– 2014 – March | தன்னம்பிக்கை

Home » 2014 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஒரு சின்ன சரி

    அது ஒரு பெரிய டெக்ஸ்டைல் தயாரிப்பு நிறுவனம். அன்றைக்கு முதலாளி நிறுவனத்தின் விளம்பரத் துறைக்கு வருவதாகத் தகவல் வந்தது. அதனால் அந்தத் துறையே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சரியான நேரத்திற்கு முதலாளி வந்தார். அந்த மாதம் வெளியிடப்போகிற விளம்பரங்களைப் பார்த்தார். ஸ்லோகன்கள், ஜிங்கிள்ஸ்களை இரண்டு, மூன்று முறை கேட்டார். திருப்தியோடு கிளம்புவதற்கு தயாரானார். அந்த நிறுவனத்தில் யாருமே முதலாளியிடம் நேரடியாகப் பேசுவதற்கு தயங்குவார்கள். அவர் மேல் அப்படி ஓர் மரியாதை. அப்போது அவர் முன்னால் ஓர் இளைஞன் வந்து நின்றான். அங்கு அவன் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தன. “இவன் இப்படி வந்து எதிரில் நிற்கிறானே என்று மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

     “சார்! நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்.

    முதலாளி அவன் முகத்தை ஒரு கணம் பார்த்தார். சீட்டில் அமர்ந்து கொண்டு “என்ன விஷயம்?” என்றார்.

    “நம்ம நிறுவனத்தின் விளம்பரத் துறையில இருக்கற எல்லாரும் ரொம்ப கெட்டிக்காரங்க… மிகச்சிறந்த திறமைசாலிங்க… கிரியேட்டிவிட்டி அதிகம் உள்ளவங்க… இவங்களோட திறமையை நம்ப டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு மட்டும் பயன்படுத்தறது இல்லாம மற்ற வேற கம்பெனிகளுக்கும் விளம்பரம் செஞ்சு கொடுக்கலாமே… இதனால நமக்கு மேலும் விளம்பரங்கள் சேரும் வாய்ப்பு கிடைக்குமே…” என்றான் அந்த இளைஞன்.

    “புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன். அனுபவம் இல்லாதவன் கொடுக்கும் ஐடியா” என்று அதை புறக்கணிக்காமல் ஒப்புதல் கொடுத்தார். விளம்பரத்துறை தனி நிறுவனமாக உருவானது.

    1980ல் துவங்கப்பட்ட அந்த நிறுவனம் “முத்ரா கம்யூனிகேசன்ஸ்”. இந்தியாவிலேயே விளம்பர உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து முன்னணி நிறுவனமாக உயர்ந்தது.

    இந்நிறுவனத்தின் விளம்பரமான குளிர்பான நிறுவனம் “ஐ லவ் யூ ரஸ்னா” 1983ல் அறிமுகப்படுத்தியதன் பயனால் 1986ல் ரஸ்னா இந்தியாவின் மிக அதிகமாக விற்பனையாகும் குளிர்பான கலவையாக பெயர் பெற்றது.

    1998ல் முத்ரா உருவாக்கிய பீட்டர் இங்லாண்ட் (Peter England)ன் விளம்பர வாசகம் “தி ஹானஸ்ட் சர்ட் (“The Honest Shirt”) மூலம் 2 மில்லியன் சர்ட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது.

    ஏர்செல், அசோக் லைலண்டு, ஏசியன் பெயிண்ட்ஸ், கேஸ்ட்ரோல், ஜில்லட், ஐடிசி – ஐசிஐசிஐ, யுனிசெஃப், கோல்கட், கோத்ரேஜ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், எல் & டி, வோல்ஸ்வேகன் என்று பல ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் வெற்றிக்குவித்திட்ட விளம்பரத் தயாரிப்புகளை உருவாக்கி உலக அளவில் தனக்கென தனி இடம் பிடித்தது “முத்ரா கம்யூனிகேசன்ஸ்”

    “உள்ளே நெருப்பு

    உள்ளவருக்கு

    கரித்துண்டும் ஒரு சூரியன்…”

    என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகளில், ஒரு நல்ல ஐடியாவுக்கு உடனே ஓ.கே… என்று சொன்ன அந்த முதலாளி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் முதன்மையான “திரு. திருபாய் அம்பானி”.

    இந்த மாத இதழை

    இலட்சியப் பயணம்

    நாம் வாழ்க்கையில் எதைத் தேடுகிறோம்?

    வசதிகளை.

    சரி. அப்படியென்றால் எத்தனை பேர் வசதியுடன் இருக்கிறோம்? நிச்சியமாக இல்லை. அப்படியே வசதியுடன் இருந்தாலும் சந்தோஷமாக  இருக்கிறோமா? என்றால் அதுவும் இல்லை.

    அப்படியென்றால்… எதையோ இழந்து விட்டோம்? அதைவிட்டு எதையோ தேடுகிறோம்? இதுதான் உண்மை!

    அதற்கு முன்… இந்த சின்ன கதை மூலம் புரிந்து கொள்ள முயல்வோம்.

    கடவுள் ஒருமுறை மனிதனைத்தவிர தன் உயிர்ப்படைப்புகள் அனைத்தையும் அழைத்து கூறினார்.

    “நான் மனிதனுக்கு மிக முக்கியமான அதாவது, மனிதன் தன்னை உருவாக்கிக் கொள்ளவும் உயர்த்திக் கொள்ளவும் தேவையான உன்னதமான ஒரு உண்மையை. அவர்களே உணரும் வரையில் அவர்களால் தேடி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளித்து வைக்க விரும்புகிறேன். அப்படியொரு இடத்தைச் சொல்லுங்கள்” என்றார். பல மிருகங்கள் யோசித்தன…

    முதலில் கழுகு சொன்னது. “சந்திரனுக்குள்  மறைத்து வையுங்கள்” என்று. கடவுள் “வேண்டாம்! ஒருநாள் அங்கு வந்து கண்டு பிடித்துவிடுவான்” என்றார்.

    சுறா மீன், “கடலுக்கடியில் புதைத்துவிடுங்கள்” என்றது. “கூடாது… அங்கும் வந்து தேடுவான்”

    சிங்கம், “என் குகையில் வையுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றது.       “உன்னையே  கொன்று விடுவானே” என கடவுள் மறுத்தார்.

    எலி சொன்னது, “பூமிக்கு அடியில் புதைத்து விடுங்கள்” என்று. “ஹூகூம்… மனிதனின் முதல் முக்கிய வேலையே பூமியைத்தோண்டுவதுதான் அங்கே வேண்டாம்” என்றார்.

     கடைசியாக சிம்பன்சி குரங்கு சொன்னது. “எங்கும் இடம் தேடி அலைய வேண்டாம். பேசாமல்அவனுக்குள்ளேயே மறைத்து வையுங்கள் என்றைக்கும்  அவனக்குள் என்ன இருக்கிறதென்று கண்டுபிடிக்கவே மாட்டான். பத்திரமாகவும்  இருக்கும்” என்றதும்… கடவுள் மகிழ்ந்து போய் “அதுதான் நல்ல இடம். அப்படியே ஆகட்டும்” என்றாராம்.

     அதனால் தானோ என்னவோ… நம்மில் பலர் தன்னை உயர்த்திக் கொள்ளவும். உருவாக்கிக் கொள்ள முடியாமலும், முயற்சி செய்யாமலும் இருக்கிறார்கள் போலும்!  இதைத்தான் “தேடுங்கள் கிடைக்கும்” என்பதுவோ!

    உண்மையில் நாம்  தேடவேண்டியது என்ன? வாழ்வதற்கு ஒரு அர்த்தத்தை… ஒரு குறிக்கோளை! இங்கு நாம் ஒன்றை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும்!வசதியுடன் “இருப்பது” என்பது வேறு வசதியாய் “வாழ்வது” என்பது வேறு நடைமுறையில் “இருக்கிறேன்” என்ற வார்த்தை பொதுவாகிவிட்டதால் அதன் அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘இருக்கிறது” என்பதற்கு “இருப்பு” (சேர்த்தல்) என்று அர்த்தம். அதாவது, வீடு, பணம், இடம், பொருள், இத்யாதிகளை எல்லாம் இது தன் குடும்பத்திற்கு… இது எதிர்காலத்திற்கு என்று சேர்த்து வைப்பதில் குறியாய் இருந்து அலைந்து கொண்டு நிகழ்காலத்தில் அனுபவிக்காமல்  இருப்பது.

    ஆகவே,‘வசதியாய்… சந்தோஷமாய் “இருப்பது” என்பது ஒரு எண்ணம்; அதைத்தான் “குறிக்கோள்” என்றும், அதை அடைந்துவிட்டதாகவும் பலர் நினைக்கிறார்கள்.

     உதாரணமாக,

     “ஏழ்மை இல்லாமல் செய்வதே என் இலட்சியம்” என்று ஒரு தலைவர்  சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய இலட்சியம் எது வரையில்? ஏழ்மை இருக்கும் வரைதானே”

     “தொழிலாளர்களின் நலன்காக்க பாடுபடுவதே என் இலட்சியம்”

    என்று சொல்லும் சங்கத்தலைவரின் இலட்சியம் எதுவரை? அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் வரை அல்லது சங்கப் பதவியிருக்கும் வரை தான். அதன் பின்…?

    தன் பதவி, வசதிகள் போனபின்… குறிக்கோள் என்ற எண்ணமும் போய் விடுகிறது. உதாரணமாக, ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில்  எந்த செடியும் வளராது. அப்படியே வளர்ந்தாலும் உயிருடன் இருக்குமே தவிர, வளராது. இதைத்தான், “உயிருடன் வளராமல் வாழாமல் இருக்கிறோம்” என்பது!

    “வாழ்வது” என்பதற்கு “அனுபவ ஞானம்; பெறுவது” என்று அர்த்தம். அதாவது, ஒவ்வொன்றையும், ஒவ்வொரு செயலையும் எந்தவித மனப்போராட்டமும் நிர்ணயமும், பயமும் இல்லாமல் முழுவிழிப்புணர்வோடு நிகழ்காலத்தில் அனுபவிப்பது. அந்த அனுபவமே, “வாழ்க்கையின் அர்த்தத்தையும் இலட்சியத்தையும்” கற்றுக்கொடுக்கும் “அனுபவ ஞானத்தை” தரும்.

     “இலட்சியவாதிகள் நான்கு வகையில் வாழ்கிறார்கள்.

     1.         சுயஇலட்சியவாதி: தன் முன்னேற்ற இலட்சியத்தில் வாழ்வது. தொழில்  மற்றும் செல்வத்தால் உயர்ந்த மனிதராவது (உலக செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள்)

     2.         தியாக இலட்சியவாதி: நாட்டிற்கான இலட்சியத்தில் வாழ்வது. சுதந்திர போராட்ட தியாகத்தால் உயர்ந்த மனிதராவது (காந்திஜி போன்ற சுதந்திரத் தலைவர்கள்).

     3.         லோக இலட்சியவாதி: உலக முன்னேற்றத்திற்காக வாழ்வது. விஞ்ஞான கண்டிப்பிடிப்புகளால் உயர்ந்த மனிதராவது (விஞ்ஞானிகள்… மேதைகள்…). இவர்கள் முழுமை பெற்ற இலட்சியப் பயணத்தில், தடைக்கற்களில் நடைபயின்று வென்ற இலட்சியவாதிகள். இது எந்த சூழ்நிலையிலும் மாறாது. தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைக்கும் வாழ்வதற்காக எடுத்த   இலட்சியம்”.

     4.         சமய சந்தர்ப்பத்திற்கான இலட்சியம்: இதை இலட்சியம் என்பதைவிட, அந்தந்த சமயங்களுக்காக எடுக்கும் சபதமாகவோ அல்லது தனக்கு கொடுக்கப்பட்ட பொருப்பினை (அ) பதவியினை காப்பாற்றுவதற்கான எண்ணமாகவோ எடுத்துக் கொள்ளலாம். காரணம், இது தற்காலிகமானது.  சூழ்நிலைகள் மாறினால் குறிக்கோளும் மாறிவிடும்.

     இதைத்தான் விவேகானந்தர் சொல்கிறார், “இலட்சியம் ஜடங்களாக இருந்தால்…அதைக் கொண்ட மனிதர்களும் ஜடங்களாகவே இருப்பார்கள்” என்று.

     ஆக, வாழ்க்கை என்பது குறிக்கோளை நோக்கிச் செல்வதல்ல! “வாழ்வதே” குறிக்கோள்தான். இதைத்தான்…“வாழ்க்கை வாழ்வதற்கே! அனுதினம் செத்து செத்து பிழைப்பதற்கல்ல! என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது.

     இப்போது, சிந்தித்து பார்த்தால் நாம் “உயிருடன் இருக்கிறோமா? வாழ்கிறோமா? என்று புரியும். நம் வாழ்க்கையின் அர்த்தம் எதுவென்றும் தெரியும்.

    ஒவ்வொரு மனிதனும் இந்த சிந்தனையை பெற்று விட்டால்… அதுவே மனித வளர்ச்சிக்கான… நாட்டின் முன்னேற்றத்திற்கான முழுமையான இலட்சியப் பயணமாக அமையும்.

    இந்த மாத இதழை

    என் பள்ளி

    பி. ப்ரீத்தா

    ஆதித்யா அப்பரெல் எக்ஸ்போர்ட்ஸ்

    திருப்பூர்

    காலங்கள் பல கடந்தாலும், கடந்த காலத்தை நினைக்கும் பொழுது அதற்கென்று தனி அழகிருக்கும். அதிலும் பள்ளிப்பருவ நாட்களின் நினைவுகளை நினைத்தால் நம்மை அறியாமலேயே ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும். அந்த வகையில் தன்னுடைய பள்ளிக்கால அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் “அப்பரெல் எக்ஸ்போர்ட்ஸ்” நிறுவன மேலாளர் திருமதி. பி. ப்ரீத்தா அவர்கள்.

    என் பெயர் ப்ரீத்தா. எனது கணவர் திரு. ரமேஷ், எக்ஸ்போர்ட் கம்பெனியின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். என் மகன் பெயர் வருண் ஆதித்யா. நான் திருச்சி ரோட்டிலுள்ள ‘அல்வேர்னியா கான்வென்ட்’-ல் பள்ளிக்கல்வியைப் படித்தேன். என் பள்ளியில் எனக்கு பிடித்த ஆசிரியர் திரு. அடிலெய்ட். இவர் தான் பள்ளியின் முதல்வர். இவர் மற்றவர்களுடன் பேசும் விதம் மிகவும் அழகாக இருக்கும். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் திறமையாக தீர்வு காணும் ஆற்றலே இவருடைய சிறப்பு.

    பேசும் பொழுதும் மிகவும் அளவாகத்தான் பேசுவார். அவருடைய அனுபவத்தை அங்கு பயிலும் ஒவ்வொரு மாணவர்களிடம் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டுவார். பள்ளி என்றாலே எனக்கு அவரது நினைப்புதான் வரும்.

    எங்கள் பள்ளியில் நாள்தோறும் யோகா வகுப்பு நடைபெறும். இந்த வகுப்பில் எதைப் பற்றியும் சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளச் சொல்வார்கள். எங்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் நன்றாக வகுப்பை எடுப்பார்.

    ஒருநாள் வகுப்பில் உடலை அமைதி நிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக தரையில் போர்வையை விரித்து அதில் அமர்ந்து தலை முதல் பாதம் வரையிலான பயிற்சியான யோகா சொல்லித்தரப்பட்டது.

     அப்பொழுது நானும் என் தோழியும் அந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிவிட்டோம். என் ஆசிரியர் எங்களை எழுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்களே தானாக எழும் வரை அவர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டார். அதுபோல நான் தூக்கத்திலிருந்து எழும் போது என்னருகில் யாருமே இல்லை. இந்த நிகழ்வு என் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாதது.

     என் பள்ளி வாழ்க்கை முழுவதும் விடுதியிலேயே தங்கித் தான் படித்தேன். விடுதியில் தங்கிப் படிக்கும்பொழுது விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும். நான்கு மணிக்கு எழுந்தால் தான் சரியான நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியும். அப்பொழுது விடுதியில் ஏற்படுத்திய பழக்கம் இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறது.

     நான் படிக்கும் பொழுது விளையாட்டில் எந்தவித ஆர்வமும் எனக்கு இருந்ததில்லை. பள்ளிப்பாடங்கள் முழுக்க முழுக்க ஆங்கில வழியாகவே கற்பிக்கப்பட்டது. பள்ளி ஆண்டுவிழாக்களில் போட்டிகள் பல நடைபெறும். தமிழ் சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்ள யாரும் பெயர் கொடுக்க முன்வரமாட்டார்கள். நான் தமிழ் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். அப்பொழுது மற்ற மாணவர்களை விட எனக்கு பெரிதும் பாராட்டு கிடைக்கப்பெற்றது. அந்த பாராட்டு தான் எனக்கு சாதிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

     பள்ளிக் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தோன்றும் ஒரு எண்ணம் என்னவென்றால் என்ன தான் திறமை நமக்குள் இருந்தாலும் முதலில் யாரும் முன்வர மாட்டோம். அவர்கள் ஏதாவது சொல்வார்களோ? இவர்கள் ஏதாவது சொல்வார்களோ? என்ற பயமிருக்கும். அதை முதலில் ஒவ்வொரு மாணவர்களும் கைவிட வேண்டும். உங்களின் திறமையை அனைவரிடத்திலும் வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும். நான் போட்டியில் பெயர் கொடுத்த பின்னர் தான் மற்றவர்களும் பெயர் கொடுக்க முன்வந்தார்கள்.

     நான் இப்பொழுது வியாபாரத்தில் வெளிநாடுகளுக்கு உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்துவருகிறேன். ஐரோப்பா, வட அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு தேவையான தயாரிப்புப் பொருள்களை அவர்களது தேவையறிந்து, அவற்றைத் திருப்பூரிலுள்ள நிறுவனங்களிடம் சொல்லி வாங்கிக் கொடுக்கும் வணிகம் செய்து வருகிறேன். சில சமயங்களில் மற்ற நிறுவனங்களை நாடாமல் நாங்களே செய்து கொடுத்தும் வருகிறோம்.

     வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறுமுறை வெளிநாடுகளுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும். நான் முதலில் ஹாங்காங் போயிருந்தேன். அப்பொழுது அங்கே அனைவரும் ஆங்கிலத்தில் தான் பேசினார்கள். அவர்களுக்கு இணையாக நானும் ஆங்கிலத்தில் பேசுவதற்கு எனக்கு பெரிதும் துணையாக இருந்தது எனது பள்ளிக் கல்வியில் கற்ற ஆங்கிலம் தான். அச்சமில்லாமல் ஆங்கிலம் பேச எனக்கு எப்பொழுதும் துணை நிற்பது எனது பள்ளிக்கல்வியுடன் இணைந்த ஆங்கிலம் தான்.

     நாம் ஒரு செயலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுத்தவரிடம் சென்று இது நல்லதா? கெட்டதா? என்று கேட்கக்கூடாது. இதுவரையிலும் நான் அப்படி யாரிடமும் கேட்டதே இல்லை. நம்மைவிட இந்த உலகத்தில் மிகப்பெரிய நடுவர் இல்லையென்றே ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். முதலில் ஒரு ஐந்து நிமிடம் திட்டத்தை தீட்டிய பின்னரே ஒரு செயலைச் செய்ய தொடங்க வேண்டும்.

     ஒரு நல்ல மாணவனுக்கு பள்ளிக் கல்விதான் அடிப்படை. இந்தப் பள்ளி வாழ்க்கையில் உங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை நியமிக்கும். இதனால் ஒவ்வொரு மாணவனும் தன்னால் எது முடியும் என்று நினைத்து அதனை நோக்கியே பயணம் செய்தால் நிச்சயம் எதிர்காலம் சிறப்பாக அமையும். வாழ்விலும் வெற்றியும், நம்பிக்கையும் பெற்றுவிடலாம்.

    இந்த மாத இதழை

    வெற்றிக்கு அடிப்படை

    எந்த ஒரு மனிதனும் தன் முயற்சியில் நம்பிக்கை வைத்தால், அவனால் எதையும் செய்ய முடியும். ஏனெனில் அவன் வெற்றியால் உருவாக்கப் பெற்றவன். எடுத்துக்கொண்ட எந்த பணியானாலும் அவன் தோல்வியடைவதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.

    தன் சுயமுயற்சியால் உருவானவர்களின் அற்புதமான வெற்றிகளை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் வெற்றியால் உருவாக்கப்பட்டவர்கள் என்பது உறுதியாகத் தெரியும். அவர்கள் தன் வாழ்க்கையில் முதன் முதலில் தொழிலைச் சுறுசுறுப்புடன் துவங்கியபோது, தான் எடுத்துக்கொண்ட பணியில் எதையும் சாதிக்க முடியும் என்கிற திறமையின் மீது நம்பிக்கையான, மிகத் தீவிரமான மற்றும் உறுதியான எண்ணமும் கொண்டிருந்தனர். அவர்களது மனோபாவம் அவர்களது இலட்சியத்தை அடைவதில் பிடிவாதமான நிலையிலேயே இருந்தது.

    சைரஸ் யஃபீல்டு என்பவர் 35 வயதில் பெரிய செல்வத்தோடு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது காலகட்டத்தில் வாழ்ந்த அனைத்து விஞ்ஞானிகளும் அட்லாண்டிக் பெருங்கடலில் குறுக்கே கம்பிகளை வைப்பது சாத்தியமல்ல என்று அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

    இருந்த போதிலும் அவரது தன்னம்பிக்கை அவருடைய சொத்து முழுவதையும் இழக்கச் செய்து, 50 முறைக்கு மேல் அவரை கடலுக்குள் செல்ல வைத்து, சீற்றம் கொண்ட கடலைப்போல செயலாற்றத் தூண்டியது.

    மனதைத் தளர்வடையச் செய்யக்கூடிய தோல்விகள் மற்றும் ஒத்திவைப்புகளுக்கு இடையிலும் அவர் மீதும், தனது திட்டத்தின் மீதும் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை அவரைத் தனது பணியால் சிறப்பாக நிலைபெறச் செய்தது.

    தனது போராட்டங்கள் அனைத்தும் வெற்றி மகுடம் சூடிக்கொள்ளும் என்றும், தனது சீரிய பணி முடிந்துவிட்டது என்றும், அவர் நினைத்த அந்த நாளிலேயே கடலடிக் கம்பி, நடுக்கடலிலேயே பிரிந்து போனது. ஆனாலும் இறுதிச் சாதனையிலும் அவர் நம்பிக்கை இழக்காமல் தனது எண்ணங்களை இறுதியில் வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

    ஒருவருடைய காரியங்களில் தன்னம்பிக்கை எவ்வளவு அற்புதங்களை உருவாக்கியுள்ளது என்பதற்கு மேற்கூரியவரின் அசாத்திய பணியைக் கூறலாம்.

    நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் தன்னம்பிக்கை மற்றும் நீங்கள் ஆரம்பித்த செயலைச் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை வைத்துத்தான் வாழ்க்கையில் உங்கள் சாதனைகள் நிர்ணயிக்கப்படுகிறது.

     ஆரம்பத்திலேயே நீங்கள் உங்களைப் பற்றி தோல்வியாக நினைத்துவிட்டால், நீங்கள் எந்த ஒரு நிலையையும் அடைய முடியாது. மேலும் நீங்கள் எடுத்துக்கொண்ட எந்தப் பணியிலும் வெற்றிபெற முடியாது. வாழ்வில் என்றும் எதையும் சாதிக்க முடியாது.

     நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி பெறும் சிந்தனையையே எப்போதும் இடைவிடாது, உறுதியாகப் பிடித்துக் கொண்டிருங்கள். உங்களது பணியில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று யாரும் உங்களுக்குத் தெரிவிக்கவோ, யோசனை கூறுவதற்கோ இடமளிக்க வேண்டாம்.

     உங்கள் மீதா உங்கள் நம்பிக்கை தான் உங்களது வெற்றிக்கான ஆதாரமாகும். வெற்றிபெற முன்னேறுவதைப் போல நடந்து முன்னேறிச் செல்லுங்கள். உங்களைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துங்கள். வெற்றி உங்கள் கண்களில் இருந்து உறுதியுடன், ஆவேசமான தீர்மானத்துடன் வெளிப்படுவதற்கு அனுமதியுங்கள்.

     அப்பொழுதுதான் நீங்கள் வெற்றியால் உருவாக்கப்பட்டு வெற்றி பெறும் பழக்கம் கொண்டவராக இருப்பதால் உங்களை அதைரியப்படுத்தக்கூடிய எந்த விஷயமும் இல்லை என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

     நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், நீங்கள் நம்பிக்கையோடு, வெற்றி பெறும் உணர்வோடு ஒரு வெற்றியாளராக உங்களது அன்றாட வேலைக்கு வருகிறீர்களா அல்லது சந்தேகத்தோடு, நம்பிக்கையில்லாத ஒரு தோல்வியுற்ற மனிதராக வருகிறீர்களா என்பதை உங்கள் பணியாளர்கள் சுலபமாகச் சொல்லிவிட முடியும்.

     உங்களது முகபாவம், உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் நடத்தையின் மூலம் நீங்கள் அதே நாளில் வெற்றி பெறப் போகிறீர்களா அல்லது தோல்வியடைவீர்களா என்றும் அவர்களால் சொல்லவிட முடியும்.

     நமது மனோபாவமே நமது வெற்றியை வெளிப்படுத்துகிறது.

     அந்த வெற்றி நமது முகத்திலிருந்து வெளிப்படுகிறது.

              “வெற்றி பெறுபவராகத் தோற்றமளித்து

                ஒவ்வொரு துளியில்     இருந்தும்

                வெற்றியைப் பரப்புவது தான்

                வெற்றியைப் பெறுவதற்கான

                முதற்படியாகும்!”

     வெற்றியின் மனோபாவம் மற்றவர்களிடமிருந்து மட்டுமின்றித் தன்மீதும் நம்பிக்கை உணர்வை உந்தச் செய்கிறது.

     நீங்கள் விரும்பியதைப் போன்ற மனிதனாக ஏற்கனவே ஆகிவிட்டதைப் போல நடைபயின்று பேசிச் செயல்படுங்கள். மேலும் உங்கள் மன உறுதியை நிறைவேற்றுவதற்காகச் சூழ்நிலைகளை இணங்கச் செய்யும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளை நீங்கள் அறியாமலேயே செயல்படுத்துவதாகப் பாவணை செய்யுங்கள்.

     நீங்கள் என்றும் வெற்றியாளராகப் பரிமளிப்பீர்கள். பின்பு எதையும் சாதிப்பீர்கள். சாதிக்கக்கூடிய சக்தியும், ஆற்றலும் உங்களுக்குள் பிறக்கும். பின்பு தோல்விகள் வர மறுக்கும்.

    இந்த மாத இதழை

    இந்திய ராணுவத்தில் அதிகாரி ஆவது எப்படி?

    ஆண்டுதோறும் சுமார் 5000 அதிகாரிகள்  ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து 2 சதவிகிதத்தினரே  இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பயிற்சி பெற தேர்வு அடைகின்றனர்.

    அதிகாரியாக பயிற்சி பெறுவோர் கீழ்காணும் ஏதாவது ஒரு  பயிற்சி கல்லூரியில் சேர்ந்து கனவுகளை நினைவாக்கலாம். 12ம் வகுப்புத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், 11வது வகுப்பு படிக்கும் போது NDA  (தேசிய பாதுகாப்பு அகாதமி) புனேலில் உள்ளது. தேர்வு எழுத கணிதம், ஆங்கிலம், பொது அறிவுக்கான பாடங்களை  நன்கு கற்க வேண்டும். 12வது வகுப்பு  ஆரம்பம் ஆவதற்கு முன்பே ஏப்ரல் மாதத்தில் NDA-II என்ற தேர்வுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டும். NDA-II  தேர்வு பொதுவாக ஆகஸ்ட் மாதம் 3வது ஞாயிறு அன்று நடைபெறும்.

    கணிதம் – 300 மதிப்பெண்கள்

    ஆங்கிலம், பொதுஅறிவு – 600 மதிப்பெண்கள்

    (Negative Marking)  இத்தேர்வின் முடிவுகள் 90 நாட்களில் அறிவிக்கப்படும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 5 நாட்கள் நடக்கும்  நேர்காணல் தேர்வுக்கு (அரசாங்க செலவிலேயே) அழைக்கப்படுவர்.

    நேர்காணல் 2  கட்டமாகப் பிரிக்கப்பட்டு சோதனை நடத்தப்படும்.

    முதல் கட்டம்:   Verbal & Non-verbal Test 1 மணிநேரம்.

    மேலும் Picture Perception and Discussion Test

    இதில் தேர்வு  பெறுவோர் மேலும் நான்கு நாட்கள் பல்வேறு கட்ட தேர்வுகளைச் சந்திக்க வேண்டும்.

    இவைகள் முறையே,  உளவியல் தேர்வுகள், குழு ஆற்றல் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற தேர்வுகள் ஆகும்.

    5வது நாள் அன்று தேர்வு  செய்யும் அனைத்து அதிகாரிகளும் கலந்தாய்வு செய்து தகுதியானவர்களைத் தேர்வு செய்வர்.

    இத்தேர்வு குழு அதிகாரிகளாக  விரும்புவோரிடம் 15 விதமான தகுதிகளை (Officer Like Qualities) எதிர்பார்க்கின்றனர்.

    1.       Factor 1: Planning & Organising

    a.       Effective Intelligence

    b.       Reasoning Ability

    c.       Organising Ability

    d.       Power of Expression

    2.       Factor 2: Social Adjustment

    e.       Social Adoptability

    f.        Co-operation

    g.       Sense of Responsibility

    3.       Factor 3: Social Effectiveness

    h.       Initiative

    i.        Self-confidence

    j.        Speed of Decision

    k.       Ability to Influence the Group

    l.        Livliness

    4.       Factor 4: Dynamic

    m.      Determination

    n.       Courage

    o.       Stamina

    இத்தகுதிகளை மூன்று அதிகாரிகள் தனித்தனியே ஆய்வுசெய்து ஒவ்வொரு மாணவரும் அவர்களின் ஆய்வுகளை எழுத்து மூலமாகத் தெரிவித்து இறுதிகட்ட ஆய்வுத் தகவலருக்கு சமர்ப்பித்து கடைசியில் மூவரிடமும் தேர்வு பெற்றவர்களையே பயிற்சிக்கு பரிந்துரைப்பார்கள்.

    10 +2 (PCM) Technical Entry

     12ம் வகுப்புத் தேர்வில் கணிதம், பௌதிகம், வேதியியல் பாடங்களில் 70% மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் இந்திய ராணுவத்தில், தரைப்படை மற்றும் கப்பல் படைகளில் அதிகாரிகளாக பயிற்சிபெற ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஆண்டுக்கு இருமுறை அளிக்கிறது.

     இப்பயிற்சிக்கு  தேர்வு நேர்முகக் காணல் மட்டுமே. எவ்வித  எழுத்துப் பரிட்சையும் கிடையாது. மாணவர்கள் 17 முதல் 19½   உள்ளவர்கள்  விண்ணப்பம் செய்யலாம். ஜூன்  மற்றும் அக்டோபர் மாதங்களில் கணிணி மூலமாக விண்ணப்பம் ஏற்கப்படும்.

     மாணவர்களின்  மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 5 நாட்கள்  நடைபெறும்.  தேர்வு மையங்கள்  அலகாபாத், போபால், பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ளன. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோர் 3ம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் அரசாங்க செலவில் தங்கள் இருப்பிடத்தில் இருந்து சென்று வரலாம்.

    தேர்வு ஆனவர்கள், மருத்துவத் தேர்வுக்கு அழைத்துச் செல்லப்படுவர். கடற்படையில் 4½ ஆண்டுகளும்,  தரைப்படையில் 5 ஆண்டுகளும் பயிற்சி பெற வேண்டும். இப்பயிற்சி முற்றிலும் இலவசம். மேலும் பயிற்சியின் 4வது ஆண்டு துவக்கத்தில் இருந்து மாதம் ரூ.21,000 உதவித்தொகை அளிக்கப்படும். இறுதியில்  B. Tech  பட்டமும் லெப்டினட் பதவியும் அளிக்கப்படும்.

     கோயம்புத்தூரில் உள்ள Defense Academy என்ற தனியார் பயிற்சி நிறுவனம் NDA / +2 (PCM) Tech Entry இதர SSB தேர்வுகளுக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் துணையுடன் விருப்பம் உள்ளவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிப்பர். இதர விபரங்களுக்கு கர்னல் ஜெயவேல் 094437 20076, www.ssbcoaching.com என்ற முகவரியில் ஆலோசனை தர காத்துள்ளனர்.

    படித்தது போதும், படையில் சேரலாம்,  சேர்ந்த பின் மீண்டும் பட்டப்படிப்பு படிக்கலாம்.

    இந்த மாத இதழை

    பொறுமையாக இருங்கள்

    ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்! பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை. பொறுமை உடையவர்களை, இவ்வுலக மக்கள் மதிப்புடன் நோக்குகிறார்கள் என்று கூற முடியாது. ஆனால் அவர்களிடம் மோதி வீணாகச் சண்டையை வளர்த்துக் கொள்ள எவருமே விரும்ப மாட்டார்கள்.

    எது நடந்தாலும், என்ன நடந்தாலும் அவைகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே ‘பொறுமை’ எனப்படும். எதற்கும் உணர்ச்சி வசப்படாத தன்மையே ‘பொறுமை’ எனப்படும். எதையும் சகித்துக் கொண்டு போவோர் பொறுமையாக இருக்க முடியும்.

    ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போதிலும்கூடத் தன் நிதானத்தை இழக்காமல், நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். பொறுமை உடையவர்கள் மனதில் உறுதி உடையவர்களாகவும், எதையும் தாங்கும் வலிமை படைத்தவர்களாகவும், எப்பொழுதும் அமைதியுடையவர் களாகவும் இருப்பார்கள். பொறுமை இல்லாதவர்களிடம் நீங்கள் இந்தப் பண்பைப் பார்க்க முடியாது.

    பொறுமை உடையவர்களை மிகவும் அமைதியானவர் என்றும், பொறுமைசாலி என்றும், சகிப்புத்தன்மை உடையவர் என்றும், நாகரீகம் தெரிந்த மக்கள் கூறுவார்கள். ஆனால் கீழ்மைப் பண்பு உடையோர், பொறுமை உடையவர்களை “இவன் பயந்த சுபாவமுடையவன்” என்றும், எதிர்த்துப் பேசும் திராணியற்றவன் என்றும், எதற்கும் லாயக்கில்லாதவன் என்றும், உணர்ச்சியில்லாதவன் என்றும், ‘கேனப்பையன்’ என்றும், பலவாறு இழித்துப் பேசியும் பொறுமையுடைய மேன்மை மிகுந்த மக்களைக் கேவலப்படுத்தும் மனப்பான்மையினை இன்று காண்கிறோம். உணர்ச்சியற்றவர்கள், பொறுமை உடையவர்களே என்று அவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.

    பொறுமையுடையோர் இக்கீழ்மைப் பண்பு உடையோரின் பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு, மிகவும் அமைதியாக இருப்பார்கள். எதற்கும் கலங்காதவர்களாகவும் இருப்பார்கள். தமக்கு எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்த போதிலும், அவற்றைப் புன்முறுவலோடு ஏற்றுக் கொள்வார்கள். பொறாமை உணர்வு நிரம்பப் பெற்றவர்கள் வார்த்தைகளாலும், ஆயுதங்களாலும் தாக்குகின்றபோது மிகவும் அமைதி காத்து நன்னெறியில் செல்பவரே, பொறுமைசாலி எனப்படுவார்.

    பொறுமை மிகுந்தோர், எதையும் ஆராய்ந்துப் பார்த்துத் தர்ம நெறியுடன் நடந்து கொள்கிறார்கள். இவர்களிடத்தில் பொறாமையின் சாயலை நீங்கள் காணவே முடியாது. நல்லியல்புகள் நிரம்பப் பெற்ற அனைவருக்குமே பொறுமை மிகுந்தோரை மிகவும் பிடிக்கும். ஆனால் பொறாமை உடையோர்க்குப் பொறுமை மிகுந்தோரைக் கொஞ்சமும் பிடிக்காது.

    பொறாமை உணர்வு அதிகம் உள்ளவர்களையும் கூட, பொறுமை மிகுந்தோர் ஏற்றுக் கொள்வர். பொறுமை உணர்வு உடையவர்கள், மற்றவர்களுடைய குற்றங்களையும், குறைகளையும் கண்டு அவைகளைச் சகித்துக் கொள்வதோடு அவர்களை மன்னித்தும் விடுகிறார்கள்.

    ஆனால் அநீதியையும், அக்கிரமங்களையும் கண்டு, பொறுமை மிகுந்தோர் அமைதியாக இருப்பதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளையும், வீரமறவர்களையும் வெள்ளையர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்த போது, அவர்கள் நமக்கு இழைத்த அநீதியையும், அக்கிரமங்களையும் கண்டு சகித்துக் கொள்ளாமல், நம்முடைய தேசத்தலைவர்கள் பொறுமையிழந்து, வெகுண்டெழுந்து போர்க்குரல் எழுப்பினார்கள். ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிட்டுத் தங்களுடைய உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தார்கள். ‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று சும்மாவா சொன்னார்கள்?

     பொறுமையோடு இருந்தால் எந்தச் செயலிலும் வெற்றியடையலாம். தாமஸ் ஆல்வா எடிசன், விஞ்ஞான ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒரு கருவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பலமுறை முயன்றும் தோல்வி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

    தன்னுடைய உதவியாளரிடன் “நம்முடைய முயற்சியில் ஏதோ பிழை நேர்ந்துள்ளது. இதைச் சரி செய்யுங்கள்.” என்றார் மூன்று ஆண்டுகளாக முயன்றும், அந்த முயற்சியில் இருவரும் தோல்வியே கண்டனர். எடிசனுடைய உதவியாளர் மனமுடைந்து போய் எடிசனிடம் “இனியும் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் நான் வீணடித்து விட்டேன். நம்முடைய முயற்சி தோல்வியடைந்து விட்டது. இனி நான் உதவியாளராக இருக்க விரும்பவில்லை.” என்று கூறினார். அதற்கு எடிசன் மிகவும் அமைதியாக “மிஸ்டர் ஜார்ஜ்! நாம் இன்னும் பொறுமையாகச் செயல்பட வேண்டும். நாம் நிச்சயமாக நம்முடைய முயற்சியில் வெற்றி பெறுவோம்! நாம் மனம் கலங்காமல், எடுத்த காரியத்தில் மேலும் மேலும் முயற்சி செய்து வெற்றி பெறுவோம்! இறைவன் நமக்கு நன்மையே செய்வார். மனத்தைத் தளர விடாதீர்கள்! பொறுமையாக இருந்து, மீண்டும் முயற்சியில் இறங்குங்கள்! கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம்!” என்று கூறினார். எடிசன் கூறியவாறே, தன்னுடைய முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார்.

     பொறுமையைக் கடைப்பிடித்து, இவ்வுலக வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் எவருமில்லை. உணர்ச்சி மேம்பாட்டால் பொறுமையிழந்து, செய்யக்கூடிய காரியங்களில் தோல்வியடைந்து அல்லல் அடைந்தவர்கள் ஏராளம்! மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்களின் வெற்றிக்கு மூல காரணமே, பொறுமைதான்!

     மளிகைக் கடைக்காரர், மிகப்பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு அருகில், அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் குடியிருந்து வந்தார். மளிகைக் கடைக்காரர் மேல் இவருக்கு அளவு கடந்த ‘பொறாமை!’ இதனால் அவர் மேல் சில காரணங்களைச் சொல்லி அவர் கடை முன்னே ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். கொச்சையான வார்த்தைகளை இச்சையாக பேசிவிட்டார். எழுபது வயதான மளிகைக் கடைக்காரரை, முப்பது வயதே ஆன இளைஞர் ‘வாடா, போடா..’ என்றெல்லாம் கூறி வசைபாடி சண்டை போடுவதற்குப் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து விட்டார். ஒரு மணி நேரமாகத் தன் மேல் சொல் அர்ச்சனை நிகழ்ந்தும், எதுவுமே பேசாமல் மௌனச் சாமியாராக இருந்து பொறுமையைக் கடைப் பிடித்து அமைதி காத்தார், முதியவர். பதிலுக்குப் பதில் பேசி வார்த்தை ஜாலங்களில் குதித்திருந்தால், இருவருமே கட்டிப் பிடித்து அடித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கும். அந்த முதியவர் மிகவும் பொறுமையாக இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. பொறுமையாக இருந்து தீமைகளைத் தவிர்த்த முதியவருக்கு மதிப்பு பன்மடங்கு கூடியது.

    பேசாமல் அமைதியாக இருக்கும் மௌனகுரு சாமியைச் சீண்டி விட்டு, அவரின் கோபத்தைக் கிளறி விடும் ‘நல்லவர்கள்’, இந்த நாட்டிலே நிறையப் பேர் இருக்கிறார்கள். மௌனமாக இருப்பவர்கள் – பொறுமை  உடையவர்கள் உணர்ச்சியற்ற ஜடம் என்பது அவர்களது கணிப்பு.

     இன்னும் சொல்லப் போனால் அவர்களை மடையர்களாக எண்ணி, அவர்களிடம் கேட்கக் கூடாத கேள்விகளையெல்லாம் கேட்டு அவர்களைத் திணறடித்து, அவர்களை மிகவும் மோசமாக நடத்தும் ‘உத்தமர்கள்’ நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பொறாமையின் வெளிப்பாடுதான் பொறுமையின்மை ஆகும். மற்றவர்களிடத்தில் உள்ள திறமை, நல்ல பண்புகள், நல்லொழுக்கம், நற்செல்வம், உழைப்பு, உயர்வு ஆகியவைகளைக் கண்டு எந்தத் தகுதியும் இல்லாதவன் பொறாமை கொள்கிறான். அதனால்தான் அவன் தன் பொறுமையை இழக்கிறான்.

      “ஒறுத்தார்க்கு  ஒருநாளை  இன்பம்  பொறுத்தார்க்குப்

      பொன்றும்    துணையும்  புகழ்.””

     உங்களைத் தண்டித்தவர்களை எதிர்த்து நிற்காமல் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமையாக இருப்பவர்களுக்கு உலகம் அழியும் வரையிலும் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

     உங்களுக்கு ஏற்படும் தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போது, பொறுமை என்கிற பண்பு தானாகவே உங்களுக்கு வந்து விடும். உங்களுக்குக் கீழே பணியாற்றுகின்றவர்களிடத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களின் நலங்களுக்காகப் பொறுத்துப் போகின்றவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்.

    பொறுமையாக இருப்பதன் மூலம் கோபத்தை நீங்கள் அடக்கி விட முடியும். நிலம் தன்னைத் தோண்டுபவர்களையும் கூடத் தாங்கிக் கொள்கிறது. அதுபோல உங்களை யாராவது இகழ்ந்து பேசினால் அதை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு உயர்வைத் தரும். திருவள்ளுவர் இந்தக் கருத்தைத் தம் குறளில் கூறியுள்ளார்.

     “அகழ்வாரைத்  தாங்கும்   நிலம்போலத் தம்மை

    இகழ்வாரைப்  பொறுத்தல் தலை”

     பொறுமையுடன் இருப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். எந்தச் செயலையும் ஆராய்ந்து பார்த்துப் பொறுமையாகச் செய்வார்கள். அந்தச் செயல் கண்டிப்பாக வெற்றி பெறும். தளராத முயற்சியோடு உழைக்கின்றவர் பொறுமையோடு செயல்பட்டால் அவர்கள் வெற்றி பெறுவர். பொறுமையை விட மேலான பொக்கிஷம் எதுவுமில்லை. பொறுமை கடலினும் பெரியதாக மதிக்கப்படும். எனவே நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் உணர்ச்சிகளை உச்சத்தில் ஏற்றிக் கொந்தளிப்பை வெளியே காட்டிக் கொண்டிருக்காதீர்கள்! பொறுமையின்மை உங்களையும், உங்களைச் சார்ந்தோரையும் அழித்து விடும். எனவே நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, உலகினர் போற்றும்படி உத்தமராக வாழுங்கள்!

    இந்த மாத இதழை

    இன்னும் வேறு என்ன வேண்டும்?

    “கை இருக்க! கால் இருக்கு! கவலை நமக்கு எதற்கு?

         இலக்கிருக்கு! செயலிருக்கு! இலவசம் நமக்கு எதற்கு?

    இந்த வரிகள் மனித உள்ளத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.

    இன்று மனிதனின் தேவைகள் தான் என்ன?

    அனைவருக்கும் 1. தரமான இலவசக் கல்வி, 2. தரமான இலவச மருத்துவ சிகிச்சை, 3. திறமைக்கேற்ற பணி மற்றும் 4. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, வாகன வசதிகள்.இவை கிடைத்தால் போதாதா? போதும்.ஆனால், யார் இவற்றைத் தருவது?

    முன்பு மன்னராட்சி இருந்தது. மக்களிடம் வரி வசூலித்து, அவர்களது உயிர், உடைமை மற்றும் வாழ்க்கைச் சுதந்திரத்தைப் பாதுகாத்துத் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் போரிட்டனர் என வரலாறு கூறுகிறது.

    மகாபாரதம் என்ற இதிகாசத்தில் சொத்துரிமைக்காகப் பெரும் யுத்தம் நடைபெற்ற விபரம் உள்ளது. அது மன்னராட்சிக் காலம். போரில் பாண்டவர்கள், கிருஷ்ணன் துணையுடன் ஒரு புறமும், கௌரவர்கள், அறிவிற்சிறந்த ஆசான்கள் பீஷ்மர், துரோணர் போன்றோர் வழிகாட்டுதலில் மறுபுறமும் கடுமையாகப் போரிட்டனர்.

    போர் இறுதியை நெருங்கிவிட்டது. தேரோட்டி மகன் என்று இழிசொல்லுக்குப் பாத்திரமான மகாராணி குந்திதேவியின் மூத்தமகன் கர்ணனை, அவன் செய்த தருமம் காத்தது. அந்த தருமம் அனைத்தையும் தானமாகப் பெற கிருஷ்ணன் ஏழை அந்தணர் வடிவத்தில் கர்ணனிடம் செல்கிறார்.

    அந்தணர் கர்ணனிடம் தருமம் கேட்க, “போர்க்களத்தில், உங்களுக்குத் தர என்னிடம் ஒன்றுமே இல்லையே”, என மனம் வருந்திக் கூறுகிறான். “ஏன், நீ செய்த தருமங்களை எனக்குத் தரலாமே” என கிருஷ்ணன் கேட்க, கர்ணன் மனம் மிக மகிழ்ந்து, “அவ்வாறே தருகிறேன்.

    தாரை வார்த்துக் கொடுக்க, சிறிது நீர் கொண்டு வாருங்கள்” என்றான். கிருஷ்ணனோ, அவன் மனம் மாறக்கூடாதென, “உன் உடலில் தைத்துள்ள அம்பை எடுத்து, அந்த இடத்திலிருந்து வெளிவரும் இரத்தம் மூலம் தாரை வார்த்துத் தா” என்றார். கர்ணன் அவ்வாறே, தான், வாழ்நாளில் செய்த எல்லா தருமங்களையும், அதன் பலன்களையும் தாரை வார்த்துக் கொடுத்தான். அந்த நொடியிலேயே கிருஷ்ணன் தன் விசுவரூப தரிசனம் காண்பித்து, “என்ன வரம் வேண்டும்? கேள் கர்ணா!” என்றார். இதைக் கேட்ட கர்ணனோ, “உன் விசுவரூப தரிசனமே என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிதான நான் பெற்ற வரம். இன்னும் வேறு என்ன வேண்டும்? ஒன்றுமே வேண்டாம்” என்றதாய் படித்திருக்கிறோம்.

     இந்தச் சொற்கள் வாயிலிருந்து வர, மனம் நிறைவுற்றிருக்க வேண்டும். அந்த நிறைவு இன்று நம்மிடையே உள்ளதா? அந்த நிறைவான நிலைக்குச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்? சிந்திப்போமா? இன்றைய நிலை தான் என்ன?

     மன்னராட்சி இல்லை; ஆனால், மக்களாட்சி என்ற பெயரில், மக்களின் பிரதிநிதிகள், முன்போலவே, மக்களிடமிருந்து வரிவசூலிக்கிறார்கள். அந்த வரித் தொகையை மக்கள் வசதிக்காகவே செலவிடுவதாய் தெரிவிக்கிறார்கள். வாழ்க்கைச் சுதந்திரத்துக்கு, பகைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற பல கோடி மக்களை இராணுவம் என்ற பெயரில் நியமித்துள்ளனர்.

     எங்கும் ஊழல்!எதிலும் ஊழல்!

     ஆனால், எந்த இடத்தில் பிடித்தாலும் கரடிக்கு முடி என்ற உண்மை போல, இன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டத்திலும் நிரந்தரமான ஊழல்தான் நிலையாகிப் போனது.

     ஊடகங்கள், நீதிமன்றங்கள், மக்கள் நல அமைப்புகள் எனப் பல, இந்த ஊழலைத் தோலுரித்துக் காட்டிய பின்பும், பழைய நடைமுறையே எல்லா இடங்களிலும், எல்லா ஊழல்களுடனும் தொடர்வது எதனால்?

     மக்கள் இவைகளை ஏற்றுக்கொண்டார்களா? அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் இவைகளைக் கண்டுகொள்ளவே இல்லையா? நியாயமான கேள்விதான்.

     ஆட்சியாளர், அதிகாரிகள் நிலை:

     மக்களோடு மக்களாய் இருந்தவர்கள், அடித்த சுழல்காற்று தரையிலிருந்த தூசியை கோபுர கலசத்தின் மேல் வைத்த நிலைக்கு, பதவி, அந்தஸ்து இவற்றில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

    மக்களிடமிருந்து ஒதுங்கி, தனி பங்களா, உயிருக்கு பாதுகாப்பு என்ற வகையில் ஆயுதம் தாங்கியோர் அரண், வாகன அணிவகுப்பு என்று மக்களிடமிருந்து, தொலைவில், எளிதில் அணுகமுடியாத நிலையில் உள்ளனர். மக்களோடு மக்களாய் இருந்த நிலைமாறி, இன்று தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் சந்திப்பெல்லாம் ஆயுதம் தாங்கியோர் அரணுக்குள் இருப்போருடன் என்ற நிலையில் இன்றைய மக்களாட்சி நடந்து கொண்டுள்ளது.

    இவர்களுக்கு எங்கும் செல்ல பயணச் சலுகைகள், எங்கும் தங்கும் உரிமைகள், தன் குடும்பத்தைப் பற்றிய எண்ணமே உண்டாகாதவாறு சுற்றுச்சூழல்.

    ஆனால், ஒரு சில பிரதிநிதிகளைத் தேர்வு செய்த லட்சக்கணக்கான சாதாரண மக்களான வாக்காளர்கள் தாம் செய்த தவறை மறந்து, அவர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளைக் குறை சொல்கின்றனர். மக்கள் நலனில் நாட்டமுள்ள, அதனைச் செயல்படுத்தும் திறமையுள்ள வேட்பாளர்களைப் புறந்தள்ளி, சிறிய ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகளைப் பார்த்து, வாக்குச்சீட்டில் பதித்த முத்திரை தான் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்பதை மறந்துவிட்டனர்.

    பிரதிநிதிகளும் வாக்கு, வெற்றி என்ற வகையில் செய்தவைகளைத் திரும்பப் பெற முயல்கின்றனர். இதன் வெளிப்பாடு தான் கமிஷன், லஞ்சம், ஊழல் என்பன.

     மக்கள் தேவைகள்:

     குடிநீர்: “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதி வாழ்ந்த மண்ணில் இன்று குடிப்பது அனைத்துமே கேன் நீர் அல்லது பாட்டில் நீர். பாட்டில் என்பதிலேயே புரிந்துவிடும்.

     மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது யார்? அரசா? தனியார் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனங்களா? இந்தக் கேள்விக்கான விடையை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்று அரசு நடத்தும் கூட்டங்களிலும் குடிநீராக உபயோகிப்பது தனியாரது குடிநீர் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

     குடிநீருக்கு முன்பு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு ரூ. 1.33 என்றிருந்ததை, இப்போது ரூ. 3.33 என உயர்த்திவிட்டனர். இந்த வரி எதற்கு? நாம் தண்ணீர் பெறாத நாட்களுக்கும் சேர்த்து குடிநீர் வரி கட்டிக் கொண்டிருக்கிறோம்.

     சாலைகள்: மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியாது. வெளியே வந்து, பயணம் செய்ய சாலை வசதிகள் கட்டாயம் தேவை. இன்று இந்தச் சாலை வசதிகளைச் செய்வதும், பராமரிப்பதும் அரசா? தனியாரா?

     மக்கள் நலனைப் புறந்தள்ளி, தனியாரிடம் சாலை அமைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளை ஒப்படைத்து, அந்தச் செலவுகளை ஈடுகட்ட, நாடெங்கும் நுழைவு வரி (Entry Fee) எனும் டோல் கேட் கட்டணங்கள் பல பத்தாண்டுகளுக்கு வசூலிக்கும் உரிமையையும் அரசு வழங்கிவருகிறது.

     இந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மக்களுக்கான பணிகளைத் தாமதிக்காமல் செய்திட, இவர்கள் பயணத்துக்காக பொது மக்களைச் சாலைகளில் பயணிக்கவிடாமல் நிறுத்திவைப்பது. இது உலகின் பல நாடுகளில் இல்லாத நிலை.

     கல்வி: இன்று தரமான கல்வி, சமச்சீர் கல்வி என்ற பெயர்களால், அரசு கல்வி நிலையங்களில் அதிகமான ஊதியம் பெற்று, நல்லதொரு கல்விப் பணியில் ஈடுபட்டோரது பணித்திறமைகளை, குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களில் கடுமையாக உழைத்து நல்ல தேர்வு முடிவுகளைத் தருவோருடன் ஒப்பிட முடிகிறதா?

     அரசுக் கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்களுள் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளி, கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்? ஏன்? நமக்குத் தெரியாதா?

    தனியார் பள்ளி கல்விக்கட்டண உயர்வை எதிர்த்துக் குரல் தரும் பெற்றோர்கள் போல, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர ஏன் குரல் தருவதில்லை? பெற்றோருக்கும் பொறுப்புகளை இடம் மாற்றிவிட்ட திருப்தி.

     பெற்றோர்கள்: இவர்கள் அசாதாரணமானவர்கள். தகுதிக்கு மீறியேனும் தம் குழந்தைகளுக்குத் தரமான, நல்ல கல்வியை அளிப்பதைக் கடமையாகக் கருதி, அதிக கட்டணத்துக்கு ஏற்பாடு செய்து வாழ்கின்றனர்.

     வறுமைக்கோட்டுக்கு அருகிலும், தொட முயற்சி செய்வோரும், கல்விக் கட்டணத்தைத் தம் குடும்ப பட்ஜெட்டில் மறந்துவிட்டனர் அரசின் செயலால். ஆல் பாஸ் என்ற அரசின் கொள்கையால், தம் குழந்தைகளின் படிப்பறிவையும் காணமுடியாத நிலையில் வாழ்கின்றனர்.

    இவர்களது சம்பாத்தியம், குடும்பச் செலவுக்கே போதாத நிலையில், கல்விச் செலவு என்பதை மறந்துவிட்டு, ஏதோ, பள்ளியில் சேர்த்தாச்சு; இனி ஆசிரியர் பொறுப்பு என்று வாழ்கின்றனர்.

    நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய வயதில், எதிர்மறையான எண்ணங்களுடன், பொறாமை மனநிலையில், நல்ல எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழும் மாணவர்களைப் பற்றி என்ன சொல்வது?

     நமது கடமை: “கேள்வி பிறந்தது அன்று ! நல்ல பதில் கிடைத்தது இன்று” என்ற பாடல் வரி நினைவுக்கு வருகிறது. தத்துவ மேதை சாக்ரடீஸ் சொன்னது போல், கேள்வி கேட்டால் தான் பதில் பெற முடியும்.

     இன்று நமக்குத் தேவை தங்கத் தாம்பாளமோ, சொகுசு வாழ்க்கையோ அல்ல. சாதாரண அடிப்படை வசதிகள் தான். இதை எப்படிப் பெறுவது?

     நாம் பிறக்கும் போது, நம் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான அனைத்தும் இயற்கை வழங்கிவிட்டது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அப்படியென்றால், பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம்?  சிந்தனையின் வெளிப்பாடு இதோ!

     நாம் ஒவ்வொருவரும் நம்மை, அதாவது, சுயத்தை நேசிக்க வேண்டும். நேசிப்பது என்பது எப்போதும் எதற்காகவும் குறைகூறாத மனநிலை தான். வீட்டில் நம்முடன் வசிப்போர், அருகில் வாழ்பவர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர் என எல்லோருடனும் அன்பாகப் பழக வேண்டும். இதற்குப் பெயர் ஒத்து வாழ்தல், வள்ளுவர் இதை ‘இசைபட வாழ்தல்’ என்றார்.

     பொறாமை, பகை, வெறுப்பு, விரக்தி, கோபம் என்ற நச்சுக்குணங்களை நம் மனத்திலிருந்து விரட்டிவிட்டு, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் மனநிலையில், உதவிசெய்து வாழ வேண்டும். இதை வள்ளுவர் ‘ஈதல்’ என்றார்.

     பணமே பிரதானம்; எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற மனோபாவம் மாற வேண்டும். “நாய் விற்ற காசு குரைக்குமா?” என விதண்டாவாதம் பேசக்கூடாது. உடல், மனதுக்குத் தீங்குசெய்யும் தீயபழக்கங்களைத் துரத்திவிட்டு, நல்ல செயல்களைச் செய்வோரைப் பாராட்டுவதுடன், எவரிடம் இருந்தும் எதையும் எதிர்பாராமல் வாழும் மனநிலைக்குச் செல்ல வேண்டும். முடியுமா? நிச்சயம் முடியும்.

    அரசின்கடமை: நம்மால் அமைக்கப்படும் அரசு என்பதற்கேற்ப, நம் நலனில் அக்கறையுள்ள பிரதிநிதிகளைத் தேர்வு செய்தால், அவர்களால் கீழ்க்கண்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர முடியும்.

    அனைவருக்கும் வேலை, மக்களைத் தீய பழக்கத்துக்கு ஆளாக்கி, உடலையும் குடும்பத்தையும் உருக்குலைக்கும் தவறான வருவாய் வழிகளை ரத்து செய்வது, ஊழல், லஞ்சம் புரிவோர் யாராக இருந்தாலும், கண்டுபிடித்து, கடுமையான தண்டனை வழங்குதல், மக்கள் பிரதிநிதிகள், மக்களிடையே வாழ்தல், இவற்றுடன் தனி நபர் சொத்துக்களை, கட்சி நிதியை அதிகரிக்க எதையும் செய்யும் அசாதாரணத் தைரியத்தைப் புறந்தள்ளி, தொட்டதற்கெல்லாம் காசு என்ற நிலைமையிலிருந்து விடுபட்டு ஆட்சி செய்யும் மனநிலையைப் பெற வேண்டும்.

     இதெல்லாம் சாத்தியமே! எப்போது? பொதுநலனில் அக்கறையுள்ளவர்கள், ஆட்சிபுரியும் போது, இது ஒன்றுதான் வழி. நாம் விரும்பிய நல்லன அனைத்தும் நடக்கும்.

     “இன்னும் வேறு என்ன வேண்டும்?” ஒன்றே ஒன்று தான். மனமாற்றம் தான். மனம் மாறுங்கள்Ð சூழ்நிலையை மாற்றுங்கள்!

    இந்த மாத இதழை

    சான்றோர் சிந்தனை

    தானங்கள்

    அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வதே வாழ்வு. தனக்கு மட்டுமே வேண்டுமென்று எந்த உயிரும் வாழ்வதில்லை. பூக்கள் வாசனை வெளியிட மறுத்து இதழ்களை மூடிவைப்பதில்லை.  மரம் கனிகளை கொடுக்க மறுப்பதில்லை.

    பிறருடன் தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளும்போது பொருள் குறைந்தாலும் மகிழ்ச்சி கூடும். ஊரின் நடுவே இருக்கும் குளத்தின் நீரானது ஊரில் உள்ள மக்கள் அனைவருக்கும் பயன்படும். அதுபோல பேரறிவு பெற்ற அறிவுடையவனின் செல்வமானது ஊரில் உள்ள அனைவருக்கும் பயன்படும்,

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

    பேரறி வாளன் திரு

    என்கிறார் வள்ளுவர்.

    தானம் செய்யும்போது தானம் செய்கிறோம் என்ற  எண்ணம் துளியும் இல்லாமல் கொடுப்பது தான் சிறந்த தானம். சாஸ்திரங்களில் பல தானங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியமாகக் கருதப்படுவது நான்கு தானங்கள் மட்டுமே.

    அவை. 1) அன்னதானம்   2) சொர்ணதானம் 3) வித்யா தானம் 4) ஞானதானம்

    1. அன்னதானம்

    தானங்களில் முதல் தானம் அன்னதானம். பசி பிணியினை போக்கக் கூடிய இந்த தானம் மட்டும் தான் தானம் பெறுபவர் போதும் போதும் என்று சொல்ல வைக்கும். இது வயிற்றில் உணவு ஜுரணம் ஆகும் வரை இருக்கும். உணவு அளித்தவருக்கு மூன்று மணி நேரம் புண்ணியம் கிடைக்கும்.

    2. சொர்ணதானம்

     செல்வம்  இருப்பவர்கள்,  இல்லாதவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் பணம் அல்லது தங்கத்தை கொடுக்கும் சொர்ண தானம்

    இரண்டாவதாகும். இந்த தானம்  அந்தப் பொருள் தீரும் வரை அந்த புண்ணியம் இருக்கும்.

    3. வித்யாதானம்

     பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கும், கற்றறிந்தோர் மற்றவர்களுக்கும், பணமும் வசதியும் இருப்பவர்கள் வசதியற்ற ஏழை குழந்தைகளுக்கும், ஒரு நல்லாசிரியர் தன் மாணக்கர்களுக்கும் கொடுக்கும் கல்வி தானமே மூன்றாவது தானமாகும். இது வாழ்நாள்  முழுவதும் புண்ணியம் கொடுக்கும் தானமாகும்.

     

    4. ஞானதானம்

    அடுத்தாக ஒரு ஆன்மீக குருவும்,  மகான்களும், ஞானிகளும், யோகிகளும் தன் சீடர்களுக்கும், மக்களுக்கும் காட்டும் ஞான மார்க்க தானம். இது  இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தருவது. இந்த தானத்தை பெறுபவர்கள் பெரும்  புண்ணியவான்கள். இந்த தானம்  யோகத்தை தரும்.

     அதிகமாக உண்பவனுக்கும்  பட்டினி கிடப்பவனுக்கும் யோகம் இல்லை.  ஓயாமல்  உறங்குபவனுக்கும், உறங்காமல் இருப்பவனுக்கும் யோகம் இல்லை. நடுவு நிலையே  யோகம் என்று குறிப்பிடுகிறது பகவத்கீதை.

     பழங்காலத்தில் உண்பதையும் உழைப்பதையும் தவிர வேறு பொழுதுபோக்கு ஏதும் இல்லை. ஞானதானம் பெறுவது எளிதாக இருந்தது. இன்று ஞானதானம் பெறுவது மிகப்பெரிய செயல். அதனால் தான் ஞானத்தைப் பெறுபவர்கள் புண்ணியவான்கள் எனப்படுகிறார்கள்.

     இந்த தானங்களில் சிறந்தது  அன்னதானம். அன்னதானத்தை சிறப்பிக்க ஒரு கதை உண்டு. கொடைக்கு பெயர் பெற்ற மாவீரன்  கர்ணன், மகாபாரத யுத்தம் முடிந்த பின் சொர்க்கத்திலே இருக்கிறான். சொர்க்கத்திலே கர்ணனுக்குப்  பசிக்கிறது. சொர்க்கத்திலே இருப்பவர்களுக்குப் பொதுவாக  பசிக்காது. ஆனாலும் கர்ணனுக்குப் பசிக்கிறது. கர்ணன்  பக்கத்திலே இருக்கிற தேவதூதனைக் கேட்கிறான். எனக்குப் பசிக்கிறது,  நான் என்ன செய்ய என்று? தேவதூதன் பதில் சொல்கிறான், “உனது வலது ஆள்காட்டி விரலை  வாயிலே வைத்துக்கொள் பசி போய் விடும்” என்றான். கர்ணன் தனது வலது ஆள்காட்டி விரலை  வாயிலே வைத்துக் கொண்டான், பசி போய் விட்டது.

     விரலை வாயில் இருந்து எடுத்தான். மீண்டும் பசி வந்தது. கர்ணன் மீண்டும் தேவதூதனிடம் கேட்டான். இது என்ன அதிசயம்? எனது  வலது ஆள்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி போய்விடுகிறது. கையை எடுத்தால் மீண்டும் பசி வந்துவிடுகிறது  எதனால்? என்று கேட்டான்.

     தேவதூதன் சொன்னான். “கர்ணா! நீ மாபெரும் வீரன், மிகப்பெரிய கொடையாளன். வேண்டும் என்று கேட்டு வந்தவருக்கு இல்லை என்ற வார்த்தையை நீ எப்போதும் சொன்னதில்லை. கொடுத்து கொடுத்துச் சிவந்த கரத்திற்கு நீ சொந்தக்காரன். எல்லா தானமும் செய்தாய் நீ. ஆனால் அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதனால் தான் உனக்குப் பசிக்கிறது. ஆனால் கண்ணபிரானும், உடன் வந்தவர்களும் ஒருமுறை துரியோதனுடைய அரசவைக்கு வந்தபோது நீ உனது வலது கையின் ஆள்காட்டி விரலை நீட்டி அதோ! அந்த விதுரர் மாளிகையிலே உங்களுக்கு விருந்து காத்திருக்கிறது என்று சொன்னாய். அன்னம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டிய ஆள்காட்டி விரலுக்கு மட்டும் புண்ணியம் வந்திருக்கிறது. நீ அன்னதானம் செய்திருந்தால் எல்லா புண்ணியமும் உனக்கு வந்து இருக்கும்” என சொன்னான் தேவதூதன்.

     மற்றவர்கள் பசியோடிருக்கும் போது நாம் செய்கிற பிரார்த்தனையோசை இறைவனின் செவிகளில் விழுவது இல்லை. அவர்தம் பசி அவர் காதையும் அடைத்து விடும்.

     ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார், வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்தவருக்காக வடலூரில் சத்திய தருமச் சாலையை நிறுவிச் சாதி, மத வேறுபாடின்றிப் பசித்தோருக்கெல்லாம் உணவிட்டார். ஆகவே, அன்னதானம் மிகச்சிறந்த தானம். இது எல்லா தானத்தையும் விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.

     ஆதலின்  அன்னதானம் செய்யுங்கள்!

    புண்ணியத்தைத் தேடிக் கொள்ளுங்கள்!!

    இந்த மாத இதழை

    வெற்றி உங்கள் கையில் – 3

    சிகரம் தொடும் சிந்தனைகள்

    வெற்றியைப் பற்றி தொடர்ந்து சிந்தித்து செயல்படுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். நல்ல நூல்களைப் படித்ததன் மூலம் அறிவைப் பெருக்கிக் கொண்டு, வெற்றி கண்டவர்கள் பலர் உள்ளனர். அதேபோல் நல்லவர்களோடு பழகி, தரமான அனுபவங்களைப் பெற்று அதன்பின்னர் சிறப்பான வெற்றி பெற்றவர்களும் உண்டு.

    வெற்றியைப் பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும் வெற்றி பற்றிய சிந்தனை எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

    ஒரு பணியை செய்வதற்குமுன்பு, இதனை என்னால் செய்ய முடியுமா? என்று தயங்கி ஒதுங்கும் மனப்பான்மையை மாற்றிக்கொள்வது நல்லது.

    இந்தப் பணியை செய்வதற்கு நான்தான் தகுதியான ஆள்” என்ற நல்ல நம்பிக்கையை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் அந்தப் பணியை செய்வதற்குத் தேவையான சூழலைப் (Situation) பற்றி சிந்திக்க வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இந்த வெற்றிக்கான ரகசியத்தைப் பின்பற்றலாம்.

    “நான் எப்படியும் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தேர்ச்சி பெறுவேன்” என்று ஒரு “வெற்றி சிந்தனையை” மனதிற்குள் கொண்டு வரவேண்டும். இந்த வெற்றி சிந்தனை நல்ல நம்பிக்கையை மனதிற்குள் உருவாக்கும். இதன் மூலம் “அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?” என்னும் அடுத்த சிந்தனை மனதில் தோன்றும்.

    “அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவது எப்படி?” என்று சிந்திக்கின்ற பொழுதுதான் அந்த வெற்றி தருகின்ற மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பற்றி மனம் சிந்திக்கும்.

    “தேர்வில் சிறப்பான வெற்றி பெற்றால் ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். நண்பர்களும், பெற்றோர்களும் பாராட்டி மகிழ்வார்கள். இது எனக்கு மன மகிழ்ச்சியைத் தரும்” என்று ஒரு மாணவன் சிந்திக்கின்ற பொழுதுதான் அந்த வெற்றிச் சிந்தனை அந்த மாணவனுக்குள் ஒரு உந்துசக்தியை உருவாக்கும்.

    “எப்படியாவது வெற்றி பெற வேண்டும்?” என்னும் உந்துசக்தி இளம் பருவத்தில் ஒரு மாணவனை வெற்றியாளனாக மாற்றிக் காட்டுகிறது. எனவே “வெற்றி பெற  வேண்டும்” என எண்ணுபவர்கள் அந்த வெற்றியைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஒரு குறிக்கோளோடு வெற்றிச் சிந்தனைகளுடன் வெற்றி சிந்தனைகளுடன் வாழும்போதுதான் வெற்றிப் படிக்கட்டுகளில் எளிதாக ஏறிச்செல்ல இயலும்.

    கொலம்பஸ் என்பவர் சாதாரண கப்பல் மாலுமியாகத்தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து சின்னஞ்சிறிய கப்பலில் கொலம்பஸ் கடற்பயணம் மேற்கொண்டார். பசிபிக் பெருங்கடலில் அவரது பயணம் இன்னும் சில மாலுமிகளோடு தொடங்கியது. பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்யும்போது கரை எதுவும் தெரியவில்லை. சுமார் 20க்கும் மேற்பட்ட நாட்கள் கடலில் தொடர்ந்து பயணம் செய்ததால் அவர்களுக்கு வேண்டிய உணவும், குடிப்பதற்கான தண்ணீரும் இல்லாத நிலை ஏற்பட்டவும் வாய்ப்பு உருவானது.

    இன்னும் பயணம் செய்தால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற பயம் பலரை தொற்றிக்கொண்டது. “திரும்பிச் சென்றுவிடலாம்” என்று கப்பலிலுள்ள பலரும் நினைத்தார்கள். “திரும்பி நாட்டுக்குச் சென்றுவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்” என்று அவர்கள் நம்பினார்கள். மேலும் சில நாட்கள் அவர்களது பயணம் தொடர்ந்தது.

    இன்னும் பயணம் செய்தால் திரும்பிச் செல்லும்வரை உணவு போதாது என்பதால் அவர்கள் தங்கள் ஸ்பெயின் நாட்டை நோக்கி திரும்பிச்செல்ல முடிவெடுத்தார்கள். ஆனால் கொலம்பஸ் எதிர்த்தார்.

    “நாம் உலகத்தை சுற்றிப் பார்த்து புதியவற்றைக் கண்டுபிடிக்கப் புதியவற்றை கண்டுபிடிக்க புறப்பட்டோம். ஆனால் உணவு இல்லாததாலும், குடிதண்ணீர் இல்லாததாலும் வந்தவழியே திரும்பிச் செல்வது என்பது வெற்றிக்கு வழிவகுக்காது” – என்றுசொல்லி மற்றவர்களின் கருத்தை எதிர்த்தார் கொலம்பஸ்.

    கொள்கைப் பிடிப்போடு தீவிரமாக தனது கருத்தை வலியுறுத்திய கொலம்பஸ்சை எதிர்க்க வழிதெரியாமல் உடனிருந்த மாலுமிகள் தவித்தார்கள்.

    “இன்னும் ஒரே ஒருநாள் மட்டும் நாம் முன்னோக்கி பயணம் செல்வோம். அதற்குள் கரை எதுவும் தெரியாவிட்டால் நாம் திரும்பி நாம் ஸ்பெயின் நாட்டுக்கு செல்வோம். அதுவரை எனக்கு உணவும், தண்ணீரும் வேண்டாம்” என பிடிவாதமாக சொன்னார் கொலம்பஸ்.

    கொலம்பஸின் கோரிக்கையை ஏற்று கப்பலை முன்னோக்கிச் செலுத்தினார்கள். சுமார் 20 மணி நேரம் முடிவதற்குள் புதிய கண்டமான அமெரிக்கா கண்டத்தை கொலம்பஸ் கண்டுபிடித்தார்.

    தாங்கள் எடுத்த முயற்சியில் தோற்றுவிடுவோம் என்ற நிலை வந்தபோதுகூட, தயங்காமல் தைரியமாக முடிவெடுத்தார் கொலம்பஸ். தன்னோடு இருந்த மாலுமிகள் அனைவரும் ‘எதிர்க்குரல்’ எழுப்பியபின்பும் தனது வெற்றிச் சிந்தனையை நிறைவேற்றுவது மட்டுமே நோக்கமாக வைத்திருந்தார் கொலம்பஸ். இந்த கொள்கைப் பிடிப்புதான், “அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ்” என்று அனைவரும் இன்றும் நினைவுகூறும் வகையில் அவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது.

    வெற்றிகயை நோக்கி பயணம் செய்யும் போது ஏராளமான தடைகளும், எதிர்ப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் தடைக்கல்லை எல்லாம் படிக்கல்லாக மாற்றும் அளவுகு;கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்தால் வாழ்க்கையில் வெற்றிகள் பெற முடியும்.

    வெற்றி பயணத்தை தொடரும்போது தோல்விகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இரவுக்கு இன்னொரு பக்கம் பகல் இருப்பதுபோல, உறவுக்கு இன்னொரு பக்கம் பிரிவு இருப்பதுபோல, இன்பத்திற்கு இன்னொரு பக்கம் துன்பம் இருப்பதுபோல வெற்றியின் மறுபக்கம் வேதனைகளாலும், ஏமாற்றங்களாலும், தோல்விகளாலும் நிரப்பப்படலாம். இருந்தபோதும் வெற்றியையும் தோல்வியையும் சரி சமமாக எண்ணிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற பழகிக்கொள்வது இன்றைய #ழலில் தேவையான ஒன்றாகும்.

    எது வெற்றி? என்பது இன்றுவரை யாராலும் பதில் சொல்லமுடியாத கேள்வியாகவே இன்றுவரை அமைந்துவிட்டது. ஏராளமான செல்வம் படைத்து வாழ்க்கையில் பணக்காரனாக இருப்பதுதான் வெற்றி என சிலர் நினைக்கிறார்கள். “நல்ல குடும்பம்” என பெயர் எடுத்தால் அதுவே சிறந்த வெற்றி என்று சிலர் முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த நோயும் இல்லாமல் நல்ல உடல் நலத்தோடு வாழ்ந்துவிட்டால் அதுதான் வெற்றிதரும் வாழ்க்கை என்பது சிலரது எண்ணமாக அமைகிறது. இன்னும்சிலர் மனதில் சந்தோஷமும், திருப்திகரமான வாழ்வும் அமைந்துவிட்டால் அதுவே வெற்றி வாழ்க்கை என அர்த்தம் கொள்கிறார்கள்.

    இ;ங்கு வெற்றி என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. இதுதான் பெரும் வெற்றி என ஒன்றை தீர்மானித்துவிட்டு, ஒருவர் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறார். ஆனால் “ஐயோ பாவம்! வாழ்க்கையில் அர்த்தம் இவனுக்குப் புரியவில்லை” என்று ஆனந்தப்படுபவனைப் பார்த்து இன்னொருவர் பரிதாபப்படுகிறார்.

    இப்படி வெற்றி என்பது எது? என்பதை சரியாகக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகின்ற மனிதர்கள் பலர் இருக்கிறார்கள்.

    எது எப்படி இருந்தாலும், வெற்றி என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. “வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைவதுதான் வெற்றி” என முடிவு செய்தால் வெற்றியைப் பெறுவது எளிதாக அமையும். சிறந்த வாழ்க்கை வாழப் பழ கிக்கொண்டால் எடுத்த காரியத்தில் எப்போதும் வெற்றி பெறலாம்.

    இந்த மாத இதழை

    மகத்தான மனிதர்களுள் மறைந்திருந்த சக்தி

    இன்றைய நவீன சீனாவின் பல கோடி இளைய சமுதாயத்தை கவர்ந்து, அவர்கள் மிகச்சிறந்த மனிதர்களாக ஆவதற்கு மூலகாரணமாக இருந்த 60 வெளிநாட்டு முக்கிய தலைவர்கள் அடங்கிய பட்டியலை, அந்த நாட்டு அரசு பத்திரிக்கையான “குளோபல் டைம்ஸ்” அண்மையிலே கருத்துக்கணிப்பை நடத்தி வெளியிட்டது. அதிலே குறிப்பிடத்தக்கவர்களாக,

    பிரிட்டனின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் “மார்க்கரேட் தாட்சரும்”, அதிசயத்தக்க விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் மற்றும் ஐசய் நியூட்டனும், நம் நாட்டு தலைவர்களான பண்டிட் ஜவஹர்லால் நேரு, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் இடம் பெற்றிருந்தனர்.

     இதிலே சிறப்புக்குரிய செய்தி என்னவென்றால், 1962ம் ஆண்டு நடந்த சீன, இந்திய போருக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு என சீனநாட்டு சில நிபுணர்களால் குற்றம் சுமத்தப்பட்டு அந்த நாட்டிலே பகிரங்கமாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    அந்த பகிரங்க குற்றச்சாட்டையும் தாண்டி, அந்த மகத்தான தலைவனை, சீன இளைய சமுதாயம் முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டது உலக அதிசயச் செய்தி தானே.

    இன்றைய சூழலில், இருவருக்கிடையே ஏற்படக்கூடிய ஒரு சின்ன கருத்து வேறுபாட்டுக்காக ஜென்ம விரோதியாகி மாறிப்போய் விடுகின்ற நிலையில் அப்படி என்ன தனித்தன்மை பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் இருந்தது. பகை உணர்வையே மறக்கச் செய்யும், அது தான் எது?

    மனித குலம் மேன்மை பெற அவதரித்த மகத்தான தலைவர்களை உற்றுநோக்கிட பார்க்கின்ற போது,

              அவர்களை அவ்வாறு ஆக்கியது எது?

              அவர்கள் சிந்தித்த எண்ணங்களா?

              அவர்கள் எழுதிய நூல்களா?

              அவர்கள் செய்த சொற்பொழிவா? அல்லது

              அப்போது இருந்து, இப்போது மறைந்துவிட்ட

              வேறு ஏதாவது ஒன்றா?

    என எண்ணுகின்ற போது, நமக்குக் கிடைப்பது, அவர்களிடம் இருந்த 100 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்ற, அனைவரையும் கவர்ந்து இழுக்கின்ற ஆளுமைப்பண்பு என்றால் அது மிகையாகாது.

    அந்த ஆளுமைப் பண்பை, நம்முடைய கல்வியாகவும், பயிற்சியாகவும், லட்சியமாகவும், நாம் எப்போது ஏற்றுக்கொள்கின்றோமோ, அப்போது இருந்தே நமது கனவுகளும் மெய்ப்படத் தொடங்கும். ஆளுமை என்பது ஒருவர் நடை, உடை, பாவனைகளால், தன்னை உள்ளும் புறமும் எப்படி வெளிப்படுத்துகின்றார் என்பதைக் குறிப்பதாகும்.

    ஒருவரிடம் ஆளுமைப்பண்பு அதிகரிக்க, அவர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற ஒழுக்கநெறி தவறாது, எந்த நிலையிலும், தன்னை இலக்காது, தைரியமாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அதற்கு உண்டான பொறுமையைக் காக்க முடியாது.

     எப்படி பிறந்தோமோ, அப்படியே இறந்துவிடுவோம் என்கின்ற முடிவிற்கு வருபவர்களே அனேகம். ஒரு சிலர் மட்டும் தான், மீண்டும் பிறந்து, வேண்டும் இடத்தை அடைந்து, மாண்டபின்னும் மகத்தான மனிதர்களாக, மனதிலே இடம் பிடிக்கின்றனர்.ஆக, இந்த ஆதிக்கம் செலுத்தும், ஆளுமைப்பண்பை, நாம் வளர்த்துக் கொள்வது எப்படி? அதற்கு ஏதாவது, வழிவகை, நெறிமுறை, வகுக்கப்பட்டு உள்ளதா என்றால் உண்டு. அதைக்கண்டு பின்பற்றினால் முடியும், நம்மாளும் அது முடியும். அதற்கு கீழோர், மேலோர் என்கின்ற பேதம் கிடையாது.

    அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது யாரோ ஒருவரை முன்நிறுத்தி, அவரைப் போல் நான் ஆகிவிடப் போகிறேன், என உங்கள் இலக்கை நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும். உங்கள் இடத்திலே இருக்கும் சிறப்பை உணர்ந்து, அதன் உயரத்தை அடைவதே உங்கள் இலட்சியமாக, இலக்காக, ஏற்றுக்கொள்ள தொடங்குங்கள். ஏன் தெரியுமா?

     இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புத் தன்மையுடன் தான் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. எது அதை உணர்ந்து, அதன் உச்ச நிலையை அடைகின்றதோ, அதுவே படைத்தவனின் பரிணாமத்தை பறைசாற்றுகின்றது. ஆகையினால், உங்கள் இலக்கை உங்களிடம் இருக்கும் சிறப்பானதாக மாற்றுங்கள். அந்த இலக்கை நோக்கிய உங்கள் பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

     மகாபாரதத்திலே, துரோணாச்சாரியார் வில் வித்தை போட்டி நடத்துவார். போட்டியில் கலந்து கொண்டவர்கள் எல்லாம், தோல்வியுற்று ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தனர். இப்போது அர்ச்சுனன் வருகின்றான். ஆச்சாரியார் அனைவரிடமும் கேட்ட கேள்வியையே அர்ச்சுனனிடமும் கேட்கின்றார். அர்ச்சுனா உனக்கு மரம் தெரிகிறதா… கிளை தெரிகிறதா… இலை தெரிகிறதா… என்ன தெரிகின்றது என்றார். அர்ச்சுனன் சொன்னான், குருவே… கொள்பவனுக்கு கொள்ளப்படுவதின் சங்கு குறியாக இருக்க வேண்டும் என்பீர்களே… அதுபோல மேலே தொங்குகின்ற குருவின் சங்கு எனக்குத் தெரிகிறது என்றான். உடனே துரோணாச்சாரியார்… விடு அம்பை என்றார். விட்டான் அர்ச்சுனன். வீழ்ந்தது பறவை. அதுபோல, உங்கள் இலக்கை நோக்கிய பயணம் இருக்குமானால் எதுவும் நம்மால் முடியும்.

     ஒரு அலுவலகத்திலே, சாதாரண பணியில் இருக்கின்றவர், தனக்குக் கிடைக்கும் குறைவான மாதச் சம்பளத்திலே, தன் குடும்பத்தை ஒரு மாதம் கடன்பட்டும், ஒரு மாதம் கடன்படாமலும், மிகவும் கஷ்டப்பட்டு நடத்திக் கொண்டிருந்தார்.

    அவரது அடிமனதிலே என்றைக்கு இந்த நிலைமை மாறும். நாமும், பணமும், புகழும் பெற்று நாலுபேரு மெச்ச வாழுவோம் என்ற ஏக்கம் கனன்று கொண்டே இருந்தது. ஒருநாள் பணியை முடித்துவிட்டு வழக்கமான சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். ஓர் இடத்திலே அவர் கண்ணிலே தட்டுப்பட்டது ஒரு ஓட்டைக் காசு. அதைப் பார்த்ததும், அவன் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. ஏன் தெரியுமா?

     அன்றைக்கு எவரிடத்தில் ஓட்டைக்காசு இருக்கின்றதோ, அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி, பாக்கியசாலி, அவரிடத்தில் பொன்னும், புகழும் வந்து குவியும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையுடன் காசை எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு வீடுபோய் சேர்ந்தான். ஒவ்வொரு நாளும் பணிக்கு செல்லும் போது எல்லாம், மறக்காமல் தனது பாக்கெட்டில் இருக்கும் அந்த காசைத் தொட்டு பார்த்துவிட்டுத்தான் செல்லுவான். நாட்கள் செல்லச் செல்ல, படிப்படியாக அவன் வாழ்வினிலே முன்னேற்றமும் கூடிக்கொண்டே போனது. ஒரு காலகட்டத்தில் அவன் நினைத்த பணக்கார வாழ்வும், புகழ்மிக்க வாழ்வும் கிடைத்துவிட்டது. அந்த நேரம் அவன் எண்ணினான், நமக்கு கிடைத்த இந்த வாழ்வு, அந்த ஓட்டக்காசு கொடுத்தது தானே, அதுவந்த பின்பு தானே நம்மிடம் இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தது. அதை இன்றைக்கு எடுத்துப் பார்ப்போமா என்று பாக்கெட்டிற்குள் கைவிட்டு எடுத்தான். காசிலே ஓட்டை இல்லை.

     கனநேரத்தில் சுதாரித்து, தனது மனைவியை அழைத்துக் கேட்டான், “இந்த காசிலே இருந்த ஓட்டையைக் காணோமே என்று. அவள் சொன்னாள் அதுவா, ஒருநாள் உங்கள் கோட் தூசியாக இருக்கிறதே என்று, சன்னல் அருகே நின்று உதறினேன். அப்போது அந்தக் காசு தவறி தெருவிலே விழுந்துவிட்டது. நானும் போய் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. நீங்கள் சங்கடப்படுவீர்கள் என்று வேறு ஒரு காசை நான் தான் போட்டு வைத்தேன் என்றாள். உடனே அவன் இது எப்போது நடந்தது என்றான். அதுவா… உங்களுக்கு அந்த காசு கிடைத்த மறுநாளே இது நடந்துவிட்டது என்றாள்.

    இந்த சம்பவம் எதை நமக்கு உணர்த்துகின்றது. ஓட்டைக்காசா அவனை உயர்த்தியது. இல்லை… ஓட்டைக்காசு வடிவில் வந்து, அவன் மன வைத்தின் மேல் படிந்து இருந்த மாசுகள் துடைக்கப்பட்டதால் வெளிப்பட்ட, அந்த மகத்தான மனசக்தியே, அவனை மாற்றிக் காட்டியது என்றால் அது மிகையாகாது.

     உங்கள் மனம் எங்கு சென்று சேர்கின்றதோ அங்கே உங்கள் உடல் தானாக சென்று சேரும் என்பதே உண்மை. நம் மனமானது ஒன்றிலே ஆழ்ந்து மூழ்கிவிட்டால், அதற்கு புறக்காரணிகள் புலப்படுவதில்லை. இந்த நிலையிலே தான், இம்மண்ணிலே மகத்தான மனிதர்கள், தலைவர்கள், அவதாரப் புருசர்களாக அவதரித்திருக்கின்றார்கள்.

    இந்த மாத இதழை