‘கலைமாமணி’பெரு. மதியழகன்
எதிர்ப்பும் எதிரிகளும் இல்லாத மனிதர்கள் யாராவது உண்டா? நமக்கெதற்கு ஊர் வம்பு என்று, தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று தன்னலத்தோடு இருப்பவர்க்கே கூட எதிரிகள் இருப்பார்கள். பொதுவாழ்வில் அடுத்தவரைப் பற்றி அக்கறை கொள்கிறவர்களுக்கு எதிரிகள் ஏராளம் இருப்பர். அதுசரி, நமது முதல் எதிரி யார்?
முன்கோபமே நமது முதல் எதிரி. இதற்குச் சினம் என்றும் பொருள் உண்டு. கோபத்தின் பல்வேறு பரிமாணங்களை விளக்குவதே இந்த கட்டுரை. உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் கோபத்தைத் தவிர பகை வேறு உள்ளதோ? என்பார். நகையையும் உவகையையும் இது கொன்றுவிடும் என்றும், கோபம் வராமல் காக்கத் தவறினால் ‘தன்னையே கொல்லும் சினம்’ என்றும், கோபப்படாதவன் நினைத்ததை நிறைவேற்றுவான் என்றும், கட்டுக்கடங்காது கோபப்படுபவன் இறந்தவரைப் போன்றவன், சினத்தை அடியோடு துறந்தவன் துறவிக்கு ஒப்பானவன் என்றும் பலவாறாக கோபம் குறித்து பத்து குறள்களில் பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் அளித்துள்ளார்.
கோபப்படுபவன் இறந்தாரைப் போன்றவர், அதாவது ‘இறந்தார் இறந்தார் அனையர்’ என்பார் அவர். கோபப்பட்டு உணர்ச்சி மேலீட்டால் கொலைபுரிகிறவர்களைச் சிறையில் அடைத்து ஆயுள் கைதி ஆக்குகிறார்கள். இது வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதாகுமா? இவர்கள் இறந்தவர்க்கு ஒப்பானவர்கள் தான். ஆக வள்ளுவர் மொழிந்தது சரிதான். ஆனால் ‘சினத்தைத் துறந்தார் துணை’ என்பதுதான் சிந்தனைக்கு உரியதாக இருக்கிறது.
முற்றும் துறந்தவர்களாகச் சொல்லப்பட்டவர்களும் முடிவாய் துறக்க முடியாமல் திணறியது முன்கோபத்தால் என்பதற்குப் புராணங்களில் நாம் படித்த முனிவர் விசுவாமித்தரும், துர்வாசரும் முன்னுதாரணம்.
இப்போது நாம் காணும் பல துறவியர் ‘கோபம் கொல்’கிறவர்களாக இல்லை, ‘கோபம் கொள்கிறவர்களாகவும் கோபியரைக் கொள்கிறவர்களாகவுமே’ இருக்கிறார்கள். ஆனால் புத்தர் கோபம் துறந்தவராக நம்மால் அறியப்படுகிறார். ஆசைகளை அடக்கச் சொன்ன புத்தர் முதலில் அறிந்துகொண்டது கோபத்தை அடக்கத்தான்.
அந்தி மாலை நேரம். ஆட்டிடையன் ஒருவன் மேய்ச்சலுக்குப் போன ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். அந்த மந்தையில் குட்டியொன்று காடு, மலையில் மேய்ந்து வந்ததில் காலில் காயப்பட்டு நொண்டி நொண்டி வந்தது.
அந்த வழியாக வந்தத் துறவி கேட்டார், அந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆச்சு? என்று. துறவியை முறைத்துப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான். மீண்டும் மெல்லக் கேட்டார் துறவி… குட்டிக்கு என்ன ஆச்சு?
அடிபட்டுக் காயமாயிடுச்சு… நீ என்ன வைத்தியம் பார்க்கப் போறியா? என்று இரைந்தான் இடையன். துன்பப்படுதே குட்டி தூக்கிக்கிட்டுப் போன என்ன? என்றார் துறவி.
அப்படியாÐ சரி பட்டி வரைக்கும் நீயே குட்டியத் தூக்கிவர உன்னால் முடியும்னா தூக்கிவாÐ என்றான் இடையன். தூக்கினார் குட்டியைத் துறவி. தோளில் போட்டுக் கொண்டு நடந்தார். அடுத்து ஊரின் எல்லையில் பட்டியை அடைந்ததும், குட்டியை இறக்கிவிட்டார் துறவி.
ஆமாÐ வழியில பார்த்தவங் எல்லோரும் உன்னக் கையெடுத்துக் கும்பிட்டாங்களேÐ உம் பேரு என்னனு இடையன் கேட்டான். அவர் சொன்னார், “எனக்குப் பல பேரு இருக்கு, ஆனா எல்லோரும் என்னை ‘புத்தன்’னு கூப்பிடுவாங்க” என்றார். அவரை விழுந்து வணங்கினான் இடையன்.
இன்னொரு நாள், புத்தர் ஒரு சிற்றூர் வழியாக சென்று கொண்டிருந்தார். அவரை வேலையற்றதுகள் சில கேலி செய்தன. அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சென்றார். எந்தச் சலனமும் இல்லாத புத்தரைப் பார்த்துக் கேட்டார்கள். இவ்வளவு கேலி கிண்டல் செய்தும் உங்களுக்குக் கோபம் வரவில்லையா? என்று.
புத்தர் சொன்னார், ‘பக்கத்து கிராமத்தில் மக்கள் பிரியமாக இனிப்புகளைக் கொடுத்தும் போற்றினார்கள். ஆனால் நானோ இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி இரண்டாண்டு ஆகிவிட்டது. அதனால் அந்த இனிப்புகளை ஏற்கவில்லை. அப்படியானால் அவை யாருக்குச் சொந்தம்?
ஊர் மக்கள் ‘அந்த இனிப்புகள் அனைத்தும் கொடுக்க முன்வந்தவர்களுக்கே சொந்தம்’ என்றனர். ‘இப்போது நீங்கள் கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தியதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுது அவை யாருக்குச் சொந்தம்’ என்றார் புத்தர். ‘எங்களுக்கே’ என்றனர் மக்கள்.
அதனால் யார் கோபமூட்டினாலும் அதை மனதளவில் ஏற்றுக்கொண்டால் தான் கோபம் ஏற்படும். இல்லையெனில் கோபத்திற்கே இடமில்லை.
கோபம் ஓர் அடிப்படையான உணர்ச்சி. கோபம் வருவது இயற்கை. அதைக் கையாளுகிற விதத்தைப் பொறுத்தே வாழ்க்கையில் வளர்ச்சியா; வீழ்ச்சியா என்பது அடங்கிக் கிடக்கிறது.
தன்னலம் சார்ந்த கோபம், தன்னையே அழிக்கும். பொதுநலம் சார்ந்த கோபம் நன்மையே நல்கும். காந்தியடிகள் கோபப்படாமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் வெள்ளையரின் ஆதிக்கத்திற்கு முடிவு ஏது? சமூக அநீதிக்கு எதிராக பெரியார் கோபப்படாமல் இருந்திருந்தால் பிறவி பேதங்களில் இருந்து இங்கே மீட்சி ஏது? நிறவெறிக்கு எதிராக லிங்கன் கோபப்படாமல் இருந்திருந்தால் ஒபாமா போன்றவர்க்கு உயர்வு ஏது? இவையெல்லாம் ஆக்க சக்தியாக வெளிப்பட்ட கோபம்.
‘இயல்பாகவே போர்க்குணம் உள்ள மிருகம் தான் மனிதன்’ என்பார் சிக்மண்ட் பிராய்டு. ஆகவே கோபம் என்பது இயல்பான உணர்வு (Natural Instinct). அறிவியல் வழியாக பார்த்தால் கோபம் என்பது ஒரு சக்தி.
இதை, தற்காப்பு சக்தியாக, ஆக்க சக்தியாக, அழிவு சக்தியாக எப்படி வேண்டுமானாலும் கையாள முடியும். நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதில் தான் வாழ்க்கையில் இனிமையும், இனிமை இன்மையும் இருக்கிறது.
பாம்பு படம் எடுப்பதும், தேள் கொடுக்கைத் தூக்குவதும், புலி உறுமுவதும், சிங்கம் கர்ஜிப்பதும், முள்ளம்பன்றி சிலிர்ப்பதும், மாடு முட்டுவதும், கழுதை உதைப்பதும் தற்காப்புக்கான கோபம்.
பாம்பு படம் எடுக்காது, தேள் கொட்டாது, புலி பாயாது, கழுதை உதைக்காது என்று இருந்தால் இவை எல்லாம் அழிந்து இயற்கையின் சமநிலை இழந்து போயிருக்கும்.
அடர்ந்த காடு. அங்கே ஒரு பாம்பு அந்த வழியாக போவோர் வருவோரை எல்லாம் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தது. அது கடித்ததால் பலர் காலியானார்கள். அதனைக் கண்ட ஞானி ஒருவர், “பாம்பே இனி யாரையும் கடிக்காதே. இது மிகவும் கொடுஞ்செயல்” என்று அறிவுறுத்தினார். ஞானி சொன்ன பிறகு, தன் தவறுக்கு நாணி, இனி யாரையும் கடிப்பதில்லை என அவரிடம் சத்தியம் செய்து கொடுத்தது.
திங்கள்கள் சில தீர்ந்தன. திரும்பவும் அந்த வனத்தின் வழியாக வந்தார் ஞானி. பாம்பு, உயிருக்குப் போராடும் அவஸ்த்தையோடு முனகிக் கொண்டு முடங்கிக் கிடந்தது ஒரு முட்புதரில். வலியால் வதைபடும் உயிரின் ஓலம் ஒலிப்பதைக் கேட்டு ஒரு கணம் நின்றார் ஞானி.
மகானே, என்னைத் தெரிகிறதா? என்றது பாம்பு. இல்லை என்றார் அவர். “கடந்த முறை என்னைக் கடந்து சென்றபோது, கடிக்கக்கூடாது யாரையும் எனச் சத்தியம் வாங்கினீர்களேÐ அந்தப் பாம்பு தான் நான்” என்றது.
‘அடடாÐ என்னாச்சு உனக்கு?’ என்றார் ஞானி. யாரையும் கடிக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டீங்க. அதிலிருந்து யாரையும் கடிக்கவில்லை. இந்த வழியாக போவோர் வருவோர் எல்லாம் என் மீது கல்லெறிந்து காயப்படுத்தினார்கள். சத்தியத்தைக் காப்பாற்றப்போய் இப்போது சாகக்கிடக்கிறேன் என்றது.
அதற்கு ஞானி சொன்னார், “நான் கடிக்கக்கூடாதுன்னு தான் சொன்னேனே தவிர சீறக் கூடாதுன்னு சொல்லவில்லையேД என்று.
இந்தக் கதை நமக்கு உணர்த்துவது என்ன? சரியான இடத்தில் சரியான அளவுக்குக் கோபப்பட வேண்டும். சரியாக கோபப்படுவது குறித்து கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில், “கோபப்படுவது எவர்க்கும் எளியது. ஆனால், சரியானவரிடம் சரியான அளவுக்கு, சரியான நேரத்தில், சரியான காரணத்திற்காக, சரியான வழியில் கோபப்படுதல் என்பது எளிதன்று” என்று கூறியுள்ளார்.
ஆகவே சில நேரங்களில் சினம் காட்டாமல் இருந்தாலே நமக்கே சிரமங்கள் வந்து சேரும். சில நேரங்களில் சில மனிதர்களிடம் சிக்கனமாக சினப்படுவது சூழலைச் சீர்படுத்தும். அதற்காக எல்லா நேரங்களிலும் எல்லாரிடமும் எரிந்து விழுகிறவனுக்கு எப்போதும் நிம்மதி இல்லை. எல்லா பக்கமும் அவர்களுக்கு எதிரிகளே நிறைந்திருப்பர். முன் கோபமே முதல் எதிரி.
கோபத்தில் எந்தச் செயல் செய்தாலும் பல நேரங்களில் சீர்மையாகச் செய்ய இயலுவதில்லை. “கோபத்திலே கோபுர வாசலில் தலை நுழையாது, குண்டுச்சட்டியில் கை நுழையாது” என்பது பழமொழி.
சரியான நேரத்தில் சரியான சினம் எதையும் சரியாக செய்யத் துணைபுரியும். “சினமென்னும் பாம்பிறந்தால் தாண்டவக்கோனே – யாவும், சித்தியென்றே நினையோடா தாண்டவக்கோனே” என்பார் இடைக்காட்டுச் சித்தர்.
“கோபம் உள்ள வீட்டில் தண்ணீர்க் குடம் கூடக் காய்ந்து போய்க்கிடக்கும்” என்கிறது மூதுரை. குடம் மட்டுமல்ல இதயமும் வற்றிப் போகும். நுரையீரல், செரிப்பு மண்டலம், மூளை போன்ற எல்லா உறுப்புகளுமே பாதிக்கப்படும்.
தலைவலி, தூக்கமின்மை, மனக்குழப்பம், மனப்பதற்றம், இரத்தக்கொதிப்பு, நெஞ்சு படபடப்பு, மாரடைப்பு, வயிற்றுபுண், உடல் வலி, செரிப்புக் கோளாறு, மனச்சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளும் நீடித்த கோபத்தால் ஏற்படுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைத்து இன்று கொதிப்பேறி கோபம் கொப்பளிப்பவர்கள் உண்டு.
தற்காப்பு, சமூக நலன், பணிச்சீர்மை போன்றவற்றிற்கு எப்போதாவது கோபப்படுவது, சரியான அளவுக்குக் கோபப்படுவதால் (Righteous Indignation) பாதகம் இல்லை, பயனே விளையும்.
ஆனால் எப்போதும், சரியில்லாதவற்றுக்கெல்லாம் சட்டெனக் கோபப்படுகிறவர்கள் (Chronically Angry Persons). இவர்களை எல்லா தீமைகளும் வந்து சேரும். ‘சினம் சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது இவர்களுக்குத்தான். இத்தகையவர்களுக்கு இருதய நோய் – மாரடைப்பு ஏற்படுவதாக ஜேனிஸ் வில்லியம்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் அறிவித்திருப்பதை அமெரிக்கன் நோய் நிகழ்வியல் இதழ் (American Journal of Epidemiology) குறிப்பிட்டுள்ளது.
கோபம் வரும் போதும் முகத்தில் இருக்கும் 43 தசை நார்கள் விரைத்துப் புடைத்துப் போகின்றன. ஆனால் சிரிக்கும்போது சில தசைநார்களே (17 மட்டுமே) பயன்படுத்தப்பட்டு இதம் அளிக்கின்றன என்கிறது அறிவியல். அதிகம் தசைகள் பயன்படுத்தப்படும்போது பாதிப்பும், சக்தி விரையமும் அதிகம் தான்.
மனித மூளையில் கீழ்ப்பாகத்தில் அமைந்திருக்கும் டெம்போரல்லோப் (Temporal Lobe) என்ற பகுதியில் ஏற்படும் வேதிவினை கோபத்திற்குத் தூண்டுதலாக இருக்கிறது என்கிறது அறிவியல்.
சித்தம் கலங்க வைக்கும் சினம்Ð
சிறுபொழுதில் சிலரை ஆக்கும் பிணம்Ð
துக்கம் தொடங்கும் அந்தக் கணம்Ð
சிறிதேனும் வேண்டும் இதிலே சிக்கனம்Ð
முதல் எதிரியாம் முன்கோபத்தை முனைமுறியக் கையாள்வது எப்படி?
ஆறுவது சினம். ஆகட்டும் அடுத்தவாரம் காணலாம்…