அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்
நம்மால் முடியும். உடல் உறுப்புகளில் மிக முக்கியமான கண்பார்வையை இழந்த பின்னும், சாதிக்கின்ற அன்பர்கள் வாழும்போது, நம்மால் சாதிக்க முடியும் தானே?
இதற்கு நாம் செய்ய வேண்டியது நம்மிடமுள்ள எதிர்மறை எண்ணங்களை இழக்க வேண்டும் என்றும் பார்த்தோம். “பட்ட காலிலேயே படும்” என்ற பழமொழிக்கேற்ப, இந்த எதிர்மறை எண்ணங்கள் அவ்வளவு எளிதில் நம்மை விட்டுப் போய்விட்டது.
ஜேம்ஸ் ஆலன் என்ற அமெரிக்க நாட்டு மன ஆராய்ச்சியாளர், முள்ளை முள்ளால் எடுப்பது போல எதிர்மறை எண்ணங்களின் இருப்பிடமாயுள்ள மனதின் ஆற்றலைக் கொண்டு, இடைவிடாது முயன்றால் தான், பிரபஞ்ச சக்தியும் இணைந்து, அவைகளை வெளியேற்றிவிடும் என்றார்.
பெஞ்சமின் பிராங்களின் என்ற அமெரிக்க விஞ்ஞானி இதைக் கடைப்பிடித்து, எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றி, நல்ல பண்புகளின் இருப்பிடமாக மாறினார். தனது எதிர்மறை எண்ணங்களை 13 தலைப்பின் கீழ் தொகுத்தார். அதற்கு ஈடான நேர்மறையான, ஆக்கபூர்வமான எண்ணங்களை வகைப்படுத்தினார்.
வாரத்துக்கு ஒன்று என்ற வீதம் 13 வாரங்கள் இடைவிடா முயற்சி செய்து எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் வெளியேற்றி, நல்ல எண்ணங்களே மனதில் இருக்குமாறு விழிப்புடன் செயல்பட்டார்.
ஆனாலும், மனம் ஒரு குரங்கு தானேÐ முன்பு அனுபோகித்த சோம்பேறித்தனமான, பயமான சூழலை முழுதும் இழந்துவிடாமல் அவ்வப்போது நினைத்துக் கொண்டது. இதனால், அந்த எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனதை ஆக்கிரமித்தன. இவரும் விடாப்பிடியாக கடுமையாக முயன்று ஆக்கபூர்வமான சிந்தனைகளை மனதில் விதைத்து, அவைகளை செயல்படுத்தினார்.
செயல்பாடு என்பது கடுமையான, முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு. விளைவு – பல அரிய கண்டுபிடிப்புகளான இடிதாங்கிக் கருவி, பை-போகல் லென்ஸ் எனும் கண் கண்ணாடி போன்றவைகளை உலகுக்கு வழங்கினார்.
இன்று நம் பகுதியில் வறுமை என்பது சாதாரணமாக உள்ளது. அறிவாளியான, நல்ல சிந்தனையுள்ள இளைய சமுதாயமும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. படிப்பு என்பது வியாபாரமாகி விட்ட நிலையில், அவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை நினைத்தாலே, முடியாது என்ற எண்ணம் முடிசூடிக் கொள்ளும்.
அரசாங்கம் கல்விக்கடன் வழங்கினாலும் கூட, இதுபோன்ற வாய்ப்புகளைத் தேடிச்சென்று நாட்களைச் செலவு செய்ய இயலாமல், தினமும் உழைத்தால் மட்டுமே உண்ண முடியும் என்ற நிலையில் வாழும் குடும்பங்கள் ஏராளமாயுள்ளன. அதில் ஒன்றின் வெளிப்பாடு இதோ
ஜிபின் 17 வயது மாணவன். அவனது பெற்றோர் ஜோஷி-ராதா; வசிப்பது கேரளா, மலப்புரம் மாவட்டம் வளாசேரி. பெற்றோர் தொழில் அப்பளம் தயாரிப்பது. ஜிபினின் இலக்கு வாழ்க்கையில் ஒரு மருத்துவராக வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கான ஆலோசனைகளை தன் உறவினரான ஆசிரியர்கள் மூலம் பெற்றான். பிளஸ் 2 படிப்பை அரசு பள்ளியில் முடித்தான்.
டெல்லியிலுள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அல்லது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, படித்து, மருத்துவராக ஆசை. இங்கு பணம் கொடுத்தாலும் சீட் கிடைக்காது. கொடுப்பதற்குப் பணமும் இல்லை.
நன்றாகப் படித்தான். அகில இந்திய மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வு எழுதினான். அகில இந்திய அளவில் 320வது ரேங்க் பெற்றான். கேரள மருத்துவ நுழைவுத் தேர்வில் 331வது ரேங்க் கிடைத்தது.
இதில் என்ன பெரிய சிறப்பு என எண்ண வேண்டாம். குடும்ப நிலை, பொருளாதாரத்தில் சுமார் தான். படிப்பறிவில்லாத பெற்றோர். மனம் முழுமையாகத் தனது விருப்பத்தை நேரான வழியில் கொண்டு செல்லாது என்பதால், மனம் எதிர்மறையாகச் சிந்திக்காதவாறு உடலால் உழைத்தான்.
தினமும் குறிப்பிட்ட நேரம் தன் பெற்றோருடன் அப்பளம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, மாவு பிசைந்து கொடுத்தான். எண்ணத்தை நிறைவேற்ற செயல்பாட்டின் துணை மிகவும் முக்கியம். அந்த வகையில் ‘எனக்கு இந்தத் தேர்வில் ரேங்க் கிடைக்குமா?’ என்று சந்தேகப்படாமல், இலக்கு ஒன்றையே குறியாகக் கொண்டு, மனதை அலைபாய விடாமல், மனதுக்கு வேலை கொடுத்தான் உடல் உழைப்பின் மூலமாக சாதித்தான். இனி அப்பளத்துக்கு மாவு பிசைந்த கைகளில் ஸ்டெதாஸ் கோப்
இதுபோன்ற சாதனை இளைஞர்கள் நம் பகுதியில், நம்மைச் சுற்றிலும் பலர் உள்ளனர். ஆனால், அவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை நாம் உருவாக்கவில்லை. முயன்று பாருங்கள். இதோ, இன்னொரு இளைஞர்.
தனது அறிவாற்றலை உபயோகித்து அன்றாட வாழ்வில் உபயோகமாகும் தண்ணீரில் ஓடும் சைக்கிளை மிகக் குறைந்த செலவில் வடிவமைத்துள்ளார். சூர்யா, வேதாரண்யம் அருகில் செம்போடையில் ஆர்.வீ. பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள பல கிராமங்களில் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல போதுமான வசதிகள் கிடையாது. பாலம், படகு போன்றவை எல்லா இடங்களிலுமே இல்லை. பல கி.மீ. தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை தான். குறிப்பாக மழைக்காலங்களில் இவர்களின் பாடு திண்டாட்டம் தான். பலர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படுவதும் வாடிக்கை.
இதற்கு என்ன தீர்வு என யோசித்த சூர்யாவின் எண்ணத்தின் வெளிப்பாடு தான் மிதவை சைக்கிள். சாதாரண சைக்கிளில் ரூ. 1500 கூடுதல் செலவு செய்து, இவர் தன் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளார். இதோ அவர்:
“லாரியின் டயர் டியூபை அரைவட்ட வடிவில், இரண்டாகப் பிரித்து, காற்று நிரப்பி, சைக்கிளின் முன் டயரில் ஒன்றும், பின்டயரில் ஒன்றுமாக இணைத்தேன். இரும்புத் தகடுகளால் செய்யப்பட்ட சிறப்பு விசிறியை, இரு புறத்திலும் இணைத்தேன். டியூபால், சைக்கிள் நீரில் மிதக்கும். பெடலை அழுத்தும்போது, பின் சக்கரம் சுற்ற, விசிறியும் சேர்ந்து சுற்றி, சைக்கிள் முன்னோக்கிச் செல்கிறது. கூடுதலாக சாதாரண பேரிங்கிற்கு பதிலாக, சக்கரங்களில் புஷ் பேரிங் பொருத்தினேன்.
பெடலை மெதுவாக அழுத்தினாலே மணிக்கு 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே, உள்ளூர் சந்தைகளில் எளிதில் கிடைக்கும் குறைந்த விலையுள்ளவையே. மிதக்கும் அமைப்பை எளிதில் மாற்றி சாதாரண சைக்கிளாகவும் பயன்படுத்தலாம்.
இந்த மிதவை சைக்கிள் தண்ணீரில் மூழ்காது. சிறு மீனவர்கள், படகு வாங்க முடியாதவர்கள், ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் மீன் பிடிக்க இது மிகவும் உபயோகமாகிறது. சாதாரண சைக்கிளில் கூடுதலாக இணைக்கப்படும் மொத்த எடை ஏழரை கிலோ மட்டுமே”. இது ஒரு சிறு உதாரணம்.
இது போன்ற பல சாதனையாளர் நம் கண் முன்னே நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை இனம் காண விரும்பினால், கிடைப்பார்கள். அடிப்படை தேடல் தான்.
தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும் – இது கேட்டது. இத்துடன் ‘தேடுங்கள் கிடைக்கப்படும்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அனைத்துக்கும் அடிப்படை நம் மனம் தான். வெற்றியை விட தோல்வியைத் தான் மனம் அதிகம் விரும்புகிறது. ஏனென்றால் மனம் எனும் கூடை நிறைய எதிர்மறை எண்ணங்களை நிரப்பி வைத்துள்ளோம்.
நீ எதை விரும்புகிறாயோ, அதனைப் பெறும் தகுதி மட்டும் இருந்தால் எப்படியாவது, அதுவே உன்னிடம் வந்து சேரும். இது நிதர்சன உண்மை.
ஜிபின் விரும்பியது டாக்டர் பணி. இப்போது கைக்கு வந்துவிட்டது. சூர்யாவின் விருப்பம், கஷ்டப்பட்டு பல மைல் தூரம் சென்று வருபவர்களது நேரம், உழைப்பைக் குறைத்தல். அதற்கான வழிவகைகளை அவரது அறிவின் மூலம் இயற்கை மிதவை சைக்கிளாக இந்த உலகுக்கு அளித்துள்ளது.
நாமும் இதுபோன்ற சாதனையாளர்கள் தான். இளைஞர்கள் மட்டுமா? எனக் கேட்பது காதில் விழுகிறது. முதியவர்களும் சாதிக்கிறார்கள். பலர் சேர்ந்தும் பெரியதாய் சாதிக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க பொறுத்திருங்கள்…