உங்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு பார்வை, உங்களைப் பற்றிய மதிப்பீடு, உங்கள் திறமைகள் பற்றிய மதிப்பீடு இவைகள் எல்லாம் உங்களுடைய சுற்றுப்புற சூழலின் தாக்கத்தினாலும் நீங்கள் தொடர்பு கொள்கிற மனிதர்களின் ஆளுமைகளாலும் மாற்றப்படுகின்றன, அழகாக செதுக்கப்படுகின்றன.
சரியான மனிதர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிற உங்கள் திறமைதான் உங்களுடைய வெற்றிக்கு ஆணிவேராக அமைகிறது. உங்கள் இலக்கை விரைவில் அடைவதற்கும் அது வழிகாட்டியாக அமைகிறது.
நீங்கள் எவ்வளவு பேரை அதிகமாக தெரிந்து வைத்திருக்கீறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
உங்களது முயற்சிகளில் உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மனிதர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் உங்களுக்குரிய வாய்ப்புக்களுக்கான கதவைத் திறந்து வைப்பார்கள். அது உங்களது வாழ்க்கையை மாற்றிக் காட்டும்.
உங்களுக்கு உதவி செய்கிற, ஒத்துழைப்பு நல்கிற மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
- உங்களின் தொழில் சம்பந்தப்பட்டவர்கள்
- சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் பிரபலமாக இருப்பவர்கள்
- உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள்
உங்களுடைய தொழில் சார்ந்த தொடர்புகளில் மிக முக்கியமான பிரபலமான / புகழ் பெற்றவர்கள், உங்கள் தலைவர், உங்களோடு தொழில் செய்பவர்கள், உங்கள் கீழ் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் இவர்களில் யார் உங்களுக்கு உதவுபவர்கள் யார் உங்கள் வளர்ச்சியில் பங்கேற்பவர்கள் என்பதை கண்டறியுங்கள், இவர்களில் யாராவது ஒருவர் உங்கள் வெற்றிக்கு மூல காரணமாக இருக்கக்கூடும்.
நீங்கள் சார்ந்து இருக்கக்கூடிய உங்களின் தலைமையை உங்கள் செயல் திறமையின் மூலம் திருப்திப்படுத்தினால், உங்களின் எதிர்காலத்திற்கு அது ஒரு விதையாக அமையும்.
உங்கள் தலைமையிடம் உங்களுக்கு நல்ல பெயர் இருந்தால் அது உங்களுக்கு பாதுகாப்பானது, இல்லா விட்டால் அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும்.
உங்கள் தலைமைக்கு எது முதல் பட்ச முக்கியமானது, எது இரண்டாம் பட்ச முக்கியமானது, எது மூன்றாம் பட்ச முக்கியமானது என்று பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்கள் பணிகளை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த முறையில் உங்கள் தலைமையிடம் நல்ல அபிப்ராயத்தையும், அருகாமையையும் பெற முடியும், உங்கள் எதிர்காலத்திற்கு அது பெரும் உதவியாக இருக்கும்.
1) எது முக்கியமானது என்று தேர்வு செய்யும் திறமை அல்லது எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பதை கண்டறியும் திறமை.
2) செய்கிற காரியத்தை விரைவாகச் செய்து முடிக்கும் ஆற்றல்
இவை இரண்டும் உங்கள் உயர்வுக்கு இரு கண்களாக அமையும். உங்கள் தலைமையின் விருப்பத்திற்கேற்ப செயல்களை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்துக் காட்டும் ஆற்றல் உங்கள் தனித்துவத்தை அடையாளம் காட்டும்.
உங்களோடு பணி புரிபவர்களிடம் நெருக்கமான, சுமூகமான ஆரோக்கியமான மற்றும் அன்பான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும், மற்றவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் உதவுங்கள், ஒரு சிலர் உதவி கேட்பதற்கு தயங்கலாம், அவர்களிடம் நேரடியாகச் சென்று ‘நான் எந்த விதத்தில் உங்களுக்கு உதவ வேண்டும’; என்று கேட்டு உதவுங்கள், நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது ஏதாவது ஒரு நேரத்தில் உங்களுக்கு இரு மடங்காக உங்களுக்குத் திரும்பி வரும், விதையை நடுங்கள் பின் பலனை அறுவடை செய்யுங்கள், ஒரு பூவை நீங்கள் கொடுத்தால் அது மாலையாகத் திரும்பி வரும், ஒரு விதையைக் கொடுத்தால் அது விருட்சமாகத் திரும்பி வரும், ஒரு சுட்டிப்பழத்தைக் கொடுத்தாலும் கூட அது கட்டிக் கரும்பாக திரும்பி வரும், நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அது பல மடங்காக உங்களை வந்து சேரும்.
உயர்ந்த நிலையில் உள்ள பிரபலமானவர்களோடு தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், ஒரு குழுவோடு உங்களை இணைத்துக் கொள்ளும் போது அந்தக்குழு உறுப்பினர்களோடு தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும், ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் எந்த காரியமாக இருந்தாலும் ஓடிப்போய் உதவி செய்யுங்கள், அந்த நண்பருக்கு வேண்டப்பட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள் உங்கள் பணியைக் கூர்ந்து பார்க்கக் கூடும், உங்கள் பணியைப் பாராட்டுவதற்கு வாய்ப்பு உண்டாகும், அவர்களுடைய அறிமுகம் உங்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்த பலனைத் தரும்.
நீங்கள் ஒருவரோடு நெருங்கிப் பழக விரும்பினால் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய பத்திரிகை செய்தி மற்றும் புகைப்படங்களை இணைத்து, அவருடைய பேச்சுக்கள் பற்றிப் புகழ்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் அல்லது தொலைபேசியில் பேசுங்கள் அல்லது அந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள், தொடர்ந்து அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், இந்தத் தொடர்பு ஏதாவது ஒரு நேரத்தில் உங்களுக்கு உதவியாக வந்து சேரும், வேண்டாதவர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளுங்கள்.
“கழுகுகளோடு பறக்க விரும்பினால், வாத்துகளுடன் இருக்கும் நட்பினை விட்டுவிட வேண்டும்” என்பது மேலைநாட்டு பழமொழி.[hide]
பெரிய மனிதர்களின் தொடர்புகள் சங்கிலித் தொடர் போல ஒன்றிலிருந்து பத்தாதி, பத்திலிருந்து நூறாகும். அவர்கள் 90 சதவீதம் வாழ்க்கையிலும், தொழிலிலும் ஜெயித்தவர்களாக இருப்பார்கள், உங்களுக்கு இதன் மூலம் வெற்றி வாய்ப்புக்கள் வந்து சேரும், அவர்களில் யாராவது ஒருவரால் உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படக்கூடும், அந்த உறவுப்பாலம் பல இடங்களில்; துணையாக அமையும்.
நண்பர்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், நண்பர்களுடைய வட்டாரம் அதிகமாக அதிகமாக உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகும்.
நண்பர்களுக்கு உதவி செய்யும் போது அதே உதவி உங்களுக்குத் திரும்பிக் கிடைக்கும். நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள் என்று வட்டம் அதிகமாக அதிகமாக நீங்கள் பிரபலம் அடைவீர்கள், சமூதாயத்தில் முக்கியப் புள்ளியாக, தவிர்க்க முடியாத மனிதராக கருதப்படுவீர்கள், சமூக அந்தஸ்து கூடும், உங்களுக்குக் கீழே இருப்பவர்கள் மதிக்க ஆரம்பிப்பார்கள், இவருக்கு “இவரைத் தெரியும்”; என்று பரவலாகப் பேசப்படுவீர்கள், ஏதாவது ஒரு வகையில் இதற்குரிய பலன் உங்களுக்கு கிடைக்கும், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எதிர்பாராத இடத்தில் எதிர் பாராத நேரத்தில் கிடைக்கும்.
இதற்கு முழு உதாரணமாக நெஞ்சிற்கினிய நண்பர் மதிப்பிற்குரிய எம். சண்முகம், முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அவர்களை முழு எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். நெஞ்சிற்கினிய பண்பாளர், பழகுவதற்கு மிகவும் இனியவர், உயர்ந்த குணங்களுடைய மொத்த உருவம், பொதுப்பணிக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், ஓய்வறியா உழைப்பு, உன்னதமான பண்பு, கள்ளம் கபடம் இல்லாத மனம், ஓடோடிச் சென்று உதவும் குணம் இவைகள் இவருக்கு பெருமை சேர்க்கிறது. “கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்”; என்பது திருமறையின் வாசகம், ஆனால் கேளாமலேயே கொடுக்கிற, தட்டாமலேயே திறக்கிற பெரிய மனது இவருடையது, எல்லோரையும் அன்போடு நேசிக்கிற பரந்துபட்ட உள்ளம் இவருக்குண்டு, “இதைச் செய்து தாருங்கள்“ என்று யாராவது இவரிடம் கேட்டால் அதைச் செய்து முடிக்கும் வரை இவருக்கு உறக்கம் என்பது இருப்பதில்லை. நல்லதே செய்து பழக்கப்பட்டதாலும்,நல்லதே பேசிப் பழக்கப்பட்டதாலும், நல்லவரோடே இணைந்து இருப்பதாலும்,இவரைப் போல இருப்பது அரிது என்று பெயரைப் பெற்றவர்.
நேர்மையும், உண்மையும் இவருக்கு இரு கண்கள். அடக்கமும் அமைதியும் இவரின் அணிகலன்கள் அன்பு, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனம், அரவணைப்பு, அனுசரிப்பு, புன்சிரிப்பு, எதையும் தாங்கும் இதயம் இவைகள் இவரின் போர்க்கலன்கள்.
இவருடைய நல்ல மனதும், நா நயமான பேச்சும் இவரின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. “என் கடன் பணி செய்திருப்பதே” என்பது இவருக்கு ஆனந்தம். அந்த சேவையே இவருக்கு மூச்சுக்காற்று – அதனால் உண்டாகும் தோழமையே இவருக்கு தென்றல் காற்று.
விவசாயக் குடும்பத்திலே பிறந்து, சட்டப் படிப்பு படித்து வக்கீலாகப் பதிவு செய்து கொண்டபின், அரசு கூட்டுறவுத் துறையில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1997 -ல் தன் பதவியை இராஜினாமா செய்து விட்டு, அரசியலிலே அடியெடித்து வைத்து கிணத்துக்கடவு சட்ட மன்ற தேர்தலில் தி,மு,க – வின் சார்பில் வேட்பாளராக நின்று அமோக வெற்றி பெற்றவர்.
தான் எம்,எல்,ஏவாக இருந்த போது, அதிகாரத் தோரணை இல்லாதவராக, அரசியல்வாதி என்ற இலக்கணத்திற்கு அப்பாற்பட்டவராக ,மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர், அப்போதும், இப்போதும், எப்போதும் நேர்மைதான் இவருக்கு சுவாசக் காற்று.
அந்த கால கட்டத்தில் உயர் அதிகாரிகளோடும், உயர்ந்த நிலையில் உள்ளவரோடும், இவர் பணிவோடும், இன்முகத்தோடும் பழகி, அவர்களின் இதயங்களைத் தொட்டவர். இவரின் பணிவான பழக்கம், அதிகார நட்பு வட்டாரத்தை ஆச்சரியப்படுத்தியது, அதிகப்படுத்தியது, அன்று இவர் அன்போடு பழகிய அதே பழக்கம் இன்றுவரை தொடர்வதோடு, அந்தத் தொடர்புகளை புதிப்பித்துக் கொள்ளும் மந்திர சக்தியை வளர்த்துக் கொண்டவர், மற்றவர்களுக்காக எந்த நேரத்திலும், எந்த வேலைக்கும் உயர்அதிகாரிகளிடம் உரிமையோடு அணுகி காரியம் சாதி;க்கும் திறமை இவருக்குண்டு.
அன்பான மனைவி, அறிவான மகன், அயல்நாட்டு மருமகள், அழகான, பெருமைக்குரிய மகள்,பொறுப்பான, பொருத்தமான மருமகன்,அற்புதமான பேரன் இவர்கள் இவரின் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷங்கள்.
பொள்ளாச்சியில் சார்பு நீதிமன்றம்,நெடுங்சாலைத்துறை செயற்பொறியாளர் அலுவலகம்,சரஸ்வதி தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி க்கு அனுமதி, பிஏபி பாசனத் திட்டத்தில் ஒரு மடைவிட்டு ஒரு மடை பாசன முறை,பல பள்ளிகளுக்கு அனுமதிகள் இவைகள் எல்லாம் இவரின் முயற்சியினால் பெற்ற வரங்கள், “நிறைந்த மனம் நிம்மதியின் ஆலயம் என்று சொல்வார்கள், அந்த நிறைந்த மனமும்; நிம்மதியும், சரியான மனிதர்களோடு வளர்த்துக் கொண்ட தொடர்புகளும் இவரை உச்சத்தில் நிறுத்தி அழகு பார்க்கிறது.
வாழ்க்கை தேரின் வடம் பிடிக்க
வந்தோர் எல்லாம் கை கொடுக்க
தேர்ந்த மனிதர்களிடம் சேர்ந்து விடு
தென்றலாய் இணைந்து பழகி விடு
பழகியவர் உனக்கு துணை நிற்பர்
முயற்சியில் ஜெயிக்க தோள் கொடுப்பர்[/hide]
இந்த இதழை மேலும்