தீர்த்தகிரிதான் இவ்வரலாற்றின் நாயகன் தீரன் சின்னமலை. இந்த ஐந்துபேரும் அரண்மனைப் பள்ளியில் முறைப்படி கல்விகற்று வந்தனர். தீர்த்தகிரி ஆசிரியரிடம் என்றுமே பணிவாக நடந்து கொள்வான். ஆங்கிலேயர்களிடம் என்றுமே துணிவாக நடந்து கொல்வான். தமிழ் செய்யுட்களில் வீரச்சுவைப் பாடல்களை மட்டுமே சொல்லுமாறு ஆசிரியரிடம் கோரிக்கை வைப்பான். சிறுவன் சின்னமலையின் வீர உணர்வினைக் கண்ட ஆசிரியர் சங்க இலக்கியத்தில் இருக்கின்ற வீரம் பற்றிய பாடல்களையும், கதைகளையும், நிகழ்ச்சிகளையும் தீரனுக்குத் தத்ரூபமாகக் கற்றுத்தந்தார். தீரனும் மெய்சிலிலிர்க்க அவற்றைக் கற்றான்.
தொல்காப்பியப் புறத்திணை இயல், சேரன் செங்குட்டுவன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கரிகால் சோழன் போன்ற அரசர்கள் பற்றிய வீரத்தைப் பெரிதும் கேட்டு ரசிப்பான். மூத்தவர் குழந்தைசாமிக்கும், இளையவர் குட்டிச்சாமிக்கும் வீர, தீரப் பயிற்சிகளில் ஆர்வம் இல்லை. தம்பாக் கவுண்டர் என்றொரு பெயரையும் கொண்ட தீரன் சின்னமலை சிறு வயதிலேயே கல்வி கேள்விகளிலும், வாள் சண்டை, தடிச்சண்டை, வில்வித்தை, சிலம்பம், குதிரையேற்றம், தடி வரிசை, பிடி வரிசை, மல்யுத்தம், வாள் போர், சொட்டைப் போர் போன்ற வீர தீரச் செயல்களில் ஆச்சரியம் நிகழ்த்துபவனாக சிறந்து விளங்கினான். தீரன் சின்னமலை கரடி வித்தையில் வல்லவன்.
தமிழ்மீது தீரனுக்கு மிகுந்த உணர்வு இருந்தது. தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, தேவாரம், திருவாசகம் எனச் சங்ககால நூல்களைக் கற்றுத் தேர்ந்து தமிழ் உணர்வாளனாக விளக்கினான். இலக்கணத்தையும் திறம்படக் கற்றுத் தேர்ந்தார். கொங்கு மண்ணில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் அனைவரையும் பாராட்டி ஆதரித்துப் பரிசுகள் வழங்கினார். பூந்துறை அம்பிகாபதிப்புலவரின் புலமையைப் பாராட்டி பொற்காசுகளால் அவரைக் குளிப்பாட்டினார்.
கல்வி மற்றும் தமிழ் உணர்வால் பல தமிழ்க் கவிஞர்களைப் பாதுகாத்துப் பாராட்டி நாட்டுப்பற்றையும், மொழி உணர்வையும் வெளிப்படுத்தினான்.பூந்துறை அம்பிகாபதிப் புலவரிடம் முறையாக கல்வி கற்றான். புலவர் மீது தீரனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. பள்ளிப்பருவத்திலேயே தீர்த்தகிரி சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பரம்பரையில் சர்க்கரை என்பது பொதுப்பெயர். புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்து வந்ததால் சர்க்கரை எனச் சிறப்புப் பெயர் பெற்றார்கள். கல்வி, வாள்போர், வில்வித்தை, மல்யுத்தம், சிலம்பாட்டம், தடிவரிசை, குதிரையேற்றம், ஈட்டி எறிதல், மலையேற்றம், உடற்பயிற்சிகள், துப்பாக்கி சுடுதல், கயிறு ஏறுதல், குண்டு எறிதல், கவண் கல் வீச்சு போன்ற வீரவிளையாட்டுக்களை சகோதரர்கள் இருவரும் இளமையில் சின்னமலையுடன் ஆர்வமாகக் கற்றுவந்தனர். இப்போர்க்கலைகளை, முறைகளை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத்தேர்ந்தவர். இளைஞர்கள் அனைவரையும் கற்கச் செய்தனர். சாதாரண இளைஞர்களை தேசப்பற்றுள்ள இளைஞர்களாக மாற்றிக் காட்டினர். கொங்கு மண்டலத்தில் உள்ள ஊர்தோறும் பயிற்சிக் கூடங்கள் அமைத்து பயிற்சிகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் தீவிரமாக இதில் சேர்ந்தனர். அந்தப் படையின் மூலம் வழிப்பறித்திருடர்களையும், கொலை கொள்ளையர்களையும் அடக்கித் தடுத்து வந்தார்.
அரசாண்ட பரம்பரையில் பிறந்த தீர்த்தகிரி சாதாரண இளைஞனைப்போல் தோற்றமளிக்காமல், ஒரு அரச குமாரன் போலவும் அதைவிடத் திறன் வாய்ந்த ஓர் அதிசய இளைஞனாகவே காட்சியளித்தான். மாலை நேரங்களில் ஊர்த் திடலில் தன்னையொத்த இளைஞர்களோடு சிலம்புப்போட்டியில் ஈடுபடுவதும், வாள்வீச்சுப் போன்ற பல போட்டி நடத்துவதுமாக வீர தீரச் செயலில் மிகுந்த ஆர்வம் காட்டி எதிலும் முதன்மையானவனாகத் திகழ்ந்தான். மேலப்பாளையத்தில் உள்ள ஊர் கிணற்றை வேங்கை பாய்வதைப் போல் பாய்ந்து ஒரு புறத்தில் இருந்து மறு புறத்தை அடைவார். நாலுகால் பாய்ச்சலில் ஓடுகின்ற குதிரையில் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று ஏறி அமர்ந்து விடுவார். உண்டிவில்லால் ஒரு சிறு குறிப்பிட்ட இடத்தை எய்துவிடுவார். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, கணீர்க்குரல், தெளிவான பேச்சு, தெளிவான செயல், தொலைநோக்குப் பார்வை, துடிக்கும் கரங்கள், துள்ளுகின்ற மீசை, அநீதியை அழிக்கும் கோபம், நம் மக்கள் அனைவரிடத்திலும் அன்பு, மரியாதை எதையும் எதிர் கொள்கின்ற தோள்கள், போரைச் சந்திக்கத் துடிக்கும் வீர மார்பு என மாவீரனாக தோற்றத்தில் விளங்கினான். ஈட்டி எறிதல், வெடிசுடுதல், கவண் கல் எறிதல், குதிரையேற்றம், வில்- வாள்வீச்சு, சிலம்பம், மல்யுத்தம் என அரச பரம்பரைக்கே உரிய கலைகளைக் கற்பதிலேயே வல்லவராகத் திகழ்ந்தார். தீரனின் அண்ணன் குழந்தைசாமியும், கடைசித் தம்பியுமான குட்டிச்சாமியும் கல்வி கற்பதும், விவசாயம் பார்ப்பதும், தந்தைக்குத் துணையாக இருப்பதுமாக இருந்து வந்தனர்.
சின்னமலைக்கு அரண்மனைப் பள்ளியில் முறைப்படி கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. வீரம் செறிந்த தமிழ்ச் செய்யுள்களைக் கற்பதில் சின்னமலைக்கு அலாதிப் பிரியம். புறநானூற்றுப் பாடல்களில் வரும் வீரம் செறிந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்படும் சின்னமலை அவற்றில் மெய்மறந்து திளைப்பான். தன்னையே மறப்பான். மேலப்பாளையத்தில் இருந்த சிலம்பக் கூடம் ஒன்றில் சின்னமலை பயிற்சி பெற்றான்.
பயிற்சிக்குப் பின் சகோதரர்கள் மூவரும் குருவை மிஞ்சிய சீடர்கள் ஆகிவிட்டனர். கிணறுகளைத் தாண்டுவது, உண்டை வில்லால் துளையடிப்பது போன்றவற்றில் அவர்களுக்கு ஈடு இணையாருமில்லை.
ஊர்க்கிணற்றில் மகளிர் மண்குடங்களில் தண்ணீர் எடுத்துச் செல்லும்போது பெரியதம்பியும். கிலேதாரும் உண்டை வில்லில் சுட்ட களிமண் உருண்டைகளைக் கொண்டு துளை செய்வர். குடத்திலிருந்து நீர் வெளிவருவதற்கு முன்பே அத்துளையை பச்சைக் களிமண் உருண்டையால் சின்னமலை அடைத்து விடுவான். துளை செய்வது சாதாரணச் செயல்தான். ஆனால், நீர் கசியும் முன்பு அதை அடைப்பது செயற்கரிய செயல் அன்றோ? குறி தவறுதல் என்பது சின்னமலையிடம் என்றுமே இருந்ததில்லை. நல்ல அகலமுள்ள அந்த ஊர்க் கிணற்றை அலட்சியமாகத் தாண்டுவது தீர்த்தகிரியின் காலை நேரத்துப் பயிற்சியாக அன்று இருந்தது. அரைக்கிணறு தாண்டும் பழக்கம் இந்த வீரப் பிள்ளைக்கு ஒருக்காலும் இருந்ததில்லை! பின்னர் கிணற்றில் நீராடி அருகில் கொலுவீற்றிருந்த பெரிய பிள்ளையாரை பக்திச் சிரத்தையோடு வணங்குவார். மேலப்பாளையத்தில் ஊர்க்கிணறு ஊருக்குக் கிழக்கே இன்றும் உள்ளது. அதிக நீளம் அகலம் உடையது. அக்கிணற்றில் தான் அவ்வூர் மக்கள் தண்ணீர் எடுப்பர். புலிலிப்பாய்ச்சு, உண்டைவில் பயிற்சிகளை அக்கிணற்று மேட்டில் தான் தீரன் செய்து பழகினான்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தீரன் சின்னமலை அறிவில் சிறந்தவராக, தமிழ்ப்பற்றாளராக விளங்கியதோடில்லாமல் கடையெழு வள்ளல்களின் கொடைத் தன்மையை புரிந்து கொண்டவராகவும் விளங்கி எளியோருக்கும் கொடுத்து வள்ளலாகத் திகழ்ந்தார். சின்னமலை இளமை முதற்கொண்டே தங்கள் அரண்மனையை நாடி வருகின்ற நூற்றுக்கணக்கான புலவர்களுக்கு பொன், பொருள் வழங்கிப் பாராட்டி, அவர்களையும் மகிழச் செய்து தன் குடும்பத்தாரையும் ஆனந்தம் அடையச் செய்வார். தீர்த்தகிரி எங்கு சென்றாலும் அவனது இரு தம்பிகளாகிய பெரிய தம்பியும், கிலேதரும் கூடவே செல்வார்கள். அதே போல் தீர்த்தகிரியின் உற்ற நண்பனாக வேலப்பனும், தளபதியாக குணசீலனும்,கருப்பசேர்வையும் தொடர்ந்து செல்வார்கள்.
சின்னமலைக்கு முன் கொங்கு மண்ணில் அரசியல்
சங்க காலத்தில் வேளிர்களால் ஆளப்பட்டது கொங்கு நாடு. அப்போதே நாட்டுப்புறங்களில் இனக்குழுக் குடியரசு முறை செயல்பட்டு வந்தது. பின்னர் கங்கர்கள் சில காலம் இங்கு ஆட்சி நடத்தினர். இதன் வணிக வளத்தையும் இயற்கைச் செல்வத்தையும் கண்ட சேர சோழ பாண்டியர்கள் தொடர்ந்து கொங்கினைக் கைக்கொள்ளப் போரிட்டுவந்தனர்.
இடைக்காலத்தில் சோழப் பேரரசு கொங்கு மண்டலத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தது. பின்னர் பொன்னர் சங்கர் வழிவந்த கோனாட்டுக் கொற்றவர்கள் கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர் என்னும் பெயர்களில் இங்கு நிலையான ஆட்சியை அமைத்தனர். முகமதியர் படையெடுப்பால் தமிழகத்தில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. அதன் விளைவாகத் தமிழர் ஆட்சி அற்றுப் போய் விசய நகரப் பேரரசின் ஆட்சியும், முகமதியர் ஆட்சியும், மராட்டியர், தெலுங்கர் போன்றவர்களின் ஆதிக்கமும் தமிழகத்தில் காலூன்றின, வேரூன்றியன.
பிற்காலத்தில் வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் நிலையற்ற ஆட்சியால் சிதைந்து கிடந்த இந்த நாட்டில் சுரண்டல் ஆட்சி முறையை ஏற்படுத்த முற்பட்டனர். அவ்வகையில் கொங்குநாடு, மைசூர் மன்னர்களின் ஆதிக்கத்திலிருந்து ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்குட்பட்டது. விசயநகர ஆட்சிக்காலம் வரையிலும் கொங்கில் இனக்குழு ஆட்சியும், ஊராட்சி முறையும் சிறப்பாக நடந்து வந்ததை நூற்றுக் கணக்கான கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. “வெள்ளாள நாட்டோம்” “ஊரோம்” “ஊரும் ஊராளிகளும்” என வரும் கல்வெட்டுத் தொடர்கள் இவ்வுண்மையை உணர்த்தும். அவ்வாறே வணிகக் குழுக்கள் தமக்கெனத் தனிப் படையும் தனியரசும் கொண்ட “எறிவீரப்பட்டணங்களையும், அடிக்கீழ்த் தளங்களையும்” உருவாக்கித் தனித்த சுயாட்சியுடன் ஆண்டுவந்தனர். இத்தகைய உரிமையாட்சிமுறை முகமதியர், ஆங்கிலேயர் ஆதிக்க ஆட்சியால் அடியோடு மறைந்தது. விசயநகர மன்னர்கள் பாளையக்காரர்களையும், பட்டக்காரர்களையும் ஏற்படுத்தி இக்குடியாட்சிமுறை நசிந்திடக் காரணமாயினர். எனவே, நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்களைப் போலப் பாளையக்காரர்களும், பட்டக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்ததும் அவர்களுக்கிடையே ஒருங்கிணைந்த ஆட்சி முறை இல்லாமையும் அயலவர்கள் ஆதிக்கத்துக்கு வழிவிட்டது. இவ்வாறு அரசியலில் தனக்கெனத் தனித்த குடியரசு முறையைக் கொண்டு சிறந்து விளங்கிய கொங்கு மண் விசயநகரத்தாரால், முகமதியரால், ஆங்கிலேயரால் தனது தனிச்சிறப்பை இழந்து அடிமையாட்சி முறைக்கு முற்றிலும் அடிபணிய நேரிட்டது.
கொங்கு நாட்டில் மைசூர் மன்னர் ஆட்சி
விசயநகர ஆட்சிக்குப்பின் கொங்கு மைசூர் உடையார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அப்போது மைசூர் மன்னருக்கு உட்பட்ட திண்டுக்கல்லிலில் குதிரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த மாவீரன் ஐதர் அலிலி தன் திறமையாலும் தன் அறிவாலும், ஆற்றலாலும் மைசூர் உடையார் மரபு அரசரை கைப்பாவையாக்கி விட்டு மைசூர்ஆட்சியில் அமர்ந்து அரசாளும் உரிமையைத் தான் பெற்றான்.
அய்தர் அலியின் முகவராக இருந்த அதிகாரிகள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் குன்றத்தூர் எனப் புகழ் பெற்ற சங்ககிரிக் கோட்டையில் இருந்து வரிதண்டல் செய்து மைசூருக்கு கொடுத்துவந்தனர்.
குன்றத்தூர் சாவடியிலிலிருந்து கொங்குநாட்டில் அதிகாரம் செலுத்தி வந்தனர். கொங்கு மண்டலத்தில் பல பகுதிகளிலும் வரிவசூல் செய்துவரும் பணம், பொருள்கள், எல்லாம் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து சேரும். அங்கு தெளிவாகக் கணக்குப்பார்க்கப்பட்டு பின் மைசூர் சீரங்கப்பட்டணம் ஐதர் அலிலியின் தலைமையிலான அரசிற்குச் செல்லும்.
தீர்த்தகிரி தீரன் சின்னமலையாக உருமாறுதல்
தமிழகத்திலுள்ள பாளையக்காரர்கள், ஆங்கிலேயர் அதிகாரத்தின் கீழ் அடங்கியிருந்த நேரம் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்ட பின், பெரிய கிளர்ச்சிக்காரர்கள், போராளிகள் யாருமில்லை.
ஆனால் கொங்குநாடு மட்டும் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலில்லை. காரணம் அப்போது கொங்குநாடு மைசூர் திப்பு சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயருடன் மூன்றாம் மைசூர் போரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கொங்குநாடு மைசூர் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது.
1772ல் கொங்கு நாடு மைசூர் மன்னர் (திப்பு சுல்தானின் தந்தை) ஹைதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கொங்கு மண்ணின் வரிப்பணம் சங்ககிரிக் கோட்டை வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. மைசூர் அரசுக்காக வரி வசூல் செய்யும் தண்டல்காரன், கொங்கு சீமைக்கு மைசூர் சாம்ராஜ்யத்தின் திவானாக இருந்த மீராசாகிப் ஊர் தோறும் விவசாயிகளிடம் நிலவரியை வசூலிக்க பல்வேறு குழுக்கள் அமைத்திருந்தார். அந்த குழுக்களில் தாராபுரம், ஈரோடு, காங்கயம், மூலனூர், கோவை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து வரி வசூல் செய்து கொண்ட பணத்தை மூட்டையாக சுமந்து கொண்டு சங்ககிரிக் கோட்டைக்கு வரிப்பணத்தை எடுத்துச் சென்றனர். அதை அன்றொருநாள், சின்னமலை மற்றும் அவரது சகோதரர்கள் குதிரையுடன் அறச்சலூர் மலைக்குச் சென்று வேட்டையாடிவிட்டு மேலப்பாளையத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கும்போது குதிரை மேல் வளம் வந்த தீர்த்தகிரி சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் என்ற இடத்தில் அவர்களைப் பார்த்தான். மாலை நேரம் காங்கயம் சென்னிமலைச் சாலையில் சில குதிரைவீரர்கள் பெரிய மூட்டை முடிச்சுகளுடன் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். தீர்த்தகிரியின் கண்களுக்கு இதுவரை பார்த்தறியாத புதுக்குதிரைப்படைப் போர்வீரர்களைப் போல் தென்பட்டனர். குதிரையில் வந்த அனைவரும் புதியவர்களாகத் தென்படவே அவர்களைத் தடுத்து வழிமறித்து நிறுத்தினான்.
திடீர் என்று மின்னல் வேகத்தில் வந்த தீர்த்தகிரியின் இளம் குதிரை அவர்களை வழிமறித்துத் தடுத்து குறுக்கே நின்றது. அவர்கள் தீர்த்தகிரியின் தோற்றத்தையும், தோரணையையும், பேச்சையும், கட்டுடல் மேனியையும், கணீர் குரலையும், யாருக்கும் எதற்கும் எங்கும் அஞ்சாத அழுத்தமான பார்வையையும் கண்டு அரண்டுபோய், மிரண்டுபோய், பயந்துபோய் குதிரையைவிட்டு கீழே இறங்கி நின்றனர். அடுத்த சில விநாடிகளில் இங்கு என்ன நடக்கப்போகிறதோ என்கிற அச்சம் அவர்களது நடை, உடை, பாவனையில் நன்றாகத் தெரிந்தது.
நீங்கள் யார்? இதெல்லாம் என்ன? எங்கு செல்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? எனத் தீர்த்தகிரி தெளிவாகக் கேட்டான். ஐயா, நாங்கள் மைசூர் மகாராஜா ஐதர் அலி பகதூரின் பணி ஆட்கள். தாராபுரம் கெடியில் ஊராளி வேலாயுதக் கவுண்டரிடம் பணியாற்றுகிறோம். தென் கொங்கு நாட்டு வரிப்பணத்தை வசூல் செய்து சிரஷ்தார் வெங்கிட்டய்யன், அமல்தார் மம்முதலி சாகிப் ஆகியோர் கொடுக்க சங்ககிரி திவான் மீரா சாகிப் அவர்களிடம் கொடுக்கச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தன்னைப்பற்றி அறிமுகம் செய்தான்.
என் பெயர் சேனபாகம் சாலி சாகிப், என்னுடன் வருபவர்கள் கல்லய்யன், சின்னப்பன், ராமையன், வீரய்யன் ஆகிய போர்வீரர்கள் என்று தலைவன் சாலி சாகிப் அடக்கத்துடன் தெரிவித்தான். நம்மிடம் நாட்டை ஆளும் திறமையில்லையா? அறிவில்லையா? ஆண்ட பரம்பரையிலும், ஆண்டுகொண்டு இருக்கிற பரம்பரையிலும் வந்தவர்கள். மைசூர் அரசு நம்மை போர் செய்து போரில் வென்றா ஆளுகிறார்கள். பூந்துறை வாரணவாசிக்கும் தாரமங்கலம் கெட்டி முதலிகட்கும் ஏற்பட்ட போரில் இடையில் புகுந்து வஞ்சகமாகத்தானே கொங்குநாட்டை மைசூர் அரசன் பெற்றான். அப்படிப்பட்டவனுக்கு கொங்குநாட்டில் வரி வசூலிக்க என்ன உரிமை இருக்கிறது? மைசூரார் நமது நிலத்தில் உழுது பயிர் செய்தனரா? பயிர்களுக்கு நீர் பாய்ச்சினார்களா? நிலத்தைக் காவல்காத்தார்களா? அறுவடை செய்து களத்தில் தூற்றினார்களா? தாம்படித்தார்களா? ஏர் பூட்டினார்களா? உழவு ஓட்டினார்களா? காளைகளைக் கழுவினார்களா? கஞ்சிக்களயம் சுமந்தார்களா? களை எடுத்தார்களா? நாற்றுநட்டார்களா? வைக்கோல் சுமந்தார்களா? என்னதான் செய்தார்கள். எதுவும் செய்யவில்லை. கொங்குநாட்டை வரி என்ற பெயரில் சுரண்டும் நயவஞ்சகர்களுக்கு இனி இங்கு அனுமதியில்லை. கொண்டு செல்வதை கொடுத்துவிட்டு ஓடிப்போ. கொடுக்க மறுத்தால், தடுக்க நினைத்தால், இனி நான் பேச மாட்டேன். என்னுடைய வீரவாள்தான் பேசும். உங்கள் கழுத்து மீது வீசும் உன் தோல்வியை உலகம் பேசும்.
உழைத்தவர்கள் நாம், உண்பவர்கள் மைசூர்காரனா? எங்கே இருந்து கொண்டு எங்கே வந்து வரிவசூல் செய்வது. யாரிடம் வரிவசூல் செய்வது.
‘ஆளப்பிறந்த இனம் நாம். ஈராயிரம் ஆண்டுளாக நம்மை நாமே ஆண்டு வந்துள்ளோம். இப்போது நமக்கென்ன ஆளத்தெரியாமல் போய் விட்டதா? நாம் ஏமாந்த போது எத்தராய் நுழைந்த மைசூரானை இங்கு விட்டு வைப்பதே தவறு. நமது மக்கள் உழைப்பில் வந்த நமது நாட்டு வரிப்பணம் அயலவனுக்குச் செல்வதா? கூடாது! கூடாது!! கூடவே கூடாது அந்தப் பணத்தை இப்படிக் கொடு! இல்லையேல் உங்கள் தலைகள் உருளும்!“ என்றார் தீர்த்தகிரி.
கொங்கு நாட்டில் வரி வசூல் செய்து அதை மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்வதை பெரும் அவமானமாகக் கருதி தண்டலைத் தடுத்து நிறுத்தினார்.
மைசூர் வீரர்கள் சாமி நான் மைசூர் மன்னனின் ஊழியன். நாங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அடிமை வேலை செய்கின்றோம். கொங்கு நாட்டில் வரி வசூல் செய்த பணம் எங்கே என்று சங்ககிரியில் உள்ள அதிகாரி கேட்டால் நாங்கள் என்ன சொல்வது என்று தண்டல்காரன் அடக்கமாகக் கேட்க, அதற்குத் தீர்த்தகிரியோ தான் நின்ற வழியின் இருபுறமும் உள்ள மலைகளை இருகைகளாலும் வீரனுக்கென்று உள்ள ஸ்டைலில் சுட்டிக்காட்டி, சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை பிடுங்கிக் கொண்டான் என்று சொல் என்றான். அவனுக்கு வலிமையிருந்தால் போர் முளையில் சந்திக்கச் சொல் என்று சீறினார்.
அன்றிலிருந்து தீர்த்தகிரி தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான். இந்த வாசகம்தான் ஹைதர் அலியின் மகன் திப்புவிற்கு ரொம்பவும் பிடித்திருந்தது. கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல. நாங்கள் யாருக்கும் வரி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெரும் ஆவேசத்துடன் வீரமுழக்கம் செய்தான் தீரன் சின்னமலை.
மைசூர் அரசுக்கு சென்ற வரிப்பணம் கொங்கு மண்ணைச் சேர்ந்த ஒரு இளைஞன் பிடுங்கிக் கொண்ட செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. செய்தியறிந்த மைசூர் மன்னர் ஹைதர் அலி 19வயது இளைஞன் அரசாங்க வரிப்பணத்தை மடக்கிப் பிடுங்கிக் கொண்டானா என ஆத்திரமடைந்தார். தீர்த்தகிரி சொன்ன அந்த சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையே ஒரு சின்னமலை என்ற வார்த்தை மைசூர் மன்னரின் காதுகளுக்கும், அவரது மகன் திப்பு சுல்தானுக்கும், அவரிடம் இருந்த அதிகாரிகள் அத்தனை பேருக்கும், கொங்கு நாடெங்கும் ஏகமாக தொடர்ந்து விடாமல் எதிரொலித்துக் கொண்டே இருந்தது..சின்னமலையின் வீரவரலாற்றில் அன்று முதல் இன்று வரை பெரும் புகழ் அடைந்துள்ளது.
சின்னமலையின் இந்த வீர முழக்கம் கொங்குநாட்டு இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. வேகமாக இருந்தது. ஆனால் ஏராளமான இளைஞர்கள் சின்னமலையின் போர் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தனர். தடுத்துப் பிடுங்கிய மைசூர் அரசின் வரிப்பணமாகிய பணம், பொருள், காசு செல்வங்களை தாய்நாட்டு ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தான்.
மன்னிப்பு கேட்டுவிட்டு வீரர்கள் உயிர்பிழைத்ததே அதிசயம் என்றெண்ணி ஓடிவிட்டனர்.
இச்செய்தி கொங்கு நாடெங்கும் வேகமாக காட்டுத்தீ போல் அணையாமல் பரவியது. நாடெங்கும் சின்னமலை, சின்னமலை என்பதே பேச்சாக இருந்தது. மைசூர் அரசாங்கத்திடம் இருந்து நம்மைக் காப்பாற்ற ஒருவன் மண்ணில் பிறந்துவிட்டான் என்று குடிமக்கள் குதூகளித்தனர்.
தேசப்பக்தி மிகுந்த சுப்ராயக்கவுண்டர் சின்னமலையை நேரில் அழைத்து வாழ்த்தினார். அதோடு தன் மகளை பெரியதம்பிக்கு மணம் முடிக்கவும் விருப்பப்பட்டார். பெரிய தம்பியும், அவர் மகளை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
“சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் – இனி – அஞ்சிடோம்
எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? – தெய்வம் பார்க்குமோ?”
To buy this book click below.