ஆதலினால் நடனம் செய்வீர்
ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை கோயில்களிலும், அரசவைகளிலும் பாதுகாக்கப்பட்டு வந்த பரதநாட்டியம் கடந்த பல ஆண்டுகளாக புதுப்பொலிவுடன் பல மாற்றங்களைக் கண்டு ஒரு கலை என்பதைத் தாண்டி ஒருவரை ஆரோக்கியமாக வைக்க உதவும் அருமருந்தாக இன்று மாறி இருக்கிறது. பரதம் என்று மட்டுமல்ல பல மேற்கத்திய நடனங்களும் கலை வடிவங்களைத் தாண்டி மனிதனின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்களிப்பாக இன்று மாறிவிட்டது.
இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி என்று பெரிய நகரங்களில் நடனத்தைக் கற்றுக்கொடுக்க ஏராளமான நடன ஸ்டுடியோக்கள் இருக்கின்றன. இந்த ஸ்டுடியோக்களில் வயது வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் குடும்பத்தலைவிகள் வரை நடனம் கற்றுக்கொள்கிறார்கள். “பரதம் எனது மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் குறைத்து எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது…வாரத்தின் இறுதி நாட்களில் நடக்கும் நடன வகுப்புகளுக்கு செல்ல மிகவும் விரும்புகிறேன். அந்த இரண்டு நாள் வகுப்பு எனக்கு ஒரு வாரத்திற்கான எனர்ஜியைத் தருகிறது. சந்தோசத்தையும், மன நிம்மதியையும் தருகிறது” என்கிறார் 38 வயதான இல்லத்தரசி ஆனந்தி.
“பரதமானது மாணவர்களின் கற்பனை வளத்தைப் பெருக்குவதற்கும், ரசனை, ரசிப்புத்தன்மை ஆகியவற்றை விருத்தி செய்து கொள்வதற்கும் உதவுகிறது. இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு செயல்படுவதற்கும், நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றை பேணப்படுவதற்கும் இந்த கலை உதவுகிறது” என்று கூறும் கல்லூரி மாணவி ஜான்சி பரதத்துடன் மேற்கத்திய நடனமான ஜூம்பா, சல்சா போன்ற நடன வகுப்புகளுக்கும் செல்கிறார்.
“நான் நடனம் கற்றுக்கொள்வது மற்றவர்கள் முன் ஆடிக்காட்டுவதற்கு அல்ல. நடனத்தின் மூலம் புதிய சிந்தனைகள், புதிய எண்ணங்கள், புதிய கருத்துக்கள், கற்பனைகள் என்று வெளிப்படுத்தவும், எனது ஆரோக்கியத்திற்காகவுமே கற்றுக்கொள்கிறேன்” என்று கூறும் சிந்து, மனிதனிடத்தில் இயல்பாகவே அமைந்துள்ள மென்மையான உணர்வுகளை எழுச்சி பெற செய்யும் கருவியாக இருக்கும் நடனத்தைக் கற்றுக்கொள்வதால் சகிப்புத்தன்மை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது என்கிறார்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடனம் கற்றுக்கொள்ளும் காயத்ரி, “நடனம் கற்றுக்கொள்வதால் உடல் அசைவு ஏற்பட்டு, அதன் மூலம் மனம் சுதந்திரம் அடைகிறது. இன்றைய உலகில் பெரும்பான்மையான பெண்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலிலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அத்தகைய பெண்களிடம் மனத்தடைகள் அதிகம் இருக்கின்றன. அத்தகையவர்கள் நடனம் கற்றுக்கொண்டால் உடல் அசைவுகள் ஏற்படும். அதன்மூலம் அவர்களுக்கு ஒருவகையான நிவாரணம் கிடைக்கிறது” என்று தன்னுடைய நடன அனுபவத்தைக் கூறுகிறார் 38 வயதான இல்லத்தரசி சரோஜினி.
இன்று பெற்றோர்களும், மாணவர்களும் மதிப்பெண்கள் நோக்கி ஓடிக்கொண்டிருப்பதால், உடல் ரீதியான செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிவிட்டன என்றே கூறலாம். இத்தகைய மாணவர்களுக்கு நாளடைவில் மன அழுத்தம் ஏற்படும் நிலை உள்ளதால், மாணவர்களுக்கு நல்ல பொழுது போக்காகவும், மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தைக் காக்கும் அருமருந்தாகவும் நடனத்தைப் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.
மாணவர்கள், குடும்பத்தலைவிகள் என்று பிரபலமடைந்து வரும் நடன வகுப்புகளை நோக்கி இளைய தலைமுறையும் சென்று கொண்டிருக்கிறது.
ஹிப் ஹாப், சல்சா, ஜூம்பா என்று மேற்கத்திய நடன வகுப்புகளை நோக்கி அதிகமாகச் செல்லும் இளைய தலைமுறை, “இசைக்கேற்றபடி நடனமாடுவதால் மனமும், உடலும் ஒருசேர புத்துணர்ச்சி பெறுகிறது. மன அழுத்தம், கவலைகள் ஆகியவற்றில் இருந்து தங்களைத் தக்க வைக்கிறது இந்நடனங்கள்” என்று கூறுகிறார்கள்.
ஜூம்பா என்று அழைக்கப்படும் தென் அமெரிக்க நடனத்தைக் கற்றுக்கொள்ளும் 25 வயது இளைய தலைமுறையைச் சேர்ந்த அசோக், “இவ்வகை நடனங்கள் மிகவும் எளிது. எந்த வயதிலும் இதைக் கற்றுக்கொள்ளலாம். உடல் பயிற்சியில் ‘ஏரோபிக்ஸ்’ என்று சொல்லப்படுவதற்கு இணையாக இந்த ஜூம்பா நடனம் அமைந்திருக்கிறது. உடல் ஃபிட்னஸாக இருக்க விரும்பும் யாவரும் இந்த நடனத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்கிறார்.
மன அழுத்தத்திற்கு அதிகமாக ஆட்படும் கணினி சார்ந்த பணியில் இருக்கும் கார்பரேட் நிறுவனப் பணியாளர்களுக்கு தன்னம்பிக்கை தரும் சுயமுன்னேற்ற பயிலரங்கைப் போலவே நடன வகுப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.
ஒருவரின் கற்பனைத் திறன், சிந்தனை, விருப்பம் ஆகியவை பல்வேறு உளவியல் உள்ளடக்கங்களில் அடங்கியிருப்பதால் இத்தகைய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு புத்துணர்வைத் தரும் ஜூம்பா போன்ற நடன வகுப்புகளை ஏற்பாடு செய்து தருகிறது. “இத்தகைய நடன வகுப்புகளில் கலந்து கொள்வதால் சுயமதிப்பு அதிகரிப்பதுடன், பேசும் திறனும் அதிகரிக்கிறது” என்று கூறும் விமல் மனச்சோர்வு, மன அழுத்தம், எதிர்மறை மனப்பாங்கு, பயம் போன்றவை ஏற்படுதில்லை என்கிறார்.
ஆரோக்கியத்திற்காக நடனம் கற்றுக்கொள்ளும் இவர்களுக்கு மத்தியில் ஜாலிக்காகவும், நடனம் கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு இருக்கிறது. “வாரத்தில் ஆறு நாட்களும் வேலை, வேலை என்று இருப்பதால் ஒரு ரிலாக்ஷேசனுக்காக நடனம் கற்றுக்கொள்கிறேன். ஜாலிக்காகக் கற்றுக்கொள்ளும் நடனம் உடலுக்கு வலுவையும், மனதுக்கு உற்சாகத்தையும் தருகிறது” என்கிறார் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிவிட்டு வாரத்தின் இறுதி நாட்களில் மேற்கத்திய நடனத்தைக் கற்றுக்கொள்ளும் பிரான்சிஸ்.
இப்படி கலையைத் தாண்டி உடல் ஆரோக்கியமாக மாறிவிட்ட நடன வகுப்புகளுக்கு இன்று நகரங்களில் பல ஸ்டுடியோக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாதம் 800 – 1000 ரூபாய் வரையும், மேற்கத்திய நடனங்களுக்கு ஏற்ப 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாய் வரை மாதம் ஒன்றுக்கு என்றும் கட்டணம் நிர்ணயித்துள்ள நடன ஸ்டுடியோக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக கடந்த சில ஆண்டுகளாக இருந்தது மாறி சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இன்று பெருகி நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டுடியோக்களாக வளர்ந்து வருகின்றன.
நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவும் நடன வகுப்புகளுக்கும் நாமும் சென்று ஆரோக்கியத்தைப் பேணுவோம்.
ஆரோக்கியத்தைக் காக்கும் நடனம்:
பரதம் மட்டுமின்றி ஹிப் ஹாப், சல்சா, ஜூம்பா போன்ற மேற்கத்திய நடன வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இத்தகைய வகுப்புகளுக்கு வயது வித்தியாசம் இன்றி மக்கள் சென்று கற்றுக்கொள்கிறார்கள்.
சிறந்த உடல் பயிற்சியாதலால் நல்ல உடற்கட்டையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.
மன அழுத்தம், மனச்சோர்வு, எதிர்மறை எண்ணம், பயம் ஆகியவற்றைக் களைகிறது.
சுய மதிப்பை அதிகரித்து, தன்னம்பிக்கையை மிளரச் செய்கிறது.
புதிய சிந்தனை, கருத்துகள், புதிய எண்ணங்கள், கற்பனைகள் போன்றவற்றை வெளிப்படுத்த உதவுகிறது.
0 comments Posted in Articles