என் பள்ளி
என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதில் என் பள்ளிக்கு சிறப்பிடம் உண்டு. அங்கிருந்து தான், என் வாழ்வில் முதல் பாடத்தையும், பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொண்டேன். என் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டு என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும், ஆச்சரியப்படுத்தக்க பல நண்பர்களையும் பெறுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது என் பள்ளி. சந்தோசமான, சோகமான பல தருணங்களைஎன் பள்ளியில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் விலை மதிக்க முடியாதவை. என் பள்ளி தான் என்னை உருவாக்கி இருக்கின்றது. எனக்களித்த என் பள்ளி நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல் நிலைப்பள்ளியிலும் படித்தேன். ஆறாம் வகுப்பு வரை படிப்பில் பெரிய அளவில் நாட்டம் இருந்ததில்லை. ஆனால் ஆறாம் வகுப்பில் எப்படியோ ஒரு தேர்வில் நான் முதல் மதிப்பெண் பெற்றேன். அன்றுதான் படிப்பின் சுவையை முழுவதுமாக உணர்ந்தேன் என்றே கூறலாம். அதுவரை படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்த நான் அந்த முதலிடத்திற்குப் பிறகு இனி எப்போதும் முதலிடத்திலேயே இருக்க வேண்டும் என்று முடித்தேன்.
நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் படித்த அந்த ஆறு வருடங்கள் நான் வாழ்வில் நன்றாக கிளைபரப்பி வளர உதவிய காலங்கள். பதினொன்றாம் வகுப்பில் எனக்கு உயிரியல் வகுப்பு ஆசிரியராக இருந்த பொன்ராஜ் சார் எப்போதும் என் மீது மிகுந்த பாசமாக இருப்பார். மதிப்பெண்ணுக்காகப் படிக்காமல் வாழ்க்கைக் கல்வியாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார். தினமும் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை ஒரு கதையாக எங்கள் பாடத்தில் புகுத்தி வித்தியாசமாக பாடம் எடுப்பார். பின்னாளில் நான் உயிர் அறிவியல் (Life Science) பாடத்தை எடுத்துப்படிக்கத் தூண்டியது அன்று அவர் பாடம் நடத்திய விதம் தான்.
பொதுவாக கிராமப்புரத்து மாணவர்களுக்கு ஆங்கிலம் எப்போதுமே பெரிய தலைவலியாகவே இருக்கும். ஆனால் எனக்கு ஆங்கிலத்தின் மேல் பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியது எங்கள் வகுப்பு ஆங்கில ஆசிரியரான முத்துவிஜய பாண்டி சாரின் பாடம் எடுக்கும் முறை. எப்போதுமே செம இன்ட்ரஸ்டாக பாடத்தை எடுப்பார். பாடப்புத்தகத்தில் இருப்பவற்றை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வில் எழுதுவதை ஒருபோதும் அவர் ஊக்குவிப்பதில்லை. சொந்தமாக வாக்கியங்களை அமைக்கச் சொல்லுவார்; தட்டிக்கொடுப்பார். நன்றாக எழுதினால் பாராட்டுவார். அவரிடம் பாராட்டு பெறுவதற்காகவே சொந்தமாக ஆங்கிலம் எழுத முயற்சியை மேற்கொள்வேன். மனப்பாடம் செய்யாமல் சொந்தமாக ஆங்கிலத்தில் வாக்கியங்கள் எழுத ஆரம்பித்தது அவருடைய தூண்டுதலால் தான். சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதினால் போனஸ் மார்க் போடுவார். மேல்நிலைத் தேர்வில் ஆங்கிலத்தில் பள்ளி முதல் மாணவனாக வந்ததைப் பாராட்டி எனக்கு ஒரு ஆங்கில அகராதியைப் (Dictionery) பரிசளித்தார். இன்று வரை நான் அதை பயன்படுத்தி வருகிறேன்.
பள்ளி படிப்பிற்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்தபோது அங்கு என்னைச் சேர்த்து மொத்தம் மூன்று மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்கள். கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் எடுத்தபோது இரண்டு நாட்களிலேயே கல்லூரியை விட்டு நின்றுவிடலாம் என்று தோன்றியது. அப்போது முத்து விஜயபாண்டி சார் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் தொலைபேசியில் பேசிய அவரின் வார்த்தைகள் என் வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. எனக்கிருந்த தாழ்வுமனப்பான்மையைப் போக்கி தன்னம்பிக்கையை வளர்த்தியது அவரது வார்த்தைகள். இன்று கொரியாவில் முனைவர் பட்டபடிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அன்று அவர் கொடுத்த ஊக்கமும், தன்னம்பிக்கையும் தான்.
ஆசிரியர்களைப் போலவே பல ஆச்சரியப்படத்தக்க நண்பர்களையும் என் பள்ளி எனக்களித்தது. அவர்கள்தான் என் உலகத்தைச் செம்மைப்படுத்தியவர்கள். பள்ளியில் என் நண்பர்களுடன் போட்டிபோட்டுப் படித்ததில் ஒவ்வொருவரிடமும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், வெற்றி பெறத் தேவையான உழைப்பு, சக மனிதர்களை நேசிக்கும் பண்பு, நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை என்று என்னை ஈர்த்த பல விழுமியங்களை எனக்களித்தது உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி.
0 comments Posted in Articles