– 2019 – October | தன்னம்பிக்கை

Home » 2019 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கனவு ஆசிரியர் மன்சூர் அலி

    எழுத்தறிவத்தவன் இறைவன் என்றே எடுத்தியம்புகிறது நம் முன்னோர்களின் முதுமொழி. அன்னசத்திரங்கள் ஆயிரம் நடத்தினாலும். ஆலயம் பதினாயிரம் ஏற்படுத்தினாலும் கிட்டாத நற்பேறு ஓர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும் மகோன்னதமான அறப்பணியான ஆசிரியர்ப்பணியை அர்ப்பணிப்போடு செய்து வருகிறார்கள் நம் ஆசிரியர் பெருமக்கள். நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் வல்லமை வகுப்பறைகளுக்கு மட்டுமே உண்டு. அங்கே வடிவமைக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் விளங்குகிறார்கள். அவ்வாசிரியப்பணியை அர்ப்பணிப்போடும் புத்துணர்வோடும் ஆற்றிவரும் சீர்மிகு ஆசிரியர்தான் முனைவர் திரு. மு. மன்சூர் அலி அவர்கள்.

    இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகும் பசுமையும் ததும்பும் கோபிசெட்டிபாளையத்தில் ஒன்றே கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நல்லதொரு கல்வியை நாளும் வழங்கிவருகிறது வைரவிழா மேல்நிலைப்பள்ளி. அப்பள்ளியில் திரு. மன்சூர் அலி அவர்கள் வரலாற்று பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வேளாண் பொருளியலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு குறித்து ஆய்வினை மேற்கொண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பள்ளியில் வழக்கமான வரலாற்றுப் பாடத்தையே சற்று விளக்கமான முறையிலும் நவீன உத்திகளோடும் கற்றுத்தந்து மாணவர்களின் நெஞ்சங்களில் எளிதில் குடி கொண்டுவிடுகிறார்.

    இவர் காவியங்களை ஓவியங்காளாக்கும் வல்லமை படைத்த ஓவியர் என்பதால் சுவரோவியங்களால் சூத்திரங்களைக்கூட சித்திரங்களாய் வரைந்து பதிய வைக்கிறார். எண்ணங்களுக்கு வண்ணங்கள் சேர்த்து அதை கவிதைகளாக்கும் நற்கவிஞர் என்பதால் இலக்கிய ஆர்வத்தை இலகுவாய் விதைக்கிறார். அறிவியலில் அரிய படைப்புகளை அறிமுகம் செய்திடவும் அங்கிருந்து ஆர்வத்தை தூண்டுகிறார். முடியும் வரை முயன்று பார்- என்று வெம்பிக்கிடக்கும் தம்பிககளின் மனதில் நம்பிக்கை விதைகளை நாளும் விதைக்கிறார். அத்தோடல்லாமல் இயற்கையைப் பாடுவது, புகட்டுவது, போற்றுவது, காத்து நடப்பது என இயற்கையிடமிருந்து இம்மிளவும் இணைபிரியாத இயற்கை ஆர்வலர். மரங்கள் நமக்கு வரங்கள் அதை அழியாது காக்கட்டும் நம் கரங்கள் என்று மாணவர்களிடத்தில் மரம் நடுதலை ஊக்குவிக்கு நாற்றுப்பண்ணைகள் அமைத்து சுற்றுச்சூழல் வெற்றிச்சூழல் ஆகாது காக்கும் பணியில் மாணவர்களை ஓருங்கிணைக்கிறார்.[hide]

    இவ்வாறு ஆசிரியர்ப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற ஆன்றோர் வாக்கின்படி வாழ்ந்து வருவதால் அவருக்கு 5.9.19 அன்று மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது அளித்து சிறப்பித்துள்ளது. அரும்பணியாற்றி ஆசிரியர் இனத்திற்குப் பெருமை சேர்த்த அன்னாரின் அறப்பணி மேலும் தொடர அன்போடு வாழ்த்துகிறேன்.[/hide]

    இந்த இதழை மேலும்

    விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்

    முனைவர். இரா. சாந்தி

    தமிழ்த்துறைத் தலைவர்

    பூ.ச.கோ.அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

    பீளமேடு, கோவை

    எப்போதும் நினைவில் நிற்பது ராஜா, ராணி இருபெரும் மலைகள்,செஞ்சி தேசிங்கு ராசன் ஆட்சி செய்த ஊர். மலையின் முன்பாக வீடு. வாரம் ஒரு முறை அந்த ஒன்பது வயதில் ராஜா மலை பாதிவரையாவது ஏறுவது பிடிக்கும்.

    பிறந்தது வல்லம்படுகை. பத்து வயது வரை வளர்ந்தது செஞ்சியில். அங்கிருந்து நகருக்குள் உள்ள அரசுப் பெண்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை முடித்தேன். நாள்தோறும் செஞ்சிமலை பக்கமாக வரும் பேருந்தில் இலவச பயணம். மாலையில் ஏரிக்கரையின் மீதாக குறைவான நீரிருக்கும் போது உள்ளாக ஓரமாக நடந்து உடன் பிறந்தவர்கள், சக நண்பர்களோடு பள்ளிப் பருவம் தொடர்ந்தது.

    தந்தை கால்நடை மருத்துவர். திருச்சி கருங்குளத்தில் ஆறாம் வகுப்பு வரைப் படித்தேன். மாதா கோவிலுக்கு அருகில் பள்ளி. அதிகாலையில் மாதாவின் முன்பாக மண்டியிட்டு பிராத்தனை செய்த நாட்கள் மனதில் இன்று வரை தென்றலாக வீசிக் கொண்டிருக்கிறது.

    ஏழாம் வகுப்பு புவனகிரி அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பு திண்டிவனம் பிலோமினாள் பெண்கள் மேனிலைப் பள்ளி. இன்று கோலாட்டம் ஆடுவோரைப் பார்க்கும் போது நாமும் பள்ளி நிகழ்ச்சிகளில் கோலாட்டம் ஆடியது பசுமையான நிகழ்வுகள் நிறைந்திருக்கிறது.

    ஒன்பதாம் வகுப்பு மகாத்மா காந்தி வருகை தந்து அடிக்கல் நாட்டிய திருவெண்ணெய் நல்லூர் மகாத்மா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி. இங்கிருந்து துவங்கியது தமிழ்மொழியின் மீதான ஆர்வம். பள்ளிகளின் வருகைப் பதிவேட்டில் தவறாமல் இருப்போம் ஐந்திற்கும் குறையாத வெவ்வேறு முதல் எழுத்துக்களையுப் பெற்ற சாந்திகள்.

    தமிழ்ச்செய்யுள் பாடல்களை அன்றே எழுத்துப் பிரித்து சரியான உச்சரிப்போடு வாசித்து ஆசிரியர் பாராட்டைப் பெறுவேன். எல்லோரையும் எழுந்து செய்யுள் வாசிக்கத் சொல்வார். என்னை மட்டும் சிங்கம் ஒன்று இப்போது வாசிக்கப் போகிறது என்று அறிமுகப்படுத்துவார். அவரின் குரல் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இன்றும், இருக்கையில் அமரும் முன் அவருக்கு நன்றி கூறி அமர்கிறேன்.

    ஆற்றல் என்றால் அப்பா, ஆளுமை என்றால் அம்மா, அன்பிற்கு உடன் பிறந்த சகோதரி, சகோரர்கள், சண்டைக்குக் குறைவில்லை. என்னை விட மூவரும் படிப்பில் முதன்மையானவர்கள். வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் என்று அப்பாவே உரித்துக் கொடுப்பார். இடி இடித்தால் எல்லோரும் அழைப்பது அருச்சுனா, அம்மாவிற்கு மட்டும் சாந்தி. எல்லோமும் சாந்தி மயம் என் கணவருக்கு. என் சொல்லை புரிந்து நடக்கும். ME Production Engineer என் மகன். வாழ்க்கையை மீண்டும் இவர்களோடு வாழ வேண்டும்.

    பதினோராம் வகுப்பு சித்திலிங்க மடம் அரசு உயர்நிலைப் பள்ளி. தமிழ், ஆங்கிலம் இலக்கணம், வரலாறு, பூகோளம் பாடங்கள் மிகவும் பிடிக்கும்.அன்று படித்தது இன்றும் நினைவில், எப்போதும் பள்ளி ஆசிரியர்களுக்கு முதல் மரியாதை.

    1979 பொன் விழா ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டப்படிப்பில் தமிழாசிரியர் ஆசியுடன் சேர்ந்தேன். படிப்பில் முழுமையான கவனம் மொழி மிகவும் நெருக்கமானது.

    ஐந்து பேர் மட்டுமே கொண்ட வகுப்பறை, அன்றைய தமிழ்த்துறை ஆளுமைகள் நிறைந்த இடம் க.வெள்ளைவாரணன் ,வ.சுப.மாணிக்கம், ச.மெய்யப்பன், ஆறு அழகப்பன், செ.சுவாமி ஐயா, தியாகராஜன், முத்து வீரப்பன், திருநாவுக்கரசு, மாலினி, உண்ணாமலை, ஆனந்த நடராஜ தீட்சதர், அனைவரின் பாதங்களுக்கு மீண்டும் ஒரு முறை சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    1984ஆம் ஆண்டு புலவர் பட்டத்திற்கு M.G.ராமச்சந்திரன் தங்கப் பதக்கம் பெற்ற போது அனைத்துப் போரசிரியப் பெருமக்கள் பாதங்களில் விழுந்து ஆசி பெற்றது நெகிழ்ச்சியான அனுபவம் பட்டமளிப்பு விழாவிற்கு பெற்றோர் வருகை தந்தனர். தாயார் அருமையான புதிய பட்டுச் சேலை அன்று அணிந்து கொள்ள பரிசாகக் கொடுத்தார். தந்தை கைகளில் மோதிரம் அணிவித்து அழகு பார்த்தார். நான் எப்போதும் அப்பாவின் மகள். இன்று வரை அவரின் ஆற்றல் எனக்குள் எந்த செயலிலும் உந்துதலோடு இயங்க வைக்கிறது.

    புலவர் பட்டத்துடன் பி.லிட் முடிக்க ஆசிரியர்களின் ஊக்கம் முதன்மையான காரணம். எம்.ஓ.எல் பட்டத்துடன் பி.எட் முடிக்க தாயின் ஆதரவு காரணமாக அமைந்தது. எம். பில் பட்டம் பெற துறையின் என்னுடைய மூத்த மாணவர்கள் உதவி உந்துதலாக இருந்தது.

    பல்கலைக்கழகத்தில் நான் செல்லப் பிள்ளை. ஆம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாஸ்திரி பவனில் நடக்கும் விழாவில் நிச்சயம் பரிசு பெற்றுவிடுவேன். பல்கலைக்கழக பிற மாணவர்களுக்கு அப்படிதான் அதிகமாக அறிமுகமானேன்.

    1981ல் திருப்பதில் தேசிய அளவில் நடந்த பத்து நாட்கள் இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டது மறக்க முடியாத முதல் வெளியுலக அனுபவம்.[hide]

    1979 லிருந்தே பல்கலைக்கழகத்தில்; நாட்டு நலப்பணித்திட்டத்திலும், தேசிய சாரணர் அமைப்பிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த ஈடுபாடு தான் பின்னாளில் 2005 ஆம் ஆண்டு மாநில அளவில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விருது பெற காரணமாக அமைந்தது.

    கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகப் பணியாற்ற வாய்ப்பளித்த பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி நிர்வாகத்திற்ககும் இந்த நேரத்தில் நான் என் நன்றிகளை மனப்பூர்வமாக கூற விழைகிறேன்.

    விழிப்புணர்வு முகாம்கள், மருத்துவ முகாம்கள், பேரணிகள், நீதி நாடகங்கள், பொதுக் கூட்டங்கள் எண்ணிக்கை அற்ற நிகழ்வுகள், இவைகளெல்லாம் திருமதி. கீதா முகுந்த், திருமதி பூர்ணிமா இவர்கள் திட்ட அலுவலராக உடன் இருந்தால் சாதிக்க முடிந்திருக்கலாம். முனைவர் பட்டமும் இந்த காலத்தில் நான் நிறைவு செய்தற்கு என் நெறியாளர் வ.ச.வண்டார் குழலி அவர்கள் முதன்மைக் காரணம்.

    ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு சிறந்த அலகாகப் பல்கலைகத்தில் பரிசு பெறுவதும், புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாணவர்கள் ராஜ்பாத்தில் அணிவகுத்துச் செல்வதும் இன்று வரையில் தொடர்கிறது.

    மாணவியாக இருக்கும் போதே மாலை நேரத்தில் சுற்றிலுமுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு கல்லூரி விடுதியின் ஒர் அறையில் அவர்களுக்கான பாடங்களைச் சொல்லிக் கொடுதத்து பின்னாளில் பேராசிரியராக உயர்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

    இன்றும் கல்லூரியில் மாணவிகளுக்கான வகுப்பில், மொழிப் பாடங்கள் நல்ல செய்திகளோடு, கலாச்சாரம், பண்பாடு, நல்லொழுக்கம் போதனைகளோடு தான் தொடங்கும். இளம் பருவத்தினர் சிந்தனை மாறாக, வேறாக சில சமயங்களில் தாறுமாறாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இவர்களது சிந்தனையும் ஆற்றலையும் செயல்படுத்திக் கொள்ள தமிழ்த்துறையில் சந்திரகாந்தம் தமிழ் மன்றம் ஆற்றலோடு செயல்படும். பல்வேறு போட்டிகளில் அதன் வாயிலாக மாநில அளவில் பரிசு பெற்று தன்னை உயர்த்திக் கொண்ட மாணவிகள் பலர்.

    ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவில் ஆசிரியர்களைப் பார்க்க ஆவலோடு வரும் மாணவியர்களின் உற்சாகம் ஆசிரியருக்கு யானை பலத்தைக் கொடுத்துவிடுகிறது. ஆசிரியராகப் பிறக்க வேண்டும் என்ற ஆசையும் எழுகிறது.[/hide]

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 13

    கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள்

    (SECRETS OF THE MILLIONAIRE MIND)

    இந்த நூலினை 2005ல் அமெரிக்க நாட்டைச் சார்ந்த டி.ஹார்வ் ஈக்கர் (T. HARV EKER) ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். (தமிழில் வானமாமலை மொழியாக்கம் செய்துள்ளார். கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் வெளியிட்டுள்ளது) பணம் என்று வரும்போது பணக்காரர்கள் சிந்திப்பதுபோல் ஏழைகள் சிந்திப்பதில்லை. கோடீஸ்வரர்களின் பணம் பற்றிய சிந்தனைகள் மிக ஆச்சரியமானது. ஒரு கோடீஸ்வரர் பணம் பற்றிக் கொண்டுள்ள கொள்கைக்கும்; ஏழை பணம் பற்றிக் கொண்டுள்ள சிந்தனைகளுக்கும் நிறைய வேறுபாடுகள். பணம் பற்றி ஒரு கோடீஸ்வரர் கொண்டுள்ள மனநிலையை சாதாரணமானவர்களும் கைக்கொண்டு கோடீஸ்வரர் ஆக முடியும். ஆனால் கோடீஸ்வரர் ஆக நீங்கள் மாறவேண்டுமென்றால் முதலில் விழிப்புணர்வு அதாவது கோடீஸ்வரர்கள் எப்படி சிந்திக்கின்றார்கள் என்று தெரிந்துகொள்வதாகும். சாதாரணமானவர்கள் கோடீஸ்வரர்களாக மாற பதினேழு செல்வ வளக் கோட்பாடுகள் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளன. இந்தப் பதினேழு செல்வ வளக் கோட்பாடுகளை ஒருவர் மனதில் கொண்டு செயலாற்றினாலே போதும், கோடீஸ்வரர்களின் ஆழ்மன ரகசியங்களை நீங்களும் அறிந்து; அதனைக் கைக்கொள்ள முடியும். பாடம் ரொம்ப எளிதானது. வாழ்க்கையில் உயர்நிலைக்குச் செல்ல வேண்டுமானால், உங்களின் பழைய சிந்தனை முறைகளை விட்டுக்கொடுக்கவும், புதியவற்றை ஏற்றுக்கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்கின்றார் ஹார்வ் ஈக்கர்.

    செல்வ வளக் கோட்பாடு

    1. “என் வாழ்க்கையை நான் உருவாக்குகின்றேன்” என்று பணக்கார மனிதர்கள் நம்புகின்றனர். “வாழ்க்கை எனக்கு நேரிடுகிறது” என்று ஏழை மக்கள் நம்புகின்றனர்.
    2. பணக்காரர்கள் வெற்றி பெறுவதற்காக பண விளையாட்டை விளையாடுவார்கள். ஏழை மக்கள் தோற்காமல் இருக்க பண விளையாட்டை விளையாடுவார்கள்.
    3. பணக்காரர்கள் வளமாக இருப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். ஏழை மனிதர்கள் பணக்காரராக விரும்புகின்றனர்.
    4. பணக்காரர்கள் பெரிதாய் சிந்திக்கின்றனர். ஏழைகள் சிறியதாய் சிந்திக்கின்றனர்.
    5. பணக்காரர்கள் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்துவார்கள். ஏழைகள் தடங்கல்கள் மீது கவனம் செலுத்துவார்கள்.
    6. பணக்காரர்கள் மற்ற பணக்காரர்களையும், வெற்றியாளர்களையும் வியந்து பாராட்டுவர். ஏழை மனிதர்கள் பணக்காரர்களையும், வெற்றியாளர்களையும் வெறுப்பார்கள்.
    7. பணக்காரர்கள் ஆக்கப்பூர்வமான வெற்றியாளர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வார்கள். ஏழை மனிதர்கள் எதிர்மறை எண்ணமுடையவர் அல்லது தோல்வியாளர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வார்கள்.
    8. பணக்காரர்கள் தங்களையும் தங்கள் மதிப்பையும் விளம்பரப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளனர். ஏழை மனிதர்கள் விற்பனை மற்றும் விளம்பரம் பற்றி எதிர்மறையாக நினைக்கின்றனர்.
    9. பணக்காரர்கள் தங்கள் பிரச்சினைகளைவிடப் பெரியவர்கள். ஏழை மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளை விடச் சிறியவர்கள்.
    10. பணக்காரர்கள் மிகச் சிறந்த பெறுபவர்களாவர். ஏழை மனிதர்கள் மோசமான பெறுபவர்களாவர்.
    11. பணக்காரர்கள் பலன்களின் அடிப்படையில் ஊதியம் பெற விரும்புவார்கள். ஏழை மனிதர்கள் நேர அடிப்படையில் ஊதியம் பெற விரும்புவார்கள்.
    12. பணக்காரர்கள் “இரண்டும்” என சிந்திப்பார்கள். ஏழை மனிதர்கள் “இரண்டிலொன்று,அல்லது” என சிந்திப்பார்கள்.
    13. பணக்காரர்கள் தங்கள் நிகரச் சொத்து மதிப்பின் மீது கவனம் செலுத்துவர். ஏழை மனிதர்கள் தங்கள் ஊழிய ஊதியம் மீது கவனம் செலுத்துவர்.
    14. பணக்காரர்கள் தங்கள் பணத்தை நன்றாக நிர்வகிக்கக் கூடியவர்கள். ஏழை மனிதர்கள் தங்கள் பணத்தை மோசமாக நிர்வகிக்கக்கூடியவர்கள்.
    15. பணக்காரர்கள் பணத்தை தங்களுக்காக கடினமாக வேலை செய்ய வைப்பார்கள். ஏழை மனிதர்கள் தங்கள் பணத்திற்காக கடினமாக வேலை செய்வார்கள்.
    16. பணக்காரர்களுக்கு அச்சம் இருந்தும் அதை மீறி செயல்படுகின்றனர். ஏழை மனிதர்கள் அச்சம் தங்களைத் தடுத்து நிறுத்திட அனுமதிக்கின்றனர்.
    17. பணக்காரர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டு வளர்கின்றனர். ஏழை மனிதர்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கின்றனர்.

    மேலே சொல்லப்பட்டுள்ள பதினேழு கோட்பாடுகளில் கோடீஸ்வரர்கள் ஏன் மேலும் மேலும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் ஏன் மேலும் மேலும் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று பார்த்தால் அது அவரவர்களின் எண்ணங்கள் தந்த செல்வம் என்பது தெரியும். சிந்தையின் நிறைவே செல்வம் என்பது கூட இங்கே நினைக்கக்கூடிய கருத்துத்தான். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பது கூட ஏழையின் மனதை ஒட்டிய கருத்துத்தான்.[hide]

    கோடீஸ்வரர் மனம் – செயல்கள்

    • எந்தப் பிரச்சினைகளையும் விட நான் பெரியவன். இதை என்னால் சமாளிக்க முடியும் என்று உறுதிகாட்டுபவர் கோடீஸ்வரர் மனநிலைக்குச் சொந்தக்காரர்.
    • பணத்தை நிர்வகிக்கும் பழக்கம், பணத்தின் அளவை விட முக்கியமானது என்பதை நன்கு அறிந்தவர்கள் செல்வந்தர்கள்.
    • என் பணம் எனக்காகக் கடினமாக உழைத்து எனக்காக மேலும் மேலும் பணம் பண்ணுகிறது என்ற கொள்கையுடையவர்கள் பணக்காரர்கள்.
    • பணக்காரர்கள் ஒவ்வொரு டாலரையும் ஒரு ‘விதையாகப்’ பார்க்கின்றனர். இதை விதைத்து பல நூறு டாலர்கள் சம்பாதிக்கலாம். அதை மறுபடியும் விதைத்து இன்னும் பல ஆயிரம் டாலர்கள் ஈட்டலாம் என்ற உறுதியுடையவர்கள் கோடீஸ்வரர்கள்.
    • நான் ஒரு சிறந்த பெறுபவர் ஆவேன். என் வாழ்க்கையில் ஏராளமான பணம் பெறுவதற்கு திறந்த மனதுடனும், விருப்பார்வத்துடனும் இருக்கிறேன் என்று பணக்காரர்கள் சொல்லுகின்றனர்.
    • அவர்களால் முடியும் என்றால் என்னாலும் முடியும் என்று உறுதியுடன் செயல்படுபவர்கள் கோடீஸ்வர மனம் படைத்தவர்கள்.

    கோடீஸ்வரர் ஆக சில அறிவுரைகள்

    இந்நூல் முழுவதுமே பணம் எப்படிச் சம்பாதிப்பது, பணத்தை எப்படிப் பெருக்குவது; பணத்தை எப்படிச் செலவழிப்பது; கோடீஸ்வரராகவே தொடர்ந்து நீடிப்பது எப்படி என்று ஹார்வ் ஈக்கர் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாகக் கூறி விளக்குகின்றார். இந்நூல் முழுமையும் பணம், வெற்றி என்பதற்கான பல அரிய சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒருசில.

    • எண்ணங்கள் உணர்வுகளுக்குச் செல்கிறது. உணர்வுகள் செயல்களுக்குச் செல்கிறது. செயல்கள் பலன்களுக்கு செல்கிறது.
    • நீங்கள் எதன்மீது கவனம் வைக்கின்றீர்களோ, அது விரிவடைகின்றது என்பதை நினைவிற்கொள்க.
    • பணக்கார மனிதர்கள் எப்போதும் மிகச் சிறப்பான விளம்பரதாரர்கள்.
    • பெரிய பிரச்சினைகளை உங்களால் கையாள முடியும் என்றால் இன்னும் பெரிய தொழில்களை உங்களால் கையாள முடியும்.
    • பருந்துகளோடு பறக்க விரும்பினால், வாத்துகளோடு நீச்சலடித்துக் கொண்டு இருக்காதீர்கள்.
    • உங்கள் வருமானத்திற்கு வரையறை வைத்துக்கொள்ளாதீர்கள்
    • எதன் மீது கவனம் செலுத்துகின்றீர்களோ அது விரிவடைகின்றது. எங்கோ கவனம் போகின்றதோ அங்கே சக்தி பாய்கின்றது. பலன்கள் விளைகின்றன.
    • உங்களிடம் உள்ளதை சரியாகக் கையாள முடியும் என்பதை நிரூபித்தால் ஒழிய; உங்களுக்கு அதிகமாக எதுவும் கிடைக்காது.
    • நான் தயாராவேன், நான் சுடுவேன், நான் குறி வைப்பேன்.
    • பணக்காரர்கள் வாய்ப்பைக் கண்டதும் அதில் குதிப்பார்கள். அதனால் மேலும் பணக்காரர் ஆவார்கள்.
    • செயல் எப்போதும் செயலின்மையை வெல்லும்.
    • எந்த எண்ணமும் உங்கள் தலையில் வாடகையின்றி வாழ்ந்துகொண்டு இருக்காது.
    • நீங்கள் நட்சத்திங்களைக் குறி வைத்தால் குறைந்தபட்சம் நிலவையாவது எட்டலாம்.
    • மேலும் சிறப்பான ஒரு எலிப்பொறியை நீங்கள் உருவாக்கினால்; உலகம் உங்கள் வாயிற்படிக்கு பாதையமைத்துக் கொண்டு வரும்.
    • நீங்கள் பணக்காரராக, தகுதியுடையவராக உணர அனுமதிக்கும் விஜயங்களைச் செய்யுங்கள்.

    பணம் பணத்தை ஈர்க்கும்

    உங்களிடம் என்ன இருக்கின்றதோ அதை உடனேயே நிர்வகிக்கத் தொடங்குங்கள். அவ்வளவு விரைவாக உங்களுக்கு மேலும் பணம் சேருவதைப் பார்த்து அதிர்ச்சியடைவீர்கள். உங்கள் நிதிக்குரிய விஜயங்களை சரிவரக் கையாளுகின்றீர்கள் என்பதை பிரபஞ்சத்திற்கு நீங்கள் ஒருமுறை செயல்விளக்கம் அளித்துவிட்டீர்கள் என்றால், பணம் குறித்து அற்புதங்கள் நடக்கக் காண்பீர்கள்.

    பணம் பணத்தை ஈர்க்கும். மிக விரைவில் நீங்களே பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறிவிடுவீர்கள். அப்புறமென்ன ஒத்தது ஒத்ததை ஈர்க்கும். எப்படி பணம் பணத்தை ஈர்க்கும் என்பது ஹார்வ் ஈக்கரின் கொள்கை. இது உண்மையும் கூட. எதையும் விரும்பாமல் அடைய முடியாது. விரும்புதல் சரியாக இருக்கும்போது; விருப்பம் நிறைவேறுவதில் தடையிருக்கப் போவதில்லை.

    நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்று விரும்பி; இந்நூலில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடுகளுடன் செயல்படத் தொடங்கும்போது; உங்கள் வெற்றியை யாராலும் தடுத்திட முடியாது.

    ஒரு பொருளாதார வல்லுநராக எவரும் கருவறையிலிருந்து வெளிவருவதில்லை. ஒவ்வொரு பணக்காரரும் பண விளையாட்டில் எப்படி வெற்றி பெறுவது என்று கற்றுக்கொண்டவரே.

    ஆதலால் நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியும். உங்கள் குறிக்கோள் வாசகம் இதுவாக இருக்கட்டும். “அவர்களால் செய்ய முடியுமென்றால் என்னாலும் முடியும்” “கைதேர்ந்த ஆசான் ஒவ்வொருவரும் முன்பு கையாலாகாத ஆசாமியாக இருந்தவரே” என்று ஹார்வ் ஈக்கர் சொல்வது எல்லோருக்கும் பொருந்தும். நீங்கள் கோடீஸ்வரராக ஆக எனது வாழ்த்துக்கள். இன்றே செயலில் இறங்குங்கள்

    – வாசிப்புத் தொடரும்…[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்நிலை அறிக… முன்னிலை பெறுக

    பூக்கடையில் நின்றால் பூவாசம்

    சாக்கடையில் நின்றால் துர்வாசம்

    ஆனால், நம்மில் பலரும் சாக்கடையில் நின்று கொண்டு, பூவாசத்தை எதிர்ப்பாராப்பது போலத்தான் வாழ்கையில் முக்கியமான சில விஷயங்களில் கூட எதிர்ப்பார்த்து, ஏமாந்து, போராடி, வாழ்க்கையை தோல்வியில் முடித்துக் கொண்டிருக்கிறோம்.

    சிலருக்கு கற்ற கல்விக்கு ஏற்ற தொழில் அமைவதில்லை. சிலருக்கு சொந்த தொழில் நொந்த தொழிலாகிறது. கல்வி, சொந்த தொழில், குடும்பம்,நிர்வாகத் துறைகளில் என்னதான் காலூன்றி கர்ணம் அடித்தாலும், கோலூன்றி நடக்கும் வரை, சமூகத்தில் வேறூன்றி நிற்க முடியாமல் போகிறார்கள்.

    ஆரம்பத்தில் படிப்பறிவில்லாமல் அல்லது படிப்படியாக அனுபவம் பெற்ற, தந்தையால் பிரபலமாய், லாபகரமாக நடந்து கொண்டிருந்த வெற்றி ஸ்தாபனம், ஒரு காலகட்டத்திற்கு பிறகு நன்கு உயர் படிப்பு படித்த தலைமுறையினரால்,நிர்வாகத்தை சரியாக நிர்மானிக்க முடியாமல், நிர்வாகமே, இருந்த அடையாளம் கூட இல்லாமல், போய்விடுவதை அறிவோம்.

    பிள்ளையார் பிடிக்க, குரங்காய் முடிந்த நிலையாக, கழுதை தேய்ந்து, கட்டெரும்பானதை போல, பிரபலமான நிர்வாகங்கள் பல, இன்று இருந்த இடம் தெரியாமல் போனதை சுட்டிக்காட்டும் விதமான தேய்மானத்தைக் குறிக்கும் பழமொழிகள். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தால்.

    அலட்சித்தனமும், மெத்தனமும், சம்பாதித்தது போதும் என்ற சலிப்பும், இயலாமைத்தனமும், தன்னம்பிக்கை குறைபாடுமே காரணமாகிறது. அடுத்து நிர்வாகத்தில் காலத்திற்கு தகுந்த மாற்றம் செய்யாததும், அப்படியே செய்தாலும், செய்வதில் கவனிமின்மையும் முக்கிய காரணமாகிறது.

    ஆக, காலத்திற்கு தகுந்த மாற்றமின்மை, நிர்வாகத்திறமையற்றவர்களின் பொறுப்பின்மை, மொத்ததில் சரியான சூழல்களாலும், மனிதர்களாலும் குழப்படாதே, தொழில் வீழ்ச்சிக்கு காரணமாகிறது என்பது தெளிவாகிறது.

    பொதுவாக, தொழில் என்பது நம் வாழ்வாதாரம் மட்டுமல்ல, நம் அறிவையும், திறமையையும் வெளி உலகிற்கு காட்டி உயர்வதற்கான வாய்ப்பு.

    நிர்வாகம் என்பது வீட்டில் ஆரம்பித்து, பெரிய அலுவலகங்கள் வரை சகல பொறுப்புகளையும், தன் ஆளுமைக்கு கீழ் வைத்துக் கொண்டு உயர்வுக்கான வழிவகுப்பது.

    ஒரு நிர்வாகத்திற்கு முதலீடு தகுந்த இடம், நல்லவிளம்பரம், நிர்வாகத் திறமை, சரியான திட்டமிடல், சரியாக அமைய வேண்டும் இவற்றை நல்லென தீர்மானித்தல், நிர்வாகித்தல் என்ற மூன்று நிலைகளில், சீராக இருக்க வேண்டும்.

    இதில் ஒன்று குறைந்தாலும், தவறினாலும், நிர்வாகமும் முன்னேற்றத்திலிருந்து தழுவி பின்நோக்கி தள்ளிவிடும்.

    யாரும் மற்றவர்கள் தன்னை நிர்வாகிக்கப்படுவதை விரும்புவதில்லை, ஆனால் ஒவ்வொரும் பிறரை நிர்வாகம் செய்யவே ஆசைப்படுகிறேம். ஒரு கம்பெனியில் முதன்மை நிர்வாகி ஒரு வேலையை தனக்கு அடுத்துள்ள ஒரு பொறுப்பாளரிடம் ஒப்படைக்கிறார். அவர் தனக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் அடுத்துள்ளவரிடம் என்று கடை பொறுப்பாளர்கள் வரை தொடர்வதாக வைத்துக் கொள்வோம். இப்படி கை மாறிய காரியத்தில் யார் தவறு செய்தாலும், காரிய கெடுதலுக்கு, சரியாக செய்த மற்றவர்களோடு தலைமை வரையும் பாதிப்பைக் கொடுக்கும்.[hide]

    நிர்வாகத்தில் பொறுப்பு என்பது மெல்லிய கண்ணாடி போன்றது. ஒருவர் கவனக்குறைவாக கையாண்டாலும், மொத்த வளர்ச்சியும், நொறுங்கிவிடும்.

    இதற்கு காரணம், பொறுப்பில்லாதவர்களிடமும், நிர்வாக வளர்ச்சியில் அக்கறைப்படாதவர்களையும் நம்பி பொறுப்பை ஒப்படைத்த தவறு காரணமாகிறது.

    நமக்கு எந்த அளவு நிர்வாக திறன் இருக்கிறது? என்பதை சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். ஒரு செயலை பிறரிடம் ஒப்படைக்கும் போது, இருக்க வேண்டிய கவனம் அவரிடம் இருக்கிறதா? என்று யோசிக்க வேண்டும்.

    ஒரு சிலர் தனக்கு கீழ் உள்ளவர்களின் திறமை, நம்பிக்கையை மனதில் கொண்டு அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் முடிவு.

    தான் நம்பியவர்கள் ஏதாவது சூழ்நிலையில் கை விரித்துவிட்டால், பொறுப்பை வாங்கியவர் கை பிசைந்து செய்வறியாது நிற்க வேண்டியிருக்கும். இதனால் இருவருக்கும் இடையில் பெரும் நம்பிக்கை இழப்பும், சங்கடமும் உருவாக வாய்ப்பிருக்கிறது.

    உன்னை நம்பித்தான் இந்த காரியத்தை கையில் எடுத்தேன் என்று அந்தக் காரியத்தை வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டால், ஒப்படைத்த அந்த காரியம், நன்றாக முடியலாம் அல்லது முடியாமலும் போகலாம்.

    ஆனால், காரியம் நல்லபடியாக முடியும் வரை, நம்பி கொடுத்தவருக்கும், ஏற்றுக் கொண்டவருக்கும் பயமே மேலோங்கி நிற்கும் முடிவில்.

    நாம் எதிர்பார்த்த அளவிற்கு செயல் முழுமை பெறாமல் அதிருப்தியை தந்து, உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்ட நம்மால் எல்லாம் கெட்டது என்ற நிலைக்கு தள்ளிவிடும்.

    திறமையிருந்தும் வெற்றி பெற முடியவில்லையே என்று கவலைப்படுபவர்கள் எல்லோரும், தன்னை தானே நிர்வாகிக்கும் திறமையற்றவர்களாக இருந்து, தனக்கு தானே தவறுகளால் தாக்கமடைந்தவர்கள் என்பதை எனில் இனம் கண்டு கொள்ள முடியும்.

    ஆயிரம் வசதிகள் இருந்தும் தோல்விக்கு காரணம் தன்னை சரியாக நிர்வாகித்துக் கொள்ளாத தன்நிலையும், பன்முக நிர்வாகத்திறமையும் இல்லாமையே மூலக்காரணமாகும்.

    தன்நிலை, நிர்வாகத்திறமை என்றால் என்ன?

    தொடரும்[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் – 70

    எதிர்பார்ப்புகள்… ஏமாற்றங்கள்…

    வாழ்க்கையில் எவ்வளவுதான் வெற்றி கிடைத்தாலும், இடையிடையே தோல்விகள் தோன்றுகின்றன. தொடர்ந்துவரும் தோல்விகள் வெற்றிக் கரங்களை கட்டிப்போட்டுவிடுகின்றன.

    வெற்றி கிடைக்கும்போது மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மனம், தோல்விகள் மனதில் படரும்போது மகிழ்ச்சிக்கு விடைகொடுக்கிறது. கவலைகளை கைப்பற்றி கண்ணீர் வடிக்கிறது.

    சோகங்கள் நிரம்பும் மனதில், குழப்பங்கள் அதிகமாகத் தோன்றுகின்றன. சாதாரண சூழலைக்கூட பிரச்சினைகள் நிறைந்த நிகழ்வாக மாற்றுகின்ற நிலை குழம்பிப்போன மனதினால் உருவாகிவிடுகிறது.

    “உலகம் பிறந்தது எனக்காக” என்று உற்சாகத்தோடு துள்ளிக்குதித்து, மகிழ்ந்து வாழ்க்கையை ரசிக்கும் மணம், சிலவேளைகளில் “நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தொந்தரவாகிவிட்டது. பேசாமல் செத்துத் தொலைக்கலாம்” என்று எதிர்மறை எண்ணங்களோடு கைகோர்த்துக்கொண்டு வாழ்க்கையை சிதைக்க வாய்ப்பை எதிர்பார்க்கிறது.

    “வெற்றியும், தோல்வியும் வீரருக்கு அழகு” என்பார்கள். எனவே, எந்தச்சூழலிலும் தோல்விகள் வரும்போது எதிர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு “இது இப்படி நடந்துவிடுமோ. அப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது?” என்று அலைபாயும் மனதோடு அலையும் மனிதர்கள்தான் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். மற்றவர்களின் நிம்மதியையும் சீர்குலைக்க அவர்களை அறியாமலேயே செயல்படுகிறார்கள்.

    வெற்றியை விரும்புபவர்கள் கண்டிப்பாக எதிர்மறை எண்ணங்களை நீக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அது ஒரு மலைப்பிரதேசம். அடர்ந்த காடு.

    குளிர்ந்த பருவநிலை ஆண்டு முழுவதும் நீடிப்பதால், அங்கு உல்லாச பயணம் சென்றுவர பலரும் விரும்பினார்கள்.

    அங்கு செல்ல மிகக் குறுகிய பாதையில்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும். நாள்தோறும் ஒருமுறைதான் பேருந்தில் சென்றுவரும் வசதி மட்டுமே உள்ள பகுதி அது.

    இந்த மலைப்பிரதேசத்தை நோக்கி தங்கள் பயணத்தை திட்டமிட்டார்கள் ஒரு இளம் தம்பதிகள்.

    பஸ் பயணத்தைத் தொடர்ந்தபோது, இருந்த அவர்களின் மகிழ்ச்சி, நேரம் செல்லச்செல்ல குறைந்துகொண்டே வந்தது. அதிக வளைவுகள்கொண்ட பாதையில் அதிகமாகக் குலுங்கி பஸ் சென்றபோது அவர்களால் இயற்கையை ரசிக்க முடியவில்லை.

    ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், பஸ் கண்டக்டரிடம் விரும்பிக் கேட்டு பஸ்ஸி|ருந்து இறங்கிக்கொண்டார்கள்.

    நடுவழியில் இறங்கிய தம்பதிகள் அடர்ந்த காட்டை உற்றுப்பார்த்தார்கள்.

    சுற்றிலும் பறவைகளின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. தூரத்தில் மயில்கள் நடமாடுவதையும் பார்க்க முடிந்தது. குரங்குகள் கூட்டமாக தாவி விளையாடுவதையும் பார்த்தார்கள். ஆனால், அவர்களால் அந்த எழில்மிக்க காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

    சற்று தூரத்தில் தெரிந்த பாறையை நோக்கி வந்தார்கள்.

    “இந்த உலகத்தில் வாழ்ந்து எங்களுக்கு பயனும் இல்லை. எங்களால் யாருக்கும் இலாபமும் இல்லை. உயிரோடு இருப்பதைவிட செத்துவிடலாம்” என்ற கருத்தில் உறுதியாக இருந்த இளம்தம்பதியினர், பாறை உச்சியில் ஏறிக்கொண்டார்கள்.[hide]

    இருவரும் கையை இருக்கமாக பற்றிக்கொண்டார்கள். பாறை உச்சியிலிருந்து கீழே பார்த்தார்கள்.

    பாறை உச்சியில் முன்னேறிய கால்கள் தடுமாறின. உடலில் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், “எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தற்கொலை செய்துகொள்வோம்” என்பதில் இருவரும் உறுதியாய் இருந்தார்கள்.

    “இங்கிருந்து குதித்தால் நாம் என்ன ஆவோம்?” என்ற பயம் அவர்களை தொற்றிக்கொண்டது.

    அப்போது ‘டமார்’ என பெரிய சத்தம் கேட்டது.

    ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தார்கள்.

    அவர்கள் வந்த பஸ்ஸின்மீது மிகப்பெரிய பாறை விழுந்து கிடந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ் நசுங்கி சுக்குநூறாகிப்போனது. பஸ்ஸில் இருந்த அத்தனைபேரும் இறந்துபோனார்கள். பெரிய பாறையின் கீழ் அவர்களது உடல்கள் உயிரற்ற நிலையில் இரத்த காயங்களோடு கிடந்தன.

    இளம் தம்பதிகள் பஸ்ஸை நோக்கி ஓடி வந்தார்கள்.

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தை நினைத்து அதிர்ந்துபோனார்கள்.

    மனைவி மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

    “பஸ்ஸிலிருந்து நாம் இறங்கியது தவறு” என்று சொன்னாள்.

    கணவனும், “நீ சொல்வது சரிதான்” என்று சொன்னான்.

    இவர்கள் ஏன் இப்படி பேசிக்கொண்டார்கள்?

    இந்த அதிரடி நிகழ்வில் சில உண்மைகள் தௌல்வாகின்றன.

    இளம் தம்பதிகள் பஸ்ஸை நிறுத்தும்படி கேட்காவிட்டால், பஸ் சில நிமிடங்களுக்கு முன்பே அந்த இடத்தைக் கடந்து சென்றிருக்கும். பாறை விழுந்து விபத்து ஏற்படுவதிலிருந்து பயணிகள் அனைவரும் தப்பிப் பிழைத்திருப்பார்கள்.

    “உயிரை விடவேண்டும்” என்று நினைத்தவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். “உயிரோடு வாழ்ந்து மகிழ வேண்டும்”; என்று நினைத்து உல்லாச பயணம் சென்றவர்கள் இறந்துபோனார்கள்.

    “இப்படித்தான் நடக்க வேண்டும்” என்று முடிவு செய்துவிட்டு, முயற்சியுடன் வாழ்வது நல்லதுதான். ஆனால், “முடிவு இப்படி இருக்காவிட்டால் உயிரை விடவேண்டும்” என்று முடிவு செய்வது முட்டாள்தனமான செயலாகும்.

    ஏனென்றால், பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. எதிர்மறையான சிந்தனைகளோடு வாழப் பழகிக்கொண்ட சிலர், எதற்கெடுத்தாலும் “உயிரை விடவேண்டும்” என்று முடிவு செய்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பு பலநேரங்களில் வீணாய் போய்விடுகிறது. நீண்டநாள் உயிர் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

    எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறுவதையும் நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

    மனித வாழ்க்கையில் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழும் காலம் மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. இந்தக் காலத்தை மகிழ்ச்சி நிறைந்த பொற்காலமாக மாற்றுவது நமது மனதில்தான் இருக்கிறது.

    எதிர்மறையான எண்ணங்களை நீக்கி, நேர்மறையான எண்ணங்களோடு வாழ்வதற்கு பழகிக்கொள்பவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றிக்கொள்கிறார்கள். தானும் வெற்றிபெற்று மனவுநிறைவுகொண்ட வாழ்வை மற்றவர்களுக்கும் வழங்குகிறார்கள்.

    தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    மனப்பட்டாசு!

    1. சிறுகட்டுரைகளில் மனப்பட்டாசு:

    மனப்பட்டாசு, மனசாக்லைட் போல நிறைய சொற்கள் என்நினைவில் நிற்குமாறு சிறு சிறு கட்டுரைகள் படித்தேன். அவை, திரு. அ .முத்துலிங்கம் சார் எழுதியவை. அ.முத்துலிங்கம் ஐயாவுடைய கதைகளும் கட்டுரைகளும் இப்பொழுது தினந்தோறும் குழந்தைகளோடு படித்து மகிழும், சோகமாகும், கோபப்படும், வியக்கும், சிரிக்கும், சங்கடப்படும், திணறும் உணர்வுகளை எல்லாம் மாறி மாறி அனுபவிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகிப்போயின.நாங்களும் கதைகளில் ஒன்றிப்போகிறோம்.  ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ என்றொரு புத்தகம்.  ஐந்தாறு வருஷம், அப்படியே ஓரமாக, வைத்திருந்த பின்பு நேன்று அதில் (Mariatu Kamara) மாரியாட்டு காமரா வின், கதையைப்படித்து… கைகள் துண்டிக்கப்பட்ட அளவு வேதனையை மூவரும் உணர்ந்தோம்.   மரியாட்டு என்று எழுதினாலே… ‘ஒரு மாங்காய் கடி’ (The bite of the mango)  என்கிற அவர் எழுதிய புத்தகம் இணையதளத்தில் வருகின்றது.  அ. முத்துலிங்கம் சார் சொல்லும் வரை இவரைப் பற்றிய செய்திகளை படிக்காமல் இருந்துவிட்டோமே! என்று நினைத்த பொழுது… கல்வி கரையில் கற்றது கையளவு என்றெல்லாம் தோன்றி சமாதானம் ஆனது.  இப்பொழுதுதான் மரியாட்டுவைப்பற்றி புதிதாய் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு… அவர் ஒரு சிறுமியாக ‘சியாரா லியோன்’ என்ற ஆப்பிரிக்க தேசத்தில் இருந்தபொழுது தீவிரவாதிகள் அவரது இரண்டு கைகளையும் மணிக்கட்டோடு துண்டித்துவிட்டனர்.  அதன்பின்பும் பல சிரமங்களை அனுபவித்த அவர் இப்பொழுது ‘கனடா’ வில் வாழ்ந்து வருகிறார்.  தீவிரவாதத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவி செய்துவருகிறார்.  “அவர்கள், என், கையைத்தான் வெட்டினார்கள்; ஆனால், குரல் இன்னும் இருக்கிறதே!”  என்று சொல்லும் அவரது மனதில் தெரிவது! உற்சாகம்!

    1. உற்சாகம் என்றாலே… பொம்மி தான்:

    பொம்மிக்கு நிச்சயதார்த்தம்.  கடகடவென மாடி மீதிருந்து ஓடிவந்தான்.  இறங்கி… “ஹாய் மாம்ஸ்… எப்படி இருக்கேன்… கலக்குறனா!  மயக்குறனா” என்று பேச பொழிய ஆரம்பித்தான்.வக்கீல்திருலோகச்சந்தர் பேச கேட்கவா வேண்டும்.  நண்பன் தம்பி… பொம்மி… பட்டப்பெயர்… ‘நினைத்தாலே சிரிக்கும்’ நண்பன்… திடீரென முளைப்பான் ‘பர்த்டே’ அன்று எங்கிருந்தோ ஒரு கேக்கோடு ஆஜராகி சென்டிமென்ட் பிழிந்துவிட்டு முகமெல்லாம் கிரிம் பூசி கலாட்டா செய்துவிட்டு திரும்ப காணாமல் போவான்… ஒரு கொத்து சிம்கார்டுகளில்…  தேவைப்பட்டது படாதது எல்லாவற்றையும் சரியாக கண்டுபிடித்து ஆளுக்குத் தக்கவாறு அள்ளிவிட்டு பேசுவான் புள்ளிவிட்டும் பேசுவான்.  அதென்ன புள்ளிவிட்டு… என்று கேட்டீர்களே ஆனால்…  புள்ளி விவரங்களை சேர்த்து என்று புரிந்துகொள்வோம்.  குழந்தைகளிடம் ஃபேவரிட் ஆக அவனுக்கு ஐஞ்சு நிமிஷமே அதிகம்…

    “அழகு! மாமாவைக் கேளும்மா! செல்லம்

    சாக்லெட் வேணுமா! கூல்ட்ரிங் வேணுமா!

    நம்ம காரும்மா… இரவுண்ட் போலாமா…

    ஐஸ்கிரீம் வாங்கலாமா”

    இதுக்கப்புறம் எந்தக் குழந்தை நம்மை திரும்பிப் பார்க்கும்… எப்படி இவனால் முடிகின்றது… பொம்மிக்கு எல்லாம் அத்துப்படி…

    “மாம்ஸ்… பாப்பாக்கு… அழகுன்னு பேர் வெச்சேன்… வெட்கப்பட்டா… அடுத்து, அதே கையோட உங்களுக்கு ‘கோச்’ ன்னு பேர்வெச்சேன்… துக்கப்படறா”  என்றான்.[hide]

    குழப்பம் வந்தது.

    ‘கோச்’ என்றால் சரியாத்தான்டா உள்ளது.  பயிற்சியாளர் என்றால்…  நன்றாக சொல்லித்தருபவர் தானே!  இதில் என்ன துக்கம் என்றேன்.  அப்பாவியாக! எதிலும் ஒரு உள்குத்து வைத்திருப்பவன். ‘கோச்’ என்றால்… அடிக்கடி கோச்சுக்கிறவர்.  நீங்க எதுக்கெடுத்தாலும் கோச்சுக்கிறதாலதான் உங்க பேர் கோச்.

    குழந்தையை நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு மெரினா பீச்சில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு ஒரு பெரிய குடும்பப்பட்டாளத்தோடு கூப்பிட்டுப்போனா…  கோச்சுக்கிட்டீங்களாம்… என்று பட்டியல் போட ஆரம்பித்தான்… அவனை எதுவுமே செய்யமுடியாது.  அப்படி ஒருநாள் ஒரு பெரிய பட்டாளத்தோடு… தூக்கம் வரவில்லை என… கடற்கரைக்குப் போய்… மௌனராகம் ரேவதி போல… ஆடிப்பாடாத குறையாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வந்த குழந்தைகளிடம் இதை நாம் ஆமோதிக்கவில்லை என்று மட்டுமே தெரிவித்ததற்கு இவ்வளவு பட்டப் பெயர்.  ‘கோச்’சாம்.  இன்னும் வேறு என்னென்ன பட்டப் பெயர் வைக்கப் போகிறானோ? தெரியவில்லை.  ஆனாலும் பொம்மியை முகத்தில் சிரிப்பின்றி பார்க்க முடியாது.  யார் முகத்தில் என்று நீங்கள் கேட்கவில்லை.  அவர் முகத்தில் மட்டும் அல்ல பார்க்கின்றவர் முகத்திலும் தான்.  சிலபேர் அப்படியொரு வரம் வாங்கி வந்திருக்கிறார்கள் போல… அவர்களை பார்க்கும் போது மட்டுமன்றி நினைக்கும் பொழுதே மனதுக்குள் மத்தாப்பு ஒளிர்கின்றது.  மிட்டாய் இருக்கின்றது.  ‘கோச்’ என்கிற வார்த்தையும் ஒரு மிட்டாய் தான்.  மனப்பட்டாசு தான்.

    1. காரணம் தேடும் பட்டாசுகள்:

    கோச் என்றால் பயிற்சியாளர் என்று பொருள்.  ஸ்ரீதர் நம் நண்பர்.  ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  அவர் ஒரு பயிற்சியாளரை தேடிக்கொண்டிருந்தார்.  என்ன விளையாட்டு? என்று கேட்கிறீர்களா?  அலுவலகம் போய் சிந்தாமல் சிதறாமல் வருவது எப்படி என்பதுதான் அவரது பயிற்சித் தேவை.  அதற்கு சில பல டிப்ஸ்கள் கொடுத்தது நன்றாக பணி செய்தது.  ஒரு நாள் அவர் வீட்டுக்கு வந்த பொழுது திடீரென பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போத்தி நினைவுப்பரிசொன்று கொடுத்து புகைப்படம் எடுத்தோம்…

    சார்… சார்… எதுக்கு சார்?  என்று கேட்பதற்குள் அவருக்கு இதெல்லாம் நடந்து முடிந்துவிட்டது.  சந்தோசப்பட்டார்.  கொஞ்சம் குழப்பமும் அடைந்தார்.  நீங்கள் நினைக்கலாம் அன்று அவருக்கு பிறந்தநாள்!  கல்யாண நாள்! என்றெல்லாம்.  பொம்மி போல் உற்சாகப் பட்டோம் எல்லோரும். பிறந்தநாள் தெரியாது. தம்பிக்கு கல்யாணமாகவும் இல்லை.  மனசுக்குள் காரணமில்லாமல் மத்தாப்பூ பற்ற வைக்க கூடாதா என்ன? கேள்வி முளைத்தது.  ஸ்ரீதர் பல உதவிகள் செய்த பொழுதெல்லாம் கால அவகாசம் இருந்ததில்லை அல்லது கைவசம் பூங்கொத்து இருந்ததில்லை.  அன்றைக்கு வசமாக இவையெல்லாம் இருக்கும்பொழுது… வருகை புரிந்தார்.

    இனி காரணம் தேடுவோம் ஸ்ரீதர்.  என்று வாட்ஸ் ஏப் குரூப்பில் புகைப்படதை ஏற்றி… ஏன் இவரை பாராட்டுகிறோம் என்று கண்டுபிடியுங்கள் என்றவுடன்… கல்யாணமா? என்று ஆரம்பித்து தீபாவளி கொண்டாடிவிட்டார்கள் எல்லா நண்பர்களும்.  காரணமில்லாமலேயே நாம் நண்பர்களுக்காக மனப்பட்டாசு கொளுத்தி தீபாவளி கொண்டாடுவோம்… காரணங்கள் கிடைக்கையில் தூரங்கள் தடையாயிருக்க நேரிடும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் மையப்புள்ளி.

    இலத்துவாடியின் நண்பர்களும் அப்படித்தான்… மனப்பட்டாசை நெஞ்சிலேயே வைத்துக்கொண்டு… பல காரணங்களோடு தூரம் குறைய காத்திருக்கிறேன்.  விமல் இப்போதும் சென்னையில்தான் இருக்கிறான், குடும்பத்தோடு… விரைவில் மனப்பட்டாசு வெடிக்கும்![/hide]

    இந்த இதழை மேலும்

    பட்டாசு வெடிப்பதனால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள்

    தீபாவளி பண்டிகை என்பது தீப ஒளிப் பண்டிகையே ஆகும்.

    நமக்குள் இருக்கும் அசுர குணங்களும், கொடிய செயல்களும் முற்றிலும் நீங்கி கொண்டாடும் பண்டிகை நாளே தீபாவளி  பண்டிகை எனும் தீப ஒளித் திருநாள் ஆகும் .

    இதுவே மிகப்பெரிய அறிஞர்களின் , ஞானிகளின் கருத்துமாகும்

    பட்டாசு வெடித்துக் கொண்டாடும் பண்டிகை அல்ல என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    பட்டாசு வெடிப்பதனாள் இயற்க்கைக்கும், மனிதனுக்கும் பல வழிகளிலும் தீமைகள் ஏற்படுகின்றன.

    அத்தீமைகள் பெரிய அளவில் ஒரு தேசத்தையே பாதிக்கின்றது.

    மலைகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் உள்ளிட்ட இயற்கை சுற்றுச்சூழல்கள்,வெடிபொருட்கள் மூலம் வெளியேறும் கரும்புகையால் மாசுபடுவதுடன் வெப்பமும் அதிகரித்து விடுகின்றது .

    தீபாவளி அன்று சாலைகளில் கடும் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடிப்பதால், வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறான இன்னல்கள் ஏற்படுகின்றன.

    இயற்கையை கடவுளாக வணங்கும் பல உலக நாடுகளில் எல்லாம் பட்டாசு உற்பத்திக்கு தடை உள்ளது.விற்பனைக்கும் தடை உள்ளது . என்பது நாம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.

    இதுபோன்ற இயற்கையை முற்றிலும் பேணிக்காக்கும் சட்டம் உள்ள நாடுகள் எல்லாம் செல்வச் செழிப்புடனும்,  இயற்கை வளத்துடனும், ஆரோக்கியத்துடனும் , என்றும் தண்ணீர் பற்றாக்குறை இன்றியும் ,தூய தண்ணீர் கிடைக்கும் நாடுகளாகவும், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்காமல் வருடம் முழுவதும் மிகவும் செழிப்பாக விவசாயம் நடைபெறும் நாடுகளாக சிறந்து விளங்கி வருகின்றன .

    எனவே நம் நாட்டிலும் பொது நலன் கருதி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும்.[hide]

    எனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் , ஒட்டுமொத்தமாக நம் இந்திய நாடு முழுவதும் பெரும் மாசடைவதைத்  தடுக்க வேண்டும்.

    இப்பாதிப்புகள்  இயற்கை மற்றும் மனிதர்களோடு நின்றுவிடாமல் நம்மை சார்ந்து வாழும் அனைத்து விதமான பறவைகள், அனைத்து விதமான விலங்குகள், போன்ற உயிரினங்களுக்கும்  பெரும் பாதிப்புகளையும், பெரும் பிரச்சனைகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகின்றன.[/hide]

    இந்த இதழை மேலும்

    சரியான மனிதர்களோடு ஏற்படுத்திக் கொள்ளும்  உங்கள் தொடர்புகள் உங்களின் வாழ்வை மேம்படுத்துகின்றன

    உங்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு  பார்வை,  உங்களைப்  பற்றிய  மதிப்பீடு,  உங்கள்   திறமைகள் பற்றிய மதிப்பீடு இவைகள்  எல்லாம் உங்களுடைய சுற்றுப்புற சூழலின்  தாக்கத்தினாலும்   நீங்கள் தொடர்பு கொள்கிற மனிதர்களின் ஆளுமைகளாலும்  மாற்றப்படுகின்றன, அழகாக செதுக்கப்படுகின்றன.

    சரியான மனிதர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிற உங்கள் திறமைதான் உங்களுடைய வெற்றிக்கு ஆணிவேராக அமைகிறது. உங்கள் இலக்கை விரைவில் அடைவதற்கும் அது வழிகாட்டியாக அமைகிறது.

    நீங்கள் எவ்வளவு பேரை  அதிகமாக தெரிந்து வைத்திருக்கீறீர்கள்  என்பதைப்  பொறுத்துத்தான்    உங்கள் வெற்றி  தீர்மானிக்கப்படுகிறது.

    உங்களது முயற்சிகளில்  உங்களுக்கு தெரிந்த  ஏதாவது ஒரு மனிதர் சரியான நேரத்தில் சரியான இடத்தில்  உங்களுக்குரிய வாய்ப்புக்களுக்கான கதவைத் திறந்து வைப்பார்கள்.  அது உங்களது வாழ்க்கையை மாற்றிக் காட்டும்.

    உங்களுக்கு உதவி செய்கிற, ஒத்துழைப்பு நல்கிற மனிதர்களை மூன்று வகையாகப்  பிரிக்கலாம்.

    1. உங்களின் தொழில் சம்பந்தப்பட்டவர்கள்
    2. சமுதாயத்தில்   உயர்ந்த   நிலையில் பிரபலமாக இருப்பவர்கள்
    3. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள்

    உங்களுடைய   தொழில் சார்ந்த   தொடர்புகளில்  மிக முக்கியமான பிரபலமான / புகழ் பெற்றவர்கள்,  உங்கள்   தலைவர், உங்களோடு   தொழில்  செய்பவர்கள், உங்கள் கீழ் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள்,  விநியோகஸ்தர்கள் இவர்களில் யார் உங்களுக்கு உதவுபவர்கள் யார்  உங்கள் வளர்ச்சியில் பங்கேற்பவர்கள் என்பதை கண்டறியுங்கள்,  இவர்களில் யாராவது ஒருவர்  உங்கள் வெற்றிக்கு  மூல காரணமாக இருக்கக்கூடும்.

    நீங்கள் சார்ந்து இருக்கக்கூடிய உங்களின் தலைமையை உங்கள் செயல் திறமையின் மூலம் திருப்திப்படுத்தினால், உங்களின் எதிர்காலத்திற்கு அது ஒரு விதையாக  அமையும்.

    உங்கள் தலைமையிடம் உங்களுக்கு நல்ல பெயர் இருந்தால் அது உங்களுக்கு பாதுகாப்பானது, இல்லா  விட்டால்  அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும்.

    உங்கள் தலைமைக்கு எது முதல் பட்ச   முக்கியமானது, எது இரண்டாம் பட்ச முக்கியமானது, எது மூன்றாம் பட்ச முக்கியமானது என்று பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்கள் பணிகளை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள்.  இந்த முறையில் உங்கள் தலைமையிடம் நல்ல அபிப்ராயத்தையும், அருகாமையையும் பெற முடியும், உங்கள் எதிர்காலத்திற்கு அது பெரும் உதவியாக இருக்கும்.

    1) எது முக்கியமானது என்று தேர்வு செய்யும் திறமை அல்லது எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பதை   கண்டறியும் திறமை.

    2) செய்கிற காரியத்தை விரைவாகச் செய்து முடிக்கும் ஆற்றல்

    இவை இரண்டும் உங்கள் உயர்வுக்கு இரு கண்களாக அமையும். உங்கள் தலைமையின் விருப்பத்திற்கேற்ப செயல்களை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்துக் காட்டும் ஆற்றல் உங்கள் தனித்துவத்தை அடையாளம் காட்டும்.

    உங்களோடு பணி புரிபவர்களிடம் நெருக்கமான, சுமூகமான ஆரோக்கியமான   மற்றும்  அன்பான  அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும், மற்றவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் உதவுங்கள்,   ஒரு சிலர் உதவி கேட்பதற்கு தயங்கலாம்,  அவர்களிடம் நேரடியாகச் சென்று ‘நான் எந்த விதத்தில் உங்களுக்கு உதவ வேண்டும’;  என்று கேட்டு உதவுங்கள்,  நீங்கள் ஒருவருக்கு  உதவி செய்தால் அது ஏதாவது ஒரு நேரத்தில் உங்களுக்கு    இரு மடங்காக உங்களுக்குத் திரும்பி வரும், விதையை நடுங்கள் பின் பலனை அறுவடை செய்யுங்கள், ஒரு பூவை நீங்கள்  கொடுத்தால் அது மாலையாகத் திரும்பி வரும், ஒரு விதையைக் கொடுத்தால் அது விருட்சமாகத் திரும்பி வரும்,  ஒரு சுட்டிப்பழத்தைக் கொடுத்தாலும் கூட அது கட்டிக் கரும்பாக திரும்பி வரும், நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அது பல மடங்காக உங்களை வந்து சேரும்.

    உயர்ந்த நிலையில் உள்ள பிரபலமானவர்களோடு தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், ஒரு குழுவோடு உங்களை இணைத்துக் கொள்ளும் போது அந்தக்குழு உறுப்பினர்களோடு தொடர்புகளை   அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும், ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் எந்த காரியமாக இருந்தாலும்  ஓடிப்போய் உதவி செய்யுங்கள், அந்த நண்பருக்கு வேண்டப்பட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள் உங்கள் பணியைக் கூர்ந்து பார்க்கக் கூடும்,  உங்கள்  பணியைப் பாராட்டுவதற்கு வாய்ப்பு  உண்டாகும், அவர்களுடைய அறிமுகம்  உங்களுக்கு  எதிர்காலத்தில்   மிகுந்த பலனைத் தரும்.

    நீங்கள் ஒருவரோடு நெருங்கிப் பழக விரும்பினால்  அவர் கலந்து கொண்ட   நிகழ்ச்சிகளைப் பற்றிய பத்திரிகை செய்தி மற்றும்  புகைப்படங்களை இணைத்து, அவருடைய பேச்சுக்கள் பற்றிப்  புகழ்ந்து  அவருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் அல்லது தொலைபேசியில் பேசுங்கள்  அல்லது  அந்த செய்தியைப்  பகிர்ந்து கொள்ளுங்கள், தொடர்ந்து அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், இந்தத் தொடர்பு ஏதாவது ஒரு  நேரத்தில் உங்களுக்கு உதவியாக வந்து சேரும்,  வேண்டாதவர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளுங்கள்.

    “கழுகுகளோடு பறக்க விரும்பினால், வாத்துகளுடன் இருக்கும் நட்பினை விட்டுவிட வேண்டும்” என்பது  மேலைநாட்டு  பழமொழி.[hide]

    பெரிய மனிதர்களின் தொடர்புகள் சங்கிலித் தொடர் போல ஒன்றிலிருந்து பத்தாதி, பத்திலிருந்து  நூறாகும். அவர்கள் 90 சதவீதம் வாழ்க்கையிலும், தொழிலிலும் ஜெயித்தவர்களாக இருப்பார்கள், உங்களுக்கு இதன் மூலம் வெற்றி வாய்ப்புக்கள் வந்து சேரும், அவர்களில் யாராவது ஒருவரால் உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படக்கூடும், அந்த உறவுப்பாலம் பல இடங்களில்;  துணையாக அமையும்.

    நண்பர்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், நண்பர்களுடைய வட்டாரம் அதிகமாக அதிகமாக    உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

    நண்பர்களுக்கு உதவி செய்யும் போது அதே உதவி உங்களுக்குத் திரும்பிக் கிடைக்கும். நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள் என்று வட்டம் அதிகமாக அதிகமாக நீங்கள் பிரபலம் அடைவீர்கள், சமூதாயத்தில் முக்கியப் புள்ளியாக, தவிர்க்க முடியாத மனிதராக கருதப்படுவீர்கள், சமூக அந்தஸ்து கூடும், உங்களுக்குக் கீழே இருப்பவர்கள் மதிக்க ஆரம்பிப்பார்கள், இவருக்கு “இவரைத் தெரியும்”; என்று  பரவலாகப் பேசப்படுவீர்கள்,  ஏதாவது ஒரு வகையில்  இதற்குரிய பலன் உங்களுக்கு கிடைக்கும், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எதிர்பாராத இடத்தில் எதிர் பாராத நேரத்தில் கிடைக்கும்.

    இதற்கு முழு உதாரணமாக நெஞ்சிற்கினிய நண்பர்  மதிப்பிற்குரிய எம். சண்முகம், முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அவர்களை முழு எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். நெஞ்சிற்கினிய பண்பாளர், பழகுவதற்கு மிகவும் இனியவர், உயர்ந்த குணங்களுடைய மொத்த உருவம்,  பொதுப்பணிக்கென்றே தன்னை  அர்ப்பணித்துக் கொண்டவர்,  ஓய்வறியா  உழைப்பு, உன்னதமான  பண்பு, கள்ளம் கபடம் இல்லாத மனம், ஓடோடிச் சென்று உதவும் குணம்  இவைகள் இவருக்கு பெருமை சேர்க்கிறது.  “கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்”; என்பது திருமறையின்  வாசகம்,  ஆனால் கேளாமலேயே கொடுக்கிற, தட்டாமலேயே திறக்கிற பெரிய மனது இவருடையது, எல்லோரையும் அன்போடு நேசிக்கிற பரந்துபட்ட  உள்ளம்  இவருக்குண்டு, “இதைச் செய்து தாருங்கள்“  என்று யாராவது இவரிடம் கேட்டால் அதைச் செய்து முடிக்கும் வரை இவருக்கு உறக்கம் என்பது  இருப்பதில்லை. நல்லதே செய்து பழக்கப்பட்டதாலும்,நல்லதே பேசிப் பழக்கப்பட்டதாலும், நல்லவரோடே இணைந்து இருப்பதாலும்,இவரைப் போல இருப்பது அரிது என்று பெயரைப் பெற்றவர்.

    நேர்மையும், உண்மையும்  இவருக்கு இரு கண்கள். அடக்கமும் அமைதியும் இவரின் அணிகலன்கள் அன்பு, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனம், அரவணைப்பு, அனுசரிப்பு, புன்சிரிப்பு, எதையும் தாங்கும் இதயம்  இவைகள் இவரின்  போர்க்கலன்கள்.

    இவருடைய நல்ல மனதும், நா  நயமான பேச்சும்  இவரின் அழகுக்கு  அழகு சேர்க்கிறது. “என் கடன் பணி செய்திருப்பதே”  என்பது  இவருக்கு   ஆனந்தம். அந்த சேவையே  இவருக்கு மூச்சுக்காற்று – அதனால் உண்டாகும்  தோழமையே இவருக்கு தென்றல் காற்று.

    விவசாயக்  குடும்பத்திலே  பிறந்து, சட்டப் படிப்பு  படித்து வக்கீலாகப் பதிவு செய்து கொண்டபின், அரசு கூட்டுறவுத் துறையில் சட்ட ஆலோசகராக   பணியாற்றினார். 1997 -ல் தன் பதவியை இராஜினாமா செய்து விட்டு, அரசியலிலே அடியெடித்து வைத்து கிணத்துக்கடவு சட்ட மன்ற தேர்தலில் தி,மு,க  – வின் சார்பில்   வேட்பாளராக நின்று அமோக  வெற்றி பெற்றவர்.

    தான் எம்,எல்,ஏவாக இருந்த போது, அதிகாரத் தோரணை இல்லாதவராக, அரசியல்வாதி என்ற இலக்கணத்திற்கு அப்பாற்பட்டவராக ,மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர், அப்போதும், இப்போதும், எப்போதும் நேர்மைதான் இவருக்கு சுவாசக்  காற்று.

    அந்த கால கட்டத்தில் உயர் அதிகாரிகளோடும், உயர்ந்த  நிலையில் உள்ளவரோடும், இவர் பணிவோடும், இன்முகத்தோடும்  பழகி,  அவர்களின் இதயங்களைத் தொட்டவர். இவரின் பணிவான பழக்கம், அதிகார நட்பு வட்டாரத்தை ஆச்சரியப்படுத்தியது, அதிகப்படுத்தியது, அன்று இவர் அன்போடு பழகிய  அதே பழக்கம் இன்றுவரை  தொடர்வதோடு, அந்தத் தொடர்புகளை புதிப்பித்துக் கொள்ளும் மந்திர சக்தியை வளர்த்துக் கொண்டவர்,   மற்றவர்களுக்காக எந்த நேரத்திலும், எந்த வேலைக்கும்  உயர்அதிகாரிகளிடம்   உரிமையோடு அணுகி  காரியம் சாதி;க்கும் திறமை  இவருக்குண்டு.

    அன்பான மனைவி, அறிவான மகன், அயல்நாட்டு  மருமகள், அழகான, பெருமைக்குரிய மகள்,பொறுப்பான, பொருத்தமான மருமகன்,அற்புதமான பேரன்  இவர்கள் இவரின் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷங்கள்.

    பொள்ளாச்சியில் சார்பு நீதிமன்றம்,நெடுங்சாலைத்துறை செயற்பொறியாளர் அலுவலகம்,சரஸ்வதி தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி க்கு அனுமதி, பிஏபி  பாசனத் திட்டத்தில் ஒரு மடைவிட்டு ஒரு மடை  பாசன முறை,பல பள்ளிகளுக்கு அனுமதிகள் இவைகள் எல்லாம் இவரின் முயற்சியினால் பெற்ற வரங்கள், “நிறைந்த மனம் நிம்மதியின் ஆலயம் என்று சொல்வார்கள், அந்த நிறைந்த மனமும்; நிம்மதியும், சரியான மனிதர்களோடு வளர்த்துக் கொண்ட தொடர்புகளும்  இவரை உச்சத்தில்  நிறுத்தி அழகு பார்க்கிறது.

    வாழ்க்கை தேரின் வடம் பிடிக்க

    வந்தோர் எல்லாம் கை கொடுக்க

    தேர்ந்த மனிதர்களிடம் சேர்ந்து விடு

    தென்றலாய் இணைந்து பழகி விடு

    பழகியவர்  உனக்கு துணை நிற்பர்

    முயற்சியில் ஜெயிக்க தோள் கொடுப்பர்[/hide]

    இந்த இதழை மேலும்

    நில்! கவனி !! புறப்படு !!! – 8

    எடை போடாதீர்கள்! (பாதை 7)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

    அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்” – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

    அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

    எடை போடாதீர்கள் !

    எதையும் பார்த்த நொடியில் முடிவு செய்யும் தன்மை – திறமையா?  வெளுத்தது எல்லாமே பால் தான் – என்று சொல்லிவிடலாமா?

    ஒரு சம்பவத்தை பார்த்த நொடியில் – ஒரு செய்தியை படித்த நொடியில் – யாரோ ஒருவருடைய கருத்தை கேட்ட நொடியில் – உங்களுக்குள் ஒரு அபிப்பிராயம் உருவாகி, அதை உண்மை என்று நம்புகிறீர்களே ? அது சரியல்ல.

    எதையுமே பார்த்த நொடியில் எடை போட்டு பழகிய நான்கு நண்பர்கள் ஒரு நாள் ஒரு ஞானியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றனர்.  நேரில் பார்க்கும்போது அந்த ஞானியை சாதாரணமாகவே எடை போட்டனர்.  தங்கள் திறமையின் மீது கொண்ட அளவிடமுடியாத நம்பிக்கையால் – வாதத்திற்கு அழைத்தனர்.  ஞானியோ “என்னிடம் ஒரு அதிசய கம்பளம் உள்ளது.  அதில் அமர்ந்துகொண்டு கணிப்பவருக்கு – அவர்களின் கணிப்பு சரியாக இருந்தால் அது தங்கக்காசு ஒன்றை பரிசாக தரும்.  தவறாக இருந்தால் மாயத்தேள் ஒன்று அவர்களை கொட்டும்.  அந்த கம்பளத்தில் அமர்ந்து என்னுடன் வாதமிட தயாரா ? என்று பதில் சவால் விட்டார்.

    ஞானியையே சாதாரணமாக எடை போட்டவர்கள் – இந்த சவாலையும் சாதாரண மாகாவே எடை போட்டனர்.  சரி என்றனர்.

    ஞானி “நான் சொல்லப்போகும் கதையின் சம்பவங்களை கூர்ந்து கவனித்து – எது சரி என்று சொல்ல வேண்டும்” என்றார்.

    “காட்டில் மான் ஒன்று குட்டி போட்டது.  தன் குட்டிகளுக்கு இறை தேடி செல்லும்போது வேடன் ஒருவன் விட்ட அம்பு அதன்மேல் பட்டு மான் இறந்து விட்டது.  வெகுநேரமாக தன் தாய் வராததால் – அந்த குட்டி மான்கள் சத்தமிட்டு தன் தாயை அழைத்தது.  அந்த சத்தம் கேட்டு ஒரு நரி அங்கு வந்து எந்த பாதுகாப்பும் இல்லாமல் மிக மிக குட்டியாக இருந்த மான் குட்டிகளை உண்டு மகிழ்ந்தது.  இதை பார்த்த ஒரு சிங்கம் – அந்த குட்டிகளின் மேல் அனுதாபம் கொண்டு, நரி மீது கோபம் கொண்டு அந்த நரியை கொன்றது.  இறந்த மானை எடுத்துச்செல்லும் போது – இதை அறிந்த வேடன், தான் மிகவும் பெரிய பாவத்தை செய்துவிட்டதாக வருந்தி – அனைத்தையும் தன் குடும்பத்தாருக்கு ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு மன்னிப்பு கேட்டு தற்கொலை செய்து கொண்டான்.  அவனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.” இதை பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை இப்போது நீங்கள் சொல்லலாம்.  சட்ட திட்டங்கள் நினைவில் இருக்கட்டும்” – என்றார்.

    முதல் ஆள் சொன்னான் – “வேடன் தற்கொலை செய்து கொண்டது தவறு.  இறக்கம் பார்க்க வேண்டிய தொழில் அல்ல அது” – சொன்ன அடுத்த நொடி – தேள் அவனை தீண்டியது.

    இரண்டாவது ஆள் சொன்னான் – “குட்டிகள் பாவம்.  தாய் அருகில் இல்லாமல் போனது அவற்றின் தவறல்ல. ஆனாலும், அவை சிறிது நேரம் சத்தமிடாமல் இருந்திருந்தால் நரியின் பார்வையிலிருந்து தப்பி இருக்கலாம்” – அடுத்த நொடி – தேள் அவனை தீண்டியது.

    மூன்றாவது ஆள் சொன்னான் – “சிங்கம் என்ன பெரிய நாட்டாமையா?  நரி குட்டிகளை உண்பதற்கும், சிங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.  அதனால் சிங்கம் செய்தது முற்றிலும் தவறு” என்றான்.  அடுத்த நொடி – தேள் அவனை தீண்டியது.

    நான்காவது ஆள் சொன்னான் – “இந்த மாதிரி முட்டாள் வேடனை தலைவனாக கொண்டால் – எந்த குடும்பமும் வறுமையில் தான் வாட வேண்டும்.  இது அவன் குடும்பத்தார்களின் தலை எழுத்து” – என்றான்.  அடுத்த நொடி – தேள் அவனையும் தீண்டியது.

    அனைவரது அனுமானமும் தவறு என்றால் – எது தான் சரி?

    உங்கள் மனதில் இப்போது தோன்றிய இந்தக் கேள்வியையே அந்த நால்வரும் ஞானியிடம் கேட்டார்கள். அவர் சொன்னார் “இயற்கையின் செயலும் அதன் விளைவுமே சரி.  மற்ற அணைத்து அனுமானங்களும் தவறுதான்” – என்பதே சரி.  இயற்கையின் கணக்குப்படி, அந்த வேடனின் குடும்பம் அவனை இழந்து வாட வேண்டும் என்பது விதி.  அதற்கான தொடர் நிகழ்வுகளே பல சம்பவங்களும், மரணங்களும்.  இயற்கையின் விதிப்படி அனைத்தும் சரியே.  அதனால் தான் குட்டிகள் தனது சத்தத்தினால் நரியை வர வழைத்தது.  வேடனையும் ஆழ்ந்த மன சங்கடத்தில் ஆழ்த்தி – புத்தி பேதலிக்கச் செய்தது.  ஆகவே, எதையும் உங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்காதீர்கள்.  அனைத்து விஷயங்களுக்கும் ஒரு மறுபக்கம் கட்டாயம் உண்டு என்று உணருங்கள்” – என்று சொல்ல, அந்த நால்வரும் தங்கள் தவற்றை உணர்ந்து ஞானியிடம் மன்னிப்பு கேட்டனர்.

    உண்மை தான்!

    உங்களை சுற்றிலும் பல விஷயங்கள், சம்பவங்கள், நிகழ்வுகள் நடக்கும்.  பலரும் பல கருத்துக்கள் சொல்வார்கள்.  அது அவர்கள் கண்ணோட்டம்.  அவர்களது கருத்துக்களை, எண்ணங்களை, பேச்சுக்களை ஆதாரமாக கொண்டு எதையும் நீங்கள் எடை போடக்கூடாது.[hide]

    அலுவலகத்தில் உங்கள் சக ஊழியரை முதலாளி கடிந்து – மிகப்பெரிய தண்டனை கூட கொடுத்திருக்கலாம்.  ஒரு படி மேலே போய் – வேலையை விட்டும் நிறுத்தி இருக்கலாம்.  இவையெல்லாம் அவர்களுக்குள் இடையே உள்ள தனிப்பட்ட நிகழ்வுகள்.  உங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.  இதை உணராது நீங்கள் அதனுள் தலையிட – ஒருவேளை அதன் பாதிப்பு உங்களுக்கும் நேரலாம்.

    எனவே தான் சொல்கிறேன்  எடை போடாதீர்கள் !

    இந்த எடை போடும் செயலை நிறுத்தினால் தான் குடும்ப உறவுகளை மேம்படுத்த முடியும்.  உங்கள் உடன் பிறந்த சகோதரன்/சகோதரி – நீங்கள் செய்திராத சில செயல்களை செய்து – சாதனை/பாராட்டு/பரிசு – என்று வென்று உங்களை விட சற்று செல்வாக்காக இருக்கலாம்.  அவரை பெற்றதனால் (மகனாக பெற்றதனால்/நண்பராக பெற்றதனால்) மற்றவர் பெருமை கொள்ளலாம்.  கொண்டாடலாம்.  அது அவர்கள் சார்ந்த வெற்றி.  உங்கள் செயல்பாடு/திறமையோடு “எடை போட்டு” உங்களை திறம் குறைந்ததாக “எடை போடாதீர்கள்” எனவே தான் சொல்கிறேன்  எடை போடாதீர்கள் !

    மற்றவர்களின் விலை உயர்ந்த கார், வாழ்க்கைத்தரம், வாழும் முறை, வெளிநாட்டு பயணம், புகழ், பதவி, மரியாதை – இப்படி பல விஷயங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடத்தான் செய்யும்.ஒவ்வொருவரும் தத்தமது மகிழ்ச்சிக்கு, வெற்றிக்கு, வாழ்வுக்கு தனக்கே தனக்கென்று பயணம் செய்வது – அவரவர்களின்களின் தனிப்பட்ட பாதை, வழி.  உங்கள் பாதையில் வரவில்லை என்பதால் அவர்கள் தொலைந்து போனவர்கள் ஆவதில்லை.

    மற்றவரை பற்றிய உங்களுடைய எடைபோடும் கண்ணோட்டம் – அவர்களை பற்றி சொல்வதைவிட உங்கள் குறுகிய மனோ நிலையை தான் அதிகம் சொல்கிறது. மற்றவர்களை பற்றி “எடை போடும்” தன்மை உங்களிடம் இருந்தால் – கண்டிப்பாக அது நீங்கள் பெருமைப்படும் விஷயம் அல்ல.

    சரி!  எடை போடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

    பயிர்ச்சி முறை :

    1. அடுத்த 24 மணி நேரத்திற்கு உங்களை சுற்றி நடக்கும் எந்த நிகழ்வுகள் பற்றியும் அலசிப் பார்க்காமல், எடை போடாமல் – அது எனக்கு கிடைத்திருக்கும் வெறும் தகவல் மட்டுமே என்று மனதில் கொள்ள முயற்சி செய்யுங்கள்.  இது ஒரு மனப்பயிற்சி.
    2. அது மிகவும் கடினமாக தோன்றினால் – அடுத்த ஒரு மணி நேரத்திற்கு “எடை போடாமல்” (Non – Judgemental) ஆக இருக்க முயற்சி செய்யுங்கள்.

    இந்த மனப்பயிற்சியை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்க எளிய வழி: உங்கள் இலட்சியங்கள், வேலைகள், அதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்னென்ன என்ற ஒரு பட்டியலை தயார் செய்ய உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள்.  உங்கள் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கான திட்டமிடல் என்ற வட்டத்தில் மட்டுமே சுழல்வதால் – மிக விரைவிலேயே “எடை போடும்” எண்ணத்தில் இருந்து விடுபட்டு, எப்போதும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளே உங்கள் இயல்பாக மாறிப்போகும்.

    அப்போது உங்கள் எண்ணமும், வாழ்க்கையும் வெற்றிப்பாதையில் தான் பயணிக்கும்.

    அந்த வெற்றிப்பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.

    Minutes with Mithran – கேள்விகளால் ஒரு வேள்வி

    9.விளையாடுவதற்காக உழைக்கிறீர்களா அல்லது உழைப்பதற்காக விளையாடுகிறீர்களா?  (உதாரணமாக) உங்களது அந்திம காலத்தில் கவலை இல்லாமல், அனைத்து சவுகரியங்களும் நிறைந்து, திருப்தியாக வாழுவதற்காக – இன்று, இப்போது உழைக்கிறீர்களா அல்லது இந்த நொடி மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம், அந்திம காலத்து நிகழ்வுகள் பற்றி அப்போது சிந்தித்தால் போதும் – என்பது போல வாழ்கிறீர்களா ?)

    10. கடைசியாக நீங்கள் எப்போது சிரித்தீர்கள் ? எதற்கு சிரித்தீர்கள் ?

    இங்கே கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் (100 கேள்விகள் இடம்பெறும்) உங்கள் வாழ்க்கைக்கான வழித்துணை.  இந்த கேள்விகளும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வையுங்கள்.  தட்டச்சு செய்து பாதுகாப்பது இன்னும் சிறந்தது.  இந்தக்கேள்விகள் உங்கள் வாழ்க்கை பயணத்துக்கான வரைபடம்.

    பத்து நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பதில்களை மீண்டும் சரிபாருங்கள்.  பதிலில் மட்டுமல்ல – உங்கள் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகி வருவதை நீங்களே கண்கூடாக காணலாம்.  மேலும் தெளிவுக்கு என்னையும் தொடர்பு கொள்ளலாம்.

    திசைகளை தீர்மானியுங்கள் !  திட்டமிடுங்கள் !  செயல்படுங்கள் !

    கேளாய் மகனே கேளொரு வார்த்தை !  நாளைய உலகின் நாயகன் நீயே ![/hide]

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்…

    மனிதன் எப்படி வாழ வேண்டு? மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்று ஒருவன் ஞானியிடம் கேட்டான். அதற்கு ஞானி.

    களிமண்ணால் செய்த பொம்மை, பஞ்சால் செய்யப்பட்ட பொம்மை, சர்க்கரையால் செய்யப்பட்ட பொம்மை என இந்த மூன்று பொம்மைகளையும் கொண்டு வந்து, மூன்று பெரிய கண்ணாடிப் பாத்திரங்களையும் கொண்டு வந்து தனித்தினியாக ஒவ்வொரு பொம்மையை தண்ணீர் உள்ள ஒவ்வொரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊறவைத்தார்.

    களிமண்ணால் செய்த பொம்மை தண்ணீரில் கரைந்து சுத்தமான தண்ணீரை அசுத்தமாக்கியது. இதைப் போல சமுதாயத்தில் தீங்கு செய்பவன் கலங்கிய தண்ணீரைப் போலத் தன் கெட்ட செயல்களால் வன்முறையால் சமுதாயத்தை மாசுபடுத்தி விடுகிறான்.

    பஞ்சால் செய்த பொம்மை தண்ணீரில் ஊறி உருபெருத்திருந்தது. இதைப் போல சிலர் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டு, பல கெட்ட வழிகளில்  பொருளைச் சேர்த்த யாருக்கும் பயன் இல்லாமல் கொழுத்துப் போய் தனக்காக மட்டுமே வாழ்வான்.

    சர்க்கரை பொம்மை தண்ணீரில் உருதெரியாமல் தன்னை கரைத்துக் கொண்டு தண்ணீரை இனிப்பான சுவை கொண்டதாகச் செய்யும். அதைப் போல சமுதாயத்திற்காக  தன்னை அர்ப்பணித்து, தன் செய்கின்ற நல்ல சேவைகளின் வாயிலாக சமுதாயத்தை இனிக்கச் செய்வான். எனவே சர்க்கரை பொம்மை போலத்தான் மனிதன் வாழ வேண்டும் என்று ஞானி செய்து காட்டினார்.

    தனக்காக மட்டும் வாழாமல் சமுதாயத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து நேர்மையோடு சமுதாயக் கடமையை விரும்பிச் செய்கின்ற சமூக நல ஊழியனின் பண்பை எல்லோரும் பாராட்டுவர்.

    அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…