திரு. T. நடராஜ், M.B.A.
நிறுவனர், மக்கள் ஆட்டோ, கோவை
மக்களுக்கான சேவையில் உண்மையாக தங்களை இணைத்துக் கொள்பவர்கள் எப்போதும் ‘கை தட்டல்கள்’ பெறக் கூடியவர்கள் தான். அந்த வகையில் மக்களின் மனம் திறந்த பாராட்டுதல்களையும், கை தட்டல்களையும் பெற்றவர் இவர்.
- தொழில் செய்கிறோம் என்பதைவிட அந்தத் தொழில் மூலம் பிறரின் பயன்பாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஆராய்ந்து மக்களுக்காக ‘மக்கள் ஆட்டோ’ நிறுவனத்தைத் துவக்கிய பெருமைக்குரியவர் இவர்.
- அனுபவங்களை மூலதனமாக்கி, மூளைத்தனத்தை செயல் வடிவமாக்கி புதுமையாய் அதே சமயம் பலரும் வியக்கும் விதமாய் சிந்திக்கும் சிந்தனையாளர் இவர்.
- மாறுபட்ட அணுகுமுறை, மாற்றிவிட்ட பயண முறை இவர்கள் வளர வேண்டிய தலைமுறை என பயணாளிகள் பாராட்டும் ‘மக்கள் ஆட்டோ’
உங்களின்பிறப்பும், கல்வியும்…
நான் பொள்ளாச்சி நெகமம் அருகிலுள்ள கொண்டே கவுண்டன் பாளையம் என்ற குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அங்குள்ள அரசு பள்ளியில் தான் என்னுடைய தொடக்கக் கல்வி அமைந்தது. அதன்பிறகு அருகிலுள்ள நெகமம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அதற்குப் பின்னர் எம்.பி.ஏ. முடித்தேன். படிக்கும்போதே கம்ப்யூட்டர் சம்பந்தமான நுட்பங்களை சரிவரக் கற்றுக்கொண்டதால் அதிலுள்ள சின்னச்சின்ன நுணுக்கங்களைக் கூட என்னால் சரியாக சீர் செய்யும் ஆற்றலைப் பெற்றேன். அப்போது எனது அண்ணன் திரு. T. செல்வராஜ் அவர்கள் ஸ்ரீ சிஸ்டம்ஸ் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் என்கிற நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவருடன் நானும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன்.
காலத்தின் வேகத்தில் அதை விட்டுவிட்டு வேறு ஏதாவது தொழில் தொடங்கலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தோம். அப்போது நான் கால் டாக்சி ஓட்டுநராக சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். இப்படி பல தொழில்கள், பல போராட்டங்கள் எனச் சந்தித்தோம். என் வாழ்க்கைப் பயணம் என்பது பல மேடுபள்ளங்களையும், கற்கள் முட்களையும் கடந்து தான் நகர்ந்தது.
‘மக்கள் ஆட்டோ’ எண்ணம் எழக் காரணம் என்ன?
நான் சென்னையிலிருந்து கோவைக்கு வருவதற்கான ரயில் கட்டணத்தை விடவும் கோவை ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்குச் சென்ற ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக இருந்தது. அன்று எடுத்த முடிவு தான், ஆட்டோ நிறுவனம் ஒன்றைத் துவங்கி நியாயமான கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது. அதுமட்டுமில்லாமல், ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்று யோசனை செய்த நேரமும் அது. வெறுமனே தொழில் தொடங்கினால் போதும் என்றில்லாமல் மக்களுக்கு உகந்த வகையில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது தான் இந்த மக்கள் ஆட்டோ நிறுவனம்.
எனது சகோதரர் திரு. T. செல்வராஜ் அவர்கள் பொதுவாகவே மக்களுக்கு ஏதேனும் ஒருவகையில் நற்சேவை புரிய வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அவருடன் இணைந்து இந்நிறுவனத்தை நடத்துவது சரியாக இருக்கும் என்று உணர்ந்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று அங்கிருக்கும் ஆட்டோ கட்டண விபரங்கள், ஆட்டோ ஓட்டுநர்களின் அனுபவங்களைப் பெற்று முடிவில் ‘கோவையில்’ மக்கள் டிரான்ஸ்போர்ட் என்கிற பெயரில் இந்நிறுவனத்தை சேவை மனப்பான்மையுடன் துவக்கினோம்.
12.2.2014-ல் 38 ஆட்டோ முதலாளிகளையும், ஓட்டுநர்களையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு இச்சேவையை தொடங்கினோம். இப்போது இது 65 ஆட்டோக்களாக கோவை முழுவதும் மக்களின் சேவைக்காக இயங்கிக் கொண்டு இருக்கிறது. எந்த நோக்கத்திற்காகத் தொடங்கினோமோ அந்த நோக்கத்தை நன்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
மற்ற ஆட்டோக்களை விட மக்கள் ஆட்டோவின் சிறப்புகள் என்ன?
முதலில் மக்கள் பார்த்தவுடனே இது ‘மக்கள் ஆட்டோ’ என்று அடையாளப்படுத்தும் எங்கள் பெயர் பலகை. எங்களின் சேவை என்பது அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை.
அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணங்கள் தான் எங்கள் ஆட்டோவில் வசூலிக்கப்படுகிறது. முதல் 2 கி.மீ. ரூ. 14, அதன்பின் ஒரு கி.மீக்கு ரூ. 6 மட்டுமே கடந்த 6 மாதங்களாக வசூலிக்கிறோம். சரியான மீட்டருக்கு தகுந்த பணத்தைக் கொடுத்தால் மட்டும் போதும். பயணியர் அவர் அடைய வேண்டிய இடத்திற்கு வந்ததும் அவருக்கு கட்டண ரசீது கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்களும் முழுவதுமாக எங்களை நம்புகிறார்கள். மேலும் தமிழக அரசின் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கிறோம்.
ஆட்டோவில் செய்தித்தாள், குடிநீர், அன்றாடம் அனைவரும் பயன்படுத்தும் எல்லாவிதமான செல்போன்களுக்கும் சார்ஜர் போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டோ பயணமும் கால் சென்டர் மூலம் கண்காணிக்கப்படுவதால் பாதுகாப்பான பயணங்களை வழங்க முடிகிறது.
தொலைபேசியின் மூலம் (0422 4000 8000) தொடர்பு கொண்டாலே போதும்.
மக்களிடம் வரவேற்பு எவ்வாறு உள்ளது?
எங்கள் ஆட்டோவை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். பேருந்து கட்டணத்தைப் போல, போக வேண்டிய இடத்திற்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மக்கள் தங்கள் இடத்தைச் சென்றடைகிறார்கள். பெரும்பாலான நடுத்தர மக்கள் இதனால் பயனடைந்துள்ளார்கள். அவர்கள் உளமார வாழ்த்துகிறார்கள். இதனால் தொடர்ந்து எங்கள் மக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுகிறார்கள்.
அதுபோல ‘கால் ஆட்டோ’ (Call Auto) என்ற ஒன்றை தமிழ்நாட்டில் முதன்முதலாக நாங்கள் தான் தொடங்கினோம். புதுமையான முயற்சி. மக்கள் நம்பி பயன்பெறுவார்களா என்ற கேள்விகள் எல்லாம் முதலில் எழுந்தது. ஆனால் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு எப்பொழுதும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்களின் நன்மதிப்பு கிடைத்துள்ளதை எண்ணி பெரிதும் மகிழ்கிறோம்.
மக்கள் ஆட்டோ சர்வீஸ் கோவையில் எங்கெங்கு உள்ளது?
கோவை முழுவதும் டவுன் பேருந்து எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் எங்கள் ஆட்டோக்கள் செல்கின்றன. ஆட்டோ நிறுத்துவதற்கான தனி ஆட்டோ நிறுத்தம் என்று ஏதும் இல்லை. ஆட்டோ டிரைவர்கள் தாங்களாகவே பயணிகளை ஏற்றமாட்டார்கள். எங்கள் கால் சென்டர் மூலம் தான் ஏற்றிச் செல்கிறார்கள்.
மக்கள் ஆட்டோவை இயக்கும் ஓட்டுநர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?
இந்தத் தேர்வு செய்யும் முறை சற்று வித்தியாசமாக இருக்கும். முதலில் ஆட்டோ ஓட்டும் ஆர்வமுள்ளவர்களை வரவழைத்து அவர்களிடம் நேர்காணல் செய்து யார் தகுதியாக இருக்கிறார்களோ அவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பணி அமர்த்துகிறோம்.
முதலில் 700 பேர் வந்திருந்தார்கள். அவர்களில் 50 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து முதல் கட்டமாக ஓட்டுநர் பணியைக் கொடுத்தோம். ஆட்டோ ஓட்டுநர்கள் முதலில் நல்ல அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பின்னர் அவர்களின் தகுதிகள், குடும்பப் பின்னணி முதலியவற்றை அறிந்த பிறகு, அவர்கள் குடும்பத்துடன் நேர்காணல் நடத்திய பின்பு தான் பணிக்கு தேர்வு செய்வோம். பின்பு நிறுவன விதிமுறைகளை அவர்களிடம் கூறி அதற்கு அவர்கள் சம்மதித்த பின்னரே அவர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம்.
அப்படியென்றால் நிறுவன விதி முறைகள் பற்றி சொல்லுங்களேன்?
மக்கள் ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோ ஓட்டும்போது சீருடை அணிய வேண்டும். அடையாள அட்டை அணிய வேண்டும். பெயர் பொருந்திய அட்டை போட்டிருக்க வேண்டும். ஷூ போட வேண்டும் என்ற விதிமுறைகளை நிச்சயம் அவர்கள் பின்பற்றி இருக்க வேண்டும். இவையெல்லாம் இலவசமாகவே வழங்குகிறோம்.
ஒவ்வொரு ஓட்டுநருக்கும் வங்கிக் கணக்கு கொடுத்திருக்கிறோம். அவர்களின் சம்பளத்தை நேரடியாக ஏ.டி.எம். இயந்திரத்தில் எடுத்துக் கொள்ளும் வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.
ஓட்டுநர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறோம். அவர்களின் ஈடுபாடே எங்களின் வெற்றி. அவர்களின் நிறைகுறைகளை எப்பொழுது வேண்டுமென்றாலும் எங்களிடம் சொல்லி நிவர்த்தி செய்து கொள்ளலாம். முக்கியமாக மக்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு “சேவை” குறித்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
தங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு நீங்கள் தரும் செய்தி?
எங்கள் நிறுவனத்தில் ஓட்டுநராக மட்டுமே இணைந்து கொள்ளலாம். அல்லது ஏற்கனவே சொந்தமாக ஆட்டோ வைத்திருக்கக் கூடியவர் தன்னுடைய ஆட்டோவை எங்கள் நிறுவனத்தில் இணைத்துக் கொண்டு தினசரி நல்ல வருமானம் பெறலாம்.
சொந்தமாக ஆட்டோ வாங்கி நிர்வாகத்தில் இணைந்து செயல்பட விரும்பும் ‘பேஜ்’ உள்ள ஓட்டுநர்களுக்கு அவர்கள் பேரிலேயே ஆட்டோ வாங்கித் தரப்பட்டு நிறுவனத்தில் இணைந்து செயல்படலாம். விருப்பம் உள்ளவர்கள் 90038 38308 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வேறுபட்ட ஒரு தொழில் முயற்சி என்றாலே பிரச்சனைகள் ஏராளம் வரும்? அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?
எல்லாத் தொழில்களிலும் போட்டிகள் நிச்சயம் இருக்கும். அப்படி போட்டியில்லை என்றாலும் புதுமையைப் புகட்ட முடியாது.
கோவையில் சுமார் 12000 ஆட்டோக்கள் உள்ளன. நாங்கள் மட்டும் அரசு ஆணைப்படி இயக்குகிறோம். எங்களது ஆட்டோவிற்கு எனத் தனியாக ஆட்டோ ஸ்டான்டுகள் கிடையாது. தொலைபேசியின் மூலம் அழைக்கும் வாடிக்கையாளருக்கு மட்டும் அனுப்புகிறோம். இதனால் பிரச்சனைகள் வருவதில்லை. அதை பெரிதுபடுத்தினால் தான் தீங்கு. நாங்கள் அதை கண்டுகொள்வது இல்லை. மேலும் மற்றஆட்டோ ஓட்டுனர்களுக்குப் போட்டியாக நாங்கள் பயணிகளை ஏற்றுவதில்லை. எங்களின் ஒரே இலட்சியம் மக்களுக்கு உதவ வேண்டும். அவர்களின் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்பது தான். ஆனால் ஆரம்ப நாட்களில் எங்களைப் பற்றி தவறான புரிதல் காரணமாக மற்ற ஆட்டோ நண்பர்களால் பிரச்சனை வரத்தான் செய்தது. அதுவே எங்களுக்கு பெரிய விளம்பரமானது.
பயணிகளின் வரத்தும், தங்களின் சேவை குறித்தும்?
வளர்ந்து வரும் காலகட்டத்தில் போக்குவரத்துத் துறைகள் அனைத்திலும் நெரிசல்கள், பெண்கள் கூட படியில் நின்று பயணம் செய்து வரும் நிலை என்றிருக்கிறது. அந்த நேரங்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாகவும், நெரிசல் இல்லாமல் பயணிக்கும் வகையில் எங்கள் ஆட்டோ சேவை துவங்கியது.
மக்களும் நாளுக்கு நாள் எங்கள் சேவையை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்கிற புரிதல் எங்களுக்கு எழுந்திருக்கிறது. அதற்காக இன்னும் எங்கள் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
தனியாக குழந்தைகளை எங்கள் நிறுவனத்தை நம்பி அனுப்பி வைப்பதெல்லாம் மக்கள் தந்த மிகப்பெரிய நன்மதிப்பாகவே பார்க்கிறோம். இப்படிப்பட்ட சேவையை எதிர்வரும் காலத்தில் இன்னும் இன்னும் சிறப்பாக்கவே முயற்சிகள் மேற்கொள்வோம்.
தொழிற்சங்கங்களின் பார்வையில் நீங்கள்?
எங்களின் மீது ஆரம்பத்தில் இருந்த கண்ணோட்டம் இப்போது மாறியுள்ளது. நாங்கள் மற்றவர்களுக்கு எதிரி அல்ல என்பதைப் புரிந்து கொண்டனர். சில தொழிற்சங்கங்கள் அரசிடமிருந்து எந்தவொரு கட்டண ஆணையும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மீட்டர் கட்டணம் வந்த பிறகு அனைத்து ஆட்டோக்களும் மீட்டர் முறையில் ஓட ஆரம்பித்துவிட்டால் ஸ்டான்ட் கலாச்சாரம் இல்லாமலே போகும். அங்கங்கு ஆட்டோக்கள் மக்களுக்கு கிடைக்க ஆரம்பித்துவிடும். அப்போது ஸ்டேன்ட் கலாச்சார தொழிற்சங்கங்களுக்கு சற்றுப் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முறையில்லாத கட்டணமுறை தொடர்வதையே விரும்புகிறார்கள் என நினைக்கிறோம்.
தவறு எல்லோரிடமும் தான் இருக்கிறது. ஆனால் ஒருவர் செய்யும் தவறை மற்றொருவர் செய்யக்கூடாது என்பதில் எங்கள் மக்கள் ஆட்டோ பெரிதும் மாறுபட்டதாக காணப்படுகின்றது.
கோவையைத் தவிர வேறு இடங்களில் இதே போல் மக்கள் ஆட்டோ இயங்குகிறதா?
தமிழ்நாட்டில் இந்த மக்கள் ஆட்டோ கோவையைத் தவிர வேறு எங்கும் இல்லை. ஆனால் இப்போது இதன் வரவேற்பைப் பார்த்து மதுரை, சென்னை, ஈரோடு போன்ற மாநகரங்களிலும் தொடங்க எங்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு வருகிறார்கள்.
இதனால் அடுத்தகட்டமாக ஈரோடு, மதுரை, சேலம் போன்ற பெரிய நகரங்களில் தொடங்கி கோவையைப் போலவே மக்களுக்கு இச்சேவைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் எங்களிடம் இதைப்பற்றி ஆலோசனைகளைக் கேட்கிறார்கள். அனைத்தையும் கலந்தாலோசித்து பின்னர் முடிவை சரியாக எடுத்து செயல்பட இருக்கிறோம்.
இனிவரும் காலங்களில் மக்கள் ஆட்டோவிற்கான தேவையாக நீங்கள் கருதுவது?
எங்கள் ஆட்டோ கால்சென்டருக்கு வரும் அழைப்புகளின் படி 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தேவைப்படுகிறது. ஆனால் எங்களிடமிருக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கை வெறும் 65 ஆட்டோக்கள் மட்டுமே. மீதமுள்ளவர்களுக்கு எங்களால் சரியாக ஆட்டோ கொடுக்க முடியவில்லை. இதனால் எங்களிடம் பிற ஆட்டோ உரிமையாளர்கள் இணைந்து செயல்பட்டால் அவர்களுக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளோம்.
அப்படிவரும் ஓட்டுநர்களுக்கு எரிபொருள் செலவைத் தவிர மீதி எல்லாவற்றையும் முழுமையாக இலவசமாகவே செய்து கொடுக்கிறோம். சீருடை, மீட்டர் இதுபோன்ற எல்லாமும். இதன்மூலம் பெறும் தொகையில் நாங்கள் எந்தவித பிடித்தமும் செய்வதில்லை. எங்களின் ஒரே நோக்கம் தங்குதடையின்றி வாடிக்கையாளர் கேட்கும் பொழுது இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு சேவை செய்வது தான்.
இது ஒரு பரந்த மனப்பான்மை நோக்கில் செயல்படுவதாகும். இப்பொழுது 25 ஆட்டோக்கள் இணைப்பு ஆட்டோக்களாக எங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. இவர்களுக்கு இலவசமாகவே தேவையான வசதிகளைச் செய்து வருகிறோம்.
எங்களிடம் ஒருமுறை வந்து இணையும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் எங்களை விட்டு போகக்கூடிய சூழல் அவர்களுக்கு ஏற்படவில்லை; இனியும் ஏற்படாது. அதேபோல் எங்கள் மக்கள் ஆட்டோவில் மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள் என்று எவரும் இல்லை. பல ஆண்டுகளாக மது அருந்தும் ஒருவர் எங்களிடம் இணைந்த பிறகு முற்றிலும் மாறுபட்டவராக மாறியிருக்கிற நிகழ்வுகளும் உண்டு. உதாரணமாக ஒரு ஓட்டுநரின் மனைவி என்னிடம் வந்து, எனது கணவர் இப்பொழுதெல்லாம் சம்பளம் முழுவதையும் வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுகிறார். மது அருந்துவதை நிறுத்திவிட்டார் என்று பெருமையுடன் சொல்லியதை நினைத்து மகிழ்கிறோம்.
எனவே எங்கள் ஆட்டோ ஓட்டுநர்களையும், அவர்களது குடும்பத்தையும், எங்களது வாடிக்கையாளர்களையும் எல்லாவிதத்திலும் திருப்தி செய்து வருகிறோம் என்பதில் பெருமிதம் அடைகிறோம்.
குடும்பப் பின்னணி
எங்களது பெற்றோர் திருமலைசாமி, ஈஸ்வரி இன்னும் விவசாயம் பார்த்து வருகிறார்கள். எனது அண்ணா ப. செல்வராஜ் அவர்களின் மனைவி செரின் ஆசிரியை. என் அண்ணனின் மகன் சிபின், மகள் சுருதிகா இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். இம்மாதம் 10ம் தேதி வித்யா அவர்களை நான் கரம் பிடிக்க உள்ளேன். வாழ்த்துங்கள் வளர்கிறோம்.
உங்களால் மறக்க முடியாத பாராட்டாக நீங்கள் கருதுவது?
எங்கள் நிறுவனத்தைப் பாராட்டி எத்தனையோ நிறுவனங்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் கொடுத்துள்ளன. இது மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் எங்கள் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் எங்கள் நிறுவனத்தையும், ஓட்டுநர்களையும், ஆட்டோவில் உள்ள வசதிகளையும் பற்றி எங்களுக்கு எழுதும் பாராட்டுக் கடிதங்களே எங்களைப் பெருமைப்படுத்துகின்றன.
இதுவே எங்களது சேவைக்கு உந்துதலையும் அளிக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்தும் கூட எங்களது நிறுவனத்தைப் பாராட்டி கடிதங்கள் வந்துள்ளன. இதில் மறக்க முடியாத நிகழ்வு என்னவென்றால் 80 வயதிற்கும் மேற்பட்ட ஒரு முதியவர் எங்கள் ஆட்டோவில் பயணம் செய்தார். இதில் பயணிகளுக்காக வைத்திருந்த ஏற்பாடுகள் (குடிநீர், தினசரி பத்திரிக்கை, செல் சார்ஜர்) அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அது மட்டுமின்றி, இன்று அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுகிறார்கள் என்று பாராட்டி ஒரு பக்க அளவில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதைப்படித்த பின்னர் எங்களை மேலும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. மேலும் எங்கள் நிறுவன ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் எங்களுக்குத் தெரியப்படுத்தும்போது உண்மையிலேயே எங்கள் சேவை குறித்து மகிழ்வு கொள்கிறோம்.
மக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லாத ஏனைய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?
ஆட்டோவைத் தேடும் பணிகளுக்கும் பயணிகளைத் தேடும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ஒரு பாலமாக அமைக்கப்பட்டது தான் “மக்கள் ஆட்டோ”. அதனால் நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல. மாறாக ஆட்டோத் துறையை நவீனப்படுத்திடவும், ஆட்டோ துறைசார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் இலட்சியமாகக் கொண்டுள்ளோம். தனிப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் “வாடகையில்” நாங்கள் தவறியும் தலையிடுவதில்லை. எக்காலமும் மக்கள் ஆட்டோ ஸ்டான்டு கலாச்சாரத்திலிருந்து விலகி “கால் சென்டர்” மூலமாக செயல்படும். எனவே மற்ற தனிப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் எங்களின் நேர்மை மீதும், தொழிற் பக்தியின் மீதும் தவறான புரிதல் கொண்டிருக்க வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
பரந்து விரிந்த இவ்வுலகில் பல தொழில்கள், பல வேலைகள் இருக்கின்றன. வேலை தேடிவரும் என்று வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டாம். வெளியில் வேலையைத் தேடி நடைபோடுங்கள். வேகமாக ஓடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
படித்துமுடித்த, படிப்பிற்கேற்ற வேலைக்காக காத்திருங்கள். தாமதமானால் சுயமாய் தொழில் துவங்குங்கள். ஆனால் ஆண்டுக்கணக்கில் அல்ல. பல வேலைகளை கையில் வைத்திருங்கள். ஒன்று கைவிட்டாலும் மற்றொன்று உங்களை தூக்கிவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் எந்தச் சூழலிலும் எதிரிகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதனால் ஆயுள் குறையும். ஆனந்தம் தொலையும்.
எதிர்காலத் திட்டம்?
எங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்திட்டம் ஏராளமாக உள்ளது. முக்கியமாக இரண்டு. முதலில் கோவையை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, சேலம், மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு இந்த மக்கள் ஆட்டோ சேவையைக் கொண்டு வர வேண்டும்.
கணவனை இழந்த ஆதரவற்ற பெண்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பெண்களை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் இனம் கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சியளித்து பெண் ஆட்டோ ஓட்டுநர்களை உருவாக்க வேண்டும். அதன்மூலம் அவர்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் அளவுக்கு அவர்களை உருவாக்க வேண்டும் என்பதே.
சமுதாயப் பங்களிப்பில் தாங்கள்?
எங்கள் நிறுவனத்தின் மூலம் முழுக்க முழுக்க மக்களுக்கு குறைந்த செலவில் அரசு கட்டணத்தில் ஆட்டோ பயணங்களை பொதுமக்களுக்கு தொழில் நுட்பம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்புடனான சேவையாகவே இதைச் செய்கிறோம். ‘லயன்ஸ் கிளப்’, ‘ரோட்டரி கிளப்’ மற்றும் சமூகநல அமைப்புகள், ஆர்வலர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஒத்துழைப்புகள் கிடைக்கின்றது.
பொதுமக்களே ஏதேனும் விழாக்காலங்களில் எங்களை அழைத்து கௌரவிக்கிறார்கள். இது எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறோம்.
என்றும் உங்கள் நன்றிக்குரியவர்கள் இவர்கள் என்று சொல்ல விரும்புபவர்கள்…
நிதி தொடர்பாக எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தந்த கோவை, இருகூர் கனரா வங்கி கிளை வங்கிக்கு எங்கள் நன்றிகள். கோவை மாநகர காவல் துறைக்கும் எங்களது நன்றிகள். நேரம் காலம் பார்க்காது பணிபுரியும் அலுவலக ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றிகள்.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருபவர்கள் மக்கள். அவர்களை இந்த நேரத்தில் பெரிதும் மரியாதை செய்ய நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்டோ ரிக்ஷா துறையில் ஒரு புதிய மாற்றத்தை விரும்புவதை கடின உழைப்புடன் கூடிய ஆட்டோ ஓட்டுநர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கும் என்றென்றும் என் நன்றிகள்.
இந்த இதழை மேலும்