– 1994 – July | தன்னம்பிக்கை

Home » 1994 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    நல்ல எண்ணங்கள்

    நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் மட்டுமே என்றென்றும் நலமாக வாழ்கின்றார்கள். அவர்களின் முகத்தில் புன்னகையும் பொலிவும், கலையும், கலகலப்பும் மின்னும் மிளிரும். நல்ல எண்ணமுடையவர்கள் வாழ்க்கையில் ஒளி மயமாகப் பவனி வருவார்கள். ஏனெனில் தூய எண்ணங்கள் நிறைந்த இதயத்தில் தீய சிந்தனைகள் உதயமாவதில்லை.

    “எண்ணம்போல் வாழ்வு” இதுதான் உலக நியதி. நல்லன எண்ணுபவர்கள் நல்லன அடைவார்கள். தீயன எண்ணுபவர்கள் தீமையைத் தழுவுவார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் அதையே அறுவடை செய்வான்.

    “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பது வள்ளுவம் நல்ல எண்ணம் இருந்தால் நானிலத்தையே வென்று வாகை சூட முடியும். உயர்ந்த எண்ணமுடையவர்களுக்கு அழிவில்லை உணர்வு எப்போதும் உண்டு.

    நல்ல எண்ணமுடையவர்கள் சொல்வது பலிக்கும். நல்ல எண்ணங்கள் வாழ்வில் நலிவைத் தராது. நாடே போற்றும் நற்புகழ் எய்த அது வகை செய்யும்.

    எண்ணங்கள் தான் உலகை ஆளுகின்றன. மனம்போல் வாழ்வு என்பத எண்ணம் போல் வாழ்வு என்பதின் மாற்று வடிவம். உயர்ந்த எண்ணங்கொண்டவர்கள் உயர்வடைவார்கள். அது அல்லாதோர் அதன் எதிர்விளைவையே ஆட்கொள்வர்.

    “நல்லன எண்ண வேண்டும்” என்பான் பாரதி. “நல்லன எடுத்து அல்லன விடுத்தல் வேண்டும்” என்பார் அறிஞர் அண்ணா.

    தினசரி காலை எழுந்தவுடன் இரண்டு கைகளையும் கூப்பி இறைவா, “இன்று நான் சந்தோசமாக இருப்பேன்” என்று மூன்று முறை உங்கள் எண்ணத்தை வெளியிட்டால் அந்த நாள் முழுவதும் நீஙகள் சந்தோசமாக இருப்பீர்கள். இது நடைமுறையில் கண்ட உண்மை.

    எந்த லட்சியத்தை நாம் அடைய விரும்புகின்றோமோ அதையே மீண்டும் மீண்டும் எண்ணினால் நிச்சயமாக அக்காரியம் கைகூடும்.

    நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் சரி நம் எண்ணத்தில் அது பதிந்திருந்தால் அதை நாம் அடைய முடியும்.

    நாம் தான் நமது எண்ணம். நமது எண்ணம் தான் நாம். தீதும் நன்றும் பிறர் தர வராது. நம் உயர்வுக்கும், நம் தாழ்விற்கும் நாம் தான் காரணம். ஆம், நம் எண்ணந்தான் காரணம்.

    ஆசை, விருப்பம், நினைவு, எண்ணம், எதிர்பார்ப்பு, நோக்கம், லட்சியம் இவைகள் ஒரே மாதிரி தோன்றினாலும் வெவ்வேறு சூழலில் பயன்படுத்த வேண்டியன. இவைகளுக்கு எதிர்ப்பொருளும் உண்டு. பேராசை பெரு நட்டம்: கெட்ட விருப்பம் சங்கடம் தரும். கெடுவான் கேடு நினைப்பான். தீய எண்ணம் அழிவைத் தழுவும்.

    நல்ல எண்ணம் மரணத்தைக் கூட மண்டியிட வைக்கும். அதன் வரவைக் கூட தள்ளிப்போட வைக்கும்.

    ஆசை, களவு, கோபம், வெறுப்பு, விருப்பு, மகிழ்ச்சி கவ செயல்களுக்கு நம் எண்ணம், நம்பிக்கை தான் காரணம்.

    நம் எதிர்பார்ப்பு, ஆசைகள் நிறைவேறாவிட்டால் கோபம் வருகிறது. எண்ணம் ஈடேறாவிட்டால் களவு செய்யவும் பொய் சொல்லவும் மனது துணிகிறது.

    நினைத்ததைச் சாதிப்பதற்காக விதிகளை மீறி முறை தவறி குறுக்கு வழியில் ஆதாயம் தேட ஆசைப்படுகிறது மனம்.

    அருள்மிகு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளுரையை நினைவு கூறுவோம்.

    “தீபத்துக்கு நல்லெண்ணெய் போன்றது, உலக வாழ்வுக்கு நல்லெண்ணம்.

    நல்லெண்ணெய் இல்லாவிட்டால் திரி எரிந்துவிடும். நல்லெண்ணம் இல்லாவிட்டால் மனிதர்களுக்கும் எண்ணெய் இல்லாத் திரியின் கதிதான் நேரும்.

    நல்லெண்ணெய் வற்றும் நல்லெண்ணமோ வற்றாத அமுத ஊற்று”.

    தவத்திரு சீதாராம சுவாமிகள் கூறுகிறார், உங்களது ஒழுக்கமே உங்களது விதியை உருவாக்குகிறது. எனவே விதி என்பது உங்களது சிருஷ்டியேயாகும்.

    நீங்களே தான் விதியை உண்டாக்கியிருக்கிறீர்கள். அந்த விதியை உயரிய எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும், நல்ல சிந்தனைகளாலும் உங்களால் மாற்றியமைக்க முடியும்.

    “நான் சர்வ வியாபியான பிரமன்” என்று எண்ணுங்கள்.

    அங்ஙனமே நீங்கள் ஆகிவிட முடியும் இதுவே ஒப்பற்ற தர்ம நியதி.

    எந்த செயலும் மூன்று விதமான விளைவை ஏற்படுத்துகின்றன.

    அ. அது உங்களுக்கு அதற்குரிய பலனை அளிக்கிறது.
    ஆ. அது உங்களது சுபாவத்தையும் தாங்கி நிற்கிறது.
    இ. உங்கள் மனதில் அது ஒரு பதிவை ஏற்படுத்திச் செல்கிறது.

    இந்த மனப்பதிவு திரும்பத்திரும்ப அந்தச் செயலைச் செய்ய உங்களைத் தூண்டி நிற்கும்.

    அந்த மனப்பதிவு ஒரு எண்ண அலையாக உருக்கொண்டு வேலை செய்யும். ஒரு செயல் வெளியுலகிலும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது.

    எண்ணங்களே உங்களது தோற்றத்தை உருவாக்குகின்றது. எனவே நல்ல எண்ணங்களைக் கொண்டு சிறந்ததோர் தோற்றத்தை உருவாக்க முடியும்.

    மனம் சதா உயரிய எண்ணங்களில் விளங்கினால் உங்களது செயல் பிறரால் மெச்சக்கூடிய அளவுக்கு அமையும்.

    எனவே நல்ல எண்ணம் உடையோர் தோல்வி கண்டு துவளுவதில்லை. வெற்றிகண்டு குதிப்பதில்லை. இன்றில்லையேல் நாளை நடக்கும் என்ற அபார நம்பிக்கையில் செயல்களில் ஈடுபடுவர். வாகை சூடுவர்.

    நல்ல எண்ணமே நல்வாழ்வின் திறவுகோல். நல்ல எண்ணமுடையோரின் முகம் முதுமைக்காலத்திலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். முதுமைக் கோடுகள் தலைகாட்டாது.

    “நல்லன எண்ணுவோம்Ð நலமாக வாழ்வோம்!”

    தணியாத ஆர்வத்தை உருவாக்குங்கள்

    தொழிலதிபருக்கு அறுபத்தைந்து வயது. அதிகாலை நான்கு மணிக்கே விழித்தெழுகிறார். சிறிது நேர உடற்பயிற்சிக்குப் பிறகு தன்னுடைய வேலைகளைத் தொடங்குகிறார். இரவு 10 மணி வரை சோர்வில்லாமல் செய்கிறார். சந்திப்பவர்களிடம் புன்முறுவலுடன் பேசுகிறார். நடக்கும்போது அவருடைய வயதிற்கேற்ற தளர்வு இல்லை. அவர் உழைக்கும் நேரத்தைக் கூட்டினால் ஒரு வாரத்திற்கு, நூறு மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்கிறார். அவருடைய நிறுவனங்கள், கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அவரது நிறுவனத்தில் முதலீடு செய்ய பங்குதாரர்கள் மேன்மேலும் கூடுகின்றனர்.

    இத்தனை சிறப்புமிக்க அவரிடம் முக்கிய காரணம், அவருடைய இடைவிடாத ஆர்வமே.

    பொதுவாக எல்லா மனிதர்களிடமும் ஆர்வம் இருக்கிறது. பலரிடம் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கிறது. பின் போய்விடுகிறது. அந்த நேரத்தில் மட்டுமே உற்சாகமாக இருக்கிறார்கள். இன்னும் சிலரிடம் சில நாட்கள் ஆர்வம் இருக்கிறது. பிறகு குறைந்துவிடுகிறது. ஒரு சிலரிடம் மட்டுமே தணியாத ஆர்வம் பல வருடங்களுக்கு மேலாக நீடித்து வளர்கிறது. அவர்களே சாதனையாளர்களாக உருவாகிறார்கள்.

    குழந்தைப் பருவத்தில் எல்லாவற்றிலும் ஆர்வமுடன் இருக்கிறோம். வளரும்போது, வாழ்க்கையில் உண்டாகும் சோதனைகள், தோல்விகள், வெறுப்புகள் இவைகளால் ஆர்வம் குறைந்துவிடுகிறது. இளம் வயதின் ஆர்வத்தை குறையவிடாமல் மேன்மேலும் பெருக்கி, அதை இறுதிவரை வைத்துக் கொள்பவர்களை என்றும் இளமையானவர்கள் எனலாம்.

    அமெரிக்காவின் மாபெரும் இரும்பு தொழிற்சாலையின் நிறுவனர் ஆன்ரூ கார்னஜீ. அவர் தன் நிறுவனத்திற்கு சார்லஸ் ஸ்க்வாப் என்பவரை நியமித்தார். அவருக்கு பல கோடி டாலர்களை சம்பளமாகக் கொடுத்தார். உலகிலேயே அதிக சம்பளம் பெற்ற மனிதராக ஸ்க்வாப் கருதப்பட்டார். அவருடைய திறமையின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள ஆர்வ உணர்வுகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை ஊக்குவிப்பது தான் என்றார். ஸ்க்வாப், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை திறமையாக நிர்வகித்தார். பிற மனிதர்களின் ஆர்வத்தை வளர்த்து அதனால் உலகிலேயே பெரிய நிறுவனமாக்கிய பெருமை அவருக்கு உண்டு.

    மனிதன் உயிர்வாழ தண்ணீரும், ஆக்ஸிஜனும் அவசியம். அதைப்போல, சாதனையாளர்களாக-திறமையாளர்களாக உருவாக – தணியாத ஆர்வம் மிக அவசியம்.

    ஆர்வமுடன் செயல்படுபவர்கள் உடல் வலிமை, மன வலிமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆயுள் அதிகம். இவர்களிடம் துணிவு, தன்னம்பிக்கை, பொறுமை போன்ற நற்குணங்கள் நிறைய இருக்கும், சந்தேகம், பயம், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள் இருப்பதில்லை. நோபல் பரிசுபெற்ற எட்வர்டு ஏப்பில்டன் எழுதுகிறார்: வெற்றியின் ரகசியம் தணியாத ஆர்வமே; பல ஆண்டுகள் படித்து பெறும் பட்டப்படிப்பை விட உயர்வாக ஆர்வத்தை மதிக்கிறேன் என்றார்.

    நவீன தொழில் மேதையான கிறிஸ்துவர், ஆர்வமிருந்தால், மனிதன் எதையும் சாதிக்க முடியும் என்கிறார்.

    வாழ்க்கையில் எல்லாரும் முன்னேற்றத்தைத்தான் விரும்புகிறோம். இதுநாள் வரை தோல்வியடைந்தவர்கள், மனமுடைந்தவர்கள், வாழ்க்கையில் பிடிப்பில்லாதவர்கள் ஆர்வத்தைப் பெற முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.

    ஒரு பெரிய தாளை எடுத்துக்கொண்டு, அதில் நமக்குள்ள நிறைகளை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டுப் பாருங்கள் என்கிறார்.

    1. உடலுக்குள்ள நடக்கும் ஆற்றல்
    2. பேசும் ஆற்றல்
    3. பார்வை
    4. படிப்பு
    5. வீடு
    6. கணவன் – மனைவி
    7. குழந்தை
    8. வேலை
    9. –
    10. –

    இப்படி சிறியவற்றிலிருந்து நமக்குள்ள எல்லா நிறைகளையும் வரிசைப்படுத்தினால், எந்த மனிதனானாலும் பிரமிக்க முடியும் அளவிற்கு பட்டியல் இருக்கும் என்கிறார்.
    நாம் நமக்குள்ள குறுகிய கண்ணோட்டத்தால் இவைகளை உணர மறந்துவிடுகிறோம். உணரும்போது தன்னிறைவும், ஆர்வமும் தாமாகப் பெருகும்.

    இதோ… உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை

    காலம் பேராற்றல் வாய்ந்தது. காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகின்றவர்களும் பேராற்றல் வாய்ந்தவர்களாக உயர்கிறார்கள்.

    காலம் ஒரு நதிபோல முன்னோக்கி நடந்து கொண்டே இருக்கின்றது. இயங்கிக் கொண்டிருப்பதே காலத்தின் இயற்கை.

    ‘காலம் ஒருபோதும் நிற்பதில்லை. அதுதான் நடந்து வந்த பாதையில் ஒரு போதும் திரும்பச் செல்வதுமில்லை’ (Time never stops and never retracts its steps – Herbert Casson).
    நாம் இந்த உலகில் எத்தனைக் காலம், எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அந்தக் கணக்கு நம்மிடமில்லை. ஆனால் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்று விரும்புவது நம்மைப் பொறுத்தது.

    நம் வாழ்நாளைக் கூட ஆண்டுகளாகக் கருதாமல் நாட்கணக்கில் கணக்கிட்டுப் பாருங்கள். காலம் பற்றிய சரியான உணர்வு மேலும் துல்லியமாகும். உலகின் சராசரி வாழ்நாள் இன்றைய கணக்குப்படி 77 ஆண்டுகள் தாம். இந்தியாவின் சராசரி வாழ்நாள் 56 ஆண்டுகள்.

    நாம் உலக சராசரி ஆண்டைவிடச் சற்றுக் கூடுதலாக 80 ஆண்டுகள் வரை வாழ்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்படி விரும்புவதில் தவறே இல்லை. இது நியாயமான விருப்பமாகும். அதற்குரிய நாட்கள் 29,200. முப்பதாயிரம் நாட்கள் என்றே வைத்துக் கொள்வோம் (நூறண்டு வாழ விரும்புகின்றவர்களும் அதை நாட்கணக்கில் பார்த்தால் 36,500 நாட்கள் தாம்).

    இதுவரை, 20 ஆண்டுகளைக் கழித்த இளைஞர்கள் வாழ்நாளின் கால் பாகத்தை முடித்துக் கொண்டார்கள். 40 வயதுடையவர்கள் வாழ்நாளில் பாதியை முடித்துவிட்டார்கள்.

    இப்போது 40 வயது உடையவர்களுக்கு இனி இருப்பதோ 15,000 நாட்கள் தாம் (அவர்கள் 80 ஆண்டுவரை உயிரோடு இருந்தால்) கழிந்த 15,000 நாட்களில் செய்தது என்ன? இனிச் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணிப் பார்த்தால், நாம் இனி இருக்கின்ற நாட்களிலாவது விரைவாகச் செயல்பட வேண்டும் என்ற உணர்வு பிறக்கும். சாதனைகளை நிகழ்த்தவில்லையாயினும் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் பிறக்கும். வேண்டாத விவகாரங்களில் தலையிடாமல் நாம் செய்ய வேண்டிய காரியங்களில் தீவிரமாக ஈடுபடும் ஆர்வம் பிறக்கும்.

    இப்போது, இனி நீங்கள் வாழ விரும்புகிற நாட்களை உங்கள் விருப்பப்படி கணக்கிட்டுக் குறித்துக் கொள்ளுங்கள்.

    இப்படி எண்ணிப்பாருங்கள். ஏராளமான பணச்செலவு செய்து நியூயார்க் அல்லது லண்டன் அல்லது பாரீஸ் செல்கிறோம். இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு தங்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. மீண்டும் அந்த நாட்டிற்கு வரும் வாய்ப்பே இல்லை. எப்படிச் செயல்படுவோம்?

    அந்த இரண்டு நாட்களையும் கொஞ்சமும் வீணடிக்காமல் கூடுமானவரை பார்க்க வேண்டிய இடங்களைப் பார்ப்பது, சந்திக்க வேண்டியவர்களைச் சந்திப்பது, வாங்க வேண்டிய பொருள்களை வாங்குவது, உரிய நேரத்தில் விமான நிலையத்திற்கு வர நேரம் ஒதுக்குவது, இப்படிச் சரியாகத் திட்டமிட்டு, ஒருநிமிடம் கூட வீணடிக்காமல் செயல்படுவோம் அல்லவா? அந்த வகையில்தான் நாம் எந்த இடத்தில் இருந்தால் எந்தப் பணியைச் செய்தாலும் ஒவ்வொரு நாளையும் ஒரு தேர்வு எழுதும் மாணவனைப் போலத் திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

    ஒரே ஒரு முறையே கிடைப்பது இந்த மனித வாழ்க்கை. இத்தகு வாழ்க்கையை நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்நாளை எவ்வளவு திறம்படப் பயன்படுத்த வேண்டும்? ஒவ்வொருவரும் தீவிரமாக எண்ணிப்பார்த்துச் செயல்பட வேண்டும்.

    நாம் பிறக்கும்போதே நம் வாழ்நாள் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்ற கருத்தை நாம் ஒத்துக்கொள்வதில்லை. இன்றைய அறிவியல் முறைப்படி நமது உணவுப்பழக்கங்கள், உடலைப் பேணும் முறை-தொழில் முறை – சுற்றுப்புறச் சூழல் – சாலை விபத்துக்கள் முதல் வாழ்க்கை விபத்துக்கள் வரையான விபத்துக்கள் இப்படி ஒரு மனிதனின் முடிவுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இத்தனைக்கும் மேல் பாதுகாப்பாக வாழ்ந்தாலும் முதுமையை – முடிவை – தவிர்க்க முடியாது.

    உடல் நலத்தோடு – ஓடி ஆடி, நடையோடு பிறருக்குப் பாரமாக இல்லாத வகையில் எண்பது ஆண்டுகள் வரை வாழலாம். விதிவிலக்காகச் சிலர் நூறு அல்லது அதற்கு மேலும் சில ஆண்டுகள் வரை கூட வாழலாம். ‘நூறு ஆண்டு வாழ்க்கை முழுமையான வாழ்க்கை என்பது தமிழ் மரபு.

    நூறாண்டு வாழ்ந்தாலே தூக்கத்தில் 50 ஆண்டுகள் போய்விடுகின்றன. இளமையில், முதுமையில், வாலிப விளையாட்டில், சென்றதை எல்லாம் கூட்டிக் கழித்தால் சாதனை மிகுந்த ஆண்டுகள் என்பவை ஒருவர் வாழ்வில் 15 முதல் 20 ஆண்டுகள் இருக்குமானால் அதுவே அதிகம்தான்.

    இயற்கையின் முடிவுக்கு முன்னர் நாமே நமது வாழ்நாளின் எல்லையை வகுத்துக்கொண்டு, அதற்கேற்ப நாம் செயல்படுவதுதான் அறிவுடைமை. நாம் வரையறுத்த நாளுக்கு முன்னரோ பின்னரோ முடிவு எப்போதும் வரலாம். அதுபற்றிக் கவலைப்படுவதில் பயனில்லை. எதற்கும் முடிவு, இறுதி என்பவை இயற்கையானது என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

    சிலருடைய முடிவுக்கு வெளிப்படையான காரணம் காண இயலாது. ஆனால் ஏதோ ஓர் எதிர் விளைவினால்தான் அந்த முடிவு நேர்கிறது என்பதை உணர்வது அவசியம்.

    அவரவர் தங்கள் வாழ்நாளை விருப்பப்படி முடிவு செய்து அதற்கேற்ப உடல்நலம் பேணிப் பாதுகாப்போடு வாழ்ந்து அதற்குள் நமது கடமைகளை முடிக்க – சாதனைகளை நிகழ்ந்த முயல வேண்டும்.

    நீங்கள் நூறாண்டு வாழ விரும்பினால் மகிழ்ச்சி. அதற்கு ஏற்ப நீங்கள் செயல்பட வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் போதும். விரைந்து செயல்படுவோம்.

    மிகப் பெரியதொரு ஆலமரம். அதன் அடிமரத்தை ஒரு ரம்பம் போட்டு ஒரு நாளைக்கு ஒரே ஓர் அறுப்பு வீதம் அறுக்கிறார்கள். இப்படிச் செய்தால் 100 ஆண்டுகளில் அந்த மரத்தை அறுத்து சாய்த்துவிட முடியும்.

    நம் வாழ்க்கையை ஒரு பெரிய ஆலமரம் என்று எண்ணிக் கொள்ளுங்கள். ஒரு நாள் என்பது அதன் அடி மரத்தில் ஒருமுறை அறுத்து முடித்துவிட்டதற்குச் சமம். நாம் இதுவரைக் கழித்த நாட்கள் அளவிற்கு அடி மரத்தின் பகுதி அறுக்கப்பட்டுவிட்டது என்பது பொருள். இது இடைவிடாது ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்ற செயல் ஏன்? இன்றும் கூட ஒருமுறை அறுத்து முடித்தாயிற்று. நாளையும் அதற்கு மறுநாளும் அறுத்து முடித்தாய் விடும். இதுதான் நம் வாழ்நாளின் நிலை என்பதை அறிய வேண்டும்.

    இப்பொழுது உங்களுக்கு 30 ஆண்டுகளாயின் அந்த அடி மரத்தில் மூன்றில் ஒரு பங்கு அடித்து முடித்தாய்விட்டது. 40 ஆண்டுகளாயின் பாதிமரத்திற்குப் பக்கமாக அறுத்துத் தள்ளியாகிவிட்டது என்று பொருள்.

    ஒரு ஈரானியப் பழமொழி உண்டு.

    ‘சேவல் விடியற்காலையில் எழுந்து கூவுகிறதேÐ எதற்காகத் தெரியுமா? உன் வாழ்நாளில் மேலும் ஒரு நாள் முடிந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காகத்தான்’ (The cock crows at early dawn tells us that one more day of our life has gone – Iranian Proverb).

    ஆதலின், இனி கழிந்ததற்கு இரங்காமல் எஞ்சி இருக்கும் ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். நாம் அடைய வேண்டிய இலட்சியத்திற்கு ஏற்ப, இருக்கின்ற நமது வாழ்நாளைக் கணக்கிட்டு-நேரத்தைக் கணக்கிட்டு உழைக்க வேண்டும்.

    ஆளுமைத்திறன் மேம்பாடு

    உடலோம்பல்

    ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு உடல்நலமும் உடல் வளமும் செழிப்பாக இருந்திட வேண்டும் என்றும், அதற்கு கடைபிடிக்க வேண்டிய உணவுநெறிகளையும் உண்ணும் முறைகளையும் முந்திய கட்டுரையில் கண்டீர்களல்லவா? எதற்கும் மீண்டும் ஒருமுறை தன்னம்பிக்கை பிப்ரவரி, மார்ச் இதழ்களை எடுத்துப் படியுங்கள். ஆம்Ð உணவை நன்கு மென்று விழுங்குவது எவ்வளவு இன்றியமையாதது என்பது தற்போது விளங்குகிறது. உணவிலுள்ள சத்துக்கள் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளவும், இரைப்பை போன்ற செரிமான அகவுறுப்புகளின் செயல்திறனை நெடுநாள் நீட்டிக்கவும் பல்லின் நலனை பாதுகாப்பு மிகமிக முக்கியமாகும்.

    பல்லும் சொல்லும்

    பல்போனால் சொல் போகும் என்பார்கள். போன பல்லுக்கு மாற்றுப்பல் பொறுத்தும் அற்புதங்களை மருத்துவம் செய்கிறது. ஆனால் இயற்கையான பல்லுக்கு இருக்கிற வலிவும் பொலிவும் செயற்கைப் பல்லுக்கு இருக்குமா? செயற்கைப் பல்லைக் கட்டிக்கொண்டாலும் கடினமான பொருள்களை கடித்து அரைக்க அந்த பற்கள் பயன்படாது, சொல் உச்சரிப்புகளும் கூட சிலருக்கு பொருந்தி வருவதில்லை.

    பல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது

    ஆரோக்கியமான பற்கள் உறுதி வாய்ந்தவை. நமது மேல்தாடை எலும்பிலும் கீழ்த்தாடை எலும்பிலும் அவை நன்றாக ஆழமான குழிகளில் பதிந்துள்ளன. இந்தக் குழிகளின் வழியாகப் பற்களுக்கு வேண்டிய இரத்தம், இரத்தக் குழாய்கள் மூலம் வருகிறது. பற்களை தூய்மையாக பராமரிக்காதபோது உணவுப்பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி அழுகி கிருமிகள் பெருகிவிடும். அந்தக் கிருமிகளும் நச்சுப் பொருள்களும் இரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் மற்ற பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு கேடுகளை விளைவிக்கும். ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போல உடல் நலத்தைக் கெடுக்க நலமில்லாத பற்களே போதும்.

    குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என் நண்பர் ஒருவருக்கு பற்கள் மிகவும் சிறுத்து அதிக இடைவெளியுடன் இருக்கும். எப்படி உங்களுக்கு இப்படி ஆனது என்று கேட்டேன். சிறு வயதில் மிகுதியாக மிட்டாய்களை உண்டதால் பல் இப்படி ஆகிவிட்டது என்றார். கண்ட நேரத்தில் கண்டதை வாங்கி உண்ணும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பெரியவர்களே பலர் இந்த பழக்கத்தில் குழந்தைகளைப் போலத்தான் இருக்கிறார்கள். பொதுவாக அப்படி உண்பவர்கள் உண்டு முடித்ததும் வாய்கொப்பளித்து பற்களை தூய்மையாக வைத்துக் கொள்வதில்லை. உண்டு முடித்து தண்ணீர் குடிப்பார்கள், வாய் கொப்பளித்து பற்களை சுத்தம் செய்யவில்லை என்றால் உணவுப்பொருட்கள் பல்லிடுக்கில் தங்கி அழுகி நஞ்சாகும். சிலரைப் பார்த்தால் நன்கு நவநாகரிக உடையணிந்து பொலிவோடு பவனிவருவார்கள். ஆனால் அவர்கள் வாய்திறந்தால் பக்கத்தில் எவரும் நிற்கமுடியாது.
    வாய்நாற்றம்

    அப்படி வாய் நாறுகிறவர்களிடம் சொல்லிப்பாருங்கள். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி எதுவும் தெரியவில்லையே என்பார்கள். அவர்கள் நாற்றம் அவர்களுக்கு தெரிய நியாயமில்லைதான். வாய் நாற்றமுள்ளவர்கள் பலர் முன்னிலையில் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்கள் முன் மற்றவர்கள் நின்று பேசவே முகம் சுளிப்பார்கள். ஆளுமைத்திறன் மேம்பாட்டில் உடலோம்பலும் உடலோம்பலில் பற்பராமரிப்பும் மிகவும் இன்றியமையாதது. வாயிலிருந்து வருகிற நாற்றத்தில் இரண்டுவகை உண்டு. ஒன்று பற்கள் கெட்டிருப்பதால் வீசும் நாற்றம். மற்றொன்று உள்ளிருந்து வெளிப்படும் நாற்றம். இரண்டாம் வகை பற்றி பிறகு பார்ப்போம்.

    முதல் வகையைச் சேர்ந்தவர்கள் வேப்பங்குச்சியைக் கொண்டு ஒருவாரம் பல்துலக்கினால் வாய்நாற்றம் மறைந்துவிடும்.

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழி. தினமும் குச்சியில் பல் துலக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது குச்சியைப் பயன்படுத்தி பல் துலக்கலாம். குச்சியில் பல் துலக்குவது வசதியில்லாதவர்கள் செய்யக்கூடியது என்ற போலித்தனத்தை விட்டொழிக்க வேண்டும். அதே போல் கிராமங்களில் தோட்டத் துரவுகளில் வாழ்பவர்கள் கூட ஆலும், வேலும் அருகில் இருக்க பாழும் பல்பொடிகளை வாங்கி பயன்படுத்தும் போலித்தனத்தையும் பார்க்கிறோம்.

    பற்களை பாதுகாக்க வழி

    காலையில் எழுந்தவுடனும் இரவில் படுக்கச் செல்லும் முன்பும் பல்துலக்க வேண்டும். எதை உண்டாலும், உண்டு பிடித்த பிறகு விரல்களால் பற்களை நன்கு தேய்த்து கொப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலமுறை தேநீர், காபி, கால் அருந்துகிறோம். அவற்றை அருந்தியபிறகு வாய் கொப்பளிக்கிறோமா? என்ன அநியாயம் இது தேநீர் (டீ) குடித்த பிறகு வாய் கொப்பளிப்பதா? குடித்து முடித்து அதன் சுவை நாக்கில் நெடுநேரம் இருந்து கொண்டே இருக்க அதை அனுபவிப்பதிலே ஒரு அலாதியான சுகம் இருக்கிறதே என்கிறீர்களா? சுகம் இருக்கிறது தான், ஆனால் பால் பொருட்கள் பல்லிடுக்கில் தங்கினால் அவற்றின் நுண்கிருமிகள் விரைவாக வளர்ந்து சுகம் சோகத்தில் முடிவடைகிறதே. எனவே, எதைக் குடித்தாலும் உண்டாலும் வாயைச் சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

    பல் துலக்கிய பிறகு நாக்கை வழித்து அழுக்கை நீக்காவிட்டால் அந்த அழுக்குகள் குடலுக்குள் சென்று செரிப்பு கோளாறுகளை உண்டாக்கும். இவை எல்லாம் நீங்கள் அறியாததல்ல. ஆனால் அறிந்து கடைபிடிக்காமல் இருப்பதில் பயனில்லை.

    கழிவுகள் வெளியேற்றம்

    “ஒன்னுள்ளே ஒன்பது வாய் வைத்தாய்” என்று பாடியுள்ளார் திருநாவுக்கரசர். மனிதனின் ஒன்பது வாயில்களாவன: இரண்டு கண்கள், இரண்டு காதுகள், வாய், இரு மூக்குத் துவாரங்கள், சிறுநீர்த்துவாரம் மற்றும் மலவாய். இவை எல்லாமே ஒரு வகையில் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. கழிவுகளை வெளியேற்றுகின்ற இந்த உறுப்புகளை எல்லாம் மிகவும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.

    ஐந்து வகை மலங்கள்

    உடலில் கழிவுகளை மலங்கள் என்பார்கள். மலம் என்றால் குற்றம் என்று பொருள். உயிர்களைப் பிடித்திருப்பவை மாய மலம், கன்ம மலம், ஆணவ மலம் என்று மூன்று வகையாக மலங்களைச் சைவசித்தாந்தம் கூறும். அதேபோல் வியர்வை, அபாணவாய், சளி, சிறுநீர், மலம் என ஐந்து விதமான மலங்கள் உடலில் உள்ளன. இவை அந்தந்த உறுப்புகள் மூலம் உரிய நேரத்தில் வெளியேற்றப்பட்டால் உடல் நலமாக இருக்கும்.
    பல்வேறு காரணங்களால் சிறுநீர் கழிப்பதையோ மலம் கழிப்பதையோ ஒத்தி வைக்கிறோம். சோப்பு, பவுடர் முதலியவை தோலின் வியர்வை துவாரங்களை அடைத்துவிடுவதாலும், இறுக்கமான ஆடைகளை அணிவதாலும், தோல் மூலம் கழிவு வெளியேற்றப்படுவது தவிர்க்கப்படுகிறது. இவற்றால் மலங்கள் உள்ளே தங்கி உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. இவற்றில் முதன்மையானது மலச்சிக்கல்.

    மலச்சிக்கல்

    மலச்சிக்கல் தான் பல்வேறு நோய்களுக்கு மூலகாரணம் என்கிறது தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவம். “அனைத்து நோய்களுக்கும் முதன்மையான காரணம் மலச்சிக்கலே” என்கிறார் காந்தியடிகள்.
    சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கும் முன்பு முதலில் பேதி மருந்து கொடுத்து குடலைச் சுத்தம் செய்வார்கள். இயற்கை மருத்துவத்திலும் இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்.
    மலச்சிக்கலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணங்கள் மூன்று. 1. உணவுடன் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, 2. மலங்கழிக்கும் உணர்வு ஏற்படும்போது மலங்கழிக்கச் செல்லாமல் இருந்து விடுவது, 3. அளவுக்கு அதிகமாக மாவுச்சத்துள்ள உணவை உண்பது ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.

    அமெரிக்க ஆராய்ச்சி முடிவு

    அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. நோயுற்று இறந்தவர்கள் 284 பேரில் 259 பேரின் குடலில் (கோலன்) மலம் இறுக்கக் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

    நமது நாட்டிலும் ஆராவாரமான இந்தக் காலத்தில் பரவலாகப் பலருக்கும் மலச்சிக்கல் இருப்பதைப் பார்க்கிறோம். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். கண்களைச் சுற்றி தோல் கருமையாய் இருக்கும். வாய் துர்நாற்றம் அடிக்கும்.
    அதாவது, மலச்சிக்கல் இருப்பவர்களின் குடலில் கழிவுகள் மிகுந்து, நச்சுத்தன்மை உடலில் மிகுந்துவிட்டால் அவர்கள் வெளியிடும் காற்றே துர்நாற்றம் உடையதாக இருக்கும்.

    மலச்சிக்கலை அறிவது எப்படி?
    மலச்சிக்கல் நமக்கு இருக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? காலையில் விழித்தெழுந்து பத்து நிமிடத்தில் மலம் வெளியேறிவிட வேண்டும். கழிப்பறையில் அமர்ந்து இரண்டு நிமிடங்களில் கழிவு முழுவதும் வெளியேறிவிட வேண்டும். மலவாயிலில் மலம் ஒட்டக்கூடாது. இதற்கு மாறுபட்டு இருந்தால் மலச்சிக்கல் இருக்கிறது என்று பொருள்.

    பல இருதய நோயாளிகள், கழிப்பறைக்குள் சென்றவர்கள் இதயத் தாக்குதலுக்கு உட்பட்டு இறப்பதைப் பார்க்கிறோம். மலச்சிக்கலினால் கழிவறையில் சிரமப்படும்போது இதயத்தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

    உடலில் இருந்து கழிவு வெளியேறியவுடனே உடல் ஆனந்தம் அடைகிறது. பலருக்குத் தன்னை மறந்து அப்போது பாட்டு வரும். ஏனென்றால் உடலில் உள்ள குற்றங்கள் (மலம்) வெளியேறியவுடன் பெறுகின்ற சுகம் அலாதியானது.
    மேலும், இன்றைக்கு எங்கு பார்த்தாலும் நீர்கோள் (Sinus) நோயால் துன்பப்படுகிறவர்கள் எண்ணிக்கை மிகுந்து கொண்டே வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் மலச்சிக்கல்தான். அண்டத்தில் மலச்சிக்கல் இருக்குமானால் கண்டத்தில் கபக்குற்றம் வரும் என்பது அகத்தியர் கூற்று. இது உண்மையும் கூட. எனவே, குடலைத் தூய்மையாகப் போற்றுவது இன்றியமையாதது.
    தோலும் சிறுநீரகமும்
    கோடைக்காலத்தில் தோலும், குளிர் காலத்தில் சிறுநீரகமும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடித்தெடுத்து வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. போதிய அளவு நீர் அருந்தாமல் பலர் அய்யோ சூடுபிடித்துக் கொண்டதே என்று கோடையில் துன்புறுகிறவர்களைப் பார்க்கிறோம். தண்ணீர் தேவையான அளவு குடிக்காத போது சிறுநீர்ப் பையில் யூரிக் அமிலத்தில் அடர்த்தி அதிகரிப்பதால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து முந்தைய கட்டுரையிலேயே விரிவாக எழுதி இருக்கிறேன். தண்ணீர் மிகுதியாக குடிக்கவில்லை என்றால் சிறுநீர்ப் பையில் ‘கல்’ உருவாக வாய்ப்பு ஏற்படும்.

    குளியல்

    தினமும் குளித்து அழுக்கு போகவும் அதை நீக்கப் பூசிய சோப்புப் போகவும் குளிக்க வேண்டும். ‘அழுக்குத் தீர குளிக்கவும் முடியாது; ஆசைதீர வாழவும் முடியாது’ என்பார்கள். நன்கு குளிப்பது கூட சில நோய்களை தீர்க்கும் மருந்தாகிறது. இயற்கை மருத்துவத்தில் இடுப்புக் குளியல், அமர்ந்த குளியல், முதுகுத்தண்டுக் குளியல், உப்புக் குளியல், தலைக் குளியல், உடம்புக் குளியல், அங்ககக் குளியல், வயிற்றுக் குளியல், பாதக் குளியல் என்று பல்வேறு குளியல் வகைகள் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகளாகவே பயன்படுகின்றன. வாழையிலைக் குளியல் என்ற ஒருவகையும் உண்டு. உடம்பிலிருந்து அரை லிட்டர் வியர்வையை வெளிக்கொணரும் ஆற்றல் இந்த வாழையிலைக் குளியலுக்கு உண்டு.

    எவ்வாறு குளிக்க வேண்டும்

    பொதுவாக, தினமும் எவ்வாறு குளிக்க வேண்டும் என்றால், முதலில் உடலை நீரால் நனைத்துப் பிறகு, கீழிலிருந்து மேல்நோக்கித் தேய்க்க வேண்டும். அடுத்து, நீரால் உடலைக் கழுவ வேண்டும். அதன் பிறகு சோப்புப் போட்டுக் குளிக்க வேண்டும். மேலும், குளித்ததும் உடலைத் துடைப்பதில் கவனம் தேவை. உடலில் உள்ள வியர்வைத் துளைகள் கீழ் நோக்கித் திறப்பதால் துடைக்கும்போது கீழிலிருந்து மேல் நோக்கித்தான் துடைக்க வேண்டும். பலவேர் குளிக்கும்போது பாதங்களையும், கால்விரல்களையும் விரலிடுக்குகளையும் தேய்த்துக் குளிப்பதே இல்லை. உடலில் உள்ள தோலில் அதிகம் கழிவு வெளியேற்றப்படுவது பாதத்தில்தான். நம்மில் எத்தனை பேர் கால் விரல் இடுக்குகளில் அழுக்குத் தேய்த்துக் குளிக்கிறோம் எண்ணிப் பாருங்கள். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் கைகால் கழுவி விட்டுத்தான் வீட்டுக்குள் நுழைவார்கள். இதில் எவ்வளவோ சுகாதாரத் தத்துவம் அடங்கி இருக்கிறது. மேலும் நாம் அணியும் செருப்புகளைக் கூடத் தினம் துடைத்துச் சுத்தம் செய்தே அணிய வேண்டும்.

    எனது பள்ளிப் பருவத்து நண்பர் தற்போது நெய்வேலியில் பொறியாளராக பணியாற்றுகிறார். அன்று பள்ளிச் சிறுவனாக இருந்தபோதும் சரி, இன்றும் சரி உடைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவு முக்கியத்துவம் காலணிக்கும் கொடுப்பார். அவரின் காலணி எப்போதும் அழுக்கின்றி தூய்மையாக இருக்கும். இன்னொரு நண்பர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசியராக இருக்கிறார். தினமும் காலையில் குளிக்கச் செல்லும் முன் அன்று அலுவலகத்திற்கு அணிந்து செல்ல இருக்கும் காலணிகளை உட்புறம் நன்கு துடைத்துச் சுத்தம் செய்வார். காலணியின் வெளிப்புறத்தை எல்லோரும் பாலிஸ்போட்டு பொலிவு செய்கிறார்கள். ஆனால் உட்புறத்தை தூய்மையாக்கி அணிவது மிகவும் நல்லது.

    தலைமுடி உதிர்வதைத் தவிர்க்க:

    அதேபோல் நகங்களை நறுக்கி விரல்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதாவது வாரம் ஒருமுறை தலைக்கு குளிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தலையில் பார்த்தால் பொடுகு விழுந்து முடிஉதிரும். தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொண்டால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம். நம்மவர்கள் முடி உதிராமல் இருக்க டானிக் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் தலையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். அழுக்கோடு சீவி முடித்து சிங்காரித்து பயனில்லை. முடி உதிர்ந்து போனால் தோற்றப்பொலிவு குறைந்துவிடுமே என்று வருந்திப் பயனில்லை. தூய்மையைப் போற்ற வேண்டும்.

    இங்கே நமது நோக்கம் உடலோம்பலை விரிவாக விவாதிப்பதல்ல. ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு உடலும் உள்ளமும் மிகவும் அடிப்படையானவை என்பதால் அவைபற்றிய கருத்துக்களை சுருக்கமாக இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். அன்றியும் இவற்றை விரித்து எழுதினால் ஒவ்வொரு கூறும் தனித்தனிக் கட்டுரயைôக வடிவெடுக்கும்.

    சுவாசமும்

    காதுகள், மூக்கு ஆகியவற்றையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். இசுலாமியர்கள் தொழுகைக்கு முன் மூக்கையும் வாயையும் மூன்று முறை சுத்தம் செய்வார்கள். நன்கு சுவாசம் நடைபெற மூச்சுப்பாதை அடைப்பின்றி தூய்மையாக இருப்பது அவசியம். அதேபோல் அவர்கள் தொழுகைக்கு அமரும்போது பாதங்களைப் பின் நோக்கி கடித்து அமர்வார்கள். இதை யோகாவில் வஜ்ஜிராசனம் என்பர்.

    இம்முறையில் சுவாசம் தூண்டப்படுகிறது. மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சுவாசம் எப்போதும் இரு மூக்குத் துவாரங்கள் வழியாகவும் நிகழாது. சிறிதுநேரம் வலதுபுற நாசியிலும், சிறிதுநேரம் இடதுபுற நாசியிலும் நிகழும். இதன் இயக்கத்திற்கும் மனித மூளையில் சிந்தனையாற்றலும் தொடர்பு உண்டு.

    மனிதனுக்கு உணவு, தண்ணீர் இவை எல்லாவற்றையும் விடக் காற்று மிக அவசியம். ஆனால் நாம் இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. உறங்கும்போது கூடச் சன்னல்களை எல்லாம் இறுக மூடிவிட்டு உறங்குபவர்கள்தான் மிகுதி. உணவு இல்லாமல் கூடச் சிலநாள் உயிர் வாழலாம். ஆனால், சுவாசிக்காமல் 3-4 நிமிடங்களுக்கு மேல் உயிர்வாழ்வது சிரமம்.

    ஆழ்ந்த சுவாசம்

    காற்றில் ஐந்தில் ஒரு பாகம் பிராண வாயுவும் ஏனைய நான்கு பாகத்தில் மிகப்பெருமளவு நைட்ரஜனும், சிறு அளவு வேறு பல அபூர்வ வாயுக்களும் இருக்கின்றன. வயது வந்த ஒரு மனிதன் சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 17-20 முறைகளும், குழந்தைகள் 29-30 முறைகளும் சுவாசிப்பர். ஆனால் உடற்பயிற்சிக் காலத்திலும் வேறு உடல் உழைப்பின் போதும் சுவாச எண்ணிக்கை மிகுதியாகும்.

    ஒவ்வொருமுறை சுவாசிக்கும்போதும் ஒரு நாழி (பின்ட்) காற்றை உள்ளிழுக்கின்றோம். ஓய்விலிருக்கும் நுரையீரல்களின் கொள்ளளவு ஆறுபின்ட் காற்று. எனவே ஒரு சுவாசத்தில் ஒரு பங்கு காற்றே மாற்றமடைகின்றது. ஆனால் ஒரு ஆழ்ந்த சுவாசத்தில் (Deep Breath) ஒரே முறையில் பத்து மடங்கிற்கு மேல் காற்றை உட்கொள்ளலாம். எனவே, ஆழ்ந்த சுவாசம் அவசியம்.

    நம்மில் பலர் குறுகிப்போன மார்பபோடு குறைந்த சுவாசம் மேற்கொள்வர். சராசரியாக மனிதன் தன் வாழ்நாளில் ஐம்பது கோடி முறை மூச்சுவிடுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மூச்சு என்று நிர்ணயிக்கப்படுகிறது என்பர் மெய்ஞ்ஞானிகள். மெதுவாக மூச்சு வாங்கிவிட்டால், அந்த அளவுக்கு அவர் வாழ்நாளும் நீளும் என்பர்.

    நச்சுக்காற்று வெளியேற்றமும் இரத்தத் தூய்மையும்

    நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவை உடலெங்கும் எடுத்துச் செல்வது இரத்த சிவப்பு அணுக்களே. ஒரு துளி இரத்தத்தில் 25 கோடி சிவப்பணுக்கள் இருக்கின்றன. இவற்றின் ஆயுள் முப்பது நாள் தான். இவற்றைப் புதுப்பிக்க ஒவ்வொரு விநாடியும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

    இரத்தம் ஒருமுறை உடலைச் சுற்றிவர 12 நிமிடங்களாகின்றன. சுவாசித்தலால் இரத்தமும் சுத்தமடைகிறது. உடலுக்குப் போதுமான உயிரியம் இரத்தத்துடன் கலந்து உடலெங்கும் சென்று உயிரணுக்களுக்கு உயிரூட்டவும் பயன்படுகிறது. மூச்சுவிடும்போது கரியமிலவாயு வெளியேறுகிறது. இரத்தம் தூய்மை அடைகிறது.

    மூச்சுப்பயிற்சி

    முறையான மூச்சுப்பயிற்சி மூலம் மேலோட்டமான நமது சுவாச முறைகளை ஆழ்ந்த முழு சுவாசமாக மாற்றிச் சுவாசிக்கப் பழகிக் கொள்ளலாம். மூச்சுப் பயிற்சியில் உடல் மன அம்சங்களைத் தவிர வேறு ஓர் அம்சமும் இருக்கிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். காற்றில் பல வாயுக்கள் உள்ளன. இவற்றின் மூலக்கூறுகள் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    யோகாவில், பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது உடல் நலனுக்கு மிகவும் ஏற்றதாகும். உடலும் மூளையும் சோர்வுற்றுக் களைத்திருக்கிற சமயத்தில் மூச்சுப் பயிற்சியின் பயனை உடனடியாகப் பெற முடியுமென்பது எனது அனுபவம்.

    குறிப்பாக, தேர்வு நேரங்களில், தேர்வுக்கு முன்பு பலநாள் இரவு பகலாகப் படித்திருப்போம். தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் தேர்வு நடக்கும் போது, தினமும் தேர்வு எழுதி முடித்து வந்ததும் சோர்வாக இருக்கும். படுத்துத் தூங்கி விடவும் முடியாது. அடுத்த நாள் தேர்வுக்குப் படிக்க வேண்டுமே. இச்சமயங்களில் மூச்சுப்பயிற்சி செய்து புத்துணர்ச்சியையும் சக்தியையும் நான் பெற்றதுண்டு. எனவே முறையான மூச்சுப் பயிற்சிகள் மிகுந்த பயனளிக்கும். இது நம் சிந்தனைக்கு விருந்தாகவே இருக்கின்றது. எனவே ஆளுமைத்திறன் மேம்படுத்த விரும்புகிறவர்கள் உடலோம்புவதும், உடலோம்பலில் காற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் நல்லது

    -தொடரும்