எஸ். நரேந்திரபாபு
இந்திய வனத்துறை (பயிற்சி)
டேராடூன்
பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு. இந்தக் கனவை தூங்கும்போது காண்பதைவிட, விழித்திருக்கும் பொழுதே எண்ணினால் அதைவிட மகிழ்ச்சி தருவது வேறெதுவும் இவ்வுலகில் இருக்க முடியாது. தன் கனவை நம்மோடு பகிர்கிறார் இந்திய வனத்துறையில் பணியாற்றும்
திரு. எஸ். நரேந்திரபாபு அவர்கள்.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஊட்டி அருகிலுள்ள கூடலூரில் தான். சாலை வசதி இல்லை. பள்ளிக் கட்டிட வசதி இல்லை. இப்படிப்பட்ட அரசுப்பள்ளியில் தான் எனது பள்ளி வாழ்க்கை அமைந்தது. எனது குடும்ப வறுமையின் காரணமாகவே இப்பள்ளியில் படிக்கும் சூழல் அமையப்பெற்றேன்.
சூழலை சாதகமாக அமைக்க விரும்பினேன். வறுமை எனக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. கோயிலின் மேற்கூறை எப்படி இருந்தாலும் அதில் இருக்கும் தெய்வத்தின் மதிப்பு குறையாது. அதுபோலவே எனது பள்ளியும், அங்கு பணியாற்றிய எனது ஆசிரியர்களும். அவர்கள் கற்றுக்கொடுத்த கல்விமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களையும் அப்பள்ளி ஆசிரியர்கள் அன்போடு அரவணைப்பார்கள். அதிலும் அரசுப்பள்ளி என்றால் கூடுதலாக கவனம் இருக்கும். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டேன்.
சரியான நேரத்திற்குள் வகுப்பிற்கு செல்ல வேண்டும். காரணம் இல்லாமல் விடுமுறை எடுக்கக் கூடாது. மற்றவர்களிடம் பழகும் நல்ல மனப்பக்குவம் போன்றவற்றை என் பள்ளி ஆசிரியர்களிடம் தான் கற்றுக்கொண்டேன்.
பெரியவர்கள் அடிப்பதும், திட்டுவதும் சிறியவர்களின் நலனுக்கு தான் என்று எனது அப்பா அடிக்கடி சொல்வார். அவரது வார்த்தைகளை நான் நன்கு புரிந்து கொண்டே வளர்ந்தேன். பெரியவர்களின் வார்த்தைகளை புரிந்து கொண்டாலே வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்பதை தெரிந்து கொண்டேன்.
நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம். அதிலும் கிடைத்த நண்பர்களை தக்கவைத்துக் கொள்வது அவரவரின் பழக்கத்தில் தான் இருக்கிறது. இன்றளவும் என்னுடைய நட்பு வட்டாரத்தில் சிறிதும் விரிசல் இன்றி தொடர்வதை பெருமிதம் கொண்டு பகிர்கிறேன். காரணம் எங்களுக்குள் நல்ல விட்டுக்கொடுக்கும் பண்பு உள்ளது.
பள்ளிக்காலத்தில் படிப்பின் மேல் இருந்த ஆர்வத்தில் பாதி விளையாட்டின் மீதும் குறையாதிருந்தது. படிப்பில் சாதனை படைத்தாலும் பாராட்டு சான்றிதழ், அதுபோல விளையாட்டிலும் கிடைத்தது. விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. கால்பந்து, கைப்பந்து, கபடி முதலான அனைத்து போட்டிகளிலும் கலந்து சான்றிதழ் பெற்றிருக்கிறேன்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று என் பெற்றோரிடம் மதிப்பெண் சான்றிதழைக் கொடுத்தேன். அதைப் பார்த்த என் பெற்றோர் பெற்ற மகிழ்ச்சியை என்றும் மறக்காமல் எனது வாழ்நாள் மகிழ்ச்சியாக எண்ணினேன். அந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு எப்பொழுதும் கொடுக்க எண்ணி அடுத்தடுத்த எல்லா தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று அவர்களது ஆசையை நிறைவேற்றினேன்.
படிக்கும் போதே ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏதாவதொரு ஆசை இருக்கும். அந்த ஆசையை நூற்றில் 20 சதம் பேர் மட்டுமே இறுதிவரை கடைபிடிப்பார்கள். அவ்வாறு கடைபிடித்தவர்களில் நானும் ஒருவன். ஆமாம்… என்னுடைய ஆசையெல்லாம் இந்திய வனத்துறையில் சேர வேண்டும் என்பது தான். அதற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்ள மேற்படிப்பை மிகக்கவனமாக தேர்ந்தெடுத்தேன். பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. இரண்டையும் வேளாண் சார்ந்த துறையைத் தான் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.
கல்லூரியில் படிக்கும் போதும் படிப்புடன், விளையாட்டு, என்.சி.சி. போன்றவற்றில் கலந்துகொண்டு சான்றிதழ் பல பெற்றிருக்கிறேன். என் சான்றிதழ்களைப் பார்த்து என் ஆசிரியர்கள் எனக்கு மிகுந்த ஊக்கமும், உந்துதலும் கொடுத்தார்கள். இது எனக்கு மிகுந்த ஆற்றலைக் கொடுத்தது.
தொடர்ந்து வனத்துறை சார்ந்த தேர்வுகளை எழுதத் தொடங்கினேன். பல தேர்வுகளுக்குப் பின்னரே வெற்றி அடைந்தேன். தேர்ச்சி மதிப்பெண்ணுடன் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற சான்றிதழ்களும் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தன.
வனத்துறையில் சேர்ந்ததும் எனக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது. வெறும் தமிழ்மொழியோடு தமிழ்நாட்டில் இருப்பதே கடினம். ஆனால் மாநிலத்தை விட்டு மாநிலம் செல்லும்போது அதற்கு ஏற்றாற்போல் மொழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும் பயிற்சியின் போது மொழிப்பயிற்சி கொடுப்பார்கள். அப்பொழுது கற்றுக் கொள்ளலாம்.
எந்தவொரு தேர்வு என்றாலும் அதோடு சம்பந்தமான அனைத்து புத்தகங்களையும் தேடித்தேடிப் படிக்க வேண்டும். எந்த புத்தகத்தையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது. ஒன்றில் சொல்லாத முக்கியமான கருத்துக்கள் மற்றொரு புத்தகத்தில் சொல்லி இருப்பார்கள். அதனால் எல்லாவற்றையும் படியுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
இந்த இதழை மேலும்