– 2014 – September | தன்னம்பிக்கை

Home » 2014 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றியின் ரகசியம்

    கனவுகள் நினைவாக… நினைத்தவை எல்லாம் நிஜமாக… கண்ணுக்குள் கண்ட கனவு கண்முன் நடக்க… சில யோசனைகள்:

    ஒரு சிலர் எவ்வளவோ பேரும் புகழும் பெறுகின்றனர். அவர்களது பணியில் சிறந்து விளங்குகின்றனர். எட்டாத புகழை அடைகின்றனர். இதெல்லாம் அவர்களால் எப்படி முடிந்தது. இதோ அந்த வெற்றியின் ரகசியம்…

    நமது வாழ்க்கை எப்போதுமே ஒரு ஓட்டப்பந்தய மைதானம் தான். அதில் மூச்சிறைக்க ஓடிக்கொண்டிருப்போம் நாம். வேகமாக ஓடுபவன் புகழை அடைகிறான். ஆனால் நம்மில் பலரும் எந்தவொரு லட்சியமும் இன்றி ஓடிக்கொண்டிருப்போம். ஆனால் மற்றவர் அடையும் புகழைக்கண்டு பொறாமைப்பட்டுக் கொண்டு ஓடிக்கொண்டிருப்போம்.

    தடுக்கி விழுந்தவனைப் பார்த்து ஏளனச் சிரிப்புடனே ஓடிக்கொண்டிருப்போம். ஒரு கட்டத்தில் நம்மால் ஓட முடியாமல் நிற்போம். அதுதான் வயோதிகம். அப்போதும் நம்மைக் கடந்து பலர் ஓடிக்கொண்டிருப்பர். இது வேண்டாமே…

    வேகமாக ஓடி புகழை அடைய வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடலாமா?

    அதற்காக 10 எளிய வழிகள். இவைகள் அனைத்தும் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கனவுகள் நிஜமாக கையாண்ட முறைகள் தான்.

    1. தன்னம்பிக்கை:

    10 வழிமுறைகளில் எத்தனை வழிகளை நீங்கள் கையாளமுடியும் என்று நினைக்கிறீர்கள்?

    அனைத்துமா? ஆம். இதுதான் முதல் வழிமுறை. வெற்றி பெற தன்னம்பிக்கை தேவை. அனைத்தையும் என்னால் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை, நம்பிக்கையற்றவர்களையும், அவநம்பிக்கையையும் தவிருங்கள். வெற்றி உங்கள் பக்கத்தில் வரும்.

    2. லட்சியம்:

    உங்களது லட்சியத்தை அல்லது நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை முதலில் தேர்வுசெய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமெனில் அது என்ன என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

    3. முயற்சி:

    நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். எதை நினைத்தும் பயந்து முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள்.

    “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”.

    4. கற்றுக்கொள்ளுங்கள்:

    புதிது, புதிதாகப் புத்தகங்களைப் படியுங்கள். அதிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். புதிது புதிதாக எதையாவது அறிந்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எதில் விருப்பமோ அதைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ள முன்வாருங்கள். கற்றுக்கொள்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம்.

    5. உழைப்பு:

    லட்சியத்தை நோக்கி கடுமையாக உழையுங்கள். உங்கள் பார்வை எப்போதும் லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். லட்சியத்தைப் பார்க்கும் கண்களுக்கு அதன் வழியில் இருக்கும் தடைகள் தெரியாது. அப்போதுதான் உங்கள் உழைப்பு பலனை அளிக்கும்.

    6. தெளிவுறுங்கள்:

    லட்சியம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். தவறுகள் மூலமாகவும்

     பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். தவறுக்காக எப்போதும் கவலைப்படாதீர்கள். உங்கள் தவறுகள் தான் பல சமயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    7. குறுக்கீடு:

    உங்கள் லட்சியத்தை கெடுக்கும் வகையில் Guhwa ஒரு நபரோ அல்லது பொருளோ, பணமோ குறுக்கே வருவதை அனுமதிக்காதீர்கள். உங்களது அனைத்து எண்ணங்களையும் லட்சியத்தை நோக்கியே செலுத்துங்கள். உங்கள் நேரத்தை அதற்காகவே செலவிடுங்கள்.

    8. தனித்துவம்:

    உண்மையாக இருங்கள். உங்களை நம்புங்கள். சுயமாக சிந்தித்து சொந்த திறமையை

    வெளிப்படுத்துங்கள். மற்றவர்களைப் பின்பற்றி சென்றால் தனித்துவம் இருக்காது.

    9. கலந்தாய்வு:

    எந்த மனிதனும் தனியல்ல. எங்கும் எப்போதும் ஒரு குழுவாகவே இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களையும் பேசச் சொல்லுங்கள்.மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். பயிற்சி, ஊக்கம் போன்றவற்றை ஒரு சேரப் பெறுங்கள்.

    10. பொறுப்பேற்பு:

    எப்போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். உறுதி அளித்தால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். நேர்மை, கீழ்பணிதல், பொறுப்புடன் செயலாற்றுதல் போன்றவை இல்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க இயலாது.

    எனவே, இவற்றைக் கடைபிடித்து உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள். நாம் பிறந்தோம். வாழ்ந்தோம். இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லுங்கள். அதுவே வெற்றியின் ரகசியம்.

    இந்த இதழை மேலும்

    அச்சமில்லை… அச்சமில்லை……

    ‘அச்சமே மரணம்’ என்பார் விவேகானந்தர். ‘அச்சமில்லை… அச்சமில்லை…’ என்று முழங்கினார் பாரதி. அச்சமே கீழ்களது ஆசாரம் என்று குறள் கூறும். அஞ்சி அஞ்சிச் சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே! என்று மனம் நொந்தான் பாரதி.

    அச்சம் எனப்படும் இந்த பயம் என்ற உணர்வு எல்லோரிடமும் உள்ளது. நாமாக விரும்பி ஏற்பதல்ல இது. சிறுவயது முதலே பெற்றோராலும், மற்றோராலும் நமக்குக் கற்பிக்கப்படுவது.

    பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம். அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிவயப்பட்ட வெளிப்பாடு ஆகும். இது தப்பித்தல் அல்லது எதிர்த்தல் போன்ற நடத்தைகளை ஒத்துள்ளது. பயத்தின் மூலகாரணம் அறியாமையே. கருக்கிருட்டில் காலில் இடறியது கயிறா அல்லது பாம்பா என்று தெரியாமல் பாம்பாக இருக்குமோ என்று ஐயம் வந்தவுடன் பயம் மனதில் அப்பிக் கொள்கிறது. கடி, விஷம், வாயில் நுரை தள்ளல், மரணம் என்று அடுக்கடுக்காக கற்பனை விரிந்து நம்மை செயலிழக்க வைக்கிறது.

    ஆனால் காலில் இடறியது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை வெளிச்சத்தில் பார்த்துத் தெளிந்தவுடன் அத்தனை பயமும் வடிந்து விடுகின்றது. புலியடித்து செத்தவர்களைக் காட்டிலும் கிலிபிடித்து இறப்பவர்கள் தான் அதிகம் இல்லையா?

    ஆக, பயம் என்பது வெளியில் எங்கும் இல்லை. நம் உள்ளிலிருந்து தான் உருவாகிறது.

    தெரிந்த அபாயத்தில் பயம் வராது. எதிர்காலம் நிச்சயமற்றது. எதுவும் நடக்கலாம். ஆனால் நம் மனமோ எதிர்மறை சிந்தனைகளால் சிக்குண்டு வரவிருக்கும் அபாயம் பற்றியே எண்ணுகிறது. அச்சம் கொள்கிறது.

    எதைக்கண்டு தான் நாம் பயப்படுவதில்லை? நீரைக்கண்டு பயம், நெருப்பைக் கண்டு பயம், விலங்கு பயம், தனிமை பயம், மேடை பயம், திருடர் பயம், போலீஸ் பயம், வறுமை பயம், நோய் பயம், மரண பயம் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பயம் நம்மை முடக்கிப்போடுகிறது. முயற்சி செய்வதை தவிர்க்கப் பார்க்கிறது. தோல்வி வருமோ என்று நினைத்து தயக்கம் கொள்ளச் செய்கிறது. தோல்வியை ஒரு பெரும் இழப்பாகக் கருத வைக்கிறது.

    பயம் நம்மை உறைய வைக்கிறது. சிந்திக்கவிடாமல் செயலற்றுப்போக வைக்கிறது. தேங்கிப்போய் அழுகும்படி செய்கிறது.

    “பயப்படுவதை பழக்கமாக ஏற்றுக் கொண்டவனுடைய வாழ்க்கை சோகமயமானதாகவே இருக்கும்” என்கிறார் எட்வர்ட் ஹெச். ஹாரிமான்.

    “அச்சம் மறைமுகமான சம்மதம். எதையாவது கண்டு அஞ்சுகிறாய் என்றால் அது நடப்பதற்கு நீ சம்மதிக்கிறாய் என்று அர்த்தம். அது தான் அதன் கையை வலுப்படுத்துகிறது. அடி மனதின் சம்மதம் என்று அதைக் கூறலாம்”  அன்னை.

    “பயப்பதைப் போக்க சரியான வழி அதை துணிவுடன் எதிர்கொள்வதே. அச்சம் தருவதைக் கண்டு அஞ்சி ஓடாமல் அதை நெருங்கிச் செல்வதன் மூலமே அச்சத்தை வெல்ல முடியும்”    -ஜே.கே.

     “எதைச் செய்யப் பயப்படுகிறீர்களோ அதையே திருப்பி திருப்பி செய்வது தான் அச்சத்தை ஒழிக்கும் வழி” என்பார் அண்ணல் காந்தியார்.

    தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, செய்து பார்ப்பது, உடனடியாக செயலில் இறங்குவது போன்றவைகள் தாம் நம் பயத்தைத் தகர்க்கும் வழிமுறைகளாகும்.

    மாவீரன் சிவாஜி, வீர அலெக்ஸாண்டர், நெப்போலியன், நெல்சன், ஜான்சி ராணி, லட்சுமிபாய், பகத் சிங் போன்றோர்களின் வீரஞ்செறிந்த வரலாறுகளைப் படித்தாலே அச்ச உணர்வு அலறியோடிடும்.

    எதிலும் மிதமாக இருங்கள். பேராசை வேண்டாம். அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டுக்கொண்டு அலைய வேண்டாம். பொறுப்புகளைப் பிறருக்கும் பகிர்ந்து கொடுங்கள். எதையும் முன்யோசனையுடன் திட்டமிட்டு செய்யப் பழகுங்கள்.

    தன்னம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வையுங்கள். உடனடி செயலில் இறங்குங்கள்.

    இந்த இதழை மேலும்

    மரணம் தீது

    உண்ணும் உணவிலிருந்து கொடுக்கும் பொருள்வரை எல்லாமே கேட்டதும் கொடுக்க வல்லது, நினைத்ததும் பெற முடிந்தது. ஆனால் உயிர் மட்டுமே கொடுக்கவோ பெறவோ இயலாதது உறவுகளே.. உயிர் ஒரு பிச்சை. வாழக் கிடைத்தது ஒரு வாய்ப்பு.

    ஒரு குழந்தைக்கு பிறந்ததும் இதயத்தில் ஓட்டை, மருத்துவம் பார்ப்பதற்கிடையில் பல கோளாறுகள் ஏற்பட்டு குழந்தை நோய்வாய்ப் பட்டு சாகக் கிடக்கும் தருவாயில் ஆகிறது. பிறகு எப்படியோ அதை படாதபாடுபட்டு அந்தப் பெற்றோர் காப்பாற்றி விடுகின்றனர். பின்னொரு கட்டத்தில் விளையாடிக் கொண்டே ஓடி ஒரு கிணற்றுக்குள் விழுகிறது அந்தக் குழந்தை. அதையும் போராடிக் காத்து விடுகின்றனர். பின்னொரு நாள் இரண்டு சக்கர வாகனம் மோதி தலையில் அடி, சுயநினைவை இழக்கிறான்.

    போராடி தனது சொத்தையெல்லாம் விற்று அந்தக் குழந்தையைக் காப்பாற்றுகின்றனர் பெற்றோர். பின் வளர்ந்து வருகையில் அம்மா நோய்வாய்ப் பட்டு இறக்கிறார். அதே கவலையில் அப்பாவும் கொஞ்ச நாளில் இறக்கிறார். அநாதையான குழந்தைக்கு ஒரு காதலி வருகிறாள், இருவருக்கும் திருமணம் ஆகிறது. பின் அவர்களுக்கு ஒரு குழந்தைப் பிறக்கிறது. குழந்தை இரத்த வாந்தி எடுக்கிறது, மருத்துவமனை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். அங்கு தான் தெரியவருகிறது; முன்பே தனது மனைவிக்கும் கேன்சர் இருந்திருக்கிறது என்று. ஆறாத வலியில் வீடெல்லாம் ரத்த வாந்தி நிறைய நிறைய இருவரும் இரும்பி இரும்பி சாகிறார்கள். மீண்டும் தனிமரமாய் நிற்கிறான் அந்த இளைஞன்.

    வாழ்க்கை வெகுண்டுப் போன ஒரு பிறவி, யாரை நினைத்தழுவான் அவன்? எங்கு திரும்பினாலும் மரணவாசனை, யாரை நேசித்தாலும் பிரிவின் அச்சம். பிறந்ததிலிருந்தே சாகக் கிடந்தவன் இப்போது வாழமுடியாமல் தவிக்கிறான். தனிமை கொல்லும் வகையில் சிக்கித் தவிப்பவனுக்கு ஒரேயொரு தெளிவிருந்தது. அதுதான் தான் எப்பொருட்டும் வாழவேண்டுமென்பது, இதலாம்தான் வாழ்க்கை, இதையெல்லாம் நாம் அனுபவித்தே தீரவேண்டும் எனில் தாங்கியும் ஆகவேண்டும், வாழ்வெனில் எல்லாம் நேரும், எல்லாம் கடக்கும், எதுவாயினும் அனுபவம் கொள்ளவேண்டுமென்பதை அவன் அறிந்திருந்தான்.

    என் அம்மா சுமந்தாள், என் அப்பா வளர்த்தார், இந்த உயிர் அவர்கள் தந்த பிச்சை. இந்த உயிர் நான் நம்பும் தெய்வங்கள் தந்த வரம். அந்த வரத்தை பிறருக்கும் நான் வரமாகவே தரவேண்டும் என்று போராடினான், உழைத்தான், எல்லோருக்கும் உதவினான், ஒரு சின்ன கடை வைத்தான், கடை பெரியக் கடை ஆனது, பெரியக்கடை இரண்டாக மூன்றாகப் பெருகியது. மூன்று முப்பதாக மாறி எங்கும் அவன் பெயர் எல்லாம் அவனது ஆட்சி, யாதும் அவனுக்குச் சொந்தம் என்று ஊரெல்லாம் அவனுடையப் பெயர் பரவி வந்தது. பின்பொரு மருத்துவமனையைக் கட்டினான். நோய்வாய்ப் பட்டோரையெல்லாம் காப்பாற்றினான்.கேன்சர் வந்தால் காப்பற்ற ஆய்வு மையம் அமைத்தான். அவனுடைய அம்மா அப்பா இறந்த இடத்தில் நூறு அம்மா அப்பா பிழைத்தார்கள். அவனுடைய மனைவி குழந்தை இறந்த இடத்திலிருந்து ஆயிரம் குழந்தையும் பெண்களும் காப்பாற்றப் பட்டனர். அவனின் ஒரு உயிர் பல உயிரைக் காப்பாற்றியது. அவன் இறக்கையில் எத்தனையோப் பேரை வாழவைத்துச் சென்றான். அவனின் கல்லறையில் தற்கொலை செய்துக் கொள்ளுங்கள் என்று எழுதிவைக்கப்பட்டது.

    ஆம்; தற்கொலை செய்துக் கொள்ளுங்கள். தன்னை தனது ஆசையை, தனது வலியை, தனது கோபத்தை, தனது சுயநலத்தைக் கொன்றுவிடுங்கள். பிறகு மட்டுமே உங்களால் பிறரைப் பற்றி யோசிக்க முடியும். பிறர்நலம் பற்றி சிந்திக்க இயலும். ஒரு தெரசா, ஒரு காந்தி, ஒரு கலாம், ஒரு காமராஜர் இன்னும் ஒரு ஒரு என்று எத்தனை நாளைக்கு அவர்களையே உதாரணமாய் காட்டப் போகிறோம்? நம்மையங்கே உதரணமாக ஆக்குங்கள். ஒரு வைரமுத்து போதாது, ஒரு பாலகுமாரன், சுஜாதா போதாது எல்லோரும் எழுதுங்கள். ஒலிவியாக்கள், கல்பனாசாவ்லாக்கள், பிரேமாக்கள், கிரண்பேடிகள் இன்னும் நிறைய தேவை நமக்கு, அவர்களை எல்லாம் எங்கிருந்து எடுக்கப் போகிறோம்? தனக்குள் தேடுங்கள். ஒரு சூப்பர்ஸ்டார் போனால் அடுத்த சூப்பர்ஸ்டாரை உருவாக்கிக் கொள்கிறோம், ஒரு காமராஜர் போனார் அடுத்த காமராஜர் ஏன் வரவில்லை?

    ஒரு நாளேடு விற்ற மாணவனால் தன்னை ஒரு நாட்டிற்கே விஞ்ஞானியாக ஆக்கிக்கொள்ள முடிகிறது. ஏன் ஒரு தேசத்திற்கே தன்னை ஜனதிபதியாக்கிக் கொள்ளமுடிகிறது. தன்னை கதற கதற கற்பழித்த அதே மண்ணில் தன்னை அந்த மண்ணிற்கே முதல்வராக ஆக்கிக் கொண்டாரே மாயாவதி, அவர்களை எல்லாம் நாம் ஏன் உற்றுப் பார்ப்பதில்லை?

    ஒரு மரணம் தன்னை கொல்லும், தன்னோடுள்ளவரை நினைவிலேயே கொல்லும். ஆனால் ஒரு உயிர் நினைத்தால் கோடி பேரை வாழவைக்கும். செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகும் போது, இந்தியாவில் பிறந்த ரத்தன் டாட்டா ரேஞ் ரோவர் கம்பெனியை இங்கிலாந்து சென்று வாங்க இயலும்போது, ஒரு பில்கேட்சால் உலக பணக்கார வரிசையில் முதலிடத்தைப் பிடிக்க இயலும்போது, நம்மூர் ஸ்ரீதர் சென்று அமெரிக்காவில் ப்ளூம்பாக்ஸ் காட்டி எல்லோரையும் தனக்குப் பின்னால் வரவைக்கும் போது; நம்மையெல்லாம் படிக்கவைத்து பட்டதாரியாக்கி நல்ல பேரெடுத்து பெரிய ஆளாகப் பார்க்க வளர்த்த நம் தாய் தந்தைக்கு நாமொரு தற்கொலையை ஏற்றிடாத வீரனாகவேனும் வாழ்ந்துக் காட்டவேண்டாமா?

    வாழும் காலந்தோறும் மனதைக் கோவிலாக்கி அதில் அவர்களை தெய்வமாக வைத்து பூஜித்திடல் வேண்டாமா?

    உண்மையில் பெற்றோரைக் காட்டிலும் பெரிய தெய்வமில்லை. அவர்களுக்கான கோவிலையுள்ளே கட்டவேனும் தற்கொலையை நிராகரிப்போம். அங்ஙனம் பெற்றோரை மதிக்கும் ஒவ்வொருவரும் மனதுள்  அவர்கள் ஈன்று கொடுத்த தன்னையும் மதித்தல் வேண்டும். காரணம், உயிர் பெரிது. வாழ்வது சுகம். வளர்ந்து வாழ்ந்துக் காட்டுவது பெருமை. பெருமையோடு வாழ்வது என்பது பிறப்பை வெல்வதற்குச் சமம். வெல்வது என்பது நிலைப்பதும் ஆகும். நிலைப்பதென்பது மனிதற்கே வைக்கத் தக்கது. எனவே மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரும் நிலைக்க முயற்சி செய்யுங்கள். நிலைத்துக் காட்டுங்கள். நம் கண்ணெதிரே அமிலம் ஊற்றப்பட்டு, மாதக் கணக்கில் சிதைந்த உடலாக வலியெல்லாம் தாங்கி, முகம் போனால் பரவாயில்லை, தான் அழகில்லை என்றாலும் பரவாயில்லை, நடக்கவோ பார்க்கவோ இயலாவிட்டாலும் கூடப் பரவாயில்லை, என்னை ஒரு பிண்டமாக வைத்திருந்தாலும் சரி’ உயிரோடு மட்டும் வைத்திருங்கள் போதும் என்று கேட்டாளே வினோதினி நினைவிலிருக்கா?

    எப்படியேனும் என்னைக் காப்பாற்றி விடுங்கள், நான் எனது அப்பாவைக் காப்பற்ற வேண்டும் என்று வலிக்க வலிக்க கெஞ்சினாளே அந்த அப்பாவிப் பெண் வினோதினி, ஆனால் கிடைக்கவில்லையே அவள், விட்டுவிட்டோமே நாம் துடிக்கத் துடிக்க அவளை. அந்த ஒரு உயிரை நம்மால் நிறுத்த முடியவில்லையே.  ஆனால் அதுபோல், விலைமதிக்க முடியாததொரு உயிரைத் தானே நாமெல்லோரும் நமக்குள் வைத்திருக்கிறோம்? அவளுக்கு கிடைத்தாத உயிர் தானே நம்மிடம் இருக்கிறது. அப்படிப்பட்ட உயிரை ஒரு நொடியில் விடுவதைக் காட்டிலும் ஒருத்தருக்காகவாவது வாழ்வது உத்தமம் இல்லையா?

    சாவென்பது பெரிய வேலையில்லை, சற்று மூச்சு பிடித்தால் ஜீவன் போகும். அதே மூச்சை உள்ளே பிடித்துக்கொள்ளுங்கள். வலையை பொறுத்துக்கொள்ளுங்கள். சாக நினைக்கும் கனத்தை விட்டொதுக்குங்கள். சாக மாட்டேன், சாக மாட்டேன், சாக மட்டும் கூடாது, வாழனும், வாழனும், வாழ்வதற்கென்ன வழி என்று யோசியுங்கள். அப்படி வாழவே முடியாத நிலை ஒன்று வருமெனில்; சாகவே துணிந்தப் பிறகு, வாழ்க்கையை வெல்வதற்கு ஏன் துணியக்கூடாது?

    மனசு ஒரு கழுதை மாதிரி. பசியெடுத்தால் கத்துவதைப் போல் வலியெடுத்தால் அழும் அவ்வளவுதான். அதற்குக் கொஞ்சம் தீனி போட்டு சுமக்கச் சொல்லுங்கள்; இந்த உலகத்திற்கான அத்தனைச் சுமையையும் ஒருங்கே மனசு சுமக்கும். எனவே மனதை எதிலும் விட்டு விடாதீர்கள். மனம் சொல்வதைக் கேட்க நேர்கையில் கொஞ்சம் அறிவு சொல்வதையும் கேளுங்கள். சாவது என்பதைத் தவிர மீதியைச் சிந்தியுங்கள். அப்படியொரு வேளை, சாகத்தான்வேண்டும் வாழ்வதற்கென்று இனி ஒன்றுமேயில்லை யென்று தோன்றிவிட்டால், அந்த மனநிலையை ஒரு ஒரு நாளைக்கு மட்டுமேனும் மாற்றி வைத்துவிட்டு, சரி நாளைக்குப் போய் இறந்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டு, அந்த முன்னொரு நாளில் எங்கேனும் தெருவில் உதவிக்காக அலையும் ஒரு பத்துபேருக்கு உதவி செய்ய முயற்சித்துப் பாருங்களேன்?

    மறுநாள் சாவது எத்தனைப் பெரிய முட்டாள்தனமென்று புரிந்துக் கொள்வீர்கள். அப்படி பல உயிர்கள் பிறரின் உதவிகளை எதிர்நோக்கித்தான் இம்மண்ணில் ஒவ்வொரு ஜீவனும் திரிகிறது. ஒருவருக்கு ஒருவர், உனக்கு நான் எனக்கு நீ என்று அணைத்து வாழும் வாழ்க்கையிது. அருகருகில் நின்று தோளுக்கு தோள் தந்து நானிருக்கேன் என்று சொல்லும் பலம் யானைபலத்தைக் கொண்டது. அதை ஒருவருக்கு நீங்கள் கொடுக்க முடியுமெனில் நீங்கள் வாழவேண்டியவர். அப்படியும் இல்லை, என்னால் யாருக்கும் உதவியில்லை என்று எண்ணினால், அசையும் மரம் யாருக்கென்று அசைகிறது, காய்க்கும் கனி யாருக்கென்று பழுக்கிறது, மலரும் பூக்கள் யாருக்கென்று பூத்து தளர்ந்து வாடி உதிர்கிறது?

    மலர்வதும் உதிர்வதும் அதற்கு யதார்த்தமெனில் பிறகு பிறப்பதும் இறப்பதும் கூட நமக்கும் யதார்த்தமாக நிகழவேண்டுமில்லையா? மரங்கள் நிற்கும் காய்க்கும் காய்ந்துப் போகும், எனக்கு வாழ பொருட்கள் தேவை, வாழ்வதற்கு வழிகள் தேவை என்றால், இன்னுமொரு நாள் ஒரு ஊரைச் சுற்றி வாருங்கள்; தெருத் தெருவாய் காய்கறி விற்கும், தயிர் மோர் விற்கும் மீன் கருவாடு விற்கும் மாம்பழம் கீரை விற்கும் வயதானப் பாட்டிகளை தாத்தாக்களைப் பாருங்கள். ஏழெட்டு வயதில் கிளாஸ் கழுவி இலையெடுத்துப் போட்டு மேஜை துடைத்து தன்னைப் பெற்றவளுக்கு ஒரு நூறு ரூபாயையவது கொண்டுபோய் தரும் சிறுபிள்ளையைப் பாருங்கள். கல்லுடைத்து, கார் தொடைத்து, வீட்டு வேலை செய்து, தெருவில் பொருட்கள் விற்று கிடைக்கும் பணத்தில் தனது வயிற்றையும் கழுவி பெற்றெடுத்த குழந்தைகளையும் காப்பாற்றும் கைம்பெண்களைப் பாருங்கள்; அவர்களுக்கெல்லாம் வாழ வழி கொடுத்த பூமி உங்களுக்குக் கொடுக்காதா?

    வெறும் தோல்வியோ விரக்தியோ கோழைத்தனமோ கொண்டுசென்று விடுவதல்ல நம் உயிர். நம்மால் எல்லாம் முடியும். மனிதனால் மட்டும் எல்லாம் முடிகிறது. எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆகமுடிந்த பிறப்பு மனிதப் பிறப்பு. தெருவில் போகும் நோய்வாய்ப்பட்ட நாயிக்கு ஒரு குவளையில் தண்ணீர் ஊற்றிப் பார்த்தால் தெரியும் அது வாஞ்சையாக குடிக்கும் தாகத்தில் வாழ்க்கை எத்தனை ருசியாக உள்ளது என்று. இறக்க இருப்பதை யாராலும் தடுத்துவிட முடிவதில்லை, இறப்பு அது வரும்போது வரட்டும். அதுவரை வாழ்ந்துக்கொண்டிருப்போம். வாழும் வரை சாதிக்க முயல்வோம். சாதிப்பதை பிறருக்கும் கொடுப்போம். பிறர் வாழ நாமும் வாழ்வோம். நில் என்றால் நிற்கவும் செல் என்றால் செல்லவும் இயற்கை நமக்கென காத்துக் கிடக்கிறது. அதை புயலாகவும், வெள்ளமாகவும், வெடிக்கும் எரிமலையாகவும், பிளக்கும் பூகம்பமாகவும் மாற்றுவது நாம் தான். நமது ஒழுங்கீனம் தான். அதையெல்லாம் முதலில் சரிசெய்துவிட்டு பிறகு சாவதைப் பற்றி யோசியுங்கள். மரணம் நமைக் கொல்லும் வரை நாம் தற்கொலையையாவது கொன்றுக்கொண்டிருப்போம். நம் வாழ்தலில் பசுமை பூத்து குலுங்கட்டும் நம் பூமி. பட்டினியின்றி வாழட்டும் நம் பிள்ளைகள், படிப்பறிவோடு வளரட்டும் இச்சமுதாயம், பேராற்றலை நிறைத்துக்கொண்டுள்ள மனிதர்கள் முழுமையாய் தம்மையுணர வாழ்தல் வேண்டும்..நம்மொரு உடலை பல விதைகளுக்கான உரமாகப் புதைப்போம். கண்பார்வையில்லா நிலை, காது கேட்காத கொடுமை, காலூன்றி நிற்காத முடம் என எதையும் திருப்பிப் போட்டுப் பார்ப்போம், அங்கே அதற்கு மாறான ஒரு பெரிய வெற்றியை இயற்கை நமக்காக வைத்து காத்துக் கொண்டிருக்குமென்று நம்புவோம். பிறத்தல் அரிது எனில் இறத்தலும் அரிது தான் அது பிறப்பு வாய்த்ததைப் போலவே வாய்க்கையில் சிரித்துக் கொண்டே கண்மூடுவோம். இருக்கும் வரை இனிப்பும் கசப்புமான வாழ்வை ருசித்து வாழ்வோம்.

    வாழ்வை அறுத்துக் கொள்ளும் மரணம் தீது. தற்கொலை கொடிது. தற்கொலை யாரையும் தனியே கொல்வதில்லை; நம்புங்கள்… வாழ்வதற்கான வழிகள் ஆயிரம் உண்டு. அதில் ஒன்றையேனும் தேட மனது வேண்டும். மனதில் உறுதி வேண்டும். உறுதி நம்பினால் தான் வரும். நம்புங்கள், உங்களையும் உங்களை நம்பி உங்களுக்காய் இருப்போரையும் இந்த உலகையும் இயற்கையையும் நம்புங்கள். நம்பினோருக்கு நான்கு திசையும் அவரவரின் இரு கைகளுள் அடங்கிப்போகும். அடங்கிப்போக வாழ்த்துக்களும்.. வணக்கமும்..

    இந்த இதழை மேலும்

    நீ உன் தலைமுறைக்கு ஒரு அடையாளத்தை விட்டுச்செல்!

    வெற்றியாளன் தன்னம்பிக்கையாலும், தன் சுய சிந்தனையாலும், முயற்சியாலும் தன்னைச்சுற்றி வெற்றி வாய்ப்புகளை உருவாக்குகிறான். நீ எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனி. உன்னை மிகவும் கூர்மை அடையச் செய். வாய்ப்புகளின் கதவுகளை நீயே உருவாக்க திட்டமிடு. நீ செய்யும் பணியை வைத்தே உனது மதிப்பானது எடை போடப்படுகிறது.

    வருவாயைப் பெருக்க நீ ஆக்கப்பூர்வமான எண்ணம் கொண்டு செயல்பட்டால், வெற்றி நிச்சயம். ஆக்கப்பூர்வ சிந்தனை உன் பலம். நீ விதைப்பதைத்தான் அறுவடை செய்கிறாய். உன் உழைப்பை ஆக்கபூர்வமான பாதையில் செல்ல அனுமதி. உன் உழைப்பு நல்ல நிலத்தில் விழுந்த விதையாகட்டும். மனிதனின் அறிவையும், ஆற்றலையும், திறமையையும், தகுதியையும் வீணாக்கும் செயலாக அச்சம் உணர்வு இருக்கிறது. உன்னிடம் அச்சம் புகுந்துவிட்டால் உன்னால் உன் ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் போய்விடுகிறது.

    அச்சம் வாழ்க்கையின் ஓட்டத்தைத் தடைப்படுத்திவிடும். இதனால் உன் வாழ்வின் வாசல் மூடப்பட்டுவிடுகிறது. உன்னிடம் எவ்வளவு பெரிய திறமை, கல்வி, செல்வாக்கு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை இருந்தாலும் உன் வாழ்வில் கதவு அடைக்கப்பட்டு விடுகிறது. ஒரு புதிய நபரை சந்தித்து ஒருவன் தன் திறமையைக் காட்ட அச்சப்படுகிறான். நீ உன் திறமையை வெளிப்படுத்தினால் தான் உன் வாய்ப்பின் கதவை திறக்க முடியும்.

    உன்னிடம் இருக்கும் அச்சத்தை உன் மனதால் அணுகுவதன் மூலம் தான் வெற்றி கொள்ள இயலும். வாழ்க்கை என்பது நீ மீண்டும் பூமிக்கு வருவது அல்ல. இந்த ஒருமுறைதான் உனக்கு அந்த வாய்ப்பு. அந்த வாய்ப்பை நீ பயன்படுத்தாமல் வாழ்ந்து மடிவதால் என்ன பயன்?

    ஒரு வாழ்வின் பாதையைத் தேர்ந்தெடு. அதன் மூலம் உன் தலைமுறைக்கு ஒரு அடையாளத்தை விட்டுச்செல். திடமான நம்பிக்கையோடு நீ தேர்ந்தெடுத்துள்ள பாதையை அணுகு. ஆக்கப்பூர்வ எண்ணங்களால் உன் மனதை நிரப்பு. நீ ஆற்றல் நிறைந்தவன், மாமனிதன். இந்த உலகில் உன்னைப் போல் ஒருவன் இந்த மனித வரலாற்றில் இன்னும் பிறக்கவில்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை. நீ முற்றிலும் புதியவன் என்பதை உணர்ந்துகொள்.

    இயற்கையைப் பார்!

    அது கொடுக்கிறோம் என நினைத்துக் கொடுப்பதில்லை

    தேவையுள்ளவன்

    அதிலிருந்து வேண்டியதை எடுத்துக் கொள்கிறான்

    உன்னிடம் உள்ளது.

                “நதியில் உள்ள நீர் போல்

                இருக்கட்டும்

                தாக முடையவன் குடிக்க

                தண்ணீரிடம்

                சம்மதம் கேட்பதில்லை

                கொடு – நீ சுத்தமாய்

                கொடு – நீ சுகப்படுவாய்

                கொடு  அது

                உன் இருத்தலை நியாயப்படுத்தும்”

    – என்பார் கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

    இயற்கை உன்னை எவ்வளவு நம்பிக்கையோடு படைக்கிறது? இயற்கையின் நம்பிக்கையைச் சிறிதும் குறைத்துவிடாதே. நீ இந்த பூமித்தாயின் குழந்தை. இயற்கை உனக்கு எந்த தீங்கையும் செய்யவில்லை. நீ இயற்கைக்கு எந்த தீங்கையும் உருவாக்காதே. இயற்கை உன்னில் மறைந்திருக்கிறது. உன் வாழ்வின் பயணத்தை முழுமையோடு நிறைவு செய்து, இயற்கையில் மறைய வேண்டும். எதற்காக நீ அஞ்ச வேண்டும்? துணிச்சலோடு நில். உன் தோள்களை வலிமைப்படுத்து. அஞ்சாத மாமனிதனைத்தான் இயற்கை விரும்புகிறது.

    வாழ்வின் ஒவ்வொரு நொடியும் வாழ்வதற்காக இயற்கை வழங்கி இருக்கிறது. வாழ்க்கை அழகான நேர்த்தியான அம்பு. இயற்கை எய்த அம்பு நீ. எந்த நோக்கத்தோடு இங்கு வந்தாயோ அந்த நோக்கத்தை நேர்த்தியாக செய்துவிட்டு இங்கிருந்து செல்.

    உன்னிடம் சேவை மலர்ந்த முகமும், வலிமையுள்ள தோளும், நேசம் நிறைந்த கரமும், அன்பு நிறைந்த குரலும் நிறைந்துள்ளது. கடமையில்  கண்ணாய் இரு. யாருக்காகவும் காத்திருக்காதே. நேரம் இல்லை. நீயே தொடங்கு. உன்னை அறிய நீ சிறிது தியானம் செய்.

    வெற்றியாளர்கள் ஒருபோதும் பயணத்தைவிட்டு வெளியேறுவதில்லை. வெளியேறியவன் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பயன்படுத்திக் கொள்ள தயாராகும் போது வாய்ப்புகள் வராது.

    ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் திறமைசாலி. ஆனால் சோம்பேறி. அதே கிராமத்தில் திருமணம் செய்துகொள்ள ஒரு வீட்டில் பெண்கேட்டான். பெண்ணின் தந்தை ஒரு போட்டியை அறிவித்தார். மாட்டுத் தொழுவத்தில் 3 காளை மாடுகள் இருக்கு, ஒவ்வொரு மாடாக அவிழ்த்துவிடுவேன். ஏதேனும் ஒரு மாட்டின் வாலைப் பிடித்துவிட்டால் என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். சரியென்று பெண் கேட்க வந்தவனும் ஒப்புக் கொண்டான். முதல் காளையை விட்டான். சீற்றத்தோடு கொம்பை இங்கும் அங்கும் ஆட்டி வந்ததையும், மிகுந்த சீற்றத்தோடு வந்ததையும் பார்த்து அந்த மாட்டை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டான்.

    இரண்டாவது காளை பெரிய காளை தரையைப் பிளந்து யார் வந்தாலும் கொம்பால் குத்திவிடுவேன் என்று மிரளமிரள பாய்ந்து வருவதைப் பார்த்தவன் குலைநடுங்கி, அடுத்த காளையின் வாலைப் பிடித்துக் கொள்ளலாம் என்று இதையும் விட்டுவிட்டான்.

    அடுத்த மூன்றாவது காளை வத்தலா, தொத்தலா சாதுவாக வந்ததைப் பார்த்து இளைஞனுக்கு ஏகப்பட்ட சந்தோசம். இதன் வாலைப் பிடித்துவிடலாம் என்று 3வது காளையை நெருங்கியவனுக்கு அதிர்ச்சி. காரணம், காளைக்கு வாலே இல்லை.          வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பயன்படுத்திக் கொள்ள தயாராகும்போது வாய்ப்புகள் வராமல் போகலாம். இப்படித்தான் நம்மில் பலருக்கும் வாழ்க்கையின் வாய்ப்புகளை வாலில்லாத காளையாக  நழுவ விட்டு விடுகிறோம்.

    1039 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் சோதனைக்கூடம் தீப்பற்றி எரிந்தபோது, அவர் தனது மகனிடம், “அம்மாவைக் கூப்பிடு, அம்மாவைக் கூப்பிடு. இப்படி சுடர்விட்டு எரிவதை அவள் இதுவரை பார்த்திருக்க மாட்டாள். அவள் பார்க்கட்டும்” என்றார்.

    தனது சோதனைக்கூடம் எரியும்போது கூட நம்மால் மீண்டும் அதைச் செய்து சாதனை படைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை அவரால் மட்டுமே உணர முடிந்தது. காரணம், எத்தகைய சோதனையிலும் வாய்ப்பு என்பது ஒளிந்துதான் இருக்கும் என்பதை நாமும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு கதவு அடைக்கப்படும் போது, மறுகதவு தானாகவே திறக்கும் அதுவே வாய்ப்பு.

    வெற்றி பெறுவதற்கு எது தேவையோ அதை நீ உற்றுநோக்கிக் கற்றுக்கொள்ள வேண்டும். உற்று நோக்கும்போது தான் அதிலிருக்கும் வாய்ப்பையும் நின்று நிதானித்து அறிய முடியும்.

    அமெரிக்க தொழிலதிபர் அன்ட்குரூ கார்னகி தனது கல்லறையில் “தன்னைவிட புத்திசாலியான மனிதர்களைக் கட்டியாளத் தெரிந்த மனிதன். இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று பொறிக்கச் சொன்னார். அவர் வாழும் போதே எவ்வளவு வாய்ப்புகளைப் பெற்றிருந்தார் என்பதற்கு அவரது கல்லறை வாசகங்ளே சான்றாக இருக்கின்றன.

    ஒரு காட்டில் தவளை குழியில் விழுந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் வெளியே வரமுடியவில்லை. அங்கு வந்துபோன எல்லா விலங்குகளையும் தனக்கு உதவுமாறு கேட்டும்  ஒன்றுமே உதவிக்கு வரவில்லை. தவளை முயற்சியைக் கைவிடவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தது.

    அடுத்தநாள் அந்த பகுதிக்குச் சென்றமற்ற விலங்குகளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. குழியில் இருந்து வெளியே வந்த தவளை காட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. இதைக்கவனித்த மற்றவிலங்குகள் எல்லாம் தங்களுக்குள்ளே கேள்விகளைக் கேட்டுக் கொண்டன. யாருமே உதவவில்லை? எப்படி குழியிலிருந்து தவளை வெளியே வந்தது? ஒன்றுமே புரியவில்லை. எல்லோரும் சேர்ந்து தவளையிடேமே கேட்டுவிடலாம் என்று சென்றன.

    அதற்கு தவளை சொன்ன பதில் நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கின்றது. முயன்றால் ஓர் ஆபத்தைக் கூட வாய்ப்பாக மாற்றமுடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்தது. தவளை என்ன சொன்னது தெரியுமா?

    நான் குழியில் இருந்து வெளியே வர முயன்றேன். உங்களிடமும் உதவி கேட்டேன். நீங்களும் முன்வரவில்லை. இருந்தாலும் நான் முயற்சியை கைவிடவே இல்லை. தொடர்ந்து எட்டி எட்டி குதித்துக் கொண்டிருந்தேன். அதனால் எனக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. பசி அதிகமானதால் கத்தத் தொடங்கிவிட்டேன். எனது சத்தத்தைக் கேட்டு என் எதிரியாக பாம்பு என்னை பிடித்துச் சாப்பிட குழிக்குள்ளே வந்தது. அவ்வாறு வருகின்றசமயம் பார்த்து, நான் எட்டிக் குதித்து பாம்பின் கழுத்தை இறுகி கட்டிப் பிடித்துக் கொண்டேன். பாம்பு என்னை சாப்பிட அப்படியும் இப்படியும் முயன்றது வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம் என்று நானும் இருந்தேன். பாம்பால் முடியவில்லை. பிறகு, பாம்பு குழியை விட்டு வெளியே ஏறிவந்தது. பாம்பு வெளியே வந்ததும் நான் எட்டிக் குதித்து தப்பித்தும் கொண்டேன் என்று தவளை கூறியது. சாகும் தறுவாயையும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட தவளையிடமிருந்து பாடம் படித்துக் கொள்ளலாம்.

    கவியரசு வைரமுத்து சொல்வார்… வாய்ப்புகள் தான் வாழ்க்கை. வீரியம் உள்ள விதை மேல் மழைத்துளி பட்டால், விதைக்கு அந்த மழைத்துளியே வாய்ப்பு.

    நயாகரா அருவியின் குறுக்கே கம்பி கட்டி அதன் மீது நடந்து மறுமுனையை அடைந்தவர் பிளான்டின் என்றஃபிரெஞ்சுக்காரர். அருவியின் மீது நேரடிப்பயிற்சி ஒருமுறைகூட கிடையாது. தரையில் தான் இரண்டு கம்பங்களுக்கு இடையே கம்பி கட்டி பயிற்சி செய்து இறுதியில் நயாகரா அருவியின் குறுக்கே கம்பி மீது நடந்து வெற்றி பெற்றார். ஆக, இவர் வாய்ப்பைத் தரையில் நடத்தினார். நயாகரா இவரை கைகொட்டி வரவேற்றது. வாழ்வா? சாவா? என்பதில் இவர் வாய்ப்பைப் பயன்படுத்தினார்.

    அர்ப்பணித்தலின் மூலமாக நம்மை இழக்கும்போது தான் வாழ்வதற்கான காரணத்தை நாம் காண முடியும். தவழ்ந்து கொண்டே என்னுடைய தாயின் வயிற்றுக்குத் திரும்பிச் செல்லும் அந்த நாட்களை, நினைவில் கொள்கிறேன். எவரும் இதைச் செய்யலாம் என்பார்  ஆலன்.

    நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு பொறுப்பின் தளத்திலிருந்து உங்களுடைய வாழ்க்கை உயரும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். “தோல்வியைக் கண்டு துவளாதீர்கள். அறிவை மேன்மேலும் பெருக்கிக் கொள்ள தரப்பட்ட வாய்ப்பே தோல்வி” கார் மன்னர் ஹென்றிபோர்டு என்கிறார். நீண்ட நாள் வாழ வேண்டும் என்று விரும்பினால், அறிவுத் தெளிவுடன் நீண்ட நேரம் உழையுங்கள்; அப்போது உடல் செல்களும் மூளையும், ஆரோக்கியமாக இருப்பதால் வாழ்நாள் கூடும்.

    எந்தத் துறையிலும் வெற்றி பெற நான்கு தூண்கள் நம்மைத் தாங்கி நிற்க வேண்டும். அவை 1. மன உறுதி, 2. சிக்கனம், 3. நேர்மை, 4. ஒழுங்கு ஆகியவையே மிக முக்கியமான ஒழுங்குமுறை இருந்தால் தான் வாழ்வில் குழப்பம் ஏற்படாது. அதைவிட நேர்மை மிகமிக முக்கியமானது. இதற்கு மூச்சுக்காற்று போல மன உறுதியும், சிக்கனமும், நம்மிடம் இருக்க வேண்டும். நமது உண்மையான சொந்தங்கள் இந்த நான்கு தூண்கள் என்பார் ஜேம்ஸ் ஆலன்.

    கண்ணையும் காதையும் திறந்து வைத்தால், பல செய்திகளும், பல செயல்களும் நம் கண்முன்னே பரந்து விரியும். அப்போது உன்னிப்பாக உற்றுநோக்கினால், வாய்ப்பின் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்கும். அதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் சிகரத்தில் சிம்மாசனம் போடப்பட்டிருக்கும். அந்த இடமே உன் இடம். அதில் நீ மட்டும் அமர்ந்து கொள். அதுவல்லவா உன் இடம்.

    இந்த இதழை மேலும்

    ஒழுங்குடன் வேலையைச் செய்

    எந்தக் காரியத்தையும், ஒழுங்குடன் செய்தால் வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல், மனமும் அமைதியுடன் இருக்கும். மனத்தில் குழப்பம் ஏற்படாது. குழப்பமே வேலையைச் செய்ய முடியாமல் தடுத்து விடுகிறது.

    ஒழுங்கு இல்லாமையால் குழப்பம் ஏற்பட்டு பிரச்சனை உருவாகி கவலை ஏற்பட வழிவகுக்கிறது. வாழ்க்கையை வளமுடன் வாழ்ந்தவர்கள் எல்லாம் அமைதியுடனும், ஆழ்ந்த நிம்மதியுடனும் ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தவர்களாக இருக்கிறார்கள்.

    ஆனால் நாம் இதற்கு முற்றிலும் மாறுபட்டு சாப்பிடும் பொழுது பணப்பிரச்சனை பற்றியும், அலுவலக வேலையைச் செய்யும்போது குடும்ப விவகாரங்களைப் பற்றியும், விளையாடும்போது சென்று போன செயல்களைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    மூளை வேலையைச் செய்ய அனுமதி கொடுக்காமல் அலைமோதிக் கொண்டிருக்க வழி அமைத்துவிடுகிறோம். ஒவ்வொரு காரியத்தையும் ஒன்றன்பின் ஒன்றாகச் செய்து முடித்தால் குழப்பம் உண்டாக முடியுமா?

    நெப்போலியன் தன்னுடைய மூளையை எவ்வாறு இயக்கி வைத்தார் என்று அவருடைய வார்த்தை மூலம் கவனித்தால், “என்னுடைய மூளையில் பல அலுவல்கள் ஒழுங்காகவும், வரிசையாகவும் தனித்தனியே புறாக்கூண்டின் அறைகள் போல அமைக்கப்பட்டு இருக்கின்றன.

    ஒரு அலுவலை முடித்துவிட்டு மற்றொன்றைச் சிந்திக்க வேண்டி இருந்தால் முதல் அறையை மூடிவிட்டு அடுத்த அறையைத் திறந்து கொள்வேன். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. எனக்குக் களைப்பையும் தருவது இல்லை. வீணான சிந்தனைக்கு எனது மூளையில் இடமே கிடையாது”.

    இங்கிலாந்து நாட்டில் இருந்த உலகப்புகழ் பெற்ற நாவலாசிரியர் சர். வால்டர் ஸ்காட்டிடம் ஒரு இளைஞர் வந்தார். “தனக்கு வேலை கிடைத்துவிட்டது. தான் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார்.

    அதற்கு சர். வால்டர் ஸ்காட் பதில் கூறினார். “உன்னுடைய நேரத்தை எப்பொழுதும் உபயோகமாகவே செலவு செய். சோம்பலுக்கு இடம் தராதே செய்ய வேண்டியதை உடனே செய்துவிடு. ஒழுங்குடன் ஒரு காரியத்தை முடித்து விடு. வீணாக பொழுது போக்குவது, வேலை முடிந்த பிறகே அன்றி வேலை முடியும் முன்பு அல்ல”.

    ஒரு நேரத்தில் ஒரு வேலை என்னும் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ரயில் பெட்டிகள் எஞ்சினைப் பின்பற்றி ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பெட்டி சிறிது விலகிவிட்டால் விளைவு விபரீதமாகி விபத்து ஏற்பட்டுவிடுகிறது.

    எதிலும் ஒழுங்குமுறை இல்லாவிட்டால் சரியாக அமையாது. முதலில் நம்முடைய எண்ணங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். சுமையானது தோளின் மீது அங்கும் இங்கும் தொங்கிக் கொண்டிருந்தால் அதிகமான சுமைகளைத் தாங்க முடியாது. ஒழுங்காக வைத்துக் கட்டினால் அதிகமான சுமையைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியும்.

    காந்திஜி ஒரு நாளுக்குரிய செயல்களை பலவாறு பிரித்துக் கொண்டார். பெரும் பிரச்சனையுடன் இருந்த நேரத்திலும் பிரார்த்தனை செய்தார். உலாவச் சென்றார். நூல் நூற்றார். பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை எழுதினார்.

    நோயாளிகளைச் சந்தித்துப் பேசினார். அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவரால் மட்டும் இவ்வளவு கரியங்களையும் எவ்வாறு செய்ய முடிந்தது?

    அதற்குக் காரணம் ஒரு நாளுக்கு உண்டான நேரத்தை தகுந்தபடி பிரித்து அதற்குள்ள வேலையை அவ்வப்பொழுது நிறைவேற்றியது தான். இந்த நிலைமையை நாமும் ஏன் பின்பற்றக் கூடாது?

    நமக்கு இருக்கும் வேலைகளை தகுதி வாரியாக பிரித்து அதற்கு தக்கவாறு பணியாற்றும் போது குழப்பம் ஏற்பட வழியே இல்லை. ஒரு வேலையைச் செய்யும்போது மனம் ஒன்றி ஈடுபட்டிருக்க வேண்டும். அடுத்த காரியத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது. கிரிக்கெட் விளையாட்டில் கேப்டன் ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தில் நிற்க வைப்பார். அவரவர்க்கு உரிய வேலையைக் கூறாவிட்டால் பந்து வந்ததும் அனைவரும் இடத்தைவிட்டு நகர்ந்து பந்தை நோக்கி ஓடி குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி, எதிர்கட்சியினர் எளிதில் வெற்றி பெறும்படி வாய்ப்பு அமைந்துவிடும்.

    ஒரு கல்லூரி பேராசிரியர் எப்பொழுதும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதைக் கண்டு அவருடைய நண்பர் கேட்டார். “நீங்கள் எப்படி சந்தோஷமாகவும், சமாதானமாகவும் இருக்கிறீர்கள்? இப்படி இருப்பதற்கு என்ன காரணம்?”

    இதற்கு கல்லூரி பேராசிரியர், “அதுவா, சொல்கிறேன் கேளுங்கள். எதையும் ஒழுங்குடன் செய்துவிடுகிறேன். நடந்தே தீரும் என்ற செயலுக்கு முழு மனதுடன் ஒத்துழைக்கிறேன்” என்று கூறினார். குழப்பத்திற்குக் காரணம் முடிந்து போன காரியத்தைப் பற்றி சிந்திப்பதும், வரப்போகின்ற காரியத்தைப் பற்றி சிந்திப்பதும், அளவு கடந்து அலசி பார்ப்பதும் தான்.   இன்றைக்கு உள்ள வேலையைப் பற்றி சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். முடிந்து போன காரியம் இனிமேல் வரப்போவதில்லை. அது முடிந்ததாகவே இருக்க வேண்டும். அதனை மீண்டும் புது காரியமாக எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கக்கூடாது.

    வரப்போகிற காரியம் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அதை ஏன் இப்பொழுதே நினைத்து நினைத்து சோர்ந்துவிட வேண்டும்? அது வரும்பொழுது வரட்டும். வந்த பிறகு அதற்குரிய பணியில் ஈடுபடுவோம். வானுலகில் இருக்கும் சூரியனும், சந்திரனும் நட்சத்திரமும் ஓர் ஒழுங்குடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய உடலின் உறுப்புகளும் ஓர் ஒழுங்குக்கட்டுப்பட்டு தான் வேலை செய்கின்றன.

    தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுடன் அமைந்து இனிமையான மொழியை உண்டாக்குகின்றது. நம்முடைய பார்வையும் ஒழுங்காக இருப்பதனால் தான் காட்சி தெரிகிறது. நாமும் ஏன் ஒழுங்குமுறையைப் பின்பற்றி செயல்படுத்தக் கூடாது?

    இந்த இதழை மேலும்

    உங்களுடைய வலிமையை உணருங்கள்

    பல பேருக்குத் தங்களுடைய வலிமையைப் பற்றியும், தங்களால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்பது பற்றியும் சிறிதும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். தங்கள் வலிமையை, செயலாற்றலை, திறமையை உணராது தங்களால் எதையும் சாதிக்க முயுமா? என்கிற ஐயப்பாடு கொண்டவர்களாகக் காலத்தை வீணாகப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

    சிலர் மிகவும் ஒல்லியாக, அழகற்று, உடலால் உள்ளத்தால் வலிவற்று – ஒடிந்து விழுவது போலத் தோற்றமளித்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்குத்தான் அப்படியிருக்கிறார்கள். ஆனால் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக “எதையும் சாதிக்க என்னால் முடியும்!” என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையே இவர்கள் எக்காரியத்திலும் வெற்றி பெறக் காரணமாகும்.

    “எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும், அதை என்னால் சாதிக்க முடியும்” என்ற மன உறுதியோடு இருந்து, அச்செயலைச் செய்து முடிப்பார்கள். இவர்களுக்குத் தங்களுடைய வலிமையைப் பற்றி நன்றாகத் தெரியும்.

    நீங்களும் உங்களுடைய வலிமையைப்பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு செயல்பாடு முழுமை பெற, வெற்றி அடைய உங்களின் வலிமையை உணர வேண்டும். வலிமை என்பது உடல் வலிமை மட்டுமல்ல, மனத்தின் வலிமையும் கூடத்தான்!

    அரிய பெரிய சாதனைகள் மனத்தின் வலிமையினாலேயே சாதிக்கப்படுகின்றன என்கிற உண்மையை நீங்கள் மறந்து விடக் கூடாது. மனத்தின் வலிமையைப் பல வழிகளில் செலவழித்து விடாமல், ஒரே நோக்கில் – ஒரே குறிக்கோளில் பயன்படுத்தும் போது மன வலிமைக்குப் பொலிவு உண்டாகிறது.

    நீங்கள் உங்களுடைய மனதின் எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் எந்தக் காரியத்தையும் மிகச் சுலபமாகச் சாதிக்க முடியும். நீங்கள் எண்ணுகின்ற எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கட்டும். நல்ல எண்ணங்கள் ஒன்றாகக் குவியும்போது, உங்கள் உள்ளத்திற்கு அமைதி கிட்டுகிறது. இதன் மூலம் நீங்கள் சிறந்த வலிமையைப் பெறுகின்ற போது, எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை உங்களுக்குப் பிறக்கிறது.

    “எண்ணிய  எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்

    திண்ணியர் ஆகப்  பெறின்”

    என்ற குறட்பா மூலம் வள்ளுவர் எண்ணத்தின் வலிமையை புலப்படுத்துகிறார். நம் உள்ளம் உறுதியாக இருந்தால், கடினமான செயல்களையும் விரைவில் செய்து முடிக்கலாம். இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றே தீருவோம் என்று வீர முழக்கமிட்டு மன உறுதியோடு செயல்பட்டார், மகாத்மா காந்தியடிகள். “வெள்ளையனே வெளியேறு” என்ற இயக்கத்தை மிகச் சிறப்பாக இயக்கினார். மகாத்மா காந்தியடிகள் நினைத்த செயல் வெற்றி பெற்றது. வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

    நம் மனதை அங்கும் இங்கும் அலைபாயவிடாமல், ஒருமுகப் படுத்துவதை மன ஒருமைப்பாடு என்கிறோம். இந்த மன ஒருமைப்பாடு இல்லாவிட்டால் மனதில் உறுதி என்பது கடுகளவு கூடத் தோன்றாது. எனவே மனதை ஒரே நோக்கோடு வைத்துக் கொண்டால், மன ஒருமைப்பாடு தானாகவே வந்து விடும். அப்போது வலிமையான செயல்பாடுகளும், அதனால் வெற்றியும் எளிதாக அமைந்து விடும்.

    அரும் பெருஞ்செயல்களைச் செய்தவர்கள் அனைவருமே மன வலிமையைப் பெற்றவர்கள்தான். அவர்களுக்குத் தெரியும், தங்கள் மனத்தின் வலிமையைப் பற்றி! மனதில் வலிமை இருந்ததால்தான் இரவும், பகலும் பாராமல் அயராது உழைத்தார்கள்; இறுதியில் வெற்றியும் பெற்றார்கள். நாட்டிலுள்ள அனைவரும் அவரவரிடம் அமைந்துள்ள தனித் திறமையை உணர்ந்து, மன வலிமையுடன் கடுமையாக உழைக்கத் தொடங்கினால் நம் நாடு மிகச் சிறந்த நாடாகத் திகழும். எவரும் எடுத்துரைக்காமலேயே, மக்களுக்கு அந்த ஞானம் தானாகவே வர வேண்டும்.

    ஒவ்வொருவரும் தங்கள் வலிமையில் முழு நம்பிக்கை கொண்டு, தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியோடு தளர்ச்சி இல்லாமல் அயராது செயலாற்றினால் இறுதியில் வெற்றி பெறுவது திண்ணம்.

    தங்களுடைய வலிமையைக் கொஞ்சம் கூட உணராதவர்கள், வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தோற்றுப் போகிறார்கள்.

    ஹெலன் கெல்லரைத் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. பார்வையற்றவராக, கேட்கும் சக்தியை இழந்தவராக ஹெலன் கெல்லர் இவ்வுலகில் நடமாடினார். எல்லாமே போன பின்பு நமக்கு இந்த வாழ்க்கை எதற்கு என்று அவர் விரக்தியடைந்து விடவில்லை. மாறாக ஹெலன் கெல்லர் தன்னுடைய வலிமையை நன்கு அறிந்து கொண்டார். தன்னால் இவ்வுலகில் எதையும் சாதிக்க முடியும் என்ற ஒப்பற்ற உண்மையை உணர்ந்து கொண்டார். வாழ்க்கையில் அவர் முன்னேறியதோடு மட்டுமின்றி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். ஊனம் என்ற எண்ணத்தையே உதறித் தள்ளினார்.

    கெல்லர் விழிகளை இழந்த போதிலும், செவிப்புலன்களை இழந்த போதிலும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவைகளை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றமடைந்தார். லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்க மொழிகள் ஆகியவைகளை பிரெயில் முறையில் கற்றுக் கொண்டார். கெல்லர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப்’ என்ற தலைப்பில் தன்னுடைய சுயசரிதையை எழுதினார். மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று அங்கு உள்ள உடல் ஊனமுற்றோருக்காக பேசியுள்ளார். 1932ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திலுள்ள லாஸ்கோ பல்கலைக் கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இரண்டாம் உலகப் போரின் போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லி ஊக்கமூட்டினார். தன் வாழ்நாளில் பன்னிரெண்டு அமெரிக்க அதிபர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயர்ந்த விருதான ‘சுதந்திர பதக்கம்’ ஹெலன் கெல்லருக்கு வழங்கப்பட்டது.

    உங்களுடைய உள்ளத்தின் வலிமையை நீங்கள் உணர்வதோடு, அதை அடிக்கடி ‘ரீசார்ஜ்’ செய்து கொண்டு வாருங்கள். ‘நான் எதையும் சாதிப்பேன்’ என்று எண்ணுங்கள். நிச்சயமாக சாதித்துக் காட்டுவீர்கள். என்னிடம் செல்வம் இருக்கிறது என்று எண்ணுங்கள்; செல்வம் வந்து குவியும். உங்களைப்பற்றி நீங்கள் உயர்வாக நினைக்கும் போதெல்லாம், உங்களுடைய வலிமை மேலும் சக்தி வாய்ந்ததாக ஆகிவிடும்.

    ஹோரேஸ் என்ற ரோமானியக் கவிஞர், “இன்றைய நாள் என்னுடைய நாள் என்று எவனால் அதிக நம்பிக்கையுடன் சொல்ல முடிகிறதோ, அவன் மட்டுமே முழுமை பெற்ற உயர்ந்த மனிதனாக இருக்க முடியும்” என்று சொன்னார். ஒரு மனிதனுக்குச் சக்தியை ஊட்டக்கூடிய வாசகம் இதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.

    சர் ஐசக் நியூட்டன், தான் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை எழுதி வைத்திருந்தார். அந்தக் காகிதக் கட்டுகளை மேஜையின் மேல் விட்டு விட்டு வெளியே சென்றார். அவர் வளர்த்து வந்த நாய் மேஜை மீது தாவியது. அங்கே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி காகிதக் கட்டுகளின் மேல் விழுந்து, எரிந்து அனைத்தும் சாம்பலானது. வீட்டுக்குத் திரும்பிய நியூட்டன் இதைக் கண்டு மனம் சோர்ந்து விடவில்லை. இழந்து போன குறிப்புகளை நினைவு படுத்தி மீண்டும் எழுதி விட்டார். தன்னுடைய வலிமையை நியூட்டன் நன்கு தெரிந்துவைத்திருந்தார். அதனால் ஆராய்ச்சிக் குறிப்புகள் அடியோடு எரிந்து போன போதிலும் சிறிதும் கலங்காமல் மீண்டும் முயற்சி செய்து, நினைவுபடுத்தி ஆய்வுக் குறிப்புகளை எழுதினார். அவர் தன்னுடைய வலிமையை அறிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருந்தால், அவரால் இழந்து போன குறிப்புகளை மீண்டும் உயிர்ப்பித்திருக்க முடியாது.

    உங்களுடைய வலிமையை நன்கு உணர்ந்து, ஊக்கத்தோடு இடை விடாமல் உழைத்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா? நீங்கள் உங்கள் வலிமையை நன்கு உணர்ந்திருந்தாலும், இடைவிடாமல் நீங்கள் பாடுபட்டாலும், உங்களுக்கு ஊக்கம் இருக்க வேண்டும். ஊக்கம் இல்லாமல் ஆக்கம் இல்லை. ஊக்கம் இல்லாதவர்களிடத்தில் பழகிப் பாருங்கள்! வாழ்க்கையில் நீங்கள் எதையோ பறி கொடுத்ததைப் போல ஆகி விடுவீர்கள்!

    உங்களுடைய வலிமையை ஒழித்துக் கட்டுவதற்காகவே சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு, உங்களை எப்பொழுது பார்த்தாலும் கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். பத்துப்பேர் முன்னால் உங்களை எவ்வளவு மட்டமாக பேச முடியுமோ அவ்வளவு மட்டமான சொற்களையும் பேசி விட்டு, நக்கல் சேற்றை உங்கள் மேல் வாரி இறைப்பார்கள். இவைகளைக் கண்டு நீங்கள் பயந்து விடாதீர்கள்; உற்சாகத்தை இழந்துவிடாதீர்கள்! நீங்கள் வாழ்வது உங்களுக்காகத்தான்! எதற்குமே உதவாத பண்பு கெட்ட சில மனிதர்களுக்காகவா நீங்கள் வாழ்கிறீர்கள்? உங்கள் வலிமையை உணர்ந்து, எப்பொழுதும் நீங்கள் வலிமையோடு இருங்கள்!

    எனவே உங்களுடைய வலிமை, உங்களுடைய ஆற்றல் ஆகியவைகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தன்னம்பிக்கையோடு எந்தச் செயலையும் செய்து முடித்து, மாமனிதன் என்று மற்றவர்கள் போற்றும்படி வாழுங்கள்!

    இந்த இதழை மேலும்

    பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்

    பிரச்னைகளைத் தீர்க்கும் தற்காலிக வழிகள்:

    சிரிப்பது, பாடுவது, ஆடுவது என்ற மூன்றும் நமக்கு வரும் பலவிதமான பிரச்னைகளுக்கான தற்காலிகத் தீர்வுக்கான செயல்பாடுகளாகும்.

    சிரி (Laugh) வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது மூத்தோர் சொல். எப்படிச் சிரிப்பது?

    ஹ ஹா என சப்தம் போட்டுச் சிரிக்கலாம். குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கலாம். குழந்தைகள் சிரிக்கும்போது பாருங்கள். அதுபோல் சிரித்துப் பழகுங்கள்.

    கோபப்படும்போது நரம்புகள் முறுக்கேறுகின்றன. சிரிக்கும்போது நரம்புகள் தளர்வு பெறுகின்றன. சிரிக்கும் போது மூக்கிலுள்ள சளியில் இம்முனோகுளோபுலின் என்ற புரதச்சத்து அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, பாக்டீரியாக்கள், வைரஸ், புற்றுநோய் திசுக்கள் ஆகியவற்றை மூக்கு வழியாக உடலுக்குள் செல்லாமல் தடுக்கிறது. இது நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கும் செய்தி. சிரிப்பு BP எனும் இரத்த அழுத்த நோயையும் குணமாக்குகிறது.

    சிரிக்கும் போது மனம் லேசாகும்; தொடர்ந்து உடலும் லேசாகும். மூளையில் எண்டார்பின் என்ற சுரப்பி நீர் சுரப்பதால் மனம் மகிழ்ச்சியான நிலைக்குச் செல்லும். சிரிப்பு தற்காலிகத் தீர்வு என்றாலும், தொடர்ந்து ஒருவர் ஆறு மாதங்கள் ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் சிரித்துச் சிரித்தே ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ் என்ற உடல் வலி நோயை நிரந்தரமாய் குணமாக்கியதாய் அமெரிக்க நாட்டுச் செய்தி. சிரியுங்கள்; பிரச்னைகளிலிருந்து விடுபடுங்கள்.

    பாடு (Sing)

    பாடுவது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால், பிரச்னைகள் நம்மைக்கண்டு ஓடிவிடும். ஊரில் நன்கொடை கேட்டு வருபவர்களைக் கண்டால் சிலர் துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என ஓடிவிடுவார்கள். இதுபோல் பிரச்னைகள் ஓடிவிடும்.

    ஒரு சினிமாப் படத்தில் ஹேமநாத பாகவதர் என்பவர் நன்கு பாடுவார்; அவருக்கு ஆணவம் தலைக்கு ஏறிவிட்டது. மன்னனிடம் சென்று பாடலில் தன்னைத் தோற்கடித்தால் தான் அடிமையாகிவிடுவதாயும், இல்லாவிட்டால் இந்த நாட்டையே தனக்குத் தர வேண்டும் என்றாராம். மன்னரும் போட்டியை ஏற்றுக்கொண்டு அரசவைப் பாடகருக்குப் பொறுப்பைக் கொடுத்தார். அவர் இறைவனிடம் முறையிட, இறைவனே மனித உடலெடுத்து வந்து,

    “நான் அசைந்தால் அசையும் உலகமெலாமே” என்று பாடியதைக் கேட்டு, இந்தப் பாடலுக்கு முன் தன் பாடல் ஒன்றுமேயில்லை என இரவோடு இரவாக ஊரைவிட்டே சென்றுவிட்டதாய் காட்சி.

    இதிலிருந்து ஒரு பாடலால் ஓர் அரசாங்கத்திற்கு வந்த பெரிய பிரச்னையே தீர்ந்துவிட்டதை அறிகிறோம். பாடலுக்கு அடிப்படை பறவைகளின் கீச்மூச் சப்தம் தான். பறவைகளின் ஒலியைக் கேட்டு மனிதனும் தன் தொண்டையைச் சரிசெய்து பாட ஆரம்பித்தான். மயிலின் நடனம் பார்த்து மனிதன் ஆடக் கற்றுக்கொண்டான்.

    பாடும்போது, குரலின் ஏற்ற இறக்கங்கள் முகபாவனைகள் உடலிலுள்ள தடைகளை நீக்குவதோடு, உடலின் நரம்பு மண்டலத்தையும் சீரமைக்கிறது. மேலும் மூளையிலுள்ள நியூரான்கள் தூண்டிவிடப்பட்டு, நாளமில்லாச் சுரப்பிகளைச் சுரக்கச் செய்து, மனம், உடல் இரண்டையும் லகுவாக்கு (உஹள்ங்)-கிறது. இதனால் பல பிரச்னைகளில் இருந்து நம்மால் விடுபட முடிகிறது.

    ஆடு (Dance)

    ஆயகலைகள் 64ல் நடனக்கலையும் ஒன்று. இதை நாட்டியம் என்றும் கூறுவர். தமிழை இயல்  பேச்சு; இசை  பாடல்; நாடகம்  அசைவு என மூன்றாகப் பிரித்து முத்தமிழ் என்று சொல்லியுள்ளனர். ஆட்டம் என்பது நடனக் கலையின் முக்கிய அங்கம். பாதம் எடுத்து வைத்தால் அதை அடி (Step) என்று சொல்கிறோம். ஒழுங்கு முறையாக எடுத்துவைத்தால் சீரடி என்று சொல்கிறோம். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். அடி உதவுவது போல் அண்ணன்  தம்பியும் உதவமாட்டான். இவை நாம் கேட்டாற்போல் இருக்கிறதல்லவா?

    இந்த அடி, அடிப்பது அதாவது ஒருவர் வருத்தப்படுமாறு அவரது உடலைத் தாக்குவது. கையால், குச்சியால், ஆயுதத்தால் தாக்குவதை அடிப்பது என்று சொல்கிறோம். இங்கு நாம் பார்க்கும் அடி என்பது பாதம் தூக்கிவைப்பது. சிலர் நாட்டியமாடும் போது, மண் மிதிப்பது போல் ஆடுகிறார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    மகிழ்ச்சியாக அளவான அடி எடுத்து வைத்து நகர்வதே டான்ஸ் என்ற சொல்லின் விளக்கமாகும். (Move Merrily with Measures Steps). இதற்குப் பெயர் ஆடுவது அல்லது ஆட்டம். எடுத்து வைக்கும் அடியை இசை லயத்துக்கேற்ப எடுத்து வைப்பதே நாட்டியம் அல்லது நடனம். இசை லயம் என்பது வாத்திய இசையாகவும் இருக்கலாம்; குரலிசையாகவும் அதாவது வாய்ப்பாட்டாகவும் இருக்கலாம்.

    இப்படி கால்களைத் தூக்கி ஆடும்போது, கைகளையும் மேலும் கீழும் அசைத்து, உடலையும் அசைக்க வேண்டும். நகர்தல் என்பது முக்கியம். இந்த ஆட்டமானது நம் உடலில் எலும்பு, தசை, நரம்பு, மூட்டுக்கள், மூளை செல்கள், கிட்னியின் நெப்ரான், உடலின் கட்டுமான செல்கள் என அனைத்திலும் ஏதேனும் தடைகள் இருந்தால் அவைகளைச் சரிசெய்து விடுகிறது. இதனால் உடல் நோய்கள் பல தீர்ந்து விடுகின்றன. மூளை லகுவாகி அமைதியான நிலைக்குச் செல்வதால் சிந்தனையாற்றல் கூடுகிறது. இதுவரை மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படுகின்றன. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அவற்றை சுலபமாகத் தீர்க்கும் வழிகளுடன் எதிர்கொள்ளும் மனோ தைரியம் உண்டாகும்.

    எனவே, வீட்டில் ஆடுங்கள்; சுழன்று சுழன்று கை, கால்களைத் தூக்கி, இறக்கி, உடலை நிமிர்த்தி குனிந்து ஆடுங்கள்; ஆனந்தம் அடையுங்கள். விளைவு புத்துணர்ச்சியும், புதுமுகப் பொலிவும் கிடைக்கும்.

    நிரந்தரத்தீர்வுகள்:

    மனித இனம் தோன்றிய ஆரம்ப காலத்தில், எதைக் கண்டாலும் அவனுக்குப் பயம். தனக்கு ஆறறிவு உள்ளது என்பதை அறியாத நிலை. அன்று வாழ்ந்த சிந்தனையாளர்கள் மக்கள் தம் பிரச்னைகளிலிருந்து விடுபட, உருவாக்கியது தான் பக்தி மார்க்கம். மனிதனுக்குத் தேவையான கல்வியறிவு, தைரியம், பொருள்வளம் மற்றும் மனநிறைவு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு கடவுளை உருவாக்கி வழிபடச் செய்தனர்.

    அப்படி வழிபட்டபோது, தனக்குள் புதியதொரு ஆற்றல் உருவாகி அதிகரிப்பதை உணர்ந்தான். அந்த ஆற்றலைக் கொண்டே எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்துக் கொண்டான். தனது திறமைகளை அறிந்து உபயோகிக்க அந்தக் கடவுள்கள் தேவைப்படடனர். அவர்கள்,

                லட்சுமி (Lakshmi)

                சரஸ்வதி (Saraswathi)

                துர்க்கா (Durga)

    மூன்றின் முதல் எழுத்துக்கள் தான் நிரந்தரத் தீர்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    காத்திருப்போம்

    இந்த இதழை மேலும்

    விழித்தெழும் நேரம் வந்துவிட்டது

    மனித இனம் உட்பட பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தேவைக்கும் அதிகமாகவே வளங்களை இயற்கை அக்கறையோடு காத்து வைத்திருக்கும் ஒரு அமுதசுரபி தான் பூமி. இதெல்லாம் தங்களுக்காக மட்டுமே என்று மனிதன் தப்புக்கணக்கு போடுகிறான். சுயநலமும், தீயசிந்தனைகளுமாக நிறைந்த மனிதன் பேராசையோடு இந்த இயற்கை வளங்களை எல்லாம் சுருட்டி, சுரண்டி, கொள்ளையடித்து அனுபத்துத் தீர்க்கிறான். திறமையுள்ளவன் வாழ்ந்தால் போதும் என்ற அதர்மமான தத்துவம் தான் அவனுக்கு முக்கியம். அவனுடைய கொடுமைக்கு இரையாவது மண்ணும், மரங்களும், காற்றும், நீரும் மட்டும் இல்லை. மனிதன் உட்பட இருக்கும் எல்லா தாவர, விலங்கு உயிர்களும் தான். பிரபஞ்சம் என்ற மாபெரும் ஆற்றல் கருணையோடு கை நீட்டி அளித்திருக்கும் வளங்களை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக சுரண்டி எடுத்துத் தீர்க்கும் சுயநலவாதிகளுக்குத் தங்களுடைய இதே மாதிரியான வாழ்க்கையும், வளமும் எப்போதும் எந்தக் காலத்துக்கும் தொடராது என்று தோன்றுவது இல்லை. பல சமயங்களிலும் நடக்கும் இயற்கை பேரிடர்கள் இயற்கை, மனிதனுக்கு தரும் தண்டனை என்பதை நம்புபவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் ஒன்று…

    மனிதன் இயற்கையை கொள்ளையடிப்பதில் ஒரு நெறிமுறையைக் கடைபிடிப்பது அவனுக்கே நல்லதாக இருக்கும். செய்யும் சூழல் சீர்கேடுகளுக்கு அவனே வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொண்டு வரும் பேரிடர்கள் ஏராளம், ஏராளம். இதுபோன்ற பேரிடர்களுக்கு இந்தியா பல நேரங்களிலும் சாட்சியாக இருந்துள்ளது.

    பைபிளில் பிரளயம் பற்றிய கதை ஒரு கதை என்றாலும் அது சொல்லும் சிறப்பான செய்தி கவனிக்க வேண்டியதாகும். படைப்பாளிக்கு தன்னுடைய படைப்புகள் தீயவர்களாவதைக் கண்டவுடன் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. கடவுளோடு கடவுளின் பாதையில் நடந்தவனும், தன் வாரிசுகளில் களங்கம் இல்லாதவன் என்று சொல்லும் அருகதை பெற்றவனுமான நோகாவையும், அவனுடைய குடும்பத்தையும், வம்சத்தை நிலைநிறுத்துவதற்கான தேவையான பறவை, விலங்குகளையும் மட்டும் காப்பாற்றவும், மிச்சம் இருப்பதை எல்லாம் அழித்த கதை தான் அது.

    எந்தக் காலத்துக்கும் மனித இனத்துக்குத் தேவையான ஒரு முன்னெச்சரிக்கை இந்தக் கதையில் இருக்கிறது. சமுதாயம் சீர்கெட்டுப்போனால் நாசம் ஏற்படுவது உறுதி என்பதே அது. வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் இயற்கைக்கு எதிரான துரோக செயல்கள் தான் இன்றைய காலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். வயல்களை அழித்து அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. குன்றுகளையும், மலைகளையும் இடித்துத்தள்ளி அங்கே வானளாவ கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. நதிகளை சுரண்டியும், காடுகளை வெட்டிச் சாய்த்தும் அங்கெல்லாம் சுற்றுலா மையங்கள் நிர்மானிக்கப்படுகின்றன. வளர்ச்சி, முன்னேற்றம் என்றால் இதுதான் என்ற முரட்டுத்தனமான வழிகாட்டுதல் தான் இன்றுள்ள புதிய சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கு எல்லாம் எதிராக விரல் நீட்டி சுட்டிக்காட்டுபவர்களை சுற்றுச்சூழல் காவலர்கள் பைத்தியக்காரர்கள் என்று பரிகாசத்தோடு அவர்கள் கூக்குரல் எழுப்பி அவர்கள் கேலி முரசு கொட்டுகிறார்கள்.

    எல்லாம் லாபத்துக்காக தான் என்றாகிவிட்டது. இன்றைக்கு பொருளாதார உலகம் எடுத்துச் சொல்லும் புதிய பொருளாதார தத்துவமும், கோட்பாடும்… பூமியும், காற்றும், நீரும், வெளிச்சமும், சாலைகளும், கல்வியும், சுகாதாரமும் விற்பனைச் சரக்குகள் என்ற பொருளாதாரத் தத்துவத்தை அவர்கள் சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக நாம் அதை கற்றுக்கொள்ளவும், நடைமுறைப்படுத்தவும் செய்து கொண்டிருக்கிறோம். அரசியலிலும், உயர்ந்த பதவிகளிலும் இதற்கு புகழ் பாடுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் எல்லா தீயசக்திகளுக்கும் ஜனநாயகத்தையும், சட்ட நெறிமுறைகளையும் சவால் விட முடிகிறது.

    ஒன்று மட்டும் நிச்சயம். மனிதநேயம் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்களால் சிறிய சிறிய காரியங்களாவது நடக்கத் தொடங்கியிருக்கின்றன. இயற்கையைக் காப்பாற்றுவதற்காக, மனித இனம் உட்பட அண்டத்தில் இருக்கும் எல்லாவற்றையும் காப்பாற்றுவதற்காக, சட்டத்தின்படி நடப்பதை உறுதி செய்வதற்காக செயல்திறன் உடையவர்கள் விழித்து எழுந்திருக்க நேரம் வந்துவிட்டது.

    இந்த இதழை மேலும்

    குழந்தைகள் நலன்

    “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று” என்பது பழமொழி

    “குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்

    மழலைச் சொல் கேளாதவர்”

    “மக்கள் தெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

    “ஈன்றபொழுதினும் பெரிதுவர்க்கும் தன்மகனை

    சான்றோன் எனக் கேட்ட தாய்”

    என்பது வள்ளுவம்.

    குழந்தைகள் நம் நாட்டின் எதிர்கால ஓவியங்கள், நாளைய நம் எதிர்பார்ப்புகள். குழந்தைகள் நம் நாட்டின் விலை மதிக்க முடியாத அளப்பரிய சொத்துக்கள். ஒவ்வொரு குழந்தையுமே ஒரு விஞ்ஞானி தான்.

    குழந்தைகள் எதையும் தூண்டித் துருவி ஆர்வத்தோடு கேட்பதைப் பார்த்திருப்பீர்கள், குழந்தைகளிடம் காணப்படும் இந்த அறிந்து கொள்ளும் ஆர்வம் ஒவ்வொரு குழந்தையையும் ஒரு விஞ்ஞானி ஆக்குகிறது. குழந்தை தனது மனசாட்சிக்கு ஊறு செய்யாத வகையில் தனக்குத்தானே நாணயமாக நடந்து கொள்வதே அக்குழந்தையை ஞானமும் விவேகமும் உடைய அறிவார்ந்த குடிமகனாக்கும்.

    குழந்தைகள் கனவு கான ஊக்கம் அளித்து அந்த எண்ணம் ஆழப்பதிய வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அவர்களது எண்ணங்களுக்கு நாம் உரமிட்டு ஊக்கப்படுத்த வேண்டும்.

    பிஞ்சு மனதில் பதியும் நற்கல்வி வாழ்வின் முழுமைக்கும் நல்லுணர்வு என்ற தன்மையின் தாக்கத்தை உருவாக்கும். குழந்தைகளைக் கனவு காணத் தூண்ட வேண்டும், கனவு எண்ணங்களை தோற்றுவிக்கும். எண்ணங்கள் செயலாக பரிணமிக்கும். இவையெல்லாம் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களுடைய அன்பு வாசகங்கள்.

    குழந்தைகளுடைய மனதை ஒரு வெள்ளைத் தாளுக்கு ஒப்பிடலாம். வெள்ளைத் தாளில் எழுதுகின்ற எழுத்துகளை அந்த தாள் அப்படியே பதிவு எடுத்துக் கொள்வதைப் போல குழந்தையின் மனம் எல்லாப்பதிவுகளையும் எடுத்துக் கொள்ளும்.

    வளரும் பருவத்தில் நல்ல குணங்களையும் நல்ல நடத்தையையும் பயிற்றுவிக்க வேண்டும். “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்று சொல்வார்கள். குழந்தைப் பருவத்திலேயே நல்ல குணங்களை சொல்லித்தராமல் விட்டுவிட்டால் குழந்தையினுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

    எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

    அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே

    என்பது கவிஞனின் பாடல்

    நாம் என்ன பதிவுகளை இளம்வயதில் கொடுக்கிறோமோ அந்தப் பதிவுகள் தான் அவனை நல்லவனாகவோ தீயவனாகவோ மாற்றுகிறது.

    குழந்தை வளர்ப்பு, தாய் தந்தையின் அரவணைப்பு, குழந்தை வளரக்கூடிய சூழல், தாயினுடைய போதனை, தந்தையின் கண்டிப்பு, நண்பர்களின் பழக்கம், படிக்கும் பள்ளியினுடைய கட்டுப்பாடு, உறவுகளின் கூட்டமைப்பு, சுற்றுப்புற அமைப்பு, ஆசிரியர்களினுடைய அரவணைப்பு இவையெல்லாம் குழந்தையினுடைய குணத்தை மாற்றுகிற காரணிகளாக அமைகின்றன.

    நல்ல ஒரு சூழல், நல்ல எண்ணங்களையும் நல்ல குணங்களையும் கற்றுத் தருகிறது. மோசமான சூழல் தீய எண்ணங்களையும் தீய குணங்களுக்கும் வழி வகுக்கிறது. தூய மழைநீர் செம்மண் நிலத்திலே விழும் போது சிவப்பு நிறமாக மாறுகிறது. நல்ல மழைநீர் கரிசல் மண் நிலத்திலே விழும் போது அந்த மண்ணின் நிறத்திற்கேற்ப மாறுகிறது. அதுபோல சேருகிற இடத்தைப் பொறுத்தே குழந்தைகளின் குணங்களும் ஒழுக்கமும் மாறுபடுகிறது.

    பெற்றோர்களால் கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் ஒரு வகையாகவும், கண்டிப்பு இல்லாமல் கவனம் இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் வேறு வகையாகவும் மாறுபடுகின்றனர்.

    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதைப்போல நல்ல பழக்கங்களை சிறு வயதிலிருந்தே போதிக்கிற வளர்ப்பு முறையிலே இருக்கிற குழந்தைகள் நல்ல நாகரிகத்தையும், நல்ல குணத்தையும் கொண்டவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதேபோல நல்ல பழக்கங்களை சொல்லித்தராத சூழ்நிலையிலே வளரும் குழந்தைகள் மாறுபட்ட குணங்களை உடையவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு.

    ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. “If wealth is lost nothing is lost; if health is lost something is lost; if character is lost everything is lost. நல்ல குணநலன்கள் தான் வாழ்வின் அடித்தளம். அடித்தளம் உறுதியாக இருந்தால் அது எந்த விதமான அச்சுறுத்தலுக்கும், இயற்கை சீற்றங்களுக்கும் அசையாத ஒரு கட்டிடம் உருவாகும் என்பது உண்மை. அதுபோல நல்ல குணநலன்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமானதாக, உன்னதமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நல்ல பழக்கமும் நல்ல குணமும் தான் குழந்தைக்கு ஒரு விதியாக அமைகிறது. தற்பொழுதுள்ள விஞ்ஞான வளர்ச்சியில் பெற்றோர்களுடைய கவனக்குறைவால் குழந்தைகளினுடைய ஒழுக்கம் சீரழிக்கப்படுகிறது. இன்றைய நவீன தொழில் நுட்ப தொலை தொடர்பு வளர்ச்சியினால் பல நன்மைகளும் உண்டாகின்றன. அதே நேரம் கலாச்சார சீரழிவுகளும் ஏற்படுகின்றன. செல்போன், முகப்புத்தகம், இணையதளம், வாட்ஸ்அப் இவை எல்லாம் அறிவியல் வளர்ச்சி அளித்த கொடைகள். ஆனால் அறிவியல்; வளர்ச்சியின் மறுபக்கத்தால் குழந்தைகள் பார்க்கக்கூடாததையெல்லாம் பார்த்து வக்ரபுத்தி உடையவர்களாக, ஒழுக்கம் குறைந்தவர்களாக, வன்மம் கொண்டவர்களா மாறும் நிலை உருவாவது வருத்தம் அளிக்கிறது. சிறு வயதிலேயே செய்திகளைத் தெரிந்து கொள்வது என்பது நன்மையே. ஆனால் செய்திகளுக்கும் அப்பால் வயதுக்கு மீறிய அனுபவங்களை பிஞ்சிலேயே தெரிந்து கொள்கிற போது குழந்தைகளின் மனம் கெடுகிறது, மாசுபடுகிறது, வடிகால்கள் தேடுகின்றன, வாழ்க்கையைத் தொலைக்கின்றன.

    பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், பெண்மையைப் போற்றுகிற பெரியவர்கள், ஒழுக்கம் பற்றிப் பேசுகிற சிந்தனையாளர்கள், கலாச்சாரம் பற்றிப் பேசுகிற அறிவார்ந்த பெருமக்கள், பண்பாடுகள் கற்றறிந்த பண்பு நலம் சார்ந்தோர் இந்த மீடியா வளர்ச்சியினால் இளைய சமுதாயம் தீய வழியில் போவதை தடுப்பதற்கு தேவையான முயற்சிகளை தொடங்க வேண்டிய காலம் வந்து விட்டது. வரும் தலைமுறை வளமாக இருந்தால் தான் நாடு வளமுள்ள நாடாக மாறமுடியும்.

    வளர்கின்ற தலைமுறை வளமாக இருக்க வேண்டும் என்பதில் இருவேறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது. அடுத்து வரும் தலைமுறை குணங்களிலும் ஒழுக்கத்திலும் ஆரோக்கியமில்லாமல் போவது சமுதாய சாபமாகும், வீட்டுக்கும் நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும். தவிர்க்க வேண்டியவைகளை ஒதுக்க வேண்டிய முழுப் பொறுப்பு பெற்றோர்களுக்கு வந்து விட்டது. முழுமுதல் பொறுப்பாக பெற்றோர்கள் இந்த மாற்றத்திற்கான வழிமுறைகளைக் கையிலெடுக்க வேண்டும். கசப்பான மருந்தாக இருந்தாலும் நோய் தீர வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கவனத்தோடு கையாள வேண்டிய நேரம் இதுதான். தவறவிட்டால் வளரும் சமுதாயத்தின் பாதிப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.

    ஆதலின் பெற்றோர்கள், குழந்தை வளர்ப்பிலே ஆரோக்கியமான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் விழிப்புணர்வோடு கவனமாக இருக்க வேண்டும்.

    தேனீ பூவிலிருந்து வலிக்காமல் தேன் எடுப்பதைப் போல மெதுவாக அழுத்தம் கொடுக்காமல் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். குடும்ப கௌரவத்தையும், பாரம்பரியத்தையும், பண்பு நலன்களையும் அடிக்கடி சொல்லிச் சொல்லி நினைவுபடுத்த வேண்டும்.

    ஒரு காலம் வரை கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் மட்டுமே தரப்பட வேண்டும்.

    இந்த திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே ஓர் ஒழுக்கமுள்ள அர்த்தமுள்ள வருங்கால சமுதாயம் உருவாகும் என்பது அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை ஆகும்.

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் – 9

    நீங்காத நினைவுகள் சுமையா? சுவையா?

    நினைவுகள் என்பது வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நல்ல நினைவுகள் ஒருவரை சீரான பாதையில் அழைத்துச் செல்கிறது. இவை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், வாழ்க்கையை அலங்கரிப்பதற்கும் அடித்தளமாக அமைகிறது. ஆனால், அதேவேளையில் தீய நினைவுகள் மனதில் உருவாகி தேங்கி நிற்கும்போது அவை தீராத வேதனையைத் தந்து வாழ்க்கையை சோகத்தில் நிரப்பிவிடுகிறது.

    பசுமை நிறைந்த நினைவுகள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியைத் தருகின்றன. “ஞாபகம் வருதே!” என்று பாடல்பாடி இளமைக் காலத்தில் நிகழ்ந்த நல்ல நிகழ்வுகளை அசைபோடும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது. ஆனால், இளமைக்கால நினைவுகள் கவலையையும், கண்ணீரையும் தரும் விதத்தில் அமைந்திருந்தால் அந்த நினைவுகள் நமது வாழ்க்கையின் சுமையாக மாறிவிடுகிறது.

    இதனால்தான் “ஒருநாள் கவலை என்பது ஒரு மாதம் முழுவதும் நாம் பெறுகின்ற மகிழ்ச்சியைவிட நீளமாக அமைந்துவிடுகிறது” என்று சீனப்பழமொழி கூறுகிறது.

    ஒருநாள் நாம் கவலைப்பட்டால் கூட அந்த கவலையானது நம் மனதை ‘ஆசிட்’போல அரித்து, நீங்காத வடுவை ஏற்படுத்தி காலமெல்லாம் நினைக்கச் செய்துவிடுகிறது என்பது பலரின் வாழ்க்கையில் உண்மையாகிறது.

    கவலைகள் வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

    இளமைப் பருவத்தில், பள்ளியில் படிக்கும் காலத்தில் “என்னால் நன்றாக படிக்க முடியவில்லையே” என கவலைப்படும் இளைய உள்ளங்கள் உண்டு. “நல்ல ஆடைகள் அணிய போதிய வசதியில்லையே” என்று வருத்தத்தில் இருப்பவர்களும் உண்டு. “நல்ல பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே” என்று ஏங்குபவர்களும் உண்டு. இப்படி – குடும்பம், ஊர், பள்ளி என பல நிலைகளில் கவலைகளை மனதில் நிரப்பி, மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களும் உண்டு.

    வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் கவலைப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் வந்துகொண்டுதான் இருக்கும். சின்னஞ்சிறு வயதில் பென்சில், பேனா, ஆடை இவற்றிக்காக கவலைப்பட்டவர்கள், பள்ளிக்கு வந்ததும், படிப்பு ஆசிரியர், பாடங்கள் என்பதைப்பற்றி கவலைப்படுவார்கள். கல்லூரிக்கு வந்ததும் பணம், காதல், படிப்பு என பல்வேறு திசைகளிலிருந்து வந்து கவலை கருக்கொள்ள ஆரம்பிக்கிறது. கல்லூரி படிப்பு முடித்ததும் நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல மனைவி என எதிர்பார்ப்புகள் ஏராளமாகி, அவை நிறைவேறாத போது கவலைகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் பிள்ளைகள், தனிக்குடும்பம், வாரிசுகள் என கவலைப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

    ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவத்தில் சின்னஞ்சிறு கவலைகள் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகத்தான் செய்யும்.

                நீ இப்படி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

              அவர் என்னை மரியாதை இல்லாமல் நடத்துகிறார்.

              அவளுக்கு என்மீது அன்பு இல்லை

    இப்படிப்பட்ட விமர்சனங்களெல்லாம் ஏன் தோன்றுகிறது? என்பதை உற்றுக்கவனித்தால் ஒரு உண்மை நமக்குப் புலப்படும்.

    நாம் பிறரிடம் ஏதேனும் ஒன்றைப்பற்றி சற்று அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். நாம் எதிர்பார்த்த அளவுக்கு அந்த நிகழ்வுகள் நிகழாவிட்டால் நமக்குள் ஏமாற்றம் வந்துவிடுகிறது. அந்த ஏமாற்றம் சில வேலைகளில் விரக்தியாகவும், கோபமாகவும், பயமாகவும், எரிச்சலாகவும் வெளிப்படுகிறது. ஆனால் பல வேலைகளில் அது கவலையாகவே வடிவெடுத்து மனதின் ஓரமாகப்போய் ஒட்டிக்கொள்கிறது.

    நம் எதிர்பார்ப்புகளின்படி ஏதேனும் நடக்கவில்லையென்றால் முடிவில் கவலைதான் அதிகமாகிறது.

    “கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு

    காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு” என்ற திரைப்படப் பாடல் நமக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது.

    பள்ளியில் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

    கண்ணாடி குடுவைகளை வைத்து அறிவியல் தத்துவத்தை விளக்கினார். அந்த கண்ணாடி குடுவையை வைத்தே வாழ்க்கை தத்துவத்தையும் விளக்க விரும்பினார். முதலில் அந்தக் கண்ணாடி குடுவையை கையில் எடுத்துக் கொண்டார். முன்வரிசையில் இருந்த மாணவனை அழைத்தார்.

    ஆசிரியர் அருகே மாணவன் வந்ததும், அவனது வலது கையை நீட்டச் சொன்னார். கையின் மீது கண்ணாடி குடுவையை வைத்தார். பின்னர் கொஞ்சநேரம் அப்படியே நிற்கச் சொன்னார். மாணவன் தனது வலது கையை நீட்டி கண்ணாடி குடுவையை தாங்கிப் பிடித்துக்கொண்டே நின்றான்.

    ஒரு நிமிடத்திற்குப் பிறகு அந்த ஆசிரியர் மாணவரிடம் கேட்டார்.

    “இந்தக் கண்ணாடி குடுவையை கையில் வைத்துக் கொண்டிருப்பது உனக்கு சுமையாகத் தோன்றுகிறதா?” என்று கேட்டார் ஆசிரியர்.

     “சுமையாக இல்லை” என்றான்.

    5 நிமிடங்களுக்குப்பின் அதே கேள்வியைக் கேட்டார்.

    “சுமையாக இல்லை” என்றே பதில் தந்தான்.

    தொடர்ந்து 15 நிமிடங்கள் அப்படியே அவனை நிற்க வைத்தார். இப்போது “கை மெதுவாக வலிக்கிறது” என்றான் மாணவன்.

    “தொடர்ந்து அப்படியே நில்” என்றார்.

    30 நிமிடங்கள் கழிந்தது. மாணவனுக்கு கை அதிகமாக வலித்தது. 45 நிமிடங்கள் முடிவதற்குள் “சார் நான் இப்போது இந்தக் குடுவையை கீழே வைக்கலாமா?” என்றான். “இல்லை இன்னும் கொஞ்சநேரம் வைத்துக்கொள்” என்றார் ஆசிரியர்.

    சுமார் 1 மணிநேரம் முடிவதற்குள் கை அதிகமாக வலித்ததால் கண்ணாடி குடுவையைக் கீழே போட்டுவிட்டான் மாணவன். கண்ணாடி குடுவை உடைந்தது. உடைந்த கண்ணாடி குடுவையை அப்புறப்படுத்துவதிலேயே அவர்கள் கவனம் சென்றது.

     “இந்த நிழ்ச்சியைப் பார்த்த பின் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்.

    “அதிக நேரம் கண்ணாடி குடுவையை கையில் வைத்திருந்தால் கை வலிக்கும். கண்ணாடி குடுவை உடைந்துவிடும்” என்றார்கள்.

    ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.

    “இதில்தான் வாழ்க்கைத் தத்துவம் அடங்கியிருக்கிறது. கண்ணாடி குடுவையைக் கையில் வைப்பது போலவே ஒரு கவலை தரும் நிகழ்வை நாம் மனதில் கொஞ்சநேரம் வைத்திருந்தால் பிரச்சனையில்லை. நமது மனம் தாங்கிக்கொள்ளும். ஆனால், சின்ன பிரச்சனையைக்கூட தொடர்ந்து பல நாட்கள் மனதில் வைத்திருந்தால் நமது மனம் தாங்கிக்கொள்ளாது. கவலைகளால் நமது மனம் வலிக்கும். கவலைக்கொண்ட மனம் நமது வாழ்க்கைப் பாதையை மாற்றி நமது வளர்ச்சியையும் கெடுத்துவிடும்” என்றார் ஆசிரியர்.

    கவலைதரும் பிரச்சனைகள் சிறிதாகத் தோன்றும்போதே அதனை நீக்குவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். சின்னச்சின்ன பிரச்சனைகளை மனதில் தேக்கிவைத்து, கவலைகளை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கும்.

    நல்ல நினைவுகள் வாழ்க்கையை சுவையாக்கும். கவலைதரும் நினைவுகள் வாழ்க்கையை சுமையாக்கிவிடும். எனவே கவலைகளை மறப்போம். எப்போதும் வெற்றியைத் தரும் நல்ல சிந்தனைகளை மனதில் விதைப்போம்.

    இந்த இதழை மேலும்