“கை இருக்க! கால் இருக்கு! கவலை நமக்கு எதற்கு?
இலக்கிருக்கு! செயலிருக்கு! இலவசம் நமக்கு எதற்கு?
இந்த வரிகள் மனித உள்ளத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.
இன்று மனிதனின் தேவைகள் தான் என்ன?
அனைவருக்கும் 1. தரமான இலவசக் கல்வி, 2. தரமான இலவச மருத்துவ சிகிச்சை, 3. திறமைக்கேற்ற பணி மற்றும் 4. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, வாகன வசதிகள்.இவை கிடைத்தால் போதாதா? போதும்.ஆனால், யார் இவற்றைத் தருவது?
முன்பு மன்னராட்சி இருந்தது. மக்களிடம் வரி வசூலித்து, அவர்களது உயிர், உடைமை மற்றும் வாழ்க்கைச் சுதந்திரத்தைப் பாதுகாத்துத் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் போரிட்டனர் என வரலாறு கூறுகிறது.
மகாபாரதம் என்ற இதிகாசத்தில் சொத்துரிமைக்காகப் பெரும் யுத்தம் நடைபெற்ற விபரம் உள்ளது. அது மன்னராட்சிக் காலம். போரில் பாண்டவர்கள், கிருஷ்ணன் துணையுடன் ஒரு புறமும், கௌரவர்கள், அறிவிற்சிறந்த ஆசான்கள் பீஷ்மர், துரோணர் போன்றோர் வழிகாட்டுதலில் மறுபுறமும் கடுமையாகப் போரிட்டனர்.
போர் இறுதியை நெருங்கிவிட்டது. தேரோட்டி மகன் என்று இழிசொல்லுக்குப் பாத்திரமான மகாராணி குந்திதேவியின் மூத்தமகன் கர்ணனை, அவன் செய்த தருமம் காத்தது. அந்த தருமம் அனைத்தையும் தானமாகப் பெற கிருஷ்ணன் ஏழை அந்தணர் வடிவத்தில் கர்ணனிடம் செல்கிறார்.
அந்தணர் கர்ணனிடம் தருமம் கேட்க, “போர்க்களத்தில், உங்களுக்குத் தர என்னிடம் ஒன்றுமே இல்லையே”, என மனம் வருந்திக் கூறுகிறான். “ஏன், நீ செய்த தருமங்களை எனக்குத் தரலாமே” என கிருஷ்ணன் கேட்க, கர்ணன் மனம் மிக மகிழ்ந்து, “அவ்வாறே தருகிறேன்.
தாரை வார்த்துக் கொடுக்க, சிறிது நீர் கொண்டு வாருங்கள்” என்றான். கிருஷ்ணனோ, அவன் மனம் மாறக்கூடாதென, “உன் உடலில் தைத்துள்ள அம்பை எடுத்து, அந்த இடத்திலிருந்து வெளிவரும் இரத்தம் மூலம் தாரை வார்த்துத் தா” என்றார். கர்ணன் அவ்வாறே, தான், வாழ்நாளில் செய்த எல்லா தருமங்களையும், அதன் பலன்களையும் தாரை வார்த்துக் கொடுத்தான். அந்த நொடியிலேயே கிருஷ்ணன் தன் விசுவரூப தரிசனம் காண்பித்து, “என்ன வரம் வேண்டும்? கேள் கர்ணா!” என்றார். இதைக் கேட்ட கர்ணனோ, “உன் விசுவரூப தரிசனமே என் வாழ்க்கையில் கிடைத்தற்கரிதான நான் பெற்ற வரம். இன்னும் வேறு என்ன வேண்டும்? ஒன்றுமே வேண்டாம்” என்றதாய் படித்திருக்கிறோம்.
இந்தச் சொற்கள் வாயிலிருந்து வர, மனம் நிறைவுற்றிருக்க வேண்டும். அந்த நிறைவு இன்று நம்மிடையே உள்ளதா? அந்த நிறைவான நிலைக்குச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்? சிந்திப்போமா? இன்றைய நிலை தான் என்ன?
மன்னராட்சி இல்லை; ஆனால், மக்களாட்சி என்ற பெயரில், மக்களின் பிரதிநிதிகள், முன்போலவே, மக்களிடமிருந்து வரிவசூலிக்கிறார்கள். அந்த வரித் தொகையை மக்கள் வசதிக்காகவே செலவிடுவதாய் தெரிவிக்கிறார்கள். வாழ்க்கைச் சுதந்திரத்துக்கு, பகைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற பல கோடி மக்களை இராணுவம் என்ற பெயரில் நியமித்துள்ளனர்.
எங்கும் ஊழல்!எதிலும் ஊழல்!
ஆனால், எந்த இடத்தில் பிடித்தாலும் கரடிக்கு முடி என்ற உண்மை போல, இன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டத்திலும் நிரந்தரமான ஊழல்தான் நிலையாகிப் போனது.
ஊடகங்கள், நீதிமன்றங்கள், மக்கள் நல அமைப்புகள் எனப் பல, இந்த ஊழலைத் தோலுரித்துக் காட்டிய பின்பும், பழைய நடைமுறையே எல்லா இடங்களிலும், எல்லா ஊழல்களுடனும் தொடர்வது எதனால்?
மக்கள் இவைகளை ஏற்றுக்கொண்டார்களா? அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் இவைகளைக் கண்டுகொள்ளவே இல்லையா? நியாயமான கேள்விதான்.
ஆட்சியாளர், அதிகாரிகள் நிலை:
மக்களோடு மக்களாய் இருந்தவர்கள், அடித்த சுழல்காற்று தரையிலிருந்த தூசியை கோபுர கலசத்தின் மேல் வைத்த நிலைக்கு, பதவி, அந்தஸ்து இவற்றில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
மக்களிடமிருந்து ஒதுங்கி, தனி பங்களா, உயிருக்கு பாதுகாப்பு என்ற வகையில் ஆயுதம் தாங்கியோர் அரண், வாகன அணிவகுப்பு என்று மக்களிடமிருந்து, தொலைவில், எளிதில் அணுகமுடியாத நிலையில் உள்ளனர். மக்களோடு மக்களாய் இருந்த நிலைமாறி, இன்று தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் சந்திப்பெல்லாம் ஆயுதம் தாங்கியோர் அரணுக்குள் இருப்போருடன் என்ற நிலையில் இன்றைய மக்களாட்சி நடந்து கொண்டுள்ளது.
இவர்களுக்கு எங்கும் செல்ல பயணச் சலுகைகள், எங்கும் தங்கும் உரிமைகள், தன் குடும்பத்தைப் பற்றிய எண்ணமே உண்டாகாதவாறு சுற்றுச்சூழல்.
ஆனால், ஒரு சில பிரதிநிதிகளைத் தேர்வு செய்த லட்சக்கணக்கான சாதாரண மக்களான வாக்காளர்கள் தாம் செய்த தவறை மறந்து, அவர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளைக் குறை சொல்கின்றனர். மக்கள் நலனில் நாட்டமுள்ள, அதனைச் செயல்படுத்தும் திறமையுள்ள வேட்பாளர்களைப் புறந்தள்ளி, சிறிய ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகளைப் பார்த்து, வாக்குச்சீட்டில் பதித்த முத்திரை தான் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்பதை மறந்துவிட்டனர்.
பிரதிநிதிகளும் வாக்கு, வெற்றி என்ற வகையில் செய்தவைகளைத் திரும்பப் பெற முயல்கின்றனர். இதன் வெளிப்பாடு தான் கமிஷன், லஞ்சம், ஊழல் என்பன.
மக்கள் தேவைகள்:
குடிநீர்: “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதி வாழ்ந்த மண்ணில் இன்று குடிப்பது அனைத்துமே கேன் நீர் அல்லது பாட்டில் நீர். பாட்டில் என்பதிலேயே புரிந்துவிடும்.
மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது யார்? அரசா? தனியார் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனங்களா? இந்தக் கேள்விக்கான விடையை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்று அரசு நடத்தும் கூட்டங்களிலும் குடிநீராக உபயோகிப்பது தனியாரது குடிநீர் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடிநீருக்கு முன்பு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு ரூ. 1.33 என்றிருந்ததை, இப்போது ரூ. 3.33 என உயர்த்திவிட்டனர். இந்த வரி எதற்கு? நாம் தண்ணீர் பெறாத நாட்களுக்கும் சேர்த்து குடிநீர் வரி கட்டிக் கொண்டிருக்கிறோம்.
சாலைகள்: மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியாது. வெளியே வந்து, பயணம் செய்ய சாலை வசதிகள் கட்டாயம் தேவை. இன்று இந்தச் சாலை வசதிகளைச் செய்வதும், பராமரிப்பதும் அரசா? தனியாரா?
மக்கள் நலனைப் புறந்தள்ளி, தனியாரிடம் சாலை அமைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளை ஒப்படைத்து, அந்தச் செலவுகளை ஈடுகட்ட, நாடெங்கும் நுழைவு வரி (Entry Fee) எனும் டோல் கேட் கட்டணங்கள் பல பத்தாண்டுகளுக்கு வசூலிக்கும் உரிமையையும் அரசு வழங்கிவருகிறது.
இந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மக்களுக்கான பணிகளைத் தாமதிக்காமல் செய்திட, இவர்கள் பயணத்துக்காக பொது மக்களைச் சாலைகளில் பயணிக்கவிடாமல் நிறுத்திவைப்பது. இது உலகின் பல நாடுகளில் இல்லாத நிலை.
கல்வி: இன்று தரமான கல்வி, சமச்சீர் கல்வி என்ற பெயர்களால், அரசு கல்வி நிலையங்களில் அதிகமான ஊதியம் பெற்று, நல்லதொரு கல்விப் பணியில் ஈடுபட்டோரது பணித்திறமைகளை, குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களில் கடுமையாக உழைத்து நல்ல தேர்வு முடிவுகளைத் தருவோருடன் ஒப்பிட முடிகிறதா?
அரசுக் கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்களுள் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளி, கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்? ஏன்? நமக்குத் தெரியாதா?
தனியார் பள்ளி கல்விக்கட்டண உயர்வை எதிர்த்துக் குரல் தரும் பெற்றோர்கள் போல, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர ஏன் குரல் தருவதில்லை? பெற்றோருக்கும் பொறுப்புகளை இடம் மாற்றிவிட்ட திருப்தி.
பெற்றோர்கள்: இவர்கள் அசாதாரணமானவர்கள். தகுதிக்கு மீறியேனும் தம் குழந்தைகளுக்குத் தரமான, நல்ல கல்வியை அளிப்பதைக் கடமையாகக் கருதி, அதிக கட்டணத்துக்கு ஏற்பாடு செய்து வாழ்கின்றனர்.
வறுமைக்கோட்டுக்கு அருகிலும், தொட முயற்சி செய்வோரும், கல்விக் கட்டணத்தைத் தம் குடும்ப பட்ஜெட்டில் மறந்துவிட்டனர் அரசின் செயலால். ஆல் பாஸ் என்ற அரசின் கொள்கையால், தம் குழந்தைகளின் படிப்பறிவையும் காணமுடியாத நிலையில் வாழ்கின்றனர்.
இவர்களது சம்பாத்தியம், குடும்பச் செலவுக்கே போதாத நிலையில், கல்விச் செலவு என்பதை மறந்துவிட்டு, ஏதோ, பள்ளியில் சேர்த்தாச்சு; இனி ஆசிரியர் பொறுப்பு என்று வாழ்கின்றனர்.
நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய வயதில், எதிர்மறையான எண்ணங்களுடன், பொறாமை மனநிலையில், நல்ல எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழும் மாணவர்களைப் பற்றி என்ன சொல்வது?
நமது கடமை: “கேள்வி பிறந்தது அன்று ! நல்ல பதில் கிடைத்தது இன்று” என்ற பாடல் வரி நினைவுக்கு வருகிறது. தத்துவ மேதை சாக்ரடீஸ் சொன்னது போல், கேள்வி கேட்டால் தான் பதில் பெற முடியும்.
இன்று நமக்குத் தேவை தங்கத் தாம்பாளமோ, சொகுசு வாழ்க்கையோ அல்ல. சாதாரண அடிப்படை வசதிகள் தான். இதை எப்படிப் பெறுவது?
நாம் பிறக்கும் போது, நம் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான அனைத்தும் இயற்கை வழங்கிவிட்டது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அப்படியென்றால், பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம்? சிந்தனையின் வெளிப்பாடு இதோ!
நாம் ஒவ்வொருவரும் நம்மை, அதாவது, சுயத்தை நேசிக்க வேண்டும். நேசிப்பது என்பது எப்போதும் எதற்காகவும் குறைகூறாத மனநிலை தான். வீட்டில் நம்முடன் வசிப்போர், அருகில் வாழ்பவர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர் என எல்லோருடனும் அன்பாகப் பழக வேண்டும். இதற்குப் பெயர் ஒத்து வாழ்தல், வள்ளுவர் இதை ‘இசைபட வாழ்தல்’ என்றார்.
பொறாமை, பகை, வெறுப்பு, விரக்தி, கோபம் என்ற நச்சுக்குணங்களை நம் மனத்திலிருந்து விரட்டிவிட்டு, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் மனநிலையில், உதவிசெய்து வாழ வேண்டும். இதை வள்ளுவர் ‘ஈதல்’ என்றார்.
பணமே பிரதானம்; எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற மனோபாவம் மாற வேண்டும். “நாய் விற்ற காசு குரைக்குமா?” என விதண்டாவாதம் பேசக்கூடாது. உடல், மனதுக்குத் தீங்குசெய்யும் தீயபழக்கங்களைத் துரத்திவிட்டு, நல்ல செயல்களைச் செய்வோரைப் பாராட்டுவதுடன், எவரிடம் இருந்தும் எதையும் எதிர்பாராமல் வாழும் மனநிலைக்குச் செல்ல வேண்டும். முடியுமா? நிச்சயம் முடியும்.
அரசின்கடமை: நம்மால் அமைக்கப்படும் அரசு என்பதற்கேற்ப, நம் நலனில் அக்கறையுள்ள பிரதிநிதிகளைத் தேர்வு செய்தால், அவர்களால் கீழ்க்கண்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர முடியும்.
அனைவருக்கும் வேலை, மக்களைத் தீய பழக்கத்துக்கு ஆளாக்கி, உடலையும் குடும்பத்தையும் உருக்குலைக்கும் தவறான வருவாய் வழிகளை ரத்து செய்வது, ஊழல், லஞ்சம் புரிவோர் யாராக இருந்தாலும், கண்டுபிடித்து, கடுமையான தண்டனை வழங்குதல், மக்கள் பிரதிநிதிகள், மக்களிடையே வாழ்தல், இவற்றுடன் தனி நபர் சொத்துக்களை, கட்சி நிதியை அதிகரிக்க எதையும் செய்யும் அசாதாரணத் தைரியத்தைப் புறந்தள்ளி, தொட்டதற்கெல்லாம் காசு என்ற நிலைமையிலிருந்து விடுபட்டு ஆட்சி செய்யும் மனநிலையைப் பெற வேண்டும்.
இதெல்லாம் சாத்தியமே! எப்போது? பொதுநலனில் அக்கறையுள்ளவர்கள், ஆட்சிபுரியும் போது, இது ஒன்றுதான் வழி. நாம் விரும்பிய நல்லன அனைத்தும் நடக்கும்.
“இன்னும் வேறு என்ன வேண்டும்?” ஒன்றே ஒன்று தான். மனமாற்றம் தான். மனம் மாறுங்கள்Ð சூழ்நிலையை மாற்றுங்கள்!
இந்த மாத இதழை