ உற்றுநோக்கிக் கற்றுக்கொள்ள வேண்டும். உற்று நோக்கும்போது தான் அதிலிருக்கும் வாய்ப்பையும் நின்று நிதானித்து அறிய முடியும்.
அமெரிக்க தொழிலதிபர் அன்ட்குரூ கார்னகி தனது கல்லறையில் “தன்னைவிட புத்திசாலியான மனிதர்களைக் கட்டியாளத் தெரிந்த மனிதன். இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று பொறிக்கச் சொன்னார். அவர் வாழும் போதே எவ்வளவு வாய்ப்புகளைப் பெற்றிருந்தார் என்பதற்கு அவரது கல்லறை வாசகங்ளே சான்றாக இருக்கின்றன.
ஒரு காட்டில் தவளை குழியில் விழுந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் வெளியே வரமுடியவில்லை. அங்கு வந்துபோன எல்லா விலங்குகளையும் தனக்கு உதவுமாறு கேட்டும் ஒன்றுமே உதவிக்கு வரவில்லை. தவளை முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தது.
அடுத்தநாள் அந்த பகுதிக்குச் சென்றமற்ற விலங்குகளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. குழியில் இருந்து வெளியே வந்த தவளை காட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. இதைக்கவனித்த மற்றவிலங்குகள் எல்லாம் தங்களுக்குள்ளே கேள்விகளைக் கேட்டுக் கொண்டன. யாருமே உதவவில்லை? எப்படி குழியிலிருந்து தவளை வெளியே வந்தது? ஒன்றுமே புரியவில்லை. எல்லோரும் சேர்ந்து தவளையிடேமே கேட்டுவிடலாம் என்று சென்றன.
அதற்கு தவளை சொன்ன பதில் நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கின்றது. முயன்றால் ஓர் ஆபத்தைக் கூட வாய்ப்பாக மாற்றமுடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்தது. தவளை என்ன சொன்னது தெரியுமா?
நான் குழியில் இருந்து வெளியே வர முயன்றேன். உங்களிடமும் உதவி கேட்டேன். நீங்களும் முன்வரவில்லை. இருந்தாலும் நான் முயற்சியை கைவிடவே இல்லை. தொடர்ந்து எட்டி எட்டி குதித்துக் கொண்டிருந்தேன். அதனால் எனக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. பசி அதிகமானதால் கத்தத் தொடங்கிவிட்டேன். எனது சத்தத்தைக் கேட்டு என் எதிரியாக பாம்பு என்னை பிடித்துச் சாப்பிட குழிக்குள்ளே வந்தது. அவ்வாறு வருகின்றசமயம் பார்த்து, நான் எட்டிக் குதித்து பாம்பின் கழுத்தை இறுகி கட்டிப் பிடித்துக் கொண்டேன். பாம்பு என்னை சாப்பிட அப்படியும் இப்படியும் முயன்றது வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம் என்று நானும் இருந்தேன். பாம்பால் முடியவில்லை. பிறகு, பாம்பு குழியை விட்டு வெளியே ஏறிவந்தது. பாம்பு வெளியே வந்ததும் நான் எட்டிக் குதித்து தப்பித்தும் கொண்டேன் என்று தவளை கூறியது. சாகும் தறுவாயையும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட தவளையிடமிருந்து பாடம் படித்துக் கொள்ளலாம்.
கவியரசு வைரமுத்து சொல்வார்… வாய்ப்புகள் தான் வாழ்க்கை. வீரியம் உள்ள விதை மேல் மழைத்துளி பட்டால், விதைக்கு அந்த மழைத்துளியே வாய்ப்பு.
நயாகரா அருவியின் குறுக்கே கம்பி கட்டி அதன் மீது நடந்து மறுமுனையை அடைந்தவர் பிளான்டின் என்றஃபிரெஞ்சுக்காரர். அருவியின் மீது நேரடிப்பயிற்சி ஒருமுறைகூட கிடையாது. தரையில் தான் இரண்டு கம்பங்களுக்கு இடையே கம்பி கட்டி பயிற்சி செய்து இறுதியில் நயாகரா அருவியின் குறுக்கே கம்பி மீது நடந்து வெற்றி பெற்றார். ஆக, இவர் வாய்ப்பைத் தரையில் நடத்தினார். நயாகரா இவரை கைகொட்டி வரவேற்றது. வாழ்வா? சாவா? என்பதில் இவர் வாய்ப்பைப் பயன்படுத்தினார்.
அர்ப்பணித்தலின் மூலமாக நம்மை இழக்கும்போது தான் வாழ்வதற்கான காரணத்தை நாம் காண முடியும். தவழ்ந்து கொண்டே என்னுடைய தாயின் வயிற்றுக்குத் திரும்பிச் செல்லும் அந்த நாட்களை, நினைவில் கொள்கிறேன். எவரும் இதைச் செய்யலாம் என்பார் ஆலன்.
நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு பொறுப்பின் தளத்திலிருந்து உங்களுடைய வாழ்க்கை உயரும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். “தோல்வியைக் கண்டு துவளாதீர்கள். அறிவை மேன்மேலும் பெருக்கிக் கொள்ள தரப்பட்ட வாய்ப்பே தோல்வி” கார் மன்னர் ஹென்றிபோர்டு என்கிறார். நீண்ட நாள் வாழ வேண்டும் என்று விரும்பினால், அறிவுத் தெளிவுடன் நீண்ட நேரம் உழையுங்கள்; அப்போது உடல் செல்களும் மூளையும், ஆரோக்கியமாக இருப்பதால் வாழ்நாள் கூடும்.
எந்தத் துறையிலும் வெற்றி பெற நான்கு தூண்கள் நம்மைத் தாங்கி நிற்க வேண்டும். அவை 1. மன உறுதி, 2. சிக்கனம், 3. நேர்மை, 4. ஒழுங்கு ஆகியவையே மிக முக்கியமான ஒழுங்குமுறை இருந்தால் தான் வாழ்வில் குழப்பம் ஏற்படாது. அதைவிட நேர்மை மிகமிக முக்கியமானது. இதற்கு மூச்சுக்காற்று போல மன உறுதியும், சிக்கனமும், நம்மிடம் இருக்க வேண்டும். நமது உண்மையான சொந்தங்கள் இந்த நான்கு தூண்கள் என்பார் ஜேம்ஸ் ஆலன்.
கண்ணையும் காதையும் திறந்து வைத்தால், பல செய்திகளும், பல செயல்களும் நம் கண்முன்னே பரந்து விரியும். அப்போது உன்னிப்பாக உற்றுநோக்கினால், வாய்ப்பின் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்கும். அதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் சிகரத்தில் சிம்மாசனம் போடப்பட்டிருக்கும். அந்த இடமே உன் இடம். அதில் நீ மட்டும் அமர்ந்து கொள். அதுவல்லவா உன் இடம்.
இந்த இதழை மேலும்